Wednesday, 21 March 2018

யாரோ ஒருத்தி

யாரோ ஒருத்தி
எப்போதோ அளிக்கப்பட்ட சொல்லுக்காக
இன்னும் காத்துக் கொண்டிருக்கிறாள்

யாரோ ஒருத்தி
ஐயங்களின் மேகங்களை மிச்சமில்லாமல் அகற்றி
முழுமையாக நம்புகிறாள்

யாரோ ஒருத்தி
உறவின் இனிமையான பொழுதுகளை
உவகையுடன் எண்ணிப் பார்க்கிறாள்

யாரோ ஒருத்தி
மனதில் ஓயாமல் உழலும்
கசந்த அவமானத்தால் அவதிப்படுகிறாள்

யாரோ ஒருத்தி
கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறாள்

யாரோ ஒருத்தி
பாடும் பாடலில்
தூங்குகிறது
ஒரு குழந்தை