Saturday 28 May 2022

நகைச்சுவை (நகைச்சுவை கட்டுரை)

சில நாட்களுக்கு முன்னால், ஒரு நண்பர் ஃபோனில் பேசினார்.

‘’பிரபு ! 15 நாள் முன்னாடி ‘’விடுமுறை’’ன்னு ஒரு பதிவு போட்டிருந்தீங்க.’’

நான் யோசித்தேன். ‘’ரெண்டு நாளைக்கு ஒரு பதிவு போடறன். அந்த பதிவு எதைப் பத்தின்னு சொன்னா ஞாபகம் வந்துடும்’’

’’மழை. காலேஜ் எக்ஸாமினேஷன்’’

‘’ஆமாம் ஆமாம் . ஞாபகம் இருக்கு’’

‘’அதை நீங்க ‘நகைச்சுவை கட்டுரை’ன்னு பதிவிட்டிருந்தீங்க’’

‘’ஆமா அது நகைச்சுவை கட்டுரை தான்’’

‘’அது ரொம்ப சீரியஸான கட்டுரை’’

‘’அப்படியா நினைக்கறீங்க’’

‘’அதுல இருந்த விஷயங்கள் சீரியஸ் ஆனவை.’’

‘’நீங்க அப்படி நினைக்கறீங்க. சீரியஸா அந்த பதிவை வாசிக்கறது உங்களோட வாசிப்பு சுதந்திரம். அதுல நான் தலையிட மாட்டேன். அந்த சம்பவங்கள் எல்லாமே நடந்தவை. உண்மையில அதுல இருக்கற அத்தனை பேருமே சீரியஸா ஏதோ செஞ்சுகிட்டு இருந்தாங்க. நான் மட்டும் தான் கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ்ஸே இல்லாம ரொம்ப கேஷூவலா அந்த விஷயத்தை ஹேண்டில் செஞ்சன். எல்லாம் நல்ல படியா நடந்தது.’’

நண்பர் முழு சமாதானமாகவில்லை.

‘’ஒரு சீரியஸ் கட்டுரையை நகைச்சுவை கட்டுரைன்னு முன்வைக்கறதே ஒரு ஹாஸ்யம் தானே . அப்படி ஒரு எலிமெண்ட் அதுல இருக்குல்ல’’ நான் மேலும் விளக்கினேன்.

நண்பர் என் பதிலில் திருப்தி அடைந்தார். 

Friday 27 May 2022

நல்வரவு 42

வாழ்க்கையில் ஆயிரம் பிறைகளைக் காணுதலை சிறப்பான ஒன்றாகக் கருதுகிறது இந்திய மரபு. 84 ஆண்டுகள். அதனை ஒரு நிறைவாழ்வு என மதிப்பிடுகிறது. இயற்கையின் சுழற்சியுடன் ஏதேனும் ஒரு விதமான ஒத்திசைவு இருப்பதின் விளைவாக ஒரு ஜீவன் எண்பத்து மூன்று வயதினை வந்தடைவதாக மதிப்பிடுகிறது நம் மரபு. வாழ்க்கையில் எத்தனையோ சுக துக்கங்கள், மான அவமானங்கள், வெற்றி தோல்விகளை இத்தனை ஆண்டுகளைக் கடக்கும் போது ஒரு ஜீவன் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும் என்பதால் ஒரு பக்குவம் கை கூடும் நிலையாக அந்நிலை அமையக் கூடும் என நம் மரபு எண்ணுகிறது. பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என வாழ்க்கையை நான்கு விதமான பருவங்களாக நம் முன்னோர் தொகுத்துள்ளனர்.  சந்நியாசம் லட்சத்தில் ஒருவருக்கே உரியது. மற்ற மூன்று தொகுப்புகளே சாமானியர்களுக்கு இயல்வது. விருப்பு வெறுப்புகளால் ஆனது நம் மனம். உறவுச் சங்கிலிகளில் சிக்கிக் கிடப்பது அதன் இயல்பு. விழைவு அதன் இயங்குமுறை. விருப்பு வெறுப்புகளாலும் உறவுகளாலும் விழைவாலும் பிரக்ஞையின்றி துக்கத்தில் தோய்கின்றன மனித மனங்கள். துக்கம் என்பதை யாவரும் உணரும் அடிப்படை உணர்வாக புத்தர் பார்த்தார். துக்கம் , துக்கத்திற்கான காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என நான்கு அடிப்படை உண்மைகளை புத்தர் மானுடர்க்கு போதித்தார். மானுடன் தனது சமூக அடையாளங்களை ‘’தான்’’ என எண்ணுகிறான். அந்த அடையாளங்களுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கிறான். எல்லா மானுடரும் ஒவ்வொரு விதத்தில் தன்னைப் பிணைத்துக் கொண்டிருப்பதால் ஒருவருக்கொருவர் பூசல் உண்டாகிறது. பூசல் வன்முறைக்கு இட்டுச் செல்கிறது. ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் அவர்களால் முழுமையாக உணரப்பட்டதில்லை. அவர்களுக்கு முழுமையான அனுபவம் ஆனதில்லை. இவையே மானுடன் கொள்ளும் துக்கத்திற்கான காரணங்கள். இந்த துக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள் பொருள் மீதான பற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும். சமூக அடையாளங்களின் எல்லைகளை உணர்ந்திருக்க வேண்டும். இதனையே துக்க நிவாரணம் என்கிறார். துக்கம் என்பதை முழுமையாக உணர்ந்து அதனை ஒரு கற்பிதம் எனப் புரிந்து கொண்டு இனி வாழ்வில் ஒரு கணமும் எதற்காகவும் துக்கம் கொள்வதில்லை என முடிவெடுப்பவர்களுக்கு துக்க நிவாரண மார்க்கம் என்ன என்பதை புத்தர் சொல்கிறார். புத்தர் மானுடர் உலகியல் வாழ்வை புறக்கணிக்க வேண்டும் என்று கூறியவர் அல்ல. ஆக சாத்தியமான மேலான உலக வாழ்க்கையை வாழும் படி கூறியவரே. உயிர்களை நேசித்தலையும் இயற்கையுடன் இயைந்து வாழ்வதையும் ஆன்ம விடுதலை அளிக்கும் சாதனமாகக் கண்டது பௌத்தம். 

இந்த ஆண்டு 42 வயதினை எட்ட இருக்கிறேன். யோக மரபில் 33, 42, 60 ஆகிய அகவைகள் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. ’’யோகம் என்பது மனச்செயல் நிறுத்தம்’’ என்ற முதல் வரியுடன் துவங்குகிறது பதஞ்சலியின் யோக சூத்திரம். மனத்தை - மனத்தின் எண்ணங்களை - ஓயாத ஓட்டத்தை மனச்செயல் என வகுத்துக் கொள்கிறது யோக சூத்திரம். மனம் ஒரே விதமான இயங்குமுறையில் படிந்து இருப்பது. அது தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் வழிகளில் பிரதானமானது அது. ஒரு எந்திரம் தொடர் இயக்கத்தின் விளைவாக சற்று மாறுபடும் தன்மை கொள்வது போல மனம் 33, 42, 60 ஆகிய அகவைகளில் இயற்கையாகவே மாறுதலுக்குள்ளாகக் கூடியது. அந்த மாறுதலை பிரக்ஞையுடன் அணுகினால் அதன் பயன்கள் பெரிதினும் பெரிதானதாக அற்புதமானதாக இருக்கக் கூடும். 

என் அகத்தில் எப்போதும் ஒரு சிறுவன் இருக்கிறான். அவன் எப்போதும் நம்பிக்கை கொண்டிருப்பவன். தோல்விகளால் துவளாதவன். புதிது புதிதாக ஏதேனும் செய்து பார்க்க வேண்டும் என்று விரும்புபவன். சாகசங்களில் ஆர்வம் கொண்டவன். ஒரு மேலான உலகத்தைக் கண்டு விட வேண்டும் என்ற உறுதி கொண்டிருப்பவன். கற்பனைகளில் மிதப்பவன். கற்பனைகளே மானுட வாழ்வை மேலான நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது என உணர்ந்தவன். அவனுக்கு நிறைய நூல்களை வாசிக்க வேண்டும் என ஆர்வம் இருந்தது. நிறைய பயணம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. பாதையில் எதிர்ப்படும் தடைகளை உடைத்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற துடிப்பு கொண்டவன். அவனது சாகச உணர்வும், கற்பனையும், ஆர்வமும், துடிப்புமே எனது வாழ்வின் சாரமான அனுபவமாக உள்ளன. 

42 வயதை வரவேற்கும் விதமாக ஒரு மாரத்தான் ஓட்டம் ஓட வேண்டும் என்ற விருப்பம் இன்று உண்டானது. மாரத்தான் ஓட்டம் 42 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. 42 கிலோ மீட்டர் தூரத்தை ஓடிக் கடப்பது உடலளவிலும் மனதளவிலும் ஒரு நல்லனுபவமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. 

எளிய பயிற்சி முறை ஒன்றை பின்பற்றலாம் என உள்ளேன். நூறு நாட்கள் பயிற்சி அது. கொஞ்சம் கொஞ்சமாக இலக்கினைக் கூட்டிக் கொண்டு செல்வது. இன்று முதல் நாள் பயிற்சியைத் துவங்கினேன். எந்த ஒரு நீண்ட நெடிய பயணமும் சிறிய உறுதியான முதல் அடியிலிருந்தே தொடங்குகிறது. 

Thursday 26 May 2022

ஐந்து பெயர்கள்

பஞ்சாபிகளுக்கும் மலையாளிகளுக்கும் ஒரு பழக்கம் உண்டு. அவர்கள் தங்கள் பெயருடன் ஊரின் பெயரையும் சேர்த்துக் கொள்வார்கள். வட இந்தியாவில் சில பகுதிகளிலும் பெயருடன் ஊர்ப் பெயரை இணைத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அங்கே சிலர் தங்கள் தொழிலை பின்னொட்டாக வைத்துக் கொள்ளும் நடைமுறையைக் கைக்கொள்வார்கள். ராஜேஷ் பைலட், விஜய் மெர்ச்சண்ட் ஆகியவை எடுத்துக்காட்டுகள். 

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல்  ஊரின் பெயரை மயிலாடுதுறை என்றே கூறி வருகிறேன். எனினும்  ஊருக்கு ஒரு கணக்கில் ஐந்து பெயர்கள் இருக்கின்றன. அவை ஐந்தும் ஊருடன் பலவிதத்திலும் இணைந்தவை. ஊரின் நடுவில் மிகப் பெரிய சிவாலயம் உள்ளது. சோழர் காலத்திய ஆலயம். நாயக்கர்களால் கட்டப்பட்ட கோபுரத்தை உடையது.  அம்பிகை மயில் வடிவத்தில் சிவனை பூசனை செய்த தலம் என்பது ஊரின் தலபுராணம். அதனால் கௌரி மாயூரம் என்பது ஊரின் பெயர். சிவனின் பெயர் மாயூரநாதர் அதனால் ஊர் மாயூரம் எனப்படுகிறது.  மயூரம் என்றால் மயில் என்று அர்த்தம்.  ஐப்பசி மாதத்தில் முப்பது நாளும் அதிகாலை மாயூரம் காவிரியில் மூழ்குவது சிறப்பான ஒன்றாக பல நூற்றாண்டுகளாக கருதப்பட்டு இன்றும் அந்த வழக்கம் தொடர்கிறது.  இதனை ‘’துலா ஸ்நானம்’’ என்று கூறுவார்கள். அதிக அளவில் காவிரியில் மக்கள் மூழ்கி நீராடும் படித்துறைக்கு ‘’துலா கட்டம்’’ என்று பெயர். காசியில் கங்கைக்கரையில் அரிச்சந்திர கட்டம், மணிகர்ணிகா கட்டம், அனுமந்த கட்டம் என்று இருப்பது போல இங்கே ‘’துலா கட்டம்’’.

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் மாயூரநாத சுவாமி மீது பதிகம் பாடியிருக்கிறார்கள். சம்பந்தர் இரண்டு பதிகம் - அதாவது இருபது பாடல்கள். நாவுக்கரசர் ஒரு பதிகம் - பத்து பாடல்கள். இந்த பதிகங்களில் இருவரும் ‘’மயிலாடுதுறை’’ என்ற பதத்தை பயன்படுத்துகிறார்கள். 

உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே. (சம்பந்தர்)

நீற்றி னான்நிமிர் புன்சடை யான்விடை
ஏற்றி னான்நமை யாளுடை யான்புலன்
மாற்றி னான்மயி லாடு துறையென்று 
போற்று வார்க்குமுண் டோ புவிவாழ்க்கையே (நாவுக்கரசர்)

சீர்காழிக்காரரான திருஞானசம்பந்தர் பாடிய முதல் பாடல் ‘’தோடுடைய செவியன்’’ எனத் தொடங்கும் தேவாரம். அதில் சீர்காழியை பிரம்மாபுரம் எனக் குறிப்பிடுகிறார்.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (சம்பந்தர்)

 சீர்காழியை ஞானசம்பந்தர் வேணுவனம், திருப்புகலி, திருவெங்குரு, திருத்தோணிபுரம், திருப்பூந்தராய், திருச்சிரபுரம், திருப்புறவம், சண்பை, திருக்கொச்சைவயம், திருக்கழுமலம் ஆகிய பெயர்களாலும் அழைக்கிறார். இந்த பெயர்களுக்கு தனித்தனி பாடலாகவும் பின்னர் இத்தனை பெயர்களையும் ஒரே பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிட்டு அழைக்கிறார். பல்பெயர்ப்பத்து என அந்த பதிகம் அழைக்கப்படுகிறது. தனது சொந்த ஊரான சீர்காழியை ஞானசம்பந்தர் இத்தனை பெயர்கள் கொண்டு அழைத்தாலும் சீர்காழி சீர்காழியாகவே தொடர்கிறது. 

தனது முதல் பாடலில் சீர்காழியை பிரமாபுரம் எனக் குறிப்பிட்ட ஞானசம்பந்தர் மாயூரநாதர் மீது பாடிய பதிகத்தின் கடைசி பாடலில் தன்னை காழி ஞானசம்பந்தன் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார். 

நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன் 
மயல்தீர் மயிலா டுதுறைமேல்
செயலா லுரைசெய் தனபத்தும்
உயர் வாம் இவையுற் றுணவார்க்கே. (சம்பந்தர்)

சம்பந்தருக்கும் நாவுக்கரசருக்கும் சம காலத்தில் வாழ்ந்தவர் திருமங்கையாழ்வார். அவர் எங்கள் ஊரில் இருக்கும் பள்ளி கொண்ட பெருமாள் மீது பத்து பாடல்களைப் பாடியுள்ளார். அதில் இந்தளூர் என்று குறிப்பிடுகிறார். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் எங்கள் ஊர் திருஇந்தளூர் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த பெயரும் மயிலாடுதுறை என்ற பெயர் அளவுக்கே தொன்மையானது. 

சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய
மைந்தா, அந்த ணாலி மாலே சோலை மழகளிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ,என்
எந்தாய். இந்த ளூராய். அடியேற் கிறையு மிரங்காயே. 

உ.வே.சா தனது ‘’என் சரித்திரம்’’ நூலில் பக்கத்துக்குப் பக்கம் மாயூரம் என்று குறிப்பிடுகிறார். அவருடைய ஆசிரியரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை ‘’மாயூரப் புராணம்’’ என்ற நூலை இயற்றியுள்ளார். பிரதாப முதலியார் சரித்திரம் எழுதியவர் தன் பெயருக்கு முன்னால் மாயூரத்தைச் சேர்த்துக் கொண்ட மாயூரம் வேதநாயகம் பிள்ளை. 

மாயூரம் பின்னாட்களில் மருவி மாயவரம் என்றானது. அரசு ஆவணங்களில் மாயவரம் என்ற பெயர் இடம்பெறலானது. ரயில்வே ஜங்ஷனுக்கு மாயவரம் ஜங்ஷன் என்று பெயர். ரயில்வே துறையில் அதனை MV என்று சுருக்கப் பெயராகப் பயன்படுத்துகிறார்கள். இப்போது மயிலாடுதுறை ஜங்ஷன் என அழைக்கப்பட்டாலும் அந்த சுருக்கப் பெயர் MV என்றே தொடர்கிறது. இணையம் மூலம் ரயில் இருக்கை முன்பதிவு செய்ய ஸ்டேஷன் பெயர் என்ற தலைப்பில் MV என்று உள்ளிட வேண்டும். தி.ஜானகிராமன் தனது அக்பர் சாஸ்திரி கதையில் மாயவரம் ஜங்ஷன் என்ற பெயரைப் பயன்படுத்தியிருப்பார். 

மரூஉ என்பது மாயூரத்துக்கு மட்டும் என்று இல்லை. தமிழ்நாட்டில் பல ஊர்களின் பெயர்கள் அவ்வாறு மருவியுள்ளன. சீர்காழிக்கு சீகாழி , சீயாழி என மரூஉ பெயர்கள் உண்டு. கும்பகோணத்துக்கு கும்மோணம். திருவாரூருக்கு திருவாளூர். திருநெல்வேலிக்கு தின்னவேலி. நாகர்கோவிலுக்கு நாரோயில். மாயூரம் மருவி மாயவரம் என்றானது. அந்த மாயவரமும் மாயரம் என மருவியது. ஊர்க்காரர்கள் பலர் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் போது ஊர்ப் பெயரை மாயரம் என்றே குறிப்பிட்டுக் கொள்வார்கள். 

ஊரின் ஒரு பகுதி கூறைநாடு. திருமணத்தன்று மணமகள் உடுத்தும் சேலைக்கு கூறைச்சேலை என்று பெயர். அந்த கூறைச்சேலைகள் நெய்யும் நெசவாளர்கள் நிறைந்த பகுதி கூறைநாடு என அழைக்கப்படுகிறது. கூறைநாடு என்ற பெயர் மருவி கொரநாடு என்றாகி விட்டது. திருஇந்தளூரை திருவிழந்தூர் என மக்கள் அழைக்கத் தொடங்கி விட்டனர். 

மரூஉ பெயர்கள் எல்லா ஊருக்கும் உண்டு. எனினும் ஒரு ஊரின் மூன்று பகுதிகள் பெயர் மருவி அழைக்கப்படுவது இங்கு மட்டும் தான். மாயூரம் மாயவரமாகவும் திருஇந்த்ளூர் திருவிழுந்தூராகவும் கூறைநாடு கொறநாடாகவும் . மயிலாடுதுறையின் அஞ்சல் குறியீட்டு எண் 609001. திருஇந்தளூரின் எண்ணும் அதுவே. கூறைநாட்டுக்கு 609002. மயிலாடுதுறை ரயிலடியை ஒட்டிய பகுதிகளுக்கு 609003. 

கௌரி மாயூரம் ஆகிய மாயூரம், திருஇந்தளூர் என்றும் அழைக்கப்பட்டு, ஞானசம்பந்தராலும் நாவுக்கரசராலும் மயிலாடுதுறை என்று பாடல் பெற்று பின்னர் மாயவரம் ஆகி அதன் ஒரு பகுதி கூறைநாடு என்று பிரசித்தமாகி இப்போது மயிலாடுதுறை என்று பெயரில் நிலை கொண்டிருக்கிறது. 

உ.வே.சாமிநாத ஐயர் தனது ஆசான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் படித்தது மயிலாடுதுறையில் தான். மாயூரநாதர் ஆலய தெற்கு வீதியில் இருந்த திருவாவடுதுறை மடத்தின் கிளை மடத்துக்கு அருகில் தான் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை குடியிருந்த வீடு இருந்தது. 

உலகெங்கும் ஒரு வழக்கம் உண்டு. வீட்டில் குழந்தைகளுக்குப் பெயரிடுவார்கள். இடப்பட்ட பெயரில் சிலர் அழைப்பார்கள். குடும்ப உறுப்பினர்கள் சிலர் அந்த குழந்தைக்கு தங்கள் விருப்பத்துக்கு ஏற்றார் போல ஒரு பெயரை சூட்டி விடுவார்கள். வளர்ந்ததும் பள்ளியில் நண்பர்கள் ஒரு பெயர் சொல்லி அழைப்பார்கள். அந்த குழந்தை வளர்ந்து தனக்கென ஒரு பெயரைச் சூட்டிக் கொள்வதும் உண்டு. 

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை சொல்வார். கங்கையில் நீராடும் ஒருவன் அதனை ஜலம் என்கிறான். அதன் கரையில் நடந்து செல்லும் வழிப்போக்கன் தாகத்துக்கு நீர் அருந்தி அதனை பானி என்கிறான். ஓர் ஆங்கிலேயன் அதனை வாட்டர் என்று புரிந்து கொள்கிறான். ஒரு வேதியர் அதனை தீர்த்தம் என்கிறார். ஜலம் என்றும் தீர்த்தம் என்றும் பானி என்றும் வாட்டர் என்றும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அழைக்கப்படும் பொருள் ஒன்றே. பரம்பொருளின் இயல்பும் அவ்வாறானதே. பரம்பொருளை சிலர் கிருஷ்ணன் என்கிறார்கள். சிலர் ஈஸ்வரன் என்கிறார்கள். சிலர் தந்தை என்கிறார்கள். சிலர் அல்லா என்கிறார்கள். வெவ்வேறு பெயர்களால் சுட்டப்படும் பரம்பொருள் ஒன்றே. 

கம்பனுடைய வாழ்வில் நடந்ததாக ஒரு கதை உண்டு. கம்பன் யுத்த காண்டத்தில் ‘’துமி’’ என்ற வார்த்தையை பிரயோகம் செய்திருக்கிறான். அந்த பாடல் குறித்து பேச்சு வரும் போது ஒட்டக்கூத்தர் அவ்வாறான ஒரு வார்த்தை தமிழில் இல்லை என்கிறார். கம்பனுக்கு மனம் கலக்கமாகி விடுகிறது. கம்பனின் மனக் கலக்கத்தைக் கண்ட கலையரசி சரஸ்வதி ஒரு மோர்க்காரப் பெண்ணாக மோர் விற்றுக் கொண்டு வருகிறாள். கம்பரும் ஒட்டக்கூத்தரும் அவளிடம் தாகம் தணிக்க மோர் கேட்கிறார்கள். அப்போது மோரை கலனில் ஆற்றிக் கொடுக்கிறாள் அந்த மோர்க்காரப் பெண். அப்போது ’’தள்ளி நில்லுங்கள் ; மோர்த் துமி தெறிக்கும்’’ என்கிறாள். ஒட்டக்கூத்தர் ‘’துமி’’ என்ற சொல் மக்கள் புழக்கத்தில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்கிறார். சொல்லரசியால் சொல்லப்பட்ட சொல் என்பதால் அந்த பெயர் நிலைபெற்று விடுகிறது. 

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானக்குழந்தை ஞானசம்பந்தரால் விரும்பி அழைக்கப்பட்ட பெயரான மயிலாடுதுறை ஊர்ப்பெயராக நிலை பெற்றிருப்பது நன்நிமித்தமே.  

Tuesday 24 May 2022

கவி

கம்ப ராமாயணத்தில் ஓர் இடம். 

கடலில் சேது எழுப்பி வானர சேனை இலங்கையை அடைகிறது. இலங்கை வந்தடைந்த பின்னரும் இராவணன் தன் தவறுகளை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டால் மன்னிக்க இராமன் தயாராக இருக்கிறார். இதனை ஒரு தூதன் மூலம் தெரிவிக்க இராமன் எண்ணுகிறார். யாரைத் தூதனாக அனுப்பலாம் என்று சிந்திக்கிறார். மீண்டும் அனுமனை அனுப்பினால் அவன் ஒருவனே வானர சேனையில் பேராற்றல் கொண்டவன் என்பதாக அர்த்தமாகும் ; எனவே இங்கே அனுமனை ஒத்த மாவீரர்கள் பலர் உண்டு என்பதையும் குறியீட்டுரீதியில் காட்ட வேண்டும் என இராமன் எண்ணி அங்கதனை தூதனாக அனுப்பலாம் என பரிந்துரைக்கிறார் இராமன். அனைவரும் ஏற்கின்றனர். 

அப்போது அங்கதன் எண்ணியதாக கம்பன் கூறுவது : 


பார்மிசை வணங்கிச் சீயம் விண்மிசைப் படர்வதே போல்,

வீரன் வெஞ் சிலையில் கோத்த அம்பு என, விசையின் போனான்,

“மாருதி அல்லன், ஆகின், நீ ‘எனும் மாற்றம் பெற்றேன்;

யார் இனி என்னோடு ஒப்பார்? ‘ என்பதோர் இன்பம் உற்றான்.


(ஸ்ரீராமனை நிலத்தில் விழுந்து வணங்கி சிம்மம் ஒன்று வானில் அம்பெனப் பறப்பது போல் இலங்கைக்கு விரைந்தான் அங்கதன். அப்போது சிறுவனான தான் ‘’மாருதிக்கு மாற்றாகும் திறன் கொண்டவன்’’ என இராமனால் நினைக்கப்பட்டதால் இதை விடப் பெற என்ன நிலை இருக்க முடியும் என்று அங்கதன் எண்ணினான்)

அதன் பின்னர் நீண்ட நெடிய யுத்தம் முடிந்து ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் நிகழ்கிறது. 


இது புகழ் பெற்ற பாடல்


அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,

பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச

விரைசெறி குழலி ஓங்க வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்

மரபுேளார் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி.


இந்த பாடலில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தின் போது அனுமன் அரியணை தாங்குவதை முதலில் கூறுகிறார். அதன் பின்னர் உடனே அங்கதன் உடைவாள் ஏந்துவதைச் சொல்கிறார். 

நுண்ணினும் நுண்ணியது கவி உள்ளம். 




Saturday 21 May 2022

வரலாற்றின் குற்றவாளிகள்

முன்னாள் இந்தியப் பிரதமர் திரு. ராஜிவ் காந்தி 21.05.1991 அன்று கொல்லப்பட்ட போது எனக்கு பத்து வயது. தமிழ்நாட்டு மக்கள் ராஜிவைக் கொன்றவர்களை மன்னிக்கவேயில்லை. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இன்று வரை இலங்கையிலும் வெளிநாடுகளிலும் அடையும் துன்பங்கள் அனைத்தும் மிகத் தீவிரமானது அந்த படுகொலைக்குப் பின்னால் தான். சாமானிய மக்கள் திரள் ஒரு விஷயத்தை எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறார்கள் - எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் என்பதை எவராலும் முழுமையாக அறுதியிட்டுக் கூறி விட முடியாது. கார்ல் மார்க்ஸ் ஒருமுறை கூறினார். ‘’The jury has the supreme power but they have to face the court of public opinion'' என்று. தமிழ்நாட்டின் சாமானிய மக்களுக்கு விடுதலைப் புலிகள் இலங்கை தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமான எந்த விஷயத்தையும் செய்யப் போவதில்லை என்பதை அவர்கள் உள்ளுணர்வால் எப்படியோ தெரிந்து வைத்திருந்தார்கள். எனவே தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். இன்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள்.  தமிழ்நாட்டின் சில அரசியல்வாதிகளும் சில ஊடகங்களும் மட்டுமே விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளை ஆதரித்து வந்தனர். 

ராஜிவைக் கொல்ல முடிவெடுத்தது விடுதலைப் புலிகள் செய்த பெரும் பிழை. அந்த முடிவு ஒரு அரசியல் தற்கொலை. அவர்களுடைய அரசியல் முதிர்ச்சியின்மையை தமிழ்நாட்டுக்கு வெளிக்காட்டிய செயல். இலங்கையில் அவர்கள் கொன்று குவித்த அரசியல் தலைவர்கள் போல அவர்கள் அதை எண்ணியிருக்கக் கூடும். உலக அரசியல் அரங்கில் இலங்கைத் தமிழ் மக்கள் நிராதரவான நிலைக்கு ஆளானதற்கு அதுவே காரணமானது. அந்த முடிவால் அரசியல் ரீதியான எந்த பயனும் அவர்கள் அடையவில்லை என்பதை காலம் நிரூபித்தது. அப்போது அனைத்துமே கை மீறி சென்றிருந்தது. 

உலகெங்கும் சாமானிய மக்கள் அமைதியான சூழ்நிலையையே விரும்புகிறார்கள். போரை விரும்பும் சாமானியர்கள் என எவரும் எங்கும் இல்லை. விடுதலைப் புலிகள் சாமானியர்கள் மேல் போரைத் திணித்தனர். சாமானியர்களிடமிருந்து ‘’வரி’’ என்ற பெயரில் நிதி திரட்டி அந்த பணத்தை போதை மருந்து கடத்தலுக்கும் ஆயுதக் கடத்தலுக்கும் பயன்படுத்தி அதன் மூலம் கிடைத்த பெரும் தொகை மூலம் பல ஆண்டுகள் யுத்தத்தை நடத்தினர். இந்த உண்மையை தமிழக ஊடகங்களும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் வெவ்வேறு சொற்களில் மூடி மறைத்தனர். விடுதலைப் புலிகள் தலைமையின் அகங்காரத்துக்காக லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் பலியானார்கள். இது புதிதல்ல. உலகில் சர்வாதிகாரிகளால் நிகழ்ந்த சாவின் எண்ணிக்கையை கோடிக்கணக்கில் மட்டுமே கூற முடியும்.  

இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் போல இலங்கைத் தமிழ் மக்களுக்கு பயனளிக்கும் இன்னொரு விஷயம் இல்லை. தங்கள் சுயலாபத்துக்காக அதனை எதிர்த்த அனைவரும் வரலாற்றின் குற்றவாளிகள். 

Thursday 19 May 2022

பொறுப்பு

பூர்வீக சென்னைவாசியான எனது நண்பர் சென்னையில் வங்கி அதிகாரியாக இருக்கிறார்.  அவருடைய தந்தை மாநில அரசில் அதிகாரியாக முக்கியப் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். நண்பரும் அவரது தந்தையும் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் மீது பெரும் ஆர்வம் கொண்டவர்கள். நேற்று நண்பர் அலைபேசியில் அழைத்து தனது தந்தை அரசியல் கட்சி ஒன்றில் உறுப்பினராகச் சேர்ந்திருக்கிறார் என்ற தகவலைப் பகிர்ந்து கொண்டார். 

நண்பரிடம் ஒரு விஷயத்தை மட்டுமே நான் சொன்னேன். இந்திய அரசியல் சட்டம் புனிதமானது. அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் நாட்டின் எளிய மக்களுக்கு அரசின் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் எளிய மக்கள் முன்னேற்றத்துக்கு அரசாங்கம் அரணாக இருந்து உதவ வேண்டும் என்பதற்காகவுமே முக்கியத்துவம் அளித்தனர். நம் நாட்டின் அரசியல் சட்டம் குடிமக்களுக்கு என கடமைகளை வகுத்துள்ளது. அந்த கடமைகளில் உறுதியாக இருக்கும் தார்மீகத் தன்மை அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு மிக அவசியமாக தேவைப்படுகிறது. இங்கே இயங்கும் அரசியல் கட்சிகள் அனைத்துமே இந்திய அரசியல் சாசனம் என்னும் மகத்தான ஒன்றினை அடித்தளமாகக் கொண்டவையே. சமூகத்தின் குடிமைப் பண்பை  உயர்த்துவதற்கு தன்னால் முடிந்த அளவு முயல்வதே  எந்த ஒரு அரசியல் கட்சி உறுப்பினருக்கும் இருக்கும்  முக்கிய பொறுப்பு ஆகும். 

இதனையே நண்பரின் தந்தைக்கு எனது செய்தியாக நண்பரிடம் சொன்னேன். 


Sunday 15 May 2022

போதி மர நிழலில்

வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு சிறு மைதானம் இருக்கிறது.  அதன் ஓரத்தில் ஓர் அரசமரம் உள்ளது. சரியாகச் சொன்னால் அரசமரமும் வேப்பமரமும் பின்னிப்  பிணைந்து சேர்ந்து வளர்ந்திருக்கிறது. இவ்வாறு அரசும் வேம்பும் சேர்ந்திருப்பதை நம் மரபில் அம்மையப்பனாகக் காண்பார்கள். அரசு ஆண் தன்மை கொண்டது. வேம்பு பெண் தன்மை மிக்கது. இன்று புத்தருக்குரிய தினம் என்பதால் அரச மரத்தின் அடியில் கொஞ்ச நேரமாகினும் அமர வேண்டும் என்று விரும்பினேன். மதியப் பொழுதில் 75 நிமிடத்துக்கு மேல் அரச நிழலில் அமர்ந்திருந்தேன். உதிர்ந்திருந்த இலைகள் உலர்ந்து சிறு மெத்தை போல் இருந்தன. ஆங்காங்கே எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. மரத்தின் வேரில் வசதியாக உட்கார்ந்து கொண்டேன். கையில் தேவதேவன் கவிதைகள் முழுத் தொகுப்பு புத்தகம். மரத்தில் தலை சாய்த்து கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். வாசிப்பது - வாசித்த வரிகளை மீண்டும் மனதில் ஓட்டிப் பார்ப்பது என சென்று கொண்டிருந்தது. மேகத்துடன் கூடிய வானம் மரத்தின் மேல் விரிந்து பரந்திருந்தது. குட்டி நாய்கள் இரண்டு அன்னை நாயை நீங்காமல் உடன் சென்று கொண்டிருந்தன. குயில் ஒன்று ஓயாமல் கூவிக் கொண்டிருந்தது. கட்டெறும்புகள் மரத்தின் மேல் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தன. எட்டு வயது சிறுவன் ஒருவன் சைக்கிளில் வந்து மைதானத்தை ஒரு சுற்று சுற்றினான். இந்த உலகில் எனக்கு என்னென்ன உண்டோ அத்தனையும் அந்த குட்டி நாய்களுக்கும் எறும்புக்கும் பறவைக்கும் உண்டு என்று ஒரு கணம் தோன்றியது. கல்லினுள் தேரைக்கும் தம்மம் உணவூட்டும் என்கிறது பௌத்தம்.

புத்தம்

உலகில் ஒவ்வொரு மனிதனுமே சில கணங்களேனும் அகத்தில் புத்தரை உணர்கிறான். பிரபஞ்சப் பெருவெளியுடன் இயல்பாக இணைந்திருக்கும் நிலையே புத்த நிலை. ஒவ்வொரு மனிதனுக்கும் அந்நிலை அடையச் சாத்தியமானது என்பதை புத்தர் உணர்ந்த கணம் அவர் மக்களை நோக்கிச் சென்றார். புத்த நிலையை அடையும் எளிய மார்க்கமாக கருணையை மக்களிடம் முன்வைத்தார். உயிர்கள் அனைத்தும் அன்பையே எதிர்நோக்குகின்றன. அளிக்க அளிக்க பெருகும் செல்வம் அருட்செல்வம். யோக மரபில் புத்தருடைய இடம் மிகவும் முக்கியமானது. தியானத்தில் புத்தரின் வழிமுறைகள் புதிய பாய்ச்சலை உண்டாக்கின.  சுவாமி விவேகானந்தர் தனது சிகாகோ சொற்பொழிவுகளில் ஒரு முழு அமர்வு புத்தர் குறித்து பேசியுள்ளார். பாரதி நம் நாட்டை ‘’புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு’’ என்கிறார். இன்று உலகெங்கும் புத்தர் ஞானோதயம் பெற்ற தினம் கொண்டாடப்படுகிறது. 

புத்தம் சரணம்


 

Saturday 14 May 2022

ஓர் இளம் மனம்

இரண்டு நாட்களுக்கு முன்னால் வெளியூரில் இருக்கும் எனது நண்பரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவரிடம் ஒரு விஷயம் குறித்து ஆலோசனை பெற வேண்டியிருந்தது. அப்போது அவரது மகனுடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது. சின்னஞ் சிறுவனாக இருந்த பையன். இன்று தேசிய சட்டப் பள்ளியில் பயின்று ஒரு வழக்கறிஞராகி இருக்கிறான். இந்திய அரசியல் சட்டத்தின் ஆத்மாவை போற்றி வணங்கும் மனநிலை அவனுக்கு இருக்கிறது. ஒரு வழக்கறிஞரின் ஆளுமை என்பதற்கும் நீதிமன்றத்தின் முன் அவர் முன்வைக்கும் தரப்புக்கும் கண்ணுக்குத் தெரியாத - மிக மெல்லிய - தொடர்பு இருக்கிறது. ஒரு சட்டம் என்ன சொல்கிறது என்பதை முழுமையாக அறியவும் அந்த சட்டத்தின் சமூகவியல் பார்வை என்ன என்பதைப் புரிந்து கொள்ளவும் ஒரு வழக்கறிஞர் எப்போதும் ஒரு மாணவனாக சட்டத்தின் முன் இருக்க வேண்டும். நல்ல மொழியறிவு அவனுக்கு இருக்கிறது. தீவிரமான சமூகப் பிரக்ஞையுடன் இருக்கிறான். அவனது அணுகுமுறை மிகவும் நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருக்கிறது. நம்பிக்கை அளிப்பவர்கள் வாழ்க்கையே அளிக்கிறார்கள்.    

Wednesday 11 May 2022

ஆழித் துளி

எவ்வளவு வேலைகள் செய்தாலும் ஏதேனும் சில பணிகள் மேலும் செயல் கோரி நிலுவையில் இருந்தவாறே உள்ளன. பொதுப்பணி என்பது ஒருவரின் தனிப்பணி போன்றதல்ல. அதில் பல்வேறு கூறுகள் இணைந்திருக்கின்றன. சமூகத்தின் தன்மையும் ஏற்புத்தன்மையும் அதில் மிகப் பெரும்பான்மையான மிக முக்கியமான மிக அடிப்படையான அம்சங்கள் ஆகின்றன. நுண் செயல்பாடுகள் என்பதாகத்தான் என்னுடைய செயல்களைத் திட்டமிட்டேன். அளவில் சிறியது என்பதால் திட்டமிடுதலிலும்  செயலாக்கத்திலும் முழுக் கட்டுப்பாடு இருக்கும் என்று எண்ணியிருந்தேன். நுண் செயல்பாடுகள் என்றாலும் அதன் விளைவுகள் அதிசயிக்கத் தக்க விதத்தில் உள்ளன.  செயல் நிகழ்ந்த களங்களில் மக்கள் காட்டும் அன்பும் அக்கறையும் பிரியமும் ஆழியென பேருரு கொண்டு முன்நிற்கின்றன. மக்களுக்கு நம்பிக்கைகள் தேவைப்படுகின்றன. சுவாமி விவேகானந்தர் நம்பிக்கை - நம்மிடத்தில் நம்பிக்கை , நம்பிக்கை - கடவுளிடத்தில் நம்பிக்கை இதுதான் இன்றைய உலகின் தேவை என்பார். மக்கள் சிறிய நம்பிக்கையை பெற்றால் கூட அற்புதமான அளவில் செயலாற்றுகிறார்கள். 

சில நாட்களுக்கு முன்னால், ஒரு கிராமத்துக்கு சென்றிருந்தேன். அங்கே உள்ள பெருமாள் கோவிலில் சாமி கும்பிடச் சென்றேன். அங்கே சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. ஐந்து வயது ஆறு வயது உள்ள குழந்தைகள். அந்த குழந்தைகள் என்னைப் பார்த்தால் எப்போதும் உற்சாகமாகி விடும். என் முன் வந்து அந்த குழந்தைகள் ஏதாவது பேசும். அவ்வாறு அன்றும் குழந்தைகள் என்னிடம் பேசின. ஒரு சிறு குழந்தை என்னிடம் ஒரு சிறு மாங்காயை எடுத்துக் கொண்டு வந்து தந்தது. இதை உங்களுக்காகக் கொண்டு வந்தேன் என்று சொன்னது. நான் அந்த மாங்காயை கையில் வைத்துக் கொண்டேன். 

அந்த குழந்தையின் அன்பைப் பெற நான் தகுதியுடையவனா என்பது எனக்குத் தெரியவில்லை. மக்களின் அன்பு என்னும் ஆழி முன்நிற்கும் ஆழித்துளி என அப்போது உணர்ந்தேன். அன்பே சிவம் என்கிறது நம் மரபு.    

Tuesday 10 May 2022

இணைத்தல்

ஆயகலைகள் 64 என்கிறது இந்திய மரபு. இந்த கலைகளின் தெய்வம் கலையரசி சரஸ்வதி. அத்தனை கலைகளிலுமே அறிதல் என்னும் நிலத்தில் முளைக்கும் விதைகளே. அதனால் தான் அத்தனை கலைகளுக்கும் தெய்வம் கலைமகள் என வழங்கியது நம் மரபு. 

படைக்கலன் பயிலும் ஒருவன் புவியியலும் பயில வேண்டும். ஆயுர்வேதம் பயிலும் ஒருவன் யோக மார்க்கத்தையும் அறிய வேண்டும். ஞானம் என்னும் தீ திசைகள் அனைத்திலும் கிளர்ந்து கிளை விட்டு மேலெழுவதே. யாவும் ஒன்றே என அறிவதே மாணவன் ஆசானாகும் நிலை. போதிசத்வன் புத்தனாகும் நிலை. உபாசகன் தெய்வமாகும் நிலை. 

நண்பர் ஒருவர் என்னுடைய தாக்கத்தால் தனக்கு சொந்தமாக உள்ள மூன்று ஏக்கர் நிலத்தில் முழுமையாக தேக்கு பயிரிடுகிறார். மொத்த வயலிலும் 200 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி உயரம் கொண்ட பாத்தி அமைக்கப்பட்டது. பாத்தி அமைப்பதில் என்னுடைய கட்டிடப் பொறியியலின் எளிய யுக்திகள் சிலவற்றைப் பயன்படுத்தினேன். விவசாயப் பணியாளர்கள் வழக்கமான தங்கள் பாணியிலிருந்து வேறுபட்டு பணி புரிவதில் சிறு தயக்கம் காட்டினர். இருப்பினும் எண்ணிய வண்ணம் வேலை எண்ணியாங்கு இயற்றப்பட்டது. அத்தனை பாத்திகளும் ஒரே மட்டத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் சில நடைமுறைப் பயன்கள் உண்டு. 90 சதவீதம் எனது எதிர்பார்ப்பு எய்தப்பட்டது. மீதி சதவீதமும் அவ்வாறே நிகழ தொகை கூடுதலாக செலவாகும் என்பதால் நான் 100 சதவீத துல்லியத்தை சற்று தளர்த்திக் கொண்டேன். 

ஒரு விவசாயப் பணிக்கு என்னுடைய கட்டிடப் பொறியியலின் ஞானம் துணை நின்றது மகிழ்ச்சி தந்தது.  

Friday 6 May 2022

விடுமுறை ( நகைச்சுவைக் கட்டுரை)

இந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. 

எங்கள் பகுதியில் ஒரு கல்லூரி மாணவன் இருந்தான். அவன் பொறியியலில் முதுநிலை படித்துக் கொண்டிருந்தான். எனக்கு பரிச்சயம் உள்ளவன். என் மீது பிரியமாக இருப்பான். என்னை விட வயதில் இளையவன். அவன் எங்கள் ஊரிலிருந்து ரயிலில் சென்று கல்லூரியில் படித்து வந்தான். அவன் படித்த கல்லூரி தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது. இந்த சம்பவம் நடந்ததற்கு முதல் நாள் இரவு ஒரு பெரும்புயல் வீசக்கூடும் என்ற அறிவிப்பு இருந்தது. 

காலை 5.15க்கு அவன் வந்து வீட்டுக் கதவைத் தட்டினான். நான் தான் கதவைத் திறந்தேன். 

‘’என்னப்பா விடிகாலைலயே வந்திருக்க. என்ன விஷயம்?’’ எனக்கு தூக்க கலக்கம். அது நீங்காமலேயே உள்ளே அழைத்து உட்கார வைத்தேன். 

‘’அண்ணன் ! இன்னைக்கு எனக்கு எக்ஸாம் இருக்கு. ஜங்ஷன் வரைக்கும் போகணும்.’’

அப்போது பேய்மழை கொட்டிக் கொண்டிருந்தது. 

‘’கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள்ல பள்ளி கல்லூரி விடுமுறைன்னு நியூஸ்ல சொன்னாங்க. அதோட டிரெயின்லாம் கேன்சல்.தெற்கு ரயில்வே அனௌன்ஸ் பண்ணியிருக்காங்க. அதுவும் நியூஸ்ல வந்துச்சு’’

‘’ஆமாம் அண்ணன்! ஆனா எங்க காலேஜ் உண்டு’’

‘’கவர்மெண்ட் அறிவிச்சப்புறம் அதை மீறி செஞ்சா உங்க காலேஜூக்கு ஃபைன் போட்டுடுவாங்க. ‘’ 

‘’ஆனா எக்ஸாம் நடந்துடுமே அண்ணன். எனக்கு நல்ல ஸ்கோர் இருக்கு. இந்த எக்ஸாம் எழுதாமப் போனா எனக்கு டிஸ்டிங்க்‌ஷன் மிஸ் ஆயிடும். 92 பர்செண்ட் வாங்கி டிஸ்டிங்க்‌ஷன் மிஸ் ஆச்சுன்னா ரொம்ப கஷ்டமாயிடும் அண்ணன்’’

மழையால் கரண்ட் வேறு இல்லை. மாணவன் கல்லூரி உடையில் புத்தகப்பையுடன் கிளம்பி வந்து நிற்கிறான். 

’’கொஞ்சம் வெயிட் பண்ணு. நான் முகம் கழுவி விட்டு வரேன்’’

வந்து அமர்ந்தேன். 

அப்போது தொலைபேசியும் அலைபேசியும் சமமாக பயன்படுத்தப்பட்டு வந்த காலம். நான் எங்கள் ஊரின் எக்ஸ்சேஞ்ச்க்கு ஃபோன் செய்து தஞ்சாவூர் டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச்சின் எண்ணை வாங்கிக் கொண்டேன். அங்கு ஃபோன் செய்தேன். 

‘’சார் வணக்கம் சார் . எனக்கு தஞ்சாவூர் எஸ். பி ஆஃபிஸ் , கலெக்டர் ஆஃபிஸ் நம்பர் வேணும். ‘’எண்கள் கிடைத்தன. 

முதலில் எஸ். பி ஆஃபிசுக்கு ஃபோன் செய்தேன். 

மூன்றாவது ரிங்கில் ஃபோனை எடுத்தார்கள். 

’’வணக்கம் சார். அதாவது, கவர்மெண்ட்  புயலால நாலு மாவட்டத்துக்கு லீவு சொல்லியிருக்காங்க. ஆனா  ‘’-----------------’’ காலேஜ் இன்னைக்கு எக்ஸாம் நடத்துறாங்க.’’

ஃபோனை எடுத்தவர் சிறிது யோசித்தார். ‘’இது எஸ். பி ஆஃபிஸ். நீங்க கலெக்டர் ஆஃபிசுக்குத்தான் ஃபோன் செய்யணும்.’’

‘’உண்மை தான் சார். ஆனா இது லா அண்ட் ஆர்டர் இஷ்யூவும் கூட. அந்த காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் பக்கத்துல இருக்கற மாவட்டங்கள்ல இருந்தும் அங்க வந்து படிக்கறாங்க. அவங்க காலேஜ் கிளம்பி வந்து அவங்களுக்கு எதாவது ஆச்சுன்னா அது பெரிய விஷயமாயிடும் சார்’’

ஃபோனை எடுத்தவர் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார். 

‘’நீங்க எஸ். பி க்கு இப்படி ஒரு கால் வந்ததுன்னு இந்த விஷயம் பத்தி இன்ஃபார்ம் பண்ணிடுங்க.’’

அவர் ஒரு யோசனையுடன் சரி என்று சொல்லி விட்டார். 

மாணவனிடம் , ‘’தம்பி ! நீ என்ன பண்ற தஞ்சாவூர்ல இருக்கற உன் ஃபிரண்ட்ஸ் ரெண்டு மூணு பேருக்கு ஃபோன் செஞ்சு ஹெட் ஆஃப் த டிபார்ட்மெண்ட்க்கு ஃபோன் பண்ணி வெளியூர்ல உள்ள ஸ்டூடண்ட்ஸ் வந்து சேர ரயிலோ பஸ்ஸோ கிடையாது. எனவே வெளியூர் ஸ்டூடண்ட்ஸ் நல்லதுக்காக எக்ஸாம் நடத்தக் கூடாதுன்னு ரெக்வெஸ்ட் பண்ணச் சொல்லு’’

‘’ஸ்டூடண்ட்ஸ்க்கு அதெல்லாம் பழக்கம் இல்லன்ணன்.’’

‘’இந்த மாதிரி ஒரு சிக்கல்ன்னு இன்ஃபார்ம் பண்ணாதான் நிர்வாகத்துக்கு தெரியும்.’’

‘’நானே ஃபோன் பண்ணட்டுமா?’’

‘’ நீ பண்ணக் கூடாது. அங்க இருக்கறவங்க தான் பண்ணனும்’’

மாணவன் தஞ்சையில் உள்ள தன் சக மாணவர்களுக்கு ஃபோன் செய்தான். 

அந்த இடைவெளியில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தேன். 

பாதி கோப்பை அருந்தியிருந்த நிலையில் கலெக்டர் ஆஃபிஸுக்கு ஃபோன் செய்தேன். ரிங் ஆகிக் கொண்டிருந்தது. யாரும் எடுக்கவில்லை. 

எஸ். பி ஆஃபிசுக்கு ஃபோன் செய்தேன். 

‘’சார்! கலெக்டர் ஆஃபிசுக்கு ஃபோன் செஞ்சன். யாரும் எடுக்கல. எனக்கு கலெக்டரோட ஃபஸ்ட் பி.ஏ செல் நம்பர் வேணும். அந்த நம்பர் கொடுங்க’’

ஃபோனை எடுத்தவர் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். 

‘’சார் ! கொஞ்சம் ஹெல்ப்  பண்ணுங்க. உங்க ஹெல்ப் ரொம்ப முக்கியமானது. ஸ்டூடண்ட்ஸ்ஸுக்காக’’

‘’இல்ல . ஆஃபிஸ்ல நாங்க இப்ப மினிமமாத்தான் இருக்கோம். எங்க டிபார்ட்மெண்ட் ஸ்டாஃப் நம்பர் இருக்கும். ஆனா கலெக்டர் ஆஃபிஸ் ஸ்டாஃபோட நம்பர் இருக்குமான்னு தெரியலை. அதான் யோசிக்கறன்’’

‘’நான் ஒரு வழி சொல்றன். உங்க மைக்ல கலெக்டரோட ஃபஸ்ட் பி.ஏ நம்பர் வேணும்னு சொல்லுங்க. யாராவது ஒருத்தர் கொடுத்துடுவாங்க.’’

அவர் மௌனம் காத்தார். 

‘’மாணவர்களோட நன்மைக்காக சார்’’

’’சரி . நான் டிரை பண்றன்.’’

மாணவன் என்னிடம் ‘’அண்ணன் ! என்ன அண்ணன் என்னென்னமோ பண்றீங்க. ?’’

‘’ஒன்னும் பண்ணல. சாதாரணமா நாலு ஃபோன் தான் பண்றன்’’  

பத்து நிமிடம் கழித்து எஸ். பி ஆஃபிசுக்கு ஃபோன் செய்தேன். 

அவரிடம் கலெக்டர் ஃபஸ்ட் பி.ஏ எண் வந்து சேர்ந்திருந்தது. 

எண்ணைப் பெற்றுக் கொண்டு . ‘’சார் உங்க பேர் என்ன? இஸ்யூ சால்வ் ஆனதும் உங்களுக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்றோம்’’

அவர் பெயரைச் சொன்னார். 

‘’இந்த அளவுக்கு ஹெல்ப் பண்ணனும்னா அதுக்கு ஒரு பெரிய மனசு வேணும். ரொம்ப தேங்க்ஸ்’’

‘’பரவாயில்லைங்க’’

தஞ்சாவூர் மாணவர்கள் ஹெட் ஆஃப் தி டிபார்ட்மெண்ட்டுக்கு ஃபோன் செய்து பேசி இருந்தார்கள். அவர்களுடைய பதில் வந்தது. 

‘’அண்ணன் ! இவ்வளவு முயற்சி செஞ்சும் ஹெச். டி எக்ஸாம் உண்டுன்னு சொல்லிட்டார் அண்ணன். தஞ்சாவூர்ல மழை இல்லையாம்’’

அப்போது காலை 6.45 ஆகி விட்டது. 

கலெக்டர் ஃபஸ்ட் பி. ஏ வுக்கு ஃபோன் செய்தேன். 

‘’ சார் ‘’--------------’’ காலேஜ் இன்னைக்கு கவர்மெண்ட் இன்ஸ்ட்ரக்‌ஷன் தாண்டி எக்ஸாம் நடத்துறாங்க. நீங்க அந்த காலேஜ் ரெஜிஸ்ட்ரார்கிட்ட பேசி எக்ஸாம் கேன்சல் பண்ண சொல்லுங்க’’

‘’நான் இப்ப அதிராம்பட்டினத்தில கலெக்டரோட இருக்கன். ராத்திரி முழுக்க நாங்க தூங்கலை. சைக்ளோன் ஒர்க். தஞ்சாவூர் போக காலைல பத்து மணி ஆயிடும். ‘’

‘’எக்ஸாம் காலைல 9 மணிக்கு சார். வெளியூர் ஸ்டூடண்ட்ஸ்லா வர முடியாது. அவங்களுக்கு டிஸ்டிங்ஷன் மிஸ் ஆகும்’’

‘’இப்ப என்ன செய்யணும்னு சொல்றீங்க?’’

‘’ரிஜிஸ்ட்ரார்ட்டயாவது கண்ட்ரோலர் ஆஃப் எக்ஸாம் கிட்ட யாவது பேசுங்க. நீங்க பேசுனா விஷயம் நடக்கும்’’

’’அரைமணி நேரம் கழிச்சு எனக்கு ஃபோன் செய்ங்க’’

அவர் சொன்னவாறே நான் செய்தேன். 

‘’ரிஜிஸ்ட்ரார் கிட்ட பேசிட்டன். இன்னைக்கு எக்ஸாம் கேன்சல் பண்றன்னு சொல்லிட்டாங்க. ‘’

‘’ரொம்ப நன்றி சார்’’

மாணவன் எனக்கு நன்றி தெரிவித்து விட்டு சென்றான். வெளியே நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. காலையிலிருந்து நடந்த சம்பவங்கள் வீட்டுக்குள் மழை பெய்தது போல் இருந்தது. நான் குளித்து விட்டு ஆசுவாசமானேன். 

11 மணிக்கு மாணவன் சோகமாகத் திரும்பி வந்தான். 

‘’அண்ணன் ! 9 மணிக்கு எக்ஸாம் நடந்திருக்கு அண்ணன். தஞ்சாவூர்ல மழை இல்லன்னு சொல்றாங்களாம்’’

மாணவனை நடந்த சம்பவங்களை விளக்கி உயர்கல்வித் துறை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதச் சொன்னேன். அதனை தபால் ஆஃபிஸ் சென்று அனுப்பி விட்டு வந்தோம். 

9 மணிக்குத் திட்டமிட்ட பரீட்சை மட்டும் நடந்திருக்கிறது. மற்ற பரீட்சைகள் அனைத்தும் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன. அந்த 9 மணி பரீட்சையையும் எழுத முடியாதவர்களுக்கு தனியாக ஒரு தேர்வு நடத்தப்பட்டது. என் நண்பன் அதில் தேர்வு எழுதி விட்டான். அவனுடைய டிஸ்டிங்ஷனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

சில நாட்கள் கழித்து அந்த மாணவனை வீட்டுக்கு வரச் சொன்னேன். 

‘’நான் சொல்றத கவனமா கேட்டுக்க. நாம  பண்ண முயற்சில அன்னைக்கு உங்க காலேஜ்ல  இருந்த நிறைய எக்ஸாம் கேன்சல் ஆயிடுச்சு.  9 மணிக்கு நடந்த எக்ஸாமும் ரீ எக்ஸாம் வச்சாச்சு. ஆனா நாம நடந்ததை புகாரா அனுப்பிட்டோம். அதாவது நீ அனுப்பிட்ட. மேலேயிருந்து காலேஜ்ல எக்ஸ்பிளனேஷன் கேப்பாங்க. அவங்களுக்கு விளக்கம் கொடுக்கணும். அந்த விளக்கத்தோட காப்பியை உனக்கும் தருவாங்க. அப்ப நகல் பெற்றுக் கொண்டேன்னு கையெழுத்து போடச் சொல்லுவாங்க. அந்த பேப்பரை படிச்சுப் பாத்துட்டு கையெழுத்து போடு’’ மாணவனிடம் சொன்னேன். 

மாணவன் ஒருநாள் வகுப்பில் இருந்திருக்கிறான். பேராசிரியர் மாணவர்களுக்குப் பாடம் எடுத்துக் கொண்டு இருந்திருக்கிறார். பதிவாளர் அலுவலகத்திலிருந்து ஊழியர் வந்து மாணவரை பதிவாளர் அழைப்பதாக அழைத்திருக்கிறார். பேராசிரியர் ஊழியரிடம் என்ன விஷயம் என்று கேட்டிருக்கிறார். கல்லூரி பற்றி இந்த மாணவன் புகார் அனுப்பியிருக்கிறான் ; அது தொடர்பாக என்று ஊழியர் பதில் சொல்லியிருக்கிறார். 

‘’நோ நோ நீங்க வேற யாரையோ கூப்பிட இவனைக் கூப்பிடறீங்க. ஹீ இஸ் வெரி பொலைட் அண்ட் கொயட். இந்த மாதிரி விஷயம்லாம் இந்த பையன் செய்ய மாட்டான்’’ பேராசிரியர் உறுதியாகக் கூறியிருக்கிறார். 

மாணவன் ‘’நான் தான் சார் புகார் அனுப்பினேன்’’ என்று சொன்னதும் அங்கே குண்டூசி கீழே விழும் ஓசை கேட்குமளவு அமைதி. 

ஊழியருடன் பதிவாளர் அறைக்குச் சென்று உறுதியான உடல்மொழியுடன் நின்றிருக்கிறான். 

‘’நீங்க தான் புகார் அனுப்பினதா?’’

‘’ஆமாம் சார். ‘’

‘’இதுல ஒரு கையெழுத்து போடுங்க.’’ என்று ஒரு கடிதத்தைக் கொடுத்திருக்கிறார். மாணவன் அதை வாசித்திருக்கிறான். ‘’உங்களுக்கு ஒரு காப்பி கொடுப்போம்’’. பதிவாளர் கூறியிருக்கிறார். 

‘’எந்த பேப்பரா இருந்தாலும் வாசிச்சிட்டுதான் கையெழுத்து போட முடியும் சார்’’

வாசித்து விட்டு கையொப்பமிட்டிருக்கிறான். 

‘’இப்ப சந்தோஷம் தானா?’’

‘’கவர்மெண்ட் அனௌன்ஸ் செஞ்சும் டிஸ் ஒபே செஞ்சு காலேஜ் வச்சா அந்த காலேஜ்ஜுக்கு அஞ்சு லட்சம் ரூபாய் ஃபைன் கட்டணும்னு கவர்மெண்ட் நார்ம்ஸ். அது நடந்திருந்தா இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும் சார்’’ என்று கூறி விட்டு வந்து விட்டான். 

அன்று மாலை என்னைச் சந்தித்து ‘’அண்ணன் ! நாம பேசிட்டு இருந்த மாதிரி இப்ப சந்தோஷமான்னு ரிஜிஸ்ட்ரார் கேட்டாரு. நான் நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரியே சொல்லிட்டன் அண்ணன்’’ என்றான். 

விதியும் மதியும்

உலகம் எளிய குடிமக்களால் ஆனது. சாமானியர்களான அவர்களே இன்றைய தேதிக்கு 700 கோடி எண்ணிக்கைக்கு மேல் இருக்கிறார்கள். உலகின் ஒட்டு மொத்த அரசாங்கங்களின் அதிகாரிகளாக ஊழியர்களாக பொறுப்புகளில் இருப்பவர்கள் இந்த எண்ணிக்கையில் ஒரு சதவீதத்துக்கும் கீழே தான் இருக்கிறார்கள்.  அரசாங்கங்கள்தான் விதிகளை உருவாக்குகின்றன. அவற்றை உருவாக்குபவர்களே அவற்றை உடைப்பவர்களாக இருக்கக் கூடாது. ''The law makers should not be the law breakers''. ஒரு தொழில் முனைவோனாக நான் எப்போதும் ஒரு விஷயத்தை நினைத்துப் பார்ப்பேன். உலகில் சமயங்கள் தோன்றி 6000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடும். அரசுகள் உருவாகியும் அதே ஆண்டுகள் இருக்கக் கூடும். சமயங்கள் உருவாக்கியிருக்கும் விதிகளை விடவும் அரசாங்கங்கள் உருவாக்கியிருக்கும் விதிகளை விடவும் வணிக விதிகள் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை எல்லாராலும் ஏற்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஒரு சமயத்தை பின்பற்றுபவர் இன்னொரு சமயத்தை பின்பற்றுவதில்லை. எனினும் வணிக விதிகளை கொள்கை அளவிலேனும் எல்லாரும் ஏற்கிறார்கள். ஒரு ரூபாய் என்பது எல்லாருக்குமே ஒரு ரூபாயே. செல்வந்தருக்கும் அதே மதிப்புதான். ஏழைக்கும் அதே மதிப்பு தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் அந்த ரூபாயின் மதிப்பு ஒன்றே. எந்த மொழி பேசுப்வருக்கும் அது சம மதிப்பே கொள்ளும். ரூபாய் தன்னளவில் யாவரையும் சமமாக ஒன்றாகப் பார்க்கிறது. விருப்பு வெறுப்புகள் அதைப் பயன்படுத்துபவர்களுடையவை. தொழில் முனைவோனாக நான் எண்ணுவது சமயத்தின் விதிகளை விட அரசாங்கத்தின் விதிகளை விட வணிக விதிகள் இந்த உலகில் உருவாக்கியிருக்கும் ஒழுங்கு என்பது மிக மிக அதிகம். உலகின் அத்தனை ஒழுங்கீனங்களுக்கும் கூட அதுவே காரணமாகிறது  என்பது ஒரு நகைமுரண்.

என்னுடைய கட்டுமானத் தொழில் என்பதே விதிகளை செயல்படுத்துவது தான். நூல் பிடித்தாற் போல் செய்ய வேண்டிய வேலைகள். ஒரு நாள் என்றால் குறைந்தபட்சம் இவ்வளவு வேலைகள் நடந்திருக்க வேண்டும் . அவ்வாறு நடந்தால் சிறிய அளவிலான லாபம் உறுதி செய்யப்படும். இல்லையேல் நட்டம் உருவாகும். எல்லாம் சரியாக நடந்தால் லாபம். சரியாக நடக்காவிட்டால் நட்டம். விதிகளை முறையாகச் செயல்படுத்துகிறோம் என்ற உணர்வு தான் இயற்கை இடர்களால் ஏற்படும் நட்டங்களிலிருந்து மீண்டு வருவதற்கான தெம்பை அளிக்கிறது. ஏற்ற இறக்கமும் லாப நஷ்டமும் வாழ்க்கையில் சகஜம்; அவற்றை இயல்பாக ஏற்க வேண்டும் என்ற நடைமுறை விவேகத்தை தொழில் முனைவோருக்கு வழங்குகிறது. 

அரசாங்க ஊழியர்கள் விதிமீறல் என்ற விஷயத்தை சர்வசாதாரணமாகச் செய்கிறார்கள். உண்மையில் அவர்களுக்கு விதிகளைச் செயல்படுத்துவதைக் காட்டிலும் அதனை மீறி அதனால் சுயநலம் சார்ந்து பயன் அடைவதில் தான் விருப்பமும் ஆர்வமும் இருக்கிறது. இதன் விரிவாக்கமாக, இந்த அரசு ஊழிய மனோநிலை தங்களுக்கு சாதகமாக விதிகளை உருவாக்கிக் கொள்ளும் நிலைக்கு அவர்களை உந்தி முன்னகர்த்துகிறது. ஆனால் ஜனநாயகத்தில் அரசாங்க ஊழியர்களுடன் அனைத்தும் முடிவடைந்து விடுவதில்லை. அதற்கு மேல் நீதிமன்றம் இருக்கிறது. குடிமை அமைப்புகள் இருக்கின்றன. 

அரசாங்கம் என்பது மக்களின் வரிப்பணத்தால் ஆனது. எந்த அரசாங்க ஊழியரும் தன் சொந்த முதல் போட்டு அரசாங்கத்தை ஸ்தாபிதம் செய்யவில்லை. அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலுக்கும் தேவை ஏற்படின் பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள். அவர்கள் கையாளும் அரசுப்பணத்துக்கு கணக்கு சொல்ல வேண்டியவர்கள். 

நம் நாட்டின் சட்டம் அரசாங்க ஊழியர்கள் விஷயத்தில் தேவையான கெடுபிடியுடனே இருக்கிறது. பொதுவாக யாரும் அரசாங்க ஊழியர்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்வதில்லை என்பதை சர்க்கார் ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்கள் நீதிமன்றத்தை அடிக்கடி நாடாமல் இருப்பதற்கு காரணம் அவர்களுடைய இயலாமை அல்ல ; மக்கள் அரசாங்கம் மீதும் அரசாங்க ஊழியர்கள் மீதும் மீண்டும் மீண்டும் வைக்கும் நம்பிக்கையால் தான். இதனை புரிந்து கொள்ள ஒரு நுண்ணுணர்வு வேண்டும். ஒருவரின் நல்லியல்பை மென்மையை அவரின் பலவீனமாக எவரும் புரிந்து கொள்வார் எனில் அவர் அறிவின் பாதைக்கு எதிர் திசையில் வேகமாக சென்று கொண்டிருக்கிறார் என்று பொருள். 

பொது விஷயம் சார்ந்து ஒரு விதிமீறல் என்னுடைய கவனத்துக்கு வந்தது. அதனை நிகழ்த்தியவர் ஒருவர். அடிப்படையில் நான் அரசாங்கம் மீது நம்பிக்கை வைப்பவன். அரசாங்கத்தின் ஊழியர்களில் பத்தில் ஒன்பது பேர் சரியில்லை என்றாலும் சரியாக இருக்கும் ஒருவரின் மேல் அந்த ஒன்பது பேர் செய்யும் தவறுகளின் சுமையை சுமத்தக் கூடாது என்றும் அரசாங்கத்தில் ஒருவரைச் சந்திக்கும் போது புதிய ஒரு மனிதரைச் சந்திக்கும் போது நாம் எந்த நல்லெண்ணத்தின் சலுகையை அவருக்கு வழங்குகிறோமோ அதனை வழங்க வேண்டும் என்று எண்ணுபவன். நான் மட்டுமல்ல பொதுமக்களில் பலர் அப்படித்தான் நினைக்கிறார்கள். உண்மையில் இது ஒரு காந்திய வழிமுறை. எந்த மனிதருக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன் நான். 

பொது விஷயம் ஒன்றில் ஒரு தவறு நடந்தது. தார்மீகப் படியும் சட்டப்படியும் அது பெரிய தவறு. எவரும் தகவல் தெரிவிக்கும் முன்னரே அரசு அதிகாரிகள் அதன் மேல் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னரும் நடவடிக்கை இல்லை. தொடர்ந்து நினைவூட்டல்கள் அளிக்கப்பட்டன. தவறு இழைத்தவருக்கு உதவ அது தொடர்பான தொடக்க நிலை ஊழியரிலிருந்து மேல்நிலை அதிகாரிகள் வரை முடிவு செய்து நிகழ்வுகள் நடந்தன. நடந்த ஒரு தவறுடன் இத்தனையும் சேர்ந்ததால் அது இன்னும் அடர்த்தியானது. அந்த விஷயத்தில் அவருக்கு உதவிய ஊழியர்களும் அதிகாரிகளும் அந்த விஷயத்துடன் இணைந்து அதன் தன்மையை மேலும் தீவிரமாக்கினர். காலத்தைக் கடத்தி விட்டால் இந்த விஷயத்திலிருந்து தப்பி விடலாம் என்று தவறு செய்தவர்களும் அவருக்கு உடந்தையாயிருந்தவர்களும் எண்ணினர். உண்மையில் காலம் கடத்தியது அவர்கள் மீதான் பிடியை மேலும் இறுக்குகிறது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. தவறிழைத்த ஒருவருடன் அவருக்கு உடந்தையாயிருந்த சிலரும் இந்த விஷயத்தில் சிக்கக் கூடும். 


Tuesday 3 May 2022

அப்போதைக்கு இப்போதே (நகைச்சுவைக் கட்டுரை)

வலைப்பூ எழுத ஆரம்பித்து சில ஆண்டுகள் ஆகியிருப்பினும் சென்ற ஆண்டில் தான் நகைச்சுவைக் கட்டுரையை எழுதினேன்.  


இருப்பினும் சமீப காலமாக சாதாரணமாக எழுதினால் கூட அது நகைச்சுவைக் கட்டுரையாகி விடுகிறதோ என்று தோன்றுகிறது. இந்த உலகத்தோடு ஒப்பிடுகையில் ஒரு மனிதன் என்பவன் அளவில் சிறியவன். அளவில் சிறிய ஒரு மனிதன் மிக மிகப் பெரிய உலகத்தின் கணக்கற்ற சாத்தியங்கள் முன் நிற்கையில் நிகழக்கூடிய நிகழ்வுகளின் நிகழ்தகவுகள் நகைச்சுவை கொண்டவையாகவே அமைய முடியும். சார்லி சாப்ளின் தனது சினிமாக்களில் இவ்வாறான காட்சிகளை அமைத்திருப்பார். அவரது திரைப்படத்தில் ஒரு காட்சி. சாலையில் சாப்ளின் நடந்து சென்று கொண்டிருப்பார். அங்கே உக்கிரமான ஒரு ஊர்வலக் கூட்டம் சில வினாடிகளில் ஆக்ரோஷமாக கடந்து செல்லும். சாப்ளின் வீதி ஓரத்தில் நகர்ந்து அதனைக் கவனிப்பார். கடைசியாக சென்ற ஒருவர் தன் கையில் வைத்திருந்த கொடியை தீவிரமாக கோஷம் போடும் செயலில் நழுவ விட்டு விடுவார். நழுவியது அவருக்குத் தெரியவும் தெரியாது. சாப்ளின் அதைப் பார்த்து தவற விடுகிறாரே என அந்த கொடியை எடுத்துக் கொண்டு உரியவரிடம் ஒப்படைக்க கூட்டத்தின் பின்னால் ஓடுவார். கூட்டம் இவருக்கு முன்னால் பல அடிகள் சென்றிருக்கும். பின்னால் துரத்தி ஓடுவார். கூட்டம் ஒரு நாற்சந்தியைக் கடந்து விடும். வேகமாக ஓடி வரும் சாப்ளின் சாலை மத்தியில் உள்ள குழியைக் கவனிக்காமல் விழுந்து விடுவார். கையில் உள்ள கொடியை தூக்கி தூக்கி காட்டுவார். பின்னால் போலீஸ் வந்து விடும். இவரைப் பார்த்ததும் ஒரு போலீஸ் இவர் கையில் இருக்கும் கொடியைப் பார்ப்பார். ''So, You are the Leader?'' என்பார். சாப்ளின் நடந்ததைக் கூற முயற்சி செய்வார். அவரை ஒரு வார்த்தையும் பேச விடாமல் அள்ளித் தூக்கி சிறைக்குக் கொண்டு சென்று விடுவார்கள். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருப்பது தான் வாழ்வின் சுவாரசியமே. 

எனது நண்பர் ஒருவர். உள்ளூர்க்காரர். சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த போது ஒரு விஷயம் குறித்து சொன்னேன். அவர் அதில் உதவுவதாகச் சொன்னார். அந்த விஷயம் குறித்து எழுதி ‘’To whomsoever it may concern'' என்று தலைப்பிட்டு அதனுடன் தொடர்புடைய ஒருவரின் அல்லது பலரின் கையெழுத்து வாங்கித் தருகிறேன். அதை முகாந்திரமாகக் கொண்டு நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் உதவி கேட்கலாம் என்றேன். அவர் அப்படியா என்று கேட்டுக் கொண்டார். ஆம் என்றும் சொல்லவில்லை ; இல்லை என்றும் சொல்லவில்லை. சில நாட்கள் சென்றன. நண்பர் அழைத்தார். அதில் அந்த ஊரின் மக்கள் பிரதிநிதி கையொப்பமிட்டால் சிறப்பாக இருக்கும் என்றார். நான் அதனை ஏற்பாடு செய்து கொடுத்தேன். ஒரு பணி என்றால் குறிப்பிட்ட காலவரையறையில் அதனைச் செய்ய முழு முயற்சி செய்வேன் ; அது என இயல்பு. நண்பர் கோரியதை செய்து கொடுத்தேன். பின்னர் சில நாட்கள் கழித்து அனுப்புநர் பெறுநர் வடிவில் வேண்டும் என்றார். அதுவும் செய்யப்பட்டது. பெறுநர் மாவட்ட ஆட்சியர் என்றார். உங்களுக்கு கலெக்டர் பரிச்சயமா என்று கேட்டேன். இல்லை என்றார். உங்கள் நண்பர்கள் எவருக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்றேன். அதுவும் இல்லை. செக்கரட்டரியேட்டில் வேண்டியவர்கள் உள்ளார்களா என்ற கேள்விக்கும் இல்லை என்பதே பதில். நான் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. 

வேறு பணிகளில் ஈடுபட்டிருந்ததால் இந்த பணி சற்று பின்னால் சென்று விட்டது. ஒரு வாரம் கழித்து மாவட்ட ஆட்சியரிடம் இந்த மனுவைக் கொடுக்க வேண்டும் என்றார். அவரை அழைத்துக் கொண்டு சென்றேன். அரசு அலுவலகங்களில் இந்த மனு கொடுத்தல் அனாதி காலமாக தொடரும் நடைமுறை. மனுவை ஐந்து ரூபாய் அஞ்சல் கவரில் வைத்து அனுப்பினாலாவது அலுவலகத்தின் தபால் பிரிவில் அந்த தபால் பதிவாகும். நேரில் கொடுக்கப்படும் மனு எந்த கோப்பில் உறங்கப் போகிறது என்பது கடவுளுக்கே வெளிச்சம். எந்த விஷயத்தைக் குறித்தும் எதிர்மறையாக பேசுவது என் பழக்கத்தில் இல்லை என்பதால் மௌனம் காத்தேன். அலுவலகத்தில் மனுவைப் பார்த்து விட்டு மக்கள் பிரதிநிதி மனுவை நீங்கள் ஏன் கொண்டு வந்தீர்கள் என்று கேட்டார்கள். நண்பர் என்னைப் பார்த்தார். அந்த மனுவுக்கு கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கக் கூடும் என நண்பர் பிரியப்பட்டார் என்றேன். நண்பர் அந்த மனுவின் நகலையும் கையில் வைத்திருந்தார். அதில் மனுவைப் பெற்றுக் கொண்டேன் என அதிகாரி கையொப்பமிட்டுத் தர வேண்டும் என்று கேட்டார். அவ்வாறு வேண்டும் என்றால் மனுவை பதிவுத் தபாலில் அனுப்பி ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினேன். அந்த அதிகாரியும் அவ்வாறே கூறினார். நண்பர் இல்லை மனுவில் தான் கையெழுத்து வேண்டும் என்றார். அதிகாரி எங்களை அங்கிருந்து அனுப்ப மனுநீதி நாள் அன்று வந்து மனு கொடுங்கள். ஒப்புகை கொடுப்பார்கள் என்று சொன்னார். அன்று செவ்வாய்க்கிழமை. மனு நீதி நாள் திங்கள்கிழமை. ஏழு நாள் கழித்து வருவோம் என்று புறப்பட்டோம். அடுத்த திங்கள் அன்று காலையிலிருந்து எனக்கு ஏகப்பட்ட வேலை. சித்திரை வெயிலில் உலவிக் கொண்டிருந்தேன். அன்று மாலை 5.30 மணிக்கு எனக்கு மனு ஞாபகம் வந்தது. நண்பருக்கு ஃபோன் செய்தேன். அவருக்கு மதியம் 2 மணிக்கு ஞாபகம் வந்திருக்கிறது. எனினும் ஆஃபிஸ் இருக்குமோ இருக்காதோ என்ற தயக்கத்தில் அழைக்காமல் இருந்து விட்டார். அந்த வாரம் கடந்து விட்டு அடுத்த வாரம் வந்து விட்டது. திங்களன்று அங்கே சென்றோம். நண்பர் மனுவில் மனுவைப் பெற்றுக் கொண்டோம் என எழுதி கையெழுத்து கேட்டார். அப்படி தர முடியாது என்றனர். மனுவினை நகல் எடுத்து அதன் பின்பக்கம் பதிவு செய்த ஒப்புகை விபரம் தருவதாக சொன்னார்கள்.

நான் அங்கேயிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டேன். நண்பரை அவராகவே சென்று தருமாறு சொன்னேன். ஆட்சியரும் மாவட்ட வருவாய் அதிகாரியும் அமர்ந்திருந்தனர். இவர் சென்ற நேரம் ஒரு பெண்மணி, மாவட்ட ஆட்சியரிடம் தீவிரமாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். நண்பர் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுத்தார். இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ள மக்கள் பிரதிநிதி எங்கே என்று கேட்டார். நண்பர் அவரின் பிரதிநிதியாகத் தான் வந்திருப்பதாகச் சொன்னார். தூரத்தில் இருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். உரிய அதிகாரியிடம் மனு சில நிமிடங்களில் சென்று சேர்ந்தது. அந்த அதிகாரி நான் முதலில் கேட்ட கேள்விகளை நண்பரிடம் திரும்பக் கேட்டார். அப்போதைக்கு இப்போதே என்ற கணக்கில் இவற்றை முன்னரே நாம் சொன்னோமே என்று எண்ணிக் கொண்டேன். 


Monday 2 May 2022

சிறு குறிப்பு

ஹைதராபாத் நண்பர்கள் குழு ‘’காவிரி போற்றுதும்’’ குறித்து ஒரு சிறு குறிப்பை அளிக்குமாறு கேட்டிருந்தது. அவர்களுக்கு அளித்த குறிப்பு கீழே :

***


‘’காவிரி போற்றுதும்’’ நுண் அளவிலான ஒரு சேவை அமைப்பு. முன்னெடுக்கும் பொதுப் பணிகளை ஒரு கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களும் பயன் பெறும் வகையில் ‘’காவிரி போற்றுதும்’’ வடிவமைத்துக் கொள்கிறது. தன்னார்வத்தால் இணைந்த நண்பர்கள் குழுவால் மக்கள் நல செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக அவர்களுக்கு உரிய  தேசத்தைக் கேட்டு இளைய யாதவன் தூது செல்கிறான். கௌரவர்கள் தேசத்தை அளிக்க மறுக்கிறார்கள். குறைந்தபட்சமாக ஒரு கிராமத்தையாவது வழங்குமாறு இளைய யாதவன் மன்றாடுகிறான். ஒரு கிராமம் என்பது ஒரு தேசத்துக்கு சமமானது என்பதும் ஒரு கிராமத்தை ஒரு தேசமாகக் கருதலாம் என்பதும் நான்மறைகளின் காலம் தொட்டே நம் நாட்டின் நம்பிக்கை. ’’காவிரி போற்றுதும்’’ இந்த நம்பிக்கையின் பாதையில் பயணிக்கிறது.

விவசாயத்தை நாட்டின் மிக முக்கியமான விஷயமாகவும் விவசாயிகளை நாட்டின் மிக முக்கிய குடிகளாகவும் ‘’காவிரி போற்றுதும்’’ கருதுகிறது. மிக அதிக வருவாய் வாய்ப்புள்ள விவசாயத் தொழிலின் சாத்தியங்களை நோக்கி விவசாயிகள் நகர்வதற்கான வழிகளை உருவாக்கித் தருவதற்கு ‘’காவிரி போற்றுதும்’’ முனைகிறது.

உலக அளவில் தேக்கு மரங்களுக்கான தேவை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது. நம் நாட்டின் தேவைக்கே தேக்கு மரத்தை வெளிநாடுகளிலிருந்து நாம் இறக்குமதி செய்கிறோம். இவ்வளவு தேவை இருக்கக்கூடிய தேக்கு மரம் தமிழ்நாட்டில் நன்கு வளர வாய்ப்பு உள்ள மரமாகும்.  இதனை கவனம் கொடுத்து வளர்க்கும் விவசாயிகள் நிச்சயம் மிக நல்ல வருவாய்ப் பலன்களைப் பெறுவார்கள். இதற்கான விழிப்புணர்வை உருவாக்குவதை ‘’காவிரி போற்றுதும்’’ தனது முதன்மையான பணியாக நினைக்கிறது.

இந்தியர்கள் விருட்சங்களை தெய்வ ரூபமாகக் காண்பவர்கள். விருட்சங்களுடன் உணர்வுபூர்வமான தொடர்பைக் கொண்டவர்கள். இந்த மேலான தன்மையின் கண்ணியாக கிராம விவசாயிகளை தங்கள் கிராமத்தில் ஆலமரம், அரசமரம், இலுப்பை ம்ரம், வன்னி மரம், புரசை மரம் போன்ற பல்வேறு மரக்கன்றுகளை பொது இடங்களில் நட்டு வளர்த்துக் கொள்ளவும் வெவ்வேறு வழிமுறைகளில் ‘’காவிரி போற்றுதும்’’ உதவுகிறது. இதன் மூலம் கிராமங்களின் பல்லுயிர்ப்பெருக்கம் ( Bio Diversity) பெருகுகிறது என்பது யதார்த்தமான உண்மை.

நம் நாடு நாட்டின் 75வது சுதந்திர ஆண்டினை அமிர்தத் திருவிழாவாகக் கொண்டாடி வருகிறது. அதில் ஒரு கிராமம் முழுவதும் பங்கேற்கும் விதமாக நமது குடியரசு தினத்தன்று காலை ஒரு கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களும் தங்கள் வீடுகளில் ஒரு பூமரக் கன்றை நட்டார்கள். அன்று மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 7 தீபங்கள் ஏற்றப்பட்டன. இந்த நிகழ்வை ‘’காவிரி போற்றுதும்’’ வடிவமைத்து ஒருங்கிணைத்தது.

புண்ணியத் திருத்தலமான ஒரு கிராமத்தில் உலக நன்மைக்காக ஒரு ராமாயண நவாஹம் செய்வித்து அங்கிருக்கும் கிராம மக்களுக்கு 1250 தென்னம்பிள்ளைகளும் 850 மாங்கன்றுகளும் வழங்குவதற்கான ஒரு முன்னெடுப்பை ‘’காவிரி போற்றுதும்’’ திட்டமிட்டுள்ளது.

சீதை , ராமன், இலக்குவன், குகன், அனுமன், வீடணன், அங்கதன் ஆகிய மாந்தர்களின் பெயர்களும் வாழ்க்கையும் தலைமுறைகளின் நினைவுகளில் பதிய அனாதி காலமாக நம் நாட்டில் இராமாயணக் கதையை ஒன்பது நாட்கள் கூறும் வழக்கம் உள்ளது. அதனை நவாஹம் என்பார்கள். கேரளாவில் நவாஹம் நிறைவடைந்த பின் அது நிகழ்ந்த பகுதியில் தென்னம்பிள்ளைகளை மக்களுக்கு வழங்கி அவரவர் வீட்டில் நடச் செய்வர். நுண்ணுணர்வு கொண்ட தாவரமான தென்னை இராமாயண மாந்தர்களின் மேன்மைகளை குடும்பங்களில் நிலைநிறுத்தும் என்பது நம்பிக்கை.