Saturday 30 May 2020

மாற்றம்

அலைகடலின் முன்
ஈரக்காற்று முகம் தீண்ட
நனைந்த கால்களுடன்
தொடுவானத்தை
இமைக்காமல்
நீ
பார்த்துக் கொண்டேயிருந்த கணம்

நிழற்சாலையில்
சேர்ந்து
நடந்த போது
அன்றைய
புதிய மலர்
கண்டு
புன்னகைக்கையில்
எழுந்த ஒளி

மேகங்கள் நகரும் வானத்தை
குதூகலத்துடன்
அடையாளப்படுத்திய
உனது கை விரல்கள்

தீபச் சுடரொளி
பிரதிபலிக்கும்
உனது முகம்

பிரிவின் துயர் காட்டிய
கண்ணீர்த் துளிகள்

மணி ஒலிக்கையில்
கோபுரத்திலிருந்து
சடசடத்து எழும் பட்சிகள்
மௌனத்தில்
அமர்கின்றன
மீண்டும்


Thursday 28 May 2020

மாலை உரையாடல்கள் - 11

வெகு நாட்களுக்குப் பின் , ஒரு மாலை நேரத்தில் , உரையாடுவதற்காக , நானும் நண்பரும் சந்தித்தோம். 

’’பிரபு! நீங்க தொழில்நுட்பம் உண்டாக்குற மகத்தான மாற்றங்களைக் கொஞ்சம் குறைச்சு மதிப்பிடறீங்களோ?’’

‘’அப்படீன்னு நீங்க முடிவுக்கு வர என்ன காரணம்?’’

‘’உங்களுக்கு மரபு மேல தீவிரமான பிடிப்பு இருக்கு. மரபார்ந்த விஷயங்கள்ல ஈடுபாடா இருக்கறவங்க மாற்றத்தை விரும்பாதவங்களா இருப்பாங்க”

நான் என் விரிவான பதிலைச் சொன்னேன்.

ஐரோப்பாவில், தொழிற்புரட்சியின் போது எந்திரங்கள் பெரிய அளவில் கண்டுபிடிக்கப்பட்டன. மிகப் பெரிய அளவில் உற்பத்தி நிகழ்ந்தது. அதன் விளைவாக உலகத்தில் முதலாளித்துவப் பொருளியல் ஆதிக்கம் செலுத்தத் துவங்கியது. மூலதனம் ஒட்டு மொத்த உலகப் பரப்பிலும் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதை மானுடம் கண்டு கொண்டது. அந்த முதலாளித்துவப் பொருளியல் மனித இனம் பல்வேறு நோய்களை வெற்றி கொள்ள உதவியது. ஐரோப்பாவில் பல நூறு ஆண்டுகளாக மாற்றமின்றி இருந்த சமூக அமைப்பை மாற்றம் செய்ய துணை நின்றது. உலகளாவிய வர்த்தகத்தை சாத்தியம் ஆக்கியது. இவை முதலாளித்துவம் ஏற்படுத்திய நல்விளைவுகள். ஆனால் அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் அளவில் மிகப் பெரியவை.

முதலாளித்துவம், உலகெங்கும் ஏகாதிபத்தியத்தைக் கொண்டு வந்தது. உலக வரலாற்றில் முதலாளித்துவம் கோலோச்சத் துவங்கிய பின்னரே சுரண்டல் மிக மூர்க்கமானது. மனித உழைப்பு மிக மோசமாகச் சுரண்டப்பட்டது. இயற்கை மிக அதிக அளவில் சுரண்டப்பட்டதும் முதலாளித்துவத்திற்குப் பின்னர்தான். ஆயுதப் பெருக்கம், அணு குண்டுகள், இரண்டு உலகப் போர்கள் இவை அனைத்துமே முதலாளித்துவத்தின் விளைவுகள். 

நான் இயற்கையைச் சுரண்டும் மக்களைச் சுரண்டும் தொழில்நுட்பத்தைத் தான் எதிர்க்கிறேன். மரபின் மீது ஈடுபாடு கொண்ட எவரும் தொழில்நுட்பத்துக்கு எதிராக இருக்க மாட்டார்கள். மரபு மட்டுமே சுரண்டல் இல்லாத தொழில்நுட்பத்தை உலகுக்குத் தந்துள்ளது. 

இந்திய மரபில் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி ஆகிய மருந்து முறைகள் உள்ளன. அவை எவராலும் தயாரிக்கப்படக் கூடியவை. எளியவை. அளப்பரிய பலன் தருபவை. அவை தொழிற்சாலைகளில் மட்டுமே தயாரிக்கப்பட்டு நோயாளியை அடைய வேண்டும் என்ற கட்டாயம் இல்லாதவை. உணவாகவும் மருந்தாகவும் பயன்படக் கூடியவை. பக்க விளைவுகள் இல்லாதவை. அவையும் அறிவியல்பூர்வமானவையே. 

இந்திய மரபில் மண்ணை வளப்படுத்த பாரம்பர்யமான இயற்கை உரங்கள் உள்ளன. விவசாயம் செய்யப்படும் மண்ணை அடுத்தடுத்த போகத்துக்குத் தயார் செய்ய பசுந்தாள் உரங்கள், கிடை, சாணம் ஆகியவை தயாரிக்க எளியவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெரும் மகசூலைத் தந்தவை. பாரம்பர்யமான  தானிய வகைகள் இருக்கின்றன. விதை தானியங்களாக அடுத்த பயிரிடலுக்கு உதவக் கூடியவை. ஆனால் முதலாளித்துவம் ஆதரித்த விவசாயத் தொழில்நுட்பம் விவசாயிகளை எதிலும் சுயசார்பு இல்லாதவர்களாக ஆக்கியது. 

லாரி பேக்கர் என்ற ஆர்க்கிடெக்ட் ஒரு காந்தியர். அவர் இந்தியக் களிமண் வலிமை மிக்கது. அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டுவதற்குக் கூட அவற்றைப் பயன்படுத்த முடியும். சிமெண்டின் ஆயுள் 60 ஆண்டுகள் மட்டுமே. ஐரோப்பாவில் களிமண் இல்லாததால் சிமெண்ட் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதனை இந்தியா மீது திணிக்கின்றனர் என்று கூறுகிறார்

உலகமே வியந்த பட்டாடைகளையும் பருத்தி ஆடைகளையும் இந்திய கைத்தறி நெசவாளர்கள் நெய்தனர். இன்று அத்தகைய கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை முதலாளித்துவம் பறித்துள்ளது. 

இயற்கையைச் சுரண்டாத - மனித உழைப்பைச் சுரண்டாத - அத்தகைய சுரண்டலுக்குத் துணை போகாத தொழில்நுட்பத்தை நான் என்றுமே வரவேற்கிறேன்.

நண்பர் யோசிக்கத் தொடங்கினார்.

Monday 25 May 2020

திருப்பம்

சமீபத்தில் எழுதிய ‘’திருப்பம்’’ சிறுகதை சொல்வனத்தில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு

திருப்பம்

ஒரு கிராமம் - சில அவதானங்கள் (2)

மகாத்மா காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த போது கிராமங்களை புனர் நிர்மாணம் செய்யும் முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டார். கதர், கைத்தொழில், சுகாதாரம் ஆகியவற்றையே அவர் வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்தார். இந்திய கிராமம் என்பது மிகவும் பொதுவான ஒரு சொல். அதில் எண்ணற்ற நுண்ணிய வேறுபாடுகள் உண்டு. ஒரு நதியின் வடகரையில் இருக்கும் கிராமங்களின் வாழ்க்கைமுறைக்கும் தென்கரையில் இருக்கும் கிராமங்களின் வாழ்க்கைமுறைக்குமே வேறுபாடுகள் உண்டு. அந்த வெவ்வேறு வண்ணங்களே இந்தியாவின் ஆதார சுருதி. அந்த கிராமங்களை ஒருங்கிணைத்ததன் மூலமே உலகின் மகத்தான பல சாம்ராஜ்யங்கள் இந்த மண்ணில் உருவாகி மக்கள் நலம் பேணும் ஆட்சியை - திட்டங்களை வழங்கின. 

பல்வேறு காரணங்களால், இந்திய விடுதலைக்குப் பின், எந்திரப் பெருக்கத்தின் மீது தீவிரமான நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே பெருமளவில் அதிகாரத்தில் இருந்தனர். அவர்களுக்குத் தொழிற்சாலைகள், பெரும் நுகர்வு, பண்ட உற்பத்தி ஆகியவற்றின் மீதே நம்பிக்கை இருந்தது. முற்றிலும் ஐரோப்பிய பாணியிலான திட்டங்களையே அவர்களால் சிந்திக்க முடிந்தது. ஆச்சார்ய வினோபாவே, ஜே.சி.குமரப்பா போன்ற காந்தியவாதிகள் திட்டமிடும் இடத்திலும் வழிகாட்டும் இடத்திலும் இருந்திருக்கவில்லை என்பது இந்தியாவின் துரதிர்ஷ்டங்களில் பெரியது. 

நாம் சுதந்திரம் அடைந்த போது, பிரிட்டிஷாரால் முற்றிலுமாக பொருளாதார ரீதியில் சுரண்டப்பட்டிருந்தோம். வறுமை அரசாங்கத்தின் ஆகப் பெரிய சிக்கலாக இருந்தது. மக்களை மதம், சாதி, இனம் ஆகியவை பிரித்திருந்தன. இவற்றிலிருந்து நாட்டை மீட்க எந்திரப் பெருக்கமே ஒரே வழி என அரசாங்கம் நம்பியது. அதனை பிரச்சாரம் செய்யவும் செய்தது. தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் எந்திரங்கள் அதன் முதலாளிகளுக்கும் விற்பனை வலைப்பின்னலுக்குமே பெரும் பயன் தரும். அதன் கடைசி முனையில் இருக்கும் நுகர்வோருக்கு அது பயனை மட்டுமே தருமா என்பது உறுதியில்லாத ஒன்று. 

இந்திய கிராமங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கியவை. அவற்றின் பாரம்பர்யமான முறைகள் மீண்டும் புழக்கத்துக்கு வர வேண்டும். மரபுக்குத் துணை நிற்கும் வலு சேர்க்கும் தொழில்நுட்பமே இன்றைய இந்தியத் தேவை.


Sunday 24 May 2020

ஒரு கிராமம் - சில அவதானங்கள்

காவிரி டெல்டா கிராமம் ஒன்றில் பத்து நாட்களாக ஒரு சமூக ஆய்வை மேற்கொண்டிருந்தேன். நாளின் பெரும் பகுதி அங்கேயே இருந்தேன். அப்போது என் மனம் கண்ட உணர்ந்த விஷயங்களை இங்கே பதிவு செய்கிறேன். 

1. எல்லா இந்திய கிராமங்களுக்கும் ஒத்த விஷயங்கள் பல இருக்கின்றன. பெரிய சிறிய வேறுபாடுகளும் உள்ளன. மழைப்பொழிவும் பாசன வசதியுமே ஒரு இந்திய கிராமத்தின் அடிப்படையை உருவாக்குகிறது. எனினும் இந்தியாவின் வறண்ட நிலப்பகுதியில் உள்ள எத்தனையோ கிராமங்கள் எவ்வளவோ சாதித்துள்ளன.

2. ஒவ்வொரு கிராமத்துக்கும் பாரம்பர்யமான அறிவு என்பது இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துள்ளது. அந்த நுண்ணறிவே அவற்றை வாழ வைத்துள்ளது. அந்த அறிவு நம் பண்பாட்டிற்கு அடிப்படையானது. அது முழுமையாக மீட்டெடுக்கப்பட வேண்டும். 

3. நவீனத் தொழில்நுட்பம் தேவையானது. ஆனால் பாரம்பர்யமான எந்த அறிவை நவீனத் தொழில்நுட்பம் பதிலீடு செய்கிறது என்பது மிக கவனத்துடன் உற்று நோக்கப்பட வேண்டியது. 

4. ஒரு கிராமம் எல்லா விதமான உயிர்களுக்கும் வாழிடமாயிருப்பது என்பது இந்தியாவின் பண்பு. பூச்சிகள், பறவைகள், பிராணிகள், பட்சிகள் என அனைத்தும் அடங்கிய உயிர்ச்சூழல் ஒரு இந்திய கிராமத்தின் அடிப்படை. 

5. நுண்ணுயிர்கள் செறிந்த கிராமத்தின் மண் என்பது இந்தியாவின் மிகப் பெரிய சொத்து. கிராமத்து மண்ணைச் செறிவூட்ட பாரம்பர்யமான பல முறைகள் உள்ளன. ரசாயன உரங்களே கதி என நினைப்பதும் செயல்படுவதும் கிராம வருவாயின் உபரியை கிராமத்துக்கு வெளியே வாரிக் கொடுப்பதே. 

6. இந்திய கிராமங்களுக்கான செயல்முறைகளை மகாத்மா காந்தியின் சொற்களிலிருந்தே முற்றும் அறிய முடியும். உடல் உழைப்பை அவர் அனைவருக்கும் கட்டாயமாக்கியது என்பது இந்திய கிராமங்கள் பற்றிய புரிதலிலிருந்தே. 

7. பிரிட்டிஷ் ஆட்சியின் பொருத்தமற்ற வரி முறைகள் இந்திய விவசாயத்தையும் நெசவையும் பெரும் இடரில் தள்ளின. அதன் கருநிழல் இன்றளவும் தொடர்கிறது. 

8. மெக்காலே கல்வி முறைக்கும் இந்திய கிராமத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அதுவே கல்வி என ஒவ்வொரு இந்திய கிராமத்தினரும் எண்ணுகின்றனர். அதுவே தங்கள் வாழ்வை மாற்றும் என நம்புகின்றனர். அது அழிவையே கொண்டு வந்துள்ளது. அது சாதித்தது சொற்பமே.

9. சமயம், வாழ்க்கைமுறை, வழிபாடு ஆகியவை சார்ந்த கல்வி கிராமங்களுக்குக் கிடைக்க வேண்டும். ஒரு தொன்மையான சிவாலயம் திகழும் கிராமம் ஒன்றில் நிச்சயமாக தேவாரமும் திருவாசகமும் திருப்பாவையும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அவை கிராமங்களிலிருந்தே எழுந்தன. அவற்றின் உணர்வுகளை ஒரு கிராமத்தைச் சேர்ந்த மனத்தால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். 

10. கிராமங்களில் உற்பத்தியைப் பெருக்க தேவையான உதவிகளைச் செய்வதே அரசாங்கத்தின் பணி. பிரிட்டிஷ் நிர்வாக முறை என்பது இந்திய கிராமங்களைச் சுரண்டுவதற்காக உருவாக்கப்பட்டது. அதன் அரசூழியர் வேலைமுறைக்கு மாற்றாக - கிராமத் தன்னிறைவுக்காக உதவும்- ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

11. உழைக்கும் கரங்களே இந்திய கிராமத்தின் பலம். அவர்கள் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் சமூக இயங்குமுறையே இந்தியாவுக்கானது. 

12. ஒரு கிராமத்தில் வாழும் மக்கள் ஒற்றுமைப்படுத்தப்படுவதே ஒரு அரசு கிராமத்துக்குத் தரும் நல்ல ஆட்சியாக இருக்க முடியும்.

Thursday 21 May 2020

எங்கே இருக்கிறாய்
மலர்ச்சிரிப்பின் மலர்களை புவியெங்கும் காண்கிறேன்
மௌனத்தின் மேகங்கள்
பொழிகின்றன
நிலமெங்கும்
கடலலைகளில் நுரைக்கும் உற்சாகம்
காற்றின் ஈரம்
தெள்ளிய வானம்
அகத்தைத் தேடுபவன்
மரத்தடியில்
விழி மூடி அமர்ந்திருக்கிறான்

Wednesday 20 May 2020

நீயே உலகம்

எத்தனையோ மனித முகங்களில்
உணர்வின் விழிநீர்த் துளிகளில்
வாசலில் குழுமும் பட்சிகளில்
பிராணிகள் காட்டும் நேசத்தில்
ஆறுதல் பெற்று அமைதியுறும் அகத்தில்
ஓயாத கடலலைகளில்
காற்றுடன் அசையும் நீண்ட மரங்களில்
மெல்ல மிக மெல்ல
வருகை தரும் காலைகளில்
உதயத்தின் சிவப்பு சூரியனில்
அந்தியில் எழும் இளநிலவில்

தினம் தினம்

நிகழ்கிறது

நின்
விஸ்வரூபம்

Tuesday 19 May 2020

கிராமியப் பொருளாதாரம்

சில வருடங்களுக்கு முன்னால், ‘’ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை - செவ்வியல் பொருளாதாரத்தின் வரலாறு’’ என்ற நூலை வாசித்தேன். அந்நூலின் துவக்கத்தில் இவ்வாறு கூறியிருப்பார்கள் : ’’இது பொருளாதாரம் குறித்தது. பணம் எவ்வாறு இயங்குகிறது - எங்ஙனம் மதிப்பு பெறுகிறது என்பதைப் பொறுத்தது. பணம் ஏற்படுத்தும் விளைவுகளால் உண்டாகும் அநீதி பொருளாதாரம் என்ற பிரிவின் கீழ் வராது. இதனை ஏற்றே பொருளாதாரம் குறித்து மேலும் பேச முடியும். எளிமையாக வாழும் ஒருவனைக் காட்டிலும் ஊதாரியே பலவிதமான செலவு செய்து பண சுழற்சியை உண்டாக்குகிறான். ஊதாரித்தனம் தவறு என்பது நீதி - சட்டம் - சமூகவியல் சார்ந்தது. பொருளாதாரம் பணத்தின் இயங்குமுறையை மட்டுமே கணக்கெடுக்கும்.’’ எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பொருளாதாரத்தின் இந்த Disclaimer யாருக்குமே அதிர்ச்சி தரக் கூடும். 

உலகில் இன்று வலுவான பொருளாதாரங்களாக இருக்கும் பல ஐரோப்பிய நாடுகள் 17ம் நூற்றாண்டுக்குப் பின்னரே தலையெடுத்தவை. அமெரிக்கா 20ம் நூற்றாண்டிலேயே பெரிய சக்தியானது. ஆனால் இந்தியா குறைந்தபட்சம் 4000 ஆண்டுகளாக உலகின் பெரிய பொருளாதார சக்தியாக விளங்கி வந்திருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் இங்கிலாந்தால் மிக மோசமாக சுரண்டப்பட்ட போது கூட, இந்தியா பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாகவே இருந்திருக்கிறது. இன்றும் இந்தியா உலகின் முக்கியமான பொருளாதாரமே.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் மனித உழைப்பைச் சுரண்டுவதன் மூலம் செல்வ வளம் மிக்க நாடுகளாக ஆயின. இந்தியா மனிதநேயம் மிக்க பொருளியலையே தனது இயங்குமுறையாக பல ஆயிரம் ஆண்டுகள் கொண்டிருந்தது. இன்று மாற்றங்கள் இருப்பினும், மிகச் சிறு அளவில் அம்முறை நீடிக்கவே செய்கிறது.

இந்தியா வெவ்வேறு விதமான வாழ்க்கைச்சூழல்களைக் கொண்ட நாடு. அதனால் லட்சக்கணக்கான சமூகப் பழக்கங்களைக் கொண்டிருக்கிறது. இங்கே கடலோரத்தில் வாழும் பெரும் சமூகம் உண்டு. ஏரியோரத்தில் வாழும் சமூகங்கள் உண்டு. காட்டையொட்டி வாழும் மக்கள் உண்டு. மலைப்பிரதேசத்தில் வாழ்பவர்கள் உண்டு. ஆற்றையொட்டி வாழ்பவர்கள் உண்டு. பாலை நிலங்களில் வாழ்பவர்கள் உண்டு. பனி பொழியும் மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் உண்டு. அவர்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான பண்பாடு உண்டு. இங்கே ‘’பண்பாடு’’ என்ற சொல்லை ‘’மதம்’’ என்ற சொல்லுடன் இணைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள். வயதில் மூத்தவர்களை மதித்தல், முன்னோடிகளின் நினைவைப் போற்றுதல், குழந்தைகளைக் கொண்டாடுதல், பெண்களை மதித்தல், இயற்கையை இறை வடிவமாய் காணல், சக மனிதர்களுக்கு உதவி செய்தல், எல்லா உயிர்களிடத்தும் கருணையுடன் இருத்தல், சொல்லும் செயலும் ஒன்றென இருத்தல் ஆகியவை இந்திய சமூகங்கள் பேணிய பண்பாடுகள். அவை இன்றும் தொடர்கின்றன. இந்தியப் பண்பாடு என்பதை அவற்றை அடிப்படையாய்க் கொண்டு எழுந்ததே. அவற்றை சமயங்கள் ஏற்ற போது அவை வெவ்வேறான சடங்குகளாயின. எந்த சமூகமும் ஒரு விழுமியத்தை தலைமுறைகளின் நினைவில் சடங்குகளாகவே பதிக்க இயலும். இங்கே சடங்குகளோ சமயமோ ஒரு பண்பாட்டை உருவாக்கவில்லை. பண்பாடே சமயத்தையும் சமூகங்களையும் உடுவாக்கியது. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் பண்பாடே எல்லா இந்திய சமூகங்களையும் இணைத்தது; இப்போதும் இணைக்கிறது. உலகில் இது ஒரு மேலான வழிமுறை.

இந்தியப் பண்பாடு மானுடனுக்கு அளிக்கக் கூடிய எல்லா சலுகைகளையும் எப்போதும் அளித்தவாறே இருக்கிறது. அவன் எந்த நிலையிலும் தன்னுடைய சூழலுக்கு அன்னியப்பட்டு விடாமல் இருக்க செய்ய வேண்டிய அனைத்தையும் செய்கிறது. இங்கே மரத்தை வழிபடுவர்கள் உண்டு. பிராணிகளை வழிபடுபவர்கள் உண்டு. வானத்தை வழிபடுபவர்கள் உண்டு. இந்தியா யாரையும் எதற்கும் கட்டாயப்படுத்துவதில்லை என்பதே உண்மை. நியதிகள் சமூகத்தில் ஒழுங்கும் கட்டுப்பாடும் திகழ உருவானவையே என்பதை இந்தியா புரிந்து வைத்துள்ளது. அதனாலேயே எல்லா விதமான விதிவிலக்குகளையும் அனுமதிக்கச் செய்கிறது.

கிராமம் தன்னளவில் ஒரு அலகு. அதில் வேதியர்கள், பூசாரிகள், விவசாயிகள்,ஆநிரை மேய்ப்பவர்கள், கொல்லர்கள், தச்சர்கள், குயவர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் வசித்தனர். கிராமத்தின் ஒட்டு மொத்த தொழில் விவசாயம். விவசாயத்தில் நெல், காய்கறிகள்,  கால்நடைகள், பழங்கள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவை அடங்கும். ஒரு கிராமம் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி அங்கு உற்பத்தியாகும் உணவுப்பொருளாகவே செலுத்தப்படும். அந்த உணவுப்பொருள் அரசூழியர்களுக்கு ஊதியமாக அளிக்கப்படும். கிராமத்தில் ஒவ்வொரு விவசாயியுமே அக்கிராமத்தில் ஆலயத்துக்கு தனது உற்பத்தியில் ஒரு பங்கை வழங்குவார். ஆலயத்தைச் சார்ந்து வாழ்வோர் தங்கள் ஊதியமாக அதனைப் பகிர்ந்து கொள்வார்கள். ஆலய வழிபாடு கிராமத்தை ஒருங்கிணைக்கும். பெரு தெய்வங்கள், சிறு தெய்வங்கள், காவல் தெய்வங்கள் என அனைத்தும் வழிபடப்படும். அனைத்து தெய்வ ஆலயங்களுக்கும் கிராம உற்பத்தியின் ஒரு பகுதி கிடைக்கும். இது பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வரும் பழக்கம். இன்னும் இதன் அடிப்படை வடிவம் அப்படியே இருக்கிறது. ஒரு கிராமத்தின் உபரி உற்பத்தி வெளியில் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனையாகும். தன்னளவில் ஒரு கிராமம் தன்னிறைவு பெற்றிருக்கும். இங்கே நெல் என்பதற்குப் பதிலாக, சோளம், கம்பு, கேழ்வரகு, கோதுமை என்பதாக இந்தியா முழுதும் பிராந்தியத்துக்கு பிராந்தியம் மாறுபடும். மற்றபடி ஒரே சித்திரம் தான்.

இன்று விவசாயிகள் விதைநெல்லைக் கூட ஊருக்கு வெளியில் வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. விதைநெல்லைக் கூட சேமித்து வைக்கச் சொல்லாத ஒரு சமூக ஏற்பாட்டுக்குள் அவர்கள் கட்டாயமாகத் தள்ளப்பட்டுள்ளனர். பயிருக்குத் தேவையான உரம் ஊருக்கு வெளியே நகர்ப்புறங்களிலிருந்து வாங்கி நிலத்தில் இடுகின்றனர். கிராமத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அவர்கள் உருவாக்கிய இல்லங்கள்
( களிமண்ணால் கட்டப்படும் வீடுகள் பல நூற்றாண்டுகள் தாங்கக் கூடியவை. சிமெண்ட் கட்டிடத்தின் வலிமை 60 ஆண்டுகளே.) இன்று இல்லாமலாகி வீடு கட்டுவதற்கான மூலப்பொருட்களை ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து பெறுகின்றனர். ஒட்டு மொத்த இந்திய கிராமத்தின் உபரி வருவாய் பல விதங்களிலும் சுரண்டப்படுகிறது.

மகாத்மா தனது ‘’ஹிந்த் ஸ்வராஜ்’’ நூலில் இந்தியாவின் மரபான அடிப்படைக் கட்டமைப்பை மீளச் செய்வது குறித்து பேசுகிறார்.

அது பலவிதங்களிலும் மீட்டெடுக்கப்பட வேண்டும். 


Thursday 14 May 2020

ராஜாஜியின் ஜெயில் டைரி

சமீபத்தில், ராஜாஜியின் ஜெயில் டைரி என்ற நூலை வாசித்தேன். 1920களில், ஒத்துழையாமை இயக்கத்தின் போது ராஜாஜி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் சிறையில் தனக்குத் தோன்றும் எண்ணங்களையும் தனது அன்றாடச் செயல்களையும் ராஜாஜி எழுதி வைக்கிறார். அது ராஜாஜியின் சீடரான சின்ன அண்ணாமலையின் தமிழ்ப் பண்ணை பிரசுரம் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்தது. அதன் சில பகுதிகள் மொழிபெயர்ப்பு மேலும் சீராக்கப்பட்டு ‘’கல்கி’’யில் வெளிவந்திருக்கிறது. அதன் தொகுப்பே ‘’ராஜாஜியின் ஜெயில் டைரி’’.

மிக மோசமாக சிறை பராமரிக்கப்படுகிறது. அரசியல் கைதிகள் குற்றவியல் தண்டனை பெற்ற சிறைக் கைதிகளுடன் ஒன்றாக வைக்கப்படுகின்றனர். சிறை அதிகாரிகள் சாதாரண மருத்துவ வசதிகளைக் கூட செய்து தர விருப்பமில்லாமல் இருக்கின்றனர். ராஜாஜியின் உடல்நிலை அவ்வப்போது சீர்கேடாகிறது. ராஜாஜி அதனை ஆத்ம சோதனை என்று எடுத்துக் கொள்கிறார். எந்த சோதனையையும் சத்யாக்கிரகி வெற்றிகரமாகக் கடப்பான் என தனக்குத் தானே உறுதியாக சொல்லிக் கொள்கிறார் ராஜாஜி. செய்தித்தாள் கூட தரப்படுவதில்லை. அத்தகவலை மகாத்மா காந்திக்கு எழுதும் கடிதத்தில் ராஜாஜி சாதாரணமாகக் குறிப்பிடுகிறார். ராஜாஜிக்கு எழுதும் பதில் கடிதத்தில், ‘’அது மிகவும் நல்ல விஷயம்; வெளி உலக பாதிப்பு இன்றி சிறை வாழ்வில் அகத்துக்குள் ஆழ்ந்து செல்ல அது மிக உதவும்’’ என்று பதில் எழுதுகிறார் காந்தி.

சக கைதிகள் மோசமாக நடத்தப்படும் போது மிகவும் வருந்துகிறார் ராஜாஜி. காந்தியைக் குறித்தும் சுதந்திரப் போராட்டம் குறித்தும் எப்போதும் எண்ணியவாறு இருக்கிறார்.  காங்கிரஸ் காந்தியால் மட்டுமே வழிநடத்தப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறார் ராஜாஜி. 

Monday 11 May 2020

பஹுரூபி காந்தி - பல ரூபங்களில் காந்தி


இன்று பஹுரூபி காந்தி என்ற நூலினை வாசித்தேன். ’’பல ரூபங்களில் காந்தி’’ என இந்நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலை எழுதியவர் அனு பந்தோபாத்யாய. மகாத்மாவின் வாழ்க்கை முறையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக இந்நூலை அவர் எழுதியிருக்கிறார். பிரபல கார்ட்டூனிஸ்டான ஆர். கே. லஷ்மண் இந்நூலில் ஆர்வமூட்டும் விதத்தில் பல விதமாக காந்தியைப் படம் வரைந்துள்ளார்.

எனக்கு இந்நூலை வாசித்ததும் பாரதியின் ‘’கண்ணன் பாட்டு’’ நினைவுக்கு வந்து கொண்டேயிருந்தது. கண்ணன் பாட்டில் பாரதி கண்ணனை தனது தோழனாக , தாயாக, தந்தையாக, சேவகனாக, ஆசிரியனாக, சீடனாக, காதலனாக நினைத்து பாடல்களை எழுதியிருப்பார். தமிழ் மரபில் கடவுளைத் தம் குழந்தையாக எண்ணி பாடப்படும் பாடல்களுக்கு ’’பிள்ளைத்தமிழ்’’ என்று பெயர். குமரகுருபரர் எழுதிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் பிரபலமானது. ஆழ்வார்கள் பெருமாளை தன் காதலனாக எண்ணி பாடிய பாடல்கள் ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ளன. ‘’யாவுமே சுக முனிக்கோர் ஈசனாம்’’ என்னும் இரண்டற்ற நிலை அது.

மகாத்மா காந்தி ஒவ்வொரு மனிதனும் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை குறித்த ஒரு தனித்துவமான பார்வையைக் கொண்டிருந்தார். எந்த தனி மனிதனும் தானாகவே செய்து கொள்ளக் கூடிய செயல்களுக்கு இன்னொரு மனிதனின் உழைப்பைப் பயன்படுத்தக் கூடாது என்று காந்தி எண்ணினார். உடல் உழைப்பை நல்க எவருக்குமே எந்த விதமான தடையோ தயக்கமோ இருக்கக் கூடாது என்பது காந்தியின் எண்ணம்.

அவர் கடுமையான உடல் உழைப்பை நல்கக் கூடியவர். தினசரி உடல் உழைப்பை அனைவரும் நல்குவது சீரான சமூக இயக்கத்துக்கு உதவக் கூடியது என்பது காந்தியின் கருத்து. ஒவ்வொருவரும் தமது கழிப்பறைகளைத் தாமே தூய்மை செய்து கொள்ள வேண்டும்; தங்கள் உடைகளை தாமே நேர்த்தியான முறையில் துவைத்துக் கொள்ள வேண்டும்;தங்களைச் சுற்றியிருக்கும் இடத்தில் ஏதேனும் மரம், செடி, கொடிகளை நட்டு பராமரிக்க வேண்டும்; என்பதில் காந்தி உறுதியாக இருக்கிறார். உண்மையான சமநிலை என்பது உழைப்பு மதிக்கப்படும் இடத்திலேயே உருவாக முடியும். உழைப்பு கூலி பெறும் இடத்தில் சமநிலை இருக்காது என்ற புரிதல் காந்திக்கு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் கோடிக்கணக்கான விவசாயிகளின் விவசாயிகளின் குடும்பத்தாரின் விவசாயத் தொழிலாளர்களின் கோடானு கோடி மணி நேரங்கள் தறி நெசவில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதை காந்தி வலியுறுத்துகிறார். கோடானு கோடி பேருக்கு வேலை தரக்கூடிய ஒரு வழிமுறையை சில ஆயிரம் இயந்திரங்களுக்கு அளித்து அதன் மூலம் வெகு சிலர் மட்டுமே ஜவுளித் துறையில் லாபம் ஈட்டுவதை கடுமையாக விமர்சிக்கிறார் காந்தி.

மருத்துவம் குறித்த அறிவை சமூகத்தில் ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டும்; அதன் மூலம் இயற்கையான வழிமுறைகளில் நோய்மையிலிருந்து விடுபட முடியும் என்கிறார்.

செல்வத்திற்கு இணையாகக் கருணையை தமது தேசத்திடம் முன்வைத்துக் கொண்டேயிருக்கிறார் காந்தி. கோடானுகோடி மக்கள் துயரில் வாடும் ஒரு சமூகத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டும் பெருஞ்செல்வம் வைத்திருப்பது முறை அல்ல என்று அவர்களிடமே சொல்லும் காந்தி அவர்களிடமிருந்து கருணையை யாசிக்கும் யாசகனாக விளங்குகிறார்.

காந்தி ஒரு - உழைப்பாளி, சமையல் காரர், சலவைத் தொழிலாளி, நாவிதர், செருப்பு தைப்பவர், மருத்துவர், செவிலியர், ஆசிரியர், நெசவாளர், வணிகர், விவசாயி, பிச்சைக்காரர், சிறைப்பறவை, எழுத்தாளர், எடிட்டர், ஃபாஷன் டிசைனர், பாம்பாட்டி, புரோகிதர்- ஆகிய தலைப்புகளில் அனு பந்தோபாத்யாய் எவ்வாறெல்லாம் காந்தி மேற்கண்ட நபர்களாக தினந்தோறும் இருந்திருக்கிறார் என எழுதியிருக்கிறார். ஒரு மனிதன் இத்தனை செயல்களையும் செய்வது மானுட சாத்தியம் தானா என்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது இந்நூல்.

மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணர் மாடு மேய்த்திருக்கிறார்; மக்களைக் காத்திருக்கிறார்; அன்பிற்கினிய குழந்தையாக இருந்திருக்கிறார்; காளிங்க நர்த்தனம் புரிந்திருக்கிறார்; தீராக் காதலனாக இருந்திருக்கிறார்; யோகியாக விளங்கியிருக்கிறார். தேர் ஓட்டியிருக்கிறார்; தூது சென்றிருக்கிறார்; குழல் இசைத்திருக்கிறார்; அரசனாக ஆட்சி புரிந்தார்; ஆசாரியனாக வழிகாட்டியிருக்கிறார். குதிரைகளைப் பராமரித்திருக்கிறார்.

இந்நூல் இருவரைப் பற்றியும் எண்ண வைத்தது. இருவருக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை உண்டு; இருவருமே குஜராத்திகள்.

Saturday 9 May 2020

கம்பன் - சுந்தர காண்டம் - 2


முனியொடு மிதிலையின் முதல்வன் முந்துநாள்
துனி அறு புருவமும் தோளும் நாட்டமும்
இனியன துடித்தன; ஈண்டும் ஆண்டு என
நனி துடிக்கின்றன; ஆயின் நல்குவாய்! (5208)

சீதை தன் புருவமும் தோளும் கண்களும் இராமனைக் கண்ட தினத்தில் துடித்தது போன்று இப்போது துடிக்கின்றன என்று திரிசடையிடம் கூறினாள்.

விரி மழைக்குலம் கிழித்து ஒளிரும் மின் எனக்
கருநிறத்து அரக்கியர் குழுவில் கண்டனன்
குருநிறத்து ஒரு தனிக் கொண்டல் ஊழியான்
இரும் நிறம் அத்து உற்ற எற்கு இயைந்த காந்தத்தை! (5238)

கருமேகங்களுக்கு இடையே தோன்றும் வெண்மின்னல் போல
அரக்கியர்களுக்கு இடையே இருந்த சீதையை அனுமன் கண்டான்.

வீடினது அன்று அறன்! யானும் வீகலேன்!
தேடினன் கண்டனன் தேவியே! ‘எனா
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன் உலாவினன் உவகைத் தேன் உண்டான். (5242)

தன் முயற்சி வெற்றி அடைந்ததை உணர்ந்த அனுமன் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தான்.

வாழி சானகி! வாழி இராகவன்!
வாழி நான்மறை! வாழியர் அந்தணர்!
வாழி நல்லறம்! என்று உற வாழ்த்தினான்
ஊழி தோறும் உயர்வுறும் கீர்த்தியான். (5275)

ஜெய கோஷம் எழுப்பினான் அனுமன்.

அன்னவன் தன்னை உம்கோன் அம்பு ஒன்றால் ஆவி வாங்கிப்,
பின்னவற்கு அரசு நல்கித் துணை எனப் பிடித்தான்; எங்கள்
மன்னவன் தனக்கு நாயேன்  மந்திரத்து உள்ளேன், வானின்
நல்நெடும் காலின் மைந்தன், நாமமும் அநுமன் என்பேன். (5366)

இராவணனை வென்ற வாலியை ஒரு அம்பினால் மாய்த்த இராமன் சுக்ரீவனுக்கு அரசாட்சியை வழங்கினான். அந்த சுக்ரீவனின் மந்திரி நான். வாயுவின் மைந்தன். என் பெயர் அனுமன்.

நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி நிறைசெல்வம்
பூண்டு அதனை நீங்கி நெறி போதல் உறு நாளின்
ஆண்டு அந் நகர் ஆரையொடு வாயில் அகலாமுன்
யாண்டையது கான்? ‘என இசைத்ததும் இசைப்பாய். (5396)

செல்வங்களைத் துறந்து அயோத்தி மாநகரை நீங்கிய போது நகர நுழைவாயிலைக் கடப்பதற்கு முன்னரே காடு எப்போது வரும் என கேட்டதை சீதையிடம் நினைவுபடுத்துவாயாக.

மீட்டும் உரை வேண்டுவன இல்லைஎன மெய் பேர்
தீட்டியது தீட்டு அரிய செய்கையது செவ்வே :
நீட்டு இது! ‘என நேர்ந்தனன் எனா நெடிய கையால்
காட்டினன் ஒர் ஆழி; அது வாள் நுதலி கண்டாள். (5398)

நுண்ணிய அழகிய வேலைப்பாடுகள் கொண்டதும் இராமனின் கணையாழியை சீதையிடம் அனுமன் காட்டினான். சீதை அதனைக் கண்களால் கண்டாள்.

வாங்கினள் : முலைக்குவையில் வைத்தனள் : சிரத்தால்
தாங்கினள் : மலர்க்கண் மிசை ஒத்தினள் : தடம்தோள்
வீங்கினள், மெலிந்தனள் : குளிர்ந்தனள், வெதுப்போடு
ஏங்கினள் : உயிர்த்தனள் : இது இன்னது எனல் ஆமே? (5401)

கணையாழியை வாங்கி தன் மார்பில் சீதை வைத்துக் கொண்டாள். பின்னர் தன் சென்னி சூடினாள். மலர்க்கண்களால் அதனை ஒத்தினாள். மகிழ்ச்சியால் தோள்கள் துடிக்கப் பெற்றவனாள். மனம் குளிர்ந்து உயிர்த்தாள்.

பாழிய பணைத்தோள் வீர!
    துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய! வள்ளலே! யான்
    மறு இலா மனத்தேன் என்னின்,
ஊழி ஓர் பகலாய் ஓதும்
    யாண்டு எலாம், உலகம் ஏழும்
ஏழும் வீவு உற்ற ஞான்றும்,
    இன்று என இருத்தி! ‘என்றாள். (5407)

வீரனே! நான் மாசற்ற மனம் கொண்டவளெனில் நீ சிரஞ்சீவியாக என்றும் இருப்பாயாக.

அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன். (5470)

என் சொல் எல்லா உலகங்களையும் அழிக்கும். இலங்கை எனக்கு ஒரு பொருட்டல்ல. இராமன் வில்லிற்கு புகழ் சேர்க்கவே நான் அமைதி காத்துள்ளேன்.

இன்னும் ஈண்டு ஒரு திங்கள் இருப்பல் யான்
நின்னை நோக்கிப் பகர்ந்தது நீதியோய்!
பின்னை ஆவி பிடிக்ககிலேன் : அந்த
மன்னன் ஆணை! இதனை மனக்கொள் நீ! (5481)

இராமன் வருகைக்காகக் காத்திருந்து நான் ஒரு மாதம் மட்டுமே ஜீவித்திருப்பேன். இது இராமன் மேல் ஆணை என்று சொல்வாயாக.

தொழுது வாங்கினன் சுற்றிய தூசினில் முற்றப்
பழுது உறாவகை பந்தனை செய்தனன்; வந்தித்து
அழுது மும்மை வலங்கொடு இறைஞ்சினன்; அன்போடு
எழுது பாவையும் ஏத்தினள்; ஏகினன் இப்பால். (5536)

அனுமன் சூடாமணியைத் தொழுது வாங்கினான். தூசி படாமல் ஆடையில் முடிந்து கொண்டான். அழுத கண்களுடன் சீதையை மும்முறை வலம் வந்தான். அன்னையும் அனுமனை வாழ்த்த அனுமன் புறப்பட்டான்.

(தொடரும்)

Friday 8 May 2020

கம்பன் - சுந்தர காண்டம் - 1


அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு எனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால், ‘ அவர் என்ப, கைவில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு இறுதி ஆவார்! (4847)

கம்பனிடம் இருக்கும் அத்வைத தாக்கம் இப்பாடலில் வெளிப்படுகிறது. சங்கரரின் கயிற்றரவு படிமம் இப்பாடலில் பயன்படுத்தப் படுகிறது. மாயையை விலக்குபவனும் மறைகளின் இறுதியாக விளங்குபவனும் ஸ்ரீராமன். அவன் கையில் வில்லேந்தி இலங்கையுடன் போர் புரிந்தவன்.

‘கண்டனென் இலங்கைமூதூர்! கடிபொழில், கனக நாஞ்சில்,
மண்டல மதிலும், கொற்ற வாயிலும், மணியில் செய்த
வெண் தளக் களப மாட வீதியும், பிறவும்! ‘என்னா,
அண்டமும் திசைகள் எட்டும் அதிரத் தோள் கொட்டி ஆர்த்தான். (4849)

கடிபொழில் – காட்டரண்
மண்டல மதில் – வட்ட வடிவமான மதில். ‘’மண்டலம்’’ என்பது ஒரு சுற்றைக் குறிக்கும். கருநிலவு நாள் தொடங்கி அடுத்த கருநிலவு நாள் வரை முப்பது நாட்கள் என்பது ஒரு சுழற்சி. கருநிலவு தொடங்கி முழுநிலவு நாள் வரை பதினைந்து நாட்களும் ஒரு சுழற்சி. துவங்கிய இடத்தில் வந்து நிறைவதோ அல்லது அதன் உச்ச புள்ளியில் சென்று நிறைவதோ சுழற்சி. மண்டல மதில் என்பது பல்வேறு விதமான சுற்றுக்களைக் கொண்ட மதில்.
கொற்ற வாயில் – பிரதான நுழைவு வாயில்
களப மாட வீதி – யானைகள் செல்லும் வீதி
அனுமன் இலங்கையின் காட்சிகளாக இவற்றைக் காணுகிறான்.

4869. துள்ளிய மகர மீன்கள் துடிப்பு அறச், சுறவு தூங்க,
ஒள்ளிய பனைமீன் துஞ்சத், திவலையது ஊழிக் காலின்,
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி, வாரி
தள்ளிய திரைகள் முந்து உற்று, இலங்கை மேல் தவழ்ந்த மாதோ! (4869)

அனுமன் இலங்கையை நோக்கி வானில் பறந்த வேகத்தின் விசையால் கடலின் அலைகள் பொங்கி இலங்கைக் கரையை அனுமன் செல்வதற்கு முன்பே அடைந்து அதனை விரைந்து தாக்கின.

விண்ணவர் ஏத்த, வேத முனிவரர் வியந்து வாழ்த்த,
மண்ணவர் இறைஞ்சச், செல்லும் மாருதி, மறம் உள் கூர,
‘அண்ணல் வாள் அரக்கன் தன்னை அமுக்குவென் இன்னும்! ‘என்னாக்
கண்ணுதல் ஒழியச் செல்லும் கயிலையங் கிரியை ஒத்தான்! (4872)

வானவர்களின் முனிவர்களின் வாழ்த்தைப் பெற்ற – மானுடரால் வணங்கப்படும் அனுமன் இராவணனை அமுக்கிய திருக்கயிலாயம் போல் விளங்கினான்.
திருக்கயிலாயம் வானவர்களும் முனிவர்களும் வாழ்த்துவது. மானுடரால் வணங்கப்படுவது. அனுமனும் அவ்வாறே. இராவணன் ஆணவத்தை அனுமனும் தோற்கடிப்பான் என்பதை குறிப்பாகக் கம்பன் உணர்த்துகிறான்.

‘நல் தாயினும் நல்லன் எனக்கு இவன்! என்று நாடி
இற்றே, இறை! எய்தினன்; ஏயது கோடி என்னால்;
பொன்தார் அகல் மார்ப தம் இல்லுழை வந்த போதே
உற்றார்செயல் மற்றும் உண்டோ? ‘என உற்று உரைத்தான். (4904)

மைந்நாக மலை அனுமனிடம் உன் மேல் உன் தாயினும் அன்பு பூண்டவன் நான். என் விருந்தோம்பலை ஏற்றுக் கொள்க என்று கூறினான்.

பொன்கொண்டு இழைத்த? மணியைக்கொடு பொதிந்த?
மின்கொண்டு அமைத்த? வெயிலைக்கொடு சமைத்த?
என்கொண்டு இயற்றிய? எனத் தரெிவு இலாத
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம்! (4942)

இலங்கையின் மாடங்கள் பொன் கொண்டு இழைக்கப்பட்டுள்ளனவா? மணிகளால் பதிக்கப்பட்டுள்ளனவா? மின்னும் மின்னல்களால் அமைக்கப்பட்டுள்ளனவா? கதிரொளி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளனவா? அவை எதனால் ஆனவை?

தேறல் மாந்தினர், தேன் இசை மாந்தினர், செவ்வாய்
ஊறல் மாந்தினர், இன் உரை  மாந்தினர், ஊடல்
கூறல் மாந்தினர், அனையவர்த் தொழுது, அவர் கோபத்து
ஆறல் மாந்தினர், அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கர்! (4972)

இலங்கை அசுரர்கள் இனிய கள் அருந்தினர். இன்னிசை கேட்டிருந்தனர். அசுரப் பெண்களின் சிவந்த இதழ்களை அருந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் ஊடும் சொற்களைக் கூறிக் கொண்டிருந்தனர். அப்பெண்களின் ஊடலால் அடைந்த சினத்தை பருகிக் கொண்டிருந்தனர்.

ஏய்வினை இறுதியில் செல்வம் எய்தினான்
ஆய்வினை மனத்து இலான் அறிஞர் சொல் கொளான்
வீவினை நினைக்கிலான் ஒருவன் மெய் இலான்
தீவினை என இருள் செறிந்தது எங்குமே! (4984)

தவத்தால் அருள் அடையாமல் பொருள் மட்டும் அடைந்தவனும் ஆராயும் திறன் அற்ற மனம் கொண்டவனும் அறிஞர்களின் அறிவுரையை கருதாதவனும் தனக்கு வரக்கூடிய மரணம் குறித்த பிரக்ஞை இல்லாதவனும் உள்ளத்தில் உண்மை இல்லாதவனும் சென்றடையும் இருள் போல இலங்கையில் இருள் நிறைந்தது.

துயில் அறக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்,
வெயில் இடைத் தந்த விளக்கு என,  ஒளி இலா மெய்யாள்,
மயில் இயல் குயில் மழலையாள்,  மான் இளம் பேடை
அயில் எயிற்று வெம் புலிக் குழாத்து  அகப்பட்டது அன்னாள். (5179)

உறக்கமும் முழு விழிப்பும் இன்றி சோர்வுடன், பகலில் ஏற்றப்பட்ட விளக்கு போல முழு பிரகாசம் இன்றி இள மான் ஒன்று புலிகளின் கூட்டத்தில் சிக்கினால் மிரளுவது போல மிரண்டு காணப்பட்டாள் சீதை.



விழுதல், விம்முதல், மெய் உற வெதும்புதல், வெருவல்,
எழுதல், ஏங்குதல், இரங்குதல் இராமனை எண்ணித்
தொழுதல், சோருதல், துளங்குதல், துயர் உழந்து உயிர்த்தல்,
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள். (5180)

உளத் துயர் உடலில் உண்டாக்கும் விளைவுகளால் சோர்வுற்றிருந்தாள் சீதை.

துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு,
ஒப்பினான் தனை நினைதொறும்,  நெடும் கண்கள் உகுத்த
அப்பினால் நனைந்து, அரும் துயர் உயிர்ப்பு உடை யாக்கை.
வெப்பினால் புலர்ந்து, ஒருநிலை உறாத மென் துகிலாள். (5183)

இராமனை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் சிந்தினாள் சீதை.

மெய்த் திருப்பதம் மேவுஎன்ற போதினும்
இத்திரு துறந்து ஏகுஎன்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள். (5195)

தாமரை இரவில் குவியக்கூடியது. சித்திரத்தில் வரையப்பட்ட தாமரை எப்போதும் மலர்ந்திருப்பது. இராமன் முகம் சித்திரத்தில் வரையப்பட்ட தாமரை போன்று எப்போதும் மலர்ந்திருப்பது. அரச பதவியை ஏற்க வேண்டும் என்ற போதும் அதனைத் துறந்து காட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற போதும் அவன் முகம் சிறிதும் மாற்றமின்றி சித்திரத் தாமரையை ஒத்து இருந்தது. அப்படிப்பட்ட இராமனை நினைத்துக் கொண்டேயிருந்தாள் சீதை.

ஆயிடைத் திரிசடை என்னும் அன்பினால்
தாயினும் இனியவள் தன்னை நோக்கினாள்
தூயநீ! கேட்டி! என் துணைவி ஆம்! ‘எனா
மேயது ஓர் கட்டுரை விளம்பல் மேயினாள். (5206)

கம்பன் திரிசடையை ‘’அன்பினால் தாயினும் இனியவள்’’ என்கிறான். குகனை இலக்குவன் ‘’தாயினும் நல்லன்’’ எனக் கூறுவது இங்கே நினைவு கொள்ளத் தக்கது.

(தொடரும்)

Thursday 7 May 2020

கம்பன் - கிட்கிந்தா காண்டம் - 3


விழைவுறு பொருள் தரப் பிரிந்த வேந்தர் வந்து
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின்
மழை உற மா முகம் மலர்ந்து தோன்றின
குழை உறப் பொலிந்தன உலவைக் கொம்பு எலாம். (4277)

குடும்பத்துக்காகப் பொருள் ஈட்டுவதற்காக வேற்றூர் சென்று திரும்பிய கணவனைக் காணும் பொழுதில் பெண்களின் முகம் எவ்வாறு மலர்ந்து மகிழுமோ அவ்வாறு உலர்ந்து கிடந்த மரங்களெல்லாம் தளிராய் மலர்ந்தன.

கம்பனுக்கு முன்னும் பின்னும் மரம் தளிர்த்தல் என்பதும் முகம் மலர்தல் என்பதும் எப்போதும் தமிழ்க் கவிதையின் முக்கியமான படிமங்கள்.

நிறைந்தன நெடுங்குளம்; நெருங்கின தரங்கம்;
குறைந்தன கருங்குயில்; குளிர்ந்த உயர் குன்றம்;
மறைந்தன நெடுந்திசை; வருந்தினர் பிரிந்தார்;
உறைந்தன மகன்றில் உடன் அன்றில் உயிர் ஒன்றி. (4323)

கார்காலத்தின் மழையால் நெடுங்குளங்கள் நிறைந்தன. அலைகடலும் பொங்கியது. குயிலோசை குறைவாய்க் கேட்டது. இறுகிய மலைகளும் குளிர்ந்தன. திரண்ட கருமேகங்களால் திசைகள் மறைக்கப்பட்டன. பிரிந்திருந்த காதலர்கள் வருத்தம் பெருகியது. அன்றில் பறவைகள் இணையைத் தழுவியிருந்தன.

அங்கதன் உடன்செல அரிகள் முன்செல
மங்கையர் உள்ளமும் வழியும் பின்செல
சங்கை இல் இலக்குவன் தழுவி தம் முனின்
செங்கதிரோன் மகன் கடிதிற் சென்றனன். (4492)

அங்கதன் சுக்ரீவனுடன் சென்றான். வானர சேனை அவர்களுக்கு முன்னால் சென்றது. வானர மகளிரின் மனம் பின் தொடர்ந்து வந்தது. அவர்கள் கடந்து சென்ற பாதை பின்னால் அப்படியே இருந்தது. சுக்ரீவன் இலக்குவனுடன் தோளோடு தோள் இணைந்து சென்றான். இராமன் இருக்குமிடம் நோக்கி ஆர்வத்துடன் முன்னேறினர்.

ஒரு படை என்பது ஒரு வாகனம் போல. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருந்து தங்கள் பணியைச் செய்தால் மட்டுமே முன்னேறிச் செல்ல முடியும். அங்கதன் சுக்ரீவனுக்கு காப்பாக உடனிருக்கிறான். சுக்ரீவன் இலக்குவனுடன் தோளோடு தோள் நிற்கிறான். சைன்யம் தலைவர்களுக்கு முன்னால் செல்கிறது. போர்வீரர் இல்லப் பெண்களின் மனம் அவர்களைப் பின் தொடர்ந்து வருகிறது. அவர்கள் கடந்த பாதை அப்படியே அங்கேயே இருக்கிறது.

ஒரே பயணத்தின் வெவ்வேறு காட்சிகள்.

எண்ணின், நான்முகர் எழுபதினாயிரர்க்கு இயலா;
உண்ணின் அண்டங்கள் ஓர்பிடி உண்ணவும் உதவா;
கண்ணின் நோக்குறின் கண் நுதலானுக்கும் கதுவா;
மண்ணின்மேல் வந்த வானர சேனையின் வரம்பே. (4536)

இராமன் புகழ் பாடும் வானர சேனையின் அளவை முக்கண்ணனாகிய சிவனாலும் மூன்று கண்களால் கண்டு விட முடியாது. இப்படையின் பெருக்க்த்தை எழுபதாயிரம் பிரம்மர்களாலும் கற்பனை செய்து விட முடியாது. இப்படை உண்ணத் தொடங்கினால் அதன் பசிக்கு இந்த அண்டமும் போதாது.

ஒடிக்குமேல், வடமேருவை வேரொடும் ஒடிக்கும்;
இடிக்குமேல், நெடு வானக முகட்டையும் இடிக்கும்;
பிடிக்குமேல் பெருங்காற்றையும் கூற்றையும் பிடிக்கும்;
குடிக்குமேல், கடல் ஏழையும் குடங்கையின் குடிக்கும். (4537)

வானர சேனை ஒடிக்க வேண்டும் என்று நினைத்தால் வடவரையை ஒடித்து எறியும். வானர சேனை இடிக்க வேண்டும் என்று நினைத்தால் மேலே இருக்கும் வானத்தை இடிக்கும். பிடிக்க வேண்டும் என்று நினைத்தால் சூறாவளியைப் பிடிக்கும். குடிக்க வேண்டும் என்று நினைத்தால் ஏழு கடலையும் குடிக்கும்.

‘ஏகி ஏந்திழை தன்னை இருந்துழி
நாகம் நாடுக; நால் நிலம் நாடுக;
போக பூமி புகுந்திட வல்லநின்
வேகம் ஈண்டு வெளிப்பட வேண்டுமால். (4558)

சுக்ரீவன் அனுமனிடம் சீதையை நானிலம் முழுதும் தேடுக. நாகர்கள் வாழும் உலகிலும் தேடுக. வானவர் வாழும் சுவர்க்கத்திலும் தேடுக என்றான்.

‘குட திசைக்கண் சுடேணன்; குபேரன் வாழ்
வட திசைக்கண் சதவலி; வாசவன்
இட திசைக்கண் வினதன்; விறல் தரு
படையொடு ‘உற்றுப் படர்க எனப் பன்னினான். (4562)

சுக்ரீவன் இந்திரனுக்குரிய கிழக்கு திசையில் தேட வினதனையும் மேற்கு திசைக்கு சுடேணனையும் குபேரனுக்குரிய வடக்கு திசைக்கு சதவலியையும் சீதையைத் தேடுமாறு அனுப்பினான்.

‘மல்லல் மாநகர் துறந்து ஏகும் நாள், மதி தொடும்
கல்லின் மாமதில் மணி கடை கடந்திடுதல் முன்,
எல்லை தீர்வு அரிய வெங்கானம் யாதோ “ எனச்
சொல்லினாள்; அஃது எலாம் உணர, நீ சொல்லுவாய்.’ (4624)

வனவாசம் செல்ல அயோத்தி நகரை விட்டு நீங்கும் போது அரசமாளிகையிலிருந்து நகரின் காப்பரணாகிய மதிலைத் தாண்டுவதற்கு முன்பே சீதை இராமனிடம் காடு எங்குள்ளது என்று கேட்கிறாள்.

’’நின் பிரிவினும் சுடுமோ அப்பெருங்காடு’’ என்று வினவிய சீதை இராமனைப் பிரிந்திருப்பது பெருந்துன்பம் என்பது அறிந்தவள். இராமனைப் பிரிந்திருக்கும் துன்பத்தை இராமனைக் கண்ட கணத்திலிருந்து மறுநாள் சுயம்வர மண்டபத்தில் காணும் வரை அனுபவித்தவள். அதனால் ‘’நின் பிரிவினும் சுடுமோ அப்பெருங்காடு’’ என்கிறாள். ஆனால் சீதை அரண்மனை நீங்காதவள். முதல் முறை அரசபோகங்களைத் துறந்து நகர் நீங்கும் போது கணவனிடம் காடு எங்குள்ளது என்று கேட்கிறாள்.

பொதுவாக குழந்தைகளை ஏதேனும் ஊருக்கு அழைத்துச் சென்றால் கிளம்பிய சில நிமிடங்களில் ஊர் எப்போது வரும் என்று கேட்கத் துவங்குவர். சீதை குழந்தை மனம் படைத்தவள். ஆதலால் அப்படிக் கேட்கிறாள்.

இந்த உரையாடல் இராமனும் சீதையும் மட்டுமே அறிந்தது. அதை சீதையிடம் சொல்லுமாறு அனுமனை இராமன் கேட்டுக் கொள்கிறான்.

Wednesday 6 May 2020

கம்பன் - கிட்கிந்தா காண்டம் - 2


இவ்வழி எண்ணி, ஆண்டு, அவ் இருவரும் எய்தலோடும்,
செவ்வழி உள்ளத்தானும், தரெிவு உற எதிர்சென்று எய்திக்
கவ்வை இன்றாக, நுங்கள் வரவு! ‘எனக், கருணையோனும்,
எவ்வழி நீங்கியோய்? நீ யார்? என, விளம்பல் உற்றான். (3866)

செம்மை மனம் கொண்டவனான அனுமன் இராம இலக்குவரின் எதிரில் சென்று வணங்கி ‘’தங்கள் வரவு துயர் நீக்குவதாக அமையட்டும்’’ எனக் கூற இராமன் அனுமனிடம் ‘’எங்கிருந்து வருகிறாய் நீ? நீ யார்?’’ என வினவினான்.

இப்பாடலில் கம்பன் ஓர் உணர்ச்சி நாடகத்தை அமைக்கிறான். அனுமன் செம்மை மனம் கொண்டவன். ஆதலால் நேரடியான அணுகுமுறை கொண்டவன். எனினும் சுக்ரீவனின் அச்சத்தால் இராம இலக்குவரை மறைந்திருந்து அவதானிக்க வேண்டியிருந்தது. அவர்களின் இயல்பை ஆற்றல் மிகு போர்த்தொழிலர்கள் என்பதிலிருந்து வேங்கையும் அரிமாவும் கனிந்து உருகும் கருணையாளர்கள் என்பது வரை உணர்ந்து கொள்கிறான். இராம இலக்குவர் எதையோ தேடுகின்றனர் என்பதையும் துயரின் சுவடுகள் அவர்கள் முகக்குறிகளில் தென்படுவதையும் அறிந்து அவர்களிடம் சென்று ‘’தங்கள் வரவு துயர் நீக்குவதாக அமையட்டும்’’ என்று சொல்கிறான். தான் யார் என வினவப்படுவோம். அப்போது சுக்ரீவனின் துயர் குறித்து கூறி அதனை நீக்க இராம இலக்குவரின் உதவியைப் பெறும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு அவர்கள் தங்கள் துயர் குறித்து சொல்வார்கள் எனில் அதற்கு எவ்விதத்திலாவது உதவ முடியுமா என்ற பரிசீலனையையும் உள்ளடிக்கிய நற்சொல்லை அனுமன் உரைத்தான்.
  
“இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும், வேதக் கடலுமே ‘‘ என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே? யார்கொல் இச்சொல்லின் செல்வன்?
வில் ஆர் தோள் இளைய! வீர! விரிஞ்சனோ? விடை வலானோ? (3870)

அனைத்தும் அறிந்த அறிஞனாகவும் முற்றும் உணர்ந்த ஞானியாகவும் விளங்கும் இந்த ‘’சொல்லின் செல்வன்’’ யார்? உலகில் இவன் அறியாயதது என்றும் கற்க வேண்டியது என்றும் எதுவும் இல்லை. இவன் பிரம்மனா? இவன் சிவனா?
அனுமனைக் கண்டதும் இராமன் அனுமனைப் பற்றி கூறும் முதற்சொற்கள் இவை. இவற்றிலிருந்தே இராமன் அனுமனுக்கு மனத்தில் என்ன இடம் கொடுத்தான் என்பதை அறிய முடியும்.

‘ஒடுங்கல் இல் உலகம் யாவும் உவந்தன உதவி, வேள்வி
தொடங்கின, மற்றும், முற்றத் தொல் அறம் துணிவர் அன்றே,
கொடுங் குலப் பகைஞன் ஆகிக் கொல்லிய வந்த கூற்றை
நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும், நல்லது உண்டோ? ‘(3875)

வேள்வி செய்வதை விடச் சிறந்தது வலிய பகையின் நெருக்குதலால் அஞ்சியிருப்பவர்களுக்கு அபயம் அளிப்பது என அனுமன் இராமனிடம் கூறினான்.
இராம இலக்குவர் ஆற்றல் மிக்கவர்கள் என்பதை முதற்பார்வையிலேயே உணர்ந்த அனுமன் அவர்கள் தவ வடிவம் தாங்கியிருப்பதால் வேள்வியை விட அபயமளித்தல் சிறந்தது என்கிறான்.

நல்லன நிமித்தம் பெற்றேம்; நம்பியைப் பெற்றேம்; நம்பால்
இல்லையே துன்பம் ஆனது; இன்பமும் எய்திற்று; இன்னும்,
வில்லினாய்! இவனைப் போலாம் கவிக்குலக் குரிசில் வீரன்
சொல்லினால் ஏவல் செய்வான்; அவன் நிலை சொல்லற் பாற்றோ? (3886)

துயருற்றிருந்த நாம் நம் துயர் நீங்கப் போவதன் கட்டியமாக நன்நிமித்தங்களைப் பெற்றோம். இனியவனாகிய அனுமனைப் பெற்றோம். அனுமனின் தலைவனாகிய சுக்ரீவனின் துணையும் நம்முடன் சேரும்.

 ‘மண் உளார், விண்ணுளார், மாறு உளார், வேறு உளார்,
எண் உளார், இயலுளார், இசை உளார், திசை உளார்
கண் உளார் ஆயினார்; பகை உளார், கழிநெடும்
புண் உளார் ஆருயிர்க்கு அமிழ்தமே போல் உளார். (3890)

சுக்ரீவனுக்கும் அவன் கூட்டத்தாருக்கும் இராம இலக்குவர் யார் என்பதை உரைக்க வரும் அனுமன் ஆனந்தக் கூத்தாடி வருகிறான். ஆனந்தத்தில் உள்ளவர் மனதில் இருந்து வெளிப்படும் சொற்பெருக்கு விரைவானதாக இருக்கும். அவ்வாறான விரைவில் இராம இலக்குவர் குறித்து உணர்ச்சி மேலிட வர்ணிக்கிறான்.

மண்ணில் இருக்கும் மனிதர்களில் மகத்தானவர்கள். விண்ணில் வாழும் தேவர்களில் சிறந்தவர்கள். பாதாளங்களில் வாழும் நாகர்களினும் திறன் கொண்டவர்கள். யக்‌ஷர் கந்தர்வர்களினும் மேம்பட்டவர்கள். எண்திசையையும் காப்பவர்கள். இவர்கள் அனைவராலும் மனத்தால் எண்ணப்படுபவர்கள். இவர்கள் அனைவரும் இயங்கும் முறைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவர்கள். இவர்களால் துதிக்கப்படுபவர்கள். பகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமுதமாய் விளங்குபவர்கள்.


தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே,
மாறி, இப் பிறப்பில் வந்தார் மானுடர் ஆகி மன்னோ;
ஆறுகொள் சடிலத்தானும், அயனும் என்று இவர்கள் ஆதி
வேறு உள குழுவை எல்லாம், மானுடம் வென்றது ‘என்றே. (3906)

பிரம்மம் மண்ணுக்கு மானுட வடிவம் தாங்கி வந்தது. இதனால் பிரபஞ்சத்தின் மற்ற உயிர்களை மானுடம் வென்றது.
அனுமன் சொற்களால் இராமனைக் குறித்து கேட்டறிந்த சுக்ரீவன் இராமனைக் கண்டதுமே இராமனை பிரம்ம சொரூபமாய் உணர்ந்து இச்சொற்களைக் கூறுகிறான்.

கூட்டம் உற்று இருந்த வீரர், குறித்தது ஓர் பொருட்டு முன்னாள்
ஈட்டிய தவமும், பின்னர் முயற்சியும் இயைந்தது ஒத்தார்;
வீட்டு வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்கக்,
கேட்டு உணர் கல்வியோடு ஞானமும் கிடைத்தது ஒத்தார். (3909)

இராம சுக்ரீவர் இணைந்து இருப்பது தவமும் முயற்சியும் இணைந்து இருப்பது போலவும் கல்வியும் ஞானமும் இணைந்து இருப்பது போலவும் இருந்தது என்கிறான் கம்பன்.
தவம் என்பது ஒன்றை மட்டுமே மனத்தில் உணர்வில் எண்ணத்தில் பற்றி பிற அனைத்திலிருந்தும் விலகியிருப்பது. கருதும் ஒன்றாகவே தான் ஆவது. முயற்சி என்பது எல்லா வகையிலும் முயல்வது. எல்லாமாகவும் தான் ஆவது. இரண்டுமே பெரியவை. தவம் கைகூடினால் எண்ணியதை எண்ணியாங்கு எய்த முடியும். தெய்வத்தால் ஆகாததையும் முயற்சி சாத்தியமாக்கும். அத்தகைய தவமும் முயற்சியும் ஒரு செயலில் ஒன்றிணையுமானால் எத்தகைய வலிமையோ அத்தகைய வலிமையை இராம சுக்ரீவர் இணை கொண்டிருந்தது என்கிறான் கம்பன்.

கல்வி என்பது ஆசிரியனால் கற்பிக்கப்படுவது. ஆசான் தான் கற்றவற்றை மாணவனுக்குக் கற்பித்திருப்பான். ஆசான் தான் கற்றதையும் தனது அனுபவங்களையும் மாணவனுக்கு அளித்திருப்பான். எனினும் மாணவன் தான் ஆசானிடமிருந்து அடைந்த கல்வியை தனது செயல்பாடுகள் வழியே அனுபவமாக மாற்றிக் கொள்ளும் போதே ஞானம் பெறுகிறான். அது எவ்வகையான ஞானமானாலும் சரி. உலகியல் ஞானத்திலிருந்து ஆத்ம ஞானம் வரை. ஆசானிடமிருந்து பெற்ற கல்வியும் தான் அடைந்த அனுபவமும் இணையும் போது முழுமை ஞானம் கைகூடும். இராம சுக்ரீவர் இணைவு என்பது கல்வியும் ஞானமும் இணைந்தது போல் இருந்தது.

ஆர்த்தது குரக்குச் சேனை; அஞ்சனை சிறுவன் மேனி,
போர்த்தன, பொடித்த ரோமப் புளகங்கள்; பூவின் மாரி
தூர்த்தனர் விண்ணோர்; மேகம் சொரிந்தன; அனகன் சொன்ன
வார்த்தை எக் குலத்து உளோர்க்கும், மறையினும் மெய் என்று உன்னா. (3915)

ஆர்ப்பரித்தது வானரப் படை. இராமனின் கனிவையும் உன்னதமான அச்சூழலையும் எண்ணி மேனி சிலிர்த்தான் அனுமன். தூறலிட்டன மேகங்கள். பூமழை பொழிந்தனர் விண்ணவர்.

ஏழு வேலையும், உலகம் மேல் உயர்ந்தன ஏழும்,
ஏழு குன்றமும், இருடிகள் எழுவரும், புரவி
ஏழும், மங்கையர் எழுவரும், நடுங்கின என்ப,
ஏழு பெற்றதோ இக் கணைக்கு இலக்கம்? “ என்று எண்ணி. (3983)

ஏழு மராமரங்களை இலக்காகக் கொண்ட இராம பாணத்தைக் கண்டு ஏழு கடல்கள் அஞ்சின. ஏழு உலகங்களும் அஞ்சின. ஏழு மலைகளும் அஞ்சின. ஏழு முனிவர்களும் அஞ்சினர். ஏழு குதிரைகள் அஞ்சின. ஏழு கன்னிகள் அஞ்சினர். இராம பாணம் ஏழை இலக்காகக் கொண்டுள்ளதே என்று!

இப்பாடல் ஒரு மிகுபுனைவு. இருப்பினும் இந்திய புராணங்களில் ஏழு கடல்கள் எவை என்றும் அவை உருவானது குறித்த கதைகளும் ஏழு உலகங்கள் யார் யாருக்கு உரியன என்பது குறித்த கதைகளும் எவை ஏழு மலைகளாக தொகுக்கப்பட்டன என்ற வரிசைப்படுத்தலும் ஏழு முனிவர்களின் தவ முறைகளும் ஏழு குதிரைகள் குறித்த வர்ணனைகளையும் ஏழு மாதர் வழிபாடு உருவாகி வந்த முறை குறித்தும் வாசகன் இப்பாடலிலிருந்து மேலதிக வாசிப்பின் மூலம் அறிய முடியும். அது இப்பாடலுக்கு மேலும் பொருள் தரும். அத்துடன் இப்பாடலின் மிகுபுனைவு அம்சத்தை மேலும் பெரிதாக்கும்.

தெரிவுற நோக்கினன் தெரிவை மெய் அணி;
எரி கனல் எய்திய மெழுகின் யாக்கை போல்
உருகினன் என்கிலம்; உயிருக்கு ஊற்றம் ஆய்ப்
பருகினன் என்கிலம் பகர்வது என்கொல் ஆம்? (4008)

தன் சீதையின் ஆபரணங்களைக் கண்ணால் நோக்கினான் இராமன். எரியும் தீயில் இடப்பட்ட மெழுகைப் போல அவற்றைக் கண்டதும் உருகினான். துயருற்றிருந்த இராமன் துயர் நீக்கும் அமுதம் போன்ற அவற்றை கண்களால் பருகினான்.

காதல் கனிந்த மனம் கொண்ட காதலன் தன் காதலியின் அணிகளையும் காதலியாகவே கருதுவான். காணும் எல்லா பொருளிலும் அவளின் தோற்றத்தையும் அசைவையும் அழகையும் காண்பான். பெண்கள் அணி கொள்ளுதல் என்பதே தம்மை விரிவுபடுத்திக் கொள்ளும் ஒரு செயலே. உடலுக்கும் அணிகளுக்கும் இடையே ஓர் ஒத்திசைவை உருவாக்குவது என்பதே அணிக்கலை. சீதையின் நகைகளைக் கண்ட இராமன் அவற்றின் மூலம் சீதையையே கண்டான். எனவே நெகிழ்ந்த அன்பால் உருகினான்.

‘கொற்றவ, நின்பெருங் குவவுத் தோள் வலிக்கு
இற்றனன், முன்னை நாள், ஈடு உண்டு ஏகினான்;
பெற்றிலன் பெருந்திறல்; பெயர்த்தும் போர்செயற்கு
உற்றது, நெடுந் துணை உடைமையால் ‘என்றாள். (4061)

ஓர் இடர் ஏற்படும் போது அவ்விடர் குறித்து சிந்திப்பதும் ஆலோசிப்பதும் உத்தமமானது. சினமெழுந்தவர்கள் சீண்டப்பட்டு சிந்திக்கும் திறனை இழக்கிறார்கள். வாலி அவ்வாறு சினந்து எழுகிறான். அவன் மனைவி தாரை நிலைமை குறித்து சிந்தித்தவளாய் அவனுக்கு அறிவுரை கூறுகிறாள்.
‘’மன்னா! தங்கள் வலிமையைக் கண்டு அஞ்சி ஓடிய சுக்ரீவன் தங்களை வெல்லும் ஆற்றலை அடைந்திருக்க முடியாது. தங்களை எதிர்க்கத் துணிகிறான் எனில் அவன் ஆற்றல் கொண்ட ஒரு துணையைப் பெற்றிருக்கிறான். அதனாலேயே தங்களை எதிர்க்கும் துணிவு அவனுக்கு வந்திருக்கிறது.’’
’’மன்னா’’ என விளிப்பது அவன் எந்த யோசனையையும் ஆலோசிக்க வேண்டியவன் என்பதால்.

 மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, ‘இராமன் ‘என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களின் தெரியக் கண்டான். (4117)

மூவுலகங்களுக்கும் அடிப்படையான மந்திரச் சொல்லை, தம்மை வழிபடுபவர்களுக்கு தம்மையே அளிக்கும் ஒப்பில்லாத சொல்லை, இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்குமான அருமருந்தை, ‘’ராம’’ என்ற சிறந்த பெயரை தன்னைத் துளைத்த அம்பினில் கண்டான் வாலி.

வாலி வதைப் படலம் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் விவாதிக்கப்பட்டது. மறைந்திருந்து அம்பு எய்தியது சரியா தவறா என இப்போதும் பேசப்பட்டு வருகிறது. காப்பிய அமைப்பில் கிட்கிந்தை காண்டத்தின் துவக்கத்திலேயே இராமனும் அனுமனும் சந்தித்து விடுகின்றனர். அனுமன் கற்க வேண்டிய கல்வியோ அடைய வேண்டிய ஞானமோ இவ்வுலகில் இல்லை என்பது அனுமனைப் பற்றிய இராமனின் அவதானம். வாலி அறம் பிழைத்தவன். வாலி அறம் பிழைத்தவன் என்பதற்கு அனுமன் கூறும் சான்றே போதுமானது. அதன் அடிப்படையிலேயே இராமன் வாலியை வீழ்த்துகிறான். தாடகை வதத்தின் போது அரக்கியாயினும் பெண் என்பதால் பாணம் செலுத்த இராமன் தயங்குகிறான். விசுவாமித்திரர் சொல்ல அம்பை ஏவுகிறான். இம்முறை அனுமன் சான்றுரைத்ததால் இராமன் வாலியை வீழ்த்துகிறான்.


(தொடரும்)