Sunday 31 March 2024

நிதி ஆண்டு




 இன்று நிதி ஆண்டின் கடைசி நாள் மாலை ஊருக்கு அண்மையில் இருக்கும் நண்பரான ஐ.டி கம்பெனியில் பணி புரியும் தேக்கு விவசாயியின் வயலுக்குச் சென்றிருந்தேன். அவருடைய வீட்டில் அவரது இளைய சகோதரருக்கு மகன் பிறந்திருக்கிறான். பிறந்து ஒரு வாரம் ஆகிறது. 

எனது நண்பரின் குழந்தையை அம்மகவு பிறந்த அன்று மருத்துவமனையில் பார்த்தேன். இப்போது அந்த குழந்தைக்கு 18 வயது பூர்த்தியாகி உள்ளது. பொறியியல் மாணவியான அப்பெண் இன்னும் 19 நாளில் நாடாளுமன்றத் தேர்தலில் தனது முதல் வாக்கை செலுத்த ஆர்வமாக இருக்கிறாள். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் முதல் நாள் மகவாக பார்த்த ஞாபகமே இப்போதும் இருக்கிறது. 

உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையுமே இந்த உலகை மேலும் சிறப்பானதாக ஆக்கும் சாத்தியத்துடனே பிறக்கிறது.  

நண்பரின் சகோதரருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு நண்பருடன் தேக்கு வயலுக்குச் சென்றேன். தேக்கு மரங்கள் அடிப்பாகம் பருக்கத் தொடங்கியிருக்கின்றன. தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்ட நாளிலிருந்து வாரம் இரண்டு முறை தண்ணீர் வைக்க வேண்டும் என்று அலுக்காமல் வலியுறுத்தி வந்தேன். நம் தமிழ்ச் சமூகத்தில் மரக்கன்றுகளுக்கு உணவுப்பயிர்களைப் போல கவனம் செலுத்தி தண்ணீர் வைக்க வேண்டும் என்ற எண்ணம் விவசாயிகளுக்கு இல்லை. உணவுப் பயிர்கள் குறுகிய காலத்தவை. 90லிருந்து 110 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்து விடும். எனவே அதற்கு பார்த்து பார்த்து தண்ணீர் வைப்பார்கள். மரங்கள் தானாக வளரும் என்று எண்ணுகிறார்கள். நண்பர் விவசாயத்தை பொருளியல் லாபம் மிக்கதாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் நெல் வயலை தேக்கு வயலாக்கியவர். இருந்தாலும் அவர் மனதில் வாரம் இரண்டு நாள் தண்ணீர் வைத்தல் என்பதை பெரும் பிரயத்தனம் செய்தே பதிய வைக்க நேர்ந்தது. வருடத்தில் வடகிழக்கு பருவமழை பொழியும் 100 நாட்கள் தண்ணீர் வைக்க தேவையில்லை என்பதால் மழைக்காலத்தில் இந்த பிரச்சனை இருக்காது. கோடையில் நான் வலியுறுத்துவதும் அதற்கு மெதுவாக செவி சாய்த்து அவர் நீர் வார்ப்பதும் நடக்கும். இப்போது தண்ணீரின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து நீர் பாய்ச்சலை முக்கிய வேலையாகச் செய்யத் தொடங்கியிருக்கிறார். கோடையில் நீர் கிடைத்ததும் கன்றுகள் சிறப்பாக வளர்ந்து அடி பருத்துள்ளன. 

நிதி ஆண்டின் கடைசி நாள் மாலை சிறப்பாக வளர்ச்சி பெற்றிருக்கும் தேக்கு மரக்கன்றுகள் உள்ளத்துக்கு நம்பிக்கை அளித்தன. 

நண்பரின் முயற்சி வெற்றிகரமாக இருப்பதைக் கண்ட அவரது உறவினர் நண்பரின் வயலுக்குப் பக்கத்தில் இருக்கும் தனது 3 ஏக்கர் நெல்வயலை தேக்குத் தோட்டமாக மாற்ற முடிவு செய்திருக்கிறார். 

Friday 29 March 2024

தாடி ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளருக்கு ஒரு நண்பர் இருக்கிறார். 35 ஆண்டு கால நண்பர். அமைப்பாளர் தந்தைக்கும் நண்பர். அவருக்கு வயது 68 இருக்கும். சமீபத்தில் வீட்டுக்கு வந்திருந்தார். 

‘’பிரபு ! என்ன ஷேவ் பண்ணாம தாடி வச்சுருக்கீங்க’’

அமைப்பாளருக்கு கோபம் வந்தது என்பதை சற்று மென்மையாகச் சொல்வது என்றால் அமைப்பாளர் அசௌகர்யமாக உணர்ந்தார் என்று சொல்லலாம். 

சாங்கிய யோக நூல்கள் தங்கள் முதற் சொல்லாக ‘’அதாவது’’ என்ற சொல்லைக் கொண்டுள்ளன. அந்த துவக்கம் இந்த விஷயம் இதற்கு முன்னாலும் இருந்தது ; பேசப்பட்டது ; விவாதிக்கப்பட்டது. இதன் பின்னும் பேசப்படும் விவாதிக்கப்படும் என்னும் பொருள் கொண்டது. 

அமைப்பாளர் ‘’அதாவது’’ என்று தொடங்கினார். 

‘’செல்ஃப் ஷேவ் ரெகுலரா செஞ்சுக்கற பழக்கம் எனக்கு இல்லை. வாரம் ஒருநாள் சலூனுக்குப் போய் ஷேவ் செஞ்சுப்பன். முன்னாடி எல்லாம் ஷேவிங்க்கு 50 ரூபாய் சார்ஜ் பண்ணாங்க. இப்ப 80 ரூபாய் ஆகுது. எனக்கு வாரம் 80 ரூபாய்ங்கறது காஸ்ட்லின்னு தோணுது. திங்கள்கிழமை காலைல ஷேவ் பண்ணிக்க போவன். அது அடுத்த திங்கள் வரைக்கும் தாங்கும். இப்படி வாரம் ஒரு தடவை ஷேவ் பண்றதை ரிப்பீடடா பண்றதுல ஒரு டயர்ட் உருவாகிடுச்சு. அதான் ஒரு முடிவு பண்ணன். ஒவ்வொரு மாசத்துலயும் முதல் தேதி குளோஸ் கட் பண்ணி டிரிம்மர் மெஷின்ல தாடியை கம்ப்ளீட் டிரிம் பண்ணிடலாம்னு முடிவு பண்ணன். அதுக்கு மாசத்துக்கு ரூ.120 மட்டும் தான் செலவாகும்.’’

முதல் கட்ட விளக்கம் கொடுத்த பின் தாடிக்குப் பின்னால் இருக்கும்  பொருளியல்  எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்னும் எண்ணம் அமைப்பாளருக்கே தோன்றியது. 

நண்பருக்கு இந்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை. அமைப்பாளர் இரண்டாம் கட்டத்துக்கு தயாரானார். 

‘’பிரிட்டிஷ்காரங்க இந்தியாவுக்கு வந்தப்புறம் அவங்களோட உத்யோகஸ்தர்கள் தினசரி ஷேவ் பண்ணிட்டு ஆஃபிஸுக்கு வரணும்னு ஒரு நெறியை உருவாக்குனாங்க. பிரிட்டிஷ் ஆர்மி நேவில அந்த நெறி உண்டு. அது அவங்க கவர்மெண்ட் ஸ்டாஃபுக்கும் வந்தது. அவங்க ஆளுகைல இருந்த எல்லா இடத்துலயும் இந்த விஷயத்தை இம்ப்ளிமெண்ட் செஞ்சாங்க. தமிழகம் அவங்க ஆளுகைல ரொம்ப வருஷமா இருந்த இடம். அதனால கவர்மெண்ட் ஆஃபிஸ் ஸ்டாஃப்னா ஷேவ் பண்ணியிருக்கனும்னு ஆச்சு. காலேஜ் மாதிரி கல்வி நிலையங்களிலும் ஸ்டூடண்ட்ஸ் ஷேவ் பண்ணி இருக்கனும்னு ஆச்சு. இந்தியால ஆயிரக்கணக்கான ஆண்டுகளா ஷேவிங் செஞ்சுக்கற வழக்கம் இருக்கு. ஆனா மக்கள் டெய்லி ஷேவ் செஞ்சுருப்பாங்களா செல்ஃப் ஷேவ் செஞ்சுருப்பாங்களாங்கறது யோசிச்சுப் பாக்க வேண்டிய விஷயம். இந்தியா முழுக்க ‘’நாவிதர்’’ கம்யூனிட்டி இருக்காங்க. அவங்க மருத்துவத் தொழிலோட ஒரு பகுதியா சவரத்தை வச்சிருந்தாங்க. நோய்க்கு மருந்து கொடுக்கற வேலை அவங்களோடது. இன்னைக்கும் நாலு ஊருக்கு ஒரு நாவிதர் குடும்பம்ங்கற அளவுல தான் அவங்க இருக்காங்க’’

பொருளியல் விளக்கத்துக்குப் பிறகு அமைப்பாளர் வரலாற்று விளக்கமும் அளித்தார். 

நண்பரை அமைப்பாளர் சொன்ன பதில் சென்று சேரவில்லை. 

‘’கிரியேட்டிவ் மைண்ட் செட் உள்ளவங்க தோற்றத்துக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்க. அது அவங்க கவனத்துக்கே வராது. அவங்க வேற உலகுல சஞ்சரிச்சுட்டு இருப்பாங்க. உடனே கிரியேட்டிவ் ஃபீல்டுல டெய்லி ஷேவ் செஞ்சுக்கறவங்க இருக்காங்கலேன்னு சொல்லாதீங்க. கிரியேட்டிவ் ஆளுங்களுக்கு கிரியேஷன் தான் முக்கிய விஷயம். அதான் அதுல பாயிண்ட். இன்னைக்கு 25ம் தேதி . இன்னைக்கு தாடி மீசை இருக்கு. நீங்க 4ம் தேதி வந்தா தாடி மீசை ரெண்டும் இருக்காது. மெஷின்ல 0 போட்டு டிரிம் ஆகியிருக்கும். மாசத்தோட முதல் வாரம் தாடி மீசை இல்லாம இருப்பன். மாசத்தோட ரெண்டு மூணாவது வாரம் நடுத்தரமான தாடி மீசையோட இருப்பன். கடைசி வாரம் நல்லா வளந்த தாடி மீசையோட இருப்பன். எந்த தேதில நீங்க என்னை பாக்கறீங்கன்னு பொருத்து தான் என்னோட தாடி மீசை’’ 

நண்பர் தாடிக்குக் கொடுக்கப்பட்ட பொருளியல் வரலாற்று விளக்கத்தையும் ஏற்றவில்லை. அதை விட அதிகமாக கிரியேட்டிவ் மைண்ட் செட் குறித்து அளித்த விளக்கத்தையும் ஏற்கவில்லை. 

Thursday 21 March 2024

நந்தி மலர்

வீட்டுக்கு அருகே ஒரு நந்தியாவட்டை மலர்ச்செடி உள்ளது. பல மாதங்களுக்கு முன்னால் என்னால் நடப்பட்டது. ஒரு கோடையையும் ஒரு மழைக்காலத்தையும் கடந்து இப்போது அடுத்த சுற்றுக்குத் தயாராகி உள்ளது. கோடையின் வெப்பம் பெரு உக்கிரம் கொள்ளத் துவங்கியிருக்கும் பருவம். தார்ச்சாலைக்கும் மதில் சுவருக்கும் இடையில் அமைந்திருக்கிறது அச்செடி. எப்போதும் சாலையில் செல்லும் வாகனங்களால் செடியின் தழைகள் முழுவதிலும் புழுதி படிந்திருந்தது. அதனைக் கடந்து செல்லும் போது சிலமுறை அச்செடியைப் பார்த்தேன். கோடை, புழுதி வறட்சி என அத்தனை தடைகள் இருப்பினும் அதில் பல மலர்கள் மலர்ந்திருந்தன. அன்றலர்ந்த மலர்கள் என்ற கம்பன் நினைவில் எழுந்தான். மலர்ச்சி என்பது ஒரு சுபாவம். சூழல் வசதியோ அசௌகர்யமோ மலர்களுக்கு அதில் எந்த சொல்லும் இல்லை. எந்த புகாரும் இல்லை. அவை மலர்ந்திருக்கின்றன. யோகம் மலர்தல் என ஏன் கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டேன். 

நந்தி மலர்ச்செடிக்கு ஒரு வாளியில் நீர் கொண்டு சென்று அதன் மீது மழை போலத் தூவினேன்.  

Tuesday 19 March 2024

எனது படைப்புகள்

   2016ம் ஆண்டு மயிலாடுதுறையிலிருந்து ரிஷிகேஷ் வரை 22 நாட்கள் மோட்டார்சைக்கிளில் பயணித்தேன். அப்பயணம் குறித்த  பயணக் கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. அதன் இணைப்பு

காவிரியிலிருந்து கங்கை வரை - பகுதி 1

அதன் இரண்டாம் பகுதியின் இணைப்பு

ஹம்பி - நிலவைக் காட்டும் விரல்

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதைகள்











வருகை              





இரு பள்ளிகள்

சொல்வனம் இதழில் எழுதும் ‘’யானை பிழைத்தவேல்’’ கம்பராமாயணத் தொடரின் கட்டுரைகள் இணைப்பு

யானை பிழைத்தவேல் - பகுதி 1   யானை பிழைத்தவேல் - பகுதி 2

யானை பிழைத்தவேல் - பகுதி 3   யானை பிழைத்தவேல் - பகுதி 4

யானை பிழைத்தவேல் - பகுதி 5

ஜெயமோகன் இணையதளத்தில் வெளியான எனது கட்டுரைகள் & கடிதங்கள்


சுப்பு ரெட்டியார்         



வீரப்ப வேட்டை                         







சங்கிரகம் (மறு பிரசுரம்)

சில நாட்களாக தளத்தில் ’’காவிரி போற்றுதும்’’ பணிகளை மீள்பதிவு செய்து கொண்டிருந்தேன். அது பணிகளைத் தொகுத்துக் கொள்ள உதவிகரமாக இருந்தது. என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை புறவயமாக அறியச் செய்தது. இச்செயல்கள் அமைப்பின் செயல்கள் மட்டும் அல்ல ; மக்களின் செயல்களும் கூட. மக்கள் பங்களிப்பு இருக்கும் விதத்திலேயே ‘’காவிரி போற்றுதும்’’ தன் செயல்களை வடிவமைக்கிறது. எனவே மக்களுக்கு முதற்கண் நன்றி தெரிவிக்கிறது.  தமிழ்ச் சூழலில் எவ்விதமான பங்களிப்பும் நிதிப்பங்களிப்பே என்ற மனப்பதிவு பரவலாக உள்ள நிலையில் நூற்றுக்கணக்கான - ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் செயல்கள் மூலம் பங்கெடுப்பதும் பெரும் பயன் விளைவிக்கக் கூடியது என்பதை ‘’காவிரி போற்றுதும்’’  அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளது. 

புதிதாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என ‘’காவிரி போற்றுதும்’’ கூறும் போதெல்லாம் அதற்கு ஊக்கம் தந்து அது நிகழ்வதற்கு சகலவிதமான உதவிகளும் செய்து அதனைச் சாத்தியமாக்குவது நண்பர்களே. அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல இந்த தருணம் பொருத்தமானது ஆகும். 

உண்மையில் ‘’காவிரி போற்றுதும்’’  ஓர் இணைப்புப் பாலமாகவே செயல்படுகிறது. சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் ஒரு பக்கம். சாமானிய மக்கள் இன்னொரு பக்கம். அவர்கள் இருவரும் ‘’காவிரி போற்றுதும்’’ வழியாக இணைக்கப்படுகிறார்கள். அந்த இணைப்பின் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்கிறது என்பதே உண்மை. 


















Saturday 16 March 2024

பேரம் ( நகைச்சுவைக் கட்டுரை)

ஒரு புதிய இரு சக்கர வாகனத்தை வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை அமைப்பாளருக்கு ஏற்படுத்திக் கொண்டேயிருந்தனர் அமைப்பாளர் உடன் இருப்பவர்கள். அமைப்பாளர் அதற்கான வாய்ப்புகளை பலமுறை ஒத்திப் போட்டார். எங்களுக்குப் பிடித்த வாகனத்தை வாங்கிக் கொண்டு வந்து நிறுத்தி விடுவோம் என அமைப்பாளருக்குத் தெரிவிக்கப்பட்டதும் அமைப்பாளர் இனியும் ஒத்தி வைப்பதோ தள்ளி வைப்பதோ இயலாது என உணர்ந்து ஒரு புதிய வாகனம் வாங்கிக் கொள்கிறேன் என்றார். முடிவெடுத்து பல நாட்கள் ஆனாலும் வாகனம் வாங்கவில்லை. டீலரிடம் காலையில் சென்றால் மாலையில் வண்டி எடுத்துக் கொண்டு வந்து விடலாம். இருந்தாலும் அமைப்பாளர் வண்டி வாங்கிய பாடில்லை. 

ஊரில் இருந்த டீலர் ஒரு விலை சொன்னார். விலையைக் குறைக்க முயற்சித்தார் அமைப்பாளர். உள்ளூர் டீலர் விலை இறுதியானது என்றார். அமைப்பாளர் எந்த முடிவும் எடுக்கவில்லை. சில தருணங்களில் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதே ஒரு நல்ல முடிவாக இருப்பது உண்டு. 

வண்டி வாங்க சொல்லி நெருக்கடி கூடிக் கொண்டே இருந்தது. இது இறுதிக் கட்டம் என்று அமைப்பாளர் எண்ணினார். 

இணையத்தில் தேடி தனது ஊரைச் சுற்றி இருக்கும் ஊர்களின் டீலர் அலைபேசி எண்களை  சேகரித்துக் கொண்டார். ஒவ்வொருவருக்கும் ஃபோன் செய்தார். தான் இன்ன பிராண்ட் இன்ன மாடல் தான் எடுக்கப் போவதாக முடிவு செய்து விட்டதாகவும் ‘’பெட்டர் பிரைஸ்’’ கிடைத்தால் தங்களிடமே வாகனத்தை எடுத்துக் கொள்வதாகவும் உறுதி அளித்து பேரத்தை துவக்கினார் அமைப்பாளர். ஒரு வெளியூர் டீலர் உள்ளூர் விலையை விட ரூ. 5000 /- குறைத்துக் கொடுக்க ஒப்புக் கொண்டார். 

ஒரு நல்ல டீல் முடித்த நிறைவில் அதனை ஏற்றுக் கொண்டார் அமைப்பாளர். 

பேரத்தின் மூலம் மிச்சமான ரூ.5000 தொகையில் ஒரு சைக்கிள் வாங்கிக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார் அமைப்பாளர்.  

Wednesday 13 March 2024

அரசமரம் - சட்ட விரோத மரம் வெட்டுதல் - புகார் மனு

 ஊருக்கு அருகில் இருக்கும் சிறு கிராமம். அதில் கிராமச் சாலையில் அமைந்திருந்த 20 வயது கொண்ட அரசமரம். நேற்று மாலை வெட்டப்பட்டதாக இன்று காலை தகவல் அறிந்தேன். மரம் வெட்டப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்த்த பின் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒரு மனு அனுப்பினேன். அந்த மனுவின் தமிழாக்கம் கீழே : 

அத்தனை பிரும்மாண்ட மரத்தை வெட்ட எப்படி மனம் துணிகிறது ? ஒரு அரசமரம் என்பது எவ்வளவு பெரிய உயிர் ? எத்தனை உயிர்களுக்கு வாழ்விடமாகவும் உணவாகவும் விளங்கக் கூடியது? 

முக்கால் பாகம் வெட்டப்பட்டு விட்டது. மீதி கால் பாகம் மூலம் மீண்டும் மரத்தை துளிர்க்க வைக்க முயல வேண்டும். 

*****

அனுப்புநர்

ர.பிரபு
***********
******
*****

பெறுநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட பசுமை கமிட்டி
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

ஐயா,

பொருள் : அரசமரம் வெட்டப்பட்டது தொடர்பாக விசாரணை செய்ய கோரிக்கை மனு
பார்வை : ************ கிராமம் - மயிலாடுதுறை வட்டம்

******* கிராமத்தில் அமைந்திருந்த 20 ஆண்டு வயது கொண்ட அரசமரம் நேற்று ( 12.03.2024) வெட்டப்பட்டிருக்கிறது. 

வெட்டப்பட்ட மரத்தின் அமைவிடம் : வெட்டப்பட்ட மரம் பெட்ரோல் பங்க்கிற்கும் கிராமத்துக்குக் குளத்துக்கும் அருகாமையில் அமைந்துள்ளது. பெட்ரோல் பங்க்கிற்கு மேற்கு . கிராமத்துக் குளத்துக்கு கிழக்கு. 

வெட்டப்பட்ட மரத்தின் மதிப்பு : ரூ. 25,000 க்கு மேல்

இந்த புகார் மனுவின் மூலம் மேற்படி மரம் வெட்டப்பட மாவட்ட பசுமை கமிட்டியின் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை விசாரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு அனுமதி பெறப்படவில்லை எனில் அது சட்ட விரோதமாக மரம் வெட்டுதல் ஆகும். அரசமரம் சட்ட விரோதமாக வெட்டப்பட்டிருந்தால் வெட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

தங்கள் உண்மையுள்ள,

****

இடம் ; மயிலாடுதுறை
நாள் : 13.03.2024

நகல்

1. வருவாய் கோட்டாட்சியர் , மயிலாடுதுறை

2. வருவாய் வட்டாட்சியர், மயிலாடுதுறை

Sunday 10 March 2024

பிரம்மாபுரம்

பிரம்மாபுரம் தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமான ஊர். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர் பிறந்த ஊர். பக்தி இலக்கிய காலகட்டத்தில் நாடெங்கும் பயணித்து தம் பதிகங்களால் வெகுமக்கள் மனதிலும் உணர்விலும் சைவத்தை நிலை கொள்ளச் செய்தவர்களில் முக்கியமானவர் ஞானசம்பந்தர். ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோர் அந்த காலகட்டத்தின் முக்கிய நபர்கள்.  அம்மையப்பன் திருஞானசம்பந்தருக்குக் காட்சி கொடுத்து அம்மை சிறு மகவாயிருந்த சம்பந்தருக்கு ஞானப்பால் அளித்தது பிரம்மாபுர ஆலய குளக்கரையில் என்பது ஐதீகம். ஒவ்வொரு ஆண்டும் திருமுலைப்பால் விழா இங்கே நடைபெறும். 

இன்று பிரம்மாபுரம் ஆலயம் சென்று வர வேண்டும் என்று தோன்றியது. காலை உணவருந்தி விட்டு புறப்பட்டேன். பேருந்தில் செல்ல விரும்பினேன். பேருந்தில் செல்லும் போது நான் என் சக குடிமக்களை அணுக்கமாக அறிகிறேன். பேருந்தின் ஜன்னல் வழி காட்சிகளின் மூலம் சமூகத்தின் பொருளியல் நிலையை பொருளியல் மாற்றங்களைக் காண முடிகிறது. பேருந்தும் ரயிலும் எனக்கு விருப்பமான போக்குவரத்து சாதனங்கள். ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று பேருந்து 80 சதவீத பயணிகளுடன் மட்டுமே இருந்தது. செல்லும் போதும் திரும்பி வரும் போதும். 

சில ஆலயங்களுக்கு அங்கே இருக்கும் ஊர்மக்கள் அதிக அளவில் வருகை புரிந்து வழிபடுவார்கள். பிரம்மாபுரம் மக்களுக்கும் அந்த வழக்கம் உண்டு. சில மாதங்களுக்கு முன்னால் குடமுழுக்கு நடைபெற்றது. பிரம்மாபுரம் ஆலயம் பேராலயம். அதில் இருந்த மண்டபத்தின் தூண் ஒன்றில் சாய்ந்து திருஞானசம்பந்தர் குறித்து எண்ணிக் கொண்டிருந்தேன். சிறு குழந்தை. இறைவனின் பிரியத்துகுப் பாத்திரமான அருட் குழந்தை. சம்பந்தரின் தமிழ் நீரெனப் பரவி நிறைவது ; தீயென மேலெழுவது. சம்பந்தர் பதிகங்களை முழுமையாக ஒருமுறை வாசிக்க வேண்டும் என எண்ணினேன். வாய்ப்பு இருந்தால் காணொளிகளில் இருக்கும் ஓதுவார்கள் பாடிய சம்பந்தர் தேவாரத்தையும் கேட்க விரும்பினேன். 

இன்று கொங்கு நாட்டிலிருந்து திரளான மக்கள் பிரம்மாபுரம் ஆலயத்துக்கு வருகை புரிந்திருந்தனர். அவர்களின் பேச்சு மொழியிலிருந்து அதனை யூகித்துக் கொண்டேன். கொங்கு மக்களுக்கு திருமுறைகள் மேல் பெரும் ஈடுபாடு உண்டு. 

பேரியற்கை என்பது ஒரு பெரும்கடல். நாம் அதன் கரையின் ஒரு துளி மணல். 

Saturday 9 March 2024

ஒரு மகிழ்ச்சியான செய்தி

கோவிட் தொற்று காலத்தில் ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக செயல் புரியும் கிராமத்தில் நாம் ஒரு செயலை முன்னெடுத்தோம். கோவிட் தொற்றுக்கான தடுப்பூசி போடப் பட்ட போது செயல் புரியும் கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களையும் நேரில் ஒருமுறை சந்தித்து கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டோம். அவ்வாறு சந்திக்கையில் எட்வர்ட் ஜென்னர் தடுப்பூசியை உருவாக்கிய விதம் , ஜென்னர் கண்டுபிடிப்பால் அம்மை நோய் இறப்புகள் கட்டுப்படுத்தப்பட்டது, கோவிட்டுக்கு இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசி, நம் நாட்டில் தயாராகியிருக்கும் தடுப்பூசி உலகின் பல நாடுகளுக்கு தானமாக வழங்கப்பட்டது ஆகிய விபரங்களைக் கூறி கிராமத்தில் இருக்கும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். மக்கள் தடுப்பூசி குறித்து தங்களுக்கு இருக்கும் ஐயங்களை கேட்டார்கள். அதற்கு நாம் விளக்கங்கள் அளித்தோம். ஒரு நாளைக்கு ஐம்பதிலிருந்து எழுபது வீடு என்ற கணக்கில் கிராமத்தில் இருந்த ஐந்நூறு வீடுகளையும் சந்தித்ததால் தடுப்பூசி குறித்த பேச்சு அந்த கிராமத்தில் பொது உரையாடல் மூலம் பரவத் தொடங்கியது. ''Word of mouth'' என்ற முறையில் கிராமம் முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது. 

பின்னர் அந்த கிராமத்தின் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தொடங்கினர். சிறுக சிறுக பெரும் எண்ணிக்கையில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதாவது அந்த கிராமத்தின் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர். இதில் இன்னொரு ஆச்சர்யம் இருந்ததை பின்னாட்களில் அறிந்தேன். அதாவது தமிழகத்தில் மிகக் குறைவாக கோவிட் தடுப்பூசி இட்டுக் கொண்ட மாவட்டங்களில் மயிலாடுதுறை ஒன்று. மாவட்டத்தில் 45 சதவீத மக்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கின்றனர். மீதி மக்களுக்கு தடுப்பூசி குறித்து அச்சங்கள் தயக்கங்கள். புறச்சூழல் இத்தனை எதிர்மறையாக இருப்பினும் நாம் செயல் புரிந்த கிராமத்தில் 90 சதவீதம் என்ற பெரும் இலக்கத்தை கிராம மக்கள் சாத்தியமாக்கினர். 

செயல் புரியும் கிராமத்தின் மிக அதிக மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் அந்த கிராமம் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றது. அதற்காக சுதந்திர தினம் ஒன்றில் மாவட்ட ஆட்சியரின் விருதைப் பெற்றது. 

செயல் புரியும் கிராமத்தில் இப்போது ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட இருப்பதாக அறிய நேர்ந்தது. தடுப்பூசி விஷயத்தில் செயல் புரியும் கிராம மக்கள் வெளிப்படுத்திய ஆர்வமும் ஈடுபாடும் ஆரம்ப சுகாதார நிலையம் அங்கே அமைவதற்கான பல காரணங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி.   

Friday 8 March 2024

ஒருநாள் பாடு( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் நிர்மாணித்துக் கொண்டிருக்கும் வணிக வளாகத்தில் 95 சதவீத பணிகள் பூர்த்தியாகி ஒரு மாத காலம் ஆகிறது. நடுவில் 3 வாரங்கள் எந்த பணியும் இல்லாமல் இடைவெளி. இந்த வாரம் பணி தொடங்க முயன்று அடுத்த வாரத்துக்கு தள்ளிப் போனது. இன்னும் நான்கு நாளைக்கான பணி இருக்கிறது. அனேகமாக அந்த பணிகள் அடுத்த வாரம் நிறைவடையும். மாடிப்படி கேட் பெயிண்டிங் செய்ய வேண்டிய வேலை இருந்தது. முன்னர் பணி செய்த அணி வெளியூரில் இப்போது பணி புரிய சென்று விட்டார்கள். அமைப்பாளர் தனக்குத் தெரிந்த ஒரு பெயிண்டரை இன்று மாடிப்படி கேட்டுக்கு பெயிண்ட் அடிக்க வரச் சொன்னார். கிரீம்சன் ரெட் ஒரு லிட்டர் வாங்கிக் கொடுத்து பணியிடத்துக்கு பெயிண்டருடன் காலை 10 மணிக்கு வந்து சேர்ந்தார். பெயிண்டர் எமரி பேப்பரால் கேட்டை கிளீன் செய்யத் தொடங்கினார். 

‘’அண்ணன் ! கேட் செஞ்ச வெல்டிங் பட்டறையில ரெட் ஆக்ஸைடு அடிச்சுதான் கொடுத்தாங்க. மேலே இருக்க டஸ்ட் மட்டும் கிளீன் பண்ணிட்டு பெயிண்ட் கொடுக்க சீக்கிரம் ஆரம்பிங்க. ‘’ என்றார் அமைப்பாளர்.  

ராணுவம் பயங்கரவாதிகளைத் தேடித் தேடி வேட்டையாடுவது போல கேட்டில் பெயிண்டர் எதையோ தேடிக் கொண்டிருந்தார். 

அமைப்பாளர் கொஞ்ச நேரம் தள்ளி இருந்து விட்டு பிறகு வருவோம் என பணியிடத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றார். நண்பர் வீட்டில் இருக்க 10 சதவீத வாய்ப்பே எப்போதும் இருக்கும். கும்பகோணத்தில் ஒரு மகளின் வீடு இருக்கிறது. மெல்பர்னில் ஒரு மகளின் வீடு இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை மூன்று மாதம் மெல்பர்ன் செல்வார். ஊரில் இருந்தால் வாரத்துக்கு மூன்று நாட்கள் கும்பகோணம் செல்வார். அமைப்பாளர் சென்ற நேரம் நண்பரும் அவர் மனைவியும் வீட்டில் இருந்தார்கள். 

‘’சார் ! வணக்கம் சார். ஊர்ல இருக்கீங்களான்னு ஒரு டவுட் டோடயே வந்தேன்’’

‘’இப்ப ஒரு மாசமா ஊர்ல தான் பிரபு இருக்கன்’’

நண்பர் பெரும் செல்வந்தர். எளிமையாக இருப்பவர். ஃபேன் ரெகுலேட்டரை சரி செய்து கொண்டிருந்தார். 

‘’ சார் ! ஒரு கமர்ஷியல் காம்ப்ளக்ஸ் கன்ஸ்ட்ரக்ட் பண்ணன்ல சார் . அந்த ஒர்க் 95 பர்செண்ட் முடிஞ்சது சார். சைட்டுக்கு பக்கத்துல 1 கி.மீ ல உங்க வீடு இருக்கு. நான் 5 மாசமா சைட்ல தான் இருக்கன். ஆனா உங்களை ரொம்ப பாக்க முடியலயே.’’

‘’ஏஜ் ஆயிடுச்சு பிரபு அதிகமா வெயில்ல சுத்தறது இல்ல’’

நண்பரின் மனைவி தேனீர் கொண்டு வரவா என்று கேட்டார்கள். 

‘’அம்மா ! ஒரு மாசமா இருமல். பால் , காஃபி , டீ மூணும் சாப்பிடறத விட்டு ஒரு மாசமாச்சு. இப்ப சுக்குப் பொடி தான் வென்னீர்ல கலந்து சாப்பிடறன். பால் ரொம்ப ஹெவியா ஃபீல் ஆகுது. ‘’

நண்பரின் மனைவி வென்னீரில் லெமன் கலந்து கொண்டு வந்து அமைப்பாளருக்குக் கொடுத்தார். 

‘’சார் ! வாங்க பில்டிங் போய்ட்டு வருவோம்’’ 

நண்பரும் அமைப்பாளரும் பணியிடம் வந்து சேர்ந்தார்கள். பெயிண்டர் இன்னும் கிளீனிங் ஒர்க் ஐ முடிக்கவில்லை. 

‘’அண்ணன் ! என்ன அண்ணன் ! இன்னும் பெயிண்ட்டே ஓப்பன் பன்னாம இருக்கீங்க. மணி 11.30. நான் இங்க இருந்து போய் ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகுது. முதல்ல ஒரு கோட் கொடுக்கணும். அது காயணும். அப்புறம் சஃபீஷியண்ட் டயம் கொடுத்து செகண்ட் கோட் கொடுக்கணும். இதோட மெயின் பாக்ஸ் 14 இருக்கு. அதுக்கு பிரைமர் கொடுக்கணும். ஏகப்பட்ட வேலை இருக்கு இன்னைக்கு’’

‘’சம்மர் தான் சார் ! சீக்கிரம் காஞ்சிரும்’’

அமைப்பாளர் நண்பரிடம் ‘’வாழ்க்கை இப்படியே தான் சார் போகுது. நாம இருந்தாதான் சார் வேலை நடக்குது. 10 பேர் வேலை பாத்தா சூப்பர்வைஸ் செய்யலாம். ஒருத்தர் வேலை செஞ்சாலும் சூப்பர்வைஸ் செய்யணும்னா என்ன பண்றது சொல்லுங்க’’

நண்பரை வீட்டில் கொண்டு போய் விட்டார் அமைப்பாளர். தனது வீட்டுக்கு பெயிண்டிங் செய்ய வேண்டும் என்றார் நண்பர். தனக்குத் தெரிந்த பெயிண்டர் ஒருவரை ஃபோன் செய்து வரச் சொன்னார் அமைப்பாளர். அந்த பெயிண்டர் ஏற்கனவே நண்பருக்கு அறிமுகமானவர். பெயிண்டரும் நண்பரும் பெயிண்டிங் பட்ஜெட் பற்றி பேசிக் கொண்டார்கள். அடுத்த வாரம் பணி தொடங்க உத்தேசித்தார்கள். 

அமைப்பாளர் பணியிடத்துக்கு வந்தார். 

அங்கே ஒருவர் அமைப்பாளரை நோக்கி வந்தார். 

‘’சார் ! கடை வாடகைக்கு இருக்கா சார்?’’

‘’அதாவது நான் இந்த பில்டிங் கன்ஸ்டிரக்‌ஷன் பண்ண இன்ஜினியர். ஓனர் வெளியூரு. நான் சொன்னா ஓனர் கேப்பாரு. நீங்க என்ன பிசினஸ் செய்யப் போறீங்க?’’

‘’பூண்டு வெங்காயம் மொத்த மண்டி வச்சுருக்கன். இந்த இடம் கடைத்தெருவுல மெயின் இடமா இருக்கு. நான் இந்த இடத்தை வாடகைக்கு எடுத்துக்கறன்’’

‘’ஓனர் 15,000 வாடகை சொல்லச் சொன்னாரு. ஆயிரம் ரெண்டாயிரம் குறைச்சுக்கலாம்னு சொன்னாரு. அந்த பட்ஜெட் உங்களுக்கு செட் ஆகுமா?’’ 

‘’அது எனக்கு பரவாயில்லை சார்’’ என்றார் பூண்டு வியாபாரி. 

‘’அண்ணன் ! ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிச்சுக்கங்க. 15,000 வாடகை அதிகம்னு பல பேரு அபிப்ராயம் சொல்லுவாங்க. இதை விட கம்மியான வாடகைக்கு இடம் இந்த ஏரியால கிடைக்கும்னு சொல்லுவாங்க. ஆனா இது இடம் பக்கா அண்ணன். கவுண்டர் சூப்பர் கவுண்டர். ஜனங்க பார்வைல படற இடம். வாடகை கூட 12,500 செஞ்சுக்கலாம். நான் ஓனர்ட்ட சொல்றன். ஆனா அதுக்கு கீழ டவுன் பண்ண முடியாது. நீங்க யார்ட்டயும் டிஸ்கஸ் பண்ணனுமா?’’

’’ஆமாம் சார் ! ஒய்ஃப் கிட்ட பேசணும்’’

’’என ஃபோன் நம்பர் நோட் பண்ணிக்கங்க. எப்ப வேணாலும் காண்டாக்ட் பண்ணுங்க.’’

பூண்டு வெங்காய வியாபாரி புறப்பட்டுச் சென்றார். 

சமண சமயத்தவர் உணவில் பூண்டு வெங்காயம் சேர்ப்பதில்லை என்பது அமைப்பாளர் நினைவுக்கு வந்தது. சமணம் குறித்து கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருந்தார். பின்னர் ‘’நம் வேலை பில்டிங் கட்டிக் கொடுப்பது தானே ? ஏன இந்த வாடகை விஷயமும் நம் பொறுப்பில் வந்து சேர்கிறது?’’ என்ற வினா அமைப்பாளர் மனதில் எழுந்தது. அதற்கு அமைப்பாளர் மனதின் இன்னொரு பகுதி ‘’பிரம்மலிபி’’ என பதில் சொன்னது. 

பெயிண்டர் பெயிண்ட் கொடுத்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் உட்கார்ந்திருந்து விட்டு ஒரு கல்யாண மண்டபத்துக்கு சென்றார் அமைப்பாளர். அங்கே இன்று இரவு சிவராத்திரி கொண்டாட்டங்கள். அவரது நண்பர்கள் சிலர் ஏற்பாடுகளில் இருந்தனர். அவர்களிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஒரு ரியல் எஸ்டேட் மீடியேட்டரை சந்திக்கச் சென்றார். அவரிடம் 15 நிமிடம் பேசிக் கொண்டிருந்தார். 

‘’அண்ணன்! அடுத்த பிராஜெக்ட் சேல்ஸ்க்கு உங்க ஹெல்ப் அவசியம் வேணும் அண்ணன்’’ என்று சொல்லி விட்டு கிளம்பினார். 

மதிய வேளை அமைப்பாளருக்கு பசிக்கத் தொடங்கியது. பணியிடம் சென்று பெயிண்டருக்கு மதிய உணவுக்கு பணம் கொடுத்து விட்டு வீட்டுக்கு சென்றார். நல்ல பசி. சாப்பிட்டு விட்டு நாற்காலியில் அமர்ந்திருந்தார். 

மாலை 3 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டார். 

வழியில் வண்டி நின்று விட்டது. ஸ்டார்ட்டிங் டிரபுள். அமைப்பாளருக்கு சோதனை என வழியில் இருந்த எல்லா மெக்கானிக் ஷாப்பும் மதியம் லஞ்ச்சுக்கு சென்றிருந்தனர். கடைசியாக ஒரு மெக்கானிக் ஷாப்பில் ஆட்கள் இருந்தனர். வண்டியில் ஸ்பார்க் பிளக்கில் சிக்கல். அதனை சரி செய்தனர். 

சைட்டுக்கு வந்ததும் ‘’அண்ணன் ! 14 மரப்பலகை இருக்கு. ஒரு பலகைக்கு 5 நிமிஷம்னு வச்சா ஒரு மணி நேரத்துல 14லயும் பிரைமர் அடிச்சுடலாம். அதச் செய்ங்க’’ என்றார். 

பெயிண்டர் பலகைக்கு பிரைமர் அடிக்கத் தொடங்கினார். 

அப்போது பணியிடத்துக்கு பக்கத்து கடைக்காரர் ஒரு காகிதத்தில் எழுதப்பட்டிருந்த அலைபேசி எண்ணைக் கொண்டு வந்து தந்தார். ‘’சார் ! இவங்க இடம் வாடகைக்கு வேணும்னு கேட்டாங்க’’ 

அந்த எண்ணுக்கு ஃபோன் செய்து ‘’ காலைல ஒரு பூண்டு வியாபாரி மாசம் 12,500 வாடகைக்கு ஓ.கே சொல்லிட்டி போயிருக்காரு. உங்களுக்கு அந்த வாடகை ஓ.கே வா ?’’

ஃபோனில் பேசியவர் ‘’ நோ இஸ்யூஸ் சார்’’ என்றார். 

‘’நீங்க என்ன பிசினஸ் செய்ய போறீங்க?’’

’’நகை அடகுக் கடை’’ 

அமைப்பாளர் ஒரு கணம் மௌனமாகி விட்டு ‘’ நீங்க இப்ப வந்தீங்கன்னா ஷாப் ஓப்பன்ல இருக்கு. நீங்க பாக்கலாம்’’ என்றார். 

கொஞ்ச நேரத்துல அடகுக் கடைக் காரர் வந்து இடத்தைப் பார்த்து விட்டு ஃபோட்டோ எடுத்துக் கொண்டார். ‘’ சார் ! ஒய்ஃப்கிட்ட பேசிட்டு சொல்றன் ‘’ எனக் கூறி புறப்பட்டார். 

மாலைப் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து மெல்லிய இருள் துளிர்க்கத் தொடங்கியிருந்தது. பெயிண்டர் செகண்ட் கோட் அடித்து முடித்திருந்தார். 

அவருடைய அன்றைய ஊதியத்தை அவருக்கு அளித்து விட்டு வீட்டுக்குப் புறப்பட்டார் அமைப்பாளர். 

இன்று செய்ய வேண்டும் என நினைத்த வேலை முழுமையாக முடிந்தது என்ற நிறைவும் மகிழ்ச்சியும் அமைப்பாளருக்கு. 

கடந்த சில நாட்களாக வலைப்பூ எழுதவில்லை என்பதால் இன்றைய நாளை ஒரு நகைச்சுவைப் பதிவாக எழுதலாம் என நினைத்தார் அமைப்பாளர். அந்த பதிவுக்கு ‘’இதுதான் எங்கள் வாழ்க்கை’’ என தலைப்பிடலாமா என யோசித்தார். பின்னர் ‘’ ஒருநாள் பாடு’’ எனத் தலைப்பிட்டார். 

Saturday 2 March 2024

கரு காக்கும் அன்னை

எனது சகோதரன் எனக் கூறத் தக்க அளவிலான எனது நண்பன் சென்னையில் வசிக்கிறான். அவனது மனைவிக்கு சென்ற மாதம் வளைகாப்பு நடைபெற்றது. வளைகாப்புக்கு முன்பிருந்தே நான் நண்பனிடம் திருக்கருகாவூர் ஆலயத்துக்கு வந்து முல்லைவன நாத சுவாமியையும் கர்ப்பரட்சாம்பிகை அம்மனையும் வழிபட கூறிக் கொண்டேயிருந்தேன். சென்ற வாரம் அவன் வருகை புரிவதாய் இருந்தது ; அவனது மனைவிக்கு மருத்துவ பரிசோதனைகள் இருந்ததால் தவிர்க்க இயலாமல் அவனது வருகையை ஒத்தி வைக்க வேண்டியதாயிற்று. இன்று காலை சென்னையில் சென்னை - திருச்சி சோழன் விரைவு வண்டியில் புறப்பட்டு வந்தான். நான் அந்த ரயிலில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஏறிக் கொண்டேன். என்னிடம் மயிலாடுதுறை - பாபநாசம் ரயில் பயணச் சீட்டு இருந்தது. பாபநாசத்தில் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம். பாபநாசத்தில் மதிய உணவு அருந்தி விட்டு அங்கிருந்து ஒரு ஆட்டோவில் திருக்கருகாவூர் சென்று சேர்ந்தோம். பாபநாசமும் திருக்கருகாவூரும் 6 கி.மீ தூரத்தில் உள்ளன. 3 மணி அளவில் திருக்கருகாவூர் ஆலயம் சென்றடைந்தோம். அம்மன் சன்னிதியை ஒட்டி வெறும் தரையில் சற்று தலை சாய்த்தோம். ஆலயங்களில் இவ்வாறு காத்திருப்பது கடவுளின் நிழலில் இளைப்பாறுவதற்கு ஒப்பானது. ஆலயங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்பது அதுவே. 

நடை திறந்ததும் முல்லைவன நாதரை வணங்கினோம். முல்லை வன நாதர் புற்று மண்ணால் ஆனவர். சுயம்பு. முல்லை வன நாதர் அத்தனை அழகு படைத்தவர். முல்லை வன நாதரை வணங்கி விட்டு அம்மனை வழிபடச் சென்றோம். 

மனிதர்களால் சிறு அளவிலேனும் ஒரு அன்பை உணர்ந்து கொள்ள முடிகிறது என்றால் அது தாயின் அன்பு மட்டுமே. அம்மையப்பன் எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையுமானவர்கள். 

கர்ப்ப ரட்சாம்பிகை முன்னால் குழுமியிருந்தவர்கள் அனைவருமே இளம் தம்பதியினர். மக்கட்பேறு வேண்டி இறைவனை வழிபட வந்திருந்தார்கள். இங்கே வந்து வழிபட்டுச் சென்ற பின் குழந்தைப் பேறு வாய்க்கப்பெற்றவர்கள் தங்கள் நேர்த்திக் கடன் செலுத்த வந்திருந்தனர். குழந்தைகளால் நிரம்பிய ஆலயத்தைக் காணவே சந்தோஷமாக இருந்தது. நண்பன் ஆலயத்தில் நெய்தீபம் ஏற்றினான். 

மாலை 6 மணி வரை அங்கே இருந்து விட்டு பின்னர் பட்டீஸ்வரம் புறப்பட்டோம். அங்கே ஆலயம் சென்று துர்க்கையை வணங்கினோம். 

நண்பனுக்கு இரவு 9 மணிக்கு உழவன் ரயிலில் ஊர் திரும்ப வேண்டியிருந்தது. எனவே தாராசுரம் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ரயிலேறி மயிலாடுதுறை வந்து சேர்ந்தோம். இரவு உணவு அருந்தி விட்டு நண்பன் புறப்பட்டான். நானும் வீடு வந்து சேர்ந்தேன்.