ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் காசி யாத்திரை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உலகின் எல்லா பகுதியிலிருந்தும் ஒவ்வொரு நாளும் காசியை நோக்கி வந்தடைந்து கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் காசி யாத்திரை ஒவ்வொரு விதமாக நிகழ்ந்திருக்கிறது. காசி யாத்திரையை ராமேஸ்வரத்தில் துவங்குவது தென்னிந்தியர்களின் மரபு. அவ்வாறு ராமேஸ்வரம் துவங்கி ஒரு பாத யாத்திரை நிகழ்ந்தால் அந்த பயணத்தை எந்தெந்த திருத்தலங்களின் மார்க்கமாக அமைக்கலாம் என சிந்தித்துப் பார்த்தேன்.
1. தனுஷ்கோடி
கம்ப ராமாயணத்தில் ‘’சேது’’ வின் புகழை கம்பன் மிக விரிவாக எடுத்துரைத்துள்ளான். இராம சேனை இலங்கை செல்ல தேர்ந்தெடுத்த வழித்தடம் என்பதால் இந்தியாவின் எல்லா பகுதிகளில் வசிக்கும் மக்களாலும் இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் எழுதப்பட்ட இலக்கியங்களாலும் ‘’சேது’’ வின் புகழை வியந்து சிறப்பிக்கப்படுகிறது.
2. இராமேஸ்வரம்
ஜ்யோதிர்லிங்க தலங்களில் ஒன்று. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பதிகம் பாடப்பெற்ற தலம். இராமேஸ்வரம் ஆலயத்திலும் ஆலயத்தைச் சுற்றி உள்ள தீர்த்தங்களில் தீர்த்தமாடுவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. மதுரை நாயக்க மன்னர்களாலும் ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி அரசர்களாலும் திருப்பணிகள் செய்யப் பெற்ற ஆலயம். ஒவ்வொரு நாளும் இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் ரயில் மார்க்கமாகவும் சாலை மார்க்கமாகவும் லட்சக்கணக்கானோர் வழிபாட்டுக்காக வந்து சேரும் இடம்.
3. திருப்புல்லாணி
முக்கியமான வைணவத் தலம். இராமாயணத்தில் குறிப்பிடப்படும் ஒரு முக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய இடம். அனுமன் தன் ஆற்றலால் கடலைக் கடந்து அன்னை சீதை இருக்குமிடத்தை இலங்கையின் அசோகவனம் என அறிகிறான். வானர சேனைகள் இலங்கை நோக்கிச் செல்ல தயாராய் இருக்கின்றன. திருப்புல்லாணியில் இருக்கும் ராமன் சமுத்திர ராஜனை நோக்கி விண்ணப்பிக்கிறார். போர்ப்பாசறையில் தர்ப்ப சயனத்தில் இருக்கும் ராமன் திருப்புல்லாணியில் வழிபடப்படுகிறார். ஒரு வாரம் ஆகியும் சமுத்திர ராஜனிடமிருந்து எந்த பதிலும் இல்லாததால் திருப்புல்லாணிக்கு அருகில் உள்ள சேதுக்கரையில் சமுத்திரத்தில் சில அடிகள் எடுத்து வைத்து வில்லேந்தி ராம பாணத்தை பிரயோகித்து கடலை வற்றச் செய்கிறேன் என சீற்றம் கொள்கிறார். அந்த தருணம் சமுத்திர ராஜன் வெளிப்பட்டு ராமரை வணங்குகிறான்.
4. மதுரை
தமிழ் நிலத்தின் தொன்மையான முக்கியமான மாநகரங்களில் ஒன்று. மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் பாண்டிய மன்னர்களின் தலைநகர். சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம் ஆகிய வழிபாட்டு முறைகளுக்கு முக்கியமான ஒரு தலம். சமணமும் பௌத்தமும் செழுத்து வளர்ந்திருந்த ஊர்களில் ஒன்று. உலக இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க நூலான சிலப்பதிகாரம் தனது மூன்று காண்டங்களில் ஒன்றாக மதுரைக் காண்டத்தைக் கொண்டுள்ளது. அன்னை மீனாட்சி உலக உயிர்களை அருளாட்சி செய்யும் நகரம். கலை , நுண்கலை என அனைத்திலும் சிறந்தது.
5. அழகர் கோவில்
இந்தியாவின் பெரிய திருவிழாக்களில் ஒன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கள்ளழகர் அழகர் கோவிலிலிருந்து மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்குவதைக் காண ஒட்டு மொத்த தென் தமிழகமும் மதுரை வந்தடையும்.
இந்த கோவிலின் வாயிலில் குடி கொண்டு உள்ள ‘’பதினெட்டாம் படி கருப்பண்ண சாமி’’ தென் தமிழகத்தில் பலரின் குலதெய்வம்.
6. பழனி
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. தமிழ் மக்களால் மிக அதிகமாக மிக வாஞ்சையுடன் வணங்கப்படும் கடவுள் முருகன். இன்றும் முருகன் பெயர் கொண்ட ஒருவரேனும் பெரும்பாலான குடும்பங்களில் இருப்பார்கள்.
7. நெரூர்
பெரும் யோகியும் அத்வைதியுமான சதாசிவ பிரும்மேந்திரர் ஜீவ சமாதி அடைந்த இடம்.
8. காஞ்சி
‘’நகரேஷூ காஞ்சி’’ என சிறப்பித்துச் சொல்லப்படுவது. ‘’அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா துவாரகா’’ ஆகிய ஏழு நகரங்களும் புனித நகரங்கள் என தினமும் இந்தியர்களால் நினைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாள் காலை விழித்தெழும் போதும் இந்த ஏழு புனித நகரங்களின் பெய்ரை சுலோகமாகக் கூறி அவற்றை வணங்கும் வழக்கம் இப்போதும் பல இந்தியர்களால் மேற்கொள்ளப்படுகிறது.
சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம் ஆகியவை செழித்திருக்கும் இடம். பௌத்தமும் சமணமும் சிறப்புற்றிருந்த தலம். கலை, இலக்கியம், நுண்கலை ஆகியவற்றின் உச்சம் நிகழ்ந்த இடம். தறி வேலைப்பாடுகளில் சிறந்த ந்கரம். பட்டுக்குப் பெயர் போனது. சைவக் குரவர்களாலும் ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற தலம்.
9. காளஹஸ்தி
கண்ணப்ப நாயனாருடன் தொடர்புடைய தலம். இறைவனுக்காக கண்ணப்பர் தன் கண்களை அளிக்கத் துணிந்த தலம். சிவபெருமான் வேட்டுவரான கண்ணப்பர் பக்தியுடன் அளித்த மாமிசத்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்ட தலம். தனது பக்தனான கண்ணப்பர் சிவ லிங்கத்தின் கண்களில் ரத்தம் வழிந்த போது அம்பால் தன் ஒரு கண்ணைப் பிடுங்கி லிங்கத்தின் கண்களில் வைக்க லிங்கத்தின் இன்னொரு கண்ணில் மீண்டும் ரத்தம் வருவதைக் கண்டு தனது இன்னொரு கண்ணை அம்பால் பிடுங்கப் போன போது சிவபெருமான் கண்ணப்பரின் இறை பக்தியால் நெகிழ்ந்து ‘’என்னப்ப கண்ணப்ப’’ என கூறிய திருவிளையாடல் நிகழ்ந்த தலம்.
சம்பந்தர், அப்பர், சுந்தரரால் பாடல் பெற்ற தலம்.
பஞ்ச பூத ஷேத்திரங்களில் சிவன் வாயு ரூபமாக விளங்கும் தலம்.
10. திருமலை - திருப்பதி
உலகெங்குமிலிருந்து தினமும் லட்சக்கணக்கானோர் ஸ்ரீநிவாசப் பெருமாளை வழிபட வந்து சேரும் புண்ணியத் திருத்தலம்.
11. ஸ்ரீசைலம்
சைவத்திலும் சாக்தத்திலும் மிக முக்கியமான ஒரு தலம்.
பன்னிரு ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்று.
சம்பந்தர், அப்பர், சுந்தரரால் பதிகம் பெற்ற தலம்.
கன்னட மொழி இலக்கியத்தின் கவிஞரான அக்கமாதேவியார் மல்லிகார்ஜூனரை வணங்கி வழிபட்ட தலம்.
கிருஷ்ண தேவராயராலும் சத்ரபதி சிவாஜியாலும் திருப்பணி செய்யப் பெற்ற தலம்.
12. ஓம்காரேஷ்வர்
பன்னிரு ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்று.
நர்மதை நதியை வலம் வரும் ‘’நர்மதா பரிக்கிரமா’’வை ஓம்காரேஷ்வரிலிருந்து துவங்குவார்கள்.
13. உஜ்ஜைன்
பன்னிரு ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்று.
பகவான் புத்தரின் வாழ்வுடன் தொடர்புடையது.
இந்தியர்கள் தினமும் நினைக்கும் ஏழு புனித நகரங்களான ‘’அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா துவாரகா ‘’ என்ற ஏழு நகரங்களில் அவந்திகா எனக் குறிப்பிடப்படுவது உஜ்ஜைன். மகாகவி காளிதாஸ் உடன் தொடர்புடைய நகரம்.
14. பிரயாக்ராஜ்
கங்கையும் யமுனையும் அந்தர்வாகினியான சரஸ்வதியும் சங்கமிக்கும் இடம். இராமாயணத்தில் மிக முக்கியமான சிறப்பிடம் பெற்றுள்ள நகரம்.
15. காசி
உலகிற்கே ஆன்ம ஒளி அளிக்கும் நகரம். மகாபாரத காலத்திலிருந்து இந்திய இலக்கியங்களில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நகரம். பகவான் புத்தரின் வாழ்வில் முக்கிய இடம் வகிப்பது. இந்தியாவின் ஆன்மீகப் பண்பாட்டுத் தலைநகர். இந்தியாவின் எண்ணற்ற கலைஞர்களுடன் தொடர்புடையது. தமிழ்க் கவி பாரதி கல்வி பயின்ற தலம். துறவியும் தமிழ்ப் புலவருமான ஸ்ரீகுமரகுருபரர் சைவப் பணி மேற்கொண்ட இடம். இந்தியர்கள் புனித நகரமாகக் கருதும் ஏழு நகரங்களில் ஒன்று. சைவத்தின் முக்கிய பிரிவுகளான காளாமுகம் , காபாலிகம் ஆகிய மரபுகள் நீடித்திருக்கும் ஷேத்திரம்.
16. நாகபுரி
மகாபாரத காலத்திலிருந்தே இந்திய இலக்கியங்களில் குறிப்பிடப்படும் நகரம்.
17. அஹோபிலம்
நரசிம்மர் வழிபாட்டில் ஒரு முக்கிய நகரம். மிக முக்கியமான வைணவத் தலம். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம்.
18. நெல்லூர்
ஆந்திரத்தின் கடலோர நகரம்
19. மயிலாப்பூர்
உமையம்மை சிவபெருமானை புன்னை மரத்தடியில் மயில் வடிவில் பூசித்த தலம் என்பது ஐதீகம். சம்பந்தர், அப்பர் , சுந்தரரால் தேவாரப் பதிகம் பெற்ற தலம். ஒவ்வொரு ஆண்டும் அறுபத்து மூன்று நாயன்மார் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும் தலம்.
20. மரக்காணம்
ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சிவாலயம். சிவபெருமான் பூமீஸ்வரர்.
21. திருப்பாதிரிப்புலியூர்
சைவ சமயக் குரவரான திருநாவுக்கரசர் வாழ்வுடன் தொடர்புடைய தலம். சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடல் பெற்ற தலம்
22. பரங்கிப்பேட்டை
ஞானியும் யோகியுமான மகா அவதார் பாபாஜி அவதரித்த திருத்தலம். பாபாஜி சிறு வயதில் சிறுவனாக இருந்த போது வணங்கிய முருகன் கோவில் இப்போதும் உள்ளது. பாபாஜிக்கு ஒரு சிறு கோவில் பாபாஜி பக்தர்களால் எழுப்பப்பட்டுள்ளது.
23. சிதம்பரம்
கலையின் இறைவனான கலையரசன் நடனமிடும் திருத்தலம். பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாயத்துக்கானது. இத்திருக்கோயில் அமைந்துள்ள திருத்தலமே புவியின் மையம் ஆகும். சைவ மரபில் கோவில் என்பது சிதம்பரத்தையே குறிக்கும். நாடெங்கும் உள்ள நடனக் கலைஞர்கள் தில்லையில் கோயில் கொண்டுள்ள கூத்தர்பிரானை வணங்கிச் செல்கிறார்கள்.
24. சீர்காழி
சைவ நாயன்மார்களில் முதன்மையானவரான திருஞானசம்பந்தர் அவதரித்த தலம். பசியால் அழுத குழந்தையான சம்பந்தரின் குரல் கேட்டு உமையம்மை சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்ததாக ஐதீகம். குழந்தை வாயில் பாலருந்தியதின் தடயங்களைக் கண்டு சம்பந்தரின் தந்தை உனக்கு பால் கொடுத்தது யார் என்று கேட்க ‘’தோடுடைய செவியன் விடையேறி தூவெண் மதி சூடி காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்’’ என்னும் தேவாரத்தை சம்பந்தர் சிறு குழந்தையாயிருந்த போது பாடிய தலம். திருமுலைப்பால் விழா இன்றும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
25. வைத்தீஸ்வரன் கோவில்
தமிழ் நாட்டின் எல்லா பிராந்தியங்களிலும் உள்ள மக்களாலும் துதிக்கப்படும் தெய்வம். தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் கைக்குழந்தைகளின் முடி களைதல் சடங்கை வைத்தீஸ்வரன் கோவிலில் தான் நிகழ்த்துகிறார்கள்.
26. திருப்பனந்தாள்
ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்து திருச்சீரலைவாய் முருகப் பெருமான் அருளால் பாடும் திறன் பெற்று தருமபுரத்தில் தன் ஆசானைக் கண்டடைந்து அவரின் ஆக்ஞைக்கு இணங்க காசி சென்று கேதார கட்டத்தில் குமாரசாமி மடம் அமைத்து தமிழ்த் தொண்டும் இறைத் தொண்டும் புரிந்த துறவியும் புலவருமான ஸ்ரீகுமரகுருபரரின் ஸ்ரீகாசி மடம் அமைந்துள்ள இடம் திருப்பனந்தாள்.
27. திருவாவடுதுறை
தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளாக சமயப் பணியும் தமிழ்ப் பணியும் புரியும் திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ள ஊர். இந்தியா சுதந்திரம் பெற்ற போது சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமருக்கு செங்கோல் அளித்த சிறப்பு பெற்ற ஆதீனம் திருவாவடுதுறை ஆதீனம்.
28. தருமபுரம்
தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களுள் ஒன்று. சமயப் பணியும் தமிழ்ப் பணியும் பல நூற்றாண்டுகளுக்கு மேற்கொண்டு வரும் ஆதீனம்.
29. திருவாரூர்
சைவத்திலும் சாக்தத்திலும் மிக முதன்மையான சிறப்பைப் பெற்ற திருத்தலம். கர்நாட்க சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகளுடன் தொடர்புடைய ஊர். ஆரூர் ஆழித்தேர் உலகப் புகழ் வாய்ந்தது.
30. ஆவுடையார்கோவில்
தமிழ் இலக்கியத்தில் திருவாசகம் பெற்றுள்ள இடம் அலாதியானது. திருவாச்கம் பாடிய மாணிக்கவாசகர் தன் ஞானகுருவைக் கண்டடைந்து ஞானம் பெற்ற இடம் ஆவுடையார்கோவில்.
தனுஷ்கோடி அடைதல்.
காசி பாத யாத்திரை திருநிறைவு.
***
இந்த பயண மார்க்கத்தின் முக்கிய அம்சங்கள் :
1. இந்த பயண மார்க்கத்தில் சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம் ஆகிய வழிபாட்டு முறைகளின் திருத்தலங்கள் இடம் பெற்றுள்ளன.
2. இந்தியர்கள் தினமும் நினைத்து வழிபடும் புனித நதிகள் ஏழு. கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, காவேரி, நர்மதா, கோதாவரி ஆகிய நதிகளே அவை. இந்த பயண மார்க்கத்தில் சிந்து நதியைத் தவிர மற்ற அனைத்து நதிகளையும் தரிசிக்க முடியும். மேலும் தென்பெண்ணை, பாலாறு, வைகை, கிருஷ்ணா, துங்கபத்திரா ஆகிய நதிகளையும் தரிசிக்க முடியும்.
3. இந்தியர்கள் தினமும் நினைத்து வழிபடும் புனித நகரங்கள் ஏழில் இந்த பயணச் சுற்று காஞ்சி, அவந்திகா ( உஜ்ஜைன்) , காசி ஆகிய மூன்று நகரங்களைக் கடந்து செல்கிறது.
4. பன்னிரண்டு ஜ்யோதிர்லிங்க தலங்களில் இந்த பயணச் சுற்றில் இராமேஸ்வரம், ஸ்ரீசைலம், ஓம்காரேஷ்வர், உஜ்ஜைன் மற்றும் காசி ஆகிய ஐந்து ஊர்களில் தங்கியிருந்து இறைவனை வழிபட முடியும்.
5. இந்திய யோக மரபின் முக்கியமான குருமார்கள் வாழ்வுடன் தொடர்புடைய பல தலங்கள் இந்த பயணச் சுற்றில் அமைந்துள்ளன. ( சதாசிவ பிரும்மேந்திரர், அக்கமா தேவியார், மகா அவதார் பாபாஜி)
6. சைவ சமயக் குரவர்கள் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடப் பெற்ற பல தலங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. திருவாசகத்துடம் தொடர்புடைய ஆவுடையார் கோவிலும் இதில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் மிக முக்கியமான சைவ ஆதீனங்களான திருவாவடுதுறையும் தருமபுரமும் இந்த பயணச் சுற்றில் உள்ளன. ஸ்ரீகுமரகுருபரர் காசியில் தோற்றுவித்த மடமான ஸ்ரீகுமாரசாமி மடத்தின் கிளையான திருப்பனந்தாள் இந்த பயணச் சுற்றில் உள்ளது.
7. இந்த மார்க்கம் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய இந்திய மாநிலங்களின் வழியே நிகழ்கிறது. தோராயமாக 5750 கி.மீ தொலைவு கொண்டது. காசி நோக்கி செல்லும் போது ஒரு வழியும் காசியிலிருந்து தனுஷ்கோடி திரும்பும் போது வேறொரு வழியும் கொண்டது என்பதால் இதனை ஒரு முழு சுற்றாகக் கருத முடியும்.
*******