Thursday 31 October 2019

மழைப்பயணம்


பூனாவில் வங்கிப் பணியில் சேர உள்ள நண்பனைக் காண்பதற்காக நேற்று சென்னை கிளம்பினேன். இன்றுதான் ஊர் திரும்பினேன். எங்கள் ஊர்க்காரர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. சென்னை எங்களுக்கு ஆறு மணி நேர பயண தூரத்தில் உள்ள ஊர். காலை 5 மணிக்குக் கிளம்பினால் 11 மணிக்கு அங்கு சென்று விடலாம். ஒருநாள் திட்டம் என்றால் காலை புறப்பட்டு வேலைகளை முடித்து விட்டு மாலை கிளம்பி இரவு ஊருக்கு வந்து விடலாம். திருச்செந்தூர்-சென்னை விரைவு ரயில் காலை 5.45க்கு மயிலாடுதுறை வரும். காலை 11.30க்கு எழும்பூரில் சேர்த்து விடும். அதில் சென்னை செல்வது பலவகையிலும் எங்களுக்கு வசதியானது. வேலையை முடித்து விட்டால் மாலை 4 மணிக்கு எழும்பூரில் புறப்படும் சென்னை-திருச்செந்தூர் விரைவு ரயிலைப் பிடித்தால் இரவு 9.15க்கு மயிலாடுதுறை. இரவு உணவுக்கு வீட்டுக்கு வந்து விடலாம்.

இப்போது ரயில் பயணங்களை முன்பதிவு செய்தால் மட்டுமே இலகுவாகப் பயணிக்க முடிகிறது. ஆதலால் திடீர் பயணங்கள் செய்ய பேருந்தே ஒரே வழி. காலை வெண்முரசு வாசித்து விட்டு மெதுவாகக் கிளம்பலாம். நடைப்பயிற்சியும் தடைப்படாது. ஆனால் பெரிய பகலை அங்குலம் அங்குலமாகக் கடந்து செல்ல வேண்டும்.

நேற்று மயிலாடுதுறையில் கிளம்பியதிலிருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் செல்வது வரை மழை. பேருந்தில் கண்ணாடி ஜன்னல். ஆறு மணி நேரமும் கண்ணாடியின் மறுபக்கத்தில் வழிந்து கொண்டிருக்கும் மழையைப் பார்த்த வண்ணமே பயணித்தேன். நல்ல மழை பெய்ததால் சாலையில் மக்கள்  யாரும் இல்லை. சாலையில் இரண்டு சக்கர வாகனங்களும் இல்லை. வயல்களில் மழைநீர் சேறுடன் குழம்பி சிவப்பாய் பொங்கி வடிந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு நல்ல மழை பொழியும் மாநிலம். ஆழ்துளைக் கிணறுகளால் பாசனம் செய்வதை விட வேறு மாற்று வழிகள் குறித்து சிந்திக்கலாம் என இந்த பயணத்தின் போது தோன்றியது. தமிழ்நாடு சாலைகளால் இணைக்கப்பட்டிருப்பது போல தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களின் விவசாய நிலமும் நீர்க்குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டால் விவசாயத்தை இங்கே மிகவும் இலாபகரமான தொழிலாக வளர்த்தெடுக்க முடியும் என்று பட்டது. இஸ்ரேலில் விவசாயிகள் விவசாயத்துக்கு குழாய் மூலம் தண்ணீர் பெற்று அதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்துகின்றனர். எல்லா வயல்களும் அரசின் நீர்க்குழாய்களால் இணைக்கப்பட்டிருக்கும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். தமிழ்நாட்டின் பொருளியல் முகத்தையே வேறொன்றாக மாற்ற முடியும்.

எனது நண்பன் மிகவும் இளையவன். 25 வயது. பெற்றோரால் ஒவ்வொரு கணமும் குழந்தையாகவே எண்ணப்பட்டு அக்கறை செலுத்தப்பட்டவன். ஒரு சில நாட்களைத் தவிர வீட்டைப் பிரிந்து அறியாதவன். அவன் பெற்றோர்களுக்கு நல்ல வேலை கிடைத்திருக்கிறது என ஒருபுறம் மகிழ்ச்சி. மறுபுறம் கண்மணியைப் பிரிய வேண்டுமே என்ற துயர். இந்த சூழ்நிலையில் அவர்களைச்  சந்திப்பது அவர்களுக்கு தைரியம் அளிக்கும் என எண்ணினேன். ஆகவே சென்றேன். மகிழ்ச்சியான மாலை. நான் இரவு புறப்படுவதாக திட்டமிட்டிருந்தேன். ஆனால் காலை தான் செல்ல வேண்டும் என அன்புக்கட்டளையிட்டனர். மீற முடியவில்லை. இரவு  அவர்கள் வீட்டில் தங்கியிருந்து விட்டு காலை சிற்றுண்டி முடித்து பயணம். மாலை வீடு வந்து சேர்ந்தேன்.  

Wednesday 30 October 2019

திருவிழாவில் வாழ்தல்

2020ல் திட்டமிட்டுள்ள 12 மாதங்கள் - 12 திருவிழாக்கள் குறித்து ஜெயமோகன் தளத்தில் வெளியாகியுள்ள குறிப்பு

திருவிழாவில் வாழ்தல்

Tuesday 29 October 2019


மழை வயல்சேறுடன் வடிகிறது
கிராமத்துச் சாலை ஒட்டிக் கிடக்கும் ஆற்றில்
ஈரக்கூரை மேல் புகை
உலையில் கொதிக்கிறது சோறு
கீசு கீசு என்னும் புள் குழு
அணைத்துக் கொள்ள மெல்ல வருகிறது
இரவு
ஆகச் சிறிய இளம் புள்ளின்
அமைதியில்
இந்த உலகம்
அன்பில்
மையம் கொள்கிறது
மீண்டும்

Monday 28 October 2019

பிரிவின் சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க
இடைவெளிக்கான பொருத்தமான சொல் உரைக்க
வேற்று உணர்வைத் துல்லியமாகக் காட்ட
சந்தர்ப்பம்
எப்படியோ வாய்த்து விடுகிறது
பின்
சூழும் மௌனம்
ஏன் அவ்வளவு தவிக்கிறாய்

Sunday 27 October 2019

சில குறிப்புகள்


சென்னைவாசியான ஒரு இளைஞர் எனது நண்பர். சமூகம் குறித்த அவதானம் உடையவர். காந்திய சிந்தனைகள் மீதும் இலக்கிய வாசிப்பின் மீதும் ஆர்வம் கொண்டவர். சென்னைவாசி என்பதால் சாமானியர்களின் அதிகார விருப்பு குறித்தும் சமூகத்தின் அரசியல், கருத்தியல் மற்றும் பொருளியல் அதிகாரத்தின் இயங்குமுறை குறித்தும் அறிந்தவர். அதனை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்.   ஓரிரு ஆண்டுகளுக்கு முன் கட்டிடப் பொறியியலில் பட்டம் பெற்று பின்னர் வங்கித் தேர்வுகள் எழுதினார். அதில் தேர்வாகி இப்போது வங்கி அதிகாரியாக மகாராஷ்டிரா மாநிலம் பூனாவில் இன்னும் சில நாட்களில் பணியில் இணைய இருக்கிறார். இரண்டு நாட்கள் முன்னர் பணியாணை வந்தது. அதனை ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். மகிழ்ச்சியாக இருந்தது.

அவருக்கு 25 வயதாகிறது. முற்றிலும் புதிய இடத்தில் பணியில் இணைகிறார். அது ஒரு நல்ல வாய்ப்பு. நமது நாளை நமக்கு விருப்பமான வடிவத்தில் வகுத்துக் கொள்ள முடியும். அவர் கேட்டுக் கொண்டதின் பேரில், அவருக்கு நான் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளேன்.

1. காலை 5 மணிக்கு எழுவதை பழகிக் கொள்ளவும். கதிர் முளைப்பதற்கு முன் எழுந்து ஒரு மணி நேரம் உலாவுவது என்பது நமக்கு வாழ்க்கை மீதான பிடிப்பையும் நம்பிக்கையையும் பலப்படுத்தும். உடல் இயக்கம் இலகுவாக இருக்கும்.

2. அரைமணி நேரம் யோகப் பயிற்சிகள் செய்யவும். சூர்ய நமஸ்காரம் ஆறு யோகாசனங்கள் ஒரே பயிற்சியில் இணைந்தது. எளிதானது. அதனைச் செய்யவும். பத்து நிமிடம் தியானம் செய்யவும்.

3. குறைந்தது காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் என ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் புத்தகம் வாசிக்கவும். மனதை எப்போதும் இளமையாக வைத்திருக்க சிந்திக்கும் மன அமைப்பு கொண்டவர்களுக்கு அது ஒரு நல்ல வழி.

4. தங்கியிருக்கும் இடத்தின் தரையைத் தினம் தண்ணீர் கொண்டு மெழுகவும். நாம் இருக்கும் இடத்தை நாமே தூய்மைப்படுத்திக் கொள்வது என்பது ஒரு நல்ல பண்பு. நமது மன ஒழுங்கை சீராகப் பராமரிக்கக் கூடியது.

5. பணி நேரத்துக்கு பத்து நிமிடம் முன்னர் எப்போதும் வங்கியில் இருக்கவும். அவசரமாக உதவி தேவைப்படும் யாரோ ஒருவருக்கு உதவி செய்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும். நம் மீது பலர் நம்பிக்கை கொள்வார்கள். நம்பிக்கையை உருவாக்குபவர்கள் தங்கள் பணிகளை எளிதில் செய்து முடிப்பார்கள்.

6. பணியில் இருக்கும் போது, மற்ற விஷயங்கள் அனைத்தையும் மறந்து விடவும். சொந்த விஷயம். குடும்ப விஷயம். பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவும்.

7. பணி முடிந்து வீட்டுக்கு வரும் போது பணியின் சூழலை முற்றிலும் மறந்து விடவும்.

8. மிகக் குறைவான அளவே அலைபேசியையும் இணையத்தையும் பயன்படுத்தவும். ஒரு நாளைக்கு இரண்டுக்கும் சேர்த்து மொத்தமாக அரைமணி நேரம்.

9. இரவு வீட்டுக்கு வந்ததும் ஒருவேளை உணவை நீ தயாரித்து உண்ணவும். சமையல் பழக இது நல்ல சந்தர்ப்பம். சமையல் தெரிந்த ஆண் சுயசார்பை அடைகிறான்.

10. தினமும் நாட்குறிப்பு எழுதவும். நம் அன்றாடத்தை அழகாக்கிக் கொள்ள சலிப்பு நம்மைச் சூழாமல் இருக்க நம் மனதைத் தொகுத்துக் கொள்ள அது உதவும்.

11. இரவு பத்து மணிக்கு உறங்கி விடவும்.

எந்த மாநிலத்தில் பணி புரிகிறோமோ அம்மாநில மக்களின் அன்றாட பழக்கவழக்கங்களை உணவுமுறைகளை மனப்போக்கை மொழியை வழிபாட்டை ஆர்வத்துடன் கவனிக்கவும். அதனைக் கற்கவும். புரிந்து கொள்ளவும். இந்தியப் பண்பாடு இந்தியப் பெருநிலத்தின் பல்வேறு மக்கள் தொகைகளால் பங்களிப்பு வழங்கப்பட்டது. நமது மண் கூட்டுப் பண்பாடு கொண்டது. ஒவ்வொரு பிரதேசத்தின் மேன்மையும் நம் அன்றாடத்துக்கு வழங்கியுள்ள பங்களிப்பை உணர அது ஒரு நல்ல வாய்ப்பு.

ஒரு புதிய நிலத்துக்கு செல்ல உள்ள நண்பனுக்கு வாழ்த்துக்கள்!



நீ
கனிந்தாய்
அன்பின்
இரக்கத்தின்
கருணையின்
மேன்மைகளின்
தூய்மையின்
கனிவு
உன் உயிர்
இந்த உலகத்தில்
ஓயாமல்
பரப்பிக் கொண்டிருந்தது
அமரத்துவத்தை
அன்பின் கனிவில்


நீ
மானுடத்தின்
மகத்துவங்களுக்கு
முகம் அளித்துக் கொண்டிருந்தாய்
உன்  முன்னால்
உணரப்படுகிறது
இனிமையின் முடிவின்மைகள்

எப்படி சொல்வது
இது அரிதினும் அரிதானது என்பதை
ஒவ்வொரு  நாடித்துடிப்பும்
அமிர்தத்தைப் பிரவாகிக்கும் என்பதை
கண் மூடினால்
நூறு நூறு
நிறைநிலவுகள் வெளிச்சமிடும் என்பதை
சிக்கல்களும் முடிச்சுகளும்
இல்லாத
வாழ்க்கை வெளியில்
அலைந்து திரிவதை
வானகம் மண்ணில் தெரிவதை


நீ
பயணிக்கும்
வழித்தடங்களில்
கடந்து செல்கிறேன்
ஸ்தூலமான உலகில்
உன் இருப்பை
எப்படி புரிந்து கொள்வது?
ஒரு சிறு தூரலைப்  போல
அருவிச் சாரலென
உன்
இருப்பின்
ஈரம்
உயிர் கொண்டிருக்கிறது
உன்னைக் குறித்த
எல்லாம்
உயிராகவே பொருள் படுகின்றன
உன் புன்னகைகளும்
உன் உவகைகளும்
மட்டுமேயானதாக
இருக்கிறது
அக உலகங்கள்
இந்த உலகின்
ஒரு துளி
உலகமாவதன் விந்தைக்கு
நாம் என்ன பெயரிடலாம்
*

Saturday 26 October 2019

சீரமைத்தல்

சமீபத்தில் மேஜையை சீராக்குவது எப்படி என்று ஒரு கவிதையை எழுதினேன். கட்டுமானத் தொழிலுக்கு வந்த பின்பு, இரவு ஏழு மணிக்கு மேல் மேஜை முன், நாற்காலியில் அமர்ந்து கணக்கு எழுதுவதுண்டு. கோப்புகளில் ரசீதுகளை கோர்த்து வைப்பதுண்டு. பெரும்பாலும் அங்கே அமர்ந்திருப்பேன். மேஜையில் குறைவான பொருட்கள் மட்டுமே மேலே இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் பலவிதமான பொருட்கள் குவிந்து விடும். கவிதை எழுத என்று ஒரு டைரி வைத்திருக்கிறேன். பெரும்பாலும் லேப்டாப்பில் தான் எழுதுவேன் என்றாலும் எப்போதாவது டைரியில் எழுவதுண்டு. அதனுடன் இன்னொரு டைரியும் இருக்கும். இப்போது கண்ணில் படுவது ரயில்வே கால அட்டவணை. அதன் அடியில் ஜராட் டையமண்ட் எழுதிய புத்தகம். அதன் கீழே தமிழ்ப் புத்தகம் ஒன்று. செல்ஃபோன். இரண்டு செல்ஃபோன் சார்ஜர். அடுத்த வாரம் செல்ல வேண்டிய நண்பர் திருமணத்தின் அழைப்பிதழ். ஒரு பிளாஸ்டிக் டிரே. அதில் சில காகிதங்கள். 

நாளை தீபாவளி. சாமி கும்பிட்டு புத்தாடை அணிந்த பின் மதியம் வரை வீட்டில் தான் இருப்பேன். சற்று முயற்சி செய்து மேஜையை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வரலாம் என இருக்கிறேன். 

இதில் நான் மட்டும் முடிவெடுத்தால் போதாது. மேஜையும் முடிவெடுக்க வேண்டும். பார்க்கலாம்.

சுடர் நாள்


வாழ்க்கை கணந்தோறும் புதியதே. உயிர்த்துடிப்பு அதிரும் புத்தம் புதுத் தன்மையுடனே ஒவ்வொரு நாளும் பிறக்கிறது. நாம் நினைவுகளால் கடந்த  காலத்தைச் சுமக்கிறோம். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற உணர்வுடன் பண்டிகைகளை அணுகும் போது அவை மாற்றத்துக்கான வாய்ப்பாக  அமைகின்றன. உலகம் உயிர்க்குலத்துக்கு வழங்கப்பட்ட  அற்புதப்  பரிசு. உயிர்க்குலம் சகஜமாக வாழும் காலம் மானுட வரலாற்றில் வரும். அதற்கான நம் செயல்களை கைமணலென மேற்கொள்ள  பண்டிகைகள் உதவட்டும்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!


தொலைதூரம்
எல்லாமே உதிர்ந்து விட்டிருக்கிறது
சிறு குன்று
விருட்ச நிழல்
கிராமத்துப் பாதையில்
பின்னால் அமர்ந்திருக்கும் பெண்
கணவன் தோளை
அழுத்தமாகப் பற்றிக் கொள்கிறாள்
துயரம் என்பதுதான் என்ன
காளைகள்
வண்டிக்காரன் அளித்த புல்லைத்
தின்னும் போது
சன்னமாய் ஒலிக்கிறது ஓசை
நாட்கள் நகரும் உலகில்

Friday 25 October 2019


இந்த
பண்டிகைக் கடைத்தெருவில்
நான் தேடுவது
ஒரு முகம்
பார்ப்பது
அம்முகத்தின்
பல்வேறு
சாயல்களை

Thursday 24 October 2019

காத்திருப்பு

சமீபத்தில் எழுதிய ஒரு சிறுகதை சொல்வனம் இதழில் பிரசுரமாகியுள்ளது. அதன் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. வாசிக்க இணைப்பை கிளிக் செய்யவும்.

காத்திருப்பு

தளர்ந்திடும் போதெல்லாம்
நம்பிக்கையான சொற்கள்
உரைப்பாய்
நம்பிக்கையால் மட்டுமே நிறைந்திருக்கிறாய்
மனிதத் துயரங்கள்
முன்
உன் அகம்
ஒரு துளி
கண்ணீரை முன்னிறுத்தியது
தீபங்கள் முன்
ஒளிரும்
உன் சுடர்முகம்
கற்கள் மேகமென
எழுகின்றன
வான் நோக்கி
மாலை அந்திக்குப் பின் இரவு
இரவுக்குப் பின்
ஒவ்வொரு நாளும்
காலை அந்தி வரும் தானே?

Wednesday 23 October 2019


தலை சாய்த்து
மெல்ல கவனம் குவித்து
சில கணங்கள்
இமைக்காது
நோக்கி
நீ
செய்யும் சிறுசெயல்கள்

முதலில்
அவசரமாய்
கண்களில் உருவாகிவிடும்
உன் புன்னகைகள்

பிரதிபலிக்கும்
உன்னைச் சூழ்ந்திருக்கும்
உன் சூழல்

உன் எளிய சொற்கள்

உன் எளிய யோசனைகள்

இந்த உலகம்
உன் கண்மணிக்குள்
அமைதி
கொண்டிருக்கிறதா
என் கண்ணே

பெருமழையும் பேரிடரும்


எனக்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் உண்டு. அப்பணிகளை பல்வேறு முறை ஒருங்கிணைக்கவும் செய்திருக்கிறேன். அதில் இருக்கும் எல்லா அம்சங்கள் குறித்தும் எனக்கு நடைமுறை அறிவு உண்டு. 2015ம் ஆண்டு சென்னையிலும் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் பெருமழை பெய்தது. தலைநகரில் ஆற்றின் கரைகள் உடைப்பெடுத்து வெள்ளம் மாநகரைச் சூழ்ந்தது. சென்னையை அடுத்து கடலூர் மாவட்டமும் பெருமழையின் பாதிப்புக்குள்ளானது. எல்லா நிவாரண உதவிகளும் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் நான் கடலூர் மாவட்டத்தில் இயன்ற பணிகளைப் புரிவது என்று முடிவெடுத்தேன். நிவாரண உதவிகளுக்கான தேவை பெரிய அளவில் இருந்தது. எனினும் நாங்கள் நண்பர்கள் பத்து பேர் இணைந்து ஒரு கிராமத்தின் மக்களுக்கு முடிந்த வரை உதவி செய்வது என்று முடிவு செய்தோம். சராசரியாக ஒரு கிராமத்தில் ஐந்நூறு குடும்பங்கள் வரை இருக்கக் கூடும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் பதினைந்து நாட்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள், போர்வை மற்றும் பாய் ஆகியவற்றை வழங்கினோம். கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் வழங்கினோம். எங்கள் சிறு குழுவுக்கு ஒரு கிராமம் என்பது பொருள் அளவிலும் பணிகளின் அளவிலும் மிகப் பெரிது. எனினும் தெளிவான திட்டமிடுதல் மூலம் பணிகளை மிகத் துல்லியமாக செய்து முடித்தோம்.  நிவாரண உதவிகள் வழங்கிய சில அமைப்புகளுக்கும் நிவாரணம் தேவைப்பட்ட சில கிராமங்களுக்கும் பாலமாகச் செயல்பட்டேன். அதன் மூலம் மேலும் ஐந்து கிராமங்களுக்கு உதவி செய்ய முடிந்தது. நிவாரணப் பணிகளில் ஈடுபடப் போகிறோம் என்ற போது உங்களுக்கு இதற்கு முன்னர் பணியாற்றிய அனுபவம் உண்டா என்று கேட்டனர். இல்லை என்று சொன்னேன். மிகக் கடுமையான பணி; அனுபவம் இல்லாமல் இறங்கினால் அவஸ்தைக்கு ஆளாவீர்கள் என்றார்கள். எதிர்மறையாகவே பலரும் அபிப்ராயம் சொன்னார்கள். ஓர் அணி அமைவதும் அதற்குத் தேவையான பொருள் உதவி கிடைப்பதும் தமிழ்ச் சூழலில் அபூர்வம் என்பதால் நான் பணிக்களத்தை நேரடியாக அணுகுவது என்று முடிவு செய்தேன்.

எனது நண்பர்கள் அணியின் முதல் கூட்டத்தைக் கூட்டினேன். பத்து பேரும் கலந்து கொண்டார்கள். நான் சில எண்ணங்களை முன்வைத்தேன்.

1. ஒரு தாலுக்காவின் சிறு அலகான ஒரு கிராமத்தை எடுத்துக் கொள்வோம். அந்த கிராமத்துக்கு நம்மால் முடிந்ததை முழுமையாகச் செய்வோம் என்று சொன்னேன்.
2. ஒரு கிராமத்துக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வாங்க தேவைப்படும் தொகையை முடிவு செய்து கொண்டோம். அத்தொகையை நன்கொடையாக பெறும் பொறுப்பை பத்து பேரும் பகிர்ந்து கொண்டோம்.
3. நன்கொடை ஒவ்வொருவருக்கும் நேரடியாகத் தெரிந்த நண்பர்களிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ மட்டுமே பெறப்பட வேண்டும். வேறு எவரிடமும் கேட்கக் கூடாது என்று முடிவு செய்தோம்.
4. நன்கொடை திரட்ட நான்கு நாட்கள் அவகாசமே தரப்பட்டது. ஒவ்வொரு நாளும் முற்பகலும் பிற்பகலும் ஒவ்வொருவரும் திரட்டிய தொகை எவ்வளவு என்பதை ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். நன்கொடையளிப்பவர்களின் பெயர் முகவரி தொடர்பு எண் ஆகியவை அணியின் முன் வழங்கப்பட வேண்டும்.
5. நிதி திரட்டல் முடியும் வரை அணி உறுப்பினர்கள் நிவாரணம் தொடர்பாக வேறு எந்த பணியும் ஆற்ற வேண்டியதில்லை. கிராமத்தை அடையாளப்படுத்தும் பணியை தன் பங்கு நிதி திரட்டலுடன் இணைந்து கூடுதலாக ஒருங்கிணைப்பாளர் மேற்கொள்வார்.

திட்டம் உருவான அன்றே நான் எனது வெளியூர் நண்பர்களைத் தொடர்பு கொண்டேன். வெளிநாடுகளில் வசிப்பவர்களையும். எங்கள் திட்டத்தைத் தெரிவித்தேன். என் பங்களிப்பாக நான் உறுதியளித்த நிதி திரட்டலின் தொகையில் ஒரு பகுதியை நன்கொடை அளிப்பதாக உறுதியளித்தனர். என் வங்கிக் கணக்கு விபரத்தைப் பெற்றுக் கொண்டு அதில் தொகையை செலுத்தி விட்டு தகவல் சொல்வதாகக் கூறினார்கள். நானும் ஒரு தொகை அளித்தேன். என்னுடைய நிதி திரட்டல் இரண்டே நாளில் நிறைவு பெற்றது. திட்டம் உருவானதற்கு மறுநாள் நான் சிதம்பரம் சென்றேன்.

அரசு அதிகாரிகளைச் சந்தித்து மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டு கிராமங்களைக் கூறுமாறு கேட்டுக் கொண்டேன். அவர்கள் இரண்டு கிராமங்களைச் சொன்னார்கள். நான் அவற்றை நேரடியாகப் பார்வையிட்டு அவற்றில் ஒன்றை நிவாரணப் பணிகளுக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன். தேர்ந்தெடுத்த கிராமத்தையும் அதில் செய்ய உள்ள பணிகளையும் உங்களிடம் தெரிவித்த பிறகு நிவாரணம் வழங்குகிறோம் என்று உறுதி கொடுத்தேன். அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். அன்று மதியமே புவனகிரி தாலுக்காவில் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தைத் தேர்வு செய்தேன்.

வெள்ள பாதிப்பு என்பது என்ன?
பொதுவாக தமிழ்நாட்டில் ஒரு கிராமம் என்பது 800லிருந்து 1200 பேர் வரை மக்கள் தொகை கொண்டதாக இருக்கும். இது ஒரு சராசரி கிராமம். 2000 பேர் வரை மக்கள்தொகை கொண்ட பெரிய கிராமங்களும் உண்டு. மழை வெள்ள பாதிப்பில் முதன்மையானது என்பது கூரை வீடுகளின் தரை நாட்கணக்கில் ஈரம் காயாமல் சொதசொதத்து விடுவது. அவர்கள் வீட்டில் மண் அடுப்பு தரை ஈரத்தால் ஈரமாகி விடும். அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் விறகும் ஈரமாகி விடும். அவர்களுடைய துணிமணிகள் உடுத்த முடியாத அளவுக்கு ஈரமாகி விடும். வீட்டில் இருக்கும் சொற்ப தானியங்கள் மிகை ஈரத்தால் பயன்படுத்த இயலாததாகி விடும். நான்கு நாட்கள் விடாமல் பெய்யும் மழை ஒரு கிராமத்தின் பாதிக்குப் பாதி மக்களை செயல்பட முடியாதவர்களாக ஆக்கி விடும்.

குழந்தைகளுக்கோ முதியவர்களுக்கோ நோய்த்தொற்றால் காய்ச்சலோ அல்லது வேறு உபாதைகளோ ஏற்பட்டால் நிலைமை சிக்கலாகி விடும்.
கிராமத்தில் இருக்கும் பெரும்பாலான கூரை வீடுகள் 100 சதுர அடி அளவே பரப்பு கொண்டவை. நான் அந்த கிராமத்தின் ஒவ்வொரு தெருவாக ஒவ்வொரு வீடாகச் சென்று பார்த்தேன். அதனால் அங்கேயிருக்கும் பலருடன் அறிமுகமாகிக் கொண்டேன். அவர்களின் சிக்கல் என்னென்ன என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டேன். உங்களுக்கு என்ன உதவிகள் வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் இப்போது நினைத்தாலும் சிலிர்க்கச் செய்கிறது. அவர்கள் கூறினர்: ‘’நீங்கள் எங்கோ ஓர் ஊரிலிருந்து நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்து எங்களுக்கு உதவ வந்துள்ளீர்கள். நீங்கள் வந்ததே பெரிய ஆறுதல். உங்களால் என்ன முடியுமோ அதை மட்டும் செய்யுங்கள்’’. ஒருவர் கூட இன்னது வேண்டும் என்று கேட்கவில்லை.

நான் ஊர் திரும்பி அணி நண்பர்களைக் கூட்டி புவனகிரி தாலுக்காவில் மேற்கொண்ட பூர்வாங்க பணிகளை விளக்கினேன். நாங்கள் எதிர்பார்த்த நன்கொடை திரண்டு கொண்டிருந்தது. இன்னும் சொற்ப தொகையே வந்து சேராமல் இருந்தது. நாங்கள் நிர்ணயித்த இலக்கு முழுவதும் திரளும் வரை காத்திருந்தோம். முழுதும் திரண்ட பின் அடுத்த பணியை மேற்கொண்டோம்.

ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் கிராம நிர்வாக அதிகாரி தெரிவித்த விபரங்கள் அடிப்படையிலும் உள்ளூர் பிரமுகர்களின் கோரிக்கையின் படியும் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாங்கள் பத்து கிலா அரிசி, மளிகைப் பொருட்கள், எண்ணெய், பாய், போர்வை, வேட்டி, புடவை மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் ஆகியவற்றை ஒரு சிப்பமாக முறையாகக் கட்டி ஒரு வாகனத்தில் ஏற்றிக் கொண்டோம். இதனால் மக்களை கிராமத்தில் இருந்த கோயில் வாசலில் திரளச் சொல்லி ரேஷன் கார்டு அடிப்படையில் பெயர் சொல்லி அழைத்து சிப்பங்களைக் கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டோம். அவ்வாறே செய்தோம். பணியில் என்னென்ன முன்னேற்றங்கள் என்பதை அவ்வப்போது அதிகாரிகளுக்குத் தெரிவித்துக் கொண்டிருந்ததால் அதிகாரிகள் நல்ல பழக்கத்திலிருந்தனர். மாவட்ட அதிகாரிகள் சிலர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அவர்களைக் கொண்டே சிப்பங்களை கொடுக்கச் செய்தோம். ஒரு கிராமம் முழுமைக்குமான பணி இரண்டு மணி நேரத்தில் முடிந்தது. ஊர் திரும்பும் போது ஒரு விஷயத்தை சரியாகச் செய்தோம் என்ற நிறைவு இருந்தது.

அடுத்த சில நாட்களில், எங்கள் பணி குறித்து கேள்விப்பட்ட சில அமைப்புகள் எங்களைத் தொடர்பு கொண்டன. அவர்களுக்கு நாங்கள் செயலாற்றிய பாணியிலேயே பணியை ஒருங்கிணைத்து மேலும் ஐந்து கிராமங்களுக்கு உதவி செய்தோம்.        

அமுதம் பொழியும்
குளிர்ந்த
மென்மையான
இதமளிக்கும்
உன்னுடைய காட்சி வெளியில்
ரொம்ப நாட்களுக்குப் பின்
துளிர்த்தது
ஒரு மரம்
அலர்ந்தது அன்றைய மலர்
அப் பொழுதின்
அந்தியில் உதித்த வான்நிலவு
நுரையை விலகிய கடல்
பின்னும் முன்னும்
வருகிறது
அலை ஆடிப் பிரதிபலிக்கும்
வெளிச்சம்
நகரும்
காற்றில் அதிர்கிறது
உலோக மணி
ஓசையால் புன்னகைத்து
இமைக்கிறாய்
இதோ
ஒரு புதிய பிரபஞ்சம்

Tuesday 22 October 2019

தூய்மையும் பயணமும்

சென்னை கோயம்பேடிலிருந்து தமிழ்நாட்டின் எல்லா முக்கிய ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் மற்றும் ஆண்கள். நான்கு மணி நேரப் பயணத்தில் இருக்கும் ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் கூட பயணத்தின் இடையில் ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் எங்காவது நின்று செல்கின்றன. தமிழ்நாட்டுக்குள் சென்னையிலிருந்து அதிகபட்சம் பதினாறு மணி நேரம் பயணிக்கும் பேருந்துகள் கூட இருக்கின்றன. சுகாதாரமான கழிவறைகள் பேருந்து நிற்கும் இடங்களில் எங்குமே இருப்பதில்லை. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் சந்திக்கும் இடர் இது. தேசிய நெடுஞ்சாலைகளிலும் மாநில நெடுஞ்சாலைகளிலும் ஒவ்வொரு எண்பது கிலோமீட்டருக்கும் தமிழ்நாட்டில் ‘’ஸ்வச் பாரத்’’ திட்டத்தின் கீழ் ’’டாய்லெட் ஸோன்’’களை வடிவமைக்கலாம். அங்கே கட்டப்படும் டாய்லெட்களில் பயன்படுத்தப்படும் நீர் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும் விதத்தில் அமைக்கலாம். அப்பகுதியில் வேறு எந்த வணிக நடவடிக்கையும் இருக்கக் கூடாது. பயணத்தின் இடையில் நிற்கும் எல்லா பேருந்துகளும் இந்த ‘’டாய்லெட் ஸோன்’’களில் நின்று செல்ல வேண்டும் என்பதை கட்டாயமாக்கலாம். அவற்றின் பராமரிப்பைத் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கலாம். இந்தியாவில் தமிழ்நாடு மிக அதிக போக்குவரத்து வசதி கொண்ட மாநிலம். பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட அளவுக்கு பயணிகளுக்கு குறைந்த பட்ச வசதிகள் கூட கடந்த ஐம்பது ஆண்டுகளில் செய்து தரப் பட்டதில்லை. பேருந்து நிலையங்கள் நகராட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் வரும். அங்கு எந்த அடிப்படை வசதிகளும் முறையாக இருக்காது. 

மத்திய அரசு பெட்ரோல் நிலையங்கள் அங்கே வரும் நுகர்வோருக்கு முறையான டாய்லெட் வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பதை வற்புறுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளில் பெட்ரோல் நிலையங்களில் டாய்லெட்கள் சுகாதாரத்துடன் பராமரிக்கப்படத் துவங்கியுள்ளன. காரில் பயணிப்பவர்களுக்கு இது உபயோகமானது. 

‘’ஸ்வச் பாரத்’’ திட்டம் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளிலும் மாநில நெடுஞ்சாலைகளிலும் ‘’டாய்லெட் ஸோன்’’கள் கட்டப்பட்டு அவை தனியாரால் நிர்வகிக்கப்பட்டு சுகாதாரமான சேவையை அளிக்குமெனில் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களுக்கு தினமும் பயன்படும் விஷயமாக அது இருக்கும். மேலை நாடுகளும் அமெரிக்காவும் தங்கள் சாலைகளில் இவ்வாறான ‘’டாய்லெட் ஸோன்’’களை உருவாக்கியுள்ளன.

இங்கும் அங்கும்


பெரும்பாலான நண்பர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் பயில்கிறார்கள். வருடத்துக்கு ஒரு முறை ஒரு மாதமோ அல்லது நாற்பது நாட்களோ ஊருக்கு வருகிறார்கள். அவர்களால் அமெரிக்காவை இழக்க முடியாது. எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை அமெரிக்காவைப் பற்றி சொன்னார்: ’’மீள முடியாத கடன் சொர்க்கம்’’ என்று . அமெரிக்கா அவர்களுக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறது. உலகின் பல்வேறு நாட்டு மக்களுடன் இணைந்து வாழும் சமூக அமைப்பும் அவர்களுடன் இணைந்து பணிபுரியும் பணிச்சூழலும் துல்லியமான சமூக ஒழுங்குகளும் தடையற்ற நல்ல வசதி வாய்ப்புகளும் அவர்களை அங்கேயே இருக்க வைக்கிறது. அமெரிக்காவை விரும்ப வைக்கிறது. ஆனால் அவர்கள் வெளியே பகிர்ந்து கொள்ள இயலாத ஒரு இடர் அவர்களுக்கு எப்போதும் உண்டு. எப்படி ஒரு வெளிநாட்டின் பண்பாட்டை குழந்தைகளுக்குக் கொடுப்பது என்பது. அங்கிருந்து வந்து விட வேண்டும் என்ற விருப்பம் ஒருபுறமும் இங்கே வந்தால் அங்கே வாங்கிய ஊதியத்தினை இங்கே பெற முடியாது என்ற யதார்த்தம் இன்னொரு புறமும் அவர்களை ஊசலாட வைக்கிறது. நான் அங்கே பயிலும் குழந்தைகளின் கல்வி எப்படி இருக்கிறது என்று பார்ப்பேன். துவக்கக் கல்வி பயிலும் குழந்தைகள் நல்ல மொழியறிவுடனும் நல்ல உரையாடல் திறனும் பெற்றிருப்பதைக் கண்டு மகிழ்வேன். எல்லா குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வியில் புத்தக வாசிப்பு கட்டாயம் என்பதால் எனக்கு அமெரிக்கக் கல்விமுறை திருப்தியளிக்கும் ஒன்றே. குழந்தைகளுக்கு பேச்சு மொழியாக ஆங்கிலமே இருக்கிறது. தமிழ் பேசினால் புரிந்து கொள்கிறார்கள். அவர்களால் தமிழ் பேச முடிவதில்லை. பெரும்பாலும் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். குழந்தைகளுடன் இருக்கும் நேரமே குறைவு. பேசும் நேரம் அதை விடக் குறைவு. மானசீகமாக குழந்தை தமிழ் பேசுவதில்லை என்பதே அவர்களை  தளரச்  செய்கிறது. மேலைப் பண்பாட்டின் வசதிகளை அனுபவித்தாலும் அதனை முழுமையாக ஏற்க முடியாத நிலை. மௌனமாக நிகழும் இனப்பாகுபாடு உருவாக்கும் நெருக்கடி.

நான் எப்போதுமே வகுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி யோசிப்பவன். காந்தி வாழ்நாளில் கால்வாசி வெளிநாட்டில் வசித்தவர்தான். அவருடைய குழந்தைகளை அவர் தென்னாஃப்ரிக்காவிலேயே படிக்க வைத்தார். எல்லா சமயங்கள் குறித்தும் எல்லா பண்பாடு குறித்தும் அடிப்படையான வாழ்க்கைக்கல்வி குறித்தும் அவரது குழந்தைகளுக்கும் அங்கே இருந்த இந்திய ஐரோப்பிய குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்தார். சிந்திப்பவர்களுக்கு உலகமே தாய்நாடுதான். எந்த நாட்டிலும் எவ்விதமான கெடுபிடியான சட்ட திட்டங்கள் உள்ள நாட்டிலும் கூட வெவ்வேறு மக்கள் தங்கள் நம்பிக்கைகளை தக்க வைத்துக் கொண்டே வாழ்கின்றனர். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் பொருளியல் சுதந்திரம் மூலம் தங்கள் தாய்நாட்டின் சாரமான பண்பாட்டு விஷயங்களை கற்றுக் கொடுக்கும் ஓர் இயங்குமுறை கொண்ட கல்வித்திட்டத்தை உருவாக்க முடியும். அது அங்கே மட்டும் பயன்படுவதோடு மட்டுமில்லாமல் இங்கேயும் மாற்றத்தை உண்டாக்கும். இங்கே இருப்பவர்களுக்கு வெளிநாடுகளில் இருக்கும் தமிழ் மற்றும் இந்தியக் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் வாய்ப்பால் வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

இன்றும் அமெரிக்காவில் சீக்கியர்களும் குஜராத்திகளும் தங்கள் தனித்தன்மையுடனே வாழ்கின்றனர். எனது நண்பர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்ததால் அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ளன. எனினும் அவர்களின் பதின் வயதுக்கு முன்னால் தமிழ்நாட்டுக்கு வந்து விட வேண்டும் என்கின்றனர் அவர்களின் பெற்றோர்.

குழந்தைகளுக்கு எவ்விதம் கல்வி அளிப்பது என்பது தமிழர்களுக்கு முற்றும் புரியாத விஷயமாகவே இன்னும் இருக்கிறது.   

Monday 21 October 2019

அதிகாரப் பரவலாக்கல்


சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். எனக்கான ரயிலுக்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. நான் முன்பதிவு செய்திருந்தேன். பயணச்சீட்டு அலுவலகத்தைக் கடந்து  நடைமேடையில்  நுழைந்த போது  ஒவ்வொரு  வினியோக சாளரத்தின் முன்னும் நூறு  பேர் பயணச்சீட்டு வாங்க  நின்று கொண்டிருந்தனர். மிக நீளமான வரிசை. ஆண்கள். பெண்கள். மூத்த குடிமக்கள். எல்லார் கையிலும்  ஸ்மார்ட் ஃபோன். கியூவில் நின்றவாறு ஃபோனை தோண்டிக் கொண்டிருந்தனர். ஸ்மார்ட் ஃபோன் இருக்கையில் அவர்கள் கியூவில் நிற்க வேண்டிய அவசியமேயில்லை. இந்திய ரயில்வேயின் செயலி மூலம் சில வினாடிகளில் டிக்கெட் பெற்று விடலாம். ஸ்மார்ட் ஃபோன் மக்கள் மிக விரும்பி வாங்கி சேகரித்து விட்டனர். அதை எவ்வாறு ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்திக் கொள்வது என்பதை இன்னும் எத்தனை காலம் கழித்து எல்லாரும் அறிவார்கள்? என்னுடைய அபிப்ராயம் அத்யாவசியமான சேவைகள் இணையக் கட்டணத்தில் சகாயமான விலையிலும் பொழுதுபோக்கு கேளிக்கைகளுக்கு இணையம் பயன்படுத்தப்படும் போது கட்டணம் மிகையாகவும் வசூலிக்கப்பட வேண்டும்.

நான் வீட்டில் இருந்தேன். ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த எனது நண்பர் ஒருவர் அலைபேசியில் கூப்பிட்டார். அவர் பயணித்த பெட்டியில் ஒரு தகராறு. என்ன செய்வது என்று என்னிடம் கேட்டார். உங்கள் கையில் பயணச்சீட்டு இருக்கிறதா அல்லது இ-டிக்கெட் வைத்துள்ளீர்களா என்று கேட்டேன். பயணச்சீட்டு உள்ளது என்றார். அதன் பின்பக்கத்தில் ரயில்வே காவல்துறையின் தொடர்பு எண் இருக்கும்; அதற்கு ஃபோன் செய்து வண்டியின் பெயரையும் பெட்டி எண்ணையும் விபரத்தையும் சொல்லுங்கள் என்றேன். பத்து நிமிடம் கழித்து ஃபோன் வந்தது. போலிஸ் வந்து இடர் உருவாக்கிய நபர்களை வெளியேற்றினார்கள் என்றார். மாற்றம் நடக்கிறது. மாற்றம் நடப்பது குறித்த விழிப்புணர்வை மக்கள் போதுமான அளவு உருவாக்கிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

இந்தியாவில் இப்போது எல்லா பெட்ரோல் நிலையங்களிலும் கழிவறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது. ஏதாவது பெட்ரோல் நிலையத்தில் கழிவறையைப் பயன்படுத்தினால் அந்த பெட்ரோல் நிலையத்தின் எண்ணைய் நிறுவனத்துக்கு நாம் ஒரு குறுஞ்செய்தி மூலம் அவை சுகாதாரமாக இருந்தன என்றால் ஆம் என்றும் அவ்வாறு இல்லாமல் இருந்தால் இல்லை என்றும் செய்தி அனுப்பலாம். பராமரிப்பு சரியில்லை என்றால் எண்ணெய் நிறுவனம் சரி செய்ய ஆவன செய்கிறது.

இன்று காலை ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு வாகனத்தில் பெட்ரோல் நிரப்பச் சென்றேன். அங்கே எஞ்சின் ஆயிலை ஒரு மோட்டார் மூலம் சில நிமிடங்களில் மாற்றி புதிய எஞ்சின் ஆயில் ஊற்றுகின்றனர். அவ்வாறு மாற்றுபவர்களுக்கு ரூ. 50க்கு போனஸ் பெட்ரோல் வழங்குகின்றனர். மேலும் எஞ்சின் ஆயில் விலையில் அதிர்ஷ்டத் தள்ளுபடியும் உண்டு. எனக்கு ரூ.50 அதிர்ஷ்டத் தள்ளுபடி கிடைத்தது. எஞ்சின் ஆயில் விலை ரூ. 300. எனக்கு இன்று ரூ.200க்கு கிடைத்தது.

முதல் முறை

நேற்று வெளியிட்ட ‘’ஓர் உரையாடல்’’ வாசித்து விட்டு சில நண்பர்கள் அழைத்தனர். தமிழ்நாடு சந்தித்த பஞ்சத்தில் இறந்து போனவர்கள் எண்ணிக்கை ஐம்பது லட்சம் என்பது  அதிர்ச்சியளித்ததாகவும்  இத்தகவலை முதல் முறையாக கேள்விப்படுவதாகவும் கூறினர். ஏன் இதைப் பற்றி எங்குமே பேசப்படுவதில்லை என வினவினர். பிரிட்டிஷ் அரசாங்கம் நினைத்திருந்தால் இதைக் கட்டுப்படுத்தியிருக்க முடியாதா  என்று கேள்வி எழுப்பினர்.  நான் எனது அவதானங்களாக சிலவற்றை முன்வைக்கிறேன். 

1. இந்தியா விவசாய நாடு. இன்றும் இந்தியா விவசாய நாடே. கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையாக விவசாயமே இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் இந்தியாவில் இருந்த அரசுகள் வரியை தானியமாகவே வாங்கின. அரசின் மிகப் பெரிய வருவாய் தானியங்களே. வணிகர்களிடம் வசூலிக்கப்பட்ட சுங்கமே தன வருவாயாக இருந்திருக்கிறது. தானியமாக வரி வசூலிக்கப்பட்டதால் விளைச்சலுக்கு ஏற்றார் போல வரிவசூல் செய்து கொள்ளும் நெகிழ்வான போக்கு இருந்திருக்கிறது. அரசாங்கங்கள் ஆங்காங்கே தானியங்களை சேமித்து வைத்தனர் அல்லது தங்கள் ஊழியர்களுக்கும், போர் வீரர்களுக்கும் அரசால் ஆதரிக்கப்படுபவர்களுக்கும் ஊதியமாக தானிய மூட்டைகளை வழங்கியுள்ளனர். ஆதலால் பகிர்வு இயல்பாக  இருந்திருக்கிறது.

2. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவெங்கும் பெரும்பாலும் நிலவிய இந்த முறையை தங்கள் நிலவரி முறை மூலம் மாற்றியமைக்கின்றனர். எல்லா கிராமங்களிலும் நிலம் அளக்கப்பட்டு நிலவரி பணமாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்திய கிராமங்கள் தானிய பண்ட மாற்று முறையில் இயங்கிய பழக்கம் கொண்டவை. அவர்களால் நிலவரியை பணமாக செலுத்தும் முறைக்குள் தங்களைப் பொருத்திக் கொள்ள முடியவில்லை. விவசாயம் நஷ்டமடையத் துவங்குகிறது.பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வரிவருவாயில் பெரும்பான்மையான பங்களிப்பு நிலவரி மூலமே கிடைக்கப் பெற்றது. கிட்டத்தட்ட 80 சதவீத வருமானம்.

3. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், பொருளியல் அறிஞர்  தாமோதர் தர்மானந்த கோசாம்பி விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் வரி தானியமாக பெறப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கிறார்.

4. தமிழ்நாட்டில் பஞ்சம் வந்த போது இந்தியாவிலிருந்து உணவு தானியங்கள் பிரிட்டிஷாரால் ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. 

5. பஞ்சம் தமிழ்ச்  சமூகத்தில் வறுமையைக் கொண்டு வந்தது. வறுமை சுகாதாரமற்ற சூழலை உருவாக்கியது. சுகாதாரமற்ற சூழலால் நோய்கள் உருவானது. நோய்கள் தனி மனித சராசரி ஆயுளைக் குறைத்தன. சமூகத்தில் எப்போதும் அச்சமும் பதட்டமும் நிலவியது. சமூக ஒருங்கிணைப்பு சாத்தியமில்லாமல் போனது. 

Sunday 20 October 2019

ஓர் உரையாடல்

நேற்று மதுரை சென்றிருந்தேன். அதிகாலை 4 மணிக்கு ரயில். அந்த்யோதயா. முற்றிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள். இரண்டாயிரம் பயணிகள் பயணிக்க முடியும். அதிவேக விரைவு வண்டி. எக்ஸ்பிரஸ் கட்டணத்தில். காலையிலேயே கிளம்பிச் சென்றேன். ரயில் வரும் நேரத்துக்கு ஐந்து நிமிடம் முன்பாக ரயில் நிலைய வாசலில் இருந்தேன். டிக்கெட் எடுத்துக் கொண்டு உரிய நடைமேடைக்குள் செல்வதற்குள் ரயிலைத் தவற விட்டு விடுவேனோ என்று தோன்றியது. மதுரை செல்லும் இன்னொரு ரயில் அடுத்த அரைமணி நேரத்தில் இருந்தது.  நான் எப்போதும் ரயில் நேரத்துக்கு முப்பது நிமிடம் முன்பு நிலையத்துக்கு வந்து விடுவேன். நேற்று தாமதம். ரயிலும் பத்து நிமிடம் தாமதம் என்பதால் அல்லலின்றி ரயிலைப் பிடித்தேன். அகல ரயில்பாதை வந்த பின் பயண நேரம் கணிசமாகக் குறைந்துள்ளது. திருச்சி செல்ல முன்பு மூன்று மணி நேரம் ஆகும். இப்போது இரண்டே கால் மணி நேரத்தில் திருச்சி செல்ல முடிகிறது. சமயத்தில் இரண்டு மணி நேரத்தில் கூட.

கும்பகோணத்தில் திருநெல்வேலி செல்லும் ஒரு குடும்பம் ரயிலேறியது. அக்குடும்பத்தில் இரு குழந்தைகள். பெண் குழந்தைக்கு பத்து வயது. சிறுவனுக்கு எட்டு வயது. குடும்பத்தலைவர் மாநில அரசு ஊழியர். அவர் மனைவி பள்ளி ஆசிரியை. என் இருக்கைக்கு எதிரில் அமர்ந்திருந்தனர். வண்டி சுவாமிமலையைத் தாண்டி சென்று கொண்டிருந்த போது ரயில்வே ஒப்பந்தப் பணியாளர்கள் பெட்டியில் ஏதேனும் குப்பை இருக்கிறதா என சோதித்து தூய்மை செய்ய சிறு குப்பைக் கூடையுடன் வந்திருந்தனர். 

‘’இந்த அஞ்சு வருஷத்துல ரயில் பெட்டியெல்லாம் முன்ன இருந்ததுக்கு இப்ப சுத்தமாதான் சார் இருக்கு’’ .நண்பர் உரையாடலைத் தொடக்கினார்.

‘’நீங்க அடிக்கடி ரயில்ல போறீங்களோ’’ அவர் அனுபவத்தை இன்னும் விரிவாகக் கேட்டுக் கொள்ளலாம் என நினைத்தேன்.

‘’ஆமாம் சார்! பதினைஞ்சு நாளைக்கு ஒரு தடவை ஊருக்கு போய்ட்டு வருவன். டிரெயின்ல தான் சார் போறது வறது’’

‘’அப்படியா. ஊர்ல யார் இருக்கா.’’

‘’அப்பா அம்மா அங்கதான் இருக்காங்க. கொஞ்சம் நிலம் இருக்கு. அதில விவசாயம் உண்டு. ரயில்வே ஸ்டேஷன் கூட சுத்தமாத்தான் இருக்கு. எப்போதும் ஒர்க்கர்ஸ் கிளீன் செஞ்சுகிட்டே இருக்காங்க. சுத்தமா இருக்கற இடத்துல இருக்கும் போது நம்ம மனசு நிம்மதியா ஃபீல் பண்ணுது சார். வாழ்க்கை மேலயே ஒரு நம்பிக்கை வருது.’’

‘’பப்ளிக் ஒத்துழைச்சா இன்னும் நல்லா இருக்கும்."

"ஏன் சார் நம்ம நாட்ல பப்ளிக் பொது இடங்களை சுத்தமா வச்சுக்கணும்னு நினைக்க மாட்டங்கறாங்க.’’

‘’அதுக்கு பல காரணங்கள். நான் என்ன நினைக்கறன்னா நம்ம தமிழ் சமூகத்தோட எல்லா சிக்கலும் அடிப்படையா ஒரு விஷயத்துல இருந்து துவங்குது. பத்தொன்பதாம் நூற்றாண்டுல தமிழ்நாட்ட ஒரு கொடுமையான பஞ்சம் தாக்குச்சு. அந்த பஞ்சத்துல தமிழ்நாட்டு மக்கள் ஐம்பது லட்சம் பேர் செத்து போயிருக்காங்க. பஞ்சம் வந்தா நிகழற சாவு அதிகபட்சம் ஒரு மாசத்துல நடக்கும். ஒரு சில மாசத்துல இத்தனை பேர் சாகறதுங்கறது எந்த சமூகத்தையும் ஆழமா பாதிச்சுடும்.’’

‘’நீங்க சொல்ற இந்த விஷயத்தை இப்ப தான் சார் முதல்ல கேள்விப்படறன்’’

‘’இதப் பத்தி பல புக்ஸ் எழுதப்பட்டிருக்கு. பிரிட்டிஷ் ரெகார்ட்ஸ் துல்லியமா பஞ்சத்துல செத்துப் போனவங்க குறித்து சொல்லியிருக்கு.’’

ரயில் தஞ்சாவூர் வந்து சேர்ந்திருந்தது. வானம் மழைமேகங்களுடன்  மெல்ல விடிந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே விடியலின் வெளிறிய சிவப்பு. யாரும் ஏறவில்லை. சிலர் இறங்கிச் சென்றனர்.

‘’யோசிச்சுப் பாருங்க. 1915-20ல பாரதி, ‘முப்பது கோடி முகமுடையாள்னு’ இந்தியாவோட மக்கள்தொகையை முப்பது கோடின்னு சொல்றார். அப்ப தமிழ்நாட்டு மக்கள் தொகை ஒரு கோடி இல்லன்னா ஒன்னே கால் கோடியா இருந்துருக்கும். அதில ஐம்பது லட்சம் பேர் செத்துப் போறதுன்னா அதை கற்பனை பண்ணிப் பாருங்க.’’

அவரால் கற்பனை செய்து கொள்ள முடியவில்லை அவரது முகபாவத்தில் தெரிந்தது.

’’தமிழ்நாட்டோட பாதி ஊர்ல ஒருத்தர் கூட உயிரோட இல்லாம எல்லாருமே எல்லாருமே செத்து போய் ஊர் முழுக்க பிணமா கிடந்தா எப்படியிருக்கும். ஐம்பது லட்சம் பேர் சாகறதுன்ணா அதான் அர்த்தம்’’

அவர் சற்றே பாதிக்கப்பட்டார். அவரது மனைவியும் தீவிரமான அதிர்ச்சிக்கு உள்ளானார். அந்த பெண் குழந்தை ஏதோ சரியில்லை என உணர்ந்தது. அந்த சிறுவனின் உலகம் ரயிலுக்கு வெளியே ஓடிக் கொண்டிருந்த மரங்களில் இருந்தது.

ரயில் பூதலூரைத் தாண்டியதும், ‘’சார் அதுக்கும் நீங்க சொல்ற விஷயத்துக்கும் என்ன சம்மந்தம்?’’ என்றார்.

‘’அதாவது, இப்படி ஒரு கொடுமையான பஞ்சம் வந்த பிற்பாடு நம்ம தமிழ் பியூபிள் வாழ்க்கையில எப்ப வேணாலும் ஒரு பஞ்சம் வந்து குடும்பத்துல எல்லாரும் செத்து போயிடுவோம்னு பயப்பட ஆரம்பிச்சுட்டாங்க. அதனால அவங்க எது மேலயும் நம்பிக்கை இல்லாம ஆய்ட்டாங்க. பக்கத்துல இருக்கற மனுஷனை - அவன் பக்கத்து வீட்டுக்காரனா இருந்தாலும், தெரிஞ்சவனா இருந்தாலும், சொந்தக்காரனா இருந்தாலும், ஊர்க்காரனா இருந்தாலும்  -  நம்பாம போய்ட்டாங்க. கூட இருக்கறவங்க மேல பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும் இல்லாததால இவங்களால ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் உருவாக்கிக் கொள்ள முடியலை. அதனால தனித்தனியா ஆயிட்டாங்க. தமிழ் சமூகத்துக்கு இந்த சிக்கல் ரெண்டு நூற்றாண்டா இருக்கு. அப்பப்ப மெல்லிசா இருக்கு. பல சமயம் அடர்த்தியா இருக்கு. தன்னோட குடும்பம்ங்கறத தாண்டி அவங்களால வேற எதையும் யோசிக்க முடியலை. ஊழல் பண்ற அரசியல்வாதி குடும்பத்துக்காக செய்யறோம்னு நியாயம் கற்பிச்சுக்கிறான். ஊழல் பண்ற அதிகாரிக்கும் குடும்பத்துக்காக செய்றோம்னு நினைக்கறதால தப்பு செய்றோம்ங்கற குற்ற உணர்ச்சி இல்லை. எல்லா தப்பும் தீமையும் பஞ்சம்ங்கற பயத்துல இருந்து தான் ஆரம்பிக்குது. பாரதி பாட்டு ஒண்ணு கேட்டிருப்பீங்க. ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் பஞ்சமோ பஞ்சம் என்று தினம் பரிதவிப்பார் நெஞ்சம் துடிதுடிப்பார்னு’’

பள்ளி ஆசிரியை அந்த பாரதியார் பாடலைக் கேட்டிருந்தார். ‘’இந்த பாட்டுக்குப் பின்னால இப்படி ஒரு காரணம் இருக்குன்னு நீங்க சொல்லி தான் தெரியுது. இந்த விஷயம்லாம் ஏன் சார் நம்ம பள்ளிக்கூட சிலபஸ்ல இல்ல’’

‘’தமிழ்நாட்டுல திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவங்க தமிழ்நாட்டுல பஞ்சம் வந்தப்ப ஐம்பது லட்சம் பேர் செத்ததப்ப அதை வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்த  பிரிட்டிஷ்காரங்களை பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரிச்சவங்க. காந்தியோட காங்கிரஸை எதிர்த்து அரசியல் செஞ்சவங்க. பிரிட்டிஷ்காரனுக்கு மட்டுமே நம்மை ஆள்ற தகுதி இருக்குன்னு சொன்னவங்க. பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு வெளியே போகக் கூடாதுன்னு தீர்மானம்  போட்டவங்க. இந்திய சுதந்திரத்துக்குப் பின்னாலயும் ’அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு’ன்னு சொன்னவங்க. இவங்களா சமூகம் மாறணும்னு நினைக்கப் போறாங்க. இவங்களா நம்ம குழந்தைகளுக்கு உண்மையான வரலாறு தெரியணும்னு நினைக்கப் போறாங்க.’’

கனத்த மௌனம் நிலவியது. உண்மை சங்கடங்களை உண்டாக்கும். அது தவிர்க்க  இயலாதது.

’’சார்! 1967ல காங்கிரஸ் அரசாங்கம் தமிழ்நாட்டு மக்கள பஞ்சத்துல சாக விட்டுறுவாங்க; நாங்க ஆட்சிக்கு வந்தா ரூபாய்க்கு மூணு படி அரிசின்னு சொல்லி ஓட்டு கேட்டுதான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது.’’ அரசு ஊழியர் துயரத்துடன் சொன்னார்.

அவர் வரலாற்றின் ஒரு கீற்றைப் புரிந்து கொள்ளத் துவங்கி விட்டார் என்று நினைத்துக் கொண்டேன்.

‘’நம்ம நாடு மாறும்ணு நீங்க நம்பறீங்கலா சார்?’’

‘’நிச்சயமா மாறும். ஜப்பான் ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பின்னால முப்பது வருஷத்துல உலகின் பெரிய பொருளாதாரமா மாறுச்சு. இரண்டு உலகப் போர்ல தோத்து நாடே ரெண்டா போன ஜெர்மனி ஒண்ணுபட்டு உலகத்தோட உற்பத்தில மேஜர் பங்களிப்பைக் கொடுக்கறவங்களா மாறினாங்க. இஸ்ரேலை சுத்தி அவங்களோட பகைநாடுகள். அதையும் தாண்டி இஸ்ரேல் எல்லா துறையிலயும் பிரமிக்கற அளவு முன்னேறியிருக்காங்க. நிச்சயமா நம்ம நாடும் பெருசா சாதிக்கும்.’’

குழந்தைகள் கல்வி சிறப்பாக இருக்க என்னிடம் ஆலோசனை கேட்டார்கள்.

‘’அறிவு மேல நம்பிக்கைய உருவாக்குங்க. அறிவுதான் அழிக்க முடியாத செல்வம்னு சொல்லித் தாங்க. அவங்களோட தொடர்ச்சியா பேசுங்க. அவங்க சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுங்க. அவங்களுக்கு சிந்திக்க சொல்லிக் கொடுங்க. மகாத்மா காந்தி தன் கூட இருந்த தன்னோட கொழந்தைகளை இப்படித்தான் வளர்த்தாரு. ’’

Friday 18 October 2019

வாழ்க்கை ஒரு திருவிழா


இன்று எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. பல வருடங்களாக அதைப் பற்றி எண்ணியிருக்கிறேன். இப்போது சட்டென ஒரு சாத்தியமான வடிவம் உருவாகி விட்டதாக உணர்ந்தேன். 2020ம் ஆண்டு முழுவதும் கொண்டாட்டங்களில் முற்றிலும் திளைத்திருப்பது என்று முடிவு செய்தேன். இந்த திட்டமிடலை சரியான காலகட்டத்தில் யோசித்திருப்பதாகத் தோன்றுகிறது. 2020 ஜனவரிக்கு இன்னும் எழுபத்து ஆறு நாட்கள் இருக்கின்றன. பயணங்களை – பயண முன்பதிவுகளை வகுத்துக் கொள்வதற்கு போதுமான அவகாசம் கிடைக்கிறது. ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு கொண்டாட்டம் என்பது திட்டம். எந்த விழா இந்தியாவில் எந்த பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து கூட்டுக் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறதோ அங்கே சென்று அதில் இணைந்து கொள்வது. இந்த எண்ணத்தை இன்று தான் அடைந்தேன். நாம் ஒரே விதமான சூழலில் நம் வாழ்நாள் முழுதும் இருக்கிறோம். ஒரே விதமான எண்ணம். ஒரே விதமான நோக்கு. ஒரே விதமான அனுபவம். அதனை இந்த திட்டம் மாற்றியமைக்கும் என்று எண்ணுகிறேன். பன்னிரண்டு மாதம் பன்னிரண்டு விழாக்கள். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாநிலத்தின் கொண்டாட்டத்தில் இருப்பது. பயண நாட்கள் சேர்த்து ஒரு வாரம் என்று வைத்துக் கொள்ளலாம். ரயில் பயணமாகவே வைத்துக் கொள்ளலாம். பயணத்துக்கு மூன்று நாட்கள். கொண்டாட்டத்தில் நான்கு நாட்கள்.


1. சர்வதேச காற்றாடித் திருவிழா

குஜராத்தில் இந்த விழா ஜனவரியில் கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்த விழாவுக்காக கூடுகிறார்கள். மகர சங்கராந்தியைக் கொண்டாடும் விதமாக மக்கள் வானில் விதவிதமான ஆயிரக்கணக்கான பட்டங்களைப் பறக்க விடுவர். ஆயிரம் வண்ணக் கனவுகள் சிறகடிக்கும் வானம். நம் அகம் எழுந்து விண் தொடும் தருணம் வாய்க்கக் கூடிய திருவிழா.

உலக நாடுகள் பலவற்றிலுமுள்ள பட்டம் தயாரிப்பவர்கள் இங்கே தங்கள் புதிய பட்டங்களை விற்பனை செய்கின்றனர். குஜராத் மாநில அரசு இந்த விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்து சர்வதேச முக்கியத்துவம் கொண்டதாக மாற்றியுள்ளது. 2020ம் ஆண்டு ஜனவரி 6 - ஜனவரி 14 வரை குஜராத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் இத்திருவிழா நடைபெறும். அகமதாபாத் காற்றாடித் திருவிழா மிகச் சிறப்பானது.





2. சிவராத்திரி


இரவு அருவமானது. தனித்துவம் கொண்டது. உலகியல் நம்மை பகலில் உழைப்பவர்களாகவும் இரவில் உறங்குபவர்களாகவும் ஆக்கியுள்ளது. வாழ்க்கையின் அகத்தின் ஆழமான உணர்வுகளை இரவு அடையாளம் காட்டக் கூடியது. ‘’உயிர்கள் அனைத்தும் உறங்குகையில் விழித்திருப்பவன் யோகி’’ என்கிறான் ஸ்ரீகிருஷ்ணன். வருடத்தின் ஒரு நாள் விழித்திருக்கும் இந்த இரவு நம் வாழ்க்கை குறித்த புரிதலை இன்னும் ஆழமாக்கக் கூடும்.சிவராத்திரி தினத்தை உஜ்ஜைன் மகா காலேஸ்வர் ஆலயத்திலோ அல்லது காசி விஸ்வநாதர் ஆலயத்திலோ கொண்டாடலாம். 2020ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று மகாசிவராத்திரி தினம்.

                                                                      
3. புத்த பூர்ணிமா
வாழ்க்கை நமக்குத் துயரமாக அனுபவமாகிறது. இருப்பின் துயர் மற்றும் உறவுகளின் துயர் மற்றும் பிரிவுகளின் துயர். துயரத்தின் அனுபவத்தை ஞானத்தின் முதல் படி என்றார் புத்தர். அதனை ஓர் உண்மை என்றார். துக்கம், துக்கத்திற்கான காரணம், துக்க நிவாரணம் மற்றும் துக்க நிவாரண மார்க்கம் என ஒட்டுமொத்த மானுடத்துக்கும் விடுதலையின் பாதையைக் காட்டினார். கயாவிலோ அல்லது லடாக்கிலோ புத்த பூர்ணிமாவைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளேன். ததாகதரின் அருள்வெளியில் சில தினங்கள். 2020ம் ஆண்டு மே மாதம் 7ம் நாள் புத்த பூர்ணிமா.




4. கணேஷ் சதுர்த்தி
சிவ கணங்களின் தலைவன் கணேசன். மாவீரன் ஆயினும் குழந்தை மனம் படைத்தவன். பேரறிஞன் எனினும் எளியவன். இந்தியாவில் இந்தியர்கள் மனதுக்கு மிகவும் பக்கத்தில் உணரும் கடவுள் விநாயகர். எந்த சடங்காயினும் முதல் மரியாதை அவருக்கே. மராத்தியம் விநாயகர் வழிபாட்டில் மிகவும் முன்னோடியான மாநிலம். திலகர் கணேஷ் சதுர்த்தியை மாபெரும் விழாவாக்கிய பூனாவில் கொண்டாடலாம் என இருக்கிறேன். 2020ம் ஆண்டு ஆகஸ்டு 22 அன்று கணேஷ் சதுர்த்தி



5. ஓணம்
கேரளா ஆலய மரபைப் பேணுவதிலும் சமயச் சடங்குகளை சிரத்தையுடன் மேற்கொள்வதிலும் முதன்மையான மாநிலம். காலைப் பொழுதில் ஏதேனும் ஓர் கேரள ஆலயத்தில் இருப்பது என்பதே மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ஒட்டுமொத்த கேரளமும் கொண்டாடும் பண்டிகை ஓணம். 2020ம் ஆண்டு ஆகஸ்டு-31 அன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


6. துர்கா பூஜை
வங்காளம் சாக்தத்தின் மண். வைணவமும் சாக்தமும் செழித்து வளர்ந்த மண் வங்காளம். தீமையை அழிப்பவளாக - இல்லாமல் செய்பவளாக காளி வணங்கப்படுகிறாள். 2020ம் ஆண்டு அக்டோபர் 25 அன்று கல்கத்தாவில் துர்கா பூஜையைக் கொண்டாடலாம்.


7. குருநானக் ஜெயந்தி
பஞ்சாபில் குருநானக் ஜெயந்தி மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடப்படும். இந்திய வரலாற்றில் சீக்கியம் அளித்திருக்கும் பங்களிப்பு அளப்பரியது. சீக்கியர்கள் இல்லையெனில் வட இந்தியா இன்றிருக்கும் ஸ்திதியில் இருந்திருக்க முடியாது. இந்தியாவே இப்போதுள்ள வடிவம் கொண்டிருக்க முடியாது. வட இந்திய வரலாற்றில் குரு நானக்கும் குரு கோவிந்த் சிங்கும் மிகவும் முக்கியமானவர்கள். குரு நானக் அன்பையும் அமைதியையும் போதித்த ஆன்மீக குரு. அவரது உபதேசங்கள் ‘’குரு கிரந்த சாகிப்’’ என தொகுக்கப்பட்டது. குருத்வாராக்களில் அந்நூலே வழிபடப்படுகிறது. அந்நூலில் ராமன் பெயரும் கிருஷ்ணன் பெயரும் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

குரு கோவிந்த் சிங் சீக்கியத்தை வீரம் செறிந்த சமயமாக்கினார். சிட்டுக்குருவிகளுக்கு வல்லூறை எதிர்க்கும் ஆற்றலைக் கொடுப்பேன் என்றார். அவர் உருவாக்கிய படை ‘’கால்சா’’. கேசம், கங்கணம். சீப்பு, குறுவாள், வாள் ஆகிய ஐந்தும் ஒவ்வொரு சீக்கியனும் கை கொள்ள வேண்டியவை. இன்றும் இந்திய ராணுவத்தில் மிக அதிக அளவில் பங்களிப்பவர்கள் சீக்கியர்களே.

குருத்வாராக்கள் பக்தர்களுக்கு உணவளிப்பதை கடவுளுக்குச் செய்யப்படும் பணியாக நினைக்கின்றன. பஞ்சாப்பில் குரு நானக் ஜெயந்தி மிகப் பெரிய கொண்டாட்டம்.2020ம் ஆண்டு நவம்பர் 30 அன்று குருநானக் ஜெயந்தி. அதை அமிர்தசரஸில் கொண்டாட வேண்டும்.


8. ரத யாத்திரை
ஒரு குடும்பத்தின் குழந்தைகள் தெய்வமாக வணங்கப்படும் இடம் பூரி. கிருஷ்ணன், பலராமன் மற்றும் சுபத்ரா. லட்சக்கணக்கான மக்கள் கூடும் பூரி ரத யாத்திரை ஒரு மாபெரும் கொண்டாட்டம். ஜூலை மாதத்தில் இவ்விழா நடைபெறும்.


9. கோகுலாஷ்டமி
இந்தியர்கள் மனதில் ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் இருக்கும் இடம் மகத்தானது. இந்தியர்களுக்கு கண்ணன் ஒரு குழந்தை. கண்ணன் ஒரு நண்பன். கண்ணன் ஒரு காதலன். கண்ணன் ஓர் ஞான ஆசிரியன். பிருந்தாவனத்தில் கண்ணன் பிறந்த அந்த நாளில் மதுராவில் இருக்க வேண்டும். 2020ம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று ஜென்மாஷ்டமி.


10. ஹோலி
ஹோலி வசந்தத்தின் வண்ணங்களின் திருவிழா. பல வண்ணம் கொள்ளும் போதே வாழ்க்கை அழகாகிறது. ஹோலி அழகின் திருவிழாவும் கூட. 2020ம் ஆண்டு மார்ச் 9 அன்று ஹோலி கொண்டாடப்படுகிறது.


11. பீகார் கால்நடைத் திருவிழா
அக்டோபரை ஒட்டி பீகாரில் உள்ள சோன்பூரில் உலகின் மிகப் பெரிய கால்நடைச் சந்தை கூடும். யானைகள், ஒட்டகங்கள், பசுக்கள், எருமைகள், ஆடு, கோழி என அனைத்து மிருகங்களும் விற்பனை செய்யப்படும். இந்தியர்களின் வாழ்வில் கால்நடைகள் மிக முக்கியமான உணர்வுபூர்வமான தொடர்பைக் கொண்டவை. உலகின் மிகப் பெரிய கால்நடைச் சந்தையில் இருப்பது என்பது முக்கியமான அனுபவமாக இருக்கக் கூடும். 

                                                                                                                                                                    12. ராஸ லீலா

அஸ்ஸாமில் மஜூலி பகுதியில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ராஸ லீலா பாரம்பர்ய நடனங்களுடன் கொண்டாடப்படுகிறது. 
                         

பரவசமூட்டும் பன்னிரண்டு பயணங்களுக்கு - பன்னிரண்டு திருவிழாக்களுக்கு நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உடன் வருகிறீர்களா? 

Thursday 17 October 2019

வீடும் வாழ்வும்

இன்று காலை எனது நண்பரான கட்டிடக்கலை வடிவமைப்பாளரிடம் (ஆர்க்கிடெக்ட்)  பேசிக் கொண்டிருந்தேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அதை நான் அறிவேன். அடுத்த வாரம் அவர் பயின்ற அண்ணா பல்கலை.யில் பி. ஆர்க் பயிலும் மாணவர்களுக்கு ஒரு உரை அளிக்கப் போகிறேன் என்றார். சட்டென எனக்கு ஒரு பொறி தட்டியது.  கட்டிடக்கலையில் உயர் பட்டம் பெற்றீர்களா என்றேன். உயர் பட்டம் பெற சேர்ந்தேன். பாதியில் படிப்பை நிறுத்தி விட்டேன் என்றார். உங்கள் தகுதிகளில் அது மிக முக்கியமானது என்றேன். இருவரும் சிரித்தோம். அவரது துறை சார்ந்தும் பொது விஷயங்கள் குறித்தும் பரந்த அறிவு கொண்டர். நல்ல அறிஞர். பல பெரிய கட்டிடங்களை வடிவமைத்தவர். உலகின் பல நாடுகளுக்குப் பயணம் செய்தவர். வருடம் ஒருமுறை இமயத்தில் மலையேற்றம் செய்வார். இலக்கிய வாசகர். எனக்கு கிடைத்துள்ள நண்பர்களால் நான் பெரும் நிறைவு கொள்கிறேன். இது ஓர் அரிய பேறு.

எனது கட்டுமானங்களை வடிவமைக்கும் ஆர்க்கிடெக்ட் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். அவர் கட்டிடங்களும் கட்டிக் கொடுக்கிறார். ரியல் எஸ்டேட்டும் செய்கிறார். இடம் வாங்கி அதில் பெரிய வீடுகளைக் கட்டி விற்பனை செய்கிறார். தொழிலில் நுணுக்கமும் நேர்த்தியும் கொண்டவர். அவர் எனது நண்பரின் நண்பர். அந்த முறையில் நான் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். என்னுடைய மனையின் வரைபடங்களை அனுப்புவேன். அவருக்கு அது கிடைத்த இரண்டாவது தினம் என்னிடம் கட்டிட பிளான்கள் வந்து சேர்ந்திருக்கும். மின்னல் போல அதிரடியாக வேலை செய்யக் கூடியவர். நாங்கள் பல வருடங்கள் நேரில் பார்த்துக் கொண்டது கிடையாது. ஃபோனில்தான் பேசியிருக்கிறோம். எங்களுக்குள் பரஸ்பர மரியாதையும் நட்பும் இருந்தது. அவர் உருவம் குறித்து என்னிடம் ஒரு மனச் சித்திரம் இருந்தது. பல வருடங்களுக்குப் பின் நாங்கள் சந்தித்துக் கொண்ட போது அவர் குறித்து என்னிடம் இருந்த மனச்சித்திரம் குறித்து சொல்லி சிரித்துக் கொண்டோம். இப்போதும் அவரைப் பற்றி எண்ணும் போது அந்த இரு சித்திரங்களும் மனதில் எழும். கட்டிட பிளான்களில் சிறந்த அறிவு கொண்டவர். அவர் கணிணித் திரையில் அவர் உருவாக்கும் கோடுகள் சில நிமிடங்களில் அற்புதமான மாய உலகங்களை உருவாக்கி விடும். மிகச் சிறு இடத்தைக் கூட நம்ப முடியாத வாய்ப்புகள் கொண்டதாக ஆக்கி விடுவார். 

நான் கட்டிடத் தொழிலுக்கு வந்த போது - பொறியியல் பட்டம் பெற்ற இரண்டாவது ஆண்டில் ( அதற்கு முன் ஒரு வருடம் தமிழ்நாட்டையும் இந்திய மாநிலங்களையும் ரயிலில் ஒரு சுற்று சுற்றி வந்தேன்)- சென்னையில் மிக அதிக அளவில் அபார்ட்மெண்ட்கள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அதனை அடிக்கடி பார்க்கும் போது எனக்கும் ஒரு அபார்ட்மெண்ட் கட்டி விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான ஒரு பொருத்தமான இடத்தை வாங்கினேன். பின்னர் சில பெரிய கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

வீடுகள் கட்டிக் கொடுத்தவன் என்ற முறையில் எனக்கு சில அவதானங்கள் உண்டு. வீடு பௌதிகமான ஓர் இருப்பு மட்டும் அல்ல. அதில் வாழும் - வசிக்கும் மனிதர்களின் சுபாவமும் மன அமைப்புமே வீட்டை உயிர்ப்புடன் இருக்கச் செய்யும். ஓர் இடத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது  என்பது பயன்படுத்துபவர்களின் எண்ணங்களைப் பொறுத்தது. மயிலாடுதுறை போன்ற ஊர்களில் நான் கட்டிடம் கட்ட வந்த போது ஒரு மனை என்பது 40 அடி அகலமும் 60 அடி நீளமும் கொண்டது. அதில் கீழ்த்தளத்தில் வெளிச்சம் நிறைந்ததாக காற்றோட்டத்துடன் கூடியதாக 1100லிருந்து 1200 சதுர அடி வரையிலான வீட்டைக் கட்ட முடியும். அதே பரப்புடன் அப்படியே முதல் தளமும் இரண்டாவது தளமும் எழுப்பலாம். இடம் இருக்கிறதே என்று அடைத்துக் கட்டினால் வெளிச்சமும் காற்றோட்டமும் இல்லாமல் ஆகும்.

நான் வாங்கியிருந்த வீட்டு மனை இரண்டு கிரவுண்டு அளவுள்ளது. ஆர்க்கிடெக்ட்டிடம் வீடுகள் பெரியவையாக வாங்குபவர்களுக்கு எல்லா விதத்திலும் வசதி மிக்கதாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டேன். அவர் அருமையான ஒரு பிளானையும் எளிவேஷனையும் அளித்தார். அவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வடிவமைப்புகள் கேரள பாணியைச் சேர்ந்தவை. வான் நோக்கி சிறகு விரிக்கும் பறவையைப் போன்ற எளிவேஷன் கொண்டது நான் கட்டி விற்பனை செய்த அபார்ட்மெண்ட். ஆனால் அந்த வடிவம் கட்டிடக்கலை அறிந்தவர்களுக்கு மட்டுமே நுட்பமாக புலப்படும். மற்றவர்களுக்கு அழகானது என்ற எண்ணத்தை உண்டாக்கும்.

அபார்ட்மெண்ட் வாங்கியவர்களில் ஒருவர் அமெரிக்காவில் வசிப்பவர். அவர் பிறந்தது வளர்ந்தது அனைத்துமே சென்னையில். அவரது சொந்த ஊர் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஒரு கிராமம். அங்கே அவரது குலதெய்வம் கோயில் உள்ளது.  ஆண்டுக்கு ஒருமுறை மனைவி குழந்தையுடன் இங்கே வருவார். சாமி கும்பிடுவார். அப்போது ஒரு வாரம் வரை தங்கியிருந்து பக்கத்தில் உள்ள சிவாலயங்களுக்கும் விஷ்ணு கோவில்களுக்கும் சென்று வருவார். மாதம் ஒரு முறை அவரது பெற்றோர்களும் உறவினர்களும் வந்து தங்கி விட்டுச் செல்வர். அவர்கள் எங்கு சென்றாலும் என்னையும் உடன் அழைத்துச் செல்வார்கள். அவர் சென்னையில் தனது சொந்த இடத்தில் ஒரு அபார்ட்மெண்ட் கட்டி விற்பனை செய்தவர். சென்னையில் தான் கட்டிய அபார்ட்மெண்டை விட இந்த அபார்ட்மெண்ட் சிறப்பாக இருக்கிறது என்று சொல்வார். 

மயிலாடுதுறையின் மிக முக்கியமான தொழில் அதிபர் ஒருவர் அபார்ட்மெண்ட்வாசி. வீடு கட்டுவதின் எந்த சிரமமும் தனக்கு அனுபவமாகாமலே தான் ஒரு சிறந்த இல்லத்தை அடைந்திருப்பதாக எல்லாரிடமும் கூறுவார். 

வீடு பவித்ரமானது. புனிதமானது. அந்த உணர்வு எல்லா மனிதர்களிடமும் இருக்குமாயின் இந்த உலகமும் வாழ்வும் கணந்தோறும் அற்புதமானதாக இருக்கும்.


Wednesday 16 October 2019

விண் சுடர்


சிவபெருமான் சிரசில் சந்திரனைச் சூடியிருப்பதை அனைவரும் அறிவோம். பெருமாள் தன் மணிமுடியில் சந்திரனைச் சூடியிருக்கிறார் தலைச்சங்க நாண்மதியம் என்ற வைணவத் தலத்தில். இவ்வூர் மயிலாடுதுறையிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் ஆக்கூர் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்களில் ஒன்று. சந்திரன் தலைச்சங்க நாண்மதியப்  பெருமாளை வணங்கி அருள் பெற்றதாக ஐதீகம். சங்க இலக்கியங்களிலேயே தலைச்சங்கம் என்ற இந்த ஊர் குறிப்பிடப்படுகிறது. பூம்புகார்க் கடலிலிருந்து எடுத்து வரப்பட்ட சங்குகள் வணிகர்களால் இங்கே விற்பனை செய்யப்பட்டதால் இவ்வூர் தலைச்சங்கம் என பெயர் பெற்றிருக்கிறது. ஆயிரத்து இருநூறு ஆண்டுகளாவது பழைய கோவிலாக இருக்கக் கூடும். கற்றளி சிறிதாக இருக்கிறது. பின்னர் சமீபகாலத்தில் முன்னர் இருக்கும் மண்டபமும் மதிலும் கட்டப்பட்டிருக்கிறது. இன்று எனக்கு ஒரு பிராத்தனை இருந்தது.  மனதில் இருக்கும் சில சஞ்சலங்களைக் கடக்க ஆத்மபலம் வேண்டியிருக்கிறது. ஆலய வழிபாடு எனக்கு மனவலிமையைத் தருகிறது. விநாயகர் நான் எப்போதும் வழிபடும் கடவுள். அணுகுவதற்கு எளியவர். எங்கும் இருப்பவர். யானைமுகத்தைக் கண்டாலே மனதில் ஒரு புத்துணர்ச்சி பிறக்கும். அதன் பின் சிவாலயங்கள். பெருமாள் கோவில்கள். காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் போதே பிள்ளையார் கோவிலில் வணங்கி விடுவேன். உத்தமர் கோவிலும் அன்பிலும் சென்று வர வேண்டும். தீபாவளிக்கு முன்னரோ அல்லது பின்னரோ திருப்பதி சென்று வர வேண்டும். இன்று காலை கட்டிட அனுமதி தொடர்பான பணிகள் சிலவற்றை மேற்கொண்டேன். சூழ்நிலை சாதகமாக இருக்கிறது. நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சீர்காழி கடைத்தெருவில் ஒரு பெரிய இடம். அதன் உரிமையாளர் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் ஒரு அபார்ட்மெண்ட் பிரமோட் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 காலை மூன்று மணி நேரம் ஆலயத்தில் இருந்தேன். அங்கே ஒரு லஷ்மி நரசிம்மர் சன்னிதி இருக்கிறது. நரசிம்மர் உக்கிர மூர்த்தி. லஷ்மி அமைதியின் வடிவம். லஷ்மி அருகில் இருக்கும்போது நரசிம்மர் உக்கிரம் தணிந்து அருள்முகம் கொள்கிறார். உக்கிரத்தை விடவும் பலம் மிக்கதா அமைதி?

ஒரு பட்டரும் அவருக்கு உதவியாக ஒரு சேவார்த்தியும் இருக்கிறார்கள். சென்னையிலிருந்து இரண்டு குடும்பங்கள் வந்து பெருமாளை சேவித்து விட்டு போயினர். ஒரு குடும்பம் ஐயங்கார் குடும்பம். சேலத்திலிருந்து பத்து பேர் கொண்ட குழு நாங்கூர் திவ்ய தேசங்களை சேவித்து விட்டு தலைச்சங்கம் வந்திருந்தது. அவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். நாகப்பட்டினம் சௌந்தர்ராஜனைச் சேவிக்கச் செல்கிறார்கள்.

தெய்வ சன்னிதி முன் நிற்கையில் மனதில் ஓர் அமைதி பிறக்கிறது. அந்த அமைதி மனத்தெளிவை அளிக்கிறது. தெளிவிலிருந்து நம்பிக்கை பிறக்கிறது. நம்பிக்கை கொள்ளும் போது வாழ்க்கை இனிமையான அனுபவமாகிறது.

தண்ணார் தாமரைசூழ்*  தலைச்சங்கம் மேல்திசையுள்*
விண்ணோர் நாள்மதியை*  விரிகின்ற வெம்சுடரை*
கண்ஆரக் கண்டுகொண்டு*  களிக்கின்றது இங்கு என்றுகொலோ?
என்பது திருமங்கை ஆழ்வார் பாசுரம்.

‘’விண்ணோர் நாள்மதி விரிகின்ற வெம்சுடர்’’ என்ற வரி மந்திரம் போல் மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.