Monday 31 October 2022
களையெடுப்பு - நிறைவு
Sunday 30 October 2022
களையெடுப்பு
Saturday 29 October 2022
கண்டாமணி
மார்க்கபந்து ஒரு சிறிய உணவகம் நடத்தி வருகிறார். சுகாதாரமான உணவை பார்த்து பார்த்து வழங்கும் அவருடைய கடையின் உணவில் அவரை அறியாமல் சிறு நஞ்சு கலந்து விடுகிறது. அதனை மார்க்கபந்து கவனித்து விடுகிறார். ஆனால் அந்த உணவு ஒரே ஒரு நபருக்கு பரிமாறப்பட்டு விடுகிறது. அடுத்த நாள் காலை அந்த உணவை உண்டவர் இறந்து விடுகிறார். அவர் இறப்புக்கு சிறு நஞ்சு தான் காரணமா என அறுதியிட்டுக் கூற முடியாது. சிறு நஞ்சு சர்வ நிச்சயமாக இறந்து போனவர் உணவில் கலந்திருந்தது என்றும் கூறிட முடியாது. இப்படியான ஒரு நிலை. ஊர் சிவன் கோவிலுக்கு ஒரு கண்டாமணியை வாங்கி தானமாகக் கொடுக்கிறார். ஒவ்வொரு வேளை பூசனையின் போதும் கண்டாமணி ஒலிக்கிறது. அந்த ஒலி அவர் எதை மறக்க நினைக்கிறாரோ அதை அவர் நினைவில் கொண்டு வந்து விடுகிறது.
குழந்தைக்கு ஜூரம்
ஐயரும் ஐயாறும் ( ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை)
எந்த ஒரு கலையையும் கலை உணர்வுடன் அணுகுவதே உத்தமமான மார்க்கம் என்று கலைஞர்கள் எண்ணுவார்கள். ஆராய்ச்சி என்ற பெயரில் கலை உணர்வுக்கு அன்னியமான விஷயங்களை கலையின் மேலும் கலைஞனின் மேலும் செலுத்துவதை கலைக்கும் கலைஞனுக்கும் நிகழ்த்தும் வன்முறையாகவே எந்த கலைஞனும் எண்ணுவான். அதனைக் குறித்து தி.ஜா ஹாஸ்யமாக எழுதிய சிறுகதை ‘’ஐயரும் ஐயாறும் ( ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை)’’.
வீடு
வீட்டினை அகம் என்ற சொல்லாலும் குறிக்கிறது தமிழ். அகத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இருப்பாகவும் வீடு திகழ்கிறது. விருப்பாயினும் வெறுப்பாயினும் அது அகத்தில் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. வீட்டினை இனிமையாக உணரும் ஒருவன் அந்த வீட்டில் தனக்கு ஒரு துரோகம் நிகழ்ந்த பின் அதனை நரகமாக எண்ணத் துவங்குகிறான். நரகமாக எண்ணிய பின்னும் அவன் ஏன் அங்கேயே இருக்கிறான் என்னும் கேள்விக்கான பதிலில் வாசக இடைவெளியைக் கொடுத்து நிறைவு செய்கிறார் தி. ஜா , ‘’வீடு’’ சிறுகதையில்.
கள்ளி
மரமும் செடியும்
தஞ்சை மாவட்டம் நீர் மிகுந்திருக்கும் மாவட்டம். பயிர் வளரத் தேவையாயிருக்கும் நீர் அதிகமாக இருக்கிறது என்பதும் சமயத்தில் மிகையாகப் பெய்யும் மழையால் பயிர் பாதிக்கப்படுகிறது என்ற அளவில் தண்ணீரின் இருப்பு இருக்கிறது என்பதும் இந்த மாவட்டத்தின் இயல்பு. மிகுந்திருக்கும் ஒன்றை தஞ்சை மாவட்டத்துக்காரர்கள் ‘’மிதந்து கிடக்கு’’ என்பார்கள். பொருளோ அதிகாரமோ கொண்டுள்ள ஒருவனை ‘’மிதக்கிறான்’’ என்பார்கள்.
இந்த ‘’மிதப்பு’’ மிக நூதனமாக சில விஷயங்களை யோசிக்க வைக்கும் ; செய்ய வைக்கும். அவ்வாறான ஒரு விஷயம் நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் நடக்கவே நடக்காது என்றும் சொல்லி விட முடியாது.
‘’மரமும் செடியும்’’ அவ்வாறான ஒன்று.
Friday 28 October 2022
விளையாட்டுப் பொம்மை
Thursday 27 October 2022
கங்கா ஸ்நானம்
படைப்பூக்க மனநிலை என்பது மிகவும் பிரத்யேகமானது. படைப்பாளியால் கூட அதனை இன்னதென்றும் இன்ன விதமானதென்றும் வரையறுத்திட முடியாதது. அவ்விதமான படைப்பூக்க மனநிலைக்குச் சென்று அவன் உருவாக்கும் படைப்பின் ஒவ்வொரு அணுவும் கலாபூர்வமானது. கலாபூர்வமாக ஒன்றுடன் ஒன்று தொடர்பில் உள்ளது. அதில் கண்ணுக்குத் தெரியும் தொடர்புகளும் இருக்கும். கண்களால் கண்டறிந்திட முடியாத தொடர்புகளும் இருக்கும்.
கங்கா ஸ்நானம் கதையில் சின்னசாமி காசியில் மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் காசிக்கு வந்து வாசம் புரியும் தஞ்சாவூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட புரோகிதர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போது அந்த புரோகிதர் தனது குழந்தைக்கு முடியிறக்க வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்ததாகக் கூறுகிறார். சின்னசாமி ஆச்சர்யப்பட்டு காசியிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கா என்று கேட்கிறார். எங்கு சென்றாலும் குலதெய்வம் என்பது அங்கேயே தானே இருக்கும் ; வைத்தீஸ்வரன் குடும்ப தெய்வம் ஆயிற்றே என்கிறார். தனது குடும்பத்தைச் சேர்ந்த தனது சகோதரிக்காக சின்னசாமி காசி வருகிறார் என்பதோடு இணைத்து யோசிக்க வேண்டிய வரி இது.
சின்னசாமியை ஏமாற்றுகிறார் ஒருவர். அந்த ஏமாற்றம் பெருஞ்சுமையாய் அழுத்துகிறது சின்னசாமியை. நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணப்பட்ட விஷயம் என்றாலும் சின்னசாமிக்கு நிகழ்ந்த வஞ்சனை என்பது வலி மிகுந்ததே. அந்த வலியின் துயரம் நீங்க கங்கையில் மூழ்கி எழ வருகிறார். சின்னசாமியை வஞ்சித்தவரும் முதல் நாளே வந்து கங்கையில் மூழ்கி எழுகிறார். இருவரும் ஒரே இடத்தில் ஒருவரை ஒருவர் அறியாமல் தங்கியிருக்கின்றனர். முதலில் அதனை அறியும் சின்னசாமி தன்னை வஞ்சித்தவருக்காகவும் கங்கையில் முழுக்கு போடுகிறார்.
காலத்தின் நீளம் எல்லா உணர்வுகளையும் அணுவினும் அணுவாக ஆக்குகிறது. கங்கை விருப்பு வெறுப்பு இன்றி தன்னிடம் வரும் எல்லா மனிதர்களின் பாவத்தையும் பாவ போதத்தையும் தன் நகர்வால் அடித்துச் சென்ற படி இருக்கிறாள். கண்ணுக்குத் தெரியும் உணர்வுகள் கண்ணுக்குத் தெரியாத உணர்வுகள் அனைத்தையும்.
Wednesday 26 October 2022
துணை
அக்பர் சாஸ்திரி
''காவிரி போற்றுதும்’’ - விரிவாதல்
Tuesday 25 October 2022
நீதி மேலான நம்பிக்கை
Monday 24 October 2022
உலகம் ஒரு குடும்பம்
உலகம் ஒரு குடும்பம் என்கிறது இந்திய மரபு. உலக உயிர்கள் அனைத்துமே விஷ்ணுவின் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதால் யாவும் யாவரும் ஒரே குலத்தவர் என்பது இந்திய நம்பிக்கை.
நான் பண்டிகை தினங்களில் குறைவான பொழுது வீட்டில் இருந்து விட்டு அதிக நேரம் நண்பர்களைச் சென்று சந்திக்க வேண்டும் என்று நினைப்பேன். அன்றைய தினத்தில் பேருந்துகளையும் ரயில்களையும் போக்குவரத்துக்குப் பயன்படுத்துவேன். சாமானிய மக்களுடன் பண்டிகை தினத்தன்று இணைந்து இருக்க விரும்புவேன். சாமானிய மக்களுடன் இருக்கும் போது அவர்களுடன் உரையாடும் போதே என் பாதைக்கான வழிகளைக் கண்டடைகிறேன்.
என் நண்பன் சூரிய நாராயணனுக்கு இந்த வருடம் தலை தீபாவளி. வீர நாராயண ஏரிக்கரை கிராமம் ஒன்றில் அமைந்திருக்கிறது அவனுடைய மாமனார் வீடு. மனைவியுடன் இரண்டு நாட்களுக்கு முன்பே வந்திருந்தான். இன்று மதியத்துக்கு மேல் கிளம்பி அங்கே செல்வதாக முடிவு செய்து கிளம்பிச் சென்றேன். தீபாவளி தினம் என்பதால் பத்தில் ஒரு பங்கு பேருந்துகளே இயங்கிக் கொண்டிருந்தன. மெல்ல சிதம்பரம் சென்று அங்கிருந்து இன்னொரு பேருந்து பிடித்து அவனுடைய மாமனார் ஊருக்குச் சென்று அவர் வீட்டைக் கண்டடைந்து சென்றேன்.
மிகச் சிறப்பான காஃபி கொடுத்து உபசரித்தார்கள். தீபாவளி இனிப்புகள் வழங்கினார்கள். வழக்கமாக தீபாவளி சமயத்தில் வீடுகளுக்குச் செல்லும் போது இனிப்புகள் அதிகமாக தட்டில் வைத்திருந்தால் அதனை ஒரு பாலிதீன் பையில் கட்டிக் கொடுத்து விடுமாறு கூறுவேன். வரும் வழியில் பேருந்தில் அருந்தலாம் அல்லது வீட்டுக்குக் கொண்டு வந்து மறுநாள் அருந்தலாம். அவ்வாறு சொன்னதும் வேறு இனிப்பை தனியாகத் தருகிறோம் இதனை இப்போது அருந்துங்கள் என்பேன். தனியாகத் தருவதுடம் இதனையும் சேர்த்துத் தாருங்கள் என்பேன். இந்த முறை சூரிய நாராயணன் மாமனார் வீட்டில் அளவாகவே கொடுத்தார்கள். முழுமையாக அருந்தினேன்.
நானும் சூரிய நாராயணனும் வீர நாராயண ஏரிக்கரையில் அமர்ந்திருந்தோம். நான் அவனை சில ஆண்டுகளுக்கு முன்னால் வீர நாராயண ஏரிக்கு அழைத்து வந்திருக்கிறேன். எனக்கு ஒரு பழக்கம் உண்டு. எனக்கு நெருக்கமான நண்பர்கள் ஊருக்கு வரும் போது அவர்கள் வீர நாராயண ஏரியை பார்க்காதவர்களாக இருந்தால் ஏரிக்கு அழைத்து வந்து காட்டுவேன். இப்போது வீர நாராயண ஏரிக்கரை கிராமத்தைச் சேர்ந்தவரை மணம் புரிந்திருக்கிறான் என்பது மகிழ்ச்சி தந்தது.
பி. ஜி. கருத்திருமன் அவர்களின் ‘’கம்பர் - கவியும் கருத்தும்’’ என்ற நூலை இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறான். பி.ஜி. கருத்திருமன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். திராவிட இயக்கம் கம்பராமாயணம் மேல் வசை மாரி பொழிந்து கொண்டிருந்த காலத்தில் - திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் சி. என். அண்ணாத்துரை கம்பராமாயண நூல் பிரதியை ஊருக்கு ஊர் தீ வைத்துக் கொளுத்தி தனது கட்சியினரையும் அவ்வாறே செய்யச் சொல்லிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தேசியத்திலும் பண்பாட்டிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த பி.ஜி. கருத்திருமன் அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகுக்கு எளிய முறையில் கம்பனைக் கொண்டு செல்ல கம்பனின் 12,000 பாடல்களில் தேர்ந்தெடுத்த 960 பாடல்களை தேர்ந்தெடுத்து இந்த நூலை எழுதினார். கம்பனில் நுழைய இந்த நூல் நல்லதொரு நுழைவாயில். இந்த நூல் குறித்து நான் சொல்வனம் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். ( யாமறிந்த புலவரிலே )
உலகெங்கும் அறிஞர் எனக் கூறப்படுபவர்கள் நூல்களை படைப்புகளை இலக்கிய ஆக்கங்களை மதிப்பவர்களாக இருப்பார்கள் என்பது வழக்கம். தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழின் ஆகப் பெரிய இலக்கிய சாதனையான கம்பராமாயணப் பிரதியை தீ வைத்துக் கொளுத்துங்கள் என்று கூறிய சி.என். அண்ணாத்துரையை அறிஞர் என்று சொல்வார்கள்.
அவருடைய பெயரே கம்பராமாயணக் காவியத்தின் தலைவனான ராமனின் பெயர். துரை என்ற தெலுங்கு வார்த்தைக்கு அரசன் என்று பொருள். அண்ணாத்துரை என்றால் அரசனான அண்ணன் என்று பொருள். இது இராமனைக் குறிக்கும் பெயர். இராமன் மூன்று தம்பிகளின் அண்ணனாக இருந்தவன். அரசனாகவும் இருந்தவன்.
கவிஞர் கண்ணதாசன் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கிறது. அவருடைய வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய சம்பவம். சி. என். அண்ணாத்துரை கூறியதற்கேற்ப தனது வீட்டில் இருந்த கம்பராமாயணப் பிரதியைக் கொளுத்த முடிவு செய்து மண்ணெண்ணெய் டின்னை எடுத்து வந்து வைத்துக் கொண்டு தீப்பெட்டியையும் கையில் வைத்திருக்கிறார். அப்போது அவருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. இன்னும் சில வினாடிகளில் இந்த நூல் தீக்கிரையாகப் போகிறது. அதற்கு முன் அந்த நூலில் என்ன தான் இருக்கிறது என வாசித்துப் பார்ப்போமே என வாசிக்கிறார். வாசிக்க வாசிக்க கம்பனால் வசீகரிக்கப்பட்டு அந்த நூலின் சிறப்பை உணர்ந்து கொள்கிறார். திராவிட இயக்கத்திலிருந்து தன்னை முழுமையாக வெளியேற்றிக் கொண்டு தேசிய கட்சியான் காங்கிரசில் இணைகிறார்.
பி.ஜி. கருத்திருமனின் நூலுக்கு காங்கிரஸ் தலைவர்களான காமராஜ், சி. சுப்ரமணியன், தூரன் மற்றும் குடியரசுத் தலைவர் திரு. ராதாகிருஷ்ணன் ஆகியோர் அணிந்துரை அளித்துள்ளார்கள்.
கம்பன் குறித்து பேசிக் கொண்டிருந்து விட்டு சூரிய நாராயணனின் மாமனார் வீட்டுக்குத் திரும்பினோம்.
எனக்காக குறுகிய நேரத்தில் இட்லி தயாரித்து வைத்திருந்தார்கள். நுட்பமான ருசி கொண்டிருக்க வேண்டும் என்பதால் தேங்காய் சட்னியை மிக்ஸியில் அரைக்காமல் அம்மியில் அரைத்திருந்தார்கள். இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டதும் பார்த்துப் பார்த்து ஒன்று ஒன்று செய்வதுமான அவர்களது இயல்பு என்னை நெகிழச் செய்தது.
இவர்களைப் போன்றோரே எங்கும் எப்போதும் கிளம்பிச் செல்லலாம் என்ற நம்பிக்கையை அளிக்கிறார்கள்.
அவர்கள் பெரியபாளையத்தம்மனை வழிபடுபவர்கள். அவர்கள் வீட்டு பூஜை அறையில் இருந்த பாளையத்தம்ம்மனை வழிபட்டு விட்டு நள்ளிரவு 11.30க்கு ஊர் திரும்பினேன்.
ஹயக்ரீவம்
மந்த்ராலயம் சென்றிருந்த போது அங்கே சுவாமி ஸ்ரீராகவேந்திரர் 12 ஆண்டுகள் தவமியற்றிய பஞ்சமுக ஆஞ்சநேயர் குகைக்குச் சென்றிருந்தேன். அந்த குகையில் ஒரு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிற்பம் உள்ளது. ஆஞ்சநேயர், கருடன், வராகர், ஹயக்ரீவர், நரசிம்மர் என ஐந்து ரூபங்கள் இணைந்திருக்கும் சொரூபம் அது.
யோக மரபு மானுடனின் ஆற்றல்களைக் கூராக்கிக் கொள்ள பிராணிகளின் உடல்மொழியை பயன்படுத்திக் கொள்கிறது. ஆசனங்கள் என்பவை பிராணிகளின் உடல்மொழியைக் கருவாய்க் கொண்டு வடிவமைக்கப்பட்டவையே.
ஹயக்ரீவர் குதிரைமுகம் கொண்டவர். ஞானத்தை அருளுபவர். ஒன்றிலிருந்து இன்னொன்று என விரையும் மன ஆற்ற்லின் மீது ஆளுமை செலுத்தக் கூடியவர். நேற்று திருவஹீந்திரபுரம் தேவநாத பெருமாளைச் சேவிக்க சென்றிருந்தேன். தீபாவளிக்கு முதல் நாள் என்பதால் ஆலயத்தில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
ஆலயத்தில் அதிக நேரம் இருக்க வாய்ப்பு கிடைத்தது. ஆலயங்களில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது இருக்க வேண்டும் என நான் விரும்புவேன்.
ஆலயத்தில் ஒரு ராமர் சன்னிதி. ‘’நடையில் நின்றுயர் நாயகன்’’ என கம்பன் சொன்ன ராமன். கன்னங்கரு கல்லில் கருமை அடர்ந்து மின்னிக் கொண்டிருந்தான் ஸ்ரீராமன்.
தேவநாத சுவாமி சன்னிதிக்கு எதிர்ப்பக்கம் ஒரு சிறு குன்றின் மேலே ஹயக்ரீவ சுவாமிக்கு சன்னிதி உள்ளது. அங்கும் சேவித்தேன். இரவு ஊர் திரும்பும் போது மணி 11.45 ஆகி விட்டது.
யாதினும் இனிய அண்ணா - வாசகர் கடிதம்
படைத்தல்
Sunday 23 October 2022
இனிமையும் ஒளியும் நிறைக
ஒரு கிராமம் என்பதை ஒரு தேசம் எனக் கொள்ள முடியும் என்கிறது மகாபாரதம். நம் நாட்டில் ஒரு கிராமம் என்பது ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்து அவர்கள் அமைதியான ஒரு வாழ்க்கை வாழும் சூழலை பல்லாயிரம் ஆண்டுகளாக பல தலைமுறைகளாக உருவாக்கி அளித்து வந்திருக்கிறது. இந்திய சரித்திரம் அறிந்தவர்களால் அதனை எளிதில் புரிந்து கொள்ள முடியும். கன்னியாகுமரி முதல் காஷ்மீரம் வரை எல்லா இந்தியக் கிராமங்களும் கிட்டத்தட்ட ஒரே முறையைக் கொண்டவையே. எல்லா கிராமங்களிலும் அன்றும் இன்றும் விவசாயம் தான் பிரதானமான தொழில். உணவு உற்பத்தியும் உணவு உற்பத்திக்கு உதவும் உபகரணங்களை உருவாக்கிக் கொள்ளுதலுமே கிராம மக்களின் ஜீவிதமாக இருந்திருக்கிறது ; இருக்கிறது.
விழிப்பு
Saturday 22 October 2022
உயிர்மொழி
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
ஒரு சின்ன வாக்குவாதம்
Friday 21 October 2022
பண்டிகைக்கு முன்னான தினங்கள்
Thursday 20 October 2022
வெங்கிடு சார் ஏன் ஓடினார்?
Wednesday 19 October 2022
கோதாவரிக் குண்டு
மனிதர்கள் செலவழிக்கும் விதமும் பொருளீட்டும் அளவும் நேர் விகிதத்தில் இருப்பதில்லை. நடுத்தர வர்க்கத்துக்கு அனாதி காலமாக இருக்கும் சிக்கலே இதுதான். ஒரு நடுத்தரவர்க்க ஆசாமி பழைய ஆறு மாத செய்தித்தாளை பழைய பேப்பர்காரரிடம் எடைக்குப் போட்டு ஆறு ரூபாய் தேற்றுகிறார். அவரது மனைவியின் சினேகிதி அதில் ஒரு ரூபாயை தன் வீட்டின் கோதாவரிக் குண்டு பாத்திரத்தை அடகாக வைத்து கடனாக வாங்கிப் போகிறார். அன்று மாலை அந்தப் பெண்மணியின் கணவனை கடைத்தெருவில் பார்க்கிறார். அவள் கடனாக ஒரு ரூபாய் பெற்றது எதற்காக என அறிய நேரிடும் போது ஒரு மெல்லிய அதிர்ச்சி அவருக்கு உண்டாகிறது. சுவாரசியமான கதை.
சி. பி. கி. ரா. ம். ஸ் - விளைவு
சி. பி. கி. ரா. ம். ஸ் குறித்து முன்னரே எனது தளத்தில் எழுதியிருக்கிறேன். இது மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் புகார் துறையின் இணையதளம். மக்களுக்கு அரசுத்துறைகள் மீது அரசு அலுவலகங்கள் மீது அல்லது அவர்களுக்கு நேரடியாகத் தொடர்புடைய விஷயங்கள் மீது புகார் ஏதேனும் இருப்பின் இந்த தளத்தில் நேரடியாகப் பதிவு செய்யலாம். மேலதிகாரிகள் பலருக்கு ஒரே நேரத்தில் இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரியிடம் இந்த விஷயம் சென்று சேரும். மேலதிகாரிகள் கவனம் இருப்பதால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை துரிதமாக நிகழும் வாய்ப்பு அதிகம். எந்த விதமான புகாராக இருந்தாலும் நாற்பது நாட்களுக்குள் பதிலளிக்கப்பட வேண்டும் அல்லது தீர்வு காணப்பட வேண்டும் என்பது இதன் கால நியதி.
என்னுடைய முதல் புகாரை சி.பி.கி.ரா.ம்.ஸ் இணையதளம் மீது பதிவு செய்தேன். அதில் பதிவு செய்ய அந்த தளத்தில் உள்நுழைகையில் முகவரியைப் பதிவு செய்யக் கோரியது. கணிணியில் மாநிலம் பதிவு செய்தால் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களைக் காட்டும். அதில் மயிலாடுதுறை மாவட்டம் இல்லை. மயிலாடுதுறை புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம் என்பதால் அதன் பெயர் இல்லை. பழைய மாவட்டமான நாகப்பட்டினத்தை குறிப்பிட வேண்டியிருந்தது.
இந்த விஷயத்தை சுட்டிக் காட்டி மயிலாடுதுறையை மாவட்டங்களின் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கோரியிருந்தேன். சி. பி. கி. ரா. ம். ஸ் தில்லி அலுவலகம் இதனை தமிழ்நாடு முதலமைச்சர் பிரிவுக்கு அனுப்பியது. வெகு நாட்கள் இருந்த பின் இரண்டு நாட்களுக்கு முன் தில்லிக்கு சென்னையிலிருந்து அனுப்பப்பட்டது. அதன் மீது எடுக்கப்பட்ட் முடிவுகள் என்ன என்று நாம் அவ்வப்போது அந்த தளத்திற்கு சென்று பதிவு எண்ணை உள்ளிட்டு அறிய முடியும். நேற்று இரவு கூட நிலவரம் என்ன என்று பார்த்தேன். நிலுவை என்ற பழைய நிலையே இருந்தது.
இன்று ஒரு அலைபேசி அழைப்பு. சுட்டிக்காட்டப் பட்ட விஷயம் தீர்வு காணப்பட்டது என்று தெரிவித்தார்கள். நான் தளத்தில் சோதித்தேன். மயிலாடுதுறை மாவட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.
சற்று கூடுதல் அவகாசம் எடுத்துக் கொள்ளப்பட்டதால் ‘’சராசரி’’ என மதிப்பீடு அளித்தேன்.
நாய்க்கர் திருப்பணி
தமிழ்நாட்டு மக்களுக்கும் வினாயகருக்கும் உள்ள உறவு மிக அலாதியான ஒன்று. இன்றும் தமிழ்நாட்டில் வீதிக்கு வீதி இருக்கும் ஆலயங்களில் வினாயகர் ஆலயங்களே மிகுதி. விநாயகர் ஒரு செயல் துவங்கும் போது - துவங்கி நிகழ்த்தும் போது - ஏற்படும் விக்னங்களை நீக்கி செயல் சீராக நடைபெற உதவும் கடவுள். தமிழ்நாடு பெரும்பாலும் விவசாய நாடு. மழை, நீர் பாய்ச்சல், பனி, அறுவடை , ஆள் தேவை என பல விஷயங்களை நூறு நாட்கள் இடைவெளியில் தாண்டி பயிர் வளர்த்து அறுவடை செய்யும் வெள்ளாமையை மேற்கொள்ளும் நாடு. ஒவ்வொரு நிலையிலும் விக்னங்களைக் கடந்து வர வேண்டிய தொழில்முறை. எனவே விவசாயிகள் எப்போதும் விநாயகர் துணையை நாடுவார்கள்.
வினாயகர் எங்கும் எளிதில் இருப்பார். ஆற்றங்கரையில் குளக்கரையில் வீதி முக்கில். வயலில் தோட்டத்தில் என எங்கும் எளிதில் பொருந்திக் கொள்வார். பிரதிட்டை பூசனை ஆகிய வழிமுறைகள் எளிதானவை. வினாயகருக்கு அருகம்புல் சாத்தினால் போதும். ஒரு தீபம் ஏற்றினால் போதும். தினசரி என்பது அவருக்குக் கணக்கில்லை. எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். வெயில் மழை அவருக்கு ஒரு பொருட்டில்லை.
தமிழ்நாட்டில் குறிப்பாக தஞ்சைப் பிராந்தியத்தில் ஒரு பழக்கம் உண்டு. எவரேனும் சிலர் வினாயகர் கோவில் கட்ட வேண்டும் என விரும்பினால் வெளியூரில் வெட்ட வெளியில் இருக்கும் வினாயகரை இவர்கள் ஊருக்குத் தூக்கி வந்து விடுவார்கள். வெளியூர் காரர்கள் பொழுது விடிந்து வினாயகர் இருக்கும் இடம் வெற்றிடமாக இருப்பதைக் கண்டால் வேறு வினாயகர் சிலையை செய்து பிரதிட்டை செய்து கொள்வார்கள். அவர்கள் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்ல வினாயகரே முடிவெடுத்து விட்டதாகவே அவர்கள் எண்ணுவார்கள். அதனால் தான் இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது என அந்நிகழ்வைப் புரிந்து கொள்வது அவர்களின் வழக்கம்.
இந்த விஷயத்தைப் பின்புலமாகக் கொண்டு தி.ஜா எழுதிய சிறப்பான கதைகளில் ஒன்று நாய்க்கர் திருப்பணி.
சக்தி வைத்தியம்
தீர்மானம்
1957ம் ஆண்டு தி.ஜா எழுதியுள்ள சிறுகதை இது. தமிழ்ச் சமூகத்தில் இரு குடும்பங்கள் திருமண உறவு மூலம் இணையும் நிகழ்வு என்பது எளிய ஒன்று அல்ல ; பல்வேறு உள்சிக்கல்களால் ஆனது. பல்வேறு உணர்ச்சிகரங்கள் மோதிக் கொள்ளும் வெளி அது. ஒரு பணக்காரத் தந்தையின் மகளான சிறுமி சட்டெனத் தீர்மானித்து தனது புகுந்தக உறவினர்களுடன் அவர்கள் வீட்டுக்குச் செல்ல முடிவெடுக்கிறாள். தந்தை மகள் இருவருமே தீர்மானித்தால் அதனை நிறைவேற்றுபவர்கள். தந்தை மகள் அவர்களுடன் சென்று விட்டாள் என்பதை வீட்டிலிருந்த தனது சகோதரி மூலம் அறிந்து ஜட்கா வண்டி கட்டிக் கொண்டு தனது மகளுக்கு - தனது மகளுக்கு மட்டும் - உணவு கட்டிக் கொண்டு சென்று அவளை உண்ண வைக்கிறான். தந்தையின் மீது புகார் ஏதும் இன்றி அதனை உள்வாங்கிக் கொள்கிறாள் மகள்.
Tuesday 18 October 2022
அட்சராப்பியாசம்
பொருள் பற்று மிகுந்த ஒருவன் பொருள் பற்றின் காரணமாக சித்த சுவாதீனம் இல்லாமல் போகிறான். சித்த சுவாதீனம் இல்லாத நிலையிலும் தனக்குத் தேவையானதை எத்தனை சிரமப்பட்டாலும் பெற்று விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறான். அவனது இந்த சுபாவத்தை அவதானிக்கும் ஒருவர் அவன் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தில் முடிவு சொல்கிறார்.
முள்முடி
Monday 17 October 2022
யாதும் ஊரே
Sunday 16 October 2022
ரவீந்திரரின் ரஷ்யக் கடிதங்கள்
வங்க எழுத்தாளர் மைத்ரேயிதேவியின் ‘’நா ஹன்யதே’’ வங்க நாவலை வங்க மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த சு. கிருஷ்ணமூர்த்தியின் இன்னொரு மொழிபெயர்ப்பு நூல் ‘’ரவீந்திரரின் ரஷ்யக் கடிதங்கள்’’. ரஷ்யாவில் போல்ஷ்விக்குகள் மாஸ்கோவின் தொழிலாளர்களுடன் சேர்ந்து ஜார் மன்னனின் ஆட்சியை அகற்றி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு லெனின் தலைமையில் ஆளத் துவங்கிய போது உலகெங்கும் இருந்து சிந்தனையாளர்களை தங்கள் நாட்டை தங்கள் நாட்டின் தலைநகரை தங்கள் கல்வி நிலையங்களைக் காண வருமாறு அழைத்தனர். அந்த காலகட்டத்தில் உலகெங்கும் இருந்த பல சிந்தனையாளர்கள் ரஷ்யாவிற்குச் சென்று ரஷ்யா குறித்த தங்கள் அவதானங்களை எழுதியிருக்கின்றனர். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் ரஷ்ய கம்யூனிச அரசாங்கம் டிராட்ஸ்கி போன்ற சிந்தனையாளர்களையும் ஆசிப் மண்டல் ஸ்டம் போன்ற கவிஞர்களையும் கொன்றொழித்தது என்பது வரலாற்றின் நகைமுரண் அல்லது கம்யூனிஸ்டுகளின் ஆட்சிப் பாணி.