Thursday 30 September 2021

பொதுவெளி

நண்பர் ஒருவர் என்ஃபீல்டு வாகனம் புதிதாக வாங்கியிருக்கிறார்.  ‘’எரிநட்சத்திரம்’’ என்ற மாடல். அதன் விரைவுக்கும் வேகத்துக்குமான பெயராகச் சூட்டியுள்ளனர். நான் பைக்கில் இந்தியா முழுதும் சுற்றுபவன் என்பதால் பலரும் நான் என்ஃபீல்டு வாகனம் வைத்திருப்பவன் என்று அவர்களாகவே கருதிக் கொள்வார்கள். உண்மையில், நண்பர் வாங்கிய இந்த என்ஃபீல்டு வாகனத்தைத் தான் நான் முதல் முறையாக இயக்குகிறேன். அதாவது நேற்று ஒருநாள் மட்டும் தான் கணிசமான நேரம் என்ஃபீல்டை ஓட்டினேன். 

என்ஃபீல்டின் பெட்ரோல் மைலேஜ் எனக்கு கட்டுபடி ஆகாது. மேலும், இந்திய பைக் பயணம் போன்ற துடிப்பு மிக்க செயல்களைச் செய்ய சிறப்பாக உருவாக்கப்பட்ட தன்மை கொண்ட வாகனம் தேவை என்ற பொதுப்புத்தியில் மாற்றம் ஏற்படுத்தவே 100 சி.சி ஹீரோ ஹோண்டா வாகனத்தைக் ‘’குறியீட்டு ரீதியில்’’ பயன்படுத்துகிறேன். 

எனது பைக் எனக்கு பைக் மட்டும் கிடையாது. என் உற்ற தோழன். என் மீது பிரியமும் நம்பிக்கையும் கொண்டவன். என்னைப் புரிந்து கொள்பவன். எனக்கு ஆறுதல் அளிப்பவன். எனது 22 நாள் பயணத்தில் ( 6166 கி.மீ) ஒருமுறை கூட ‘’பஞ்சர்’’ ஆகாதவன். எனது பயணத்தின் கடைசி நாள் சிதம்பரம் வந்தடைந்த போது அதனை வாட்டர் சர்வீஸ் செய்தேன். சோப்பு நுரையால் வாகனத்தை மூழ்கடித்தார் வாட்டர் சர்வீஸ் காரர். ஈரமும் தண்ணீரும் வாகனம் முழுதையும் சூழ்ந்திருந்தது. வாட்டர் சர்வீஸ் முடிந்ததும் இக்னிஷன் சாவியை இயக்கி ‘’கிக்’’ செய்தார். ஒரே கிக். வாகனம் சட்டெனக் கிளம்பி என்ஜின் சீரான ஒலியை வெளிப்படுத்தியது. அப்போது தான் அவர் என்னிடம் கேட்டார் : ‘’சார் நீங்க எந்த ஊர்? எங்கேயிருந்து வரீங்க?’’ . அன்று நான் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூரிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டிருந்தேன். கிட்டத்தட்ட சிதம்பரம் வரை 350 கி.மீ பயணம். ‘’நெல்லூர்ல இருந்தா?’’ வியப்புடன் கேட்டார். நான் எனது 22 நாள் பயணம் பற்றி சொன்னேன். எனது வாகனம் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஆக்சிலேட்டர் கொடுக்கப்படாமலேயே மெல்ல இயங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது அவர் சொன்னார் ; ‘’சார்! இந்த பயணம் செய்யணும்னு உங்க வண்டி முடிவு செஞ்சிருக்கு. உங்க மனசு உங்களோட வண்டிக்கு முழுக்க புரிஞ்சு உங்க கூடவே இருந்திருக்கு.’’ 

நண்பர் என்ஃபீல்டு வாகனம் ‘’எரிநட்சத்திரத்தை’’ நான் இயக்க வேண்டும் என்று விரும்பினார். நேற்று திருச்சிராப்பள்ளி வரை சென்றோம். சென்று மீள கிட்டத்தட்ட 300 கி.மீ தூரம் கொண்ட பயணம். நான் 100 கி.மீ தூரம் வாகனத்தை ஓட்டினேன். 100 சி. சி வாகனதைப் போல 3.5 மடங்கு திறன் கொண்டது. எவ்வளவு வேகம் சென்றாலும் சில வினாடிகளில் வேகத்தைக் குறைத்து விட முடிகிறது. பிரேக் மிகத் துல்லியமாக இயங்குகிறது. வாகனம் ஒரு குழந்தையைப் போல் உள்ளது. நண்பருக்கு இந்த வாகனத்தில் லடாக் வரை பயணிக்க வேண்டும் என்று விருப்பம். நாம் சேர்ந்து செல்வோம் என்றார். ஈஸ்வர ஹிதம் என்று பதிலளித்தேன். 




பல விஷயங்களைப் பேசிக் கொண்டு சென்றோம். தமிழ்ச் சமூகம் குறித்து எனது அவதானம் ஒன்றை நண்பரிடம் சொன்னேன். 

‘’அதாவது, ஒற்றுமையா இருக்கக்கூடிய சமூகங்கள் தான் முன்னேறும். எல்லாருக்குமான வளர்ச்சிங்கறது சமூக ஒற்றுமை மூலமா மட்டுமே சாத்தியம். அதுல கவனிச்சுப் பாத்தோம்னா ஒரு சமூகம் ஒற்றுமையா இருக்கணும்னா அதுக்காக வெவ்வேறு மட்டங்கள்ல வேலை செய்ரவங்க இருக்கணும்.  சுவாமி சித்பவானந்தா ‘கல்வி’ ன்னு ஒரு புக் எழுதியிருக்கார். அதப் படிச்சுப் பாருங்க. அதுல ஒரு இடத்துல அவர் சொல்றார் : ஒரு ஊர்ல இருக்கற பள்ளிக்கூடத்துல இருக்கற எல்லா குழந்தைகளுக்கும் ஒருவேளை உணவு அந்த பள்ளியில கொடுக்கப்படணும். வசதி உள்ளவங்க, வசதி இல்லாதவங்கன்னு எல்லா வீட்டுக் குழந்தைகளும் அந்த உணவைத் தான் சாப்பிடணும். அவங்க ஒன்னா சேந்து சாப்பிடறதும் அவங்க கல்வியோட ஒரு பகுதி. இது அவங்களுக்குள்ள ஒற்றுமையை ஏற்படுத்தும். நாளைக்கு அவங்க தான் அந்த ஊரோட எதிர்காலம். அவங்களுக்குள்ள ஏற்படற இணக்கம் ஊரை ஒற்றுமைப்படுத்தும்.’’

பல விஷயங்களைப் பேசிக் கொண்டு சென்றோம். 

சமீபத்தில் நீண்ட பயணங்கள் செல்வது சற்று குறைந்திருக்கிறது. நானாவித அலுவல்கள். நேற்று மேற்கொண்ட பயணம் மீண்டும் ஒரு இந்தியப் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கியிருக்கிறது. ’’ஈஸ்வர ஹிதம்’’.    

Saturday 25 September 2021

ஸ்ரீ சாரதாதேவியாரது சரிதம்


{ நூல் : ஸ்ரீ சாரதாதேவியாரது சரிதம் , ஆசிரியர் : சுவாமி சித்பவானந்தா வெளியீடு : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை , திருச்சி மாவட்டம் , 639115 விலை : ரூ. 25 } 

ஞானிகளின் வாழ்வில் நிகழும் ஒரு சம்பவமே அவர்களின் நிறைநிலையை உணர்த்தி விடும். அன்னை சாரதாதேவியின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்மையப்பர்
-------------------------

அன்னை சாரதா தேவி ஒருமுறை தன் ஊரைச் சேர்ந்த பெண்களுடன் ஜெயராம்பாடி என்ற ஊரிலிருந்து தக்‌ஷ்ணேஸ்வரத்துக்கு நடந்து வந்து கொண்டிருக்கிறார். அன்று அன்னையின் உடல் பெரும் நலிவு கொண்டிருப்பதால் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார். மற்றவர்களும் தன்னால் தாமதிக்க வேண்டாம் என அவர்களை முன்னால் செல்லச் சொல்கிறார். அனைவரும் சென்று விடுகின்றனர். மாலைக்குள் நடந்து கடக்கும் அந்த தூரத்தை இரவாகியும் அன்னையால் கடக்க முடியவில்லை. மிக மெதுவாக காட்டில் நடந்து வருகிறார். அது கொள்ளையர்கள் மிகுந்திருக்கும் காடு. அவர்கள் நரபலி கொடுக்கும் வழக்கம் உடையவர்கள். 

அத்தகைய கொள்ளைக்காரன் ஒருவன் அன்னை நடந்து வருவதைப் பார்த்து அவர் முன் செல்கிறான். ‘’நீ யார்?’’ என்று கேட்கிறான். 

அன்னை அவனிடம் , ‘’நான் உன் மகள் சாரதை’’ என்று பதிலளிக்கிறார். 

அன்னையின் அச்சொல் கொள்ளையன் மனதை இளகச் செய்கிறது. அப்போது கொள்ளையனின் மனைவியும் அங்கே வந்து விடுகிறார். 

அன்னை அவளிடம், ‘’அன்னையே! என் உடன் பயணித்தவர்கள் முன்னே சென்று விட்டார்கள். நான் இந்த காட்டைக் கடந்து செல்ல வேண்டும்’’ என்று அவள் கையைப் பிடித்தவாறு கூறுகிறார். 

கொள்ளையனும் அவன் மனைவியும் உள்ளம் உருகுகின்றனர். வனத்தில் தாங்கள் வசிக்கும் இடத்துக்கு தங்கள் ‘’மகளை’’ அழைத்துச் செல்கின்றனர். இரவு உணவு அளித்து உறங்கச் செய்கின்றனர். காலை அன்னை எழுந்ததும் அவருக்கு போதுமான உணவளித்து வழித்துணையாய் உடன் வருகின்றனர். 

ஊர் வந்து சேர்ந்ததும் அந்த தம்பதிகளைத் தம் ‘’அம்மையப்பர்’’ என்று அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார் அன்னை. 

இந்த சம்பவத்துக்குப் பின் அவர்கள் இருவரும் வன்முறை மார்க்கத்தைக் கைவிட்டு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர்கள் ஆகின்றனர்.  

 

சகோதரி நிவேதிதை

{ நூல் : சகோதரி நிவேதிதை , இயற்றியவர் : சுவாமி சித்பவானந்தர் , பதிப்பகம் : ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை , திருச்சி மாவட்டம், 639115. விலை : ரூ.30}

இந்திய மரபு ஆசானின் வாழ்வை முழுமையடைந்த ஒன்றாகவும் ஆசிரியரின் வாழ்வை - வாழ்வின் சம்பவங்களை நினைவு கூர்வதை ஓர் ஆன்மீகப் பயிற்சியாகவும் கொள்கிறது. நிறைநிலை வாய்க்கப்பெற்று மண்ணில் அவதரித்த இராமனின் கதையையும் குழந்தை இயல்பும் உன்னத ஞானமும் கொண்டிருந்த கிருஷ்ணனின் கதையையும் இந்திய நிலம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருக்கிறது. ஆசானின் பெயரை உள்ளன்புடன் உச்சரிப்பதும் ஆசானின் வரலாற்றை மீண்டும் மீண்டும் படிப்பதும் மாணவன் அகத்தைத் தூய்மைப்படுத்தும் செயலாகக் கொள்கிறது இந்திய மரபு. ஆசிரியர்கள் சத்வ, ரஜோ, தமோ குணங்களின் இணைவால் ஆன உலக வாழ்வைக் கடந்து அதற்கு அப்பால் இருக்கும் இடத்திலிருந்து இந்த உலகை இந்த வாழ்வை இங்கிருக்கும் மனிதர்களைக் கருணையுடன் பார்க்கின்றனர். அவர்களின் வாழ்வு அவர்களின் கருணையின் செய்தியாகிறது. 

சகோதரி நிவேதிதை தமிழ்க்கவி பாரதிக்கு ஞான ஆசிரியராக விளங்கியவர். பாரதியிடம் வேதாந்தத்தின் தாக்கம் மிக உண்டு. பாரதி சகோதரி நிவேதிதையைக் குறித்து எழுதிய பாடல் : 

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா டாம்பயிர்க்கு மழையாய் இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப் பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்

மார்கரெட் நோபில் என்ற இயற்பெயருடைய சகோதரி நிவேதிதை அயர்லாந்தில் ஒரு மதபோதகர் ஒருவரின் மகளாகப் பிறந்தார். தனது பாட்டியால் சிறு வயது முதல் வளர்க்கப்படுகிறார். நுணுக்கமான மன அமைப்பும் கூர்மையான அறிவுத் திறனும் மென்மையான உணர்வுகளும் கொண்டவராக வளர்ந்து வருகிறார். கல்வியில் சிறப்பான ஆர்வம் இருக்கிறது அவருக்கு. தான் படித்த பள்ளியில் சக மாணவிகளைத் தலைமை தாங்கி வழி நடத்துபவராகவும் அவர்களின் உள்ளத்துக்கினிய தோழியாகவும் ஒருங்கே அமையப்பெற்றிருக்கிறார். பள்ளியின் ஆசிரியைகள் அவர் மேல் அன்பைப் பொழிகின்றனர். 

பள்ளி , கல்லூரிப் படிப்பு நிறைவு பெற்ற பின் ஒரு கல்லூரியிலும் பின் ஒரு பள்ளியிலும் ஆசிரியையாக பணி புரிகிறார். அவரது மனம் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஓயாத ஆவல் கொண்டிருக்கிறது. சுரங்கத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பணி ஆற்றுகிறார். 

தனது அகத்தை ஒளியால் நிறையச் செய்யும் திறன் வாய்க்கப்பெற்ற ஞானாசிரியனை ஒரு மாணவன் சந்திக்கும் கணம் என்பது அரியது. வைரம் போல் ஒளி விடுவது. இங்கிலாந்தில் சுவாமி விவேகானந்தரைச் சந்திக்கிறார் சகோதரி நிவேதிதை. வேதாந்தத்தின் சிம்ம கர்ஜனையை சுவாமிஜியின் இனிய சொற்கள் மூலம் கேட்கிறார். குருதேவர் ராமகிருஷ்ணரின் மார்க்கமே இனி தனக்கான மார்க்கம் என முடிவு செய்து அந்த ஆத்மீகப் பயணம் அன்றி தன் வாழ்க்கைக்கு வேறு நோக்கம் இல்லை என முடிவு செய்கிறார் சுவாமி நிவேதிதை. சுவாமிஜியிடம் துறவு அளிக்குமாறு வேண்டுகிறார். பலமுறை யோசித்து முடிவெடுக்குமாறு சுவாமிஜி கூறுகிறார். தனது தெள்ளிய உள்ளப் பாங்கால் இந்தியா வந்தடைகிறார் சகோதரி நிவேதிதை. சுவாமி விவேகானந்தர் அவருக்கு துறவறத்துக்கான தீட்சையை அளித்து உயர்ந்த நோக்கத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டவள் என்ற பொருள் கொண்ட ‘’நிவேதிதை’’ என்ற பெயரை அளிக்கிறார். 

கல்கத்தாவில் பெண்களுக்கான பள்ளி ஒன்றைத் துவக்குகிறார் சகோதரி. அமர்நாத் யாத்திரை மேற்கொள்கிறார். பின்னர் பத்ரிநாத்துக்கும் கேதார்நாத்துக்கும் செல்கிறார். கல்கத்தாவில் பிளேக் நோய் பரவிய போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையத்தை நடத்துகிது ஸ்ரீராமகிருஷ்ண மடம். அந்த பணிகளை முன்னின்று செய்கிறார். 

தனது குருநாதரான சுவாமி விவேகானந்தர் உடலை உதிர்த்து பரத்துடன் கலந்த பின், சில ஆண்டுகள்  ஆன்ம சாதனைகளில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் சகோதரி நிவேதிதை. பல்வேறு விதமான சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சகோதரி நிவேதிதை 1911ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி சமாதியடைந்தார்.  சிவோஹம் சிவோஹம். 

Friday 24 September 2021

பரிந்துரை

’’வணிக அங்காடி’’ நண்பன் ஃபோன் செய்தான். 

‘’இன்னைக்கு என்ன பிளான்?’’

‘’கடலூர் பக்கத்துல ஒரு கோயில்ல 150 மரக்கன்னு வேணும்னு கேட்டாங்க. கொண்டு போய் கொடுத்துட்டு வரணும்.’’

‘’நானும் வர்ரேன்’’

‘’ஓ.கே. நீ ஆம்னி ஓட்டுவியா?’’

‘’எல்லா காரும் ஓட்டுவேன்’’

எல்லா காரும் ஓட்டுவதும் என்னுடைய கார் ஓட்டுவதும் ஒரே ரகமானதில்லை என்பது எனக்குத் தெரியும். என் காரை ஓட்டியவர்களுக்குத் தெரியும். இவன் புதிது. 

‘’முதல்ல நாம ஆடுதுறை போகனும். அங்க கவர்மெண்ட் ஃபார்ம் இருக்கு. மரக்கன்னு வாங்கிகிட்டு கடலூர் கிட்ட போகணும்.’’

‘’ரூட் எப்படி?’’

’’ஆடுதுறை - அணைக்கரை - சேத்தியாத்தோப்பு - வடலூர் - கடலூர்’’

‘’ரிடர்ன் எத்தனை மணி ஆகும்?’’

‘’காலைல 10 மணிக்கு கிளம்புனா சாயந்திரம் 5 மணி ஆயிடும்’’

''மதிய சாப்பாடு ?’’

‘’ஆன் தி வே - ல’’

மறுநாள் காலை கார் கண்ணாடிகளைத் துடைத்து வைத்தேன். 

பேருந்து நிலையங்களில் தொலை தூரம் செல்லும் பேருந்துகளின் ஓட்டுனர்கள் கண்ணாடியை முதலில் துணியால் தூசி தட்டி பின் தளும்ப தண்ணீரை ஊற்றி பருத்தித் துணியாலும் பின்னர் செய்தித்தாள் காகிதத்தாலும் துடைப்பார்கள். கண்ணாடி தெளிவாக இருப்பதற்கு. அதைப் போல் நானும் வண்டியைத் தயார் செய்து வைத்தேன். 

நண்பன் வண்டியை ஓட்டத் தொடங்கினான். 

‘’பவர் ஸ்டியரிங்-ல ஓட்டிட்டு மானுவல் ஸ்டியரிங் கொஞ்சம் வித்யாசமா இருக்கு’’

நான் பதில் சொல்லவில்லை. 

’’வண்டி எந்த வருஷ மாடல்’’

‘’2004’’

‘’ரீ - வேல்யூசன் செஞ்சிருக்கணுமே?’’

‘’ரெண்டு வருஷம் முன்னாடி’’

‘’எத்தனை சி சி’’

‘’894’’

‘’என்ஃபீல்டு பைக் 400 சி. சி’’

அதற்கு நான் என்ன செய்ய முடியும் என யோசித்தேன்.  

‘’சூப்பர் மார்க்கெட் ஞாபகமாவே இருக்கு’’

‘’பல வருஷ பழக்கம் இல்லையா. வீ ஆர் ஆல் ஆஃப்டர் ஆல் ஹியூமன் பீயிங்க்ஸ்.’’

‘’மனசு முழுக்க பிஸினஸ் ஞாபகமாவே இருக்கு. என் பிராப்ளத்தை எப்படி சால்வ் பண்றதுன்னு தெரியலை. ஏதாவது வழி சொல்லு’’

‘’ஒரு விஷயம் புரிஞ்சுக்க. லௌகிகம் மனுஷனுக்கு அன்னியமானது இல்ல. நாம எல்லாரும் அந்த கடல்ல தான் இருக்கோம். சில பேர் அதுல மூழ்கிக் கிட்டு இருக்காங்க. சில பேருக்கு அதுல எப்படி மிதக்கணும்னு தெரியுது. சில பேர்ட்ட தோணி இருக்கு. சில பேர்ட்ட கட்டுமரம் இருக்கு. சிலர்ட்ட கப்பல் இருக்கு. அவ்வளவு தான் வித்யாசம். அலை அடிக்கற கடல் மாதிரி லௌகிக வாழ்க்கை. எப்ப வேணாலும் புயல் அடிக்கும். மழை பெய்யும். பெரிய அலை வரும். சம்சார சாகரம். ‘’

’’நிறைய பணம் இருக்கு. ஆனா சந்தோஷம் இல்லை’’

‘’பணம் நிறைய இருக்கறது நல்ல விஷயம் தான். அத நினைச்சு கவலைப்படத் தேவையில்லை. நூறு ரூபா சம்பாதிச்சா ஒரு ரூபாய் தானம் பண்ணு. அது கொடுக்கற நிம்மதி ரொம்ப பெரிசு’’

‘’என்ன செய்யணும் எப்படி செய்யணும்னு எனக்கு ஒன்னும் தெரியலையே’’

‘’உனக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3000 ரூபாய் லாபம் இருக்குமா?’’

‘’இருக்கும்’’

‘’அதுல 30 ரூபாயை மட்டும் தானத்துக்குன்னு எடுத்து வச்சுடு. வருஷத்துக்கு 11,000 ரூபாய் வரும். அத வச்சு எவ்வளவோ நல்ல காரியம் செய்யலாம்’’

‘’எது எது நல்ல காரியம்? இப்ப 11,000 ரூபா கையில இருந்தா என்ன செய்யலாம்?’’

‘’இது தீபாவளி சீசன். கையில 11,000 ரூபாயோட ஒரு ஸ்வீட் கடைக்குப் போ. ஒரு கிலோ ஸ்பெஷல் ஸ்வீட் 400 ரூபாய் இருக்கும். 25 கிலோ ஸ்வீட் ஆர்டர் பண்ணு.  கால் கிலோ பாக்கெட்டா 100  பேக் பண்ணி வாங்கிக்க. 100 ஆட்டோ எப்பவும் நிக்கற ஆட்டோ ஸ்டாண்டுக்கு போ. அங்க உள்ள எல்லா ஆட்டோ டிரைவருக்கும் கொடு.’’

நண்பன் அந்த காட்சியை மனதில் பார்த்தான். 

நான் தொடர்ந்து சொன்னேன். ‘’அத்தனை பேருமே அவங்க வீட்டுக்கு எடுத்துட்டு போயி ஃபேமிலி மெம்பர்ஸுக்குக் கொடுப்பாங்க. அதுல சின்ன குழந்தைகள் இருக்கும். வயசான பெரியவங்க இருப்பாங்க. அவங்க ஸ்வீட் எடுத்துக்கற போது உணர்ர கண நேர இனிமை எவ்வளவு அபூர்வமானது. அது எத்தனை நெகிழ்வை நம்பிக்கையை கொடுக்கும் தெரியுமா?’’




நண்பன் உண்மைதான் என ஆமோதித்தான். 

Thursday 23 September 2021

இளைப்பாறல்


எனது பள்ளித்தோழன் ஒருவன் சென்னை தி.நகரில் ஓர் வணிக அங்காடியை நடத்தி வருகிறான். ஊரிலிருந்து சென்னை சென்று சில ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து பின் ஒரு பங்குதாரருடன் இணைந்து அங்காடி வணிகம் ஆரம்பித்து நடத்தி வந்தான். வணிகம் நன்றாக நடந்தது. இவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த கட்டடம் ஒரு நீதிமன்ற வழக்கில் இவர்கள் வாடகை ஒப்பந்தம் போட்டிருந்தவருக்கு சாதமில்லாமல் போனதால் இடத்தை காலி செய்ய வேண்டியதாயிற்று. பங்குதாரர்கள் இருவரும் தனித்தனியே வணிக அங்காடியைத் தொடங்கினர். காலை 7 மணிக்கு அங்காடிக்குச் செல்வான். இரவு 10 மணிக்கு வீடு திரும்புவான். ஞாயிற்றுக்கிழமையும் அங்காடி உண்டு. 15 ஆண்டுகள் இப்படியே ஓடி விட்டது.  ஒரே இடத்தில் நாள் முழுதும் அமர்ந்தே இருப்பதால் உடலில் சில சிக்கல்கள். மருத்துவரை நாடி ஆலோசனை கேட்டிருக்கிறான். முப்பது நாட்கள் கடைக்குச் செல்லாமல் ஓய்வெடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். தனது மாமனாரை கல்லாவில் அமர வைத்து விட்டு ஊருக்கு வந்து விட்டான். 

‘’எந்த ஆர்டரும் புதுசா எடுக்க வேண்டாம். சப்ளையர் வந்து கேட்டா ஒரு மாசத்துல நான் வந்து ஆர்டர் போட்டுக்கறன்னு சொல்லிடுங்க. வசூலுக்கு யார் வந்தாலும் அவங்க கேக்கற தொகைல பாதி தொகை கொடுங்க. மீதியை அடுத்த மாசம் பாக்கலாம்னு சொல்லிடுங்க.’’ மாமனாரிடம் செயல் குறிப்புகளைக் கொடுத்து விட்டு விடுபட்டிருக்கிறான். 

என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்தான். பழைய விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். 

‘’பிரபு! சின்னதா நாம ஒரு டிரிப் போவோம்’’

மறுநாள் காலை 9 மணி என நேரம் சொன்னேன். 30 நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தான். அவனுடைய பைக்கில் ஏறி அமர்ந்தேன். போகுமிடம் எது என்று கேட்டான். நான் முடிவு செய்திருக்கவில்லை. கடைத்தெருவுக்குச் சென்று அங்கே முடிவு செய்து கொள்ளலாம் என்றேன். நாங்கள் பள்ளியில் படித்த போது கடைத்தெருவில் ஒரு கடையில் லெமன் சர்பத் குடிப்போம். அங்கு சென்று லெமன் சர்பத் குடித்து பயணத்தைத் துவக்கினோம். 

''பிரபு ! ரிஷிகேஷ் வரைக்கும் பைக்ல போன போது ஊர் வீடு தொழில் இந்த ஞாபகங்களை எப்படி சமாளிச்ச?’’

‘’செல்ஃபோனை கையில எடுத்துக்காம இருந்தா போதும். நாம புறப்படும் போது எல்லாம் நல்லாத்தான் இருக்கு. எல்லாம் சரியாத்தான் இருக்கு. செல்ஃபோன் இல்லாம போய்ட்டாலே நம்ம மனசு முழுக்க எந்த இடத்துல நாம இருக்கமோ அந்த இடத்தில இருக்கும். கையில செல்ஃபோனை வச்சுக்கிட்டு இருந்தா வர்ர ஃபோன்கால்ஸ் ஏதாவது ஒரு விதத்துல நம்முடைய ரொட்டீன் மைண்ட் செட்ட நம்ம கிட்ட கொண்டு வந்துடும்’’

‘’செல்ஃபோன் இல்லாம நினைச்சே பாக்க முடியல. என்னோட டாக்டர் ஒரு மாசம் ரெஸ்ட் எடுக்கச் சொன்னப்ப உங்க செல்ஃபோனை சென்னைலயே வச்சுட்டு போயிடுங்க. ஊருக்குக் கொண்டு போகாதீங்கன்னு சொல்லிட்டார். நானும் ஃபோனை அங்கயே வச்சுட்டு வந்துட்டன். ஆனா ஒரு மாதிரி படபடப்பா இருக்கு. ஏதாவது முக்கியம்னா வீட்டு லேண்ட் லைனுக்கு மாமனார் ஃபோன் செய்வார். எல்லாம் ஸ்மூத்தா போகுது. பிராப்ளம் ஒன்னும் இல்ல’’

‘’நாம இருந்தா தான் எல்லாம் சரியா இருக்கும்னு நினைக்கறது மனுஷ சுபாவம். ஆனா அது முழு உண்மை இல்லை. வேணா பகுதி உண்மைன்னு சொல்லலாம்’’

‘’கொஞ்சம் கால்சியம் டேப்ளட்ஸ். விட்டமின் டேப்ளட்ஸ். உங்களுக்கு உடம்புக்கு ஒன்னும் இல்ல. மனசு மெஷின் மாதிரி ஆயிடுச்சு. அதுல இருந்து ரிலீவ் ஆகுங்கன்னு சொன்னார்’’

‘’காலைலயும் ஈவ்னிங்கும் வாக்கிங் போ’’

‘’வாக்கிங் போகும் போது ரொம்ப தனியா இருக்கற மாதிரி இருக்கு. அது ரொம்ப இன்கன்வீனியண்ட்டா ஃபீல் ஆகுது’’

‘’எந்த உயிரும் கருவுல உருவாகும் போதே ‘’நான்’’னு உணருது. அது எல்லா உயிருக்கும் இருக்கற பொதுவான ஞாபகம். பின்னால் உணர்வால அறிவால நம்மைச் சுத்தி இருக்கற எல்லாமே நாம உணர்ர அதே ‘’நான்’’னு புரிஞ்சுக்குது. சில ஜீவன்களுக்கு அது சில நாள்ல - சில மாசத்துல - சில வருஷத்த்துல இல்லன்னா பல வருஷத்துல நடக்குது. அது நூறு கோடி ஜீவன்ல ஒன்னு. மத்ததுக்கெல்லாம் ஆயிரம் ஜென்மம் தேவைப்படுது. ‘’

நண்பன் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தான். எதிர்க்காற்று எங்கள் முகத்தில் அலை மோதியது. 

‘’என் கிட்ட எல்லாம் இருக்கு. பணம் குடும்பம் ஸ்டேட்டஸ். ஆனா மனசுல ஒரு குறை இருக்கு. அது எப்பவும் இருக்கு. ‘’

நாங்கள் திருவாவடுதுறை என்ற ஊருக்குப் பக்கத்தில் ஒரு கால்வாய்க்கரையில் இருக்கும் எண்பது ஆண்டுகளுக்கு மேல் வயதான ஒரு ஆலமரத்தின் அடிக்கு வந்து சேர்ந்திருந்தோம். விழுதுகள் தங்களை மையப்படுத்தி ஆங்காங்கே பெருவளர்ச்சி கொண்டு வளர்ந்திருந்தன. மரத்தின் மையம் எது என்பதை அவ்வளவு  எளிதில் கண்டுபிடித்து விட முடியாது என்னும் அளவுக்கு பிரும்மாண்டம். 

மரத்தின் வேரில் அமர்ந்து கொண்டோம். நூற்றுக்கணக்கான காக்கைகள் எங்கள் தலைக்கு மேல் கரைந்து கொண்டிருந்தன. 

‘’பிரபு ! மனசு எப்பவும் அன் ரெஸ்ட் டாவே இருக்கு’’

’’டாக்டர் என்ன சொல்றார்?’’

‘’மெண்டல் ஸ்ட்ரெஸ் உங்களுக்கு இருக்குன்னு சொன்னார்?’’

‘’எப்படி ரிலீவ் ஆகுறதுன்னு சொன்னாரா?’’

‘’டெய்லி ரெண்டு மணி நேரம் வாக் போகச் சொன்னார். நீச்சல் தெரியும்னா தினம் ஒரு மணி நேரம் ஸ்விம் பண்ணுங்கன்னு சொன்னார். ஒரு மாச பிரேக்குக்கு அப்புறம் அதைச் செய்ங்கன்னார்.’’

‘’ரொம்ப யூஸ் ஃபுல்லான யோசனை தான். ஒன்னு காத்துல மிதக்கறது. இன்னொன்னு தண்ணில மிதக்கிறது’’

‘’எல்லாம் சரி ஆயிடுமா?’’

‘’நம்ம டிரடிஷன் நம்ம உடல் பஞ்ச பூதங்களால ஆனதுன்னு சொல்லுது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம். வெறுங் கால்ல நடந்தா இல்லன்னா கிரவுண்ட்ல பாட்மிட்டன் ஆடினா நிலத்தோடயும் காத்தோடயும் தொடர்பு கிடைக்கும். ஸ்விம் பண்ணா நீரோட தொடர்பு இருக்கும். உடம்பு வேர்க்க இதைச் செய்தாலே பாடி டெம்ப்பரேச்சர் நமக்கு சகாயமா இருக்கும்.’’

‘’ஆகாயம்?’’ என்றான் நண்பன். 

நான் மேலே பார்த்தேன். காகங்கள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தன. 

‘’பறவைகள் வானத்தோட நெருங்கின சொந்தங்கள். வானத்தோட குழந்தைகள்னு கூட சொல்லலாம். அந்த பறவைகளுக்கு தினமும் கொஞ்சம் தானியம் போடு. வானம் உனக்கு ஹெல்ப் பண்ணும்’’ என்றேன். 

காகங்கள் ‘’கா கா’’ என்றன.   

Saturday 18 September 2021

சமூகமும் நீதியும்


இந்தியாவைக் கூர்ந்து நோக்குபவர்களால் ஒரு விஷயத்தை உணர முடியும். இந்திய நிலம் எண்ணற்ற தன்மை வேறுபாடுகளைக் கொண்டது. ஒவ்வொரு நூறு கிலோமீட்டர் தூரத்துக்கும் மாறுபடும் மண் அமைப்பு, நீர்ச்சூழல் ஆகியவற்றைக் கொண்டது. ஆனால் இந்தியர்களின் அகம் சற்றேறக்குறைய ஒரே விதமானது. இந்தியர்களின் விழுமியங்கள் நாடெங்கும் பொதுவானவை. இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாறுதான் இருந்திருக்கிறது. பின்னரும் அது மெல்ல உறுதிப்படுத்தப்பட்டவாறே இருக்கிறது.  

நாம் இந்தியாவைப் பற்றி எவ்விதமாகச் சிந்தித்தாலும் முக்கியமான ஒரு அடிப்படை என்பது இந்திய விவசாயம் தான். இந்தியப் பண்பாடே இந்திய விவசாயத்தின் - இந்திய பருவமழையின் காலச் சக்கரத்துடன் ஒத்திசைந்து உருவானது. 

வனத்தில் மிருகங்களை வேட்டையாடுவதற்குக் கூட நியதிகள் இருந்தன. பெண் மிருகங்களை வேட்டையாடக் கூடாது. சினையாய் இருக்கும் மிருகங்களை வேட்டையாடக் கூடாது. மிருகக் குழவிகளை வேட்டையாடக் கூடாது. காட்டின் சூழியல் நிலையைப் பேண இந்த நியதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 

பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவின் வரி விதிப்பு முறைகளில் ஏற்படுத்திய மாற்றம் என்பது இந்திய விவசாயத்தை பெரும் சீரழிவுக்கு இட்டுச் சென்றது. இந்திய விவசாயத்தை பிரிட்டிஷார் அழித்தனர் என்பதே வரலாறு. 

மகாத்மா காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய போது பாரம்பர்யமான அணுகுமுறைகள் புத்துருவம் கொள்ள வேண்டும் என விரும்பினார். அவருடைய வாழ்க்கையும் அவருடைய செய்தியும் அதுவே. காந்திய வாழ்க்கைமுறை என்பது தினமும் குறைந்தபட்ச உடல் உழைப்பும், கூட்டு வாழ்க்கையும், சமயப் பிராத்தனைகளும் இணைந்ததே. 

இந்தியாவில் விவசாயிகள் நலன் பெற வேண்டும் என விரும்பியவர் அவர். இந்திய விவசாயியின் பொருளியல் நலனே தேசத்தின் நலன் என்ற புரிதல் கொண்டவர் அவர். 

நாடு சுதந்திரம் பெற்ற பின், ஐரோப்பிய பார்வை நோக்கு கொண்ட அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் கொள்கை முடிவுகள் எடுக்கும் இடத்துக்கு வந்தார்கள். அவர்களில் பலர், இந்திய சமூக வாழ்வின் நுண் அம்சங்களை அறியாதவர்கள். யாவருக்குமான பொருளியல் வளர்ச்சியை உண்டாக்கத் தெரியாதவர்கள். 

மகாத்மா இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் வளம் தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உடல் உழைப்பைத் தர வேண்டும் என விரும்பினார். கோடிக்கணக்கான மக்களின் ஒரு மணி நேரம் என்பது பல நாடுகளின் மொத்த உற்பத்தியை தாண்டிச் சென்று விடும் என காந்தி எண்ணினார். இராட்டையில் நூல் நூற்றல் என்பது அவ்விதமான குறியீட்டுச் செயல்பாடே. அந்த இராட்டை என்பது எளிய உடல் உழைப்பை அளிக்கும் பல்வேறு கருவிகளாக உருமாற்றம் கொள்ளக் கூடியதே. 

பொருள் முதல்வாதம் கட்டற்ற நுகர்வை விரும்புகிறது. கட்டற்ற நுகர்வு வெறி சமூகத்தின் எல்லா விதமான அழிவுக்கும் வழிகோலுகிறது. எல்லா விழுமியங்களையும் அழிக்கிறது. 

அனைவருக்குமான வளர்ச்சியும் அனைவருக்குமான நீதியும் உறுதிப்படுத்தப்படும் ஒரு வாழ்க்கைமுறையை உருவாக்கி அதில் வாழ்ந்து வழிகாட்டிப் போயிருக்கிறார் மகாத்மா. அவரது வழியே சமூகநீதிக்கான வழி. 

Wednesday 15 September 2021

பொறியாளர் தினம்

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் 

- பாரதி

Saturday 11 September 2021

வணக்கம்


அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா டாம்பயிர்க்கு மழையாய் இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப் பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்

-சி. சுப்பிரமணிய பாரதி




Thursday 9 September 2021

சந்திப்பு

 திங்களன்று ஆதித்யா ஃபோன் செய்தான். 

‘’அண்ணன் ! நான் வியாழக்கிழமை காலைல மைசூர் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்-ல டிக்கெட் புக் பண்ணியிருக்கன். காலைல 6.45க்கு மயிலாடுதுறை ஜங்ஷன் - ல இருப்பன்’’

‘’ஓ ! அப்படியா! காலைல நான் ஆம்னியை எடுத்துட்டு வந்துடறன். கார்ல உன்னை திருவாரூர் டிராப் செய்றன்’’

‘’திங்கள்கிழமை மயிலாடுதுறை - மைசூர் ஈவ்னிங் வண்டில ரிட்டர்ன் அண்ணா!’’

‘’ஓ.கே ‘’

கடந்த சில முறையாக மைசூரிலிருந்து நேராக இங்கு வந்து விடுகிறான். நான் தான் பிக் - அப் பும் டிராப் பும். 

என்னுடைய மோட்டார்சைக்கிளுடன் என் மனம் அதிக நெருக்கம் கொண்டு விட்டது. அந்த அளவுக்கு எனக்கு என் காருடன் நெருக்கம் கிடையாது. 250 - 300 மரக்கன்றுகள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் மட்டுமே ஆம்னியை எடுக்கிறேன். 

என்னுடைய ஹீரோ ஹோண்டா இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கியது. சரியாகச் சொன்னால் 21 ஆண்டுகள். உற்ற தோழனைப் போல உறுதுணையாய் இருந்திருக்கிறது. என் எல்லா மகிழ்ச்சிகளிலும். என் எல்லா துயரங்களிலும். நான் பொதுவாகவே சீரான வேகத்தில் செல்வதையே விரும்புவேன். எனவே எனது வாகனத்தின் என்ஜின் அந்த வேகத்துக்கே பழகி விட்டது. என் வண்டியை விரட்டி ஓட்ட முடியாது. 

நேற்று ஒரு ‘’ஆக்டிங் டிரைவர்’’ ருக்கு ஃபோன் செய்தேன். 

‘’அண்ணன் ! வணக்கம் அண்ணன். பிரபு பேசறன். நாளைக்கு காலைல மைசூர் வண்டில என் ஃபிரண்டு ஒருத்தர் வர்ரார். அவரை நம்ம ஆம்னில பிக் - அப் பண்ணனும். நீங்க வரலாமா?’’

‘’நாளைக்கு ஒரு முகூர்த்தம் இருக்கு சார்’’

‘’அப்படியா! சரி நான் மேனேஜ் செஞ்சுக்கிறன்’’

அப்போதே எனக்குத் தெரிந்து விட்டது. பிக் - அப் டூ-வீலரில் தான் என்று.




 

இன்று காலை 5 மணிக்கு அலாரம் வைத்திருந்தேன். அலாரம் அடிப்பதற்கு முன் கண் விழித்தேன். கண் விழித்து ஐந்து நிமிடத்தில் அலாரம் அடித்தது. குளித்துத் தயாராக முற்பட்டேன். தயாராகிக் கொண்டிருக்கிறேன் என ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன். ஜங்ஷனுக்குக் கிளம்பிய போது ஆதித்யாவிடமிருந்து ஃபோன்.

‘’அண்ணன்! குத்தாலம் தாண்டிட்டன்’’

வழக்கமாக வண்டி வர ஆறே முக்கால் ஏழு ஆகும். இன்று 6.20க்கே வந்து விடும் போல. மாமூல் வேகத்தை சற்று கூட்டி வாகனத்தை இயக்கினேன். மெயின் ரோட்டிலிருந்து ஜங்ஷன் செல்லும் சாலைக்கு வலது பக்கம் திரும்ப வேண்டும். அந்த சாலை 1 கி.மீ நீளம் உடையது. அதில் ஏதேனும் ஆட்டோ எதிர்ப்படுகிறதா என்று கவனித்தேன். எதுவும் இல்லை. எதிர்ப்பட்டால் ரயில் வந்து விட்டது என்று பொருள். ஜங்ஷனை நெருங்க 100 மீட்டர் இருந்த போது முதல் ஆட்டோவைக் கண்டேன். வண்டி வந்து இரண்டு நிமிடம் ஆகியிருக்கும் என்று கணக்கிட்டுக் கொண்டேன். 

ஜங்ஷன் வாசலிலிருந்து ‘’வாசலில் நிற்கிறேன்’’ என்ற குறுஞ்செய்தியை அனுப்பினேன். சில நிமிடங்களில் அவனது அழைப்பு. தகவலைச் சொன்னேன். இருவரும் பார்த்துக் கொண்டோம். 

என்னைப் பார்த்து புன்னகைத்தான். 

‘’தம்பி ! முன்னாடி உன் பிஹேவியர் ஒரு யங்ஸ்ட்டரைப் போல் இருக்கும். இப்போ உன் பாடி லாங்வேஜ் ஒரு பேங்க் ஆஃபீசரைப் போலவே ஆயிடுச்சு. இன்னும் ஒரு வருஷம் போனா செண்ட் பர்செண்ட் ஆஃபிசராவே ஆயிடுவே.’’

‘’அதெல்லாம் இல்ல அண்ணன். நேத்து சாயந்திரம் பாங்கில இருந்து நேரா மைசூர் ஸ்டேஷன் போய் வண்டி ஏறிட்டன். பேங்க்-ல நேத்து போட்டிருந்த ஃபார்மல் டிரஸ் ஸோட பாக்கறதால உங்களுக்கு அப்படித் தோணுது’’ . என் கூற்றில் உண்மையிருப்பது அவனுக்குத் தெரியும். இருந்தாலும் அந்த நேரத்துக்கு பொருத்தமாகச் சொல்லி சமாளித்தான். 

என் வாகனத்தின் பின்புறம் அமர்ந்து கொண்டான். 

‘’உன்னோட டிராவல் பேக் ஐ என்கிட்ட கொடு. நான் பெட்ரோல் டேங்க் மேல வச்சுக்கறன்’’

‘’இல்லை பரவாயில்லை அண்ணன்! வெயிட் கொறச்சதான். என்கிட்டயே இருக்கட்டும்’’

கொஞ்ச தூரம் போனோம். மீண்டும் கேட்டேன். 

‘’ பேக் பில்லியன் ஹேண்டில்ல சீட் ஆகி யிருக்கு அண்ணன். டோண்ட் ஒர்ரி’’

இன்னும் கொஞ்ச தூரம் போனோம். 

‘’தம்பி! எனக்கு ஒரு டவுட். உன்னோட டிராவல் பேக் ஷோல்டர் டைப். அது எப்படி பில்லியன் ஹேண்டில்ல சீட் ஆகும். உன் முதுகுல இருந்து இன்கன்வீனியண்ட்டா இருக்காதா?’’

‘’அண்ணன் ! பேக் ஐ லூஸ் பண்ண முடியும். பேருக்கு தான் முதுகுல இருக்கு. மத்தபடி வெயிட் வண்டிக்குத்தான்.’’

‘’ஓ ! அப்படியா! இப்ப புரிஞ்சது. ‘’

‘’உங்க மனசு ஃபங்ஷன் ஆகற விதம் ஆச்சர்யமானது அண்ணன்’’

அப்பாவியாக ‘’தெரியாததைக் கேட்டுத்தானே தம்பி தெரிஞ்சுக்கணும் ‘’ என்றேன். 

ஊருக்கு வெளியே வந்து விட்டோம். ஒரு பகுதியைத் தாண்டினோம். 

‘’தம்பி ஒரு கிராமங்கறது மூணு அல்லது நாலு ஹேம்லெட் சேர்ந்தது. ரெவின்யூ கணக்குல குக்கிராமம்னு சொல்வாங்க. இந்த ஹேம்லெட் நாம வேக்சினேஷனுக்காக ஒர்க் பன்ன வில்லேஜ்ஜை சேர்ந்தது. என்ன ஆச்சுன்னா ரயில்வே லைன் மெயின் கிராமத்துக்கும் இந்த ஹேம்லெட்டுக்கும் இடையே இருக்கறதால கார் டூ-வீலர் ஆறு கிலோ மீட்டர் சுத்திகிட்டு தான் வர முடியும். இந்த ஹேம்லட்ல 18+ பாப்புலேஷன் 112 பேர். அந்த 112 பேரும் வாக்சினேட் செஞ்சுகிட்டாங்க. ‘’

ஆதித்யா மனத்தில் கிராமம் குறித்து ஓடிக் கொண்டிருந்தது. 

‘’அண்ணன்! மாண்டியாவோட லேண்ட் ஸ்கேப்பும் நம்ம லேண்ட் ஸ்கேப்பும் கிட்டத்தட்ட ஒண்ணு’’

‘’பரவாயில்லை தம்பி. கர்நாடகா போனதுல உன்னோட பார்வை கொஞ்சம் விரிவாகியிருக்கு. உன் மனசுல ரெண்டு விஷயம் ஓடுது. ஒன்னோட இன்னொன்ன ஒப்பிட்டு புரிஞ்சுக்க முயற்சி பண்ற. அது பல விஷயத்துல ஹெல்ப் பண்ணும்’’

‘’உங்களுக்கு கிராமம்ங்கற பேசிக் யூனிட் பிடிபட்டிடுச்சு. என்னால அத இன்னும் முழுசா புரிஞ்சுக்க முடியல’’

‘’ஞாயித்துக்கிழமை ஒருநாள் உனக்கு வாரம் ஒருநாள் லீவு இருக்குல்ல. அந்த லீவுல உன் பிராஞ்ச்சுக்கு பக்கத்துல இருக்கற கிராமத்துக்குப் போ; அங்க உள்ள மக்கள்ட்ட பேசு. நீ அவங்களுக்கு ஏதும் உதவி செய்யணும்னு கூட அவசியம் இல்லை. வெறுமனே அவங்கல பத்தி கேளு. அவங்க எதை விரும்புறாங்க. எதை முக்கியம்னு நினைக்கறாங்க. எதை முன்னேற்றம்னு எடுத்துக்கறாங்க. அதப் பத்தியெல்லாம் பேசு. ‘’தன்னோட வீடு தேடி வந்த ஒருவனை முக்கியமா நினைக்கற’’ பண்பு இந்திய கிராமங்கள்ல இருக்கு. இன்னைக்கு நேத்து இல்ல 5000 வருஷத்துக்கு மேல இருக்கு. மக்களை மீட் பண்ணு. அது உனக்கு பல விஷயங்களை புரிய வைக்கும். ‘’

அவன் நான் சொன்ன விஷயத்தை மனதுக்குள் பரிசீலித்தான். 

நான் தொடர்ந்து பேசினேன். 

‘’சமீபத்துல திருவாரூர் பக்கத்துல ஒரு கிராமத்துக்குப் போயிருந்தன். மயிலாடுதுறைக்காரர் ஒருத்தர் அங்க வீடு வாங்கிட்டு போய் செட்டில் ஆகியிருக்காரு. அந்த கிராமத்தைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம். காவிரியோட கடைமடை. ஒரு போகம் மட்டும் தான் பயிர் பண்றாங்க. அதுவும் நெல் நடவு கிடையாது. மழைக்காலத்த ஒட்டி விதைச்சு விட்டுடுறாங்க. அப்ப பேயற மழைல நெல் முளைச்சு வருது. வருஷத்துல 30 அல்லது 40 நாள் தான் விவசாய வேலை. மத்த நாள் வேலை இல்லைன்னு சொன்னாரு. எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு. இந்த பகுதிகள்ல ஏக்கர் கணக்குல வேம்பு நடலாம். மழைக்காலத்தை ஒட்டி நட்டா மழைல வளர்ந்துடும். ஒரு கோடையை தாண்டிடிச்சுன்னா அடுத்த மழைல நல்லா டெவலப் ஆயிடும். நான் இந்த ஊர் விவசாயிகளை சந்திச்சு பேசறன்னு சொன்னேன். என்னோட நண்பர் அந்த டீ-டியெயில்ஸ் கொடுங்க. இந்த கிராமத்துல நான் ஒர்க் பண்ணி பாக்கறன்னு சொன்னாரு’’

‘’வேம்புல என்னண்ணா லாபம்?’’

‘’வேப்பங்கொட்டை. அதுல இருந்து வேப்ப எண்ணெய் எடுக்கலாம்ங்கறதால அதுக்கு நல்ல டிமாண்ட் எப்பவும் உண்டு. நெல்லுல மூணு போகத்துல கிடைக்கற லாபத்தை விட நல்ல லாபம்’’

‘’உங்களுக்குத் தெரியறது விவசாயமே தொழிலா இருக்கற விவசாயிகளுக்குத் தெரியாதா அண்ணா?’’

‘’சோஷியல் பிஹேவியர் - சோஷியல் மைண்ட் செட் ன்னு இருக்கு. நாம பழக்கமா செய்யற விஷயத்தை மட்டும் தான் திரும்ப திரும்ப செய்வோம். புதுசா ஒண்ணு செய்ய ஒரு வெளித் தூண்டுதல் தேவை. அவங்களுக்கு நல்லா தெரிஞ்ச ஒரு விஷயத்தை நாம எடுத்து சொன்னா போதும். கேப்பாங்க’’

‘’நீங்க சொல்றத அவங்க எக்ஸிகியூட் பண்ணாம போனா உங்களுக்கு வருத்தமாப் போகாதா?’’

‘’மக்களை நேசிக்கறவன் அவங்களுக்கு இன்னும் எளிமையா எப்படி விஷயத்தைக் கொண்டு போய் சேக்கறதுன்னு யோசிப்பானே தவிர சோர்வடைய மாட்டான் தம்பி’’

ஆதித்யா எதுவும் பேசாமல் இருந்தான். 

‘’நம்மால முடிஞ்சத நாம செய்வோம். முயற்சி பண்ணுவோம். ‘’ என்றேன் நான். 

Tuesday 7 September 2021

நெடும் கண்கள்

நெடும் கண்கள்

உன் 
கண்களின் 
முன்
நிற்கிறேன்
மூச்சு மட்டும் நிகழ்கிறது
அத்தனை அமைதியாக
யாவும் கரைந்தழிந்த பின்
உயிர் மட்டும் இருக்கிறது
அத்தனை அமைதியாக
அத்தனை தூய்மையாக

Sunday 5 September 2021

இன்று

தடுப்பூசிக்காக செயல் புரியும் கிராமத்துக்கு காலை 6.30 க்கு சென்று விட்டேன். 

கிராமத்தின் நுழைவுப்பகுதியிலேயே தடுப்பூசி முகாம் அமைக்கப்படும் பள்ளி இருந்தது. கிராமச் சாலையிலிருந்து வலது பக்கம் திரும்பி இருபது மீட்டர் தூரம் சென்று இடது பக்கம் திரும்பி 20 மீட்டர் செல்ல வேண்டும். ஒரு சித்தி வினாயகர் கோவில். அதற்கு பக்கத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி. 

பள்ளியின் வெளிக்கதவு பூட்டிடப்பட்டிருந்தது. 

ஊருக்குள் சென்றேன். அறிமுகமான பரிச்சயமான முகங்களைக் கண்டதும் ‘’இன்று தடுப்பூசி முகாம்’’ என்று அவர்களிடம் சொன்னேன். ‘’தடுப்பூசி போட்டு விட்டோம். இரண்டாம் டோஸ் இன்று போட்டுக் கொள்ளலாமா?’’ என்று கேட்டனர். அந்த கிராமத்தில் முதல் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு 77 நாட்கள் ஆகிறது. இன்னும் ஒரு வாரத்தில் முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் இரண்டாம் டோஸ் போட வேண்டும். அதற்கு முன் முதல் டோஸ் தவற விட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ள இன்றைய முகாம். ‘’உங்களுக்கு இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கு. உங்களுக்குத் தெரிஞ்சவங்க வேண்டியவங்க முதல் டோஸ் போடாம இருந்தா அவங்க எல்லாரையும் ஸ்கூலுக்கு அனுப்பி வைங்க’’ ஒவ்வொருவரிடமும் கூறியபடி சென்று கொண்டிருந்தேன். 

பலர் என்னிடம் ‘’ என்ன சார்! முன்னாடி அடிக்கடி உங்களைப் பாப்போம். இப்ப கொஞ்ச நாளா பாக்க முடியல’’ என்றனர். சிலர் என்னைக் கண்டதும் ‘’இன்னைக்கு தடுப்பூசி போடறாங்களா சார் ‘’ என்றனர். 

கிராமத்தின் எல்லா தெருக்களுக்கும் சென்று தகவல் சென்று சேர்ந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டேன். 

காலை 10 மணிக்கு முகாம் துவங்கியது. 

120 பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 

Saturday 4 September 2021

ஓர் உரையாடல்

இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தேன். 

நேரம் 7.55.

என் மேஜையில் இருந்த அலைபேசி ஒலித்தது. ஊரில் இரண்டு நாட்களாக நல்ல மழை. மழைக்காலத்தில் காற்றில் நிறையும் மௌனம் வியாபித்திருந்த சூழலில் அலைபேசி ஒலிப்பது சற்று அழுத்தமாகவே கேட்டது. 

திரையில் , தடுப்பூசிக்காக பணி புரிந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது. 

ஃபோனை எடுத்தேன். 

‘’ஹலோ! அண்ணன்! வணக்கம் அண்ணன்’’

‘’வணக்கம் சார்! நல்லா இருக்கீங்களா?’’

‘’நல்லா இருக்கன் அண்ணன் . ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்கங்களா’’

‘’எல்லாரும் நல்லா இருக்கோம் சார். இப்ப வீட்ல இருக்கீங்களா? இல்ல கடைத்தெரு வந்திருக்கீங்களா?’’

‘’வீட்ல தான் அண்ணன் இருக்கன். சொல்லுங்க அண்ணன். என்ன விஷயம்’’

‘’நம்ம கிராமத்துல ஃபர்ஸ்ட் வாக்சினேஷன் கேம்ப் என்னைக்கு நடந்ததுன்னு தேதி ஞாபகம் இருக்கா?’’

‘’டைரிய பாத்துட்டு திரும்ப கூப்பிடறன். ஒரு அஞ்சு நிமிஷம்’’

டைனிங் டேபிளுக்கு வந்து சுருக்கமாக சாப்பிட்டு விட்டு கை கழுவினேன். நாட்குறிப்பைப் பார்த்தேன். 

ஃபோன் செய்தேன். 

‘’அண்ணன் ஜூன் 19. என்ன அண்ணன் விஷயம். மறுபடி டிஸ்ட்ரிக்ட் அட்மினிஸ்ட்ரேஷன் நம்ம ஊருக்கு கேம்ப் தராங்களா?’’

‘’ஆமாம் சார் ! நாளைக்கு காலைல.’’

‘’அப்படியா! ஆனா செகண்ட் டோஸூக்கு இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கு’’

‘’ஃபஸ்ட் டோஸ் விடுபட்டவங்க எல்லாருக்கும் இந்த கேம்ப்ல வாக்சினேட் செய்யணும் சார்’’

‘’ஓ.கே அண்ணன்’’

‘’நீங்க நாளைக்கு காலைல வந்துடுங்க.’’

‘’எத்தனை மணிக்கு வரட்டும் அண்ணன். காலை ஏழே கால்.’’

‘’உங்க வீட்ல காலைல எழுந்திருக்கிறீங்க. எழுந்ததும் நேரா நம்ம வீட்டுக்கு டீ சாப்பிட வந்துர்ரீங்க. நான் பால் கறந்து வச்சுட்டு காத்துக்கிட்டு இருப்பன். புது பால்ல டீ போட்டு குடிக்கறோம். ஊர் முழுக்க ஒரு சுத்து சுத்தி விடுபட்ட எல்லார்ட்டயும் சொல்லிட்டு வந்துடறோம். ‘’




‘’ஓ.கே அண்ணன். காலைல ஆறே காலுக்கு உங்க வீட்ல இருப்பன்’’

‘’நீங்க வந்தா தான் சரியா இருக்கும்.’’

‘’அது என் கடமை அண்ணன்’’

உரையாடலை நிறைவு செய்தோம்.  

Thursday 2 September 2021

புரிதல்

அகம் நிறையும் மௌனத்தின் கணங்கள்
காலத்தை இல்லை என்றாக்குகின்றன
உன் கனிவின் ஒரு துளி
ஒரு வாழ்க்கையை
பிரவாகிக்கச் செய்கிறது
மூச்சுக் காற்றில்
உயிரின் பரப்பு யாது?
அந்திப் பொழுது
மேலும் 
புரிந்து கொள்ளச் செய்கிறது
ஒளியையும் இரவையும்