Thursday 30 January 2020

நுண் மாற்றங்கள்


சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. எனது நண்பர் ஒருவர் அமெரிக்காவில் மென்பொறியாளராக இருக்கிறார். அவர் இங்கே மயிலாடுதுறைக்கு அருகே ஒரு கிராமத்தில் விவசாய நிலம் வாங்க விரும்பினார். அவர் இங்கு வருவதற்கு உடனடியாக வாய்ப்பின்றி சில ஆண்டுகளுக்கு அமெரிக்காவிலேயே இருந்தாக வேண்டும் என்ற நிலை. எனவே நான் முன்னின்று அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரில் நிலம் வாங்கித் தந்தேன். நிலத்தைக் கிரயம் பேசியது முதல் பத்திரப்பதிவு செய்து பட்டா மாற்றம் செய்தது வரை என்னுடைய பணி. வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களுக்கு நான் இது போல உதவிகள் செய்வதுண்டு. நான் எந்த பணியையும் ஒரே மூச்சாகச் செய்யக் கூடியவன். எனது இந்த இயல்பு சொத்து வாங்குவதிலும் விற்பதிலும் உதவும்.

நல்ல மேட்டுப்பாங்கான வடிகால் வசதியுள்ள தண்ணீர் மேல்மட்டத்தில் இருக்கும் நிலத்தை நண்பருக்கு வாங்கிக் கொடுத்தேன். அதாவது நண்பர் குடும்ப உறுப்பினர்களுக்கு. விலை கிரயம் பேசி கிரயத் தொகை முழுவதும் கொடுக்கப்பட்டது. பத்திரப்பதிவு செய்யும் நாள் வந்தது.

நான் பத்திரம் எதுவும் வாங்கவில்லை. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புக்கு பத்திரம் வாங்கினால் சில ஆயிரம் ரூபாய் பத்திரம் வாங்குவதற்கான கமிஷனாகத் தர வேண்டும். அது எனக்கு அனாவசியம் என்று பட்டது. நான் பத்திர மதிப்புக்கு வங்கி வரைவோலையாக எடுத்துக் கொடுத்தேன். பத்திரத்துக்கான கமிஷன் தொகையில் கால்பங்கு கூட அதற்காக ஆகவில்லை. பத்திரப்பதிவுக்கு தாக்கல் செய்தோம். அச்சிடப்பட்ட சாதாரண காகிதத்தில் பத்திர வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன. அந்த அலுவலகத்தில் அவ்வாறு பதிவு செய்யப்படுவது அநேகமாக முதல் முறை என்றார்கள்.

அங்கே இருந்த அலுவலக ஊழியர் ஒருவர், ‘’தம்பி! இங்கே ஒரு பொது வழிமுறை என்ற ஒன்று காலகாலமாக உருவாகியிருக்கிறது. அதை ஏன் மாற்றுகிறீர்கள்?’’ என்றார்.

‘’நான் எதையும் மாற்றவில்லை. அரசாங்கம் அனுமதிக்கும் வழிமுறைகளில் ஒன்றை எங்களுக்கு லாபம் அளிப்பது என்பதால் செய்திருக்கிறேன்’’ என்றேன்.

‘’இதனால் எங்கள் வேலைப்பளு கூடும்’’ என்றார்.

‘’சில ஆண்டுகளுக்கு முன்னால் போலி முத்திரைத் தாள்கள் சந்தையில் நுழைந்தன. அதைத் தடுக்க நான் பின்பற்றியது நல்ல முறை’’ என்றேன்.
‘’சில விஷயங்களை மாற்ற முடியாது தம்பி’’ என்றார்.

பின்னர் பட்டா மாற்றம் செய்ய வருவாய்த்துறையில் விண்ணப்பங்களைத் தந்தேன். அதனைப் பார்த்து விட்டு அங்கிருந்த ஒருவர், ‘’நான் 21 வயதில் வேலைக்குச் சேர்ந்தேன். இப்போது 57 வயது. அடுத்த வருடம் ரிடையர் ஆகிறேன். இந்த 36 வருடத்தில் வெறும் தாளில் அச்சிடப்பட்ட இந்த மாதிரியான பத்திரத்தை முதல்முறையாக இப்போது தான் பார்க்கிறேன்’’ என்றார்.

அரசாங்கம் இப்போது பத்திரப்பதிவுத் துறையை முற்றிலும் கணிணிமயமாக்கியுள்ளது. முத்திரைத் தாளுக்குரிய தொகையை பத்திரமாக வாங்க வேண்டிய அவசியமில்லை; டெபிட் கார்டு மூலம் இணையம் வழியாகச் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது. பத்திரப்பதிவுத் துறையின் இணையதளம் முத்திரைத் தாள் பயன்படுத்துவதை கட்டாயமில்லை என்கிறது.

மாற்றம் நிகழாமல் இல்லை; மெல்ல நிகழ்கிறது. அவ்வளவே.

Tuesday 28 January 2020

ஒரு பெண்

ஒரு பெண்
அவள் பெயர் காதல்
எளிமையும் அழகுமான
அவள் பெயர் காதல்
அவள் இன்று இல்லை
அவள் இங்கு இல்லை

சிறு தேவதையின் முகம்
தெய்வத்தின் கருணை இதயம்
அவள் மலர்கையில்
மலர் சிரிக்கிறது

சின்னஞ்சிறு பறவைகள் கூடடையும்
ஆலமரத்தைப் போல உயரமானவள்
அவள் சின்னஞ்சிறு பெண்
ஆனால் கண்களின் மொழியில்
இதயத்தை அறிபவள்
அவள் பெயர் காதல்
அவள் இன்று இல்லை
அவள் இங்கு இல்லை
அவள் ஒரு பெண்

(ஒரு ஹிந்திப் பாடலின் தமிழாக்கம்)

Monday 27 January 2020

பழக்கம்

சில மாதங்களுக்கு முன், ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தும் எனது நண்பர் ஒருவரைப் பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தேன்.

தேவையும் அவசியமும்

இப்போது மீண்டும் இன்னொரு நிகழ்ச்சி. இன்னொரு நண்பருக்கு.

சென்ற வாரம் அவரைச் சந்தித்தேன். மங்கல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் சென்று வந்ததாகச் சொன்னார். நான் சந்தித்த தினத்துக்கு முதல் நாள் கிளம்பியிருக்கிறார். நான் பார்த்த அன்று காலை ஊர் திரும்பியிருந்தார். முதல் நாள் காலை அவர் கிளம்பிய நேரம் காலை 4 மணி.

‘’ரயிலில் தானே சென்றீர்கள்?’’ யதார்த்தமாகக் கேட்டேன்.

‘’இல்லை. பஸ்ஸில் சென்றேன். ‘’

‘’ஏன் பஸ்ஸில் சென்றீர்கள். அந்த நேரத்துக்கு சென்னை தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா இருக்குமே? திண்டுக்கல்லுக்கு காலை எட்டு மணிக்கே சென்று விடுமே?’’

‘’அந்த ரயில் இருப்பதை மறந்து விட்டேன்’’

‘’உங்களிடம் ஸ்மார்ட்ஃபோன் இருக்கிறதே. முதல் நாள் இரவே என்னென்ன ரயில்கள் இருக்கிறது எனப் பார்த்திருக்கலாமே? பஸ் ஸ்டாண்ட் வந்த பின்பு கூட அந்த ரயில் மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்து விட்டதா எனப் பார்த்து அறிந்திருக்கலாமே?’’

‘’காலை 4 மணிக்கு பஸ் ஏறினேன். பஸ் எடுக்க 4.45 ஆனது. அப்போதுதான் அந்த்யோதயா ஞாபகம் வந்தது. ரயில் ஆப்-ஐ ஆன் செய்து பார்த்தேன். ரயில் பாபநாசத்தைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது. பஸ்ஸில் செல்லும் போதெல்லாம் அந்த ரயிலின் இயக்கத்தை ஜி.பி.எஸ்-ல் பார்த்துக் கொண்டிருந்தேன். திண்டுக்கல்லுக்கு மதியம் ஒரு மணிக்குச் சென்றேன். ரயில் அப்போது திருநெல்வேலியைத் தாண்டியிருந்தது. ’’

ஒரே நேரத்தில், பஸ்ஸிலும் மானசீகமாக ரயிலிலும் பயணித்திருக்கிறார் என்று எண்ணிக் கொண்டேன்.

Thursday 23 January 2020

பறவைச் சத்திரங்கள்

அகமதாபாத் சாலைகளில் பரவலாக பறவைகளுக்கான சத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மரம். கல், இரும்பு ஆகியவற்றால் பத்து அடி உயரத்திலிருந்து இருபதடி உயரம் வரை கொண்டதாக கீழ்ப்புறம் தூண்களாகவும் மேற்புரம் மாடமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. தூண்களிலும் மாடங்களிலும் நீர்க்கலன்கள் உள்ளன. அவை பறவைகள் நீர் அருந்துவதற்கானவை. அவை தினமும் நீரால் நிரப்பப்படுகின்றன. தூண்களைச் சுற்றி குறைந்தது நூறு சதுரடி இடம் சுவரிடப்பட்டுள்ளது. பறவைகள் கூட்டமாக இந்த இடங்களில் அமர்கின்றன. நகரின் பெரும்பாலான முச்சந்திகளிலும் நாற்சந்திகளிலும் இவை உள்ளன. இவற்றைச் சுற்றி சிறுதானியங்கள் விற்பனை செய்யும் சிறுவியாபாரிகள் கூடையிலும் தள்ளுவண்டிகளிலும் தானியங்களை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றனர். நகரவாசிகள் பலர் தானியங்களை வாங்கி பறவைகள் குழுமியிருக்கும் பரப்பில் தூவுகின்றனர். பறவைகள் ஆர்வத்துடன் கொரிக்கின்றன. அகமதாபாத் நகரில் பார்ப்பதற்கு இனிய காட்சிகளில் இதுவும் ஒன்று.

Tuesday 21 January 2020

இந்த தவிப்பை
இந்த மௌனத்தை
இந்த துயரத்தை

கணந்தோறும்

சொல் சொல் லாய்
உரு ஆக்கிக் கொண்டிருக்கிறேன்

லாவா குளிர்ந்த மலையின் இடுக்கொன்றில்
வேர் விட்டிருக்கின்றன
பசும்புற்கள்

Monday 20 January 2020

சபர்மதி ஆசிரமம்

சென்ற வாரம் அகமதாபாத் சென்றிருந்த போது, சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்றேன். காந்தியின் வாழ்வில் ’’சபர்மதி ஆசிரமம்’’ மிக முக்கியமான பங்கை வகித்திருக்கிறது. 
தென் ஆப்ரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய பின்னர், இந்திய சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய போது, முக்கியமான பல போராட்டங்களை சபர்மதி ஆசிரமத்திலிருந்தே அறிவித்திருக்கிறார். ஒத்துழையாமை இயக்கமும் உப்பு சத்யாக்கிரகமும் இங்கே அறிவிக்கப்பட்டவை.

காந்தியின் வாழ்வில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. காந்தி தன் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலுமே கூடி வாழ்வதையும் இணைந்து கல்வி பயில்வதையும் சேர்ந்து பணிகளை ஆற்றுவதையுமே செய்திருக்கிறார். மேற்கத்திய சமூக அமைப்பு மனிதனை ஒரு தனியனாகப் பார்க்கிறது. ஒரு தனியனுக்கான சமூகக் கடமைகளும் உரிமைகளும் மட்டுமே அவனுக்கு அறிவுறுத்தப்படுகின்றன. காந்தி அரசியலுக்கு வந்த பின்னர் அவர் வசித்த இடங்கள் அனைத்துமே நூற்றுக்கணக்கானோர் உடன் வசிக்கும் ஆசிரமங்கள். தனது வசிப்பிடத்தைச் சுத்தம் செய்வதிலிருந்து ஆசிரமத்தின் எல்லா அன்றாடச் செயல்பாடுகளிலும் தினமும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.


இன்று இந்தியர்களாகிய நமது வாழ்க்கையில் நாம் சமூகப் பிரக்ஞை என்பதை முழுமையாக இழந்திருக்கிறோம். தன்னலம் என்ற ஒன்றே வாழ்வை வழிநடத்திச் செல்ல இயலும் என்ற எண்ணம் மட்டுமே நம் சிந்தனையை நிரப்பியுள்ளது. சக மனிதர்களை எப்போதும் சந்தேகிக்கும் நம்ப மறுக்கும் போக்கு நம்முள் உருவாகி விட்டது.

ஒன்று கூடி சிந்தியுங்கள்
சேர்ந்து அமர்ந்து விவாதம் செய்யுங்கள்
உங்கள் மனம் ஒன்றாகட்டும்

என பிராத்திக்கிறது உபநிஷத்.

காந்தி இந்தியர்களிடம் அந்த ஒருமைப்பாடு உருவாக வேண்டும் என விரும்பினார்.

Sunday 19 January 2020

காந்தியும் தேசமும்

இந்திய நிலத்தில் பயணிப்பது என்பது எனக்கு எப்போதுமே விதவிதமான மனநிலைகளை வெவ்வேறு மனோபாவங்களை எப்போதும் உருவாக்குவதாக இருக்கிறது. மோட்டார்சைக்கிளில் பயணிப்பது எப்போதுமே இனிமையானது. மண்ணின் மாற்றத்தை மெல்ல உள்வாங்கி பிரதேசங்களை போதிய அவகாசத்துடன் அவதானித்து பல்வேறு மனிதர்களைக் கண்டு பேசி உரையாடி என நிறைய வாய்ப்புகளுடன் கூடிய பயணம் அது. நான் மிகவும் விரும்புவதும் கூட. இரயில் பயணங்கள் சக மனிதர்களின் ஈடுபாடுகளை அக்கறைகளை உணர்ந்து கொள்ள உதவுவது. தில்லி நான் மிகவும் விரும்பும் நகரம். ஏன் என்று யோசித்துப் பார்த்தால், அங்கே இந்தியாவின் எல்லா பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களையும் காண முடியும். இந்திய முகங்கள் அலையென எழுந்து நதியெனப் பெருக்கெடுத்து நமக்குக் காணக் கிடைக்கும். தில்லியை ‘’மினி இந்தியா’’ என்பார்கள். அது உண்மைதான். தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் என்றால் அது அதிவேக ரயில். இரவு பத்து மணிக்கு சென்னையில் கிளம்பினால் மறுநாள் காலை விஜயவாடா. மதியம் 2 மணிக்கு நாக்பூர். இரவு போபாலைக் கடந்து விடும். ஜான்சியை நெருங்கி விட்டால் தில்லிக்குப் பக்கத்தில் வந்து விட்டதான உணர்வு. காலை ஏழு மணிக்கு தில்லி. 31 மணி நேரப் பயணம். துரந்தோ இன்னும் விரைவாக சென்னையிலிருந்து டெல்லி செல்கிறது.

வெளிநாடுகளில் பணி புரியும் எனது நண்பர்கள் இந்தியா வரும் போது என்னைச் சந்திப்பதுண்டு. அப்போது அவர்கள் மிகவும் வருத்தப்பட்டு ஒரு விஷயத்தைக் கூறுவார்கள். வெளிநாடுகளில் அந்நாடு குறித்த அந்நாட்டுத் தலைவர்கள் குறித்த கல்வி பள்ளிகளில் அளிக்கப்படுகிறது. ஏன் தமிழ்நாட்டில் அவ்வாறு இல்லை? நமது நாட்டைப் பற்றி ஏன் நம் கல்வி நிலையங்கள் எவ்விதக் கல்வியும் அளிப்பதில்லை எனத் துயரத்துடன் விசாரிப்பார்கள். அவர்களின் கவலையை நானும் பகிர்ந்து கொள்வேன். 

நாம் காந்தியிலிருந்து துவங்கி சிந்தித்துப் பார்ப்பது இந்த விஷயத்தில் பயனளிக்கும் என்று நினைக்கிறேன். காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த போது இந்தியர்கள் அரசியல், பொருளாதாரம், சமூகநிலை மற்றும் கல்வி ஆகியவற்றில் விடுதலை பெற வேண்டும் என விரும்பினார். ஆகவே இந்த நான்கு தளங்களிலும் தன் செயல்பாடுகளை முன்னெடுத்தார்.

அரசியல் தளத்தில் தனது கட்சியின் உறுப்பினர் ஆண்டு சந்தாவை நாலணா (25 பைசா) என்றாக்கினார். ஆயிரக்கணக்கான சாமானியர்களை அரசியலுக்குள் கொண்டு வந்தார். இந்திய கிராமங்கள் மற்றும் கிராமத் தொழில்கள் மூலமே இந்தியர்கள் பொருளாதாரத் தன்னிறைவு பெற முடியும் என்பதால் இந்தியத்தன்மை வாய்ந்த பொருளியல் கொள்கைகளை முன்வைத்தார். மானுட சமத்துவத்தை இந்திய சமூகங்களில் கொண்டு வர சமூகங்களுக்கு இடையே ஆக்கபூர்வமான உரையாடலையும் நம்பிக்கையையும் கொண்டு வர நினைத்தார். மதிப்பீடுகளைக் கற்பிக்கும் கல்வியை அறிமுகம் செய்தார்.


இன்று தமிழ்நாட்டின் கல்வி என்பது மிகப் பரிதாபகரமான நிலையை அடைந்திருக்கிறது. இங்கே கற்பிக்கப்படும் கல்வியால் சாமானிய மக்களுக்கு எந்த வித பலனும் இல்லை. பெரும்பாலானோரை பயனற்ற கல்வியே சென்றடைகிறது என்பதாக நான் நினைப்பது:

1. தமிழ்நாடு விவசாயத்தை அடிப்படையாய்க் கொண்ட நாடு. கிட்டத்தட்ட 60 சதவீத மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ விவசாயத்தைச் சார்ந்து வாழக் கூடியவர்கள். அவர்களுக்கு விவசாயம் குறித்த எவ்விதமான அறிமுகமும் பாடப்புத்தகங்களில் வழங்கப்படுவதில்லை.  நெசவுத்தொழில் குறித்த அறிமுகமும் இல்லை.

2. மொழிப்பாடங்களின் தரம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற போது எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்த மொழிப்பாடத்தின் தரத்தையும் இப்போதுள்ள எட்டாம் வகுப்பு பாடத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியக்கூடிய உண்மை இது.

3. இந்திய நாடு குறித்த முழுமையான விபரங்கள் பாடத்திட்டத்தில் இல்லை. நாடு குறித்த தரவுகள் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியை முடிக்கும் எவருக்கும் முழுமையாகத் தெரியும் என்ற நிலையை சர்வசாதாரணமாக உருவாக்க முடியும். ஆனால் எதுவும் நிகழ்வதில்லை. நாடு குறித்த தரவுகள் என்பது இந்திய நாட்டின் பரப்பளவு எவ்வளவு, இந்தியாவின் சுற்றளவு எத்தனை கி.மீ, இந்தியாவில் பாயும் பெருநதிகள் யாவை, இந்தியாவின் சிறுநதிகள் எத்தனை, போன்றவை. இவை மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பன்னிரண்டு ஆண்டும் போதிக்கப்பட வேண்டும்.

4, தமிழ்நாட்டுப் பள்ளிகளில் உடற்கல்வியும் விளையாட்டும் இல்லவே இல்லை.

5. தேசத் தலைவர்களின் வாழ்க்கை குறித்து 12 ஆண்டும் போதிக்க முடியும். ஆனால் அவை மிகக் குறைவாகவே உள்ளன.

6. வணிகம், சுயதொழில் ஆகியவை குறித்து எந்த அறிமுகமும் இல்லை.

7. குடிமைப் பண்புகள் நம் சமூகத்தில் அனைவருக்குமே தேவை. அவை குறித்து எதுவுமே கற்பிக்கப்படுவதில்லை.

தமிழ்நாடு தவறான பாதையில் நெடுந்தூரம் நெடுநாட்கள் பயணித்திருக்கிறது. தமிழ்நாடு சரியான பாதையில் பயணிக்க வேண்டும்.

மகாத்மா காந்தி கல்வியை சமூக மாற்றத்துக்கான கருவியாகக் கண்டார். அவர் உருவாக்கிய - விரும்பிய கல்விமுறையில் கீழ்க்காணும் அம்சங்கள் இருந்தன.

1. உயர் விழுமியங்களுக்கான மேலான வாழ்க்கைக்கான பிராத்தனையை காந்தியின் கல்வி கொண்டிருந்தது.

2. மூளை உழைப்புக்குச் சமமாகவே உடல் உழைப்புக்கும் அதில் இடம் இருந்தது.

3. குடிமைப் பண்புகளும் சுகாதாரமும் அதில் இருந்தன.

4. மொழியும் கைத்தொழிலும் கற்றுத் தரப்பட்டன.

5. காந்திய முறைப்படி கல்வி கற்ற ஒருவரால் தனது வாழ்க்கைக்கான பணிகளை பிறரை மிகக் குறைவாய் மட்டுமே சார்ந்து வாழ முடியும்.

இப்போதுள்ள கல்விமுறையில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது.





Saturday 18 January 2020

கதர்

கதராடை என்பது கைநெசவால் நெய்யப்பட்ட பருத்தி ஆடையைக் குறிக்கும். கதர் என்ற சொல்லுக்குப் புரட்சி என்ற அர்த்தமும் உண்டு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டனுக்குத் தேவைப்பட்ட ‘’அவுரி’’ என்ற சாயம் பயிரிட இந்திய விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்கள் விளைவித்த பருத்தி கட்டாயமாக மிகக் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்டு இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இயந்திர நெசவின் மூலம் ஆடைகள் உருவாக்கப்பட்டு அவை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன. மிகக் குறைவான விலைக்குப் பருத்தியைக் கொள்முதல் செய்ததில் கிடைக்கும் லாபமும் நல்ல விலைக்கு ஆடைகளை விற்பதில் கிடைக்கும் லாபமும் சேந்து கொள்ளை லாபம் சம்பாதித்தனர் பிரிட்டிஷார். 

பல நூற்றாண்டுகளாக உலகிலேயே மிக அதிக பருத்தியை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. இந்தியாவின் பருத்தி உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு குஜராத், மகாராஷ்ட்ரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களைச் சார்ந்தவை.

நான் சென்ற வாரம் அகமதாபாத் சென்றிருந்த போது மேற்கொண்ட ரயில் பயணம் 33 மணி நேரம் நீண்டது. சென்னைக்கும் அகமதாபாத்துக்கும் இடையேயான நவஜீவன் எக்ஸ்பிரஸில் பயணம் செய்தேன். சென்னைக்கும் தில்லிக்கும் இடையேயான தூரம் சென்னைக்கும் அகமதாபாத்துக்கும். இதில் ஒரு சுவாரசியமான அம்சம் ஒன்றைக் கவனித்தேன். நவஜீவன் எக்ஸ்பிரஸ் தனது 33 மணி நேரப் பயணத்தில் தோராயமாக 2 மணி நேரம் தமிழ்நாட்டில் செல்கிறது. 12 மணி நேரம் ஆந்திராவில் (பழைய ஆந்திரா - இப்போது ஆந்திரா, தெலங்கானா), 12 மணி நேரம் மகாராஷ்ட்ராவில். ஆறிலிருந்து ஏழு மணி நேரம் குஜராத்தில் என அந்த வண்டி செல்கிறது. இந்த மூன்று மாநிலத்தையும் ரயிலில் கண்டவாறு பயணிக்கும் எவரும் அறிய முடியும் - இந்த மாநிலங்களில் விவசாயம் செய்வது என்பது எவ்வளவு கடினமானது என்பதை. இன்றும் இந்த பிரதேசங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு பருத்தியை விளைவித்தலே வாழ்க்கையைத் தருவதாக இருக்கிறது. 

மகாத்மா காந்தி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். தென்னாப்ரிக்காவிலிருந்து இந்தியா வந்ததும் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்கிறார். இந்திய விடுதலைப் போராட்டத்திற்குள் விவசாயிகளையும் எளிய மக்களையும் கொண்டு வர விரும்புகிறார். அப்போதிலிருந்து அவர் பருத்தி ஆடைகளையே அணியத் துவங்குகிறார். இந்திய விடுதலைப் போராட்டம் புதிய பரிமாணம் ஒன்றைப் பெறுகிறது. தனது தொண்டர்கள் ஒவ்வொருமே கைத்தறியால் நெய்யப்பட்ட பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும் என்கிறார். அது ஒரு குறியீடு. நாங்கள் விவசாயத்தை விவசாயிகளை உழைப்பை உழைப்பின் மேன்மையை மிகப் பெரிதாய் மதிக்கிறோம் என்பதற்கான குறியீடு. இந்தியப் பெண்களை இராட்டையால் நூல் நூற்க பணிக்கிறார். அந்த இராட்டை இந்தியாவின் வெவ்வேறு ஊர்களில் சுழன்ற போது ஒரு சாம்ராஜ்யத்துக்கு எதிராக ஒரு தேசம் தன் எதிர்ப்பைத் திரட்டிக் கொண்டிருக்கிறது என்பது பிரிட்டிஷாருக்குப் புரிந்து போனது. 

உணவு உற்பத்தியில் நாம் பல ஆண்டுகளாகத் தன்னிறைவு பெற்றிருக்கிறோம். நமது மிகப் பெரிய ஜனத்தொகைக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்கிறோம். எங்கே ஆற்றுப்பாசனமும் கால்வாய்ப் பாசனமும் சாத்தியமாயிருக்கிறதோ அங்கே நெல்லும் கோதுமையும் விளைகிறது. ஆனால் பருத்தி விவசாயிகள் இலகுவான நீர்ப்பாசனம் அற்ற பகுதிகளில் போராடி விவசாயம் செய்கின்றனர். கைத்தறி நெசவில் ஈடுபடும் நெசவாளிகள் மௌனமாகத் தங்கள் தறியை இயக்கிக் கொண்டுள்ளனர். உண்ணும் உணவுக்குச் சமமானது உடுத்தும் உடை. பருத்தி விவசாயிகளையும் கைத்தறி நெசவாளிகளையும் காப்பது இந்திய மக்களின் கடமை. 

நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை தேசத்தை தேசமக்களை கணமும் நினைவில் அகற்றாமல் பணி புரிந்த மகத்தான தலைவர்கள் வழிநடத்தினர். மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், பால கங்காதர திலகர். கதர் நம் போராட்டத்தின் சின்னமாக ஆன போது நாம் அரசியல் விடுதலையை வென்றெடுத்தோம். 

நமது நாட்டு மக்கள், பருத்தி விவசாயிகளையும் கைத்தறி நெசவாளர்களையும் குறித்து சிந்திக்கும் போது நமது விடுதலை அதன் அடுத்த பரிமாணத்தை அடையும்.


Friday 17 January 2020

நல்வரவு


ஜனவரி 14 அன்று காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு. அப்போது, திருமதி. ஷமிமா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அப்பெண் வசிக்கும் கிராமத்தின் மண்ணும் சாலைகளும் நான்கடி உயரத்துக்கு பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்தது. எந்த மோட்டார்வாகனமும் அதில் செல்ல இயலாது என்ற நிலைமை. அந்நிலையில் அப்பெண்ணை ஸ்ட்ரெச்சரில் தூக்கியவாறு இந்திய ராணுவத்தின் நூறு ஜவான்களும் அந்த கிராமத்தின் 40 பொது மக்களும் நான்கு மணிநேரம் நடந்து சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அங்கே குழந்தை பிறந்துள்ளது.

இப்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

அதன் காணொளியைக் காண கீழே கிளிக் செய்யவும்.

பனியும் பணியும்


Thursday 16 January 2020

மகர சங்கராந்தி

இந்தியா ஒரு விவசாய நாடு. பள்ளிப்பாடங்களில் பலமுறை இதனைப் படித்து தேர்வுகளில் பதிலாக எழுதியிருப்போம். எனினும் நாம் - நமது எல்லா செயல்கள் - நமது பழக்கவழக்கங்கள் - நமது பண்பாடு என அனைத்தையுமே இந்த ஒரு வரியிலிருந்தே துவங்கி நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நம்மைப் புரிந்து கொள்ள நமது மண்ணின் விவசாயத்திலிருந்தே நாம் எதையும் துவங்க வேண்டும். நமது நாட்டுக்கு மட்டுமல்ல எந்த ஒரு நாட்டின் வரலாறும் பண்பாடும் அந்த நாட்டின் விவசாயத்திலிருந்தே துவங்குகிறது. துவக்கம் ஒரே புள்ளியிலிருந்து என்றாலும் மானுடப் பண்பாட்டுக்கு நாம் அளித்திருக்கும் பங்களிப்பில் நம் நாடு உலகின் எந்த நாட்டை விடவும் பல படிகள் முன்னால் இருக்கிறது. 

இன்றும் இந்திய நிலத்தில் பயணிக்கும் போது நாம் ஒன்றை உணரலாம். மாநகரங்கள், நகரங்கள், சிறுநகரங்கள் ஆங்காங்கும் அவற்றுக்கு இடையே வான் போன்று விரிந்த பெரும் நிலப்பரப்பு எங்கும் பரவியும் இருப்பதைக் காண முடியும். இங்கே பெரும் பண்ணைகள் மிக மிகக் குறைவே. இரண்டு ஏக்கரிலிருந்து ஐந்து ஏக்கர் வரையிலான நிலத்தை உரிமையாகக் கொண்ட லட்சக்கணக்கான விவசாயிகளே இன்றும் நாடெங்கும் இருக்கிறார்கள். இந்திய வரலாறு குறித்த ஆரம்பகால தகவல்கள் ஐயாயிரம் ஆண்டுகளாகக் கிடைக்கின்றன எனக் கொண்டால் அன்றிலிருந்து இன்று வரை சிறு ஏற்ற இறக்கங்களுடன் ஏறக்குறைய இதே நிலையே நீடிக்கிறது. இந்த அடித்தளத்திலிருந்தே இந்தியப் பண்பாட்டின் எல்லா சாதனைகளும் எழுந்து வந்துள்ளன.

இந்தியப் பண்பாடு ஏன் நதிகளை அன்னையராகக் கருதுகிறது? இந்த கேள்விக்கான பதிலை எளிமையாகக் கூற முடியும். எங்கே நதிகள் பாய்கின்றனவோ அந்த மண் விளைச்சலை அமோகமாய்த் தருகின்றது. விளைச்சல் நல்ல முறையில் இருக்கும் பிரதேசத்தில் இரும்புக் கருவிகள், கலை நுட்பம் வாய்ந்த பொருட்கள், தறி நெசவு, தச்சு வேலை மற்றும் கட்டிடத் தொழில் ஆகியவை சிறப்பாக அமைகின்றன. அங்கே மனிதர்கள் குழுமுகிறார்கள். அவர்களை நெறிப்படுத்தி ஓர் அரசை உருவாக்க பொது நியதிகள் உருவாக்கப்படுகின்றன. அந்த அரசும் நிர்வாகமும் மக்களுக்குப் பாதுகாப்பைத் தருகிறது. அதனால் வளர்ச்சி சாத்தியமாகிறது. வளர்ச்சியை அடிப்படையாய்க் கொண்ட அரசுகள் நீடித்து நிற்கின்றன.

இந்தியாவில் நீர், மண், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவை இறை வடிவமாகக் கருதப்படுவதற்கு காரணம் அவை விவசாயத்துடன் - விவசாயியின் மனநிலையுடன் நேரடியான தொடர்புடையவை என்பதே. இந்தியாவில் சூரியன் கடவுளாக வழிபடப்படுவது இந்திய வரலாறு குறித்த துவக்க கால குறிப்புகளிலிருந்தே தெரிய வருகிறது. இராமாயணத்தில் இராமனுக்கு அகத்தியர் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை உபதேசிக்கிறார். மகாபாரதத்தில் கர்ணன் சூர்யபுத்திரனாகக் கருதப்படுகிறான். ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஷண்மதங்களில் சௌரம் ஒன்று. 

இந்தியாவின் பாரம்பர்யமான நாட்காட்டிகள் விவசாயத்துக்காக உருவாக்கப்பட்டவை என்பது நாம் அறிய வேண்டிய ஒன்று. புவியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்பது நிரூபணவாத அறிவியல் படி நிறுவப்பட்டதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஓர் ஆண்டு என்பது 365 நாட்கள் என எல்லா இந்திய நாட்காட்டிகளிலும் கணக்கிடப்பட்டுள்ளன. உலகின் மற்ற பகுதிகளிலும் நாட்காட்டிகள் சற்றேறக்குறைய 365 நாட்கள் எனக் கணக்கிட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பஞ்சாங்கம் என்பதை மதத்துடன் தொடர்புபடுத்தும் ஒரு பிரச்சாரம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் அதன் அடிப்படை விவசாயத்துக்கானது. எந்த மாதம் எப்போது மழைப்பொழிவு இருக்கும் என்பதைக் கணித்து அதன்படி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட கணக்கீடே பஞ்சாங்கம் என்பது.

இந்தியாவில் நாம் இன்றும் நினைவில் கொள்ளும் பேரரசுகள் எவை என்று யோசித்துப் பார்த்தால் அவற்றுக்கு சில பொதுத் தன்மைகள் இருப்பதை உணர முடியும்.  அவை பாசன வசதிகளைப் பெருக்கிய அரசுகளாக இருக்கும் அல்லது சாலைகள் மூலம் நகரங்களை இணைத்த அரசுகளாய் இருக்கும். 

இன்றும் சென்னை மக்கள் அருந்தும் பயன்படுத்தும் ஒவ்வொரு துளி நீரும் சோழ மன்னர்கள் தம் மக்களைக் கொண்டு தம் மக்களுக்காக உருவாக்கிய வீர நாராயண ஏரியில் சேகரமாகும் மழை நீரும் ஆற்று நீருமே. தெலங்கானாவின் பல ஏரிகள் காகதீயர்களால் வெட்டப்பட்டவை. கர்நாடகாவின் குளங்களை ஹொய்சாளர்கள் ஊருக்கு ஊர் வெட்டினர். தென் தமிழ்நாட்டின் ஊருணிகளும் சாலைகளும் மதுரை நாயக்கர்களால் உருவாக்கப்பட்டவை. திருவிதாங்கூர் அரசர்கள் பல பாசனக் கால்வாய்களை வெட்டினர்.

இந்திய மனநிலையை கடந்த இருநூறு ஆண்டுகளின் பலவிதமான நிகழ்வுகள் பற்பல எதிர்மறையான இடத்துக்குக் கொண்டு சென்று விட்டன. பஞ்ச சாவுகள் குறித்த தரவுகள் பெரும்பாலான இந்தியர்கள் அறியாதவை என்றாலும் அந்த பஞ்சங்கள் சக மனிதனை நம்பாதே; சக மனிதனுடன் இணையாதே என்ற சமூகவியலை இந்தியப் பொதுப்புத்தியில் உருவாக்கி விட்டது. இருநூறு ஆண்டுகளில் நிலைபெறவும் செய்து விட்டது.

மகாத்மா காந்தி இந்திய சுதந்திரத்துக்குச் சமமாகவே கதர் இயக்கத்தை முன்னெடுத்தார். கதர் ஆடை மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கைமுறை; அது ஒரு பிரகடனம்; இந்தியர்கள் கதர் வாங்குவதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு சக இந்திய விவசாயியின் ஒரு சக இந்திய நெசவாளியின் முகத்தில் புன்னகையைக் கொண்டு வருகிறார்கள். நம்மை ஆட்சி செய்த பிரிட்டிஷார் 73 ஆண்டுகளுக்கு முன்னால் நம் நாட்டை விட்டு நீங்கி விட்டனர். நாம் இன்று நமது நாட்டை நமது விவசாயத்தை நமது பண்பாட்டைக் குறித்து எந்த அளவு புரிந்து வைத்திருக்கிறோம் அதற்காக நாம் எவ்விதமான பங்களிப்பை ஆற்றுகிறோம் என வினா எழுப்பிக் கொள்வதற்கான தருணம் இது.

Friday 10 January 2020

ஆயிரம் புத்தகங்கள்


எங்கள் இல்லம் விசாலமானது; பெரியது. கூடம், அறைகள், வாகன நிறுத்தம் ஆகியன ஒவ்வொன்றுமே பெரியவை. தரைத்தளம், முதல் தளம் என இரண்டு மாடிகள் கொண்டது. முதல் தளத்தில் இரண்டு பெரிய அறைகள். அங்கேயிருந்து தரைத்தளத்தில் உணவுக்கூடத்தைக் காண முடியுமாறு வடிவமைக்கப்பட்டவை. தரைத்தளத்தில் ஒரு அறை உண்டு. வீட்டில் இரண்டு தென்னை மரங்கள் இருக்கின்றன. வீட்டின் முன் ஒரு வேப்ப மரம் இருக்கிறது. கொல்லைப் பக்கத்தில் கருவேப்பிலை மரமும் வாழை மரமும் உண்டு. அப்பா மாடித்தோட்டம் போட்டிருக்கிறார். அதில் ஒரு செம்பருத்திச் செடி மரமாக வளர்ந்து அவ்வப்போது பூக்கிறது. காலை வீட்டு வாசலில் அம்மா கோலமிடும் நேரத்தில் அம்மா வாசலுக்கு வருவதைப் பார்த்ததும் முப்பது பறவைகள் கிரீச் கிரீச் என்று கீச்சிட்டுக் கொண்டு சூழ்ந்து கொள்ளும். தவிட்டுக் குருவி, மைனா, வால் காகம். காகம் ஆகியவை வந்து விடும். பறவைகளுடன் சில அணில்களும் வந்து விடுகின்றன. அம்மா கோலமிட சிறிது தாமதமானால் வீட்டினுள் மெல்ல அடி எடுத்து வைத்து கூடத்தினுள் நுழையும்.

கடந்த வாரம் எனது அறையிலும் தந்தையின் அறையிலும் Cup boardக்கு கதவு போடும் வேலை நடந்தது. ரொம்ப நாளாக செய்ய நினைத்த வேலை. தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. அம்மா அதனை உடன் செய்ய வேண்டும் என்று பிரியப்பட்டார்கள். வேலை துவக்கப்பட்டது. நான்கு ஆசாரிகள் ஒரு வாரம் வேலை செய்தார்கள். வீடெங்கும் மரத்தூள் பரவியிருந்தது. டிரில்லிங் மெஷின் இயங்கிக் கொண்டிருக்கும் சத்தம். வீடு பல வருடமாகப் பழகியிருந்த இயங்குமுறையில் இந்த ஒரு வாரம் சற்று மாற்றம் கண்டது. 

என்னுடைய அறை முழுதும் புத்தகங்களே நிரம்பியிருக்கும். என்னுடைய மேஜையிலும் புத்தகங்களே. அவற்றை அடுக்கி விட முடியுமா என்பது எனக்கு ஓர் ஐயமாகவே இருந்தது. எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன என்பதையும் நான் கணக்கிட்டிருக்கவில்லை. என்னுடைய அறையின் ஷெல்ஃப்கள் பெரியவை. புத்தகங்களை அவற்றில் அடுக்கி வைத்தால் முன்னால் உள்ள புத்தகங்கள் பின்னால் உள்ள புத்தகங்களை மறைத்து விடும். எல்லாப் புத்தகமும் கண்ணில் படுமாறு ஷெல்ஃபை மூன்று அடுக்காகப் பிரித்து புத்தகங்கள் வைக்க ஏற்பாடு செய்யுமாறு கூறினேன். அதே போல அமைக்கப்பட்டது. என்னுடைய ஷெல்ஃபில் எல்லா புத்தகங்களையும் அடுக்கியுள்ளேன். ஒரு முறையான அடுக்கில் அமைக்கப்பட்டுள்ளதால் எத்தனைப் புத்தகங்கள் இருக்கின்றன என்று கணக்கிட்டேன். ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் இருந்தன. மலைப்பாக இருந்தது. மனதில் ஒரு மெல்லிய கலக்கம் ஏற்பட்டது.

ஐந்து வயதிலிருந்து புத்தகங்கள் வாசிக்கிறேன். கவிதை, நாவல், சிறுகதை, வரலாறு, சமூகவியல், அறிவியல், அரசியல், பொருளாதாரம், மொழி, தமிழின் மரபிலக்கியங்கள், சமய இலக்கியங்கள் என நூல்களின் வகைப்பாடு விரிவடைந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு புத்தகத்தையும் கையில் எடுத்து அடுக்கும் போது அது வாங்கப்பட்ட சூழல் அதன் வாசிப்பு அனுபவம் ஆகியவை நினைவில் எழுகின்றன. புத்தகங்கள் எனக்கு எத்தனையோ வாழ்க்கைகளைக் குறித்து எடுத்துச் சொல்லியிருக்கிறது. எத்தனையோ மனிதர்களைப் புரிந்து கொள்ள உதவியிருக்கிறது. சுயமாகச் சிந்திக்க சுயமாக முடிவெடுக்க துணை புரிந்திருக்கிறது.

தமிழ்க் கவி ஔவை ‘’கற்றது கைம்மண் அளவு’’ என்கிறாள்.

வாணி கலைத்தெய்வம் மணிவாக்கு உதவிடுவாள்
ஆணிமுத்தைப் போல அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்லாம் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.

என்கிறான் பாரதி.

Thursday 9 January 2020

பயணம்

இன்று இரவு சென்னை புறப்படுகிறேன். வெள்ளிக்கிழமையன்று பத்து நூல்கள் வெளியீட்டு விழாவில் ‘’அகதி’’ சிறுகதைத் தொகுப்பு குறித்து பேசுகிறேன். 

மறுநாள் சனிக்கிழமை காலை நவஜீவன் எக்ஸ்பிரஸ்ஸில் அகமதாபாத் செல்கிறேன். ஞாயிறு காலை அகமதாபாத் சென்றடைகிறேன். ஞாயிறும் திங்களும் சர்வதேச காற்றாடித் திருவிழாக் கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறேன். 

செவ்வாயன்று இரண்டு நாட்கள் பயணம் முடிந்து சென்னை திரும்புகிறேன். உடன் அங்கிருந்து புறப்பட்டு மயிலாடுதுறை.

நண்பர்கள் அழைக்கிறார்கள். ஊர் திரும்பியதும் ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு ஒருநாள் செல்ல வேண்டும்.

படகு நீரில் மிதப்பது போல பயணங்களில் மிதக்கிறேன்.

Wednesday 8 January 2020

நோய்மைக்கு எதிரான யுத்தம்


எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் வயதால் சற்று முதியவர். முதுமை காரணமாக உடல் உழைப்பை வழங்க இயலாமல் இருப்பவர். பல ஆண்டுகளுக்கு முன்னால் அவருடைய குரல் நாண் பெருமளவில் பாதிக்கப்பட்டதால் அவருக்கு ஒரு அறுவைசிகிச்சை நடந்திருக்கிறது. ஆகையால் சரளமாகப் பேச முடியாதவர். மிகக் குறைவாக ஓரிரு வார்த்தைகள் பேசுவார். அவருடைய வீட்டில் தனியாக இருக்கிறார்.நான் வாரம் ஒருமுறையாவது சென்று அவரைப் பார்த்து வருவேன். அவர் உடல்நலம் எவ்வாறு உள்ளது என்று விசாரிப்பேன். காலையும் மாலையும் பூசனை செய்து திருநீறு அணிவார். வீட்டுத் தோட்டத்தில் பூச்செடிகளும் காய்கறிகளும் கீரையும் வைத்து பராமரிக்கிறார். அந்த தோட்டப்பணியை மேற்கொள்வார். பின்னர் வீட்டில் அமைதியாக அமர்ந்திருப்பார். 

சில வாரங்களுக்கு முன்னால் அவருக்குச் சர்க்கரை நோய் இருப்பது இரத்தப் பரிசோதனை மூலம் தெரியவந்தது. மருத்துவரின் பரிந்துரைப்படி சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் வாங்கித் தந்தேன். அவர் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் அவர் முறையாக மாத்திரை எடுத்துக் கொள்கிறாரா என்பதை மாத்திரையின் எண்ணிக்கையைக் கொண்டு அறிந்து கொள்வேன். காலையும் மாலையும் சிறிது தூரம் காலாற நடக்கச் சொல்வேன். கொஞ்ச தூரம் நடந்தாலே தலை சுற்றி வருகிறது என்பார்.

அவருக்குத் தேவையான மாத்திரைகளை ஃபார்மஸியில் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்திய அரசாங்கத்தின் பாரதீய ஜன் ஔஷதி கேந்திரா என்ற மருந்துக் கடைகளைக் குறித்து அறிந்தேன். மத்திய அரசாங்கத்தின் இரசாயனத் துறை, தரமான மருந்துகள் சகாயமான விலையில் எளிய மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாடு முழுதும் துவங்கி நடத்தி வரும் கடைகள் தான் ஜன் ஔஷதி மருந்துக் கடைகள்.  மற்ற மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துகள் இங்கே நாலில் ஒரு பங்கு விலையில் கிடைக்கின்றன. பரவலாகக் காணப்படும் நோய்களுக்கு மருந்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் அனைத்துமே இந்த மருந்துக்கடையில் கிடைக்கிறது. வழக்கமாக நண்பருக்கு மாதத்திற்கு ரூ.300 என்ற அளவில் மாத்திரைகளுக்குச் செலவாகும். இப்போது ரூ.75 மட்டுமே ஆகிறது. இது விலை தொடர்பானது மட்டுமல்ல; விலை குறைவாய் உள்ள மாத்திரை என்பது அவருக்கு அவர் நோய் குறித்த பயத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது. 

நாடு முழுதும் ஜன் ஔஷதி கேந்திராக்கள் அதிக அளவில் இயங்க வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது. அதன் மூலம் குடிமக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை அளிக்க முற்படும் தன் கடமையைச் செய்ய முற்படுகிறது. மக்கள் இந்த கடைகளை அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் மருந்து தயாரிப்பில் பல ஆண்டுகளாக கொள்ளை லாபம் பார்த்துப் பழகியவை. மருந்து கம்பெனிகள் - ஃபார்மஸிகள் - மருத்துவர்கள் என்னும் வலைப்பின்னல் தத்தம் வணிக நோக்கங்களுக்கான ஒத்துழைப்பில் பல்லாண்டு பழக்கம் கொண்டது. ஒரு செயல்பாட்டை உதாரணமாகச் சொல்கிறேன். எங்கள் ஊரில் ஒரு மருத்துவர் மருந்து சீட்டில் மருந்தின் பெயரை எழுதும் போது அவர் அந்த மாத்திரைக்காக அவருடைய ஃபார்மஸிஸ்டுக்கு மட்டுமே புரியக் கூடிய நான்கெழுத்து குறிப் பெயரை எழுதுவார். அதில் உள்ள அட்சரங்களில் எதுவும் மருந்தின் பெயரில் இருக்காது. அவர் ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு குறிப்பெயர் வைத்திருப்பார். அவர் எழுதும் குறிப்பெயருக்கான மருந்து எது என்பது அவருடைய ஃபார்மஸிஸ்டுக்கு மட்டுமே தெரியும். அந்த மருந்து சீட்டை எடுத்துக் கொண்டு வேறு ஃபார்மஸிக்கு சென்றால் இதில் எழுதப்பட்டிருக்கும் எதுவும் மருந்தின் பெயர் அல்ல என்பார்கள். அந்த மருத்துவரின் மருந்துக்கடைக்கே வந்தாக வேண்டும். அங்கும் அந்த மாத்திரையை முழு மாத்திரை அட்டையுடன் தர மாட்டார்கள். கத்தரிக்கோலால் ஒவ்வொரு மாத்திரையாக கத்தரித்து வைத்திருப்பதையே தருவார்கள். முழு மாத்திரை அட்டையில் மருந்தின் பெயரும் இரசாயனமும் இருந்தால் அடுத்த முறை வேறு கடைகளில் வாங்குவதற்கான வாய்ப்பைத் தடுப்பதற்காக இந்த ஏற்பாடு. இவ்வாறு நடந்து கொள்வது தார்மீகப்படி மிகப் பெரிய அநீதி. சட்டபூர்வமாகவும் மிகக் கடுமையான குற்றம். 

மருத்துவ சேவைக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட- நோயாளிகளின் வாழ்க்கைச் சூழலையும் பொருளாதார நிலையையும் கவனத்தில் கொண்டு - பொருத்தமான - தக்க - சிகிச்சை அளிக்கும்  எத்தனையோ மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதையும் சேர்த்தே இந்த விஷயத்தில் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களின் சேவைக்கு நாடு என்றும் கடன்பட்டுள்ளது.

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை எல்லா மாநிலங்களிலும் ஜன் ஔஷதி கேந்திராக்கள் அமைந்து எளிய மக்கள் பயன்பட வேண்டும் என்பது அரசின் எண்ணம். படித்தவர்கள், விபரம் தெரிந்தவர்கள் எளிய மக்களுக்கு இதனைக் குறித்து எடுத்துச் சொல்ல வேண்டும். 

மக்களாட்சியில் அரசாங்கம் என்பது மக்கள்தான். இன்று அது இந்தியர்களின் நினைவில் இருக்கிறதா என்ற ஐயம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. எந்த நியதிகளுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் உட்பட மறுப்பது என்பது இந்தியப் பொதுப் பண்பாக உருவாகி வருகிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மக்கள் நலத்துக்கான திட்டங்கள் மக்களைப் பெருமளவில் சென்றடைய வேண்டும் என்பதில் குடிமக்கள் இருவேறு எண்ணம் இன்றி இருக்க வேண்டும்.

  

Monday 6 January 2020

சென்னை புத்தகக் கண்காட்சி

சென்னை புத்தகக் கண்காட்சி இந்த மாதம் 9ம் தேதி துவங்குகிறது. 21ம் தேதி வரை நடைபெறுகிறது. 2003ம் ஆண்டு முதல் முறையாகச் சென்றேன். கல்லூரியில் பொறியியல் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். நானும் எனது நண்பனும் மயிலாடுதுறையில் அதிகாலை கிளம்பி மதியப் பொழுதில் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றோம். அப்போது காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் நடைபெறும். அதன் பின்னர் ஓரிரு ஆண்டுகள் தவிர பெரும்பாலான ஆண்டுகள் சென்றிருப்பேன். பின்னர் கண்காட்சி அரங்கு ஆங்கிலோ - இந்தியன் பள்ளிக்கு மாறியது. இப்போது ஒய்.எம்.சி.எ.

ஆயிரக்கணக்கானோர் குழுமக் கூடிய கண்காட்சி வெளி. ஏதோ ஒரு விதத்தில் எல்லாருடைய சிந்தனையும் புத்தகங்கள் குறித்து. எந்த பண்பாட்டு நிகழ்விலும் மக்களுக்கு ஆர்வம் இருக்கும் போது அது சமூகத்தில் ஆக்கபூர்வமான விளைவுகளை உருவாக்குகிறது. 

சிந்திக்கும் சமூகம் முன்னேறும். பேதங்களைத் தவிர்த்து இணைந்து செயல்படும். சிந்தனைக்கும் கூட்டுச் செயல்பாட்டுக்கும் வாசிப்பு வழி அமைத்துக் கொடுக்கும். 

தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலகட்டத்திலேயே நம் நாடு கலையில், இலக்கியத்தில், நுண்கலையில், கட்டுமானத்தில், அறிவியலில், வானியலில் பெரும் உயரங்களைத் தொட்ட நாடு. நம் முன்னோர் நம் நாட்டை ஒவ்வொரு மானுடனின் ஆத்ம விடுதலையை அளிக்கும் நிலமாக உருவாக்கியுள்ளனர். அடுத்த தலைமுறைக்கு மேலான சமூகத்தை வழங்கக் கூடிய பொறுப்புணர்வு நம் அனைவருக்கும் உள்ளது. நமது வாசிப்பும் சிந்தனையும் அதனை உறுதி செய்யட்டும்.

Saturday 4 January 2020

ஒரு நண்பர்

சென்ற வாரம் ஒரு நண்பரைச் சந்தித்தேன். எங்கள் முதல் சந்திப்பு. இரண்டு நாட்கள் உடனிருந்தோம். ஒன்றாகத் தங்கியிருந்தோம். இரண்டு நாட்களும் கணமும் பிரியாமல் ஒன்றாகவே இருந்தோம். அமெரிக்காவில் மென் பொறியாளராக பணிபுரிகிறார். அவரது மனைவியும் அமெரிக்காவில் பணிபுரிகிறார். குழந்தைகள் அங்கேயே பள்ளிக்கல்வியைப் பயின்று கொண்டுள்ளனர். மரபிலக்கியத்தின் மீதும் நவீன இலக்கியம் மீதும் ஆழ்ந்த பற்று கொண்டவர். திருக்குறள் மீதும் கம்பராமாயணம் மீதும் பெரும் ஈடுபாடு கொண்டவர். இலக்கியம் குறித்தும் சமூகம் குறித்தும் இரண்டு நாட்களும் உற்சாகமாக விவாதித்தோம். பிரிய மனமின்றிப் பிரிந்தோம்.

நேற்று அலைபேசியில் அழைத்தார். அமெரிக்கா செல்ல விமான நிலையம் நோக்கி தனது சொந்த ஊரிலிருந்து காரில் சென்று கொண்டிருப்பதாக சொன்னார். 

அடுத்த ஆண்டு இந்தியா வரும் போது சந்திப்போம்; அதுவரை மின்னஞ்சல் தொடர்பில் இருப்போம் என்றார். 

மீண்டும் ஒரு நட்பு; ஒரு பிரிவு.

Friday 3 January 2020

ஒரு முழு வட்டம்


2000 ஜனவரியில் நான் மோட்டார்சைக்கிள் வாங்கினேன். ஹீரோ ஹோண்டா சிடி 100 எஸ் எஸ். 1987ல் அப்பா வீட்டின் முதல் மோட்டார் வாகனத்தை வாங்கினார். ஹீரோ ஹோண்டா சிடி 100. அப்பா அதன் பின் மூன்று வாகனம் மாற்றி விட்டார்கள். நான் இன்னும் மாற்றவில்லை. கார் இருக்கிறது. ஆனாலும் டூ-வீலர் மீது தான் அதிக பிரியம். 2000 புத்தாண்டை ஒட்டித்தான் வண்டி வாங்கினேன். அப்போது டிரைவிங் லைசன்ஸ் எடுத்து சில மாதங்கள் ஆகியிருந்தது. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வந்திருந்தேன். அப்போது கல்லூரி மாணவர்கள் மிகச் சிலரிடமே மோட்டார் வாகனம் இருக்கும். இப்போது சொன்னால் அப்படியா என ஆச்சர்யப்படுவார்கள். கல்லூரி மாணவர்களில் கணிசமானோருக்கு இரு சக்கர வாகனம் இயக்கத் தெரியாது. அதிகமாக சைக்கிள்தான் புழக்கத்தில் இருக்கும். விரிவுரையாளர்கள் மோட்டார் வாகனம் பயன்படுத்துவர்.


இன்று என்னுடைய வாகனம் 99999.9 என்ற எண்ணிக்கையைத் தொட்டு மீண்டும் 00000.1 என மறுசுற்றுக்கு வந்தது. புதிய சுற்று புதிய வாகனம் என நம்ப வைக்கிறது. எனக்கும் இருபது வருடம் பின்னால் சென்று விட்டதாக ஓர் உணர்வு. எப்போதோ ஒரு லட்சம் கிலோ மீட்டர் என்ற அளவைத் தாண்டியிருக்கும். நடுவில் பல வருடங்கள் ஸ்பீடாமீட்டர் இயக்கத்தில் இல்லாமல் இருந்தது. கம்பெனியில் அந்த வகை ஸ்பீடாமீட்டர்கள் தயாரிப்பில் இல்லை என்று சொல்லி விட்டார்கள். ஹீரோ ஹோண்டா கம்பெனி இரண்டாகப் பிரிந்து விட்டது. சில மாதங்களுக்கு முன் மிக முயற்சி செய்து அதன் உதிரி பாகம் ஒன்றைத் தருவித்து ஸ்பீடாமீட்டரை மீண்டும் இயங்கச் செய்தேன்.


ஓர் உற்ற தோழனைப் போல உடனிருந்திருக்கிறது. சோழ மண்டலம் முழுமையையும் சுற்றியிருக்கிறோம். நானும் எனது வாகனமும் செல்லாத பாதைகள் இந்த பிரதேசத்தில் மிகச் சொற்பம்.


டூ-வீலரில் இந்திய நிலமெங்கும் சுற்றியிருக்கிறேன்.


என்னை என் வாகனம் அறியும்.


இந்த கணம் அதனை எண்ணி உளம் விம்முகிறேன்.

Thursday 2 January 2020

முதல் தினம்


நேற்று உத்தமர் கோவில் சென்றிருந்தேன். சோழ நாட்டு திவ்ய தேசங்கள் நாற்பது. வைணவ மரபில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள் 108. அதில் பூலோகத்தில் உள்ளவை 106. மற்ற இரண்டும் பரமபதம் மற்றும் வைகுண்டம். இந்த 106 திவ்யதேசங்களில் சோழ நாட்டு திவ்ய தேசங்கள் 40. நடு நாட்டு திவ்ய தேசங்கள் 2. பாண்டி நாட்டு திவ்ய தேசங்கள் 18. மலை நாட்டு திவ்ய தேசங்கள் 13. வட நாட்டு திவ்ய தேசங்கள் 11. தொண்டை நாட்டு திவ்ய தேசங்கள் 22. 

இவற்றில் நான் 50க்கும் மேற்பட்ட திவ்ய தேசங்கள் வரை சென்றிருப்பேன். திவ்யதேசங்கள் அனைத்துக்கும் செல்ல வேண்டும் என விரும்புபவர்கள் முதலில் நடு நாட்டு திவ்ய தேசத்தில் துவங்கலாம். இரண்டு தலங்கள். கடலூர் அருகில் உள்ள திருவஹீந்திரபுரம் மற்றும் திருக்கோவிலூர். நடு நாடு முழுமை பெற்று விடும். 

சோழ நாட்டு திவ்ய தேசங்களில் உத்தமர் கோவிலும் அன்பிலும் நான் சென்றதில்லை. நெடு நாளாக செல்ல வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தேன். நேற்று சென்றேன். 

புத்தாண்டுத் தீர்மானங்களின் படி அதிகாலை விழித்து எண்ணிய வண்ணம் அனைத்தையும் செய்தேன். காலை புத்தம் புதிதாக இருந்தது. நான் மக்களைச் சந்திக்க விரும்புபவன். மக்களுடன் இருக்க விரும்புபவன். எனவே பண்டிகை தினங்களில் பயணிப்பதை விரும்புவேன். காலை 8.10 எக்ஸ்பிரஸில் திருச்சி பயணமானேன். அகல ரயில்பாதையில் விரைவு ரயில்கள் மயிலாடுதுறையிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் திருச்சி சென்றடைந்து விடுகின்றன. பேருந்தெனில் குறைந்தபட்சம் நாலரை மணி நேரம் ஆகிவிடும். 

சிறு வயதில் ரயிலிலும் ரயில் நிலையங்களை ஒட்டியும் வாழ்க்கை அமைய வேண்டும் என விரும்புவேன். ரயிலைப் பார்ப்பது ரயில் ஹாரனைக் கேட்பது என்பது பரவசமூட்டும் அனுபவமாக இருக்கும். 

திருச்சி ஆலயங்கள் நிறைந்த ஊர். மக்கள் குடும்பம் குடும்பமாக  ஆலயங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். மக்கள் முகத்தில் மகிழ்ச்சி. எப்போதும் இறைவனிடத்தில் அவர்களுக்கு ஒரு பிராத்தனை இருந்து கொண்டேயிருக்கிறது. மேலான வாழ்க்கை. அமைதி. 

உத்தமரைச் சேவித்தேன். உத்தமரைச் சேவித்து ஆண்டின் முதல் தினம் தொடங்கியது. 

Wednesday 1 January 2020


ஓர் அன்னையின் முன்னால்
நதிக்கரையில்
வேர்கள்
பாதி நதியிலும்
பாதி நிலத்திலும்
பரவி நிற்கும்
பெரும் விருட்சத்தின் முன்னால்
பிராத்தனைகளுடன் ஏற்றப்பட்டுள்ள
தீபங்களின் முன்னால்
மௌனத்துடன்
உயர்ந்திருக்கும்
மலையின் முன்னால்
உலகைத் தன் சிறகுகளால்
அணைக்கும்
பறவையின் முன்னால்

சிந்தப்படும்
விழிநீர்

உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது
ஒவ்வொரு
புதிய
நாளையும்