Tuesday 31 March 2020

கருணைப் பெருவெளி


நாம் வாழும் காலகட்டத்தில் தொழில்நுட்பம் பல்வேறு விதமான உபகரணங்களை நமக்கு வழங்கியுள்ளது. தொழில்நுட்பம் வழங்கும் சாதனங்களை உலகளாவிய வணிகம் மனிதத்திரள் உயிர்த்திருக்கும் எந்த நிலத்துக்கும் கொண்டு சென்றுள்ளது. இன்று உலகின் எந்த மானுட சமூகமும் உலகாயதத்தையே தன் எண்ணமாய் செயலாய்க் கொண்டுள்ளது. கடந்த நூற்றாண்டுகளில் மண் ஆண்ட மன்னர்களுக்கு இல்லாத வசதிகள் இன்று சாமானிய மனிதனுக்கும் கிடைக்கிறது. மக்களாட்சி கொள்கையளவினேனும் பொருள் ஈட்டுவதற்கான வாய்ப்பை அனைவருக்கும் தருகிறது. இவை உண்மைகள். ஆனால் இந்த உண்மைகள் மானுடத்துக்கு நலத்தை மட்டுமே வழங்கியுள்ளனவா என்பதை நாம் யோசிக்க வேண்டும். மனித உழைப்பு சுரண்டப்படுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பினும் அறமற்ற வணிகம் மனித குலத்தை அதன் வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு மனதளவிலும் கருத்தாகவும் அடிமைப்படுத்தியுள்ளது. சக மனிதன் மேல் நம்பிக்கை இருக்க வேண்டிய இடத்தில் நம்பிக்கையின்மையை எங்கும் நிரப்பியுள்ளது. பொருளியல் விடுதலை என்ற போர்வையில் ஒட்டு மொத்த மானுடத்தின் மேலும் நுகர்வு திணிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தால் மானுடம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக திரட்டியிருக்கும் ஞானம் எல்லா மனிதனுக்கும் கிடைக்கும் இக்காலகட்டத்திலேயே வரலாற்றில் என்றும் இல்லாத அளவு நுகர்வு, வணிகத்தாலும் அரசியலாலும் ஒவ்வொரு தனிமனிதன் மேலும் திணிக்கப்பட்டுள்ளது.

மானுடன் தன் உலகியல் வாழ்வு தனக்கு அளிக்கும் சமூக, அரசியல், பொருளாதார அடையாளங்களுடன் பிணைக்கப்பட்டவன் மட்டும் தானா? அவனது விடுதலை சாத்தியம் தானா? என்ற வினாக்கள் மிகப் பெரிதாக எழுந்து நிற்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட யோகிகளும் ஞானிகளும் வாழும் உலகை நமக்கு அறிமுகம் செய்யும் நூல் ’’ஒரு யோகியின் சுயசரிதம்’’. இறைமை என்பது ஒவ்வொருவருக்குள்ளும் நிரம்பியிருக்கிறது; புற அடையாளங்கள் முழு உண்மை அல்ல; அவை பகுதி உண்மைகளே என்னும் அடிப்படையிலிருந்து தங்கள் புரிதலைத் துவங்கி வாழ்வின் முழுமையான நிலையை அடைந்த ஜீவன்களின் வாழ்க்கை குறித்த சில சுவடுகளை அடையாளம் காட்டுகிறது இந்நூல். 

சமூக உறவுகளையும் அதன் எல்லைகளையும் மட்டுமே நாம் புறவய யதார்த்தமாகக் கண்டிருக்கும் வாழ்வில் நம் கண்ணுக்குத் தெரியாமல் யுகயுகமாக உயிர்த்திருக்கும் யுக புருஷர்கள் மனிதர்கள் மேல் கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பையும் கருணையையும் உணர்வதற்கான வாய்ப்பை இந்நூல் வழங்குகிறது. 

யோகம் என்பது பிரபஞ்சத்துடன் ஒன்றுதலைக் குறிக்கும். நானும் உலகும் வேறல்ல என உணரும் நிலையே மனிதனின் முழு விடுதலை. இந்திய மரபு ஞான , பக்தி, கர்ம, கிரியா யோகங்களை மானுட விடுதலைக்கான கருவிகளாகக் கொண்டுள்ளது. பகவத்கீதை இந்த வெவ்வேறு விதமான மார்க்கங்களுகிடையே ஓர் ஒருங்கிணைப்பை உருவாக்கிய நூல். அல்லது இந்த மார்க்கங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்த நூல். 

கிரியா யோகம் மனிதன் தன்னை - தனது உடலை - தனது மனத்தை - தனது எண்ணத்தை - தனது மூச்சை தொடர்ந்து குறிப்பிட்ட முறையில் கவனிப்பதன் மூலம் வாழ்வின் எல்லா உண்மைகளையும் அறியும் மார்க்கம் என்று சொல்ல முடியும். மானுடன் வாழ்வின் போக்கிலேயே சென்று விடுதலை பெற லட்சக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படும் என்று இந்நூல் சொல்கிறது. இந்த உலகில் மனிதர்கள் சில ஆயிரம் ஆண்டுகளாக உயிர்வாழ்கிறார்கள் எனில் கிரியா யோகம் சொல்லும் லட்சக்கணக்கான ஆண்டுகள் புவியில் தோன்றிய முதல் உயிரிலிருந்து நிகழும் பயணத்தைக் குறிக்கிறது எனப் புரிந்து கொள்ள முடிகிறது. உயிரின் பரிணாமத்தில் லட்சக்கணக்கான ஆண்டுகளில் நிகழும் மாற்றத்தை மிக விரைவில் நிகழ்த்தக்கூடியது கிரியா யோகம். நெடுந்தொலைவை கால்நடையாகக் கடப்பதற்கும் விமானத்தில் கடப்பதற்குமான வேறுபாடு. மானுடப் பிரக்ஞையை மிக உயர் தளங்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் கொண்டு செல்லும் கருவியே கிரியா யோகம். 

கிரியா யோகம் பயிலும் மாணவர்களின் புற உலகத் தடைகளை சூட்சும வடிவத்தில் இருக்கும் குருமார்கள் அவ்வப்போது தோன்றி தகுந்த வழிகாட்டல் மூலம் நீக்குவதன் சித்திரம் இந்நூல் முழுதும் உள்ளது. இமயமலையின் குகைகளும் பனி பொழியும் பிராந்தியங்களும் இந்நூலை வாசிப்பவர்களை அவர்கள் மனத்தில் உணரச் செய்கிறது. அமைதியற்ற சமூகம் அதன் பிரஜைகள் ஒவ்வொருவர் மனத்திலும் உருவாக்கியிருக்கும் அவநம்பிக்கைகளை அகற்றி வாழ்வின் அற்புதங்களை உணர வைக்கும் கருணைப் பெருவெளியாகவும் இந்த உலகம் இருப்பதை இந்நூல் குறிப்புணர்த்துகிறது.

இந்தியா ஆன்மீகமான சாதனைகளுக்கான தேசமாகவே காலங்காலமாக இருந்துள்ளது.  இந்தியா ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தன் நாட்டை நோக்கி ஆக்கிரமிக்க வந்தவர்களுடன் போராடியதும் அதன் ஆன்மீகப் பாரம்பர்யத்தைத் தொடர்வதற்காகத்தான். இந்திய ஆன்மீகத்தின் முக்கியமான பகுதியான கிரியா யோகம் குறித்து ஒரு ஞானியால் எழுதப்பட்டிருக்கும் நூல் ‘’ஒரு யோகியின் சுயசரிதம்’’.

கருணைப் பெருவெளியின் அன்பான கண்கள் நம்மைக் காண்கின்றன என்பதே வாழ்வுக்கு பெரும் நம்பிக்கை தருகிறது. நமது அறிதலுக்கு அப்பாற்பட்ட அற்புதப் பெருவெளிகளில் அலைந்து திரியும் அனுபவத்தைத் தரும் நூல் ‘’ஒரு யோகியின் சுயசரிதம்’’.

Monday 30 March 2020

புதுக்கோட்டையிலிருந்து ஒரு வாசகர் கடிதம்

அன்புள்ள பிரபு,

இப்போதுதான் ஒரு வாரமாக உங்கள் வலைப்பூவைப் படித்து வருகின்றேன். மறையூர்ச்சாலைக்குச் செல்ல வேண்டும் போலுள்ளது.  உங்களின் வட இந்தியப் பயணம் ஒரு சாகசக் கலை. அங்கங்கே உள்ள மனிதர்களுடன் மிக இயல்பாக ஒட்டிக்கொள்கிறீர்கள். இந்தியா எங்கணுமே உள்ள மனிதர்கள் இவ்வாறு பயணிகளுக்கு உதவுவது மகிழ்வாகவும் பெருமையாகவும் உள்ளது. திரும்பி வரும் போது ஏற்பட்ட அனுபவங்களையும் எழுதியிருக்கலாம். கம்பராமாயணக் கட்டுரைகளும் மிக ந்ன்றாக உள்ளன. சோமே‍சுவரனுடன் சென்ற‌ நடை அழகு. நான் இன்னும் சோமேசுவரன் அளவுக்குக் கூட கவிதைகள் படிக்கத் தொடங்கவில்லை.

நன்றி

நாரா.சிதம்பரம்

Saturday 28 March 2020

இராமன் கதை

நான்கு நாட்களாக வீட்டில் இருக்கும் போது சில விஷயங்கள் துலக்கம் பெற்று வந்தன. சில ஆண்டுகளுக்கு முன் இயற்கை விவசாயம் சார்ந்த  ஒரு சமூகச் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தேன். அதன் ஒரு பகுதியாக ஊருக்கு அண்மையில் இருக்கும் பல கிராமங்களுக்குச் சென்று வந்தேன். சில கிராமங்கள் மிகவும் உள்ளடிங்கியவை. அந்த கிராமங்களில் நான் அவதானித்த விஷயம் ஒன்று உண்டு. அந்த  கிராமங்களுக்கு அவற்றின் வெளிப்புறத்திலிருந்து வருபவர்கள் சிறு வணிகர்களே. பாத்திர வியாபாரிகள். அண்மையில் உள்ள நகருக்கு அவர்கள் வர வேண்டும் என்றால் இரண்டு கிலோ மீட்டர் நடந்து வந்து பக்கத்தில் உள்ள சற்று பெரிய கிராமத்துக்கு வந்து அங்கு பேருந்து பிடித்து பத்து கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். நான் அங்கிருந்த போது வந்த பாத்திர வியாபாரியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய வாடிக்கையான ‘’லைன்’’. மீண்டும் பத்து நாள் கழித்து வருவேன் என்றார்.

தமிழக கிராமங்கள் தங்கள் ஊரைத் தாண்டி பெரும்பாலும் எங்கும் செல்லாத பழக்கம் கொண்டவர்கள். அவர்களுடைய பிரதான தொழில் விவசாயம். அவர்களுடைய பொருளியல் சுழற்சி கிராமத்துக்குள்ளேயே பெரும்பாலும் நிறைவு பெற்று விடும். அவ்வாறெனில் அவர்கள் எவ்வாறு தங்கள் வாழ்வியலை உயிரோட்டத்துடன் வைத்துக் கொண்டார்கள்?

கிராம மக்களின் வாழ்வில் நாட்டுப்புறக் கலைஞர்கள் பெரும் பங்கு வகித்தனர். பறை வாத்தியத்தை இசைத்தவாறு மொத்த மகாபாரதத்தையும் சொல்லும் கலைஞர்கள் ஊருக்கு ஊர் இருந்திருக்கின்றனர். அவர்களைப் பேணும் மரபு தமிழக கிராமங்களுக்கு இருந்திருக்கிறது. அவர்களே இந்தியாவின் இதிகாசங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள். அதன் மூலம் தமிழ் கிராமங்களின் பண்பாட்டை உயிர்த்திருக்கச் செய்தவர்கள். 

இன்றும் ஒவ்வொரு தமிழ்நாட்டின் கிராமத்திலும் இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் கதையாகச் சொல்லக்கூடிய கதைசொல்லிகள் தேவைப்படுகிறார்கள். கிராமத்தின் சிறு குழந்தைகள் - மூன்றிலிருந்து எட்டு வயது வரையிலான குழந்தைகள் மனிதக் குரலின் வழியாக இந்த கதைகளைக் கேட்க வேண்டும். காட்சி ஊடகத்தின் மூலம் பார்ப்பதைக் காட்டிலும் இது பயன் மிக்கது. அந்த ‘’கதைசொல்லிகள்’’  அவர்கள் பண்பாட்டுப் பணிக்காக நல்ல ஊதியம் பெற வேண்டும். 

Thursday 26 March 2020

நாம் உருவாக்கிய உலகம்
ஒரு பலூனின்
எளிமையுடன்
குதூகலத்துடன்
உல்லாசமாக
மிதந்து
சென்று கொண்டே யிருக்கிறது

ஒரு தீபத்தை
ஏற்றுவதற்குத்தான்
நாம் எத்தனை
உணர்ச்சி கொள்கிறோம்
சுரம் கொண்ட குழந்தையை
அணைத்துக் கொள்ளும்
தாயைப் போல

பலிச்சோறு
ஏற்கும்
காகத்தின் கரைதல்
ஏன்
கண்ணீரைக் கொண்டு வருகிறது?

சொல்லா
மௌனமா
என்பதன் தெரிவு
எப்போதும்
அலைக்கழிக்கிறது

இனிமையும்
பிரிவும்
ஊற்றெடுக்கச் செய்யும்
கண்ணீர்
ஒன்றாகவே இருக்கிறது
தினமும்
உதயமும்
அஸ்தமனமும்
நிகழும் உலகில்

Wednesday 25 March 2020

காரணிகள்

அன்பே
சாதாரணமான பொருட்களை
மாற்றமின்றி
மீண்டும் மீண்டும் நிகழும்
சாதாரணமான சம்பவங்களை
மிகச் சாதாரணமான மனநிலைகளை
நீ
மகத்துவம் நிறைந்தவையாக
நெசவு செய்தாய்
சாதாரணத்தின் அகல்களில்
அற்புதங்களென
ஒளிர்ந்தன
நீ ஏற்றிய தீபங்கள்
எப்போதாவது
அல்லது
எப்போதும்
மகத்தானவையும்
துயர் கொள்ளும்
இந்த மண்ணின்
வேதியியல்
காரணிகள்
என்னென்ன?

Tuesday 24 March 2020

சத்யம் சிவம்

இன்று மாலை வீட்டிற்கு சோமேஸ்வர் வந்திருந்தான். ஈஷ் என்று கூப்பிடுவோம். அவனது தங்கை பத்மா. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் சென்னையில் விவேகானந்தா கல்விக் கழகம் நடத்தும் பள்ளியில் இருவரும் படிக்கிறார்கள். அவரது தந்தை இவர்கள் சிறு குழந்தையாயிருந்த போது வட இந்தியாவில் பணி புரிந்தார். ஆதலால் இருவரும் சரளமாக ஹிந்தி பேசுவார்கள். அவர்கள் வீடு எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ளது. இருவரும் தினமும் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பார்கள். ஈஷ் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு சமீபத்தில் எதிர்பாராத ஒரு அசௌகர்யம் வந்து விட்டது. இவனுடைய படிப்புப் பிரிவு கம்ப்யூட்டர் சயின்ஸ். இவன் பிரிவைத் தவிர மற்றவர்களுக்கு சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வு முடிந்து விட்டது. கோவிட்19 வைரஸ் முன்னேற்பாடுகள் காரணமாக இவனது பரீட்சையை தள்ளி வைத்து விட்டார்கள். 

‘’அங்கிள்! என் ஸ்கூல்ல வேற குரூப் படிச்ச என்னோட ஃபிரண்ட்ஸ் எல்லாம் டுவெல்த் முடிச்சுட்டாங்க அங்கிள். நான் மட்டும் இன்னும் டுவெல்த்தாவே இருக்கன்”

‘’என்ன எக்ஸாம் மீதி இருக்கு ஈஷ்?’’

‘’கம்ப்யூட்டர் சயின்ஸ்’’

‘’பரீட்சை ஈஸி தானே?’’

‘’ஈஸி தான். ஆனா முடிஞ்சுருந்தா நிம்மதியா இருக்கும்”

‘’பத்து நாள்ல எல்லாம் சரியாயிடும். டோண்ட் ஒர்ரி.’’

அவர்கள் சென்ற வாரமே இங்கு வந்து விட்டார்கள். சொந்தமாக கார் உள்ளது. அவனுடைய அப்பா டிரைவ் செய்து வந்து விட்டார். 

இங்கே அருகில் இருக்கும் அபார்ட்மெண்டில் சில குழந்தைகள் உள்ளன. பத்து வயதிலிருந்து பதினான்கு வயது வரை உள்ள குழந்தைகள். ஒரு வாரமாக ஒரே விளையாட்டு. ஹைட் அண்ட் சீக், பாட்மிட்டன். ரிங் பால். ஒரே கும்மாளம்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஈஷ் தீவிரமான கிரிக்கெட் ரசிகன். கிரிக்கெட் பற்றிய புள்ளிவிபரங்களை அள்ளி வீசுவான். எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். பௌலிங்கில் நல்ல பயிற்சி உள்ளவன். கிரிக்கெட் தன் வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்று விரும்பினான். பின்னர் சட்டென ஒரு தருணத்தில் , கிரிக்கெட் விளையாடுவதை விட்டு விட்டான். அப்போது வந்திருந்த போது அவன் ஒரு வார்த்தை கூட கிரிக்கெட் பற்றி பேசாமல் இருந்ததைப் பார்த்து அது குறித்து விசாரித்தேன். 

‘’அப்பாவுக்கு பிராமிஸ் பண்ணியிருக்கன் அங்கிள். இனிமே கிரிக்கெட் விளையாட மாட்டன்னு. அத பத்தி பேசுனா மனசுக்கு கஷ்டமா இருக்கும். அதனால பேசுறது இல்ல’’

‘’விளையாட மாட்டன். பிராக்டிஸுக்கு போக மாட்டேன்னு தான பிராமிஸ் பன்ன. பேசக் கூடவா கூடாது?’’

‘’பேசுனா ஞாபகம் வரும் அங்கிள். அதனால தான் பேசறது இல்ல”

ஈஷ் சிறு குழந்தையாயிருந்த போது - அவன் எல்.கே.ஜி படித்த போது அவனை நான் ஸ்கூலில் என்னுடைய பைக்கில் அழைத்துச் சென்று விட்டிருக்கிறேன். அவனுடைய தங்கை பிறந்து சில மாதங்களே ஆன கைக்குழந்தையாயிருந்த போது ஈஷ் அம்மாவையும் பாட்டியையும் என்னுடைய காரில் அழைத்துச் சென்று சிதம்பரத்தில் டிராப் செய்திருக்கிறேன். இன்று அவன் ஒரு டீன் ஏஜ் சிறுவன். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இளைஞனாகி விடுவான்.

அபார்ட்மெண்டில் இருக்கும் குழந்தைகளுடன் விளையாடி முடித்ததும் அவர்களை இன்னும் பக்குவம் பெறாத சிறுவர்கள் என்று தீவிரமாக ஒரு வாரத்துக்குப் பின் இன்று உணரத் துவங்கியதும் என்னைக் காண வந்தான்.

‘’ஹாய் அங்கிள்’’

”ஹாய் கண்ணா!”

‘’வீட்லயே இருக்கறது எப்படி இருக்கு அங்கிள்? இந்த டயத்துல என்ன செய்றீங்க?’’

’’புக்ஸ் படிக்கறது. சில பொயட்ரி எழுதுனன். சில கட்டுரை எழுதனன்”

ஈஷ் தன் மொபைலை எடுத்தான். ’’அங்கிள் உங்க பிளாக் அட்ரஸ் சொல்லுங்க”

”கூகுள்ல என்னோட பேர போட்டு ஒரு ஸ்பேஸ் விட்டு நம்ம ஊரை டைப் பண்ணு ஈஷ் ‘’

அவன் என்னுடைய தளத்திற்குள் சென்று விட்டான்.

’’ரெண்டு நாள் முன்னாடி அழகு ன்னு ஒரு பொயட்ரி எழுதியிருக்கன். வாசிச்சுட்டு இரு. நான் ஷர்ட் போட்டுட்டு வர்ரேன். நாம ஒரு சின்ன வாக் போய்ட்டு வருவோம். சரியா?’’

சோமேஸ்வருடன் நடக்கத் துவங்கினேன். உற்சாகம் ததும்பும் ஒருவர் உடனிருக்கும் போது மனம் தளர்வாக இருக்கிறது. சந்தோஷமும் நம்பிக்கையும் உண்டாகிறது. நான் ஊக்கம் நிரம்பிய மனிதர்கள் உடனிருப்பதை விரும்புபவன்.

‘’அங்கிள்! நீங்க எப்படி பொயட்ரி எழுதுவீங்க?’’

‘’அதை எப்படி சொல்றது ராஜா? ஒரு மொமண்ட் சட்டுன்னு ஒண்ணு தோணும். அது ஒரு காட்சியா இருக்கலாம். இல்ல ஒரு வார்த்தையா இருக்கலாம். இல்ல ஒரு ரிதமா இருக்கலாம். ஒரு ஓசையா இருக்கலாம். அது உண்டானதும் அதை எழுதணும்னு தோணும். அது ஒரு பொயட்ரியா இருக்கலாம்.’’

‘’நான் கூட இங்கிலீஷ்ல சில போயம் எழுதியிருக்கன் அங்கிள் ‘’

‘’எனக்கு காட்டறியா . நான் படிச்சு பாத்துட்டு எப்படியிருக்குன்னு சொல்றன். சரி, இப்ப வாசிச்சயே இந்த போயம் எப்படி இருந்தது?’’

‘’ரொம்ப நல்லா இருந்தது அங்கிள்”

சோமேஸ் முக தாட்சயண்யத்துக்காகச் சொல்கிறேனோ என்ற ஐயம் எனக்கு எழுந்தது.

‘’அந்த போயத்தை நீ எப்படி வாசிச்சன்னு சொல்லு பார்க்கலாம்’’

அவன் சொற்களுக்குத் திணறினான். இரண்டு மூன்று முறை எதையோ சொல்ல ஆரம்பிக்க முயன்றான். அவனுக்கு சரியான துவக்கம் அமையவில்லை. மௌனமாக நடந்தோம். சில அடிகள் நடைக்குப் பின், சட்டென்று பேசத் துவங்கினான்.

’’ யாரோ யார்ட்டயோ ஒரு ஃபீலை சொல்ல முயற்சி பண்றாங்க. அது ரொம்ப பியூரிடியோட இருக்கு. ஒரு சாதாரண ஃபீலை ஈஸியா சொல்லிடலாம். ஆனா ரொம்ப பியூரான ஃபீலை அந்த மாதிரி சொல்ல முடியாது. அதனாலயே சொல்ல முடியாம ஆகுது. அந்த ஃபீலோட காத்திருக்கறது பத்திய போயம் இது.’’

நான் கைக்குழந்தையாய் பார்த்த ஒருவன் என்னிடம் வாழ்வின் தீவிரமான நுட்பமான ஓர் உணர்வைக் குறித்து பேசுவது வியப்பைத் தந்தது. குழந்தைகள் தரும் மகிழ்ச்சி அகத்தைப் புனிதப்படுத்துகிறது.

‘’சோமேஷ்! உன்னை சின்னப் பையன்னு நினைச்சன். நீ ரொம்ப கிரியேட்டிவ்வா இருக்க ராஜா.’’

‘’நான் சொன்னது கரெக்டா?’’

’’பொயட்ரி-ல கரெக்ட் தப்புன்னு எதுவும் கிடையாது. அது பொயட்ரியா இருக்கா இல்லையாங்கறதுதான் கேள்வி. நாம எப்படி வாசிக்கிறோம் என்பது தான் முக்கியம்”

நான் சில கணங்கள் மௌனமாக நடந்தேன்.

‘’இந்தியாவுல காத்திருப்பு குறித்து மூவாயிரம் வருஷத்துக்கு மேல கவிதை எழுதப்படுது. சகுந்தலை துஷ்யந்தனுக்காகக் காத்திருக்கா. ராதை கிருஷ்ணனுக்காகக் காத்திருக்கா. பரதன் வனவாசம் முடிஞ்சு ராமர் எப்ப வருவார்னு காத்திருக்கார். சீதை ராமன் வருவார்னு அசோகவனத்துல காத்திருக்கா. சங்க இலக்கியத்துல காத்திருப்போட சித்திரங்கள் இருக்கு. கண்ணகி காத்திருப்பது. மாதவி காத்திருப்பது. இந்திய மரபுல காத்திருப்பு ரொம்ப ஆழமான படிமம். ஒவ்வொரு காலத்திலயும் அத பத்தி கவிதை எழுதப்படுது ‘’ எனக்கு சோமேஸ் நான் சொல்வதைப் புரிந்து கொள்வானா என்ற ஐயம் இப்போது இருக்கவில்லை.

‘’உனக்கு கிரிக்கெட்ல யாரை ரொம்ப பிடிக்கும்?’’

‘’எம்.எஸ். தோனி. உங்களுக்கு?’’

‘’ராகுல் திராவிட்’’

‘’ரொம்ப பொறுமையானவர் அங்கிள் திராவிட்.’’

‘’இந்தியாவுக்கு நிறைய வெற்றியைத் தந்தவர். தோனிக்கு அடித்தளமா இருந்தவர்’’

‘’உண்மைதான் அங்கிள். எனக்கு தோனி அளவுக்கே பிடிச்ச இன்னொரு பர்சனாலிட்டி ரஜினி அங்கிள்’’

நான் ஆச்சர்யமாக அவனைப் பார்த்தேன்.

‘’ரெண்டு பேருக்குமே ஒரு ஒற்றுமை இருக்கு அங்கிள். அவங்க ரெண்டு பேரையும் அவங்க ஆப்போசிட் ஆளுங்களால அவ்வளவு ஈஸியா பிரவோக் பண்ண முடியாது. தோனியை சீண்டுவாங்க. ஆனா தோனியோட கவனம் ஆட்டத்தின் மேலேயே இருக்கும். எதிர் டீமுக்கான பதிலை அடுத்த பந்துலயே தருவார். ஒரு ஹெலிகாப்டர் ஷாட். ரஜினியும் அப்படித்தான். தான் என்ன செய்யறோம்ங்றதல தெளிவா இருக்கார். இப்ப மக்கள்ட்ட சொல்லியிருக்கார். தூத் கி தூத்; பானி கி பானி. எல்லாருக்கும் தெரியும் அங்கிள். எது பால் எது தண்ணின்னு. மக்களே முடிவு செய்யட்டும்னு நினைக்கறார். மக்கள் ரஜினி சொல்றதைக் கேட்டுறுவாங்கன்னு அவரோட எதிரிகளுக்குத் தெரியும் அங்கிள். அதனாலதான் அவர் சாதாரணமா சொல்றதைக் கூட விதவிதமா வேற மாதிரி சொல்றாங்க”

‘’சோமு கண்ணா! எப்படிடா உனக்கு இந்த மாதிரில்லாம் யோசிக்கத் தெரியுது.’’

’’சிஸ்டத்தை சரி பண்ணனும் அங்கிள். நேரோ மைண்டடான ஆளுங்க இந்த உலகத்தை வாழத் தகுதியில்லாம ஆக்குறாங்க. இந்த பூமியை சூப்பரா மாத்தணும் அங்கிள்’’

வாக்கிங் முடிந்து வீட்டுக்கு வந்ததும் பத்மாவை அழைத்து வரச் சொன்னேன். உத்தராயணை ஒட்டி அகமதாபாத் சென்ற போது சபர்மதி ஆசிரமம் சென்றிருந்தேன். அங்கே வாங்கிய மகாத்மா காந்தி படம் பொறித்த கீ-செயின்களை அவர்களுக்குப் பரிசளித்தேன். மனம் இனிமையை உணர்ந்தது.


Sunday 22 March 2020

அழகு

நினைவிருக்கிறதா
நீர் ஆற்றின் கரையில்
மெல்ல அசையும்
பசும்நாக்குகள்
காற்றுடன் உரையாடும்
விருட்சத்தின் அடியில்
காத்திருக்கச் சொன்னாய்

மூச்சுக் காற்றென
சுழல்கின்றன
பகல் பொழுதும்
இரவும்

கண்ணீரால்
முற்றும்
உடல் கரைக்க இயலுமா?
மனம்?
உணர்வு?

நீ மட்டுமே
எஞ்சியிருக்கிறாய்
நினைவுகளாக
உன்னிலிருந்தே அர்த்தமாகின்றன
முடிந்த
நடக்கும் காலங்கள்

எனது
கண் நீர்த் துளிகள்
உன்னைக் கவசமெனக் காக்குமெனில்
அவை
என் தவமாகும்

இனிமை நிறைந்த
உன் நிலத்தில்
எனது கண்ணீர்த் துளிகள்
அசௌகர்யம்
உணரச் செய்திடுமோ
என்று
பதைக்கிறேன்

சந்தித்த
முதல் பொழுதிலிருந்து
இன்னதென்று அறிந்திட முடியாத
இவ்வாறென மொழிய இயலாத
இப்பொழுது எனக் கூறிட இயலாத
தொகுத்துக் கொள்ள இயலாத
உணர்வுகளால்
இப்போதும்
அலைக்கழிக்கப்படுகிறேன்

சந்திப்புக்கான
காத்திருப்பு
கடவுளுக்கான காத்திருப்பாயாவதும்
வாழ்வின் அழகுதானே?

Saturday 21 March 2020

பயணம்

உனது மெல்லிய புன்னகையை
முகம் சாயும் நாணத்தை
அன்பின் நீர்மை நிறைந்த கண்களை
பிரியங்கள் உரையாடும் மௌனத்தை
இனி
காண இயலாமல் கூட போகலாம்
இந்த பெரும் உலகின்
கணக்கற்ற வலைப்பின்னல்களின் சாத்தியத்தில்
கணக்கற்ற சந்திப்புகளின் வாய்ப்புகளில்
தற்செயலாகக் கூட
ஓர் எளிய விருப்பம்
நிகழாமல் போகலாம்
அந்திப் பொழுதாய்
நிறை நிலவாய்
வானாய்
நீரலைகளாய்
விண்ணாய்
கண்ட
அன்பினை
மீண்டும் அவ்வாறு காண்பதற்கு
பயணிக்கப் போகும்
காலம் எவ்வளவு?
தூரம் எவ்வளவு?

Friday 20 March 2020

ஹிந்த் ஸ்வராஜ்

நான் என்னுடைய கல்லூரி நாட்களில் ‘’சத்திய சோதனை’’ வாசித்தேன். தமிழில் பரவலாக அறியப்பட்ட நூல். அவர் தனது ஆரம்பகட்டங்களில் எழுதிய நூல். ஓர் ஆன்ம சாதகனின் துவக்க காலக் குறிப்புகள் என எண்ணினேன். பின்னர் பொறியியல் இறுதி ஆண்டில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தனது ‘’வாக்கியங்களின் சாலை’’ நூலில் லூயி ஃபிஷரின் ‘’தி லைஃப் ஆஃப் மகாத்மா காந்தி’’ என்ற நூல் குறித்து எழுதியிருந்த கட்டுரை அந்நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. பாரதீய வித்யா பவனின் வெளியீடாகக் கிடைத்த அந்நூலை வாசித்தேன். காந்தியை மிகச் சரியாக அறிமுகப்படுத்தும் நூல் என்று எண்ணினேன். பல பிரதிகள் வாங்கி நண்பர்களுக்கு அன்பளிப்பாக அளித்திருக்கிறேன். ஒவ்வொரு இந்தியனும் வாசிக்க வேண்டிய நூல் என்று கூறுவேன். பின்னாட்களில் அந்நூல் குறித்து ஒரு கட்டுரை எழுதினேன். அது ஓர் இலக்கிய இதழில் வெளியானது. அக்கட்டுரையில் தமிழில் காந்தி குறித்த முக்கியமான நூல்களாக மூன்று நூல்களைக் குறிப்பிட்டேன். அவை 1. காந்தி வாழ்க்கை (லூயி ஃபிஷர்) (தமிழ் மொழிபெயர்ப்பு) 2. தென்னாப்ரிக்க சத்யாக்ரகம் (மகாத்மா காந்தி) (தமிழ் மொழிபெயர்ப்பு) 3. இன்றைய காந்தி (ஜெயமோகன்) ஆகிய மூன்று நூல்களைக் குறிப்பிட்டிருந்தேன். சமீபத்தில் சாவி எழுதிய ‘’நவகாளி யாத்திரை’’ என்ற சிறு நூலை வாசித்தேன். முக்கியமான நூல். நேற்றும் இன்றும் மகாத்மா காந்தியின் ‘’ஹிந்த் ஸ்வராஜ்’’ நூலை வாசித்தேன். காந்தி நூல்களில் மிகவும் முக்கியமானது என்ற எண்ணம் ஏற்பட்டது.

ஒரு வாசகரும் ஆசிரியரும் உரையாடிக் கொள்ளும் பாணியில் இந்நூலை வினா - விடை பாணியில் மகாத்மா அமைத்திருக்கிறார். உரையாடிக் கொள்ளும் வாசகரும் ஆசிரியரும் மகாத்மாவே. தேசம் குறித்தும் தேசப்பணி குறித்தும் தான் சிந்தித்தவற்றை தான் பரிசீலித்தவற்றை கேள்வி பதிலாக அளித்துள்ளார். 

இந்த தேசத்துக்கென ஒரு ஆன்மா உள்ளது என்று காந்தி உறுதியாக நம்புகிறார். எழுதப்பட்டுள்ள அல்லது தொகுக்கப்பட்டுள்ள மன்னர்களின் சரித்திரம் மட்டுமல்ல இந்திய வரலாறு என்று ஐயமின்றி முன்வைக்கிறார். இந்நாட்டின் விவசாயிகளை எந்த மன்னரின் அரசாட்சியும் எதுவும் செய்ய முடியாது என்கிறார். அவர்களை அச்சமின்றி தயக்கமின்றித் தங்கள் கடமையைச் செய்யும் வீரர்கள் என்கிறார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவர்கள் தங்கள் கடமையைச் செய்திருக்கிறார்கள். அதற்கு எவ்விதமான புறத் தூண்டலும் காரணமல்ல என்பதை பதிவு செய்கிறார். இந்த கோணம் எனக்கு ஆச்சர்யமளித்தது. உறுதியான சொற்களில் மகாத்மா இதனை நிறுவுவது மேலும் வியப்பைத் தந்தது. ‘’ஜெய் ஜவான் ஜெய் கிசான்’’ என்ற கோஷம் உருவானதின் பின்னணி புலப்படத் துவங்கியது. 

இந்திய தேசிய காங்கிரஸ் ஆற்றிய செயல்கள் குறித்தும் அதன் எல்லைகள் குறித்தும் காந்தி விவாதிக்கிறார். 

இந்தியா ஒரே தேசம் என்பதை காந்தி விளக்குகிறார். இந்திய மக்கள் ஒரே பண்பாடு கொண்டவர்கள். அவர்களது நம்பிக்கைகளில் எண்ணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் இந்தியா ஒரே தேசமாகவே பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒரு மிகப் பெரிய நிலப்பரப்பை ஒன்றுபடுத்தும் மேன்மையான அப்பண்பாடு சமகாலத்தில் அக்கறையுடன் காத்து முன்னெடுப்பது இந்நாட்டு மக்கள் ஆற்ற வேண்டிய கடமை என்கிறார்.

இந்தியாவின் கைத்தொழில்கள் காக்கப்படுவதே இந்தியாவைக் காப்பதற்கான வழி என்று உறுதியாகக் கூறுகிறார். இயந்திரமயமாக்கல் பலன்களை விட அழிவை அதிகமாகத் தரக்கூடியது என்று அவதானிக்கிறார்.

வழக்கறிஞர்களையும் மருத்துவர்களையும் மகாத்மா கடுமையாக சாடுகிறார். நீதிமன்றங்களே நீதி சொல்ல வேண்டும் என்பது வழிக்கறிஞர்கள் சம்பாத்தியத்துக்கான வழியாகவே அமையும் என்கிறார். அவரே ஒரு வழக்கறிஞர் என்பதோடு யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம் இது. இந்திய கிராமங்களின் பாரம்பர்யமான பஞ்சாயத்து போன்ற முறைகளே ஆதரிக்கப்பட வேண்டும் என்கிறார்.

நவீன மருத்துவம் மருத்துவத்தின் அறத்தைச் சிதைக்கிறது எனக் குற்றம் சாட்டுகிறார் மகாத்மா. ஒரு மருத்துவர் நோயாளிக்கு அறிவுறுத்தும் இடத்தில் இருக்க வேண்டியவர். மருந்து தருவது மட்டும் தனது வேலை என்று அவர் நினைப்பாராயின் அதை விடப் பெரிய சமூகத் தீமை வேறொன்றில்லை என்கிறார். நோயின் காரணத்தை நோயாளியின் வாழ்விலிருந்து நீக்குவதும் மருத்துவரின் பணியே என்கிறார் மகாத்மா.

அரசாங்கம் எண்ணிக்கையில் மிகவும் குறைவான ஆட்களைக் கொண்டு இயங்க வேண்டும் என்பதே மகாத்மாவின் எண்ண ஓட்டமாக இருக்கிறது. விவசாயம் மதிக்கப்படும் நெசவு போற்றப்படும் கைத்தொழில்கள் முக்கியத்துவம் பெறும் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கைக்கொள்ளும் சமூகம் குறித்த கனவை மகாத்மா உருவாக்குகிறார். இந்நூலை வாசிக்கும் போது அது சாத்தியமானதே என்ற நம்பிக்கையை நாமும் அடைகிறோம்.

சிறு நூலாயினும் மிக முக்கியமான நூல் ‘’ஹிந்த் ஸ்வராஜ்’’.

Thursday 19 March 2020

வாசிப்புப் பயிற்சி

சில மாதங்களுக்கு முன், வாசிப்பு மாரத்தானில் 40 நாட்களில் 100 மணி நேரத்துக்கு மேல் வாசித்தேன். சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டரை மணி நேர வாசிப்பு. எளிய இலக்குதான். ஆனாலும் ஒரு நாள் கூட விடுபடாமல் வாசிக்க வேண்டும் என்பது விதி. ஒரு நாளும் விடுபடவில்லை. இன்று ஒரு பயிற்சிக்காக 10 நாட்களில் 100 மணி நேர வாசிப்பை மேற்கொள்ளலாம் என்று தோன்றியது. புத்தகங்களுடன் சொற்களுடன் மேலும் நெருக்கமாக இருக்க ஒரு வாய்ப்பு. அடுத்த பத்து நாட்கள் எங்கும் வெளியூர் செல்லப்போவதில்லை. மாலைத் தென்றல் மகிழச் செய்யும் வசந்த காலம் தேசமெங்கும் தொடங்குகிறது. ஆர்வம் கொண்டு என் இளம் வயதில் புத்தகங்கள் வாசித்த நாட்களே எனது வாழ்வின் வசந்த காலமாக இருந்திருக்கிறது. எண்ணத்தில் இனிமை நிறைந்திருக்குமாயின் எல்லா காலங்களும் வசந்தமே!

Monday 16 March 2020

நவகாளி யாத்திரை

எழுத்தாளர் சாவியின் ‘’நவகாளி யாத்திரை’’ என்ற சிறு நூலை சமீபத்தில் வாசித்தேன். சிறு நூல். மகாத்மா வங்காளத்தில் இந்திய சுதந்திரத்தை ஒட்டி நிகழ்ந்த மத வன்முறைகளை தடுக்கும் பொருட்டு நவகாளி பகுதியில் பாத யாத்திரையாகச் செல்கிறார். அந்த யாத்திரையில் பங்கு பெறும் பொருட்டு சென்னையிலிருந்து சாவி செல்கிறார். சென்னையிலிருந்து கல்கத்தா சென்று அங்கிருந்து மற்றொரு ரயில் வழியே இன்னொரு ஊருக்குச் சென்று கங்கையின் துணை ஆறுகளான இரண்டு பெரும் நதிகளை மோட்டார் படகில் கடந்து ஒரு ஊரையடைந்து அங்கிருந்து இருபது மைல் கால்நடையாக நடந்து மகாத்மா இருக்கும் இடத்தைக் கண்டடைகிறார். சாவி மகாத்மா மீது பெரும் மதிப்பு கொண்டவர். ‘’கல்கி’’ இதழில் பணியாற்றியவர் ஆதலால் கல்கியுடனும் ராஜாஜியுடனும் நெருக்கமான தொடர்பு கொண்டவர். அவருக்கு மகாத்மா என்றுமே வழிகாட்டி. 

நவகாளியில் நடந்த வன்முறைகள் காந்தியை பெரும் சோர்வு கொள்ளச் செய்கின்றன. அவர் ஆழமான மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார். அஹிம்சையும் சத்யாக்கிரகமும் தோல்வியடைந்து விட்டனவா என்ற ஐயம் அவருக்கு உண்டாகிறது. வாழ்நாள் முழுவதும் தான் மேற்கொண்ட ஆன்ம பயிற்சி முழுத் தோல்வியைச் சந்திக்கிறதா என்ற குழப்பம் அவருக்கு உண்டாகிறது. பின்னர் அறிவிக்கிறார்: அஹிம்சையும் சத்யாக்கிரகமும் தோற்காது. எளிய மனிதனாகிய தான் தோல்வி அடையலாம். அவ்வாறாயின் அது தன் ஆத்ம பலத்தின் தோல்வியே தவிர அஹிம்சையின் தோல்வி அல்ல. 

நவகாளி பகுதியில் ஒரு பெரிய குடும்பத்தின் உறுப்பினர்களான ஒன்பது பேர் கொலை செய்யப்படுகின்றனர். அந்த குடும்பத்தில் ஒருவர் கூட எஞ்சவில்லை. அந்த குடும்பத்தினரால் வளர்க்கப்பட்ட நாய் உயிருடனிருக்கிறது. மகாத்மா சில நாட்களுக்குப் பிறகு அந்த ஊருக்கு வருகிறார். அந்த ஊரில் உள்ளவர்கள் முற்றழிக்கப்பட்ட அந்த குடும்பத்தைக் குறித்து மகாத்மாவிடம் கூறுகிறார்கள். அந்த வீட்டுக்கு மகாத்மா செல்கிறார். அப்போது அந்த வீட்டின் நாய் வாலை ஆட்டியவாறு மகாத்மாவைச் சுற்றி வருகிறது. அவரை எங்கோ அழைக்கிறது. அவர் அந்த நாயின் பின்னால் செல்கிறார். ஒன்பது நபர்களின் உடலும் புதைக்கப்பட்டிருக்கும் இடுகாட்டுக்கு மகாத்மாவை அழைத்துச் சென்று காட்டுகிறது. புதைமேட்டில் மோப்பம் பிடித்தவாறு இருக்கிறது. சில நிமிடங்கள் அங்கே இருந்து விட்டு மகாத்மா அங்கிருந்து புறப்படுகிறார். அப்போது மகாத்மாவுடன் அந்த நாயும் உடன் வருகிறது. மைல் கணக்காக  அவருடன் நடக்கிறது. நவகாளி யாத்திரை முழுதுமே உடனிருக்கிறது. சாவி இந்த சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

மகாத்மா அந்த பிராந்தியத்துக்கு முற்றிலும் புதியவர். தனக்கு உணவிட்டவர்களை இழந்த நாயின் துயரம் என்பது மிகக் கொடியது. அந்த துயரத்தை அது ஏன் மகாத்மாவிடம் பகிர்ந்து கொண்டது? தனது எஜமானர்கள் புதைக்கப்பட்ட இடத்துக்கு மகாத்மாவை ஏன் அழைத்துச் சென்றது? மகாத்மாவின் பயணத்தில் உடனிருக்க அது ஏன் முடிவு செய்தது? 

மகாத்மாவுடன் நவகாளி யாத்திரையில் இரண்டு நாட்கள் உடனிருந்த சாவி பதிவு செய்த நேரடி ஆவணமான இந்நூல் மிகவும் முக்கியமானது.

Wednesday 11 March 2020

ஒரு தோழமை

மயிலாடுதுறைக்கு மேற்கே, மேம்பாலத்தின் இறக்கத்தையொட்டி ஒரு சிறு கிராமத்துச் சாலை பிரிந்து செல்கிறது. அதற்கு மறையூர் சாலை என்று பெயர். இருபுறமும் நெல்வயல்கள் பரவிக் கிடக்க சிறு சிறு வளைவுகளுடன் சிறு அரவமென அச்சாலை கிடக்கும். அதில் சற்றே பெரிய களம் ஒன்றையொட்டி ஓர் அரசமரம் உள்ளது. நீர் நிரம்ப பாயும் பாய்ச்சல் கால் ஒன்றின் அருகில் வருடத்தின் பெரும்பாலான நாட்கள் ஈரம் மிகுந்து கிடக்கும் பகுதியில் அம்மரம் நாற்பது வருடங்களாக நின்றிருக்கிறது என்கிறார்கள். 

நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது இம்மரத்தடியைக் கண்டடைந்தேன். எனக்கு மரத்தடிகள் மேல் எப்போதும் ஆர்வம் உண்டு. வட இந்தியாவில் மரத்தடிகளை ஒட்டி கிராமங்களில் எப்போதும் பதினைந்து இருபது பேர் அமர்ந்திருப்பார்கள். அதிகம் பேசிக் கொள்ள மாட்டார்கள். அமைதியாக அமர்ந்திருப்பார்கள். இதனை ராஜஸ்தானில் அதிகம் காணலாம். முறுக்கு மீசை கொண்ட முதியவர்கள். மெல்லிய உடல் கொண்டவர்கள். மதிய நேரத்தில் வந்து அமர்ந்திருப்பார்கள். 

மறையூர் சாலை அரசமரத்தடிக்கு கல்லூரி நாட்களில் அடிக்கடி வருவேன். வார இறுதி நாட்களின் மாலைப் பொழுகளை அம்மரத்தடியில் அமர்ந்திருப்பேன். சென்றதும் என் இரு கைகளாலும் அம்மரத்தைத் தொடுவேன். அதில் செதுக்கி வைத்த இடம் போல ஒரு பரப்பு இருக்கும். அதில் வாகாக அமர்ந்து கொள்வேன். நானும் அந்த விருட்சமும் வேறல்ல என்பது போல மனம் ஒன்றியிருக்கும். 

கோடை காலத்தில் புதுத்துளிர்கள் துளிர்த்திருக்கும் போது ஒவ்வொரு இலையைச் சுற்றிலும் மின்மினிகள் வட்டமிடும். மின்மினிகள் மரத்தை தீபமென ஒளிரச் செய்யும். பல சூரிய அஸ்தமனங்களை அங்கிருந்து கண்டிருக்கிறேன். மனம் நம்பிக்கை கொள்ளும் இளமைப் பருவம் அழகானது. அதன் புனிதமான அறியாமைகளுடன் வாழ்க்கை குறித்து நம்பிக்கை மிகுந்திருக்கும் தளரா ஊக்கம் கொண்ட நாட்கள் அவை. நமது சமூக வாழ்க்கை நம்மை லௌகிகத்தையே வாழ்க்கை என நம்ப வைக்கிறது. லௌகிகம் எல்லைக்குட்பட்டது. 

பலரை அங்கே அழைத்துச் சென்றிருக்கிறேன். நண்பர்களை . உறவினர்களை. பரிச்சயமானவர்களை. அப்போதெல்லாம் வாரம் ஒருநாளாவது கடற்கரைக்குச் செல்வது என்பதும் வாரம் ஒருநாள் இந்த மரத்தடிக்கு வருவதும் என்பதும் தொடர்ந்து நடக்கும். பூம்புகார், கோணயாம்பட்டினம், வாணகிரி, சின்னங்குடி மற்றும் தரங்கம்பாடி என ஏதேனும் கடற்கரைக்குச் சென்று அமர்ந்திருப்பேன். 

மாறா செயலூக்கம் கொண்டிருந்த நாட்கள். வணிகம் சார்ந்த பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டிருந்த நாட்களிலும் கூட இங்கே செல்வதை தொடர்ந்து கொண்டுதான் இருந்தேன். இருப்பினும் வருடக்கணக்காக மேற்கொள்ளும் செயலில் ஏற்படும் தேக்கம் உருவானது. என் வாழ்நாள் முழுதும் நான் நினைவுகூரும் இந்தியப் பயணங்களை மேற்கொண்டேன். புதிய நிலம் புதிய மனிதர்கள் என்பது பேரார்வமாயானது.

இன்று மீண்டும் மறையூர் சாலை அரசமரத்திடம் சென்றேன். நிறைய மாதங்கள் இடைவெளிக்குப் பின்னர் அங்கே செல்கிறேன். அரசமரத்தை என் இரு கைகளாலும் தொட்டேன். ஒரு பிரியமான தோழனுடன் இருப்பதைப் போல மனம் அமைதி கொண்டது. சிவப்பு சூரியன் மெல்ல அடிவானத்தில் இறங்கிக் கொண்டிருந்தான். செக்கச் சிவந்த வானம். வானம் முன் நின்றேன். முயற்சிகள். தடைகள். சொல்லாக்காத துக்கங்கள். உலகையே அணைக்கும் கைகளில் சில கணங்களுக்கு என்னை ஒப்படைத்தேன். நம்பிக்கைகளுடன் திரும்பினேன்.

Tuesday 10 March 2020

சிறுகதை - ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள்

சமீபத்தில் எழுதிய சிறுகதை சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு

ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள்


Sunday 8 March 2020

நீ மௌனம் சூடியது எப்போது?

உனது கண்களை மூடி
நெற்றிப் பொட்டு விண்ணை எண்ண
மண்ணில்
மலரென அமர்ந்து
முடிவிலா ஒற்றைச் சொல் எழும்ப
நீ மௌனம் சூடியது எப்போது?

Monday 2 March 2020

இரு வாரங்கள்

பத்து நாட்களாக உடல்நலத்தில் சிறு குறைவு. இருமல். சற்று சிரமமாக இருந்தது. சிறிது நேரம் தொடர்ச்சியாகப் பேசினால் இருமல் வந்தது. உடல் சோர்வடைந்திருந்தது. சென்னையிலிருந்து ஒரு நண்பர் வந்திருந்தார். நலக்குறைவுடனே அவருடன் சுவாமிமலை, திருவலஞ்சுழி, பழையாறை ஆகிய ஆலயங்களுக்குச் சென்று வந்தேன். வணிகம் தொடர்பாக சில பணிகள். அலைச்சல்.