Monday 29 May 2023

அமைப்பாளரின் இன்றைய தினம் ( நகைச்சுவைக் கட்டுரை)

 வாரத்தின் முதல் வேலை நாளை அமைப்பாளர் முக்கியம் என்று நினைப்பார். அந்த ஒரு நாளில் ஏதேனும் வேலைகளைப் பார்க்க முடிந்தால் அந்த ஒரு வாரம் என்பது சற்று ஆசுவாசமாகச் செல்லும் என்பது அவரது நம்பிக்கை. ஞாயிற்றுக்கிழமை அன்று நிலுவையில் என்னென்ன பணிகள் இருக்கின்றன என்பது அன்று காலை நினைவில் எழுந்து மதியம் மாலை என வியாபித்து இரவு வரை நீடிக்கும். எனவே திங்கட்கிழமையில் அவர் ஏதாவது செய்து விட வேண்டும் என்று நினைப்பார். நேற்று அமைப்பாளர் என்னென்ன பணிகள் நிலுவையில் நிலுவையில் இருக்கின்றன என்று ஒரு காகிதத்தில் பட்டியலிட்டுக் கொண்டார்.

1. அவருடைய வாகனத்தின் முகப்பு விளக்கு அவ்வப்போது ஒளிர்கிறது ; அவ்வப்போது ஒளிராமல் இருக்கிறது. அது சமயத்தில் ஒளிர்வதில்லை என்பது ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு மேல் வாகனத்தை இயக்கும் போது அவருக்கு நினைவுக்கு வரும். அவருக்கு நினைவு வருகிறதோ இல்லையோ உடன் பயணிப்பவர்கள் சற்று பதட்டம் அடைவார்கள். அடுத்த நாள் காலையே சரி செய்ய வேண்டும் என்று நகர்ந்து நகர்ந்து வந்து பல காலைகளைக் கடந்து இன்றைய தினத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார். 

2. அவருடைய வாகனத்தின் ஹாரன் ‘’டிவீட்’ போல சின்னதாக கீச் கீச் என்கிறது. அதையும் சரி செய்ய வேண்டும் என்று எழுதிக் கொண்டார். 

3. தணிக்கையாளர் அலுவலகத்திலிருந்து பத்து நாள் முன்னதாக ஃபோன் செய்து வங்கி கணக்கு ஒரு வருட அறிக்கைகளை அளிக்குமாறு கேட்டிருந்தார்கள். ஃபோன் வந்த அன்றே தனது வங்கி பாஸ்புக்கை எடுத்துப் பார்த்தார். சென்ற ஆண்டு மார்ச் 10ம் தேதிக்குப் பின்னர் எந்த எண்ட்ரியும் இல்லை. வங்கிக்குச் சென்று எண்ட்ரி போட வேண்டும் என நினைத்தார். ஔவை சொன்ன ஒரு கோடிக்குப் பெருமானமான அறிவுரை அவருக்கு நினைவுக்கு வந்தது. அமைதியாக இருந்து விட்டார். 

4. இப்போது தபால் ஆஃபிஸ் கணக்கை அதிகமாக பயன்படுத்துவதால் ஃபோன் வந்த அன்றே தபால் சேமிப்புக் கணக்கின் இந்த ஆண்டுக்கான பக்கங்களை ஸ்கேன் செய்து தனது மின்னஞ்சலில் சேமித்துக் கொண்டார். அமைப்பாளர் ஸ்கேன் செய்ய ஜெராக்ஸ் எடுக்க என அவருக்கு வாடிக்கையான கடை ஒன்று இருக்கிறது. அந்த கடையின் உரிமையாளர் பணியாளர்கள் அனைவரும் அமைப்பாளரின் நண்பர்கள். அதாவது பல்வேறு விதமான மனுக்கள் அவ்வப்போது அனுப்புவதால் அடிக்கடி செல்ல நேர்ந்து பரிச்சயமாகி நட்பாகி விட்டார்கள். அந்த கடையில் அமைப்பாளருக்கு கணிசமான ‘’டிஸ்கவுண்ட்’’ உண்டு. 

5. சென்ற ஆண்டில் அமைப்பாளர் போஸ்டல் பேமெண்ட் பேங்க் என இந்திய அஞ்சல் துறை ஆரம்பித்திருந்த டிஜிட்டல் வங்கியில் ஒரு கணக்கை ஆரம்பித்தார். ஆதார் எண் சொன்னால் போதும் கணக்கு துவங்கி விடலாம் என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட கணக்கு அது. ஆனால் அதனை ‘’ஸ்மார்ட்ஃபோன்’’ மூலம் மட்டுமே இயக்க முடியும். அதற்கும் அமைப்பாளருக்கும் உள்ள தூரம் அனைவரும் அறிந்ததே. நண்பர் ஒருவரின் ஸ்மார்ட்ஃபோன் மூலம் இயக்கிக் கொண்டிருந்தார். பின்னர் அந்த கணக்கில் எந்த அலைபேசி எண் தரப்பட்டதோ அந்த எண் பயன்படும் ஸ்மார்ட்ஃபோனில் மட்டுமே இயக்க முடியும் என விதிமுறையை தபால் துறை மாற்றி விட்டது. மாதாமாதம் அறிக்கை மின்னஞ்சலில் வரும். அதனை பாஸ்வேர்டு கொடுத்து திறக்க வேண்டும். அவ்வாறு இன்று திறந்து கணிணியில் பதிவிறக்கம் செய்தார். பதிவிறக்கம் செய்ததை மீண்டும் திறக்க முயன்ற போது அந்த கோப்பு மீண்டும் ‘’நுழைவு சங்கேதம்’’ கேட்டது. அமைப்பாளர் அதை ஒத்தி வைப்போம் என முடிவு செய்தார்.  

6. காலை 11.30 மணி அளவில் கொடும் வெயில். வங்கிக்கு சென்று எண்ட்ரி போட்டு விட்டு வாடிக்கை கடைக்கு வந்து அந்த பக்கங்களை ஸ்கேன் செய்து தனது மின்னஞ்சலுக்கு அனுப்பச் சொன்னார். 

7. வண்டியை ஒரு இரு சக்கர வாகனப் பட்டறையில் கொண்டு வந்து விட்டார். முகப்பு விளக்கும் ஒலிப்பானும் முக்கியம் மற்ற வேலைகளையும் பார்த்து விடுங்கள் என சொன்னார். அமைப்பாளர் ஒரு ‘’மினிமலிஸ்ட்’’. அவர் வழக்கமாக விடும் பட்டறை உரிமையாளர் அமைப்பாளரினும் ‘’மினிமலிஸ்ட்’’. எனவே புதிதாக ஒரு பட்டறையைத் தெரிவு செய்துள்ளார்.

8. வீட்டில் இருந்த இன்னொரு வாகனத்தை எடுத்துக் கொண்டு பதிவுத்துறை அலுவலகம் சென்றார். அங்கே ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும். நாளை மதியம் வாருங்கள் என்று கூறினர். திரும்பி வந்து விட்டார். 

9. இந்த வேலைகளை முடிக்க மதியம் 2 மணி ஆகி விட்டது. ரியல் எஸ்டேட் தொடர்பாக சிலருடன் பேச வேண்டியிருந்தது. அலைபேசி மூலம் பேசினார். அதில் ஒருவரின் ஃபோன் ‘’சுவிட்ச் ஆஃப்’’ல் இருந்தது. அமைப்பாளர் எவருக்கும் ஃபோன் செய்தால் அவர்கள் ஃபோ சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தால் சலிப்படைவதே இல்லை. அவருடைய ஃபோன் அவ்வப்போது ‘’சுவிட்ச் ஆஃப்’’ ஆவது உண்டு என்பது அதற்கான காரணம். 

10. அமைப்பாளர் கல்லூரியில் படிக்கும் போது வாங்கிய ஹீரோ ஹோண்டா ஒன்று அவரிடம் இப்போதும் இருக்கிறது. அது 2,00,000 கிலோ மீட்டர் ஓடியிருக்கும். பல பல மாதங்களாக அதனை ஓட்டாமல் வைத்திருந்தார். காலை பட்டறைக்குச் சென்ற போது அந்த வண்டி பற்றி சொன்னார். பட்டறை உரிமையாளர் மாலை இரண்டு பேரை அனுப்பி பட்டறைக்குக் கொண்டு வந்து சரி செய்து விடுவதாக சொன்னார். அமைப்பாளர் அவர்களிடம் ‘’அதில் ஹெட்லைட் ரொம்ப டேமேஜ் ஆகி விட்டது. ஹெட்லைட் செட்டை கழட்டிடுங்க. அந்த வண்டியை பகல்ல மட்டும் யூஸ் பண்ணிக்கறன் ‘’ என்றார். 

11. வங்கி பாஸ் புத்தக ஸ்கேன், போஸ்ட் ஆஃபிஸ் கணகின் ஸ்கேன், ஹவுசிங் லோன் ஸ்டேட்மெண்ட் ஸ்கேன் என மூன்றையும் தணிக்கையாளருக்கு மின்னஞ்சலில் அனுப்பி விட்டு போஸ்டல் பேமெண்ட் பேங்க் குறித்தும் அதன் மாதாந்திர அறிக்கைகளை மின்னஞ்சலில் அனுப்ப முடியாமல் இருக்கும் நிலை குறித்தும் தணிக்கையாளருக்கு ஒரு மின்னஞ்சல் கடிதத்தில் சொல்லி விட்டு ஆசுவாசமான போது இன்னும் வாசிப்பு சவாலின் இன்றைய தினத்துக்கான ஒரு மணி நேரம் இன்னும் வாசிக்கப்படவில்லை என்பது அமைப்பாளருக்கு நினைவுக்கு வந்தது. 

12. இன்றைய நாள் முடிய இன்னும் நான்கு மணி நேரம் இருக்கிறது. அதற்குள் வாசித்து விடலாம் என எண்ணிக் கொண்டார். 

Thursday 25 May 2023

எண்ணும் எழுத்தும்

1111 மணி நேர வாசிப்பு சவாலில் ஈடுபடுதலின் தீவிரம் கூடியிருக்கும் ஒரு தருணமாக இத்தருணம் அமைந்திருக்கிறது. தினமும் வாசிப்புக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க முடியுமோ அவ்வளவு நேரம் ஒதுக்குகிறேன். தொழில் சார்ந்த பணிகளும் லௌகிகப் பணிகளும் ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளுக்கும் ஒதுக்க வேண்டிய நேரத்தை ஒதுக்குகிறேன். ஒரு விஷயத்தை புறவயமாக நிர்ணயம் செய்து கொண்டு அதில் ஆர்வத்துடன் ஈடுபடும் போது நமது அகத்துக்குள்ளும் நுண் மாற்றங்கள் ஏற்படுவதை உணர முடிகிறது. நினைவறிந்த நாள் முதல் வாசிப்பில் ஈடுபட்டிருந்தாலும் இந்த வாசிப்பு சவாலின் காலகட்டம் சிறப்பானது ; முக்கியத்துவம் கொண்டது.  

01.01.2023லிருந்து 31.12.2023 வரை 365 நாட்கள் வாசிப்புக்கான காலம். இந்த காலகட்டத்தில் 1111 மணி நேரம் வாசிக்க வேண்டும் என்பது சவால். ஒரு நாளைக்கு சராசரியாக 3 மணி நேரம் வாசித்தால் இந்த இலக்கை எட்டி விடலாம். இந்த இலக்கு எளிய ஒன்றுதான். இருப்பினும் தோற்றமளிக்கும் அளவுக்கு எளிதானதல்ல என்பதை சவாலை தினந்தோறும் சந்திக்கையில் உணர்ந்து கொள்ள முடிந்தது. 

லௌகிகமான ஒரு தளத்தில் நமது வேலை நேரம் என்பது காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை என நிர்ணயமாகியுள்ளது. அலுவலகங்களில் பணி புரிபவர்கள் அந்த நேரத்தில் அங்கே இருந்தாக வேண்டும். அலுவலகங்களில் பணி இருப்பவர்கள் அந்த நேரத்துக்குள் அங்கே சென்று தங்கள் பணிகளை செய்து முடித்துக் கொள்ள வேண்டும். வங்கி, அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், கடைகள் என அனைத்தும் இயங்குவது அந்த நேரத்திலேயே. எனவே அந்த நேரத்தில் வாசிப்பு என்பது சாத்தியமில்லை. ஒரு நாள் பொழுதில் ஆறிலிருந்து எட்டு மணி நேரம் உறக்கத்துக்குச் சென்று விடும். லௌகிக நேரம் என ஏழும் உறக்கம் என எட்டும் என பதினைந்து மணி நேரம் சென்று விடும். வாசிக்க ஒன்பது மணி நேரம் கிடைக்கும். அதில் ஒரு மணி நேரத்தை அவசியமான விஷயங்களுக்கு என ஒதுக்கினால் எட்டு மணி நேரம் வாசிக்கக் கிடைக்கும். 

இந்த எட்டு மணி நேரத்தை உபயோகிக்கத் தக்க நேரமாக மாற்றிக் கொள்ள வேண்டும் எனில் அந்த நேரம் எங்கே இருக்கிறது என்பதை தேடிக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். காலை 4 மணியிலிருந்து 8 மணி வரை. மாலை 7 மணியிலிருந்து 11 மணி வரை என நாம் கண்டடைவோம் என்றால் சிறப்பு. அந்த நேரம் ஒவ்வொரு நாளும் நமக்கென இருக்கும் நேரம். 

என்னுடைய தொழில் சார்ந்த லௌகிகம் சார்ந்த பணிகள் காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை இருக்கும். எல்லா நாளும் இந்த நேரம் முழுமையும் பணி இருக்கும் என்றல்ல. பெரும்பாலான நாட்கள் இருக்கும். அவ்வப்போது ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளும் இருக்கும். 

சவாலின் ஐந்தாவது மாதம் நிறைவு கொள்ளப் போகிறது. முந்நூறு மணி நேரத்துக்குப் பக்கத்தில் வந்து விட்டேன். இன்னும் 7 மாதத்தில் 811 மணி நேரம் வாசிக்க வேண்டும். அவ்வப்போது அடுத்து வரும் நாட்களில் ஒருநாளைக்கு சராசரியாக எவ்வளவு நேரம் வாசிக்க வேண்டும் என்று கணக்கிட்டுப் பார்ப்பேன். இருப்பினும் வழக்கமாக வாசிக்கும் நேரத்தை ஒட்டியே வாசிப்பு நேரம அமையும். இந்த ஐந்து மாதமும் ஒருநாள் தவறாமல் தினமும் ஒரு மணி நேரம் வாசித்திருக்கிறேன். அது ஒரு நல்ல விஷயம். அது நல்லதொரு அடித்தளத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த ஐந்து மாத அனுபவத்தைக் கொண்டு அடுத்த 7 மாதங்களின் வாசிப்பை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என இருக்கிறேன். 

திட்டமிடும் பல விஷயங்கள் தவறிப் போகும் போது வருத்தமாக இருக்கும். எனினும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொள்ள வேண்டும். இந்த வாசிப்பு சவால் மூலம் நான் என்னை - என் மனத்தை - என் செயலாற்றும் திறனை - என்னுடைய தடைகளை - என்னுடைய எல்லைகளை அணுகி அறிகிறேன் என்பது என்னுடைய உணர்வில் இருக்கிறது. வாசிப்பு சவாலின் ஆறாவது மாதம் நிறையும் போது பாதி இலக்கு எட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உள்ளது. காலக்கெடுவின் பாதியும் இலக்கின் பாதியும் நிறைவாகியிருந்தால் அடுத்த ஆறு மாதத்தின் தொடக்கம் இரண்டாம் துவக்க நிலையாக அமையும். அவ்வாறு நிகழ வேண்டுமென்றால் அடுத்த 35 நாளில் 255 நேரம் வாசிக்க வேண்டும். அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 7 மணி நேரம். 

எண்கள் மாயம் மிக்கவை. எண்கள் வசீகரிக்கக் கூடியவை. வசீகரம் மிக்க எண்களை வசப்படுத்துவது என்பது ஒரு கலை ; ஒரு தவம். 

Sunday 21 May 2023

14 மரங்கள் - மாநில தகவல் ஆணையம்

 ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் புராதானமான விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவில் அந்த தெருவில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டு வாசலில் நட்டு வளர்த்து பராமரித்த பத்து ஆண்டுகளுக்கு மேல் அகவை கொண்ட வேம்பு, மலைவேம்பு, புங்கன் மரங்கள் அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவரால் 09.07.2021 அன்று வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவு இல்லாமல் வெட்டப்பட்டன. வெட்டப்பட்ட மரங்களின் பொருள் மதிப்பு மிக அதிகம். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு குற்றம் இழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அந்த கிராமத்தின் பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

வட்டாட்சியர் அலுவலகத்தின் பொது தகவல் அதிகாரியிடம் இந்த சம்பவம் தொடர்பான கோப்பினை முழுமையாக அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரப்பட்டது. பொது தகவல் அதிகாரி எந்த தகவலும் அளிக்கவில்லை. அதனால் வட்டாட்சியர் அலுவலக மேல்முறையீட்டு அலுவலரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் மேல்முறையீட்டுக்கும் பதில் இல்லை என்பதால் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு சில நாட்கள் கழித்து வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அதிகாரி கோப்பின் சில பகுதிகளை மட்டும் அனுப்பியிருந்தார். அவை நாம் கோரிய முழுமையான தகவல்கள் இல்லை. 

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு தபால் அனுப்பியிருந்தது. அதாவது, மாநில தகவல் ஆணையம் வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பி விண்ணப்பதாரர் கோரிய விபரங்களை அளித்து விட்டு விபரம் அளிக்கப்பட்டதை ஆணையத்துக்கு ஒரு மாதக் காலக்கெடுவில் தெரிவிக்குமாறு கோரியிருந்திருக்கிறது. அந்த காலக்கெடுவைத் தெரிவித்து அதற்குள் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து எந்த தபாலும் வரவில்லை என்றாலோ அல்லது முழுமையான விபரங்கள் அளிக்கப்படாமல் இருந்தாலோ மாநில தகவல் ஆணையத்துக்கு விபரம் தெரிவிக்குமாறு அந்த தபாலில் கூறப்பட்டிருந்தது. வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மாநில தகவல் ஆணையத்துக்கு எந்த தபாலும் அனுப்பப்படவில்லை. நமக்கும் எந்த தபாலும் வரவில்லை.  

மாநில தகவல் ஆணையம் என்பது நீதிமன்றத்துக்கு சமானமான அதிகாரம் கொண்ட அமைப்பு. அந்த அமைப்பின் அறிவுறுத்தலின் படி கூட வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் நடக்க மறுக்கிறார்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன என்பதை எவரும் யூகித்து விட முடியும். அந்த கோப்பு முழுமையாக வழங்கப்பட்டால் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளுக்கு அந்த கோப்பின் மூலம் பலவிதமான அசௌகர்யங்கள் ஏற்படும். அந்த விஷயத்தின் உண்மை முழுமையாக வெளிவரும். எனவே அதனை தவிர்க்கப் பார்க்கிறார்கள். 

மாநில தகவல் ஆணையம் தெரிவித்திருந்தவாறு ஒரு கடிதத்தை ஆணையத்துக்கு அனுப்பி விட்டேன். இனி ஆணையம் இதனை விசாரணை செய்யும். அந்த விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

Saturday 20 May 2023

நுழைதல்

 எனது நண்பர் ஒருவர் இலக்கிய வாசகர். இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டு தமிழில் தேர்ந்தெடுத்த படைப்புகளை வாசித்துக் கொண்டிருந்தார். அவருடன் இலக்கியம் குறித்து விரிவாகப் பேச ஒரு தருணம் வாய்த்தது. அப்போது அவர் தனது வாழ்வுக்கு மிகவும் அருகில் இருக்கும் ஒரு சம்பவம் குறித்து என்னிடம் சொன்னார். அதனை துல்லியமாக வர்ணித்தார். அவர் வர்ணித்த விதம் மூலம் அந்த சம்பவம் அவர் மனதில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். அவர் என்னிடம் கூறியதை ஒரு நாவலாக எழுதுமாறு சொன்னேன். அவர் எழுதுகிறேன் என்று சொன்னார். நேற்று ‘’காவிரி போற்றுதும்’’ ஆடிப்பட்டம் , கல்வி ஆகிய பதிவுகளை வாசித்து விட்டு பெரும் மகிழ்ச்சியுடன் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டார். நாவல் எழுதத் தொடங்கி விட்டாரா என்று விசாரித்தேன். எழுதத் தொடங்கி 50 பக்கங்கள் வரை வந்திருக்கிறார். 50 பக்கம் என்பது சிறப்பான நற்துவக்கம் என்பதை நான் அறிவேன். அவரது முயற்சியைப் பாராட்டினேன். தொடர்ந்து எழுதுமாறு கூறினேன். படைப்பூக்கம் கொண்ட ஒருவர் படைப்புச் செயல்பாட்டுக்குள் நுழைதல் என்பது சொல்லரசிக்கு மகிழ்வளிக்கும் செயல். நண்பருக்கு வாழ்த்துக்கள். 

Friday 19 May 2023

கல்வி

 கல்லுதல் என்னும் வினைச்சொல்லிலிருந்து ‘’கல்வி’’ என்னும் பெயர்ச்சொல் உருவானது. கல்லுதல் என்றால் தோண்டுதல் என்று பொருள். நிலத்தைத் தோண்டி அதன் உள்ளிருப்பதை அறிவது போல அகத்தைத் தோண்டி அறிவினை அறிவதே கல்வி எனப்படுகிறது. நிலத்தைத் தோண்டுதல் என்னும் செயல் விவசாயத்துடன் தொடர்புடைய ஒன்றாகவே பொருள்கொள்ளப்படுகிறது. ஒரு மரத்தினை நட மண்ணைத் தோண்டி குழி எடுக்கிறோம். ஒரு செடியினை நடவும் அச்செயல் தேவை. விதையினைத் தூவக் கூட மண்ணை பதப்படுத்த வேண்டியுள்ளது. 

‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் தொடர்பாக நான் சந்திக்கும் நபர்களில் பலரிடம் உரையாடுவதுண்டு. அவர்களிடம் நாம் எவ்விதமான பணிகளை முன்னெடுக்கிறோம் என்பது குறித்து சுருக்கமாகவோ விரிவாகவோ எடுத்துரைப்பேன். எல்லா மனிதர்களும் சமூகத்தின் சிறு சிறு பகுதிகளே. சமூகத்தின் கூட்டு நனவிலியின் ( collective conscious) சிறு துளிகளே தனி மனிதர்களின் அகமும். எனவே சமூக மனநிலையை அறியவும் நான் உரையாடலைப் பயன்படுத்துவேன். 

‘’காவிரி போற்றுதும்’’ பணிகளைத் துவக்கிய போது நான் சில விஷயங்களை அவதானித்தேன். அதாவது நமது சமூகத்தில் எல்லா மனிதர்களுக்குமே ஏதேனும் நற்செயல்கள் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. செய்யும் செயல்கள் அனைத்துமே எண்ணிய வண்ணம் விரும்பிய வண்ணம் நிகழ்ந்து விட வேண்டும் என்றும் விருப்பம் இருக்கிறது. அது இயல்பானது. ஒரு செயல் செய்ய அது முதல் படி. எனினும் அதில் அடுத்தடுத்த சில சில படிநிலைகள் உள்ளன. சிருஷ்டி ஸ்திதி சம்ஸ்காரம் என வகைப்படுத்துகிறது. சிருஷ்டி என்பது துவக்கம். அதன் பின் துவங்கிய ஒன்று நிலைப்பெற வேண்டும். பின்னர் அது தன் இயல்பான அடுத்த வளர்ச்சிக்கு செல்ல வேண்டும். எந்த பொதுப்பணியும் சமூகத்தை நோக்கியே செய்யப்படுகிறது. எனவே அந்த செயலைச் செய்பவர் எவ்விதம் அதில் முதன்மையான ஒரு தரப்போ அதே போல சமூகமும் அந்த செயலில் உள்ள முக்கியமான தரப்பு. சமூகப் பழக்கம், சமூக மனநிலை ஆகியவை பொதுப்பணியில் பெரும் பங்கை வகிக்கும். பொதுப்பணி ஆற்றுபவன் எந்த செயலையும் இந்த அடித்தளத்திலிருந்தே பிரக்ஞைபூர்வமாக எழுப்புவான். 

பலர் சோர்வடையும் இடம் இது. நாம் நல்லெண்ணத்துடன் நற்செயலைத் துவக்கினோமே ஏன் நாம் நினைத்த விதத்தில் அது நடக்கவில்லை என சோர்ந்து விடுவார்கள். பொதுப்பணி ஆற்றுபவர்கள் எப்போதும் எந்நிலையிலும் சோர்வடையவே கூடாது. தங்கள் முயற்சியையும் கைவிடக்கூடாது. சில முயற்சிகள் நாம் எதிர்பார்த்ததை விட நல்ல பலன்களைத் தரும். நமது எதிர்பார்ப்பு சில முயற்சிகளில் ஈடேறாமல் போகும். நாம் அவை அனைத்தையும் கூர்ந்து நோக்கியவாறே இருக்க வேண்டும். 

’’ஆடிப்பட்டம்’’ நிகழ்வுக்கு பலரிடமும் உரையாடினேன். சென்ற ஆண்டு நாட்டு காய்கறி விதைகளை கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களுக்கும் அளித்து மூட்டை மூட்டையாக காய்கறிகள் விளைந்த அனுபவம் நமக்கு இருக்கிறது. அந்த அனுபவத்திலிருந்து இம்முறை காய்கறி நாற்றாக அளிக்க முடிவு செய்தோம். விதையை அளிப்பதில் நமக்கு உள்ள வசதி என்பது நாம் அவற்றை எளிமையாக வழங்கி விடலாம் ஆனால் சில விதைகள் முளைக்காமல் போக வாய்ப்பு உண்டு. நாற்றாக வழங்கும் போது விதை முளைத்து நாற்றாகி நல்ல வளர்ச்சி பெற்று விட்டது என்பதால் முளைக்குமா முளைக்காதா என்ற ஐயம் தேவையில்லை. முளைப்புத்திறன் சிறப்பாக உள்ள விதைகளே நாற்றாக விவசாயியைச் சென்றடையும். இந்த முறையில் நாம் நாற்றங்கால் தயாரிக்க வேண்டும் என்பது நம் முன் உள்ள பெரிய பணி. குழித்தட்டு நல்ல முறை எனினும் அதனினும் எளிய முறை ஏதேனும் இருக்குமா என தேடிக் கொண்டிருந்தேன். 

நர்சரியில் பணி புரியும் எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து எனது செயல்திட்டத்தைக் கூறிக் கொண்டிருந்தேன். அடிக்கடி நர்சரி செல்வதால் அங்கு பணி புரியும் அவர் எனக்கு நண்பரானார். அவர் என்னிடம் சொன்னார் . ‘’சார் ! டீ கடையில் பேப்பர் டீ கப் இருக்கும். நீங்க பாத்திருப்பீங்க. அந்த மாதிரி பேப்பர் கப் வாங்கிக்கங்க. அந்த கப்ல மக்குன சாண எருவை நிரப்புங்க. ஒண்ணு ஒண்ணுலயும் மூணு விதை போடுங்க. லேசா தண்ணி ஸ்பிரே பண்ணுங்க. ஒரு வாரம் பத்து நாள்ல முளைச்சுடும்.’’

’’பூசணி, பீர்க்கன், சுரை, பரங்கின்னு நாலு வகை. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒன்னொன்னுலயும் மூணு நாத்து. அப்ப மொத்தம் 12 நாத்து. ஒரு வீட்டுக்கு 12 பேப்பர் கப். இல்லயா?’’

’’ஏன் சார் 12? நாலு கப் போதும். இது அத்தனையுமே கொடி வகை தான். ஒரு கப்ல மூணு பூசணியை விதையைப் போட்டா மூணுமே கப்ல முளைக்கும். அப்படியே பேப்பர் கப்போட பூமியில புதைச்சுட்டா மூணு பூசணியும் மூணு திசையில பரவும். அதே போலவே பரங்கி, சுரை,  பீர்க்கனும் ஒவ்வொரு டைரக்‌ஷன்ல அதுங்களுக்குள்ள அட்ஜஸ்ட் பண்ணிட்டு பரவிக்கும்.’’

கல்வி என்னும் பெயர்ச்சொல்லை ஏன் கல்லுதல் என்னும் வினைச்சொல்லில் இருந்து உருவாக்கிக் கொண்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். 

Tuesday 16 May 2023

ஆடிப்பட்டம் நோக்கி

 நேற்றும் இன்றும் செயல் புரியும் கிராமத்துக்குச் சென்று மக்கள் நெல்லி மரக்கன்றுகளை நட்டுள்ளார்களா என்பதை விசாரித்து வந்தேன். பலர் மரக்கன்றைத் தோட்டத்தில் நட்டுள்ளனர். சிலர் இன்னும் ஓரிரு நாளில் நடலாம் என எண்ணம் கொண்டுள்ளனர். அவ்வாறு எண்ணம் கொண்டவர்களுக்கு நேரில் சென்று விசாரித்தது உடன் செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். 

பூசணி, சுரை, பீர்க்கன், பரங்கி ஆகிய விதைகளை சென்ற முறை அந்த கிராமத்தில் அளித்தோம். அதற்கு நல்ல பலன் இருந்தது. பொங்கலையொட்டி மூட்டை மூட்டையாக அவை விளைந்தன. மக்கள் நகருக்குக் கொண்டு சென்று விற்பனை செய்தனர். இந்த ஆண்டு விதைகளாக இல்லாமல் மேற்படி விதைகளை முளைக்க வைத்து நாற்றுகளாக அளிக்கலாம் எனத் திட்டம். நாற்றுகளை உற்பத்தி செய்வதற்கான முறைகள் பலவற்றை இன்று பரிசீலித்துக் கொண்டிருந்தேன். உண்மை என்னவென்றால், விவசாயம் தொடர்பான எந்த ஒரு விஷயத்தையும் நான் ஆரம்பநிலையிலிருந்து கற்க வேண்டும் என்ற இடத்தில் இருப்பவனே. I think I can ; I knew I can என ஒரு ரயில் என்ஜின் பாடுவதாக ஒரு கவிதை உண்டு. அவ்விதமே என்னால் இயலும் என எண்ணி என்னால் இயலும் என அறிகிறேன்.

குழித்தட்டு முறையில் பூசணி, சுரை, பீர்க்கன் , பரங்கி ஆகிய விதை நாற்றுக்களை உருவாக்கி மக்களிடம் அளிக்கலாம் என இருக்கிறேன். 

Sunday 14 May 2023

எல்லா வீடுகளிலும் நெல்லி

 இன்று ‘’செயல் புரியும் கிராமத்தில்’’ உள்ள எல்லா வீடுகளுக்கும் நெல்லி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. எனது நண்பரின் நீண்ட நாள் விருப்பம் அது. சரியான பொருத்தமான தருணத்துக்காக காத்திருக்க நேரிட்டது. ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு பாலம் மட்டுமே. நற்செயல்கள் நிகழ வேண்டும் என எண்ணுபவர்களுக்கும் நாட்டின் சாதாரண பிரஜைகளுக்கும் இடையே நாம் ஒரு பாலமாக இருக்கிறோம். அவ்வளவே. சாமானிய மக்கள் இணைக்கப்படும் போது மகத்தான செயல்கள் நிகழ்கின்றன என்பது ‘’காவிரி போற்றுதும்’’ அனுபவத்தில் உணர்ந்த உண்மை. மக்களின் இணைவு எண்ணம் செயல் ஆகிய இரண்டில் எதில் வேண்டுமானாலும் நிகழலாம். மேலான விஷயங்களை நோக்கி மகத்தானவற்றை நோக்கி ஒவ்வொரு மனிதனும் ஒத்திசைந்து செல்லுதல் என்பதே  மானுடம் அடைய வேண்டிய நிலை. 

ஒரு கிராமம் என்பதை நாம் ஓர் அடிப்படை அலகாக எடுத்துக் கொள்கிறோம். ஒரு கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொருளியல் தன்னிறைவு கிடைக்க வேண்டும் என்பதற்கு இப்போதிருக்கும் நிலையிலேயே அவர்கள் என்னென்ன முயற்சி செய்ய முடியுமோ அந்த முயற்சிகளை அவர்களிடம் எடுத்துச் சொல்வதற்கும் அவர்களுக்கு அதற்கு எந்தெந்த விதங்களில் உடனிருக்க முடியுமோ அவ்வாறு உடனிருப்பதற்கும் நாம் முயல்கிறோம். 

ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேக்கு மரக்கன்றுகள் வழங்க வேண்டும் என நாம் நினைப்பது அதற்காகவே. ஒவ்வொரு வீட்டின் குழந்தைகளும் விளையாடுவதற்கு தேவையான விளையாட்டுப் பொருட்களை வழங்க வேண்டும் என எண்ணுவதும் அதற்காகவே. அந்த கிராமத்தின் குழந்தைகளுக்கு ஹிந்தி சொல்லித் தர வகுப்புகள் நடத்த வேண்டும் என்பதும் அதற்காகவே. 

நான் கூறுபவற்றை மக்கள் அனைவரும் முழுமையாகப் புரிந்து கொள்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. அவர்களுக்கு எந்த அளவு புரியுமோ அந்த அளவு புரிந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்குமே என் மீது பிரியம் இருக்கிறது. அன்பு இருக்கிறது. அந்த பிரியமும் அன்பும் என்னை எப்போதும் நெகிழச் செய்கிறது. 

இன்று மரக்கன்றுகள் வழங்கும் போது ஒரு விஷயம் என் மனதில் தோன்றியது. பொதுப்பணியின் போது இவ்வாறான உள்ளுணர்வுகள் தோன்றும். அந்த உள்ளுணர்வுகளை பின் தொடர்ந்து செல்லும் போது என்ன பணி செய்ய வேண்டும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பது மனதுக்குள் வடிவம் பெறும். மனத்தில் வடிவம் பெற்றதையே நான் செயலாக்குவேன். அதாவது , சென்ற ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியை ஒட்டி அந்த கிராமம் முழுவதும் நாட்டுக் காய்கறிகளின் விதைகளை அந்த கிராமத்துக்கு வழங்கியிருந்தேன். ஏழு காய்கறிகளின் விதைகள் அளிக்கப்பட்டது. விதைகளாக அளிக்கப்பட்டது. இம்முறை அந்த காய்கறிகளின் விதைகளை சாண உருண்டைகளில் இட்டு முளைக்க வைத்து கிராம மக்களுக்கு வழங்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. முளைக்காத விதைகள் எவை என்பது சாண உருண்டைகளிலிருந்து எவை மேலெழுகின்றன என்பதில் தெரிந்து விடும். முளைக்கும் விதைகள் அனைத்தும் மக்களிடம் சென்று சேரும் என்பதால் காய்கறி மகசூல் அதிகரிக்கும். 

ஒரு புரிதலுக்காக இந்த விஷயத்தை விளக்குகிறேன். கிராமத்தில் ஆயிரம் வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் 5 முளைத்த பூசணி விதைகள் தரப்படுகின்றன எனக் கொள்வோம். அப்போது 5000 பூசணிச் செடிகள் அங்கே முளைக்கும். ஒவ்வொரு பூசணிச் செடியும் குறைந்தபட்சம் 10 காய் காய்த்தது என்றால் அங்கே 50,000 பூசணிக்காய்கள் உற்பத்தியாகும். 

வழக்கமான நிலை என்றால் 1000 வீடுகளில் அதிகபட்சமாக 100 வீடுகளில் சுயமாக தங்கள் ஆர்வத்தின் காரணமாக விருப்பத்தின் காரணமாக ஆடிப்பட்டத்தில் பூசணி போடுவார்கள். மீதி இருப்பவர்கள் ஆர்வம் இல்லாதவர்கள் விருப்பம் இல்லாதவர்கள் என்று அர்த்தம் அல்ல. அவர்கள் காய்கறி விதைகளை ஆடிப்பட்டத்தில் போட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அது செயலாக மாறுவதில் நடைமுறைப் பிரச்சனைகள் இருக்கும். நாம் அவர்களைத் தேடிச் சென்று வழங்கும் போது அதனை பெரிதாக வரவேற்று பெற்றுக் கொள்கிறார்கள். 

சென்ற முறை ஆடி மாதக் கடைசியில் முடிவெடுத்து நாட்டுக் காய்கறி விதைகளை வழங்கினோம். இம்முறை ஆனி 15 தேதிக்குள் சாண உருண்டைகளில் விதைகளை இட்டு முளைக்க வைத்து ஆடி 1ம் தேதி அன்று மக்களுக்கு வழங்கிட வேண்டும் என முடிவு செய்து கொண்டேன். இன்று ஆயிரம் குடும்பங்களை சந்தித்ததன் விளைவாக உருவான செயல்திட்டம் இது. 

இன்று மக்களைச் சந்தித்த போது மேலும் ஒரு விஷயம் தோன்றியது. அதாவது , ‘’காவிரி போற்றுதும்’’ மக்களிடம் அறிமுகம் என்ற நிலை தாண்டி பரிச்சயம் என்ற நிலையில் உள்ளது. அவ்வாறு எனில் அந்த கிராமத்தில் பத்து பேர் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என எண்ணினேன். மாதம் ஒருநாள் அந்த குழு கூடி ஆலோசித்து செயல்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டேன். 

இன்னொரு விஷய்மும் தோன்றியது. நாம் ஒவ்வொரு முறையும் முழு கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளையும் சந்திக்கிறோம். அல்லது அங்கு அதிகம் பரிச்சயம் உள்ளவர்களை அடிக்கடி சந்திக்கிறோம். ஒரு வாரத்துக்கு ஒரு தெரு என எடுத்துக் கொண்டு ஒவ்வொரு விவசாயியையும் நேரில் சந்தித்து அவரிடம் இருக்கும் விவசாய நிலம் எவ்வளவு வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் நிலம் எவ்வளவு விவசாயத்தில் அவர் எதிர்பார்க்கும் வருமானம் என்ன விவசாயம் சார்ந்த வேறு விஷயங்களில் அவருக்கு ஆர்வமிருக்கிறதா என உரையாடி அவர் நிலத்தை தோட்டத்தை நேரடியாக பார்வையிட்டு அவருக்கு ஆலோசனைகள் வழங்குவது தேவையான ஒன்று என்று தோன்றியது. 

ஒருவர் வீட்டுத் தோட்டத்தில் எதுவும் செய்யாமல் இருக்கிறார் என்றால் அவருக்கு காய்கறி விதைகள் வழங்கலாம். வயலில் 20 தேக்கு மரம் வளர்க்க அவருக்கு ஆர்வம் இருக்கும் என்றால் அதனை அவருக்குக் கொடுக்கலாம். தண்ணீர் பாய்ச்சலுக்கு வழியில்லாமல் இருந்தால் வறட்சியிலும் வளரக்கூடிய பூச்செடிகளைத் தரலாம். தேனீ வளர்ப்பில் ஆர்வம் இருந்தால் அதற்கான உதவிகளைச் செய்யலாம். அந்த சந்திப்பால் இத்தனை வாய்ப்புகள் உருவாகும். முயற்சி செய்து பார்க்க வேண்டும். 

நண்பர் விரும்பிய விதத்தில் ஆயிரம் நெல்லிகள் மக்களைச் சென்றடைந்துள்ள்ன. நண்பருக்கு கிராம மக்கள் சார்பாக எனது நன்றி.  

Saturday 13 May 2023

பணி ஏற்பாடுகள்

 நாளை ‘’செயல் புரியும் கிராமத்தில்’’ ஆயிரம் நெல்லி மரக்கன்றுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை இன்று செய்து கொண்டிருந்தேன். நெல்லி மரத்தின் சிறப்பு குறித்தும் மரக்கன்றுகளை நட வேண்டிய முறை குறித்தும் விளக்கும் ஒரு சிறு பிரசுரம் தயார் செய்து வைத்திருந்தேன். அதனை வீடுகளுக்கு வழங்க பிரதி எடுத்துக் கொண்டேன். பின்னர் அங்கே கிராமத்துக்குச் சென்று சென்ற முறை நந்தியாவட்டை மரக்கன்றுகளை வழங்கும் போது உடனிருந்த டாடா ஏஸ் வாகன ஓட்டுனரைச் சந்தித்து நாளை காலை 8.45க்கு அங்கிருந்து புறப்பட வேண்டும் என்று கூறினேன். அவரை சந்தித்து சில சில வாரங்கள் ஆகிறது. அவர் உடல் மிகவும் மெலிந்திருந்தார். ஏன் திடீரென உடல் மெலிந்தீர்கள் என்று கேட்டேன். சில வாரங்களுக்கு முன்னால் அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இரத்த வெள்ளணுக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கிறது. பப்பாளி இலையினை வென்னீரில் போட்டு சாறு எடுத்து தொடர்ந்து அருந்தியிருக்கிறார். அதன் பின் வெள்ளணுக்கள் எண்ணிக்கை அதிகமாகி அவர் உட்ல்நலம் மீண்டிருக்கிறது. உடல்நலம் பாதிக்கப்பட்ட போது மருத்துவரைப் பார்த்திருக்கிறார். அதன் பின் சென்று ஆலோசித்தீர்களா என்று கேட்டேன். அதன் பின் அவர் செல்லவில்லை. எனக்குத் தெரிந்த மருத்துவரிடம் நான் அழைத்துச் செல்கிறேன். எதனால் வெள்ளணுக்கள் குறைந்தது என்பதற்கான மூலக்காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அதனை சரிசெய்யும் மாத்திரைகளையும் சரிசெய்யும் உணவையும் நீங்கள் அருந்த வேண்டும் என்று சொன்னேன். 

உண்மை என்னவென்றால், அவர் நான் கூறுகிறேன் என்பதற்காகவேனும் மருத்துவர் கூறுவதைப் பின்பற்றுவார். இருப்பினும் இவை அடிப்படையான முக்கியமான விஷயங்கள். உடல்நலம் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பதில் தமிழ்ச் சமூகம் மிகுந்த பின்னடைவுடன் இருக்கிறது. செல்வந்தர்கள் சாமானியர்கள் என்றெல்லாம் இதில் எந்த பேதமும் இல்லை. அனைவருமே ஒரே விதமாகத்தான் இருக்கிறார்கள். 

அலோபதி மருத்துவர்கள் மாத்திரைகளை மட்டுமே நம்புகிறார்கள். அலோபதி மாத்திரைகளை மட்டுமே நம்பும் விதத்தில் சமூகத்தையும் பழக்கி விட்டார்கள். ஒருவர் உடல்நலம் குன்றினால் அவர் உண்ணும் உணவிலும் உண்ணும் விதத்திலும் மாற்றங்களை அலோபதி மருத்துவர்கள் அறிவுறுத்த வேண்டும். அலோபதி மருத்துவர்கள் ஒரே வார்த்தையில் விஷயத்தை முடித்து விடுவார்கள் : ‘’நோயாளிக்கு அது எளிய விஷயமில்லை ; அவர்களால் அதைச் செய்ய முடியாது. ஒருவர் செய்யப்போவதில்லை எனத் தெரிந்த பின் அதனை ஏன் சொல்ல வேண்டும் ?’’ 

நான் பொதுவாக நான் சந்திக்கும் ஒருவர் உடல்நலம் குன்றியிருந்தால் அவரை நானே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வேன். அவருக்கு மருத்துவ ஆலோசனை அளிக்கப்படும் போது உடனிருப்பேன். அவர் மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்கிறாரா என்பதை அவ்வப்போது கேட்டறிவேன். ‘’செயல் புரியும் கிராமத்தில்’’ இது என் பழக்கம். 

நமது சமூகம் மாவுச்சத்து மிகுந்த உணவுக்கு முழுமையாகப் பழகியிருக்கிறது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் கொடும் ‘’தாதுப் பஞ்சத்தால்’’ பாதிக்கப்பட்ட சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்தது என்பதே அதற்குக் காரணம். இன்றும் தமிழ் மக்களின் அகத்தில் அவர்கள் அறியாத விதங்களில் அந்த அச்சம் நீடிக்கிறது. 

சிறு தானிய உணவுகள் மக்களின் அன்றாட பழக்கத்துக்கு வர வேண்டும். அந்த தானியங்களை வாங்கி சிறு அளவிலேனும் இருப்பு வைத்துக் கொள்ள அவற்றில் உணவு தயாரிக்க தமிழ் மக்களுக்கு பயிற்சி அவசியம். மாநிலத்தின் ஆரோக்கியம் மேம்பட இது முக்கியமான தேவை. 

நாளை காலை 8.45க்கு புறப்பட வேண்டும் . நர்சரி திறக்க 9 மணி ஆகும். மரக்கன்றுகளை அங்கிருந்து ஏற்றிக் கொண்டு ஊரில் 10 மணி அளவில் கொடுக்கத் தொடங்கினால் முழுவதும் கொடுத்து முடிக்க மாலை 7 மணி வரை ஆகிவிடும். கணிசமான முறைகள் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் ஒவ்வொரு முறையும் பணி தொடங்கும் போதும் இதுதான் முதல் தடவை என்பது போல ஆர்வமும் பரவசமும் ஏற்படுகிறது.    

Friday 12 May 2023

ஆயிரம் நெல்லி மரங்கள்

எனது நண்பர் ஒருவர் நெடுநாட்களாக ‘’காவிரி போற்றுதும்’’ பணிக்கு தனது நல்லாதரவை அளிக்க விரும்பினார். பல்வேறு விதமான லௌகிகப் பணிகளால் சூழ்ந்திருந்ததால் அதனை தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். இப்போது ஊரில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் நண்பர் விரும்பியவாறு மரக்கன்றுகள் நட இது உகந்த பருவம் என முடிவு செய்தேன்.  

சென்ற ஆண்டு குடியரசு தினத்திற்கு முதல் தினம் ‘’செயல் புரியும் கிராமத்தில்’’ உள்ள எல்லா குடும்பங்களுக்கும் ஆயிரம் நந்தியாவட்டை மரக்கன்றுகளை ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக அளித்தோம். குடியரசு தினத்தன்று காலை 7 மணிக்கு எல்லா வீடுகளுக்கும் முன்னால் அந்த நந்தியாவட்டை மரக்கன்றுகளை நடுமாறும் மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 7 தீபங்களை ஏற்றுமாறும் கேட்டுக் கொண்டோம். குடியரசு தினத்தைக் கொண்டாடும் விதத்தில் இந்த இரு நற்செயல்களையும் செய்யுமாறு கேட்டுக் கொண்டோம். கிராமத்தில் உள்ள எல்லா குடும்பத்தினரும் நாம் கேட்டுக் கொண்டவாறு செய்தார்கள். பெருநிலக் கிழார்கள், சிறு விவசாயிகள், குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என அனைவரும் தங்கள் வீடுகளில் நாம் கேட்டுக் கொண்டவாறு செய்தார்கள். இப்போது அந்த நந்தியாவட்டை கன்றுகள் பூத்துக் குலுங்குகின்றன. அதனைக் காண்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. 

ஒரே நேரத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் ஆயிரம் குடும்பத்தினரால் நடப்படுவது என்பது ஐயமின்றி ஓர் பெருஞ்செயலே. ஒரு சிறு தீபம் பெரும் இருளை நீக்குவதற்கு ஒப்பானதாகும் அச்செயல்பாடு. இச்செயல் சாத்தியமானதற்கு முழுக்க முழுக்க காரணம் அக்கிராம மக்களே. பல்வேறு சூழ்நிலைகளில் நான் அவர்களைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறேன் என்பதன் அடிப்படையில் நித்தம் அவர்கள் என் மீது காட்டும் பிரியத்தையும் அன்பையும் உணர்ந்தவாறே இருக்கிறேன். நாம் தொடர்ந்து செயல்பட அந்த பிரியத்திலிருந்தும் அன்பிலிருந்துமே ஊக்கம் கொள்கிறேன்.  

இந்த முறை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நெல்லி மரக்கன்றை வழங்கலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லி மரத்தில் திருமகள் வாசம் செய்வதாக இந்தியர்களின் நம்பிக்கை. உடல் நலத்துக்கு உகந்த நெல்லியை மக்கள் விரும்பி வளர்க்கக் கூடும். நெல்லி மரம் தானிருக்கும் இடத்தைச் சுற்றி நிலத்தடி நீரை சுவை மிக்கதாக மாற்றும் இயல்பு கொண்டது. 

இம்முறை நெல்லி மரக்கன்றுடன் மரம் நடும் முறை குறித்தும் மரக்கன்றுகளை பராமரிக்கும் முறை குறித்தும் ஒரு சிறு பிரசுரத்தையும் இணைத்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமமே எனினும் மரம் நடுதல், எரு, சூரிய ஒளியின் அவசியம், நீர் வார்த்தலின் அவசியம் ஆகியவற்றை திரும்பத் திரும்ப கூற வேண்டியிருக்கிறது. அந்த விழிப்புணர்வை உருவாக்குவதையே தமது பணியாக ‘’காவிரி போற்றுதும்’’ எண்ணுகிறது. 

ஆயிரம் மரக்கன்றுகளை கிராம மக்களுக்கு அளிக்கும் நண்பருக்கு ‘’காவிரி போற்றுதும்’’ தனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. ஆயிரம் குடும்பங்கள் இணைந்து ஓர் நற்செயல் மேற்கொள்ள நண்பரால் ஒரு வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதனை உருவாக்கிக் கொடுத்த நண்பருக்கு மீண்டும் நன்றி. 

ஞாயிற்றுக்கிழமை அன்று ஆயிரம் நெல்லி மரக்கன்றுகளை வழங்கலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சந்தித்து வழங்க வேண்டும் என்பதால் காலை 6 மணிக்குத் துவங்கினால் மாலை 4 மணி வரை பணி இருக்கும். பின்னர் அடுத்த 15 நாட்கள் ஒரு நாளைக்கு 50 வீடுகள் என மரக்கன்றுகளை எப்படி நட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்வையிட வேண்டும். ‘’காவிரி போற்றுதும்’’ தனது செயல்களில் துல்லியத்தை எதிர்பார்ப்பதால் மெல்ல நிதானமாகவே முன்னேறிச் செல்கிறோம்.  

நண்பருக்கு ஆலோசனை

அமெரிக்காவில் வசிக்கும் நண்பருக்கு ஒரு ஆலோசனையை அளித்துள்ளேன். அதாவது, அங்கே உள்ள அவர்கள் பள்ளியின் குழந்தைகளுக்கு கம்ப ராமாயணத்தின் நூறு பாடல்களை ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தம் இசைக்கப்படும் முறையில் பாட பயிற்சி அளிக்குமாறு கூறியுள்ளேன். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அவர்களுடைய ஆண்டு விழாவில் 12 குழந்தைகள் சேர்ந்து 100 கம்பன் பாடல்களை மேடையில் இசைத்தால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறேன். நண்பர் அந்த யோசனையை உள்வாங்கிக் கொண்டார். செயலாக்கத்துக்கான ஆயத்தங்களைத் துவங்கியுள்ளார். 

Wednesday 10 May 2023

மூன்று தினங்கள்

 இன்றும் நேற்றும் நேற்றைய முந்தைய தினமுமான மூன்று நாட்களும் மிகவும் முக்கியமான மூன்று நாட்களாக அமைந்திருந்தன. தமிழ் மரபில் ஆலயங்கள் வகித்த சமூக இடம் என்பது மிகவும் பெரியது. ஆலயங்கள் புரிந்த சமூகப் பணி என்பதும் மிகப் பெரியது. சிலப்பதிகாரம் வெவ்வேறு தெய்வங்களின் கோட்டங்கள் பூம்புகார் நகரெங்கும் அமைந்திருந்ததன் சித்திரத்தை அளிக்கிறது. 

இந்தியாவில் மக்கள் கடவுளை தங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற உணர்வுடன் அணுகி வழிபடும் எத்தனையோ ஆலயங்களைக் கண்டிருக்கிறேன். இந்த நாட்டின் பெண்கள் தங்கள் குடும்பத்தின் பிதாமகராக தெய்வத்தை எண்ணி அவரிடம் தங்கள் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நலத்தின் ஆசிகளை அளிக்கக் கோரி உணர்வுருகி வேண்டிக் கொள்வதை பல மாநிலங்களில் பல ஆலயங்களில் நேரில் பார்த்திருக்கிறேன். 

திருவாசகத்தில் ஒரு இடம் வருகிறது. ‘’யாத்திரைப் பத்து’’. ஜீவன்கள் தங்கள் தலைவனான பரமாத்வைக் காண செல்வோம் என புறப்பட முயல்கின்றன. பெருந்திரளான ஜீவன்களில் சில ஜீவன்கள் நாம் எல்லைக்குட்பட்டவர்கள் ; முழுமை நிலைக்கு மிக மிகத் தொலைவில் இருப்பவர்கள் ; பந்த பாசங்களில் உழல்பவர்கள். அவ்வாறிருக்க பரமாத்வைக் காண செல்ல வேண்டிய அத்தனை தூரத்தையும் கடப்பதற்கான உடல் பலமோ மனோ பலமோ ஆத்ம பலமோ இல்லாதவர்கள் நாம் . நாம் எவ்வாறு பரமாத்வை நோக்கி செல்ல முடியும் எனக் கேட்கின்றனர். உண்மையில் இந்த கேள்வி புறப்பட்ட எல்லா ஜீவன்களுக்கும் இருக்கிறது. சிலர் கேட்டு விட்டனர். அவ்வளவே. அப்போது சில ஜீவன்கள் கூறுகின்றன. ‘’நாம் குறையுடைய்வர்கள்தான் எனினும் நமது தலைவன் கருணையின் பெருங்கடல். நாம் அவனை நோக்கி சில அடிகள் எடுத்து வைக்கிறோம் என அறிந்தாலே பல அடிகள் அவன் ஓடோடி வருவான். நாம் நமது பலத்தை வலிமையை எண்ணி பயணிக்க வேண்டியதில்லை. இறைவனின் கருணையை எண்ணி பயணிக்கலாம் . நம் பயணம் இலக்கை அடையும் என்று கூறுகின்றன. 

ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் மூன்று நாட்களும் கம்பன் பாடல்களை ஆலயத்தில் பாடியது மனதை இளகச் செய்தது. உணர்வை மிகவும் நெகிழச் செய்தது. 

Tuesday 9 May 2023

5ஜி தொழில்நுட்பமும் அமைப்பாளரும் (நகைச்சுவைக் கட்டுரை)

இந்த கட்டுரைக்குள் செல்லும் முன் நாம் சில யதார்த்தங்களை உள்வாங்கிக் கொள்வது நலம் என கட்டுரையாளர் நினைக்கிறார். அமைப்பாளரின் எண்ணமும் அதுவே. 

யதார்த்தம் 1 : அமைப்பாளரிடம் ஒரு ஜி.எஸ்.எம் அலைபேசி மட்டுமே உள்ளது. அலைபேசிகள் இந்தியச் சந்தைக்கு வந்த புதிதில் அறிமுகமான தொழில்நுட்பம் இந்த ஜி.எஸ்.எம். 

யதார்த்தம் 2 : அவரிடம் இருக்கும் அலைபேசி ஜி.எஸ்.எம் தொழில்நுட்பம் சார்ந்தது என்பதால் அவருடையது சாதாரண வகை. ‘’ஸ்மார்ட்ஃபோன்’’ வகை இல்லை. அதாவது அமைப்பாளரிடம் ‘’ஸ்மார்ட்ஃபோன்’’ இல்லை.  

யதார்த்தம் 3 : அமைப்பாளர் ஆரம்பப் பள்ளி மாணவராயிருந்த போதே அவர் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு வைத்திருந்தார். அதில் பத்து ரூபாய் பணம் போடுவது அடுத்த நாள் ஐந்து ரூபாய் எடுப்பது மறுநாளே மேலும் ஐந்து ரூபாய் சேர்த்து பத்து ரூபாய் போடுவது என ஆர்வமாக செயல்பட்டுக் கொண்டிருப்பார். 

அமைப்பாளர் கட்டுமானத் தொழிலுக்கு வந்த போது அவர் இரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தார். அதில் ஒரு வங்கியில் நடப்புக் கணக்கும் இருந்தது. அவற்றில் அளவான தொகையை டெபாசிட் செய்து வைத்திருந்தார். தனது ஊருக்குப் பக்கத்து ஊர்க்காரரான கணக்குத் தணிக்கையாளரை அமைப்பாளர் முதல் முறையாக சந்தித்த போது தணிக்கையாளருக்கும் அமைப்பாளருக்கும் நல்ல நட்பு உருவாகி விட்டது. தணிக்கையாளர் அமைப்பாளரிடம் ‘’பிரபு ! நீங்க முதல் வேலையா என்ன செய்யறீங்க. உங்களுக்கு இப்ப ரெண்டு பேங்க்ல அக்கவுண்ட் இருக்குல்ல. அதுல ஒன்னை மட்டும் மெயிண்டன் பண்ணுங்க. இன்னொரு பேங்க் அக்கவுண்ட்ட குளோஸ் பண்ணிடுங்க’’ என்றார். 

அமைப்பாளர் தன்னிடம் யாராவது தனிப்பட்ட அறிவுரை ஒன்றைச் சொன்னால் அதை உடனே நிறைவேற்றி விடுவார். இந்த புடவியின் 700 கோடி மனிதர்களில் இந்த ஒரு மனிதர் மட்டும் தன்னிடம் அறிவுரை கூறுகிறார் என்றால் அது எத்தனை அரிய ஒரு நிகழ்வு என வியந்து உடனே நிறைவேற்றுவார். 

சில நாட்களில் தணிக்கையாளரைச் சந்தித்த அமைப்பாளர் அவரிடம் கூறினார் : ‘’ சார் ! நீங்க சொன்ன மாதிரியே செஞ்சுட்டன். இன்னொரு விஷயம் சேத்தும் செஞ்சுட்டன். அதாவது ரெண்டு பேங்க் அக்கவுண்ட்ல ஒரு பேங்க் அக்கவுண்ட் குளோஸ் பண்ணச் சொன்னீங்கள்ல நான் ரெண்டு பேங்க் அக்கவுண்ட்டையும் குளோஸ் பண்ணிட்டன். இனிமே தான் புதுசா ஒரு அக்கவுண்ட் வேற பேங்க்ல ஆரம்பிக்கணும்’’

ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ( அதாவது அமைப்பாளர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைத் தான் ஆதரிக்க வேண்டும் என்று நினைப்பார். ) ஒரு கணக்கைத் துவங்கினார். அந்த ஒரு கணக்கை மட்டும் வைத்துக் கொண்டு ஏழிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. 

அமைப்பாளர் வசிக்கும் தெருவில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் ஒருவர் வசித்து வந்தார். அவர் அமைப்பாளர் சிறுவனாக இருந்த போது ஒரு விஷயத்தைச் சொன்னார். ‘’பிரபு ! பேங்க்-ல பெபாசிட் செய்யறதை விட போஸ்ட் ஆஃபிஸ்ல டெபாசிட் செய்யறது தான் நல்லது. போஸ்ட் ஆஃபிஸ் தன்னோட வாடிக்கையாளர்கள் கொடுக்கற பணத்தை சென்ட்ரல் கவர்மெண்ட் பிராஜெக்ட்டுக்கு மட்டும் தான் கடனாக் கொடுக்குது. அதனால பணம் டெபாசிட் பண்ணா போஸ்ட் ஆஃபிஸ்ல தான் பண்ணனும்’’. இந்த விஷயம் அமைப்பாளர் மனத்தில் பதிந்ததால் ஒரு போஸ்ட் ஆஃபிஸ் சேமிப்புக் கணக்கை பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் துவக்கினார். 

பெரும்பாலான இந்தியர்களைப் போலவே தனது செல்வத்தை அமைப்பாளர் நிலமாகவும் மனைகளாகவும் மாற்றி வைத்துள்ளார். தன் கையில் கொஞ்சம் பணம் இருந்தாலும் அதில் ஒரு மனையை வாங்கி விடுவார். பின்னர் அதனை வீடாக அல்லது வீடுகளாக கட்டி விற்பனை செய்வார். எனவே சேமிப்புக் கணக்குகளில் பெரிய அளவில் பணம் வைத்திருக்க மாட்டார். 

போஸ்ட் ஆஃபிஸுக்கு செல்லும் போது அங்கே இந்தியா போஸ்ட் பெமெண்ட் வங்கி என அஞ்சல் துறை ஆரம்பித்திருக்கும் வங்கி குறித்து சொன்னார்கள். ஒரு ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் ஆதார் அட்டையைக் காண்பித்து ஒரு சேமிப்புக் கணக்கு துவங்கி விடலாம் என்று சொன்னார்கள். அவர்களிடம் அமைப்பாளர் தன்னால் இந்த கணக்கைத் துவங்க இயலாது ஏனெனில் தன்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை என்றார். உங்கள் நண்பர்களிடம் ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் கூட இதனைப் பயன்படுத்தலாம் என்றனர். அமைப்பாளர் ஒத்துக் கொண்டார். அமைப்பாளர் நண்பர் ஒருவரின் ஸ்மார்ட்ஃபோனில் மேற்படி பேமெண்ட் வங்கியின் சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டார். அமைப்பாளருக்கு சொந்தமாக ஒரு பெரிய ஃபிளாட் இருக்கிறது. அதன் வாடகையை போஸ்டல் பேமெண்ட் வங்கி கணக்கில் வரவு வைக்குமாறு வாடகைதாரரிடம் கூறியிருக்கிறார். அவர் வாடகையை வரவு வைத்த மறு வினாடி அமைப்பாளரின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்து விடும். 

ஒருநாள் நண்பரின் ஸ்மார்ட்ஃபோனை இயக்கிய போது பேமெண்ட் பேங்க் செயலி இயங்க மறுத்தது. எந்த எண்ணை கணக்கின் விபரங்களில் வாடிக்கையாளர் அளித்தாரோ அந்த எண் கொண்ட ஸ்மார்ட்ஃபோனில் மட்டுமே செயலி இயங்கும் என்ற அறிவிப்பு வந்தது. அமைப்பாளர் போஸ்டல் பேமெண்ட் வங்கிக்கு சென்று தான் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்த வாய்ப்பில்லை எனவே கணக்கை க்ளோஸ் செய்யுங்கள் என்றார். பேமெண்ட் வங்கி சாளரத்தில் இருந்த பெண்மணி அதற்கான அவசியம் இல்லை சார் நீங்கள் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் உள்ள மெஷினில் உங்கள் கணக்கை ஆப்பரேட் செய்யலாம். இந்த கணக்கு ஆதார் அடிப்படையிலானது என்பதால் உங்கள் கைரேகையைக் கொண்டே உங்கள் கணக்குக்குள் சென்று விடலாம் என்று சொன்னார். 

மேலும் அஞ்சலக சேமிப்புக் கணக்குக்கும் IFSC CODE  கொடுத்து விட்டார்கள். எனவே அஞ்சலக சேமிப்புக் கணக்கை ஒரு வங்கிக் கணக்கு போல அமைப்பாளர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒரு போஸ்ட் ஆஃபிஸில் அமைப்பாளர் இரண்டு மூன்று நெஃப்ட் இரண்டு மூன்று ஆர்.டி.ஜி.எஸ் ஆகியவை செய்து முடித்து வெளியேறிய போது அந்த கிளை அலுவலகத்தின் போஸ்ட் மாஸ்டர் அவர் உதவியாளரிடம் சொன்னது அமைப்பாளர் காதில் விழுந்தது. ‘’இனிமே பேங்க் கஸ்டமர் எல்லாம் போஸ்ட் ஆஃபிஸுக்கு வந்துடுவாங்க போல இருக்கு.’’

அமைப்பாளருக்கு இப்போது பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடமிருந்து குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது உங்கள் சிம் கார்டை பி.எஸ்.என்.எல் லில் கொடுத்து 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்துக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ளுங்கள் என. 

அமைப்பாளர் இப்போது யோசிப்பது இந்த அலைபேசியையும் பயன்படுத்தாமல் 1990களைப் போல லேண்ட்லைன் ஃபோன் மட்டும் போதும் என இருந்து விட்டால் என்ன என்று யோசிக்கிறார். மேலும் இப்போது உள்ள ஒரே வங்கிக் கணக்கு மட்டும் போஸ்ட் ஆஃபிஸ் கணக்கை குளோஸ் செய்து விட்டு புதிதாக ஒரே ஒரு போஸ்ட் ஆஃபிஸ் கணக்கு மட்டும் வைத்துக் கொண்டால் என்ன என்றும் யோசிக்கிறார். 

கம்பன் கவி

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். பன்மொழிப்புலமை மிக்கவர். நுண்மாண் நுழைபுலம் உடையவர். நல்லறிஞர். அவருக்கு கம்பராமாயணம் மீது சமீபத்தில் பேரார்வம் ஏற்பட்டிருக்கிறது. முழுக் கம்பராமாயணத்தையும் முற்றோதல் செய்ய வேண்டும் என்ற வேட்கை அவருள் உருவாகி விட்டது. கம்பன் பாடல்கள் பத்தாயிரத்துக்கும் மேல். ஒரு நாளைக்கு 50 பாடல்கள் என பாடினால் ஓராண்டுக்குள் முழுக் காப்பியத்தையும் நிறைவு செய்ய முடியும். பெரும்பணி எனினும் எண்ணித் துணிகிறார் நண்பர்.  

ஊருக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருக்கும் விஷ்ணு ஆலயம் ஒன்றனுக்கு நேற்று சென்றிருந்தேன். அங்கிருந்த அர்ச்சகரிடம் நண்பரின் முயற்சி குறித்து சொன்னேன். அர்ச்சகர் மிகவும் மகிழ்ந்தார். தங்கள் ஆலயத்தில் தினமும் ஆலய பக்தர்கள் சிலர் வால்மீகி ராமாயணமும் கம்ப ராமாயணமும் பாராயணம் செய்வதாகக் கூறினார். பல வருடங்களாக இந்த கிராமத்தில் இது நிகழ்கிறது என்றும் கூறினார். ஆலயத்தின் இறைவன் செவிகளில் தினமும் இராமாயணம் ஒலிக்கிறது என்றார். 

ஒரு நாளேனும் அதில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டானது. நேற்றைய வாசிப்பு எத்தனை மணிக்கு நிகழும் என்று கேட்டேன். மாலை 6 மணிக்கு வருமாறு கூறினார். மீண்டும் மாலை சென்றிருந்தேன். யுத்த காண்டத்தில் கும்பகர்ணன் வதை முடிந்து இந்திரஜித் களம் காணும் படலம் நடந்து கொண்டிருந்தது. இலக்குவன் இராமனிடம் சூள் உரைத்து இந்திரஜித்தை எதிர்க்கச் செல்ல இருந்த தருணம். ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தம் இசைக்கப்படும் விதத்தில் கம்பராமாயணத்தை பாடிக் கொண்டிருந்தார்கள். கம்பன் பிரதியுடன் எனக்கு பழக்கம் உண்டு என்பதால் அவர்கள் பாடியதை மனத்தால் தொடர்ந்து கொண்டிருந்தேன். முப்பது பாடல்கள் பாடிய பின் என்னை அதே விதத்தில் பாடுமாறு கேட்டுக் கொண்டார்கள். ஒரு உணர்வெழுச்சியில் அவர்கள் இசைத்த விதத்திலேயே நானும் தொடர்ந்தேன். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதங்களில் திருப்பாவையும் பிரபந்தமும் பாடப் படுவதை கேட்ட அகம் அதனை உள்வாங்கி உயிர்ப்புடன் பதிவு செய்திருக்கிறது என்பதை நான் பாடிய போது உணர்ந்தேன். இருபது பாடல்கள் நான் பாடினேன். பின்னர் அர்ச்சகர் பாடினார். நேற்று 100 பாடல்கள் வரை பாடினோம். 

பாடல்கள் நிறைவு பெற்றதும் அர்ச்சகர் என்னைப் பாராட்டினார். நான் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தேன் அப்போது. 

அவர் கையில் வைத்திருந்த புத்தகம் கம்ப இராமாயணம் மர்ரே & ராஜம் பதிப்பு. இந்த நூல் குறித்து பலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். 1950களில் வெளிவந்த நூல். கம்பனின் ஒவ்வொரு செய்யுளையும் பதம் பிரித்து எளிய விதத்தில் அனைவரும் வாசிக்கும் முறையில் அமைந்த புத்தகம். கம்பன் செய்யுள்கள் பதம் பிரித்து வாசிக்கப்படுமாயின் தமிழ் அறிந்த எவரும் கம்பனை வாசிக்கலாம். அவரிடம் பி.ஜி. கருத்திருமனின் ‘’கம்பர் - கவியும் கருத்தும்’’ நூல் குறித்து சொன்னேன். அவர் அந்த நூலை வாசித்திருந்தார். அந்நூலின் முக்கியத்துவம் குறித்து மிகவும் பாராட்டி சொன்னார். 

கம்ப ராமாயணத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயரையும் அகர வரிசையில் எழுதி அவர்கள் குறித்த குறிப்புகளை சிறு சிறு வாக்கியங்களாக ஒரு நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்தார். அதனை நிறைவு செய்ததும் சிறு நூலாக ஆக்கலாம் என்று சொன்னேன். அந்த பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வதாகவும் சொன்னேன். தன்னால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி , ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை வாசிக்க முடியும் என்று அவர் சொன்னார். இந்த நாட்டில் ஆச்சர்யங்களுக்குக் குறைவேயில்லை ; ஒவ்வொரு நாளும். 

Monday 8 May 2023

துளி நெருப்பு

எப்போதுமே ஒரு துளி நெருப்புதான் பெரும் காட்டை எரிக்கிறது. தீவிரமான அடர்த்தி மிக்க சிலரின் தன்னம்பிக்கைதான் மாபெரும் சமூக மாறுதல்களுக்குக் காரணமாக இருந்திருக்கின்றது.

அறிவுச் செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பவனாக நான் எப்போதுமே மனிதர்களைச் சந்திப்பதிலும் மனிதர்களுடன் உரையாடுவதிலும் ஆர்வம் மிக்கவன். மேலும் பொதுப்பணி சார்ந்து எப்போதும் மக்கள் திரளுடன் இணைந்திருக்கிறேன். பொதுப்பணிகளில் நான் கவனித்த விஷயம் ஒன்று உண்டு. முன்னேற்றம் என்பதை பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள். முயற்சி செய்தல் என்பதை வாழ்வின் அடிப்படையான இயல்பாக பெண்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். சமூக மாற்றம் முன்னேற்றம் குறித்த சொற்கள் அவர்கள் முகங்களுக்கு ஒளி தருவதை நான் எப்போதும் காண்கிறேன். எத்தனை தடைகள் இருந்தாலும் எத்தனை சிக்கல்கள் இருந்தாலும் இமைப்பொழுதும் ஓயாமல் அவர்கள் முயல்கிறார்கள். உண்மையில் அவர்கள் பண்பாடு அவர்களுக்கு அளித்திருக்கும் கொடை அது ; ஆசி அது.  இந்த மண்ணில் பெண் தெய்வங்களே பேராற்றல் மிக்கவை. மாரியம்மனையையும் துர்க்கையையும் காளியையும் எப்போதும் உபாசிப்பவர்கள் என்பதால் முழுமை நோக்கிய வளர்ச்சி மீதான விருப்பம் என்பது அவர்களிடம் எப்போதும் இருக்கிறது. 

நேற்றும் இன்றும் நண்பர் ஒருவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. நம்பிக்கையும் உற்சாகமுமே அவரது இயல்புகள். நம்பிக்கையும் உற்சாகமும் நிறைந்த ஒருவர் தனது சூழல் முழுவதையும் நம்பிக்கையாலும் உற்சாகத்தாலும் நிறைக்கிறார். தனது நுண்ணிய அறிவுத் திறனாலும் தீரா உழைப்பாலும் தனது துறையில் தனி இடம் பெற்றிருப்பவர் அவர். பொதுப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது அவரது பெரும் விருப்பம். அதற்கான செயல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தனது செயல்திட்டங்களை அவர் சொல்லி கேட்ட போது என்றாவது ஒருநாள் ஒட்டுமொத்த மானுடமும் மகிழ்ச்சி அடையும் சூழல் உருவாகும் என்ற நம்பிக்கை என் மனதில் எழுந்தது. 

அவர் காட்டை வெந்து தணிக்கும் துளி நெருப்பு.

Sunday 7 May 2023

கம்பன் சொல்

இந்த கதையை நாம் அனைவரும் கேட்டிருப்போம். 


யுத்த காண்டத்தில் கம்பன் ஒரு பாடலில் துமி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறான். வானர சேனை கடலில் பாலம் அமைக்க பாறைகளைத் தூக்கிப் போட்ட போது கடல் துளிகள் வானுலை அடைந்தன. மீண்டும் அமுதம் கடைகிறார்களோ என்ற ஆர்வத்துடன் தேவர்கள் பூமியைப் பார்ப்பதாக செய்யுள். சோழ மன்னன் இந்த பாடலை இயற்றிய கம்பனைப் பாராட்டுகிறார். மற்ற புலவர்களும் பாராட்டுகின்றனர். ஒட்டக்கூத்தர் ஒரு வினா எழுப்புகிறார். இந்த துமி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்கிறார். கம்பர் சாமானிய மக்கள் துளி என்ற வார்த்தைக்கு துமி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் என்று கூற தான் கேள்விப்பட்டதில்லை என்கிறார் ஒட்டக்கூத்தர். அவர்கள் விவாதம் முடிவு ஏதும் எடுக்கப்படாமல் நிறைவடைகிறது. ஓரிரு நாளில் மன்னரும் கூத்தரும் கம்பரும் மாறுவேடத்தில் நகருலா செல்கிறார்கள். அப்போது ஓர் மூதாட்டி மோர் விற்றுக் கொண்டு வருகிறார்கள். அப்போது மூவரும் அவளை நிறுத்தி மோர் வாங்குகிறார்கள். தனது மண்பானையில் இருந்த மோரை மரக்கரண்டி கொண்டு கலக்குகிறாள் அந்த மூதாட்டி. அப்போது மூவரிடமும் சற்று தள்ளி நில்லுங்கள் ; துமி தெரிக்கும் என்கிறாள். கூத்தர் துமியா என்கிறார். ஆம் துமி மோர்த்துமி என்கிறாள் மூதாட்டி. சாமானிய மக்கள் துளி என்கிற வார்த்தையை துமி என்று கூறுவார்கள் என்று கம்பன் சொன்னது உண்மையே என கூத்தரும் அரசரும் உணருகிறார்கள். கம்பர் தனக்காக சொல்லரசியே மோர்க்கார மூதாட்டியாக வந்ததாக எண்ணுகிறார் என்று அந்த கதை செல்கிறது.  

எனது நண்பர் ஒருவரின் மகன் பெயர் தவன். தவன் என்கிற பெயர் எனக்கு புதிதாக இருந்தது. இந்த பெயரை எதனால் இட்டீர்கள் என்று கேட்டேன். தவம் செய்யக்கூடியவன் தவன் என்ற அர்த்தத்தில் இந்த பெயர் இட்டேன் என்றார். எனக்கு அது நூதனமாக இருந்தது. இதற்கு முன் இவ்வாறு ஒரு பெயரை நான் கேட்டதில்லை. பின்னர் பல மாதங்களுக்குப் பிறகு கம்பராமாயணம் வாசித்த போது கம்பர் அகத்தியரை ‘’அரும் தவன்’’ என்ற அடைமொழியுடன் அழைத்திருப்பதைக் கண்டேன். எனக்கு ஒரே ஆச்சர்யம். தவன் என்ற பதம் கம்பன் கையாண்டது என்பதை அறிந்ததால். மறுநாள் நண்பரைச் சந்தித்த போது ‘’தவன்’’ என்ற பெயர் குறித்து யாரும் கேட்டால் அது கம்பன் பதம் என்று சொல்லுங்கள் என்று கூறினேன். 

கம்பனில் நுழைதல்

கம்ப இராமாயணம் நமக்கு பள்ளியில் தமிழ்ப் பாடநூலின் ஒரு பகுதியாக அறிமுகம் ஆகியிருக்கும். அதன் பின்னர் மேடைப் பேச்சாளர்கள் கம்பனின் காவியத்திலிருந்து பேசும் பட்டிமன்றங்களையோ அல்லது வழக்காடு மன்றங்களையோ கேட்டிருப்போம். பட்டிமன்றங்களில் பேசுபவர்கள் தங்கள் நினைவிலிருந்தே பல பாடல்களைக் கூறுவதைக் கேட்கும் போது நமக்கு வியப்பாக இருந்திருக்கும் . ஒருவரால் எப்படி இத்தனை பாடல்களை நினைவில் வைத்திருக்க முடிகிறது என்று எண்ணி எண்ணி வியப்போம். பின்னர் எப்போதாவது ஒருமுறை கம்பராமாயண நூலை பார்க்க நேர்ந்தால் அதன் பக்க எண்ணிக்கையும் நூலின் அளவும் நம்மை மலைக்கச் செய்து விடும். நூலின் சில பக்கங்களை புரட்டிப் பார்த்து விட்டு எடுத்த இடத்தில் வைத்து விடுவோம்.  

சிறுவயதில் நான் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் காரைக்குடி கம்பன் கழக கம்பன் விழா உரைகளை பலமுறை கேட்டிருக்கிறேன். எனினும் பின்னாட்களில் நான் கம்பனில் நுழைய ஒரு சம்பவம் காரணமாக இருந்தது. 

எனது நண்பர் ஒருவருடன் நான் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் ஒன்றனுக்குச் சென்றிருந்தேன். நண்பர் கம்பராமாயணத்தில் ஆர்வம் உடையவர். கோவிலுக்குள் நுழையும் போது அவர் ஒரு பாடலைச் சொன்னார் : ‘’ நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்து ‘’ என்ற பிரபலமான கம்பன் பாடல். கும்பகர்ணம் விபீஷணனிடம் கூறியது. வீடணன் ராமனது சேனையில் வந்து இணைந்து கொள் என கும்பகர்ணனிடம் கூறுகிறான். அப்போது கும்பகர்ணன் சொல்லும் பதில் அது. நண்பர் சொன்னார் : நீர்க்கோலம் போன்ற அழகிய வாழ்வை விரும்பி நான் இராவணை விட்டு வர மாட்டேன் என்று கும்பகர்ணன் சொன்னதாக. அவர் கூறியவற்றை என் மனம் கேட்டுக் கொண்டது. என்றாலும் ஆலயத்தில் இருக்கும் நேரமெல்லாம் ‘’நீர்க்கோலம் நீர்க்கோலம் நீர்க்கோலம்’’ என அந்த வார்த்தையே மனதில் ஒலித்துக் கொண்டு இருந்தது. ஆலய வழிபாடை நிறைவு செய்து ஆலயத்தில் இருந்த விருட்சம் ஒன்றின் அடியில் அமர்ந்தோம். நான் நண்பரிடம் சொன்னேன். ‘’இந்த நீர்க்கோலம் ங்கற வார்த்தையை கம்பன் அழகிய கோலம்னு சொல்ல சொல்லியிருப்பான்னு நினைக்கறீங்களா’’ என்றேன். நண்பர் யோசித்தார். நான் சொன்னேன் : ’’ஒரு குமரகுருபரர் செய்யுள் இருக்கு. நீரில் குமிழி இளமை நெடுஞ்செல்வம் நீரில் சுருட்டு நெடுந்திரைகள் நீரில் எழுத்தாகும் யாக்கை நமரங்காள் வழுத்தாது எம்பிரான் மன்று’’. கம்பன் வாழ்ந்த காலத்துக்கு ஐந்நூறு வருஷம் பிந்தி வந்த குமரகுருபரரோட இந்த பாட்டு கூட கம்பனோட ‘’நீர்க்கோலம்’’ங்கற சொல்லோட இன்ஸ்பிரேஷனா இருக்கலாம். கம்பன் ‘’நீர்க்கோலம்’’னு சொல்லி அர்த்தப்படுத்தறது ‘’நீர்க்கோலம் போன்ற அழகிய வாழ்வு’’ன்னு இல்ல. ‘’நீர்க்கோலம் போன்ற நிலையில்லாத வாழ்வு’’ன்னு தான் அர்த்தப்படுத்தறான்னு தோணுது. தண்ணீரில் போடப் படும் கோலம் போல நிலையில்லாத வாழ்வு’’ நாங்கள் இருவரும் இந்த விஷயத்தை யோசித்தவாறு அமைதியாக சில நிமிடங்கள் இருந்தோம். தொடர்ந்து நான் சொன்னேன் ‘’ இந்த வார்த்தை மூலமா கும்பகர்ணனை பெரிய ஹைட்டுக்கு கம்பன் கொண்டு போறார். அவன் அதிகமா சாப்டுட்டு எப்போதும் தூங்கிக் கிட்டே இருக்கற ஆள்னு எல்லாரும் நினைக்கறாங்க. அவன் அறிஞன். வாழ்க்கையோட அர்த்தம் அவனுக்கு தெரியும். இராமன் கூட இருந்தா இலங்கை அரசாங்கமே கிடைக்கும்னு தெரிஞ்சும் ‘’உலக வாழ்க்கை நிலையில்லாதது’’ங்கற வைராக்கியம் அவன் ட்ட இருக்கறதால அது தேவையில்லைன்னு சொல்றான்.’’ நாங்கள் இருவருமே அந்த கம்பனின் சித்திரத்துக்குள் சென்று விட்டோம்.

எனக்கு குமரகுருபரரின் நீரில் குமிழி இளமை பாட்டு தெரிந்ததால் கம்பனின் உத்தேசத்தை நோக்கிச் செல்ல அது உதவியது. மொழிப்பரப்பு என்பது பெருநதி போன்றது. நாம் நம் உள்ளங்கைகளில் அதன் அர்த்தத்தை அள்ளிக் குடிக்கிறோம். 

இந்த சம்பவத்துக்குப் பின் கம்பனின் ஒரு வாயில் எனக்குத் திறந்ததாக எண்ணினேன். அந்த எண்ணமே மகிழ்ச்சி அளித்தது. கம்பனில் நுழைய அறிஞர் பி.ஜி. கருத்திருமனின் ‘’கம்பர் - கவியும் கருத்தும்’’ என்ற நூல் பெருந்துணையாய் விளங்கக் கூடியது. அந்நூலை வாசித்தேன். வாசிக்கத் தொடங்கிய ஓரிரு நாளில் அதனை முழுமையாக வாசித்து முடித்தேன். அழகும் செறிவும் மிக்க எளிய நடை கொண்ட கம்பனின் 930 பாடல்களை அவனுடைய 10,000 பாடல்களிலிருந்து தேர்வு செய்திருப்பார். ஒரு புறம் பதம் பிரிக்கப்பட்ட கம்பன் பாடல். அதன் எதிர்ப்புறம் மிக எளிய விளக்கம். கம்பனின் காவிய அழகுக்கு சிறு ஊறும் செய்யாத விளக்கம். அந்த நூல் கம்பனை மேலும் அணுக்கம் கொள்ளச் செய்தது. இந்த நூல் tamilvu(dot)org இணைய தளத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. 

குகன் இராமனைக் காணுக் காட்சியை ஒரு நண்பருக்கு சொல்லிக் கொண்டிருந்தேன். குகனை கம்பன் சில பாட்ல்கள் முன்னால் ‘’சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்’’ என்கிறான். அதாவது அவன் கோபமில்லாமல் சாதாரணமாகப் பார்த்தால் கூட அவன் பார்வை பற்றி எறிவது போல அனல் கொண்டிருக்கும் என்கிறான். இது சில நிமிடங்கள் முன்பு. இலக்குவனைக் கண்டு அவன் தான் இராமன் என அவன் தாள் பணிகிறார்கள் குகனும் அவன் குடிகளும். இலக்குவன் தான் இராமன் அல்ல இராமன் உள்ளே இருக்கிறார் தங்கள் வருகையை அவருக்கு அறிவிக்கிறேன் என குடிலின் உள்ளே செல்கிறான். குகனை அவன் பார்த்து சில வினாடிகளே ஆகியிருக்கின்றன. இராமனிடம் உங்களைக் காண ஒருவன் வந்திருக்கிறான். என்று கூறி வந்திருப்பவன் ‘’ உள்ளம் தூயவன் தாயினும் நல்லன் எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை’’ எனச் சொல்கிறான். 

ஒரு முறை மட்டுமே சில வினாடிகள் மட்டுமே இலக்குவன் குகனைப் பார்த்தான். அதற்குள் எப்படி உள்ளம் தூயவன் என்றான். இராம இலக்குவர்கள் அன்னையைப் பிரிந்து வந்திருக்கிறார்கள். இலக்குவனுக்கு குகனைப் பார்த்ததும் தன் அன்னையரின் நினைவு வந்து விட்டதா ? ஏன் தாயினும் நல்லன் என்றான். தூய உள்ளம் என்பது மேலான நிலை. தாய் என்பது மேலும் மேன்மையான நிலை. ஆனால் அவன் இந்த அறிமுகச் சொற்கள் மட்டும் போதும் என எண்ணவில்லை. மேலும் சென்று ‘’கங்கை நாவாய்களின் இறை’’ என இறை நிலைக்கு கொண்டு செல்கிறான் என்றேன். நண்பர் இங்கே ‘’இறை’’ என்பதற்கு தலைவன் என்பது பொருள் சொன்னார். இலக்குவன் முதலில் மேன்மையான மனிதன் என்கிறான் ; பின்னர் அன்னையினும் மேலானவன் என்கிறான் ; இந்த உணர்வின் நீட்சியில் ’’கங்கை நாவாய்களின் இறைவன்’’ என்கிறான். இங்கே தலைவன் என்பதிலும் இறைவனே பொருத்தமாக இருக்கும். சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான் எவ்வாறு சில கணங்களில் இறைவன் ஆகி விட்டான்? 

கம்பன் வாலி வதைப்படலத்தில் ராமநாமத்தை ‘’தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதம்’’ என்கிறான். அவன் குடிலை அணுகியதும் குகன் அவ்விதம் ஆனானோ? 


திரு. பி.ஜி. கருத்திருமனின் நூலின் இணைப்பு 


https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ2k0py#book1/


கம்பராமாயணம் - கோவை கம்பன் கழக வெளியீட்டின் இணைப்பு 


https://www.tamilvu.org/ta/library-l3700-html-l3700ind-133880

 

Saturday 6 May 2023

கம்பன் புகழ் பாடுதல்

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரது பூர்வீகம் பழைய வடார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம். பத்து ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் கணிணி துறையில் பணியாற்றுகிறார். ஆண்டுக்கு ஒருமுறை சொந்த கிராமத்துக்கு வருவார். ஊருக்கு வரும் போதும் அமெரிக்காவில் இருக்கும் போதும் என்னுடன் அலைபேசியில் உரையாடுவார். ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் மீது மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்கு தனது ஆதரவை எப்போதும் அளிப்பவர்.  

அவருக்கு கம்பன் பாடல்கள் மேல் தீவிரமான விருப்பமும் ஈடுபாடும் உண்டு. தனது சொந்த ஆர்வத்தில் கம்பனை வாசிக்கத் தொடங்கி கம்பனில் ஆழ்ந்து விட்டார். 

அமெரிக்காவில் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள தமிழ்க் குடும்பங்கள் இணைந்து ஒரு தமிழ்ப் பள்ளியை நடத்துக்கின்றன. வார இறுதி நாட்களில் தங்கள் குடும்பத்தின் குழந்தைகளுக்கு தமிழுடன் தொடர்பு இருக்கும் விதத்தில் தமிழ் வகுப்புகள் நடத்துகிறார்கள். தமிழில் ஆர்வம் உள்ள பெற்றோர் பகுதி நேர ஆசிரியர்களாக குழந்தைகளுக்கு பாடம் எடுக்கிறார்கள். அந்த பள்ளியில் நண்பர் குழந்தைகளுக்கு கம்பன் பாடல்களை பாடமாக எடுக்கிறார். 

சமீபத்தில் அவர்கள் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றிருக்கிறது. அதில் ஆறு குழந்தைகள் ஒவ்வொருவரும் ஐந்து நிமிடம் கம்பன் பாடல் ஒன்றைச் சொல்லி அதன் விளக்கத்தையும் காவியச் சுவையையும் கூறும் நிகழ்ச்சியின் காணொளியை எனக்கு அனுப்பியிருந்தார். 

மொழிப் பரிச்சயம் என்பது செவி சார்ந்தது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்க் குழந்தைகள் ஒரு நாளின் பெரும் பகுதி பள்ளியில் இருக்க வேண்டியிருப்பதால் அமெரிக்க உச்சரிப்பு பாணி கொண்ட ஆங்கிலமே அவர்கள் மனத்தில் இருக்கும். சக குழந்தைகளுடன் உரையாடும் மொழியே அவர்களின் புழக்க மொழியாக மாறும். நண்பரின் பள்ளியில் வார இறுதி நாட்கள் இரண்டு நாளுமே அங்கிருக்கும் குழந்தைகள் தமிழ் பேச வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. அங்கே உள்ள குழந்தைகள் மொழியில் கம்பன் தமிழைக் கேட்டது பேருவகை அளித்தது. அந்த குழந்தைகள் தமிழையும் கம்பனையும் முழுமையாக உள்வாங்கியிருந்தன என்பது அவர்களின் உடல்மொழி மூலம் அறிய முடிந்தது. 

நண்பரின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. 

ஆர்வத்துடன் பங்கெடுத்த குழந்தைகளும் குழந்தைகளுக்கு ஊக்கம் அளித்த பெற்றோரும் பாராட்டுக்குரியவர்கள்.   

தடையற்ற போதைப்பொருள் புழக்கம்

நேற்று எனது இரு சக்கர வாகனத்தின் என்ஜின் ஆயில் மாற்றுவதற்காக ஒரு டூ-வீலர் பட்டறைக்குச் சென்றிருந்தேன். அங்கே இருந்த மெக்கானிக் காலில் பெரிய கட்டு போட்டு அமர்ந்திருந்தார். ஆயில் மாற்ற வேண்டும் என்று சொன்னதும் பணியாளர் வந்து விடுவார் என்று கூறி சற்று நேரம் காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் காலில் போட்டிருந்த கட்டைக் குறித்து விசாரித்தேன். 

இரண்டு மாதம் முன்பு சாலையின் ஒரு ஓரத்தில் ஒரு ஊருக்கு வழி கேட்டு டூ-வீலருடன் நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சாலையின் மறுபக்கத்தில் ஒரு டூ-வீலரில் மூன்று இளைஞர்கள் சென்றிருக்கிறார்கள். மூன்று பேருமே கஞ்சா புகைத்த போதையில் இருந்திருக்கிறார்கள். மிக அதிக வேகத்தில் வண்டியை இயக்கிய போது கட்டுப்பாடு இழந்து வண்டி சாலையில் சாய்ந்திருக்கிறது. மூவருமே சாலையில் விழுந்து மூவருக்குமே கடுமையான அடி. சாலையில் விழுந்த வாகனம் மிதமிஞ்சிய வேகத்தில் வாகனத்தில் இருந்த மூவரும் இல்லாமல் சாய்ந்தவாறு ஐம்பது அடி தள்ளி நின்று கொண்டிருந்த இந்த மெக்கானிக் காலில் மோதி கால் தசைகளைப் பிய்த்து கால் எலும்பை நொறுக்கியிருக்கிறது. எலும்பு முறிவு கடுமையாக ஆகி உலோகத்தால் எலும்புகளை இணைத்துக் கட்டி அறுவைசிகிச்சை செய்திருக்கிறார்கள். இப்போது சற்று உடல் நிலை தேறியிருக்கிறார் என்றாலும் இன்னும் முழுமையான ஆரோக்கிய நிலைக்கு இன்னும் வந்து சேரவில்லை. 

விபத்தை உண்டாக்கியவர்கள் கஞ்சா போதையில் இருந்துள்ளதால் இந்த விஷயம் மிகக் கடுமையான கிரிமினல் குற்றம். காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததா என்று கேட்டேன். சம்பவம் நடந்து அறுபது நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் முதல் தகவல் அறிக்கை தரப்படவில்லை என்றார். புகாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கவனத்துக்கு அனுப்பியிருப்பதாகக் கூறினார். 

விபத்துக்குண்டான இழப்பீடு உங்களுக்கு கிடைக்க வேண்டும் ; அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள் என்று சொன்னேன். உங்களுக்கு சட்ட உதவி ஏதும் தேவைப்பட்டால் என்னிடம் சொல்லுங்கள் என்றேன். டூ-வீலர் மெக்கானிக் என்பதால் அவருடைய கஸ்டமர்கள் இரண்டு பேர் வழக்கறிஞர்கள். அவர்கள் உதவுகிறார்கள் என்று சொன்னார். 

கடையில் சற்று பெரிய நாற்காலி ஒன்றில் காலை முதல் மாலை வரை அமர்ந்தே இருக்கும் நிலைமை. அவர் பட்டறையில் இரண்டு பணியாளர்கள் இருக்கிறார்கள். பட்டறைக்கு வரும் வண்டிகளில் என்னென்ன பழுதுகள் அவை எவ்வாறு நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்று இவர் சொல்ல பணியாளர்கள் பணி புரிகிறார்கள். இப்போது இரண்டு மாதம் ஆகிவிட்டது. முழுமையாக குணம் ஆக மேலும் இரண்டு மாதம் ஆகும். சுயதொழில் புரிபவரான அவருக்கு நான்கு மாதங்கள் என்பது பெரிய காலம். 

கஞ்சா புழக்கம் என்பது இங்கே மிகத் தீவிரமாக இருக்கிறது. நகரின் நான்கு திசைகளிலும் நகரின் மையப்பகுதியிலும் கஞ்சா தீவிரமாக விற்கப்படுகிறது. கஞ்சாவுடன் மாத்திரை என்ற போதைப்பொருளும் உலவுவதாகச் சொல்கிறார்கள். 15 வயது முதல் 21 வயது வரையான இளைஞர்கள் மிக அதிகமாக போதை அடிமைகளாக உருமாறுகிறார்கள். 

என்ஜின் ஆயில் மாற்றிக் கொண்டு வீட்டுக்கு வந்து நாள் முழுதும் நகர முடியாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் அவருக்கு ஐந்து புத்தகங்களை எடுத்துச் சென்று வாசிக்கக் கொடுத்தேன்.  

Friday 5 May 2023

இறைமை நிழலில் அமைதி

இன்று காலை எனது நண்பர் ஒருவர் இயற்கை எய்தினார். எனது நண்பர். என் மேல் மிகுந்த பிரியம் கொண்டவர். கட்டுமானப் பொருள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். தனது கடமையையும் பொறுப்புகளையும் செவ்வனே நிறைவேற்றியவர். தொழிலில் ஈடுபட்ட ஒவ்வொரு நாளும் காலை 8.20 மணிக்கு கடையின் சாவிகளுடன் கையில் ‘’இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ செய்தித்தாளுடன் கடை வாசலில் நின்றிருப்பார். அவரை நான் அறிமுகம் செய்து கொண்ட காலத்தில் கடையின் ஷட்டரை அவர் திறக்க வேண்டாம் என்று மருத்துவர் அறிவுறுத்தியிருந்தார். அதனால் கடையின் பணியாளர் வருகைக்காகக் காத்திருப்பார். 8.30க்கு பணியாளர் வந்து கடை திறப்பார். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தினமும் காலை ‘’இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ வாசிக்கும் பழக்கம் உடையவர். 

அதிர்ந்து பேச மாட்டார். சினம் கொள்ள மாட்டார். ஒரு ராணுவ வீரனுக்குரிய கூர்மையான பார்வையைக் கொண்டவர். வள்ளலார் மீது பெரும் ஈடுபாடு கொண்டவர். அவர் வீட்டின் மூன்று குழந்தைகளை உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம் பள்ளியில் படிக்க வைத்தார். அவரது ஊரில் இருந்த ஆன்மீக அமைப்புகள் பலவற்றை பலவிதங்களிலும் ஆதரித்தவர். 

கடந்த சில வாரங்களாக அவரது  உடல்நிலை நோயுற்றிருந்தது. சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நோய் மீண்டு உடல் நலம் பெறுவார் என்றுதான் அனைவரும் எண்ணிணோம். நேற்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு இன்று காலை வந்தார். வீட்டில் பதினைந்து நிமிடங்கள் இருந்திருக்கிறார். அதன் பின் உயிர் பிரிந்திருக்கிறது. 

இன்று காலை அவரது வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினேன். அவரது உடலும் முகமும் உறங்கிக் கொண்டிருக்கும் ஒருவரைப் போல் இருந்தது. 

ஒரு மூத்த சகோதரரை இழந்த உணர்வு எனக்கு இருக்கிறது. 

சகோதரர் இறைமையின் நிழலில் அமைதி கொள்ளட்டும். 

சாந்தி சாந்தி சாந்தி  

Thursday 4 May 2023

உள்ளது உள்ளபடி ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளரிடம் மீடியேட்டர்கள் ரியல் எஸ்டேட் தொழிலின் நுட்பங்கள் என பல்வேறு விஷயங்களைக் கூறுவார்கள். அமைப்பாளர் கேட்டுக் கொள்வாறே தவிர அவற்றை முழுமையாக ஏற்க மாட்டார். ஒவ்வொன்று குறித்தும் அமைப்பாளருக்கு தனிப்பார்வை இருக்கும். 

பொதுவாக விலை குறையும் என்றால் விலையை குறைத்தால் ஒரு இடம் விற்பனை ஆக வாய்ப்பு அதிகம் என்பதால் ரியல் எஸ்டேட் மீடியேட்டர்கள் விலையைக் குறைக்க முயற்சி செய்வார்கள். ஆனால் அமைப்பாளர் அந்த தியரியை நம்ப மாட்டார். ‘’ ஒரு செல்லர் இடத்தை விக்கறார்னா அந்த இடத்துல பொதுவா என்ன விலைக்கு பையிங் செல்லிங் நடக்குதோ அதை அனுசரித்துதான் விலை சொல்வார். அஞ்சு பத்து முன்ன பின்ன முடியுமே தவிர பெருசா விலையை குறைச்சு செல்லர் கொடுக்க மாட்டார்’’ என்று மீடியேட்டர்களிடம் அமைப்பாளர் சொல்வார். ‘’அப்புறம் செல்லருக்கு தன்னோட இடம் இவ்வளவு விலைன்னு சொல்ற ரைட் இருக்கு. அந்த விலைக்கு நம்மகிட்ட பார்ட்டி இருந்தா நாம அழைச்சுட்டு போகணும். இல்லன்னா சும்மா இருக்கணும். செல்லர் விலையை குறைச்சு சொல்லணும்னு நாம அவர்கிட்ட எதிர்பார்க்கக் கூடாது’’ என்று மீடியேட்டர்களிடம் சொல்வார். 

அமைப்பாளர் மீடியேட்டர்கள் இடம் சொன்னால் விலை சொன்னால் முதலில் இடத்தை நேரில் அழைத்துச் சென்று காட்டச் சொல்வார். பின்னர் நிலத்தின் உரிமையாளரிடம் அழைத்துச் செல்ல சொல்வார். உரிமையாளர் வாயால் அவர் இடத்துக்குச் சொல்லும் விலையை தனது காதால் கேட்ட பின்னரே அந்த விலையை இன்னொருவரிடம் சொல்வார். மீடியேட்டர்கள் அமைப்பாளர் ஏன் நிலத்தை வாங்குபவர் போல் நடந்து கொள்கிறார் எனக் குழம்புவார்கள். 

அமைப்பாளர் எந்த மீடியேட்டரின் பெயரையும் எவரிடமும் உரையாடும் போது கூறமாட்டார். எல்லா மீடியேட்டர்களையும் ‘’ எனக்குத் தெரிந்த மீடியேட்டர்’’ என்பார். வாங்குவதற்கு வாய்ப்புள்ளவர்கள் அன்றி எவரிடமும் இடம் இன்ன இடத்தில் இருக்கிறது எனக் குறிப்பிட்டு சொல்ல மாட்டார். ‘’ஒரு பிளாட்’’ என்பார். அவருக்குமே எல்லா இடங்களுமே ‘’ஒரு பிளாட்’’ தான். 

மீடியேட்டர்கள் அமைப்பாளரிடம் ‘’ சார் ! என்ன சார் உள்ளது உள்ளபடி சொல்லிடறீங்க. கொஞ்சம் ஏத்த இறக்கமா தான் சார் சொல்லணும்’’ என்பார்கள். உள்ளது உள்ளபடி சொல்லி என்ன வணிகம் நடக்கிறதோ அது மட்டும் நடக்கட்டும் என்பார் அமைப்பாளர்.   

ரியல் எஸ்டேட் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளரின் தொழில் கட்டிடக் கட்டுமானம். இருப்பினும் மனை விற்பனை, வீடு விற்பனை, விவசாய நிலம் விற்பனை ஆகிய சமாசாரங்களும் அவர் தொழில் வட்டத்துக்குள் அடங்கும். சில நாட்களுக்கு முன்னால் அமைப்பாளருக்கு ஒரு ஃபோன்கால் வந்தது. ‘’ சார் ! உங்க ஃபிரண்டு அவரோட விவசாய நிலத்தை விக்கறாராமே ?’’. ‘’அப்படியா ! எனக்குத் தெரியாதே’’ ‘’அந்த இடத்துக்கு என் கிட்ட ஒரு பார்ட்டி இருக்கு . அதுக்கு முடிச்சுக் கொடுங்க சார்’’. ‘’ஏம்ப்பா எனக்கு விஷயமே நீ சொல்லித்தான் தெரியும். ஃபிரண்டு நம்பர் கொடுக்கறன். அவர்ட்டயே நீ பேசிக்க.’’ ‘’இல்ல சார் நேரா நாங்க பேசுனா சரி வராது. நீங்க மிடில்ல இருக்கணும். அப்பதான் முடியும்.’’ . அமைப்பாளர் நண்பருக்கு ஃபோன் செய்தார். ‘’ எனக்குத் தெரிஞ்ச ஒரு மீடியேட்டர் கொஞ்ச நேரம் முன்னாடி பேசுனார். உங்க விவசாய நிலத்தை சேல்ஸ் பண்ண இருக்கீங்கன்னு சொன்னார். எனக்குத் தெரியாதுன்னு சொன்னேன். அவர் சொன்ன விஷயம் உண்மையா?’’ ‘’ஆமாம் உண்மைதான்.’’ அமைப்பாளர் அவரிடம் ‘’நான் உங்க நம்பர் கொடுத்திடறன். உங்க கிட்ட பேச சொல்றன்.’’. நண்பர் ‘’வேண்டாம் வேண்டாம். நீங்க என் பக்கத்துக்கு மீடியேட்டரா இருங்க. நான் உங்களுக்கு ஒன் பர்செண்ட் கொடுக்கறன்’’ என்றார். அமைப்பாளர் வேண்டாம் என்று சொன்னாலும் நண்பர் வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார். அமைப்பாளர் மீடியேட்டருக்கு ஃபோன் செய்தார். ‘’ நான் சொல்றதை நல்லா கேட்டுக்கங்க. ஃபிரண்டு சைடுக்கு நான் மீடியேட்டர். உங்க பார்ட்டி சைடுக்கு நீங்க. உங்க கூட எத்தனை மீடியேட்டர் இருந்தாலும் உங்க கமிஷன்ல இருந்து அதை பிரிச்சு கொடுத்துக்கணும். டீல் முடிஞ்சதும் என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது.’’ ‘’ அதெல்லாம் பண்ண மாட்டோம் சார். ஃபிரண்டு கிட்ட சொல்லி முடிச்சு வைங்க.’’ ‘’அவரு குழி 6000 சொல்றார்.’’ ‘’நம்ம பார்ட்டி 5000 எதிர்பாக்குது.’’ அமைப்பாளர் ‘’ 5500ன்னு முடிக்கலாம்’’ என்றார். 

பின்னர் மீடியேட்டரிடமிருந்து சில நாட்கள் ஃபோன் வரவில்லை. நில உரிமையாளர் ஃபோன் செய்தார். ‘’ சார் ! லேண்ட் முடிக்க பார்ட்டி இருக்குன்னு சொன்னீங்களே. என்னைக்கு வராங்க. ‘’ ‘’5500ன்னு ஃபைனல் ஃபண்ணலாமா?’’ ‘’சிங்கிள் பேமெண்ட்னா பண்ணிக்கலாம். ‘’ அமைப்பாளர் மீடியேட்டருக்கு ஃபோன் செய்தார். ‘’ லேண்ட் ஓனர் ஃபோன் பண்ணி என்னாச்சுன்னு கேக்கறார். என்ன பதில் சொல்ல?’’ . மீடியேட்டர் பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். அமைப்பாளர் மீடியேட்டரிடன்  ’’ நான் எனக்குத் தெரிஞ்ச வேற மீடியேட்டர்ஸ்ட்ட விஷயத்தை சொல்லி பார்ட்டி இருக்கான்னு கேட்கட்டுமா?’’ . அமைப்பாளரின் இந்த கேள்விக்கும் மீடியேட்டர் மௌனத்தையே பதிலாகத் தந்தார். 

Wednesday 3 May 2023

பத்திரப் பதிவு (நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளருக்கு ஒரு ராசி உண்டு. அவர் நிலம் விற்றாலும் நிலம் வாங்கினாலும் பத்திரப் பதிவுக்கு சாட்சியாக இருந்தாலும் அந்த பத்திரப் பதிவு நிகழ சிறியதிலிருந்து பெரியது வரை அவர் தான் எல்லா வேலைகளையும் செய்வது போல ஆகி விடுகிறது. அமைப்பாளர் ஏன் அவ்வாறு ஆகிறது என யோசித்து யோசித்துப் பார்த்தார். நிலவரம் என்னவென்றால் அவருக்கு நிலம், மனை , வீடு குறித்த விபரங்கள் தெரியும். பத்திரம் எழுத உரிமம் பெற்ற எழுத்தரிடம் விபரங்களைக் கொடுக்க செல்லும் போது அந்த நிலம் மனை தொடர்பான முழுமையான தகவல்களுடன் செல்வார். வழக்கமாக அமைப்பாளர் ஏப்ரல் 2ம் தேதியே வீட்டு வரி, சொத்து வரி செலுத்தும் வழக்கம் உள்ளவர். முழு ஆண்டுக்கும் செலுத்தியிருப்பார். அந்த ரசீதுகள், டி.எஸ். எல். ஆர் வரைபடம் ஆகியவற்றைக் கொண்டு செல்வார். பத்திர எழுத்தர் அமைப்பாளரிடம் ஒருமுறை சொன்னார். ‘’ சார் !ஒரு டாகுமெண்ட்  எழுத வரும் போது ரொம்ப துல்லியமா எல்லா விபரங்களுடன் வரக்கூடாது ; அதே போல எந்த விபரமும் இல்லாமலும் வரக் கூடாது. இந்த ரெண்டுமே அதிகமா வேலை வைக்கும். ஒரு மையமா இருக்கணும் சார் !’’ . அமைப்பாளருக்கு இதைக் கேட்டதும் ஒரு தமிழ் சினிமா டயலாக் ஞாபகம் வந்தது. ‘’ ஈயம் பூசுனது போலவும் இருக்கணும். ஈயம் பூசாதது போலவும் இருக்கணும்.’’. 

தமிழகத்தில் ஒரு இடத்துக்கு மூன்று பேராக சேர்ந்து செல்லக் கூடாது என்று சொல்வார்கள். இந்தியா முழுக்கவுமே அந்த எண்ணம் உண்டு. மூன்று பேர் ஒரு இடத்தில் இருந்தால் அங்கே மிக எளிதில் மனப்பிளவு அவர்களுக்குள் உருவாகி விடும். இரண்டு பேருக்கு மனப்பிளவு உருவாகும் வாய்ப்பை விட மூன்று பேருக்கு மனப்பிளவு உருவாகும் வாய்ப்பு உண்டு. 

பத்திரம் பதிவு செய்யும் போது வாங்குபவர், விற்ப்வர், பதிவு செய்து தரும் அரசாங்கம் என மூவர் உருவாகி விடுகின்றனர். இந்த மூவருக்குள்ளும் ஒரு ஒருங்கிணைப்பு குறுகிய காலத்துக்கு ஏற்பட வேண்டும். நிலம் விஷயங்களில் விற்பவர் வாங்குபவர் இருவருக்குமே நடைமுறைப் புரிதல் இருக்க சாத்தியம் குறைவு. 

விதிமுறைகள் அவ்வப் போது மாற்ற்ம் அடைந்து கொண்டே இருக்கும். மளிகைக்கடையில் பொருள் வாங்குவது போல தினம் யாரும் பதிவு அலுவலகத்துக்கு செல்வது இல்லை. இரண்டு ஆண்டுகள் முன்பு ஒரு சொத்தை விற்றிருப்பார்கள். அதன் பின் இப்போது விற்பார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நினைவே அவர்களுக்கு இருக்கும். ஆனால் இப்போது அரசாங்க நடைமுறையில் நிறைய மாற்றம் இருக்கும். 

மக்களுக்கு மிக அணுக்கமாக பதிவு நடைமுறைகள் இருக்க வேண்டும் என அரசு விரும்பும். ஆனால் அது எந்த அளவுக்கு அணுக்கமில்லாமல் இருக்க முடியுமோ அந்த அளவு அணுக்கமில்லாமல் நடக்கும்.

அமைப்பாளரை பத்திரம் பதிவு செய்ய விரும்பும் அவரது நண்பர்கள் உதவிக்காகவும் ஆலோசனைக்காகவும் உடன் அழைத்துச் செல்வார்கள். பத்திர எழுத்தர் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு பத்திரம் வாங்கி வாருங்கள் என்பார். அமைப்பாளர் வெளியே வந்ததும் நண்பரிடம் ‘’ இப்ப ஐம்பதாயிரம் ரூபாய்க்கு பத்திரம் வாங்கணும்னு டாகுமெண்ட் ரைட்டர் சொல்றார். அந்த ஐம்பதாயிரம் பத்திரத்துக்கு கமிஷன் ஆயிரம் ரூபாய். ஆனா பத்திரத்துக்கான தொகையை நீங்க டிமாண்ட் டிராஃப்ட்டா கட்டலாம். ஐம்பதாயிரத்துக்கு டி.டி கமிஷன் நூறு அல்லது நூத்து ஐம்பது இருக்கும். ஆன்லைன்ல பேமெண்ட் பண்ணா அது கூட கிடையாது. ‘’. நண்பர் அப்பாவியாய் , ‘’பத்திரத்தை எதுல பிரிண்ட் பண்றது’’ என்று கேட்பார். ‘’சாதாரண கான்கொயர் பேப்பர்ல பிரிண்ட் பண்ணா போதும்’’ . நண்பரால் அப்படி ஒரு பத்திரத்தை கற்பனை கூட செய்ய முடியாது. அவருடைய மனத்தில் பத்திரம் என்றால் மதிப்பு அரசாங்க முத்திரையுடன் அச்சடிக்கப்பட்ட காகிதம் என்றே பதிவாகியிருக்கும். 

உண்மையில், சில ஆண்டுகள் முன் எல்லா பத்திரப் பதிவிலும் பத்திரத்துக்கான தொகை இணையம் மூலம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவை அரசு இட்டது. அதனை எதிர்த்து மாநிலம் முழுதும் பத்திர எழுத்தர்கள் உண்ணாவிரதம் , போராட்டம், தர்ணா நடத்தினர். அரசு பத்திரம் அல்லது ஆன் லைன் மூலம் செலுத்துதல் என்ற இரு வாய்ப்புகளையும் கொடுத்தது. மக்கள் ஆன்லைன் மூலம் செலுத்துதல் தங்களுக்கு மிச்சம் என்று அறியாமல் பத்திரம் நோக்கியே செல்கின்றனர். 


ஞாயிறு போற்றுதல் , கடிதம்

 கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனின் ‘’மூன்று வெயில் கவிதைகள்’’ குறித்து எழுதிய கடிதம் ஜெயமோகன்.இன் தளத்தில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு 

https://www.jeyamohan.in/182416/