Tuesday 31 January 2023

நிலம் பிசாசு கடவுள்


சீர்காழி பிடாரி வடக்கு வீதியிலும், உ.வே.சா பணியாற்றிய கும்பகோணம் அரசுக் கல்லூரி மைதானத்திலும் என இரண்டு முறை முன்னாள் இந்தியப் பிரதமர் திரு. ராஜிவ்காந்தியை நான் பார்த்திருக்கிறேன். முதல் முறை பார்த்த போது எனக்கு ஏழு வயது. அவர் அப்போது நாட்டின் பிரதமர். சீர்காழியே திரண்டு வந்திருந்தது போல ஒரு பெரும் கூட்டம். நான் அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்பாவின் பணி நிமித்தம் பாபநாசத்துக்கு மாற்றல் ஆனது. பாபநாசத்தில் இருந்த போது அந்த தொகுதியின் சட்டசபை வேட்பாளரான ஜி.கே. மூப்பனார் அவர்களை தமிழக முதல்வராக்க தமிழக மக்களிடம் வாக்கு கேட்டு அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி கும்பகோணத்துக்கு வந்திருந்தார். சீர்காழிக்கு அவர் வந்தது ஜீப்பில். கும்பகோணத்துக்கு அவர் வந்தது ஹெலிகாப்டரில். இரண்டு முறை அவரைப் பார்த்ததும் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. மூன்றாவது முறை அவரைப் பார்க்க ஒரு வாய்ப்பு அமைந்தது. மயிலாடுதுறை ராஜன் தோட்ட விளையாட்டு மைதானத்தில் ஒரு தேர்தல் பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. 1991ம் வருடம் மே மாதம் 21ம் தேதி. அன்று மதியம் கூட்டம் ஒரு நாள் தள்ளிப் போகக் கூடும் என்ற உறுதிசெய்யப்படாத தகவல் வந்தது. அடுத்த நாள் காலை ஆகாசவாணியும் தூர்தர்ஷனும் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்ட ராஜிவ் குறித்த செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன.

சீர்காழியில் பார்த்த போதும் குடந்தையில் பார்த்த போதும் ராஜிவ்வின் மேல் இருந்த ஈடுபாடு பின்னர் ‘’தேசிய முன்னணி’’யின் மீது திரும்பியது. அந்த பெயரில் உள்ள தேசியம் எனக்கு உவப்பானதாக இருந்தது. ராஜிவ் வி.பி.சிங்கை கடுமையாக விமர்சித்ததை என்னால் ஏற்க முடியவில்லை. இத்தனை நாள் உடன் இருந்தவர் ; ஒன்றாகப் பணி புரிந்தவர் ; சிறந்தவர் எனப் பாராட்டப் பட்டவர். எப்படி சட்டென ‘’துரோகி’’ ஆவார் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடிய்வில்லை. ‘’தேசிய முன்னணி’’ மீது ஆர்வம் உண்டான அதே காலகட்டத்தில் தான் சென்னையில் சூளைமேட்டில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் தலைவர் பத்மநாபா சுட்டுக் கொல்லப்பட்டார். பத்மநாபா கொல்லப்பட்டதை எனது மனம் ஏற்கவில்லை. தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் பத்மநாபாவைக் கொன்றவர்கள் ஜனநாயக விரோதிகள் எனக் கூறியது கவனத்துக்கு வந்தது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜிவ்வின் உடல் துயர் அளித்த வண்ணம் இருந்தது. அன்றைய தினம் ஊரெங்கும் சைக்கிள் எடுத்துக் கொண்டு திரிந்தேன். பார்த்த முகங்களிலெல்லாம் வருத்தம். துயரம். ராஜிவ் கொல்லப்பட்டார் என்பதினும் அவர் கொல்லப்பட்டவிதம் சாமானிய மக்களை பெரும் வருத்தம் கொள்ளச் செய்திருந்தது என்பதை உணர முடிந்தது. வீட்டில் உள்ளோரின் வாக்குகள் பாபநாசத்தில் இருந்தன. தேர்தல் தினத்தன்று ஊரிலிருந்து திருச்சி பயணிகள் ரயிலேறி பாபநாசம் சென்று வாக்களித்தார்கள். நானும் உடன் சென்றிருந்தேன். வாக்குச் சாவடியெங்கும் ஆண்களும் பெண்களும் ராஜிவ் மீதான அனுதாபத்துடன் இருந்ததை உணர முடிந்தது. வாக்குச்சாவடியில் அத்தனை பேர் குழுமியிருந்தும் மிகையான ஒரு சத்தமும் ஒரு ஒலியும் இல்லை. குண்டூசி விழுந்தால் கேட்கக்கூடிய அளவுக்கு அமைதி. அது 1991ம் ஆண்டு. வாக்குச்சாவடிக்கு மக்கள் சைக்கிளிலோ அல்லது நடந்தோ வந்து அமைதியாக ராஜிவ்காந்திக்கு தங்கள் அனுதாபத்தை வாக்காகச் செலுத்தி விட்டு சென்றார்கள்.

ராஜிவ் கொலை செய்யப்பட்டதை கொலை செய்யப்பட்ட விதத்தை தமிழக மக்கள் மன்னிக்கவேயில்லை.

சாமானியத் தமிழர்கள் இலங்கை விவகாரங்களில் இந்தியா இனி தலையிட வேண்டாம் என எண்ணத் துவங்கினர். அவ்வாறு எண்ணிய தமிழ் மக்கள் மௌனப் பெரும்பான்மை.

ஒரு தசாப்தம் கடந்து சென்றது. இரண்டாயிரத்தை ஒட்டிய ஆண்டுகளில் இலங்கையில் அமைதிக்கான சில முயற்சிகள் நடப்பது இலங்கையில் உள்ள சாமானிய தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையைக் கொண்டு வந்தது. நார்வே சமரசத்தை முன்னெடுப்பதும் சமரசத் தூதர் எரிக் சோல்ஹைம் தீர்வுகளை உருவாக்குவதில் திறன் படைத்தவர் என்பதும் இலங்கையில் சாமானிய மக்கள் அமைதியாக வாழ ஒரு காலம் உருவாகும் என எண்ண வைத்தது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் புலிகளின் அரசியல் ஆலோசகரும் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகங்களை கூட்டாகச் சந்தித்த போது ‘’தேவைப்படின் தனி நாடு கோரிக்கையை கைவிடுவோம்’’ என்று சொன்னது இலங்கை விஷயத்தில் ஒரு தீர்வு உருவாகி விடும் என்று எண்ண வைத்தது. கல்லூரி மாணவனாயிருந்த போது அந்த நேர்காணலை தொலைக்காட்சியின் முன் காத்திருந்து பார்த்தது இப்போதும் நினைவில் இருக்கிறது.

ராஜிவ் படுகொலையின் கொடும் நினைவுகளிலிருந்து தமிழக மக்கள் மெல்ல நீங்கியிருந்தனர். அதே நேரம் விடுதலைப் புலிகளைத் தீவிரமாக ஆதரித்து பரப்புரையாற்றிக் கொண்டிருந்த தமிழகத்தின் சில அரசியல்வாதிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டாலும் ராஜிவ் ஒற்றை உயிர் தானே என்று என சொல்லிக் கொண்டேயிருந்தனர். உண்மைதான். ராஜிவ் ஒற்றை உயிர் தான். ஆனால் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் குடிகள் கோடிக்கணக்கானோர் அவர் மேல் அபிமானம் வைத்திருந்தார்கள். அது அளவைகளுக்குள் அடங்காதது ; ஆனால் உணரப்படக் கூடியது.  

எந்த அமைப்பும் எந்த அரசியல் முன்னெடுப்பும் எந்த அரசியல் நடவடிக்கையும் தன்னை காலத்தின் கைகளில் – எதிர்காலத்தின் கைகளில் ஒப்படைத்தவாறே நிகழ்கிறது. இன்ன செயல்திட்டம் இன்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மிகப் பெரும்பான்மையாக கணிக்க முடியுமே அன்றி முழுமையாக நிர்ணயித்துவிட முடியாது.

சர்வாதிகாரம் பேரழிவை மட்டுமே உண்டாக்குகிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட பின்னரும் சர்வாதிகார அமைப்புகள் அவற்றுக்கே உரிய வசீகரத்துடன் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன என்பது வரலாற்றின் நகைமுரண்.

சமீபத்தில் அகரமுதல்வன் எழுதிய ‘’கடவுள் பிசாசு நிலம்’’ வாசித்தேன். இரண்டாயிரமாவது ஆண்டை ஒட்டிய அமைதி முயற்சிகள் முதற்கொண்டு இலங்கை இறுதி யுத்தம் வரையிலான காலகட்டத்தின் நிகழ்வுகளை புனைவுக்கும் அபுனைவுக்கும் இடையே எழுதியிருந்தார். புஸ்பராஜா எழுதிய ‘’ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’’ செழியன் எழுதிய ‘’ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’’ தமிழினி எழுதிய ‘’கூர்வாளின் நிழலில்’’ ஆகிய இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட படைப்புகளை வாசித்திருக்கிறேன். அவற்றின் தொடர்ச்சியாக ‘’கடவுள் பிசாசு நிலம்’’ வாசித்தேன்.

வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்த எளிய மனிதர்களையும் அவர்கள் கனவுகளையும் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் புனைவும் அல்லாத அபுனைவும் அல்லாத புனைவுக்கும் அபுனைவுக்கும் மத்தியில் இருக்கும் ஒரு வடிவத்தில் எழுத்தாக்கியிருக்கிறார் அகரமுதல்வன். ஒரு எழுத்தாளனாக 2000 ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டு வரையான காலகட்டத்தை பிரதானமாகக் கொண்டு யாழ்ப்பாணத்தின் வன்னியின் கதையை சொல்ல முனைந்திருப்பது முக்கியமான ஒரு புனைவு உத்தி. அகரமுதல்வன் சொற்களால் உயிர் பெற்று எழுந்து வந்து மீண்டும் அவர் படைப்புக்குள் மரித்துப் போன அத்தனை பேருக்காகவும் மனம் வருத்தம் கொள்கிறது.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் சமாதானத்துடன் அல்லது குறைந்தபட்ச சமாதானத்துடன் , இணக்கத்துடன் அல்லது குறைந்தபட்ச இணக்கத்துடன் உலகெங்கும் வாழும் காலம் ஒன்று வரும். நமது எண்ணங்கள் விருப்பங்கள் செயல்கள் அதை நோக்கி நகரட்டும்.


Monday 30 January 2023

தீபங்கள் ஒளிரும் ஆலயம்

இந்திய மரபில் , தீபங்கள் ஏற்றப்படுவது ஓர் அடிப்படையான நற்செயலாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கருதப்படுகிறது. மானுட குலத்தின் வாழ்வின் பெரும் நீளத்தில் தன் வாழிடத்தை தீயினை சிறு தீபமாக ஏற்றி ஒளி கொண்டது மிக முக்கியமான முன்னெடுப்பு ; மானுடப் பிரக்ஞையில் மிக முக்கியமான தாவல். உலகின் எல்லா சமூகங்களுக்குமே தீபம் ஏற்றும் வழக்கம் இருந்திருக்கிறது.  

தீபம் ஏற்றுவது அல்லது தீபங்கள் ஏற்றுவது ஓர் குறியீட்டுச் செயல்பாடு. உடல் மன ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது. இந்தியாவில் தீபம் ஏற்ற நல்லெண்ணெய், இலுப்பையெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவற்றைப் பயன்படுத்துவார்கள். தீபம் ஏற்ற பயன்படும் இந்த நான்கு பொருட்களும் விவசாய விளைபொருட்கள். ஆலயங்களில் தீபங்கள் அதிகம் ஏற்றப்பட்டால் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயிகளுக்குப் பயன் தரும். 

தமிழ்நாட்டின் சிற்றாலயங்களும் பேராலயங்களும் குறிப்பிட்ட ஆகம விதிப்படி அமைக்கப்பட்டவை. இறையுரு வீற்றிருக்கும் இடத்தை  கர்ப்பகிருகம் என்கிறது ஆலய ஆகமம். கர்ப்பகிருகம் நுண்மையானது. நுட்பமானது. அங்கே அதிக அளவில் தீபங்கள் ஒளிர வேண்டும் என வகுத்துள்ளது ஆகம மரபு. மேலும் முழு ஆலயமும் கூட தீபங்களால் ஒளிர வேண்டும் என்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் வழிபாட்டை தீபம் ஏற்றி செய்ய வேண்டும் என்பது ஒரு மரபு. தமிழ்நாட்டின் பல பெரு ஆலயங்களில் தமிழ்நாட்டை ஆண்ட மாமன்னர்கள் தங்கள் சொந்த நன்கொடையில் தீபக்கட்டளைகளை நிறுவி உள்ளனர். பல கல்வெட்டுகளின் வாசகங்கள் ஆலயத்தில் தீபம் ஏற்றப்படுவதை அவர்கள் எத்தனை உணர்ச்சிகரமாக எண்ணியுள்ளனர் என்பதைத் தெரிவிக்கிறது. 

செயல் புரியும் ஆலயத்தில் ஒரு விஷ்ணு ஆலயம் உள்ளது. அது ஒரு சிற்றாலயம். வயோதிகரான எனது நண்பர் ஒருவர் அந்த ஆலயத்தைப் பராமரிக்கிறார். ஒவ்வொரு மாதமும் ஏகாதசிக்கு சிறப்பு வழிபாடுகளை ஆலயத்தில் முன்னெடுப்பார். அவரிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளேன். 

கிராமத்தின் சிற்றாலயத்தை 48 நாட்கள் முழுமையாக தீப ஒளியில் மட்டும் ஒளிர வைப்பது. ஆலயத்தின் கருவறையில் முழுமையாக தீபங்கள் மட்டுமே ஏற்றப்பட்டிருக்கும். ஆலயம் முழுமையும் தீபங்கள் ஒளிரும். மின்விளக்குகள் இன்றி முழுமையாக தீபங்கள் மட்டுமே இருக்கும் வகையில் ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளேன். 

இவ்விதமான முன்னெடுப்புகள் விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் நேரடியாகவே பயன் அளிப்பது. ஆலயத்தின் செயல்பாடுகளில் பொதுமக்கள் பெருமளவில் இணைந்து கொள்ள உதவி புரிவது. நுண் அழகியல் தன்மை கொண்டது. 

Sunday 29 January 2023

ஓர் எண்ணம் ஒரு செயல்

ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் மந்த்ராலயத்தில் ஒரு நடைமுறை உண்டு. அந்த நடைமுறையை நான் நேரடியாகக் கண்டு பயன்படுத்தியிருக்கிறேன். அதாவது, அங்கே யாத்ரிகளுக்கான யாத்ரி நிவாஸ் உண்டு. மந்த்ராலய நிர்வாகமே அதனை நடத்துகிறார்கள். அந்த யாத்ரி நிவாஸ் என்பது ஒரு பெரிய கூடம். அதன் ஒரு பகுதியில் கதவுடன் கூடிய சிறு கூண்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். அவை பூட்டிக் கொள்ளும் விதத்தில் அமைந்திருக்கும். 

யாத்ரி நிவாஸுக்கு செல்லும் யாத்ரிகர்கள் அங்கே தங்கிக் கொள்ள கட்டணம் ஏதும் கிடையாது. நிவாஸுக்கு சென்றதும் அவர்களுக்கு ஒரு பூட்டும் சாவியும் வழங்கப்படும். தரமான கோத்ரெஜ் பூட்டை வழங்குவார்கள். அந்த பூட்டுக்கும் சாவிக்கும் ரூ.300 வசூல் செய்யப்படும். யாத்ரிகர்கள் தங்கள் பயணப்பைகளை அந்த கூண்டுகளில் வைத்து பூட்டிக் கொள்ளலாம். இரவு 9 மணிக்கு அவர்களுக்கு ஒரு பாயும் தலையணையும் ஒரு போர்வையும் வழங்கப்படும். அவர்கள் அதைப் பயன்படுத்தி உறங்கலாம். காலை 5 மணிக்கு அவற்றைத் திருப்பி வழங்கி விட வேண்டும். மிகத் தூய்மையாக பராமரிக்கப்படும் குளியலறைகள் கூடத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இரண்டு மூன்று நாட்கள் இதே விதத்தில் தங்கி விட்டு அவர்கள் புறப்படும் போது பூட்டையும் சாவியையும் திரும்ப ஒப்படைக்கும் போது ரூ.300 அவர்களுக்கு திரும்பத் தரப்படும். அதாவது அவர்கள் யாத்ரி நிவாஸில் தங்கியதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. பூட்டைத் தொலைத்து விடக் கூடாது என்பதற்காகவே ஒரு முன்பணம். பூட்டைத் திரும்ப தந்ததும் அந்த பணமும் திருப்பித் தந்து விடுவார்கள். ஆயிரக்கணக்கானோர் இந்த முறையைப் பயன்படுத்தி அங்கே தங்கியிருப்பார்கள். மந்த்ராலய ஆலயத்திலேயே தினமும் இருவேளை அன்ன தானம் வழங்குவார்கள். மதியம் 12 மணிக்கு இரவு 7 மணிக்கு . மக்கள் அனைவரும் ஆலய அன்னதானம் உண்டு யாத்ரி நிவாஸில் தங்கியிருப்பார்கள். எல்லாம் துல்லியமாக பிசிரின்றி நடக்கும். மக்கள் குடும்பம் குடும்பமாக அங்கே இருப்பார்கள். எல்லாருமே ஸ்வாமியை சேவிக்க வந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் ஒரு இணக்கமும் பிரியமும் இருப்பதைக் கண்டேன். நான் தங்கியிருந்த போது வேலூரிலிருந்து நண்பர்கள் சிலர் ரயிலில் அங்கே வந்திருந்தனர். இளைஞர்கள். மாதம் ஒருமுறை இதே போன்று ஸ்தலங்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள். ஒரே கூடத்தில் இரண்டு நாட்கள் இருந்ததால் அந்த இரண்டு நாட்களும் அவர்களுடன் நல்ல பரிச்சயமாகி அவ்வப்போது உரையாடிக் கொண்டிருந்தேன். மந்த்ராலயம், பண்டரிபுரம், மதுரா ஆகிய தலங்களுக்கு அடிக்கடி செல்வோம் என்று கூறினார்கள். அவர்கள் ஒரு டிராவல்ஸ் வைத்திருப்பதாகக் கூறினார்கள். ஆறு கார் அவர்களிடம் உள்ளது என்று சொன்னார்கள். எனினும் தலயாத்திரையை ரயிலில் மேற்கொள்வோம் அது சிக்கனமானது என்பதால் என்று கூறினார்கள். அவர்களுக்கு ராகவேந்திர சுவாமி மீது பக்தி அதிகம். எனவே அடிக்கடி மந்த்ராலயமும் வேலூர் பல வட இந்திய நகரங்களுக்குச் செல்லும் ரயில்களின் பாதையில் இருப்பதால் பண்டரிபுரமும் மதுராவும் ஊரிலிருந்து கிளம்புவது எளிது என்றும் தெரிவித்தார்கள். வட இந்தியா வந்து பரிச்சயம் இருப்பதால் வேலூரிலிருந்து பலரை காரில் ஷேத்ராடனமாக காசி வரை வழியில் உள்ள தலங்களை சேவிக்க வைத்து டிராவல்ஸ் மூலமாக அழைத்துச் செல்வதும் உண்டு என்று சொன்னார்கள்.  

என்னுடைய இந்தியா என்பது இத்தகைய சாதாரண மக்களிடம் நான் உணர்ந்த நம்பிக்கையும் ஆர்வமும் தான். இந்த மண் பெரும் மகத்துவங்களை தனது மிக எளிய மனிதர்களுக்கும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வழங்கி வருகிறது. 

அந்த நண்பர்களிடம் நீங்கள் ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் பிறந்த ஊரான புவனகிரிக்கும் அவர் கல்வி பயின்ற கும்பகோணத்துக்கும் வந்திருக்கிறீர்களா என்று கேட்டேன். டிராவல்ஸ் சவாரி மூலம் அடிக்கடி கும்பகோணம் வருவோம் என்று சொன்னார்கள். எனது ஊர் கும்பகோணத்துக்கும் பக்கம் ; புவனகிரிக்கும் பக்கம் என்பதை அறிந்து அவர்களுக்கு மகிழ்ச்சி. 

சமீபத்தில் எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. எனக்கு ஒரு விஷயம் குறித்து சிந்திப்பது பிடிக்கும். புதிதாக சிந்திப்பது என்பது உற்சாகமளிக்கும் ஒரு செயல். தமிழ்நாட்டில் பொதுவாக புதிதாக சிந்தித்துப் பார்ப்பதற்கு புதிதாக செயல்படுத்திப் பார்ப்பதற்கான ஆர்வம் குறைவாக இருக்கும். அதற்கான காரணங்கள் பல. அவற்றைக் குறித்தும் சிந்தித்திருக்கிறேன். இருப்பதை மாற்றாமல் இருப்பது என்னும் வழக்கத்தை இங்கே உள்ள மக்கள் தங்கள் வழமையாகக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள் என்ன செய்வது என்று யோசிப்பார்கள். குறுகிய வட்டத்துக்குள் ஒன்றைச் செய்வது கடினம் என்பதால் சாத்தியமின்மையை ஒரு காரணமாகக் கூறி அப்படியே விட்டு விடுவார்கள். 

கட்டுமானத் துறையில் இருப்பதால் தமிழ்நாட்டில் நிகழும் தலயாத்திரை குறித்து ஒரு விஷயத்தை அவதானித்தேன். அதாவது , இங்கே திருத்தலங்களில் உள்ள தங்குமிடங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.2500 வரை கட்டணம் இருக்கிறது. இந்த தொகை ஒப்பு நோக்க அதிகம் . ஒரு குடும்பம் இரண்டு நாட்கள் ஒரு தலத்தில் தங்குகிறது என்றால் இரண்டு அறைகள் அவர்கள் வாடகைக்கு எடுத்தால் ரூ. 4000 வரை செலவு செய்ய நேரிடும். நடுத்தர குடும்பத்தினருக்கு இந்த தொகை அவர்கள் மாத வரவு செலவில் கணிசமானது. தொலைவில் உள்ள திருத்தலத்துக்கு அவர்கள் வந்து சேர வாகனச் செலவும் இருக்கிறது. ரயிலோ அல்லது மோட்டார் வாகனமோ பயன்படுத்தினால் அதற்கு ரூ. 4000 ஆகிறது என்றால் ஒரு குடும்பத்துக்கு ஒரு திருத்தல யாத்திரை செய்ய ரூ.8000 ஆகி விடும். அதனால் தான் பல குடும்பங்கள் வருடத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ மட்டுமே யாத்திரை செய்ய நேரிடுகிறது. 

வைத்தீஸ்வரன் கோவிலை மையமாக வைத்து எனக்கு ஒரு யோசனை தோன்றியது. வைத்தீஸ்வரன் கோவில் பல தமிழ்க் குடும்பங்களுக்கு குலதெய்வம். சென்னை தொடங்கி மதுரை வரை பல தமிழ்க் குடும்பங்கள் தங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு முதல் முடி வைத்தீஸ்வரன் கோவிலில் தான் எடுப்பார்கள். குடும்பத்தில் எவரும் நோய்வாய்ப்பட்டால் வைத்தீஸ்வரன் கோவில் வந்து வைத்தீஸ்வரனான சிவனையும் தையல்நாயகி அன்னையையும் வணங்கி நோய் நீக்க வேண்டிக் கொள்வார்கள். தமிழ்நாட்டின் மிக முக்கியமான முருகன் கோயில்களில் ஒன்று வைத்தீஸ்வரன் கோவில். குமரகுருபரர் ‘’முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்’’ பாடியது இங்கே கோயில் கொண்டுள்ள முருகனை நோக்கித்தான். நாட்டுக்கோட்டை நகராத்தார் குடும்பங்களில் பலருக்கு முத்துக்குமாரசுவாமியே குல தெய்வம். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் காரைக்குடியிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வருவார்கள். 

வைத்தீஸ்வரன் கோவில் வரும் யாத்ரிகர்களுக்காக ஒரு விஷயம் செய்ய முடியுமா என்று ஒரு யோசனை தோன்றியது. அதாவது, ஒரு தங்கும் விடுதி கட்ட வேண்டும் என்றால் அதற்கு செலவு அதிகம் ஆகும். அதாவது, 10,000 சதுர அடி கொண்ட ஒரு விடுதியைக் கட்ட ஒன்றரை கோடி ரூபாய் செலவாகும். அது கொஞ்சம் பெரிய பட்ஜெட். அவ்வளவு செலவைக் கோராத ஒரு யோசனை எனக்கு தோன்றியது. 

ஐந்து ஏக்கர் நிலம் . கோவிலுக்குச் சொந்தமானது. (வைத்தியநாத சுவாமி தேவஸ்தானம் தமிழ்நாடு அரசின் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை ; அது தனியான தேவஸ்தானம்)  வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான நிலம் ஆயிரக்கணக்கில் உள்ளது. அவற்றில் ஐந்து ஏக்கர். கிட்டத்தட்ட 2,20,000 சதுர அடி நிலம். இந்த நிலத்தில் அழகியல் உணர்வுடன் வடிவமைக்கப்பட்ட 1000 குடில்களை அமைக்க முடியும். ஒவ்வொன்றும் 150 சதுர அடி அளவு கொண்டவை. தென்னை ஓலைகளால் அமைக்கப்பட்டவை. அந்த குடிலின் உள்ளே மின்சார விசிறி, மின் விளக்குகள் ஆகியவற்றை அமைத்துக் கொள்ளலாம். எளிய வசதிகள். அந்த வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய குளியல் வசதிகளை ஏற்படுத்தித் தரலாம். ஒவ்வொரு குடிலுக்கும் ஒருநாள் வாடகையாக ரூ.100 அல்லது ரூ.200 நிர்ணயிக்கலாம். இந்த யாத்ரிகர்கள் ஆலய சேவைகளில் பங்கெடுத்துக் கொள்ள அவர்களுக்குத் தேவையான திரவியங்களை அங்கிருக்கும் அங்காடி மூலம் நியாயமான விலைக்கு வழங்கலாம். 

ஒரு நாளில் ஐயாயிரம் யாத்ரிகர்கள் திருப்தியுடன் ஆலய வழிபாடு செய்யவும் ஒரே ஆண்டில் மீண்டும் மீண்டும் ஆலயத்துக்கு வந்து அந்த ஆலயத்துடனான உணர்வுபூர்வமான தொடர்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும் உதவும். 

இந்த யோசனை எனக்கு சென்ற வாரம் தோன்றியது. மந்த்ராலயம் யாத்ரி நிவாஸ் குறித்த மனச்சித்திரமே இந்த யோசனைக்கு அடிப்படை. இந்த யோசனை தோன்றிய ஓரிரு நாளில் ஆகாசவாணி வானொலியில் ஒரு செய்தியைக் கேட்டேன். அதாவது காசி நகரில் ‘’டெண்ட் சிட்டி’’ என கூடாரங்களால் ஆன ஒரு தங்குமிடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கான்கிரீட் கட்டுமானம் இல்லாமல் முழுக்க முழுக்க கூடாரத்துணியால் அமைக்கப்பட்ட கூடாரங்களால் ஆன தங்குமிடங்கள். 


தமிழ்நாட்டில் ஷேத்ராடனங்கள் மேலும் அதிக அளவில் நிகழ அதன் மூலம் நிகழும் சுற்றுலா மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க சகாயமான விலை கொண்ட எளிய தங்குமிடங்கள் மிக முக்கியமான அவசியத் தேவைகள். 

நாடெங்கும் இருந்து யாத்ரிகர்கள் வருகை புரியும் ராமேஸ்வரத்தில் கூட இவ்வாறான ஒரு ‘’கூடார நகரத்தை’’ அமைக்கலாம். 

Saturday 28 January 2023

காவிரி போற்றுதும் - இந்த ஆண்டின் பணிகள்

’’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. ஒரு நுண் அமைப்புக்குரிய வலிமைகளையும் எல்லைகளையும் தன்னகத்தே கொண்டது. வலிமையை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதும் எல்லைகளை விரிவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் அதன் விருப்பங்கள்.  

நுண் அமைப்பாயினும் அதன் முன் பணிகள் பல வந்து சேர்ந்து கொண்டேயிருக்கின்றன. பல பணிகள் வந்து சேர்கின்றன என்பதற்கு மகிழ்ந்தாலும் அத்தனையையும் ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் நமக்கு இருக்கத்தான் செய்கிறது. 

இந்த ஆண்டு ‘’காவிரி போற்றுதும்’’ குறைந்தபட்சமாக சில பணிகளை முழுமையாக நிறைவேற்ற விரும்புகிறது. அவற்றைப் பட்டியலிட்டுக் கொள்வதும் அது குறித்த எண்ணங்களை நண்பர்கள் முன்வைப்பதும் அவற்றைக் குறித்து புறவயமாக சிந்திக்க உதவும் என எண்ணுகிறேன். 

1. இந்த உலகம் ஒரு மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடம்

சுவாமி விவேகானந்தர் கூறுவார் ; ‘’இந்த உலகம் ஒரு மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடம். இங்கே நாம் நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக் கொள்ளவே வந்திருக்கிறோம்’’ . 

செயல் புரியும் கிராமத்தில் உள்ள 3 வயதிலிருந்து 13 வயது வரையிலான எல்லா குழந்தைகளுக்கும் அவர்கள் விரும்பும் விளையாட்டு உபகரணங்களை வழங்க ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு முன்னெடுப்பை மேற்கொள்கிறது. விளையாடும் போது குழந்தைகள் மகிழ்கிறார்கள். எல்லா குழந்தைகளையும் கிருஷ்ண சொரூபம் என்கிறது இந்திய மரபு. குழந்தைகள் அடையும் மகிழ்ச்சி என்பது தெய்வங்கள் அடையும் மகிழ்ச்சியே. 

ஏப்ரல் மாதம் முழு ஆண்டுத் தேர்வு நிறைவுற்று கோடை விடுமுறை குழந்தைகளுக்குத் தொடங்கும். அந்த காலகட்டம் விளையாட்டு உபகரணங்களை வழங்க ஏதுவாக இருக்கும் என எண்ணுகிறேன். ரிங் பால், வாலிபால், ஃபுட்பால், ஷெட்டில் காக், கிரிக்கெட் பேட் & பால் ஆகியவையே விளையாட்டு உபகரணங்கள். அனைத்தும் மைதானத்தில் ஆடும் விளையாட்டுகள். குழந்தைகளின் உடல் வலிமை பெற உதவுபவை என்பதால் இவை சரியான தேர்வாக இருக்கும் என எண்ணுகிறேன். 

2. ஏழைக்கு எழுத்தறிவித்தல்

காவிரி வடிநிலப் பகுதிகளில் சிக்கல்களில் ஒன்றாக நான் எண்ணுவது அவர்கள் தங்கள் கிராமத்தை விட்டு வேறு வாய்ப்புகள் நோக்கி செல்ல அவர்களுக்கு பலவிதமான தடைகள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது மொழித்தடை. அவர்களுக்கு ஹிந்தி குறைந்தபட்ச பரிச்சயம் கூட இல்லாமல் இருப்பதால் அவர்கள் வெளிநாடு செல்லலாம் என எண்ணினால் கூட மும்பையைக் கடப்பது என்பது பெரும் தயக்கமாக மாறி விடுகிறது. 

நான் கூறும் விஷயம் நடைமுறை சார்ந்தது. நேரடியாக மக்களிடம் கேட்டு அறிந்தது. ஒரு கிராமத்தில் மக்கள்தொகை 5000 இருக்கிறது எனில் அதில் 30 பேர் வெளிநாடு சென்றிருப்பார்கள். ஆனால் வெளிநாடு செல்ல சாத்தியம் உள்ள எண்ணிக்கை 100 என இருக்கும். தயக்கத்தின் காரணமாக அந்த 70 பேர் செல்லாமல் இருப்பார்கள். அந்த 70 பேரும் ஏழைக்குடும்பங்களைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். 

‘’காவிரி போற்றுதும்’’ அந்த 70 குடும்பத்தினரை முதன்மையாக நினைக்கிறது. அவர்களுக்கு ஹிந்தி மொழி தெரியும் என்பது ஒரு தன்னம்பிக்கையை அளிக்கும் என்றால் அதற்கான பணியை தன் பணியாக நினைக்கிறது ‘’காவிரி போற்றுதும்’’ 

செயல் புரியும் கிராமத்தில் உள்ள ஆர்வமுள்ள எல்லா குழந்தைகளுக்கும் ஹிந்தியை ‘’வித்யா தானம்’’ ஆக வழங்க ‘’காவிரி போற்றுதும்’’ முடிவு செய்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கும் போது கிராமத்தில் ஹிந்தி வகுப்புகளையும் துவங்க முயற்சிகள் நடக்கின்றன. 

3. விளையும் பயிர்

சிறிய அளவில் ‘’காவிரி போற்றுதும்’’ கிராம மக்களுக்கு வழங்கும் விருட்சங்களை உருவாக்குவதற்கு ஒரு நர்சரியை உருவாக்க எண்ணம் உள்ளது. 

4. விண்மீன் விருட்சங்கள்

எனது நண்பர் ஒருவர் ஒரு கிராமத்தில் உள்ள எல்லா குடும்பத்தினருக்கும் அவர்கள் பிறவி விண்மீனுக்கு உரிய விருட்சங்களை வழங்க விருப்பம் தெரிவித்தார். பிறவி விண்மீன்கள் அஸ்வினி தொடங்கி ரோகிணி ஈறாக 27. ஒரு கிராமத்தில் 27 விதமான விருட்சங்கள் இருப்பது கிராமத்தின் பல்லுயிர் பெருக்கத்துக்கும் நலத்துக்கும் உகந்தது. 

கணக்கெடுப்பு எடுத்து விட்டேன். நண்பர் மிகவும் ஆர்வத்துடன் இது எப்போது நிறைவேறும் என எண்ணிக் கொண்டிருக்கிறார்.  அந்த கிராமத்தின் மக்களும் விருட்சங்களை ஆவலுடன் எதிர் நோக்கி அலைபேசியில் அழைத்து விபரம் கேட்கிறார்கள். 

கூடிய விரைவில் நண்பரின் விருப்பமும் மக்களின் விருப்பமும் நிறைவேறும். 

5. ஒவ்வொரு விவசாயிக்கும் 20 தேக்கு மரங்கள்

ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் 20 தேக்கு மரக் கன்றுகள் வழங்குவது என்பது ‘’காவிரி போற்றுதும்’’ முதன்மைப் பணி. வழங்குவதுடன் நம் பணி நிறைவு பெற்று விடாது என ‘’காவிரி போற்றுதும்’’ எண்ணுகிறது. செயல் புரியும் கிராமத்தின் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் தேக்கு மரங்களால் முழுமையான பொருளாதாரப் பயன் கிட்டும் போது மட்டுமே நாம் எண்ணியது நிறைவு பெறும். அதை நோக்கி நாம் சென்று கொண்டேயிருப்போம். 

இலக்கிய வாசகர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. அதாவது, ஒரு கட்டத்தில் அவர்கள் வாங்கி ஆனால் வாசிக்காமல் இருக்கும் நூல்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது முன்னர் வாங்கிய நூல்களை வாசித்து விட்டு அதன் பின்னர் புதிய நூல்கள் வாங்கலாம் என சில காலம் எண்ணுவார்கள். அதன் பின்னர் நூல் வாசிப்பதைப் போன்று புதிய நூல்கள் வாங்குவதும் ஒரு மகிழ்ச்சியான செயல். ஒரு வாசகன் புதிதாக நூல் ஒன்றை வாங்கும் மகிழ்ச்சியை இழக்கக்கூடாது என்ற முடிவுக்கு வருவார்கள். 

மேலே குறிப்பிட்ட ஐந்து பணிகளும் அடிப்படைப் பணிகள். புதிதாக ஏதும் செய்ய நேர்ந்தாலும் அவற்றுக்கும் திறந்த மனத்துடன் இருக்க ‘’காவிரி போற்றுதும்’’ விரும்புகிறது. 

நாம் வளர விரும்புகிறோம். சாத்தியமான எல்லா வழிகளிலும். 

மன்னிப்பும் வேண்டுகோளும்

நண்பர்களிடம் ஒரு விஷயத்தில் மன்னிப்பைக் கோர விரும்புகிறேன். 

Men and Machine Relationship என்று சொல்வார்கள். எந்திரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு குறித்த சொற்றொடர் அது. எந்த ஒரு எந்திரத்துக்கும் அதைப் பயன்படுத்தும் மனிதனுக்கும் இடையே ஒரு சீரான உறவு இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த மனிதன் அதனை இலகுவாகப் பயன்படுத்துவான். ஒரு சைக்கிள் ஒரு மனிதனிடம் இருந்தாலோ ஒரு நகவெட்டி ஒரு மனிதனிடம் இருந்தாலோ அது வடிவமைக்கப்பட்ட விதத்துக்கும் ஒரு மனிதனின் மன அமைப்புக்கும் இடையே சில தொடர்பு புள்ளிகள் இருந்தாக வேண்டும். அவ்விதம் இருந்தால் Men and Machine Relationship நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். அவ்விதம் இல்லாமல் போனால் Men and Machine Relationship  சரியாக இல்லை என்று அர்த்தம். 

எனக்கும் அலைபேசிக்குமான உறவு இணக்கமாக இல்லை. அதற்கு எனது மனநிலையும் மன அமைப்பும் முக்கிய காரணம். இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றைக் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். 

1. முதல் விஷயமாக நான் சொல்லிவிடுகிறேன். நான் அலைபேசிக்கு எதிரானவன் அல்ல. எனக்கு அலைபேசி பயன்பாடு உவப்பானதாக இல்லை. அவ்வளவுதான். அடுத்து என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை. ஏன் என்றால் ஜி.எஸ்.எம் அலைபேசியையை லகுவாக உணராத நான் எங்ஙனம் ஸ்மார்ட்ஃபோனை லகுவாக உணர இயலும் என்பதே. 

2. நான் வீட்டில் இருக்கும் போது ஒரு மனநிலையில் இருப்பேன். பைக்கில் செல்லும் போது சற்று ஆசுவாசமான மனநிலையில் இருப்பேன். வெளியூர் சென்றால் முழுமையாக அந்த ஊரின் சூழ்நிலையில் கலந்திருக்க வேண்டும் என எண்ணுவேன். ரயிலில் பயணித்தால் இயற்கைக் காட்சிகளைக் காண நினைப்பேன். பேருந்து பயணம் என்றால் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டு மரங்களையும் பயிர்களையும் மக்களையும் காண நினைப்பேன். அலைபேசி இதைப் போன்ற விஷயங்களில் என் மனநிலையை மாற்றியமைக்கக் கூடும் என்பதால் நான் கையில் எடுத்துச் செல்வதை விரும்ப மாட்டேன். 

3. கையில் எடுத்துச் செல்லாமல் இருப்பதற்கு ஏன் அலைபேசி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழலாம். அது ஒரு நல்ல கேள்வி. அதே கேள்வி எனக்கும் இருக்கிறது. அலைபேசியைத் துறந்து விடுவது குறித்து பல நாள் யோசித்திருக்கிறேன். அனேகமாக இன்னும் சில நாட்களில் அது நிகழ்ந்தாலும் நிகழக் கூடும். 

4. என்னுடைய தொழில் சார்ந்து பணியாளர்களுடனான தொடர்புக்கே அலைபேசி தேவை. அதற்கு என்னிடம் அலைபேசி இருக்க வேண்டும் என்பது அவ்வளவு முக்கியம் இல்லை. அவர்களிடம் அலைபேசி இருக்க வேண்டும் என்பதே முக்கியம். அலுவலக தரைவழித் தொடர்பு தொலைபேசி மூலம் அவர்களைத் தொடர்பு கொண்டு விட முடியும். 

5. ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அலைபேசியை அணைத்து வைத்திருப்பேன். அது என் பழக்கம். உளச்சிதறல் இன்றி உரையாடல் நிகழ அது உதவுகிறது என்பது என் அனுப்வம். இரு சக்கர வாகனத்தில் செல்லும் போதும் கார் ஓட்டும் போதும் அலைபேசியை அணைத்து வைத்திருப்பேன். சாலை பாதுகாப்பு மற்றும் எனது பாதுகாப்புக்காக. 

6. தொலைபேசியுடன் என்னால் சகஜமாக இருக்க முடியும் அளவு அலைபேசியுடன் என்னால் சகஜமாக இருக்க முடியவில்லை. தொலைபேசியை பத்து வயது முதல் பயன்படுத்தியிருக்கிறேன். அதன் மீது எந்த புகாரும் எனக்கு இல்லை. 

7. நண்பர்களிடம் கேட்டுக் கொள்வது ஒன்றுதான். என் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தால் ஒரு குறுஞ்செய்தி அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். குறுஞ்செய்தியைப் பார்த்து விட்டு நான் திரும்ப அழைப்பேன். 

8. எல்லா உபகரணங்களையும் போல அலைபேசி எனக்கு ஒரு உபகரணமே. என் பணிகளை நான் அதன் தேவை பெரும்பான்மையாக இருக்கும் விதத்தில் நான் வடிவமைத்துக் கொள்வதில்லை. இயல்பாக எனக்கு அவ்வாறு அமைந்து விட்டது. 

9. என் பணிகளைக் கூடுமானவரை காலக்கெடுவுக்கு உட்பட்டு செய்கிறேன். நேரம் தவறாமை என்பதையும் எப்போதும் கடைப்பிடிக்கிறேன். நான் பழகும் எவரிடமும் எனக்கு தகவல் தொடர்பு இடைவெளி இல்லை. 

அலைபேசிக்கு நான் பழகாததை மன்னிக்குமாறு நண்பர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். 

Friday 27 January 2023

ஒரு வட்டம்

இன்று காலை 9.45 அளவில் ஊரிலிருந்து 20 கி.மீ வடக்கில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்குப் புறப்பட்டேன். என்னுடைய பைக் சைலன்ஸரில் ஒரு சிறு குறைபாடு. பட்டறைக்குச் சென்று அதனை சரி செய்து விட்டு புறப்பட்டேன். சாலைகளில் வாகனங்கள் பெருகி விட்டன. பேருந்துகளை எப்போதாவது ஒன்றும் நான்கு சக்கர வாகனங்களை நிமிடங்களுக்கு ஒன்று என்றும் எதிர்கொள்ள நேரிடுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததற்கு இப்போது மாநில அரசுப் பேருந்துகள் பல குறைக்கப்பட்டு விட்டன என்பதை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். இரு சக்கர நான்கு சக்கர வாகனப் பெருக்கத்தை எந்த சாலையைக் கண்டாலும் உணர்ந்து கொள்ள முடிகிறது. வாகனங்கள் பெருகியிருப்பதால் சாலைகளை அகலமாக்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. பல சாலைகள் அடையாளம் தெரியாத அளவுக்கு அகலமாகி இருக்கின்றன. ஜி.எஸ்.டி மூலம் மத்திய அரசுக்குக் கிடைக்கும் வருவாய் மாநிலங்களில் உள்கட்டுமானங்களாக மாறுகின்றன. 

காலை 10.15 மணி அளவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்றேன். வருவாய் கோட்டாட்சியரின் ஜீப் நின்று கொண்டிருந்தது. அலுவலகத்தில் கோட்டாட்சியரின் நேரடி உதவியாளர் இருக்கையில் இல்லை ; மாவட்டத் தலைமையிடத்துக்குச் சென்றிருப்பதாகக் கூறினார்கள். வருவாய் கோட்டாட்சியர் விடுப்பில் உள்ளதாகத் தெரிவித்தார்கள். அலுவகத்தின் ஊழியர்களிடம் மரங்கள் வெட்டப்பட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதனை தடுத்து நிறுத்துங்கள் என்று சொன்னேன். கோட்டாட்சியரின் நேரடி உதவியாளருக்கு அலைபேசியில் அழைத்து விபரம் சொன்னார்கள். அவர் வட்டாட்சியர் அலுவலகம் சென்று அங்கே தகவல் தெரிவிக்குமாறு கூறினார். அங்கிருந்த ஊழியர்களிடம் நான் நேராகச் சென்|று விபரம் சொல்கிறேன் ; நீங்களும் ஒரு ஃபோன் செய்யுங்கள். மேலிடத்திற்கு விபரம் தெரியும் என்றால் நடவடிக்கைகள் துரிதமாக இருக்கும் என்று சொன்னேன். 

உண்மையில் அவ்வாறான நுண்ணுணர்வுகள் அரசு அலுவலர்களுக்கு இருப்பதில்லை ; 99.99 % சதவீதத்தினருக்கு இருப்பது இல்லை. நான் சந்தித்த அலுவலர் மீதி உள்ள 0.01 % சதவீதத்தில் ஒருவர். அதனால் தான் அந்த அளவு அக்கறை எடுத்துக் கொண்டு ஃபோன் மூலம் தன் அதிகாரியிடம் பேசினார். திங்கள்கிழமை அன்று மனு நீதி நாள். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருப்பார். அன்று வந்து விஷயத்தை நேரடியாகச் சொல்லுங்கள் என்று கூறினார். இரண்டு நாட்களுக்குள் எதுவும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காகவே வந்ததாகச் சொன்னேன். நான் சென்ற போது நேற்று அனுப்பிய மனு அவர்களை வந்தடைந்திருக்கவில்லை. தபால் வர காலை 11 மணி ஆகும் என்றார்கள். தபால் கண்டதும் இவ்வாறு ஒரு தபால் வந்திருப்பதாக கிராம நிர்வாக அதிகாரிக்குத் தெரிவியுங்கள் என்று கூறினேன். 

வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தெற்கே முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கோட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரின் அலைபேசி எண்ணை அளித்தார்கள். எனினும் நேரடியாக செல்வதென்று முடிவு செய்தேன். வட்டாட்சியரைச் சந்திக்க முடியாவிட்டாலும் அந்த அலுவலகத்தினரையாவது சந்தித்து விபரம் கூறலாம் என முடிவு செய்து அங்கே சென்றேன். விஷயத்தைச் சொன்னேன். குளக்கரையில் இருக்கும் மரங்களின் புகைப்படங்களைப் பார்த்தார்கள். அவற்றைக் காக்குமாறு கேட்டுக் கொண்டேன். கிராம நிர்வாக அதிகாரிக்கும் மனு அனுப்பியிருப்பதையும் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியருக்கும் மனு அனுப்பப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டினேன். 

மரங்கள் காக்கப்படும் என்ற நம்பிக்கை உண்டானது. 

25 கி.மீ மேற்கு திசையில் பயணித்து ஊர் வந்து சேர்ந்தேன். வட கிழக்கு, தெற்கு, மேற்கு என நான்கு திசைகளில் பயணித்து மீண்டும் துவங்கிய இடத்துக்கு வந்து சேர்ந்தேன். 

Thursday 26 January 2023

நாட்டிற்குழைத்தல்

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல்- உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நம்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்

-பாரதி


இன்று காலை 14 மரங்கள் வெட்டப்பட்ட கிராமத்திலிருந்து ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. 14 மரங்கள் வெட்டப்பட்ட கிராமத்தின் அதே வீதியில் உள்ள குளத்தின் கரையில் இருக்கும் நன்கு வளர்ந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் வயது கொண்ட இலுப்பை மற்றும் வேப்ப மரங்களை வெட்ட சிலர் முனைவதாக அந்த அலைபேசி அழைப்பு தெரிவித்தது. குளத்தின் கரையில் இருக்கும் செழித்து வளர்ந்த மரங்கள் அவை. அவற்றைக் காக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். செய்தி கேள்விப்பட்ட உடன் அந்த மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு ஒரு மனுவை தயார் செய்தேன். அந்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு அனுப்பப்பட வேண்டும். இன்று குடியரசு தினம் என்பதால் அரசு விடுமுறை. தபால் அலுவலகம் இருக்காது. ரயில்வே அஞ்சல் நிலையம் மாலை 6 மணியிலிருந்து செயல்படத் துவங்கும். அங்கு சென்று மனுக்களை அனுப்ப வேண்டும். நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கும் நேரில் சென்று மனுக்களின் நகல்களைக் கொடுத்து விட்டு விஷயத்தை நேரடியாக விளக்கி விட்டு வர வேண்டும். தேவைப்படுமென்றால் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி மரங்கள் வெட்டப்படாமல் இருக்க ஒரு தடையுத்தரவைப் பெற வேண்டும்.



அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மரங்கள் அவை. பொதுமக்கள் பலருக்கு நிழல் அளித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றை வெட்ட முயற்சி மேற்கொள்வதற்கு எந்த நியாயமான காரணமும் கிடையாது. 

அந்த ம்ரங்களைக் காக்க நாம் நமது முயற்சிகளை மேற்கொள்வோம். நல்லது நடக்கும் என நம்புவோம். 

Sunday 22 January 2023

நீர்த்தாகம்

செயல் புரியும் கிராமத்துக்கு வாரத்துக்கு குறைந்தபட்சம் நான்கு நாட்களாவது செல்வேன். அங்கே உள்ள நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பேன். எவ்வளவு அதிகமாக எவ்வளவு விரைவில் செயல்களை நிகழ்த்த முடியுமோ அத்தனை விரைவாக அத்தனை அதிகமாக செயல்களை நிகழ்த்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.  இருப்பினும் அத்தனை செயல்களையும் மக்களைக் கொண்டே நிறைவேற்ற வேண்டும். நூற்றுக்கணக்கானோரை ஒருங்கிணைக்கும் போது ஒருங்கிணைப்பாளன் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கும். 

மழைக்காலம் முடிந்து தை மாதம் பிறந்து விட்டது. காலை நேரத்தில் பனி பெய்து பின்னர் வெயில் பெரிதாக எழத் தொடங்கி விட்டது. தரையின் மேல்பரப்பு காய்கிறது. 

தஞ்சை வடிநிலப் பகுதிகளில் தண்ணீரை நெற்பயிருக்கு அதிக அளவில் அளித்து பழக்கம் உள்ளவர்கள். நில அமைப்பின் காரணமாக வரப்பு மடையைத் திறப்பதன் மூலம் நிறைவயல் நீர் நிரப்புபவர்கள். தண்ணீர் நெல்விவசாயத்துக்கு மிகையாகவே செலுத்தி பழக்கம் உள்ளவர்கள். இருப்பினும் மரங்களுக்கு ஒரு குடத்தில் நீர் நிரப்பி அவற்றுக்கு அளிக்க வேண்டும் என்பதை திரும்பத் திரும்ப சொல்லி அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டியிருக்கிறது. 

இன்று எழுபது தேக்கு மரக் கன்றுகளுக்கு ஒரு விவசாயியும் நானும் சேர்ந்து நீர் வார்த்தோம். 

Saturday 21 January 2023

பஞ்ச தந்திரக் கதைகள் : உலகியலும் வாழ்க்கையும்

உலகியல் என்பது பெரியது. மிகப் பெரியது. மனிதர்கள் உலகியலையே வாழ்க்கை என்று கருதுகின்றனர். அது உண்மையும் கூட. உலகியலுக்கு அப்பால் உள்ள விஷயங்கள் கோடியில் ஒருத்தருக்கே அனுபவமாகின்றன. உலகியலை மனிதர்கள் தங்கள் விவேகத்தால் இனிமையானதாக ஆக்கிக் கொள்ள முடியும். இந்திய ஞானம் பிரத்யட்சம் , அனுமானம் , சுருதி என மூன்று விதமான அறிதல் முறைகளைக் கூறுகிறது. ஒரு விஷயத்தை நேரடியாகக் கண்டு செய்து பார்த்து புரிந்து கொள்வது பிரத்யட்சம். காணும் ஒன்றுடன் காணாத ஒன்றை யூகித்துப் புரிந்து கொள்வது அனுமானம். முன்னோர் அறிவுரை என்பது சுருதி எனப்படுவது. இந்த மூன்று முறைகளுமே அறிதல் நிகழ்வதற்கு மானுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கருவிகள். இவை அனைத்தின் துணை கொண்டு மானுடன் ஞானம் பெற வேண்டும் என்பதே இந்திய மரபின் நோக்கம்.  

மூன்று அரசகுமாரர்கள் அறிவில் அறிதலில் ஆர்வமின்றி எதிலும் ஆர்வம் இன்றி சோம்பியிருக்கின்றனர். அரசன் அவர்கள் மனநிலை குறித்து பெரும் கவலை கொண்டு இவர்களுக்கு வாழ்க்கையின் சாரத்தையும் வாழ்க்கையின் தன்மையையும் வாழ்க்கையை எந்த எந்த விதங்களில் வகுத்துப் புரிந்து கொள்வது என்பதையும் குறுகிய காலத்தில் எவ்விதம் சொல்லித் தருவது என்பதற்கான முறைகளைப் பரிசீலிக்கும் போது விஷ்ணுசர்மன் என்பவர் இந்த மூன்று அரசகுமாரர்களுக்கும் லௌகிக வாழ்வை கதைகள் மூலம் சொல்லித் தருவதாகக் கூறுகிறார். மூன்று அரச குமாரர்களும் விஷ்ணுசர்மனிடம் மாணவர்களாக சேர்கிறார்கள். 

கதை கேட்பது என்பது மூளையை துடிப்புடன் இயங்கச் செய்யும் ஒரு வழிமுறை. கதை கேட்கும் போது செவிப்புலனைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி மனதைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி கதைசொல்லி கதையைச் சொல்லும் முறையைக் கவனிப்பதால் பார்வை தொடர்பான மூளையின் பகுதி ஆகிய்வை துரிதமாக செயல்புரியத் தொடங்குகின்றன. செயலூக்கம் கொண்ட மூளை சோம்பலிலிருந்து வெளியேறுவதற்கான மார்க்கத்தைக் கண்டடைகிறது. 

விஷ்ணுசர்மன் கதைகளைக் கேட்ட அரசகுமாரர்கள் உலகியலைப் புரிந்து கொண்டு செயலாற்றத் துவங்கினார்கள் என்பதாக பஞ்சதந்திரக் கதைகள் கூறுகிறது. உண்மையில் , இந்த அரசகுமாரர்கள் கதையே தன்னளவில் சிறந்த பஞ்ச தந்திரக் கதைகளில் ஒன்று என்று தோன்றுகிறது. 

சிறு வயதில் வாசித்தது எனினும் மீண்டும் இப்போது வாசித்த போது மிகவும் ஆர்வமாகவும் சுவாரசியமாகவும் உபயோகமானதாகவும் இந்த கதைகள் இருந்தன. இந்த கதைகள் பத்து வயதிலிருந்து இருபத்து ஒரு வயது வரையான மாணவர்களுக்கு மிகவும் அவசியமானது. இந்த காலகட்டம், குழந்தைகளைப் பெற்றோர் அரண் போல் சூழ்ந்து காக்கும் காலகட்டம். யாராக இருந்தாலும் எந்த இளைஞனும் இருபத்து ஒரு வயதுக்கு மேல் சமூகத்தை உலகியலை நேரடியாக எதிர்கொண்டே ஆக வேண்டும். அதற்கு இந்த கதைகள் மிகவும் துணை செய்யும். மேலும் இன்று உலகில் உணவு, உடை, உறையும் ஆகிய அடிப்படைத் தேவைகள் உலகின் எந்த வரலாற்றுக் காலகட்டத்தை விடவும் இன்று மக்கள் அதிகம் பேருக்கு சாத்தியம் ஆகி உள்ளது ; அதே நேரம் சமூகம் பஞ்சதந்திரக் கதைகளில் வரும் மூன்று அரசகுமாரர்கள் மனநிலையிலும் உள்ளது. எனவே எந்த காலகட்டத்தை விடவும் இன்றைய காலகட்டம் பஞ்சதந்திரக் கதைகள் பெரும் பயன் தரக்கூடியது. 

விஷ்ணு சர்மன் கூறும் ஐந்து சூழ்கைகள் : 1. மித்ரபேதம் 2. மித்ரலாபம் 3. அடுத்துக் கெடுப்பது 4. அடைந்ததை அழிப்பது 5. ஆராயாமல் செய்வது. ஒவ்வொன்றுக்கும் கதைக்குள் கதைக்குள் கதை என விரிந்து சென்று கொண்டே உள்ளது. பஞ்ச தந்திரக் கதைகளின் சிறப்புகளில் ஒன்றாக நான் காண்பது கொக்கு, கிளி, தவளை, பாம்பு, நரி, சிங்கம், ஒட்ட்கம், காகம் , ஆந்தை , ஆமை என பல்வேறு உயிரினங்களை கதாபாத்திரங்களாக வடிவமைத்திருப்பதை. தங்கள் உலகம் வெவ்வேறு உயிரினங்களால் ஆனது என்ற புரிதலை இந்த கதையை வாசிக்கும் சிறார்களுக்கு இவை வழங்கக்கூடும். 

உலகியல் குறித்த அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் கதைகளின் நடுவே வழங்கியிருப்பது தினந்தோறும் உலகியலில் உழலும் சாமானியர்களுக்கு பெரும் உதவியை அளிக்க வல்லது. 

உலகின் ஒட்டு மொத்த தீமையையும் அழிக்கிறேன் என உறுதி பூண்ட ஜனமேஜயனின் வேள்வி ஆஸ்திகனால் தடைப்பட்ட போது வைசம்பாயனர் ஜனமேஜனுக்கு சொன்ன கதையே மகாபாரதம். சூது அழிவைத் தரும் என விதுரர் யுதிர்ஷ்ட்ரனுக்குக் கூறிய கதையே நளசரிதம். சோர்வுற்றிருந்த பீமனுக்கு இராமாயணக் கதையைக் கூறி தேற்றினார் ஆஞ்சநேயர். இந்தியா கதைகளின் தேசம். 

கதைகளின் தேசத்தின் கதைகளில் சுவாரசியமான உபயோகமான கதைகளில் ஒன்று பஞ்ச தந்திரக் கதைகள். 

Thursday 19 January 2023

வங்கிகள் : வாடிக்கையாளர்களும் ஊழியர்களும்

நம் நாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவை என்பது எப்போதுமே சர்ச்சைக்குரிய விதத்திலேயே உள்ளது. அடிக்கடி வங்கிக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் ஒரு விஷயத்தை எளிதாக உணர முடியும் ; இங்கே வங்கி ஊழியர்களுக்கு தாம் சேவையாற்றும் இடத்தில் இருக்கிறோம் என்பதோ தாம் புரியும் பணி அல்லது சேவை நிதித்துறை தொடர்புடையது என்பதோ எப்போதும் அவர்கள் நினைவில் இருப்பதில்லை. அவர்கள் அனைவருக்குமே ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் தங்களை தங்கள் தொழிலாளர் யூனியன் காப்பாற்றும் என்ற நம்பிக்கை வலுவாக இருப்பதால் எவ்விதமான தார்மீகமும் இன்றி செயல்படுகின்றனர். 

பொதுமக்கள் வங்கிகள் மேல் நம்பிக்கை கொள்வது பெரிய அளவில் குறைந்திருக்கிறது. இந்நிலை வங்கிகளுக்கும் நல்லதல்ல ; வங்கி ஊழியர்களுக்கும் நல்லதல்ல. 

Tuesday 17 January 2023

உபாயம்

’’பஞ்ச தந்திரக் கதைகள்’’ நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். நூலில் பாதியை வாசித்திருக்கிறேன். மீதியையும் வாசிக்க வேண்டும். முழுதும் வாசித்து விட்டு அந்த நூல் குறித்து ஒரு பதிவு எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இன்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தை நடைமுறையில் பயன்படுத்திப் பார்த்தேன். அது பெரிய அளவில் எனக்கு முக்கியமான உதவியைச் செய்தது.  அதாவது, அந்த நூலில் ஒரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது : ஒரு அமைச்சனாக இருப்பவன் ஒரு சிக்கலுக்கு அல்லது ஒரு இடருக்கு உரிய தீர்வினை சமாதானமான வழியின் மூலமாகவே அடைய முயன்றவாறு இருக்க வேண்டும் ; மோதும் போக்கைக் கடைப்பிடிப்பது ஒரு அமைச்சருக்கு உரிய லட்சணம் இல்லை. சமாதானத்துக்கான எந்த இடமும் இல்லை என்றால் மட்டுமே தண்டனை அளிக்கும் முடிவுக்கோ அல்லது மோதலுக்கோ செல்ல வேண்டும். சில நாட்கள் முன் வாசித்த இந்த விஷயம் என் மனதில் நிலை கொண்டிருந்தது. 

இன்று எனது நண்பர் ஒருவருக்கு மின்னணு முறையில் பணம் அனுப்ப வேண்டும். வங்கிகள் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நான்கு நாட்களும் விடுமுறை. சனிக்கிழமை இரண்டாம் சனி என்பதால் விடுமுறை. ஞாயிற்றுக்கிழமை வழக்கமாகவே விடுமுறை. மேலும் பொங்கல். திங்கள் மாட்டுப் பொங்கல். செவ்வாய் காணும் பொங்கல். நான்கு நாள் விடுமுறை என்பதால் என்ன செய்வது எனத் தெரியவில்லை. என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை. ஆதலால் என் கணக்கிலிருந்து மாற்றுவது இயலாது. என்ன செய்வதென யோசித்தேன். அப்போது திடீரென ஒரு ஞாபகம் வந்தது. சனிக்கிழமையன்று பதிவுத்தபால் ஒன்றை அளிக்க வந்த தபால்காரரிடம் பேசிக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது; அவர் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்கள் மட்டுமே தபால் அலுவலகம் விடுமுறை என்று சொன்னது ஞாபகம் வந்தது. அவ்வாறெனில் அங்கு சென்று என்னுடைய அஞ்சலக சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்தி அங்கிருந்து மின்னணு பண பரிவர்த்தனை மூலம் நண்பரின் கணக்குக்கு பணம் அனுப்பி விடலாம் என முடிவு செய்தேன். 

தொகையை கையில் எடுத்துக் கொண்டு என்னுடைய நண்பர் ஒருவரை துணைக்கு அழைத்துக் கொண்டு அஞ்சல் அலுவலகம் சென்றேன். மின்னணு பரிமாற்றம் செய்யும் சாளரத்துக்குச் சென்று விபரம் சொன்னேன். சாளரத்தில் இருந்த பெண்மணி ‘’இன்று அனுப்ப முடியாது . நாளை வாருங்கள்’’ என்றார். ‘’மிகவும் அவசரம். அதனால் தான் வந்திருக்கிறேன். அனுப்பியே ஆக வேண்டும்’’ என்று சொன்னேன். உதவி போஸ்ட் மாஸ்டரை சென்று பாருங்கள் என்று சொன்னார். அவரைப் பார்த்து விஷயத்தை விளக்கினேன். ‘’ சார் ! வழக்கமான ஸ்டாஃப் எல்லாரும் லீவுல இருக்காங்க. வில்லேஜ் போஸ்ட் ஆஃபிஸ்லயிருந்து இன்னைக்கு சில பேர் டெம்ப்ரரியா வந்திருக்காங்க. அவங்களுக்கு பணம் அனுப்பி பழக்கம் இருக்கான்னு தெரியல. அதான் யோசிக்கறன்’’ என்றார். மீண்டும் சென்று மின்னணு பரிமாற்ற சாளரத்தில் உள்ள எழுத்தரைப் பார்க்கச் சொன்னார். மீண்டும் சென்றேன். அந்த எழுத்தர் , ‘’வங்கிகள் விடுமுறை. பணம் அனுப்ப முடியாது ‘’ என்று புதுக்கதை சொன்னார். மாதத்தில் இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நான்காம் சனிக்கிழமை வங்கிகள் விடுமுறை . அப்போதெல்லாம் தபால் ஆஃபிஸ் உண்டு. அப்போது பணம் அனுப்ப முடியும் என்றால் இன்றும் அனுப்ப முடியும் என்று பொறுமையுடன் சொன்னேன். வழக்கமான நிலையாக இருந்தால் என மனம் போஸ்டல் சூப்பரிண்டெண்ட்க்கு இங்கே நிகழ்ந்ததைச் சொல்லி கடிதம் அனுப்புவது , சி.பி.கி.ரா.ம்ஸ் ல் புகார் பதிவு செய்வது என யோசித்திருப்பேன். ஆனால் ‘’பஞ்ச தந்திரக் கதைகள்’’ சமீபத்தில் வாசித்திருந்ததால் இந்த எதிர்மறையான சூழலிலும் நாம் சாதிக்க வேண்டியதை சாதிக்க வேண்டும் ; அதுவே உண்மையான வெற்றி என்பதால் பொறுமை காப்பது என முடிவு செய்தேன். அலுவலகத்தின் உள்ளே சென்று தலைமை போஸ்ட் மாஸ்டரை சந்தித்து நிகழ்ந்தவற்றை சொன்னேன். அவர் அப்போதுதான் டிபன் பாக்ஸை தனது மேஜை மேல் வைத்து சாப்பிட அமர்ந்திருந்தார். இன்னும் டிபன் பாக்ஸைத் திறக்கவில்லை. நான் சொன்னதும் என்னுடன் வந்து அலுவலர்களிடம் என்ன விபரம் என்று கேட்டார். மின்னணு பரிமாற்றம் செய்யும் வழக்கமான அலுவலர் இன்று விடுமுறை என்று கூறினார்கள். ஒரு வட இந்திய இளைஞர் தபால் ஆஃபிஸில் எழுத்தராகப் பணி புரிகிறார். அவர் ஆரம்பத்திலிருந்து நடந்ததை அவதானித்துக் கொண்டிருந்தார். அவர் என்னுடைய உதவிக்கு வந்து தான் முயற்சி செய்கிறேன் என்று கூறினார். 

முதலில் தொகையை பணம் செலுத்தும் படிவத்தை நிரப்பி என் கணக்கில் செலுத்தினேன். பின்னர் பணம் எடுக்கும் படிவம் ஒன்றையும் மின்னணு பரிமாற்றத்துக்கான படிவம் ஒன்றையும் அளித்தேன். இளைஞர் துணிச்சலாக தனது முயற்சியை மேற்கொண்டார். தலைமை தபால் மாஸ்டர் பக்கத்திலேயே நின்று அனைத்தும் சரியாக நிகழ்கிறதா என உறுதி செய்து கொண்டார். பணம் அனுப்பப்பட்டு விட்டது. தலைமை போஸ்ட் மாஸ்டருக்கு நன்றி சொன்னேன். வட இந்திய இளைஞரிடம் ‘’தன்யவாத்’’ என்று கூறினேன். அவர் மிகவும் மகிழ்ந்தார். 

எனக்கும் திருப்தி. வேலை முடிந்ததற்காகவும். பஞ்ச தந்திரக் கதை பரிந்துரைக்கும் உபாயம் ஒன்றின் படி நடந்ததற்காகவும். 

எண்ணங்கள் மலர்க

நாம் எப்போதும் குறிப்பிடுவதைப் போல ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. ஒரு கிராமம் என்ற அலகில் தன் பொதுப்பணியை ஆற்ற ‘’காவிரி போற்றுதும்’’ முயல்கிறது. நாம் மக்களை இணைக்க முயல்கிறோம். ஆக சாத்தியமான வழிகளில் எல்லாம் மக்களை இணைக்க முயல்கிறோம்.  

நமது வலைப்பூவின் வாசகர்கள் உலகெங்கும் உள்ளனர். அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை ‘’காவிரி போற்றுதும்’’ அமைப்பாளன் என்ற முறையில் முன்வைக்கிறேன். 

வலைப்பூவின் வாசகர்கள் எவருக்கேனும் இன்ன விதமான பொதுப்பணி நிகழ வேண்டும் என்று எண்ணமிருந்தால் அதனை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். சிந்தனை என்பதை செயலின் அடிப்படையாகக் காண்கிறது ‘’காவிரி போற்றுதும்’’. எண்ணமே செயலாகிறது என்பதால் எண்ணங்களும் செயல் அளவுக்கே முக்கியமானவை. 

வாசகர்கள் ஒரு கிராமத்தில் நிகழ வேண்டும் என நினைக்கும் ஒரு பொதுப்பணியை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பி வைக்கவும். பொதுப்பணி குறித்த வாசகர்களின் எண்ணங்கள் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்கு பெரிய அளவில் உதவி செய்யும். அவற்றைக் குறித்து நாமும் யோசிக்கலாம். அனைவரும் யோசிக்கலாம். சிந்திக்கலாம். விவாதிக்கலாம். அதற்கான துவக்கமாக அது அமையும். 

என் மின்னஞ்சல் முகவரி : ulagelam (at) gmail (dot) com

Sunday 15 January 2023

பயிற்சி

வழக்கறிஞர் தொழிலை ‘’பிராக்டிஸ்’’ என ஏன் கூறுகிறார்கள் என்பதை சமீப நாட்களில் அனுபவபூர்வமாக புரிந்து கொண்டேன். அவர்களுடைய பணி என்பது  காகிதத்தில் எழுதுவதை  அடிப்படையாய்க் கொண்டது. அது ஒரு அடிப்படையான பணி. அதன் மேல் அவர்கள் நிகழ்த்தும் வாதம் அமையும். எழுத்து பேச்சு என்னும் இரண்டு விஷயங்களுமே அவர்கள் பணிக்கு முக்கியம். காகிதத்தில் எழுதுவதில் முறைமை என்பது முக்கியமானது. திரும்பத் திரும்ப எழுதப்படுவது. 

மனுக்கள் தயாரிக்கும் போது அனுப்புநர் , பெறுநர் என தட்டச்சிடும் போது எத்தனை மனுக்கள் என்று தோன்றும். அவ்வாறு தோன்றுவதை பயிற்சியின் மூலமாகவே கடக்க முடியும். கடந்த ஓராண்டாக ஏகப்பட்ட மனுக்கள் தயாரித்து அனுப்பியிருக்கிறேன். மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர் , தகவல் பெறும் உரிமைச் சட்டம் என கடந்த ஓராண்டாக தொடர்ந்து பல விஷயங்களுக்கு அனுப்பிக் கொண்டுள்ளேன். ஒவ்வொரு முறை மனு தயாரிக்கும் போதும் அந்த மனுவின் எழுத்து வடிவத்திலேயே அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்த்திட முனைவேன். 

பல மனுக்களை அனுப்பியவன் என்ற முறையில் தமிழ்நாடு மாநில அரசாங்கம் மனுக்களை அணுகும் விதத்தில் ஒரு நடைமுறைப் புரிதல் எனக்கு உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு மனு ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டால் அது சற்றேனும் கவனத்துடன் அணுகப்படுகிறது என்பதே அந்த புரிதல். ஏதோ ஒரு விதத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒரு மனு அரசாங்க ஊழியர்களுக்கு நீதிமன்றத்தை நினைவு படுத்தி விடுகிறது. எனவே சற்று கவனம் அளிக்கப்படுகிறது என நினைக்கிறேன். அது என் பிரமையாகவும் இருக்கலாம். எந்த மனுவையுமே அரசு ஊழியர்கள் பெரிதாகக் கருதுவதில்லை என்பதே உண்மை. 

மாநில அரசு ஊழியர்கள் தங்களை முற்றிலும் சமூகத்திலிருந்து அன்னியப்படுத்திக் கொண்டு ஒரு குறுங்குழுவாகத் தங்களை கருதிக் கொள்கின்றனர். ஓர் அரசு அலுவலகத்துக்கு வருகை புரியும் நாட்டின் குடிமகனுக்கு அளிக்க வேண்டிய எளிய மதிப்பைக் கூட அவர்கள் அளிப்பதில்லை. பொதுமக்கள் ஏன் தங்கள் அலுவலகத்துக்கு வருகிறார்கள் என்பதே அவர்கள் விசனமாக இருக்கிறது. என்னுடைய அனுபவத்திலிருந்து நான் கூறும் இந்த விஷயம் 99 சதவீத உண்மை. 1 சதவீதம் விதிவிலக்கானவர்கள் இருக்கலாம். எனினும் விதிவிலக்காக இருக்கும் அரசு ஊழியர்களுக்கும் நான் கூறுவது உண்மை என்பது என்னை விட நன்றாகவே தெரிந்திருக்கும். 

14 மரங்கள் விஷயமானாலும் பள்ளி வளாகத்தில் வெட்டப்பட்ட மரம் விஷயமானாலும் நாம் மெல்ல முன்னேறி விஷயத்தின் மையப்புள்ளியை நெருங்கி விட்டோம் என்பதே உண்மை. 

இமைப் பொழுதும் சோராதிருத்தல் என்பது வழக்குகள் விஷயத்தில் முக்கியமான ஒன்று என்று தோன்றுகிறது. அரசு ஊழியர்கள் நாட்களை நகர்த்தினால் பொது விஷயங்களில் மனு செய்பவர்கள் சோர்ந்து விடுவார்கள், அதன் பின் அதனைத் தொடராமல் விட்டு விடுவார்கள் என எண்ணுகிறார்கள். நாம் நியாயம் என உணர்ந்த விஷயம் ஒன்றுக்காக செயல்படுகிறோம் என்னும் போது இந்த விஷயங்களில் சோர்வு என்பது இல்லை. விஷயம் எந்த கட்டத்தை அடைந்துள்ளது என்னும் அவதானம் மட்டுமே உள்ளது. 

இந்த விஷயங்களால் சட்டம் தொடர்பாக சட்டம் சார்ந்த பணிகள் தொடர்பான பயிற்சியைப் பெற முடிந்திருக்கிறது. 

தார்மீக வெற்றி - இரண்டாம் படி

 

ஆறு மாதங்களுக்கு முன்னால் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி வளாகத்தில் இருந்த நூறு பேருக்கு மேல் அமரும் நிழல்பரப்பு கொண்ட உயிர்மரம் ஒன்று அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரால் வெட்டி விற்பனை செய்யப்பட்டது. நான் அந்த ஊரின் கிராம நிர்வாக அதிகாரிக்கு புகார் அனுப்பினேன். அந்த புகாரின் நகலை வருவாய் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட ஆட்சியர், பள்ளிக்கல்வித் துறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்தேன். 

அந்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்ற விபரத்தை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரினேன். வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அதிகாரி அந்த மரம் அப்படியே உள்ளது என பதில் அனுப்பினார். தவறான திசை திருப்பும் பதிலை அவர் அளித்ததாக மாநிலத் தகவல் ஆணையத்திற்கு அவர் மீது ஒரு புகாரை அனுப்பினேன். 

அரசாங்க நிலமான சாலை, அரசுக் கட்டிட வளாகங்கள், தெரு ஆகியவற்றில் உள்ள எந்த உயிர்மரம் வெட்டப்பட வேண்டும் என்றால் அதற்கு வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர் இடத்தை நேரடியாகப் பார்வையிட்டு மரத்தின் பொருள் மதிப்பை நிர்ணயித்து அதற்கு மேல் ஒரு மடங்கு தொகையைச் சேர்த்து அந்த பணத்தை அரசாங்கக் கணக்கில் செலுத்தச் சொல்வார். அவ்வாறு செலுத்தப்பட்ட பின் அந்த உயிர்மரத்தை வெட்ட உத்தரவு வழங்குவார். இத்தனை நடைமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதே ஓர் உயிர்மரம் எக்காரணம் கொண்டும் சுயநலம் படைத்தவர்களால் வெட்டப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே. 

இந்த விஷயம் தொடர்பாக மத்திய அரசின் CPGRAMS என்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்தேன். அதன் விளைவாக வருவாய் கோட்டாட்சியர் உயிர்மரம் வெட்டப்பட்ட பள்ளியின் வளாகத்தை நேரடியாகப் பார்வையிடச் சென்றார். பார்வையிட்டு அங்கே விசாரணை மேற்கொண்டு அந்த மரம் வெட்டப்பட்டுள்ளது என்றும் அந்த மரத்தை வெட்டியது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் என்றும் பதிவு செய்து மரக்கிரயத்தையும் உரிய அபராதத்தையும் அரசுக்கணக்கில் செலுத்திட ஆவன செய்யுமாறு வட்டாட்சியருக்கு உத்தரவு இட்டு ஆணை பிறப்பித்தார். இது இந்த விஷயத்தில் கிடைத்த முதல் தார்மீக வெற்றி ஆகும். 

சில நாட்களுக்குப் பின் , வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவுப்படி அபராதம் விதிக்கப்பட்டு அரசுக்கணக்கில் செலுத்தப்பட்டதா என தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி விபரம் கோரினேன். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் , வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் இரண்டிலும் விபரம் கேட்டேன். இரண்டு அலுவலக பொது தகவல் அதிகாரிகளும் முப்பது நாள் காலக்கெடு கடந்தும் பதில் அளிக்கவில்லை. மேல்முறையீட்டு அலுவலர்களான வருவாய் கோட்டாட்சியர் , வருவாய் வட்டாட்சியர் ஆகியோரிடம் முதல் மேல்முறையீடு செய்தேன். அபராதம் செலுத்தப்பட்ட படிவத்தின் நகல் ஓரிரு நாட்களுக்கு முன்னால் எனக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது . மரத்தின் மதிப்பு என ரூ. 500 நிர்ணயம் செய்யப்பட்டு ஒரு மடங்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.1000 தொகை அரசுக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. தொகை செலுத்தியவர் பெயர் என்பதில் ‘’ தலைமை ஆசிரியர்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்த விஷயத்தில் மிக முக்கியமான ஒரு ஆவணம். 

வெட்டப்பட்ட மரத்தின் மதிப்பு ரூ.25,000 இருக்கக் கூடும் என்பதை ஆறு மாதங்களுக்கு முன்னால் கிராம நிர்வாக அதிகாரிக்கு அனுப்பிய மனுவிலேயே குறிப்பிட்டிருந்தேன். 

இப்போது மூன்று கோரிக்கைகளுடன் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு மனுவை தயார் செய்துள்ளேன். முதல் கோரிக்கை : சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இரண்டாம் கோரிக்கை : மரத்தின் மதிப்பை குறைத்து நிர்ணயம் செய்துள்ள வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் மரத்தை வெட்டியவருக்கு சட்டத்துக்குப் புறம்பான வகைகளில் செயல்பட்டு உதவியுள்ளனர் ; அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டதற்கு அவர்கள் அடைந்த சுயலாபமே காரணமாக இருக்க முடியும் எனவே அவர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை தேவை. மூன்றாவது கோரிக்கை : வெட்டப்பட்ட மரத்தின் மதிப்பு ரூ.25,000 க்கு மேல் இருக்கக் கூடும். ஆனால் ரூ.500 என குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகளின் துணை கொண்டு வெட்டப்பட்ட மரத்தின் உண்மை பொருள் மதிப்பைக் கண்டற்ந்து உரிய அபராதம் விதிக்கப்பட வேண்டும். 

நியாயம் நிகழும் வரை நாம் தொடர்ந்து நியாயத்தை நோக்கி சென்று கொண்டிருப்போம். 

Friday 13 January 2023

கதிர் வணக்கம்

சூரியன் நாம் தினமும் கண்களால் காணும் கடவுள். நமது வாழ்க்கைக்கு உயிராக இருப்பவன். நம்மை எப்போதும் வாழ்விப்பவன். நம் எண்ணங்களை விருப்பங்களை கனவுகளை தன் அருளால் நடத்தித் தருபவன். யோக மரபு அவனை வணங்குவதை ‘’சூர்ய நமஸ்கார்’’ என்னும் வணக்க முறையாகவே வகுத்திருக்கிறது. குமரியிலிருந்து இமயம் வரை லட்சக்கணக்கான சாதகர்கள் தினமும் சூரியனை நமஸ்கரிக்கிறார்கள். ஆற்றலும் கருணையும் ஒருங்கே அமையப் பெற்றவன் கதிரவன். ஆற்றலை வேண்டுவோர்க்கும் கருணையை வேண்டுவோர்க்கும் தன் அருளின் கிரணங்களால் ஆசியளிப்பவன் கதிரவன்.  

செயல் புரியும் கிராமத்தில் , ஆடி மாதத்தில், இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக அங்குள்ள விவசாயக் குடும்பங்களுக்கு பூசணி, பீர்க்கன், சுரைக்காய், பரங்கி, வெள்ளரி, பாகல் ஆகிய நாட்டுக் காய்கறிகளின் விதைகளை வழங்கினேன். 

அந்த கிராமத்தில் ஒரு நண்பர் 15 நந்தியாவட்டை செடிகள் வேண்டும் எனக் கேட்டிருந்தார். அவருக்கு அவற்றை வழங்க ஒரு பெரிய துணிப்பையில் எடுத்துக் கொண்டு சென்றிருந்தேன். எதிரில் சிலர் இரு சக்கர வாகனங்களில் பின்னிருக்கையிலும் இரு பக்கங்களிலும் பெரிய பெரிய சாக்குப் பைகளை வைத்துக் கட்டிக் கொண்டு நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்ததைக் கண்டேன். அவ்வாறு மூட்டைகள் செல்வதைப் பார்த்தவாறு நண்பருடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். நண்பர் வீட்டில் இல்லை ; வெளியூர் சென்றிருந்தார். அவருடைய வீட்டில் உள்ளவர்களிடம் விபரம் கூறி விட்டு நான் புறப்பட்டேன். வழியில் ஒரு மளிகைக்கடை. அதன் உரிமையாளர் எனது நண்பர். அவருடைய கடைக்குச் சென்றேன். 

நண்பர் என்னிடம் கேட்டார். ‘’ சார் ! மூட்டை மூட்டையா டூ வீலர்ல எடுத்துட்டுப் போறாங்களே அதெல்லாம் என்னன்னு தெரியுதா ?’’ என்னால் யூகிக்க முடியவில்லை. 

‘’ஆடி மாசம் பூசணி, பீர்க்கன், சுரைக்காய், பரங்கி , வெள்ளரி , பாகல் விதை கொடுத்தீங்கள்ள சார். அது தான் இப்ப மார்கழில காய்ச்சிருக்கு. பொங்கலை ஒட்டி டவுன்ல இருக்கறவங்க நாட்டுக் காய்கறி வாங்குவாங்க. அதனால டவுன் காய்கறி மார்க்கெட்டுக்கு சேல்ஸ் பண்ண எடுத்துட்டு போறாங்க’’

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

இந்த முறை காய்கறி விதைகளைக் கொடுத்த போது மக்கள் விதைத்து இரண்டு நாளில் பெருமழை பெய்தது. சிலர் அந்த பெருமழைக்குப் பின்னால் விதைத்தனர். சிலர் விதைத்த அடுத்த தினமே பெருமழை. அவ்வாறு விதைக்கப்பட்ட விதைகள் முளைத்தெழுந்ததில் சில சிக்கல்கள் இருந்தன. இரண்டு தினத்துக்குப் பின் விதைத்தவை நன்றாக முளைத்து சிறப்பாக வளர்ந்தன. 

கிராமத்தில் பணி புரியும் போது ஒரு விஷயத்தை அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ள முடிகிறது. நமது மரபு என்பது என்பது விவசாயம், விதைத்தல், நீர் வார்த்தல், அறுவடை, விவசாயத்தின் காலக்கணிதம், உரங்களின் தன்மை, மருத்துவ அறிவு என அனைத்தும் உள்ளடிக்கியது. பலவகையிலும் மரபைக் காப்பதிலும் மேலும் மேலும் வளர்ப்பதிலுமே நாம் கவனம் செலுத்த வேண்டும். அதுவே நம் முன்னோருக்கு நாம் செய்யும் கைம்மாறு. மரபு மீதான அவநம்பிக்கை உண்டாக்கப்படுவதால் பெரிதும் பாதிப்புக்குள்ளாவது நம் நாட்டின் அடித்தட்டு விவசாயிகளே. 

இந்த நாட்டு விதைகளின் வளர்ச்சி கிராமத்துக்கு மேலும் நாட்டு விதைகளை வழங்க வேண்டும் என்ற விருப்பத்தை உண்டாக்கியுள்ளது. 

கங்கையும் காவிரியும்

தமிழ்நாட்டில் எவருடைய பெயராவது வேம்பு என இருந்தால் அவருக்கு அந்த பெயர் இடப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கும். அதாவது , ஒரு தம்பதிக்குப் பிறக்கும் குழந்தைகள் அடுத்தடுத்து குறைந்த ஆயுளில் இறந்து போகுமேயானால் தெய்வத்திடம் அத்தம்பதிகள் அடுத்து தங்களுக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு வேம்பு எனப் பெயரிடுகிறோம் ; வேப்ப மரம் தெய்வத்துக்கு மிகவும் பிரியமானது ஆனதால் இனிப் பிறக்க உள்ள குழந்தை மேல் வேப்ப மரத்தின் மேல் தெய்வம் எத்தனை பிரியம் காட்டுகிறதோ அந்த பிரியத்தின் ஒரு சிறு பகுதியை அந்த குழந்தை மேல் அளித்து தெய்வம் அதனைக் காக்க வேண்டும் என்று பிராத்தனை செய்து கொள்வார்கள்.  தமிழ்நாட்டில் வேம்பு என்ற பெயர் ஆண்களுக்கும் இடப்படுகிறது ; பெண்களுக்கும் இடப்படுகிறது என்பதற்கான காரணம் இதுவே. ஆச்சர்யப்படும் வகையில் இந்த வழக்கம் வங்காளத்திலும் உண்டு. வங்க மொழியில் வேப்ப மரத்தின் பெயர் நிமாய். அங்கே நிமாய் என்ற பெயர் கொண்டவர்கள் அதிகம் இருப்பார்கள். சைதன்ய மகாபிரபுவின் பூர்வாசிரமப் பெயர் நிமாயி என்பதாகும். 

தமிழ்நாட்டுக்கும் வங்காளத்துக்கும் மேலும் பல ஒப்புமைகள் உண்டு. குறிப்பாக சோழ தேசத்துக்கும் வங்காளத்துக்கும் என்று சொல்ல முடியும். இரண்டு நிலப்பகுதிகளுமே நதிக்கரையில் அமைந்த பகுதிகள். பெருநதி அதன் கிளைநதிகள் இவற்றால் உண்டான வண்டல் மண்ணால் செழுமையடைந்த பகுதிகள். நீளமான கடற்கரையைக் கொண்டவை. வைணவம், சாக்தம், சைவம் ஆகிய வழிபாட்டுமுறைகள் நிலைபெற்றவை. நதிநீரைக் கொண்டு வேளாண் பாசனம் செய்யும் முறைகளையும் அதன் விளைவான நல்விளைச்சலையும் அடிப்படையாய்க் கொண்ட சமூகக் கட்டுமானம் அமையப் பெற்றவை. 

இந்திய மொழிகள் செய்யுள் வடிவிலேயே தங்கள் இலக்கியங்களைக் கொண்டிருந்த போது பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின் வசன இலக்கியம் உருவாயிற்று. செய்யுள் நடையிலிருந்து வசன நடையை நோக்கி இந்திய மொழிகள் நகரத் தொடங்கின. இந்திய மொழிகளில் வசன இலக்கியப் படைப்புகளான சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவை எழுதப்படலாயின. கல்கத்தா பிரிட்டிஷ் அரசின் தலைநகர் என்பதால் வங்காளத்தில் நாவல், சிறுகதை ஆகியவை கணிசமாக எழுதப்பட்டன. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் தொகுக்கப்பட்டு வெளியாயின. சுவாமி விவேகாந்தர் தனது ஞான ஆசானின் சொற்களை தனது கூர்மையான மொழியில் உலகுக்கே பறைசாற்றினார். ஸ்ரீராமகிருஷ்ண மடம் இந்திய மறுமலர்ச்சிக்காக பெரும் பணி புரியத் தொடங்கியது. இதே காலகட்டத்தில் சுவாமி தயானந்தரின் ஆர்ய சமாஜ் இந்தியாவின் மைய நிலப்பகுதியில் தேச விழிப்புணர்வுக்காக செயலாற்றத் தொடங்கியது. 

கவி ரவீந்திர நாத் தாகூர் வங்கத்தின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமையாவார். அவருடைய ‘’சாந்தி நிகேதனம்’’ வங்கத்தின் கலை - நுண்கலை - பண்பாட்டு மையமாக உருவெடுத்தது. இன்று வரை சாந்தி நிகேதனம் இந்தியாவின் கலைக்கும் நுண்கலைக்கும் அளிக்கும் பங்களிப்பு மிகப் பெரியது. 

இந்திய தேசிய இயக்கம் மிகத் தீவிரம் கொண்டிருந்த மாநிலங்களில் வங்கமும் ஒன்று. தேசியவாதிகளின் பெரும் நிரையை வங்கம் இந்தியாவுக்கு அளித்தது. மகாத்மா காந்தி இந்திய அரசியலில் பிரவேசித்த பின் , இந்திய இளைஞர்களுக்கு அவர் ஓர் அறைகூவல் விடுத்தார். இந்திய கிராமங்களுக்குச் சென்று இந்திய நாட்டின் ஆன்மாவை ஆக சாத்தியமான வழிகளிலெல்லாம் கண்டடையுமாறு கூறினார். நாடெங்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அந்த அறைகூவலால் - அதில் இருந்த இலட்சியவாதத்தால் - ஈர்க்கப்பட்டு கிராமங்களை நோக்கிச் சென்றனர். அந்த பெரும் திரள் இளைஞர்கள் இந்திய கிராமங்களில் உணர்ந்த நாட்டின் ஆன்மாவை பின்னாட்களில் தங்கள் அத்தனை சமூக - கலை - நுண்கலைச் செயல்பாடுகளிலும் மையப்புள்ளியாகக் கொண்டனர். அப்போது உருவான அந்த அலையின் தாக்கம் இன்று வரையும் கலை - நுண்கலை தளத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது. 

இந்தியாவின் ஆன்ம சாரத்தை நோக்கிக் குவியும் வங்கப் படைப்பாளிகள் பலர். அவர்களில் மிக முக்கியமானவர்களாக தாராசங்கர் பானர்ஜி, விபூதிபூஷண் பந்தோபாத்யாய, ஆஷா பூர்ண தேவி , மைத்ரேயி தேவி ஆகிய படைப்பாளிகளைக் குறிப்பிட முடியும். 1940களில் வங்க மொழியில் எழுதப்பட்ட படைப்புகளை நேரடியாக வங்க மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு த. நா. குமாரசுவாமி , த. நா. சேனாபதி ஆகிய மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் வாழ்நாள் பணியாக மொழிபெயர்த்து வெளியிட்டனர். விடுதலைக்குப் பின்னான கால கட்டத்தில் வங்க எழுத்தாளர்கள் பலர் தமிழ் வாசகர்கள் மனத்தில் தமிழ் எழுத்தாளர்களாகவே பதிவாகி இருந்தனர். சரத் சந்திரர் தமிழில் பொது வாசகர்களால் மிக அதிகம் வாசிக்கப்பட்ட எழுத்தாளர். 

வங்கத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள இன்னொரு முக்கியமான தொடர்பு என்பது ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஆகும். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்களைத் தமிழ் மொழியில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக வங்க மொழியைக் கற்ற தமிழறிஞர் சுவாமி சித்பவானந்தர் ஆவார். சுவாமி சித்பவானந்தரின் ‘’பகவத் கீதை’’ உரை மிகவும் பிரபலமானது. கீதையின் ஒவ்வொரு சுலோகத்துக்கும் பொருள் கூறும் போது ஸ்ரீராமகிருஷ்ணரின் பொருத்தமான உபதேசங்களையும் கதைகளையும் கொண்டு விளக்கம் அளித்திருப்பார். கிருஷ்ணரின் சொற்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ணரின் விளக்கம் என்பது அத்வைதம் பரிணமித்து வந்த பாதையை மிகத் தெளிவாக உணர்த்துவது என்ற அடிப்படையில் அந்த பணி மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. 

தாராசங்கர் பானர்ஜி, விபூதி பூஷண் பந்தோபாத்யாய, மாணிக் பந்தோபாத்யாய, ஆஷா பூர்ண தேவி, மைத்ரேயி தேவி, அதீன் பந்தோபாத்யாய ஆகிய வங்கப் படைப்பாளிகளின் படைப்புகள் தேசிய புத்தக நிறுவனத்தாலும் சாகித்ய அகாடெமியாலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படைப்புகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் கிண்டில் போன்ற வடிவங்களில் வெளியாகும் என்றால் அது தமிழுக்கும் தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் பெரும் பயன் அளிப்பதாய் இருக்கும். 


Tuesday 10 January 2023

மரபும் சமூகமும் இயற்கையும்

இந்திய மரபு என்பதை சுருக்கமாக இயற்கையுடன் இயைந்து வாழும் உணர்வு எனக் கூறிவிடலாம். இயற்கை இறையாக உணரப்படுவது உலகிலேயே இந்தியாவில் மிக அதிகம். இந்தியாவில் தோன்றிய சமயங்கள், மக்களின் பழக்கவழக்கங்கள், இந்தியாவின் வெவ்வேறு நிலப்பகுதிகளின் இலக்கியங்கள், நுண்கலைகள் என அனைத்திலுமே இயற்கையுடன் இயைந்து வாழும் தன்மையும் இயற்கையை வழிபடும் தன்மையும் உள்ளுறையாக இருப்பதைக் காண முடியும். 

தமிழ்நாட்டில் கடந்த நூறு ஆண்டுகளாக திராவிட இயக்கத்தால் மக்களின் சமய நம்பிக்கை தாக்குதலுக்குள்ளானது. திராவிட இயக்கம் தன்னளவில் தனது கருத்தியல் அடிப்படையில் சமயத்தின் மீது தாக்குதல் தொடுப்பதையும் சமயம் உருவாக்கியிருக்கும் மதிப்பீடுகள் மீது தாக்குதல் தொடுப்பதையும் தனது முறைமையாகக் கொண்டது. இயற்கையை தெய்வத்தின் ரூபமாகக் காணுதல் என்பது சமயத்தின் முறைமைகளில் முக்கியமானது. சிவன் என்பவன் கங்கையை சிரசில் கொண்டவன். நிலவையும் நாகத்தையும் அணியாக அணிந்தவன். விஷ்ணு கடலில் வசிப்பவன். மண், மரம், செடி, பிராணி, வானம், காற்று , தீ என அனைத்துமே வணக்கத்துக்குரியவை என்னும் உயரிய உணர்வைக் கொண்டவை இந்திய சமயங்கள். திராவிட இயக்கத்துக்கு இந்திய மரபு குறித்த எந்த புரிதலும் எப்போதும் இருந்ததில்லை. இந்திய மரபுக்குள்ளேயே இருந்த நாத்திக சிந்தனைக்கு மிக நெருக்கமான பிருஹஸ்பதியின் லோகாயதவாதத்தின் எளிய அறிமுகத்தைக் கூட திராவிட இயக்கம் பெற்றிருக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் உருவாகி நிலைபெற்றிருந்த நாத்திக இயக்கத்தை தனது முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டது திராவிட இயக்கம். ஐரோப்பாவில் மதத்தின் பெயரால் நடந்த சண்டைகள் மிக அதிகம். சிலுவைப் போர்கள் ஐந்து ஆறு நூற்றாண்டுகளுக்கு நிகழ்ந்த நிலம் ஐரோப்பா. அந்த ஆறு நூற்றாண்டு கொட்டப்பட்ட குருதியின் விளைவாக உருவான இயக்கம் ஐரோப்பாவின் நாத்திக இயக்கம். கிருஸ்தவ திருச்சபையை எதிர்த்து உருவான இயக்கம் அது. கடவுளின் பெயரால் கிருஸ்தவ திருச்சபை நிகழ்த்தும் அதிகார அரசியலுக்கு எதிரான எதிர்க்குரல் அது. ஐரோப்பாவின் சமூக அமைப்புக்கும் தமிழ்நாட்டின் சமூகக் கட்டுமானத்துக்கும் எவ்வித ஒட்டு உறவும் கிடையாது. திராவிட இயக்கம் சமயத்தை எதிர்க்கிறேன் என்ற பேரில் இந்த மண்ணின் மதிப்பீடுகள் அனைத்தையும் கண்மூடித்தனமாக எதிர்த்தார்கள். தொழில்நுட்பத்தின் சாதனைகளை மானுடத்தின் சாதனைகளாக முன்வைத்தனர். தமிழ்நாட்டில் இவ்வாறான பரப்புரை தொடர்ந்து நிகழ்ந்தது. தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகல் மனிதனின் நுகர்வைத் தூண்டக் கூடியவை. இயற்கையைச் சுரண்டும் இயல்பைக் கொண்டவை. இந்த தொழில்நுட்பம் இயற்கையைக் காக்கும் செயல்களால் சமப்படுத்தப்பட வேண்டும். அதற்கு தமிழ்நாட்டின் மரபே துணையாக வர முடியும். 

ஆனால் கடந்த நூறு ஆண்டுகளாக மரபு எதிர்ப்பு என்னும் நச்சு திராவிட இயக்கத்தால் பரப்பப்பட்டுள்ளது. அந்த நச்சு சிறு மிகச் சிறு அளவி்லேனும் மக்கள் அகத்தைத் தீண்டியுள்ளது. இன்று ஐரோப்பாவும் அமெரிக்காவும் தொழில்நுட்பத்தால் நிகழும் இயற்கையின் மீதான சுரண்டல் உருவாக்கும் அழ்விலிருந்து உலகைக் காக்க இயற்கையுடன் இயைந்து வாழ்தலையும் நுகர்வின் மீதான கட்டுப்பாட்டையும் முன்வைக்கின்றன. நம் மரபிலேயே இயல்பாக அமைந்த விஷயங்கள் அவை. 

ஒரு சிறு உதாரணம் மூலம் இதனை விளக்க முடியும். தமிழ்நாட்டில் வயல்வெளிகளில் உள்ள பாம்புகளை கொல்லக் கூடாது என்னும் பழக்கம் இருந்தது. வயல்வெளி என்றல்ல எங்குமே பாம்புகளைக் கொல்லக் கூடாது ; அவற்றைப் பிடித்து ஊருக்கு வெளியே புதர் மண்டிய இடத்தில் விட்டு விட வேண்டும் என்ற விதியும் கட்டுப்பாடும் இருந்தது. வயலில் உள்ள பாம்புகள் விளைச்சலை உண்டு தீர்க்கும் எலிகளைத் தன் உணவாகக் கொள்பவை என்பதால் எலிகலைக் கட்டுப்படுத்தும் பாம்புகள் விவசாயிகளின் நண்பன் என்பதால் அவை அழிக்கப்படக்கூடாது என்பது ஒரு மரபாகப் பின்பற்றப்பட்டது. எலியைக் கொல்லும் எலி மருந்து வந்த பின் விவசாயி பாம்புகளை அசௌகர்யமாக உணரத் துவங்கி அவற்றைக் கொல்லலானான். இரண்டு மூன்று தலைமுறைகளில் விவசாயிகள் பாம்பு எவ்விதம் தங்களுக்கு உதவுகிறது என்பதை மறக்கத் துவங்கினான். எலி மருந்தின் விஷத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் தன்மையை எலிகள் உருவாக்கிக் கொண்டன. அவற்றைக் கட்டுப்படுத்தும் பாம்புகள் இல்லாததால் எலிகள் தடையின்றி பெருகுகின்றன. 

இன்று தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் சூழியல் அழிவுக்கான காரணங்களில் ஒன்று திராவிட இயக்கத்தின் மரபு எதிர்ப்பு பரப்புரை. சூழியல் விழிப்புணர்வு என்பது நமது மரபைப் புரிந்து கொள்ளுதலும் உணர்ந்து கொள்ளுதலுமே.  

Monday 9 January 2023

நூறு பூமரங்கள்

இன்று காலை 6 மணிக்கு ஒரு அலைபேசி அழைப்பு. நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். அலைபேசி மணி துயில் கலையச் செய்தது. ஏற்பட்ட முதல் எண்ணம் ஒரு வியப்பு. ‘’இன்று 100 பூமரங்கள் நட நியமித்த பணியாளர் இத்தனை சீக்கிரமா தனது ஊரிலிருந்து புறப்பட்டு விட்டு அந்த செய்தியைச் சொல்ல நம்மை அழைக்கிறார்’’ என்று எண்ணினேன்.  

‘’சார்! சொந்தக்காரங்க ஒருத்தருக்கு உடம்பு சரியில்லாம கும்பகோணம் ஆஸ்பத்திரில சேத்துருக்காங்க. அவரைப் போய் பாக்கணும் சார்”

எனது தூக்கம் முழுமையாகக் கலைந்து ‘’இன்னைக்கு மரக்கன்றுகளை நட வேறு யாரை ஏற்பாடு செய்வது ?’’ என்ற வினா கவலையாக உருமாற்றம் பெற்றது. 

பணியாளரின் கூற்றுக்கு ஆமோதிப்பைத் தவிர வேறெந்த பதிலையும் கூறி விட முடியாது. அதனால் எந்த பயனும் இல்லை. 

தெரிந்த நண்பர்களுக்கு ஃபோன் செய்து அவர்கள் தூக்கத்தைக் கலைத்து இன்று ஒரு பணியாளர் மட்டும் வேண்டும் என்றேன். 

‘’சார் ! ரெண்டு பேரை அனுப்பலாமா?’’

‘’அனுப்பலாம். ஆனால் அவங்க ரெண்டு பேரும் ஒரு ஆள் சம்பளத்தை சமமா பிரிச்சு எடுத்துக்கணும்.’’

‘’இல்லை சார் ரெண்டு பேர் வந்தா ரெண்டு ஆள் சம்பளம் கேப்பாங்க’’

‘’நூறு நந்தியாவட்டை கன்றுகள். காலைல 10 மணிக்கு ஆரம்பிச்சா கூட சாயந்திரம் 6 மணிக்கு ஒருத்தரே வச்சுரலாம். ஒரு மணி நேரத்துல 10 கண்ணு வச்சாக்கூட 100 கன்னு ஒருத்தரே நடலாம்’’

‘’ரெண்டு பேர் ரெண்டு ஆள் சம்பளம்னா டிரை பன்றோம் சார்’’

‘’ஒருத்தர் ஒரு ஆள் சம்பளம்னு டிரை பண்ணுங்க’’

ஒரு நண்பர் ஒரு ஆளைப் பிடித்து அனுப்பி வைத்தார். கல்லூரி முடித்த இளைஞன். ஆர்வமாக பணியைத் துவக்கினான். 

நாங்கள் பூமரக் கன்றுகள் நட்ட சாலையில் சென்ற எனது நண்பர் ஒருவர் இரும்புப் பாறை கொண்டு வந்து கொடுத்து உதவினார். 

அரைமணிக்கு ஒருமுறை சென்று மேற்பார்வை இட்டேன். 

சில லௌகிகப் பணிகள் இருந்தன. அவற்றையும் செய்தேன். 

மாலை 6 மணிக்குள் 100 பூமரக் கன்றுகள் நடப்பட்டன. அனைத்துக்கும் நீர் ஊற்றினோம். 

Sunday 8 January 2023

ஒரு வாசகர்

சில நாட்களுக்கு முன்னால், ஒரு வாசகர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஒரு நாளின் அதிகாலையில் அவரது கடிதத்தைக் கண்டேன். அவர் தனது அலைபேசி எண்ணை  அளித்திருந்தார். அந்த எண்ணுக்கு அழைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்த பணிகளில் மறந்து விட்டேன். இன்று அவரை அழைத்துப் பேசினேன். 

’’லீலாவதி’’ சிறுகதைக்குள் இடம் பெற்றிருக்கும் நாட்டிய நாடகம் , ‘’புள்ளரையன் கோவில்’’ சிறுகதையில் இடம் பெற்றிருக்கும் கொற்றப்புள் ஆகிய்வை அவரை மிகவும் கவர்ந்திருந்தது. தனது வாசக அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். 

சாகித்ய அகாடெமி, தேசிய புத்தக நிறுவனம் ஆகியவை வெளியிட்டிருக்கும் இந்திய நாவல்களை வாசிக்குமாறு அவருக்குப் பரிந்துரைத்தேன். தாரா சங்கர் பானர்ஜி, விபூதி பூஷண் பந்தோபாத்யாய, கிரிராஜ் கிஷோர், குர் அதுல் ஐன் ஹைதர், பைரப்பா, சிவராம் காரந்த் மற்றும் தகழி சிவசங்கர பிள்ளை ஆகியோரின் நாவல்கள் அவருடைய இலக்கிய வாசிப்பு மனநிலைக்கு மிக அணுக்கமாக இருக்கும் என்று கூறினேன். 


Saturday 7 January 2023

14 மரங்கள் - தொடர் பிழைகள்

14 மரங்கள் தொடர்பாக 12.07.2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்த போது மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தை மிகவும் கவனத்துக்குரிய ஒன்றாகக் கருதி செயல்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.  அன்றைய தேதியில் மரங்களை வெட்டிய குற்றம் செய்தது ஒரு நபர். அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர். கள்ளத்தனமாக மரம் வெட்டுதல், அதிகார துஷ்பிரயோகம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த விஷயம் வருவதால் மாவட்ட நிர்வாகம் இதனைக் கடுமையாக எடுத்துக் கொள்ளும் என்று எனக்குத் தோன்றியது. 

இந்த விஷயத்தில் என்னென்ன நிகழ்கின்றன என்பதைக் கவனித்த போது நான் சட்டம் தொடர்பான பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். இணையம் மூலம் தேடி இந்த விஷயங்கள் குறித்த சட்டங்களைத் தேடிப் படித்தேன். அப்போது சட்டம் பற்றியும் சட்டம் எழுதப்படும் முறை பற்றியும் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு மாணவனைப் போல புதிதாக தெரிந்து கொள்வதன் ஆர்வம் சட்டம் குறித்து ஏற்பட்டது. உதாரணத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் கள்ளத்தனமாக மரம் வெட்டுதலில் ஈடுபடும் போது அது எவ்வாறு அணுகப்பட வேண்டும் என்பதை ஊராட்சிகள் சட்டத்தில் பல பக்கங்களில் தேடிப் பார்த்தேன். கிராமங்களில் பொது இடத்தில் உள்ள மரங்களை வெட்டும் பொதுமக்களுக்கு என்ன தண்டனை என்பதை உணர்த்தும் சட்டம் ஒரு சிறு குறிப்பு போல இருந்தது. அது அனைவருக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆனால் அது ஒரு சிறு குறிப்பு மட்டுமே. ‘’கள்ளத்தனமாக மரம் வெட்டுதல்’’ குறித்த சட்டத்தை எடுத்து வாசித்துப் பார்த்தேன். அது தெள்ளத் தெளிவாக கள்ளத்தனமாக மரம் வெட்டப்படும் போது கிராம ஊராட்சி ஊழியர்களும் வருவாய்த்துறை ஊழியர்களும் செய்ய வேண்டிய கிரமங்கள் என்ன என்பதை எடுத்துரைக்கிறது. அதனைப் பலமுறை வாசித்திருக்கிறேன். சட்டம் என்பது பலமுறை வாசிக்கப்பட வேண்டியது. ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதிதாக ஒரு விஷயம் புலப்படும். இத்தனை நாள் இதனை கவனிக்காமல் இருந்தோமே என்று ஆச்சர்யம் உண்டாகும். 

தமிழ்நாட்டில் பொதுவாக மக்களுக்கு சட்டபூர்வமான செயல்முறைகள் மேல் நம்பிக்கையும் அதன் மீது பற்றும் இருப்பதில்லை. தமிழ்நாட்டின் அரசு அலுவலர்களும் பொது மக்களிலிருந்து வருபவர்கள் என்பதால் அவர்களிடமும் அதே வழக்கம் இருப்பதைக் காண முடியும். ‘’வழக்கமான நடைமுறை’’ என ஒன்று பழக்கத்தில் இருக்கும். அதையே அலுவலர்கள் பின்பற்றுவார்கள். 

கள்ளத்தனமாக மரம் வெட்டுதல் நிகழும் போது கிராம நிர்வாக அதிகாரி வெட்டப்பட்ட மரங்களைக் குறித்த விபரங்களை ‘’சி’’ படிவம் என்ற படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். யாரேனும் புகார் அளித்தால்தான் பதிவு செய்ய வேண்டும் என்று கிடையாது. ஒரு கிராமத்தில் பொது இடத்தில் இருக்கும் எந்த மரமும் வெட்டப்படும் என்றால் அதனை தனது வருவாய்த்துறை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லுதலும் கள்ளத்தனமாக மரம் வெட்டியவருக்கு வெட்டப்பட்ட மரத்தின் விபரங்களை ( வெட்டப்பட்ட மரத்துண்டுகளின் எண்ணிக்கை, அவற்றின் கனஅளவு, எடை) ஆகியவற்றைக் குறிப்பிட்டு ‘’சி’’ படிவத்தை வழங்குவதும் கிராம நிர்வாக அதிகாரியின் பணிகள். கள்ளத்தனமாக மரம் வெட்டப்பட்டு 24 மணி நேரத்தில் ‘’சி’’ படிவம் அளிக்கப்பட்டு விட வேண்டும். அவ்வாறு அளிக்கப்படாமல் இருந்தால் அதுவே பணி நெறிமுறை மீறல் என்றாகும். வெட்டியவர் எவரெனத் தெரியாது வெட்டப்பட்ட மரத்துண்டுகளும் சம்பவ இடத்தை விட்டு அகற்றப்பட்டு விட்டன என்றால் கிராம நிர்வாக அதிகாரி அதனைக் காவல்துறையில் புகாராக அளிக்க வேண்டும்.  ‘’சி’’ படிவ அறிக்கை கிராம நிர்வாக அதிகாரியில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வழங்கப்படும்.  வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அதிகாரி அளித்த ‘’சி’’ படிவத்தை பரிசீலித்து அதில் பதிவு செய்யப்பட்ட விபரங்கள் சரியானவையா என்பதை ஆய்வு செய்வார். அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்வார். அதன் பின்னர் வருவாய் வட்டாட்சியர் கிராம நிர்வாக அதிகாரியின் ‘’சி’’ படிவத்தையும் வருவாய் ஆய்வாளரின் அறிக்கையையும் அடிப்படையாய்க் கொண்டு குற்றத்தின் தன்மையைப் பொறுத்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து மரத்தின் மதிப்பை நிர்ணயம் செய்ய வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி மதிப்பிட்டிருக்கும் பொருள் மதிப்பு குறைவாக இருப்பதாக வட்டாட்சியர் நினைத்தால் மரத்தின் மதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என தனது அறிக்கையில் எழுதி வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டும். அதன் பின்னர் வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து பார்வையிட்டு மரத்தின் மதிப்பை நிர்ணயம் செய்து ஆணை வெளியிட வேண்டும். வெட்டப்பட்ட ஒரு மரத்தின் மதிப்பு ரூ.1000க்குள் எனில் அந்த மரத்தின் மதிப்பை நிர்ணயம் செய்வதற்கும் அந்த மரக்கிரயத்தின் மீது 40 மடங்கு வரை அபராதம் விதிக்கவும் வருவாய் வட்டாட்சியர் அதிகாரம் படைத்தவர். வெட்டப்பட்ட மரத்தின் மதிப்பு ரூ.1000க்கு மேல் எனில் அந்த மரத்தின் மதிப்பை நிர்ணயம் செய்யவும் அதன் மீது 40 மடங்கு வரை அபராதம் விதிக்கவும் வருவாய் கோட்ட ஆட்சியர் அதிகாரம் படைத்தவர். 

14 மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் நடந்தது 09.07.2021 அன்று. மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்ட தினம் 12.07.2021. வருவாய் வட்டாட்சியர் வெட்டப்பட்ட 14 மரங்களின் மதிப்பு ரூ.950 என நிர்ணயம் செய்து ஒரு மடங்கு அபராதம் ரூ.950 விதித்து கூடுதல் தொகைக்கு 8 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிப்புடன் சேர்த்து ரூ.2052 செலுத்தச் சொல்லி கள்ளத்தனமாக மரம் வெட்டியவருக்கு உத்தரவிட்டது 13.07.2021 அன்று. அந்த உத்தரவில் உள்ள வாசகம் ‘’ 17.07.2021 அன்று வருவாய் ஆய்வாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ‘’ இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 14 மரங்கள் விஷயத்தில் இந்த உத்தரவு முக்கியமான ஒன்று. மாவட்ட நிர்வாகம் 14 மரங்கள் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக வருவாய் வட்டாட்சியரின் ஆணையையே குறிப்பிடுகிறது என்பதால் அதில் இருக்கும் ஒவ்வொரு அம்சமும் பெரும் முக்கியத்துவம் கொண்டதாகி விடுகிறது. 

நாம் ஒரு விஷயம் யோசித்துப் பார்ப்போம். மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது 12.07.2021 தேதியில். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 12ம் தேதி அளிக்கப்பட்ட மனுக்கள் வருவாய் கோட்டாட்சியருக்கு தபாலில் அனுப்பப்பட்ட தேதி 19.07.2021. வருவாய் வட்டாட்சியர் 13.07.2021 அன்று பிறப்பித்த ஆணையில் அந்த ஆணையின் நகல் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் குறிப்பிடுகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வருவாய் வட்டாட்சியர் முகவரியிட்டு எந்த தபாலும் அனுப்பப்படாத நிலையில் 13ம் தேதி தான் பிறப்பித்த உத்தரவின் நகலை வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அவருடைய மரக்கிரய நிர்ணய மதிப்பின் எல்லைக்குள் இந்த விஷயம் வருகிறது என்னும் போது 13ம் தேதி அந்த உத்தரவை அவர் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. வருடத்துக்கு வருவாய் வட்டாட்சியரின் அதிகார எல்லைக்குள் ஓரிரு கள்ளத்தனமாக மரம் வெட்டுதல் நிகழும். வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு ரூ.1000க்குள் இருந்தால் வட்டாட்சியரே அபராதம் விதித்து ஆணை வெளியிட்டு விடுவார். அவர் அந்த ஆணையின் நகல்களை வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்ப அவசியம் இல்லை. 14 மரங்கள் விஷயத்தில் ஏன அப்படி செய்தார் என்பது புரியாத ஒன்றாக உள்ளது. 

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அகவை கொண்ட வேம்பு, மலைவேம்பு, புங்கன் ஆகிய 14 மரங்களின் மதிப்பை ரூ.950 என வருவாய் வட்டாட்சியர் நிர்ணயம் செய்து விட்டார். கள்ளத்தனமாக மரம் வெட்டுதலுக்கு மரத்தின் மதிப்பில் ஒரு மதிப்பிலிருந்து 40 மடங்கு வரை அபராதம் விதிக்க முடியும் என்ற நிலையில் ஒரு மடங்கு அபராதம் விதிப்பது என்றும் முடிவு செய்து விட்டார். அவ்வாறெனில் வரியுடன் கூடிய தொகையான ரூ.2052ஐ ஊராட்சித் தலைவரின் ஊதியக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்து செலுத்தச் சொல்லியிருக்க வேண்டும். அதுதான் நடைமுறை. அந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை என்பதற்கான காரணம் தெரியாத ஒன்றாக இருக்கிறது. அபராதத்துடன் கூடிய வரி விதிப்பை வட்டாட்சியரின் ஆணை வெளியிடப்பட்ட பின் 120 நாட்கள் கழித்து இணையம் மூலம் செலுத்தியிருக்கிறார். ஆணை பிறப்பிக்கப்பட்ட 120வது நாளில் ரூ.1000 அதன் பின் 127வது நாளில் ரூ.1052 என இரண்டு தவணைகளாக செலுத்தியிருக்கிறார். இத்தனை காலதாமதத்தை மாவட்ட நிர்வாகம் ஏன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெரியவில்லை. 

குறுக்கு வழிகள் அனைத்துமே நேர் வழிகளை விட மிக நீளமானவை என்று சொல்லப்படுவதுண்டு. இந்த தருணத்தில் நான் அந்த வாசகத்தைத் தான் நினைவில் வைத்துக் கொள்கிறேன். மேலே குறிப்பிட்டிருக்கும் விஷயங்களை சிறு எடுத்துக்காட்டாக மட்டுமே கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட விபரங்கள் மேலும் பல விஷயங்களை புரியச் செய்கின்றன. 

ஐயத்துக்கு இடமான விதத்தில் நிகழ்ந்திருக்கும் செயல்பாடுகள் ஆவணங்கள் ஆகியவை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு புகார் மனுவாக அனுப்பப்பட்டுள்ளன. அவ்வாறு அனுப்பப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை. இதில் ஒரு முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. என்னுடைய நண்பர்களும் நலம் விரும்பிகளும் என்னைக் கடிந்து கொள்கிறார்கள். இதில் ஈடுபடாதே என எச்சரிக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு முறை அவ்வாறு கூறும் போதும் எனக்கு நானே என்னிடம் கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தை நான் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டிருக்கிறேனா என்ற கேள்வியை என்னிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். அதற்கான பதில் அவ்வாறு இல்லை என்பதே. ஒருமுறைக்கு பலமுறை ஆழமாக சிந்தித்துப் பார்த்தே இதனைக் கூறுகிறேன். 

இதில் இன்னொரு விஷயம் உண்டு. நான் அரசாங்கம் என்ற அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவன். அரசாங்கம் சட்டப்படியாக இயங்கும் அமைப்பு என்பதில் தீவிரமான உறுதி கொண்ட்வன் நான். பொதுவாக தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு அரசாங்கம் அரசாங்க அலுவலகங்கள் மீது பெரும் அவநம்பிக்கை கொண்டிருப்பார்கள். நான் எந்நாளும் அவ்வாறான அவநம்பிக்கை கொண்டதில்லை. அரசாங்க வேலையை இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் ஆற்றக் கூடிய நூற்றுக்கணக்கானோரை எனக்குத் தெரியும். ஒட்டு மொத்தமாக அரசாங்கம் என்பதை குற்றம் சாட்டுவது அவர்களின் அர்ப்பணிப்பை புறந்தள்ளுவதற்கு சமம். எந்த சூழ்நிலையிலும் நான் அதனைச் செய்ய மாட்டேன். தவறுகள் திருத்தப்பட வேண்டும் ; முறைகேடுகள் சரி செய்யப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அரசாங்க அமைப்பும் சட்டமும் ஜீவித்திருப்பதனால்தான் ஒரு சாதாரண குடிமகனால் நியாயம் கேட்க முடிகிறது.  

இரண்டு தினங்களுக்கு முன்னால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று மாவட்ட ஆட்சியரின் முதல் தனி உதவியாளரைச் சந்தித்தேன். என்னை அறிமுகம் செய்து கொண்டு ‘’14 மரங்கள்’’ விஷயம் தொடர்பாக அக்டோபர் மாதம் ஒரு மனு அனுப்பியிருந்தேன். அது தொடர்பாக விசாரிக்க வந்தேன் என்று கூறினேன். அவருக்கு விஷயம் என்ன என்பது உடன் புலப்பட்டு விட்டது. வருவாய் கோட்டாட்சியரை சந்திக்குமாறு கூறினார். அவரைச் சந்தித்து விட்டு அவர் என்ன கூறுகிறார் என்பதைத் தங்களிடம் வந்து தெரிவிக்கிறேன் எனக் கூறி விட்டு வருவாய் கோட்டாட்சியரை சந்திக்கச் சென்றேன். அந்த அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் விஷயத்தை எங்களிடம் சொல்லுங்கள் ; நாங்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் தெரிவித்து விடுகிறோம் என்று கூறினார்கள். ‘’மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளைச் சந்தித்து விட்டு அவர்கள் கேட்டுக் கொண்டதின் படி நான் இங்கு வந்திருக்கிறேன். வருவாய் கோட்டாட்சியரை சந்திக்க வேண்டும்’’ என்று சொன்னேன். ஐந்து நிமிடம் காத்திருக்கச் சொன்னார்கள். அதன் பின் சென்று சந்தித்தேன். சுருக்கமாக - மிகச் சுருக்கமாக விஷயத்தைச் சொன்னேன். அவர் அந்த கோப்பினை முழுமையாகப் பார்த்திருப்பார் என்பது எனக்குத் தெரியும். மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி கேட்டுக் கொண்டிருப்பதன் பேரில் இங்கு வந்திருப்பதாகத் தெரிவித்தேன். இந்த விஷயத்தில் குறைந்தபட்ச நியாயத்தை எதிர்பார்ப்பதாகக் கூறி விட்டு நன்றி தெரிவித்துவிட்டுப் புறப்பட்டேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரும்பி வந்து விபரம் தெரிவித்து அவரிடம் விடை பெற்றேன். 

ஒரு புராதானமான விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவில் இருந்த குழந்தைகளும் பெண்களும் நீரூற்றி வளர்த்த - பல நூறு பேருக்கு நிழல் அளித்து வந்த - வேம்பு, மலைவேம்பு, புங்கன் ஆகிய மரங்கள் சட்ட விரோதமாக வெட்டப்பட்டுள்ளன. மக்கள் தெரிவித்த எதிர்ப்பு துச்சமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் எத்தனை அடர்த்தியும் தீவிரமும் கொண்டது என்பதை வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவார்கள். நிகழ்ந்த பிழை உரிய பிழையீடால் சமன் செய்யப்பட வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு. 

14 மரங்கள் விஷயத்தில் ஒரு குறைந்தபட்ச நியாயம் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இப்போதும் இருக்கிறது. 
  

Wednesday 4 January 2023

அன்புத் தம்பியின் கடிதம்

அன்புள்ள அண்ணனுக்கு.

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

'ஆயிரம் மணி நேரம் வாசிப்பு' கட்டுரையை வாசித்தேன்.
அதன் சார்ந்த உங்களால் எழுதப்பட்ட' சிறு துளிகள் பெருவெள்ளம்'. நான் கூட இனிவரும் நாட்களில் தினமும்  இரண்டு மணி நேரம் வாசிப்பதாக முடிவு எடுத்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் எழுதிய
'காவேரியில் இருந்து கங்கை வரை ' கட்டுரை உங்களைப் பற்றிய ஒரு முழு அறிமுகம் எனக்கு கிடைத்துவிட்டது இனி வரும் காலங்களில் ஏதேனும் பயணம் மேற்கொண்டால்  தம்பியும் அழைத்துச் செல்லுங்கள்.

உங்களின் அறிமுகத்துக்கு நன்றி. தொடர்ந்து உங்களின் Blogகில் வரும் கட்டுரைகளை தினமும் வாசித்து வருகிறேன்.

 நான் எழுதலாம் என்று நீங்கள் கூறிய அந்த குறுநாவலை எழுதத் தொடங்கி உள்ளேன்.

நன்றி.

உங்கள்,

அன்புத் தம்பி

ஒற்றை மதிப்பெண்

மரங்கள் வெட்டப்படும் விஷயத்திற்கு நான் கொடுக்கும் தீவிர கவனம் எனது நண்பர்கள் பலரை சங்கடப்படுத்துகிறது. மென்மையாகவும் சற்று கடுமையாகவும் கூட தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கின்றனர். 

அவர்கள் முதல் காரணமாகச் சொல்வது மரங்கள் வெட்டப்படுவது குறித்து நாம் முறையீடு செய்யும் இடமான அரசாங்க அலுவலகம் அதனை ஒரு முக்கிய விஷயமாகக் கருதாது என்பதுடன் அதனை ஒரு முக்கியத்துவம் இல்லாத விஷயமாகவே கருதும்; அதனால் அது தொடர்பாக தொடர்ந்து செயல்படும் உங்கள் மேல் அதிகாரிகள் அதிருப்தி கொள்வார்கள் என்பது. இரண்டாவது காரணம், உங்கள் நேரத்தை இந்த விஷயம் அதிகமாக எடுத்துக் கொள்ளும் என்பது. மூன்றாவது நண்பர்கள் , நலம் விரும்பிகளின் சொற்களையும் மீறிய செயல்பாடு நண்பர்களின் நட்பில் இடைவெளியை உண்டாக்கும் என்பது. 

மரம் என்பது தன்னளவில் ஒரு உயிர் என்பதுடன் அது பல உயிர்களுக்கு உறைவிடமாக இருக்கிறது. ஒரு மரம் வெட்டப்படும் போது அதில் வசிக்கும் பறவைகள், பூச்சிகள், புழுக்கள் ஆகியவற்றுக்கான உறைவிடமும் இல்லாமல் ஆக்கப்படுகிறது. மரங்கள் வெளியிடும் பிராண வாயுவால் மிகுந்த பலன் அடையக் கூடியது அதனைச் சூழ்ந்திருக்கும் மனிதர்களே. ஒரு மரம் அனாவசியமாக வெட்டப்படுவதால் மனிதர்களே முதன்மையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே அதனை முக்கியமான விஷயமாக நினைப்பது என்பது அவசியமானதே. ஓர் அரசு அலுவலகம் என்பதை பலர் இணைந்த ஒரு குழுவாகவே நான் எண்ணுகிறேன். சில படிநிலைகளில் அது குறைந்தபட்சம் மூன்று மனிதர்கள் கவனத்துக்காகவாவது செல்கிறது. அதற்கு மேல் அவர்களுடைய மாவட்ட அலுவலகம் இருக்கிறது. மாநில அலுவலகம் இருக்கிறது. எனவே தலைமை அலுவலகத்தின் கவனம் இருக்கும் என்ற நிலையிலாவது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புவதற்கு இடம் உள்ளது. அதனால் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் எப்போதும் நம்பிக்கை இழக்க மாட்டேன். அது என் இயல்பு. எந்த சூழ்நிலையிலும் அதனை சீர் செய்ய எனது பங்களிப்பை எவ்வாறு அளிப்பது என்றே யோசிப்பேனே தவிர அதனை விட்டு விட்டு செல்ல மாட்டேன். 

இரண்டாவது விஷயம் என் நேரத்தை எடுத்துக் கொள்கிறது என்பது. உண்மைதான். ஆனால் நான் அதனை விரும்பியே செய்கிறேன். என் கண்ணில் படும் வெட்டப்பட்ட மரங்கள் குறித்து தான் நான் புகார் செய்கிறேன். ஓரிரு நாட்கள் முன் வெட்டப்பட்ட மரங்கள் குறித்து தான் புகார் செய்கிறேன். பொது இடத்தில் உள்ள ஒரு மரம் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது அங்கே செல்ல நேரிட்டதில்லை. அவ்வாறு நேரிட்டால் மரத்தை வெட்டுபவர்களிடம் வெட்ட அனுமதி இருக்கிறதா என்று கேட்பேன். இல்லை என்று கூறினால் மரத்தை வெட்டாதீர்கள் என்று கூறுவேன். அவர்கள் மரத்தை வெட்ட அனுமதிக்க மாட்டேன். 

மூன்றாவது விஷயம் நண்பர்கள் மனஸ்தாபம் கொள்வார்கள் என்பது. நான் மென்மையான அணுகுமுறையே கையாள்கிறேன் என்பதை நண்பர்கள் அறிவார்கள். வருத்தம் அடைந்தாலும் அவர்கள் விஷயத்தைப் புரிந்து கொள்கிறார்கள். 

பொறியியல் கல்லூரியில் எங்களுக்கு ஒரு பேராசிரியர் இருந்தார். அவர் கல்லூரியில் பருவத் தேர்வு நடந்து விடைத்தாள்களைத் திருத்தி வகுப்பில் கொண்டு வந்து கொடுக்கும் போது ’’ நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் ஒரு மதிப்பெண்ணாவது எடுக்க வேண்டும். பூஜ்யம் எடுக்கக் கூடாது.   நீங்கள் தேர்வு எழுதிய பாடத்துக்கான வகுப்பு உங்களுக்கு மூன்று மாதம் நடந்திருக்கிறது. வாரத்துக்கு நான்கு பிரிவேளைகள் என மூன்று மாதத்தில் ஐம்பது பிரிவேளைகள் அமர்ந்து இந்த பாடத்தைக் கேட்டிருக்கிறீர்கள். எனவே நீங்கள் பூஜ்ய மதிப்பெண் பெறக்கூடாது. எழுதப் படிக்கத் தெரியாத ஒருவரை இந்த தேர்வை எழுதச் செய்தாலும் அவர் பூஜ்யம் பெறுவார். அவருக்கும் உங்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று ஆகி விடும்’’ என்று கூறுவார். 

மரங்கள் வெட்டப்படும் விஷயத்துக்காக முனைப்பு காட்டுவதில் நான் ஒற்றை மதிப்பெண் பெற்றிருப்பதாகவே எண்ணுகிறேன்.  

Tuesday 3 January 2023

இரு மரங்கள்

மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகத்துக்கு அருகில் உள்ள தெருவில் வீதி ஓரத்தில் வளர்ந்திருந்த இரண்டு புங்கன் மரங்கள் ஓரிரு தினங்கள் முன்னால் வெட்டப்பட்டிருக்கின்றன. அந்த இரண்டு மரங்களுக்கும் நான்கு வயது இருக்கக்கூடும். இருபது அடி உயரம் வளர்ந்திருந்த மரங்கள். மரம் வெட்டும் பணியாளர்களைக் கொண்டு மரம் அறுக்கும் எந்திரம் கொண்டு மரங்கள்  வெட்டப்பட்டுள்ளன என்பதை மரங்கள் வெட்டப்பட்டிருக்கும் முறை காட்டுகிறது. ஒரு மரத்தின் மதிப்பு ரூ.3500 இருக்கக் கூடும். இன்னொரு மரத்தின் மதிப்பு ரூ.2000 இருக்கக் கூடும். 

நேற்று இரு மனுக்களை தயார் செய்தேன். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஒன்று ; வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஒன்று. இரண்டுமே தகவல் பெறும் உரிமைச் சட்டப்படியான மனுக்கள். மனுவுடன் வெட்டப்பட்ட இரண்டு மரங்களின் புகைப்படத்தையும் இணைத்து அனுப்பியிருந்தேன். இந்த இரண்டு மரங்களும் வெட்டப்பட வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி பெறப்பட்டதா என்பது முதல் கேள்வி. அனுமதி கேட்டு விண்ணப்பித்தது யார் என்பது இரண்டாவது கேள்வி. அனுமதி அளிக்கப்பட்ட போது மரங்களின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு அந்த மதிப்புக்கான தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டதா என்பது அடுத்த கேள்வி. வெட்டப்பட்ட பின் வெட்டப்பட்ட மரம் பொது ஏலம் விடப்பட்டு அந்த தொகை அரசு கணக்கில் சேர்க்கப்பட்டதா என்பது இன்னொரு கேள்வி. 

இந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களே மரங்கள் வெட்டப்பட்டிருக்கும் விஷயத்தை வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கும் தெரிவித்து விடும். அனுமதி பெறப்படவில்லையெனில் , பதில் கொடுப்பதற்கான காலக்கெடுவான 30 நாட்களில் தவறிழைத்தவர் யாரெனக் கண்டறிந்து மரக்கிரயமும் அபராதத்தொகையும் வசூல் செய்து விட்டு அந்த தகவலை ஒரு பதிலாக அளிக்க முடியும். அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்கவே புகார் மனு அளிக்காமல் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவை அனுப்பியுள்ளேன். 

நமது கடமையை நாம் செய்துள்ளோம். அரசாங்கம் தனது கடமையைச் செய்யும் என நாம் எதிர்பார்க்கிறோம். 

Monday 2 January 2023

ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்

மானுட வாழ்க்கையில் அடிப்படையான முக்கியமான இரு அம்சங்கள் எப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன. உணர்வு மற்றும் தர்க்கம். இன்னும் நுண்மையாக நோக்கினால் இவை இரண்டும் சாதாரண கண்களுக்குப் புலப்பட்டு விடாத நுண் இழைகளால் வெவ்வேறு முறைகளில் இணைக்கப்பட்டே உள்ளன. எனினும் மிகப் பெரும்பான்மையான மானிட நிரை அவற்றைப் பிரித்து வைத்தே தனித்தனியாகப் புரிந்து கொள்ள முயல்கிறது. உணர்வு , தர்க்கம் இவற்றின் இணைப்பைப் புரிந்து கொள்வது என்பது தொலைதூரத்திலிருந்து காற்றில் வரும் இன்மணத்திலிருந்து அந்த மணத்துக்குரிய மலரை அறியும் திறனைப் போல ; உணர்வு , தர்க்கம் ஆகியவற்றை தனித்தனியே புரிந்து கொள்வது என்பது கண்களால் காணும் ஒரு மலை உச்சியை அடிவாரத்திலிருந்து ஏறிச் சென்று அறிவதைப் போல. 

நவீன தமிழ் இலக்கியத்தின் பொதுக் கூறுகளில் ஒன்று, சிறுகதையின் வடிவ கச்சிதம் மேல் பெரும் கவனம் கொண்டிருப்பது. கவிதை என்னும் இலக்கிய வெளிப்பாடு வகுக்கப்பட்டிருக்கும் எல்லா வடிவங்களையும் பல முறையோ அல்லது எல்லா முறையோ மீறிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தன் இயல்பாய் கொண்டிருக்கிறது. எனினும் தமிழ்ச் சிறுகதைகள் பொதுவாக முழுமையாக வடிவத்துக்குள் அடங்கி விட வேண்டும் என்ற சுயகட்டுப்பாட்டை ஒரு விதியாகக் கொள்கின்றன. வடிவத்தில் கச்சிதமான ஒரு சிறுகதையே சிறந்த சிறுகதையாக இருக்க முடியும் என்ற மௌன நிபந்தனையும் தமிழில் உள்ளது. இந்த நிபந்தனை மானுட வாழ்வின் - அதன் ஒரு கூறான தமிழ் வாழ்வின் - அரிய மானிட சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட மகத்தான வாழ்க்கை சந்தர்ப்பங்களை நிகழ்வுகளை உணர்வுகளை தமிழ்ச் சிறுகதையின் பரப்புக்குள் கொண்டு வர இயலாமல் போகிறதோ என்ற ஐயம் உண்டாகிறது. இந்த கூற்றுக்கு விதிவிலக்காக உள்ள தமிழ்ச் சிறுகதைகளும் சிறுகதைப் படைப்பாளிகளும் தமிழில் உண்டு. வடிவ கச்சிததம் மேல் தீவிர ஈடுபாடு காட்டிய படைப்பாளிகளும் அவர்கள் சிறுகதைகளில் - அரிய மானிட சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட மகத்தான வாழ்க்கை சந்தர்ப்பங்களை நிகழ்வுகளை உணர்வுகளை எழுதிய சிறுகதைகளே அவர்களின் ஆகச் சிறந்த படைப்புகளாக குறிப்பிடப்படுகின்றன என்பது ஒரு நகைமுரண். 

ஒரு சிறுகதையை வாசிக்கும் போது அதன் உணர்வுநிலை என்ன என்பதே அச்சிறுகதையுடன் என் முதல் தொடர்பாக இருக்கும். உணர்வின் அம்சம் அளவில் மிகச் சிறிதாகவும் அதனை நோக்கி அல்லது அதிலிருந்து விலகிச் செல்லும் வடிவப் பிரக்ஞை கொண்ட சிறுகதைகளையும் வாசித்துப் புரிந்து என் அகத்தில் வகுத்துக் கொள்வேன் எனினும் உணர்வைத் தீவிரமாக முன் வைத்து மானுட அகத்துடன் உரையாடும் ஒரு இலக்கியப் படைப்பை நான் எனக்கான படைப்பாக எண்ணுவேன். வடிவ கச்சிதம் கூடிய உணர்வின் அம்சத்தை தர்க்கபூர்வமாக மிகச் சிறிதாக வைத்திருக்கும் சிறுகதைகள் மேல் எனக்கு எந்த புகாரும் இல்லை. நான் அவற்றைப் புரிந்து கொள்கிறேன். எனினும் நான் ஈர்க்கப்படும் படைப்புகள் மானுட உணர்வுகளை மானுட உணர்வுத் தத்தளிப்புகளை மானுட மேன்மையை மானுடத்தை எழுதும் படைப்புகளே. 

நேற்று அஜிதனின் ‘’ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’’ சிறுகதையை வாசித்தேன். சமீபத்தில் வாசித்த சிறுகதைகளில் பெரும் பரவசத்தை அளித்த சிறுகதை. அஜிதன் தமிழின் எதிர்கால நம்பிக்கைகளில் ஒருவர். பாரதி , பாஞ்சாலி சபதத்தை ‘’தமிழுக்கு உயிரும் ஒளியும் ஜீவனும் இருக்குமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப் போகிற’’ வர்களுக்கு சமர்ப்பிக்கிறான். அஜிதன் தமிழுக்கு உயிரும் ஒளியும் ஜீவனும் அளிக்கும் படைப்புகளை அளிப்பார் என அவரது முதல் நாவல் ‘’மைத்ரி’’யும் முதல் சிறுகதை ‘’ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’’ கட்டியம் கூறுகின்றன. 

ஒரு சிறுகதை குறித்து ஒரு நாவல் குறித்து எழுதும் போது அதன் கதையை சொல்லாமல் அதன் வாசிப்பனுபவத்தை எழுத வேண்டும் என்ற சுயநிபந்தனையை எனக்கு விதித்துக் கொண்டவன் நான். எனது வாசிப்பனுபவப் பகிர்வு அந்த சிறுகதையை நாவலை வாசித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை வாசகனுக்கு உண்டாக்க வேண்டுமே தவிர நான் சிறுகதையை நாவலைக் காணும் கோணம் வாசகனின் வாசிப்புக்கு முன்னால் அவன் மனத்தில் பதிவாக வேண்டாம் என எண்ணுவேன்.

 ‘’ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’’  கதைத்தன்மை மிகுந்த சிறுகதை. சிறுகதை ஆசிரியர் அஜிதன் இந்த சிறுகதைக்குள் வாசகன் கற்பனை செய்து நிரப்பிக் கொள்ள வேண்டிய உள்கதைகளை கதைக்குள் வைத்திருக்கிறார். 

ஜஸ்டினும் சகாயமும் உள்ளூர்க் கேடிகளாக உருவாகி வருகிறார்கள். ஜஸ்டினின் தந்தை ரௌடிகளால் கொல்லப்பட்டவர். அந்த சம்பவம் ஜஸ்டினை ரௌடியிசத்துக்குள் கொண்டு வருகிறது. ஆயுதத்தின் வல்லமை மெல்ல மெல்ல பிடிபட்டு ஆயுதம் முழுதும் கை வரும் நிலைக்கு குறைந்த காலத்தில் உயர்கிறான் ஜஸ்டின். ஜஸ்டினின் முதலாளி ஒரு நபரை அடையாளம் சொல்லி அவனைக் கொல்லுமாறு கூறுகிறார். இலக்கை வேவு பார்க்கிறார்கள். ஜஸ்டினுக்கும் சகாயத்துக்கும் தோதான ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இலக்கு சபரிமலைக்கு மாலை போட்டிருப்பது ஜஸ்டினின் கண்ணில் படுகிறது. ‘’சாமிக்கு மாலை போட்டிருப்பவனை எப்படி கொல்வது?’’ என்ற தயக்கம் ஏற்பட்டு கொல்லாமல் விட்டு விடுகிறான். ஜஸ்டினின் முதலாளி எரிந்து விழுகிறார். ஜஸ்டினையும் சகாயத்தையும் திறனற்றவர்கள் என வசை பாடுகிறார். நாட்கள் சென்று கொண்டே இருக்கின்றன. முதலாளி கொலை வெறியை மறந்து தனது அன்றாடத்துக்கு முழுமையாகத் திரும்பி விடுகிறார். இப்போது ஜஸ்டினுக்கு இலக்கைக் கொல்ல எந்த பிரத்யேக கட்டளையும் இல்லை. இலக்கு சபரிமலை சென்று திரும்புகிறது. வேவு பார்த்தலை ஜஸ்டின் நிறுத்தவில்லை. வசமான இடம் ஒன்றில் ஜஸ்டின் கொலைக்கருவியுடன் இருக்கும் போது இலக்கு அங்கே வந்து சேர்கிறது. அந்த இடத்தில் வேறு யாரும் இல்லை. கொலை செய்ய வேவு பார்க்க அத்தனை நாள் எடுத்துக் கொண்டதற்கான பலன் ஜஸ்டினுக்குக் கிடைக்கிறது. கொலைக்கருவி ஜஸ்டினை அந்த கணம் ஆட்கொள்கிறது. 

ஜஸ்டின் வாழ்வில் கொலைக்கருவிக்கு அவன் ஆட்பட்ட கணம் முக்கிய கணமாகி விடுகிறது. நியாயத் தீர்ப்பு நாள் வருகிறது.  மனித குமாரன் அவனுக்குத் தீர்ப்பளிக்கிறான். 

அஜிதனின் முதல் சிறுகதையை கதைத்தன்மை மிக்க எனினும் வடிவ கச்சிதமும் பொருந்திய சிறுகதை என்று சொல்ல முடியும். ரௌடிகளின் வாழ்க்கை என்பது கதைக்களனுக்கான ஒரு நிமித்தம் என்றே சொல்ல முடியும். எது சரி எது தவறு என்பதிலும் எந்த முடிவை எடுப்பது என்பதிலும் தெளிவின்றி குழம்பும் எல்லா மானுடர்களின் சங்கடங்களுக்கும் இந்த சிறுகதையை விரிவாக்கிக் கொள்ள முடியும். 

சிறுகதையில் ஜஸ்டினை யாராலும் முழுதாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. கூடவே இருக்கும் சகாயத்தால். முதலாளியான மாமாவால். ஜஸ்டினால். ஏன் கதையை வாசிக்கும் வாசகனால் கூட ஜஸ்டினை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இலக்கைக் கொல்ல வாய்ப்பிருந்தும் இலக்கு சபரிமலைக்கு மாலை போட்டிருப்பதால் அழிக்காமல் விடுகிறான். ஆனாலும் வேவு பார்த்தலை அவன் நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறான். மாமா விஷயத்தை மறந்து விட்டார் எனவே வேவு பார்க்க வேண்டாம் என சகாயம் கூறுவதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். ஜஸ்டின் செய்த பாதகத்துக்குக் கிடைத்த நியாயத் தீர்ப்பு என்ன என்பதே சிறுகதை. 

அஜிதன் ‘’மைத்ரி’’ நாவல் முன்னுரையில் தமிழில் தொடர்ந்து இயங்குவது தனக்கான மார்க்கம் எனத் தான் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அதனை மறுபரிசீலனை செய்து ’’ஜஸ்டினும் நியாயத் தீர்ப்பும் ‘’ வழியாக மறுவருகை புரிந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.