Wednesday 31 March 2021

105

சொற்களை விட
உணர்வுகளை விட
மௌனம்
நம்மை
மேலும் இணைக்கிறது
மேலும் புரிந்து கொள்ளச் செய்கிறது
மௌனத்தில் பேதம் இல்லை
மௌனத்திற்கு பேதம் இல்லை
மௌனத்தில்
நாம் மட்டுமே இருக்கிறோம் 

Tuesday 30 March 2021

106

மலர்கள்
இனிமையைப் பரப்புகின்றன
எளிமையை நிறையச் செய்கின்றன
ஒரு மலரைப் போல
எளிதாக
இனிதாக
இருப்பது
இந்த உலகை
இன்னும்
பெரிதாக்குகிறது

Monday 29 March 2021

107

மலர்களின் உலகில்
மகிழ்ச்சி இருக்கிறது
புரிதல் இருக்கிறது
நம்பிக்கை இருக்கிறது
அன்பு இருக்கிறது
அன்பு
மட்டுமே இருக்கிறது 

Sunday 28 March 2021

108

வசந்தம் துவங்கியிருக்கிறது
நாம் மலர்வோம்
மலர்தல்
நம்மை
நம் இருப்பை
அபூர்வமாக்குகிறது
மேன்மையின்
பெருவெளியில்
நிறுத்துகிறது
நாம் 
பல தருணங்களில்
மலர்ந்திருக்கிறோம்
இக்கணம்
முதல்
மலராகிறோம்
மலராகவே ஆகிறோம் 

Saturday 27 March 2021

உயிர் கொடுத்தல்

'நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே'

-குடபுலவியனார்
நூல் : புறநானூறு   துறை : முதுமொழிக்காஞ்சி

இன்று இரவு எனக்கு ஒரு எண்ணம் உண்டானது. 

எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்தேன். 

‘’இன்னைக்கு எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு’’

நண்பர் மையமாக ‘’சொல்லுங்க’’ என்றார். 

‘’நான் முன்கூட்டியே ஒரு டிஸ்கிளைமர் சொல்லிடறன். நீங்க ஃபினான்ஷியலா எந்த சப்போர்ட்டும் செய்ய வேண்டியதில்லை. டிஸ்கஸ் பண்ணத்தான் உங்ககிட்ட பேசறன். எந்த ஐடியாவிலும் சில இடைவெளிகள் இருக்கும். யோசிக்கிறவருக்கு அது தெரியாது. கேக்கறவர் அதை சுட்டிக் காட்டுனா அந்த ஐடியா மேம்பட வசதியா இருக்கும்’’

நண்பர் ஆசுவாசமானார். ஆர்வத்துடன் ‘’சொல்லுங்க பிரபு’’ என்றார். 

‘’இப்ப தமிழ்நாட்டுல ஒரு சின்ன டவுன் எடுத்துக்கங்க. சிதம்பரம், கடலூர், விழுப்புரம் மாதிரி. அதுல இருக்கற வணிக நிறுவனங்கள்ல 10,000 பேர் வேலை பார்ப்பாங்க இல்லையா?’’

நண்பர் ஆமோதித்தார். 

‘’அவங்க எல்லாம் பெரும்பாலும் அந்த டவுணுக்குப் பக்கத்துல இருக்கற கிராமத்துல இருந்து வந்தவங்க. காலைல வந்துட்டு ராத்திரி வீடு திரும்பறவங்க. அவங்கள்ள பெரும்பாலானவங்க மதியம் சாப்பாட்டுக்கு டிஃபன் பாக்ஸ்-ல ரொம்ப கொஞ்சமான ஃபுட் கொண்டு வர்ராங்க. அவங்க 10,000 பேருக்கும் தினமும் மதிய உணவு அன்னதானமா அவங்க இருக்கற இடத்துக்குத் தேடிப் போய் கொடுக்கணும்.’’

‘’இதெல்லாம் சாத்தியமா பிரபு ?’’

‘’ஏன் அசாத்தியம்னு நினைக்கறீங்க?’’

‘’அவங்க எல்லாம் கடைகள்ல வேலை பாத்து சம்பளம் வாங்கராங்க. அவங்க ஃபுட் அவங்க ஏற்பாடு செஞ்சுப்பாங்க.’’

‘’இந்த விஷயத்தை நீங்க அப்படி பார்க்கக் கூடாது. இப்ப நானே இருக்கன். எங்க வீட்ல அம்மா ஊருக்குப் போயிருந்தா எனக்கு ஃபுட் கஷ்டம் தான். கிச்சன்ல எல்லா உணவுப்பொருளும் இருக்கு. இருந்தாலும் அது உணவா மாறி பசியாத்தணும்னா அதுக்கு ஒருத்தரோட அக்கறை வேணும். பரிவு வேணும்’’

நண்பர் அமைதியாக இருந்தார். 

‘’ஃபுட் ஸ்டஃப் இருக்கா இல்லையாங்கறது கேள்வி இல்லை. எல்லாரும் பசியாருராங்களாங்கறது தான் முக்கியம்’’

‘’உங்க பிளான் என்ன ? முழுக்கச் சொல்லுங்க’’

‘’இந்திய மரபுல அன்னதானம் ரொம்ப பெரிய விஷயம். அன்னதானம் தன்னளவில இறை வழிபாடே தான். பிரம்மம் அன்னத்தின் வடிவம் கொள்கிறதுன்னு வேதம் சொல்லுது. சமணமும் பௌத்தமும் அன்னதானத்தை மகத்தான செயலா சொல்றாங்க. சீக்கியர்கள் குருத்வாராக்கு வர்ர எல்லாருக்கும் உணவு கிடைக்கணும்னு சொல்றாங்க.’’

‘’உண்மை தான்’’

''நம்ம பிளானோட ஒரு பக்கத்துல கடைகள்ல வேலை செய்யற பணியாளர்கள் இருக்காங்க. இன்னொரு பக்கத்துல அன்னதானத்தை புண்ணியமா வழிபாடா நினைக்கக்கூடியவங்க இருக்காங்க. இவங்க ரெண்டு பேருக்கும் நாம பாலமா இருக்கோம்.’’

‘’அளவில ரொம்ப பெரிசா இருக்கே?’’

‘’பெருசு தான். ஆனா நாம நினைக்கறத விட இன்னும் அதிக சப்போர்ட் கிடைக்கும்.’’

‘’நீங்க எல்லாத்தையும் நம்பிக்கையோட தான் சொல்றீங்க. ஆனா இன்னைய சமூகத்தோட நிலைமை வேற மாதிரி இருக்கு.’’

‘’சரி ! இந்த பிளானோட இடைவெளிகள் என்னன்னு சொல்லுங்க. அதை சரி செய்வோம்.’’

‘’முதல் விஷயம்! அன்னதானத்தை எல்லாரும் ஏத்துப்பாங்களாங்கறது ஒரு பெரிய கேள்வி.’’

‘’நாம அன்னதானத்தை கடவுளுக்கு நிவேதனம் பண்ணி கொடுப்போம். கடவுள் பிரசாதத்தை எல்லாரும் ஏத்துப்பாங்க.’’

‘’அப்படி சொல்றீங்களா?’’

‘’ நண்பரே! நாம ஒரு விஷயத்தைப் பத்தி யோசிக்கும் போது என்னென்னல்லாம் செஞ்சா அந்த விஷயம் நடக்கும்னு யோசிக்கணும். நடக்காதுன்னு அபிப்ராயம் சொல்லிட்டு சும்மா இருக்கக் கூடாது.’’

‘’பட்ஜெட் என்ன செய்வீங்க?’’

‘’பத்தாயிரம் பேருக்கு உணவு கொடுக்கறோம்னா அதுக்கு ஒரு நாளைக்கு மினிமமா அஞ்சு லட்சம் ரூபாய் தேவைப்படும். ஒரு வருஷத்துக்கு பதினெட்டு கோடி தேவைப்படும். நாம பிளானையும் துல்லியமான எக்ஸிகியூஷன் மாடலையும் உருவாக்கினோம்னா இந்த விஷயத்தை நாமதான் செய்யணும்னு அவசியம் இல்லை. வாய்ப்பும் அமைப்பு பலமும் இருக்கற யாரும் செய்ய முடியும். இதை விட பெரிய எண்ணிக்கையை கர்நாடகால இருக்கற தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவிலும் திருப்பதி தேவஸ்தானமும் பஞ்சாப் பொற்கோயிலும் சர்வசாதாரணமா செய்யறாங்க. அங்க தினமும் லட்சக்கணக்கானவங்களுக்கு அன்னதானம் நடக்குது. இஸ்கான் இந்தியாவோட பல மாநிலங்கள்ல பள்ளிக்குழந்தைகளுக்கு ‘’அட்சய பாத்ரா’’ என்ற பெயரில் உணவு கொடுக்கறாங்க.’’

‘’ஏன் கடையில வேலை பாக்கறவங்களை மட்டும் தேர்ந்தெடுக்கிறீங்க?’’

‘’ஒரு ஆரம்பத்துக்காக - கணக்கீட்டுக்காக - எண்ணிக்கைக்காக அங்க இருந்து ஆரம்பிச்சேன். அதுல காய்கறி விக்கற பெண்கள், மீன் விற்பவர்கள், தள்ளுவண்டில வியாபாரம் செய்றவங்க, பூ விக்கறவங்க, இவங்களையும் இணைச்சுக்க முடியும்.’’

‘’இது என்ன மாற்றத்தை உண்டாக்கும்னு நினைக்கறீங்க?’’

‘’அன்னத்துக்கு பேதம் இல்லை. அது கடவுளைப் போல. அதன் முன் எல்லாரும் சமம். தேவைப்படறவங்களுக்கு அதைக் கொண்டு சேர்க்கறது ஒரு சத்காரியம். நான்கு யுகத்தோட இயல்பு பத்தி சொல்லும் போது கிருத யுகத்துல யாருக்கு தானம் கொடுக்கப்படணுமோ அவங்க இடத்துக்குப் போய் அவங்க கிட்ட தானத்தை ரொம்ப பொலைட்டா ரெக்வெஸ்டா கொடுப்பாங்களாம். திரேதா யுகத்துல தானம் கொடுக்கறவங்க இடத்துக்கு போனா அவங்களை வரவேற்று உபசரிச்சு கொடுப்பாங்களாம். துவாபர யுகத்துல தானம் கொடுக்கறவங்க கிட்ட போய் தானம் கேக்கறவங்க ரெக்வெஸ்ட் பண்ணா கொடுப்பாங்களாம். கலி யுகத்துல தானம் கேக்கறவன் தானம் கொடுக்கறவன அவனோட இடத்துக்குப் போய் புகழ்ந்தா தான் கொடுப்பாங்களாம். நாம கிருத யுகத்தோட ஃபார்மெட்டை எக்ஸிகியூட் பண்ணுவோம்.’’

‘’பெருசா பிளான் பண்றீங்க’’

‘’பெரிதினும் பெரிது கேள் னு பாரதி சொல்றான்.’’

‘’வாழ்த்துக்கள் ‘’ 

‘’நாம யோசிச்சிட்டதாலேயே செஞ்சுட்டோம்னு அர்த்தம் இல்லை. எதுவும் யோசிக்காம இருக்கறதுக்கு எதையாவது யோசிக்கறது பரவாயில்லை இல்லையா?’’

‘’உண்மைதான்’’

‘’உங்க கிட்ட இந்த விஷயம் சொன்னது இதைப் பத்தி யோசிச்சு உங்க மனசுல தோணுற கேள்விகளை கேக்கத்தான். இந்த கேள்விகளை ஃபீல்டுல எதிர் கொண்டே ஆகணும். அதுக்கு முன் தயாரிப்பா உங்க கேள்விகள் இருக்கும்.’’

நண்பருடனான உரையாடல் முடிந்தது. 

கர்நாடகாவில் வசிக்கும் எஸ். பி. ஐ மேலாளர் ஆதித்ய ஸ்ரீநிவாஸுக்கு ஃபோன் செய்தேன். 

‘’அண்ணன் ! நல்ல விஷயம் அண்ணன். இதை எப்படி செய்யறதுன்னு யோசிப்போம். அவசியம் நாம செய்யணும்’’ ஆதித்யா உற்சாகமாக இருந்தான். 

‘’இது ஒரு ஐடியா. நாமேதான் செய்யணும்னு இல்லை.’’

‘’ஒரு சின்ன ஊர்ல தினமும் 500 பேருக்கு உணவு கொடுக்கற மாதிரி ஆரம்பிச்சு செஞ்சு பாப்போம். அவசியம் நாம செய்யணும்.’’

‘’உன் வார்த்தையைக் கேட்கும் போது தெய்வத்தோட கட்டளைன்னு தோணுது. முயற்சி செஞ்சு பாப்போம்.’’

‘’அண்ணன் ! நான் பேங்க்-ல தினமும் பாக்கறன். அங்க உள்ள ஸ்டாஃப் யாருக்கும் எந்த எதிக்ஸும் இல்லை. இன்னைக்கு எதிக்ஸோட செய்யப்படற வேலைகள் சமூகத்துக்குத் தேவைப்படுது. ‘’

’’நம்ம தமிழ் மரபுல மணிமேகலை அமுதசுரபி மூலமா அன்னதானம் செய்றாங்க. அன்னதானம் நம்ம ஆழ்மனசுல பதிஞ்சிருக்க விஷயம். முயற்சி செஞ்சு பாப்போம்.’’

‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளின் களம் விரிவாவது மகிழ்ச்சி தந்தது. 

 





 

Thursday 25 March 2021

மென்மை
உனது இயல்பிலேயே
இருக்கிறது
உன் அறை தூய்மையற்றிருந்ததில்லை
ஒரு பொருளை
மிக மென்மையாகவே
எப்போதும்
கையாள்கிறாய்
உரையாடும் எவரிடமும்
நம்பிக்கையுடனே 
பேசுகிறாய்
சொல்கிறாய்
ஒவ்வொரு முறை 
புன்னகைக்கையிலும்
மீண்டும் மீண்டும்
மலர்கிறாய்
வானம்
வானில் மட்டும்
நிலைபெறவில்லை

தளிர்க்கும் துளிர்கள்
மணம் பரப்பும் மலரும் பூக்கள்
நாள் முழுதான வெக்கைக்குப் பின் தென்றல்
நீர்மை தீர்க்கும் தாகம்
வசந்த காலம்
கணமும்
உன்னை நினைவுபடுத்தி விடுகிறது 

Wednesday 24 March 2021

ஞாபகங்கள் 
அடர்த்தி இழக்கும்
நினைவுகள்
காலப் பயணத்தில்
தொலை தூரமாய் போகும்
எங்கோ இருக்கிறோம் நாம்
எங்கோ இருக்கிறோம் நாம்
எனினும்
நாம் 
நம் உரையாடலை
இன்னும்
துவக்கவில்லை

Monday 22 March 2021

உன் முன் பணிகிறேன்

உன் மென்மையின் முன்
உன் இசையின் முன்
உன் இனிய சொற்களின் முன்

உனது ஆலயம்
விசாலமாய் இருக்கிறது

உன்னைப் பார்த்துக் கொண்டு
உன்னை
எப்போதும் பார்த்துக் கொண்டு
இருந்து விடுகிறேன்

காலம்
நீண்டது
முடிவற்றது
நான் அறிவேன்

உன் கருணைப் பார்வையால்
நான்
இல்லாமல்
போகட்டும்

விசாலமாய் இருக்கிறது
உனது ஆலயம்

Sunday 21 March 2021

இந்த உடல் சாம்பலாகும்
எங்கோ முளைக்கும் 
எனினும்
ஏதோ ஒன்று
உணர்ந்த
மிக உணர்ந்த
அறிந்த 
ஏதோ ஒன்று
நிறையும்
ஜகம் எங்கும்

 

Friday 19 March 2021

எஸ். ராமகிருஷ்ணன்

இரண்டு நாட்களுக்கு முன்னால், கடலூர் சீனுவிடமிருந்து ஃபோன்கால். 

‘’பிரபு! கொஞ்ச நேரம் முன்னால எஸ். ராமகிருஷ்ணன் ஃபோன் செஞ்சார். உங்க நம்பர் கேட்டார்’’

‘’நான் பேசிடறன் சீனு’’

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஃபோன் செய்தேன். 

‘’பிரபு! கும்பகோணத்துல ஒரு ஓவியக் கண்காட்சியைத் துவக்கி வைக்கறேன். ஒரு புத்தக வெளியீடு இருக்கு. ரெண்டு நாள் அங்கதான் இருக்கன். இந்த தடவை திருக்கடவூர் கோயிலுக்கு போகலாம்னு இருக்கன். உங்க ஊர் வழியா தானே போகணும்?’’

‘’ஆமாம் சார்! நீங்க வீட்டுக்கு அவசியம் வரணும்.’’

‘’டைம் இருந்தா நிச்சயம் வரேன் பிரபு”

‘’நீங்க எப்ப கும்பகோணம் வரீங்க? நான் வந்து ஜாயின் பண்ணிக்கறன்’’

‘’நாளைக்கு காலைல தான் சென்னையிலயிருந்து புறப்படறேன். கும்பகோணம் வந்துட்டு ஃபோன் செய்றன்’’

இரண்டு நாட்களாக அவருடைய வருகைக்காக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். குறுஞ்செய்திகள் மூலமாகவும் அலைபேசி அழைப்புகள் மூலமாகவும் தகவல் பரிமாறிக் கொண்டோம். இன்று காலை திருக்கடையூரில் சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு வருவதாக முடிவானது.  

அம்மா போனவாரம் எஸ். ராமகிருஷ்ணனின் ‘’கதாவிலாசம்’’ வாசித்துக் கொண்டிருப்பதை கவனித்திருந்தேன். 

அம்மாவிடம் கேட்டேன். 

‘’அம்மா! நீங்க எஸ். ராமகிருஷ்ணன் எழுத்துக்கள்ல ‘’கதா விலாசம்’’ மட்டும் தான் வாசிச்சிருக்கீங்களா?’’

‘’ கதா விலாசம் போன வாரம் வாசிச்சன். அதுக்கு முன்னாடியே சஞ்சாரம், இடக்கை நாவல்கள் படிச்சிருக்கன்’’

அம்மா எஸ். ராமகிருஷ்ணனின் தீவிர வாசகராயிருந்தது மகிழ்ச்சி தந்தது. 

‘’அம்மா! மோர் ரெடி பண்ணி வச்சுக்கங்க. ஜூஸ் தயார் பண்ண பழங்கள் இருக்குல்ல. ஏதும் வேணும்னா சொல்லுங்க. நான் கடைத்தெரு போய் வாங்கிட்டு வர்ரேன்’’

‘’எல்லாம் இங்கயே இருக்கு.’’

திரு. எஸ். ராமகிருஷ்ணன் எழுத்துக்களை இருபது ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். ‘’அட்சரம்’’ என்ற சிற்றிதழை அவர் நடத்திய போது அதன் முதல் இதழிலிருந்து வாசித்திருக்கிறேன். அதில் ‘’உலகில் காலூன்றாத எனது வீடு’’ என்ற கட்டுரை இன்னும் நினைவில் உள்ளது. ’’ஷீரசாத் கதை சொல்வதை நிறுத்தி விட்டாள்’’ என்று அவர் எழுதிய குறிப்பு மறக்க முடியாதது. அவரது பயண நூல்கள் தமிழ்ச் சூழலில் இந்திய நிலத்தின் முடிவற்ற வண்ணங்களின் சொற்சித்திரத்தைத் தீட்டுபவை. 

நான் அவரை பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் கும்பகோணத்தில் தான் முதல் முறையாக சந்தித்தேன். பின்னர் அவர் இந்த பிராந்தியத்துக்கு வரும் போது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு நிகழ்ச்சி முடிந்ததும் அவர் இரவு ரயிலேறிச் செல்லும் வரை உடனிருந்திருக்கிறேன். 

இன்று வீட்டுக்கு வருவதாகச் சொன்னதும் சற்று படபடப்பாக இருந்தேன். ஆர்வத்தாலும் விருப்பத்தாலும் ஏற்படும் படபடப்பு. 

இன்று காலை 11 மணி அளவில் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களும் அவருடைய மனைவி திருமதி. சந்திரபிரபா அவர்களும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். 

இலக்கியம், பயணம், ஆலயங்கள், பண்பாடு என பல விஷயங்களைக் குறித்து எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தது மகிழ்ச்சி அளித்தது. 

வீட்டுக்கு ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், அழகிய சிங்கர், ஞானக்கூத்தன், சுநீல் கிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்கள் வருகை புரிந்திருக்கிறார்கள். இன்று எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள். 

Thursday 18 March 2021

நூல் அறிமுகம் : ஸ்ரீராமகிருஷ்ண சரிதம்


நூல் : ஸ்ரீராமகிருஷ்ண சரிதம் இயற்றியவர் : சுவாமி சித்பவானந்தர் பக்கம் : 102 விலை : ரூ.22 வெளியீடு : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் , அ.கு. எ 639 115

நாம் பிறக்கும் போதே, பால், மொழி, சமூக, பிராந்திய அடையாளங்கள் நம்மை வந்தடைந்து விடுகின்றன. பின்னர் வளரும் தோறும், நாம் இந்த அடையாளங்களுக்கும் வேற்றுமைகளுக்கும் பழக்கப்படுத்தப்படுகிறோம் ; பயிற்றுவிக்கப்படுகிறோம். சாமானியம் என்பது இந்த எல்லைகளே. உலகின் கோடானு கோடி மக்களின் அறிவு இந்த எல்லைக்குள் நின்றே வாழ்வை அணுகுகிறது. வாழ்வின் சுக துக்கங்களை உணர்கிறது. கோடி கோடியில் சிலரே இந்த எல்லைகள் அறியாமையிலிருந்து உருவாகுபவை என்ற உண்மையை உணர்கின்றனர். மானுட சமூகத்துக்கு உண்மை எது என்பதை உணர்த்துகின்றனர். அவர்களே ஆச்சார்யர்கள். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அத்தகையவர். 

நம் இந்திய மண்ணுக்கு சிறப்பு என ஏதும் இருக்குமானால் அது ஸ்ரீகிருஷ்ணரையும் பகவான் புத்தரையும் ஆதி சங்கரரையும் ராமானுஜரையும் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரையும் உலகுக்கு அளித்ததே ஆகும். 

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் எல்லா ஆன்மீக மார்க்கங்களையும் தன் வாழ்வில் அனுபவரீதியாக சாதனை செய்கிறார். ஆன்மீகத்தின் சாதனையில் வெவ்வேறு படிநிலைகளில் இருக்கும் சாதகர்களுக்கு வழிகாட்டுகிறார். 

அவரது அருள் வெள்ளம் இன்றும் பிரவாகமெடுத்து ஆத்ம தாகம் கொண்ட சாதகர்களின் தாகத்தைப் போக்கி வருகிறது. 

Wednesday 17 March 2021

நூல் அறிமுகம் : தமிழகத்தில் சுவாமி விவேகானந்தர்


நூல் : தமிழகத்தில் சுவாமி விவேகானந்தர் பக்கம் : 234 விலை : ரூ.30 வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம், அ.கு.எ 639115.

சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வ சமய மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு இந்தியா திரும்புகையில் முதலில் தமிழ் மண்ணில் காலடி வைக்கிறார். பாம்பனில் அவர் வந்திறங்குகிறார். இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி தான் சிகாகோ மாநாட்டில் கலந்து கொள்ள முக்கிய காரணமாயிருந்ததை சுவாமிஜி நினைவு கூர்கிறார். 

தமிழ்நாட்டுக்கும் சுவாமி விவேகானந்தருக்குமான உறவு என்பது மிகவும் நெருங்கியது. தமிழ்நாட்டின் மீது சுவாமிஜிக்கு பெரும் நம்பிக்கை இருந்திருக்கிறது. 

சுவாமி விவேகானந்தர் ஓர் ஆச்சார்யனின் இடத்திலிருந்து நம் நாடு எந்த திசையில் செல்ல வேண்டும் என்று எடுத்துரைக்கிறார். நாம் நம்மைப் புதுப்பித்துக் கொள்ள ஆற்ற வேண்டிய செயல்கள் என்ன என்பதை விளக்கமாகச் சொல்கிறார். 

மக்களுக்குச் செய்யும் சேவையே கடவுளுக்கு ஆற்றப்படும் சிறந்த வழிபாடு என்கிறார் சுவாமிஜி. வேதம் மானுடர்களை ‘’அமிர்தத்தின் புதல்வர்களே’’ (அமிர்தஸ்ய புத்ர;) என அழைப்பதைக் கொண்டு எல்லா மனிதர்களுமே இறைமையின் குழந்தைகள் எனவே அவர்களிடம் உறைந்துள்ள தெய்வீகத் தன்மையை அடையாளம் கண்டு அவர்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்கிறார். 

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராய் இருப்பதற்கு எவரும் தான் பழகி வந்திருக்கும் எந்த விதமான நிஷ்டையையும் பின்பற்றலாம் ; அதற்கு எத்தடையும் இல்லை; எனினும் அவர்கள் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளையும் ஞானத்தையும் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். 

வேதாந்தம் எவ்வாறு ஹிந்து சிந்தனையின் உன்னதமான உயரத்தில் இருக்கிறது எனக் கூறும் சுவாமிஜி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், சங்கரர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோர் வேதாந்திகளே என்கிறார். பகவான் புத்தருக்கும் ராமானுஜருக்கும் வேதாந்தத்துடனும் அத்வைதத்துடனும் இருந்த உரையாடலை எடுத்துச் சொல்கிறார். 

தமிழ்நாட்டில் பாம்பன், இராமேஸ்வரம், இராமநாதபுரம்,மானாமதுரை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் ஆற்றிய உரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. 
இந்த மௌனம் 
இன்னும் 
எத்தனை ரூபம் கொள்ளப் போகிறது
இன்னும்
எத்தனை அடர்த்தி அடையும்
எங்கோ
ஒரு செடி
வாய்ப்புகள் மிகக் குறைவான மண்ணில்
பிடிவாதமாக வேர் விட்டுக் கொண்டிருக்கிறது
ஒரு மலர்
ஆளரவமற்ற நிலத்தில்
மணம் வீசி மலர்கிறது
சொற்கள் இல்லை
ஒலிகள் இல்லை
மௌனம் மட்டுமே 
நிரம்ப
தொடரும் 
இந்த காலம் தான்
எத்தனை நீளம்
எத்தனை ஆழம்

Tuesday 16 March 2021

திறன் மேம்பாடு

 நான் மடிக்கணினி வாங்கியது பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னால். இத்தனை ஆண்டுகளில் பெரிய சிக்கல்கள் ஏதும் இல்லை. ஓரிரு சிறு சிக்கல்கள் ஏற்பட்டதுண்டு. சில நாட்களில் அவை சரிசெய்யப்பட்டு விடும். ஆனால் இம்முறை கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகி விட்டது. மடிக்கணினியைப் பிரிந்து இருப்பது என்பது தனிப்பட்ட முறையில் மிகவும் வருத்தத்தை அளித்தது. மிகப் பிந்தி , நண்பர் ஒருவர் அவருடைய லேப்டாப்பைக் கொடுத்து உதவினார். எனினும் எனக்கு என்னுடைய லேப்டாப் தேவைப்பட்டது.

முதலில் ஒரு சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றேன். காலை கொண்டு போய் கொடுத்தேன். மாலையில் வரச் சொன்னார்கள்.

‘’சார்! ஓப்பன் பண்ணி பாத்துட்டோம். இது ரொம்ப பழைய மாடல். சரி பண்ண முடியாது. நம்மகிட்ட புதுசு ஒண்ணு வாங்கிக்கங்க. 30,000க்கு நல்ல மாடல் கிடைக்கும்.’’

‘’இன்னைக்கு காலைல வரைக்கும் நல்லா ஃபங்ஷன் ஆகிட்டு இருந்துச்சு. ஏதாவது ஸ்பேர் மாத்தறதுன்னா மாத்திடலாம்’’

‘’இதுக்கு ஸ்பேர்லாம் கிடைக்காது சார். புதுசு வாங்கிக்கங்க’’

நான் லேப்டாப்பை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்.

எனது லேப்டாபை உற்பத்தி செய்த நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் கும்பகோணத்தில் உள்ளது. அங்கே எடுத்துச் சென்று கொடுத்து வந்தேன். இரண்டு நாள் கழித்து வரச் சொன்னார்கள். சென்றேன்.

அதே பாட்டு.

திரும்ப வீட்டுக்கு எடுத்து வந்து விட்டேன்.

நண்பர்கள் சிலர் மயிலாடுதுறையில் ஒரு புதிய சர்வீஸ் சென்டரை பரிந்துரை செய்தார்கள்.

அங்கும் அதே கதை.

பின்னர் என் உறவினர் ஒருவருடன் கலந்தாலோசித்தேன். அவர் கடலூரில் ஒரு சர்வீஸ் சென்டரை சொன்னார்.

அங்கு எடுத்துச் சென்றேன்.

ஒன்றரை மாதம் ஆகி விட்டது.

ஆனால் லேப்டாப்பை இயங்க வைத்து விட்டார். ரூ.2000 சர்வீஸ் கட்டணமாக வாங்கிக் கொண்டார்.

‘’டெஸ்க் டாப் மாதிரி யூஸ் பண்ணிக்கங்க சார். இன்னும் கொஞ்ச நாள் வரும்.’’

‘’இத்தனை வருஷத்துல என் லேப்டாப் என் வீட்டை விட்டு எங்கயும் வெளியில எடுத்துட்டு போனதில்லை. இப்ப தான் முதல் தடவை கடலூர் வந்திருக்கு.’’

‘’அடுத்த தடவை ஏதும் ஃபால்ட்ன்னா புதுசு மாத்திடுங்க’’

‘’டாகுமெண்ட் எல்லாத்தையும் சேமிச்சு வச்சுக்கறன். எனக்கு இது இன்னும் கொஞ்ச நாள் உழைக்கும்னு தோணுது. ‘’

தொழில் திறன் உள்ளவர்களால் அடுத்தவர்களும் பயன் இருக்கிறது.  

Saturday 13 March 2021

ஒளிரும் சுடர்

 அன்பே தகளியா*  ஆர்வமே நெய் ஆக,* 
இன்பு உருகு சிந்தை இடு திரியா,*  நன்பு உருகி* 
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன்*  நாரணற்கு* 
ஞானத் தமிழ் புரிந்த நான். 

_பூதத்தாழ்வார்

{அன்பை விளக்காக்கி ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு இனிய நற்சிந்தனை என்னும் திரியில்  பரம்பொருளுக்கு செம்மையான ஞானச்சுடர் விளக்கை ஞானத்தமிழில் ஏற்றுகிறேன்.}

இன்று மாசி மாதக் கருநிலவு. இரவில் இருள் பேரடர்த்தி கொண்டிருக்கும் தினம். ‘’ஞான தீபம்’’ பணிகளை இன்று துவங்கலாம் என உத்தேசித்தேன். நிதி ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதலில் 15 செட் புத்தகங்களை ஆர்டர் செய்து சலூன்களுக்கு அன்புக் கொடையாக வழங்கலாம் என எண்ணினேன். எந்த பணிக்கும் ஒரு துவக்கம் அளித்தல் என்பது மிக முக்கியமான செயல். துவங்கி விட்டால் பின்னர் அதுவே தன் இயல்பான வேகத்தைச் சென்றடைந்து கொள்ளும். 

நேற்று மாலை புத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தேன். இன்று காலை பார்சல் ஊருக்கு வந்தது. 

கட்டுமானப் பணிகளை மனையின் வடகிழக்கு பகுதியிலிருந்து துவங்குவோம். அதைப் போல மயிலாடுதுறை மாவட்டத்தின் வடகிழக்கு முனையில் இருக்கும் ஊரிலிருந்து ‘’ஞான தீபம்’’ பணிகளைத் துவங்கினேன். ஐந்து ஊர்களில் உள்ள சலூன்களில் நூல்களை அளித்தேன். சலூன் கடைக்காரர்கள் மிக நல்ல வரவேற்பு அளித்தனர். உணர்வுபூர்வமாக மிக்க நன்றி சொன்னார்கள். பத்து செட் புத்தகங்கள் இன்று அளிக்கப்பட்டன. நாளை ஞாயிற்றுக்கிழமை மீதமிருக்கும் ஐந்து செட் புத்தகங்களைக் கொடுத்து விடலாம். 

பார்சல் கட்டு பெரியதாக இருந்தது. 15 செட் புத்தகங்களே இவ்வளவு பெரிதென்றால் 400 செட் ஆர்டர் செய்தால் அது எத்தனை பார்சல் கட்டுகளாக வரும் என கற்பனை செய்து பார்த்தேன். 

நண்பர்களின் துணையே நம்மை இயங்க வைக்கிறது. அவர்களுக்கு என்றும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். 

Friday 12 March 2021

மறுபக்கம்

எனது நண்பர் ஒருவர் மருத்துவர். அவர் எனக்கு சகோதரனைப் போன்றவர். அவர் கைக்குழந்தையாயிருந்த போதிலிருந்து நான் அறிவேன். நான் தூக்கி வளர்த்த குழந்தை. மருத்துவம் படித்து மருத்துவத்தில் மேற்படிப்பும் முடித்து இப்போது வெளி மாநிலம் ஒன்றில் பணி புரிகிறார். சில வாரங்களுக்கு முன்னால், ஊருக்கு வந்திருந்த போது என்னைக் காண வீட்டுக்கு வந்திருந்தார். கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டாயா என்று கேட்டேன். எங்கள் மருத்துவமனையில் அனைவரும் போட்டுக் கொண்டோம் என்று சொன்னார். மிகவும் துல்லியமான இயங்குமுறையில் பதிவும் செயலாக்கமும் நடைபெறுகிறது என்று சொன்னார். 

தமிழ்நாட்டில் அதே நடைமுறை முன்வைக்கப்பட்டது. ஆனால் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. அதில் என்னென்ன ஒழுங்கீனமெல்லாம் நிகழ்த்த முடியுமோ அத்தனையும் நிகழ்த்தினார்கள்.  இந்தியாவில் இவ்வளவு குறைவான வரவேற்பு மருத்துவத் துறையால் அளிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் மட்டும் தான். 

இந்தியா முழுமைக்குமான ‘’நீட்’’ தேர்வு குறித்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கருத்து சொல்லி திசை திருப்பி அதை அரசியல் பிரச்சனையாக்கினர். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருப்பதை விட இங்கே மருத்துவ உள் கட்டமைப்பு அதிகம் என அதற்கு காரணம் கூறினர். தமிழ்நாட்டின் மருத்துவர்களில் கணிசமானோர் ‘’நீட்’’ தேர்வுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்மறை பிரச்சாரத்துக்குத் துணை நின்றார்கள். தமிழ்நாட்டின் மருத்துவத் துறையின் செயல் தரம் எந்த அளவு தாழ்ந்து இருக்கிறது என்பதற்கு கோவிட்-19 தடுப்பூசி குறித்து அவர்கள் நடந்து கொண்டிருக்கும் விதமே சான்று. தமிழ்நாட்டு மருத்துவத் துறை எந்த அளவு அரசியல் உள்நோக்கங்கள் கொண்டுள்ளது என்பதற்கும். 

தமிழ்நாட்டில் ஒரு சங்கிலித் தொடர் இருக்கிறது. அது எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது எனில்

1. அரசியல்வாதிகள் மது பானத் தொழிற்சாலை வைத்துக் கொண்டு மது தயாரிப்பார்கள்.

2. அரசாங்கம் மது விற்கும். 

3. மதுவால் குடிமக்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளாவார்கள். 

4. அரசாங்கம்  மாவட்டத்துக்கு மாவட்டம் மருத்துவக் கல்லூரி திறக்கும். 

5. மருத்துவத்தை மக்களுக்கு இலவசமாக வழங்குவதாகச் சொல்லும். 

6. எண்ணிக்கையில் பெரிய வலைப்பின்னலில் மருத்துவம் அளிப்பதால் மிகப் பெரிய அளவிலான ஊழலும் முறைகேடுகளும் சுகாதாரத் துறையில் நிகழும். 

7. சமூகம் நோய்மையில் சிக்கித் தவிப்பதால் மருத்துவம் பெரும் பொருளீட்டும்  செயல்பாடு ஆகும். 

இவ்வாறாக இந்த சங்கிலித் தொடர் பூர்த்தியாகும். 

தமிழ்ச் சமூகம் தன் நோய்மையிலிருந்து விடுபட வேண்டிய நேரம் இது. 

Tuesday 9 March 2021

ஆபரேஷன் ஷீல்டு

இன்று மாலை செயல் புரியும் கிராமத்துக்குச் சென்று நண்பர்களைச் சந்தித்தேன். அவர்கள் மிக உற்சாகமாக வரவேற்றார்கள். கிராமத்தில் உள்ள எவரும் விடுபடாமல் முழுமையாகச் செய்து முடிக்கலாம் என்றார்கள். அவர்களின் உற்சாகத்தில் அவர்கள் இந்த விஷயத்தில் காட்டும் ஆர்வம் தெரிந்தது. எதையும் சரியாக உரிய விதத்தில் எடுத்துச் சொன்னால் எவரும் கேட்பார்கள் என்பது எனது அனுப்வம். குறைந்தபட்சம் பரிசீலிக்கவாவது செய்வார்கள். 

cowin.gov.in  என்ற இணையதளம் குறித்து சொன்னேன். அதிலேயே அனைத்து பதிவுகளையும் மேற்கொள்ள முடியும் என்ற விபரத்தையும் அது இயங்கும் முறையையும் விளக்கினேன். மிகவும் வியந்தார்கள். 

நமது செயல்முறைக்கு ‘’ஆபரேஷன் ஷீல்டு’’ என பெயரிடலாம் என்று சொன்னேன். பெரும் உற்சாகம் அடைந்தார்கள். 

மயிலாடுதுறையில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது என்பதால் இந்த பெயரிடல்.

நாளை ஒரு மாதிரிப் படிவத்தை எடுத்துச் சென்று காட்ட வேண்டும். அதில் ஏதும் மாற்றங்கள் செய்யலாமா அல்லது அப்படியே ஏற்கலாமா என கிராமத்து இளைஞர்களுடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலை படிவங்களை ஒவ்வொரு வீடாகச் சென்று தடுப்பூசி குறித்து எடுத்துச் சொல்லி நிரப்புமாறு கொடுத்து விட்டு வர வேண்டும். அன்று மாலையே ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நிரப்பப்பட்ட படிவத்தைப் பெற்று விட வேண்டும். தடுப்பூசி போடத் தகுதி உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை கிடைத்து விடும். அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் அடுத்தடுத்த விஷயங்களைத் திட்டமிடலாம். 

ஞான தீபம்  பணி முன்னேற்றங்கள் குறித்து சொன்னேன். 

 

Monday 8 March 2021

உத்தம லாபம்

யட்சன் : லாபா நாம் உத்தமம் கிம்?
யுதிர்ஷ்ட்ரன் : லாபா நாம் சிரேயஸ் : ஆரோக்யம்

யட்சன் : லாபத்தில் சிறந்தது எது?
யுதிர்ஷ்ட்ரன் : ஆரோக்கியமே உத்தமமான லாபம்.

-யட்சப் பிரசன்னம், மகாபாரதம். 

என் பெற்றோருக்கு நான் வீட்டில் அதிக நேரம் இருப்பதில்லை என்னும் மனக்குறை. எங்காவது கிளம்பிச் சென்று விட்டு உணவருந்தத் தாமதமாக வருகிறேன் என்று வருத்தம். அவர்கள் வருத்தத்தைப் போக்கும் விதமாக அவ்வப்போது ஏதாவது செய்ய முயல்வேன். செய்தித்தாளில் கோவிட் தடுப்பூசி மயிலாடுதுறையில் போடத் துவங்கி விட்டார்கள் என்ற செய்தி கண்டேன். அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரித்து விட்டு வருவோம் என்று காலையில் சென்றேன். அது மேற்கு பார்த்த வளாகம். அதன் கிழக்குக் கோடியில் தடுப்பூசி போடும் இடம் இருந்தது. நான் சென்று பார்த்த போது பெரிய கூட்டம் எதுவும் இல்லை என்பது ஆச்சர்யம் தந்தது. நான் சென்று விசாரித்தேன். காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை தடுப்பூசி போடுவதாகவும் வரும் போது ஆதார் அட்டை எடுத்து வர வேண்டும் என்றும் சொன்னார்கள். நான் வீட்டுக்குத் திரும்பி வந்து கேட்டறிந்த தகவலைச் சொன்னேன். நாளை காலை செல்லலாம் என முடிவானது. 

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் வயதானவர். சற்று உடல்நலம் இல்லாதவர். யாரேனும் உடன் வந்தால் மட்டுமே அவரால் வெளியே செல்ல முடியும். அவரைச் சென்று பார்த்தேன். தடுப்பூசி போடும் விபரத்தைச் சொல்லி மருத்துவமனைக்கு கிளம்பச் சொன்னேன். அவரை அழைத்துக் கொண்டு சென்றேன். 

இரண்டு செவிலிச் சகோதரிகள் பதிவு செய்யும் இடத்தில் இருந்தனர். அவர்கள் ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஆதார் அட்டையைப் பார்த்து பெயர், முகவரி, ஆதார் எண் ஆகியவற்றை குறித்துக் கொண்டு ஒரு சீட்டைக் கொடுத்தனர். அதில் மேற்படி விபரங்களுடன் இரண்டாம் முறை தடுப்பூசி போடும் தேதியும் குறிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து சிறிது தூரத்தில் ஒரு அறையின் வாசலில் கணினி முன் ஒரு சகோதரி அமர்ந்திருந்தாள். அவள் முன்னால் ஒரு அலைபேசி. அதில் வாட்ஸ் அப் பக்கம் திறந்திருந்தது. கையால் எழுதப்பட்டிருந்த விபரங்கள் அதில் தெரிந்தன. அந்த கையெழுத்து பதிவு செய்யும் இடத்தில் உள்ள பெண்ணின் கையெழுத்து என்பதை உணர்ந்து கொண்டேன். ஒவ்வொரு வரிசை எண்ணாக பதிவு செய்ய பதிவு செய்ய அந்த பெண் வாட்ஸப்பில் அனுப்புகிறாள். அதைப் பார்த்து இங்கே உள்ள பெண் கணினியில் ஏற்றுகிறாள். ஒரு வாட்ஸப் மெசேஜ் அனுப்ப ஒரு ரூபாய் கட்டணம் என்று வைத்தால் இந்தியர்கள் என்ன ஆவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். இந்தியர்கள் என்ன ஆவார்களோ வாட்ஸப் உலகிலிருந்தே காணாமல் போய் விடும்!

நாங்கள் இருந்த கட்டிடம் ஐந்து மாடிக் கட்டிடம். அதி நவீன வசதிகள் கொண்டது. தடுப்பூசி போடும் அறை மிகச் சுகாதாரமாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. பத்து வினாடிகள். நண்பருக்குத் தடுப்பூசி போட்டாயிற்று. அரை மணி நேரம் உடல்நிலையில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என அவதானிக்க வேண்டும் என்று சொன்னார்கள். நண்பரை லகுவாக அமர வைத்து விட்டு பத்து நிமிடத்தில் வந்து விடுகிறேன் எனக் கூறி விட்டு தபால் ஆஃபிஸ் வரை சென்றேன். அங்கே சில கடிதங்கள் அனுப்ப வேண்டியிருந்தது. நான் திரும்பி வர அரைமணி நேரமாயிற்று. பெரியவர் உடல்நிலை சீராக இருந்தது. செவிலிச் சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்து விட்டு புறப்பட்டோம். 

அரசாங்கம் மக்கள் நலனுக்காக ஒரு விஷயத்தைத் திட்டமிடுகிறது. அதற்கு மக்களிடமிருந்து முழு ஒத்துழைப்பு கிடைத்தால் தானே ஒரு விஷயம் முழுமை பெறும். அதனை உணரும் இடத்துக்கு நம் சமூகம் என்று வரும் என மனம் கொதித்தது. அதில் இன்னும் ஆச்சர்யம் தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை மருத்துவர்களிலும் பணியாளர்களிலும் கணிசமானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பதை எப்படி புரிந்து கொள்வது? அதில் எத்தனை அலோபதி மருத்துவர்கள் ஆயுர்வேதத்தை மருத்துவமாகவே கருத மாட்டோம் என வீதிக்கு வந்து போராடினர்? 

ஆளற்ற வராந்தாவும் காலியாக இருந்த பிளாஸ்டிக் இருக்கைகளும் என மனதில் தோன்றி மறைந்த போது எனக்குள் ஓர் எண்ணம் உதித்தது. 

செயல் புரியும் கிராமத்தின் மக்கள் தொகை தோராயமாக 1500. அதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 300 பேர் இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் அழைத்து வந்து அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி போட முடியுமா என்று யோசித்தேன். 

சாத்தியம்தான் என்று தோன்றியது. 

கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என கணக்கெடுக்க வேண்டும். அவர்களிடம் தடுப்பூசி குறித்தும் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது குறித்தும் விளக்க வேண்டும். பின்னர் அவர்கள் மயிலாடுதுறை வருவதற்கு ஒரு நாளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அன்று அவர்களை வேன் அல்லது பேருந்து ஏற்பாடு செய்து அழைத்து வந்து மீண்டும் ஊரில் கொண்டு போய் விட வேண்டும். என் மனம் அடுத்தடுத்து நடக்க வேண்டியதை அகக் கண்ணால் கண்டு கொண்டிருந்தது. 

என்னுடைய நண்பருக்கு ஃபோன் செய்தேன். ‘’ஹலோ ! பிரபு பேசுறன். 5 நிமிஷம் பேசலாமா?’’

அவர் கல்லூரிப் பேராசிரியர். 

‘’பேசலாம். பேசலாம். சொல்லு என்ன விஷயம்?’’

‘’இந்த சலூன் லைப்ரரி சம்பந்தமா உன் ஃபிரண்டு ஒருத்தர்ட்ட பேசுறன்னு சொன்னியே. அது என்னாச்சு?’’

‘’இன்னைக்கு சாயந்திரம் பேசிட்டு பணம் எப்ப வரும்னு சொல்லிடறன்’’

‘’எப்பவுமே நான் தான் என்ன அப்டேட்னு கேக்க வேண்டியதா இருக்கு. மார்ச் 15 க்குள்ள எல்லா விஷயமும் செய்யணும்னு முடிவு பண்ணியிருக்கோம். ஞாபகமிருக்குல்ல?

‘’இன்னும் ஒரு வாரம் இருக்கேப்பா’’

‘’ஒரு வாரம் தான் இருக்கு’’ என்று அழுத்தமாகச் சொன்னேன். 

பேராசிரியர் மௌனம் காத்தார். 

‘’ஆக்சுவலா நான் வேற ஒரு விஷயத்துக்காக ஃபோன் செஞ்சேன்”

‘’என்ன விஷயம்?’’

‘’நாம பிளாண்டேஷன் பண்ணோம்ல அந்த கிராமத்துல 60 வயசுக்கு மேல இருக்கறவங்க 300 பேர் இருப்பாங்க. அவங்கள அசெம்பிள் பண்ணி மாயூரம் கூட்டி வந்து கோவிட் தடுப்பூசி போட்டுக்க உதவி செய்யலாம்னு நினைக்கறன்.’’

‘’நல்ல விஷயம் தான். மக்கள் கோ ஆப்பரேட் பண்ணுவாங்களா?’’

‘’எடுத்துச் சொன்னா கேப்பாங்க’’

‘’என்ன செலவு ஆகும்?’’

‘’டிரான்ஸ்போர்டேஷன் செலவு தான். ரொம்ப பெருசு கிடையாது’’

‘’ஏற்பாடு பண்ணிக்கலாம். நீ ஆர்கனைஸ் செய்’’

‘’சப்போர்ட்டுக்கு ரொம்ப தேங்க்ஸ்’’

‘’நான் உன்னை சாயந்திரம் மீட் பண்றேன்’’

பேசி முடித்தோம். அடுத்த ஃபோனை கர்நாடகாவுக்குப் போட்டேன். 

‘’அண்ணா! சொல்லுங்க அண்ணா’’

‘’ஃபிரண்டு ஒருத்தருக்கு தடுப்பூசி போட வந்தேன். அப்ப ஒரு ஐடியா தோணுச்சு’’ . சுருக்கமாகச் சொன்னேன். 

’’நல்ல விஷயம் அண்ணா.’’

‘’சலூன் லைப்ரரிக்கு ஒர்க் பண்ணனும். அதுக்கு மினிமமா 150 ஊருக்காவது நேர போற மாதிரி இருக்கும்.’’

‘’நீங்க மேனேஜ் பண்ணிடுவீங்க. செய்ங்க’’

’’ஏதோ நீங்கள்லாம் கொடுக்கற சப்போர்ட்ல ஒன்னுல இருந்து இன்னொன்னு செய்ய முடியுது. பகவான் மேல பாரத்தைப் போட்டுடறன்’’

’’பேங்க் அவர்ஸ் முடிஞ்சதும் நான் சாயந்திரம் ஃபோன் பண்றேன் அண்ணா’’

தம்பி விடுபட்டான். 

கிராமத்துக்கு ஃபோன் செய்தேன். இளைஞர்களிடம் பேசினேன். 

‘’சார்! நாங்க கூட இருக்கோம் சார். நீங்க சொன்னா எல்லாரும் கேப்பாங்க. நமக்கு நல்ல ரிசல்ட் இருக்கும்’’

ஒரு இளைஞன் மட்டும் ஒரு சந்தேகம் கேட்டான். 

‘’சார்! ஒரு டாக்டரை ஊருக்கு அழைச்சுட்டு வந்து எல்லாருக்கும் தடுப்பூசி போட்டுட்டா?’’

‘’தம்பி! கோவிட் தடுப்பூசி குறிப்பிட்ட சில ஹாஸ்பிடல்ல தான் இருக்கு. வெளியில கொண்டு வர முடியாது.’’

இத்தனை பேர் ஆதரவளிக்கும் விஷயத்தை எளிதில் செய்து விடலாம் என்று மனம் உறுதி கொண்டது. 

ஒவ்வொரு வீட்டுக்காகச் சென்று தடுப்பூசியின் முக்கியத்துவத்தைத் தெரிவிக்க வேண்டும். பின்னர் தோதான ஒரு நாளை முடிவு செய்ய வேண்டும். வாகன ஏற்பாடு செய்ய வேண்டும். பஸ் 60 பேரை மாயூரத்தில் கொண்டு போய் விட்டு உடன் திரும்பும். அரைமணியில் கிராமத்திலிருந்து அடுத்த பேருந்து கிளம்பும். ஒவ்வொரு பேருந்தும் மூன்று முறை சென்று வரும். கோவிட் தடுப்பூசியின் பாதுகாப்பை முழுமையாய்ப் பெறும் முதல் கிராமம். 

சென்ற ஆண்டு மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் தான் அந்த கிராமத்துக்கு முதல் முறையாகச் சென்றேன் என்பது நினைவில் வந்தது. 

‘’கடமையைச் செய்’’ என்கிறது கீதை.  

சாரம்

பிரவாகிக்கும் நதியில்
மிதக்கும் 
இலையும் மலரும்
துறையில்
நீரருந்தும்
ஆவினமும்
நதியை
என்னவாக உணர்கின்றன
*
மென்மையின் சாரல்கள்
நிறைந்திருக்கும்
உனது பிரதேசத்தின்
நிலத்தில்
உயிர்க்கும் 
உயிர்கள்
அடையும் அமரத்துவம்
எதனால்
*
உனது பிரியம்
என்பது
முடிவற்ற மன்னித்தலா
*

Sunday 7 March 2021

நிதி சேர்க்கை

சிறு குழந்தைகளுக்கு ஒரு பழக்கம் உண்டு. எல்லாரும் கவனித்திருக்கலாம். உறவினர்கள் வீட்டுக்கு வந்தால் குழந்தைகள் அவர்களிடம் ‘’நீங்கள் எப்போது ஊருக்குப் போவீர்கள்?’’ என்று கேட்பார்கள். வீட்டில் அனைவரும் அவ்வாறு கேட்கக் கூடாது என்று கடிந்து கொண்டு சத்தம் போடுவார்கள். உண்மையில் எல்லா குழந்தைகளுமே வீட்டுக்கு வரும் உறவினர்களை விரும்பும்; அவர்கள் அதிக நாட்கள் விருந்தினராகத் தங்கியிருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படும். ‘’ரொம்ப நாள் தங்கியிருப்பீர்கள் தானே?’’ எனக் கேட்க எண்ணி வேறு மாதிரி கேட்டு விடும். நானும் சிறு வயதில் அந்த மாதிரி கேட்டிருக்கிறேன். 

ஓர் அமைப்பை நடத்துவது என்பது பெரும் பணி. அத்திறன் எளிதில் கைவரப் பெற்றவர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன். ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் நுண் செயல்பாடுகள். சிறிய அலகில் திட்டமிடப்படுபவை. செயலாக்கப்படுபவை. ’’செய்வன திருந்தச் செய்’’ என்னும் அடிப்படையில் வேலைகள் நடைபெறுகின்றன. கட்டுமானம் என்னுடைய தொழில் என்பதால் அத்தொழிலை மேற்கொள்வதன் பயிற்சி அமைப்பை வழிநடத்துவதிலும் உதவுகிறது. 

இருப்பினும் இவ்வாறான பணிக்கு நான் எதிர்பாராமல் வந்து சேர்ந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். கட்டுமானப் பணி என்பது பணி இடத்தில் நாள் முழுதும் நின்று கொண்டே வேலைகளை மேற்பார்வையிட வேண்டும். கொதிக்கும் வெயிலில் எவ்வித அல்லலும் இல்லாமல் நிற்க பொறியாளர்களுக்குப் பயிற்சி உண்டு. வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டால் மனம் உடனே தயாராகி விடும். எங்கள் தொழிலில் ஒரு வேலையைச் சரியாகச் செய்யாமல் போனால் அதை சரி செய்வதையும் மீண்டும் நாம் மட்டுமே செய்தாக வேண்டாம். பிழை நிகழ்ந்து அதனைத் திருத்துவது என்பது மும்மடங்கு நேரத்தையும் ஆற்றலையும் கோரும்.  எனவே எதையும் முதல் தடவை செய்யும் போதே சரியாகத் திருத்தமாகச் செய்து விடுவது யாவர்க்கும் நலம்!

என்னுடைய தொழில் சார்ந்த பணிகளைத் தவிர மற்ற நேரத்தில் படைப்பூக்கச் செயல்பாடுகளில் (Creative) ஈடுபட்டிருப்பேன். அதன் இயல்புகளும் தன்மைகளும் முற்றிலும் வேறானவை. காந்திய இயக்கத்திலிருந்து இந்தியாவின் பெரும் படைப்பாளிகள் பலர் உருவாகி வந்திருக்கின்றனர். உலகெங்கும் கலைஞர்களுக்கு மேலான சமூகம் குறித்த கனவு இருந்திருக்கிறது; இருக்கிறது. 

என் ஆளுமையின் பகுதியாக இருக்கும் பொறியாளன் - கலைஞன் - சமூகச் செயல்பாட்டாளன் என்பது அவ்வப்போது கலந்து விடும். அவை சிறு சிறு குழப்பங்களை உண்டாக்கி விடுவது உண்டு. 

சில நாட்கள் முன்பு, ‘’காவிரி போற்றுதும்’’  சார்பில் செயல் புரியும் கிராமத்தின் ஒவ்வொரு  வீட்டு வாசலில் மலர்ச்செடிகள் வைக்கும் முயற்சிக்கு உதவி செய்த நண்பர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். 

***
அன்புள்ள நண்பருக்கு,

நலமா? வீட்டில் அனைவரும் நலம் தானே? நான் இங்கே நலம்.

 

ஒரு புதிய விஷயத்தை முன்னெடுக்க உள்ளேன். ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்கு நீங்கள் அளித்த நன்கொடை பெரிய தொகை. ஆதலால் இந்த முறை நீங்கள் நிதி அளிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். ‘’காவிரி போற்றுதும்’’ எவ்விதமான செயல்பாடுகளை முன்னெடுக்கிறது எந்த திசையில் நகர்கிறது என்பதை தங்களைப் போன்றோரிடம் தெரிவித்து ஆலோசிப்பது மனதுக்கு ஊக்கம் அளிக்கிறது.

 

கீழ்க்கண்ட இணைப்பை வாசிக்கவும். தங்கள் அபிப்ராயத்தைத் தெரிவிக்கவும்.

 

ஞான தீபம்

 

அன்புடன்,

பிரபு 


***

கரகாட்டக்காரன் படத்தில், கவுண்டமணி ஒரு வசனம் பேசுவார். ‘’இந்தியாவிலயே ஏன் இந்த வேர்ல்ட்லயே கார் வச்சுருக்க கரகாட்ட கோஷ்டி நம்ம கோஷ்டி தான்’’ என்று. 

அது போல நிதி தர வேண்டாம்; அபிப்ராயம் மட்டும் தெரிவியுங்கள் எனக் கேட்டது நாமாகத் தான் இருப்போம் என நினைக்கிறேன்!

 

நூல் அறிமுகம் : சிகாகோ பிரசங்கங்கள்

 


சிகாகோ பிரசங்கங்கள் ; சுவாமி விவேகானந்தர் , மொழிபெயர்ப்பு ; சுவாமி சித்பவானந்தா, பக்கம் : 41 விலை : ரூ. 10 வெளியீடு : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம், அ.கு.எ 639115.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் உரையாற்றினார். மாநாட்டில் சுவாமிஜி ஆறு முறை உரையாற்றியிருக்கிறார். முதல் உரையிலேயே அவர் மாநாட்டில் கூடியிருந்தவர்களின் உள்ளத்தைக் கவர்ந்தார். அவ்வுரை குறித்த தகவல்கள் பத்திரிக்கைகளில் வெளியான போது ஒட்டு மொத்த அமெரிக்காவும் சுவாமிஜியைத் திரும்பிப் பார்த்தது. உற்று நோக்கியது. 

ஆறு உரைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவை. அவற்றைத் தொகுத்து வாசிக்கும் போது ஹிந்து மதம் குறித்தும் இந்தியா குறித்தும் சமயங்களின் இலக்குகள் மற்றும் எல்லைகள் குறித்தும் முழுமையான புரிதல் உண்டாகிறது. 

முதல் உரை

மாநாட்டில் கூடியிருந்தவர்களை, தன் சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் உணர்ந்து அவ்வாறு அழைத்ததன் மூலமே மானுடம் தழுவிய தனது பார்வையை வெளிப்படுத்தினார். ‘’வசுதைவ குடும்பம்’’ என இந்திய மரபு கூறுவதும் அதையே என்பதை உணர்த்தினார். 

மதங்களுக்குள் சமரசம் நிலவ வேண்டும் என்பது சிகாகோ மாநாட்டின் முயற்சி. அத்தகைய தன்மை இந்திய மண்ணில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்ததை சுவாமிஜி எடுத்துரைக்கிறார். யூதர்களும் ஜாரதுஷ்டிரர்களும் அழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான போது அவர்களுக்குப் புகலிடம் அளித்து அவர்கள் சமயத்தை அவர்கள் காப்பாற்றிக் கொள்ள வழிவகை செய்து கொடுத்த நாட்டிலிருந்து பண்பாட்டிலிருந்து தான் வந்தவன் என சுவாமிஜி குறிப்பிடுகிறார். 

நதிகள் கடலை அடைவது போல சமயங்கள் ஒவ்வொரு பாதையில் கடவுளை அடைகின்றன. சமய பேதத்தை மனதில் இருத்துவது அறியாமை என்கிறார் சுவாமிஜி. 

முதல் உரையிலேயே சுவாமிஜி பிரஸ்தானத்திரயங்களில் ஒன்றான பகவத்கீதையிலிருந்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ‘’எவர் என்னை எந்த வடிவில் வழிபட்டாலும் அதனை ஏற்பேன்’’ எனக் கூறுவதை எடுத்துரைக்கிறார். 

சிகாகோ மாநாடு துவங்கப்படுவதை உணர்த்த எழுப்பப்பட்ட மணியோசை மதவெறிக்கு சாவுமணியாக இருக்கட்டும் என முதல் உரையை நிறைவு செய்கிறார். 

இரண்டாவது உரை

சுவாமிஜி சிகாகோவில் தனது இரண்டாவது உரையில் இன்றும் மிகப் பிரபலமான ‘’கிணற்றுத் தவளை’’ கதையைக் கூறுகிறார். 

அந்த காலகட்டத்தில் உலகெங்கும் ஏகாதிபத்ய சக்திகள் தாங்கள் அடிமைப்படுத்திய நிலங்களில் வாழும் மக்களின் பண்பாட்டை அழிக்க கிருஸ்தவ மத பரப்புனர்களை அனுப்பிக் கொண்டிருந்தன, அவர்கள் உலகெங்கும் கிருஸ்துவமே உயர்ந்தது என பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். இந்த பின்புலத்தில், சுவாமிஜியின் ’’கிணற்றுத் தவளை’’ கதை மேலும் கூடுதல் அர்த்தங்கள் பொதிந்தது. 

தங்களைச் சமயவாதிகள் எனக் கருதிக் கொள்பவர்கள் திறந்த மனத்துடன் உரையாடக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்கிறார். 

மூன்றாவது உரை

இந்திய மண்ணில் எண்ணற்ற வழிபாட்டு வழிமுறைகள் இருப்பதை சுட்டிக் காட்டும் சுவாமிஜி அவற்றுக்கு வேதங்களே அடிப்படை என்கிறார். வேதங்கள் எவ்விதம் பல்வேறு வழிபாட்டு முறைகளுக்கான அடிப்படையாக இருக்கிறது என்பதையும் சுவாமிஜி விளக்குகிறார்.ஆலய வழிபாட்டிலிருந்து அத்வைத உணர்வு வரை அனைத்தும் இந்திய மண்ணின் பகுதியாக விளங்குவதை சுட்டிக் காட்டுகிறார். இந்த உரையில் சுவாமிஜி பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடர் என்ற முறையிலும் அத்வைதியாகவும் அத்வைதத்தின் மேலான தன்மை குறித்து விரிவாக எடுத்துரைக்கிறார். 

நான்காவது உரை

மேலை நாடுகளின் மனசாட்சியை நோக்கி சுவாமிஜி ஒரு இந்தியத் துறவியாக எங்கள் மக்களுக்கு இப்போதைய தேவை உணவு ; மதம் அல்ல என்பதை துணிச்சலாகக் கூறுகிறார். 

ஐந்தாவது உரை

இந்த உரையில் சுவாமிஜி தான் ஒரு பௌத்தன் என்கிறார். ஹிந்துக்கள் புத்தரைக் கடவுளாகவும் அவதார புருஷராகவும் கருதுகிறார்கள் என்கிறார். 

புத்தர் கருணையின் வடிவமாக இருந்ததை எடுத்துக் காட்டும் சுவாமிஜி அவர் வறியவர்களுக்கு உதவி செய்வதையே மகத்தான ஒன்றாகக் கருதியை சுட்டிக் காட்டுகிறார். 

உண்மையில் நான்காவது உரைக்கும் ஐந்தாவது உரைக்கும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. மக்கள் மீதான கருணையே மேலை நாடுகளின் நோக்கம் எனில் புத்த மதத்தைப் போல ஏழைகளுக்கு உதவுவதே உங்கள் சமயமாக இருக்கும்; உங்கள் நோக்கங்கள் வேறானவை என்பதை நேரடியாகத் தெரிவிக்காமல் குறிப்பாகச் சுட்டிக் காட்டுகிறார். 

இறுதி உரை

மதமாற்றம் உலகில் அமைதியின்மையையும் கொடுஞ் செயல்களையுமே உண்டாக்கும் என்றும் மதமாற்றம் எதற்குமே தீர்வு அல்ல; அதுவே எல்லா சிக்கல்களுக்கும் அடிப்படையான காரணம் என்றும் சுவாமிஜி சொல்கிறார்.  


Saturday 6 March 2021

முதல் ஆதரவு - கடிதம்

 அன்பின் பிரபு

இதை ஊர் கூடித் தேர் இழுக்கும் முயற்சியாகவே பார்க்கிறேன். உங்களின் ஒவ்வொரு முயற்சியும் மிக நுட்பமாக திட்டமிடப்பட்டுள்ளன. உங்களின் அனைத்து முயற்சிகளும் சிறப்பாக வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். 

அன்புடன்
உலகநாதன்

அன்புள்ள உலகநாதன்,

ஸ்ரீநிவாஸைப் போல நீங்களும் திருவாரூர்க்காரர் என்பதை கடிதத்தின் முதல் வரியை வாசிக்கும் போது நினைவுபடுத்திக் கொண்டேன். ஆரூரின் அடையாளம் ஆழித்தேர் தானே!

இந்தியாவில் வாழ்க்கை என்பது பெரும் கொண்டாட்டமாக இருந்திருக்கிறது. வேண்டுமானால் இப்படியும் சொல்லலாம் : உலகில் எந்த மண்ணை விடவும் ஒப்பீட்டளவில் நம் மண்ணில் கூடுதலாகக் கொண்டாட்டம் இருந்திருக்கிறது. 

இசை , கூத்து ஆகியவை அன்றாட வாழ்வில் முக்கிய இடம் பெற்று இருந்திருக்கின்றன. ஒரு கிராமத்தில் தான் எத்தனை விதமான விளையாட்டுக்கள் விளையாடியுள்ளனர். இன்றும் இந்தியாவில் சங்கீதக் கச்சேரிகள் பெரும் கொண்டாட்டங்களே. 

அன்னியக் கல்வி முறை ஓயாமல் இந்தியர்களிடம் நூற்றாண்டுகளுக்கு மேலாக மெல்ல சொல்லிக் கொண்டே இருந்தது : நீங்கள் வறியவர்கள் . நீங்கள் நாகரிகம் இல்லாதவர்கள். நீங்கள் எதையும் நிர்மாணிக்க இயலாதவர்கள் என. நமது நாட்டின் இளைஞர்களும் பெண்களும் முறையாகப் பயிற்றுவிக்கப்படுவார்களாயின் அளப்பரிய சாதனைகள் இங்கே நிகழும். 

நான் தினமும் சாமானிய மக்களைச் சந்திப்பவன். இன்று நாம் மரக்கன்றுகள் வழங்கிய கிராமத்துக்குச் சென்றிருந்தேன். தைப்பூசத்தன்று சென்றிருந்தேன். பின்னர் இன்று செல்கிறேன். ஒரு பெண் என்னைப் பார்த்ததும் ‘’சார்! எங்க வீட்டுக்கு பாரிஜாதக் கன்னு ஒண்ணு வேணும் சார். கோயில்ல பூஜைக்கு வேணும்’’ என்றார். என்னிடம் கேட்டதுமே பாரிஜாதக் கன்று நடப்பட்டு வளர்ந்து பூத்து அதன் மலர் இறைவனுக்கு அர்ப்பணம் ஆகி விட்டதைப் போல அப்பெண்ணுக்கு பூரிப்பு. ‘’ரெண்டு நாள்ல திரும்ப வருவேன். அப்ப வாங்கிட்டு வரேம்மா’’ என்றேன். 

ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் நாம் தந்த அரளி பூச்செடிகள் நல்ல உயரம் வளர்ந்து பூத்துள்ளன. காணவே மகிழ்ச்சியாக இருந்தது. 

மக்கள் நுட்பமாக இருக்கிறார்கள். நுட்மான ஒன்றை நுட்பமாகவே ஏற்கிறார்கள். 

உங்களைப் போன்ற நண்பர்கள் உடனிருந்து அளிக்கும் உற்சாகம் நம் செயல்பாடுகளைக் கொண்டாட்டமாக ஆக்குகின்றன. 

அன்புடன்,
பி ம

Friday 5 March 2021

நூல் அறிமுகம் : சுவாமி விவேகானந்தர்



நூல் : சுவாமி விவேகானந்தர் ஆசிரியர் : ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
பக்கம் : 106  வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்,  அ கு எ :639115. விலை : ரூ. 27/- 

இந்தியா என்னும் நிலப்பரப்பு வெறும் பௌதிக நிலம் அன்று. பல்லாயிரம் ஆண்டுகளாக உயிரினங்களில் சிந்தனை என்னும் சிறப்பு அம்சம் கொண்டதான மனித இனம் வாழ்தலில் ஆக உயர்ந்த நிலையை எய்துவதற்கான சாதனங்களை உருவாக்கித் தருவதை தம் கடமையெனக் கருதி மேற்கொண்டு வருவது இம்மண்ணின் மகத்துவங்களில் ஒன்று. மிருக நிலையிலிருந்து உயர்ந்த அமர நிலைக்கு மனித வாழ்வைக் கொண்டு செல்லுதலே இந்திய வாழ்முறையின் நோக்கமாயிருந்திருக்கிறது. ஞானியரின் யோகியரின் பக்தர்களின் பெருநிரை ஒன்று இம்மண்ணில் தொடர்ந்து இலங்கிய வண்ணமே இருக்கிறது. அத்தன்மையுடையோரில் முக்கியமானவர் சுவாமி விவேகானந்தர். சுவாமிகளைப் பற்றி ஸ்ரீராமகிருஷண சிஷ்ய மரபில் வந்தவரான ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இந்நூலை இயற்றியுள்ளார். 

இந்திய மரபு, மனிதனின் ஆத்மீகப் பாதை பல பிறவிகளாகத் தொடர்வது எனக் கூறுகிறது. எனினும் ஒரு குரு தன் ஆத்மீக சாதனையை திறனும் கவனமும் அர்ப்பணிப்பும் மிக்க தம் சீடனுக்கு எளிதில் வழங்கிட முடியும். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து ஆன்மீக ஞானம் பெற்றவர் சுவாமி விவேகானந்தர். 

சுவாமிஜியின் பெற்றோருக்கு இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பின் மூன்றாவதாகப் பிறக்கிறார் சுவாமிஜி. சிறு வயதிலேயே சேட்டைகள் பல புரிபவராக இருக்கிறார். சுவாமிஜியின் அன்னை சிவபெருமானிடம், ‘’நீ எனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என விரும்பினேன். நீ உன் பூத கணம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறாயே ‘’ என்கிறார். சிறு வயது முதலே இறை உரு முன் தியானத்தில் நெடுநேரம் அமர்ந்து விடுவது சுவாமிஜியின் பழக்கம்.

பால பருவத்தில் , சுவாமிஜி வாழ்வில் நடந்த பல சம்பவங்களைக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். அவருடைய கல்வி எவ்விதம் நிகழ்ந்தது என்பதையும் விளக்குகிறார். 

குருதேவர் ராமகிருஷ்ணரால் ஆட்கொள்ளப் படுவது, குருவுக்குப் பின், மடத்தை உண்டாக்குவது. பரதேசியாக நாடு முழுதும் அலைந்து திரிந்தது, சிகாகோ சர்வ மத சபை என சுவாமிகளின் வாழ்விலும் இந்திய வரலாற்றிலும் முக்கியமான இந்நிகழ்வுகளை சுவை பட விளக்குகிறார் சுவாமி சித்பவானந்தர். 

சுவாமிஜி, சுவாமிஜியின் இந்திய மேல்நாட்டு சீடர்கள், ஆற்றிய பணிகள், அவருடைய செய்தி என அனைத்தைப் பற்றியும் சுருக்கமான அறிமுகம் அளிக்கக் கூடிய நூல்.  

 

முதல் ஆதரவு

 ஆதித்ய ஸ்ரீநிவாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதி வரும் திருவாரூர்க்காரரான திரு. க. ஸ்ரீநிவாஸ் என் நண்பர். தற்போது கர்நாடக மாநிலத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராகப் பணி புரிந்து வருகிறார். சலூன் நூலகங்கள் குறித்து அவரிடம் பேசினேன். துணை நிற்குமாறு கேட்டுக் கொண்டேன். தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விஷயத்தைக் கொண்டு சென்று அவர்கள் உதவியுடன் குறைந்தபட்சம் 100 சலூன்களுக்குத் தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறினார். எனக்கு அது பெரிய நம்பிக்கையை அளித்தது. 

நண்பா! நீ என் மீது வைத்துள்ள அன்புக்கும் பிரியத்துக்கும் மதிப்புக்கும் மிக்க நன்றி. உனக்கு எல்லா நலன்களும் கிட்டட்டும்!

அவர் தன் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் உதவி கேட்டு எழுதிய கடிதத்தைக் கீழே தருகிறேன். 


அன்புள்ள நண்பருக்கு,

“Books are the quietest and most constant of friends; they are the most accessible and wisest of counselors, and the most patient of teachers.”– Charles W. Eliot

வாசிக்கும் சமூகம் மேம்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அப்படியான ஒரு இடம் நோக்கி சிறு அடிவைப்பு. முதல் படி இது. பொது இடங்களில் புத்தகங்களை வைப்பதைவிட அச்சிட்டு எல்லோருக்கும் இலவச வினியோகம் செய்வதை விட சிறிது நேரம் கண்டிப்பாக காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும் இடங்களில் புத்தகங்கள் இருந்தால்?


அப்படியான ஒரு இடமாக சலூன்கள் உள்ளன. எப்படியும் நாம் குறைந்தது ஐந்து முதல் பத்து நிமிடம் வரை காத்திருக்க நேரும் இடம் சலூன். அங்கு கண்ணில் படும்படி ஒரு பத்து புத்தகம். வரும் வாடிக்கையாளர்களில் பத்தில் ஒருவர்  படித்தால் கூட போதும். ஒரு மாவட்டத்தில் இருக்கும் அத்தனை சலூன்களிலும் புத்தகங்களிருந்தால்?

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுக்காக்கள் - மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம். தோராயமாக 500 சலூன்கள். ஒரு கடைக்கு 10 புத்தகங்கள். எல்லாம் சிறிய முக்கியமான புத்தகங்கள். பத்து புத்தகங்களுக்கு ஆகும் செலவு ரூ.100. ஒருவர் ரூ.100 அல்லது அதிகபட்சம் ரூ.200 கொடுத்து உதவலாம்.

இதனை முன்னெடுப்பவர் என் நெருங்கிய நண்பர் 'மயிலாடுதுறை பிரபு'. இவர் காவிரி போற்றுதும் எனும் ஒரு தன்னார்வ முன்னெடுப்பின் மூலம் மயிலாடுதுறை தாலுக்காவில் ஒரு கிராமத்தில் சுமார் 20000 மரக்கன்றுகளை நட்டுள்ளார் .அவருடைய திட்டமிது. செவ்வனே செய்து முடிப்பார்.

ஆக உங்களிடம் நான் கோருவது ரூ.100 அல்லது ரூ.200. எதுவானாலும்.


இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் உங்கள் கொடை ஒரு புத்தகத் திரட்டாக மயிலாடுதுறை மாவட்டத்தின் ஏதாவது ஒரு சலூனில் இருக்கும். அறிவாக மக்களில் மலரும்.

"A thousand mile journey starts with one single step."

அன்புடன்
க.ஸ்ரீநிவாஸ்

Thursday 4 March 2021

ஞான தீபம்

நான் வாடிக்கையாகச் செல்லும் சலூனின் உரிமையாளர் எனது நண்பர். இளைஞர். சமூகப் பிரக்ஞை உள்ளவர். 

சென்ற ஆண்டில் நான் அங்கு சென்றிருந்த போது அவரிடம் ஒரு விஷயத்தைக் கூறினேன். 

‘’தம்பி! சலூன் -ல சின்னதா ஒரு புக் ஷெல்ஃப் வைங்க. இருபது முப்பது புத்தகம் வைக்கற மாதிரி. என்கிட்ட ஆயிரம் புக்ஸுக்கு மேல இருக்கு. அதுல இருந்து முப்பது புத்தகம் உங்களுக்கு கிஃப்ட்டா தர்ரேன். சலூனுக்கு வர்ரவங்க வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது வாசிக்கக் கொடுங்க. யூஸ் ஃபுல்லா இருக்கும். ‘’

‘’எங்க அண்ணன்! எல்லார் கையிலும் செல்ஃபோன் இருக்கு. எல்லாரும் செல்ஃபோனைத் தோண்டிட்டு இருக்காங்க’’

‘’உண்மை தான் தம்பி. மனுஷங்கள்ள பெரும்பாலானவங்க பழக்கத்துக்கு அடிமையா இருக்கறவங்க தான். ஆனா அவங்களுக்கும் எது சரி எது தப்புன்னு தெரியும். ஒரு சலூன்ல லைப்ரரி போல ஒரு சிஸ்டம் இருக்கறத அவங்க ரொம்ப வேல்யூ உள்ளதா நினைப்பாங்க’’

’’அண்ணன் கடையில சில இண்டீரியர் ஒர்க் பண்ணலாம்னு இருக்கன். அப்ப ஒரு புக் ஷெல்ஃப் அரேஞ்ச் பண்றேன். ‘’

சில மாதங்கள் சென்றன. அவர் சலூனில் ஒரு ஏ.சி.யைப் பொருத்தினார். சுழலும் நாற்காலிகளை புதிதாக வாங்கிப் போட்டார். எனினும் அவர் திட்டமிட்ட விதத்தில் தச்சுவேலை எதையும் செய்யவில்லை. தற்காலிகமாக அதனை தள்ளி வைத்தார். 

ஒருமுறை நான் சென்றிருந்த போது உற்சாகமாக வரவேற்றார். 

‘’அண்ணன்! விஷயம் கேள்விப்பட்டீங்களா!’’

‘’என்ன விஷயம் தம்பி?’’

‘’தூத்துக்குடி-ல ஒரு சலூன்ல லைப்ரரி மாதிரி நிறைய புக்ஸ் வச்சுருக்காங்க. முடி வெட்டிக்க வர்ரவங்க அந்த புக்ஸை எடுத்துப் படிக்கிறாங்க. பிரைம் மினிஸ்டர் ரேடியோவில பேசற ‘’மன் கி பாத்’’ நிகழ்ச்சில அந்த சலூன் கடைக்காரரோட பேசியிருக்கார் அண்ணன்’’

‘’அப்படியா! நல்ல விஷயம் தம்பி. நிறைய பேருக்கு இப்படி ஒரு நல்ல விஷயம் நடக்கறது போய் சேரும். இன்னும் பல பேரு கூட செஞ்சு பாப்பாங்க’’

அந்த உரையின் ஒரு பகுதியின் காணொளியை எனக்கு தன்னுடைய அலைபேசியில் காண்பித்தார். 

‘’அண்ணன்! நாம முன்னாடி பிளான் செஞ்சதைப் போல ஏதாவது செய்யணும் அண்ணன்.’’ சகோதரர் மிகவும் ஆர்வமாக இருந்தார். 

‘’நான் யோசிக்கிறேன் தம்பி’’

வீட்டுக்கு வந்து யோசித்தேன். நடந்த சம்பவங்கள் மனதில் முன்னும் பின்னுமாய் வந்து போயின. ஒரு விஷயம் குறித்து யோசிக்கையில் நான் அதனை மனதில் ஆழ விட்டு விடுவேன். நாம் எதிர்பார்க்காத கணம் ஒன்றில் ஒரு யோசனை அல்லது ஒரு எண்ணம் அல்லது ஒரு அவதானம் மேலெழுந்து வரும். அப்படி ஒரு யோசனை உண்டானது. 

மறுநாள் நான் சலூன்கடைக்காரரைச் சந்தித்தேன். 

‘’தம்பி! நீங்க சொன்ன விஷயத்தை யோசிச்சுப் பார்த்தேன். ஒரு ஐடியா தோணுச்சு.’’

‘’சொல்லுங்க அண்ணன்’’

‘’இப்ப நம்ம ஊர் மாவட்டத் தலைநகரா ஆகியிருக்கு. தமிழ்நாட்டோட சின்ன மாவட்டங்கள்ல ஒன்னு. இந்த மாவட்டம் முழுதும் எத்தனை சலூன் இருக்கும்?’’

அவர் யோசித்தார். 

‘’நம்ம மாவட்டத்துல மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம்னு நாலு தாலுக்கா இருக்கு. நாலு தாலுக்காவிலயும் மொத்தமா 250 கிராமங்கள் இருக்கு. சராசரியா மூணு கிராமத்துக்கு ஒரு சலூன்னு வச்சுகிட்டா கிராமங்கள்-ல 80-லிருந்து 100 சலூன் இருக்கும். பெரிய டவுன், சின்ன ஊர்னு சேர்த்தோம்னா மொத்தம் 400 சலூன் இருக்கும்’’

‘’கரெக்ட் தான் சார்! 400 - 500 சலூன் இருக்கும்’’

‘’நாம இந்த 400 சலூன்லயும் பத்து புக் தர்ரோம். ஒரே நாள்ல நம்ம மாவட்டம் முழுக்க இருக்கற சலூன்கள் சலூன் லைப்ரரியா ஆகுது.’’

‘’கொஞ்சம் பெரிய வேலையாச்சே சார்’’

‘’பெரிய வேலை தான். ஆனா முக்கியமான வேலை. நாம சேந்து செய்வோம். உங்களுக்கு என்ன சப்போர்ட் வேணுமோ அத நான் கொடுக்கறன். இதைப் பத்தி நீங்க யோசிங்க. உங்களுக்கு இது சம்பந்தமா மனசுல என்ன கேள்விகள் வருதோ அதுக்கு நான் பதில் சொல்றேன். நாம இந்த விஷயம் சம்பந்தமா சேர்ந்து யோசிப்போம். வேதத்தில ஒரு மந்திரம் இருக்கு.

‘ஒன்று கூடி சிந்தியுங்கள்
சேர்ந்து அமர்ந்து விவாதம் செய்யுங்கள்
உங்கள் மனம் ஒன்றாகட்டும்’ ‘’

அவர் யோசிக்கட்டும் என நான் வீட்டுக்கு வந்து விட்டேன். 

நானும் வீட்டுக்கு வந்து ஒவ்வொரு சலூன் நூலகத்திலும் இருக்க வேண்டிய பத்து நூல்கள் என்னவாக இருக்கலாம் என யோசித்தேன். அந்த பத்து நூல்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது. சுவாமி விவேகானந்தரின் நூல்களைத் தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்தேன். 




இந்தியாவில் பலருக்கு சுவாமி விவேகானந்தர் பெரும் உந்து சக்தியாக விளங்கியுள்ளார். சமூக சேவகர்கள், கல்வியாளர்கள், தொண்டு புரிபவர்கள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர்கள் என பலருக்கு சுவாமிஜியே சிந்தனையின் அடித்தளமாக இருந்துள்ளார். எனவே இந்த பத்து நூல்களும் சுவாமி விவேகானந்தரை அடிப்படையாய்க் கொண்டு இருப்பது உகந்ததாக இருக்கும் என்று எண்ணினேன். 




சுவாமி சித்பவானந்தர் தமிழ் அறிஞர். தமிழில் விவேகானந்த இலக்கியத்தில் முக்கியமான முன்னோடி. அவருடைய தமிழ்த் தொண்டு தமிழ்நாட்டுச் சூழலில் முழுதாக உணரப்படவில்லை என்ற மனக்குறை எனக்கு உண்டு. மொழி, சமயம், இலக்கியம், ஆன்மீகம், சமூகம் சார்ந்து பலநூல்களை இயற்றியவர். தமிழ்நாட்டில் பெரும் கல்வி மற்றும் சமூகப் பணியாற்றியவர். அவர் சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய நூல்களாக இந்த 10 நூல்களும் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதினேன். 

1. சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகாந்தரின் வாழ்க்கையை சுருக்கமாக அறிமுகம் செய்யும் நூல். 

2. ஸ்ரீவிவேகானந்தர் ஜீவிதம்

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை விரிவாக முன்வைக்கும் நூல். சுவாமிஜி குறித்து ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் குறித்து இந்தியாவின் ஆன்மீகப் பாரம்பர்யம் குறித்து சுவாமிஜி வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து சுவாமிஜி இளைஞர்களுக்கு விடுத்த அறைகூவல் குறித்து விரிவாக எழுதப்பட்ட நூல். 

3. சிகாகோ பிரசங்கங்கள்

சிகாகோ சர்வ சமய மாநாட்டில் சுவாமிஜி ஆற்றிய சரித்திர பிரசித்தி பெற்ற உரைகளின் தொகுப்பு இந்நூல்.

4. தமிழகத்தில் சுவாமி விவேகானந்தர்

சுவாமிஜி சிகாகோவில் உரையாற்றிய பின் இந்தியா திரும்புகையில் கப்பலில் இராமேஸ்வரம் பாம்பன் வந்தடைகிறார். அவர் பாம்பன், இராமேஸ்வரம், இராமநாதபுரம், மானாமதுரை, பரமக்குடி, மதுரை, கும்பகோணம் மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் உரையாற்றியுள்ளார். அந்த உரைகளின் தொகுப்பு இந்நூல். 

5. விவேகானந்த உபநிஷதம்

சுவாமிஜி அமெரிக்காவில் தன் மேலைச் சீடர்களுடன் ‘’ஆயிரம் தீவுச் சோலை’’ என்னும் இடத்தில் தங்கியிருந்து அவர்களுக்கு வேதாந்தத்தைப் போதித்தார். அந்த போதனைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. 

6. ஸ்ரீராமகிருஷ்ண சரிதம்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் அவதார புருஷர். நமது நாடும் நமது பண்பாடும் அழியாமல் இருப்பதற்கான முக்கியமான காரணம் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும். அவரது வரலாற்றை எடுத்துரைக்கும் சிறுநூல். 

7. இராமாயணம்

சுவாமி சித்பவானந்தர் வால்மீகி இராமாயணத்தை ஒட்டி தமிழில் எழுதிய நூல். 

8. மகாபாரதம்

சுவாமி சித்பவானந்தர் வியாச பாரதத்தை ஒட்டி தமிழில் எழுதிய நூல். 

இந்த எட்டு நூல்களும் சுவாமி சித்பவானந்தர் இயற்றியவை. 

9. ஆத்ம போதம்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அத்வைதி. அத்வைதத்தின் ஆச்சார்யரான ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட நூல் ஆத்ம போதம். திரு. வி.எஸ். நரசிம்மன் என்பவர் சுலோகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். 

10. கந்தர் அனுபூதி

அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட ‘’கந்தர் அனுபூதி’’. 

இந்த பத்து நூல்களும் கொண்ட தொகுப்பு இந்தியா குறித்து இந்திய ஆன்மீகம் குறித்து இந்தியப் பண்பாடு குறித்து மிக நல்ல அறிமுகம் அளிக்கக் கூடியவை. 

அவற்றை இணையத்தில் rktapovanam(dot)org தளத்தில் ஆர்டர் செய்தேன். இரண்டு நாளில் கைக்கு வந்தது. நண்பரின் சலூனில் கொண்டு போய் வைத்தேன். 

‘’தம்பி! எந்த நல்ல விஷயத்தையும் உடனே செய்யணும். சுபஸ்ய சீக்கிரம்-னு சொல்லுவாங்க. இந்த புக்ஸ்ஸை சலூன்ல வைங்க. ஒரு வாரம் பத்து நாள் பாருங்க. ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு. கஸ்டமர் என்ன மாதிரி கேள்வி கேக்கறாங்க. எப்படி ரிஸீவ் பன்றாங்கன்னு அப்சர்வ் பண்ணுங்க. அடுத்து என்ன செய்யலாம்னு நாம அப்புறம் யோசிக்கலாம்’’

ஒரு வாரம் கழித்து நான் சலூனுக்குச் சென்றேன். 

‘’அண்ணன்! நல்ல ரெஸ்பான்ஸ் இருக்குன்னன். தினமும் அஞ்சு ஆறு பேர் புக் எடுத்து படிக்கிறாங்க. என்ன ஏதுன்னு விசாரிக்கறாங்க அண்ணன்’’ 

‘’தம்பி! சுவாமிஜி நம்ம நாட்டையே உருவாக்கினவர். மகாத்மா காந்தி, அரவிந்தர், திலகர், வல்லபாய் படேல், நேரு, அம்பேத்கர், ஜெயப்பிரகாஷ் நாராயண் னு பலபேருக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தவரு. இன்னைக்கு நம்ம தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில அது ஸ்கூலோ காலேஜ்ஜோ சுவாமிஜி பத்தி ஒரு வார்த்தை இல்லை. குழந்தைகளும் இளைஞர்களும் அவங்க பள்ளிப்படிப்பு வழியா சுவாமி விவேகானந்தரைக் கேள்விப்பட கூட வழி இல்ல. இன்னைய தேதில ஒரு கவர்மெண்ட் ஸ்கூலோ காலேஜோ செய்யாதத நீங்க செஞ்சிருக்கீங்க. உங்களுக்கு நிச்சயம் தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும் தம்பி.’’

மேலும் சில நாட்கள் சென்றன. நான் அவ்வப்போது சென்று பார்த்து வந்தேன். அவருக்கு சில விஷயங்கள் குறித்து விளக்கம் தேவைப்பட்டது. அவற்றைக் கேட்டார். நான் எனக்குத் தெரிந்த பதில்களைத் தந்தேன். 

1. அண்ணன்! சலூன் -ல ஆன்மீகப் புத்தகங்கள் இருக்கறது பொருத்தமா இருக்குமா?

தம்பி! மகாபாரதத்துல ஒரு கதை இருக்கு. ஒரு யோகி ரொம்ப வருஷம் தவம் செஞ்சு நிறைய சித்திகளை அடையறாரு. அவர் தவம் செஞ்சுகிட்டு இருக்கும் போது வானத்துல பறக்கற ஒரு பறவை அவர் மேல தெரியாம எச்சமிட்டுடுது. அதை அவர் கோபத்தோட பாக்கறார். அது எரிஞ்சு சாம்பலா விழுந்திடுது. தான் தவத்துல ரொம்ப பெரிய இடத்துக்கு வந்துட்டோம்னு பல வருஷ தவத்தை முடிச்சுட்டு ஊருக்குள் வர்ராறு. 

ஒரு வீட்டு வாசல்ல நின்னு ‘’பவதி பிக்‌ஷாம் தே ஹி’’ன்னு பிச்சை கேக்கறார். அந்த வீட்டு அம்மா பிச்சை போட வர நேரமாகுது. அவங்க வந்ததும் கோபமா பாக்கறாரு. அந்த அம்மா ‘’ என்ன முனிவரே! என்ன கொக்குன்னு நினைச்சீங்களா உங்க பார்வையாலே எரிக்கறதுக்கு ‘’ன்னு சிரிச்சிட்டே கேக்கறாங்க. முனிவருக்கு ரொம்ப அதிர்ச்சி. உங்களுக்கு எப்படி நடந்ததை அறியுற தவவலிமை வந்ததுன்னு கேக்கறாரு. 

தவம் செய்யறவனுக்கு மட்டும்தான் தவவலிமை கிடைக்கும்னு இல்லை. தன்னோட கடமையை முழுமையாச் செய்றவனுக்கும் தவவலிமை கிடைக்கும். உடம்பு முடியாத என்னோட கணவருக்கு நான் சிரத்தையா பணிவிடை செய்றன். அதனால எனக்கு இந்த சித்தி கிடைச்சுதுன்னு அந்த அம்மா சொல்றாங்க. 

அந்த அம்மாட்ட அந்த முனிவர் ஞானோபதேசம் செய்யச் சொல்றாரு. 

இந்த ஊர்ல கடைத்தெருவுல ஒரு இறைச்சிக் கடை இருக்கு. அந்த இறைச்சிக் கடைக்காரர போய் பாருங்க. அவர் தான் உங்களுக்கு உபதேசம் செய்ய மேலும் பொருத்தமானவர்னு சொல்றாங்க. 

முனிவர் அந்த இறைச்சிக்கடைக்காரரைப் பார்க்கப் போறார். 

அந்த இறைச்சிக் கடை ஒரே சந்தடியா இருக்கு. பிராணிகளோட ரத்தம், எலும்பு , தோல்னு சிதறிக் கிடக்கு. முனிவர் அங்க போய் நிக்கறார், கடைக்காரர் அவரைப் பார்த்ததும் ‘’வாங்க முனிவரே! உங்களை அந்த அம்மா அனுப்பினாங்களா. கொஞ்ச நேரம் காத்திருக்க முடியுமா? நான் என்னோட வேலைகளை முடிச்சுட்டு வர்ரேன்னு சொல்றார். 

முனிவர் ரொம்ப நேரமா காத்திருக்கார். சாயந்திரமா வியாபாரத்தை முடிச்சுட்டு கடையை சுத்தமாக் கழுவி விட்டுட்டு முனிவருக்கு ஸ்வதர்மம் பத்தி உபதேசம் செய்றார். 

இது மகாபாரதக் கதை தம்பி. 

தன்னோட கடமையை முழுமையாச் செய்றது தான் ஆன்மீகம்னு சுவாமி விவேகானந்தர் சொல்றார். நீங்க சமூகப் பிரக்ஞையோட ஒரு நல்ல காரியம் செய்யறீங்க. அதை எங்கயும் செய்யலாம் தம்பி. தீபம் எங்க இருந்தாலும் ஒளி கொடுக்கும். மல்லிகை எப்போதும் மணம் வீசும். 

2. புத்தகங்களை யாராவது வீட்டுக்கு எடுத்துப் போய் வாசிக்கக் கேட்டா என்ன செய்றது?

அவசியம் கொடுங்க தம்பி. என் கையில நான் ஸ்பேரா சில புக்ஸ் வச்சுக்கறன். அதுல இருந்து ரீ-பிளேஸ் பண்றேன். 

3. ஒரு நாளுக்கு 5 அல்லது 6 பேர் தான் படிக்கிறாங்க. எல்லாரும் படிக்கறது இல்லையே?

அதாவது தம்பி நாம இப்ப செய்யறது முதல் முயற்சி. மாவட்டம் முழுசும் 500 இடத்துல இருந்தா ஒரு நாளைக்கு ஒவ்வொரு சலூன்லயும் ஒருத்தர்னு எடுத்துப் பார்த்தா கூட 500 பேர் தினமும் பார்க்கறாங்கன்னு அர்த்தம். ஒரு மாசத்துக்கு ஒரு வருஷத்துக்குன்னு கணக்கு போட்டு பாருங்க. எத்தனை பேரை ரீச் செய்யும்னு யோசிங்க. 

அண்ணா ஹசாரே ஒரு ரயில்வே ஸ்டேஷன் புக் ஷாப்-ல தற்செயலா சுவாமி விவேகாந்தர் புத்தகத்தை வாசிக்கறார். அதுதான் அவர் வாழ்க்கைல ஒரு முக்கியமான திருப்புமுனையா இருந்துச்சு. ‘’ரலேகான் சித்தி’’ மாதிரி கிராமத்தோட அடிப்படை அது. 

நம்ம முயற்சி என்ன பலன் கொடுக்கும் நம்மால முழுக்க கணிச்சுற முடியாது தம்பி. 

4. இப்ப நான் என்ன செய்யணும்?

’’தம்பி! நான் ஃபிரண்ட்ஸ் சில பேர்ட்ட பேசி இருக்கேன். அவங்க சப்போர்ட் பண்றேன்னு சொல்றாங்க. அவங்களுக்கு இந்த விஷயம் ரொம்ப பிடிச்சிருக்கு. 400 சலூன். சலூனுக்கு 10 புக்-னா மொத்தம் 4000 புக்ஸ். நாம ஃபிரண்ட்ஸ் சப்போர்ட்டோட புக்ஸை வாங்கிடுவோம். அப்புறம் ஒவ்வொரு சலூனுக்கும் நேரா போய் விஷயத்தைச் சொல்லி கொடுத்துட்டு வருவோம். நல்ல விஷயத்தை எல்லாரும் சப்போர்ட் பண்ணுவாங்க தம்பி. உங்க சலூன்ல ஒரு மாசமா இந்த 10 புக்ஸ் இருக்கு. உங்க எக்ஸ்பீரியன்ஸ அவங்களுக்கு சொல்லுங்க. அது இன்னும் பொருத்தமா இருக்கும்.’’

5. இது பெரிய அளவில பலன் கொடுக்குமா சார்?

இது சின்ன அளவில பலன் கொடுத்தாக் கூட நிறைய பேருக்கு பிரயோஜனமா இருக்கும் தம்பி. 

6. இதுல வேற ஏதும் சிறப்பா செய்யனுமா?

மார்ச் 15 அன்னைக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் ஜெயந்தி. அன்னைக்கு நம்ம மாவட்டத்துல உள்ள எல்லா சலூன்லயும் இந்த பத்து புக்ஸ் இருக்கற மாதிரி ஏற்பாடு செய்யலாம். 

வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. 

இந்த முயற்சியில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புபவர்கள் ulagelam(at)gmail(dot)com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.