Thursday 31 December 2020

நித்ய நூதனம்

சில வாரங்களுக்கு முன் வந்திருந்த உறவுக்காரப் பையன் மீண்டும் ஊருக்கு வந்திருக்கிறான்.

இந்த உலகம் கேள்விகளால் கேட்கப்பட்டு அறியப்படும் ஒன்று என்ற நம்பிக்கையுடன் இருக்கிறான்.

வழக்கம் போல மாலை உலாவச் சென்றோம்.

’’பிரபு அண்ணா! நீங்க ஏதோ ஒரு கிராமத்துல ஏதோ சோஷியல் ஒர்க் பண்றதா அம்மா சொன்னாங்க. என்ன அது?’’

‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் குறித்து அவனிடம் சுருக்கமாகச் சொன்னேன்.

ஒரு ராஜதந்திரியைப் போல ‘’அப்படியா’’ என்று ஒற்றைச் சொல்லில் எதிர்வினையாற்றினான். .

சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் நடந்தோம். என் சொற்களை அவன் மனத்தில் கற்பனை செய்து பார்க்கிறான் என எண்ணினேன்.

‘’ஒங்க ஒர்க் ஓ.கே தான். ஆனா அது எந்த விதத்துல அவ்வளவு முக்கியம்னு நீங்க நினைக்கறீங்க?’’

‘’நான் ஒர்க்கோட தன்மையைப் பத்தி ஏதாவது சொன்னேனா?’’

‘’நீங்க சொல்லல. ஆனா அம்மா ஒரு கிராமம் முழுசுக்கும் நடந்த வேலைன்னு சொன்னாங்க. கிராமம் சின்னதுதானே. ஒரு கிராமத்துல ஆயிரம் பேர் பாப்புலேஷன் இருப்பாங்களா. நான் சிட்டி-ல இருக்கேன். அங்க ஒரு நகர்ல ஆயிரம் பேர் இருப்பாங்க. அதான் கேட்டேன்.’’

நான் பதில் சொன்னேன்.

’’தம்பி! ஹிஸ்டாரிக் சென்ஸோட இந்த விஷயத்தைப் பாக்கணும். இந்தியாவுல அடிப்படையான ஒரு அலகு கிராமம். ஐயாயிரம் வருஷத்துக்கு மேலே இந்தியாவுல ஒரு கிராமம்ங்றது ஒரு பொருளியல் அலகா ஒரு பண்பாட்டு அலகா இருந்துருக்கு. மகாபாரதத்துல, பாண்டவர்களுக்காக கிருஷ்ணன் தூது போகும் போது கௌரவர்கள்கிட்ட ஐந்து கிராமங்கள் பாண்டவர்களுக்கு கொடுங்கன்னு ரெக்வஸ்ட் பண்றான். கௌரவர்கள் முடியாதுன்னு சொல்றாங்க. ஒரு கிராமம் மட்டுமாவது கொடுங்கன்னு கேக்கறான். அதையும் மறுக்கறாங்க. பாதி ராஜ்யம் கேட்டு தூது போனவன் ஒரு கிராமத்தை மட்டுமாவது கொடுங்கன்னு கேக்கறான்னா என்ன அர்த்தம்? அந்த ஒரு கிராமமே முழு அரசுக்கும் சமம்னு அர்த்தம் இல்லையா?

‘’ஒரு கிராமம்ங்றது நீங்க சொல்ற அளவுக்கு வேல்யூ உள்ளதா?’’

’’ஒரு கிராமத்துல என்னென்ன இருக்குன்னு நினைச்சுப் பாத்தா ஆச்சர்யம் தம்பி!’’

’’ஒரு சின்ன கிராமத்துல என்னென்ன இருக்கும்?’’

‘’எல்லா கிராமத்துலயும் நாலு பிள்ளையார் கோவிலாவது இருக்கும். ரெண்டு மாரியம்மன் கோவில் இருக்கும். காளியம்மன் கோவில் இருக்கும். மதுரை வீரன், முனியாண்டி, சங்கிலி, வீரன்னு சின்ன சின்ன சன்னிதி இருக்கும். சிவன் கோவில் இல்லன்னா பெருமாள் கோவில். சில ஊர்ல ரெண்டும்’’

‘’கோவில் இருக்கறது பெருசா?’’

‘’கோவில் ரொம்ப பெரிய விஷயம் தம்பி. நம்ம தமிழ்நாடு பல நூறு வருஷமா கோயிலை மையமா வச்சு தான் இயங்கியிருக்கு. ஒரு ஊர்ல இத்தனை கோயில் இருக்குன்னா என்ன அர்த்தம். மக்களுக்கு அவங்க விரும்பற சாமியைக் கும்பிட சுதந்திரம் இருந்ததா தானே அர்த்தம்’’

‘’அதுல என்ன ஸ்பெஷல்?’’

‘’எங்க வளர்ச்சி இருக்கோ அங்க தான் பன்முகத் தன்மை இருக்கும். ஒரு கிராமம் பன் முகமான தன்மை உடையது.’’

‘’ஒரு கிராமத்தை முழுமையாக கவர் செஞ்சது அதனால பெருசுன்னு சொல்ரீங்களா?’’

‘’ஒரு கிராமத்தோட பண்பாட்டு அடிப்படையை உருவாக்க எவ்வள்வு பேர் சிந்திச்சிருக்காங்க. வேதம் ஓதுறவங்க, தேவாரம் பாடறவங்க, பூசாரிகள், உழவர்கள், கொல்லர்கள், தொழிலாளர்கள், நெசவாளிகள் இவங்க அத்தனை பேரையும் ஒருங்கிணைச்ச அரசர்கள்…’’

‘’அண்ணா! நீங்க சொல்றதெல்லாம் ரொம்ப புதுசா இருக்கு’’

‘’எப்பவும் புதுசா இருக்கற விஷயம் நம்ம கல்சரா இருக்கு’’

  

Tuesday 29 December 2020

பிரும்மாண்டம்

அரசியே
சூரியனை எவ்விதம் சுடரச் செய்கிறாய்
பச்சிளம் செடியை துளிர்க்கச் செய்யும் 
உன் ஸ்பரிசத்தின் மென்மை என்ன
உலையில் கொதிக்கும் அன்னம்
பசியாற்றுகிறது
உன் தீ
நாடகம் முடிந்த பின்னர்
அரங்கில் வந்தமர்கிறது
பிரும்மாண்டம் 

Monday 28 December 2020

அம்ருதம்

 என் அரசியே
உன் முன் பணிகிறேன்
உன் பாதத்தால் என் தலையைத் தொடு
என்னைச் சாம்பலாக்கு
குளத்தின் குளிர்ந்த நீர்ப்பரப்பில்
ஓடும் ஆற்றில்
ஆர்ப்பரிக்கும் அலைகடலில்
எங்கேனும்
என் சாம்பல் கரையும் போது
அழிவிலிருந்து
நிகழும்
ஆக்கம்
அப்போது
ஒரு மழைத்துளியாக
உன் முன் 
விழுவேன்
மீண்டும்

கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல்

வீட்டில் அனைவரும் இராமேஸ்வரம் போய் இருக்கிறார்கள். 

நான் வீட்டில் தனியாக இருக்கிறேன். தனியாக இருக்கும் போது, வீடு திடீரென அளவில் பெரிதாகி விட்டதாய்த் தோன்றும். எல்லாரும் இருக்கும் போது செய்யப்படும் வேலைகளை சற்று முன்னதாகவே செய்து விடுவேன். அதிக நேரம் வீட்டில் இருப்பேன். நண்பர்களை வரச் சொல்லி அவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பேன். 

இன்று ஒரு நண்பர் வந்திருந்தார். அவர் ஒரு வணிகர். கடுமையான உழைப்பாளி. ஞாயிறு என்பதால் அவருக்கு விடுமுறை. மாலை வந்திருந்தார். 

‘’என்ன பிரபு! ரெண்டு நாளா வீட்ல என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க’’

‘’கம்ப ராமாயணம் குறிச்சு ஒரு தொடர் எழுதி என்னோட பிளாக்-ல போஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கன். அதுல இப்போ ‘’கும்பகர்ணன் வதைப் படலம்’’ வந்திருக்கன்’’

‘’என்ன தொடர் அது. என்ன விபரம்?’’

‘’அது ஒரு பெரிய கதை அண்ணன்’’

‘’சொல்லுங்க கேப்போம்’’

எனக்கு என் மனத்தில் பதிவாகியிருப்பதை சொல்லத் தெரியும். சொல்லி முடிந்ததும் அது ஒரு கதை போல இருக்கும். 

‘’2017ம் வருஷம் டிசம்பர் மாசம் கடைசி வாரம் நாங்க ஃபிரண்ட்ஸ் நாலு பேர் ஹம்பி போனோம்’’

‘’யார் அது மீதி மூணு பேரு?’’

‘’ஆரம்பிக்கும் போதே சொன்னேன் பெரிய கதைன்னு. இன்னும் உள்விவரங்களுக்குப் போனா ரொம்ப பெரிசாயிடும். பரவாயில்லையா?’’

‘’சரி சரி உங்க ஃபுலோ-ல சொல்லுங்க’’

‘’ஃபிரண்ட்ஸ் டூர் போகணும்னு சொன்னப்ப ஹம்பி போகலாம்னு ஹம்பியை சூஸ் பண்ணது நான் தான். நீங்க ஹம்பியை பாக்கறது மூலமா ஒட்டு மொத்த இந்தியா குறித்து ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கிக்க முடியும்னு சொன்னேன். என்னைத் தவிர மத்த மூணு பேரும் அப்பதான் ஹம்பி வராங்க.’’

’’ஓ.கே’’

‘’புராதான ஆலயங்கள். மண்டபங்கள். கோட்டை மதில்கள். கோட்டை வாயில்கள் என மூன்று நாட்கள் ஹம்பியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்லயும் அலைந்தோம். மூன்றாவது நாள் அனேகமாக அது டிசம்பர் 29ம் தேதியா இருக்கும்னு நினைக்கறன். ஹம்பி-ல இருக்கற ஒரு பெரிய ஏரிக் கரையில இருக்கற சிமெண்ட் பெஞ்சு-ல ஒக்காந்து பேசிக் கொண்டிருந்தோம்.’’

‘’என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க’’

‘’நான் அந்த நகரத்தோட செல்வச் செழிப்பைப் பத்தி சொல்லிக்கிட்டு இருந்தன். எவ்வளவு கலை உணர்வு இருந்தா இவ்வளவு அழகை நிர்மாணிச்சிருக்க முடியும். ராமாயணத்துல இந்த இடம் கிஷ்கிந்தையா இருந்ததுன்னு சொல்றாங்க. ராமபக்தி பல ஆயிரம் ஆண்டா இருக்கற இடம். சொல்லிட்டே இருந்தப்ப ஒரு நண்பர் என்னிடம் கம்பராமாயணத்தை வாசிக்க ஆரம்ப நூல் எது என்று கேட்டார். 1960களில் கோயம்புத்தூர்க்காரரான திரு. பி.ஜி. கருத்திருமன் எழுதிய ‘’கம்பர் - கவியும் கருத்தும்’’ என்கிற நூல். நான் அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் . வாசித்ததில்லை என்று சொன்னேன். ‘’

அன்று ஏரிக்கரையில் அஸ்தமன சூரியனைப் பார்த்து விட்டு அறைக்குத் திரும்பினோம். மறுநாள் ஹம்பியில் சுற்றி விட்டு டிசம்பர் 31 , 2017 அன்று காலை ஹம்பியிலிருந்து சென்னை புறப்பட்டோம். இரவு சென்னை வந்தடைந்து நால்வரும் நான்கு திசையில் பிரிந்தோம். 

2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அதிகாலை ஊருக்கு வந்தேன். 

கம்பராமாயணம் குறித்து கேட்ட நண்பர், ’’கம்பர் - கவியும் கருத்தும்’’ நூல் ஆன்லைனில் வாசிக்கக் கிடைக்கிறது என்ற விபரத்தைக் கூறினார். அன்றே மடிக்கணினியில் தரவிறக்கம் செய்து கொண்டேன். மூன்று நாளில் அந்த நூலை வாசித்தேன். 940 பாடல்கள் . கம்பனின் தேர்ந்தெடுத்த பாடல்கள். அயோத்தியா காண்டத்திலிருந்து யுத்த காண்டம் வரை 940 பாடல்களில் கம்ப ராமாயணம். 

அது ஒரு அருமையான நூல். நூலின் ஒரு பக்கத்தில் கம்பராமாயணப் பாடலும் அதன் கீழ் பதம் பிரித்தலும் அதற்கு எதிர்ப்பக்கத்தில் மிகக் குறைவான சொற்களில் - எவ்வளவு குறைவான சொற்களில் விளக்கினால் வாசகன் கம்பனின் பாடலைப் புரிந்து கொள்வானோ அவ்வளவு சொற்களில் - விளக்கமும் அளித்து அந்நூலை எழுதியிருப்பார். வாசகனுக்கும் கம்பனுக்கும் இடையில் ஒரு பாலம் போல அமைந்து வாசகன் கம்பனின் கவி உலகில் ஒரு பகுதியாக உதவியிருப்பார். 

அந்நூலைக் குறித்து ‘’யாமறிந்த புலவரிலே’’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். பாரதி வரி ஒன்றைத் தலைப்பாக்கினேன். யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் என்பது பாரதியின் சொல்.

அதன் பின்னர் அந்த கட்டுரையை வாசித்த  எனது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னை கம்பராமாயணம் குறித்து எழுதச் சொன்னார். அவ்வாறு அவர் கூறிய தினம் ஸ்ரீராமநவமி. பெரிய பணியாயினும் என்னால் முடிந்த அளவு முயலலாம் என எண்ணினேன். 

’’சொல்லும் பொருளும் இணைந்திருப்பது போல’’ என காளிதாசனின் ரகுவம்சம் தொடங்குகிறது. சொல்லும் பொருளும் சேர்ந்து நிகழ்த்தும் லீலையே மானுட வாழ்க்கை. கம்பனின் சொல்லை என் மனத்தில் எப்படி உள்வாங்கிக் கொள்கிறேன் என்பதையும் எனது ரசனையையும் முன்வைத்து அதனை எழுதினேன். 

ஒன்றிலிருந்து ஒன்றாக பல விஷயங்கள் இணைந்து சம்பவங்கள் பெரிய சங்கிலித் தொடராக இருப்பதை நண்பர் கண்டார். 

‘’நீங்க எழுதுனது-ல சில பகுதிகளை இப்போ பார்க்க முடியுமா?’’

நான் மடிக்கணினியில் அவருக்குக் காட்டினேன். கம்பன் பாடல்களையும் அதற்கு நான் எழுதியிருந்த என் வாசிப்பையும் என் குரலில் வாசித்துக் காட்டினேன். 

வாழ்க்கையின் மேலான வாய்ப்புகளை - மனிதர்களின் அன்பின் உன்னதமான வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும் கம்ப சித்திரங்கள் சிலவற்றை என்னுடைய ஞாபகத்திலிருந்தும் கூறினேன்.

நண்பர் சொன்னார்: ‘’கம்பனைப் படிக்கணும்னு ஆர்வம் வருது. நாங்க ஒரு பத்து பேர் வரோம். வாரம் ரெண்டு மணி நேரம்னு கம்பராமாயணம் படிக்கலாம். நீங்க கிளாஸ் எடுங்க’’

‘’ஓ யெஸ் தாராளமா எடுக்கலாம். ரசனை அடிப்படையில இலக்கியத்தை அணுகுறவன் தன்னை எப்போதும் வாசகனாக மட்டுமே நினைப்பான். நாம எல்லாருமே கம்பனோட வாசகர்கள்; மாணவர்கள். நாம சேர்ந்து கம்பனைப் படிப்போம். எனக்கு நீங்க கம்பனுக்குள்ள ஆழ இன்னொரு வாய்ப்பு தரீங்க. குட்.’’

‘’பிரபு! எனக்கு ஒரு சந்தேகம். ஆறாம் வகுப்புல இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் தமிழ்ப் பாடம் பள்ளிக்கூடங்கள்-ல இருக்குல்ல. அதுல கம்பராமாயணத்தை பாடமா வச்சு தமிழ்நாட்டுல பள்ளிப்படிப்பு படிச்ச எல்லாருக்கும் கம்பராமாயணம் அறிமுகமாயிருக்குன்னு ஒரு நிலையை கொண்டு வர முடியுமே. திருக்குறளும் இந்த 7 வருஷத்தில எல்லா அதிகாரமும் படிக்கற மாதிரி செய்ய முடியுமே. சிலப்பதிகாரத்தையும் இதோட சேர்த்துக்கலாம்.’’

’’உங்களோட ஐடியா வெரி குட் ஐடியா அண்ணன். பாரதி யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் என்கிறான். இந்த மூன்று இலக்கியத்துல எல்லாமே இருக்கு. இதைத் தெரிஞ்சுகிறவன் மொழி, இலக்கணம், ரசனை என மூணும் தெரிஞ்சுகிறான். ஆறாம் வகுப்புல இருந்து 12ம் வகுப்பு வரைக்கும் தமிழை தமிழ் -1 , தமிழ்-2 என ஆக்கி இதை முதல் தாளா வைக்கலாம். அடுத்த தாள்ல இப்ப என்ன சொல்லிக் கொடுக்கறாங்களோ அது அப்படியே இருக்கலாம். தமிழுக்குச் செய்யற நல்ல சேவையா இருக்கும்.’’

‘’உண்மைதான்’’

‘’தமிழ்நாட்டுல தமிழ் தமிழ் னு பேசறாங்க. ஆனா செயல் ஒன்னும் இல்லையே’’

‘’எந்த மொழியும் தன்னோட ஆகப் பெரிய படைப்பாளியைக் கொண்டாடும். பிரிட்டன் ஷேக்ஸ்பியரை, அமெரிக்கா ராபர்ட் ஃபிராஸ்ட் டை, ரஷ்யா புஷ்கினை. ஆனா நம்ம மொழில மட்டும் தான் தமிழோட ஆகப் பெரிய படைப்பான கம்பராமாயணத்தை தீ வைத்துக் கொளுத்தனும்னு சொன்னவங்களும் கம்பராமாயணம் ஆபாசமான நூல்னு சொன்னவங்களும் 50 வருஷத்துக்கு மேல ஆட்சியில இருக்காங்க. தமிழுக்கு செய்யப்பட்ட பெரிய சேவையான ‘’கம்பர் - கவியும் கருத்தும்’’ நூல் எழுதின திரு. பி.ஜி. கருத்திருமன் காங்கிரஸ்காரர். கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கார்.’’

‘’ஏன் அரசியலுக்காக கம்பராமாயணத்தை எதிர்க்கணும்?’’

‘’கம்பன் ஒருமைப்பாட்டைப் பேசறான். மனிதர்களை இணைக்கும் அடிப்படை விழுமியங்களைப் பத்தி பேசறான். திராவிட அரசியல் என்பது வெறுப்பு அரசியல். விழிப்புணர்வு குறைவா இருக்கற மக்களோட பயத்தை தூண்டி விட்டு அவங்களோட எல்லா சிக்கலுக்கும் அவங்க பண்பாடுதான் காரணம்னு பொய் பிரச்சாரம் பண்ணி மக்கள் எந்த காலத்திலும் சேர்ந்துடாம இருக்கற மாதிரி பாத்துக்கரதுதான் திராவிட அரசியல்.’’

‘’இந்த நிலைமை மாறணும் பிரபு. சீக்கிரம் மாற்றம் வரும்னு நம்புவோம். ‘’

’’ஒவ்வொருத்தரும் நம்மால முடிஞ்சத அதுக்குச் செய்யணும். செய்வோம். ‘’

‘’நீங்க தொடரை எப்போ பூர்த்தி செய்யப் போறீங்க.?’’

‘’2017 டிசம்பர் கடைசி வாரம் இது குறிச்சு யோசிச்சன். முதல் படின்னு அதைச் சொல்லலாம். புது வருஷத்துக்கு இன்னும் நாலு நாள் இருக்கு. இந்த மாசம் 31ம் தேதிக்குள்ள இந்த வொர்க்-கை முடிக்கணும்னு நினைக்கறன். கொஞ்சம் பெரிய ஒர்க் என்பதால இந்த டைம் ரொம்ப எமோஷனாலா இருக்கு. கன்சிஸ்டண்ட் ஒர்க் மூலமா அதைக் கடந்துடலாம்.’’

‘’நீங்க ஒர்க்க முடிங்க. 31ம் தேதி நாங்க டிரீட் தர்ரோம்’’

‘’31ம் தேதி காலைல வலைப்பூ-ல  ‘’இராமர் பட்டாபிஷேகம்’’   போஸ்ட் பண்றன். கம்ப ராமாயண நூல் அமைப்பு முறைல இராமர் பட்டாபிஷேகத்துக்குப் பின்னால அரக்கர்களை வீழ்த்திய யுத்தத்துல கூட இருந்து உதவினவங்களுக்கு கூட இருந்து தோள் கொடுத்தவங்களுக்கு ராமன் ஒரு அரசனா பரிசு கொடுக்கறார். அதை அன்னைக்கு சாயந்திரம் போஸ்ட் பண்றேன்’’

நண்பர் மகிழ்ச்சியுடன் விடைபெற்றார். 

Sunday 27 December 2020

தோள் கொடுத்தல்

கம்பன் காவியம் மானுடத்தின் நுட்பமான உயர்வான உணர்வு நிலைகளை பல இடங்களில் காட்டுகிறது. இந்தியர்களாகிய நாம் அதனைக் கேட்டு கேட்டு வளர்கிறோம். இராமன் மகத்தான மனிதன். மன்னிப்பே அவனது இயல்பு. பேரரசனின் செல்வனாயினும் பெருவீரனாயினும் அவன் கருணையுடன் இருந்தான். தனக்கு உற்றவர்களிடம் மட்டுமல்ல; தனது எதிரிகளிடமும் கூட. அவன் தனக்கு பெரும் தீங்கிழைத்த இராவணனுக்குக் கூட தவறைத் திருத்திக் கொள்ள பல வாய்ப்பு தருகிறான். கருணையின் நிலையம் என்கிறான் இராமனைக் கம்பன். 

குகனைச் சந்திக்கும் போதும், அனுமனைக் காணும் போதும், வீடணனை எதிரிகொள்ளும் போதும் அவன் அடையும் உணர்வுகள் மகத்தானவை. 

அந்த தருணங்களையொத்த பல தருணங்கள் பிற காப்பிய மாந்தராலும் நிகழ்கின்றன. 

இரண்டாம் முறை தூதுரைக்க, அங்கதனை தேர்வு செய்யும் போது , அனுமன் ஆற்றும் பணியை ஆற்ற வல்லவன் என ஸ்ரீராமன் தன்னைத் தேர்வு செய்வதை எண்ணி உளம் பூரிக்கிறான். 

இராவணனைக் கண்டதும் சினத்தால் அவன் மீது பாயும் சுக்ரீவன் கொள்ளும் உணர்வும் வியப்பூட்டுவது. 

முதற்போர் படலத்தில், ஒரு பாடல். இராவணன் தேருடன் யுத்தம் செய்கிறான். ஸ்ரீராமனிடம் தேர் இல்லை. அப்போது அனுமன் அங்கு வருகிறான். 

இருவர் வில் யுத்தம் புரியும் போது இருவரும் சமானமான உயரம் கொண்ட நிலையில் இல்லையாயில் உயரமான இடத்தில் இருப்பவர் முதல் ஆதிக்கம் கொள்ள வாய்ப்பு உண்டு. எனவே என்னுடைய தோளில் அமர்ந்து யுத்தம் புரிவீராக என்று கூறுகிறான். அனுமனுக்கு அட்ட மா சித்திகள் வசப்பட்டவை. அவனால் தன் உடலை எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவு பெருக்கிக் கொள்ள முடியும். 

இதில் கவனிக்கக் கூடிய இடம் ஒன்று உண்டு. இராமனிடம் தேர் இல்லை என்னும் பின்னடைவைத் தன்னுடைய தோள் கொடுப்பதன் மூலம் நிகராக்குகிறான். இன்னும் ஊன்றி கவனித்தால், இராவணனுடைய தேர் பௌதிகமானது. அது பெற்றுள்ள வசதிகள் அறுதியானவை. அதனால் மேலும் விரிவு செய்ய முடியாது. புதிதாக எதையும் சேர்க்க முடியாது. அனுமனால் சூழ்நிலைக்கு ஏற்ப விரிவாக பெருக முடியும். 

தேர் இல்லை என்ற பின்னடைவை ஒரு கணத்தில் இல்லாமலாக்குகிறான். அதன் மூலம் இராவணனுக்கு கிடைக்கும் சாதக அம்சத்தை ஸ்ரீராமனின் சாதக அம்சமாக ஆக்குகிறான் அனுமன். 

‘’தோள் கொடுத்தல்’’ என்பதற்கு நுட்பமான பொருள் என்ன என்பதை இப்பாடல் மூலம் கம்பன் காட்டுகிறான்.

நூறு பத்துடை நொறில் பரித் தேரின்மேல் நுன்முன்
மாறு இல் போர் அரக்கன் பொர, நிலத்து நீ மலைதல்
வேறு காட்டும், ஓர் வெறுமையை; மெல்லிய எனினும்
ஏறு நீ, ஐய! என்னுடைத் தோளின் மேல் ‘என்றான் (7360)

''மெல்லிய எனினும்’’ - மெல்லியவை ஆயினும் என் தோளில் ஏறுக என்கிறான் அனுமன். 

அனுமன் வாயு புத்திரன். புஜபலம் மிக்கவன். அவனது தோள் வலிமையே இலங்கையை தீக்கிரையாக்கியது. எனினும் , இராமனது வீரத்துடன் ஒப்பிடும் போது மென்மையானது என்ற பொருளில் ‘’மெல்லிய எனினும்’’ என்கிறான் அனுமன். 




 


Saturday 26 December 2020

அங்கதன் தூதுப் படலம்

 

 



7102.   தூதுவன் ஒருவன் தன்னை

    இவ்வழி விரைவில் தூண்டி,

மாதினை விடுதியோ? “ என்று

    உணர்த்தவே, மறுக்கும் ஆகின்,

காதுதல் கடன் என்று உள்ளம்

    கருதியது, அறனும் அஃதே;

நீதியும் அஃதேஎன்றான்

    கருணையின் நிலையம் அன்னான்.

 

கருணையைத் தன் இயல்பாகக் கொண்ட ஸ்ரீராம பிரான் வீடணனிடம் ’’பெரும்பணியான சேது பந்தனம் நிகழ்த்தி இலங்கையில் பராக்கிரமத்துடன் நுழைந்துள்ள நாம் இராவணனுக்கு மேலும் ஒரு வாய்ப்பு தந்து ‘’சீதையை விடுக’’ என்னும் செய்தியுடன் ஒரு தூது அனுப்புவோம். அதுவே நீதி ஆகும். அதுவே அறம் ஆகும்.’’ என்று கூறினார்.

 

 

 

7103.   அரக்கர் கோன் அதனைக் கேட்டான்,

    ‘அழகிற்றே யாகும்என்றான்;

குரங்கு இனத்து இறைவன் நின்றான்,

    ‘கொற்றவற்கு உற்றதுஎன்றான்;

இரக்கமது இழுக்கம்என்றான்,

    இளையவன்; ‘இனி, நாம் அம்ப

துரக்குவது அல்லால், வேறு ஓர்

    சொல் உண்டோ? ‘என்னச் சொன்னான்.

 

ஸ்ரீராமனின் கூற்றைக் கேட்டு வீடணன் ‘’அது சரியானது’’ என்று கூறினான். சுக்ரீவன் ‘’அதுவே அரச முறைமை’’ என்றான். இலக்குவன் தாமதமின்றி உடனே போர் துவக்குவோம் என்றான்.

 

7109.   மாருதி இன்னும் செல்லின்,

    மற்று இவன் அன்றி வந்து

சாருநர் வலியோர் இல்லை

    என்பது சாரும் அன்றே?

ஆர், இனி ஏகத் தக்கார்?

    அங்கதன் அமையும்; ஒன்னார்

வீரமே விளைப்பரேனும்,

    தீது இன்றி, மீள வல்லான்.

 

அனுமன் மீண்டும் சென்றால், இராவணன் அரசவையில் நுழையும் துணிச்சல் படைத்தவன் அவன் ஒருவனே என்றாகும். இம்முறை அங்கதனை அனுப்புவோம். அங்கதன் கூர்மதியுடன் தூது உரைக்கக் கூடியவன். ஏதேனும் இன்னலை விளைவிப்பார்களாயின் அதிலிருந்தும் மீண்டு வரும் திறன் படைத்தவன்.





7110.   நன்றுஎன, அவனைக் கூவி,

    ‘நம்பி! நீ நண்ணலார்பால்

சென்று, இரண்டு உரையின் ஒன்றைச்

    செப்பினை தருதிஎன்றான்;

அன்று அவன் அருளப் பெற்ற

    ஆண்தகை அலங்கல் பொன்தோள்

குன்றினும் உயர்ந்தது என்றால்,

    மன நிலை கூறலாமே?

 

அங்கதனை அழைத்து இராவணனிடம் தூது சென்று வருமாறு இராமன் பணித்தான். அப்பணிக்குப் பொருத்தமானவனாக ஸ்ரீராமனால் தான் தேர்வு செய்யப்பட்டிருப்பதைப் பற்றி எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தான் அங்கதன்.

 

7111.   என் அவற்கு உரைப்பது? ‘என்ன,

    ‘ஏந்திழையாளை விட்டுத்

தன் உயிர் பெறுதல் நன்றோ?

    அன்று எனின், தலைகள் பத்தும்

சின்ன பின்னங்கள் செய்ய,

    செருக்களம் சேர்தல் நன்றோ?

சொன்னவை இரண்டின் ஒன்றே

    துணிக ‘‘ எனச் சொல்லிடுஎன்றான்.

 

தூதுச் செய்தி என்ன என்று அங்கதன் வினவினான். ‘’சீதையை விடுவித்து உயிர் பெறுக. அல்லது பத்து தலைகளும் சின்னாபின்னமாகப் போகும் போர்க்களத்தைச் சந்திக்க’’ என்பதே தூதுச் செய்தி.

 

7112.   அறத் துறை அன்று, வீரர்க்கு

    அழகும் அன்று, ஆண்மை அன்று,

மறத் துறை அன்று, சேமம்

    மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல்;

நிறத்து உற வாளி கோத்து

    நேர் வந்து நிற்கும் ஆகின்

புறத்து உற எதிரே வந்து

    போர்தரப் புகல்திஎன்றான்.

 

நாள் தள்ளாமல் ஒளிந்து கொள்ளாமல் போர்க்களத்துக்கு விரைந்து வருக.





7113.   பார்மிசை வணங்கிச் சீயம்

    விண்மிசைப் படர்வதே போல்,

வீரன் வெஞ் சிலையில் கோத்தஅ

    அம்பு என, விசையின் போனான்,

மாருதி அல்லன், ஆகின்,

    நீஎனும் மாற்றம் பெற்றேன்;

யார் இனி என்னோடு ஒப்பார்? ‘

    என்பதோர் இன்பம் உற்றான்.

 

அனுமனை ஒத்த தேர்வாக ஸ்ரீராமனால் நான் கொள்ளப்பட்டேன். என் அளவு பேறு பெற்றவர் யார் என அங்கதன் எண்ணினான்.

 

7114.   அயில் கடந்து எரிய நோக்கும்

    அரக்கரைக் கடக்க, ஆழித்

துயில் கடந்து அயோத்தி வந்தான்

    சொல் கடவாத தூதன்,

வெயில் கடந்திலாத காவல்,

    மேருவின் மேலும் நீண்ட

எயில் கடந்து, இலங்கை எய்தி,

    அரக்கனது இருக்கை புக்கான்.

 

பேரரண்களைக் கொண்ட இலங்கையின் அரண்களைத் தாண்டி இராவணன் அவையில் நுழைந்தான் அங்கதன்.

 

7115.   அழுகின்ற கண்ணர் ஆகி,

    ‘அநுமன்கொல்? ‘என்ன அஞ்சித்

தொழுகின்ற சுற்றம் சுற்ற,

    சொல்லிய துறைகள் தோறும்

மொழிகின்ற வீரர் வார்த்தை

    முகம்தொறும் செவியின் மூழ்க,

எழுகின்ற சேனை நோக்கி,

    இயைந்து இருந்தானைக் கண்டான்.

 

அங்கதன் அங்கே சென்றதும் அரக்கர்கள் அனுமன் தான் மீண்டும் வந்து விட்டானோ என்று எண்ணி துயரடைந்தனர். மந்திராலோசனை செய்து கொண்டிருந்த இராவணனை அங்கதன் கண்டான்.






7118.   அணி பறித்து அழகு செய்யும்

    அணங்கின் மேல் வைத்த ஆசைப்

பிணி பறித்து, இவனை யாவர்

    முடிப்பவர் படிக் கண்? பேழ்வாய்ப்

பணி பறித்து எழுந்த மானக்

    கலுழனின், இவனைப் பற்றி

மணி பறித்து எழுந்த எந்தை

    யாரினும் வலியன்அன்றே.

 

இராவணனைக் கண்டதும் அவன் கிரீடத்தின் மாணிக்கங்களைப் பறித்து வந்த சுக்ரீவனின் வலிமையை எண்ணி பெருமை கொண்டான் அங்கதன்.

 

7119.   நெடுந்தகை விடுத்த தூதன்

    இவை இவை நிரம்ப எண்ணி,

கடுங் கனல் விடமும் கூற்றும்

    கலந்து கால் கரமும் காட்டி,

விடும் சுடர் மகுடம் மின்ன,

    விரிகடல் இருந்தது அன்ன

கொடுந் தொழில் மடங்கல் அன்னான்

    எதிர் சென்று குறுகி நின்றான்.

 

இராவணனுக்குப் பக்கத்தில் சென்றான் அங்கதன்.

 

7120.   நின்றவன் தன்னை, அன்னான்

    நெருப்பு எழ நிமிரப் பார்த்து, ‘இங்கு

இன்று, இவண் வந்த நீ யார்?

    எய்திய கருமம் என்னை?

கொன்று இவர் தின்னா முன்னம்

    கூறுதி தரெியஎன்றான்;

வன்திறல் வாலி சேயும்

    வாள் எயிறு இலங்க நக்கான்.

 

‘’யார் நீ? எங்கு வந்தாய்? ‘’ என அங்கதனிடம் வினவினான் இராவணன்.




7121.   பூத நாயகன், நீர் சூழ்ந்த

    புவிக்கு நாயகன், அப் பூமேல்

சீதை நாயகன், வேறு உள்ள

    தயெ்வ நாயகன், நீ செப்பும்

வேத நாயகன், மேல் நின்ற

    விதிக்கு நாயகன். தான் விட்ட

தூதன் யான்; பணித்த மாற்றம்

    சொல்லிய வந்தேன்என்றான்.

 

விசும்பின் தலைவன்; புவியின் தலைவன்; புவிமகள் சீதையின் தலைவன்; தெய்வங்களின் தலைவன்; வேதத்தின் தலைவன்; விதியின் தலைவன் ; அத்தகையவன் ஸ்ரீராமன். அவனது தூதன் நான்.

 

7124.   இந்திரன் செம்மல், பண்டு, ஓர்

    இராவணன் என்பான் தன்னைச்

சுந்தரத் தோள்கேளாடும்

    வால் இடைத் தூங்கச் சுற்றி,

சிந்துரக் கிரிகள் தாவித்

    திரிந்தனன், தேவர் உண்ண

மந்தரக் கிரியால் வேலை

    கலக்கினான், மைந்தன்என்றான்.

 

இராவணனைத் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்ட வாலியின் மைந்தன் நான்.



7126.   “‘தாதையைக் கொன்றான் பின்னே

    தலை சுமந்து, இருகை நாற்றி,

பேதையன் என்ன வாழ்ந்தாய் ‘‘

    என்பது ஓர் பிழையும் தீர்ந்தாய்;

சீதையைப் பெற்றேன்; உன்னைச்

    சிறுவனுமாகப் பெற்றேன்;

ஏது எனக்கு அரியது? ‘என்றான்

    இறுதியின் எல்லை கண்டான்.

 

உன் தந்தையைக் கொன்றவர்களுடன் உடனிருக்கிறாயே? நீ என்னுடன் இரு. உன்னை என் மகன் போல நடத்துகிறேன்.

 

7129.   வாய் தரத்தக்க சொல்லி,

    என்னை உன் வசம் செய்வாயேல்,

ஆய்தரத் தக்கது அன்றோ,

    தூது வந்து அரசது ஆள்கை?

நீ தரக் கொள்வேன் யானே?

    இதற்கு இனி நிகர்வேறு எண்ணின்,

நாய் தரக் கொள்ளும் சீயம்,

    நல் அரசு! ‘என்று நக்கான்.

இராவணனிடம் அங்கதன் , ‘’நீ தர அரசு பெறுவது என்பது ஒரு நாய் தர அதனைச் சிங்கம் பெறுவது போன்றது’’

 

7131.   கூவி இன்று என்னை, நீ போய்,

    “தன்குலம் முழுதும் கொல்லும்

பாவியை, அமருக்கு அஞ்சி

    அரண் புக்கு பதுங்கினானை,

தேவியை விடுக! அன்றேல்,

    செருக்களத்து எதிர்ந்து தன்கண்

ஆவியை விடுக! ‘‘ என்றான்,

    அருள் இனம் விடுகிலாதான்.

 

தூதுச் செய்தியை உரைத்தான் அங்கதன்.