Friday 30 July 2021

தினை

இன்று காலையிலிருந்து கடுமையான அலைச்சல். 

இரவு ஒன்பது மணிக்கு ஊருக்குள் நுழைந்ததும் அலைபேசியில் ஒரு அழைப்பு. எண்ணி வைத்தாற் போல் ஒரே ஒரு ரிங் ஆனது. எனது நண்பர் அழைத்திருந்தார். அவர் ஒரு விவசாயி. வெளிநாட்டில் பணி புரிந்து விட்டு சில ஆண்டுகளுக்கு முன்னால் ஊருக்குத் திரும்பி விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது சகோதரர் வெளிநாட்டில் இப்போது பணி புரிகிறார். நான் அவரை அலைபேசி மூலம் அழைத்தேன். அவர் சகஜமாக இல்லை என்பது குரல் மூலம் தெரிந்தது. சாதாரணமாகத்தான் அழைத்தேன் என்று சொன்னார். நான் அவருடைய வீட்டுக்கு வருவதாகச் சொன்னேன். அங்கு சென்றேன்.  

சோர்வான முகத்துடன் இருந்தார். சட்டென தயக்கத்தை உதறி , ‘’பிரபு! இந்த எஸ். எம்.எஸ் ஐ பாருங்கள்’’ எனக் காட்டினார். 

அவரது மகனுக்கு சென்னையில் ஒரு நல்ல கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. 

‘’அண்ணன்! நல்ல விஷயம். காலேஜ் ரொம்ப நல்ல காலேஜ்’’ நான் சொன்னேன். 

‘’முழுக்க படிங்க பிரபு’’

அட்மிஷன் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரூ. 50,000 செலுத்த வேண்டும். 

‘’இப்ப என் கையில ஒரு ரூபாய் இல்ல பிரபு. போன வாரம் களையெடுப்பு. கையில இருந்த எல்லா பணமும் செலவாயிடுச்சு. நாளைக்குப் பணம் கட்டணும்.’’

நான் நேரத்தைப் பார்த்தேன். இரவு 9.05. 

‘’என்ன அண்ணன்! இப்ப சொல்றீங்க. எஸ். எம். எஸ் எப்ப வந்துச்சு.’’

‘’நேத்து மதியம். மூணு நாளைக்குள்ள கட்டணும். நாளைக்கு லாஸ்ட் டேட்.’’

‘’அமௌண்ட் கொஞ்சம் பெருசு அண்ணன். ஒரு பார்ட் அமௌண்ட் அரேஞ்ச் பண்ணட்டுமா?’’

‘’எனக்கு வேற சோர்ஸ் இல்ல. தம்பி 10 நாள்ல ஃபாரின்ல இருந்து அனுப்பிடுவான்.’’

‘’இப்ப ரொம்ப டைட்டா இருக்கு. நாளைக்கு ஒரு நாள் தான் இருக்குன்னு சொல்றீங்க. அதான் யோசிக்கறன்’’

‘’பையனோட அட்மிஷன் உங்க கையில இருக்கு’’

‘’சரி! பாத்துக்கலான்ணன். நாளைக்கு காலைல பேங்க் டயத்துல பணம் கட்டிடலாம். கவலைப்படாம இருங்க.’’

வீட்டுக்கு வந்து இரவு உணவை உண்டு விட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இன்று நாள் முழுதும் கடுமையான அலைச்சல் என்பதால் சற்று முன் நேரத்திலேயே உறங்கச் செல்லலாம் என எண்ணினேன். புதிதாக ஒரு பொறுப்பு. பொருளியலில் செல்வத்தை இருப்புச் செல்வம், யூகச் செல்வம் என இரண்டாகப் பிரிப்பார்கள். என்னிடம் யூகச் செல்வமே மிகுதி. 

யாரிடம் உதவி கேட்கலாம் என யோசித்தேன். எனக்கு மிக நெருக்கமான ஒரு நண்பனுக்கு ஃபோன் போட்டேன். நண்பனிடம் கடுமையான பணி காரணமாக நான்கு நாட்களாக ஃபோன் பேச முடியவில்லை. 

முதல் ரிங்கில் ஃபோனை எடுத்தான்.

‘’தம்பி நான் உன்கிட்ட ஒரு உதவி கேட்டு ஃபோன் செஞ்சுருக்கன்’’

பொதுவாக நான் நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுவேன். 

‘’சொல்லுங்க அண்ணன்! நாலு நாளா ரொம்ப பிஸியா?’’

‘’ஆமாம்ப்பா. அதாவது’’ என ஆரம்பித்து விஷயத்தைச் சொன்னேன். 

‘’உங்க ஃபிரண்ட்டோட மகன் காலேஜ் அட்மிஷனுக்கு பணம் வேணும். பத்து நாள்ல பணம் ரிடர்ன் ஆயிடும். அதானே அண்ணன்’’

‘’அதான் தம்பி’’

‘’எவ்வளவு அமௌண்ட்?’’

‘’ஃபிஃப்டி தௌசண்ட். நெக் ஆஃப் த மொனெண்ட் ல கேக்கறன் நினைக்காத. என் கவனத்துக்கு இந்த விஷயம் வந்தே 30 நிமிஷம் தான் ஆகுது.’’

‘’நான் நாளைக்கு காலைல நெஃப்ட் செஞ்சிடறன்.’’

‘’பணத்துக்கு நான் பொறுப்பு தம்பி’’

‘’ஓ.கே அண்ணன். நீங்க சொன்னா சரிதான்’’

‘’ரொம்ப நன்றி தம்பி. நீ செஞ்சிருக்கறது ரொம்ப பெரிய உதவி. உனக்கு ரொம்ப பெரிய மனசு’’

‘’இது ரொம்ப சின்ன விஷயம் அண்ணன்!’’

‘’காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்’’

ன்னு

திருக்குறள் சொல்லுது தம்பி. நீ செஞ்சிருக்கற உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ் தம்பி. நான் அமௌண்ட் ரெடி ஆயிடுச்சுன்னு ஃபிரண்ட்க்கு ஃபோன் பண்ணி சொல்லிடறன்.’’

‘’அமௌண்ட் காலைல உங்க கைக்கு வந்ததும் சொல்லுங்க அண்ணன்’’

‘’இல்ல இப்பவே சொல்லிடறன். நைட் நிம்மதியா அவரு தூங்குவாரு.’’

உலகில் தினையும் உண்டு; பனையும் உண்டு என எண்ணிக் கொண்டேன். 

Sunday 25 July 2021

வெள்ளத்தனைய மலர்நீட்டம்

சில வாரங்களுக்கு முன்னர் ஒருவர் அறிமுகமானார். இப்போது நாங்கள் நெருக்கமான நண்பர்கள்.  என் மீது மிகுந்த பிரியம் கொண்டுள்ளார். 

அவர் மின்னணுப் பொருட்கள் மீது பேரார்வம் கொண்டவர். லௌகிகமான எந்த பொருளையும் எவ்வளவு குறைவாக வைத்துக் கொள்ள முடியுமோ எவ்வளவு குறைவாக பயன்படுத்த முடியுமோ அந்த அளவு நல்லது என்று எண்ணுபவன் நான். 

பலர் பலகாலமாக என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கூறி வருகிறார்கள். ஒரு ஜி.எஸ்.எம் ஃபோன் என்னிடம் உள்ளது. இப்போது சில நாட்களாக அதனையும் துறந்து விட்டு லேண்ட்லைன் மட்டும் பயன்படுத்தினால் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். 

நண்பர் என்னிடம் எல்லாரும் பாடும் பாட்டை பாடத் துவங்கினார். ‘’ பிரபு! ஸ்மார்ட்ஃபோனால எவ்வளவோ நன்மை இருக்கு. அதுல எவ்வளவோ வசதி இருக்கு. நீங்க ஏன் ஸ்மார்ட்ஃபோன் வச்சுக்காம இருக்கீங்க?’’

‘’நான் உங்ககிட்ட எப்பவாவது ஏன் ஸ்மார்ட்ஃபோன் வச்சுருக்கீங்கன்னு கேட்டிருக்கனா. உங்க விஷயத்துல நான் தலையிடறது இல்லை. ஏன் எல்லாரும் என் விஷயத்துல மட்டும் தலையிடறீங்க?’’

அவர் மென்மையான இயல்பு உள்ளவர். ‘’ நீங்க சொல்றது கரெக்ட் தான்’’

சில நாட்களுக்குப் பின் மீண்டும் ஆரம்பித்தார். 

‘’நீங்க வில்லேஜ்ல நிறைய ஒர்க் பண்றீங்க. அது இன்னும் நிறைய பேருக்குத் தெரியணும். அதுக்கு உங்களுக்கு ஸ்மார்ட்ஃபோன் வேணும்.’’

‘’நண்பரே! ஒரு விஷயம் எத்தனை பேரைச் சென்றடையணும்னு நாம விரும்பறமோ அத்தனை பேரை இன்னைக்கு இருக்கற தகவல் தொடர்பு யுகத்துல நாம சென்றடைஞ்சுடலாம். அதுக்கு பல வழி இருக்கு. நான் லேப்டாப் யூஸ் பண்றேன். அதுலயே எல்லா வசதியும் இருக்கு. அப்புறம் எதுக்கு ஸ்மார்ட்ஃபோன்?’’

‘’உங்க கிட்ட பேசும் போது நீங்க சொல்றது சரின்னுதான் தோணுது’’

‘’நான் சொல்றன்னு கூட எதையும் அப்படியே ஏத்துக்காதீங்க. ஒரு விஷயத்தோட எல்லா டைமண்ஷனையும் சீர் தூக்கிப் பார்த்து முடிவு செய்ங்க’’

நண்பர் ஒருநாள் வீட்டுக்கு வந்திருந்தார். 

என் மேஜை மேல் கிண்டில் இருந்தது. 




‘’பிரபு! இது என்ன?’’

‘’கிண்டில்’’

‘’அப்படின்னா?’’

‘’நீங்க இதுக்கு முன்னாடி இதைப் பாத்தது இல்லயா?’’

‘’இல்ல. இப்ப தான் பாக்கறன்’’

‘’கேள்விப்பட்டதில்லையா?’’

‘’இல்லை’’

நான் கிண்டில் குறித்து விளக்கினேன். 

‘’நான் உங்க கிட்ட கிண்டில் வாங்குங்கன்னு சொல்ல மாட்டேன். கிண்டில் வாங்கி வச்சுக்க புத்தகம் படிக்கற பழக்கம் இருக்கணும். அதை ஏற்படுத்திக்கங்க. அப்புறமா கிண்டில் வாங்கலாம்’’

Saturday 24 July 2021

அவிட்டம்

புது மடிக்கணிணி வாங்க வேண்டிய சூழல் உருவானது. அதாவது நிர்ப்பந்தம் உண்டானது. பல ஆண்டுகளாக உடனிருந்த பழைய கணினி தன் இறுதி மூச்சு வரை உழைத்து விட்டு தன் செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்தி விட்டு ஓய்ந்தது. இப்போது புதிதாக ஒன்றை வாங்க வேண்டும் என்ற நிலை. பழைய மடிக்கணினி என்னுடன் இருந்த ஏழிரண்டு ஆண்டுகளில் சில முறை பேட்டரி மாற்றினேன். அதைத் தவிர வேறு பெரிய செலவில்லை. 

மைசூரில் பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக இருக்கும் நண்பனுக்கு ஃபோன் செய்தேன். 

‘’தம்பி! லேப்டாப் சரியா ஒர்க் ஆகல. இனிமே ரிப்பேர் செய்ய முடியாதுன்னு தோணுது. ‘’

’பரவாயில்ல. புதுசு வாங்கிடலாம். இது உங்க கிட்ட எத்தனை வருஷமா இருக்கு?’’

‘’பதினாலு வருஷம் தம்பி’’

‘’எனக்குத் தெரிஞ்சு இத்தனை வருஷம் ஒரே லேப்டாப் வச்சிருக்கறது நீங்க தான்’’

‘’எழுதறது வாசிக்கறது இணையம்ன்னு டெய்லி வேலை செஞ்சிருக்கு.’’

''புது மாடல் எது பெஸ்ட்டா இருக்கும்னு நான் பாத்து சொல்றன் அண்ணா’’

சில நாட்கள் சென்றன. 

நண்பன் ஃபோன் செய்தான். ‘’அண்ணா ஐம்பதாயிரம் ரூபாய்க்கு நிறைய சூப்பர் மாடல் இருக்கு.’’

‘’அவ்வளவு பட்ஜெட் எனக்கு தாங்காது தம்பி’’

‘’உங்க பட்ஜெட் எவ்வளவு?’’

’’15,000 அதிகபட்சம் 20,000’’

‘’அந்த விலைக்கு கிடைக்குமான்னு எனக்குத் தெரியல’’

‘’டிரை பண்ணிப் பார்ப்போம்’’

ராஜீய பேச்சுவார்த்தைகள் போல எந்த முடிவும் எடுக்’’காமல் நிறைவு செய்தோம். 

அமேசானின் ஒரு இணைப்பை தம்பிக்கு அனுப்பினேன். அனுப்பிய அன்று இரவு அவனுக்கு ஃபோன் செய்தேன். 

’’அண்ணா நீங்க அனுப்பிய மாடலைப் பத்தி பிரவுஸ் செஞ்சன். ரொம்ப புது கம்பெனி. டேட்டா ஸ்டோரேஜ் ரொம்ப குறைவா இருக்கும் போல இருக்கே’’

‘’தினமும் நான் எழுதறத சேவ் செய்யணும். வேர்டு ஃபைல் மிக மிக குறைவான ஸ்பேஸ்ஸை தானே ஆக்குபை செய்யும். எனக்கு அது போதும்’’

‘’என்ன விலை வருது?’’

‘’19,000 க்குப் பத்து ரூபா குறைவு’’

‘’கன்ஸ்யூமர் ரிவியூ நல்லாத்தான் சொல்லியிருக்காங்க. 4.5 ஸ்டாருக்கு மேலே நிறைய ரேட்டிங் இருக்கு. இருந்தாலும் புதுசா இருக்கேன்னு யோசிச்சன்’’

‘’ஒரு வாய்ப்பு கொடுப்போம்’’

‘’அந்த கம்பெனி பேர் என்ன?’’

‘’அவிட்டா - நான் தமிழ்த் தன்மையோட ’’அவிட்டம்’’ னு ஒரு நட்சத்திரத்தோட பேரை வச்சுகிட்டன். ‘’அவிட்டம்’’னா பெரும் செல்வம் னு அர்த்தமாம்’’

‘’உங்களுக்குன்னு ஏதாவது ஒன்னு உங்க கைக்கு வந்து சேரும்ணன். உங்க ராசி அப்படி’’

அவிட்டம் தன் கடமையை ஆற்றத் துவங்கியுள்ளது. 


Monday 19 July 2021

ஆத்ம மலர்

108

வசந்தம் துவங்கியிருக்கிறது
நாம் மலர்வோம்
மலர்தல்
நம்மை
நம் இருப்பை
அபூர்வமாக்குகிறது
மேன்மையின்
பெருவெளியில்
நிறுத்துகிறது
நாம் 
பல தருணங்களில்
மலர்ந்திருக்கிறோம்
இக்கணம்
முதல்
மலராகிறோம்
மலராகவே ஆகிறோம் 

107

மலர்களின் உலகில்
மகிழ்ச்சி இருக்கிறது
புரிதல் இருக்கிறது
நம்பிக்கை இருக்கிறது
அன்பு இருக்கிறது
அன்பு
மட்டுமே இருக்கிறது

106

மலர்கள்
இனிமையைப் பரப்புகின்றன
எளிமையை நிறையச் செய்கின்றன
ஒரு மலரைப் போல
எளிதாக
இனிதாக
இருப்பது
இந்த உலகை
இன்னும்
பெரிதாக்குகிறது

105

சொற்களை விட
உணர்வுகளை விட
மௌனம்
நம்மை
மேலும் இணைக்கிறது
மேலும் புரிந்து கொள்ளச் செய்கிறது
மௌனத்தில் பேதம் இல்லை
மௌனத்திற்கு பேதம் இல்லை
மௌனத்தில்
நாம் மட்டுமே இருக்கிறோம் 

104

மலர்கள்
எங்கும் செல்வதில்லை
அங்கேயே இருக்கின்றன
மலர்களைப் பார்க்க
அவ்வப்போது
கடவுள்கள் வருகின்றனர் 

103

மலர்களின் உலகில்
துயரம் இல்லை
எனினும்
யாரேனும் கலங்கும் போது
மலர்கள்
துயரப்படுகின்றன

102

மலர்கள்
மௌனமே
ஆகச் சிறந்த மதிப்பளித்தல் என்றும்
ஆகப் பெரிய ஆறுதல் என்றும்
அறிந்திருக்கின்றன
துயருற்றவர்களை
அவை
மௌனத்தால் எதிர்கொள்கின்றன 

101

மலர்களின் பிராந்தியங்களில்
வேலிகள் இல்லை
கதவுகள் இல்லை
அங்கே
மிகச் சிலரே
செல்கின்றனர்

100

ஒரு மலரை
ஒரு புன்னகையாக
ஒரு இன்சொல்லாக
ஒரு பிரியமாக
ஒரு அன்பாக
மேன்மைகள் அனைத்துமாகவும் கூட
புரிந்து கொள்ள முடிகிறது

99

மலர்கள்
எத்தனை அளிக்கப்பட்டாலும்
இன்னும்
காதலை
முழுமையாகச் சொல்லிட
மலர்களால்
முடியவில்லை

98

மலர்களைக் காணும் போது
மலர்களைச் சூடும் போது
அவற்றுடன்
காதல் நினைவுகள்
இணைந்து விடுகின்றன 

97

ஒரு மலரைப் பறிக்கும் போது
அம்மலருக்கு வலிக்குமோ
என
ஒரு குழந்தை
ஐயுறுகிறது

96

எல்லா குழந்தைகளும்
மலர்மொழியின்
அட்சரங்களைப்
பயில்கின்றன

95

வெண் மலர்கள்
உன் மாசற்ற தன்மையை 
நினைவுபடுத்துகின்றன
சிவந்த மலர்கள்
ஓயாத உன் நம்பிக்கையை
நினைவுபடுத்துகின்றன

94

உன்னிடம்
ஒரு மலரைக் கொடுக்கும் போது
அப்போது
சொல்வதற்கு
ஏதேனும்
இருக்கிறதா என்ன? 

93

மலர் குறித்த எண்ணங்கள்
மலர் குறித்த சிந்தனைகள்
மலர் குறித்த கற்பனைகளில்
ஒரு மலர்
வந்தமர்ந்து விடுகிறது
நம் அகத்தில்

92

மலரைக் காணும் போது
நீ ஏன்
அத்தனை மலர்கிறாய்?
நீ ஏன்
அத்தனை புன்னகைக்கிறாய்?
நீ ஏன்
அத்தனை உணர்ச்சிவசப்படுகிறாய்?

91

கையில்
ஒரு மலரை
வைத்திருக்கும் போது
நீ
அப்சரஸ் ஆக
மாறுகிறாய்
என்பதை
அறிவாயா? 

90

மலர்கள்
உன்னை
மிகவும் நேசிக்கின்றன
மிகவும் விரும்புகின்றன
என்பதை
அறிவாயா? 

89

வெயிலில்
காற்றில் ஈரம் இல்லை
ஈரம் இல்லாத காற்றில்
தன்னை
நிறைத்துக் கொள்கிறது
மலர் மணம் 

88

தூய சொல்லில்
கனிவில்
மென்மையான அணுகும் முறையில்
உவகையின் கணங்களில்
கன்னிமை உணரும் நிறைவில்
ஒரு மலர்
புவியில்
மலர்கிறது 

87

மலர்ச்சிக்காகவே
மலர்கின்றன
மலர்கள் 

86

மலர்களால்
மலர்களுக்காக
மலர்களுடைய
உலகம் 

85

 மலர்களின் உலகம்
குழந்தைகளின் உலகமாகவும்
இருக்கிறது

84

மலர்களின் உலகம்
உனது உலகமாகவும்
இருக்கிறது

83

இரவு
நாளின் மலர்
அந்திகள்
மலரின் மகரந்தங்கள்

82

 விடியல் பூக்கள்
நம்பிக்கை அளிக்கின்றன
அந்திப் பூக்கள்
மேலும்
நம்பிக்கை அளிக்கின்றன

81

விடியல் அந்திக்கும்
மாலை அந்திக்கும்
இடையே
மேலும்
மாலை அந்திக்கும்
விடியல் அந்திக்கும்
இடையே
இருக்கிறது
வாழ்க்கை 

80

உன் தனிமை
ஒரு
மலர் 

79

உன் புன்னகை
ஒரு 
மலர்

78

உன் காத்திருப்பு
ஒரு
மலர் 

77

காற்றில்
மலர்கள் அசைவது
போல
உன் உரையாடல்கள்

76

நீ அளிக்கும் நம்பிக்கைகள்
மலரைப் போல் நுண்மையானவை
மலர் வாசம் போல் மென்மையானவை 

75

ஒரு மலர் வசீகரிப்பது போல
ஒரு மலர் மணம் பரப்புவது போல
ஒரு மலர் பொலிவு கொள்வது போல
இருக்கிறது
உனது இயல்பு 

74

 ஒரு மலரைப் 
பார்த்துக் கொண்டே
இருப்பதைப் போல
உன்னை
நினைத்துக் கொண்டே
இருக்கிறேன்

73

ஒரு மலரின்
முன்னால்
நாம்
அழாமல் இருக்கிறோம் 

72

மலரை
புவியில் பூக்கும்
நிலவென்றே
புரிந்து கொள்கிறான்
அந்த குழந்தை 

71

ஒவ்வொரு தினமும்
மண்ணில்
மலர்கள்
மலர்ந்து கொண்டிருப்பது போல
உன்னைப் பற்றிய
சொற்களை
உச்சரித்துக் கொண்டே இருக்கிறேன் 

70

பெருநதியில்
மலர்கள் மிதப்பது போல்
வாழ்வில்
உனது இயல்பு 

69

ஒற்றை மலரென
ஆலயத்தில்
ஒரு தீபம்
ஆயிரமாயிரம்
தீபச்சுடர்களென
காட்டில்
மலர்கள் 

68

மலர்கள் வாடுகையில்
தெய்வங்கள்
வருத்தம் கொள்கின்றன

67

ஒரு பொழுதை
ஒரு தருணத்தை
ஒரு நாளை
ஒரு பருவத்தை
ஒரு வாழ்வை
நீ
மலரச் செய்கிறாய்

66

தீபங்கள்
தீயின் மலர்கள்

65

 தனித்து நிற்கிறது
வெட்டவெளியில்
ஒரு மலர்

64

உனது விரல்கள்
மலர்களை
நெசவு செய்து கொண்டிருக்கின்றன
உனது எண்ணங்கள்
மலர்களை பூக்கச் செய்கின்றன
உனது கற்பனைகள்
மலர்வாசம் கொண்டுள்ளன

63

ஆயிரம் நிலவுகள் உதிக்கையில்
பூக்கிறது
ஆத்ம மலர் 

62

மலர்களின் உலகில்
கரைதல் மட்டுமே இருக்கிறது
கரைதலின்
விடுதலை மட்டுமே இருக்கிறது

61

கரைந்து போகையில்
எண்ணிக் கொள்ளவோ
சொல்லிக் கொள்ளவோ
ஏதேனும் உள்ளதா என்ன? 

60

ஒரு மலரின்
முன்
பணிதல்
இந்த வாழ்வை
எத்தனை
அழகாக்குகிறது? 

59

தூய்மையின்
அன்பின்
உணர்வின்
கண்ணீர்த் துளிகள்
மலர்களாக
விழுகின்றன 

58

ஒரு குழந்தைக்கு
மலர்
என்பது
தீரா வசீகரமாகவும்
முடிவில்லாப் புதிராகவும்
எப்போதும்
இருக்கிறது 

57

விண்மீன்கள்
நிலவு
மேகம்
கடல்நுரை
அனைத்தும்
நீ சூடும் மலர்கள்
என்றாகின்றன 

56

வாழ்வை
மலராக்கிக் கொள்ளும்
விந்தையை
நீ பெற்றது எப்படி?
நீ அடைந்தது எப்படி? 

55

அவள் 
ஒரு மலரைப் போன்றிருக்கிறாள்
அத்தனை மென்மையாக
அத்தனை மேன்மையாக
தன் கைவிரல்களால்
மலர்தலை
அபிநயிக்கிறாள்
அக்கணம்
மலரும்
ஆயிரம்
ஆத்ம மலர்கள் 

54

உன்னை
ஒரு மலரன்றி
வேறு ஏதாகவும்
கருத முடியவில்லை
ஏன்? 

53

நீர்ப்பெருக்கின் சுழிப்பு
நதியின் மலர்
அருவிச் சாரல்
காற்றின் மலர் 

52

தீ
என்பது
ஒரு உக்கிர மலர்

51

நிலவைக்
குளிரச் செய்யும் மலர்
சூரியனை
சுடரச் செய்கிறது 

50

மலர் 
ஒரு தவம்
மலர்
ஒரு வரம்

49

கவிதை
சொல்லின் மலர்

48

மலர்கள்
வாடுகின்றன
உதிர்கின்றன
மீண்டும் 
மலர்கின்றன
மீண்டும் மீண்டும்
மலர்கின்றன 

47

ஓர் அபூர்வ கணம்
ஒரு மகத்தான உணர்வு
ஓர் இனிய பிரியம்
நிறைவளிக்கும்
நம்பிக்கையளிக்கும் ஒரு சொல்
மலர்கள்
அந்தரத்திலும் பூக்கின்றன 

46

ஆழ் இரவும்
அடர் ஒளியும்
இணைந்த 
மலர்
நீ

45

 வெயில்
தழுவிக் கொள்கிறது
மலரை
வளி
தழுவிக் கொள்கிறது
மலரை
மழை
தழுவிக் கொள்கிறது
மலரை
வான் 
தழுவிக் கொள்கிறது
மலரை
யாவற்றையும்
தழுவிக் கொள்கிறது
மலர்

44

விண்மீன்கள் மலரும் வானம்
பூக்கள் மலரும் பூமி
இரண்டுக்கும் நடுவே
மலர்ந்திருக்கிறது
இரவு என்னும் மலர்

43

மலர்களுக்கும்
மலர்களின் மகரந்தங்களுக்குமான
உறவு
உனக்கும்
உனது அகத்துக்கும்

42

மலரின் ஒளி
எதனால்
ஆனது?

41

ஒரு சிறு பூந்தோட்டம்
மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது
நம்பிக்கை அளிக்கிறது
துணை நிற்கிறது
தோட்டத்திற்கு 
தினமும்
நீர் வார்க்கும்
தோட்டக்காரன்
மகிழ்ச்சியை
நம்பிக்கையை
மலரச் செய்கிறான்

40

ஒரு மலர்
உடன் வருவதைப் போல
உடன் இருப்பதைப் போல
ஏன்
எல்லாரும் இருப்பதில்லை
என்ற வினா
அக்குழந்தைக்கு 

39

நிலவை
மலர் என்றும்
மலரை
நிலவு என்றும்
புரிந்து கொள்கிறது
அக்குழந்தை 

38

தடாகம் வானம்
பூத்திருக்கும்
சின்னஞ்சிறு மலர்கள்
விண் மீன்கள்
வெண் பெரும் மலர்
நிலவு 

37

நிலவு அறியும்
மலரை
மலர்கள் அறியும்
நிலவை 

36

உனது பிரதேசத்தில்
பேதம் இல்லை
துயரம் இல்லை
வலிகள் இல்லை
ஒரு மென் துடிப்பு மட்டுமே இருக்கிறது
உயிரின் துடிப்பு
உயிர் பூக்கும்
மண்ணின் துடிப்பு

35

ஒரு விதையின்
கனவில்
முடிவில்லாமல்
மலர்கள்
பூத்துக் கொண்டே
இருக்கின்றன 

34

மல்லிகை
இயல்பு கொள்ள
விரும்புவதாக
நீ
ஒருநாள்
சொன்னாய்

33

வான் பார்க்கிறாய்
நிலம் பார்க்கிறாய்
காற்று தீண்டுகையில்
மேலும்
உயிர் கொள்கிறாய்
மலராக 

32

உன் முகம்
ஒரு மலர்
உன் கண்கள்
இரு மலர்கள்

31

மீன்கள் சலனமுறச் செய்யும்
நீர்மலர்த் தடாகத்தை
உன் மென் விரல்களால்
தீண்டுகிறாய்
சிலிர்ப்பு

30

பறவைகள்
பறக்கும் மலர்கள்

29

சில்வண்டுகளின் ஒலி காட்டின் மௌனம்
மௌனத்தின் மீதேறி
ஊர்கின்றன
மலர்களின் மகரந்தங்கள் 

28

ஒரு
மலரில்
அமிழ்ந்திருக்கிறது
ஒரு பெரும் காடு

27

மலர்க்கண்களால்
மலர்ப்பார்வையால்
நோக்குகிறாய்
உன் உலகம்
உன் உலகம்
நீர்மை
கொள்கிறது
உன் கண்கள்
நீர்த்திரை கொள்கின்றன
ஒரு கணம்
விழி மூடி
விழி திறக்கிறாய்
உலகில் மலர்கின்றன
ஆயிர மாயிரம்
மலர்கள்

26

புன்னகைக்கிறாய்
உதட்டினை மடித்துக் கொள்கிறாய்
இமை உயர்த்துகிறாய்
உள்ளம்கைகளில்
முகத்தினை வைத்துக் கொள்கிறாய்
ஒரு முகம்
எத்தனை 
மலராக மலர முடியும்

25

மருத நிலம்
நீரில்
பூக்கிறது
இளம் நாற்றுகளாக

24

மருதநிலம்
காத்திருக்கிறது
மழைக்காக
வானம் மகரந்தமென
தூவுகிறது
மழையை
மழை கொண்ட நிலம்
பூக்கிறது
புல்லாக

23

புல்லும்
ஒரு மலரென
புரியத் தொடங்குவது
எப்போது

22

ஒரு மலர்
வான் நோக்குவது
போல
உன் குரல்
உன் இசை
மேலெழுகிறது
இறைமையை
நோக்கி

21

நீ
உணர்ந்த கடவுளை
உணர்கிறேன்
நறு மணமாய்
நிறையும்
உன் இசை
மூலம்

20

தவத்தில் சுடர்ந்த
ஒரு முனிவன்
குறுமுனிவன்
அவன்
கமண்டல நீராய்
மலர்ந்திருந்தது
யோகம்

அந்த மலர்
பரவியது
நிலத்தில்
கலையென
இசையென
காவிரி
என

19

தம்பூராவின் சுருதியில்
நாத ஸ்வர இசையில்
வீணையின் நரம்பொன்றின் அதிர்வில்
இசை பயிலும் மகவொன்றின்
குரலிசையில்
பாயும் போது
மலர்கிறாள்
காவேரி

18

ஒரு மலர்
பலவற்றை
உணர்த்துகிறது
மலர்தலையும்

17

மலரின்
மகரந்தத்திலும்
வீற்றிருக்கிறது
இறைமை

16

 மலரை அர்ப்பணிக்கிறேன்
மலரிடம் 
அர்ப்பணம் ஆகிறேன்

15

 நீ
சூடிக் கொள்ளும்
மலரும்
மலர்களும்
உன்னிடம்
அத்தனை இயல்பாக
பொருந்திக் கொள்வது
எதனால்?

14

உன்னை
மலர்கள் அறியும்
உன்னை
இறைமை அறியும்

13

உயிரை ஏந்திக் கொள்ளும்
ஆற்றல்
கொண்டுள்ளன
எளிய மலர்கள்

12

மணக்கையில்
மலர் வேராகிறது
மணம் மலராகிறது

11

மலர்ப்பெருவெளியில்
ஆதி மலர் ஒன்று இருக்கிறது
ஆதி உயிர் ஒன்று இருக்கிறது

10

நீ 
மலரானது எப்படி
என்று 
கேட்கும் போதெல்லாம்
புன்னகையையே
பதிலாக
அளிக்கிறாய்

9

 நீல மலர் கடல்
அதில்
மிதக்கும்
வெண் மலர்கள்
நுரை

8

சுடரும் மலரும்
மிதக்கும்
பெருநதியில் ஒரு ஓடம்
ஓடக்காரன் பாடுகிறான்
ஒரு பெண்ணின் கதையை

7

வானம்
கன்னங்கரு மேகங்களால்
சூழ்ந்திருப்பதைக்
காண்கிறாய்
குளிர்கிறது உன் உடல்
குளிர்கிறது உன் மனம்
காற்றில் மலர்கின்றன
மழை மலர்கள் 

6

  மலர்ப்பாதங்கள்
மலர்க்கண்கள்
அகம் மலரும் கணம்
மலர் வெளியாய்
உயிர் வெளி

5

அகம் கரையும் கணம்
யாவும் கரைகின்றன
மலரிதழென 
காற்றில் அலைகிறது உயிர்
அவ்வளவு மென்மையாக
அவ்வளவு மென்மையாக 

4

மலருக்கான தவம்
மலர்தலுக்கான தவம்

3

ஒரு துளி
ஒரு சிறு துளி
ஒரு சின்னஞ்சிறு துளி
மகரந்தத்தில்
உறங்கிக் கொண்டிருக்கிறது
ஒரு பெரும் காடு

2

மலர்
தன்னைச் சுற்றி
ஓருலகை
உருவாக்கிக் கொள்கிறது 

1

நிறைந்திருக்கிறது
காலப்பெருவெள்ளம்
அதில் மலர்ந்திருக்கிறது
ஒரு ஒலிமலர்
ஓங்காரம்




Tuesday 13 July 2021

1

நிறைந்திருக்கிறது
காலப்பெருவெள்ளம்
அதில் மலர்ந்திருக்கிறது
ஒரு ஒலிமலர்
ஓங்காரம்

Monday 12 July 2021

2

மலர்
தன்னைச் சுற்றி
ஓருலகை
உருவாக்கிக் கொள்கிறது 

Sunday 11 July 2021

3

 ஒரு துளி
ஒரு சிறு துளி
ஒரு சின்னஞ்சிறு துளி
மகரந்தத்தில்
உறங்கிக் கொண்டிருக்கிறது
ஒரு பெரும் காடு

Saturday 10 July 2021

4

மலருக்கான தவம்
மலர்தலுக்கான தவம்

Friday 9 July 2021

5

அகம் கரையும் கணம்
யாவும் கரைகின்றன
மலரிதழென 
காற்றில் அலைகிறது உயிர்
அவ்வளவு மென்மையாக
அவ்வளவு மென்மையாக 


Thursday 8 July 2021

6

மலர்ப்பாதங்கள்
மலர்க்கண்கள்
அகம் மலரும் கணம்
மலர் வெளியாய்
உயிர் வெளி



Wednesday 7 July 2021

7

வானம்
கன்னங்கரு மேகங்களால்
சூழ்ந்திருப்பதைக்
காண்கிறாய்
குளிர்கிறது உன் உடல்
குளிர்கிறது உன் மனம்
காற்றில் மலர்கின்றன
மழை மலர்கள் 

Tuesday 6 July 2021

8


சுடரும் மலரும்
மிதக்கும்
பெருநதியில் ஒரு ஓடம்
ஓடக்காரன் பாடுகிறான்
ஒரு பெண்ணின் கதையை



Monday 5 July 2021

9

 நீல மலர் கடல்
அதில்
மிதக்கும்
வெண் மலர்கள்
நுரை

Sunday 4 July 2021

10

நீ 
மலரானது எப்படி
என்று 
கேட்கும் போதெல்லாம்
புன்னகையையே
பதிலாக
அளிக்கிறாய் 

Saturday 3 July 2021

11

 மலர்ப்பெருவெளியில்
ஆதி மலர் ஒன்று இருக்கிறது
ஆதி உயிர் ஒன்று இருக்கிறது

Friday 2 July 2021

12

மணக்கையில்
மலர் வேராகிறது
மணம் மலராகிறது

Thursday 1 July 2021

13

உயிரை ஏந்திக் கொள்ளும்
ஆற்றல்
கொண்டுள்ளன
எளிய மலர்கள்