Monday 24 February 2020

ஒரு புரிதல்

சில வாரங்களுக்கு முன், நான் கார் துடைக்கும் பிரஷ் வாங்குவதற்காக கடைக்குச் சென்றேன். கடைக்குச் செல்லுதல் என்பது இங்கு கடைகளுக்குச் செல்லுதலே. இன்றைய நுகர்வுச் சூழல் ஒரே மாதிரியான பொருளை எல்லா நுகர்வோருக்கும் விற்க விரும்புகிறது. வேறு விதத்தில் சொன்னால், திணிக்கிறது. நுகர்வு கலாச்சாரம் சாமானியனை செலவழிக்கச் சொல்லித் தூண்டுகிறது. செலவு செய்வதன் மூலம் வாங்குவதன் மூலம் நீ சந்தோஷம் கொள்வாய் என்று ஓயாமல் பல விதங்களில் பிரச்சாரம் செய்கிறது. இன்று பெரும்பாலானோர் மனதுக்குள் இந்த விஷயம் வந்து விட்டது. சிந்தனை மறுசிந்தனை பரிசீலனை ஆகிய எவையும் இன்றி நுகர்வின் பின் செல்வது வெகுமக்களின் இயல்பான மனநிலையாகவும் பழக்கமாகவும் மாறியிருக்கிறது. 

என்னுடைய தொழில் கட்டிட கட்டுமானம். ஒரு பொருளின் விலையை உள்ளூரில் நான்கு இடத்தில் விசாரித்து வெளியூரில் விசாரித்து எங்கே தரமான பொருள் நியாயமான விலைக்குக் கிடைக்கிறதோ அங்கிருந்து வாங்குவது எனது பழக்கம். தரமான பொருளை நியாயமாக விற்க வேண்டும் என நினைக்கும் வணிகருக்கே எனது வணிகத்தை அளிக்க வேண்டும் என நினைப்பேன். 

நுகர்வு குறித்து இவ்வளவு எண்ணங்களும் அபிப்ராயங்களும் இருப்பதால் என்னுடைய தொழில் சார்ந்த விஷயங்கள் தவிர நான் கடைகளுக்குச் சென்று பொருள் வாங்குவது குறைவு. பெரும் வணிக அங்காடிகளைக் காணும் போது ஒவ்வொரு முறையும் வியப்பாக இருக்கும். இந்த உலகம் இத்தனை பொருட்களால் ஆனதா என்று. 

என்னுடைய மாருதி ஆம்னியை இப்போதெல்லாம் தினமும் துடைத்து வைக்கிறேன். நகரத்தின் வீதிகள் வாகனத்தை நிறுத்தி வைக்க தோதானவை அல்ல. வண்டியை பார்க் செய்வது திரும்ப எடுப்பது ஆகியவை இலகுவான அனுபவமாக இருப்பதில்லை. வெளியூர் செல்லும் போது வாகனத்தை எடுத்துச் செல்வது ; உள்ளூரில் இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்துவது என்பதே எனது பழக்கம். நான் டெல்லிக்கே டூ-வீலரில் பயணிப்பவன்!

கார் துடைப்பது என்பது  ஒரு தீவிரமான செயல்பாடாக இருக்கிறது. தினமும் துடைக்கும் போது காருடன் ஒரு உரையாடலும் பிரியமும் உருவாகி விடுகிறது. என்னை என் மனநிலையை என் சுக துக்கங்களை என் கார் அறியும் என்று உணரத் துவங்கினேன். என்னைப் புரிந்து கொள்கிறது ; எப்போதும் சங்கடப்படுத்துவது இல்லை. ஓர் உற்ற துணைவனாக வாழ்வில் இடம் பெறத் துவங்கியது. காரை பார்க்கிங்கில் இருந்து எடுத்து வாசலில் வைப்பது துணியால் அதன் மேல் படர்ந்திருக்கும் தூசியைத் தட்டுவது பின்னர் ஒரு வாளி தண்ணீரை எடுத்துக் கொண்டு துணியை நீரால் நனைத்து காரைத் துடைப்பது பின்னர் உலர்ந்த துணி கொண்டு துடைப்பது காகிதத்தால் கண்ணாடியைத் துடைத்துப் பளபளப்பாக்குவது என குறைந்தது அரை மணி நேரத்துக்காகவாவது தினமும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. தூசியைத் தட்டுவதற்கும் கார் மேட்டில் இருக்கும் மண்ணைக் கூட்டுவதற்கும் பிரஷ் இருந்தால் வசதியாக இருக்கும் என்று எண்ணினேன்.

கார் பொருட்கள் வாங்கும் கடைக்குச் சென்றேன். அவர்கள் சில பிரஷ்ஷைக் காட்டினர். அது என்னுடைய காருக்கும் நான் கார் துடைக்கும் முறைக்கும் ஒத்துப் போகக் கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு வரவில்லை. மூன்று கடைகளில் சென்று விசாரித்தேன். திருப்தியில்லை. ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றேன். அங்கே தென்னை நாரால் ஆன ஒரு பிரஷ் இருந்தது. Mat-டைக் கூட்டுவதற்கு இது வசதியானது என்று தோன்றியதால் அதை வாங்கினேன். ஒரு மரக்கடையில் தென்னை நார்க் கொத்துகளை சிப்பமாக இறுக்கிச் செருகியிருந்தனர். விலை ஐம்பது ரூபாய் என்றனர். தரமான பொருள் சகாய விலை என்பதால் வாங்கிக் கொண்டேன். பின்னர் என்னுடைய கார் மெக்கானிக்குக்கு  ஃபோன் செய்து என்னுடைய காருக்கு உபயோகமான பிரஷ் எங்கே கிடைக்கும் என்று கேட்டேன். அவர் நான் சென்று விசாரித்த கடைகளையே திரும்பவும் சொன்னார். நான் அங்கே சென்று விட்டேன் என்றேன். புதிதாகத் துவக்கப்பட்ட ஒரு கடையைச் சொன்னார். அங்கே சென்று கார் மேற்பரப்பைத் துடைக்கும் பிரஷை வாங்கினேன். பிளாஸ்டிக்கால் ஆனது. பிளாஸ்டிக் கைப்பிடி. விலை எழுபத்து ஐந்து ரூபாய்.

தினமும் ஷெட்டிலிருந்து காரை இறக்குவது மெல்ல தூசி தட்டுவது தண்ணீரால் துடைப்பது ; கொஞ்ச தூரம் காரை இயக்குவது மீண்டும் ஷெட்டில் ஏற்றுவது என்னும் செயல்களை தினமும் ஒரு பக்தன் தன் கடவுளை திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்புவது திருநீராட்டுவது பல்லாண்டு பாடுவது என்பது போல செய்து கொண்டிருக்கிறேன். அந்த தென்னை பிரஷை மேலும் இரண்டு வாங்கி வந்து வீட்டில் வைத்துக் கொண்டு ஷெல்ஃபிலும் ஜன்னல் கம்பிகளிலும் படியும் தூசியைத் தட்டிக் கொண்டிருக்கிறேன். 

காரின் கியர் அமைப்பில் மிகச் சிறிய மெல்லிய குறைபாடு ஒன்று இருந்தது. அதை யாராலும் கண்டறிய முடியவில்லை. சமீபத்தில் சந்தித்த நண்பர் ஒருவர் வண்டியை ஓட்டிப் பார்த்து விட்டு அதனைக் கண்டறிந்தார். ஒரு வெல்டிங் பட்டறையில் ஐம்பது ரூபாய் கொடுத்து பற்ற வைத்தோம். இப்போது மிக சுமுகமாக இருக்கிறது. தினமும் துடைத்து வைத்ததால் தான் பலநாள் கண்டறிய முடியாத அந்த குறையை கார் சரி செய்ய விரும்பி அதற்கான வாய்ப்பை உருவாக்கியது என்று எண்ணிக் கொண்டேன்.

யாவுமே ஈஸ்வர சொரூபம் என்பது தானே அத்வைதம்?

Thursday 20 February 2020

ஓர் இணை

சில வருடங்களுக்கு முன்னால், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுதில்லியிலிருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன். எனக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மிகவும் பிடித்த வண்டி. கிளம்பும் நேரம், வந்து சேரும் நேரம் இரண்டு வழியிலும் தோதானது. பெரும்பாலும் ஒரே விதமான தன்மை கொண்ட பயணிகள் இருப்பார்கள். காலை பெட்டியில் ஒரு சிறு நடை நடந்தால் சக பயணிகள் அனைவரையும் அறிந்து விடலாம். எனக்கு Side Upper Berth ஒதுக்கப்பட்டிருந்தது. என்னுடன் பயணித்தவர்கள் தில்லியில் பயிலும் கல்லூரி மாணவர்கள். இளைஞர்கள் மற்றும் யுவதிகள். 15 பேர் வரை இருப்பார்கள். அதில் இருவர் காதலர்கள். நான் அங்கு சென்று அமர்ந்த சில நிமிடங்களில் அதனை அறிந்தேன்.

இளைஞர்களும் யுவதிகளும் இளமையின் துள்ளலுடனும் உற்சாகத்துடனும் ஆர்ப்பரித்து பொங்கிக் கொண்டிருந்தனர். அந்தாக்‌ஷரி பாடல்கள். கிண்டல்கள். பெட்டியில் பயணித்த அனைவருக்குமே உற்சாகம் தொற்றிக் கொண்டது.

அந்த இரு காதலர்களும் முற்றிலும் நிறைவான ஒரு பிரத்யேகமான தன்மையால் நிரம்பியிருந்தனர். அந்தப் பெண் புன்னகைக்கும் சிற்பம் போலிருந்தாள். அவளுக்குத் தேவையானவற்றை அவள் கேட்கும் முன் அளித்துக் கொண்டிருந்தான் அவள் காதலன். அவன் அளிப்பவற்றுக்கு மேல் ஏதும் தேவையற்றிருந்தால் அந்த யுவதி. அதிகம் பேசிக் கொள்ளவில்லை. ஒருவரின் கவனம் இன்னொருவர் மேல் முழு முற்றாக இருந்தது. ஒரு முழுமையான ஒருங்கிணைப்பு இருவருக்கும் இருந்தது. ஈருடல் ஓருயிர் என அவர்கள் இருந்தனர்.

ஒட்டு மொத்த பயணத்தில் அவர்கள் தற்செயலாகக் கூட தொட்டுக் கொள்ளவில்லை. அவர்களுடைய உலகில் அவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.

அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்; அந்த நாள் அந்த பயணம் அவர்கள் வாழ்வின் உச்சமான தீவிரமான ஆகப் பெரிய இனிமையான அனுபவம் என.

Tuesday 18 February 2020

டைகர் இன்று இல்லை

காலை நடைப்பயிற்சி முடித்து வீடு திரும்பியதும் நேற்று தாக்குதலுக்கு உள்ளான ‘டைகர்’ எங்கே இருக்கிறது எனக் காண்பதற்காகப் புறப்பட்டேன். நான் கிளம்பி வாசலுக்கு வந்த அதே நேரம் டைகருக்குச் சோறிடும் வீட்டின் மூதாட்டியும் அதைத் தேடிப் புறப்பட்டு அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். இருவரும் ஒன்றாக அதனைத் தேடினோம். அது தங்கியிருக்கும் வழக்கமான இடம் எதிலும் அது இல்லை. இரண்டு மூன்று தெருக்களில் பார்த்தோம். மழைநீர் வடிகால் ஒன்றில் கண்ணுக்குப் படாமல் படுத்திருந்தது தெரிந்தது. அதன் அருகே சென்று பெயர் சொல்லி அழைத்தோம். உடலில் எந்த அசைவும் இல்லை. வாலிலும் இயக்கம் இல்லை. 

டைகர் இன்று இல்லை.

Monday 17 February 2020

ஒரு துயர்

இன்று காலை எட்டு முப்பது மணியளவில் வீதியில் படுத்திருந்த நாயினை விலகச் செய்ய பள்ளி வாகனம் ஒன்று ஹாரன் எழுப்பியது. மிகக் கடுமையான ஹாரன் இரைச்சல். சுற்றிலும் வசிப்பவர்கள் அனைவரும் ஏதோ அசம்பாவிதமோ என அஞ்சி வாசலுக்கு வந்தனர். அந்த நாய் சற்று நோயுற்றிருந்திருக்கிறது. ஆதலால் அது நகர சற்று தாமதமானது. அந்த பள்ளி வாகன ஓட்டுநர் குரூரமான மனோபாவத்துடன் அந்த நாயின் மீது வாகனத்தை ஏற்றி விட்டு சென்றார். அதன் உடலிலிருந்து குருதி முற்றிலும் பிழியப்பட்டு தார்ச்சாலையில் ரத்தம். நான் கால்நடைகளுக்கான மருந்தகத்துக்குச் சென்று ஆயின்மெண்ட் வாங்கி வந்தேன். காயத்தின் மேற்பரப்பில் ஆயின்மெண்ட் இட்டேன். நிகழ்ந்த சம்பவம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். 

அதன் மூச்சு மெலிதாய் ஓடிக் கொண்டிருக்கிறது. கண்களை மட்டும் லேசாகத் திறக்கிறது. அதற்கு தினமும் சோறிடும் குடும்பத்தின் குழந்தைகள் டைகர் என்றால் லேசாக வாலை ஆட்டுகிறது.

Saturday 15 February 2020

எண்ணிய எண்ணியாங்கு

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
-திருக்குறள்

நேற்று முந்தைய தினம் வெளியான ஆள்வினையும் ஆன்ற அறிவும் கட்டுரையை வாசித்து விட்டு நண்பர்கள் அழைத்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை வெளிப்படுத்தினர். ஐயங்களை எழுப்பினர். அழைத்தவர்களில் ஒருவர் அரசூழியர், ஒருவர் ஆசிரியர், ஒருவர் விவசாயி, ஒருவர் கடைக்காரர், ஒருவர் வணிகர், ஒருவர் பொறியியல் மாணவர், ஒருவர்  நியூஸிலாந்திலிருந்து அழைத்திருந்தார். 

நியூஸிலாந்திலிருந்து அழைத்த என்.ஆர்.ஐ எனது நண்பரின் உறவினர். எனது நண்பரும் கூட. அவருக்கு சென்பொன்னார் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள அவருடைய பூர்வீக கிராமத்தில் மூன்று ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அதில் முழுவதும் தேக்கு பயிரிட முடியுமா என்று கேட்டார். தாராளமாகச் செய்ய முடியும் என்று சொன்னேன். மிகவும் மகிழ்ந்தார். மே மாதம் இந்தியா வந்ததும் என்னைச் சந்திப்பதாகச் சொன்னார். தனக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நான் அவசியம் உதவுகிறேன் என்று சொன்னேன். 

இயந்திரப் பொறியியலில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி தனக்கு பெரிய அளவில் உதவவில்லை என்று வருத்தத்துடன் கூறினார். கல்வி மூலம் பொருளியல் மாற்றம் கொண்டு வர முடியும் என்பது யோசித்துப் பார்க்கவே அதிசயமாக இருக்கிறது என்று கூறினார்.

வணிகருக்கு ஆர்வம் தாங்கவில்லை. நான் கூறுவதில் நான்கில் ஒரு பங்கு நடந்தாலே பெரும் நன்மை பலருக்கு விளையுமே என்றார்.

விவசாயி எனது கணக்கீடு சரிதான் ; ஆனால் சாத்தியமா என்பது தெரியவில்லை என்றார். அரை ஏக்கர் நிலத்தில் வேலி அமைக்க வேண்டும். அதுதான் முதன்மைச்செலவு. அதன் பின்னர் பராமரிப்புச் செலவு குறைவே என்பதையும் ஒப்புக் கொண்டார். கணக்கீட்டில் பாதிக்குப் பாதி நடந்தால் கூட அதுவும் நல்ல லாபமே என்றார். வறண்ட நிலம் நிறைந்திருக்கும் தென் மாவட்டங்களில் இது எப்படி சாத்தியமாகும் என்பது தெரியவில்லை என்றார். அதற்கு நான் ஒரு வழி சொன்னேன். பருவமழைக்கு ஒரு மாதம் முன்னால் தேக்கு கன்றுகளை நடுவோம் எனில் மழை பொழியும் மூன்று மாதங்கள் அது தன் வளர்ச்சியைத் தானே பார்த்துக் கொள்ளும்; அதன் பின்னர் உள்ள காலங்களில் சற்று முயன்றால் வளர்த்து விடலாம்; முயற்சியும் முனைப்பும் இருந்தால் எந்த கடினமான செயலும் சாத்தியமே என்றேன். பெருமூச்சுடன் ஒப்புக் கொண்டார்.

ஆசிரியரும் அரசூழியரும் இது சாத்தியமேயில்லை என்றனர். அவர்கள் வேறு விதமாய் கூறினால்தான் ஆச்சர்யம்.

இந்தியா உணவு தானியங்களுக்கான மிகப் பெரிய சந்தை. நாம் சுதந்திரம் பெற்ற காலத்தையொட்டி வறட்சியும் பஞ்சமும் அவ்வப்போது இந்திய நிலத்தைத் தாக்கியது. ஒட்டுமொத்த இந்திய மக்கள்தொகைக்கும் உணவு கொடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருந்தது. மத்திய அரசு உற்பத்தியைப் பெருக்குங்கள் என விவசாயிகளிடம் மன்றாடிக் கொண்டிருந்தது. இப்போது இந்தியா உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது.

இன்றும் வெங்காய விலை தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியக் காரணியே. விளைச்சல் எவ்வாறு இருக்கும் என்பதையோ இயற்கைச் சீற்றங்களையோ எந்த அரசாலோ முழுமையாக கணித்திட முடியாது. சில மாதங்களுக்கு முன்னால், நாடெங்கும் வெங்காயத்தின் விலை உயர்ந்து கிலோ ரூ.200 க்கு சென்றது. இப்போது கிலோ ரூ.20 க்கு விற்கிறது.

எனது கட்டுரையில் நான் சொல்ல விரும்புவது இதுதான். தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியில் அதன் விவசாயக் குடிமக்களின் வாழ்வில் பொருளியல் மாற்றத்தைக் கொண்டு வரும் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதைப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். ஐம்பது ஆண்டுகள் இவ்வாறான ஒரு யோசனை அல்லது பல யோசனைகள் முன்வைத்திருக்கப்படும் எனில் அது சமூகத்தின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். கடந்த ஐம்பது ஆண்டுகளில் எழுத்தறிவு என்பதே கல்வியறிவு என்பதாக கருதப்பட்ட ஒரு காலம் இருந்தது. கிராமத்துக் குழந்தைகள் பள்ளிக்கு வருவது என்பதும் இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக் கல்வியை நிறைவு செய்வதும் பெரும் செயலாக இருந்தது. தமிழ்நாட்டில் தொழில் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு பள்ளிக்கல்வி மூலம் முன்வைக்கப்படவில்லை; அதற்கான தொலைநோக்கு அரசிடம் இல்லை.

குறு விவசாயிகள் தேக்கு பயிரிடும் விஷயத்தில் மாநில அரசாங்கம் என்ன செய்திருக்க முடியும் என நான் நினைப்பதைக் கூறுகிறேன்:

1. 12 வருட பள்ளிக்கல்வியில் மரப்பயிர் குறித்தும் அது உருவாக்கும் பொருளியல் நலன்கள் குறித்தும் பாடங்கள் இடம்பெற வேண்டும். மாணவர்களுக்கு அது போதிக்கப்பட வேண்டும்.

2. பள்ளிக்கல்வித் துறையால் இது குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை பள்ளி மாணவர்களுக்கு முன்வைக்கப்பட வேண்டும்.

3. மரப்பயிரைக் காக்க முள்வேலி அமைக்கக் குறு விவசாயிகளுக்குத் தேவைப்படும் மூலதனத்தை அவர்களுக்கு வங்கிகள் மூலம் குறைந்த வட்டி கொண்ட கடனாக வழங்கலாம்.

4. இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஊக்கத்துடன் பள்ளியில் சொல்லப்பட்டு ஒரு தலைமுறை மனதில் கொண்டு சென்ற ஒரு விஷயத்தை செயலளவில் நிறைவேற்றுவது சாத்தியமே.

5. பள்ளிக்கல்வி மூலம் தொடர் விழிப்புணர்வு - விவசாயத்துறையின் வழிகாட்டல் - வங்கிகளின் கடன் - விவசாயிகள் பங்கேற்பு என அடுத்தடுத்து நிகழுமெனில் இது சாத்தியமே.

லட்சக்கணக்கான குறு விவசாயிகள் வாழ்வில் வளத்தைக் கொண்டு வர வேண்டும் என நினைக்கும் அரசாங்கம் மாநிலத்தில் ஆட்சி செய்தால் இது சாத்தியம். இது வருடக்கணக்காக நடக்க வேண்டிய ஒருங்கிணைக்க வேண்டிய பணி; பொருளியல் மாற்றம் பெற்ற சமூகம் அரசியல் தலைமையிடம் பல விஷயங்களை எதிர்பார்க்குமென்பதால் சமூகம் பெரிய மாற்றங்கள் இல்லாமல் இப்படியே இருக்கட்டும் என நினைக்கும் திராவிடக் கட்சிகள் இதனை எப்படி செய்வார்கள்?

விவசாயிகளின் நண்பனாக காட்டிக் கொள்ள விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்று சொன்னால் போதாதா என்ன?

Friday 14 February 2020

.ஒரு பெண்.

ஒரு பெண்
அவள் பெயர் காதல்
எளிமையும் அழகுமான
அவள் பெயர் காதல்
அவள் இன்று இல்லை
அவள் இங்கு இல்லை

சிறு தேவதையின் முகம்
தெய்வத்தின் கருணை இதயம்
அவள் மலர்கையில்
மலர் சிரிக்கிறது

சின்னஞ்சிறு பறவைகள் கூடடையும்
ஆலமரத்தைப் போல உயரமானவள்
அவள் சின்னஞ்சிறு பெண்
ஆனால் கண்களின் மொழியில்
இதயத்தை அறிபவள்
அவள் பெயர் காதல்
அவள் இன்று இல்லை
அவள் இங்கு இல்லை
அவள் ஒரு பெண்

(ஒரு ஹிந்திப் பாடலின் தமிழாக்கம்)

Thursday 13 February 2020

ஆள்வினையும் ஆன்ற அறிவும்

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
-திருக்குறள்

தமிழ்நாடு விவசாயத்தை அடிப்படையாய்க் கொண்ட மாநிலம். விவசாய உற்பத்தி சார்ந்த கல்வி தமிழ்நாட்டின் கல்வித்திட்டத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இடம்பெற்றிருக்கிறதா என எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. இஸ்ரேல் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக விவசாயத்தில் முன்னணியில் இருக்கும் தேசம். மிகச் சிறிய தேசம். கிட்டத்தட்ட பாலைவனம். ஆனாலும் எல்லா விதமான பயிர்களும் விளைவிக்கப்படும் தேசம். தமிழ்நாட்டின் கல்வித்திட்டத்தில் விவசாயம் குறித்து ஆக்கபூர்வமான விஷயங்கள் இடம் பெற்றனவா என்பது எண்ணிப் பார்க்க வேண்டிய விஷயம். தமிழ்நாட்டில் சிறு விவசாயிகளும் குறு விவசாயிகளும் அதிகம். குறு விவசாயி என்பவர் இரண்டரை ஏக்கர் நிலத்தை மட்டும் உரிமையாய்க் கொண்டவர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தமிழ் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் விவசாயத்தில் மரப்பயிர்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டிருக்குமென்றால் நான்கு தலைமுறை மாணவர்கள் மரப்பயிர் குறித்த அறிமுகம் பெற்றிருப்பார்கள். 

உலகெங்கும் மரப்பொருட்களுக்கான தேவை கடந்த முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாகவே பெருகிய வண்ணமே இருந்திருக்கிறது. ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்புள்ள பொருள் மரம். மானாவாரி நிலத்திலும் பாசன வசதியுள்ள இடத்திலும் சிறப்பாக வளரக்கூடியது மரப்பயிர். தேக்கு மரம் மட்டுமே போதும். இரண்டரை ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி அரை ஏக்கர் நிலத்தில் தேக்கு பயிர் செய்தாலே பதினைந்து ஆண்டுகளில் அவருக்கு மிக நல்ல வருமானம் அதிலிருந்து வரும். 

இன்று தமிழ்நாட்டில் ஆஃப்ரிக்காவின் நைஜீரியா தேசத்தில் வளரும் தேக்கு இறக்குமதி செய்யப்பட்டு தமிழ்நாட்டு கட்டுமானச் சந்தையில் முக்கிய இடம் பெறுகிறது. அன்னியச் செலாவணியை நாம் நைஜீரிய தேக்கு இறக்குமதிக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நம் தமிழ்நாட்டின் கல்வியில் சாமானியனின் வாழ்க்கையில் நேரடியான பொருளியல் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய விஷயங்கள் சொல்லித் தரப்பட வேண்டும். ஒரு சிறு கணக்கைப் பார்ப்போம்:

தோராயமாக தமிழ்நாட்டின் ஒரு விவசாய கிராமத்தின் பரப்பு = 1000 ஏக்கர்
  
அதில் விவசாய நிலம் = 750 ஏக்கர்

குறு விவசாயியின் நில அளவு = 2.5 ஏக்கர்

குறு விவசாயிகள் எண்ணிக்கை = 250

ஒரு குறு விவசாயி தனது ஐந்தில் ஒரு பங்கில் (அரை ஏக்கர் நிலம்) மரப்பயிர் பயிரிட்டால்
மரப்பயிர் சாகுபடி பரப்பளவு = 125 ஏக்கர்

அரை ஏக்கரில் பயிரிட வேண்டிய தேக்கு மரத்தின் எண்ணிக்கை = 200

15 ஆண்டுகளில் ஒரு மரத்தின் விலை =  ரூ.20,000/-

அரை ஏக்கர் நிலத்தில் உள்ள தேக்கு மரத்தின் விலை = ரூ. 40,00,000/-

ஒரு கிராமத்தில் உள்ள 125 ஏக்கர் தேக்கு மரத்தின் விலை = ரூ. 100 கோடி

(தேக்கு மரம் 15 ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடையும். அதன் பின்னரே விற்பனை செய்ய முடியும். ஆயினும் அந்த தொகையை பயிர் செய்யப்படும் 15 ஆண்டுகளுக்கும் ஒரு கணக்கீட்டுக்காகப் பிரித்துக் கொள்வோம்)

ஒரு வருடத்துக்கு என பிரித்தால் = ரூ. 6.66 கோடி

தமிழ்நாட்டில் உள்ள 10,000 கிராமங்களுக்கு கணக்கிடால் = ரூ.66,600 கோடி

தேக்கு மரம் லாபமான மரப்பயிர் என்பது அனைத்து விவசாயிகளும் அறிந்தது. அரை ஏக்கர் நிலத்தில் வளரும் தேக்கு ஆரம்பத்தில் ஓரளவு பராமரிப்பும் பின்னர் ஆண்டுதோறும் பொழியும் மழைப்பொழிவை மட்டும் கொண்டும் வளரக் கூடியது. தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் விவசாயப் பின்னணி கொண்ட குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். தமிழ்நாடு அரசின் கல்விமுறை தனது மக்களின் வாழ்க்கையில் நலத்தை உருவாக்குவதைக் குறித்து சிந்தித்திருக்குமேயானால் குறு விவசாயிகள் வாழ்வில் மேம்பாடு ஏற்படுத்த தங்கள் பாடப்புத்தகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றிருப்பார்கள். இருபத்து ஐந்து லட்சம் எளிய குறு விவசாயிகள் வாழ்வில் ஒளியைக் கொண்டு வர சாத்தியமுள்ள விஷயம் இது. 

இந்தியா விவசாய வருமானத்துக்கு முழு வரிவிலக்கு கொடுக்கும் நாடு. தமிழ்நாட்டில் ஓராண்டுக்கு நேரடியாக குறு விவசாயிகள் கைக்கு ரூ.66,600 கோடியைக் கொண்டு சேர்க்கக் கூடிய செயலுக்கு தமிழ்நாட்டை 50 ஆண்டுகள் ஆண்ட திராவிடக் கட்சிகள் உதவியிருக்கலாமே? பொருளியல் விடுதலையே சமூக விடுதலைக்கான வழியாய் இருந்தது என்பதுதானே உலக வரலாறு?


Wednesday 12 February 2020

சில கேள்விகள் - என் பதில்கள்

இன்று காலை எனக்கு ஒரு நண்பர் ஃபோன் செய்தார். நான் ஏன் பயண சௌகர்யங்களுக்கு பெரும் முக்கியத்துவம் தருவதில்லை என்று கேட்டார். பயண சௌகர்யங்கள் என்றல்ல எந்த விதமான சௌகர்யத்தையும் கருத்தில் கொண்டு நான் எந்த பணியையும் செய்வதில்லை என்றேன். இதைப் புரிய வைப்பது கடினம். நான் சௌகர்யங்களுக்கு எதிரானவன் அல்ல. எந்த சௌகர்யத்தையும் பயன்படுத்தாமல் இருப்பவனும் அல்ல. நான் அவற்றுக்கு முழுக்க கட்டுப்பட்டவன் அல்ல. அவ்வளவு தான். இம்முறை அகமதாபாத் சென்ற போது ரயில் இருக்கை முன்பதிவு பெறமுடியவில்லை. சற்று தாமதமாகி விட்டது. ஒரு பெரும் இலக்கின் முதல் அடி என்பதால் சிறு தடுமாற்றம் ஆனது. நான் சமாளித்தேன். நவஜீவன் எக்ஸ்பிரஸ் ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் மிக அதிக நேரம் பயணிக்கிறது. மாநிலம் பிரிக்கப்பட்டதை ஆந்திராகாரர்களால் இன்றும் ஏற்க முடியவில்லை. மூன்று தலைநகர் என்பது அவர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களுடன் உரையாடிய போது அதனை என்னால் நேரடியாக உணர முடிந்தது. பின்னர் வண்டி குஜராத்தில் சென்று கொண்டிருந்த போது ரயிலில் பாடும் மூன்று சகோதரிகள் குறித்த சித்திரம். இது மிக முக்கியமானது. அசௌகர்யத்தால் நான் இந்த மனப்பதிவுகளை அடைந்தேன் என்று சொல்ல வரவில்லை. ஆனால் என்னால் அந்த அசௌகர்யத்திலும் சிலவற்றைப் புரிந்து கொள்ள முடியும். 

ஞாயிறன்று மாலை ரயிலில் பரங்கிப்பேட்டை சென்றிருந்தேன். அப்போது ஓர் ஆசிரியர் உடன் பயணித்தார். மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியர். அவரிடம் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கேட்டேன். அது நல்ல விஷயம் என்றார். ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அதன் மூலம் மதிப்பிட முடியும். அது கண்டறியப்பட்டால் அதனை மேம்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றார். உலகிலேயே தேர்வுக்கு எதிராக போராட்டம் அநேகமாக தமிழ்நாட்டில்தான் நடக்கும் என்று நீட் தேர்வைக் குறித்து சொன்னார்.

நான் வசதிகளைப் பயன்படுத்தாதவன் அல்ல. ஆயினும் நான் மக்களோடு இருக்க விரும்புபவன். எந்நிலையிலும் பொதுமக்களோடு இருப்பதை தவிர்க்க முயலாதிருப்பவன். நான் பெரும்பாலும் எனது பகுதியில் மோட்டார்சைக்கிளில் பயணிப்பேன். சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் வரை. பூம்புகாரிலிருந்து கும்பகோணம் வரை. இங்கே நான் பயணித்திராத கிராமச் சாலைகள் மிக சொற்பமாகவே இருக்க இயலும். இவ்வகையான பயணங்களும் அதில் நான் சந்தித்த மனிதர்களுமே எந்த விஷயம் குறித்தும் நான் கொண்டுள்ள அறிதலுக்குக் காரணமானவர்கள்.

ஒருமுறை தென் மாவட்டம் ஒன்றில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் அருகில் அமர்ந்து பயணித்தவர் ஒரு பேருந்து ஓட்டுநர். அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார் : ‘’தம்பி! மாநில அரசாங்கம் செய்யும் மிகப் பெரிய ஊழல் என்பது போக்குவரத்துத் துறையில் நடப்பது. பேருந்து வாங்குவது, பராமரிப்பது, ஊழியர் ஊதியம் என அனைத்திலும் கோடிக்கணக்காக ஊழல் நடக்கிறது. தினமும் பயன்படுத்துவது என்பதால் மக்கள் அதை ஊன்றி கவனிக்க மாட்டார்கள். இந்திய ரயில்வே தனக்குத் தேவையான ரயில் பெட்டிகளைத் தானே தயாரிக்கிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. மாநில அரசாங்கத்தால் தனக்குத் தேவையான பேருந்துகளை உற்பத்தி செய்ய முடியாதா? ஏன் உற்பத்தி செய்வதில்லை. வருடாவருடம் நூற்றுக் கணக்காக பேருந்துகளை வாங்குகிறார்கள். அதில் புரளும் கமிஷன் எவ்வளவு இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து பொதுப் போக்குவரத்தை தனியாருக்குக் கொடுத்தால் மக்களுக்கும் லாபம். நிறைய தொழில்முனைவோர் உருவாவார்கள். ஏன் செய்வதில்லை?’’. அவர் எழுப்பிய வினா முக்கியமானது.

பயணங்கள் மனிதர்களை இணைக்கின்றன. என்னிடம் எழுப்பப்பட்ட வினாவுக்கு இதுவே என் பதில்.

Tuesday 11 February 2020

நாகரிகம் - ஒரு கடிதம்

அன்பின் பிரபு,

இன்றுதான் ’நாகரிகம்’ வாசித்தேன்.

முந்தைய காத்திருப்பு கதைக்கும் இதற்கும் சில ஒற்றுமைகள் புலப்பட்டன - அசாதாரணமான நாயகன் - 'காத்திருப்பு' லக்ஷ்மி நரசிம்மன் ஆபத்பாந்தவன், அநாத ரக்ஷகன் போலவே இதில் வரும் கார்த்தியும் வாசனைகளில் மன்னன்.
இருவருக்கும் நேர்ந்துவிடும் தனிப்பட்ட இடிபோன்ற துர்மரணங்கள்...
போலவே கதை நிகழ்வதையும் மாந்தர்களின் பண்புகளையும் சம்பவங்கள் வழியாக உணர்த்தும் விதம்...

கதை நெடுகவே கார்த்தியின் வாசனையுணரும் திறனும் அவனது விசேஷமான நுண்ணுர்வும் பூடகமாக ஆங்காங்கு சொல்லப்பட்டுள்ளது

(உதா. மேயும் ஆடுகளின் புளுக்கைகள் காய்ந்து கொண்டிருக்கும் மணம். கோரை மட்டும் மண்டியிருந்தது. ஆடுகள் காய்ந்த புல்லை முகர்ந்து கொண்டிருந்தன. தண்ணீர் பாய்ந்து பல ஆண்டுகள் ஆன வாய்க்கால் தடம் மண்பாதை போல கெட்டித்துக் கிடந்தது. அதில் டூ-வீலரும் காரும் வந்து செல்வதன் தடங்கள்.)

கார்த்தியின் வாசனையறியும் உணர்வே (அல்லது திறன்) சோற்றில் பறந்த ஆவியில் ஏதோ ஒன்று சரியில்லை என்பதை உணர்த்துகிறது.
வெங்கட்ரமணன் சொன்ன அந்த அறிமுக வகுப்பு விஷயம்தான் கார்த்திக்கு அவன் நண்பனின் 'சித்து' வேலைகளை இனங்காண உதவியிருக்கின்றன என்று யூகிக்கிறேன்.

ஆனாலும் அவனது அந்த நயத்தக்க நாகரிகம் வெளிப்படும் உச்சம் - அவன் வெறும் ஒரு காகிதத்தில் எழுதி வைத்துவிட்டு தன் வீட்டிற்கு திரும்பி வருவது!
பின்னர் வந்த அந்த சம்பவம் சுஜாதா கதைகளில் வரும் ஒரு 'ஆன்டி கிளைமேக்ஸ்'

என்னால் முதல் வாசிப்பில் இவ்வளவுதான் கிரகிக்க முடிந்தது! முடிந்தால் மற்றுமொரு வாசித்து பின் எழுதுகிறேன்.
(இன்றுதான் கவனித்தேன் சொல்வனத்தில் தங்களின் பல ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. https://solvanam.com/author/mylai_prabhu_r_prabu/ நிச்சயம் வாசிக்கிறேன்)

வாழ்த்துகள், நன்றி.

அன்புடன் 
வெங்கட்ரமணன்

Monday 10 February 2020

நாகரிகம்

சொல்வனம் 216வது இதழில் சமீபத்தில் எழுதிய நாகரிகம் சிறுகதை பிரசுரமாகியுள்ளது. அதன் இணைப்பு

நாகரிகம்

Friday 7 February 2020

முன்னேற்பாடுகள்

என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை. சாதாரண ஜி.எஸ்.எம் ஃபோனை மட்டுமே பயன்படுத்துகிறேன். அதையும் பலநேரம் அணைத்து வைத்தால் என்ன என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஒரு பணியை ஒருங்கிணைந்து செய்ய அலைபேசி உபயோகமானது. 2020ம் ஆண்டு மேற்கொள்ளும் ‘’வாழ்க்கை ஒரு திருவிழா’’ பயணங்களில் அலைபேசியைக் கையில் கொண்டு செல்வதில்லை என இருக்கிறேன். அகமதாபாத் சென்ற போது கையில் செல்ஃபோன் இல்லை. எனவே ரயில் பயணச்சீட்டு முன்பதிவை குறுஞ்செய்தியாக கொண்டு செல்ல முடியாது. இன்று சிவராத்திரிக்கு காசி செல்வதற்கான முன்பதிவை செய்தேன். நண்பர் டிக்கெட் பிரிண்ட் அவுட் எடுத்துத் தந்தார். அகமதாபாத் சென்ற போது டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை. காத்திருக்கும் பட்டியலுக்குச் சென்று விட்டது. முன்பதிவு இல்லாத பெட்டியில் 33 மணி நேரப் பயணம். சக பயணிகள் பெரும்பாலானோர் முன்பதிவு கிடைக்காமல் சாதாரண வகுப்பில் பயணித்தவர்களே. 8 பேர் அமரக்கூடிய இடத்தில் அதிகபட்சமாக 22 பேர் இருந்தோம். குறைந்த பட்சமாக 14 பேர். 

குஜராத் மாநிலத்தில் நுழைந்ததும் ஒரு ரயில் நிலையத்தில் வெள்ளரிக்காய் விற்றார் ஒருவர். நான் என்னுடன் அமர்ந்து பயணிப்பவர்களுக்கும் சேர்த்து வாங்கினேன். அவர்களிடம் கொடுத்தேன். அனைவரும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கொண்டார்கள். அப்போது அங்கே ரயில் பாடகியான சிறுமி ஒருத்தி வந்தாள். மூன்று சிறுமிகள். இவள் பெரியவள். இவளது தங்கைகள் இருவர். பயணிகளின் கண்களைத் தயக்கமின்றி சந்திக்கிறாள். உங்களை முற்றிலும் அறிவேன் என்பது போல உறுதியாக அவள் பார்வை இருக்கிறது. நான் வெள்ளரிக்காயை வினியோகித்துக் கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். என்னருகில் வந்தாள். என் கைகளிலிருந்த வெள்ளரிக்காயை எடுத்து தின்னத் தொடங்கினாள். நிதானமாக நின்று கொண்டு. முழுமையாக ருசித்து. நான் அவளுக்காக அவள் தின்னும் வரை கையில் ஏந்திக் கொண்டிருந்தேன். தள்ளி நின்றிருந்த தங்கைகளிடம் வேண்டுமா என்றாள். அவர்கள் எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தனர். என் கையிலிருந்து இரண்டு வெள்ளரிக்காய்களை எடுத்து லாவகமாக அவர்களிடம் வீசினாள். என்னிடம் தன்யவாத் என்றாள். நானும் தன்யவாத் என்றேன். தங்கைகளுடன் இணைந்து கொண்டு பாடத் துவங்கினாள். ஒரு கணம் கலங்கி மீண்டேன்.

இந்த மாதம் 21ம் தேதி சிவராத்திரி. அப்போது காசியில் இருப்பதாகத் திட்டம். அடுத்த மாதம் ஹோலி. காசியிலிருந்து ஊருக்கு வந்து விட்டு ஒரு வாரத்தில் மீண்டும் பிருந்தாவனம் செல்ல வேண்டும். விஜயவாடாவும் வாரங்கல்லும் நாகபுரியும் சீர்காழி சிதம்பரம் போல் ஆகி விடும் என்று தோன்றுகிறது. ரயில் முன்பதிவு செய்ததே பெரும் சாதனை ஒன்றைச் செய்ததாக எண்ண வைக்கிறது. 

தொகுத்துக் கொள்ளுதல்


திட்டமிட்ட போது எளிதாகத்தான் இருந்தது. எளிய திட்டமிடலும் கூடத்தான். எனினும் செயலாக்கும் போது எதிர்பாராத சில விஷயங்கள் முன் வந்து நின்றன. 2020ல் பன்னிரண்டு விழாக்கள் என்று திட்டம். கிட்டத்தட்ட மாதம் ஒரு விழா. விழாவுக்குச் செல்ல இரண்டு நாட்கள். விழாவில் மூன்று நாட்கள். திரும்பி வர இரண்டு நாட்கள் என்று திட்டமிட்டிருந்தேன். உத்தராயண் விழாவுக்கு அகமதாபாத் சென்று வந்தேன்.

என்னுடைய வலைப்பூவில் பதிவுகளை இட வேண்டும். பயண முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். பயணம் முடிந்து திரும்பியதும் சிறு ஓய்வு தேவைப்படுகிறது. வணிகம் தொடர்பான ஏற்பாடுகளை செய்து விட்டுப் போக வேண்டியிருக்கிறது. வந்ததும் பணிகளை விட்ட இடத்திலிருந்து தொடர்தல் அவசியமாகிறது. பல வருடமாகப் பழகிய பணிமுறை சிறு மாற்றங்களை எதிர்கொள்வதால் எதிர்பாராத சில விஷயங்கள் நிகழ்கின்றன. அவற்றை முறைப்படுத்த வேண்டும்.

பயணங்கள் உணர்ச்சிகரமானவை. இந்திய நிலத்தில் நெடுந்தூரம் நிகழ்த்தப்படும் எந்த பயணமும் உணர்ச்சிகரமானதே. தனியே பயணிப்பது என்பது மேலும் தீவிரமானது.

பயணங்கள் பழகிய ஒன்றை மாற்றியமைக்கின்றன. அவை நலம் பயக்கின்றன.

Thursday 6 February 2020

நிர்மாணம் - உருவாதலின் வழி

2001ம் ஆண்டு நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவனாக இருந்தேன். அப்போது குஜராத் மாநிலம் பூகம்பத்தால் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. சந்தைக் காய்கறிகள் போல கட்டிடங்கள் கான்கிரீட் குவியலாகக் கிடந்தன. அப்போது பத்திரிக்கைகள் இடிந்து போன கட்டிடங்களின் புகைப்படங்களையும் நிவாரணப் பணிகள் குறித்த செய்திகளையும் வெளியிடும். என் நினைவில் இருந்து பத்திரிகைகளில் வெளியான சிலவற்றைக் கூறுகிறேன். 

குஜராத் மாநகர் ஒன்றில் ஒரு பெரும் வணிக வளாகம். தரைமட்டமாக இடிந்து கிடக்கிறது. எங்கும் துர்நாற்றம். அப்பகுதியின் மக்கள் அனைவரும் திறந்த வெளி மைதானங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எழுபது வயதான முதியவர் ஒருவர் தினமும் பகலில் முன்னர் வணிக வளாகம் இருந்த இடத்தின் முன் நின்று அதையே பார்த்துக் கொண்டிருக்கிறார். நிவாரணப் பணிகளில் ஈடுபடும் சேவை அமைப்பினர் இதைக் கவனிக்கின்றனர்.

‘’பெரியவரே! ஏன் தினமும் இங்க வந்து நிக்கறீங்க?’’

‘’இது நான் என்னோட சின்ன வயசுலேந்து உழைச்சு உருவாக்கின காம்ப்ளக்ஸ். ‘’

சேவை அமைப்பினர் என்ன ஆறுதல் சொல்வது என அறியாமல் திகைக்கின்றனர்.

‘’இப்ப இந்த வெட்டவெளியைப் பார்த்து என்ன யோசிக்கிறீங்க?’’

‘’எப்போ இங்க இருந்ததை விடப் பெரிய காம்ப்ளக்ஸ் கட்டற வேலையை ஆரம்பிக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கன்”

குஜராத் பூகம்ப நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட சகலவிதமான சேவை அமைப்பினரும் வியந்து சொன்ன சம்பவம் ஒன்று. ஒரு வயதான மூதாட்டி. தனியே அமர்ந்திருக்கிறார். 

அவரிடம் பிரிக்கப்பட்ட பிஸ்கட் பொட்டலம் ஒன்றை நீட்டுகின்றனர். அவர் இரண்டு பிஸ்கட்களை எடுத்துக் கொள்கிறார். சேவை அமைப்பினர் சொல்கின்றனர்.

‘’பாட்டி பிஸ்கட் நிறைய எடுத்து கையில வச்சுக்கங்க’’

‘’தம்பி! என்கிட்ட இருந்ததை மத்தவங்களுக்கு கொடுத்துத்தான் என் வாழ்க்கை முழுக்க பழகியிருக்கன். இன்னும் சில பேருக்கு பயன்படக் கூடியதை நான் மட்டும் வச்சுக்கக் கூடாது. அப்படி ஒரு விஷயத்தை என்னால நினைச்சுக் கூட பாக்க முடியாது’’

பாதிக்கப்பட மக்களே சேவை அமைப்பினரின் பணிகளில் உடனிருந்து உதவியதை அப்போது எல்லா பத்திரிகைகளும் பதிவு செய்தன. அதன் பின், வெறும் 13 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியப் பிரதமரானார்.

Wednesday 5 February 2020

காந்தியின் தேசம் - குஜராத்


நான் இந்தியப் பெருநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வழியே மோட்டார்சைக்கிளில் பயணித்தவன். இந்திய நிலத்தின் இந்திய மக்களின் விதவிதமான நிறங்களைக் காண வேண்டும் என்பதற்காகவே பயணம் மேற்கொண்டவன். ஒரு பயணியாக என்னால் ஒரு பிரதேசத்தைக் கண்டவுடன் அதன் அதனுடைய மக்களின் தன்மையை உள்ளுணர்வால் அறிய முடியும். நிலத்தைத் தொடர்ச்சியாக காண்பவனுக்கு உருவாகக் கூடிய உள்ளுணர்வு அது.

நான் பயணம் செய்யும் நிலத்தின் பண்டைய வரலாற்றை இலக்கியங்களை வாசித்து விட்டு அந்நிலத்தில் பயணம் செய்யத் துவங்குவேன். அவ்வாறு செய்யும் போது அந்நிலம் குறித்த கற்பனை என் மனதில் உண்டாகும். பயணத்தில் என் கற்பனையும் யதார்த்தமும் இணைந்து கொள்ளும். நான் எனக்கான புரிதலை அடைவேன்.

தமிழ்நாட்டின் மக்களுக்குப் பெரும்பாலும் பல புதிய பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற தீராத ஆர்வம் உள்ளது. ஆனால் அவர்களுக்கு அந்த பழக்கம் இல்லை. தமிழ்நாட்டில் நடுத்தர வர்க்க குடும்பங்கள் மிகுதி. அவர்களில் கணிசமானோர் பணி நிமித்தம் வேறு ஊர்களில் குடியேறியிருப்பார்கள். விடுமுறைகளில் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று வருவதே அவர்களுக்குப் பெரும் பயணமாக இருக்கும். தீபாவளி, பொங்கல் ஆகிய தினங்களை ஒட்டிய விடுமுறை நாட்களில் சென்னையில் வசிப்போர் பெரும்பாலானோர் மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள தங்கள் சொந்த ஊருக்குச் சென்று விடுவர்.

தமிழ்நாடு போன்ற பண்பாட்டு மேன்மை மிக்க மாநிலத்தில் தமிழ்நாட்டின் சிற்பங்களும் பேராலயங்களும் குறித்த கல்வி தமிழ்நாட்டின் பாடத்திட்டங்களில் இடம் பெற வேண்டும். ஒரு மாணவன் பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளியில் படித்து விட்டு வெளிவருகிறான் என்றால் அவன் தமிழ்நாட்டின் கலை மேன்மைகள் குறித்த குறைந்தபட்ச அறிமுகத்துடன் வெளிவரக் கூடியவனாக இருக்க வேண்டும். ஒரு ஜவுளிக்கடையில் புதிதாக வேலைக்குச் சேரும் ஒருவர் கூட அந்த கடையின் ஜவுளி வகைகளின் தனித்துவம் குறித்து வாடிக்கையாளருக்கு திருப்தியாக விளக்கும் விதத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறார். தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் நம் பண்பாடு குறித்த எந்த அறிமுகமும் இல்லை.

தமிழ்நாடு கல்வித்துறை என்பது மிகப் பெரிய வலைப்பின்னல் கொண்டது. ஒவ்வொரு ஊராட்சியிலும் பள்ளியையையும் ஆசிரியர்களையும் கொண்டிருப்பது. கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுவது. பள்ளிக்கல்வியில் பண்பாடு குறித்தும் சுற்றுலா குறித்தும் அறிமுகம் அளிக்கப்படும் எனில் சுற்றுலா நல்ல வருவாய் அளிக்கக்கூடிய சேவையாக மாறும். லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும். தமிழ்நாடு உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடியதாக இருக்கும். இன்றைய நிலை என்பது தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு பேராலயத்துக்குச் சென்று அங்கே வந்திருக்கும் வெளிநாட்டவர்களிடம் அந்த ஆலயம் குறித்து கேட்டால் அவர்களால் வழிகாட்டி நூல்களில் படித்த விபரங்களை ஐந்து நிமிடங்களுக்காகவாவது கூற முடியும். பெரும்பாலான தமிழ் மக்களால் ஏதும் கூற முடியாது என்ற நிலை. இதனை யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று சோதித்துப் பார்க்கலாம்.

ஒரு சமூகத்தின் மனோபாவம் என்பது அச்சமூகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியது. நேரடியாகச் சொன்னால் ஒரு சமூகத்தின் மனோபாவம் அச்சமூகத்தின் எதிர்கால சந்ததியினரின் பொருளியலைத் தீர்மானிக்கக் கூடியது. சூம்பிப் போன சமூகம் தனது நிகழ்காலத்தை மட்டுமல்ல தனது வருங்காலத் தலைமுறையின் எதிர்காலத்தையும் அழிக்கிறது.

தமிழ்நாட்டில் மக்களிடம் சமூகம் பற்றிய புரிதல் இல்லை. சமூக ஒற்றுமை என்பது இல்லவே இல்லை. பிறர் குறித்த ஐயத்துடனும் விலக்கத்துடனுமே எப்போதும் இருக்கின்றனர். எனவே கூட்டுச் செயல்பாடு என்பது உருவாவதே இல்லை. தமிழ்நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் மக்களை எந்நிலையிலும் இணைந்திருக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். மக்களை இணையாமல் பார்த்துக் கொள்வதே இங்கே அரசியல் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

இங்கே திறன் மிக்க அரசு ஒன்று இருக்குமெனில் கால மாற்றத்தின் எல்லா அம்சங்களையும் புரிந்து கொண்டு அதனை மக்கள் நலனுக்கு ஏற்றவாறு எவ்வாறு பயன்படுத்துவது என யோசிக்கும். ஆனால் இங்கே நடந்திருப்பது என்ன? மது கடந்த இருபதாண்டுகளில் தமிழ்நாட்டில் சர்வசாதாரணமாக்கப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியம் அழிக்கப்பட்டு அடித்தட்டு உழைக்கும் பெண்களின் வருவாய் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலம் சாராயத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. கீழ் நடுத்தர அடித்தட்டு மக்களின் ஆரோக்கியக் கேட்டுக்கும் நோய்களுக்கும் மதுவே காரணம். அது அரசாங்கத்தால் பேணி காக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த மானுடமும் மேலான வாழ்வை அடைவதற்கான கருவிகளும் வழிமுறைகளும் மனித குலத்துக்குக் கிடைத்திருக்கும் இந்த கால சந்தியில் நம் சமூகம் வளர்கிறதா என்ற கேள்வியை எழுப்பிக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

*

பொதுவாக நான் ஒரு விஷயத்தைக் கவனித்ததுண்டு. தமிழ்நாட்டில் மக்களின் பொது உரையாடலில் மிக அதிகமாக அரசியலும் சினிமாவும் இருக்கும். தேனீர்க்கடைகளில், கடைத்தெருவில், ரயிலில், திருமண வீடுகளில், சாவு வீடுகளில் என எங்கும் அரசியலைப் பேசிய வண்ணம் இருப்பார்கள். நான் இப்படியான பழக்கத்தை வேறு எந்த மாநிலத்திலும் கண்டதில்லை. அதற்கு வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவின் பல மாநிலங்கள் நிலப்பிரபுத்துவ சூழல் கொண்ட விவசாய மாநிலங்கள். வட இந்தியா ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடர் படையெடுப்புகளுக்கு உட்பட்டது. வட இந்தியா என்பது சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்டது. தென் இந்திய மாநிலங்களின் ஒருபுறத்தில் கடல் உள்ளது. ஆதலால் இங்கே கடல் சார்ந்த வணிகம் கடல் சார்ந்த போக்குவரத்து உண்டு. ஆனால் வட இந்தியா அவ்வாறானது அல்ல. அவர்களுடைய இயற்கைச் சூழல் அவர்களிடம் கடுமையான உழைப்பைக் கோருவது. மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், உ.பி, ம.பி, பீஹார் என பல மாநிலங்கள் இவ்வாறானவை. எனவே அவர்களிடம் நிலப்பிரபுத்துவ தன்மைகள் மிகுந்திருக்கும். அங்கே சர்க்கார் உத்யோகம் என்பது பெரிய விஷயம் அல்ல. மாநில சர்க்கார் அங்கிருக்கும் ஜாதி அமைப்புகளிடம் ஒரு குறைந்தபட்ச அமைதியை உருவாக்கி ஆட்சியை தொந்தரவு இல்லாமல் நடத்திக் கொள்வார்கள். அரசியல் கட்சிகள் அவர்களுக்குப் பணிந்தே நடக்கும். எந்த ஒரு ஜாதி அமைப்பாலும் ஓரிரு நாட்களில் லட்சக்கணக்கானோரைத் திரட்டிட முடியும். குஜ்ஜார்கள், யாதவ்கள், படேல்கள் ஆகியோர் நடத்தும் போராட்டங்கள் இதற்கு உதாரணம். ஆனால் அங்கே அனைவரும் தங்கள் விவசாயப் பணிகளில் மட்டுமே மூழ்கியிருப்பார்கள். அவர்களை கல்விக்குள் கொண்டு வருவதே கடந்த இருபது ஆண்டுகளில் மட்டுமே ஓரளவு சாத்தியமாகியிருக்கிறது.

தமிழ்நாடு கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகவே கல்விக்கான வாய்ப்புகள் நிறைந்திருக்கும் மாநிலமாக இருந்திருக்கிறது. பெரும் படையெடுப்புகள் இல்லாமல் இருந்தது ஒரு முக்கிய காரணம். சுதந்திரத்துக்குப் பின் ராஜாஜியும் காமராஜரும் பள்ளிக்கல்விக்கு முக்கியத்துவம் தந்தது இன்னொரு காரணம். இங்கே ஆற்றுப் பாசனத்துக்கு வாய்ப்பில்லாத மானாவாரி நிலங்களே அதிகம். ஆகவே மிகக் குறைவான ஊதியமாயிருப்பினும் அரசாங்க வேலைக்குச் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவர். அரசாங்கத்தை சர்வ சக்தி வாய்ந்த அமைப்பாக எண்ணுவார்கள்
.
வட இந்திய மாநகரங்கள் பெரியவை. எல்லா வசதிகளும் கொண்டவை. எல்லா வாய்ப்புகளும் நிரம்பியவை. அவை 2500 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்த உயிரோட்டத்துடன் இயங்கிய வரலாறு கொண்டவை. ஆனால் தமிழ்நாட்டின் மாநகரங்கள் அவ்வாறானவை அல்ல. தமிழ்நாட்டில் மூவேந்தர் தலைநகரங்களில் மதுரை மட்டுமே பல நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக மாநகராக நீடித்திருந்தது. பத்தாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை பூம்புகார் ஒரு கிராமமே. தஞ்சாவூர் ஒரு சிறிய நகரமே. சென்னை மிகப் பிற்பாடு உருவாக்கப்பட்ட நகரமே.

*
இந்தியப் பிரதமர்களாக 15 பேர் இருந்துள்ளனர். அதில் ஒன்பது பேர் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இருவர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள். இருவர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். ஒருவர் கர்நாடகாவைச் சார்ந்தவர். அதிகபட்ச பிரதமர்களை வழங்கியதில் முதலிடம் உத்திரப் பிரதேசத்துக்கு. இரண்டாமிடம் பஞ்சாப்புக்கும் குஜராத்துக்கும். அதன் பின் கர்நாடகாவும் ஆந்திராவும். 

உத்திரப் பிரதேசம் 85 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநிலம். இன்றும் இந்தியாவின் அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்டிருப்பது. அங்கிருந்து இந்தியப் பிரதமர் உருவாகி வருவது இயல்பானது. காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் குஜராத் மாநிலத்திலிருந்து வருவதும் ஐந்து முழு ஆண்டுகளை பூர்த்தி செய்த முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் குஜராத் மாநிலத்திலிருந்து வருவதும் கவனிக்கத் தக்கது. குஜராத்தின் மொத்த மக்களவைத் தொகுதிகள் 26. இந்திய நாடாளுமன்றத்தில் வெறும் ஐந்து சதவீத இடம் மட்டுமே கொண்ட மாநிலம் குஜராத். 

குஜராத்திகளின் இயல்பைப் புரிந்து கொண்டோமெனில் அவர்கள் செயல் வேகத்தைப் புரிந்து கொள்ள முடியும். இம்முறை குஜராத் சென்றிருந்த போது, நான் அம்மாநிலத்தின் சிறு நகரங்களைக் கவனித்தேன். 150 மீட்டர் நீளம் கொண்ட ஒரு தெரு ஒரு நகரில் இருக்கிறது எனில் அத்தெருவில் 20 அபார்ட்மெண்ட்கள் இருக்கின்றன. மற்ற மாநிலங்கள் எனில் அத்தெருவில் 15-17 வீடுகள் இருக்கும். மூன்று அபார்ட்மெண்ட்கள் இருக்கும். ஆனால் குஜராத்தில் தெரு முழுக்க அபார்ட்மெண்ட்களாக இருக்கின்றன. அது மக்கள் கூடி வாழ்கிறார்கள் என்பதை முதற் பார்வைக்கே காட்டுகின்றன. அதிக மக்கள் தொகையை குறைந்த பரப்பளவிற்குள் வசிக்க வைக்க இயலும். ஐந்து மாடி ஆறு மாடி அபார்ட்மெண்ட்கள் நான் பார்த்த இடங்களிலெல்லாம் இருந்தது. சிறு நகரங்கள் தூய்மையாக இருந்தன.

அகமதாபாத்தில் சர்வதேச பட்டம் திருவிழா நடைபெறும் சபர்மதி ஆற்றங்கரையில் 12 வயதான ஒரு பெண் குழந்தையைச் சந்தித்தேன். தனது தந்தையுடனும் தாயுடனும் தனது தம்பியுடனும் வந்திருந்தாள். நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்பதில் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி. குஜராத் எப்படி இருக்கிறது என என்னிடம் கேட்டாள். நான் அகமதாபாத் தூய்மையாக இருப்பது குறித்து எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். ‘’நீங்கள் காந்தி நகருக்கு வாருங்கள் அங்கிள். இன்னும் தூய்மையாக இருக்கும்’’ என்றாள். அவள் முகத்தில் அவ்வளவு பெருமிதம்.

தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளுக்கு ஒரு பழக்கம் உண்டு. நாம் ஏதேனும் ஒரு அவதானத்தைச் சொன்னால் அவர்கள் தமிழ்நாடு குறித்து ஏதேனும் ஒரு புள்ளிவிவரத்தைக் காட்டுவார்கள். அது தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதைக் காட்டும். உதாரணத்துக்கு பொதுப் போக்குவரத்து குறித்து நாம் ஒரு விபரம் சொன்னால் இந்தியாவிலேயே பொதுப் போக்குவரத்தில் தமிழ்நாடு பல வருடங்களாக முதல் இடம் என்பார்கள். பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறையால் அரசுக்கு கிடைக்கும் லாபம் எவ்வளவு என்று கேட்டால் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகிறது என்பார்கள். ஏன் நஷ்டம் என்றால் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட இங்கே கட்டணம் குறைவு என்பார்கள். இவர்களின் நிர்வாகம் தவறையும் பிழையையும் அடிப்படையாய்க் கொண்டது. ஊழலுக்காகவே உருவாக்கப்பட்டது.

பிழையாக தவறாக வழிநடத்தப்படும் மாநிலம் தான் இயல்பாக அடைய வேண்டிய வளர்ச்சியை அடையாமலேயே போய் விடுகிறது. தமிழ் மக்களுக்கு அவர்கள் அடைய சாத்தியமான உச்சபட்சமான உயரம் எது என்பது தெரியாமலேயே ஆகிறது.

1996ம் ஆண்டு தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான திரு. ஜி.கே. மூப்பனார் அவர்கள் இந்தியப் பிரதமராகக் கூடிய ஒரு வாய்ப்பு உருவானது. அது நிகழ்ந்து விடாமல் இருக்க செய்ய வேண்டிய அனைத்தையும் அவருடன் கூட்டணியில் இருந்த  தமிழ்நாட்டின் அரசியல் கட்சி ஒன்று செய்தது. 

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம் 
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம். 

என்கிறாள் தமிழ் மூதாட்டி ஔவை.


*


தமிழ்நாட்டில் இணைந்து செயல்படும் சமூகப் பழக்கம் என்பது மக்களுக்கு மிக அரிதாக இருக்கக்கூடியதாக மட்டுமே இருக்கிறது. கூட்டுச் செயல்பாடு என்பது அதில் இணைந்திருக்கும் அனைவருக்கும் பலன் தருவதாக அமையும். இங்கே அனைவரும் தனித்தே இருப்பார்கள். ஒருவரோடொருவர் பூசலிட்ட வண்ணமே இருப்பார்கள். ஒருவரை ஒருவர் ஐயுற்றவாறு இருப்பார்கள். இங்கே அரசியல் கட்சிகளும் ஜாதி அமைப்புகளும் மட்டுமே மக்களுக்கு இணையக் கூடிய இடங்களாக இருப்பதைக் காணலாம். எனவே எல்லா சமூக அமைப்புகளிலும் அரசியல் மற்றும் சாதியின் குறுக்கீடு இருக்கும். அரசு அலுவலகங்களில் ஒரே சாதியைச் சார்ந்தவர்கள் குழுக்களாக இயங்குவதை சர்வ சாதாரணமாகக் காணலாம். இப்போது பள்ளி ஆசிரியர்களிடமும் இப்போக்கு அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார்கள். தங்கள் சாதியினர் அல்லாத பிறரை நோக்கி வன்மங்களைப் பரப்புவதை தங்கள் அன்றாட செயல்பாடாகக் கொண்டிருக்கின்றனர் தமிழ் மக்கள். இவர்களை ஒரு பொதுத் தளத்தில் தனித்தனியாக இருக்க வைக்கவே அரசியல்வாதிகள் தேவை என்ற நிலை. கல்வி சார்ந்த பண்பாடு சார்ந்த எந்த விழுமியமும் மதிப்பீடும் இவர்களை அணுகிடவே முடியாது என்ற நிலை. எதையுமே அரசியலாகப் பார்ப்பது – ஒரு சாதாரண நிகழ்வைக் கூட சதித்திட்டமாகப் பார்ப்பது – ஒட்டுமொத்த உலகமும் தங்களுக்கு எதிராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற எண்ணம் கொண்டிருப்பது என்பதாக தமிழ் மக்களின் மனநிலை இருக்கிறது.

குஜராத் வணிகத்தின் மண். பல ஆயிரம் ஆண்டுகளாக அவர்கள் வணிகத்தைப் பழகியிருக்கிறார்கள். அவர்களின் பெரும்பகுதி நிலம் பாலை. பாலை நிலத்து மனிதர்கள் சிறந்த வணிகர்களாக இருப்பார்கள். விவசாயம் அவர்களுக்கான வாழ்வாதாரமாக விளங்க முடியாது என்ற நிலையில் செல்வத்தை உருவாக்குதலை அவர்கள் எப்போதும் சிறிது சிறிதாக செய்த வண்ணம் இருப்பார்கள். ஒரு வணிகம் சீராக நடக்க அந்த வணிக அமைப்பு நேர்த்தியாக நிர்வாகம் செய்யப்பட வேண்டும். குஜராத்தி வணிகர்கள் சிறந்த நிர்வாகிகளாகவும் இருப்பார்கள்.

ஒரு சமூகம் எவ்விதம் இயங்குகிறது என்பதை அச்சமூகத்தில் புழங்கும் செல்வத்தின் அளவைக் கொண்டு ஓரளவு புரிந்து கொள்ள முடியும். குஜராத் வணிகத்துக்கும் வணிகப் பண்புகளுக்கும் பேர் போன மாநிலம்.

***