Saturday 30 January 2021

அறிவார் தொழில்

 அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
-திருக்குறள்

என்னுடைய மடிக்கணினி பத்து நாட்களாக வேலை செய்யவில்லை. என்னுடைய அலைபேசியின் சிம் கார்டு அலைக்கற்றைகளை உள்வாங்க இயலாததாக ஆகி விட்டது. எனவே மடிக்கணினி அலைபேசி இரண்டும் இல்லாமல் கடந்த வாரமும் இந்த வாரமும் இருக்க வேண்டியதாயிற்று. இந்த இடைவெளி தேவையான ஒன்றுதான் என்று தோன்றியது. கடந்த 15 ஆண்டுகளில் உலகம் தகவல்களாலும் தொடர்பு சாதனங்களாலும் நம்மைச் சூழ்ந்துள்ளது. நாம் பழக்கத்தின் அடிப்படையில் அவற்றை ஏற்கிறோம். இருப்பினும் அவை நம் பணியாளே. எஜமானன் அல்ல. எனினும் மனித இயல்பு என்பது எதிலும் சிக்கிக் கொள்வதாகவும் மீள இயலாமல் தவிப்பதாகவுமே இருக்கிறது. 

இந்த 10 நாட்களில் எனது இயங்குமுறை பெரிதும் பாதிக்கப்படவில்லை. மின்னஞ்சல்களை இணைய மையத்தில் பார்த்தேன். எழுத வேண்டியவற்றை காகிதத்தில் பேனாவால் எழுதினேன். 

ஒரு விடுபடலை உணர்ந்தேன். நான் இணையத்தையும் அலைபேசியையும் குறைவாகப் பயன்படுத்துபவனே. என் வலைப்பூவில் பதிவுகள் இடுவேன். குறிப்பிட்ட சில இணையதளங்களை மட்டுமே வாசிப்பேன். ஹிந்துஸ்தானி இசை கேட்பேன். அவ்வளவே. என்னுடைய அலைபேசி ஜி. எஸ்.எம் அலைபேசி. அதில் பேசலாம். அலாரம் வைக்கலாம். டார்ச் உள்ளது. வேறு வசதி ஏதும் கிடையாது. 

10 நாளில் நானே ஒரு இடைவெளியையும் ஆசுவாசத்தையும் உணர்கிறேன் எனில் தமிழ்ச் சமூகம் ஸ்மார்ட் ஃபோனில் எந்நேரமும் மூழ்கிக் கிடக்கிறது. அதன் நிலையை எண்ணிப் பார்த்தேன்.

எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது. ஓர் அரசன் தான் மிகவும் விரும்பும் பழத்தைக் கொண்டு வருபவருக்கு எடைக்கு எடை தங்கம் தருவதாக அறிவித்தாராம். ஆனால் ஒரு நிபந்தனை. அந்த பழம் அவர் அறிந்ததாகவோ அந்த பழத்தின் சுவை அவருக்குப் பழகிய ஒன்றாகவோ இருந்தால் கொண்டு வருபவரின் இன்னொரு பழம் கொண்டு வருபவரின் வாயில் திணிக்கப்படும். தோலோடு உட்கொள்ள வேண்டும். ஒருவன் அத்திப்பழம் கொண்டு வந்தான். இன்னொருத்தன் திராட்சைப் பழத்துடன் வந்தான். நாவல் பழம் வேறொருவனுடையது. அரசர் அப்பழங்களின் சுவையை அறிந்திருந்தார். அவர்கள் இரண்டாவது பழத்தை உண்டு விட்டு சென்றனர். தோலுடன் அவற்றை உண்பதில் சிக்கல் ஏதும் இல்லை. ஒருவன் எலுமிச்சைப் பழம் கொண்டு சென்றான். அரசர் அதன் சுவை அறிவார்; சற்று சிரமப்பட்டு தோலுடன் பழத்தின் புளிப்பைத் தாங்கிக் கொண்டு உண்டு விட்டான். அத்தியும் திராட்சையும் நாவலும் கொண்டு சென்றவர்கள் எலுமிச்சையைத் தோலுடன் உண்டதை எப்படி உணர்கிறாய் என்று அவனிடம் கேட்டார்கள். அவன் கூறினானாம் : என்னுடைய நிலைமை பரவாயில்லை. அங்கே ஒருவன் பலாப்பழத்துடன் வந்திருக்கிறான் என்று. 

Monday 18 January 2021

இராமன் தேர் ஏறு படலம்

9825.   மாதலி கொணர்ந்தனன் மகோததி வளாவும்

பூதலம் எழுந்துபடர் தன்மைய பொலந்தேர்;

சீத மதிமண்டலமும் ஏனை உளவும் திண்

பாதம் எனநின்றது பரந்தது விசும்பின்.

 

பொன்னைப் போல் ஒளி விடும் தேரை மாதலி ஸ்ரீராமனுக்காக ஓட்டி வந்தான்.

 

9833.   வந்ததனை வானவர்

    வணங்கி, ‘வலியோய்! நீ

எந்தை தர வந்தனை;

    எமக்கு உதவுகிற்பாய்;

தந்தருள்வை வென்றிஎன

    நின்று, தகை மென் பூச்

சிந்தினர்கள்; மாதலி

    கடாவி நனி சென்றான்.

 

‘’இந்திரனின் சார்பில் உன்னை அனுப்புகிறோம். தேவர்கள் மகிழ்வடையும் விதமாக உனது சேவை அமைய வேண்டும்’’ என்று கூறி மாதலியை களத்திற்கு அனுப்பி வைத்தனர்.

 

9834.   ‘வினைப்பகை விசைக்கொடு

    விசும்பு உருவி, மான

மனத்தின் விசைபெற்றுளது

    வந்ததுஎன வானோடு

அனைத்து உலகமும் தொழ,

    அடைந்தது, அமலன்பால்;

நினைப்பும் இடை பின் பட

    நிமிர்ந்து உயர் நெடுந்தேர்.

 

மாதலி பாகனாய் இருந்த தேர் ஸ்ரீராமனை அடைந்தது.

 

9835.   ‘அலரி தனி ஆழி புனை

    தேர் இது எனின், அன்றால்;

உலகின் முடிவில் பெரிய

    ஊழ் ஒளி இது அன்றால்;

நிலைகொள் நெடு மேரு கிரி

    அன்று; நெடிது அம்மா!

தலைவர் ஒரு மூவர் தனி

    மானம் இது தானோ?

 

எல்லா விதத்திலும் உயர்வானது அத்தேர்.

 

9836.   ‘என்னை இது நம்மை இடை

    எய்தல்? ‘என எண்ணா,

மன்னவர்தம் மன்னன்மகன்,

    மாதலியை, ‘வந்தாய்,

பொன்னின் ஒளிர்தேர் இதுகொடு,

    ஆர்புகல? ‘என்றான்;

அன்னவனும் அன்னதனை

    ஆக உரை செய்தான்.

 

இராவணனுக்கு எதிரான யுத்தத்தில் வானர சேனைக்கு உதவிடும் விதமாக இந்த தேரை அனுப்ப உத்தரவிட்டது யார் என மாதலியிடம் ஸ்ரீராமன் கேட்டார்.



9837.   ‘முப்புரம் எரித்தவனும்,

    நான்முகனும், முன்நாள்

அப்பகல் இயற்றி உளது;

    ஆயிரம் அருக்கர்க்கு

ஒப்பு உடையது; ஊழி திரி

    காலும் உலைவு இல்லா

இப்பொரு இல் தேர் வருவது

    இந்திரனது எந்தாய்!

 

அமரர் தலைவனான இந்திரனின் கட்டளைப்படி வந்துள்ளதாக மாதலி கூறினான்.

 

9842.   ஐயன் இதுகேட்டு, ‘இகல்

    அரக்கர் அகல் மாயச்

செய்கை கொல்? ‘எனச் சிறிது

    சிந்தையில் நினைந்தான்;

மெய் அவன் உரைத்ததுஎன

    வேண்டி, இடை பூண்ட

மொய் உளை வயப்பரி

    மொழிந்த, முது வேதம்.

 

’இது அரக்கர்களின் மாயமாக இருக்குமோ என ஸ்ரீராமன் சிந்தித்ததை அறிந்த தேரின் புரவிகள் வேத கோஷம் செய்தன.

 

9843.   ‘இல்லை இனி ஐயம்என

    எண்ணிய இராமன்,

நல்லவனை, ‘நீ உனது

    நாமம் நவில்க! ‘என்ன,

வல் இதனை ஊர்வது ஒரு

    மாதலி எனப்பேர்

சொல்லுவர்எனத் தொழுது,

    நெஞ்சினொடு சொன்னான்.

 

ஐயம் நீங்கிய ஸ்ரீராமனின் மாதலியிடம் அவன் நாமம் என்ன என்று கேட்டான்.

 

9844.   மாருதியை நோக்கி, இள

    வாள் அரியை நோக்கி,

நீர் கருதுகின்றதை

    நிகழ்த்தும்என, நின்றான்

ஆரியன்; வணங்கி அவர்,

    ‘ஐயம் இலை, ஐயா!

தேர் இது புரந்தரனது

    என்றனர், தெளிந்தார்.

 

அனுமனும் இலக்குவனும் இது இந்திரனின் தேர் என உறுதிப்படுத்தினர்.








9845.   விழுந்து புரள் தீவினை

    குலத்தோடும் வெதும்ப,

தொழும் தகைய நல்வினை

    களிப்பினொடு துள்ள,

அழுந்து துயரத்து அமரர்

    அந்தணர் கைமுந்துற்று

எழுந்து தலை ஏற, இனிது

    ஏறினன் இராமன்.


தீவினைகள் வாட நற்செயல்கள் துள்ளி எழ அமரரும் அந்தணரும் கை உயர்த்தி வாழ்த்த இனிதே தேரில் ஏறினான் ஸ்ரீராமன். 

இராவணன் தேர் ஏறு படலம்

9785.   எற்றிய முரசங் கேளா,
    ஏழ் இரு நூறு கோடி
கொற்ற வாள் நிருதர் சேனை
    குழீஇயது; கொடித்திண் தேரும்
சுற்றுறு துளைக் கைம்மாவும்,
    துரகமும், பிறவும் தொக்க;
வற்றிய வேலை என்ன
    இலங்கை ஊர் வறளிற்று ஆக.
 
முரசொலி கேட்டதும் லட்சோப லட்சம் அரக்கர் போருக்குத் திரண்டனர். அரக்கர் இல்லாத இலங்கை நீர் வற்றிய கடல் போல காட்சியளித்தது.
 
9786.   ஈசனை, இமையா முக்கண்
    ஒருவனை, இருமைக்கு ஏற்ற
பூசனை முறையின் செய்து,
    திருமறை புகன்ற தானம்
வீசினன் இயற்றி, மற்றும்
    வேட்டன வேட்டோர்க்கு எல்லாம்
ஆசு அற நல்கி, ஒல்காப்
    போர்த்தொழிற்கு அமைவது ஆனான்
 
இராவணன் சிவபெருமானை பூசித்தான். கொடைகளை வழங்கினான். போருக்குப் புறப்பட்டான்.
 
9787.   அருவி அஞ்சனக் குன்றிடை
    ஆயிரம் அருக்கர்
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம்
    என ஒளிர,
கருவி நான்முகன் வேள்வியில்
    படைத்ததும், கட்டிச்
செருவில் இந்திரன் தந்த
    பொன்கவசமும், சேர்த்தான்.
 
இராவணன் இந்திரனிடமிருந்து பெற்ற பொற்கவசம் பூண்டு போருக்குக் கிளம்பினான்.
 
9801.   வருக, தேர்! ‘என வந்தது
    வையமும் வானும்
உரக தேயமும் ஒருங்கு உடன்
    இவரினும், உச்சிச்
சொருகு பூ அன்ன சுமையது;
    துரகம் இன்று எனினும்,
நிருதர் கோமகன் நினைந்துழிச்
    செல்வது, ஓர் இமைப்பில்.


தனது தேரை ஒருங்கமைக்க ஆணையிட்டான்.


9803.   பாரில் செல்வது, விசும்பிடைப்
    படர்வது, பரந்த
நீரில் செல்வது, நெருப்பினும்
    செல்வது, நிமிர்ந்த
போரில் செல்வது, பொன் நெடு
    முகட்டிடை விரிஞ்சன்
ஊரில் செல்வது, எவ் உலகத்தும்
    செல்வது, ஓர் இமைப்பின்.
 
இராவணனது தேர் நிலத்தில் செல்வது. நீரில் செல்வது. போர்க்களங்களுக்கு ஏற்றது. வானுலகில் செல்வது. எந்த உலகத்துக்கும் செல்லக் கூடியது.
 
9808.   ஏறினான் தொழுது; இந்திரன்
    முதலிய இமையோர்
தேறினார்களும் தியங்கினார்,
    மயங்கினார், திகைத்தார்;
வேறு நாம் சொலும் வினை இலை,
    மெய்யின் ஐம்புலனும்
ஆறினார்களும் அஞ்சினார்,
    உலகு எலாம் அனுங்க.
 
இராவணன் தேரில் ஏறிய கணத்தில் புவியிலும் வானுலகத்திலும் உள்ளோர் அனைவரும் அச்சத்தில் நடுங்கினர்.
 
9809.   மன்றல் அம்குழல் சனகி தன்
    மலர்க் கையால் வயிறு
கொன்று, அலந்தலைக் கொடு நெடுந்
    துயரிடைக் குளித்தல்;
அன்று இது என்றிடின், மயன்மகள்
    அத்தொழில் உறுதல்;
இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென்,
    தலைப்படின்என்றான்.
 
இன்று ஜானகி துயரடைய வேண்டும். அல்லது மண்டோதரி துயரடைய வேண்டும். இந்த இரண்டில் ஒன்று நடக்க வேண்டும்.
 
9810.   பல களம் தலை மௌலியோடு
    இலங்கலின் பல் தோள்
அலகு அளந்து அறியா நெடும்
    படைகேளாடு அலங்க,
விலகு அளம் தரு கடல் திரை
    விசும்பொடும் விம்ம,
உலகு அளந்தவன் வளர்ந்தனன்
    ஆம் என உயர்ந்தான்.
 
பேருரு கொண்டு யுத்தத்துக்கு எழுந்தான் இராவணன்.


9817.   கடல்கள் யாவையும், கன மலைக்
    குலங்களும், காரும்,
திடல்கொள் மேருவும், விசும்பிடைச்
    செல்வன சிவண,
அடல்கொள் சேனையும், அரக்கனும்,
    தேரும், வந்து ஆர்க்கும்
கடல் கொள் பேர் ஒலிக் கம்பலை
    என்பதுங் கண்டார்.
 
கடலலைகள் என ஒலி எழுப்பி ஆர்ப்பரித்தது அரக்கர் சேனை.
 
9818.   எழுந்து வந்தனன் இராவணன்;
    இராக்கதத் தானை
கொழுந்து முந்த வந்து உற்றது;
    கொற்றவ! குலுங்குற்று
அழுந்துகின்றது, நம் பலம்!
    அமரரும் அஞ்சி,
விழுந்து சிந்தினர்என்றனன்,
    வீடணன், விரைவான்.
 
அச்சமேற்படுத்தும் விதத்தில் இராவணன் யுத்தத்துக்குக் கிளம்பி வந்திருக்கிறான் என வீடணன் ஸ்ரீராமனிடம் கூறினான்.
 
9819.   தொழும் கையொடு, வாய் குழறி,
    மெய்ம் முறை துளங்கி,
விழுந்து கவி சேனை இடு
    பூசல் மிக, விண்ணோர்
அழுந்து படு பால் அமளி
    ‘அஞ்சல்என அந்நாள்,
எழுந்தபடியே கடிது
    எழுந்தனன், இராமன்.
 
அபய ஹஸ்தத்துடன் எழுந்தான் ஸ்ரீராமன்.
 
9820.   கடக் களிறு எனத்தகைய
    கண்ணன், ஒரு காலன்
விடக் கயிறு எனப் பிறழும்
    வாள் வலன் விசித்தான்,
மடக்கொடி துயர்க்கும், நெடு
    வானின் உறைவோர் தம்
இடர்க் கடலினுக்கும் முடிவு,
    இன்றுஎன இசைத்தான்.
 
ஜானகியின் துயருக்கும் வானோரின் அல்லலுக்கும் இன்றுடன் முடிவு ஏற்படும் என்ற உறுதியுடன் எழுந்தான் ஸ்ரீராமன்.
 
9823.   மூண்டசெரு இன்று அளவில்
    முற்றும்; இனி, வெற்றி
ஆண்தகையது; உண்மை; இனி
    அச்சம் அகல்வுற்றீர்,
பூண்ட மணி ஆழி வய
    மா நிமிர் பொலந்தேர்
ஈண்ட விடுவீர் அமரர்! ‘
    என்று அரன் இசைத்தான்.
 
இந்த யுத்தம் இன்றுடன் நிறைவு பெறும் என்றார் சிவபெருமான். ஸ்ரீராமருக்கு ரதத்தை வழங்குமாறு தேவர்களிடம் கூறினார் சிவபெருமான்.
 
9824.   தேவர் அதுகேட்டு, ‘இது
    செயற்கு உரியதுஎன்றார்;
ஏவல் புரி இந்திரனும்
    அத் தொழில் இசைந்தான்,
மூவுலகும் இன்று ஒரு
    கணத்தின் முறை முற்றிக்
காவல்புரி தன் பொரு
    தேர் கொணர்திஎன்றான்.
 
இந்திரன் ஸ்ரீராமன் யுத்தம் செய்ய தன்னுடைய தேரை வழங்கினான்.