Tuesday 30 June 2020

எலெக்ட்ரானிக்ஸ்

எனக்கு ஜப்பான் மீது சிறு வயதிலிருந்தே ஆர்வம் உண்டு. அவர்கள் பணிப் பண்பாடு மிக்கவர்கள். எதையுமே மிக நேர்த்தியாகச் செய்வதில் வல்லவர்கள். எதையுமே மிக நேர்த்தியாக வெளிப்படுத்தக் கூடியவர்கள். இவை நான் சிறுவனாயிருந்த போது இதழ்களில் இடம் பெறும் செய்திகளிலும் கட்டுரைகளிலும் வெளியாகும். ஜப்பான் மலைத்தொடர்கள் எரிமலைகளின் அழகிய புகைப்படங்கள் வெளியாகும். எலெக்ட்ரானிக்ஸ் அன்று முழுமையாக ஜப்பானியர்கள் கையில் இருந்தது. எதையுமே கையடக்கமாக விதை போல வெளிப்படுத்துவது ஜப்பானிய பாணி. 

நுட்பமான அச்சமூகம் உலகின் மீது பெரும் போரைத் திணித்த சக்திகளில் ஒன்றாகவும் ஆனதும் அதனால் பெரும் பாதிப்புக்கு ஆளானதும் மானுடத் துயரங்கள். 

தி.ஜானகிராமன் ஜப்பானின் பின்புலத்தில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். ’’யாதும் ஊரே’’ என்று நினைவு. 

நான் விரும்பிய எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களாக எவை இருந்திருக்கின்றன என்று யோசித்துப் பார்க்கிறேன். 

1. ரேடியோ

சிறு வயதிலிருந்தே ரேடியோ மீது ஆர்வம் உண்டு. அதன் சிறிய உருவம். அதில் அசரீரி போல குரல் கேட்பது ஆகியவை இப்போதும் ஆச்சர்யத்தை உருவாக்குகிறது. நான் தொலைக்காட்சி பார்ப்பதே இல்லை. பார்த்து பல வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். 

அப்பா இப்போதும் ரேடியோ கேட்கிறார். காலை 6.45 மாநிலச் செய்திகள். இரவு 9 மணி ஆகாசவாணி ஆங்கிலச் செய்திகள். என் காதிலும் விழும். 

2. சயிண்டிஃபிக் கால்குலேட்டர்

பொறியியல் கல்லூரியில் படித்த போது சயிண்டிஃபிக் கால்குலேட்டர் பயன்படுத்துவோம். இப்போதும் என்னிடம் இருக்கிறது. கால்குலேட்டர் என்றால் அது சயிண்டிஃபிக் கால்குலேட்டர்தான். 

3. கிண்டில்

கிண்டில் ஓர் அற்புதம். இப்போது பல புத்தகங்களைக் கிண்டிலில் வாசிக்கிறேன். 

4. மடிக்கணிணி

டெஸ்க் டாப் கணிணிகள் அதிகமாகப் புழக்கத்திலிருந்த காலத்திலேயே நான் வாங்கியது மடிக்கணிணி. பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன். கீ போர்டு வேலை செய்யாமல் போனது. எக்ஸ்டெர்னல் கீ போர்டு வாங்கினேன். அதுவும் சில வருடங்களுக்குப் பின்னால் பழுதானது. அதை மாற்றி விட்டு இன்னொரு விசைப்பலகையைப் பயன்படுத்தி வருகிறேன். 

ஸ்மார்ட்ஃபோன் உலகுக்குள் நான் வரவில்லை. 

ஒரு கண்டடைதல்

இன்று காலை ஃபிளாட் டி.வி பெரிய திரையைப் பார்த்து மருத்துவ மாணவரிடம் பேசிக் கொண்டிருந்ததிலிருந்து அதைப் பற்றிய எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. அலைபேசியுடன் இணைக்கக்கூடிய ஒரு கையடக்கமான விலை குறைவான ஒரு புரொஜக்டர் இருக்குமானால் அதன் மூலம் செய்தித்தாளை இ-பேப்பராக வீட்டுச் சுவரில் எவ்வளவு தேவையோ அவ்வளவு பெரிதுபடுத்தி பார்க்க முடியுமே என்று யோசித்தேன். அலைபேசி மிகச் சிறியது. அதன் சிறிய திரை வாசிப்புக்கு உகந்தது இல்லை. கண்களுக்கும் கடினமான வேலை. ஆனால் சுவரில் இருப்பதை தேவையான ஃபாண்ட் சைஸில் அமைத்து வாசிக்க முடியும் என்று தோன்றியது. எனக்கு எலெக்ட்ரானிக்ஸ் பொருள் வாங்குவதில் என்றுமே பெரிய ஆர்வம் இருந்ததில்லை. என் மனதில் உதித்தது சந்தையில் விற்பனையாக வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்குமே என்ற ஐயத்துடன் இணையத்தில் தேடினேன். மிக மிகக் குறைந்த விலையில் ஒரு மினி புரொஜக்டர் உலகெங்கும் விற்பனையாகிறது. அலைபேசியிலிருந்தோ கணிணியிலிருந்தோ மடிக் கணிணியிலிருந்தோ வீட்டுச்சுவரில் புரொஜக்ட் செய்ய முடியும். பகல் வெளிச்சத்திலியே தெளிவாகக் காணும் எல்.இ.டி வசதி உள்ளது. ஒரு சுவரொட்டியை வாசிப்பது போல ஒரு செய்தித்தாளை வாசித்து விடலாம். யுரேகா! யுரேகா! யுரேகா!

மக்கள் அரசு

இன்று ஒரு மருத்துவக் கல்லூரி மாணவரைச் சந்தித்தேன். அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவரது தந்தை எனது நண்பர். அவரைக் காணச் சென்றிருந்தேன். அப்போது அவர் வீட்டில் இல்லை. வெளியில் சென்றிருந்தார். அவர் வரும் வரை மருத்துவ மாணவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். 

அவர் வீட்டில் ஒரு ஃபிளாட் டி.வி இருந்தது. எனக்குப் பொதுவாக எலெக்ட்ரானிக் பொருட்கள் குறித்த அறிவு குறைவு. எலெக்ட்ரானிக் பொருட்கள் மீதான ஆர்வம் அதனினும் குறைவு. 

‘’இந்த டி.வி.யில் இன்டர்நெட் கனெக்ட் ஆகுமா?’’ நான் உரையாடலைத் தொடக்கினேன். 

‘’கனெக்ட் செய்ய முடியும்’’ மாணவர் சொன்னார்.

‘’டி.வி.க்குள் ஒரு சிம் கார்டு இருக்குமா?’’

இப்படி ஒரு கேள்வியை முதல் தடவை எதிர்கொள்வது அவருக்குத் திகைப்பாக இருந்தது. 

‘’வை - ஃபை ல கனெக்ட் பண்ணலாம்’’

‘’ஓ ! அப்படி ஒரு ஆப்ஷன் இருக்குல்ல. நல்ல விஷயம்’’

டீ-பாய் மீது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் இருந்தது. நான் எடுத்து புரட்டிக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு ஐயம்.

’’தம்பி! இந்த நியூஸ் பேப்பரை இ-பேப்பரா இந்த ஃபிளாட் டி.வி-ல படிக்க முடியுமா?’’

அவர் சற்று குழம்பினார். 

நான் செய்தித்தாளின் இணையபக்க முகவரியைக் காண்பித்தேன். 

‘’நியூஸ் ரீடர்ஸ் தன் முன்னால இருக்கற ஸ்கிரீன் - ல பாத்து படிக்கிறாங்கள்ல. அந்த டெக்னிக்.’’

நான் சொன்னது அவருக்கு நூதனமாக இருந்திருக்க வேண்டும்.

’’அப்படி படிக்கிறதுல என்ன யூஸ்?’’

‘’என்ன தம்பி அப்படி சொல்லிட்டீங்க. காகிதப் பயன்பாட்டைக் கணிசமா குறைச்சிடலாம் இல்லையா?’’

’’எப்படி?’’

‘’பேப்பர் இண்டஸ்ட்ரீயோட அடிப்படையான மூலப்பொருளே மரக்கூழ்தான். பேப்பர் தயாரிக்க ஆயிரக்கணக்கான மரங்கள் வருடா வருடம் வெட்டப்படுது. காகிதப் பயன்பாட்டை ஹியூமானிட்டி எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்குதோ அவ்வளவுக்கு அவ்வளவு மரங்கள் காப்பாத்தப்படும்’’

அங்கே சுவரில் சில ரோமானிய அரசர்களின் பெயர்களையும் அவர்களுடைய காலங்களையும் எழுதி வைத்திருந்தார். 

‘’தம்பி! உங்களுக்கு வரலாறுல ஆர்வம் உண்டா?’’

‘’ஒரு நெட்ஃபிளிக்ஸ் தொடர் பாத்தன். அதுல இருந்து ஞாபகத்துக்காக எழுதி வைச்சன்.’’

என்னென்ன தொடர் பார்க்கிறார் என்று கேட்டேன். சில பெயர்களைச் சொன்னார். அதில் ஒன்று ஓட்டோமான் சாம்ராஜ்யம். 

‘’1453’’

வருடத்தைச் சொன்னதும் அவர் மிகவும் ஆர்வமானார். 

‘’கான்ஸ்டாண்டிநோபிள்’’

நான் கேட்டேன். ‘’Sick Man of Europe'' யார் தெரியுமா?

அவர் யோசித்துப் பார்த்தார். 

’’தெரியலையே’’

‘’துருக்கி’’

‘’அப்படியா?’’

நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த போதே நண்பர் வந்து விட்டார். எங்கள் உரையாடலில் நண்பரும் இணைந்து கொண்டார். நான் நண்பரிடம் தெரிவிக்க வேண்டிய விஷயத்தைத் தெரிவித்து விட்டு கிளம்ப ஆயத்தமானேன். 

‘’தம்பி! பிரபு ஒரு கிராமத்தில நிறைய மரக்கன்றுகள் நடற முயற்சியில இருக்காரு. ஒரு கிராமத்தை எடுத்து அதுல 25,000 மரக்கன்று நடறாரு.’’ அவர் மேலும் அவர் சொற்களில் விளக்கினார். மருத்துவ மாணவருக்கு அவர் சொன்னது முழுமையாகச் சென்று சேரவில்லை. நண்பர் என்னையே விளக்கச் சொன்னார்.

‘’அதாவது தம்பி! ‘’ என்று நான் ஆரம்பித்தேன். 

‘’நாம ஒரு சின்ன டீம் தம்பி. ஒரு ஏழு பேர்னு கணக்குக்கு வச்சுக்கங்க. நாங்க எல்லாரும் ஃபிரண்ட்ஸ். என்விரான்மெண்ட் சம்பந்தமா ஏதாச்சும் செய்யணும்னு பிரியப்பட்டு என்ன செய்யலாம்னு என்கிட்ட ஆலோசனை கேட்டாங்க. நான் யோசிச்சுப் பார்த்தேன். அதுல நாம கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கு. பொது வேலைல ஒருத்தரால என்ன செய்ய முடியுமோ அந்த வேலையைத் தான் நாம அவருக்குக் கொடுக்கணும். அதிகமா கொடுத்தா அவங்களால தொடர்ந்து செய்ய முடியுமாப் போயிடும். குவாண்டம் மெக்கானிக்ஸ்-ல குவாண்டம்னு சொல்றாங்கள்ல. அந்த மாதிரி சிறுசு. ஒரு கிராமத்துக்குப் போய் அந்த ஊரோட யங்க்ஸ்டர்ஸ்-க்கு சுற்றுச்சூழல் சம்பந்தமான விஷயங்கள்-ல ஆக்டிவிட்டிஸ் செய்ய சப்போர்ட் பண்றது எங்க இனிஷியல் பிளான். அப்புறம் அதை யோசிச்சு யோசிச்சு விரிவாக்குணோம். கிராமத்துல ஒவ்வொரு வீட்டுக்கும் நேராப் போய் உங்களுக்கு என்ன மரக்கன்னு வேணும்னு கேட்டு கணக்கெடுத்தோம். அந்த கிராமத்துல மொத்தம் 400 வீடு. எல்லா வீட்டையும் நேரா பாத்தோம். உங்களுக்குத் தேவையான மரக்கன்னு தர்ரோம். நட்டு வளத்துக்கங்கன்னு ரெக்வெஸ்ட் செஞ்சோம். நாங்க என்ன சொல்றோம்ங்றது விவசாயிகளுக்குப் புரிஞ்சுது. அவங்க வார்ம் ரிசப்ஷன் கொடுத்தாங்க. இப்ப கிராமத்துல இருக்கற வீடுகளுக்கு 18,000 மரக்கன்னு தர்ரோம். கிராமத்துல இருக்கற பொது இடங்கள்ல 7,000 மரக்கன்னு நடரோம். மொத்தம் 25,000. ஃபர்ஸ்ட் பிளான் மாதிரி ஒரு கிராமத்துல 100 மரக்கன்னு வீதம் முயற்சி செஞ்சிருப்போம்னா இந்த 25,000ங்ற நம்பரைத் தொட 250 கிராமங்கள்ல வேலை செஞ்சிருக்கணும். இதை ஒரு விதமான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்-னு சொல்லலாம். இல்லன்னா டார்கெட் மெடிசன்னு சொல்லலாம்.’’

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், டார்கெட் மெடிஸன் ஆகிய சொற்கள் அவர் மருத்துவ மாணவர் என்பதால் அவர் மனத்துக்கு நெருக்கமாக இருந்திருக்கக் கூடும். நான் புறப்படும் நேரம் வந்தது. 

‘’தம்பி! இந்தியாவுல எத்தனையோ பேரரசர்கள் இருந்திருக்காங்க. அவங்களை இன்னைக்கும் நாம அவங்க செஞ்ச மக்கள் நலப் பணிகளால தான் நாம நினைச்சுப் பார்க்கறோம். அசோகர் இந்தியா முழுக்க சாலையோரமா மரங்கள் நட்டார்னு பாடப்புத்தகத்துல இருக்கு. ஏன்னு நினைச்சுப் பாருங்க. அன்னைக்கு பெரிய அளவில டிரான்ஸ்போர்ட் ஃபெஸிலிட்டி கிடையாது. ஆனா ஒவ்வொரு கிராமமும் தேசத்தோட முழுமையான தொடர்புல இருக்கணும்னு சாலை ஓரங்கள்ல மரங்களை நட்டு நிழற்சாலையா ஆக்கனாரு. நடந்து போறவங்க ஒரு நாளைக்கு மேக்ஸிமம் 25 கி.மீ தூரம் நடக்க முடியுமா. அந்த நடைல அவங்க சோர்ந்துடக் கூடாதுங்கற நல்லெண்ணத்துல மரம் நட்டார். வட இந்தியாவுல இருக்கறவங்க ராமேஸ்வரத்துக்கும் தென் இந்தியாவுல இருக்கறவங்க காசிக்கும் போய்ட்டு வந்தாங்க. சோழர்கள் காலத்துல வீர நாராயண ஏரி வெட்டுனாங்க. நம்ம ஊர்ல இருந்து முக்கால் மணி நேர பைக் பயண தூரத்துல இருக்கு தம்பி. போய்ப் பாருங்க. ஊருக்குள்ள கடல் வந்துட்ட மாதிரி இருக்கும். இன்னைக்கும் சென்னை காரங்களுக்கு அந்த ஏரிதான் தண்ணீர் தருது. காகதீயப் பேரரசு வெட்டி வச்சிருக்க ஏரிகளைப் பாருங்க. அசந்துடுவீங்க.’’

அவர் இந்திய சாம்ராஜ்யங்களின் பெயர்களைக் கேட்பது அனேகமாக முதல் தடவையாக இருக்கக் கூடும். அவருக்கு இவை ஆச்சர்யம் அளித்தது. 

‘’பிரிட்டிஷ் நம்ம நாட்டுக்கு வர்ர வரைக்கும் உலகத்தோட ஜி.டி.பி.- ல நாம 50 சதவீதத்துக்கும் அதிகமா பங்களிப்பு கொடுத்திருக்கோம். தெரியுமா?’’

‘’என்ன உலகத்தோட மொத்த புரடக்‌ஷன் - ல இந்தியா பாதிக்குப் பாதியைக் கொடுத்திருக்கா”

‘’நான் சொல்றது எல்லாத்துக்குமே டாகுமெண்டல் எவிடெண்ஸ் இருக்கு தம்பி.’’ 

மருத்துவ மாணவரின் திகைப்பு நீங்கவில்லை.

‘’வெல்ஃபேர் ஸ்டேட்-ங்ற கருத்துக்கு ஐரோப்பா ஜனநாயகத்துக்கு வந்தப்றதாம் வந்து சேந்தாங்க’’

அவர் ஆமாம் என்பது போல பார்த்தார்.

‘’இந்தியாவுல 3000 வருஷமாவே அந்த கான்செப்ட் இருக்கு தம்பி’’

அவர் பல எண்ணங்களால் சூழப்பட்டிருந்தார். 

‘’சார்! இந்த வாரம் நீங்க ஒர்க் பண்ற கிராமத்துக்குப் போகும் போது எனக்கு கால் பண்ணுங்க. நானும் வர்ரேன்.’’  

Monday 29 June 2020

மௌனமான பாதை - பி.வி. நரசிம்ம ராவ்

1991ம் ஆண்டு நான் சிறுவனாயிருந்தேன். அது அச்சிதழ்களின் காலம். தினசரிகள், வார இதழ்கள், பட்ச இதழ்கள் ( Fort Night) ஆகியவை கோலோச்சிக் கொண்டிருந்த காலம். தினமணி, துக்ளக், இந்தியா டுடே ஆகிய பத்திரிக்கைகளை அப்போது வாசிப்பேன். நடுப்பக்க கட்டுரைகள், தலையங்கம் ஆகியவற்றை ஒரு சிறுவனாக ஆர்வமாக வாசிப்பேன். அப்போது மிக அதிகமாக பிரதமரின் செயல்பாடுகள் குறித்து தமிழ் பத்திரிக்கைகளில் விவாதிக்கப்படும். டங்கல் திட்டம், காட் ஒப்பந்தம் ஆகியவை பரவலான சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டிருந்த காலம். 

சில ஆண்டுகளுக்கு முன்னால், வினய் சீதாபதி எழுதிய ’’Half - Lion : How  P.V. Narasimha Rao transformed India'' என்ற நூலை வாசித்தேன். அது தமிழிலும் வெளியாகியுள்ளது. ஓர் அரசியல் செயல்பாட்டாளனின் பெரும் பயணத்தை எடுத்துக் கூறும் நூல். 

பொதுவாக இந்தியாவில் மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து கவனிக்காத பரவலான விவாதத்துக்குள் வராத ஒரு விஷயம் உண்டு. அது என்னவெனில் தம் கடமையை சரிவரச் செய்யாத அரசு ஊழியர்கள். இவர்கள் ஆட்சி நிர்வாகத்தின் பெரிய சவால். ஆயினும் இவர்களே ஆட்சி நிர்வாகத்தின் பெரும் பகுதி என்பது தவிர்க்க இயலாத முரண். நரசிம்ம ராவ் முதன்மையாக அதனை எதிர்கொண்டார். பலவிதங்களில் தேங்கிப் போன அந்த அமைப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர் உலுக்கினார். அது ஒரு தொடக்கம். 

அவரது சொந்த மாவட்டமான கரீம் நகர் பகுதிகளில் நான் மோட்டார் சைக்கிளில் சுற்றியிருக்கிறேன். 1991-1996ம் ஆண்டுகளில் இந்தியாவில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை பெருகியது. குறிப்பாக இரு சக்கர வாகனங்கள். மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அரசு ஆதரவு அளித்து உற்பத்தியைப் பெருக்கியது. ஒரு கிராமத்து விவசாயி தனது கிராமத்திலிருந்து வெளியே சென்று தனது பணியை முடித்துக் கொண்டு அவன் நினைத்த நேரத்தில் திரும்பி வர அது உதவியது. பொதுப் போக்குவரத்துக்காக காத்திருக்க வேண்டிய தேவை குறைந்தது. அவனது உலகம் மேலும் பெரிதானது. நான் வட இந்தியாவில் இந்த காட்சியை அதிகம் பார்த்திருக்கிறேன். காலை 8 மணியிலிருந்து காலை 10 மணிக்குள் 40லிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவுள்ள கிராமங்களில் டூ-வீலர்கள் விரைந்து செல்லும். பின்னர் நெடுஞ்சாலை அமைதியாகும். அதே போல் மாலை 5 மணியிலிருந்து 7 மணி வரை. இன்று உலகில் மிக அதிகம் டூ-வீலரைப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 

ஒரு வறண்ட நிலத்திலிருந்து ஒரு மாணவனாகக் கிளம்பி பல மொழிகள் கற்று மாநில அரசியலிலும் தேசிய அரசியலிலும் முக்கியமான தலைவராக உருவெடுத்து கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில் துணிச்சலுடன் தேசத்தை வழிநடத்தியது என்பது மிகப் பெரிய செயல். அதை அவர் மௌனமாகச் செய்தார்.

Sunday 28 June 2020

விருட்ச பூஜை - நாள் 12

இன்று கிராமத்துக்குச் சென்றிருந்தோம். ஞாயிற்றுக்கிழமை என்பதால் நண்பருக்குக் கடை விடுமுறை. காலை 6.30 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து கிளம்பினோம். இரண்டு நாட்களாகவே விவசாயிகள் தொடர்பு கொண்டு வருகின்றனர். ’குழி எடுத்து விட்டோம்; பார்வையிட வாருங்கள்’ என அழைத்த வண்ணம் இருந்தனர். சில நாட்களுக்கு முன்னால், ஆடுதுறை அரசாங்க நர்சரிக்குச் சென்றிருந்தேன். அங்கேயிருந்த ஊழியர், மரம் நடும் போது 3 அடிக்கு 3 அடி குழி எடுக்குமாறு சொன்னேன். ஆழம் 3 அடி வைத்துக் கொள்ளுங்கள் என்றார். கட்டிட அஸ்திவாரத்துக்கு குழி எடுப்பதைப் போல சொல்வீர்கள் போல் உள்ளதே என்றேன். குறைந்தபட்சம் 2 அடிக்கு 2 அடி குழி எடுங்கள் 2 அடி ஆழத்துக்கு எடுங்கள் என்றார். அதில் மக்கிய எருவை இட்டு வையுங்கள் என்று கூறி விட்டு ஒரு விளக்கம் அளித்தார். 

ஒரு குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் எப்படி அதன் மூளை வளர்ச்சி 90 சதவீதம் நிறைவு பெற்று விடுகிறதோ அதே போல ஒரு மரம் நடப்பட்டு வேர் பிடிக்கும் போதே ஊட்டமாகக் கிளம்பி வர வேண்டும். அதன் வளர்ச்சி அப்போதே தீர்மானிக்கப்பட்டு விடும். ஆதலால் இது மிகவும் அவசியம் என்றார். கிராமத்தின் ஒவ்வொரு விவசாயியின் தொடர்பு எண்  என்னிடம் இருந்தது. ஒவ்வொருவராகத் தொடர்பு கொண்டு குழியின் அளவுகளைக் கூறினேன். குறிப்புகளை அளித்தேன். எவ்வாறு பணிகள் நடந்துள்ளன என்பதைப் பார்ப்பதற்காக இன்று சென்றிருந்தேன். பணிகளை விரைவுபடுத்தவும் விவசாயிகளை ஊக்கம் கொள்ளச் செய்யவும் அது உதவும் என எண்ணினேன்.

குழி எடுத்திருந்த விவசாயிகளின் நிலங்களையும் தோட்டத்தையும் பார்வையிட்டோம். ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் இடையில் 10 அடி இடைவெளி இருக்க வேண்டும். மரம் பருத்து வளர அது உதவும். அது பின்பற்ற வேண்டிய முக்கியமான குறிப்பு. ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் இடையே 12 அடி இடைவெளி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 அடியாவது இருப்பது அவசியம். அதனை வலியுறுத்தினோம். 

சாலையில் நடந்து செல்லும் போது ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களும் என்னிடம் நலம் விசாரித்தார்கள். மரக்கன்றுகள் என்று வரும் என்று கேட்டார்கள். பத்து நாட்களில் உங்களுக்குக் கிடைக்கும்; குழி எடுப்பதை துரிதப்படுத்துங்கள் என்று சொன்னேன். ஒவ்வொரு வீட்டிலும் அவர்கள் வீட்டில் விளைந்த காய்கறிகளை எனக்கும் நண்பருக்கும் கொடுத்தார்கள். எல்லாரும் அளிப்பதை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நான் ஒரு டாடா ஏஸில் தான் எடுத்துச் செல்ல வேண்டும். மக்களின் அன்பு எங்களை நெகிழச் செய்தது. 

பொது இடத்தில் மரக்கன்றுகள் நடும் ஒருவர் எங்களிடம் வந்தார். ஊரின் சில ஆலமரங்கள் அவரால் பொது இடத்தில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டிருக்கின்றன. தான் சிறுவனாயிருந்ததிலிருந்தே  பொது இடத்தில் மரக்கன்றுகள் நடுவதில் ஆர்வமாயிருந்ததாகக் கூறினார். ஊரில் தோட்டங்களில் வயல்களில் நடப்படும் 18,000 மரக்கன்றுகள் போக பொது இடங்களில் முழுமையாக 7000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணி நம் முன்னால் உள்ளது என்று சொன்னேன். உள்ளூர் இளைஞர்களை ஒருங்கிணைத்து அப்பணியை சிறப்பாக நிறைவேற்றித் தருகிறேன் என்றார். 

எனது கணக்கெடுப்பின் போது ஒரு பெண்மணி கோயிலில் விளக்கேற்ற கையில் தீபத்தட்டுடன் சென்று கொண்டிருந்தார். இன்றும் அவர் தீபத்தட்டுடன் கோயிலுக்குச் செல்லும் போது பார்த்தேன். அடையாளம் கண்டு என்னிடம் வந்து பேசினார். ஆலய பூஜைக்கு உகந்த மலர் மரக்கன்றுகளைத் தனக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். 

இந்த மக்களின் தூய அன்புக்கு என்னால் என்ன கைம்மாறு செய்ய முடியும் என்று தெரியவில்லை.

ஊற்றுமுகம்

எனது நண்பர்கள் என்னை எப்போதும் நம்பிக்கையாளன் என்று சொல்வதுண்டு. நான் எது குறித்தும் அவநம்பிக்கை கொள்வதில்லை என்பதை அவர்கள் ஆச்சர்யமாக நினைப்பதுண்டு. உண்மைதான். நான் எனது முயற்சியை எப்போதும் கைவிடுவதில்லை. ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வந்து விட முடியும் என்று எப்போதும் நம்புகிறேன். என்னால் ஆகக் கூடியவற்றை நான் முயன்று பார்க்கிறேன். என் சக்திக்கு அப்பாற்பட்டு இருக்கும் விஷயங்களில் என் ஆற்றலை நான் வீணாக்குவதில்லை. பெரும் மாற்றம் என்பது ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான நுண் மாற்றங்களே. அச்சிறு நுண் அலகில் மட்டுமே எனது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிறேன். 

மகாத்மா காந்தி இந்திய சுதந்திரப் போரை தலைமையேற்று வழிகாட்டி இந்தியர்களுக்கு வென்றெடுத்துக் கொடுத்தார். அவர் தலைமையேற்கவும் செய்தார் - வழிகாட்டவும் செய்தார் என்பது முக்கியமானது. அரசியல் தலைமையின் மேலும் அரசியல் அதிகாரத்தின் மேலும் காந்திக்கு பெரிய ஈடுபாடு இருக்கவில்லை. அவர் அதனைப் புறக்கணிக்கவில்லை. அவர் அதனை எல்லாமாகக் கொண்டாடவும் இல்லை.

காந்தி இந்திய கிராமம் குறித்து முற்றிலும் அறிந்திருந்தார். அன்றிருந்த கிராமத்தின் வறிய நிலையை மட்டும் அல்ல. இந்தியா மகோன்னதமாய் உலக அரங்கில் கொலு வீற்றிருந்த போது சிறப்பானதாக இருந்த இந்திய கிராமங்களின் நிலையையும் அவர் முழுமையாக அறிந்திருந்தார். அவர் அதனை மீண்டும் கொண்டு வர விரும்பினார். அதனால்தான் இந்தியாவின் படித்த மக்களின் மனசாட்சியிடம் கிராமங்கள் குறித்தும் கிராம முன்னேற்றம் குறித்தும் தொடர்ந்து பேசியவாறு இருந்தார். காந்தியின் அரசியல் என்பது கிராம முன்னேற்றமே. 

கிராமங்களில் விவசாய வேலை போக எஞ்சியிருக்கும் உபரி நேரம் காந்தியின் அவதானத்தில் இருக்கிறது. அதில் கிராம மக்கள் கைத்தொழில்களில் ஈடுபட வேண்டும் என்று காந்தி எண்ணினார். அது கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றும் உதவக் கூடியது. உபயோகமானது. அவர் சிறிதும் பெரிதுமான கைத்தொழில்களை கண்டுபிடித்துக் கொண்டேயிருந்தார். கிராம சுயசார்பை வற்புறுத்திக் கொண்டேயிருந்தார். கிராமத்தின் பெண்கள் இராட்டை மூலம் நூல் நூற்றலில் ஈடுபட வேண்டும் என்று அவர் எண்ணியது குறியீட்டு ரீதியில் எவ்வளவு முக்கியமானது? கிராமத்தின் ஆண்கள் வயலில் விவசாயம் செய்கின்றனர். பெண்கள் நூல் நூற்றல் என்பது இன்னும் மேலான விவசாயச் செயல்பாடு. கதர் விவசாய பொருளாதார இயக்கம். 

காந்தி இப்போது இருந்தால் என்னென்ன விஷயங்களில் செயலாற்றிக் கொண்டிருப்பார்?

1. நிச்சயமாக மதுவுக்கு எதிராகப் போராடுவார். கிராம மக்களிடம் மது உங்களை உடல்ரீதியாக மனரீதியாக பொருளியல் ரீதியாக அழிக்கிறது என்பதை எடுத்துக் கூறுவார். 

2. கிராமத்துப் பெண்களுக்கு விவசாயம் சார்ந்த விவசாயத்துக்கு இணையான பணிகளில் பயிற்சி அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவார்.

3. கதர் இயக்கத்தை தீவிரப்படுத்துவார்.

4. சூரிய ஒளி மின்சாரம், நீர்ப் பாதுகாப்பு ஆகிய விஷயங்கள் எல்லா கிராமங்களிலும் செயலாக்கப் பெற வேண்டும் என்று விரும்புவார்.

5. ஒவ்வொரு கிராமத்திலும் தினமும் கிராமத்தின் எல்லா பிரிவினரும் கலந்து கொள்ளும் பிராத்தனை நடக்க வேண்டும் என்பதில் உறுதியாயிருப்பார்.

Saturday 27 June 2020

உயிர்

உன்னிடம்
கண்ணீர் சிந்தும் போது
நீ
மௌனம் கொள்கிறாய்
அந்த
மௌனம்
அனாதி காலங்களைக்
கடந்து
வந்திருக்கிறது
முடிவற்ற வெளியின்
ஒளித்துளிகள்
மாயக்கணம் ஒன்றில்
உயிர்க்கச் செய்கின்றன
புதிய உயிர்
ஒன்றை
எனது மௌனங்களை
உன்னிடம்
சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறேன்
புறத்தும்
அகத்தும்
மௌனம் சூழ்ந்திருக்க
பூக்கத் துவங்குகின்றன
அத்தனை அழகு கொண்ட
மௌன மலர்கள்

பாதை

எல்லாரும்
நீங்கிச் சென்ற பின்னும்
உன் ஒளி பொருந்திய முகம்
மின்னும் கண்கள்
உற்சாகமான தலையசைப்புகள்
நம்பிக்கை அளிக்கும் புன்னகை
நிறைகின்றன
நீ
எப்போதுமே நீங்கிச் சென்றதில்லை
என்பதை
எப்போதும்
எண்ணிப் பார்க்கிறேன்
முடிவற்ற காலத்தில்
நீ
ஒளியாய் இருக்கிறாய்
மகத்துவங்களின் பாதையில்

வாய்ப்பு

நண்பர்கள் பலர், பல ஊர்களிலிருந்து ‘’காவிரி போற்றுதும்’’ பணியில் சிறு அளவிலாவது தங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர். தங்கள் உதவியை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்கின்றனர். அணியின் செயல்முறை மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி!

நாம் துவங்கியுள்ள பணியில் நிதி மிகப் பெரிய தேவையாக உருவெடுக்கவில்லை. கிராமத்தின் வீடுகளில் கள ஆய்வு பத்து நாட்கள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒவ்வொரு விவசாயியும் தனது வீட்டில் தனது தோட்டத்தில் வளர்க்கக் கூடிய மரம் குறித்தும் அதன் வாய்ப்புகள் குறித்தும் பரிசீலிப்பதற்கான ஒரு வாய்ப்பு உருவானது. இதில் நான் கவனித்த விஷயம் ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன். எல்லா விவசாயியுமே தனது நிலத்தில் செயல்புரிவதை ஆத்மார்த்தமாகவே எண்ணுகின்றனர். அவர்கள் முழுமையாய் அறிந்ததும் அதையே. எனினும் விவசாயத்தில் காலநிலை ஒரு முக்கியக் கூறு. அவர்கள் உழைப்பு எவ்விதம் இருப்பினும் பயிர் விளைச்சல் என்பது பல்வேறு சூழ்நிலைகளைச் சார்ந்தது. அவர்களிடம் நாம் சில வாய்ப்புகளை முன்வைக்கிறோம். அவர்களே தேர்ந்தெடுக்கின்றனர். 

உதாரணத்துக்கு, கள ஆய்வின் போது, விவசாயிகளின் வயல்களில் உள்ள வரப்புகளில் உயரமாய் வளரும் மரக்கன்றுகள் வளர்க்குமாறு கேட்டுக் கொண்டோம். அவர்களுக்கு பயிர் விளைச்சலை வரப்பில் வளரும் மரம் பாதிக்குமோ என்ற தயக்கம் இருந்தது. அதனை நீக்க, அடர்ந்து வளராத நிழல் கட்டாத உயரமாக வளரக்கூடிய  மரங்கள் பல உள்ளன; அவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினோம். அவர்கள் அதனை ஏற்றனர். கோடிக்கணக்கான மக்களுக்கான உணவை அவர்கள் உற்பத்தி செய்கின்றனர். அதிலும் அவர்களுக்கு பாதிப்பு நேர்ந்து விடக் கூடாது; அதே நேரம் அவர்களுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்க வேண்டும். நாட்டின் பசுமைப் பரப்பும் அதிகமாக வேண்டும்.

இராமாயணத்தில் ஒரு காட்சி வருகிறது. மாபெரும் கடலை எப்படி கடப்பது என மலைத்து நிற்கிறான் அனுமன். அப்போது ஜாம்பவான் அனுமனிடம், ‘’நீ ருத்ர அவதாரம். மாவீரன். சில சூழ்நிலைகளால் அந்த உண்மையை நீ அறியாமல் இருக்கிறாய். உனக்கு அதனை நினைவுபடுத்துகிறேன்’’ என்கிறார். அது நினைவுபடுத்தப்பட்டதும் அனுமன் பெரும் கடலை சர்வ சாதாரணமாகக் கடந்து செல்கிறான்.

நம் பணியில் இணைந்து கொள்ள விரும்புபவர்களுக்கு நான் பரிந்துரைப்பது: 

உங்களுக்குப் பக்கத்து கிராமத்தில் இருக்கும் விவசாயி ஒருவரை அவருடைய வீட்டிற்குச் சென்று சந்தியுங்கள். மரம் வளர்ப்பதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தைத் தெரிவியுங்கள். அவர் விரும்பும் மரக்கன்றுகள் எவை என்று கேட்டுக் கொள்ளுங்கள். அவற்றை ஏற்பாடு செய்து ஓரிரு நாளில் அவருக்கு வழங்குங்கள். ஒரு மரக்கன்றை மரமாக்குதல் என்பது பெருஞ்செயல். அதனை அவர் செய்யத் துவங்குவார். 


Friday 26 June 2020

காவிரி போற்றுதும் - ஒரு கடிதம்

அன்புள்ள பிரபு,

வணக்கம்.  நடந்தாய் வாழி "காவேரி போற்றுதும்".  மிகச் சிறப்பாக முதல் அடி எடுத்து வைத்திருக்கும் காவிரி போற்றுதும் அமைப்பிற்கு வாழ்த்துகள். நல்ல முன்னெடுப்பு, நேர்த்தியான திட்டமிடல், காலம் இடம் கருதி செயல் படுத்தும் திறன், மிகச் சிறப்பு பிரபு.  நோக்கம் ஈடேற வாழ்த்துகள். எனக்கும் ஒரு சிறு பங்களியுங்கள், காத்திருக்கிறேன். நன்றி.

நாரா.சிதம்பரம்.

முதல் கொடை

திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வராணி எனது நண்பர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் திருச்சியிலிருந்து லடாக் வரை தனது வெஸ்பா ஸ்கூட்டரில் தனியாகப் பயணித்தார். அவர் திருச்சியிலிருந்து கிளம்பி லடாக் சென்று பின்னர் மீண்டும் திருச்சி திரும்பி வர ஒரு மாதத்துக்கும் மேலானது. இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு மிக நல்ல முறையில் இருக்கிறது என்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் பதிவு செய்தார். அவர் பல வெளிநாடுகளிலும் பயணம் செய்திருக்கிறார். எந்த நாட்டை விடவும் இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது என்பதை தனது அனுபவத்திலிருந்து பதிவு செய்திருக்கிறார். இலக்கிய வாசகர். சிற்பவியலில் ஆர்வம் உடையவர். எப்போதும் சிறிதும் பெரிதுமாக ஏதேனும் ஒரு பயணத்தில் இருப்பவர். 

நேற்று அவரிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது, ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் குறித்து கூறினேன். அவர் மிகவும் உற்சாகமடைந்தார். ஏன் தன்னிடம் பணி துவங்கிய போதே கூறவில்லை என்று வருத்தப்பட்டார். கள ஆய்வின் போது தானும் பங்கேற்க ஏன் வாய்ப்பு தரவில்லை என்றார். அவர் பெரும் மனோதிடம் கொண்டவர். வழக்கறிஞர் என்பதால் எதையுமே மிகக் கறாராக துல்லியமாகவே மதிப்பிடும் மனப்பான்மையை இயல்பாகக் கொண்டிருப்பவர். எனினும் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் அவரை மிகவும் உணர்ச்சி கொள்ளச் செய்தன.

இன்று காலை என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்காகத் தான் ரூ.1000 நிதியளிக்க விரும்புவதாகக் கூறினார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. விஷயத்தை சற்று தள்ளி வைப்போம் என்பதற்காக , ‘’இன்னும் 15 நாளில் மரக்கன்றுகள் நடுதல் நிகழும்; அப்போது பார்த்துக் கொள்ளலாம்’’ என்றேன். தான் செய்ய நினைக்கும் ஒரு நல்ல செயலைத் தன்னால் அத்தனை நாள் தள்ளி வைக்க முடியாது. இப்பொழுதே அனுப்பி வைக்கிறேன் என்றார். அவருடைய அம்மாவும் என்னிடம் பேசினார். எங்கள் முயற்சிகளுக்கு ஆசியளித்தார். 

எங்கள் அணி அளவில் மிகச் சிறியது. ஒற்றை இலக்க உறுப்பினர்களை மட்டுமே கொண்டது. ஒரு பொதுப் புரிதலில் இணைந்திருப்பது. எங்கள் செயல்பாடுகள் இப்போதுதான் துவங்கியுள்ளன. எங்கள் முதல் செயலில் பெரும்பாலான பணிகள் இனிதான் நடைபெற உள்ளன. எங்கள் வேலைத்திட்டம் குறித்து நான் என் தளத்தில் பதிவு செய்வது கூட இந்த விதமான வேலைமுறையை எளிதாக கைக்கொள்ளக் கூடியவர்கள் அதிக அளவில் அதிக கிராமங்களில் முழுமையாக மரம் நடுதலை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். கிராமத்தில் எங்கள் பணி ஒருங்கிணைப்பே. கிராமங்களின் மாற்றத்துக்காக வேலை செய்ய விருப்பம் உள்ளவர்களையும் ஒரு கிராமத்தையும் நாங்கள் ஒன்றாகக் கொண்டு வருகிறோம். அவர்களுக்கிடையே நாங்கள் ஒரு பாலமாக இருக்கிறோம். அவ்வளவே. பொது இடத்தில் நடப்படும் மரக்கன்றுகள் வளர்ந்து விருட்சமாகும் வரை பராமரிப்பதாய் உறுதி எடுத்துள்ளோம். எங்கள் பணி இனிதான் துவங்குகிறது. 

நண்பர் செல்வராணி எதிலும் விடாப்பிடியானவர். எனது கணக்கு எண்ணை அனுப்பியே தீர வேண்டும் என்றார். குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவரைக் கலந்தாலோசித்தேன். அவரும் தயங்கினார். பின்னர், ‘’பிரபு! செல்வராணி ஒரு யாத்ரிகர். இந்திய நிலமெங்கும் பயணித்தவர். இந்தியர்களுக்கும் விருட்சங்களுக்குமான உணர்ச்சிகரமான உணர்வை அறிந்தவர். அவர் நமக்கு அளிக்கும் கொடையை நாம் ஏற்போம்.’’ என்றார். 

நான் கணக்கு எண்ணை அனுப்பினேன். சில நிமிடங்களில் ரூ.1000 அனுப்பப்பட்ட தகவல் வந்தது.

இந்திய நிலத்தின் மோட்டார்சைக்கிள் பயணியான செல்வராணிக்கு எங்கள் நன்றி!

சொல்

நீ
யார்
என
அனைவரும் கேட்கிறார்கள்

உனது ஆதி இருப்பை
யாவற்றையும் பொலியச் செய்யும்
நின் கருணையை
தீயெனப் படர்ந்து எழும் உற்சாகத்தை
எல்லா உயிர் மேலும் கவியும் கனிவை
அலாதியான மௌனத்தை
தனித்துவமான தவத்தை
காண்பவற்றை துலங்கச் செய்யும் ஒளியை

கூறாமல்

உன் பெயர் மட்டும் கூற முடியுமா

Thursday 25 June 2020

இடிபாடுகளிலிருந்து
தனது வீட்டை உருவாக்குவது
குறித்து
யோசித்துக் கொண்டிருக்கிறாள்
புவி அதிர்ந்த நகரத்தின்
ஒரு மூதாட்டி
அவநம்பிக்கைகளுடன் ஓயாத போராட்டத்தை
நடத்துகிறாள்
நாம் அறிந்த பெண்
துக்கங்களை
மௌனமாக மட்டுமே வெளிப்படுத்த
நீ
பயின்றிருக்கிறாய்
உணர்வின் ஒரு துளி கண்ணீர்
ஆயிரம் அட்சரங்களாய்
மிதக்கத் துவங்குகிறது
நிலத்தின் மேலான காற்றில்

ஆக்கம்

மலைத்தொடர் வனப்பாதையின்
சிகர நுனியின்
சாலைக்கு மிக அப்பால் உள்ள காட்டாற்றின்
அந்தி சூழும் கடற்கரையின்
சமவெளி நதியின்
தீபம் சுடரும் சிற்றாலயத்தின்
மௌனத்திலிருந்து
உனக்கான
ஒவ்வொரு சொல்லையும்
கணமும்
உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்

தவிப்பு

திரிந்து
ஒற்றை மலருடன்
திரும்பி வருகையில்
பாதையின் முட்களை
சந்திக்கின்றன
பாதங்கள்
துயரின் சுவடு
மலரில் படியலாகாதென
பிராத்திக்கிறான்
பயணி
அந்தி மலர்ந்திருக்கும் பொழுதில்
இலைகள்
ஓயாமல் தவமியற்றும்
பெருமரத்தின் அடியில்
ஏற்றப்பட்டிருக்கிறது
உன்னுடைய சிற்றகல்
சுடரலைவு ஏன் அத்தனை தவிப்பை உண்டாக்குகிறது

Wednesday 24 June 2020

ஒரு அழைப்பு

இன்று அமெரிக்காவிலிருந்து ஒரு நண்பர் அழைத்தார். தளத்தில் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளைப் பார்த்து விட்டு அதைப் பற்றி பேசினார். கிராமத்தில் நிகழும் ஆக்கபூர்வமான செயலில் தானும் உணர்வுபூர்வமாகப் பங்கேற்பதாகக் கூறினார். இவ்வாறான பங்கேற்புகள் என்னை மிகவும் வலுவாக்குகின்றன. பணியில் மேலும் செய்நேர்த்தியைக் கொண்டு வருகின்றன. மேலான திட்டமிடலுக்கு வழிவகுக்கின்றன. 

நேற்றும் இன்றும் கிராமத்தின் ஒவ்வொரு குடும்பமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மரக்கன்றுகளை நடுவதற்கான குழி எடுக்குமாறும் அதில் மக்கிய எருவை இட்டு வைக்குமாறும் கூறினேன். உரம் குழியில் ஆறி இருக்கும் பதம் மரக்கன்றுகளை நடும் போது உதவியாய் இருக்கும். 


Tuesday 23 June 2020

விருட்ச பூஜை - நாள் 6

உயிர்த்துடிப்பான கிராமம் குறித்த கனவு எல்லா இந்தியர்களுக்கும் இருக்கிறது என்று படுகிறது. பொதுவாக பெரும்பாலான இந்தியர்களின் பூர்வீகம் கிராமமாகவே இருக்கிறது. இந்த கிராமத்து மக்களைக் கொண்டே மாபெரும் சாம்ராஜ்யங்களின் தலைநகரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கம்பன் அயோத்தியைக் குறித்து கூறும் போது கோசல நாட்டின் நீர்வளம் குறித்தே பேசுகிறான். சிலப்பதிகாரம் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு குறித்து எடுத்தியம்புகிறது. தமிழ் வாழ்க்கையில் ஆலயமும் தடாகமும் விருட்சமும் ஒன்றிணைந்தவை. 

சில நாட்களுக்கு முன்னால் என்னை ஒருவர் தொழில் நிமித்தம் சந்திக்க வந்திருந்தார். அப்போது ‘’விருட்ச பூஜை’’ குறித்து தற்செயலாக பேச்சினூடே சொன்னேன். தன்னிடம் அதிக அளவில் மரக்கன்றுகள் இருப்பதாகவும் அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். அவரை அன்று தான் முதல் முறையாக சந்திக்கிறேன். அவரிடம் செயல்திட்டம் குறித்து மிகச் சுருக்கமாகவே கூறினேன். எனக்கு வியப்பாக இருந்தது. தன்னுடைய கிராமத்திலும் இவ்வாறான ‘’விருட்ச பூஜை’’யை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 
மரம் நடுவதற்குத் தேவையான குழியை எடுத்து அதில் மக்கிய சாண எருவை இட்டு வைக்குமாறு கிராம மக்களிடம் தொடர்பு கொண்டு கூறி வருகிறேன். எதிர்பார்த்ததற்கு முன்னரே மரக்கன்றுகளை நட்டு விடலாம் என்று தோன்றுகிறது. 

ஏதோ ஒரு கிராமத்தில் நிகழும் மாற்றத்துக்கான பணியை இதைக் கேள்விப்படும் ஒவ்வொருவரும் தங்கள் ஊரில் நிகழும் பணியாக நினைக்கிறார்கள். உணர்வுபூர்வமாக அதனுடன் இணைத்துக் கொள்கிறார்கள்.

Monday 22 June 2020

வீதியில் சிந்திக் கிடக்கும்
தானியம் கொத்தும் பட்சிகள்
சூழலை
மேற்பார்வை இடுகின்றன
காகங்கள்
எல்லாம் சரி
தினசரிப் பாடென்று ஒன்று
இருக்கவே இருக்கிறது
இன்னும் பல இடம் போக
அவசரமாய்ப் பறக்கிறது
ஒற்றைக் காகம்

Sunday 21 June 2020

மாலைப்பொழுது

இன்று மாலை கடற்கரைக்குச் சென்றிருந்தேன். கடல் பார்த்து நீணாள் ஆயிற்று. எப்படி இத்தனை நாள் விடுபட்டது? கரைக்குச் சென்றதுமே அலைகளினுள் சென்று நின்று கொள்வேன். எவ்வளவு பெரிய இருப்பிற்குள் நிற்கிறோம்? கடல் பெரிது. வானம் கடலினும் பெரிது. வானின் ஒரு துளி கடல். நீர்க்குளிர்ச்சியை உணரும் போதே மனம் உற்சாகம் கொள்கிறது. போவதும் வருவதுமான அலைகளின் ஊஞ்சல். கால் மூடும் ஈர மணல். தலைக்கு மேலே வட்டமிடும் பறவைகள். கடலை விட்டுப் பிரியும் போது மனம் சோகம் கொள்கிறது. இப்போதும்.

சைதன்யம்

மண்மகள் அறிந்த வண்ணச்சீரடிகள்
மகரந்தங்கள் மிதக்கும் காற்று
விதைக்கும் மலருக்கும் இடைப்பட்ட மரம்
இந்த புவியைத் தீண்டுவதில்
மேகங்களுக்குத்தான் எத்தனை ஆனந்தம்
கதிரின் ஓயா விருப்பம்
கணமும் ஓயாத ஆழி அலைகள்
விண் பறக்கும் புள்ளின் வயிற்றில் விருட்சம்

Saturday 20 June 2020

விருட்ச பூஜை - நாள் 3

கிராமத்தின் வரைபடம் ஒன்று தயாரித்தேன். பொது இடங்களை நேரடியாக ஆய்வு செய்து அவற்றை குறித்துக் கொள்ள வேண்டும். அவற்றில் எவ்வகையான மரக்கன்றுகளை நட வேண்டும் என முடிவு செய்ய வேண்டும். 

Friday 19 June 2020

கைம்மண்

சில எஞ்சட்டும்
அதற்கான எல்லா நியாயங்களும் இருக்கின்றன
விழைவுகளினும்
அறியாமை மிகக் கொடிது
உலகை அள்ளும் காற்று
நம் நுரையீரல்களுள்ளும்
வந்து
செல்கிறது

அகமலர்

அனாதையாக ஒரு நெடுஞ்சாலை
மாலைப்பொழுதில் வந்து சேர்கிறான்
எங்கு செல்வதென அறியாத ஒருவன்
சாலைகளின் முடிவின்மை
ஒரு கணம்
மலைக்க வைக்கிறது
எதிர்பாராமல் வீசும் மென்காற்றில்
இயல்பாக மலர்கிறது
ஒரு மலர்

Thursday 18 June 2020

விருட்ச பூஜை - நாள் 2

ஒரு வேளை உணவு உண்பது உடலை லகுவாக வைத்திருக்கிறது. நிறைய நேரம் கிடைப்பதாக உணர்கிறேன். உடற்பயிற்சிகள் எளிதாக இருக்கின்றன. விருட்ச பூஜையை நிமித்தமாகக் கொண்டு எனது உணவு முறையை சீரமைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். 

நேற்று சில இளைஞர்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட விரும்புவதாகவும் அதற்கு ஆலோசனை அளிக்குமாறும் கேட்டனர். எனது நண்பர் ஒருவர் இயற்கை விவசாயம் செய்கிறார். அவரை வீட்டுக்கு வரச் சொல்லி அவர்களுக்கு ஆலோசனைகளை கூறச் சொன்னேன். 

ரசாயனங்கள் தெளிக்காத காய்கறிகளை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். எனவே ஒரு ஏக்கர் நிலத்தை ஐந்தாகப் பிரித்து ஐந்து வகையான காய்கறிகளை ( வெண்டை, புடலை, பீர்க்கன், அவரை, கத்தரி) பயிரிடுமாறு கூறினார். 

இன்றும் சில இளைஞர்கள் வந்தனர். அவர்களுக்கும் அறிவுரை வழங்கினார். 

கிராமத்தின் சாலைகளின் தெருக்களின் நீளத்தை அளந்து வந்தேன். நாளை வரைபடம் தயார் செய்து விடலாம். ஒவ்வொரு பணிகளாக நிறைவு செய்து வருகிறேன். இதில் அனைவரும் காட்டும் ஆர்வமும் அக்கறையும் என்னை சிலிர்க்கச் செய்கிறது. நியூஸிலாந்திலிருந்து ஒரு நண்பர் அழைத்தார். தன்னால் செய்யக் கூடிய எல்லா பணிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார். வேளாண்மையில் முனைவர் பட்டம் பெற்ற நண்பர் ஒருவர் தனது மகிழ்ச்சியை மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தார்.

Wednesday 17 June 2020

இந்தியா - மாநில மரங்கள்

தமிழ்நாடு - பனை
கேரளா - தென்னை
கர்நாடகா - சந்தனம்
புதுச்சேரி - வில்வம்
ஆந்திரா - வேம்பு
தெலங்கானா - இலுப்பை
கோவா - தென்னை
மகாராஷ்ட்ரா - மா
குஜராத் - ஆலமரம்
ராஜஸ்தான் - வன்னி
ஹரியாணா - அரசமரம்
மத்தியப் பிரதேசம் - ஆலமரம்
சட்டீஸ்கர் - குங்கிலியம்
ஒரிஸ்ஸா - அரசமரம்
பீகார் - அரசமரம்
ஜார்கண்ட்- அகர்
மேற்கு வங்காளம் - சிட்டிம்
அஸ்ஸாம் - ஒல்லாங்
அருணாச்சல் பிரதேஷ் - ஒல்லாங்
நாகலாந்து - அல்டர்
மேகாலயா- வெண் தேக்கு
சிக்கிம் - ரோடோண்டிரோம்
மணிப்பூர் - இந்திய மகாகனி
மிசோரம் - நாக மரம்
திரிபுரா - அகர்
ஹிமாச்சல் பிரதேஷ் - தேவதாரு
காஷ்மீர் - சினார்
உத்திரப் பிரதேசம் - அசோக மரம்
உத்தர்கண்ட் -புரசு
லட்சத் தீவுகள் - ஈரப்பலா
அந்தமான் - அந்தமான் செம்மரம்
தில்லி - குல்மோகர்
பஞ்சாப் - சிசே
சண்டிகர் - மா
டையூ -
லடாக் -
தாத்ரா நாகர்ஹவேலி -

விருட்ச பூஜை - நாள் 1

இன்று காலை 4.30க்கு விழிப்பு வந்தது. எழுந்து தண்ணீர் குடித்தேன். காலை எழுந்தவுடன் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பதை நான் பல ஆண்டுகள் பழக்கமாக வைத்திருந்தேன். யோகா செய்ய வயிறு காலியாக இருக்க வேண்டும் என்பதால் அதனை பின்னர் மாற்றியமைத்துக் கொண்டேன். இருப்பினும் அந்த பல வருடப் பழக்கத்தின் விளைவாக பகலில் எப்போது நீர் அருந்தினாலும் ஒரு லிட்டர் அளவுக்கு குடித்து விடுவேன். நிறைய நீர் குடிப்பது என்பது எனது உடல்நிலையையும் மனநிலையையும் சீராக வைத்திருக்க உதவுகிறது. காலையில் நடைப்பயிற்சிக்குச் சென்றேன். வாசலில் பிராணிகளுக்கு தண்ணீர் வைக்கும் சிறு தொட்டி ஒன்று உள்ளது. அதில் நீர் நிரப்பினேன். வீட்டின் சுற்றுச்சுவர் மேல் பறவைகள் நீர் அருந்த சிறு கலன் ஒன்று உள்ளது. அதிலும் நீர் நிரப்பி வைத்தேன். பறவைகளுக்கான உணவை ஒரு கிண்ணத்தில் கொண்டு வைத்தேன். பொழுது விடிந்ததும் பட்சிகள் மொய்த்துக் கொள்ளும். காகம், வால் காகம், மைனா, தவிட்டுக் குருவி ஆகியவை தினமும் வரும். அம்மாவும் அப்பாவும் அவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். பறவைகள் எனது அப்பா வாசலில் அமர்ந்திருந்தால் தடையில்லாமல் அவரைச் சுற்றி நெருங்கி வரும். தானியங்களிடத் தாமதமானால் வீட்டுக்குள் வந்து அப்பாவுக்காக குரலெழுப்பும். 

எனக்கு இரண்டு நண்பர்கள். அவர்கள் சகோதரர்கள். இருவருமே ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் யோகப்பயிற்சிகள் செய்வார்கள். நான் அரைமணி நேரம் செய்வேன். சில நாட்கள் விடுபடும். தவிர்க்க இயலாது. அவர்கள் வாரத்தில் எல்லா நாளும் விடுபடல் இல்லாமல் செய்வார்கள். மூத்தவர் யோகப் பயிற்சிகளின் விளைவாக ஒவ்வொரு வேளையும் பாதி வயிறு மட்டுமே உண்ணத் துவங்கினார். அவரது உடல் தீவிரமாக இளைத்து விட்டது. பின்னர் இரண்டு வேளை உணவு மட்டுமே உண்பதாக முடிவெடுத்தார். தம்பி என்னிடம் அண்ணன் உணவை மிகவும் குறைக்கிறார் என வருத்தப்பட்டார். அண்ணனிடம் நான் பேசினேன்.

‘’அண்ணன்! நீங்க யோகா செய்யறது நல்ல விஷயம். ஆனா உணவைக் குறைக்காதீங்க. நீங்க பயிற்சி செய்யற நேரத்தை வேணும்னா அதிகப்படுத்திக்கங்க. நாம லௌகிக வாழ்க்கைல இருக்கோம். உணவு மேல இருக்கற விருப்பம் வாழ்க்கை மேல இருக்கற விருப்பமும் கூட’’

அவர் கேட்பதாய் இல்லை. 

நான் அவர் தம்பியிடம் சொன்னேன். ‘’ அண்ணன்ட்ட பேசினேன். அவர் ஒண்ணும் கேக்கறதா இல்லை. அவர் தன்னை ஒரு பெரிய யோகா டீச்சர்ன்னு நினைச்சிட்டிருக்காரோ?’’ நாங்கள் இருவரும் சிரித்து மகிழ்ந்தோம். 

இப்போது அவர்களிடம் மரக்கன்றுகள் நடும் வரை நான் ஒரு வேளை உணவு மட்டுமே உண்ணப் போவதாக சொன்னவுடன் தம்பி என்னிடம் தனியாகக் கேட்டார். ‘’பிரபு! கொஞ்ச நாள் முன்னாடிதான் அண்ணனுக்கு அட்வைஸ் செஞ்சீங்க. இப்ப நீங்க உங்களைப் பத்தி என்ன நினைச்சுட்டிருக்கீங்க?’’

உணவைத் தவிர்க்கும் போது மனம் ஓய்வாக உணர்கிறது. நிறைய நேரம் கிடைக்கிறது. நேரம் எப்படி கிடைக்கும் என்றால் உதாரணத்துக்கு காலையில் தேனீர் அருந்துகிறோம் என்றால் அருந்த ஐந்து நிமிடம் ஆகும். அதற்கான எதிர்பார்ப்பை நாம் வழக்கமாக அருந்தும் நேரத்துக்கு பத்து நிமிடம் முன்பே உடல் உருவாக்கி விடும். தேனீருக்குப் பதினைந்து நிமிடம் ஆகும். காலை, மாலை, மதியம் என மூன்று வேளையில் 45 நிமிடம். உணவு அருந்துவதற்கு முன் பத்து நிமிடம். உணவு உண்ண 15 நிமிடம். உண்ட பின் 15 நிமிடம். மூன்று வேளைக்கு 2 மணி நேரம். உணவுக்கும் தேனீருக்கும் நாம் நம்மை அறியாமல் செலவழிக்கும் நேரமே கிட்டத்தட்ட மூன்று மணி நேரம். ஒரு வேளை உணவு உண்ணும் ஒருவருக்கு இந்த மூன்று மணி நேரம் பரிசாகக் கிடைக்கும். 

நடைப்பயிற்சி முடித்து விட்டு வந்து சூர்ய நமஸ்கார் செய்தேன். யோகாசனங்களில் சூர்ய நமஸ்கார் பல ஆசனங்களின் தொகுப்பு. எலும்புகள் உறுதிப்படவும் இலகுவான தசை இயக்கத்துக்கும் இரத்தத்தில் பிராண வாயுவை அதிகரிக்கவும் உதவுவது. இந்தியாவின் தொன்மையான வழிபாடுகளில் சூரிய வழிபாடு ஒன்று.

முன்நிற்கும் பணிகளைத் தொகுத்துக் கொள்கிறேன். 

1. கிராம மக்கள் கேட்டிருக்கும் மரக்கன்றுகள் 18,000. பொது இடங்களுக்கு 7,000. மொத்தம் 25,000. சூழ்நிலையைப் பொறுத்து மரக்கன்றுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். அதில் எந்த தடையும் இல்லை. 

2. பொது இடங்கள் : 1. கோயில்கள் 2. குளங்கள் 3. பள்ளிக்கூடம் 4. கால்வாய்க் கரை 5. சாலையின் இரு மருங்கு 6. சுடுகாடு 7. அறுவடைக் களங்கள்

3. கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் முதலில் ஏழு மரக்கன்றுகளை வழங்குதல் . ’’சப்த விருட்சம்’’ - முருங்கை, எலுமிச்சை, கருவேப்பிலை, வேம்பு, மருதாணி, செம்பருத்தி, சந்தனம்.

முருங்கைக்கீரை இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவு. இரத்தத்தைத் தூய்மையாக்குவதில் முன்னணியில் உள்ளது. எலுமிச்சை விட்டமின் சி அதிகம் உள்ள உணவு. கருவேப்பிலையில் இரும்புச்சத்தும் துத்தநாகச் சத்தும் அதிகம். உணவில் மிக அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு. வேப்பந்தளிர் உடலின் நச்சுக்களை நீக்குவதில் முதன்மையானது. மருதாணி மங்கலப் பொருள். அலங்காரப் பொருள். செம்பருத்தி மலர் பூசனைகளுக்கு உகந்தது. சந்தனம் மங்கலத்தின் குறியீடு. 

சப்த விருட்சங்கள் ஊரின் எல்லாக் குடும்பத்திலும் இருப்பதைப் போல ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

4. கிராமத்தில் எட்டு தெருக்கள் உள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் அவர்கள் கேட்டுள்ள மரங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு தெருவின் தேவை என்ன என்பதை கணக்கிட வேண்டும். கன்றுகளை வினியோகிக்க அது உதவியாக இருக்கும்.

5. கிராமத்தின் வரைபடம் ஒன்று தயாரிக்க வேண்டும். அதில் பொது இடங்கள் , அவற்றின் நீளம் மற்றும் பரப்பு அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

6. தமிழ்நாட்டில் இருக்கும் மர வகைகளின் பட்டியல் ஒன்று தயாரிக்க வேண்டும். 

7. இந்திய மாநிலங்களின் மாநில மரங்களின் பட்டியல் ஒன்று தயாரிக்க வேண்டும்.

8. ’’காவிரி போற்றுதும்’’ உறுப்பினர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். 

9. கிராமத்தில் ஒவ்வொரு வீதிக்கும் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து மக்களுடன் விவாதிக்க வேண்டும். 

இன்று காலை வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஆலமரம் வரை நடைப்பயிற்சிக்குச் சென்றேன். பிரதான சாலையின் ஓரத்தில் ஒரு பிரும்மாண்டமான ஆலமரம். அதன் அடியில் சூலம் ஒன்று நடப்பட்டிருக்கும். காலை 5.40 மணி இருக்கும். நின்று வணங்கினேன். மரம் நடும் பணியில் உடனிருக்குமாறு வேண்டிக் கொண்டேன். திரும்ப நினைத்த போது யாரோ ஆலயத்தை நோக்கி வருவது போல காலடியோசை கேட்டது. ஒரு பெண் வந்தார். மரத்தடியில் தீபம் ஏற்றினார்.  சுடரும் தீபத்தையும் வணங்கி விட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன்.

Tuesday 16 June 2020

விருட்ச பூஜை

மொழியை அம்மாவிடமிருந்து முதலில் அறிந்தேன். மரக்கிளையமர்ந்த கா கா எனக் கரையும் காகத்தைக் காட்டியே அன்னையின் மூலம் மொழி அறிமுகம் நடந்தது. பால பிராயம் தொட்டு பறவைகள் மீதும் அவை அமரும் மரங்கள் மீதும் பெரும் ஈடுபாடு இருந்திருக்கிறது.  காகங்களைப் பித்ருக்களாகக் காண்கிறது இந்திய மரபு.  பின்னர் கதைகளின் நாட்கள் தொடங்கின. இந்த உலகில் இருக்கும் எல்லாக் கதைகளையும் கேட்டு அறிந்திட வேண்டும் என்ற தவிப்பு. சங்கீதக் காக்கையின் கதை. மரத்தடியில் படுத்துறங்கிய தொப்பி வியாபாரியின் கதை. மரா மரத்தில் நுழைந்து ‘’ராம ராம’’ என உச்சரித்து ரத்னாகர் வால்மீகியான கதை. வாழ்வு குறித்த உண்மை அறிய அரசமரத்தின் அடியில் அமர்ந்த பெரும் கருணையாளனின் கதை. வேடனின் பசி தீர்க்க மரத்தில் வசித்த பறவைகள் குடும்பத்துடன் மனமுவந்து தீயில் விழுந்து உணவான கதை. ஞானாசிரியன் யாதவனாக யமுனை தீரத்தில் மரத்தடியில் புல்லாங்குழல் இசைத்த கதை. 

கதை கேட்பவன் ஏதோ ஒரு கணத்தில் கதை சொல்லத் துவங்குகிறான். 

தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்தில் ஆடிப் பதினெட்டு அன்று மரக்கன்றுகளை வழங்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம். மக்கள் காவிரிப் பெருக்கை அன்னையாக வழிபடும் நாள். புது வெள்ளம் வாழ்வின் மீதான புதிய நம்பிக்கைகளை உருவாக்கும் நாள். 

இன்னும் 48 நாட்கள் உள்ளன. எல்லாம் சரியாக இருக்கிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடக்கின்றன. பலர் துணையிருக்கின்றனர். இருப்பினும் செயல்பாடுகளுக்கு இறைமையின் ஆசி நாடி மரக்கன்றுகள் வழங்கப்பட்டு முழுமையாக நடப்படும் வரை ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு நாளின் பெரும் பொழுதை பணிகளுக்கு அளித்து செயலாற்ற முடிவு செய்துள்ளேன். ஒவ்வொரு நாளும் நிகழும் பணிகளை தளத்தில் பதிவிடுகிறேன். 

அம்மாவிடம் இதற்கு ’’விருட்ச தவம்’’ எனப் பெயரிடலாம் என இருக்கிறேன் என்று சொன்னேன். அம்மா ‘’விருட்ச பூஜை’’ என்று சொன்னார். அது மேலும் பொருத்தமாக இருக்கும் என்று பட்டது. 

Monday 15 June 2020

அஸ்வமேதமும் அனாயாசமும்

’’காவிரி போற்றுதும்’’ பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்தில் சுற்றிக் கொண்டிருந்தேன். எனது நண்பரும் உடனிருந்தார். பொது காரியங்கள் செய்யும் போது உற்சாகமாக இருக்க வேண்டும். எவ்விதத்திலும் எவ்விதமான சோர்வும் அணுக வாய்ப்பளித்து விடக் கூடாது. எனக்குப் பல வருடப் பழக்கம் உண்டு. பொது காரியம் செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் சமூகம் நாம் எண்ணுவது போல் இருக்காது; அதனால் செயலில் நுழையும் போது பெரிய எதிர்பார்ப்பு எதையும் உருவாக்கிக் கொள்ளக் கூடாது; அதே நேரம் மகத்தானவற்றையே திட்டமிட வேண்டும். ‘’Be Realistic; Plan for a Miracle'' என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.  இந்திய மரபு ''சங்க ஸத்வம் ஸம்வதத்வம் ஸம்வோ மனாசி ஜானதாம்’’  ( ஒன்று கூடி சிந்தியுங்கள்; சேர்ந்து அமர்ந்து விவாதம் செய்யுங்கள்; உங்கள் மனம் ஒன்றாகட்டும்) என்கிறது.

’’அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால்’’ எனத் தாயுமானவர் கூறுவது போல ஆனந்த நிலையில் இருப்பேன். 

ஒரு கட்டுமானப் பொறியாளராக எனக்கு ஒரு அனுபவம் உண்டு. வீடு கட்டிக் கொடுக்கும் போது கிரகப்பிரவேசத்துக்கு முன் வீட்டின் உரிமையாளர் அவருடைய குலதெய்வம் கோயிலுக்கு குடும்ப சகிதம் செல்வார். அப்போது என்னையும் அழைப்பார்கள். நானும் செல்வேன். குடும்ப உறுப்பினர்கள் குலதெய்வத்திடம் அர்ச்சனை செய்யும் போது என்னையும் பெயர் நட்சத்திரம் கூறச் சொல்வார்கள். எனக்குத் தயக்கமாக இருக்கும். அப்போது நீங்களும் எங்கள் குடும்ப உறுப்பினர்தான் குடும்ப உறுப்பினர்கள் பெயருடன் உங்கள் பெயரையும் சேர்த்தே அர்ச்சனை செய்ய வேண்டும் என்பார்கள். அர்ச்சகரிடம் அர்ச்சனைத் தட்டில் கை வைத்து ‘’லோக ஷேமம்’’ என்பேன். அர்ச்சகருக்கு மட்டும் நான் சொன்னது புரியும். சிலர் இது என்ன புதிய நட்சத்திரமாக இருக்கிறதே என எண்ணுவார்கள்.

மக்களைச் சந்தித்தல் என்பது பொது காரியங்களில் முக்கியமான ஒன்று. அவர்களுடன் உரையாடும் போது அவர்கள் அபிப்ராயங்களைத் தயக்கமின்றிக் கூறுவதற்கு ஏதுவான சூழ்நிலையை என் குறைவான பேச்சின் மூலமோ மௌனத்தின் மூலமோ உருவாக்குவேன். ஒருவருக்கு ஒருவர் தயக்கம் இல்லாமல் ஆகும் போது அங்கே நமது பணியின் 80% நிறைவு பெற்று விடும். இது பல வருட அனுபவத்தின் விளைவாக திரண்ட அனுபவம். அவர்கள் மனதில் இருப்பது அனைத்தையும் சொன்ன பின் ஒரு சிறு இடைவெளி கிடைக்கும். அதில் மிகச் சுருக்கமாக நான் சொல்ல வேண்டியதைச் சொல்வேன். அதிலும் அவர்களால் எதை சிரமமின்றிச் செயல்படுத்த முடியுமோ அதையே சொல்வேன். 

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கிராமத்துக்கு மோட்டார்சைக்கிளில் நானும் நண்பரும் சென்று கொண்டிருந்தோம். நான் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தேன். 

‘’அண்ணன்! இன்னைக்கு எனக்கு ஒரு புது யோசனை காலைல தோணுச்சு’’

‘’அப்படியா! என்ன யோசனை?’’

‘’இப்ப நாம கிராமத்துல 25,000 மரக்கன்றுகளை நடப் போறோம். அதுல தமிழ்நாட்டுல உள்ள எல்லா மர வகையிலயும் ஒன்னு ஒன்னு அந்த கிராமத்துல இருக்கற மாதிரி செஞ்சுடுவோம்.’’

‘’தமிழ்நாட்டுல 500 வகை மரம் இருக்குமா?’’

‘’500க்கும் கொஞ்சம் கூட இருக்கும்”

‘’நல்ல ஐடியா தான். பாட்டனி படிக்கிற ஸ்டூடண்ட்ஸுக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும். இந்த வருஷம் சுற்றுச்சூழல் செயல்பாடுகளோட தீம் ‘’பயோ - டைவர்ஸிட்டி’’. தமிழ்நாட்டோட மரங்களின் பயோ டைவர்ஸிட்டி நாம ஒர்க் பண்ர ஒரு கிராமத்துல மட்டுமே உருவாக்குறோம்ங்றது நல்ல ஐடியாதான்!’’

நண்பர் வணிகர். நல்முயற்சிகளை மனதாரப் பாராட்டுபவர். 

‘’அண்ணன் இன்னொரு ஐடியா’’

‘’சொல்லுங்க’’

‘’இப்ப நம்ம நாட்டுல ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒரு மரம் மாநில மரமா இருக்கு. கிராமத்துல ஒரு பொது இடத்துல பெருசா இந்திய வரைபடம் மாதிரி உருவாக்கி அதுல ஒவ்வொரு மாநில பகுதியிலும் அந்த மாநிலத்தோட மரத்தை நடலாம் அண்ணன்’’

நண்பருக்கு முழுமையாகப் புரியவில்லை. நான் விளக்கினேன். 

‘’அண்ணன்! இப்ப நாம ஏ-4 பேப்பர் சைஸில இந்தியாவோட மேப்பைப் பாக்கறோம் இல்லையா?’’

''ஆமாம்’’

‘’அதை அறுநூறு மடங்கு பெருசாக்குனா ஒன்றரை கிரவுண்டு ஏரியா வரும். அதுல இந்திய வரைபடத்தை அதோட எல்லைகளை குத்துக்கல்லால உருவாக்கி ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளயும் அதோட மாநில மரத்தை நடலாம். ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் மினிமம் பத்து அடி தூரம் இடைவெளி இருக்கும்.’’

அவர் மனதில் ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொண்டார். 

‘’இப்ப தமிழ்நாட்டோட மாநில மரம் பனை. கேரளாவுக்குத் தென்னை. கர்நாடகாவுக்குச் சந்தனம். மகாராஷ்ட்ராவுக்கு மாமரம். குஜராத்துக்கு ஆலமரம். ராஜஸ்தானுக்கு வன்னி. ஹிமாச்சலுக்குத் தேவதாரு. பீகாருக்கு அரசமரம் இப்படி’’

‘’இந்த ஒன்னரை கிரவுண்டு இடத்தைச் சுத்தி வந்தா இந்தியாவையே சுத்தி வந்த மாதிரி இல்லையா’’

‘’ஆமாம் அண்ணன். அம்மையப்பரைச் சுற்றி வந்து விநாயகர் உலகையே சுற்றி வந்ததாக விளக்கம் சொன்ன மாதிரி’’

‘’பிரபு! எனக்கு ஒரு டவுட்?’’

‘’உங்க சந்தேகம் என்னன்னு எனக்குத் தெரியும். இந்த ஐடியால்லாம்  யோசிச்சு உருவாக்கறதா இல்ல தானா உருவாகிறதாங்கறது தானே?’’

‘’அதே தான்!’’

’’சினிமால ஓப்பன் எண்டிங்னு ஒன்னு உண்டு. கதையோட முடிவை பார்வையாளனே முடிவு செஞ்சுக்கலாம். எப்படி வேணாலும். அது போல நீங்களே முடிவு பண்ணிக்கிங்க’’

கிராமத்துக்கு சென்று இளைஞர்களை - இளைஞர் குழுக்களை - பரிச்சயமானவர்களை எல்லாம் சந்தித்து பணியின் முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தேன். ஆடிப்பெருக்கை ஒட்டி மரம் நடுதலை வைத்துக் கொள்ளலாம் என்று முன்பே கூறியிருந்தேன். ஆடி ஆவணியில் அந்தி மழை பெய்யும். மரங்களின் வளர்ச்சிக்கு அது உகந்தது. மக்களும் அதனை ஆமோதித்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அங்கே இருந்திருப்போம். அவ்வூரில் இருக்கும் எல்லா சீமைக்கருவேல் மரங்களையும் அகற்றி விடுவது என முடிவெடுத்தோம். வீதிகளில் சாலைகளில் எங்கும் பூமரங்கள் இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். உழவர்களுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி தருவது குறித்து பரிசீலித்தோம். கிளம்பும் நேரம் வந்தது. இன்னும் இரண்டு பேரை பார்க்க வேண்டும். ஒருவரை மட்டுமே சிறிது நேரம் பார்க்கலாம். அங்கே சென்றோம்.

அவருக்கு எண்பது வயது. அவரைக் காண்பவர்கள் அவருக்கு அறுபது வயது என்றே நினைப்பார்கள். 

‘’பிரபு! சர்வே எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? மரக்கன்னு எப்ப வருது?’’

‘’ஆடிப் பெருக்கை ஒட்டி பிளான் பண்ணியிருக்கோம் சார்”

‘’அது கரெக்டான டைம் தான்”

‘’சார்! பொது இடங்கள்ல மேக்ஸிமமா மரக்கன்றுகள் வைக்கற மாதிரி யூஸ்ஃபுல்லான ஐடியாஸ் யோசிங்க சார். இப்ப அதை முடிவு பண்றத்துக்கான நேரம். மரக்கன்னு கொண்டு வர்ரது கொஞ்சம் பெரிய ஒர்க். அதுல நான் பிஸியா இருப்பன். அதே நேரத்துல ஒரு சின்ன விஷயம் கூட மிஸ் ஆகக் கூடாது. லோக்கல் சப்போர்ட் முழுமையா வேணும் சார். ரிஸப்ஷன் ரொம்ப நல்லா இருக்கு. இருந்தாலும் இன்னும் பல பேரை வேலைல சேத்துக்கணும்னு நான் நினைக்கறன்.’’

‘’மாயூரத்துக்கும் கிராமத்துக்கும் ஒரு மாசமா போய்ட்டு போய்ட்டு வர்ரீங்களே. ரொம்ப சிரமம் எடுத்துக்கிறீங்க. பாத்துட்டுத்தான் இருக்கன்’’

‘’சிரமம் ஒன்னும் இல்ல சார். சந்தோஷமாத்தான் செய்யறன்.’’

‘’எல்லாம் நல்லபடியா நடக்கும் பிரபு”

‘’தேங்க் யூ சார்’’

எங்களுக்கு மோர் கொடுக்கச் சொன்னார். 

‘’பிரபு! நீங்க எப்ப வேணாலும் இங்க வாங்க. நான் இல்லன்னாலும் மாமி இருப்பாங்க. காஃபி வேணும்னா காஃபி சாப்பிடுங்க. மதிய நேரத்துல சாப்பாடு எப்போதும் இருக்கும். மோர் குடிங்க. உங்க அகம் மாதிரி நினைச்சுக்கங்க’’

‘’உங்கள மாதிரி பெரியவங்க என் மேல காட்டுற அன்பே போதும் சார்’’

பெரியவர் ஒரு கதை சொன்னார்.

‘’எனக்கு ஒரு பெரியப்பா இருந்தார். அவர் எங்கிட்ட சொல்வார். எவனொருவன் மா, பலா, வாழை, ஆல், அரசு, தென்னை, பலா, நெல்லி, வேம்பு, புளி, மூங்கில், சந்தனம், பனை, நாவல், வன்னி, வில்வம், நல்லத்தி முதலான மரங்களை நட்டு வளர்த்து தானும் பலன் பெற்று பிறருக்கும் பயன் பெறத் தருகிறானோ அவன் அஸ்வமேத யாகம் செய்தவன் அடையும் பேறை அடைவான். அவன் மரணத்தை அனாயாசமாகக் கையாளுவான். கடந்து செல்வான்’’

நான் என்னுடைய குறிப்பேட்டில் அவர் சொன்ன மரங்களைக் குறித்துக் கொண்டேன். 

‘’நான் சொன்ன அத்தனை மரத்தையும் அவர் தோட்டத்துல வளர்த்தாரு. எல்லாருக்கும் கொடுத்து சந்தோஷப்பட்டாரு. தானே வளர்த்த நெல்லி மரத்தோட கட்டையையும் சந்தன மரக் கட்டையையும் பரண் மேல அடுக்கி வச்சிருந்தாரு. தன்னோட மரணத்துக்குப் பிறகு தன்னை அந்த மரக்கட்டைகளால் ஆன சிதையில ஏத்தணும்னு சொன்னாரு. அதே போல ஒருநாள் தோட்டத்துல நெல்லி மர நிழல்ல சேர் போட்டு ஒக்காந்திருந்தாரு. நான் வயலுக்குக் கிளம்பறேன்னு அவர்ட்ட சொன்னேன். சாப்டிட்டு போ ; வெறும் வயிறா போகாதேன்னார். சாப்டுட்டு  ஒரு விபரம் கேக்க வந்து பெரியப்பான்னு கூப்படறேன்; உயிர் நின்னுருக்கு. அவர் சொன்ன மாதிரியே மரணத்தை ரொம்ப அனாயாசமாக கையாண்டுட்டுத்தான் போனார், அவர் இறந்த மூணு மணி நேரத்துல அவர் சொன்ன மாதிரியே சிதை ஏத்துனோம்’’

மோட்டார்சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த போது நண்பர் அஸ்வமேத யாகம் என்றால் என்ன என்றார்.


Sunday 14 June 2020

சலனம்

அன்பின் மொழி
கொள்ளும்
நீர்மைக்கு

பணிதலின் முடிவற்ற
வாய்ப்புகளுக்கு

கனிவின்
எல்லையின்மைக்கு

நேயத்தின்
சாத்தியங்களுக்கு

மண்ணில் விழுந்த
பூங்கழலின் கொலுசு மணி ஒன்று
இயற்றும் ஓயாத் தவம்
மகரந்தங்கள் பறக்கும் காற்று
நாணப் புன்னகை
விண் ஏறும் தீ


Friday 12 June 2020

தொடுவானம்

சாலையில்
மென்காற்று
உரசிச் சென்ற போது
வான் நோக்கினாய்
நட்சத்திரங்கள் ஆம் என்றன
நிலவு ஆம் என்றது
புன்னகைத்தன நகரும் மேகங்கள்

Wednesday 10 June 2020

அமிர்தவர்ஷிணி

தீயென
உணர்ந்த போது
தாகம் தணித்துக் கொண்டிருந்தாய்
மாலையில் இல்லாமல்
காலையில் உயிர்த்திருக்கும்
பசுந் தளிர்களாய்
முளைத்துக் கொண்டிருந்தாய்
மீன்களென அசைந்தன
புவியெங்கும் மலர்கள்
கரைந்து கொண்டிருக்கிறது பனிக்கட்டி 

Tuesday 9 June 2020

வங்கிகள் - சில கேள்விகள்

1. கிராமப்புறத்தில் இருக்கும் ஒரு வங்கிக் கிளையை எடுத்துக் கொள்வோம். அதன் வரம்புக்குள் 15 கிராமங்கள் இருக்கக் கூடும். ஏதேனும் ஒரு கிராமத்தில் அக்கிராமத்தில் உள்ள எல்லாருக்கும் ஒரு விடுபடல் கூட இன்றி வங்கிக் கணக்கு துவங்க முயற்சி எடுத்ததுண்டா? 

2. நகர்ப்புறங்களில் இருக்கும் ஒரு வங்கியை எடுத்துக் கொள்வோம். ஏதேனும் ஒரு கல்லூரிக்குச் சென்று அக்கல்லூரியில் இருக்கும் எல்லா மாணவர்களுக்கும் வங்கிக் கணக்கு துவங்க ஏற்பாடு செய்ததுண்டா?

3. வங்கியின் செயல்பாடுகள் மற்றும் இயங்குமுறை குறித்த அறிமுகத்தை பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வங்கிகள் முயற்சி ஏதும் மேற்கொண்டதுண்டா?

4. தங்கள் கிளையைச் சுற்றியிருக்கும் ஊரின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தங்கள் கடமையே என வங்கிகள் உணர்வதுண்டா?

5. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் செயல்படும் வங்கி முறைக்கும் இந்தியாவில் செயல்படும் முறைக்கும் பெரும் வேறுபாடு உண்டு என்பதை வங்கிகள் உணர்ந்திருக்கின்றனவா?

6. அஞ்சல்துறை சேமிப்புக்கு முகவர்கள் உண்டு. ஆயுள் காப்பீட்டுக்கு முகவர்கள் உண்டு. வங்கியின் வாடிக்கையாளரை அதிகப்படுத்த - டெபாசிட் அதிகப்படுத்த சிறிய அளவில் கூட முகவர்கள் இல்லையே. ஏன்?

7. ஏதேனும் ஒரு ஊரின் வீதி வணிகர்கள் முற்றிலும் வங்கியின் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர் என்ற தரவு உண்டா? ஏன் அவ்வாறான பணியை முன்னெடுக்கவில்லை?

8. அரசு ஊழியர்களின் மாத ஊதியம் வங்கிக்கணக்கில் வரவாகும் என அறிவிக்கப்பட்ட பின்னர்தான் பல அரசு ஊழியர்களே வங்கியின் வளையத்துக்குள் வந்தார்கள் என்பது உண்மைதானே?

9. பொதுமக்கள் மத்தியில் வங்கிக்குச் செல்வதற்கு ஒரு தயக்கம் இருப்பது உண்மைதானே? வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர் சேவையை பெரிதாக நினைப்பதில்லை என்பது தான் காரணமா?

10. வாடிக்கையாளரைச் சந்தித்தல் - வாடிக்கையாளர் கூட்டங்களை நடத்துதல் - வாடிக்கையாளர்களுக்கு புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்தல் ஆகிய மக்கள் தொடர்பு பணிகளே தங்களின் அடிப்படை என்பதை வங்கிகள் உணர்கின்றனவா?

Monday 8 June 2020

பிழை ஈடு

சில மாதங்களுக்கு முன், ஒரு சேவை அமைப்பு குறித்து தற்செயலாக அறிய நேர்ந்தது. கல்வித்துறையில் அற்புதமான பணியைச் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சிறு நன்கொடை வழங்க வேண்டும் என எண்ணினேன். 

பாரதியாரின் ‘’அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’ என்ற வரியை அனைவரும் கேட்டிருப்போம். ‘’வெள்ளைத் தாமரை’’ என்ற கவிதையில் பாரதி எழுதிய வரி இது. திரு. மதன் மோகன் மாளவியா அவர்கள் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் உருவாக்கிய போது அதற்காக பாரதியார் எழுதிய பாடல் அது. 

’நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்; நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்’’ என்ற வரியும் அக்கவிதையிலேயே வருகிறது. பாரதி கல்விப் பணியை வாணி பூசனை என்கிறார். அந்த பூசனையில் என்னையும் இணைத்துக் கொள்ள விரும்பி ரூ.500 அனுப்பி வைக்கலாம் என முடிவு செய்தேன். 

மறுநாள் காலை வங்கிக்குச் சென்று ஒரு வரைவோலை எடுத்து அவர்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தேன். என்னுடைய டெபிட் கார்டின் கால அவகாசம் முடிந்திருந்தது. அதை புதுப்பிக்கும் வரை நன்கொடையை தள்ளி வைக்க வேண்டாமே என்று வரைவோலையாக அனுப்பினேன். வரைவோலை எண்ணைக் குறித்துக் கொண்டேன். அஞ்சல் அலுவலகம் சென்று உறையில் அந்த வரைவோலையை வைத்து அனுப்பி விட்டு விபரம் குறிப்பிட்டு அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். 

மூன்று நாட்கள் கழித்து வேறு ஒரு வேலையாக வங்கிக்குச் சென்றேன். அப்போது வரைவோலையின் எண்ணைத் தெரிவித்து அது சம்பந்தப்பட்டவர்களின் கணக்கில் சேர்ந்து விட்டதா என்று கேட்டேன். வரைவோலை எண் இருந்தால் அதனை சோதிக்க இயலும். இன்னும் அந்த வரைவோலை வங்கியில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று சொன்னார்கள். மூன்று நாட்கள் ஆகிறதே; தபால் சென்று சேர்வதில் ஏதும் சிக்கலா? வேறு சிக்கல் ஏதுமா? என்று தவிப்பாயிருந்தது. அவர்கள் பணியில் சிறு அளவில் இணைந்து கொள்ள விரும்பிய என் நோக்கம் நிறைவேறாதது எனக்கு சஞ்சலம் தந்தது. மேலும் நான்கு நாட்கள் ஆனது. வங்கிக்கு ஃபோன் செய்தேன். வரைவோலை எண்ணைக் கூறி கணக்கில் சேர்க்கப்பட்டு விட்டதா என்று கேட்டேன். இன்னும் இல்லை என்றார்கள்.

நான் அந்த அமைப்புக்கு மின்னஞ்சல் செய்தேன். விபரம் கூறி வரைவோலை அவர்களுக்கு வந்ததா என்பதை உறுதி செய்யுமாறு கேட்டேன். இரண்டு நாட்களுக்கு மேல் ஆனது. பதில் இல்லை. எனக்கு ஃபோன் செய்து கேட்க தயக்கமாக இருந்தது. அவர்கள் மகத்தான பணியைச் செய்கிறார்கள். நான் ஒரு சிறிய தொகையை மட்டுமே அனுப்பியிருக்கிறேன். அதை குறித்து மட்டும் எப்படி கேட்பது என தயங்கினேன். மேலும் இரண்டு நாட்கள் ஆனது. தடையை உடைத்து ஃபோன் செய்தேன். அது அந்த அமைப்பின் செயலாளரின் எண். நான் அமைப்பின் பெயரைச் சொன்னதும் அவர் தன்னை அந்த அமைப்பின் செயலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். நான் அவர்கள் பணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் எத்தனை சிறப்பானது என்பதையும் அவர்கள் சேவை நன்றிக்குரியது என்பதையும் தெரிவித்தேன். அவர் மிகவும் பக்குவமானவர். எனக்கு நன்றி தெரிவித்தார். சமீபத்தில் ஆண்டு விழா இருக்கிறது; அதற்கு அவசியம் வாருங்கள் என அழைப்பு விடுத்தார். மிகவும் மகிழ்ந்தேன். சேவை புரிபவர்கள் இயல்பில் சொற்களில் பழக்கத்தில் ஒரு மேலான தன்மையும் பெருந்தன்மையும் இயல்பாக வந்து விடுகிறது. நான் சுருக்கமாக எனது சிக்கலை விளக்கினேன். அவர் பொருளாளரின் எண்ணை அளித்தார். 

‘’வணக்கம். பிரபு பேசுகிறேன். மயிலாடுதுறையிலிருந்து.’’

‘’வணக்கம். ஓ! நீங்கள் தானா அது. நீங்கள் அனுப்பிய டி.டி யை வங்கியில் செலுத்தினோம். அந்த டி.டி.யில் வங்கி மேலாளரின் கையொப்பமில்லை என்று கூறிவிட்டார்கள்.’’

வரைவோலையில் இப்படி ஒரு சிக்கல் இருக்க முடியும் என்பது எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. பொருளாளருக்கும் அப்படியே இருந்திருக்கக் கூடும்.

எனக்கு சட்டென ஒன்று தோன்றியது.

‘’ வங்கியின் கவனக்குறைவால் ஒரு பிழை நிகழ்ந்துள்ளது. நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இன்றைக்கே நான் ரூ.1000 க்கான வங்கி வரைவோலையை எடுத்து அனுப்பி வைக்கிறேன். சிரமத்துக்கு வருந்துகிறேன்’’ என்றேன்.

பொருளாளர் ‘’இந்த டி.டி.யை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.’’ என்றார்.

சரி என்று சம்மதித்தேன்.

உடனடியாக வேறு ஒரு வங்கிக் கிளைக்குச் சென்று ரூ.1000 க்கான வரைவோலையை எடுத்து - வங்கி ஊழியர் மற்றும் மேலாளர் சரியாகக் கையெழுத்திட்டுள்ளனரா என உறுதி செய்து கொண்டு- தபாலில் அனுப்பினேன்.

இரண்டு நாட்களில் பொருளாளரிடமிருந்து ரூ.500 வரைவோலை வந்தது. அதை எடுத்துக் கொண்டு வங்கிக்குச் சென்றேன்.

மேலாளரிடம் கொடுத்தேன். நிகழ்ந்தது அனைத்தையும் சொன்னேன்.

‘’எங்க மிஸ்டேக் தான் சார்.’’

’’கொஞ்சம் கவனமா இருங்க சார். பணம் எப்போதுமே ஹியூமன் எமோஷன்ஸோட குளோஸான தொடர்பு உள்ளது. சந்தோஷம் துக்கம் பெருமிதம் பணிவு பாசம் நீதி நல்லது கெட்டது எல்லாத்துக்குமே பணம் சாட்சியா இருக்கும். ஒரு பேங்க் கஸ்டமர் ஒரு சாரிட்டிக்கு டொனேட் பண்றது ரெகுலர் ரொடீன். அதுல எவ்வளவு டிரபிள் பண்ணிட்டீங்க பாருங்க’’

‘’சாரி சார். இந்த டி.டி யை கேன்சல் செஞ்சுடவா’’

‘’ஏன் கேன்சல் செய்யப் போறீங்க. செஞ்ச தப்பைத் திருத்திக்கீங்க. கையெழுத்துப் போட்டுக் கொடுங்க.’’

மேலாளர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

அன்றே சேவை அமைப்புக்கு மேலாளர் கையெழுத்திட்ட வரைவோலையை அனுப்பி வைத்தேன்.

மூன்று நாட்கள் கழித்து பொருளாளருக்கு ஃபோன் செய்தேன்.

‘’பிரபு! வணக்கம். எப்படி இருக்கீங்க?’’

நான் வரைவோலைகள் குறித்து விசாரித்தேன்.

‘’ரெண்டுமே கணக்குல சேந்துடுச்சு. உங்களுக்கு இப்ப ஹேப்பி தானே?’’

நான் நன்றி தெரிவித்தேன்.

‘’பிரபு! ஒரு டவுட்.’’

கேட்கச் சொன்னேன்.

‘’ நீங்க ரூ.500 முதல்ல அனுப்புனீங்க. அது கணக்குல சேரலை. உடனே ரூ.1000 அனுப்பிட்டீங்க. அப்புறம் அந்த டி.டி யையும் மேனேஜர் கையெழுத்தோட திரும்ப அனுப்புனீங்களே அது ஏன்?

‘’அந்த டி.டி உங்களோட சேவை அமைப்புக்கானதுன்னு முடிவானது. ஒரு பிழையால உங்க கணக்குல சேர தாமதம் ஆனதால பிழைக்கு ஈடா நான் அனுப்பிய தொகை தான் ரூ.1000. அந்த டி.டி திரும்பி வந்தாலும் அது உங்களோடதுதான். அதனால சரி செய்து திருப்பி அனுப்பினேன்.’’

‘’உங்களுக்குத்தான் ரொம்ப சிரமம்’’

பரஸ்பரம் நன்றி கூறி ஃபோனை வைத்தோம்.

எனது நண்பர் ஒருவர் ஊரின் சிறந்த வணிகர். வங்கியொன்றில் எழுபத்து ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். கடனை சரியாக திருப்பிச் செலுத்தி வந்தார். அவருக்கு மேலும் பத்து லட்ச ரூபாய் கடன் தேவைப்பட்டது. முன்னர் கடன் பெற்றிருந்த வங்கியிடம் விண்ணப்பம் செய்தார்.                             

நடையாக நடந்தார். அவருக்கு கடன் மறுக்கிறோம் என்றும் சொல்லவில்லை. கடன் தொகையை அளிக்கவும் இல்லை. மூன்று மாதத்துக்கு மேல் ஆனது. அவர்கள் தாமதம் செய்வதைக் கூட அவர் பெரிதாக நினைக்கவில்லை. ஏன் சரியான பதில் கொடுக்காமல் இருக்கிறார்கள் என என்னிடம் வருத்தப்பட்டார். 

அப்போது அவர் நிறுவனத்துக்கு அருகாமையில் இருக்கும் வங்கியின் மேலாளர் மாறுதலாகிப் பணியில் சேர்ந்திருந்தார். அவர் வங்கிக்கு அருகில் இருக்கும் பெரிய நிறுவனமாயிற்றே என்று மரியாதை நிமித்தம் சந்திக்க வந்தார். அப்போது நானும் அங்கிருந்தேன். நண்பர் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் ஏற்பட்ட அனுபவத்தை நான் சொன்னேன். உங்கள் நிறுவன ஐ.டி ரிடர்ன் பார்க்கலாமா என்றார். நண்பர் தந்தார். பேங்க் ஸ்டேட்மெண்ட் இருக்கிறதா என்று கேட்டார். ஃபைல் அவரிடம் தரப்பட்டது. தலைமை அலுவலகத்துக்கு ஃபோனில் பேசினார். உங்கள் கடனை எங்கள் வங்கிக்கு மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் டர்ன் ஓவருக்கு ஒரு கோடி வரை எளிதாகக் கடன் தரலாம் என்றார். இரண்டுமே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள். 

நண்பருக்குத் தயக்கம். மேலாளரிடம் நன்றி கூறி அனுப்பி வைத்து விட்டு என்னிடம் ஆலோசித்தார்.

‘’பிரபு! இப்ப இருக்கற வங்கியில சில அசௌகர்யங்கள் இருக்கு. உண்மைதான். இருந்தாலும் ரொம்ப நாள் பழக்கம் இல்லையா? மனசு சங்கடமா இருக்கு.’’

‘’சார்! இந்த மேனேஜரை இன்னைக்குத் தான் சந்திக்கிறோம். நம்ம இடத்துக்கு அவர் வந்திருக்கார். நம்ம பேப்பர்ஸ் வைச்சு நம்ம டர்ன் ஓவர் வச்சு எவ்வளவு லோன் தர முடியும்னு சொல்றார். நாம எதிர்பார்க்கிற லோனுக்கு மேலேயே தர்ரார். பழைய பேங்க்-ல ஆஃபர் பண்ற ரேட் ஆஃப் இண்ட்ரஸ்ட் விட குறைவா தர்ரார். இதை நாம ஏத்துக்கலனைன்னா நாம ஒரு தப்பு இல்ல; ரெண்டு தப்பு பண்றோம். முதல் விஷயம் புறக்கணிக்க வேண்டிய ஒன்னை சப்போர்ட் பண்றோம். ரெண்டாவது, சப்போர்ட் பண்ண வேண்டிய ஒன்னை புறக்கணிக்கிறோம்.’’

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் 

என்ற திருக்குறளை அவரிடம் சொன்னேன்.

அன்றே புதிய வங்கிக்குச் சென்று கடன் விண்ணப்பம் பெற்று பழைய வங்கியில் பெற்றிருக்கும் கடன் விபரத்தைக் குறிப்பிட்டு தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பித்தோம். அவர் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பினார். ஒரு வாரத்தில் ஒப்புதல் வந்தது. பழைய வங்கிக்கு ஃபோன் செய்து கடன் நிலுவைத் தொகை எவ்வளவு என்றோம். தொகையைச் சொன்னார்கள். புதிய வங்கியிடம் அந்த தொகையைக் கூறினோம். அத்தொகைக்கு ஒரு காசோலை வழங்கி விட்டார்கள். நிறுவனத்தின் ஊழியர் ஒருவரை அனுப்பி அக்காசோலையை பழைய வங்கியின் கடன் கணக்கில் செலுத்தி விட்டு வரச் சொன்னோம். தொகை பெரிது என்பதாலும் முழுமையாகக் கடன் தீர்க்கப்படுகிறது என்பதாலும் காசாளர் காசோலை விபரத்தை மேலாளரிடம் தெரிவித்திருக்கிறார். மேலாளர் அலறியடித்து ஃபோன் செய்தார். 

ஃபோனை எடுத்து நண்பர் காலை வணக்கம் சொல்லி நிறுவனத்தின் பெயரைச் சொன்னார்.

‘’நான் மேனேஜர் பேசறன்’’

‘’சொல்லுங்க சார்’’

‘’ஏன் லோன் குளோஸ் பண்றீங்க’’

‘’நான் எதிர்பார்த்த லோனை விட அதிகமாவும் குறைவான ரேட் ஆஃப் இண்ட்ரஸ்டலயும் எங்களுக்கு இன்னொரு லோன் கிடைச்சிருக்கு’’

‘’இவ்வளவு பெரிய லோன் ஏன் குளோஸ் ஆகி இன்னொரு பேங்குக்கு போகுதுன்னு ஹெட் ஆஃபிஸ்ல கேப்பாங்க”

‘’அவங்களுக்கு நடந்ததைச் சொல்லுங்க’’

‘’உங்களை நேரில் பாக்க இப்ப வரலாமா?’’

‘’யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் சார்’’

மேலாளர் இரண்டு துணை மேலாளர்களை அழைத்துக் கொண்டு நிறுவனத்துக்கு வந்தார். நாங்கள் ஒரு பணியாளரை அனுப்பி நகரின் சிறந்த கடையிலிருந்து தேனீரை ஃபிளாஸ்கில் வாங்கி வைத்திருந்தோம். மேலாளர்களுக்குத் தேனீர் பறிமாறினோம். 

‘’ஹெட் ஆஃபிஸ்ல கேள்வி மேல கேள்வி கேப்பாங்க”

நண்பர் பொறுமையாகப் பதில் சொன்னார்.

‘’எனக்கு லோன் அவசரமா வேணும் சார். நூறு நாளைக்கு மேல நான் வெயிட் பண்ணிட்டேன். ஏன் தாமதம் ஆகுதுன்னு காரணமாவது சொல்லியிருக்கலாம்.’’

‘’நான் ஸோனல் மேனேஜர் கிட்ட பேசறன். அவங்க கொடுக்கற ரேட் ஆஃப் இண்ட்ரஸ்ட்ல அவங்க சாங்ஷன் பண்ற தொகையை தர்ரேன்.’’

‘’சார்! புது பேங்க்-ல ஒரு வாரத்துல செக் கொடுத்துட்டாங்க. அது உறுதிப்படுத்தப்பட்ட ஒண்ணு. நீங்க கொடுக்கறது வாக்குறுதி. இந்த ரெண்டுல எதை தேர்ந்தெடுக்கறது. நீங்களே சொல்லுங்க. 'Known Devil is better than Unknown Angel' இல்லையா?’’

மேலாளர் குழு திரும்பிச் சென்றது. 

அரை மணி நேரத்தில் காசோலை வரவு வைக்கப்பட்ட விபரம் நண்பரின் அலைபேசிக்கு வந்தது. நண்பர் புதிய வங்கி மேலாளருக்கு ஃபோன் செய்தார்.

Sunday 7 June 2020

எனது படைப்புகள்

2016ம் ஆண்டு மயிலாடுதுறையிலிருந்து ரிஷிகேஷ் வரை 22 நாட்கள் மோட்டார்சைக்கிளில் பயணித்தேன். அப்பயணம் குறித்த  பயணக் கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. அதன் இணைப்பு

காவிரியிலிருந்து கங்கை வரை - பகுதி 1

அதன் இரண்டாம் பகுதியின் இணைப்பு

ஹம்பி - நிலவைக் காட்டும் விரல்

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதைகள்

லீலாவதி


புள்ளரையன் கோவில்


ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள்


காத்திருப்பு


நாகரிகம்


துவக்கம்


வசந்த மண்டபம்


விடை


இரு பள்ளிகள்

சொல்வனம் இதழில் எழுதும் ‘’யானை பிழைத்தவேல்’’ கம்பராமாயணத் தொடரின் கட்டுரைகள் இணைப்பு

யானை பிழைத்தவேல் - பகுதி 1

யானை பிழைத்தவேல் - பகுதி 2

யானை பிழைத்தவேல் - பகுதி 3

யானை பிழைத்தவேல் - பகுதி 4

யானை பிழைத்தவேல் - பகுதி 5

ஜெயமோகன் இணையதளத்தில் வெளியான எனது கட்டுரைகள் & கடிதங்கள்


சுப்பு ரெட்டியார்


வேங்கடத்துக்கு அப்பால்


நமது ஊற்றுக்கள்


கண்ணீரும் வாழ்வும்


வீரப்ப வேட்டை


கிருஷ்ணப்பருந்து


நீரெனில் கடல்


அந்தரப்பந்துகளின் உலகு


உற்சாகமான பார்வையாளன்


சுழித்து நுரைக்கும் வாழ்க்கை


பங்கர் ராய் - வெறும் பாதக் கல்லூரி


காவேரி - வெள்ளமும் வறட்சியும்


கெடிலக்கரை நாகரிகம்


படைப்பாளியைப் படைக்கலனுடன் சந்திப்பவர்களுக்கு


அஞ்சலி : செழியன்


 சித்தாந்தத்தால் மனம் நிரம்பியிருக்கும் நண்பனுக்கு


ஜனனி


மறைந்த தோழன்


சொன்னால் வெட்கப்பட வேண்டும்


காத்தல்

சொல்வனம் இதழில் வெளியான எனது கட்டுரைகளின் இணைப்பு :

யாமறிந்த புலவரிலே

புனைதலும் கலைதலும்

இறுதி அஞ்சலி : ஆ ப ஜெ அப்துல் கலாம்

Tuesday 2 June 2020

காவிரி போற்றுதும்


அன்னம் பஹு குர்வித:
-தைத்ரீய உபநிஷத்

இன்றும் காவிரி வடிநில மாவட்டங்களின் (காவிரி டெல்டா) முக்கியமான தொழில் விவசாயமே. லட்சக்கணக்கான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். இங்கு நிகழும் அனைத்து வணிகங்களுக்குமான நுகர்வோர் விவசாயிகளே. அதாவது அவர்களின் வருவாயையும் உபரி வருவாயையும் கொண்டே எல்லா வணிகங்களும் லாபமீட்டுகின்றன. இங்கே விவசாயம் லாபமான தொழிலாக இருக்கிறதா என்ற கேள்விக்கு ‘’அப்படி கூறி விட முடியாது’’ என்பதே பதிலாக இருக்கிறது. எனக்கு எந்த பகுதியின் சமூகவியல் பொருளியல் செயல்பாடுகள் மீதும் ஆர்வமும் கவனமும் உண்டு. எல்லா பண்பாடுகளின் மீதும் ஆர்வம் உண்டு. சமூக மாற்றத்துக்கான செயல்களைப் புரிய வேண்டும் என்ற விருப்பமும் காந்திய வழிமுறைகளின் மீது நம்பிக்கையும் உண்டு.

நான் எப்போதுமே ஏதேனும் ஆக்கபூர்வமான சமூகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவேன். என்னால் இயன்ற சிறு பணிகளை அவ்வப்போது செய்வேன்.

சமீபத்தில் நண்பர்கள் சிலர், ஒரு குழுவாக இணைந்து சில சமூகச் செயல்பாடுகளை முன்னெடுக்க விரும்பினர். அதற்கு எனது ஆலோசனைகளைக் கேட்டனர். அவர்களில் சிலர் பொறியாளர்கள். சிலர் வணிகர்கள். சிலர் விவசாயிகள். அக்குழுவுக்குள் ஒருங்கிணைப்பு இருந்தது. நான் என் யோசனைகளை முன்வைத்தேன். அவர்கள் செயல்களில் துணை புரிந்தேன். எங்கள் குழுவுக்கு ’’காவிரி போற்றுதும்’’ என்று பெயரிட்டோம்.

சிலப்பதிகாரம், ‘’திங்களைப் போற்றுதும்’’ என்று துவங்குகிறது. இளங்கோ அடிகள் நிலவைப் பெண்மைக்கான – நீதி உணர்வுக்கான – குறியீடாக ஆக்கி அதனை குடிமக்கள் காப்பியத்தின் முதல் சொல்லாக்கினார். அதிலிருந்து ‘’போற்றுதும்’’ என்ற சொல்லையும் காவிரியையும் இணைத்து ’’காவிரி போற்றுதும்’’ என்று பெயரிட்டோம்.

எங்கள் ஊரைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் இருக்கும் கல்வி பயிலும் இளைஞர்களைச் சந்தித்து அவர்களிடம் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வை உருவாக்குவதும் அவர்களை அவர்கள் கிராமத்தில் அவர்கள் செய்யக்கூடிய செயல்பாடுகளைச் செய்வதற்கான ஊக்கத்தை அளிப்பதும் அவர்கள் செயல்களுக்கு அவர்களுக்கு கிராமத்திற்கு வெளியிலிருந்து ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அதனை ஏற்பாடு செய்து கொடுப்பதும் எங்கள் பணிகள் என வரையறுத்துக் கொண்டோம்.

பொதுவாக சமூகப் பணிகள் ஆற்றுவதில் திட்டமிடலும் திட்டமிடலுக்குப் பின் படிப்படியாக செயல்களில் முன்னேறிச் செல்வதும் அவசியமானது. சமூகப் பணி சமூகம் பற்றி நாம் மேலும் புரிந்து கொள்வதற்கான இன்னொரு வாய்ப்பே. நாம் எண்ணுவது எண்ணியவாறே நடக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது; ஆனால் எண்ணியதை எண்ணியவாறு நிறைவேற்றுவதற்குத் தேவையான உழைப்பையும் நேரத்தையும் கொடுப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். சரியான பாதையில், மிக மெதுவாக முன்னகர்ந்தால் கூட  எண்ணியதை எய்தி விடலாம்.

அருகாமையில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்றேன். இளைஞர்கள் ஒரு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் உரையாடினேன். எங்கள் நோக்கங்களைச் சொன்னேன். அவர்கள் ஆர்வமாயிருப்பதை அறிந்து கொண்டேன். அவர்களிடம் ஒரு விஷயத்தை முன்வைத்தேன்.

நமது மண் பலவகையான தாவர வகைகள் வளரும் இயல்பு கொண்டது. மண்ணில் வேரூன்றி விண் நோக்கி வளர்ந்தவாறிருக்கும் விருட்சத்தை தெய்வ வடிவமாகவே வழிபடும் மரபு நம்முடையது. இன்றும் நம் கிராமங்களில் ஆலமரமும் அரசமரமும் இருக்கிறது. அவை உயிர் ஆலயங்கள். ஒவ்வொன்றும் ஐம்பது வருடம், அறுபது வருடம் ஆனவை. இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் நடப்பட்டவை. நம் தலைமுறையில், கிராமத்தில் ஒரு சிலரேனும் ஆல், அரசு, வில்வம், கொன்றை, வன்னி ஆகிய மரங்களை பொது இடங்களில் நட்டு பராமரிக்க வேண்டும். ஒருபுறம், சிவனை நாம் கொன்றை மலர் சூடியவன் என வணங்குகிறோம். நமது மொழி இலக்கியங்கள் இறைமையை இயற்கையின் இனிய தன்மை கொண்டதாக முன்வைக்கின்றன. அந்த மரபின் தொடர்ச்சியாக நம்மை உணர கிராமங்களில் விருட்சங்கள் பொது இடங்களில் நடப்பட வேண்டும். மரத்தின் நிழலில் அமரும் மனிதன் வாழ்வின் மீது நம்பிக்கை கொள்கிறான். பட்சிகள் சிலம்பும் ஒலி வாழ்வை இனிமையாக்குகிறது. பட்சிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயத்துக்கு உதவுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக நீடித்திருக்கும் மரபின் வாரிசுகளான நாம் நமது பங்களிப்பை ஆற்ற வேண்டும். இந்த விஷயங்களை அவர்களிடம் கூறினேன். அவர்கள் அதனை ஏற்றனர். எந்த நல்ல விஷயத்தையும் சமூகம் வரவேற்கிறது என்பது ஓர் உண்மை.

இந்த விஷயம் உண்மையில் நூதனமானது. மண்ணிலும் நீரிலும் நாள் முழுதும் நிறைந்து பொழுதெல்லாம் விவசாயம் செய்பவர்கள் விவசாயிகள். அவர்களுக்கு மரம் நடுவதைப் பற்றி நகரத்திலிருந்து சென்ற ஒருவர் எடுத்துக் கூறுவது என்பதில் உள்ள முரண் அந்த விஷயத்தைப் பற்றி மேலும் யோசிக்கச் செய்தது. அதற்கான காரணத்தைக் கண்டடைந்தேன். இப்பகுதியின் விவசாயிகள் நெற்பயிர் வேளாண்மைக்குப் பழகியவர்கள். பெரும்பாலானோர் இரண்டு போகம் பயிரிடுகிறார்கள். இப்போதெல்லாம் மூன்று போகம் என்பது அபூர்வம். உழவு, நாற்றங்கால் உருவாக்குதல், நடவு, களையெடுத்தல், நீர் பாய்ச்சுதல் மற்றும் அறுவடை என நூறு நாட்கள் ஒரு போகத்துக்கு வேலை இருக்கும். இன்னும் சரியாகச் சொன்னால், நூறு நாட்களில் முதல் முப்பது நாட்களுக்கு முழு நேரமாகவும் பின்னர் குறைவான நேரமும் அளிப்பதாக இருக்கும். வருடத்தின் 365 நாட்களில் கணிசமான நாட்கள் வேலையில்லாமல் இருக்கும். உளுந்து பயிர் நெல் அறுவடையை ஒட்டி விதைத்து விட்டு பெரிய பராமரிப்புகள் ஏதும் இன்றி அறுவடை செய்யக் கூடியது. நெல், உளுந்து என்பதே இப்பிராந்தியத்திய விவசாயத்தின் பொது மனநிலை. அறுவடை முடிந்த பின்னர், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்து விட்டு அடுத்த போகத்துக்கான பணியைத் துவங்கும் வரை எந்த விதமான பணியிலும் ஈடுபடாமல் இருப்பது என்பதே அவர்களின் வழமையாகி விட்டது.

கிராமத்தின் மக்கள்தொகையில் மிகப் பெரும் பகுதி விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களுமே. அவர்கள் ஈட்டும் வருமானத்தை நகர்ப்பகுதிகளில் உள்ள வணிக அங்காடியில் செலவு செய்து விடுகின்றனர். நகர்ப்பகுதியிலிருந்து கிராமத்துக்கு வரும் செல்வம் என்பது ஒப்பீட்டளவில் மிகக் குறைவே. கொங்கு மண்டலம் மஞ்சள் பயிரிடுவதன் மூலம் –பருத்தி பயிரிடுவதன் மூலம் – பணப்பயிர்கள் பயிரிடுவதன் மூலம் தன்னை வலுவான விவசாயப் பகுதியாக மாற்றிக் கொண்டுள்ளது.

கிராமங்களிலேயே இந்தியாவின் ஆன்மா உறைந்துள்ளது என்றார் மகாத்மா காந்தி. இந்திய நிலத்தில் பயணித்த ஒரு மோட்டார்சைக்கிள் பயணியாக நான் அதனை உணர்ந்திருக்கிறேன். இந்தியா மாற்றம் பெற வேண்டும் எனில் அம்மாற்றத்துக்கான பணி இந்திய கிராமங்களிலேயே நிகழ வேண்டும். ஒரு இந்திய கிராமத்தில் செயலாக்கப்படும் அல்லது நிகழ்த்தப்படும் அல்லது செய்யப்படும் சோதனை எல்லா இந்திய கிராமங்களுக்கும் பொருந்தும் என்பது ஒரு நடைமுறை உண்மை.

’’காவிரி போற்றுதும்’’ நண்பர்கள் கூடி எவ்விதமான பணிகளை முன்னெடுக்கலாம் என்று சிந்தித்தோம். விவாதித்தோம். அவற்றின் விளைவாக சில செயல்களை முன்னெடுக்க முடிவு செய்தோம். நண்பர்களில் சிலர் பொறியாளர்கள். சிலர் வணிகர்கள். சிலர் விவசாயிகள். இணைந்து செயல்படுவதற்கான ஒருங்கிணைப்பை உருவாக்கிக் கொண்டோம். எவ்விதமான சமூகப் பணியும் ஒருங்கிணைப்பைக் கோரும் என்பது ஒரு முக்கியமான புரிதல். பல விதமான பணிகள் இருக்கின்றன. நாம் எவ்விதமான பணிகளை மேற்கொள்ள உள்ளோம்; அதற்கு எவ்விதமான வேலை முறை உபயோகமாக இருக்கும் என்று முடிவு செய்து கொள்வது அவசியம் என்பதை நண்பர்களுக்கு விளக்கினேன்.

காந்திய வழிமுறைகளில் ஒன்றான ‘’நுண் செயல்பாடு’’ என்பதை எங்களுக்கான வழிமுறையாக ஏற்றோம். நுண் செயல்பாடு அளவில் சிறியது. எனினும் பெருவலு கொண்டது. செயல்பாட்டாளர்களினுள்ளும் விரிவான புரிதலையும் ஆழமான ஈடுபாட்டையும் உருவாக்கக் கூடியது. ’’உருள் பெருந்தேரின் அச்சாணி’’ போன்றது.

கிராமங்களில் உள்ள பொது இடங்களில் மரக்கன்றுகள் நடுவது என்பதை எங்கள் செயல்பாடாகத் தேர்ந்தெடுத்தோம். ஒரு கிராமத்தில் 6 லிருந்து 7 தெருக்கள் இருக்கும். அதிகபட்சம் 250 மரக்கன்றுகள் வரை நட முடியும். ஆடு மாடுகள் மேயாமல் இருக்க அவற்றுக்கு நாமே வேலி அமைத்துக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். செய்யக்கூடிய எளிய பணியைத் தான் திட்டமிட்டிருந்தோம் என்றாலும் எனது மனம் முழு நிறைவடையவில்லை. நான் அது குறித்து எப்போதும் யோசித்தவண்ணம் இருந்தேன். விவசாயிகள் தங்கள் ஆயுள் முழுவதும் பயிரை வளர்ப்பதில் ஈடுபட்டிருப்பவர்கள்; மரம் செடி கொடிகளுக்கு மத்தியிலேயே எப்போதும் இருப்பவர்கள்; எங்கள் சிறிய குழுவுக்கு இது திருப்தியளிக்கும் பணி என்றாலும் மேலும் பெரிய அளவில் அந்த கிராமத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உறுதியாக இருந்தது. அப்போது என் மனத்தில் புதிதாக ஓர் எண்ணம் உதித்தது. எங்கள் குழுவின் நோக்கம் மரம் வளர்ப்பது; அது பொது இடத்தில் இருந்தால் என்ன அல்லது விவசாயிகளின் வீட்டுத் தோட்டத்தில் இருந்தால் என்ன என்று யோசித்தேன். பயன் தரக்கூடிய மரக்கன்றுகளை விவசாயிகளிடம் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் நட்டுக் கொள்ளுமாறு வழங்கி விடலாம்; மரத்தை ஆர்வத்துடன் அவர்கள் பராமரிப்பார்கள். நம்மாலும் ஒரு கிராமத்துக்கு பெரிய எண்ணிக்கையில் மரக்கன்றுகளை வழங்க முடியும் என எண்ணினேன். விவசாயியான எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து அவர் வீட்டுத் தோட்டத்தின் பரப்பளவு என்ன என்று கேட்டேன். 10,000 சதுர அடி என்றார். உங்கள் வீட்டுத் தோட்டத்தில் எத்தனை மரங்கள் உள்ளன என்று கேட்டேன். நான்கு வாழைமரங்கள் உள்ளன என்றார். அவர் தோட்டத்தின் பரப்பளவுக்கு கிட்டத்தட்ட நூறு மரங்கள் நட்டு வளர்க்க முடியும். மழைக்காலத்தில் நட்டால் பருவமழை பொழியும் நான்கு மாதங்களுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் கூட இருக்காது. தானாக வளர்ந்து விடும். அதன் பின் கோடையில் கூட தன் பாட்டை தான் பார்த்துக் கொள்ளும். கிராமத்தில் மற்ற வீடுகளில் அதிக அளவில் மரம் நட்டிருப்பார்களா என்று கேட்டேன். ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் இப்படித்தான் என்றார். ஒரு கிராமத்தில் 400 வீடுகள் இருக்கும் எனில் ஒரு வீட்டுக்கு 10 மரக்கன்றுகள் வழங்கினால் மொத்தம் 4000 மரக்கன்றுகளை அக்கிராமத்துக்கு வழங்க முடியும் என்பது எங்களுக்கு பேரார்வம் அளித்தது. 250 என்ற சிறிய எண்ணிக்கையிலிருந்து 4250 என்ற சற்றே பெரிய எண்ணிக்கைக்கு எங்கள் திட்டமிடல் சென்றது எங்களுக்கு உற்சாகம் தந்தது. என் மனம் மட்டும் இன்னும் ஏதோ இருக்கிறது என்பதைக் கூறியவாறு இருந்தது. நான் யோசித்துக் கொண்டேயிருந்தேன். ஒரு வருவாய் கிராமத்தின் பரப்பளவு சராசரியாக 1000 ஏக்கர். அதில் விளைநிலம் 500 ஏக்கர் இருக்கும். அதன் வரப்புகளில் அடர்ந்து வளராது உயரமாக வளரும் மரக்கன்றுகளை குறைந்தபட்சம் ஏக்கருக்கு 40 என்ற எண்ணிக்கையில் நட முடியும். இருவருக்கு பொதுவாக இருக்கும் வரப்பில் நடத் தேவையில்லை; ஒருவரின் சொந்த நிலத்தின் உள்வரப்பில் நட்டுக் கொண்டாலே போதும்; 500 ஏக்கர் நிலத்தின் வரப்புகளில் 20,000 மரக்கன்றுகளை நட முடியும். எங்கள் எண்ணிக்கை 24,250 க்குச் சென்றது. மியாவாக்கி என்ற ஜப்பானிய முறை ஒன்று உள்ளது. அரை ஏக்கர் பரப்பளவில் இரண்டடிக்கு இரண்டடி என்ற இடைவெளியில் அடர்த்தியாக பல்வேறு மரங்களை நட்டு பராமரிக்கும் முறை அது. அரை ஏக்கர் பரப்பளவில் 5000 மரக்கன்றுகள் நட முடியும். அதனையும் சேர்த்த போது மொத்த எண்ணிக்கை 29,250 ஆனது. 250லிருந்து 29,250. கிட்டத்தட்ட நூறு மடங்கு. நண்பர்கள் உற்சாகமானார்கள். இந்த எண்ணிக்கையை ஒரு கிராமத்தில் செயல்படுத்துவோம் என்றார்கள். நான் செயலாக்கத்துக்கான வழிமுறைகளை யோசிக்கலானேன்.

நாங்கள் விவாதித்து உருவாகிய வழிமுறைகள்:

1. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களிடம் விஷயத்தை எடுத்துரைக்க வேண்டும்.

2. அவர்கள் கேட்கும் மரக்கன்றுகளை வழங்க வேண்டும். அவர்கள் கேட்கும் எண்ணிக்கையில் அளிக்க வேண்டும்.

3. ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்படும் எல்லா மரக்கன்றுகளும் நடப்பட வேண்டும்.

4. சொந்தமாக தரப்படும் மரக்கன்றுகளையும் பொது இடங்களில் நடப்படும் மரக்கன்றுகளையும் நல்ல முறையில் பராமரிப்போம் என்ற சொல்லுறுதியை கிராமத்தினர் அனைவரிடமும் பெற வேண்டும்.

5. அவர்கள் கேட்ட மரக்கன்றுகளை அவர்கள் வீட்டுக்கே கொண்டு சென்று வழங்க வேண்டும்.

6. மரம் வளர்ப்பதில் அவர்களுக்கு வல்லுனர்களின் ஆலோசனை தேவைப்பட்டால் அதை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

7. நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகள், பள்ளி, கோவில் என வாய்ப்புள்ள அத்தனை இடங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். எந்த விடுபடலும் இருக்கக் கூடாது.

கள ஆய்வு

வேளாண்மையில் ஆர்வம் உடைய விவசாயிகள் சிலர் எனது நண்பர்கள். அவர்களிடம் இது குறித்து விவாதித்தேன். அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். கிராமத்தில் ஒவ்வொரு குடும்பமாகச் சென்று கணக்கெடுக்கும் பணியை நான் மேற்கொண்டேன். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எங்கள் குழு குறித்து சொல்லி மரக்கன்றுகள் நடுதலை ஒரு சமூகச் செயல்பாடாக மேற்கொள்கிறோம்; உங்களுக்குத் தேவையான எத்தனை மரக்கன்றுகள் வேண்டுமானாலும் வழங்குகிறோம்; இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு எங்கள் நோக்கம் சிறப்பாக நிறைவேற உதவுங்கள் என்று கேட்டு அவர்கள் கூறிய மரக்கன்றுகளையும் எண்ணிக்கையையும் குறித்துக் கொண்டேன். கிராம மக்கள் பேரார்வத்துடன் பெரும் வரவேற்பு அளித்தனர். சிலர் சில ஐயங்களை எழுப்பினர். அவர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு நான் அளித்த விளக்கங்களும்:

1. நீங்கள் யார்? உங்கள் தொழில் என்ன? உங்கள் நண்பர்கள் யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?
எனது பெயர் பிரபு. மயிலாடுதுறையில் வசிக்கிறேன். எனது தொழில் கட்டிட கட்டுமானம். எனது நண்பர்களும் மயிலாடுதுறையில் வசிக்கிறார்கள். சிலர் பொறியாளர்கள். சிலர் வணிகர்கள். சிலர் விவசாயிகள்.

2. நீங்கள் ஏன் எங்களுக்கு மரக்கன்றுகள் வழங்க வேண்டும்?
மரம் வளர்த்தலை ஒரு சமூகச் செயல்பாடாகவும் பண்பாட்டுச் செயல்பாடாகவும் நாங்கள் காண்கிறோம். உங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி அம்மரங்கள் வளர்வதால் நிகழும் நன்மைகளுக்காக நாங்கள் இதனைச் செய்கிறோம்.

3. இதனால் உங்களுக்கு என்ன லாபம்?
இதனால் சமூகம் பயன் பெறும். அதுவே எங்கள் நோக்கம். எங்களுக்குத் தனிப்பட்ட லாபம் ஏதும் இதில் இல்லை.

4. மரக்கன்றுகள் தரும் போது பணம் கேட்பீர்களா?
எங்களுக்கு நீங்கள் எந்த பணமும் தர வேண்டாம். வழங்கப்படும் மரக்கன்றுகளை நல்லவிதமாகப் பராமரித்து வளர்த்துக் கொண்டாலே போதும்.

5. மரக்கன்றுகள் வளர்ந்து பயன் தரும் போது உரிமை கோருவீர்களா?
எப்போதும் எந்த விதமான உரிமையும் கோர மாட்டோம். எங்களுக்கு சுற்றுச்சூழலுக்கும் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும் உதவும் விதத்தில் மரக்கன்றுகளை அதிக அளவில் நட ஆசை. பொது இடத்தில் இருப்பதை விட தேவைப்படும் விவசாயிகளின் தோட்டத்திலோ அல்லது வயலிலோ இருந்தால் சிறப்பான பராமரிப்பு அவற்றுக்குக் கிடைக்கும் என்பதால் இவ்வாறு செயல்படுகிறோம். உங்களுக்கும் பலன் ; சமூகத்துக்கும் பலன். இதுவே எங்கள் நோக்கம். மரக்கன்றுக்கு சாலையில் வளர்கிறோமோ அல்லது தோட்டத்தில் வளர்கிறோமோ என்ற பேதம் இல்லை. சாலையில் இருப்பதை விட தனிப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அது பயன்படும் எனில் எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியே.

கள ஆய்வின் போது நாங்கள் விவசாயிகளின் பரிசீலனைக்கு முன்வைத்த சில யோசனைகள்:

1. ஒரு கிராமத்தில் 400 வீடுகள் இருக்கிறது என எடுத்துக் கொள்வோம். இப்போது 10லிருந்து 15 வீடுகளில் எலுமிச்சை மரம் இருக்கக் கூடும். அதில் உருவாகும் பழங்கள் கிராமத்துக்குள் அவர்கள் அண்டை வீட்டாருக்குள்ளும் நண்பர்களுக்குள்ளும் உறவினர்களுக்குள்ளும் பகிரப்படும். 400 வீட்டிலும் ஒரு எலுமிச்சை மரம் இருக்குமாயின் அவை ஒவ்வொன்றும் ஆண்டுக்கு சீசனில் 300 பழங்கள் காய்க்குமெனில் அக்கிராமத்தில் 1,20,000 பழங்கள் உற்பத்தியாகும். அக்கிராமத்திலேயே இருக்கும் ஒருவர் அருகில் இருக்கும் பெரிய சந்தை ஒன்றில் விற்பனை செய்ய முடியும். ஆநிரைகளுக்கு தீவனமாகும் மர வகைகள் ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கப்படும் போது அதன் உற்பத்தி ஊரின் பசுந்தீவனத் தேவையில் பெருமளவை பூர்த்தி செய்யும். மலர் மரங்கள் மூலம் சேகரமாகும் மலர்களை ஆலயங்களில் மாலைகளாக விற்பனை செய்ய முடியும்.
 
2. ஒரு ஏக்கர் நிலம் உள்ள ஒருவர் தன் உள் வரப்பில் 40 தேக்கு மரக்கன்றுகள் நடுவாரெனில் 15 ஆண்டுகளில் அவர் அதன் மூலம் ரூ.20,00,000 வருமானம் பெறுவார். இது அவர் அந்த ஒரு ஏக்கர் பரப்பில் 15 ஆண்டுகளாக இரண்டு போகம் நெல் பயிரிட்டு அடையும் வருமானத்தை விட அதிகம்.

3. இவற்றை எல்லா விவசாயிகளும் பலமுறை சிந்தித்திருப்பார்கள். பெரிய லாபம் இல்லாத ஒரு விஷயத்தை மீள மீளச் செய்வதன் சோர்வால் அவர்கள் ஆர்வம் குன்றியிருக்கின்றனர். ஒரு வெளிப்புற ஆர்வத்தை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களை அவர்கள் நன்மைக்காக அவர்களாக செயல் புரியும் ஒரு வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

4. இவற்றுடன் மரம் நடுவதால் நிகழும் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பலன்கள் எப்போதும் இருக்கவே செய்கின்றன.

5. தமிழ்நாட்டின் சராசரி மழைப்பொழிவைப் பயன்படுத்தி ஒரு கிராமத்தில் இத்தனை மரங்களை வளர்த்து விட முடியும். ஆவணி மாதத்தை ஒட்டி நடப்படும் கன்றுகள் அந்த ஆண்டின் பருவமழையைப் பயன்படுத்தியே வேர் பிடித்து நிலை பெற்று விடும். அதன் பின் தன் வளர்ச்சியைத் தானே பார்த்துக் கொள்ளும். அந்த சாத்தியத்தைப் பயன்படுத்திக் கொள்வது நம் கடமை.

6. ஒரே நாளில் ஊரின் எல்லா குடும்பங்களும் ஒரே நேரத்தில் மரம் நடுதல் என்பது மிக முக்கியமான ஒரு பண்பாட்டுச் செயல்பாடாக ஆகும். அக்கிராமத்தின் வரலாற்றில் அது ஒரு மிக முக்கிய நிகழ்வாக ஆகும்.

இந்தியாவுக்கென ஒரு பாரம்பர்யமான வாழ்க்கை முறை பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. இம்முறையில் சமூகத்தில் அனைத்து பிரிவினருக்குமான இடமும் நீதியும் உறுதி செய்யப்படுகிறது. முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பு அனைவருக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. வெவ்வேறு விதமான வெளிப்புறத் தாக்குதலுக்கு ஆளான பின்னரும் இந்தியா தன்னை தகவமைத்துக் கொண்டு எழுந்துள்ளது. இந்தியா தன் பண்பாட்டுக் கூறுகளை மீட்டு எழுவது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல; ஒட்டு மொத்த உலகுக்குமே நன்மை பயக்கும்.

தொடர்புக்கு:
ulagelam(at)gmail(dot)com