Friday 29 September 2023

பிராணன்

 தொழில் நிமித்தம் அறிந்த தொழிலாளர் ஒருவருக்கு என்னுடைய கட்டுமானப் பணி நிமித்தம் இன்று அலைபேசியில் பேசினேன். நண்பர் மிகவும் துயருற்றிருக்கிறார் என்பதை அவரது குரலில் இருந்த பாதிப்பு உணர்த்தியது. என்ன விஷயம் என்று விசாரித்தேன். அவருடைய அன்னைக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்று சொன்னார். பக்கவாதத்தால் பல ஆண்டுகள் பாதிக்கப்பட்டிருந்தவர். ஐந்து நாட்களுக்கு முன்னால் உடல்நிலை மிகவும் மோசமாகியிருக்கிறது. இரண்டு மூன்று மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றிருக்கிறார். இனி சிகிச்சை ஏதும் அளிப்பதற்கு இல்லை என்று மருத்துவமனையில் தெரிவித்து விட்டனர். திட திரவ உணவு எதனையும் உடல் ஏற்கவில்லை. இன்று காலை வீட்டுக்கு தன் அன்னையை அழைத்து வந்து விட்டார். 

படுக்கையில் இருந்த நண்பரின் அன்னையை சென்று பார்த்தேன். நண்பரின் உறவினர்களும் அண்டை வீட்டுக்காரர்களும் குழுமியிருந்தனர். மூச்சு சீராக இயங்கிக் கொண்டிருந்தது. மூச்சு மட்டும் இருக்கிறது. கண்கள் மூடியிருக்கின்றன. அவரால் கண்களைத் திறக்க முடியவில்லை. சூழலின் ஒலிகள் ஏதும் அவருக்குக் கேட்கிறதா என்பதும் தெரியவில்லை. 

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முதியோர் இல்லத்தில் என் நண்பரின் அன்னை இருந்தார். அவரைப் பார்க்க நண்பருடன் அடிக்கடி செல்வேன். அந்த முதியோர் இல்லத்தைப் பராமரிக்கும் பெண்மணி முதியோர்கள் மரணப் படுக்கையில் இருக்கையில் எவ்விதம் அவர்கள் மூச்சு நிகழும் என்பதைக் கூறினார். அவர் தன்னார்வலராக அந்த முதியோர் இல்லத்தைப் பராமரித்தவர். தனது பணியில் நூற்றுக்கணக்கான மரணத்தை தன் கண் முன் கண்டிருப்பதாகக் கூறினார். நினைவு தப்பி மூச்சு மட்டும் சீராக இருந்தால் ஓரிரு நாளில் மூச்சு மிக வேகமாக நிகழ ஆரம்பிக்கும். பின்னர் சில மணி நேரங்களில் நின்று விடும் என்று கூறினார். நேரில் பார்த்த அனுபவம் அவருக்கு. 

உடல் உறுப்புகள் செயலிழந்த பின்னும் பிராணன் இயங்குகிறது. 

நமது யோக மரபில் பிராணனை அவதானிப்பது என்பது மிக முக்கியமான பயிற்சி. பிராணனுக்கும் மனத்துக்கும் உடலுக்கும் இடையே துல்லியமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் அதன் மூலம் பிரமிக்கத்தக்க அளவில் செயல் விளைவுகளை உருவாக்க முடியும் என்பதும் நம் யோக மரபின் முடிபு. 

நண்பரிடம் ‘’ நீங்கள் உங்கள் அன்னைக்குச் செய்ய சாத்தியமான எல்லா கடமைகளையும் பணிகளையும் செய்து விட்டீர்கள். அன்னை அருகிலேயே இருங்கள்’’ என்று கூறினேன். 

Thursday 28 September 2023

திட்டமிடுதல் ( நகைச்சுவைக் கட்டுரை )

 தஞ்சாவூரிலிருந்து அமைப்பாளரைக் காணவும் ஐ.டி நிறுவன ஊழியரின் தேக்குப் பண்ணையைக் காணவும் அமைப்பாளரின் நண்பரான விவசாயி ஒருவர் தனது காரில் வருவதாகக் கூறியிருந்தார். நண்பர் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை வரும் வழியில் அமைப்பாளரின் ஆலோசனையுடன் அமைக்கப்பட்ட 2 ஏக்கர் தேக்குத் தோட்டம் இருந்தது. விவசாயி அதனையும் காண வேண்டும் என அமைப்பாளர் விரும்பினார். 

தஞ்சாவூர் விவசாயி தனது வருகை குறித்து தெரிவித்ததும் ஐ.டி நிறுவன ஊழியருக்கு ஃபோன் செய்து விஷயத்தைக் கூறினார் அமைப்பாளர். 

‘’அண்ணன் ! வியாழன் வெள்ளி ரெண்டு நாளும் சென்னை ஆஃபிஸ்க்கு வரச் சொல்லியிருக்காங்க அண்ணன் “

‘’சரி வீட்ல பண்ணையோட சாவியைக் கொடுத்துட்டு போங்க. நான் விவசாயியை அழச்சுட்டு போய் பண்ணையக் காட்டறன்’’

‘’அண்ணன் ! நான் வியாழன் காலைல 8.30 பஸ்ல சென்னை போறேன். காலைல 7.15க்கு என்னை பிக் அப் செய்றீங்களா?’’

ஐ.டி நிறுவன் ஊழியர் வீட்டுக்கும் அமைப்பாளர் வீட்டுக்கும் இடையேயான தூரம் 10 கி.மீ இருக்கும். காலை ஒருமுறை சென்று விட்டு மீண்டும் தஞ்சாவூர் விவசாயியை அழைத்துக் கொண்டு மீண்டும் ஒருமுறை வர வேண்டும். அமைப்பாளருக்கு கட்டுமானப் பணியிடத்தில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அமைப்பாளர் இப்போது நடக்கும் பணியில் கூடவே இருக்க வேண்டும் என்பதில்லை. என்றாலும் ஏதேனும் தேவை ஏதேனும் சிக்கல் என்றால் பதில் சொல்லும் பொறுப்பு அவருக்கு வந்து விடும். 

‘’சரி ! காலைல 7.15க்கு வந்துடறன்’’ 

அமைப்பாளர் இன்று காலை விழித்ததும் ஐ.டி நிறுவன ஊழியரை பிக் அப் செய்ய கிளம்ப ஆயத்தமானார். இரவு ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்த அலைபேசியை ஆன் செய்தார். ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. ஐ டி நிறுவன ஊழியர் அனுப்பியிருந்தார். பயணம் ஒருநாள் ஒத்திப் போடப்பட்டுள்ளது. 

அமைப்பாளர் கிளம்பி கட்டுமானப் பணியிடத்துக்கு வந்து விட்டார். விவசாயி ஐ டி ஊழியர் அமைப்பாளர் மூவரும் எளிதில் ஒருங்கிணைக்கப்படும் சாத்தியங்கள் குறித்து பரிசீலித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜல்லி சப்ளையர் ஃபோன் செய்தார். 

‘’சார் ! ஜல்லி வந்திருக்கு. 6 யூனிட். நீங்க 3 யூனிட் கேட்டீங்க. நான் குடோன்ல 3 யூனிட் கொட்டிகிட்டு உங்களுக்கு 3 யூனிட் அனுப்பிடறன்’’

அமைப்பாளர் யோசித்தார். 

‘’நான் ஆர்டர் பண்ண 3 யூனிட்டுக்கு இன்னைக்கு பணம் கொடுத்திடறன். நீங்க 6 யூனிட்டையும் இங்கயே கொட்டிடுங்க. பேலண்ஸ் 3 யூனிட்டுக்கு 7 நாள்ல பணம் வாங்கிக்கங்க’’

‘’சரி சார் ! அப்படியே செஞ்சிடலாம்’’

இப்போது ஒரு வணிக வளாகக் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளார் அமைப்பாளர். கட்டுமானம் மட்டுமன்றி அந்த வளாகம் தொடர்பான எல்லா பொறுப்புகளும் அமைப்பாளர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வளாகத்தின் கடைகளை வாடகைக்கு வேண்டும் என்று கேட்டு இரண்டு பேரை அமைப்பாளரின் நண்பர் அழைத்து வந்திருந்தார். அவர்களிடம் விபரம் சொல்லிக் கொண்டிருக்கையில் லாரி டிரைவரிடமிருந்து ஃபோன் வந்தது. 

‘’சார் ! ஜல்லி லோடு வந்திருக்கு. சைட் எங்க சார் ?’’

வாடகைக்கு கேட்டு வந்த பார்ட்டிகளை சைட்டில் கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொல்லி விட்டு லாரி மெயின் ரோட்டில் எங்கே இருக்கிறது எனக் காணச் சென்றார் அமைப்பாளர். லாரி அருகில் தான் இருந்தது. அதன் டிரைவரை பைக்கில் அழைத்து வந்து கொட்ட வேண்டிய இடத்தைக் காட்டினார். டிரைவர் அமைப்பாளரிடம் பைக்கை வாங்கிக் கொண்டு லாரிக்குச் சென்று கிளீனரை வண்டியை எடுக்கச் சொல்லி சைட்டுக்கு கொண்டு வருகிறேன் என சென்று விட்டார். பார்ட்டிகளிடம் மீண்டும் உரையாடலைத் தொடர்ந்தார் அமைப்பாளர். ஜல்லி லோடு வந்தது. ஹைட்ராலிக் முறையில் இயங்கும் வாகனம் அது. இரண்டு நிமிடத்தில் 6 யூனிட ஜல்லியையும் இறக்கி விட்டு லாரி கரூர் நோக்கி தன் பயணத்தைத் துவக்கியது. பார்ட்டிகளுக்கு விடை கொடுத்து விட்டு வீட்டுக்குப் பறந்தார் அமைப்பாளர். 

குளித்து காலை உணவு அருந்தி விட்டு வேக வேகமாக கட்டுமானப் பணியிடத்துக்கு வந்து விட்டார் அமைப்பாளர். காலை 9.15 மணி இருக்கும். பணியாளர்கள் வரும் நேரம். ஆனால் யாரும் வந்திருக்கவில்லை. தஞ்சாவூர் விவசாயிக்கு ஃபோன் செய்தார். கும்பகோணம் தாண்டி விட்டதாக விவசாயி சொன்னார். அமைப்பாளர் ஒரு காலியான சிமெண்ட் சாக்கை எடுத்துக் கொண்டு 60 அடி அகலம் கொண்ட பணியிடத்தின் முன்பிருந்த குப்பைகளை அந்த சாக்கில் போட்டார். பணி செய்யும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும். பணி செய்யும் இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பது என்பது பணியின் மிக முக்கியமான அடிப்படை. பணியிடம் கடைத்தெரு. எனவே மக்கள் வருகை நிகழ நிகழ மீண்டும் குப்பையாகும். என்றாலும் முதல் வேலையாக பணியிடத்தின் முன் உள்ள சாலையை தூய்மையாக்குவார் அமைப்பாளர். பணியாளர்கள் செய்வார்கள் எனினும் முன்னால் வந்தால் அமைப்பாளரே செய்து விடுவார். பின்னர் பணியிடத்தைச் சுற்றி வசிக்கும் நான்கு நண்பர்களான ககன், புவன், மங்கள் , சநு ஆகியோருக்கு பிஸ்கட் வாங்கி போட்டார் அமைப்பாளர். பணியாளர்கள் பார்வையில் படும் இடத்தில் தனது பைக்கை நிறுத்தி விட்டு அருகில் இருந்த பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தார் அமைப்பாளர். 

விவசாயிக்கு ஃபோன் செய்தார். 

‘’எங்க இருக்கீங்க?’’

‘’ஊருக்கு 12 கி.மீ முன்னாடி ஒரு தாமரைக்குளம் இருக்குண்ணா. குளம் முழுக்க தாமரையாப் பூத்திருக்கு. செல்ஃபோன்ல ஃபோட்டோ எடுத்துட்டு இருக்கன்’’

‘’என்ன ஊர்’’

‘’ஊர் என்னன்னு தெரியல. ஆனா 12 கி.மீ தூரம் தான்’’

’’ஊருக்கு 3 கி.மீ முன்னால நான் மெயின் ரோட்ல நின்னுகிட்டு இருப்பன். கார்ல வரும் போது பாத்துகிட்டு வாங்க. எனக்கு உங்க காரும் உங்க கார் நம்பரும் தெரியும். நம்மல்ல யாராவது ஒருத்தர் பாத்துடலாம். ‘’

ஒரு டவுன் பஸ் வந்தது. அதில் ஏறி இடத்துக்குச் சென்று விட்டார் அமைப்பாளர். 

கார் வந்த பாடில்லை. ஐ. டி நிறுவன ஊழியர் தயாராக இருப்பதாகக் கூறி ஃபோன் செய்தார். 

நேரம் மிகவும் கடந்து விட்டதால் அமைப்பாளர் ஃபோன் செய்தார். 

‘’எங்க இருக்கீங்க’’

‘’அண்ணா ஊருக்கு 2 கி.மீ பக்கத்துல வந்துட்டன்’’

‘’நீங்க இப்ப இருப்பது என்ன ஊர்?’’

‘’மாப்படுகை’’

‘’என்னது மாப்படுகையா ? நீங்க கல்லணை - பூம்புகார் ரோடுல வரீங்களா ? நான் அதுக்கு பேரலலா இருக்கற மெயின் ரோட்ல நின்னுட்டு இருக்கன். சரி பரவாயில்லை. ஒன்னு செய்ங்க. உங்க கிட்டு ஐ.டி நிறுவன ஊழியரோட செல்ஃபோன் இருக்குல்ல. அவருக்கு ஃபோன் செய்ங்க. அவர் உங்களோட ஜாயின் பண்ணிப்பார். அவர் டீக் ஃபார்மை பாத்துட்டு அவரோடயே இங்க வந்திடுங்க’’

‘’சரி அண்ணா ‘’

அமைப்பாளர் காத்திருந்தார். காத்திருக்கும் போது காத்திருத்தல் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார். 

பத்து நிமிடத்தில் கார் வந்தது. விவசாயியும் ஐ டி நிறுவன ஊழியரும் வந்திருந்தனர். 

அமைப்பாளர் சொன்னார். ‘’பரவாயில்லயே ! அவ்வளவு சீக்கிரம் தேக்கு பண்ணையைப் பாத்துட்டீங்களா ‘’

இருவரும் சேர்ந்து சொன்னார்கள் . ‘’ நீங்க இல்லாம எப்படி அண்ணா ? உங்களை கூட்டிட்டு போய் தான் பண்ணையைப் பாக்கப் போறோம் ‘’

‘’இந்த 2 ஏக்கர் தேக்கு தோட்டத்தை முதல்ல ஸ்டடி பண்ணுங்க. அப்புறம் அங்க போகலாம்’’  

Wednesday 27 September 2023

செல்வ நிலையம் : ஒரு மாமனிதனின் கதை

 இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் மதுரையில் ஒரு மனிதன் பிறக்கிறான். தனது இளம் வயதில் ‘’வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப’’ கப்பலேறி மலேசியா செல்கிறான். பொருள் ஈட்டுகிறான். ஈட்டிய பொருளுடன் ஊருக்கு வந்து விட்டு மீண்டும் மலேசியா செல்கிறான். ஊழின் மாயக்கரம் அவனையும் அவன் உடனிருந்தோரையும் அவன் வாழ்ந்த நாட்டின் மக்களையும் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே அலைக்கழிக்கிறது. தனது வணிக நிறுவனத்தின் உரிமையாளரிடம் கப்பலில் நாடு திரும்ப அனுமதி கேட்கிறான் அந்த மனிதன். உரிமையாளர் அனுமதி அளிக்க மறுக்கிறார். நிகழ்த்த விரும்பிய பயணம் நிகழாமலேயே போகிறது. கப்பலில் பயணிக்காத அந்த மனிதனுக்கு ஊழ் நீண்ட வாழ்நாளை அளிக்க இருந்தது அந்த மனிதனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. ஒரு சில நாட்களில் தெரிய வந்தது. அவன் பயணிக்க இருந்த கப்பல் நடுக்கடலில் ஜப்பான் விமானப்படைத்  தாக்குதலுக்கு ஆளாகி அதில் பயணித்த ஒருவருமே உயிர்பிழைக்கவில்லை. 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ‘’இந்திய தேசிய ராணுவ’’த்தில் தன்னை இணைத்துக் கொண்ட அந்த மனிதனுக்கு நேதாஜியுடன் மிக நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்திய தேசிய ராணுவத்தின் மிக முக்கியமான நிர்வாகப் பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்தித் தருகிறார் அந்த மனிதர். 

உலக அரசியலின் பல்வேறு திருப்பங்களுக்குப் பின் இரண்டாம் உலகப் போர் முடிவடைகிறது. அந்த மனிதர் ஊர் திரும்புகிறார். களங்கமற்ற ஒரு மாவீரனுடன் உடனிருந்தவர். வாழ்வும் சாவும் முட்டி மோதும் படுகளங்களைக் கடந்து வந்தவர். சிவில் வாழ்க்கையில் தன்னை முழுமையாகப் பொருத்திக் கொள்கிறார். 

அவரது வீட்டின் பெயர் ‘’செல்வ நிலையம்’’. ‘’ஸ்ரீநிவாஸம்’’ என்பதனை அவர் செல்வ நிலையம் என தமிழில் பெயரிட்டிருக்கலாம். அவர் வீட்டின் முன்னே இரு வேப்ப மரங்கள். அந்த வேப்ப மரம் நூற்றுக்கணக்கானோருக்கு நிழல் அளிப்பது போல தனது வாழ்வில் பல எளிய மனிதர்களுக்கு நண்பனாகவும் வழிகாட்டியாகவும் ஆசானாகவும் விளங்கியிருக்கிறார் அந்த மனிதர். 

தனது பேரக்குழந்தைகளின் அக உலகில் தனது அன்பின் நீர்மையாலும் அன்பின் உயிர்மையாலும் நிறைகிறார் அந்த மனிதர். தனது எல்லா பேரக் குழந்தைகளுக்கும் மொழிகளும் கணிதமும் அறிவியலும் கற்பிக்கும் ஆசிரியராகவும் அவர்களுக்கு யோகத்தின் துவக்க நிலைகளை அறிமுகப்படுத்தி ஆன்ம மார்க்கத்தைக் காட்டுபவராகவும் விளங்குகிறார். 

அவருடன் இருந்த ஒவ்வொரு நாளும் ஆசிர்வதிக்கப்பட்ட நாட்கள் என உணர்கின்றனர் அவரது குடும்பத்தினர். அவருடனான நட்பை விலைமதிப்பில்லா அரிய ஒன்று என எண்ணுகின்றனர் அவரது நண்பர்கள். 

அவரது முதல் பேத்தி எழுத்தாளர் சுபஸ்ரீ எழுத்தில் அந்த மாமனிதர் வாழ்வை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் அந்த மாமனிதரை எண்ணி பெரும் உளஎழுச்சியும் உளநெகிழ்வும் கொள்கிறான். பாட்டனாருக்கும் பேத்திக்குமான ஒரு உரையாடல்  : வீட்டின் முன்னால் நிற்கும் வேம்ப மரத்தின் நிழலில் காகங்களும் மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும் கூடி கிறீச்சிட்டுக் கொண்டிருக்கின்றன. தவிட்டுக் குருவிகள் ’’சுப்ரி சுப்ரி’’ என அழைப்பது சுபஸ்ரீயை என தாத்தா சொல்ல அந்த சிறு குழந்தை தவிட்டுக் குருவிகளைக் கொண்டு ஒவ்வொரு நாளும் அகமகிழ்கிறது.  எழுத்தாளர் சுபஸ்ரீயின் சொற்களில் இந்த சம்பவம் சித்தரிக்கப்பட்டிருக்கும் இடம் மிகச் சிறப்பானது. ஒவ்வொரு கணமும் கோடானுகோடி மனிதர்களின் வாழ்வில் கோடானுகோடி உணர்ச்சிகள் அலைமோதி அதன் விளைவாய் கோடானுகோடி நிகழ்வுகள் நிகழ்கின்றன. அருநிகழ்வாக சுபஸ்ரீ சித்தரிக்கும் சம்பவம் போன்றும் நடக்கின்றன. 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பதவியேற்கும் நிகழ்வு குறித்து எழுத்தாளர் சுபஸ்ரீ எழுதியிருக்கும் பகுதி மிகவும் உயிர்ப்பானது ; உணர்ச்சிகரமானது. 

தனது வலைப்பூவில் எழுத்தாளர் சுபஸ்ரீ தனது ஞான ஆசானான தனது பாட்டனார் குறித்து எழுதியிருக்கும் பதிவுகள் நூல் வடிவம் பெற வேண்டும். தமிழின் முக்கியமான நூலாக அது நிலை பெறும்.

https://manaodai.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE

நீங்குதல்

 எவை நம் ஆற்றலை எடுத்துக் கொள்பவையோ அவற்றை அடையாளம் கண்டு நீங்குதல் நலம் பயக்கும். 

அகம் விரிதல்

 அடையாளங்கள் எல்லைக்குட்பட்டவை. எல்லா அடையாளங்களும். அகவிரிவு நிகழும் எனில் நம்மால் மேலான சாத்தியங்களைக் காண முடியும். உணர முடியும். அடைய முடியும்.

மௌனம்

 நம் மனம் ஓயாமல் ஓசையிட்டுக் கொண்டிருக்கிறது. மௌனம் கைவரப் பெறுமாயின் மனம் அமைதி கொள்ளும். மனம் அமைதி கொள்கையில் உடலும் ஓய்வும் அமைதியும் கொள்ளும். மௌனம் ஓர் நற்றுணை. 

பிராத்தனை

 நாம் நமது எண்ணங்களை விருப்பங்களை திட்டங்களை நம் சக மனிதர்களிடமும் நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் கூறுகிறோம். அது ஒரு நல்ல விஷயம். அதனினும் நலம் பயப்பது இறைமையிடம் பிராத்தித்துக் கொள்ளுதல். இறைவனின் கருணை நம் பிராத்தனைக்கு செவி மடுக்கும் என நம்பிக்கை நம் வாழ்க்கைப் பயணத்தில் சிறந்த ஊன்றுகோலாக விளங்கக் கூடியது.  

மனச்செயல்

 நமது யோக மரபு மனத்தை மனச்செயல் என வரையறுக்கிறது. விருப்பு வெறுப்புகளால் ஆனது நமது மனம். நாம் காணும் உலகை நாம் வாழும் உலகை இந்த இருமைக்குள் அடக்கி விடுகிறது நம் மனம். இந்த இருமைகளுக்கு அப்பால் செல்லும் வழிகள் புலப்படுமாயின் அந்த வழியில் செல்ல வாய்ப்பு கிட்டுமாயின் அது ஒரு பேறு. 

உடை

 உறக்க நேரம் , உணவு இவற்றில் மாற்றம் கொண்டு வருவது சற்று முயன்றால் இயல்வது தான். உடைகளில் மாற்றம் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. எனக்கு சிறு வயதிலிருந்தே கதர் ஆடைகள் தான் பிடிக்கும். கதர் நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் அங்கம் என்பது எனது விருப்பத்துக்கான காரணம். எனக்கு உடைகளைத் தேர்வு செய்யத் தெரியாது. கடைக்குச் சென்றால் எனக்கு எல்லா நிறங்களும் எல்லா சட்டைகளும் நன்றாகத் தானே இருக்கின்றன என்று தோன்றும். எனக்கான ஆடைகளை குடும்பத்தினரே வாங்கி அளிப்பர். அதிக அளவில் கதர் ஆடைகள் அணிய வேண்டும் என்பது எனது விருப்பம். 

உணவு

 ஒரு நாளில் இரண்டு வேளை உணவு நிறைவாக அருந்தினால் அன்றைய நாளுக்கு அது போதுமானது என்று உணர்கிறேன். காலை 7 மணிக்கு முதல் வேளை உணவு. மாலை 5 மணிக்கு இரண்டாம் வேளை உணவு. மாலை உணவை பழங்களாக எடுத்துக் கொண்டால் போதும். பால், தேனீர், காஃபி, சிறு தின்பண்டங்கள் என எவையும் தேவையில்லை. 

விழிப்பு

 நாம் ஒரு நாளில் எட்டு மணி நேரம் வரை உறக்கத்துக்கு எடுத்துக் கொள்கிறோம். ஒரு நாளில் மூன்றில் ஒரு பாகம். லௌகிகம் அளிக்கும் எடையை நாம் உறக்கத்தின் மூலம் ஈடு செய்து கொள்கிறோம். பகல் பொழுது லௌகிகத்துக்கானது எனக் கொண்டால் இரவு 8 மணியிலிருந்து காலை 8 மணி வரையிலான 12 மணி நேரத்தில் ஆற்றுவதற்கான லௌகிகச் செயல்பாடு என ஏதும் இல்லை. அந்த 12 மணி நேரத்தில் 4 மணி நேரத்தை உறக்கத்துக்கு அளித்தால் நாம் பயில வேண்டும் - பழக வேண்டும் என விரும்பும் விஷயங்களை அந்த 8 மணி நேரத்தில் வைத்துக் கொள்ள முடியும். வழக்கமான லௌகிகப் பணிகளுக்கான நேரம் காலை 8 மணியிலிருந்து இரவு 8. எழுத்து, வாசிப்பு, மௌனம், யோகப் பயிற்சிகளுக்கான நேரம் இரவு 8 மணியிலிருந்து காலை 8. 

இவ்வாறு யோசிப்பது மூலம் இவ்வாறு பரிசீலிப்பது மூலம் நான் இவற்றைச் செய்து விட்டேன் என்றோ இவற்றை என்னால் எளிதில் செய்ய முடியும் என்பதோ பொருள் அல்ல. சில சாத்தியங்களை நான் யோசித்துப் பார்க்கிறேன். பரிசீலிக்கிறேன். அவ்வளவே. 

இரவு 10 மணிக்கு மேல் என்னால் சில நிமிடங்கள் விழித்திருப்பது என்பதே மிகவும் சிரமமானது. காலை 5 மணிக்கு எழுவேன். இப்போது அதனை இரவு 10 மணிக்கு உறங்கச் சென்று அதிகாலை 2 மணிக்கு எழும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். 

அதிகாலை 2 மணியிலிருந்து 6 மணி வரையிலான நேரத்தை யோகாசனங்களுக்கு யோகப் பயிற்சிகளுக்கு பிராத்தனைக்கு மௌனத்துக்கு வாசிப்புக்கு எழுத்துக்கு அளிக்க முடியும். 

புதிய உயிர்

 செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் - அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக - பாரதி. 

நமது தேசத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதிகாலைப் பொழுதிலும் மாலை அந்தியிலும் நண்பகல் சந்தியிலும் இந்த நுண்சொல் கோடிக்கணக்கானவர்களால் மனதுக்குள் உச்சரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இந்த நுண்சொல்லை உயிர்த்துணையாக மானுடத்துக்கு அளித்தது நம் மரபு.  

மனிதனுக்கு மனிதனின் செயல்பாடுகளுக்கு எல்லைகள் உண்டு. அந்த எல்லைகளை குறுக்கிக் கொள்ளாமல் விரிவாக்கிக் கொள்ளவும் முடியும் என்பது மானுடத்தின் சிறப்பு. 

நாம் பிறந்ததிலிருந்து நம்முடைய சமூக பொருளாதாரச் சூழல் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. எனினும் ஒவ்வொரு மனிதனும் சிந்தனையின் மூலம் தனக்கான வாழ்முறையை உருவாக்கிக் கொள்ள முடியும். 

23 நாட்கள் உண்ணாவிரதம் அன்றாடத்தின் பல விஷயங்களை அணுக்கமாகக் காண நுணுக்கமாக அறிய உதவும் என்று கருதுகிறேன். அவ்வாறான ஒரு செயல் இப்போது தேவை என்று உணர்கிறேன். 

Monday 25 September 2023

உணர்வுகள் சொல்லாகாமல் கூட போகலாம்
மௌனத்திற்கு வந்து சேர்கின்றன சொற்களும் உணர்வுகளும்
நிசப்தமாயிருக்கிறது புறம்
நிசப்தத்தை சொற்களை உணர்வுகளை 
அவதானித்திருக்கிறது அகம்
கரையலாம்
பற்றி எரியலாம்
சிற்றொலியும் எழ வேண்டாம்
சிறு அசைவும் வேண்டாம்
நீர் சுமக்கிறது ஆயிரம் விதைகளை
சாம்பலில் இருந்தும் எழுகிறது ஒரு பறவை
புல்லின் வேர்களின் அழிவின்மையால் ஆனது
இந்த புவி

கல்வி மையம்

 செயல் புரியும் கிராமத்தில் ஒரு கல்வி மையம் அமைக்க ‘’காவிரி போற்றுதும்’’ திட்டமிடுகிறது. அந்த கல்வி மையத்தில் பல மொழிகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பது நமது விருப்பம். வேறு விஷயங்கள் என்னென்ன கற்பிக்க வேண்டும் என்று யோசித்துப் பார்த்தேன். 

1. மொழிகள் : தமிழ், மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், ஜப்பானிஸ்

2. கணிதம் : எண்கள், அளவியல், பொருளியல், வணிகவியல்

3. அறிவியல் : அடிப்படை அறிவியல் கோட்பாடுகள், அரவிந்த் குப்தா அவர்களின் விளையாட்டு மூலம் அறிவியல்

4. தொழில்நுட்பம் : தச்சுப் பணி, எலெக்ட்ரிக் மற்றும் பிளம்பிங் அடிப்படைகள் 

5. யோகா : யோகாசனங்கள்

6. விளையாட்டு : பல்வேறு விதமான குழு விளையாட்டு மற்றும் சதுரங்கம்


Sunday 24 September 2023

மொழிகள்

 மனித மூளை அதிக எண்ணிக்கையிலான மொழிகளை வெகு லகுவாகக் கற்றுக் கொள்ளும் திறன் கொண்டது. மானுடத்தின் பரிணாம வளர்ச்சியின் விளைவாக மனித இனத்துக்கு அத்திறன் வாய்க்கப் பெற்றது. மனிதன் எப்போது தான் எண்ணுவதைப் பேசத் தொடங்கினானோ அப்போதிலிருந்து அவனது மூளை மொழிதலின் ஒலிகளை அடையாளப்படுத்திக் கொள்ளத் தொடங்கியது. சிறு குழந்தைகளால் வெகு எளிதாக பெரியவர்களை விட அதிக எண்ணிக்கையிலான மொழிகளைக் கற்க முடியும் ; மிகக் குறுகிய காலத்தில் மிக வேகமாக சிறு குழந்தைகளால் மொழியைப் பயில முடியும். 

தமிழ்நாட்டில் உள்ள ஒரு குழந்தை மலையாள மொழி பயிலும் எனில் அதனால் ஏற்படும் பயன்கள் என்பது பலப்பல. கேரளம் நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே எழுத்தறிவு சதவீதம் மிக அதிகம் கொண்ட மாநிலம். எனவே அங்கே கல்வி படிப்பு சார்ந்த நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றன. உலக மொழிகளின் பல இலக்கியங்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அங்கே உள்ள வாசகர்களுக்கு வாசிக்கக் கிடைக்கிறது. வெட்டம் மாணி என்பவர் ‘’புராண கலைக்களஞ்சியம்’’ என்பதை உருவாக்கியுள்ளார். நம் நாட்டின் புராணங்களில் உள்ள அனைத்து பாத்திரங்கள் குறித்த விரிவான கலைக்களஞ்சியம் அது. மலையாள மொழி பயின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரால் மலையாளத்தில் கிடைக்கும் அத்தனை மொழிபெயர்ப்புகளையும் வாசிக்க முடியும். 

ஒரு குழந்தை ஜப்பானிய மொழி பயில்கிறது என்றால் ஜப்பானின் கலை, நுண்கலை ஆகியவற்றுடன் மேலான நெருக்கம் கொள்ள முடியும். 

உதாரணத்துக்காக மலையாளத்தையும் ஜப்பான் மொழியையும் குறிப்பிட்டேன். மொழிகள் அதிக அளவில் குழந்தைகளுக்கு மாணவர்களுக்கு சொல்லித் தரப்படுவது நல்ல உபயோகமான விஷயமே ஆகும். 

இதில் கட்டாயம் எதுவும் இல்லை ; விருப்பப்படுபவர்கள் விரும்பும் மொழியைக் கற்க வாய்ப்பு இருக்க வேண்டும். 

காவிரி போற்றுதும் - செயல் புரியும் கிராமத்துக்கான திட்டங்கள்

 (1) ’’காவிரி போற்றுதும்’’ ஓர் நுண் அமைப்பு. கிராமம் என்னும் ஒரு சிறு அலகை எடுத்துக் கொண்டு அச்சிறு அலகிற்குள் ஓர் நுண் அமைப்பால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்கிறது. தனது முன்னெடுப்புகள் மூலம் ‘’காவிரி போற்றுதும்’’ கிராம மக்களை இணைத்துள்ளது. மக்களை ஒற்றுமைப்படுத்த நிகழும் எந்த முயற்சியுமே தன்னளவில் வெற்றியே. மேலும் ‘’காவிரி போற்றுதும்’’ இதுவரை முன்னெடுத்திருக்கும் செயல்கள் எதிர்பார்த்த பலன்களைத் தந்திருப்பதால் ‘’காவிரி போற்றுதும்’’ முயற்சிகள் வெற்றிகரமானவையே. 

சிறு சிறு செயல்கள் மூலம் ஒட்டுமொத்த கிராமமும் பலமுறை இணைக்கப்பட்டிருப்பதால் நாம் மேலும் மேலும் முன்னகர வேண்டும் என்ற ஆவல் கொள்கிறோம். அதன் மூலம் நம் இலக்குகளை பெரிதாக்குகிறோம். விரிவாக்குகிறோம். 

(2) ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு கல்வி மையத்தை செயல் புரியும் கிராமத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த கல்வி மையம் காலை 5 மணியிலிருந்து 7 மணி வரை இயங்கும். அங்கே மொழிகள் கற்றுத் தரப்படும். கணிதம் கற்றுத் தரப்படும். அறிவியல் கற்றுத் தரப்படும். 

காலை 5 மணியிலிருந்து 7 மணி வரை இயங்குவதாயினும் அங்கே பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கேந்திரிய வித்யாலயா , நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் பெறும் ஊதியத்துக்கு சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பம். 

எந்த சமூகத்தில் ஆசிரியர்கள் மதிக்கப்படுகிறார்களோ அந்த சமூகமே முன்னேற்றம் காணும். 

(3) ‘’காவிரி போற்றுதும்’’ கிராமத்தில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் உடல் வலிமையை வளர்க்கும் விளையாட்டு சாதனங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது. கால்பந்து, வாலிபால், கூடைப்பந்து, ரிங் பால், ஸ்கிப்பிங் கயிறு , கிரிக்கெட் பந்து, கிரிக்கெட் மட்டை , ஷெட்டில் ராக்கெட், பந்து ஆகியவற்றை கிராமத்தில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் வழங்க வேண்டும் என்பது ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பம். 

(4) கிராமத்தில் இருக்கும் எல்லா ஆலயங்களிலும் இருக்கும் அர்ச்சகர்களுக்கும் பூசாரிகளுக்கும் மாதா மாதம் ஒரு தொகையை தனது சார்பில் அளிக்க ‘’காவிரி போற்றுதும்’’ விரும்புகிறது. கிராம ஆலயங்களில் பூசனைகள் முழுமையாக நிகழ வேண்டும் என்பது ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பம். கிராமத்தில் ஏதேனும் ஒரு ஆலயத்தில் தினமும் வேத கோஷம் எழ வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளை ‘’காவிரி போற்றுதும்’’ முன்னெடுக்க விரும்புகிறது. 

(5) கிராமத்தில் 1000 நூல்கள் கொண்ட நூலகத்தை அமைக்க ‘’காவிரி போற்றுதும்’’ விரும்புகிறது. 

(6) கிராமத்தில் இருப்பவர்கள் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள விரும்பினால் அதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் நல்க ‘’காவிரி போற்றுதும்’’ விரும்புகிறது. 

(7) கிராம விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் தேக்கு மரம் நட்டு வளர்த்து  15 ஆண்டுகளில் பயனடைய அவர்களுக்கு உடனிருந்து உதவுவது ‘’காவிரி போற்றுதும்’’ன் அடிப்படையான முதன்மையான திட்டம். 

(8) கிராமத்தில் அதிகபட்சமாக எத்தனை மரங்கள் நட முடியுமோ அத்தனை மரங்களை நட்டு பராமரித்து விருட்சமாக்க வேண்டும் என்பது ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பம். 

நாம் காண்பது பெரும் கனவு. நாம் திட்டமிடுபவை பெரும் செயல்கள். நமது இலக்குகளை நோக்கி நாம் நில்லாது முன்செல்கிறோம். 

உண்ணா விரதம் : 23 நாட்கள்

 சில மாதங்களுக்கு முன்னால் பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியானது. திருச்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணி 21 நாட்கள் உணவு உண்ணாமல் உண்ணா விரதம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார் என்றும் 21ம் நாள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் என்றும் அந்த செய்தி தெரிவித்தது. உண்ணாவிரதம் மேற்கொண்ட 21 நாட்களில் வென்னீர் மட்டுமே அருந்தியிருக்கிறார். வேறு எந்த திட திரவ உணவும் அருந்தவில்லை. அந்த பெண்மணி சமண சமயத்தைச் சேர்ந்தவர். சமணம் உண்ணா விரதத்தை தனது நெறிமுறைகளில் முக்கியமான ஒன்றாக வகுக்கிறது. உண்ணா விரதம் மானுடரின் அக உயர்வுக்கு உதவும் என்பது சமணத்தின் போதனை. 

சிப்கோ இயக்கத்தின் நிறுவனரும் காந்தியவாதியுமான சுந்தர் லால் பகுகுணா 90 நாட்கள் வரை உணவு உண்ணாமல் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். மகாத்மா காந்தி வாழ்வில் பலமுறை பல நாட்கள் உண்ணாவிரதமிருந்தவர். அவரது ஒரு உண்ணாவிரதம் 21 நாட்கள் நீண்டது. 

மனித உடல் பல நாட்கள் உணவு இல்லாமல் இருக்கக் கூடியது. மனித உடலின் இயங்குமுறை பல நாட்களுக்குத் தேவையான ஆற்றலை பல விதங்களில் சேமித்து வைத்துக் கொள்ளக் கூடியது. உண்ணாவிரதத்தின் போது உடல் பல ஆண்டுகள் சேமித்திருக்கும் ஆற்றலை எடுத்து செலவிட்டுக் கொள்கிறது. 

உடல், மனம், உயிர் என்ற மூன்றின் இணைவே மனித வாழ்வு. உடலும் மனமும் அறியப்படும் அளவில் சாமானியர்களான நாம் உயிரை அறிவது இல்லை. உண்ணா விரதம் அதற்கான மார்க்கம். அதனால் தான் உலகின் அத்தனை சமயங்களும் உண்ணா விரதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன. 

உண்ணாவிரதம் உடலையும் மனதையும் மேலும் உற்று நோக்கி அறிய உதவுகிறது. நாம் நமது சூழலால் உருவான பழக்கங்களால் உடலுக்கு உணவளிக்கிறோம். மூன்று வேளை உணவருந்துவது, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பால், தேனீர் அல்லது காஃபி அருந்துவது, ஒருவேளை உணவுக்கும் இன்னொரு வேளை உணவுக்கும் இடையே சிறு தின்பண்டங்கள் ஏதும் அருந்துவது என நம் சமூகச் சூழலில் நாம் பழகியிருக்கிறோம். யோசித்துப் பார்த்தால் , நாம் எவ்வளவு உணவருந்த வேண்டும் என்பதற்கான பதில் நம் உடல் இலகுவாக ஆரோக்கியமாக இயங்க எவ்வளவு உணவு தேவையோ அவ்வளவு உணவையே அருந்த வேண்டும். எந்த ஒரு சாமானிய மனிதராலும் தன் அனுபவத்தைக் கொண்டே அந்த உணவின் அளவை அறிந்திட முடியும்.   பழக்கங்களால் கட்டுண்டிருக்கிறது நம் உடல். உண்ணாவிரதம் அந்த பழக்கத்தின் பந்தத்திலிருந்து விடுவித்துக் கொள்ளும் ஒரு முயற்சியே. 

10 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருமுறை சஷ்டி விரதம் இருந்திருக்கிறேன். தீபாவளிக்கு மறுநாள் விரதத்தைத் தொடங்கி கந்த சஷ்டி வரை ஆறு நாட்கள் நீர் மட்டும் அருந்தி விரதமிருந்தேன். எனது தொழில் சார்ந்து ஒரு பெரும்பணியை முன்னெடுக்க இருந்தேன். எடுத்த காரியம் சிறப்பாக நிறைவேற மேற்கொண்ட விரதம் அது. அந்த ஆறு நாட்களும் இலகுவாகவே போயிற்று. அதன் பின்னர் , 5 ஆண்டுகளுக்கு முன்னால் நவராத்திரி விரதம் ஒன்பது நாட்களுக்கு இருக்க முயன்றேன். ஐந்து நாள் வரை நீடித்தது அந்த விரதம். ஒரு நீண்ட உண்ணாவிரதத்துக்கு முயன்று அந்த முயற்சியில் சில முறை தோல்வி அடைந்தேன். 

உணர்ச்சிகரமும் கொந்தளிப்பும் கொண்டது எனது அகம். படைப்பூக்கம் கொண்ட மனநிலை அவ்வாறாகவே இருக்க இயலும். நீண்ட உண்ணாவிரதத்தில் மன உறுதியினும் அகச் சமநிலையே முதன்மையானது. எங்கும் செல்லாமல் ஓரிடத்தில் இருப்பது உண்ணாவிரதத்துக்கு உதவிகரமானது. எனினும் இப்போது எனது தொழில் சார்ந்த பல்வேறு செயல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். தினமும் அவற்றுக்கு நேரம் கொடுத்தே ஆக வேண்டும். தொழில் சார்ந்த பணிகளைத் தவிர மற்ற நேரம் வீட்டில் அறையில் அமைதியாய் இருக்க முடிவு செய்துள்ளேன். 

உணவு இல்லாமல் கூட உடல் இருந்து விடும் ; ‘’உணவு’’ என்பதை ஞாபகப்படுத்தாமல் மனத்தால் இருக்க முடியாது. உண்ணாவிரதத்தில் முக்கியமான தடை உடல் அல்ல ; மனமே. இரண்டு முறை ஒரு வார கால அளவு உண்ணாவிரதமிருந்த அனுபவத்திலிருந்து நான் உணர்ந்தது உடலால் உணவு இல்லாமல் இருந்து விட முடியும். உடல் காற்றிலிருந்தும் சூரிய வெளிச்சத்திலிருந்தும் கூட தனக்கான உணவையும் ஆற்றலையும் பெற்றுக் கொள்கிறது என்பதை அனுபவத்தின் சிறு துளியாய் உணர்ந்திருக்கிறேன். 

மகாகவி பாரதியின் ஒரு கவிதை


 தேடிச் சோறுநிதந் தின்று  பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்

வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பலசெயல்கள் செய்து — நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல

வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னென்றுநினைத் தாயோ?


நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை நேரே இன்றெனக்குத் தருவாய் 

 என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் — இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும் இனி

என்னைப் புதிய வுயிராக்கி எனக்கேதுங் கவலையறச் செய்து — மதி

தன்னை மிகத்தெளிவு செய்து — என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.


பாரதி ‘’புதிய உயிர்’’ என்கிறான். கணமும் ஒளியுடன் உயிர்த்திருப்பது உயிர். பாரதிக்கு அது மேலும் உயிர்ப்புடன் கூடியதாக புதிய உயிராக வேண்டியிருக்கிறது. 

வாழ்நாளில் பாதி கடந்து விட்டது. இன்றே கூட மரணத்தை எதிர்கொள்ள நேரலாம். அடுத்த கணம் நடக்க இருப்பது என்ன என்பதை எதிர்கொள்வதிலேயே வாழ்வின் ஆகச் சிறந்த சுவாரசியம் அமிழ்ந்திருக்கிறது. 

இந்த உண்ணாவிரதத்தின் காலத்தில் சில நியதிகளை வகுத்துக் கொள்ளலாம் என இருக்கிறேன். அவற்றை எஞ்சிய வாழ்நாள் முழுதும் தொடரவும் விருப்பம் கொண்டுள்ளேன். 

(1) அதிகாலை 2 மணிக்கு எழுதல். இது மகாத்மா காந்தி அடிகளின் வழக்கம். 

(2) பிராத்தனையுடன் நாள் பொழுதைத் தொடக்குதல்

(3) யோகாசனங்கள் செய்தல்

(4) காலையும் மாலையும் ஒரு மணி நேரம் மௌனமாயிருத்தல். 

(5) வசிக்கும் அறையில் எப்போதும் ஒரு தீபச்சுடரை ஒளிரச் செய்திருத்தல்

(6) ஊரில் இருக்கும் ஆலயத்துக்கு தினமும் சென்று தெய்வ சன்னிதியில் தீபம் ஏற்றுதல்

(7) இந்த உண்ணாவிரதத்தின் 23 நாட்களும் தமிழறிஞர் ம. ரா. ஜம்புநாதன் மொழிபெயர்த்த ரிக் , யஜூர், சாம வேதங்களின் மொழிபெயர்ப்பை வாசித்துக் கொண்டிருத்தல். ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் ‘’பகவத் கீதை’’ நூலை வாசித்தல். சுவாமி விவேகானந்தரின் முழுத் தொகுதியை வாசித்தல் 

பல வருடங்களாக யோகப் பயிற்சிகள் மேற்கொள்ளும் இரண்டு நண்பர்களிடம் 23 நாட்கள் உண்ணாவிரதம் குறித்து கூறினேன். போதுமான அளவு வென்னீர் அருந்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள். வயிற்றில் சுரக்கும் ஜீரண சுரப்பிகளில் உள்ள என்சைம்களை வென்னீர் கரைத்து விடும். எனவே வென்னீர் மட்டும் அருந்தி பல நாட்கள் உண்ணாவிரதம் இருப்பது எல்லா மனிதர்களாலும் முயன்றால் இயலக் கூடியதே என்றனர்.

ஆற்றுவதற்கு கணக்கற்ற பணிகள் இருக்கின்றன. இறைமையின் சிறு கருணை ஒரு துளி கிட்டினால் கூட உண்ணாவிரதத்தை எண்ணிய வகையில் செயலாக்க முடியும். 

பொதுவாக இவ்வாறான பெருமுயற்சிகளை மேற்கொள்ளும் போது அந்த முயற்சி சிறப்பாக நிறைவுற்றால் மட்டுமே அது குறித்து பேச வேண்டும். முன்னரே பேசுவது அச்செயல் நிகழ்ந்து விட்டது என்னும் மாயத் தோற்றத்தை மனத்தில் உருவாக்கி விடும். அதுவே செயலை நிறைவு செய்ய இயலாமல் போவதற்கு காரணம் ஆகி விடும். எனது அகம் எழுத்தாளனின் அகம் என்பதால் திட்டமிட்டிருப்பதைக் கூறியிருக்கிறேன். 

இந்த உண்ணாவிரதத்தை எண்ணிய வண்ணம் மேற்கொள்வேன் என என் உள்ளுணர்வு கூறுகிறது. எழுத்தாளனின் உள்ளுணர்வு. 

காந்தி ஜெயந்தி அன்று (02.10.2023) உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறேன். விஜயதசமி அன்று (24.10.2023) நிறைவு செய்கிறேன். 



Saturday 23 September 2023

லௌகிக அலைகள்

 18 ஆண்டுகளுக்கு முன்னால் , கட்டுமானப் பணிக்கு வந்தேன். இன்ன வேலையை இன்ன விதமாகத்தான் செய்ய வேண்டும் என்ற கறாரான அணுகுமுறையே இத்துறைக்குச் சரியானது என்ற சரியான புரிதல் கொண்ட பணி பயிலும் சூழ்நிலை எனக்கு வாய்த்தது. நம்மால் திட்டமிடப்படுகிறது ; நாம் செயல்படுத்துகிறோம் எனினும் நம் கண்ணுக்குத் தெரியாத ஊழ் நம்முடன் இருப்பதை நம் முன் இருப்பதை நம்மைச் சூழ்ந்து இருப்பதை எங்கள் துறையில் நாங்கள் உணர்ந்து கொண்டே இருப்போம். 

ஒரு கான்கிரீட்டிங் வேலை நடைபெறுகிறது எனக் கொள்வோம். 100 மூட்டை சிமெண்ட் தேவை. நாம் ஹார்டுவேர் கடையில் ஆர்டர் செய்திருப்போம். அவர்கள் கம்பெனிக்கு ஆர்டர் செய்திருப்பார்கள். இன்ன நாளில் வேண்டும் என தேதியை சொல்லியிருப்போம். நமது பணியிடத்தில் அன்று கான்கிரீட்டிங் வேலைக்காக 20 பணியாளர்களை வரச் சொல்லியிருப்போம். சிமெண்ட் வண்டி வந்து சிமெண்ட்டை இறக்க வேண்டும். அரியலூரிலிருந்து சிமெண்ட் வண்டி கிளம்பியிருக்கும். வந்து சேர வேண்டிய இடத்துக்கு 7 கி.மீ முன்னால் வண்டி பஞ்சர் ஆகியிருக்கும். குறித்த நேரத்துக்கு வண்டி வந்து சேர்ந்திருக்காது ; நீண்ட பணிக்குத் தயாராக வந்திருக்கும் பணியாளர்கள் சோர்வை வெளிப்படுத்துவார்கள் . கூச்சல் இடுவார்கள். கலைந்து போகத் துவங்குவார்கள். ஹார்டுவேர் கடைக்காரர் அவரது அன்றைய பணியில் மூழ்கி விடுவார். அது இயல்பானது தான். வண்டி டிரைவர் பஞ்சர் ஒட்ட முயற்சி செய்து கொண்டிருப்பார். இப்போதாவது அலைபேசி இருக்கிறது. முன்னர் அதுவும் இருக்காது. வேறு இடத்தில் 100 மூட்டை சொல்லலாம் என்றால் வேறு கடைகளில் அத்தனை மூட்டை ஸ்டாக் இருக்காது. அங்கும் இங்கும் அலைய வேண்டும். ஒரு பெரிய வலைப்பின்னலில் எங்கோ நிகழும் சிறு நிகழ்வு உருவாக்கும் எதிர் விளைவுகளை மௌனமாகப் பார்ப்பது அன்றி வேறு வழி இருக்காது. வாழ்க்கையும் அவ்வாறான தன்மை கொண்டது தானே? எதிர்பார்த்த நேரத்துக்கு 3 மணி நேரம் அல்லது 4 மணி நேரம் தாமதமாக வண்டி வந்து சேரும். பின் மாலை வரை கான்கிரீட்டிங் செய்து பணியை நிறைவு செய்வோம். ஒரு முறை இவ்வாறு நிகழ்ந்த பின் மறுமுறை இவ்வாறு நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய முயற்சி செய்வோம். அனுபவம் என்பது இதுதான். தொடர் அனுபவங்களின் பின்னர் நாங்கள் ஒன்றை உணரத் தொடங்குவோம். ஊழ் என்பது நம்மைச் சூழ்ந்து எங்கும் உள்ளது. அந்த உணர்வு நமக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்று மனதுக்குள் ஆழமாகச் சொல்லிக் கொள்வோம். ஊழ் வலியது என்பதற்காக நாம் நம் முயற்சிகளை குறைத்துக் கொள்ளக் கூடாது ; ஊழ் வலியது என்பதால் நாம் நம் முயற்சிகளையும் திட்டமிடல்களையும் மேலும் தீவிரமாக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்வோம். 

காலை 7 மணிக்கெல்லாம் கட்டுமானப் பணியிடத்துக்குச் சென்று நடந்த கட்டுவேலை அல்லது கான்கிரீட் அல்லது பூச்சுவேலையில் தண்ணீர் ஊற்றி கியூரிங் செய்ய வேண்டும். காலை விழிப்பு கியூரிங் செய்ய வேண்டும் என்ற நினைப்புடனே நிகழும். இப்போதும் காலை எழுந்ததும் பணியிடத்துக்குச் சென்று கியூரிங் செய்கிறேன். பணியாளர்கள் காலை 9 மணிக்கு வருவார்கள். வந்ததும் கியூரிங் செய்வார்கள் எனினும் காலை 7 மணிக்கு நான் ஒருமுறை செய்தால்தான் எனக்குத் திருப்தி. 

மெட்டீரியல் ஆர்டர் செய்வது, அன் லோடு ஆன மெட்டீரியலுக்குப் பணம் கொடுப்பது, பணியை மேற்பார்வையிடுவது என காலையில் துவங்கும் பணி நிறைவாக இரவு 8 மணி ஆகி விடும். உணவு உண்டு படுத்து உறங்கினால் மீண்டும் ஒருநாள் . மீண்டும் அதே பணி. 

இந்த நாள் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பது தான் ஒரு சிவில் பொறியாளனின் பிராத்தனையாக இருக்கும். 

ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் உண்டான நாளிலிருந்து இதே பிராத்தனை தானே இருக்கிறது !

Saturday 16 September 2023

பண்ணையைப் பார்வையிடுதல்

 சென்ற வாரம் என்னைத் தொடர்பு கொண்ட ஐ.டி கம்பெனி உரிமையாளர் இன்று ‘’காவிரி போற்றுதும்’’ ஆலோசனையின் படி 3 ஏக்கரில் 900 தேக்கு மரங்கள் நடப்பட்டுள்ள பண்ணையைப் பார்வையிடுவதற்காக சென்னையிலிருந்து வந்திருந்தார். அவருடன் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் வந்திருந்தனர். ஊரின் நுழைவாயிலில் அவர்களை என்னுடைய மோட்டார்சைக்கிளில் எதிர்கொண்டு தேக்கு பண்ணைக்கு அழைத்துச் சென்றேன். தேக்கு மரங்கள் 15 அடி உயரம் வளர்ந்திருக்கின்றன. அவ்வப்போது பெய்யும் மழை அவற்றின் வளர்ச்சிக்கு துணையாய் இருக்கிறது. 

ஆர்வத்துடன் பண்ணையைப் பார்வையிட்டனர். அவர்களுக்கு மரப்பயிர் என்பது மிகவும் புதிது. நடும் போது மரக்கன்று எவ்வளவு உயரம் இருக்கும் என்று கேட்டனர். அரை அடி அதாவது 15 செ.மீ இருக்கும் என்று சொன்னேன். 15 செ.மீ உயரம் கொண்டிருந்த மரக்கன்று ஒரு வருடத்தில் 15 அடி உயரம் வளர்ந்து விடுமா என்று ஆச்சர்யப்பட்டனர். 

ஒருமுறை ஒரு வனவியல் பேராசியர் ஒருவரின் அலைபேசி எண்ணை விவசாயத் துறையில் விஞ்ஞானியாக இருக்கும் எனது நண்பர் அளித்தார். அந்த பேராசியரைத் தொடர்பு கொண்ட போது அவர் என்னிடம் சொன்னார். ‘’ நமக்குத் தேவை அந்த தாவரத்தின் 10 அடி உயரத் தண்டு மட்டுமே ‘’ என்றார். தேக்கினை பூமியிலிருந்து 10 - 15 அடி வளர்ச்சியை உறுதி செய்தாலே போதுமானது. நாம் எதிர்பார்க்கும் பலன் அதிலேயே கிடைத்து விடும். 

வாரத்துக்கு மூன்று நாட்கள் தேவையான நீர் அளிக்கப்படுமானால் தேக்கின் வளர்ச்சி என்பது மிகச் சிறப்பாக இருக்கும். 

பொருளியல் பலன் என்பது விவசாயிக்குக் கிடைத்தால் தான் விவசாயம் ஒரு தொழிலாக நீடித்து இருக்கும். விவசாயிக்குப் பொருளியல் பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாம் முயல்கிறோம். 

Thursday 14 September 2023

தமிழகத் தொழிலாளர்கள்

 சென்ற வாரம் நண்பன் கே. எஸ் ஐ சந்திக்க சிதம்பரம் சென்றிருந்த போது அங்கே அவனது உறவினர்களிடம் தென்னாற்காடு மாவட்டத்தின் மக்கள் கடுமையான உழைப்பாளிகள் என்ற எனது அபிப்ராயத்தைத் தெரிவித்தேன். அங்கே நில உரிமையாளர் விவசாயத் தொழிலாளர் இருவருமே ஒன்றாக நிலத்தில் விவசாயப் பணிகளைச் செய்வார்கள். நில உரிமையாளர்களின் குடும்பத்துப் பெண்களும் வயலுக்கு வந்து களையெடுத்தல் முதலிய பணிகளை மேற்கொள்வார்கள். நான்கு சக்கர வாகனங்களைக் கையாள்வதில் தென்னாற்காடு மாவட்ட ஆட்கள் நிபுணர்கள். பேருந்து ஓட்டுனர்களாக சிறப்பான பணிகளைச் செய்தவர்கள் தென்னாற்காடு வாகன ஓட்டுனர்கள். எனது அபிப்ராயங்களை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் நண்பன் கே.எஸ் ன் உறவினர். அவரது மாவட்டத்தைப் பற்றி நல்ல அபிப்ராயம் சொன்னது அவருக்கு மகிழ்ச்சி அளித்தது. எனினும் சற்று சோர்வுடன் , ‘’ நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் தம்பி. ஆனால் அதெல்லாம் இருபது வருடம் முன்பு’’ என்றார். ‘’இப்போதெல்லாம் இங்கே உள்ள பெரும்பாலான தொழிலாளர் குடும்பங்களில் உள்ள ஆண்களில் குறைந்தபட்சம் ஒருவர் அல்லது இருவர் குடி அடிமைகளாக இருக்கின்றனர். அவர்களால் சராசரியான உடல் உழைப்பைக் கூட கொடுக்க முடிவதில்லை. எனவே அவர்களின் பணித்திறன் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு கட்டுமானம் மேற்கொண்டேன். முழுக்க முழுக்க வட இந்தியத் தொழிலாளர்களைக் கொண்டே கட்டுமானம் நடந்தது ‘’ என்றார்.  

Wednesday 13 September 2023

தேசம்

 எனது நண்பர் ஒருவர் ஹார்டுவேர் கடை வைத்திருக்கிறார். நேற்று அங்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு வந்த பெயிண்டர் ஒருவரை நண்பர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பெயிண்டர் ஒரிஸ்ஸா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்தவர். பத்து ஆண்டுகளாக கும்பகோணம் , திருவாரூர் ஆகிய பகுதிகளில் தனது சொந்த ஊரிலிருந்து கூட்டி வந்த தனது சக பெயிண்டர்களைக் கொண்டு பெயிண்டிங் வேலை செய்து வருவதாகக் கூறினார். இங்கே வேலைக்கான தேவை அதிகம் இருப்பதால் தொடர்ந்து இங்கேயே தங்கி விட்டதாகக் கூறினார். கட்டாக்கில் அவரது வீட்டில் பெற்றோருடன் அவர் உடன் பிறந்த சகோதரிகள் நால்வர் இருந்திருக்கின்றனர். அவர்கள் நால்வருக்கும் திருமணத்தை இங்கே ஈட்டிய வருமானத்தைக் கொண்டு நடத்தி வைத்திருக்கிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் . இருவரும் கட்டாக்கில் பள்ளிக்கல்வி பயில்வதாகச் சொன்னார். அவருடைய வாழ்க்கைக்கதையைக் கேட்டது மகிழ்ச்சி அளித்தது ; மனதுக்கு நம்பிக்கை அளித்தது. 

Monday 11 September 2023

அன்புள்ள நண்பனுக்கு

 அன்புள்ள நண்பனுக்கு,

இந்த ஒரு வாரம் என்பது மறக்க இயலாத பயணங்களாலும் உரையாடல்களாலும் இனிய நினைவுகளாலும் ஆனதாக இருந்தது. பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் நிலப்பரப்புகளில் அதன் நிலக்காட்சிகளைக் கண்டவாறு அலைந்தோம். நாம் கண்ட பகுதிகள் வானம் பார்த்த பூமி. வட கிழக்கு பருவ மழையை மட்டுமே நம்பியிருக்கும் பகுதிகள். அங்குள்ள விவசாயிகள் கடுமையான உழைப்பாளிகள். பொதுவாகவே தண்ணீர் குறைவாக இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையான உடல் உழைப்பை நல்கக் கூடியவர்களாக இருப்பார்கள். கடந்த 20 ஆண்டுகளில் ஆழ்துளை நீர்க்கிணறுகள் மூலம் புவியின் வெகு ஆழத்திலிருந்து தண்ணீரை மேலே எடுக்கிறார்கள். எனவே முழுக்க மழையை நம்பியிருப்பது என்பது அளவில் சற்று குறைந்திருக்கிறது. தமிழகத்தில் மரப்பயிர் செய்யக் கூடிய பிரதேசமும் இதுவே. பலா, சவுக்கு, கொய்யா ஆகிய மரப்பயிர்கள் இங்கே அதிகமாக உள்ளன. மரப்பயிருக்கு தண்ணீர் அதிக அளவில் தேவைப்படாது. இருக்கும் தண்ணீரைக் கொண்டு அதனை சிக்கனமாகப் பயன்படுத்தி மரங்களை வளர்த்து விட முடியும். நூறிலிருந்து நூற்று இருபது நாட்கள் தமிழகத்தில் சராசரியாக மழை பொழியும் நாட்கள். இந்த மழை நீரை சரியான விதத்தில் நிர்வகித்தால் இந்த பிரதேசத்தின் விவசாயப் பிரச்சனையை சமாளித்து விடலாம். 

விவசாயிக்கு விவசாயம் லாபமளிப்பதாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்த தொழில் தொடர்ந்து நிகழ முடியும். அதுவே இயல்பான செயலாகவும் இருக்க முடியும். ‘’காவிரி போற்றுதும்’’ அதற்காகவே முயல்கிறது. 

ஏழ்மை என்பது அகற்றப்பட வேண்டும். எந்தெந்த வழிகளில் எல்லாம் ஏழ்மை அகற்றப்பட இயலுமோ அத்தனை வழிகளிலும் முயற்சிகள் நடக்க வேண்டும் என்பது எனது விருப்பம். ‘’அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய் போல் போற்றாக் கடை’’ என்கிறார் திருவள்ளுவர். ஏழ்மை சமூகத்தின் பொதுப் பிரச்சனை என்றே நான் கருதுகிறேன். அதனை தீர்க்க வேண்டியது சமூகத்தில் உள்ள அனைவரின் கடமை என்றே நான் எண்ணுகிறேன். 

நண்பா ! இந்த பயணத்தில் நாம் நிகழ்த்திய உரையாடல்கள் நிறைவளித்தன. காணும் ஒரு காட்சியிலிருந்து ஒரு உரையாடல் தொடக்கத்தை நான் நிகழ்த்துவதும் பின்னர் அந்த உரையாடலை கேள்விகள் மூலம் நீ நீட்டித்து முன்னெடுத்துச் செல்வதும் அந்த உரையாடலிலிருந்து அந்த விஷயத்தின் அடுத்த கட்டத்திற்கு செல்வதும் மேலும் அது தொடர்புடைய இன்னொரு விஷயத்துக்குச் செல்வதும் அனைத்தும் நிகழ்ந்து முடிந்த பிறகு நாம் இன்னும் ஒரு சொல் கூட உச்சரிக்கவேயில்லை என எண்ணும்படியான மறுதுவக்கத்துக்கு வந்து சேர்வதும் என மீண்டும் மீண்டும் நிகழ்ந்த செயல்கள் இனியவையாக இருந்தன. 

நான் நம் நாட்டின் மக்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஜீவனுடன் நிலைத்திருக்கும் ஒரு பண்பாட்டின் அங்கங்களாகக் காண்கிறேன். ஒரு வார காலமாக நிகழும் நம் பயணத்தை முகாந்திரமாகக் கொண்டே நாம் இதனை பரிசீலிக்கலாம். நமக்கு வழி சொன்னவர்கள் நம்முடன் உரையாடியவர்கள் நமக்கு சிறு சிறு உதவி செய்தவர்கள் என நாம் சந்தித்த மனிதர்களை நினைவில் மீட்டாலே நாம் அதனை உணர முடியும். பிறரை நேசிக்க பிறர் மீது அன்பு செலுத்த பிறருக்கு உதவ நம் பண்பாடு மக்களைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது. அது என்றும் இருப்பது. எப்போதும் அழியாதது. எனவே மக்களைச் சந்திப்பது என்பதும் பயணங்கள் செய்வது என்பதும் அந்த உண்மையை அந்த உணர்வை மீண்டும் மீண்டும் அறிந்து என்னை நானே புதுப்பித்துக் கொள்ளும் செயல்பாடுகள் ஆகும். 

நமது பயணத்தின் முதல் கட்டமாக நாம் வடலூர் சத்திய ஞான சபைக்குச் சென்றிருந்தோம். வடலூர் ராமலிங்க சுவாமிகள் ஒரு பெரும் யோகி. ஞானத்தேடலில் அவர் தீவிரமாக ஈடுபட்டு பலவிதமான ஆத்ம சாதனைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இறைமை உணர்வை அடையக் கூடிய எல்லா வழிகளிலும் அவரது முயற்சி இருந்திருக்கிறது. அவர் தில்லை நடராஜப் பிரானை ஆறுமுகக் கடவுளை போற்றிப் பாடிய பாடல்கள் திருவருட்பாவில் உள்ளன. தன் ஆத்ம சாதனையின் பயனாக இறைமையை அவர் ஒளி வடிவம் என உணர்ந்தார். தீபத்தை இறையருளின் வடிவமாகவும் கருணையை இறைமையின் வெளிப்பாடாகவும் கண்டவர் வள்ளலார். நம் நாட்டின் கோடிக்கணக்கான குடும்பங்களில் வீடுகளில் காலைப் பொழுதிலும் மாலை அந்தியிலும்  பெண்மணிகள் தீபம் ஏற்றுவதை தங்கள் தினசரி நடைமுறையாக வைத்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த விஷயத்தை நாம் இன்னும் ஆழமாக யோசித்துப் பார்த்தால் நமக்கு ஒரு விஷயம் புலப்படும். வள்ளலார் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்தவர். அப்போது அச்சு ஊடகம் ஆரம்ப நிலையில் இருந்தது. அச்சிடப்பட்ட கடவுளர் உருவங்கள் மக்கள் வழிபாட்டுக்குள் வந்திருக்க வாய்ப்பில்லை. கடவுளர் சிலைகள் ஆலயங்களில் வழிபடப் பட்டிருக்கும். கிராமங்களில் வினாயகர் சிலைகள் மரத்தடிகளிலும் குளத்தங்கரைகளிலும் இருந்திருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் தீபம் ஏற்றுவதையும் தீபத்தை வழிபடுவதையும் தங்கள் சமய நெறியாக மேற்கொண்டிருப்பார்கள். எங்கள் பகுதிகளில் ‘’அந்தி விளக்கே அழியாச் செல்வமே வீட்டுக்கு வந்த மகாலஷ்மி ... ‘’ எனத் தொடங்கி கூறப்படும் சிறு பாடல் ஒன்றை பலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.  நம் நாட்டின் எல்லா குடும்பங்களும் வழிபட்ட தீப வழிபாட்டையே வள்ளலார் முன்வைத்தார். தீபத்தை அருளாகவும் கருணையாகவும் கண்டது அவரது ஆன்ம தரிசனம். 

தீபச்சுடர் என்பது எப்போது காணும் போதும் நம்பிக்கை அளிப்பது. நாம் இருக்கும் அறைகளில் எப்போதும் ஒரு தீபச்சுடர் ஒளிர்ந்து கொண்டிருப்பது நமக்கு நன்மை பயப்பது என்று கூறப்படுகிறது. தாவர எண்ணெயில் எரியும் தீச்சுடர் தனது ஒளி நிறையும் பரப்பு முழுதுக்கும் ஒரு உயிர்த்தன்மையை அளிக்கிறது என்பதை தீபம் ஏற்றும் எவரும் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். 

பசித்திருப்பவருக்கு உணவளிப்பதே சிறந்த வழிபாட்டு முறை என ஒட்டு மொத்த மானுடத்துக்கும் அறிவித்தவர் வள்ளலார். வயிற்றில் எரியும் பசித்தீயை மறைகள் ‘’வைஸ்வாநரன்’’ என்கின்றன. அந்த தீயில் அன்னத்தை அவியாக இடுதலை நம் மரபு வேள்விச்செயல் என வகுக்கிறது. 

நாம் வடலூரிலிருந்து உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம் சென்றோம். சேவையே உன்னதமான அறம் என்பதை முன்வைக்கும் ஸ்ரீராமகிருஷ்ணரின் நெறியின் படி இயங்கும் பள்ளியில் ஸ்ரீராமகிருஷ்ணர், சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் ஆலயத்தில் அவர்களை வணங்கி அவர்கள் முன் சில நிமிடங்கள் கண் மூடி அமர்ந்திருந்தோம். பின் மதியப் பொழுதாகியிருந்தது அப்போது. அங்கே நமக்கு உணவளித்து உபசரித்தார்கள். சகோதரி கிருஸ்டைன் எழுதிய ‘’நான் கண்ட விவேகானந்தர்’’ என்னும் நூலை அங்கிருந்த நூல் விற்பனை மையத்தில் வாங்கினோம். 

உலகில் உள்ள எல்லோருக்குமே புத்தர் மீது பிரியமும் ஈர்ப்பும் இருக்கும். புத்தரை விரும்பாத குழந்தைகள் உண்டா ? புத்தரை விரும்பாத இளைஞர்கள் உண்டா? புத்தரைத் தம் மகவாகக் கருதாத பெண்கள் உண்டா? பாரதி நம் நாட்டை ‘’பூரண ஞானம் பொலிந்த நன்னாடு ; புத்தர்பிரான் அருள் பொங்கிய நாடு’’ என்கிறான்.  சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் பௌத்தம் குறித்து பேசியிருக்கிறார். ஒரு விதத்தில் , தான் ஒரு பௌத்தன் என்று சொல்கிறார். சமணம் உருவாக்கிய சென்றடைந்த இடத்திலிருந்து தனது ஞானப் பயணத்தைத் துவக்கியவர் புத்தர். எனவே மேலும் முன்னகர்ந்தவர். அவரது முன்னகர்வு என்பது எல்லா மானுடருக்கும் துயர் என்பது ஏதும் அற்ற புத்தநிலை சாத்தியம் என்பதை உரைத்தது. புத்தரின் மார்க்கத்தை தனது துவக்கப்புள்ளியாகக் கொண்டு தனக்கான மார்க்கத்தைக் கண்டடைந்தவர் ஆதிசங்கரர். மகாவீரர், புத்தர், ஆதி சங்கரர் ஆகிய மூன்று ஞானிகளும் நம் நாட்டின் பண்பாட்டு அடிப்படைக்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்தவர்கள். மக்கள் சமூகங்கள் ஒற்றுமையாலும் நல்லெண்ணத்தின் அடிப்படையாலும் மேலான புரிதலாலும்  இணைக்கப்பட வேண்டியவை என்னும் நம்பிக்கை கொண்டு நம் நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தும் பணியை வெவ்வேறு அறச் செயல்கள் மூலம் 3000 ஆண்டுகளுக்கு மேலாக முன்னெடுக்கும் சமயம் சமணம். உடல் வலிமையால் பிறரை வெற்றி கொள்வது வீரம் என்றால் அகவலிமையால் தன்னை வெல்வதே மகாவீரம் எனவும் அத்தகைய மாவீரத்தின் இயல்பு சக உயிர்களிடம் கருணையுடன் இருத்தல் எனவும் பறைசாற்றி நிறுவியது சமணம். மகாத்மா காந்தி அடிகளிடம் சமணத்தின் தாக்கம் கணிசமாக உண்டு. திருநறுங்குன்றம் குகையில் பார்ஸ்வநாதர் சிலை முன் அமர்ந்திருந்தது ஒரு பெருங்கருணையாளன் முன் அமர்ந்து அவனது கருணையின் ஆசியைப் பெற்றது போல் உணர வைத்தது. 

பேராலயங்கள் நம் லௌகிக எல்லைகளைத் தகர்க்கின்றன ; இயற்கையின் பெருங்கட்டமைப்பின் ஒரு பகுதி என நம்மை உணர வைக்கின்றன. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம் அத்தகைய ஒன்று. அப்பகுதியின் மக்கள் தினமும் ஆலயத்துக்கு வந்து இறைவணக்கம் செலுத்துவதை தங்கள் வழமையாகக் கொண்டிருக்கிறார்கள். 

நமது முதல் நாள் பயணம் வடலூர், உளுந்தூர்பேட்டை, திருநறுங்குன்றம் , விருத்தாசலம் என்பதாக அமைந்தது. அன்றைய தினம் முழுக்கவே பரவசமாக இருந்தது. 

இரண்டு தினங்களுக்குப் பின், நாம் காவிரி பாய்ந்து செழிக்கச் செய்யும் சோழ நாட்டின் மையப் பகுதியில் பயணித்தோம். நம் நாட்டில் ஒரு மரபு இருக்கிறது. காலை எழுந்தவுடன் ஏழு நதிகளின் பெயர்களைக் கூறி வணங்குவார்கள். ‘’கங்கா யமுனா சரஸ்வதி சிந்து காவிரி நர்மதா கோதாவரி’’ எனக் கூறுவார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எத்தனையோ தலைமுறைகளுக்கு நதிகள் உணவளித்து உயிர்த்திருக்கச் செய்திருக்கின்றன. ‘’சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி’’ என கம்பராமாயணத்தில் ஓரிடத்தில் சொல்கிறான் கம்பன். எவ்விதமான தடைகளற்ற நகர்வைக் குறிக்கும் அந்த வரி அறத்தின் பெரும்பெருக்கையும் சுட்டிக் காட்டுகிறது. நதிதீரம் என்பது வானம் போல. எந்நாளும் பார்த்துத் தீராதது. காவிரியின் பெயரால் ‘’காவிரி போற்றுதும்’’ என ஒரு அமைப்பை நடத்தும் வாய்ப்பு அமைந்ததை அன்னை காவிரியின் கருணை என்றே கொள்கிறேன். 

நமது பயணத்தின் மூன்றாம் கட்டமாக ஓரிரு நாளில் மீண்டும் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் பயணித்தோம். வெங்கடாம்பேட்டை விஷ்ணு ஆலயம். ஸ்ரீராமர் சயனிக்கும் சிற்பம் அகம் கரைக்கும் அழகு கொண்டது. கருவறையில் குழலின் இனிய இசையை எழுப்புகிறான் வேணுகோபாலன். மேலசித்தாமூர் சமண மடத்துக்கும் ஆலயத்துக்கும் சென்றது மிகவும் முக்கியமான அனுபவம். பின்னர் அருகில் இருக்கும் விழுக்கம் சமண ஆலயத்துக்குச் சென்றோம். 

நீ பணிக்குத் திரும்பும் காலம் நெருங்கியது என்னும் நிலையில் எதிர்பாராத வகையில் கம்பர் பிறந்த திருவழுந்தூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 

ஒரு வாரத்தில் மூன்று கட்டமாக மேற்கொண்ட இந்த பயணம் கங்கையை நோக்கி மேலும் ஒரு இரு சக்கர வாகனப் பயணத்தைத் துவக்க வேண்டும் என்னும் ஆவலை ஏற்படுத்தியது. அவ்வாறெனில் அக்டோபர் முதல் வாரம் பயணத்தைத் துவக்க வேண்டும். நவம்பர் டிசம்பரில் நம் நாட்டின் வட பகுதியில் பனிமூட்டம் தொடங்கி விடும். குளிர் அதிகமாக இருக்கும். அக்டோபரில் எனக்கு தொழில் சார்ந்து பணிகள் உள்ளன. அவ்வாறெனில் மார்ச் மாதத்துக்குப் பின்னரே நெடும்பயணத்தைத் துவக்க முடியும். பயணம் செல்ல வேண்டும் என மனத்தில் நினைத்தால் போதும் ; அதற்கான வழியை அந்த நினைவே கண்டடைந்து சொல்லும் என்பது எனது அனுபவம். அவ்வாறே அது நிகழட்டும் என விட்டுவிட்டேன். 

சமண தீர்த்தங்கரர்களை வணங்கியது ஒரு நீண்ட உபவாசத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கியது. மகாத்மா காந்தி உபவாசத்தை ஆன்ம சாதனைக்கான மார்க்கமாகக் காண்கிறார். இந்த விஷயத்தில் இறை விருப்பம் எப்படியோ அப்படி நிகழட்டும். 

உனது வாகனம் மிகவும் விரும்பத்தகுந்ததாக இருந்தது. இனிமையான பயண அனுபவத்தை அளித்தது. நீ வாகனத்தை மிகவும் சிறப்பாக இயக்கினாய். நான்கு சக்கர வாகனம் எத்தனை வசதி கொண்டதாயினும் நீண்ட தூரப் பயணங்களுக்கு இரு சக்கர வாகனமே மேலும் சிறப்பானது. உனது வார விடுமுறை நாட்களில் உனது ஊரிலிருந்து 120 கி.மீ தூரம் உள்ள இடத்துக்கு இரு சக்கர வாகனத்தில் காலை புறப்பட்டுச் சென்று மாலை வீடு திரும்பு. அன்றைய தினம் 240 கி.மீ இரு சக்கர வாகனப் பயணம் நிகழ்த்தியதாயிருக்கும். ஒவ்வொரு வார இறுதியிலும் ஒவ்வொரு திசை என நான்கு வாரங்களுக்கு நான்கு திசையில் அதே முறையில் பயணம் செய். உனது உடலும் மனமும் இரு சக்கர வாகனத்துக்குப் பழகி விடும். அதன் பின் எத்தனை நாள் வேண்டுமானாலும் நாம் சென்று கொண்டேயிருக்க முடியும். 

அன்புடன்,

பிரபு

Sunday 10 September 2023

கம்பன் ஊர்

 நண்பன் கே. எஸ் தனது உறவினர்களுடன் மயிலாடுதுறையில் ஒரு திருமண வரவேற்புக்கு நேற்று வருகை புரிந்தான். சிதம்பரத்தில் இருந்து புறப்படும் போது எனக்கு ஃபோன் செய்தான். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அளித்தது போக கூடுதலாக 1 மணி நேரம் இருந்தால் உன்னை ஒரு முக்கியமான ஊருக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னேன். அவன் ஒத்துக் கொண்டான். 

நாங்கள் இருவரும் ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள திருவழுந்தூருக்குச் சென்றோம். கம்பன் பிறந்த ஊர். 108 திவ்யதேசங்களில் 10 வது திவ்யதேசமானது இந்த ஊர். பெருமாளின் பெயர் தேவாதிராஜன். நின்ற திருக்கோலம். பெருமாளின் மார்பில் திருமகள். கருவறையில் பெருமாளுடன் மார்க்கண்டேயர், கருடன், காவிரித் தாயார், பிரகலாதன் ஆகியோர் உள்ளனர். பெருமாள் பிரகலாதனுக்கு அருள் கொடுத்த தலம். கம்ப ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் கம்பர் ‘’இரணியன் வதைப் படலம்’’ என ஒரு படலத்தை இயற்றியிருப்பார். அதில் எழுதப்பட்டிருக்கும் பிரகலாதன் குறித்த வரிகள் மகத்தானவை. வாசிக்கும் எவர் கண்ணிலும் நீர் மல்கச் செய்பவை. 

உற்சவரின் பெயர் கோசஹன். ஆமருவியப்பன். 

நண்பனுக்கு இத்தனை பெரிய கோவிலும் இத்தனை பெரிய பெருமாளும் ஆச்சர்யம் தந்தது. அவன் கம்பன் மீது பெரும் பித்து கொண்டவன். அங்கே இருந்த கம்பர் சன்னிதியில் கம்பரை வணங்கினான்.  

Friday 8 September 2023

நடுநாட்டில்

 வைணவ மரபில் திருவஹிந்த்ரபுரத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதியை நடுநாடு என்று சொல்வார்கள். நடுநாட்டில் அமையப் பெற்றுள்ள திவ்யதேசங்கள் இரண்டு. திருவஹிந்திரபுரம் மற்றும் திருக்கோவிலூர். 

நண்பன் கே. எஸ் சின் விடுமுறை முடிவடைய உள்ளது. சென்ற வாரத்தில் இரண்டு பயணங்கள் நிகழ்த்தியிருந்த நிலையில் முத்தாய்ப்பாக ஒரு மூன்றாவது பயணத்தை நிகழ்த்த வேண்டும் என்று அவனிடம் சொன்னேன். அடுத்தடுத்த பயணங்களால் நண்பனின் உடல் சற்று சோர்ந்திருக்கிறது. எனக்கு நீண்ட தூரம் பயணம் செய்தால் உடலும் மனமும் உற்சாகம் கொண்டுவிடும். மோட்டார்சைக்கிளில் நீண்ட தூரம் பயணித்திருப்பதால் பயணம் துவங்கிய சில நிமிடங்களில் மனநிலை உற்சாகத்துக்குச் சென்று விடும். அதன் பின்னர் அந்த உற்சாகமே அலை போல நாள் முழுதும் கொண்டு சென்று விடும். 

சென்ற இரண்டு பயணங்களும் புறப்பட காலை 9 மணி ஆனது. எனவே இந்த பயணத்தை காலை 6 மணிக்குத் துவக்கிட வேண்டும் என்று சொன்னேன். அதிகாலை 6 மணிக்கா என்றான் கே.எஸ். கொஞ்சம் யோசித்து காலை 7.30 என்றான். நேற்றிரவு நேரத்தை உறுதி செய்து கொண்டோம். அதிகாலையில் அலாரம் வைத்திருந்தேன். அலாரம் அடிப்பதற்கு முன்னரே விழிப்பு வந்து விட்டது. குளித்துத் தயாரானேன். வெளியூர் சென்றால் பெரும்பாலும் எனது இரு சக்கர வாகனத்தை வீட்டிலேயே வைத்து விட்டு செல்வேன். வீட்டில் இருப்பவர்களுக்கு நான் வீட்டில் இருப்பது போலவே தோன்றும் என்பதால். 

காலைப் பேருந்தைப் பிடித்து சிதம்பரம் சென்று சேர்ந்தேன். பொதுமக்கள் போக்குவரத்தை நான் மிகவும் விரும்புவேன். பலவிதமான மக்களைக் காண முடியும். உரையாட முடியும். பேருந்து நிலையத்தில் சில நிமிடங்கள் காத்திருந்தேன். நண்பன் வந்து என்னை அழைத்துக் கொண்டான். 

புவனகிரி குறிஞ்சிப்பாடி வழியாக வெங்கடாம்பேட்டை விஷ்ணு ஆலயத்துக்குச் சென்றோம். கிருஷ்ணன் வேணுகோபாலனாக குழல் ஊதிக் கொண்டிருக்கிறான். திருப்புல்லாணி ஆலயம் போல இங்கும் ஸ்ரீராமபிரான் சயனத்திருக்கோலத்தில் இருக்கிறான். ஒரு குழந்தையைப் போல ஸ்ரீராமன் உறங்குவதாகத் தோன்றியது. நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம். 50 அடி உயரம் கொண்ட ஊஞ்சல் மண்டபம் ஆலயத்தின் எதிரில் அமைந்திருந்தது. அங்கே பெருமாளை சேவித்து விட்டு கோலியனூர் புறப்பட்டோம். 

திருநறுங்குன்றத்தில் சில நாட்களுக்கு முன்னால் சந்தித்த தம்பதி கோலியனூர் சமண ஆலயம் குறித்து கூறியிருந்தார்கள். அந்த ஆலயத்துக்குச் சென்றோம். ஆதிநாதர் முன் அமைதியாக அமர்ந்திருந்தோம். அந்த ஆலயத்தின் அர்ச்சகர் அருக நெறி எவ்விதம் அன்றாட வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக விளங்கக் கூடியது என்பதை விளக்கினார். அருகர் நிழலில் சில நாட்கள் தங்கியிருக்குமாறு வருமாறு அழைப்பு விடுத்தார். அவர் அவ்விதம் அழைத்தது பேருவகை அளித்தது. ஒரு சில வாரங்களில் வருவதாகக் கூறினேன். 

அங்கிருந்து திண்டிவனம் சென்று மேல்சித்தாமூர் என்ற ஊரில் உள்ள ‘’ஜின காஞ்சி மடம்’’ என்னும் மடத்துக்குச் சென்றோம். தமிழ்நாட்டின் முக்கியமான சமண மடம் ‘’ஜின காஞ்சி மடம்’’. அங்கே ஆதிநாதர் ஆலயமும் உள்ளது. அங்கே ‘’சமணப் பண்பாடு’’ என்ற நூலை அளித்தார்கள். அங்கிருந்து அருகில் சில கிலோ மீட்டரில் இருந்த ‘’விழுக்கம்’’ என்ற ஊருக்குச் சென்றோம். அங்கும் ஒரு சமண ஆலயம். 

மதியம் 2 மணி அளவில் புறப்பட்டோம். விக்கிரவாண்டியில் மதிய உணவு. நான்கு மணி அளவில் சிதம்பரம் வந்து சேர்ந்தோம். 

ஒரு பேருந்தைப் பிடித்து ஊர் வந்து சேர்ந்தேன். பேருந்தில் கூட்டம் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது. அமர நல் இருக்கை ஒன்று எனக்கு வாய்த்தது. 

கட்டுமானப் பணியிடத்தின் மேஸ்திரிக்கு ஊர் வந்ததும் ஃபோன் செய்தேன். என்னை பிக் அப் செய்து கட்டுமானப் பணியிடத்துக்கு அழைத்துச் சென்றார். இன்று பணியிடத்தில் மூன்று பேர் தான் பணி புரிந்திருந்தனர். மேசன் ஒருவர் . பணியாளர் இருவர். ரூஃப் மட்டத்துக்கு மீதமிருந்த கட்டு வேலையை செய்து முடித்திருந்தனர். முன்னர் கட்டிய சுவர்களுக்கு தண்ணீர் பிடித்தனர். வேலை முடியும் வரை கட்டுமானப் பணியிடத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருந்தேன்.  ககன், புவன், மங்கள் , சநு வுக்கு பிஸ்கட் போட்டேன்.  மேசன் என்னை வீட்டில் டிராப் செய்து விட்டு சென்றார். 

தொழில் நிமித்தம் இரண்டு பேரை சந்திக்க வேண்டியிருந்தது. ஒருவர் உள்ளூர்வாசி. இன்னொருவர் ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் இருப்பவர். இருவரையும் சந்தித்தேன். வீடு திரும்ப இரவு 10 மணி ஆகியது. 

பயணத்தைக் காலையிலேயே துவக்கியதால் இத்தனை இடங்களுக்கும் சென்று விட்டு ஊர் திரும்பி மீண்டும் வெளியூரில் இருக்கும் ஒருவரை சந்திக்க முடிந்தது என எண்ணிக் கொண்டேன்.  

Wednesday 6 September 2023

தனிப்பெருங்கருணை

 தனிப்பெருங்கருணை

---------------------------------------

மண்ணில் நிலை கொண்டுள்ளன கால்கள்
பாதத்தில் ஒட்டிக் கொள்கின்றன மண் துளிகள்
பெருந்தோள்களில் அமர்ந்து கொள்கிறது வானம்
முதற்பெரும் ஒலியில் மூழ்கியிருக்கிறான் அருகன்
தாகமும் பசியும் கொண்ட புல் ஒன்று 
மேகங்கள் அற்ற
துல்லியமான வானைத் தீராமல் பார்க்கிறது
நீரைப் பிரசவிக்க கணம் வாய்க்கிறது வானுக்கு
பொழிகிறது
புல்லை உயிர்ப்பிக்கும் மழை

Tuesday 5 September 2023

நடுக்காவேரி

 நண்பன் கே.எஸ் ஐ சிதம்பரத்திலிருந்து ஊருக்கு காரில் வரச் சொன்னேன். நேற்று முந்தின தினம் தென்னாற்காடு மாவட்டத்தில் சுற்றியது போல இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றலாம் எனத் திட்டமிட்டேன். நேற்று முந்தின தினம் ஞாயிற்றுக்கிழமை. அன்று கட்டுமானப் பணியிடத்தில் விடுமுறை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணி நடைபெறும். சென்ற வாரம் பணிகள் கடுமையாக இருந்ததால் அன்று விடுப்பு எடுத்துக் கொண்டோம். அதனைப் பயன்படுத்தி நான் அன்றைய தினத்தில் பயணத்தை வைத்துக் கொண்டேன். மறக்க முடியாத பயணமாக அது அமைந்தது. 

நேற்று நண்பனுக்கு மாநில அரசு அலுவலகம் ஒன்றில் சிறு பணி ஒன்று இருந்தது. கொஞ்ச நேரத்தில் முடிந்து விடும் எனக் கணித்திருந்தான். ஆனால் நேற்று காலை அரசு அலுவலகம் சென்றவன் மாலை 5 மணிக்குத்தான் பணி முடிந்து வீடு திரும்பினான். நான் நேற்று கட்டுமானப் பணியிடத்தில் இருந்தேன். 

இன்று காலை 9 மணிக்கு சிதம்பரத்திலிருந்து ஊருக்கு வருவதாகச் சொன்னான். காலை 9.15 மணி அளவில் கட்டுமானப் பணியிடத்துக்கு பணியாளர்கள் வருவார்கள் ; அவர்கள் வந்ததும் பணியைத் துவக்கி வைத்து விட்டு கொஞ்ச நேரம் இருந்து விட்டு பயணம் புறப்படலாம் என்பது என் எண்ணம். ‘’கொஞ்ச நேரம்’’ என்பது சிவில் என்ஜினியர்கள் கணக்கில் ஒரு மணி நேரத்திலிருந்து ஒரு மணி முப்பது நிமிடம் வரை. நண்பன் பொறுமையாகக் காத்திருந்தான். இன்று மூன்று பணியாளர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள். அவர்களிடம் மதியம் வந்து விடுவேன் என்று சொல்லி விட்டு புறப்பட்டேன். 20 சிமெண்ட் மூட்டைக்கு பணம் கொடுக்க வேண்டியிருந்தது ; பணியிடத்துக்கு அருகில் உள்ள சிமெண்ட் கடையில் பணம் கொடுத்து விட்டு கிளம்பினோம். 

நண்பன் பசி பொறுக்க மாட்டான். இருப்பினும் ஊருக்கு அருகில் ஐ.டி நிறுவன ஊழியர் வயலில் 14 மாதங்களுக்கு முன் நடப்பட்டு இப்போது 15 அடி உயரத்தில் இருக்கும் தேக்கு மரங்களைக் காணச் சென்றோம். நண்பன் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டான். பின்னர் மெயின் ரோட்டில் இருந்த இன்னொரு தேக்கு தோப்பையும் காட்டினேன். 

அங்கிருந்து ஆடுதுறை சென்றோம். அப்போது காலை 11 மணி ஆகி விட்டது. அங்கே இருந்த பழமையான ஹோட்டல் ஒன்றில் காலை உணவு உண்டோம். எங்கள் பயணத்தை எங்கள் நட்பின் பொழுதைக் கொண்டாடும் விதமாக முதலில் கோதுமை அல்வா ஆர்டர் செய்தோம். அந்த ஹோட்டலின் பூரி மசால் மிகவும் பிரபலம். அதனை ஆர்டர் செய்து உண்டோம். அதன் பின்னர் நெய் பொடி இட்லி சாப்பிட்டோம். வயிறு ‘’ஃபுல்’’ ஆனது. 

அங்கிருந்து தஞ்சாவூருக்கு அருகே இருக்கும் கிராமம் ஒன்றில் வசிக்கும் இலக்கிய நண்பர் ஒருவரைக் காணச் சென்றோம். அவர் வீட்டில் மாலை 4 வரை பேசிக் கொண்டிருந்தோம். நண்பர் கவிதை எழுதுபவர் என கே. எஸ் ஸிடம் சொல்லியிருந்தேன். நண்பரின் கவிதைகளை அவரிடமிருந்து பெற்று அவரிடம் தனது அபிப்ராயங்களை கே. எஸ் ஆர்வத்துடன் கூறிக் கொண்டிருந்தான். தொடர்ந்து எழுதுமாறு கூறினான். நண்பர் வீட்டிலேயே மதிய உணவுண்டோம். அவர் வீட்டில் யாரும் இல்லை ; ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். நண்பர் சுவையான பருப்பு சாம்பார் வைத்திருந்தார். கெட்டித் தயிர் இருந்தது. சாம்பார் சாதமும் தயிரை மோராக்கி மோர் சாதமும் சாப்பிட்டுக் கிளம்பினோம். 

கிளம்பும் கணம் வரை அடுத்து எங்கு செல்வது எனத் திட்டமிடவில்லை. அந்த கணத்தில் ‘’திருப்பூந்துருத்தி’’ செல்வது என முடிவெடுத்தோம். திருவையாறு அருகே உள்ள தலம் திருப்பூந்துருத்தி. இறைவனின் பெயர் புஷ்பவனேஸ்வரர். பெயருக்கு ஏற்றார் போல ஆலயம் பூந்தோட்டமாக உள்ளது. அந்த ஆலயத்தின் சூழ்நிலையும் அமைதியும் மனத்தையும் உணர்வையும் தொட்டது. அந்த ஆலயத்தின் ஊழியர்களிடம் ஆலயம் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர்களிடம் இன்னும் சில நாட்களில் நாள் முழுக்க ஆலயத்தில் இருக்கும் வகையில் வருகிறேன் என்று சொன்னேன். அங்கே நிறைய நேரம் இருக்க வேண்டும் என்று தோன்றியது. 

காரில் நடுக்காவேரி என்ற ஊரின் வழியாக திருக்காட்டுப்பள்ளி வந்து கல்லணை பூம்புகார் சாலையைப் பிடித்தோம். நடுக்காவேரி ஊரைக் கடக்கும் போது என் மனம் பொங்கி கண்கள் கலங்கி விட்டன. அத்தனை பசுமை நெல்வயல்களிலும் வாழைத் தோட்டங்களிலும். அன்னை காவேரியின் கருணையை முழுமையாகப் பருகும் ஊர்கள் நடுக்காவேரியும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களும். இன்னதென்று கூற இயலாத உணர்வால் என் கண்கள் கலங்கின. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் உடைந்து அழுதிருப்பேன். கல்லணை பூம்புகார் சாலை வந்ததும் மனம் வழமையான நிலைக்குத் திரும்பியது. பல முறை சென்று வந்து பழகிய சாலை என்பது காரணமாக இருக்கலாம். 

நண்பன் கே.எஸ் தமிழ்ச் சமூகவியல் சார்ந்து பல கேள்விகளை எழுப்பினான். என்னுடைய பார்வைக் கோணத்திலிருந்து எனது பதில்களைச் சொன்னேன். 

இரவு 9 மணி அளவில் ஊர் திரும்பி கட்டுமானப் பணியிடத்துக்கு வந்தோம் . இன்று நடந்த பணி என்ன என்று பார்த்தேன். நண்பனை சிதம்பரம் அனுப்பி விட்டு நான் பைக் எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினேன். 

நாளை மாலை 4 மணி அளவில் சிதம்பரம் வருவதாகக் கூறினேன். தில்லை காளி அம்மன், நடராஜர், சிவபுரி, திருவேட்களம் ஆகிய சிதம்பரத்தைச் சுற்றியுள்ள ஆலயங்களுக்கு செல்வதாக முடிவெடுத்தோம். 

Monday 4 September 2023

என்ன செய்திருக்கிறோம் நாம் ?

 ’’காவிரி போற்றுதும்’’ முன்னெடுத்த செயல்கள் எதிர்பார்த்த பலன்களைக் கொடுத்திருக்கிறதா என்ற கேள்வி அதன் அமைப்பாளராக என் மனத்தில் எழும். ஒரு கிராமத்தின் விவசாயக் குடும்பங்களின் வருவாயை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதே நம் விருப்பம். இப்போது நாம் செயல்புரியும் கிராமத்தில் சில விவசாயிகள் நம் ஆலோசனைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார்கள். மேலும் பலரை நம் பணிகளும் ஆலோசனைகளும் சென்றடைந்து அவர்கள் பலன் பெற வேண்டும் என்பதே நம் விருப்பம். 

14 மாதங்கள் முன்பு ஒரு விவசாயி தனது 3 ஏக்கர் நிலத்தில் நம் ஆலோசனையின் பேரில் 1000 தேக்கு மரக்கன்றுகளை நடவு செய்தார். இன்று அவை 15 அடி உயரத்தை எட்டியுள்ளன. சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. எந்த வளைவும் இன்றி பிசிறும் இன்றி நேராக வளர்ந்துள்ளன. அவ்வாறு அவை வளர்வதை கவனம் கொடுத்து உறுதி செய்தோம். இன்னும் 14 ஆண்டுகளில் ஒவ்வொரு மரமும் ரூ. 1.00.000 விலை போகும். இந்த விலை அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை. 

அந்த விவசாயி பயன் பெற்றது போல கிராமத்தின் எல்லா விவசாயிக்கும் பலன் கிடைக்க வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு ; விருப்பம். 

நேற்று நண்பன் கே. எஸ் உடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது எனக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் ஒரு ஐ.டி நிறுவனம் நடத்துகிறார். அவரது நிறுவனத்தில் 250 ஊழியர்கள் பணி புரிகிறார்கள். செயல் புரியும் கிராமத்தில் அவருக்கு சில ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் முழுமையாக தேக்கு பயிரிட வேண்டும் என்று கூறினார். நான் உடனிருந்து எல்லா பணிகளையும் செய்து கொடுக்கிறேன் என்று சொன்னேன். 

நம் மீது அவர் காட்டும் பிரியமும் மரியாதையும் மிகப் பெரியது. அந்த அன்பே மீண்டும் மீண்டும் மேலும் உத்வேகத்துடன் செயல் நோக்கி செல்வதற்கான ஆர்வத்தை அளிக்கிறது. 

என்ன செய்திருக்கிறோம் நாம் என்ற கேள்விக்கான விடையாக அமைகிறது. 

Sunday 3 September 2023

திருத்தலங்கள் நான்கு

 எனக்கு கே.எஸ் என ஒரு நண்பன் இருக்கிறான். வட இந்தியாவில் பணி புரிகிறான். அலுவலகத்தில் அவனுக்கு 15 நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு சிதம்பரத்தில் உள்ள அவனது உறவுக்காரர் ஒருவரின் வீட்டுக்கு வந்திருக்கிறான். அவர்கள் வீட்டில் ஒரு கார் இருக்கிறது. அதனை எடுத்துக் கொண்டு பழைய தென்னாற்காடு மாவட்ட பகுதிகளைச் சுற்றி வருவோம் என்று சொன்னான். எங்காவது பயணம் செல்லலாம் என எவர் அழைத்தாலும் உடனே கிளம்பக் கூடியவன் நான். பயணம் செய்கையில் எனக்கு புதிதாக எண்ணங்கள் தோன்றும். புரியாத பிடிபடாத விஷயங்கள் புரியும் ; பிடிபடும். நூற்றுக்கணக்கான மனித முகங்களைக் காணும் போது உண்டாகும் மகிழ்ச்சி இணை கூற இயலாதது. 

இன்று காலை பேருந்தில் சிதம்பரம் சென்று நண்பனை அலைபேசியில் அழைத்தேன். பேருந்து நிலையம் வந்து நண்பன் அழைத்துச் சென்றான். நண்பரின் உறவினர் வீட்டில் காலைச் சிற்றுண்டி தயார் செய்து வைத்திருந்தார்கள். பூரியும் இட்லியும். கோதுமை அல்வா தயாரித்திருந்தார்கள். பிரியத்துடன் அவர்கள் அளித்த உணவை உண்டு விட்டு எங்கள் பயணத்தைத் துவங்கினோம். 

நண்பன் இப்போதுதான் கார் ஓட்டப் பழகியிருக்கிறான் என்றாலும் காரை மிகச் சிறப்பாகக் கையாள்கிறான். ஒருவர் வாகனத்தை எப்படி இயக்கக் கூடிய்வர் என்பது சில நூறு மீட்டர்கள் அவர் வாகனத்தை நகர்த்திச் செல்கையிலேயே தெரிந்து விடும். நண்பன் சிறந்த வாகன சாரதி என்பதைப் புரிந்து கொண்டேன். 

வண்டியை வடலூர் சத்திய ஞான சபைக்கு விடச் சொன்னேன். தினமும் காலை 11.30 மணியிலிருந்து 12 மணி வரை அங்கே ஜோதியை தரிசிக்க முடியும். மீண்டும் இரவு 7.30 மணியிலிருந்து 8 மணி வரை. நாங்கள் 11.30 மணிக்கு அங்கிருந்தோம். 

ஜோதி தரிசனம் கண்டோம். பாரதி ஜோதியை ‘’எழு பசும் பொற்சுடர்’’ என்கிறான். நம் உடலின் வெப்பமாக விளங்கும் தீ. நாம் உண்ணும் உணவை உடலாக மாற்றும் தீ. நம் சுவாசத்தில் உயிராக உயிர்க்கும் தீ. ஜோதி என்பது நம் உயிரே தான். எல்லா உயிரின் எல்லாவற்றின் சிறு வடிவே ஜோதி. இறைமை அருளின் வடிவம் என ஜோதியை உணர்ந்தார் இராமலிங்க அடிகள். சிறு தீச்சுடரில் ஒளிரும் தெய்வ சைதன்யத்தை உணரும் படி ஒட்டு மொத்த மானுடத்தின் முன் கூறினார் இராமலிங்க அடிகள். நூறு ஆண்டுகளாக சுடர்ந்து கொண்டிருக்கும் வள்ளலார் ஏற்றிய தீபத்தின் முன் அகம் கரைய நின்றோம். முப்பது நிமிடங்களுக்கு மேலாக ஜோதியை வழிபட்டோம். அருட்பிரசாதமாக வெல்லம் தந்தார்கள். 

நாங்கள் அடுத்து சென்ற இடம் உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம். அங்கே பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் திருக்கோவில் உள்ளது. அங்கு சென்று சில நிமிடங்கள் தியானத்தில் அமர்ந்திருந்தோம். அங்கிருக்கும் நூலகத்தில் சுவாமி விவேகானந்தர் நூல்கள் சிலவற்றை வாங்கினோம். ஆஸ்ரமத்தில் மதிய உணவருந்தச் சொன்னார்கள். உணவருந்தினோம். அங்கிருந்த துறவியரை வணங்கி விட்டு புறப்பட்டோம். 

உளுந்தூர்பேட்டையிலிருந்து 15 கி.மீ தொலைவில் திருநறுங்குன்றம் என்ற சமணத்தலம் உள்ளது. பகவான் பார்ஸ்வநாதர் எழுந்தருளியிருக்கும் திருத்தலம். ஒரு குகையில் புடைப்புச் சிற்பமாக பகவான் இருக்கிறார். ஆலய நடை மாலை 4 மணிக்குத் திறந்தது. வழக்கமாக காலை 6 மணியிலிருந்து மதியம் 12 மணி வரைதான் ஆலயம் திறந்திருக்கும் என்றும் இன்று அரிதாக மாலையில் திறந்துள்ளது என்று அங்கே இருந்த சிப்பந்திகள் கூறினார்கள். அந்த சமயத்தில் நெய்வேலியிருந்து ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரும் அவரது மனைவியும் வந்திருந்தார்கள். நண்பன் அவர்களிடம் சமணம் குறித்து ஆர்வமாக உரையாடிக் கொண்டிருந்தான். அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. எங்களுக்கும் மகிழ்ச்சி. பார்ஸ்வநாதர் முன் சில நிமிடங்கள் தியானத்தில் அமர்ந்தோம். 

திருநறுங்குன்றத்திலிருந்து மாலை 6.15க்கு கிளம்பினோம். அங்கிருந்து விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம் வந்தோம். தமிழகத்தின் பேராலயங்களில் ஒன்று விருத்தாசலம். பெரிய பெரிய கோபுரங்களும் மண்டபங்களும் நிறைந்திருந்த ஆலயத்தின் இறைவன் முன் சில நிமிடங்கள் அமர்ந்தோம். 

இரவு 9 மணி அளவில் சிதம்பரம் வந்தோம். 

நான் அங்கிருந்து பயணித்து 10 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். 

நாளையும் நாளை மறுநாளும் இதைப்போல் வேறு வேறு இடங்களுக்குப் பயணிப்போம் என்று கே.எஸ் கூறினான். 

Friday 1 September 2023

அற்புதம்

 மேற்கு வானில் சூரியன். கிழக்கே மழை மேகங்கள். சிறு மென்காற்று மேகங்களை குளிரச் செய்து மழையாக்குகிறது. 

மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறேன். சற்றே பெரிய துளிகளாக மழைத்தாரைகள் வானிலிருந்து கீழிறங்குகின்றன. ஒவ்வொரு துளியும் வானில் மிதந்து கொண்டிருப்பதைக் கண்ணால் காண முடிகிறது. ஆம். ஒவ்வொரு துளியையும். 

பொழுதைப் பரவசமாக்கிக் கொண்டிருந்தது காட்சி. 

அற்புதம் என்பது இதுதான் என அக்கணம் உணர்ந்தேன். 

நாம் அடைத்து வைத்திருக்கும் எத்தனையோ விஷயங்களை மனதிலிருந்து அகற்றுவோம் எனில் விரும்பியோ விரும்பாமலோ சுமக்கும் பாரங்களை நீக்கிக் கொள்வோம் எனில் இந்த வாழ்வின் ஒவ்வொரு கணமும் அற்புதமே.