நேற்று அதிகாலை விழிப்பு வந்து எழுந்து விட்டேன். காலை 3.30க்கு அலாரம் வைத்திருந்தேன். அலாரம் இன்னும் ஒலிக்கவில்லை ; அதாவது 3.30க்கு முன்னாலேயே விழித்திருக்கிறேன் என எண்ணினேன். மின்விளக்கினை இயக்கி அதன் ஒளியில் அப்படியே படுத்திருந்தேன். சில நிமிடங்கள் அப்படியே கடந்தன. அன்றைய பைக் பயணம் குறித்து எண்ணிக் கொண்டிருந்தேன். எனக்கும் வாகனத்துக்கும் ஓர் ஒத்திசைவு ஏற்பட வேண்டும். இப்போது வைத்திருக்கும் வாகனத்தில் மிக அதிக தூரங்கள் சென்றதில்லை . 40 கி.மீ, 100 கி.மீ தூரத்தில் இருக்கும் ஊர்களுக்கு பலமுறை அடிக்கடி சென்று வந்திருக்கிறேன். ஒருமுறை திருக்கோவிலூர் சென்று வந்தேன். அதுவே அந்த வாகனம் பயணிக்கும் அதிகபட்ச தூரமாக இருக்கக் கூடும். வாகனம் வாங்கி 2 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 35,000 கி.மீ ஓடியிருக்கிறது. அதாவது ஒரு மாதத்துக்கு 1500 கி.மீ. ஒரு நாளைக்கு 50 கி.மீ. இப்போது பல காரணங்களுக்காக நான் ரயில் பயணங்களைத் தேர்ந்தெடுக்கிறேன். இவையெல்லாம் புறவயக் காரணிகள். நமது வாகனம் நாம் எங்காவது செல்ல வேண்டும் என மனதில் நினைத்தாலே அதற்குத் தான் தயாராகி விட்டதை மிக உற்சாகமாக நம்மிடம் தெரிவிக்க வேண்டும். இந்த 2 ஆண்டுகளில் எனக்கும் எனது வாகனத்துக்கும் பலநாட்கள் வெளியூரில் ஒன்றாக இருக்கும் வாய்ப்பு அமையவில்லை. பூரி ஜகந்நாத் சென்றிருந்தேன். ஆமதாவாத் சென்றிருந்தேன். அங்கெல்லாம் ரயிலில் தான் சென்றேன். இந்த எண்ணங்கள் மனதில் சலனமுற்றுக் கொண்டிருந்த போது அலாரம் ஒலித்தது. அலாரத்தை நிறுத்தி விட்டு சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு புறப்படத் தயாரானேன். 3.30க்கு அலாரம் வைத்து எழுந்து தயாராகத் தொடங்கினால் எனக்கு எப்போதும் 60 முழு நிமிடங்கள் தேவைப்படும். இம்முறை 30 நிமிடங்களில் கிளம்பி விட்டேன். வீட்டின் வாசல் கதவுகளைத் திறந்து வைத்து வாகனத்தை எடுத்து வெளியே நிறுத்தினேன். இரண்டு நாள் பயணமாகத் திட்டமிடுவதால் பயணப்பை எதுவும் இல்லை. தலைக்கவசத்தை வாகனத்தில் முதல் நாள் இரவே வைத்திருந்தேன். முதல்நாள் வாகனத்துக்கு ரூ.500 க்கு எரிபொருள் நிரப்பியிருந்தேன். ஆகவே எனது செலவுகளுக்கு சொற்ப தொகையே தேவைப்பட்டது. அதனை வீட்டில் கேட்டு வாங்கி வைத்திருந்தேன். எனது வழக்கம் தினமும் நான் காலை வீட்டிலிருந்து புறப்படும் போது ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு மாலை வீடு திரும்பியதும் செலவு போக மீதி இருக்கும் தொகையை வீட்டிலேயே கொடுத்து விடுவது. இது சற்று பழைய கால வழக்கம். எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. வீட்டு கடிகாரம் காலை 4.15 என நேரம் காட்டியது. நான் புறப்பட்ட நேரம் அதுவே.
காலையில் சாலையில் வாகன இயக்கம் மிகவும் குறைவாகவே இருந்தாலும் நிதானமாகவே வாகனத்தை இயக்கினேன். பகல் நேரம் எனில் 45 நிமிடத்தில் சிதம்பரம் சென்று விடலாம். சூரியன் உதிக்காததால் 5.30 அளவிலேயே சிதம்பரம் வந்தடைந்தேன். என் கையில் ரூ.600 இருந்தது. மிகக் குறைவான தொகையை கையிருப்பாக வைத்துக் கொண்டு பயணிப்பது என்பதே எனது வழக்கம். இதை நான் எல்லாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். எனக்கு இது வழக்கமாகி விட்டது. அவ்வளவே. காலை நேரம் என்பதால் உடல் லேசாக பசியை உணர்ந்தது. ஒரு காஃபி அருந்தினேன். அது ஒரு சிறு ஸ்டால். காஃபி டிகாஷனுக்கு முக்கியத்துவம் அளித்து தயாரித்து வைக்கின்றனர். ஆகவே காலை நேரத்தில் காஃபி குடிக்க நடைப்பயிற்சி செய்பவர்கள் கணிசமாக அங்கே திரண்டிருந்தனர்.
நடைப்பயிற்சி அடிப்படையான ஒரு பயிற்சி. மிகக் குறைந்தபட்சமானது. தமிழ் மக்கள் தங்கள் ஒருநாள் பொழுதில் உடலை வளைத்துச் செய்வதற்கு எந்த உடற்பயிற்சியையும் பழகாதவர்கள். உதாரணத்துக்கு ஒருவர் 13 சூரிய நமஸ்கார் செய்து பழகியிருக்கிறார் என்றால் அந்தப் பயிற்சி அவருடைய உடலை நாள் முழுவதும் ஊக்கமாக வைத்திருக்கும். 10 தண்டால் எடுக்கிறார் என்றால் அதன் பயன் நாள் முழுதுக்கும் இருக்கும். 30 நிமிடம் வரை அளிக்கப்படும் யோகப் பயிற்சிகளும் அவ்வாறே. ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொண்டு அதன் மூலம் உடல் இயக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்றால் சீரான வேகத்தில் இரண்டு மணி நேரமாவது நடக்க வேண்டும். 100 பேர் நடைப்பயிற்சி செய்தால் இந்த இரண்டு மணி நேர அளவினை ஒருவர் அல்லது இருவர் பூர்த்தி செய்தால் பெரிது. மருத்துவர்கள் இதனை அறிவார்கள். ஆனால் வலியுறுத்தி சொல்ல மாட்டார்கள். தமிழக மக்களின் வழக்கம் தங்கள் நலனுக்காக தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்னும் பழக்கம் அவர்களுக்குக் கிடையாது. நடைப்பயிற்சி அடிப்படையானது எனினும் அதிலும் 2 மணி நேரம் நடக்குமாறு சொன்னால் அவர்கள் நடைப்பயிற்சியும் மேற்கொள்ளாமல் இருக்கவே வாய்ப்புகள் மிக அதிகம் என்பதால் ஒரு குறைந்தபட்ச துவக்கமாக இருக்கட்டும் என பொதுவாக நடைப்பயிற்சி என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். தமிழகத்தில் வாழும் மருத்துவர்களில் பெரும்பான்மையானோர் எந்த உடற்பயிற்சியும் செய்யும் வழக்கம் இல்லாதவர்கள். நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்யவே செய்யக் கூடாத ஒரு செயல் நடைப்பயிற்சியின் நடுவே தேனீரோ காஃபியோ அருந்தக் கூடாது. அவர்கள் உடல் நடைப்பயிற்சி மூலம் செலவு செய்த ஆற்றலைப் போல பல மடங்கு காஃபி தேனீர் மூலம் உடலுக்குக் கிடைத்து விடும். நம் சமூகம் வறுமையை வென்று விட்டது. வறுமையை வென்ற சமூகங்கள் மிகை உணவையும் மிகை தீனியையும் நோக்கியே சென்றிருக்கின்றன. அடுத்த 20 ஆண்டுகளில் உடல் வலிமை கொண்ட சமூகமாக நாம் உருவாக வேண்டும் என்றால் இப்போதுள்ள குழந்தைகளுக்கு தீவிரமான உடற்பயிற்சிகளையும் கால்பந்து , கைப்பந்து , கபடி , ஹாக்கி, பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளையும் அறிமுகப்படுத்தி தினமும் 1 மணி நேரமாவது அவர்கள் விளையாடுவதை உறுதி செய்ய வேண்டும். அந்த காஃபி ஸ்டால் காட்சி எனக்கு இந்த எண்ணங்களை அளித்தது.
கீழ் வானம் சிவக்கத் தொடங்கியிருந்தது. சிவந்த கீழ் வானத்தின் பின்னணியில் வாகனத்தில் பயணிப்பது என்பது எப்போதுமே ஓர் இனிய அனுபவம். விராளூர் என்னும் ஊருக்கு அருகே சிவப்பு சூரியன் வானில் எழுந்திருந்தான். வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு சிவப்பு சூரியனை இரு கரம் கூப்பி வணங்கினேன். உயிரின் நண்பனே ஆற்றலை வழங்குபவனே உன்னை வணங்குகிறேன். நீயே எங்கள் வாழ்வு. நீயே எங்கள் வாழ்வுக்குக் காரணம். இறைவா எங்களுக்கு ஆற்றலைக் கொடு. உனது அம்சத்தின் சிறு சிறு பகுதிகளை நாளும் எங்களுக்குக் கொடு. சூரிய ஒளி முன் நின்றிருப்பது என்பது சூரியக் கடவுள் நமக்கு அளிக்கும் ஆசிர்வாதம்.
வாகனம் சீரான வேகத்தை எடுக்க ஆரம்பித்தது. சிதம்பரத்திலிருந்து கம்மாபுரம் வழியாக விருத்தாசலம் சென்றடைந்தேன். அங்கிருந்து உளுந்தூர்பேட்டை சென்று எலவானசூர் கோட்டை என்னும் ஊர் வழியாக திருக்கோவிலூர் வந்தடைந்தேன். நான் சொல்லும் இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் இருக்கக் கூடும். இது குறித்து நான் முன்னரே எழுதவும் செய்திருக்கிறேன். அதாவது நானும் எனது நண்பர் ஒருவரும் சோழன் விரைவு வண்டியில் ( பகல் விரைவு வண்டி) விழுப்புரம் வரை வந்து அங்கிருந்து திருக்கோவிலூர் பேருந்தில் சென்றோம். அத்தனை சிறு சிறு கிராமங்கள். அதில் இருக்கும் விவசாயக் குடிகளான எளிய மக்கள். அங்கே ஓரிரு ரியல் எஸ்டேட் விளம்பரங்களைக் கண்டோம். மனைகள் சதுர அடி ரூ.100 என்ற விலையில் குறிப்பிடப்பட்டிருந்தன. இங்கே ரியல் எஸ்டேட் விலையேற்றத்துக்கு வாய்ப்பு இருக்குமா என்று விவாதித்தோம். நண்பர் சற்று கிண்டலாக ‘’இன்னும் 80 ஆண்டுகள் அல்லது 100 ஆண்டுகளில் நிச்சயம் மாற்றம் இருக்கும்’’ என்றார். இன்று அந்த பகுதியில் சாலைகள் மிகப் பெரிய சாலைகளாக விரிவாக்கப்பட்டு அருகில் இருக்கும் நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இன்று அந்தப் பிராந்தியமே பெரும் மாற்றம் கண்டு விட்டது. அடையாளம் தெரியவேயில்லை. 10 ஆண்டுகளில் இத்தனை மாற்றமா என்பது வியப்பாக இருந்தது. மக்கள் திரளின் முதலீடு சாலைகள் பெரிதாகும் போது வெளியே வருகிறது. அது நிகழ்த்தும் மாற்றங்களே அத்தனையும். அந்த ஊரின் மக்கள் தொகை 50,000 என வைத்துக் கொள்வோம். அதில் 2000 பேர் ஒரு நான்கு சக்கர வாகனம் வைத்துக் கொள்ளும் வசதியுடன் இருந்திருப்பார்கள். சாலைகள் குறுகலாக சிறிதாக இருந்தால் 200 பேர் மட்டுமே நான்கு சக்கர வாகனம் வாங்குவார்கள். மற்றவர்கள் அந்த பணத்தை நகைகள் வாங்கி முதலீடு செய்திருப்பார்கள் ; அல்லது விவசாய நிலம் வாங்கியிருப்பார்கள். பெரிய சாலைகள் வரும் போது நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவரின் எண்ணிக்கை 200 லிருந்து 1000 நோக்கிச் செல்கிறது. மிகச் சில வாரங்களில் 1000 என்னும் எண்ணிக்கை 2000 ஆகி விடுகிறது. ஆட்டோமொபைல் சார்ந்த துறைகளில் முதலீடு அந்த ஊரில் நிகழ்கிறது. பல வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. மேக்ரோ எக்கனாமிக்ஸ் இயங்கும் முறையாகும் இது. செலவு செய்வதை விட சேமிப்பையே எனது மார்க்கமாகத் தேர்ந்தெடுப்பேன் என்றாலும் பொருளியல் செயல்படும் மார்க்கத்தை நான் நன்றாகவே அறிவேன்.
உத்தேசித்திருந்த நேரத்துக்கு 2 மணி நேரம் முன்பாகவே திருக்கோவிலூர் ஞானானந்த தபோவனம் வந்தடைந்தேன். எளிய ஜீவன்களுக்கு அடைக்கலம் அளிக்கும் தளம் தபோவனம். ஞானானந்தரின் இருப்பை இன்றும் எவரும் உணரக் கூடிய இடம்.
***
பகவானே
நாங்கள் எளியவர்கள்
நாங்கள் ஏதும் அறியாதவர்கள்
பாச பந்தங்களையே உணர்ந்திருக்கிறோம்
பாச பந்தங்களிலேயே மூழ்கிக் கிடக்கிறோம்
இன்பம் என எதையோ எண்ணிக் கொண்டு
இல்லாத அதன் பின்னால் செல்வதாக உணர்கிறோம்
நாங்கள் இன்பம் என எண்ணுவது
எங்களுக்கு எப்போதும் மகிழ்வளித்ததில்லை
நாங்கள் இன்பம் என எண்ணுவது
எங்களை மேலும் துன்பத்திலேயே ஆழ்த்தியது
நாங்கள் இன்பம் என எண்ணுவது
எங்களை மேலும் துன்பத்திலேயே ஆழ்த்தப் போகிறது
இருந்தாலும் நாங்கள் இல்லாத ஒன்றின் பின் செல்லும் அறியாமையை இன்னும் இழக்கவில்லை
இறைவா
கருணைக் கடலே
உனது கருணை எங்களைத் தீண்டட்டும்
அறிவிலிகளாகிய திறனிலிகளாகிய
நாங்கள்
உன் கருணையால் மட்டுமே
மீள முடியும்
உன் அன்பால் மட்டுமே
மீள முடியும்
துயருற்றிருக்கும் இந்த ஜீவன்களின் அரற்றல் உண்மையானது
இறைவா
உனது அன்பு எங்கள் மேல் எப்போதும் பொழியட்டும்
உனது கருணை எங்கள் மேல் எப்போதும் நிலைத்திருக்கட்டும்
***
தபோவனத்தில் ஆலயப் பூசனைகள் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதில் கலந்து கொண்ட கணங்கள் மிக தெய்வீகமானவை. குரு எளிய ஜீவன்களான சீடர்கள் மேல் எப்போதும் கருணையுடன் இருக்கிறார் என்பதற்கு அந்தப் பூசனையே சாட்சி. ஞானானந்த சுவாமி ‘’தினசரி வழிபாடு’’ என்னும் முறையை வழங்கியிருக்கிறார். 15 லிருந்து 20 நிமிடங்கள் ஒவ்வொருவரும் செய்து கொள்ளக் கூடிய வழிபாட்டு முறைகள். அதில் பரிச்சயம் உள்ள விவசாயக் குடிகள் அந்தப் பூசனையில் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் சிவன் மீதும் பெருமாள் மீதும் துர்க்கை மீதும் பாடிய பாடல்கள் சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருந்தது.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் முழுமையாக திருக்கோவிலூர் தபோவனத்தில் மட்டுமே தங்கும் விதமாக வர வேண்டும் என எண்ணம் கொண்டேன்.
உள்ளத்தைத் தொட்ட பூசனைக்குப் பின் காலை 10 .30 அளவில் மதிய உணவு மகா பிரசாதமாக அளிக்கப்பட்டது. அருட்பிரசாதம் அருந்தினேன். தபோவனத்தின் அடுமனையாளர் மாத்வர். மாத்வர்கள் சைவ உணவு தயாரித்தலில் வல்லவர்கள். அவர்களுடைய சாம்பாரும் ரசமும் அலாதியானது. உணவில் மாத்வ சமையல் ருசி இருந்ததை உண்ணும் போது உணர்ந்தேன்.
அடியேனுக்கு தபோவனத்தை நீங்கவே மனம் இல்லை. பலமுறை சுவாமி சன்னிதியை சேவித்து விட்டு 12.30 அளவில் அங்கிருந்து திருவண்ணாமலை புறப்பட்டேன். ரமணாஸ்ரமம் திறக்க மதியம் 2 மணி ஆகும் என்பதால் ‘’யோகி ராம்சுரத்குமார்’’ ஆசிரமம் சென்றேன். அங்கே நிகழ்ந்த பூசனையில் கலந்து கொண்டு பகவான் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தேன்.
***
சுவாமி
எளியவன் சுவாமி அடியவன்
சேர்த்துக் கொண்டவை
அத்தனையுமே பாரங்கள்
உணர்பவை
அத்தனையுமே வலிகள்
பசி கொண்டிருக்கிறேன் சுவாமி
தாகம் கொண்டிருக்கிறேன் சுவாமி
ஞான நெருப்பாக சுடர் விடுகிறீர்கள் சுவாமி
அடியேன் அஞ்ஞானக் கதலிக் கட்டை
அடியேனை உங்கள் அருள் தீண்டட்டும் சுவாமி
அடியேனை உங்கள் கருணை தீண்டட்டும் சுவாமி
உங்கள் பெயரைத்தான் பற்றிக் கொண்டிருக்கிறேன்
உங்கள் பெயரைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்
உங்கள் பெயரைச் சொல்லக் கூட அடியேனுக்குத் தகுதியில்லை
உங்கள் பெயரை எவ்விதம் உச்சரிப்பதென்றும் அடியேன் அறியேன்
என் தலைவா
இனிமையாய் இருக்கிறது நின் பெயர்
நம்பிக்கை அளிக்கிறது நின் பெயர்
உங்கள் கருணை
அடியேன் மீது பொழியட்டும்
என் இறைவனே
***
சூரியப் பிரகாசம்
குழந்தையின் கண்கள்
மழலை மொழியின் இனிமை
யாவுமாய் இருக்கும் பேரிருப்பு
குருதேவா
நீங்கள் பெருநெருப்பு
அதல பாதாளங்களுக்கும் நீள்கிறது
நின் அருட்கரத்தின் ஆசி
அதல பாதாளங்களுக்கும் ஒளியூட்டுகிறது
நின் திருப்பெயர்
***
மதியம் 2 மணிக்கு ரமணாஸ்ரமம் திறந்ததும் அங்கே சென்றேன். ரமணர் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கும் இடம் எனக்கு மிகவும் பிரியமானது. எப்போது சென்றாலும் அங்கு சென்று அமர்ந்து கொள்ளவே விரும்புவேன்.
இறைவா இறைவா இறைவா
அன்னையின் அன்பாக எங்களுக்கு அருள்கிறாய்
அன்னையின் அன்பே நின் அருள் இறைவா
அன்னையைக் கண்டதும் அழும் குழந்தைகளைப் போல்
உன் முன் அழுகிறோம்
அந்த அழுகை உண்மையானது இறைவா
அந்தத் துயரம் உண்மையானது இறைவா
அந்த அரற்றலின் வலி உண்மையானது இறைவா
நின் முன் அழுகிறோம்
அதுவே நின் முன் வருவதற்கான எங்கள் தகுதி இறைவனே
வான் நோக்கி ஆர்ப்பரித்து எழும் எரிமலைப் பெருநெருப்பு நீ இறைவனே
அதன் முன் கிடக்கும் சிறு மண் துகள்கள் நாங்கள்
அடிபணிகிறோம் இறைவா
நின் முன் எப்போதும் அடிபணிந்திருக்கும் நிலையை அருள்க எங்கள் இறைவா
***
ரமணாஸ்ரமத்திலிருந்து திருவண்ணாமலை மலை மேல் இருக்கும் ஸ்கந்தாஸ்ரமம் மற்றும் விருபாக்ஷா குகை ஆகியவற்றுக்கு செல்ல பாதை இருக்கிறது என்பதை ஆசிரம அறிவிப்புகள் மூலம் அறிந்தேன். அங்கே செல்ல முடிவு செய்தேன். மலை மீது ஏறிச் செல்ல வேண்டும். உடல் வியர்த்துக் கொட்டி மூச்சு திணறத் தொடங்கியது. அம்மா என்றும் அப்பா என்றும் சொல்லிக் கொண்டிருந்தேன். பின்னர் அம்மையப்பா அம்மையப்பா என்று சொல்ல ஆரம்பித்தேன். நீருக்கான தாகம் மிகத் தீவிரமாக இருந்தது. அங்கே ஏறிச் செல்லும் பாதையில் சில எலுமிச்சை ஜூஸ் விற்பனையாளர்கள் இருந்தனர். எனக்கு என் உடல் நிலை குறித்து தெரியும். இவ்விதமான நேரத்தில் நீரருந்தினால் உடல் மேலே நகர ஒத்துழைக்காது. அது நீர்த்தாகத்தில் இருக்கும் போதே ஆற்றலைத் திரட்டி மேலெழ வேண்டும். அம்மையப்பா அம்மையப்பா என சொல்லிக் கொண்டிருந்தவன் ‘’அண்ணாமலைக்கு அரோகரா’’ ‘’அண்ணாமலைக்கு அரோகரா’’ எனத் திரும்பத் திரும்ப சொல்ல ஆரம்பித்தேன். அண்ணாமலை என்பது நெருப்பு மலை. அதன் மீது ஏறிச் செல்ல வாய்ப்பு அமைந்திருப்பது அண்ணாமலையின் பேரருளால்தான் என எண்ணியதின் பரவசத்தில் அவ்வப்போது அந்த மலைப்பாறைகளை உள்ளங்கைகளால் ஸ்பரிசித்துக் கொண்டு மேலே ஏறி ‘’ஸ்கந்தாஸ்ரமம்’’ சென்றடைந்தேன். பகவான் ஸ்ரீ ரமணர் பாலயோகியாக அங்கே 6 ஆண்டுகள் தவம் செய்திருக்கிறார். அந்தக் குகையில் கண் மூடி அமர்ந்திருந்தேன்.
***
குகேசன்
---------------
உலகின் கருப்பை மலை
மலையின் கருப்பை குகை
மலையின் கருப்பைக்கு ஜீவனாக சென்றாய்
மலையின் கருப்பையிலிருந்து முக்தனாக வெளி வந்தாய்
உன் பாதம் பற்றிக் கொள்கிறோம் இறைவா
உன்னிடம் எங்கள் கண்ணீரை சமர்ப்பிக்கிறோம் இறைவா
ஏதும் அறியாத ஜீவன்கள் நாங்கள்
ஏதும் அறியாத ஜீவன்கள் நாங்கள்
***
ஸ்கந்தாஸ்ரமத்திலிருந்து இறங்கிச் செல்லும் இன்னொரு பாதையில் இருக்கிறது விருபாக்ஷா குகை. அங்கு சென்று மாலை 4.30 வரை இருந்து விட்டு நேரம் முடிந்ததும் மலையிறங்கினேன். அங்கே பாதுகாவலரிடம் குடிநீர் இருக்கிறதா எனக் கேட்ட போது மலை ஊற்றில் இருந்து தண்ணீர் பிடித்து வைத்திருப்பதாகச் சொல்லி அதனை அளித்தார். நீரில் மிகத் தூய்மையானது மழைநீரை விடவும் இனியது மலை ஊற்றின் நீர். அமிர்தமாய் இனித்தது. மலையிறங்கும் பாதை அண்ணாமலையார் ஆலயம் அருகில் கொண்டு சேர்ந்தது. அங்கே இருந்து 2.5 கி.மீ பயணித்து மீண்டும் ரமணாஸ்ரமம் வந்தேன். அங்கே இருந்த நூல் பிரிவில் நூல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘’நான் யார்’’ என்னும் சிறு நூல். பாக்கெட் சைஸ் நூல். அதை மட்டும் வாங்கிக் கொண்டேன். இப்போது நிறைய புத்தகங்கள் ரமணாஸ்ரமத்தின் மூலம் வெளியாகின்றன. மிக நல்ல விஷயமாகும் அது.
மலையேற்றம் காரணமாக பசி கடுமையாக இருந்தது. ஒரு தோசை மட்டும் உண்டேன். இரவு 8 மணி ஆனது.
எனது இரு சக்கர வாகனத்தை ஒரு வாகன பாதுகாப்பு மையத்தில் வைத்து ரசீது வாங்கிக் கொண்டு வடவீதி சுப்ரமணிய சுவாமி ஆலயம் என்னும் இடத்திலிருந்து அண்ணாமலை வலத்தைத் தொடங்கினேன். காலை ரமணாஸ்ரமம் சென்று வணங்கி விட்டு யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் சென்று வணங்கி விட்டு ஊருக்குப் புறப்பட வேண்டும் என்பதே திட்டம்.
மாலை நடந்து கடந்த 2.5 கி.மீ தூரத்தையும் மீண்டும் கடக்க வேண்டிய நிலை. மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். மலையேறி இருந்ததால் உடல் சற்று சோர்வாகவே உணர்ந்தது. 14 கி.மீ தூரத்தை 3 மணி நேரத்தில் சாமானியமாக நடந்திட முடியும். இருப்பினும் நான் ஆங்காங்கு அமர்ந்து அண்ணாமலையின் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு அங்கு கிரிவ்லம் செய்யும் மக்களுடன் உரையாடிக் கொண்டு நடந்தேன். வழியில் ஒரு சிமெண்ட் பெஞ்சில் கொஞ்ச நேரம் உறங்கி விட்டேன். மெல்ல ஓய்வெடுத்து ஆங்காங்கே உறங்கி காலை 2 மணி அளவில் மலைவலம் தொடங்கிய இடத்துக்கு வந்து சேர்ந்தேன்.
ரமணாஸ்ரமம் சென்று காத்திருந்தேன். காலை 5.30க்கு வாயில் திறந்தது. அங்கே சென்று கண் மூடி அமர்ந்திருந்து விட்டு பின் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் சென்றேன். அங்கும் வணங்கி விட்டு ஊருக்குப் புறப்பட ஆயத்தமானேன்.
காலை 2 மணியிலிருந்து காலை 5.30 வரை காத்திருக்கும் நேரத்தில் அருகில் எங்கே பெட்ரோல் பங்க் இருக்கிறது எனக் கேட்டறிந்து அங்கே சென்று ரூ.150க்கு பெட்ரோல் நிரப்பினேன். பெட்ரோல் நிரப்பியது போக என் கைவசம் மீதம் எவ்வளவு இருக்கிறது எனப் பார்த்தேன். ரூ. 150 இருந்தது. காலை உணவு அருந்த வேண்டும். இன்னும் 200 கி.மீ பயணிக்க வேண்டும். வழியில் வாகனம் பஞ்சர் என்றால் பஞ்சர் ஒட்ட கையிருப்புத் தொகையாக ரூ.100 குறைந்தபட்சம் இருக்க வேண்டும். காலை உணவை எளிமையாக முடித்து விட்டு ஊருக்குப் புறப்பட்டேன். திருக்கோவிலூர் தாண்டியதும் வாகனம் ஓட்டும் போதே கண்கள் சுழட்டி தூக்கம் வந்தது. ஒரு கடையின் முன்வாசல் தூய்மையாக இருந்தது. கடை பூட்டியிருந்தது. யாரும் அங்கே இல்லை. வருடப் பிறப்பின் காரணமாக கடை இன்று விடுமுறையாக இருக்கலாம். அங்கே வாகனத்தை நிறுத்தி விட்டு படுத்துத் தூங்கி விட்டேன். தூக்கம் விழித்ததும் புத்துணர்வாக இருந்தது. வேகமாக ஊரை நோக்கி வாகனத்தை இயக்கினேன். உளுந்தூர்பேட்டை அருகில் ஒரு இடத்தில் கம்மங்கூழ் விற்பனை ஆகிக் கொண்டிருந்தது. அதனை வாங்கி அருந்தினேன். விருத்தாசலம் கம்மாபுரம் சிதம்பரம் வழியாக ஆனைக்காரன் சத்திரம் வந்ததைந்தேன். அங்கே ஒரு ஐஸ் சர்பத் அருந்தினேன். மதியம் 1.30 அளவில் வீடு வந்து சேர்ந்தேன். ரூ.600 எடுத்துச் சென்றதில் என் கையில் ரூ.25 மீதம் இருந்தது!