பிரபு மயிலாடுதுறை
Saturday, 30 May 2026
உபயோகமான பொருள்
Thursday, 28 May 2026
ஆர்வமும் முன்னேற்றமும்
நேற்று வந்திருந்த ரியல் எஸ்டேட் குழு நேற்று பார்த்த இடத்தைச் சுற்றியிருக்கும் மனை நிலவரம் குறித்து விசாரித்து சொல்லுமாறு கேட்டிருந்தார்கள். நேற்று தீவிரமாக விசாரித்தேன். அப்போது ஒரு இடத்தை அறிந்தேன்.
அந்த இடம் ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. அருகில் ஒரு கடைத்தெரு. பஸ் ஸ்டாண்ட். சாலைகள் நல்ல விதமாக அமைக்கப்பட்டிருந்தன. மின் கம்பங்கள் நிறுவப்பட்டிருந்தன. 2000 சதுர அடி மனைகள் அதிகம் இருந்தன. 1800 சதுர அடியிலும் மனைகள் இருந்தன. அவர்கள் சகாய விலைக்கு விற்கின்றனர். ஒரு மனை வாங்க விசாரிக்க வந்தவன் போல அவர்களிடம் பேசி விபரம் கேட்டுக் கொண்டேன். ஒரே பேமெண்ட்டாகக் கொடுத்தால் விலையில் 10 சதவீதம் குறைத்துக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். அவ்வாறெனில் அவர்களுக்குத் தீவிரமான நிதித்தேவை இருக்கிறது எனப் புரிந்து கொண்டேன்.
அந்த ஊரில் இருக்கும் மனைத்தரகர்களை தொடர்பு கொண்டு இந்த இடத்தை மொத்தமாக வாங்கலாமா என ஆலோசனை கேட்டேன். எல்லாரும் ஆர்வமாக இருந்தனர்.
இன்று காலை, மதியம், மாலை ஆகிய 3 வேளையும் அங்கு செல்ல நேர்ந்தது. அங்கே 100 மனைப்பிரிவுகள் இருக்கின்றன. அவர்கள் 60 விற்பனை செய்துள்ளார்கள். மீதி 40 மனையை விற்க வேண்டும் ; வாங்கினால். அவர்களுக்கு இப்போது 2 சி தேவை. அந்தப் பகுதியில் நான் அறிந்த அனைவருக்கும் ஃபோன் செய்து அந்த இடம் குறித்து விசாரித்தேன். எல்லாரும் நல்ல விதமாகவே தெரிவித்தார்கள்.
ஒரு வாரத்தில் பதில் சொல்வதாகக் கூறியிருக்கிறேன்.
Wednesday, 27 May 2026
மனை பிராப்தி
வீடு மனை வாகனப் பிராப்தி எனக் கூறுவார்கள். பிராப்தி என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். இணையத்தில் பிராப்திக்கு சமமான தமிழ்ச்சொற்கள் எவை என்று தேடினேன். பல சொற்கள் இருந்தது ; அதில் ஒன்று கொடுப்பினை. ராஜசுந்தர்ராஜனின் கவிதை ஒன்றின் தலைப்பு கொடுப்பினை என்பது நினைவுக்கு வந்தது.
கொடுப்பினை
------------------------
Tuesday, 26 May 2026
திறனற்ற நிர்வாகம்
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு ஒரு மனு அனுப்பப்பட்டால் அதன் மீது நடவடிக்கை சற்று கூடுதல் வேகத்துடன் இருக்கும். தமிழகத்தின் பெரும்பாலான புகார்கள் பட்டா , ரேஷன் கார்டு தொடர்பானவை. அதிலும் பட்டா கோரி மேற்கொள்ளப்படும் விண்ணப்பங்களே மிகுதி. பட்டா என்பது அசையா சொத்து தொடர்புடையது என்பதால் அதில் லஞ்சம் அதிகமாக கேட்கப்படும். இன்றைய நிலை என்ன என்றால் குடிமக்கள் தாசில்தார், டி எஸ் ஓ போன்ற தாலுக்கா அளவு அதிகாரிகள் மீதும் அவர்களின் தாலுக்கா அலுவலகங்கள் மீதும் நம்பிக்கை வைப்பதில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மீதும் நம்பிக்கை கொள்வதில்லை. எனவே முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பல புகார்கள் செல்கின்றன. அங்கே மாநிலம் முழுவதிலிமிருந்து லட்சக்கணக்கான புகார்கள் குவிகின்றன. அதன் செயல்திறன் குன்றுகிறது. சரி செய்ய வேண்டிய தமிழக நிலையாகும் இது.
மனுவும் தபாலும்
இந்திய ஜனநாயகத்தின் அங்கமான மாநில அரசாங்கங்களின் இயங்குமுறையின் ஒரு சிறப்பான அம்சம் என்பது என்னவெனில் எந்த ஒரு பிரஜையும் எந்த ஒரு அரசு அலுவலகத்துடனும் தபால் மூலமாக தொடர்பு கொள்ள முடியும் என்பதே. தபாலில் அனுப்பப்படும் கடிதங்கள் முதல்கட்டமாக தபால்களுக்கென உள்ள பதிவேட்டில் பதியப்பட வேண்டும். இந்தப் பணிக்கெனவே ஒவ்வொரு அலுவலகத்திலும் தபால் பிரிவு என ஒரு பிரிவு இருக்கிறது. அதன் வேலை என்னவெனில் அலுவலகத்துக்கு வரும் தபால்களைப் பிரித்து அதன் உறையையும் கடிதத்துடன் சேர்த்து தைத்து அல்லது ஸ்டேப்ளர் செய்து அதற்கு எண்ணிட்டு தபால் அலுவலகத்தை வந்தடைந்த தேதியைக் குறிப்பிட்டு அட்டவணையிட வேண்டும். கடிதத்தை அனுப்பியவர் யார் கடிதம் யாருக்கு அனுப்பப்பட்டது என்பதை முதலில் தபால் பிரிவு பதிவு செய்து கொள்ளும். அதன் பின் அந்தத் தபால்கள் ஒரு எழுத்தருக்குச் செல்லும். அதன் பின் மேலதிகாரிக்குச் செல்லும். பொதுவாக அரசு அலுவலகங்கள் எந்த தபாலின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் நிலுவையிலேயே வைக்கும் என்பது நடைமுறை. ‘’எந்த விஷயத்தின் மீதும் முடிவெடுக்காமல் இருப்பதே ஒரு முடிவு’’ என்னும் நிலைப்பாடு கொண்டவை அரசு அலுவலகங்கள். இருந்தாலும் ஓர் அலுவலகத்துக்கு ஒரு மனு அனுப்பப்படுகிறது எனில் அந்த மனுவின் உள்ளடக்கம் அந்த அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் அனேகமாகத் தெரிந்து விடும். அதிகாரபூர்வமாக அல்லது அதிகாரபூர்வமில்லாமலோ அந்த விஷயம் வெளியில் கசியும். மனுவின் கோரிக்கை நிறைவேறவோ அல்லது நிலுவைக்குச் செல்லவோ வாய்ப்பு உண்டாகும். அரசாங்கம் எல்லா தபால்களையும் பராமரித்து வைக்க வேண்டும் ; நிலுவைக்குச் சென்றால் பல மாதங்கள் பல வருடங்களுக்குப் பின்னும் அந்த மனு உயிர் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
ஓர் அரசாங்க அலுவலகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பும் போது அதனை பதிவுத்தபாலாக அனுப்புவது உசிதம். அந்த பதிவுத்தபாலின் ஒப்புகை அட்டையை பாதுகாத்துக் கொள்வது நலம். அனுப்பும் அஞ்சல் உறையின் மேற்புறம் ‘’பதிவுத் தபால்’’ எனக் குறிப்பிடப்பட்டால் அந்த மனு கூடுதல் கவனம் பெற வாய்ப்பு உள்ளது. மனுவை அனுப்புபவர் அரசு அலுவலகம் எந்த தேதியில் மனுவைப் பெற்றிருக்கிறது என்பதை பதிவு செய்து கவனமளிக்கிறார் என்பது அதன் பொருள். மனுவின் நகலில் பதிவுத்தபால் ரசீதை ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது மாநில அரசாங்கத்தின் பல பணிகள் இணையம் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஒருவர் பட்டாவுக்காக இணையம் மூலம் விண்ணப்பிக்கிறார் என்றால் அந்த கோப்பினை அரசு அலுவர்களால் மூட முடியும். தபால் மூலம் அனுப்பப்படும் மனுவை அவர்களால் அவ்வளவு எளிதில் மூட முடியாது.
தபால் முறை ஓர் எளிய முறை. ஒரு சாதாரண பிரஜையும் அரசாங்க அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளும் முறை. அரசாங்கம் எப்போதும் பிரஜைகள் அரசாங்கத்தைத் தொடர்பு கொள்ள பலவிதமான வாசல்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்.
மத்திய அரசாங்கத்தின் CPGRAMS சிறந்த முறை. எளிய புகாரானாலும் முதலில் தலைமை அலுவலகத்துக்கு செல்லும். அங்கிருந்து கீழ் அலுவலகத்துக்கு வரும். இந்திய அரசாங்க அலுவலகங்கள் கீழிருந்து மேல் முறையை பின்பற்றிக் கொண்டிருந்த நிலையில் மேலிருந்து கீழ் முறையைக் கொண்டு வந்த முறை. மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை மனுதாரருக்குத் தெரிவித்தால் மட்டுமே கோப்புகளை மூட முடியும் என்பது அதன் சிறப்பம்சம். அதில் பல புகார்களை நான் பதிவு செய்திருக்கிறேன். புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஜீனி ரேஷன் கார்டை அரிசி ரேஷன் கார்டாக மாற்றிக் கொள்ள விரும்பும் டெய்லருக்காக ஒரு மனுவை எழுதிக் கொடுத்தேன். அதை தபாலின் அனுப்பி விட்டு மேல்நடவடிக்கைக்குக் காத்திருக்கலாமா அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாளில் மனு கொடுக்கலாமா என யோசித்தேன். மனுநீதி நாள் என்பது மாவட்ட ஆட்சியர் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையில் ஒவ்வொரு வாரமும் பொதுமக்களின் எல்லா துறை சார்ந்த மனுக்களையும் பெறும் நாள். மனுநீதிநாள் மனுக்கள் என அவை அட்டவணையிடப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உடனே அனுப்பி வைக்கப்படும். 90 நாட்களுக்குள் அவற்றுக்குத் தீர்வு காணப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது வழிமுறை.
நேற்று திங்கள்கிழமை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியே சென்ற போது டெய்லர் ஞாபகம் வந்தது. மனுநீதி நாள் கூட்டத்துக்குச் சென்றேன். அங்கே அப்போது 200 பேர் இருந்தனர். ரேஷன் கடை தொடர்பான அலுவலகர்களைக் கண்டடைந்து அவர்களிடம் விஷயத்தைக் கூறினேன். மனுவை தபால் மூலம் அனுப்புங்கள் ; நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர்.
டெய்லரைச் சந்தித்து முதலில் ஒரு மனுவை அனுப்ப அவருக்கு உதவ வேண்டும். அதன் பின் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதைப் பார்த்து நடவடிக்கை இல்லையெனில் மத்திய அரசின் CPGRAMS ல் தெரிவிக்கலாம் என முடிவு செய்து கொண்டேன்.
Sunday, 24 May 2026
கலியபெருமாள் திருவடியில்
விடுதலையின் பற்பல வாசல்கள்
Saturday, 23 May 2026
முக்கியத்துவம் பெறும் ஆளுநர்
இந்திய அரசியல் அமைப்பில் மாநில ஆளுநர் பதவிக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது. குடியரசுத் தலைவருக்கும் மத்திய அரசுக்கும் மாநில ஆளுநர் மாநிலத்தில் மாநில அரசு இயங்குமுறை குறித்து அளிக்கும் அறிக்கை என்பது மிகவும் முக்கியமானது. மாநில நடப்புகள் குறித்து ஆளுநரின் மக்கள் மாளிகை தயாரித்து அளிக்கும் அறிக்கைகள் மிக முக்கிய ஆவணங்கள் ஆகும். இந்திய அரசியல் சாசனம் பல விஷயங்களில் குடியரசுத் தலைவருக்கு அளித்திருக்கும் அதிகாரத்தை விடவும் அதிகமாக ஆளுநருக்கு அதிகாரம் அளித்துள்ளது.
2021லிருந்து 2026 வரை நடைபெற்ற ஆட்சியில் மாநில ஆளுநர் பலவிதங்களில் முறையான மதிப்பு அளிக்கப்படாமல் இருந்தார். ஆளுநரின் பல சாதாரணமான பரிந்துரைகள் கூட ஏற்கப்படாமல் இருந்தன. சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது உரை துவங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஆளுநர் கோரினார். பல கடித போக்குவரத்துக்குப் பின் அது சாத்தியமானது. மகாத்மா காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி கிண்டியில் உள்ள பெரும் வளாகமான காந்தி மண்டபத்தில் அரசு விழாவை நடத்த வேண்டும் என ஆளுநர் கோரினார். அந்த கோரிக்கை ஏற்கப்படவேயில்லை. ஆளுநர் உரை ஒன்றின் போது சட்டசபை சபாநாயகரும் மாநில அரசின் உயர்கல்வி அமைச்சரும் ஆளுநரை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டனர். மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்ட எவருக்கும் இந்நிகழ்வுகள் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தின.
1996ம் ஆண்டு வரை அரசியல் சாசனத்தின் 356வது பிரிவு இந்திய அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டிருந்தது. ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் பெரும் சீர்கேடுகள் இருப்பதாக மத்திய அரசு எண்ணினாலோ மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருந்தாலோ ஆளுநரின் பரிந்துரைப்படியோ ஆளுநர் பரிந்துரை இல்லாமலோ கூட மத்திய அரசு மாநில அரசை பதவி நீக்கம் செய்ய முடியும்.
1994ம் ஆண்டின் எஸ். ஆர்.பொம்மை வழக்கின் படி, உச்சநீதிமன்றம் அரசியல் சாசனத்தின் 356வது சட்டப் பிரிவின் படி மாநில அரசைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர சில நிபந்தனைகளை விதித்தது. அதாவது, மாநில அரசைக் கலைத்ததை ஒரு தீர்மானமாக மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பாதி உறுப்பினர்கள் ஆதரவுப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். 1996க்குப் பின் பதவியேற்ற பல மத்திய அரசுகளிடம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் என இரண்டிலும் பெரும்பான்மை இல்லை. எனவே அரசியல் சாசனப் பிரிவு 356ன் பயன்பாடு என்பது பல ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போதைய மத்திய அரசுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் என இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை இருக்கும் நிலையில் எந்த மாநில நிர்வாகமும் சீராக இருக்கிறதா என்பதையும் எந்த மாநில சட்டம் ஒழுங்கும் அமைதியாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் மாநில நிர்வாகத்தில் ஊழல் இல்லாமல் இருக்கிறதா என்பதையும் உன்னிப்பாக கவனிக்கும் தன்மை மேலும் கூடுதலாக மத்திய அரசுக்கு இருக்கிறது ; மாநில ஆளுநருக்கும் இருக்கிறது.
மத்திய அரசுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பெரும்பான்மை இருக்கும் நிலையில் மாநில ஆளுநரின் பணி என்பதும் மாநில ஆளுநர் மத்திய அரசுக்கு அளிக்கும் அறிக்கைகள் என்பதும் மாநில அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது. இதனைப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
Friday, 22 May 2026
ஒரு சாமானிய பிரஜையின் தேவை
சென்ற மாதம் நண்பர் ஒருவர் என்னைத் தனது வாகனத்தின் சீட் கவர் மாற்ற உடன் அழைத்துச் சென்றார். சென்ற இடத்தில் இருந்த பணியாளருக்கு நிலுவையில் பல வாகனங்கள் இருந்தன. எனவே 2 நாட்கள் கழித்து வருமாறு கேட்டுக் கொண்டார். நண்பருக்கு அவசரம். மறுநாளே தேவைப்பட்டது. தனது தேவையை பணியாளரிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தார். நடப்பவற்றை பார்த்துக் கொண்டு இருந்தேன். அதற்குள் நண்பர் பணி புரியும் ஐ டி நிறுவனத்திடமிருந்து அலைபேசி அழைப்பு வந்து விட்டது. தொழில்நுட்ப விபரங்களைத் தெரிவித்த படி நண்பர் அலைபேசி அழைப்புக்குள் மூழ்கி சீட் கவர் கடையிலிருந்து சற்று தள்ளிப் போனார். சிக்னல் மேலும் தெளிவாகக் கிடைக்கும் இடத்துக்கு அவர் சென்றிருக்கலாம். அப்போது இன்னும் சில நாட்களில் மாநில சட்டசபைத் தேர்தல் நடக்க இருந்தது. சீட் கவர் கடையின் பணியாளரிடம் பேச்சு கொடுத்தேன்.
‘’என்ன அண்ணன்! எலெக்ஷன் வருது. யாருக்கு ஓட்டு போடறதுன்னு முடிவு செஞ்சுருப்பீங்க’’
‘’இன்னும் அதப்பத்தி யோசிக்கல சார்’’
‘’இன்னும் ரெண்டு மூணு நாள்ல எலெக்ஷன் அண்ணன்’’
‘’ஆமாம் சார்’’
‘’கவர்மெண்ட் கொடுக்கற ஃபண்ட் உங்க வீட்டுக்கு கிடைக்கதுல்ல. நிறைய ஸ்கீம் இருக்கே. காலேஜ் படிக்கற குழந்தைகளுக்கு. வீட்டுல இருக்கற பெண்களுக்கு. நிறைய எய்ட் இருக்கே. வந்துட்டு இருக்குல்ல’’
‘’சார் ! கவர்மெண்டோட எந்த ஃபண்டும் எங்க வீட்டுக்கு வரதுல்ல?’’
‘’ஏன்?’’ அதிர்ச்சியுடன் கேட்டேன்.
‘’எங்க வீட்டுக்கு அரிசி ரேஷன் கார்டு இல்ல. ஜீனி ரேஷன் கார்டுதான் இருக்கு. அரிசி கார்டு இருக்கறவங்களுக்குதான் ஃபண்டு கிடைக்கும். ஜீனி கார்டுக்கு கிடையாது’’
‘’உங்களுக்கு எப்படி ஜீனி கார்டு கிடைச்சுது’’
‘’தெரியல சார். ரேஷன் கார்டு அரிசி கார்டுதான் அப்ளை செஞ்சன். ஆனா எனக்குக் கிடைச்சது ஜீனி கார்டு’’
‘’உங்க கிட்ட ஓட்டு கேட்டு பிரதானமா 3 குரூப் வந்திருப்பாங்கள்ல அவங்க கிட்ட உங்களுக்கு இந்த மாதிரி ஒரு பிரச்சனை இருக்குன்னு சொன்னீங்களா?’’
பணியாளர் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
‘’இப்ப தேர்தல் நடைமுறை அமல்ல இருக்கு. மே 4ம் தேதி ரிசல்ட். ரிசல்ட் வந்தப்புறம் கவர்மெண்ட் மெஷினரி வேலை செய்ய ஆரம்பிக்கும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும். ஒவ்வொரு திங்கள் கிழமையும் காலைல 10 மணிக்கு கலெக்டர் ஆஃபிஸ்ல மனுநீதி நாள் நடக்கும். அங்க போயி உங்க பிரச்சனையை சொல்லி மனு கொடுப்போம். அவங்க ஒரு நம்பர் கொடுப்பாங்க. 3 மாசத்துக்குள்ள உங்க பிரச்சனையை சால்வ் பண்ணுவாங்க. அப்படி இல்லன்னா அடுத்து என்ன செய்யறதுன்னும் யோசிப்போம். அடுத்த மாசம் நான் உங்க கடைக்கு வரேன். ஒரு மனு எழுதித் தரேன். மனுநீதி நாளுக்கு கூட வரன். என்னால முடிஞ்ச அளவு உங்களுக்கு அரிசி கார்டு கிடைக்க முயற்சி செய்யறன்’’
அதற்குள் நண்பர் வந்து விட்டார். தீவிரமாக நானும் பணியாளரும் உரையாடிக் கொண்டிருப்பதை ஆச்சர்யமாகப் பார்த்தார்.
4ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தன. தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைந்தது. பதவியேற்பு தொடர்பான முஸ்தீபுகள் நடந்து கொண்டிருந்தன. புதிய அரசு இன்னும் பதவியேற்கவில்லை. மே 11ம் தேதி எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மனுநீதி நாள் தொடங்கும் என ஆகாஷ்வாணி வானொலி செய்தி கூறியது. எனக்கு சீட் கடை பணியாளரின் நினைவு வந்தது.
நேற்று அவருடைய கடைக்குச் சென்றேன். அவர் என்னை மறந்திருந்தார். ஜீனி கார்டு அரிசி கார்டு எனக் கூறியதும் அவருக்கு நினைவு வந்தது.
ஒரு வெள்ளைக்காகிதத்தில் அவருடைய கோரிக்கையை மனுவாக எழுதினேன். இப்போதிருக்கும் ரேஷன் கார்டு எண் என்ன என்று கேட்டேன். அவர் வீட்டில் பார்த்து வருகிறேன் என்றார். நாளை மீண்டும் வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்தேன்.
ரேஷன் கார்டு துறையின் இணையதளத்தில் ஏதேனும் விபரம் இருக்கிறதா எனக் காண அவருடைய ஸ்மார்ட்ஃபோனை வாங்கி கூகுளில் தேடிப் பார்த்தேன். அப்போது அவருடைய ஸ்கிரீன்சேவரில் தற்போதைய தமிழக முதலமைச்சரின் புகைப்படம் இருப்பதைப் பார்த்தேன்.