Saturday, 21 March 2026

மாநிலத்தின் கல்வி நிலை

நண்பர்களுடன் ஒரு சினிமாவுக்கு செல்வதாக முடிவானது. சமீபத்தில் வெளியான ஹிந்தி திரைப்படம். பல இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியாகிறது. ஹிந்தி திரைப்படத்துக்கு ஆங்கில மொழியில் சப் டைட்டில் உண்டு. ஆறு பேர் செல்வதாக முடிவு செய்திருந்தோம். இணையத்தில் ஹிந்தி படமும் தமிழ் மொழிமாற்றப் படமும் ஒரே தேதியில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. எனினும் சில தொழில்நுட்ப விஷயங்களால் தமிழ் மொழிமாற்றப் படம் வெளியாவதில் சிறு தாமதம். டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம். இருப்பினும் காட்சி இல்லை என்பதால் தொகை ‘’ரீஃபண்ட்’’ ஆனது. 

’’இங்கிலீஷ் சப் டைட்டில் இருக்கிறதே ! ஹிந்தியில் படம் பார்க்கலாம்’’ என்றேன் நான். 

‘’இல்லை இல்லை ! வெயிட் செஞ்சு தமிழில் பார்ப்போம்’’ என்றார்கள். 

’’இங்கிலிஷ் சப் டைட்டில் இருக்கே! டயலாக் புரியும்.’’ மீண்டும் நான் வற்புறுத்தினேன். 

‘’ சப் டைட்டில் இருக்கற டைம்-குள்ள இங்கிலீஷ் டெக்ஸ்ட் படிச்சு புரிஞ்சுக்க முடியாது’’ அனைவருமே கூறினர்.

ஐந்து பேருமே பட்டதாரிகள். 1990,2000க்குப் பிறகு பிறந்தவர்கள். பள்ளிக் கல்வியை ஆங்கில மீடியம் மூலம் படித்தவர்கள். பட்டப்படிப்பும் ஆங்கில வழியில் படித்தவர்கள். இவர்கள் ஆங்கிலம் தான் ஒரு படத்தின் ‘’சப் டைட்டில்’’ படிக்க முடியாத நிலையில் இருக்கிறது என்றால் தினமும் ஒரு நாளிதழ் தமிழ் மொழியில் படிக்கும் வழக்கம் கூட அவர்களுக்கு இல்லை. 

எளிய சம்பவம் எனினும் அது அளித்த அதிர்ச்சி சாமானியமானது இல்லை. 

5 நண்பர்களையும் தமிழில் வந்ததும் பாருங்கள் எனக் கூறி விட்டு தனியாக சென்று படம் பார்த்தேன்.  

Friday, 20 March 2026

வருவாய் இலாகாவும் தபால் இலாகாவும்

பிரிட்டிஷ் இந்தியாவை ஆண்ட போது இந்தியக் குடிகளிடமிருந்து அவர்கள் வசூலித்த நிலவரியே அரசாங்கத்தின் முக்கிய வருவாய் மூலமாக இருந்தது. எனவே தான் பிரிட்டிஷார் நிலவரி வசூல் செய்யும் இலாகாவுக்கு வருவாய் இலாகா எனப் பெயரிட்டனர். நாட்டின் மொத்த வருவாயில் 84 சதவீதம் வருவாய் இலாகாவிலிருந்து அரசுக்குக் கிடைத்தது. நில அளவை செய்யும் செயினுக்கு ‘’குந்தர் செயின்’’ என்று பெயர். அதன் நீளம் 66 அடி ( 20.12 மீட்டர்). ‘’குந்தர் செயின்’’ கையாள சற்று சிரமமாக இருந்ததால் அதனைப் பாதியாக்கி 33 அடி நீளத்தை அளக்கும் வகையில் ஒரு செயினை உருவாக்கினர். அதனை ‘’ரெவின்யூ செயின்’’ என்று கூறுவர். இன்றும் நிலம் அளக்க பயன்படும் கருவியாக உள்ளது.  
குடிமக்களிடமிருந்து விவசாயிகளிடமிருந்து வரிவசூல் செய்து - கலெக்ட் செய்து - கொடுப்பவரே கலெக்டர். மாவட்ட ஆட்சியர் இன்றும் கலெக்டர் என அழைக்கப்படுவது அதனால் தான். 


வருவாய் இலாகாவுக்கு சமானமாக பிரிட்டிஷ் ஆட்சியில் முக்கியத்துவம் பெற்றிருந்த இலாகா தபால் இலாகா. நாட்டின் நிர்வாக வலைப்பின்னலுக்குத் தேவையான தகவல் பரிமாற்றத்தை தபால் இலாகாவே சாத்தியமாக்கியது. அரசின் தகவல் பரிமாற்றம் மட்டும் இன்றி சாமானிய பொதுமக்களின் தகவல் பரிமாற்றமும் தபால் இலாகாவால் சாத்தியமாயிற்று. 

எனக்கு சிறுவயது முதலே தபால் இலாகா மீது பெரும் ஆர்வம் உண்டு. ஒருவர் எழுதும் அஞ்சல் அட்டை பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து இன்னொருவர் கைக்கு மிகச் சரியாகச் சென்று சேர்கிறது என்பதை நான் ஒரு பேரற்புதம் என்று கருதுவேன். ஒரு தபால் எழுதி அனுப்புவது என்பது ஒரு கலை . ஒரு பயிற்சி. தபால் எழுதுபவர்கள் தங்கள் கையாலேயே அஞ்சல் உறையில் அனுப்புநர் பெறுநர் முகவரி எழுதி தங்கள் கையால் உறையில் பசையிட்டு ஒட்டி தங்கள் கையாலேயே தபால் பெட்டியில் இட விரும்புகின்றனர். 

இன்று ஒரு கிளை அஞ்சல் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். பணியில் இருந்தவர் ஓர் இளைஞர். வயது 25 இருக்கலாம். 2000க்குப் பின் பிறந்தவர் என்பதால் அவருக்கு ஒரு அஞ்சல் அட்டையோ அல்லது ‘’இன் லாண்ட் கடிதமோ’’ அல்லது ‘’அஞ்சல் உறை’’யில் கடிதமோ எழுதி அனுப்பி பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. அஞ்சல் உறை ஒன்றை அளித்தேன். உறையின் மேல் இடது பக்கம் எழுதப்படுவது ‘’அனுப்புநர்’’ முகவரி வலது பக்கம் எழுதப்படுவது ‘’பெறுநர்’’ முகவரி என்பது உலக வழமை. அதனால் நான் ‘’அனுப்புநர்’’ ‘’பெறுநர்’’ எனக் குறிப்பிடாமல் இரு முகவரிகளையும் எழுதியிருந்தேன். அஞ்சல் ஊழியரான இளைஞர் என்னிடம் ‘’சார்! இதுல எது ‘’ஃப்ரம்’’ எது ‘’டூ’’ என்று கேட்டார். விளக்கினேன். 

Thursday, 19 March 2026

கோடுகளும் சொற்களும்


 எனது பள்ளித் தோழனை வெகுநாட்கள் கழித்து சந்தித்தேன். அவனது குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தான். அப்போது சற்று நேரம் அளவளாவினோம். நான் எவருக்கும் ஏதேனும் பரிசளிக்க வேண்டும் என்று நினைத்தால் பரிசுப் பொருள் என என் மனதில் உதிப்பது புத்தகமே. அந்தக் குழந்தைக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளிக்க விரும்பினேன். ஜப்பான் மாங்கா காமிக்ஸ் ‘’புத்தர்’’ வரிசை நூலில் முதல் நூலை வரவழைத்து அதனை அளிக்க முடிவு செய்தேன். புத்தகம் இன்று கைக்கு வந்தது. அதனை வாசித்தேன். 

மாங்கா காமிக்ஸ் நூதனமானது. காணலும் வாசித்தலும் ஒருங்கே நிகழ்வது. அந்த நூலை சொற்களை வாசிக்காமல் ஓவியங்களை மட்டும் கண்டவாறு ஒரு வாசிப்பை நிகழ்த்த முடியும். அதில் இருக்கும் சொற்களை மட்டும் வாசித்தவாறு வேறு வாசிப்பை நிகழ்த்த முடியும். சொற்களையும் ஓவியங்களையும் சேர்த்து மற்றொரு வாசிப்பை நிகழ்த்திக் கொள்ள முடியும். 

வாசிப்பு என்பது சொல்லிருந்து சொற்களின் மூலம் அகத்தில் ஒரு காட்சியை உருவாக்கிக் கொள்வது. வாசிப்பு என்பது அதுவே. மாங்கா காமிக்ஸ் சொல்லுடன் சொல்லுக்கு இணையாகவே நம் கண்களுக்கு ஒரு அகச்சித்திரத்தையும் அளித்து விடுகிறது. சொல் உருவாக்கும் அகச்சித்திரமும் புத்தகத்தில் இருக்கும் சித்திரமும் இணைந்து நூதனமான அற்புதமான அனுபவம் ஒன்றை உருவாக்கிக் காட்டுகின்றன. 

100 பக்கங்களுக்கு மேல் மாங்கா காமிக்ஸ் அனுபவத்தில் மூழ்கியிருந்தேன். அதில் ஒரு காட்சி. சித்தார்த்தன் ஒரு வனத்தில் துறவி ஒருவரைச் சந்திக்கிறான். மரணத்தின் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை எந்த மனிதன் மூலம் அறிய முடியும் எனக் கேட்கிறான். அப்போது அந்தத் துறவி மரணத்தை மனிதன் மூலம் தான் அறிய முடியுமா என்ன எல்லா உயிர்களும் இறக்கின்றன; எல்லா உயிர்களுக்கும் இறப்பு பொதுவானது . இந்தக் காட்டில் இந்தக் கணத்தில் இறந்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பிராணிகளிடமிருந்து கூட நீ இறப்பை அறிய முடியும் என்கிறார். 

எனக்கு அந்த பகுதி பெரும் அகஎழுச்சியை உருவாக்கியது. 

ஒரு ஈசலிடமிருந்து நாம் இறப்பு குறித்து அறிந்திட முடியும் ; நாம் ஈசலின் அனுபவத்தை உணர முடிந்தால். சில வாரங்கள் மட்டுமே உயிர் வாழும் பட்டாம்பூச்சியிடமிருந்து நாம் இறப்பு குறித்து அறிய முடியும். சில மாதங்கள் வாழும் எறும்பிடமிருந்தும் நாம் மரணம் குறித்து அறிய முடியும். 

மனிதனுக்கு மனித சமூகத்துக்கு மரணம் குறித்த ஆர்வம் இல்லை. மனிதர்கள் மனித சமூகங்கள் மரணத்தை அஞ்சுகின்றன. மரணத்திலிருந்து விலகி ஓட நினைக்கின்றன. மனித குலம் உருவான நாளிலிருந்து இன்று வரை எந்த மனிதரும் மரணிக்க விரும்புவதில்லை ; எந்த மனிதரும் மரணிக்காமலும் இருந்ததில்லை. கோடானுகோடி மனிதர்களில் ஒருவரே சாவை உணர்கிறார் ; அறிகிறார். அவர்களே ஞானியர் ; யோகியர். 

சாவை அறிந்தவனால் மட்டுமே வாழ்வையும் அறிய முடியும்.  

Wednesday, 18 March 2026

இடதுசாரிகள் ஏற்படுத்திய பேரழிவு

எனக்கு 10 வயதான போது சோவியத் யூனியன் உடைந்தது. சிறுவனான நான் தமிழகச் சூழலிலும் இந்தியச் சூழலிலும் அதன் பின்னும் கம்யூனிசம் ஒரு வலுவான குரலாக ஒலிப்பதை ஆச்சர்யமாகப் பார்த்தேன்.  கம்யூனிஸ்டுகள் கருத்தியல் இதழியல் கலை நுண்கலைத் தளங்களில் நிரம்பியிருந்தனர். பெரும்பாலான கட்சிகள் சிறிய கட்சிகளிலிருந்து பெரிய கட்சி வரை கம்யூனிச சித்தாந்தத்தை ஆதரித்துப் பேசின. நாட்டின் பெரிய கட்சியாயிருந்த காங்கிரஸ் கட்சி கூட இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர்களால் நிரம்பியிருந்தது. நாட்டின் அதிகாரவர்க்கம் மற்றும் வங்கிகள் கம்யூனிச யூனியன்கள் கையில் இருந்தன. மார்க்ஸ் பார்த்த வகையில் உலகை உலகியலை மானுட சமூகங்களைப் பார்த்து அவற்றின் இயங்குமுறையைத் தீர்மானிக்க முயன்று கொண்டிருந்தனர் மார்க்ஸிஸ்டுகள். பத்திரிக்கையைத் திறந்தால் இடதுசாரிகள். கடைத்தெருவுக்குச் சென்றால் சிவப்புக் கொடி கட்டிய தெருமுனைக் கூட்டங்கள். மாதம் ஒருமுறையாவது நிகழும் பெரும் வேலைநிறுத்தங்கள். கம்யூனிசத்தை லட்சியவாதமாகவும் கம்யூனிஸ்டை லட்சியவாதியாகவும் காட்டும் முயற்சிகள். உல்ஃபா , மக்கள் யுத்தக் குழு, விடுதலைப் புலிகள் என பல பயங்கரவாத அமைப்புகளின் பயங்கரவாத செயல்பாடுகள். இவற்றை நான் நோக்கிக் கொண்டிருந்தேன். 

என்னுடைய 10 வயதில் நான் பாரதியார் கவிதைகளை எப்போதும் வாசித்துக் கொண்டிருப்பேன். பாரதி எனக்கு தேசமே தெய்வம் எனக் காட்டினான். பூரண ஞானம் பொலிந்த நன்னாடு ; புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு’’ என நம் நாட்டைக் குறித்துப் பாடினான். அந்த சொற்களின் உணர்ச்சியே என் சிந்தனைகளை வழிநடத்தியது. 

எனக்கு எப்போதுமே கம்யூனிசம் மீது ஈடுபாடு இருந்ததில்லை. கீழை மரபின் பொருளியல் சிந்தனைகளே என்னைக் கவர்ந்தன. மார்க்ஸ், கிராம்ஷி, இ எம் எஸ் நம்பூதிரிபாடு ஆகியோர் மீது எனக்கு பெருமதிப்பு உண்டு. அவர்கள் ஒரு விஷயத்தை நோக்கும் விதத்தை நான் அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் செய்வேன். அதன் பின் அதனை விரிவுபடுத்தியும் அதன் மற்ற கோணங்களை ஆராய்ந்தும் அந்த விஷயத்தை முன்னகர்த்தி சிந்திப்பேன். அரசியலுக்கும் பொருளியலுக்குமான நெருக்கமான உறவை முழுமையாகப் புரிந்து வைத்திருந்தவர் மகாத்மா காந்தி. அவரிடம் கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வளிக்கும் பொருளியல் வழிமுறைகளையும் வாழ்வியல் வழிமுறைகளையும் முன்வைக்கும் இயல்பு எப்போதும் இருக்கிறது. அரசு அதிகாரத்தின் எந்த பதவியிலும் அவர் இருந்தது இல்லை எனினும் அவர் தன் இயங்குமுறையாக அதனை கைக்கொண்டிருந்தார். ‘’கதர்’’ ஆடையை நம் தேசத்தவர் அணிய வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் கதர் இயக்கத்தை நடத்தியதை இதனுடன் இணைத்துப் புரிந்து கொள்ளலாம்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் முதல் இன்று வரை கருத்தியல் தளத்தில் இடதுசாரிகளின் ஆதிக்கம் அதிகம் இருந்தது ; இப்போதும் இருக்கிறது. லெனின் தலைமையில் சோவியத் யூனியன் உருவானதிலிருந்து அது உலகெங்கும் தனது உளவு அமைப்புகள் மூலம் எல்லா நாடுகளிலும் கம்யூனிச சித்தாந்தத்தைப் பரப்பியது.  

சோவியத் யூனியன் உலகெங்கும் கம்யூனிச சித்தாந்தத்தைப் பரப்பிக் கொண்டிருக்கையில் அதே காலத்தில் ஜோசஃப் ஸ்டாலின் ருஷ்ய நாட்டின் சிறு விவசாயிகள் கோடானுகோடி பேரைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தார். அவ்விதம் கோடானுகோடி எளிய விவசாயிகளான குடிமக்கள் கொன்றழிக்கப்பட்டனர் என்னும் விஷயமே 1990ம் ஆண்டில் தான் முழுமையாகத் தெரிய்வந்தது. சோவியத் யூனியனின் கம்யூனிச அதிபர் ஜோசஃப் ஸ்டாலினின் கொடுங்கோன்மை  முன் அடால்ஃப் ஹிட்லர் ஒரு சிறு புள்ளி மட்டுமே. இன்றும் கம்யூனிசம் என்றால் மனிதாபிமானம் என வெட்கமில்லாமல் கூறுகிறார்கள் கம்யூனிஸ்டுகள். 

சோவியத் யூனியன் உடைந்த பின் கம்யூனிசம் அஸ்தமித்து விட்டது. உலகில் எங்குமே அது பெரிய அரசியல் சக்தி அல்ல. இருப்பினும் நம் நாட்டில் கருத்தியல் தளத்தில் அதன் உயிர் இருக்கிறது. 

ஒரு எளிய சாமானியனின் வாழ்வுக்கு எவ்வகையிலேனும் உதவ முடியும் என்றால் அதுவே எனது பொருளியல் கொள்கை. ரூ.100 சம்பாதிக்கும் ஒரு விவசாயிக்கு அவன் விவசாய வருமானத்தை ரூ.150 ஆக்க முடியும் என்றால் அதுவே எனக்கு மாபெரும் மகிழ்ச்சி. நான் மனிதனை நம்புகிறேன் ; அவனைப் புரிந்து கொள்கிறேன். அவன் நல்லியல்பின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுகிறேன். சனாதனம், சமணம், பௌத்தம் ஆகிய கீழை மரபின் பொருளியல் சிந்தனைகள் ஒட்டு மொத்த மானுடத்துக்கும் வரலாற்றின் தொல்காலத்திலிருந்து வழிகாட்டி வருவதை உலகம் முழுமையாக அறியும் வண்ணம் செய்ய வேண்டும் என்பதே நம் தேசத்தவரின் நம் அனைவரின் கடமை.  

Tuesday, 17 March 2026

நீங்குதல்

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். 

-திருக்குறள்.  

யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான், அவன்
அப்பொருளால் துன்பம் எய்துதல் இலன்.

-பரிமேலழகர் உரை

***

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் எங்கள் குடும்ப நண்பர். நான் பிறப்பதற்கு முன்பிருந்தே எங்கள் குடும்ப நண்பர். அவர் ஓர் அலாதியான மனிதர். சீர்காழியைச் சேர்ந்தவர். அவருடைய பழைய வீடு சீர்காழியில் இருக்கிறது. பல ஆண்டுகளாகவே மிகவும் மதிப்பு மிக்க சொத்து. கோடிக்கணக்கான மதிப்பு கொண்டது. அதனை விற்பனை செய்தால் அவர் அந்த ஊரின் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருப்பார். எனக்குத் தெரிந்து அந்த சொத்தை 25 ஆண்டுகளாக விலைக்குக் கேட்கிறார்கள். நண்பர் எந்த பதிலும் சொல்வதில்லை. அவரது சிறப்பியல்பு என்னவெனில் யார் எதற்கு அழைத்தாலும் அவர்களுடன் சென்று விடுவார். திருமணம், மங்கள நிகழ்ச்சிகள், துக்கம் என அனைத்துக்கும் சென்று விடுவார். இவ்விதமான நிகழ்வுகளின் அனைத்து பணிகளும் அவருக்குத் தெரியும். மூன்று நான்கு நாட்கள் இருந்து எல்லா பணிகளையும் முடித்துக் கொடுத்து விட்டு தான் வருவார். ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்தார். வருடத்தில் 100 நாட்கள் கடையில் இருந்தால் மிகப் பெரிய விஷயம். ஆனால் கடைக்காரர் ஏன் அடிக்கடி விடுப்பு எடுக்கிறீர்கள் எனக் கேட்க மாட்டார். நண்பரின் சுபாவம் அவருக்குத் தெரியும். நான் பிறந்து மருத்துவமனையில் இருந்த தினத்திலேயே என்னைக்  காண வந்தவர்களில் ஒருவர். என்னை விட பல வயது பெரியவர். இருப்பினும் சிறு குழந்தையாயிருந்த நாளிலிருந்து அவரை அண்ணன் என்றே அழைப்பேன். 

அவரைப் பற்றி சொன்னால் நிறைய நிகழ்வுகள். இன்று எங்களுக்குள் நிகழ்ந்த உரையாடலை மட்டும் குறிப்பிடுகிறேன். 

***

இன்று காலை மரணத் தறுவாய் குறித்து எழுதியதும் மரணம் குறித்து நிறைய யோசித்துக் கொண்டிருந்தேன். காலை 10 மணி அளவில் ஒரு மரணச் செய்தி வந்தது. அங்கே செல்ல வேண்டும். இங்கிருந்து 2 மணி நேர பைக் பயணம். அண்ணனுக்கு ஃபோன் செய்தேன். 

‘’அண்ணன் ! ஊர்ல இருக்கீங்களா? ஒரு ‘’டெத்’’க்கு போகணும்’’

‘’இங்க தான் தம்பி இருக்கன்.’’

‘’நான் இன்னும் 1 மணி நேரத்துல கிளம்பிடுவேன். நீங்க எங்க வரீங்க?’’

‘’நான் பை பாஸ்-ல நிக்கறன். வந்துடுங்க’’

ஒரு ஆவணம் தயார் செய்ய வேண்டியிருந்தது. ஆவண எழுத்தரைப் பார்த்து தயார் செய்யச் சொல்லி பணியைத் துரிதப்படுத்தி விட்டு கிளம்பினேன்.

புறவழிச்சாலையில் சட்டநாதபுரம் திரும்பியதும் அண்ணனிடமிருந்து ஃபோன். நான் வழக்கமாக பிக் அப் செய்யும் இடத்துக்கு வந்திருந்தார். 

***

பங்குனி வெயில். 

நாங்கள் சென்று கொண்டேயிருந்தோம். 

’’அண்ணன்! நீங்க பிறந்த வருஷம் என்ன?’’

‘’தெரியல. ஞாபகம் இல்ல’’

ஞாபகம் இல்லையெனில் சற்று முயன்று ஞாபகத்துக்குக் கொண்டு வந்து விடலாம். தெரியவில்லை என்றால் சிரமம் தான். 

‘’அண்ணன் உங்க மேரேஜ் எந்த வருஷம் நடந்தது? அப்ப உங்களுக்கு என்ன வயசு?’’

‘’1996. அப்ப எனக்கு 35 வயசு’’

’’அப்ப நீங்க பிறந்த வருஷம் 1961. இப்ப உங்களுக்கு 65 வயசாகுது’’

கொள்ளிடத்தைத் தாண்டி விட்டோம். 

‘’அண்ணன் நீங்க சீர்காழி. நான் மாயரம். நம்மகிட்ட 10 வருஷம் முன்னாடி யாராவது நாம இப்படி நம்ம ஏரியால 4 வழிச் சாலைல போவோம்னு சொல்லியிருந்தா நாம நம்பியிருப்போமா?’’

‘’நம்பவே முடியாத விஷயம். உண்மையாயிருக்கு.’’

50 நிமிடங்களில் கொள்ளிடத்திலிருந்து கடலூர் சென்று விட்டோம். துக்க நிகழ்வில் இறுதி மரியாதை செலுத்தி விட்டு வெளியேறினோம். 

***

’’அண்ணன் ! இன்னைக்கு நியூஸ் பேப்பர்ல ஒன்னு படிச்சன். அதாவது சாவுக்கு ரொம்ப பக்கத்துல போன ஒருத்தருக்கு சாவுக்கு அப்புறம் நடக்க இருக்கற விஷயங்கள் தெரிஞ்சுருக்கு. அத அவர் ஒரு படமா வரைஞ்சிருக்கார்.’’

‘’அந்த படம் எப்படி இருக்கு’’

‘’பூமி சுத்திட்டு இருக்கு. மேலே சூரியன் இருக்கு. அதுக்கு நடுவுல ஒவ்வொரு உயரத்துல ஒவ்வொரு லைன் இருக்கு. அந்த லைன்ல நிறைய ஜீவன் லாம் நிக்குது. எல்லாத்துக்கும் மேல சூரியன்.’’

அண்னன் அந்த காட்சியை கற்பனை செஞ்சு பாத்தார். 

‘’நாம இப்ப டெத் வீட்டுக்கு போனோம்ல அந்த ஜீவனுக்கு என்ன நடந்ததுன்னு தெரியாது. உடம்பிலிருந்து நீங்கிடும். ஆனா உடம்பு பக்கத்துலய இருக்கும். ஏன்னா பல வருஷம் இருந்த இடம். அதனால என்ன செய்யணும்னா ஒருத்தர் இறந்திட்டா 6 மணி நேரத்துக்குள்ள அந்த சடலத்தை தகனம் செஞ்சிடணும். இனிமே அதுக்கு இங்க வேலை இல்ல. மெல்லவோ வேகமாவோ அது வானத்தை நோக்கி   போகணும். அது போய் சேர வேண்டிய இடம் அதுதான். கூட இருக்கறவங்க அந்த பயணத்துக்கு அந்த வழியனுப்பலுக்கு ஹெல்ப் பண்ணனும். பயணத்தை டிலே செய்துட கூடாது’’

அண்ணன் யோசித்தார். 

‘’பூமிக்கும் வானத்துக்கும் நடுவ கோடு கோடா இருக்குல்ல. அது ஒவ்வொன்னும் ஒவ்வொரு குரூப். இப்ப நீங்க இருக்கீங்க. உங்களுக்கு நிகழ்ச்சிகள்ல கலந்துக்கறது இண்ட்ரஸ்ட். அந்த மாதிரி இருப்பவங்க ஒரு குரூப் நிப்பாங்க. விளையாட்டுல இண்ட்ரஸ்ட் இருக்கறவங்க ஒரு குரூப்பா நிப்பாங்க. அமைதியா இருக்கணும்னு நினைக்கறவங்க ஒரு குரூப்பா இருப்பாங்க. ( அப்போது ஒரு டாஸ்மாக் கடை அங்கே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது) குடிபோதைல இண்ட்ரற்ஸ்ட் இருக்கறவங்க இன்னொரு குரூப்பா இருப்பாங்க. நாம அதில ஏதாவது ஒன்னுல போய் சேர்ந்திடுவோம். நாம எதை விரும்புறோமோ அதுல இருப்போம். நல்லதை விரும்பியிருந்தா நல்லதோட. கெட்டதை விரும்பியிருந்தா கெட்டதோட. திரும்ப பூமிக்கு வரணும். இன்னொரு ஜென்மம் வாழணும்’’

சொல்லும் போது எனக்கும் கேட்கும் போது அண்ணனுக்குமே சோர்வாக இருந்தது ; இன்னொரு ஜென்மத்தை நினைச்சா. 

‘’ஆனா சில ஜீவன்கள் மட்டுமே மேலே உயரத்துக்கு போயிடுறாங்க. உடல்லயிருந்து உயிர் நீங்கனதும் எங்கயும் நிக்காம வானத்துல போய்ட்டேயிருக்காங்க. சூரியனுக்கும் மேல கடவுள் இருக்கார். அவர்ட்ட போயிடுறாங்க. அவங்க திரும்ப பூமில ஒரு ஜீவனா கருப்பைல பிறக்க மாட்டாங்க. 100 கோடி மனுஷ ஜீவன்ல ஒருத்தருக்குத்தான் இது சாத்தியம் ஆகுது. ‘’

’’அடுத்த ஜென்மத்துல மனுஷங்க மனுஷங்களாதான் பிறப்பாங்களா?’’ அண்ணன் கேட்டார்.  

‘’தெரியாது அண்ணன் ! ( அங்கே ஒரு உடும்பு ஓடியது. ஒரு பசு மாடு நின்றது) . உடும்பா கூட பொறக்கலாம். பசு மாடா பொறக்கலாம். இந்த பசு மாடும் உடும்பும் அடுத்த ஜென்மத்துல மனுஷனா பொறக்கலாம்’’ 

இருவரும் மௌனமாகி விட்டோம். 

‘’காசில அண்ணன் சடலங்களை எடுத்துட்டு போகும் போது ‘’ ராம் நாம் சத் ஹை’’ அப்படின்னு சொல்லுவாங்க. அதாவது இந்த உலகத்துல ராம நாமம் மட்டும்தான் சத்தியம் அப்படின்னு அர்த்தம்’’

நம் நாட்டில் எவர் தான் ராமன் கதையை ஆர்வமாகக் கேட்காதவர் ? ஆர்வமாகச் சொல்லாதவர்?

‘’அடுத்த நாள் காலைல பட்டாபிஷேகம். முதல் நாள் ராத்திரி கூப்பிட்டு கைகேயி சொல்றாங்க. (கம்பன் பாடலைச் சொன்னேன்). 

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி தாங்க அருந் தவம் மேற்கொண்டு
பூழி வெங் கானம் நண்ணி புண்ணியத் துறைகள் ஆடி
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள்.

உலகமே பெருசு. கடல் சூழ்ந்த உலகம் இன்னும் பெருசு. நீ சடாமுடி தரித்து நிறைய தவம் செஞ்சு காட்டுல இருந்துட்டு தூரத்தில இருக்கற புண்ணிய நதிகள்ல நீராடிட்டு 14 வருஷத்துக்கு அப்புறம் வா. இந்த 14 வருஷம் கேட்க பெருசா தெரிய போகுதுண்ணு ஏழிரண்டு ஆண்டுன்னு சொல்லப்படுது. ஏழு இரண்டு எவ்வளவு “

அண்னன் ‘’14’’ என்றார். 

‘’என்னடா இப்படி ஆயிடுச்சேன்னு ராமன் நினைச்சு மனசு வருத்தப்பட்டிருக்கலாம். எல்லா ராஜ்யத்தையும் சேர்ந்தவங்க வந்திருக்காங்க. முக்கியமான அரசு நிகழ்வு நடக்கலண்ணா நம்ம நாட்டைப் பத்தி தப்பா நினைப்பாங்களேன்னு நினைச்சுருக்கலாம். வசிஷ்டர் வார்த்தை தப்பா போய்டக் கூடாதேன்னு யோசிச்சிருக்கலாம். ஆனா அவர் எதையுமே நினைக்கல. அவர் மனசுல துளி கூட வருத்தம் இல்ல. கம்பன் சொல்றான் ; ‘’ராஜ்யம் இல்லை ; காட்டுக்குப் போ’’ன்னு சொன்னப்ப ராமன் மகன் ‘’அன்றலர்ந்த தாமரை முகத்தினன்’’ அப்படிங்கறான். அவன் முகம் 10 செகண்ட் முன்னாடி பூத்த தாமரைப்பூ மாதிரி இருந்துச்சாம். ‘’

இருவரும் மீண்டும் மௌனமாகி விட்டோம். 

’’ஒரு மனுஷன் அடையக்கூடிய உச்சபட்சமான வாழ்க்கை ராமனுடைய வாழ்க்கை. ராஜ்யத்தை இழந்தான். அத பெருசா நினைக்கல. காட்டுல கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்தான். அதயும் பெருசா நினைக்கல. மனைவியைப் பிரிஞ்சு வேதனைப்பட்டான். அவங்களை திரும்பக் கண்டடைஞ்சான். திரும்ப ராஜ்யம். திரும்ப பிரிவு. குழந்தைகள் கூட இருக்க முடியல. ஆனா ராமன் எல்லா துன்பத்தையும் ஏத்துக்கிட்டு செய்ய வேண்டியதை செஞ்சுட்டு இருந்தான். ராமன் கிட்ட ஒவ்வொரு மனுஷனுக்கும் படிக்க பாடம் இருக்கு. நாம பொருளை இழந்திருக்கோமோ முயற்சி செஞ்சா திரும்ப கிடைக்கும்ங்கறது ராமன் வாழ்க்கைல இருக்கு. ஒரு பின்னடைவா அத இல்லாம ஆக்க முடியும் இதுவும் ராமன் வாழ்க்கைல இருக்கு. அவன் வாழ்க்கைய பாத்து நாம நிறைய கத்துக்கலாம்’’

***

கொள்ளிடம் பாலத்தைத் தாண்டினோம். 

‘’ மண்ணில இருந்து வானத்துக்கு போற பயணத்துக்கு எதுவும் கூட வராது. நாம சேர்த்த செல்வம் நம்மோட சொந்த பந்தங்கள் எதுவும் வராது. அந்த பயணம் ரொம்ப தூரம்ங்கறது மட்டும்தான் தெரியுது. வேற என்ன சொல்றதுன்னு தெரியல’’

அண்ணனை சீர்காழியில் டிராப் செய்து விட்டு கிளம்பினேன். 


 

மண்ணும் விண்ணும்


சமீபத்தில் ஒரு பத்திரிக்கை செய்தியை வாசித்தேன். அதாவது, மரணத் தருவாய் வரை சென்று வந்த ஒருவர் தனது அனுபவத்தை ஒரு சித்திரமாகத் தீட்டியிருக்கிறார். அந்த படத்தை மேலே கொடுத்துள்ளேன். படத்தின் கீழே பூமி. மேலே சூரியன். ஜீவன்களின் சாரம் புவி மேற்பரப்பில் குவிந்து ஓர் அலைப்பரப்பின் கீழ் வெளியில் இருக்கின்றன. அந்த அலைப்பரப்பின் மேல் அடுக்குகளில் வேறுவிதமான ஜீவ சாரங்கள் இருக்கின்றன. சூரியன் சுடர்ந்து கொண்டிருக்கிறது. பூமி சுழன்று கொண்டிருக்கிறது. மரணத் தருவாயை அடைந்தவர் இவ்விதமான காட்சியை உணர்ந்திருக்கிறார். அதனை சித்திரமாக வரைந்திருக்கிறார். 

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். என்னை விட 5 வயது இளையவர். அவர் தந்தை ஒரு விவசாயி. அவரது சகோதரர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள்.இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவரது கல்லூரி நாட்களில் அவரை நான் சந்தித்திருக்கிறேன். பட்டப்படிப்பு முடித்ததும் அவர் வெளிநாடு சென்று விட்டார். அதனால் பல வருடங்கள் பார்க்க முடியவில்லை. ஒரு நாள் தற்செயலாக ஊரின் கடைத்தெருவில் சந்தித்தோம். அவருக்கு என்னைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. வெகுநாள் கழித்து சந்தித்ததைக் கொண்டாடும் விதமாக ஐஸ்கிரீம் சாப்பிடச் சென்றோம். அவர் அப்போது உடல் மிகவும் சோர்வாக இருந்தார். ஏன் சோர்வு தென்படுகிறது என்று கேட்டேன். பெங்களூரில் 30 நாள் முன்பு தனக்கு நடந்ததை என்னிடம் கூறினார். வெளிநாட்டில் வேலை பார்த்த அவர் பின்னர் பெங்களூரில் வீடு வாங்கிக் கொண்டு வந்து குடியேறி விட்டார். அப்போது அவருக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. 

பெங்களூரில் ஒரு ஹோட்டலுக்கு உணவருந்தச் சென்ற அவரிடம் ‘’மெனு’’ கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ‘’கார்லிக் ஜூஸ்’’ என இருந்திருக்கிறது. அதனை ஆர்டர் செய்து விட்டார். ஜூஸ் வந்திருக்கிறது. அதனைக் குடித்து விட்டார். குடிக்கும் போது அவர் நாவுக்கு உகந்த ருசியாகவே இருந்திருக்கிறது. விருப்பத்துடன் குடித்திருக்கிறார். குடித்து முடித்த பின் அவர் ஏதோ ஒரு மாறுபாட்டை உணர்ந்திருக்கிறார். அதனை இன்னதென்று சொல்ல முடியவில்லை என்றார். ஜூஸுக்கான கட்டணத்தை செலுத்தி விட்டு தனது ஃபிளாட்டுக்கு வந்து விட்டார். 

அவர் உடல் எப்போதும் இருப்பதைப் போல் இல்லாமல் கொஞ்சம் மாறுபாடு அடைவதைப் போல் தோன்றியிருக்கிறது. மிகவும் இலகுவாக ஆவதைப் போல தோன்றியிருக்கிறது. உடல் என்ற ஒன்றே இல்லாமல் இருப்பதைப் போல உணர்ந்திருக்கிறார். படுக்கையில் படுத்து விட்டார். நிமிடங்கள் மெல்ல கடந்திருக்கின்றன. உடலற்ற நிலையில் தான் இருப்பதாக அவருக்குத் தோன்றியிருக்கிறது. ‘’கார்லிக் ஜூஸ்’’ அருந்தியதன் விளைவு என அவர் எண்ணவில்லை. திடீரென மூச்சு வேகமாக இயங்கத் தொடங்கியிருக்கிறது. மூச்சு மட்டுமே இருப்பதாக உணர்ந்திருக்கிறார். மூச்சு மட்டுமே இருந்திருக்கிறது . வேறு ஏதும் இல்லை. மூச்சு உள்ளே செல்கிறது ; வெளியேறுகிறது. அதனை மட்டுமே கவனித்திருக்கிறார். வேறு எதிலும் கவனம் இல்லை. மிக வேகமாக மூச்சு படபடக்கத் தொடங்கியிருக்கிறது. அவர் அதன் லயத்தில் அதனுடன் ஆழ்ந்து விட்டார். பல மணி நேரங்கள் இவ்வாறே சென்றிருக்கின்றன. அவர் தான் மயக்கம் அடையவில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறார். அப்போது அவருக்கு சில காட்சிகள் தென்பட்டிருக்கின்றன. அவர் உடல் பூமியில் கிடப்பதாகவும் மேலே சூரியன் ஒளி விட்டுக் கொண்டிருப்பதாகவும் தான் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருப்பதாகவும் சூரியனுக்கு அருகில் இருந்தாலும் வெம்மையாக இல்லை ; குளிரான சூழ்நிலையாகவே இருந்தது என்றும் சொன்னார். தான் அந்த நிலையை விரும்பியதாகவும் அப்படியே அங்கேயே இருந்து விடலாம் எனத் தோன்றியதாகவும் கூறினார். அங்கே துயரம் இல்லை ; வலி இல்லை ; அல்லல் இல்லை. 

அவர் கார்லிக் ஜூஸ் குடித்த போது நேரம் மாலை 6.30. தனது ஃபிளாட்டில் படுத்த போது நேரம் இரவு 7.15. நிச்சயமாகத் தான் தூங்கவும் இல்லை ; மயக்கமடையவும் இல்லை என உறுதியாக மீண்டும் மீண்டும் கூறினார். அதிகாலை 4 மணிக்கு அவர் சூழலில் ( ஹாஸ்யம் : அப்படித்தானே சொல்ல முடியும் ? உடல் பிரக்ஞை இல்லை. மனமும் இல்லை ; உடலும் மனமும் மூச்சில் லயித்து விட்டன) சிறு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அது ஒரு சுருதிபேதம் என அவர் கருதுகிறார். (ஹாஸ்யம் :அவர் அதை விரும்பவில்லை.) எனினும் சூரியனையும் அண்ட வெளியையும் விட்டு விட்டு தன் உடல் பக்கத்தில் அவரது பிரக்ஞை வந்து விட்டது. உடலில் சிறு அசைவு ஏற்பட்டு மனம் தன் வழமையான இயக்கத்துக்கு வந்திருக்கிறது. பெருவெளியில் உலவி வந்ததால் அவர் எழுந்து அமர்ந்து ஃபிளாட்டைப் பூட்டி விட்டு கீழே சென்று அங்கே இருந்த அபார்ட்மெண்ட் காவலரிடம் ஒரு ஆட்டோ பிடித்து வருமாறு கூறியிருக்கிறார். தெரு முக்கில் அந்த நேரத்தில் ஆட்டோ இருந்திருக்கிறது. ஆட்டோ பிடித்து அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்திருக்கிறார். இதயம் மிக படபடப்பாக இருப்பதை நாடி பிடித்துப் பார்த்தே அறிந்திருக்கிறார்கள். மூச்சு மிகவும் படபடப்பாக இருந்திருக்கிறது. ( ஹாஸ்யம் : நான் அவரிடம் கேட்டேன் :   இரவு 7.15க்கு மூச்சுத்திணறல் இருந்ததா என்று கேட்டேன். அவருக்கு சொல்லத் தெரியவில்லை. அவர் தான் ஒரு லயத்தை 7.15 லிருந்தே உணர்ந்ததாகச் சொன்னார். ‘’லயம்’’ என்பது என்னுடைய வார்த்தை. அவர் அவ்விதம் சொல்ல ’’அதை என்ன வார்த்தையில் சொல்வது என்று தெரியவில்லை’’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்). மருத்துவமனையில் அப்போது இருந்த ’’டியூட்டி டாக்டர்’’  இரவு என்ன சாப்பிட்டீர்கள் எனக் கேட்டிருக்கிறார்.நண்பர் கார்லிக் ஜூஸ் எனக் கூறியிருக்கிறார். வேறு திட உணவு ஏதும் சாப்பிட்டீர்களா ? குமட்டல் இருந்ததா ? வாந்தி எடுத்தீர்களா? எனக் கேட்டிருக்கிறார்கள். எதுவும் இல்லை. ‘’டியூட்டி டாக்டர்’’ இதயம் படபடப்பதும் மூச்சு மிக அதிகமாகத் திணருவதும் இருப்பதால் வாயின் வழியாக ஒரு டியூபைச் செலுத்தி குடலில் இருக்கும் வஸ்துக்களை வெளியேற்றி விட்டனர். வெளியேறிய பின் சில மணி நேரங்கள் மூச்சுத் திணறல் இருந்திருக்கிறது. அப்போது நண்பர் அசௌகர்யத்தையும் வலியையும் உணர்ந்திருக்கிறார். ( ஹாஸ்யம் : அப்போது நான் கேட்டேன். மருத்துவமனையில் இருந்த போது பூமி, சூரியன் ஆகிய உணர்வு இருந்ததா என சீரியஸாகவே கேட்டேன். இல்லை அப்போது வலி மட்டுமே இருந்தது. வீட்டு மனிதர்கள் நினைவு இருந்தது என்றார்). அதன் பின்னர் மயக்கமாகி விட்டார். மயக்கத்தில் எந்த நினைவும் இல்லை. மெடிக்கல் உபகரணங்கள் அவர் மூச்சு இயல்பாக இருப்பதையும் அவர் இதயம் இயல்பாக இயங்குவதையும் காட்டியிருக்கிறது. மருத்துவர்கள் அவரை எழுப்பியிருக்கின்றனர். சீனியர் மருத்துவர்கள் வந்திருகின்றனர். ‘’டியூட்டி டாக்டர்’’ சற்று முரட்டி வைத்தியம் தான் செய்திருக்கிறார் ; இருந்தாலும் அவ்விதம் செய்யப்படவில்லை எனில் நோயாளியின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாது. இது ஒரு வித்தியாசமான சூழ்நிலை. உணவு ஒவ்வாமை ஏற்பட்டால் குமட்டலும் வாந்தியும் இருக்கும் ; உணவு ஒவ்வாமை குடலைத்தான் பாதிக்கும் ; ஆனால் இவர் விஷயத்தில் நுரையீரலை பாதித்திருக்கிறது. எனினும் நுரையீரலில் ஸ்கேன் எந்த மாறுதலையும் காட்டவில்லை. நோயாளி எவ்விதம் நோயுற்றார் என்பதும் எவ்விதம் உயிர் பிழைத்தார் என்பதும் கண்டறியப்படாததாகவே இருக்கிறது ‘’ எனக் கூறியிருக்கின்றனர்.   

ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்த பின்னர் ‘’சூரியனுக்குப் பக்கத்துல போனேன்’’ என்றார். 

ஊருக்குப் பக்கத்தில் ஒரு சில்லறை சிமெண்ட் வியாபாரி இருக்கிறார். அவரிடம் எப்போதும் 10 மூட்டை சிமெண்ட் இருக்கும். எவரும் அவரசரமாக ஒரு மூட்டை இரண்டு மூட்டை வேண்டும் என்றால் அவரிடம் வாங்குவார்கள். அவரை ஒரு நாகப்பாம்பு கடித்து விட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். பின்னர் உடல்நலம் மீண்டு வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவரைக் கண்டு நலம் விசாரிக்கச் சென்றேன். ‘’சார் ! மூச்சு மட்டும் தான் ஃபீல் பண்ணன். சூரியனுக்குப் பக்கத்துல போய்ட்டன்’’ என்றார். 

யோகா வகுப்புகளில் ‘’மூச்சை கவனியுங்கள்’’ என்பார்கள். சாமானியமாக மனிதர்களுக்கு மூச்சு என ஒன்று இருக்கிறது எனும் கவனம் கிடையாது. உடல் இருப்பதை அறிவார்கள். மனம் இருப்பதை அறிவார்கள். அந்த இரண்டும் அவர்கள் நேரடி அனுபவத்தில் இருக்கும். மூச்சு சாமானியமாக கவனத்துக்கு வராது. ஏனென்றால் மூச்சு சூட்சுமமானது. அதனைக் கவனித்தல் என்பது அபூர்வம். விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள், தீவிரமான உடல் உழைப்பு கொடுப்பவர்கள், நீச்சல் அடிப்பவர்கள் ஆகியோருக்கு ‘’மூச்சைக் கவனித்தல்’’ என்னும் தன்மை இயல்பாக இருக்கும். உடலைக் கடுமையாகப் பயிற்றுவிப்பதன் மூலம் மூச்சு அடையும் மேனிலையை அவர்கள் அனுபவபூர்வமாக உணர்வார்கள். அவர்களிடம் அதனை வார்த்தையாக சொல்லுங்கள் என்று சொன்னால் அப்படி ஒன்று இருக்கிறது என்பது கூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது. அவர்கள் வாழ்க்கை அனுபவத்துடன் அது வேறுபடுத்த முடியாததாக இருக்கும். 

ஹாஸ்யம் : சமீபத்தில் சாவின் பக்கத்தில் சென்று வந்து ஓவியம் வரைந்தவரும் ‘’கார்லிக் ஜூஸ்’’ குடித்த எனது நண்பரும் நாகப்பாம்பு கடித்த சிமெண்ட் வியாபாரியும் என மூவருமே சூரியனுக்குப் பக்கத்தில் போனதாகவே சொல்கிறார்கள். 
 

Monday, 16 March 2026

கிழக்கும் மேற்கும் (ஹாஸ்யம்)

எனது நண்பரின் வீடு மிகப் பெரியது. 4 ஏக்கர் பரப்பு கொண்டது. அதன் மையப்பகுதியில் 2000 சதுர அடி கொண்ட கட்டிடம் உள்ளது. 4 ஏக்கர் பரப்பையும் சுற்றிச் சுற்றுச்சுவர். 1990ம் காலகட்டத்தைச் சேர்ந்த பெரிய இரும்பு கேட். உள்ளே கார் பார்க்கிங் செய்ய பரந்த பரப்பு. வேப்ப மரத்தின் அடியில் நான்கு சிமெண்ட் பெஞ்ச். அதில் 20 பேர் அமர்ந்து சம்பாஷிக்க முடியும்.  வீட்டுக்கு மிகப் பெரிய வாசல். அதில் கோலமிடப்பட்டு எப்போதும் இரு குத்து விளக்குகள் சுடர் விட்டுக் கொண்டிருக்கும். உள்ளே நுழைந்ததும் இடது புறம் அலுவலக அறை. அது வீட்டின் புழக்கத்துடன் இணைந்ததாக இருக்காது . தனியாக இருக்கும். 

வீடு எந்த அளவு சிறியதோ அந்த அளவு அதன் உள்ளே எத்தனை பேர் இருக்கிறார்கள் என அறிய முடியும். அளவில் பெரிதாகிக் கொண்டே போனால் உள்ளே இருப்பவர்களை நாம் அறிய முடியாது. 

எனது நண்பரின் வீடு அமைந்திருப்பது ஒரு கிராமத்தில். 

எனக்கு ஒரு வழக்கம் உண்டு. ஒரு வீட்டுக்குச் சென்றால் அந்த வீட்டிலிருப்பவர்கள் அனுமதி இல்லாமல் அவர்கள் வீட்டுக்குள் செல்ல மாட்டேன். வீட்டு வாசலில் இருந்து ‘’அம்மா’’ ‘’அம்மா’’ என்று கூப்பிடுவேன். அவர்கள் சத்தம் கேட்டு வந்தால் மட்டுமே உள்நுழைவேன். அது வரை வாசல் தான். எனது அனுபவம் தமிழகத்தில் 100க்கு 99 சதவீத இல்லங்களில் அழைப்பு மணிகள் வேலை செய்வதில்லை. வீடு கட்டும் போது ஒரு ஆர்வத்தில் சத்தம் பெரிதாக இருக்கும் விதமாக அழைப்பு மணி ஒலியை அமைத்து விடுவார்கள். கொஞ்ச நாட்களில் ‘’கண்ட்ரோல் சுவிட்ச்’’ ஆஃப் செய்து வைத்து விடுவார்கள். இப்போது கூரியர்காரர்கள் கூட வாசலில் நின்று அழைப்பதில்லை. அலைபேசியில் அழைக்கிறார்கள். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளுக்காக கிராமம் கிராமமாக சென்று ஒவ்வொரு வீட்டுக்கும் நேராக சென்றிருக்கிறேன். அதாவது ஒவ்வொரு வீட்டிலும் ‘’அம்மா’’ ‘’அம்மா’’ என அழைத்திருக்கிறேன். பல வீடுகளில் வெளியில் இருக்கும் எனக்கு உள்ளே டி.வி ஓடிக் கொண்டிருக்கும் ஒலி கேட்கும். உச்ச ஸ்தாயியில் சீரியல் ஓடிக் கொண்டிருக்கும். அதைத் தாண்டி என் குரல் ஒலிக்க வேண்டும். 

தமிழக இல்லங்களில் எவரும் ஒருவர் வாசலில் தான் நின்று அழைக்க வேண்டும் என எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் மேலை நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஒருவர் வசிப்பிடத்துக்குள் இன்னொருவர் அனுமதியின்றி நுழையக்கூடாது என்னும் நெறி உண்டு. என் மனதில் அந்த மேலை நெறி பதிந்து விட்டது. 

நான் நண்பரின் வீட்டிற்கு சற்று வெளிப்பக்கத்தில் இருக்கும் அலுவலக அறையில் அமர்ந்து கொள்வேன். இருப்பினும் நான் அங்கே அமர்ந்திருப்பது எவருக்கும் தெரியாது. பலர் மிக சகஜமாக அவர் வீட்டுக்கு செல்வதும் வருவதுமாக இருப்பார்கள். உறவினர்கள், அண்டை வீட்டுக் காரர்கள், பணியாளர்கள் என. என்னை அறிந்தவர்கள் என அவர்களில் எவரும் இருந்தால் வீட்டின் உரிமையாளர்களுக்குத் தகவல் தெரிவிப்பார்கள். அறியாதவர்கள் என்னை கவனத்துக்குள் கொண்டு வரவே மாட்டார்கள். 

மக்கள் தொடர்பில் தேர்ச்சி உள்ளவன் எனினும் எனக்குள்ளும் சில சிறு தயக்கங்கள் இருக்கும். ‘’அலுவலக அறையில் இருக்கிறேன்’’ என நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்புவேன். பெரிய அலுவலக அறை இருந்தாலும் நண்பர் மாடியில் இருக்கும் ஒரு அறையையே தன் அலுவலக வேலைகளுக்கு பயன்படுத்துவார். வாசலில் இருக்கும் அறைக்கு யாராவது வந்து கொண்டேயிருப்பதால் தனது பணியைச் செய்ய முடியவில்லை என. 

ஒவ்வொரு முறை செல்லும் போதும் பலர் இருக்கும் அந்த வீட்டில் என்னை அறிந்தவர் எவரும் இருந்தால் இயல்பாக இருக்கும் என நினைப்பேன்.  

என்னை மன்னித்து விடுங்கள் (ஹாஸ்யம்)

சென்னையில் வசிக்கும் ஒருவரை ஊரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது சொத்து ஒன்றை விற்பனை செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். நான் முயற்சிகள் மேற்கொண்டேன். எனினும் விற்பனை நிகழவில்லை. மதிப்பு மிக்க சொத்துதான் என்றாலும் விற்பனை கை கூடவில்லை. இவ்வாறான நிகழ்வுகளில் அதனை அப்படியே நிலுவையில் வைத்து விட்டு அடுத்த வேலைகளைப் பார்க்கலாம். அதற்கென ஒரு நேரம் அமையும் என காத்திருக்க வேண்டும்.  

நாளாக நாளாக அந்த சொத்து குறித்த விஷயமே என் நினைவில் இல்லை. அதன் அகல நீளங்கள், பரப்பளவு, விலை எதுவுமே. அமைவிடம் மட்டும் நினைவில் இருந்தது. 

அவர் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டார். என்னால் ஃபோன் எடுத்து பேச முடியவில்லை. பலமுறை அழைத்தார். ஒருமுறை கூட என்னால் ஃபோன் எடுக்க முடியவில்லை. எனக்கு மனதில் வருத்தமாக இருந்தது. அவருக்கு ‘’நாளை அழைக்கிறேன்’’ என குறுஞ்செய்தி அனுப்பினேன். இரண்டு நாள் கழித்து அவரிடம் பேசினேன். அவரிடம் சொன்னதைக் கூறும் முன் அலைபேசி தொடர்பாக எனது அபிப்ராயங்களைத் தெரிவித்து விடுகிறேன். அதனை எவ்விதம் காண்கிறேன் அணுகுகிறேன் என்பதை தெரிவிக்கிறேன். 

(1) அலைபேசி எனப்படும் அதாவது எனது அலைபேசி எனப்படும் உபகரணம் என்னுடையது. அதை நான் ’’சைலண்ட்’’ ஆக வைத்திருக்க முடியும். சுவிட்ச் ஆஃப் செய்ய முடியும். எனது எண் 100 பேரிடம் இருக்கிறது என்பதற்காக அவர்கள் அழைத்ததும் அந்த அழைப்பை ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவானால் அந்த அலைபேசி எனது அலைபேசியாக இராது. அந்த 100 பேரின் அலைபேசியாக ஆகி விடும் அல்லவா? உலகில் 700 கோடி மக்கள் இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் எனது எண் தெரிய இன்றைய இணைய வசதி மூலம் வாய்ப்பு உண்டு. அவ்வாறெனில் என் அலைபேசி என்னைத் தவிர மற்ற 700 கோடி பேரின் அலைபேசியாக ஆகி விடும் அல்லவா? ஒவ்வொருவரும் என்னை அழைத்தால் என்னை அழைக்கும் எல்லா அழைப்புகளையும் நான் ஏற்றால் நான் இன்னும் 13,000 ஆண்டுகள் வாழ வேண்டும். அந்த 13,000 ஆண்டுகளும் ஊன் உறக்கம் இன்றி ஃபோன் பேசிக் கொண்டு தான் இருக்க வேண்டும். ஒரு ஃபோனுக்கு ஒரு நிமிடம் என்று பார்த்த கணக்கு இது. 

(2) அடியேன் படைப்பூக்க மனநிலை கொண்டவன். என் மனம் படைப்பூக்கமானது. அதனைப் பராமரிக்க வேண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனில் அலைபேசி அழைப்புக்கு என் மனத்தை செலுத்திக் கொண்டிருக்க முடியாது. 

(3) எனது வணிகம் சார்ந்து எனக்கு அலைபேசி தகவல் தொடர்பில் உதவுகிறது. எந்த அளவு தேவையோ அந்த அளவு எனக்கு போதும் என நான் எண்ணுகிறேன். 

(4) அலைபேசி எனக்குத் தொந்தரவு தான். ஜி.எஸ்.எம் ஃபோனே எனக்குத் தொந்தரவு தான். என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை. வாங்கப் போவதும் இல்லை. 

(5) ’’இரு கோடுகள்’’ தத்துவம் என ஒன்று உண்டு. வரையப்பட்ட ஒரு கோட்டை அழிக்காமல் சிறிய கோடாக்க வேண்டும் என்றால் அதன் பக்கத்தில் முன்னர் இருந்த கோட்டை விட அளவில் பெரியதாக இன்னொரு கோட்டை வரைய வேண்டும். அப்போது முதல் கோடு சிறியதாகி விடும். 

அந்தத் தத்துவத்தின் அடிப்படையில் இப்போது என்னிடம் இருக்கும் அலைபேசியை ரீ-சார்ஜ் டாப் அப் செய்யாமல் இருந்து விடப் போகிறேன். என்னிடம் அலைபேசியே இல்லை எனும் போது நான் அலைபேசி அழைப்புகளை ஏற்பதில்லை என்னும் புகார் இருக்காது.  

நான் பேசிய நண்பரிடம் ,’’சார் ! நான் ஃபோனை ரொம்ப மினிமமா யூஸ் பண்றவன். நான் ஃபோன் எடுக்கலண்ணு வருத்தப்படாதீங்க. என்னை மன்னித்து விடுங்கள். செல்ஃபோன்ல எனக்கு கால் பண்ணாதீங்க. எஸ் எம் எஸ் அனுப்புங்க. மெஸேஜ் பாத்ததும் நான் கால் பண்றன்’’ என்றேன்.  

Sunday, 15 March 2026

நம்பிக்கைக்கு உரியவர் (ஹாஸ்யம்)

40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. என் நண்பர் இதனை என்னிடம் கூறினார். 

பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளிடம் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வது வழக்கம். பெரிய கட்சிகள் பெரிய அளவில் கையில் பணம் வைத்திருக்கும். சிறிய கட்சிகளிடம் அந்த அளவுக்கு பணம் இருக்காது. எனவே தேர்தல் செலவுக்கு கூட்டணியில் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையில் அடிப்படையில் தொகுதிக்கு இவ்வளவு என தொகையை அளிப்பார்கள். இந்த தொகை அளிக்கப்படுவதும் பெறப்படுவதும் கமுக்கமாக நடைபெற வேண்டிய செயல்கள். எனது நண்பர் சிறிய கட்சியின் தலைமைக்கு நெருக்கமானவர். ஆகவே தலைமை அவரை அவருடைய வாகனத்தில் பெரிய கட்சியின் அலுவலகத்துக்குச் சென்று அவர்கள் அளிக்கும் தொகையை பெங்களூரில் இருக்கும் வணிக நிறுவனம் ஒன்றில் அளித்து விடுமாறும் அவர்கள் அத்தொகையை தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொண்டு சிறிய கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளரிடம் அந்தந்த தொகுதிகளில் பட்டுவாடா செய்து விடுவார்கள் என்றும் ஏற்பாடு. ‘’ஹவாலா’’ வழிமுறை போல. முக்கியமான செயல் என்பதால் தனியராக செல்வது உகந்த வழிமுறை அல்ல என்பதால் இந்த செயல்பாட்டில் உடனிருக்க இன்னொருவரையும் கூட்டிச் செல்ல கூறியிருக்கிறது தலைமை. நண்பர் இந்த விஷயங்களுக்கு நன்றாகப் பழகியவர். எனவே சென்னையில் இருக்கும் அவரது வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் பெரிய கட்சியின் தலைமை அலுவலகத்தில் பணம் நிரம்பிய சூட்கேஸை பெற்றுக் கொண்டு சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் பெங்களூர் நோக்கி பறந்து கொண்டிருக்கிறார். எத்தனை சீக்கிரம் வேலை முடிகிறதோ அத்தனை சீக்கிரம் நிம்மதி என வாகனத்தை எவ்வளவு வேகமாக இயக்க முடியுமோ அவ்வளவு வேகமாக இயக்கியிருக்கிறார். வண்டி இன்னும் பூவிருந்தவல்லியைத் தாண்டவில்லை. 

நண்பரின் உடனிருந்தவர் ‘’அண்ணன்’’ என அழைத்திருக்கிறார். 

வாகன இயக்கத்தில் மும்முரமாக இருந்த நண்பர் சாலையிலிருந்து கண்களை அகற்றாமல் ‘’என்னப்பா’’ என்றார். 

‘’அண்ணன் ! சூட்கேஸ்-ல எவ்வளவு பணம் இருக்கும்?’’

நண்பர் மௌனமாக இருந்திருக்கிறார். 

‘’எங்கேயாவது போய்டுவோம்ணன். இந்த பணத்தை நீங்களும் நானும் பாதிப்பாதி எடுத்துப்போம். அஞ்சு பத்து வருஷம் எங்காவது ஃபாரின் போய்டுவோம். அப்புறமா திரும்ப வந்தா யாரும் நம்மள ஒன்னும் செய்ய முடியாது’’

‘’உலகத்துல நாம எங்க இருந்தாலும் தேடி வந்துடுவாங்க. கொஞ்சம் அமைதியா இரு.’’ எனக் கூறி விட்டு எப்போது பெங்களூர் சென்று சேருவோம் என சென்று சேர்ந்திருக்கிறார். 

நண்பர் என்னிடம் சொன்னார். ‘’கட்சில தொண்டர்கள் ஆயிரக்கணக்கா இருக்காங்க. தலைமை நம்பிக்கைக்கு உரியவர்னு யாரை ரொம்ப அதிகமா நம்புதோ அந்த ஆளே இப்படி. அப்ப மத்தவங்கலாம் எப்படின்னு யோசிச்சுப் பார்த்தால்’’ என்றார்.    

எந்தத் திறனும் இல்லாதவன் (ஹாஸ்யம்)

 ஒரு நாட்டில் ஒரு ராஜாங்கம் இருந்தது.அந்த ராஜ்யத்தின் ராஜனுக்கு ராணி மீது கொள்ளைப் பிரியம். அவள் மீது ஒரு துரும்பு விழுந்தால் கூட ராஜன் துடிதுடித்துப் போய்விடுவான். 

அந்த ராஜாங்கத்தில் ஒரு மந்திரி இருந்தார். அவர் கவனத்துக்கு ஒரு விஷயம் வந்தது. அதாவது , அந்த ராஜ்யத்தின் பிரஜை ஒருவன் எந்தத் திறனும் இல்லாதவனாக இருக்கிறான் என்று. மந்திரி சொன்னார், ‘’அது எப்படி ஒருவன் எந்தத் திறனும் இல்லாதவனாக இருக்க முடியும். அவனை என்னிடம் அழைத்து வாருங்கள். நான் விசாரிக்கிறேன்’’ என்றார். அவனை மந்திரி முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். 

‘’உன்னிடம் உள்ள திறன்களைச் சொல்’’ மந்திரி மென்மையாகவே கேட்டார். 

அவன் மௌனமாயிருந்தான். 

‘’அஞ்சாதே ! சொல்ல நினைப்பதைச் சொல்.’’ மந்திரி அவனுக்கு ஊக்கம் கொடுத்தார். 

‘’எனக்கு நல்லா துக்கம் சொல்ல வருங்க. அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது.’’

மந்திரி ஓலைநாயகத்தை அழைத்து ‘’எந்தத் திறனும் இல்லாதவன்’’ எனக் கூறப்பட்டவனுக்கு பணி நியமன உத்தரவு அளிக்கச் சொன்னார். 

மந்திரி அவனிடம் ‘’ இனி நீ அரசாங்க ஊழியன். அரண்மனையில் ஊழியர் குடியிருப்பில் தங்கிக் கொள்ளலாம். மூன்று வேளை உணவும் மாத ஊதியமும் உண்டு. குடும்பத்தை அழைத்து வந்து விடு.’’

அரண்மனை செயலக ஊழியர்களுக்கு மந்திரி ஏன் இவனுக்கு பணி நியமனம் செய்தார் என்பது புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது. அரசாங்கத்தில் எல்லாம் புரிந்து தெரிந்தா நடக்கிறது ; நாம் இதில் மனதைச் செலுத்த வேண்டாம் என தங்கள் வழமைகளுக்குத் திரும்பினர். 

நாட்கள் வேகமாக ஓடின. 

ராஜன் நாட்டில் இருந்த காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். காட்டில் 15 நாள் முகாம் செய்வதாய் திட்டம். காட்டுக்குச் சென்று 5 நாள் ஆகியிருந்தது. 

ராஜன் காட்டுக்குச் சென்ற 5 வது நாள் ராணிக்கு விஷ ஜூரம் வந்தது. அரண்மனை வைத்தியர்கள் எவ்வளவோ முயன்று பார்த்தனர். ஒரு ராத்திரி கூட சிகிச்சையால் அவள் உயிரைப் பிடித்து வைக்க முடியவில்லை. அவள் காலமாகி விட்டாள். இந்த தகவல் மன்னனுக்குத் தெரிவிக்கப்பட்டு அவன் திரும்பி வர குறைந்தது 3 நாளாவது ஆகி விடும். அதுவரை சவத்தைப் பாதுகாத்து அரண்மனையில் வைக்க முடியாது என்பதால் அரச குடும்பத்தின் வாரிசுகளைக் கொண்டு தகனத்தை முடித்து விட்டனர். 

ஒன்றுக்கு இரண்டு எதிர்பாராமைகள் அரங்கேறி விட்டன. ராணி உயிரையும் சிகிச்சை அளித்து காக்க முடியவில்லை ; ராணி சடலத்தைக் கூட மன்னன் பார்க்க முடியாமல் தகனம் செய்தாயிற்று. இந்த இரண்டு தகவலையும் மன்னனுக்கு எவ்விதம் தெரிவிப்பது என ராஜாங்கத்தின் அமைச்சகங்களும் செயலகங்களும் திணறின. கூடிக் கூடி ஆலோசித்தன. மந்திரிக்கு தான் அரசாங்க வேலை கொடுத்த ‘’எந்தத் திறனும் இல்லாதவன்’’ நினைவு வந்தது. அவனை அழைத்து வரச் சொன்னார். 

அவனிடம்,’’ விஷயம் உனக்குத் தெரிந்திருக்கும். இந்த செய்தியை யார் கொண்டு சென்று தெரிவித்தாலும் ராஜன் அக்கணமே செய்தி கொண்டு சென்றவன் தலையைக் கொய்து விடுவார். மேலும் அரண்மனைக்கு வந்து இங்கே உள்ள அத்தனை ஊழியர்களையும் கழு ஏற்றி விடுவார்’’என்றார். 

‘’மந்திரி ஐயா! நாடே நான் எதுக்கும் பயன்படாதவன்னு சொன்னப்ப எனக்கு நீங்க அரசாங்க வேலை கொடுத்தீங்க. அதை எப்போதும் நான் நன்றியோட நினைப்பன். நான் தகவல் கொண்டு போறன்’’ என்று சொல்லி புறப்பட்டான். 

அரசாங்க ஊழியர்கள் இன்னும் ஓரிரு நாளில் ஒட்டுமொத்தமாக கழுவேற்றம்தான் எனக் கவலையோடு இடிந்து போய் உட்கார்ந்திருந்தனர். 

துக்கம் சொல்லச் சென்றவன் காட்டில் மன்னன் கூடாரத்தை அடைந்து நெடுஞ்சாண் கிடையாக மன்னனை வணங்கினான். 

ராஜன் எச்சொல்லும் உரைக்காமல் அவனை நோக்கினான்.

’’மஹாராஜா! ராணிக்கு லேசாக உடம்பு சரியில்லை’’ என்றான் துக்கம் சொல்ல வந்தவன். 

ராஜன் பதறி விட்டான். ‘’ஆ! என்ன சொல்கிறாய்? என்ன உடம்புக்கு? வைத்தியம் நடக்கிறதா ? வெளிநாட்டிலிருந்து வைத்தியர்கள் வந்தார்களா ? நான் இப்போது உடனே புறப்படவா ? ‘’ என அடுக்கடுக்காக கேள்வியாகக் கேட்டான். 

‘’ராஜா! நம் வைத்தியரே குணப்படுத்தி விட்டார்’’ என்றான் துக்கம் சொல்ல வந்தவன். 

’’அப்பாடா’’ என ஆசுவாசம் ஆனார் மன்னர். 

‘’குணமான அடுத்த நாள் ராணியின் கால் சுண்டு விரலில் சிறு காயம் மஹாராஜா’’

மன்னன் அதற்கும் பதட்டமடைந்து பின் விபரம் கூறப்பட்டு சகஜமானான். துக்கம் சொல்ல வந்தவன் விரல், கை, கால் என ஒவ்வொரு அவயங்களிலும் சிறு காயம் ஏற்பட்டு ராணிக்குச் சரியானது என்றான். ஒவ்வொரு முறையும் பதட்டமைந்து பின் ஆசுவாசமாகி நிலை மீண்டான் ராஜன். அதன் பின் ராணிக்கு ஜூரம் வந்தது ; விஷ ஜூரம் வந்தது எனக் கூறப்பட்டது. 

ராஜன் உச்சகட்ட பதட்டத்துக்குச் சென்று கத்தினான். ‘’ ராணி உயிரோட இருக்காளா? இல்ல செத்து தொலஞ்சிட்டாளா?’’ 

‘’ நாலு நாள் முன்னாடியே ராணி இறந்துட்டாங்க மஹாராஜா. தகனமும் ஆயிடுச்சு’’

ராஜன் தலை சுற்றி மயங்கி விழுந்து விட்டான். மயக்கம் தெளிந்து விழித்ததும் அவன் மனம் ராணி இறந்து போன யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டது. அவள் விதி அவ்வளவு தான் என்ற துக்கத்தோடு சோகமாக அரண்மனைக்குப் புறப்பட்டான். 

சினத்துடனும் வஞ்சத்துடனும் வந்து தங்களை ராஜன் கழுவேற்றப் போகிறார் என எண்ணிய அரண்மனை ஊழியர்கள் ராஜன் அவ்விதம் செய்யாததைக் கண்டு வியப்படைந்தனர். நடந்த விஷயத்தை விசாரித்து அறிந்து ‘’எந்தத் திறனும் இல்லாதவன்’’ எனக் கூறப்பட்டவன் கொண்டிருந்த திறமையை வியந்தனர். அவனுக்கு அரசாங்க வேலை கொடுத்த மந்திரியின் சமயோஜித தன்மையைத் தங்களுக்குள் பாராட்டிக் கொண்டனர்.