Monday, 4 May 2026

திருக்குறள் 667

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. 

ஆலயம் என்னும் அற்புதம்

இன்று காலை திருஇந்தளூர் பரிமள ரங்கநாத சுவாமி ஆலயத்துக்குச் சென்றிருந்தேன். காலை நேரம். ஆலயத்தில் ஓரிருவர் மட்டுமே இருந்தனர். அப்போது ஒரு துவாரபாலகர் சிலை முன் நின்றிருந்தேன். எத்தனை பெரியது அந்தத் துவாரபாலகர் சிலை. ஆலயத்தில் இவ்விதமான சிலைகள் மட்டும் எத்தனை. தூண்களில் எத்தனை சிறு சிற்பங்கள். இவ்வளவு பெரிய தூண்களில் ஒன்று எங்கேனும் ஓரிடத்தில் இருந்தால் கூட அது அளிக்கும் உன்னத உணர்வு என்பது மிகப் பெரியது. ஒரே இடத்தில் எத்தனை தூண்கள். எத்தனை சிற்பங்கள்.  

தமிழகத்தின் ஆலயங்கள் அத்தனையும் இஸ்லாமியப் படையெடுப்பின் போது தாக்கப்பட்டன. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஆலயங்கள் மூடிக் கிடந்து கற்குவியலாயின. நாட்டின் நல்லூழ் வ்ஜயநகரப் பேரரசு உருவாகி ஆலயங்களை இருளிலிருந்து மீட்டது. கணிசமான அளவில் கட்டுமானங்களை மேற்கொண்டு ஆலயக்கலையை ஆலய மரபுகளைக் காத்தது. 

கலைப் பொக்கிஷங்களான பேராலயங்களில் பணி புரியும் அர்ச்சகர்கள் சொற்ப ஊதியம் பெற்றுக் கொண்டு வறுமையில் வாடுகின்றனர். ஆலயத்தை நிர்வகிக்க பொறுப்பு ஏற்கும் அரசு ஆலயத்தின் அலுவலகத்தில் பணி புரியும் அலுவலக உதவியாளருக்கு ஊதியம் எவ்வளவு ? ஆலய அர்ச்சகருக்கு அளிக்கும் தொகுப்பு ஊதியம் எவ்வளவு? ஆலய அலுவலக அரசு ஊழியரான அலுவலக உதவியாளர் ஊதியம் குறைந்தபட்சம் ரூ. 45,000 இருக்கக் கூடும். ஆலய அர்ச்சகர் மாதம் தொகுப்பு ஊதியமாக ரூ.2000 பெறுவாரா? இதை விட பெரும் அநீதி வேறேதும் இருந்திட முடியாது. 

உலகக் கலை மரபின் பெரும் பொக்கிஷமான தமிழகக் கோயில்கள் கலையும் ஆன்மீகமும் திகழும் தலங்களாக பராமரிக்கப்பட வேண்டும் என்னும் எண்ணம் தீவிரமாக எழுந்தது. 

நிலமும் உரமும் (நகைச்சுவைக் கட்டுரை)

மோனப் பெரு வெளி (நகைச்சுவைக் கட்டுரை)  நண்பரிடம் சமணத்துக்கும் சைவ வைணவ சாக்தத்துக்கும் இடையே இருக்கும் அடிப்படை வேறுபாட்டு இயல்பை ஓர் உதாரணம் கூறி விளக்கினேன். வரலாற்றைப் புரிந்து கொள்வது எளியது. அதன் முதல் பாடமே வரலாற்றைப் புரிந்து கொள்வது என்பது வரலாற்றைப் புரிந்து கொள்ள முயலும் முயற்சிகளே என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாவது பாடம் நாம் புரிந்து கொண்ட பின்னரும் நாம் புரிந்து கொண்ட விஷயத்தில் இன்னும் புரியாமல் இருக்கும் பகுதிகள் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது பாடம் நாம் புரிந்து கொள்ளாத விஷயங்கள் குறித்து மேலும் புரிதல் ஏற்படும் போது முதல் புரிதலில் சில மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கும். எனவே வரலாற்று அறிவை எப்போதும் அவதானமாகவே கொள்ள வேண்டும். எந்த விஷயத்தையும் அவதானிக்க வேண்டும் என விரும்புவது என் இயல்பாகையால் எனக்கு வரலாற்றின் மீது ஆர்வம் உண்டு. 

நண்பரின் ஊருக்கு ‘’சோழவெளி’’ எனப் பெயரிட்டுக் கொள்வோம். நண்பரிடம் கேட்டேன். ‘’நாம இப்ப சமணத்தைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம். சமணத்துக்கும் சைவ வைணவ சாக்தத்துக்கும் என்ன வேறுபாடுன்னு நீங்க யோசிச்சுப் பாத்துருக்கீங்களா?’’ 

யோசித்துப் பார்ப்பதை ஒரு செயல் என எண்ணாதவர் நண்பர். எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார் அல்லது அவரது மௌனத்திலிருந்து வினா எழுப்பியவனே விடையை அடைந்து கொள்ளட்டும் என இருந்தார். 

‘’இப்ப உங்க ஊர் சோழவெளி இருக்கு’’

நண்பர் மௌனம்.

‘’உங்க ஊர் பாபுலேஷன் எவ்வளவு?’’

நீடுதுயில் நீங்கியது போல் விடை சொன்னார். ‘’ 3500 பேர் இருப்பாங்க.’’

‘’ஓ.கே. சோழவெளில 2026ல பாபுலேஷன் 3500. இப்ப இங்க சைவ வைணவ சாக்த வழிபாடு இருக்கு. 2056ல இந்த ஊர் எப்படி இருக்கும்னு கற்பனை செஞ்சு பாப்போம். 2026ல சோழவெளியோட பாபுலேஷன் 3500 ஆ இருக்கும். இல்லன்னா 10 பர்செண்ட் கூடி 3850 ஆ இருக்கலாம். அதிகபட்சமா 20 பர்செண்ட் கூடி 4200 ஆ கூட இருக்கலாம்.’’

இது ஒரு சாமானிய அவதானம் தானே என எண்ணி நண்பர் ஆமோதிக்காமல் இருந்தார். 

‘’இப்ப சோழவெளி சமணத்துல இன்ஸ்பையர் ஆகி சமணத்துக்கு மாறினா என்ன ஆகும் தெரியுமா? நான் சொல்றது ஒரு யூகம் தான். அடுத்த 30 வருஷத்துல அந்த ஊரோட பாபுலேஷன் பாதிக்குப் பாதியா குறையக் கூட சான்ஸ் இருக்கு. இன்னும் சொல்லப்போனா அந்த ஊரோட பாபுலேஷன் 90 பர்செண்ட் குறைஞ்சு 350ல கூட வந்து நிற்கும். அவங்களோட வழக்கம் ஒரு நாளைக்கு மாலை 6 மணியில இருந்து காலை 6 மணி வரைக்கும் 12 மணி நேரம் தண்ணீர் கூட குடிக்க மாட்டாங்க. உணவு எதுவும் சாப்பிட மாட்டாங்க. மனிதர்கள் அவங்க உடல் இயக்கத்துக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு மட்டுமே உணவு எடுத்துக்கணும். வாழ்க்கைக்கு குறைந்தபட்சமா என்ன பொருள் தேவையோ அது மட்டுமே பயன்படுத்தனும்னு எண்ணம் கொண்டவங்க சமணர்கள். ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை இருந்தா போதும் என எண்ணுவது சமணம். துறவை மேற்கொள்றதை மிகப் பெரிய விஷயமா நினைக்கறது சமணம். சொத்து சேர்க்கறதுல அவநம்பிக்கை கொண்டது சமணம். உங்க ஊர்ல 3500 பேர் இருந்தா இந்த எண்ணங்களோட இன்ஃபுளூயன்ஸ் அந்த மக்கள்ட்ட சேர சேர ஓவர் ஆல் புரொடக்‌ஷன் அந்த ஊர்ல குறைய ஆரம்பிக்கும். பசியை ஆற்றும் எளிய உணவு தான் உண்ணனும்னு சமணம் சொல்லுது. அப்ப உங்க ஊரோட அக்ரி கமாடிட்டிஸ் புரொடக்‌ஷன் ரொம்ப குறைஞ்சுடும். அக்ரிகல்சர் லேபர்க்கு இருக்கற வேலை இல்லாம போயிடும். அவங்க ஊரை விட்டுப் போய்டுவாங்க. ஊர்ல கணிசமான ஆண்களும் பெண்களும் துறவி ஆவாங்க. மெல்ல உங்க ஊர் துறவிகளும் அறிஞர்களும் கல்வியாளர்களும் இருக்கற ஊரா ஆகும். அங்க போர்க்குணம் உள்ளவங்க இருக்க மாட்டாங்க. படிப்படியா குறைஞ்சு 3500 மெல்ல 350 ஆ ஆகிடும். இல்லன்னா 3500 ஒரு 1000 ஆ ஆகிடும்னு வச்சுக்கங்க.’’ 

நான் சொல்வது ஒரு வீழ்ச்சியின் இதிகாசம் போல இருப்பதாக நண்பர் நினைத்து அகத்துயர் கொண்டார். 

’’சோழ தேசத்துல சோழவெளி ஒரு கிராமம். 3500 ஆ இருக்கறது 350 ஆ ஆகுது. சோழ தேசத்தோட மொத்த 3000 கிராமமும் அப்படி ஆனா 2026ல 3500 X 3000 = ஒரு கோடியே அஞ்சு லட்சம் பாபுலேஷன் 30 வருஷத்துல பத்து லட்சத்து ஐந்தாயிரத்துக்கு வந்துடும். நிலப்பரப்பு அதே அளவு இருக்கும். ஆனா மக்கள்தொகை 90 பர்செண்ட் குறைஞ்சிடும். அதிக நிலப்பரப்புல குறைவான மக்கள் தொகை இருந்தா பக்கத்து நாடு சோழ நாட்டை படைபலத்தால ஆக்கிரமிக்கும். சோழவெளில பக்கத்து நாட்டு மக்கள் குடியேற ஆரம்பிச்சுடுவாங்க. 1960ல திபெத் நாட்டுக்கு இந்த பிர்ச்சனை வந்தது. பௌத்த நாடான திபெத்தை சீனா ஆக்கிரமிச்சது. அந்தப் பிரச்சனை இன்னும் தீரலை’’

நண்பர் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் கண்ணீர் மல்கியிருப்பார்.  

நண்பரை ஆறுதல் படுத்த இப்படி சொன்னேன்.’’ இப்ப இன்னொரு சாத்தியம் யோசிச்சுப் பாருங்க. 2026ல சோழவெளியோட பாபுலேஷன் 350 . உங்க ஊர் முழுக்க சமணம் இருக்கு. உங்க ஊர் மக்களுக்கு சைவ வைணவ சாக்தம் மேல இன்ஸ்பிரேஷன் ஆயிடுது. அப்ப என்ன ஆகும்? 350 ஆ இருக்கறது 30 வருஷத்துல 3500 ஆ ஆகிடும். புரொடக்‌ஷன் அதிகமாயிடும். மக்கள்ள 10 பர்செண்ட் ஆட்கள் போர்க்குணத்தோட இருப்பாங்க. வன்முறை கொஞ்சம் தலைதூக்கும். அதை அரசாங்கம் கட்டுப்படுத்தும். ஒருத்தரும் இன்னொருத்தரும் முட்டி மோதி சேர்ந்து பிரிஞ்சு 3500ங்கற நம்பர்ல செட்டில் ஆவாங்க. பத்து லட்சத்து ஐந்தாயிரமா இருக்கற சோழ தேசத்தோட பாபுலேஷன் ஒரு கோடியே ஐந்து லட்சமா ஆகும். சோழ மன்னன் படைதிரட்ட ஆரம்பிப்பான். மக்கள்தொகை குறைவா நிலப்பரப்பு அதிகமா இருக்கற பிரதேசம் எதுன்னு பாத்து அது மேல படையெடுப்பான்’’

ஊரில் இப்போது இருக்கும் பிரச்சினைகள் போதும் ; புதிதாக ஏதும் தேவையில்லை என நண்பர் நினைத்தார். 

‘’ஒரு புரிதலுக்காக மிகையான ஊகத்தை நான் சொல்லியிருக்கன். யோசிச்சுப் பாருங்க’’ என்றேன். 

நண்பர் இந்த உரை சீக்கிரம் முடிந்தால் போதும் என நினைக்கிறாரோ என நான் நினைத்தேன். 

‘’இந்திய வரலாற்றுல வணிக சமூகங்களும் அறிஞர்களும் சமணத்துக்கு மாறியிருக்காங்க. இன்னைக்கும் இந்திய சமணர்கள் வணிகர்களும் அறிஞர்களும் தான். எல்லா அரசாங்கமும் அவங்களுக்கு மதிப்பு கொடுத்திருக்காங்க. அவங்க ஆலயங்களைப் பராமரிக்க நிதி கொடுத்திருக்காங்க. அவங்க துறவு நிலையங்களை ஆதரிச்சிருக்காங்க. அவங்கள பல ஊர்கள்ல செட்டில் செஞ்சு பாதுகாப்பு கொடுத்திருக்காங்க. எல்லா மன்னர்களும் செஞ்சிருக்காங்க. அவங்க மேல பெரிய மரியாதையும் மதிப்பும் வச்சுருக்காங்க’’

நண்பர் எதுவும் பேசவில்லை. 

‘’இப்ப ஒரு கற்பனை செய்வோம். சோழவெளிக்குப் பக்கத்துல அருகபுரின்னும் ஒரு கிராமம் இருக்கு. அந்த ஊர்ல பெருமாபாலான ஆட்கள் வணிகர்கள் அந்த ஊர்ல பாபுலேஷன் 3500 . அந்த ஊரே சமணத்துக்கு மாறிடுது. 30 வருஷம் கழிச்சு அந்த ஊருக்கு வந்தா அந்த ஊரோட பாபுலேஷன் எவ்வளவு இருக்கும்?’’

நண்பர் தயக்கத்துடன் ‘’350 ஆகுமா?’’ என்றார். 

‘’ஆகாது. அதே 3500 இருக்கும். ஏன்னா அவங்க வணிகர்கள். அவங்க சமண நெறிக்கு முழுமையா உட்படுவாங்க. அவங்க ஒரு நாள்ல 12 மணி நேரம் சாப்பிடாம இருப்பாங்க. தேவையை குறைச்சுப்பாங்க. ஆனா அந்த ஊரோட சர்ப்ளஸ் அக்ரி புரொடக்‌ஷனை தொலைதூரத்துல இருக்கற ஒரு பிராந்தியத்துக்குக் கொண்டு போய் வித்து காசாக்கி அந்த காசை அருகவெளிக்கு கொண்டு வந்திருவாங்க’’ என்றேன். 

நண்பர் அமைதியாக இருந்தார். 

ஒட்டு மொத்த உரையாடலின் முத்தாய்ப்பாக எனக்கு ஒரு படிமம் கிடைத்தது. ‘’சமணம் சாம்பல். சைவ வைணவ சாக்தம் நிலம். நிலத்துக்கு சாம்பல் உரமானா நிலம் விளைச்சலை மிக அதிகம் கொடுக்கும். இந்திய வர்லாறு என்பது சமணம் என்னும் சாம்பல் சைவ வைணவ சாக்த மரபுக்கு உரமாக ஆனது தான்’’ என்றேன்.  

Sunday, 3 May 2026

முதல் பாடம்

அன்புடையீர்!

நேற்று கும்பகோணத்தில் உள்ள தங்கள் மருத்துவமனைக்கு நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதன் பேரில் மருத்துவ ஆலோசனை நேரத்தை நிர்ணயம் செய்து கொள்ள வருகை புரிந்தேன். மருத்துவமனைக்குள் நுழைந்ததும் அங்கே கண்ட முதல் காட்சி மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. அதாவது, மருத்துவமனைக்கு வரும் அனைவரின் காலணிகளும் மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. வருகை புரியும் நோயாளிகள், அவர்களுடன் கூட வரும் உறவினர்கள் என அனைவரின் காலணிகளும் நேர்த்தியான முறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் பல பெரிய மருத்துவமனைகளைக் கண்டிருக்கிறேன். அங்கே நுழைந்ததுமே காலணிகள் ஒழுங்கின்றி குவியலாகக் கிடக்கும். மருத்துவமனை என்பது அதிகம் நோயாளிகள் உலவும் பகுதி என்பதால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கும் பகுதியாகையால் அங்கே தூய்மைக்கு மிக அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். எனினும் ஒரு பெரிய மருத்துவமனையின் உள்ளே செல்லும் போதே காலணிகள் ஒழுங்கின்றி குவிந்து கிடப்பது மனதின் அக ஒழுங்கை குலைப்பதாக உணர நேரும். இன்னொரு விதத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் திறனின்மையையும் அது எடுத்துக் காட்டுவதாக அமையும். காலணிகளை நேர்த்தியாக அடுக்கி வைத்தல் என்னும் சிறு செயலைக் கூட செய்ய இயலாத நிர்வாகம் மருத்துவமனையை நிர்வகிக்கும் விதம் எவ்விதம் சிறப்பாக இருந்திட முடியும் எனத் தோன்றி விடும்.   மருத்துவமனைக்கு வருகை புரியும் நோயாளிகளின் காலணிகளை அடுக்கி வைக்கும் விஷயத்தில் தங்கள் மருத்துவமனை தமிழக மருத்துவமனைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக முன்னோடியாக விளங்குகிறது. 

நமது நாட்டில் சீக்கிய குருத்வாராக்கள் காலணிகளை நேர்த்தியாக அடுக்கி வைப்பதை தங்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக எண்ணுகிறார்கள். யோக வகுப்புகளுக்கு வருகை புரியும் பார்வையாளர்களிடம் யோக அமைப்புகள் காலணிகளை நேர்த்தியாக வாசலில் விட்டு வருமாறு கூறுகின்றன. யோகம் பயில்வதற்கான துவக்கச் செயலாக அச்செயல் இருக்கிறது என்பது அவர்கள் புரிதல். 

இன்னொரு விஷயத்தையும் தங்கள் மருத்துவமனையில் கவனித்தேன். மருத்துவமனை முழுவதும் தொடர்ந்து திருவாசகம் அளவான ஒலியில் ஒலித்துக் கொண்டிருந்தது. இதுவும் மிக முக்கியமான ஒரு செயல். பொதுவாக மருத்துவமனைகள் சேட்டிலைட் சேனல்களின் கேளிக்கை நிகழ்ச்சிகளை பார்வையாளர் காத்திருக்கும் நேரத்தில் ஒளிபரப்புகிறார்கள். இச்செயல் மருத்துவமனைகளில் இருப்பதை ஒரு சினிமா தியேட்டரில் இருப்பது போல் எண்ணச் செய்து விடுகின்றன. மனித மன இயக்கத்தை தாறுமாறாக ஆக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நோயாளிகள் மனநிலையைத் தீவிரமாக பாதிக்கக்கூடிய்வை. தங்கள் மருத்துவமனை எவர்  மனதையும் அமைதிப்படுத்தும் திருவாசகத்தை ஒலிக்கச் செய்வதன் மூலம் முன்னோடியான விஷயம் ஒன்றை நடைமுறைப்படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள். 

காலணிகளை சீராக அடுக்கி வைப்பதில் மருத்துவமனை வருகையாளர்களுக்கு மிக்க உதவியாக இருக்கும் தங்கள் மருத்துவமனை வாயில் காவலர் பாராட்டுதலுக்குரியவர். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள். 

எந்த பெரிய மருத்துவமனையும் செய்திடாத இரண்டு நல்ல விஷயங்களை செயல்படுத்திட முடிவெடுத்திருக்கும் தாங்களும் தங்கள் நிர்வாகமும் பாராட்டுக்குரியது. 

அன்புடன்,

பிரபு

உன் முன்
சொல்லெடுக்காமல்
இருந்து விடுகிறேன்
உன்னிடம்  பேசவில்லை
உன் இருப்பின் இனிமையை
உன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும்  
மகத்துவத்தை
உன் உயிர்ப்பின் பெருவெளியை 
முழுமையாகச் சொல்லும்
சொல்
அகமெழக்
காத்திருக்கிறேன்
உன் முன்னால்
சொல் முன்னால்
 எல்லையில்லாப் பெருவெளி
நீ ஆளும் தேசம்
நீர் மேகங்கள்
உன் சிங்காதனம்
வானில் நீந்தும் மீன்கள்
ஒளிரும் உன் ஆபரணங்கள்
அலைகடல்
உன் காலின் சிலம்பு
முடிவற்றவளே
மகத்தானவளே
உயிருக்குள் துடிக்கும் உயிரே
உன் பாதத்தில்
என்னிடம் 
இருக்கும்
ஒரு மலரை 
வைக்கிறேன்

 உன்னை
உன் பெயர் சொல்லி
அழைப்பதைக் கூட
உனக்குச் செய்யும் அநீதியாக
நினைக்கத்
தொடங்குகிறேன்
அன்னையே அன்னமிடுங்கள்
அன்பாலானது தங்கள் இருப்பு
அன்பின் அன்னத்தை அளியுங்கள் அன்னையே
கடுமையான இறுக்கம் கொண்ட 
எங்கள் மனோபாவங்கள் 
எங்களை விட்டு அகலட்டும்
மென்மையான இந்த உலகை
மென்மையான இந்த ஜீவிதத்தை
மென்மையாக அணுக
மென்மையாக உணர
தங்கள் அன்பின் அன்னம்
எங்களுக்கு அருளட்டும்
அன்னையே அன்னமிடுங்கள் 

Saturday, 2 May 2026

நீ
கிண்டர் கார்டன் பள்ளியில்
புதிதாகப் பணியில் சேர்ந்த
ஆசிரியை போல் இருக்கிறாய்
ஒட்டு மொத்த உயிர்க்குலமும்
உன் குழவிகளாய்
உன் எதிரில்
அமர்ந்திருக்க 

மோனப் பெரு வெளி (நகைச்சுவைக் கட்டுரை)

 பூம்புகாருக்கு அருகில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். சமயத்தில் பூம்புகார் செல்லும் போது அவருக்கு ஃபோன் செய்வேன். ஊரில் இருந்தால் அவரை அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வேன். பல ஆண்டுகளாக இவ்விதமாக நாங்கள் கடற்கரைக்குச் சென்றிருக்கிறோம். நேற்று ‘’சித்திரைப் பௌர்ணமி’’ . எனவே பூம்புகாருக்குச் சென்றோம். சிலப்பதிகாரத்தில் சித்திரை மாத முழுநிலவு நாளில் பூம்புகாரில் நடக்கும் இந்திர விழா குறித்து ‘’இந்திர விழா எடுத்த காதை’’ உள்ளது. அந்தக் காதையில் தான் மாதவியைக் கோவலன் காண்பது நிகழும். மாதவியை இளங்கோ அந்தக் காதையில் தான் அறிமுகம் செய்வார். இந்தக் காதையில் மாதவியை இளங்கோ காட்டும் இடம் மிகவும் நுட்பமானது. மாதவி நடனம் ஆடும் நடனமேடையின் வர்ணனையை மட்டுமே இளங்கோ அளிப்பார். அந்த மேடையில் எவ்விதமான மலரலங்காரங்கள் இருந்தன. எவ்விதமான நிறங்கள் இருந்தன. மேடையை அழகுபடுத்தும் துகில்கள் குறித்த குறிப்புகள். இவற்றை மட்டுமே இளங்கோ சொல்லிக் கொண்டு வருவார். முதல்முறை அதனை வாசித்த போது என் அகம் அந்த எழிலார்ந்த மேடையை கற்பனை செய்து கொண்டே வந்தது. அத்தனை அழகிய மேடையில் மாதவியின் நடனம் நடந்தது எனக் கூறும் போது அவள் எத்தனை அழகாக இருப்பாள் என வாசகனின் மனமே கற்பனை செய்து கொள்ளும். அந்த கற்பனை மகத்தானதாக இருக்கும். உலக இலக்கியத்தில் இவ்வாறான உத்தியை வேறு படைப்பாளிகள் எவரும் பயன்படுத்தியிருக்கிறார்களா என்பது ஐயமே. பூம்புகார் உள் நுழைந்ததுமே ‘’இந்திர விழா’’ என்னும் சொல் என் மனதில் நிறைந்தது. ‘’தேவேந்திர விழா’’ என்னும் புதிய சொல்லும் என் மனத்தில் புதிதாக உலவத் தொடங்கியது. 

கடற்கரையில் அமர்ந்து கொண்டோம். அதற்கு முன் சிறு பொழுது அலைகளில் நின்று கொண்டிருந்தோம். அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த போது நண்பரிடம் சிறிது நேரம் கண் மூடி அமர விரும்புகிறேன் எனக் கூறி அவ்விதமே செய்தேன். பூரண ஞானம் பொலிந்த நன்னாடு ; புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு’’ என்னும் வரி மனதுக்குள் நிறைந்தது. எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை. ஒளிர்தல் ஞானத்தின் இயல்பு என்பதால் பாரதி பொலிதல் என்கிறான். அருள் பிரவாகிப்பது என்பதால் பொங்குதல் என்கிறான். மனிதர்கள் அருள் என்பதை துளியளவில் மட்டுமே உணர்கின்றனர். எனவே சாமானியர்களுக்கு அருள் என்பது ஒரு துளியே. எங்கும் நிறைந்திருக்கும் அருளை முழுமையாக உணர இயலாமல் சாமானியர்களின் அறியாமையும் பந்த பாசங்களும் தடுக்கின்றன. கோடானுகோடியில் ஒருவரை எங்கும் நிறைந்திருக்கும் அருளை முழு வடிவில் காண்கின்றனர். அத்தகையோர் அருள் குறித்து முதல் சொல்லே அருள் என்பது பொங்கிப் பாயும் பிரவாகம் என்பதையே. மாணிக்கவாசகர் வெள்ளக் கருணை என்கிறார். அருட்கடல் என்னும் வார்த்தை உள்ளது. 

நண்பரிடம் ஏன் ஒரே ஊரில் எப்போதும் வசிக்க வேண்டும் என்னும் வினா என்னுள் இருப்பதாகவும் ஊரைத் தவிர ஸ்ரீரங்கத்திலும் காஞ்சிபுரத்திலும் ஒரு வீடு எடுத்து தங்க இருப்ப்பதாகவும் சொன்னேன். நண்பர் ஊரை விட்டுப் போகாதீர்கள் என்றார். இங்கேயும் இருப்பேன் ; அங்கேயும் இருப்பேன் என்று சொன்னேன். ‘’பூம்புகார் மிஸ் பண்ணுவன். ஆனா காஞ்சிபுரத்துல இருந்தா அங்கிருந்து மாமல்லபுரம் பக்கம் தான். அங்க போவன். ஊர் தான் வேற ; கடல் அதே வங்கக் கடல் தான்’’ என்றேன். 

புத்தரைப் பற்றிய பேச்சு வந்ததால் மகாவீரரைப் பற்றியும் பேச்சு வந்தது. ‘’ உளுந்தூர்பேட்டை பக்கத்துல திருநெடுங்குன்றம் என்னும் ஊர் இருக்கு. அங்க ஒரு ஜெயின் குகைக்கோயில் இருக்கு. குந்தவை நாச்சியார் நிவந்தம் அளித்த குகைக் கோயில். நானும் ஃபிரண்டும் போயிருந்த போது அங்க ஒரு ஸ்கூல் டீச்சர் வந்திருந்தாங்க. அவங்க சமணர். அவங்க சொன்னாங்க ‘’தீர்த்தங்கரர்கள் தவம் செய்றது ஒரு மோனப் பெரு வெளி. அங்க மௌனம் மட்டும் தான் இருக்கு. அவங்க அந்த மௌனமா நிறைஞ்சு இருக்காங்க. அவங்களுக்கு மனுஷங்களோட சந்தோஷத்தின் எக்காளங்களோ துயரத்தோட அரற்றல்களோ எதுவுமே கேக்காது. அங்க மௌனம் மௌனம் மௌனம் மட்டும் தான். கால பைவரவரும் பத்மாவதி யட்சியும் மட்டும் தான் சாமானிய உலகத்தில இருந்துட்டு மோனப் பெரு வெளிக்கும் போய்ட்டு வரவங்க. உங்க பிராத்தனைகளை நீங்க அவங்க கிட்ட மட்டும் தான் சொல்லணும்.’’. நண்பரிடம் அதனைக் கூறி விட்டு ‘’ஒட்டு மொத்த பிரபஞ்சமும் அந்த மோனப் பெரு வெளியை நோக்கித்தான் போகுதுன்னு நான் நினைக்கிறேன். இந்த பனை மரத்துக்கு அங்க போய் சேர மூணு கோடி வருஷம் ஆகும். எனக்கு நாலு கோடி வருஷம் ஆகலாம். உங்களுக்கு ஐம்பது லட்சம் வருஷம் ஆகலாம்’’ எனச் சொன்னேன். என்னை விட எட்டு மடங்கு வேகம் நண்பர் கொண்டிருக்கிறார் எனச் சொன்னால் அவர் மகிழ்வார் என எண்ணித்தான் அவரிடம் சொன்னேன். மோனப் பெரு வெளிக்கு அவர் போக இன்னும் ஐம்பது லட்சம் வருஷம் ஆகுமா என்ற அங்கலாய்ப்பே அவருக்கு ஏற்பட்டது.