Saturday, 6 June 2026

மனிதர்களை அவதானித்தல்

நூல் : நினைவில் நின்ற நிகழ்வுகள் ஆசிரியர் : டாக்டர்.எம்.சந்திரசேகரன் பக்கம் : 112 விலை : ரூ. 200 பதிப்பகம் : தமிழ்ச்சுவடு பதிப்பகம், எண் 9, பி-3, நூஸ் அபாட்மெண்ட்ஸ் முதல் மாடி, நாராயண மேஸ்திரி 2வது தெரு, வில்லிவாக்கம், சென்னை - 49. மின்னஞ்சல் : thamizhchuvadutngr(at)gnail(dot)com 
உலக வரலாற்றில் மருத்துவர்கள் எப்போதும் நோய்மையை அணுகி அதனை அறிவதை தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியாகக் கொண்டிருக்கின்றனர் என்பதைக் காண முடியும். நோய் அறிதல் என்னும் முதல் பகுதி. அதன் பின்னர் அந்த நோய்க்கான மருந்து என்பது இரண்டாம் பகுதி. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகைப்பட்டவ்ன் என்பதால் நோயாளியின் நோய் அம்சம் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒவ்வொரு வகையாகவே இருக்கிறது. மருத்துவர் தனது தொழிலை செய்யத் தொடங்குவதிலிருந்து அனுபவம் பெருகப் பெருக நோயாளிகளையும் நோயாளிகளின் உளநிலைகளையும் அவதானிக்கும் திறன் என்பது மிக இயல்பாக கை கூடி விடுகிறது. அந்தத் திறன் அவர்களை மனிதர்களை அவதானிக்கும் தன்மைக்கும் கொண்டு செல்கிறது. எண்டோகிரைன் சர்ஜனான டாக்டர்.எம்.சந்திரசேகரன் மனிதர்களையும் மனித சுபாவங்களையும் நூதனமான வாழ்க்கைத் தருணங்களையும் மிக சுவாரசியமாக அவதானிக்கிறார். தான் அவதானித்ததை தன் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். அவ்விதம் அவர் பதிவு செய்த நூலே ‘’நினைவில் நின்ற நிகழ்வுகள்’’

சென்னையிலிருந்து தில்லிக்கு விமானத்தில் பயணிக்கிறார் டாக்டர்.எம்.சந்திரசேகரன். விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது. தில்லியை அடைய இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. அப்போது ஒரு பயணிக்கு நெஞ்சுவலி வந்து விடுகிறது. மொத்தம் 170 பயணிகள். டாக்டர் எவரும் இருக்கிறீர்களா என பைலட் ஒலிபெருக்கியில் கேட்கிறார். டாக்டர் சந்திரசேகர் ஒருவர் மட்டுமே இருக்கிறார். நெஞ்சுவலி வந்தவரின் இருக்கைக்குச் செல்கிறார் டாக்டர். நாடித்துடிப்பை பரிசீலிக்கிறார். நாடி நின்று போய் விட்டது. நோயாளியை தரையில் கிடத்தி பலமுறை கார்டியாக் மசாஜ் செய்கிறார். நோயாளிக்கு உயிர் மீண்டும் வருகிறது. 

வேலைப்பளுவைச் சுமப்பதிலேயே வாழ்வ்வின் பெரும்பாலான நாட்கள் சென்று விட்டதால் பணி ஓய்வு பெற்றதும் மனைவியுடன் சில நாட்கள் நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து விட்டு வரலாம் என முடிவு செய்கிறார் டாக்டர் சந்திரசேகர். டிராவல் ஏஜென்சியில் உங்கள் பெயர் டாக்டர் சந்திரசேகரன் தானே எனக் கேட்கிறார்கள். ‘’எனது பெயர் சந்திரசேகரன். நான் டாக்டர் தொழில் மேற்கொள்கிறேன்’’ என்றார் சந்திரசேகரன். என்ன செய்வது ? நாட்டில் ரயில்வே முன்பதிவு செய்தாலோ விமான டிக்கெட் புக் செய்தாலோ பெயரை எழுதச் சொல்லும் போது ‘’மருத்துவரானால் பெயருக்கு முன் டாக்டர் எனக் குறிப்பிடவும்’’ எனக் கேட்டுக் கொள்கிறார்களே? டாக்டரின் சேவை எப்போதும் தேவைப்படும் இடத்தில் சமூகம் இருக்கிறது ; ஒரு மருத்துவர் பணி ஓய்வு பெற்று ஓய்வெடுக்க செல்லும் போதும் அவர் தொழில் அவர் பெயருடன் ஒட்டிக் கொண்டே இருப்பேன் என்கிறது. 

டாக்டரும் அவரது நண்பரான இன்னொரு டாக்டரும் மருத்துவர்கள் தங்கள் காக்காய் கிறுக்கல் போன்ற கையெழுத்துக்குப் பெயர் போனவர்கள். அதனை நம்மளவில் நாம் இல்லாமல் ஆக்குவோம் என முடிவு செய்து ‘’காலியோகிராஃபி’’ என்னும் அழகிய கையெழுத்துக்கான கலையைக் கற்றுக் கொள்கிறார்கள். இருவரின் கையெழுத்தும் மிக அழகானதாக ஆகிறது. டாக்டரின் பேஷண்ட்கள் உடன் வ்ரும் ஒரு சிறுமியும் ஒரு சிறுவனும் பிரிஸ்கிரிப்ஷனில் இருக்கும் டாக்டரின் கையெழுத்தைப் பார்த்து அதிசயிக்கின்றனர். அவர்களுக்கு ‘’காலியோகிராஃபி’’யில் பேரார்வம் ஏற்பட்டு விடுகிறது. அவர்கள் இருவரும் யுவ பருவத்துக்கு வந்ததும் யுவதி துபாயில் ஒரு காலியோகிராஃபி பள்ளியைத் தொடங்கி மிக வெற்றிகரமாக நடத்துகிறாள். இளைஞன் தில்லியில் ஒரு காலியோகிராஃபி பள்ளி துவங்கி நடத்துகிறான். 

ரத்த வாந்தி எடுத்த வண்ணம் ஓர் இளம்பெண் மருத்துவமனைக்கு வந்து சேர்கிறார். அவரது அன்னை பதட்டத்துடன் இருக்கிறாள். உறவுக்காரப் பையன் ஒருவன் ரத்த வாந்தி எடுக்கும் பெண்ணுடன் கூடவே இருக்கிறான். அப்பெண்ணின் மருத்துவ அறிக்கையை பரிசீலிக்கும் டாக்டருக்கு எங்கோ ஒரு பிசிறு தட்டுகிறது. அவள் வாந்தி எடுப்பதாகக் கூறப்படும் ரத்தத்தைப் பரிசோதிக்கச் சொல்கிறார். ஷெர்லாக் ஹோம்ஸ் போல ஒரு விஷயத்தைக் கண்டடைகிறார். அதாவது அது ரத்த வாந்தி அல்ல ; குங்குமத்தைக் கரைத்து தன் மீது கொட்டிக் கொள்கிறாள் அந்தப் பெண். உறவுக்காரப் பையனான காதலனும் அந்த இளம் பெண்ணும் தங்கள் காதலுக்குச் சம்மதிக்காத அன்னைக்காக அவர்கள் போடும் நாட்கம். 

இன்ஸ்பெக்டர் ஜெனரல், அட்டர்னி ஜெனரல், ஆடிட்டர் ஜெனரல் என்பதில் வரும் ஜெனரல் என்னும் வார்த்தை ’’தலைமை’’ ‘’முதன்மை’’ ‘’பிரதானம்’’ என்னும் அர்த்தங்களைக் குறிப்பது போல ஜெனரல் மருத்துவமனை என்றால் ‘’தலைமை மருத்துவமனை’’ என்பதைக் குறிக்கும் ; ஆனால் தமிழகத்தில் ஜெனரல் மருத்துவமனையை பொது மருத்துவமனை என மொழிபெயர்த்து புழக்கத்துக்குக் கொண்டு வந்து விட்டார்கள் என்பதை சுவாரசியமாகக் குறிப்பிடுகிறார் சந்திரசேகரன். 

சென்னையின் ஒரு பகுதி ‘’கோல்காரன் பேட்டை’’ . அதனை கொலைகாரன் பேட்டை என அழைத்து வந்தனர் சென்னை மக்கள். ஒரு மருத்துவராக கொலைகாரன் பேட்டை என்னும் பெயர் தனக்கு ஏற்படுத்திய உளக் கலவரத்தை சுவாரசியமாகச் சொல்கிறார் டாக்டர். 

மருத்துவத் தொழிலில் ‘’பொறுமை கடலினும் பெரிது’’என்பதை masterly inavtivity yields better result என்கிறார் டாக்டர். 

தன் அறுவைசிகிச்சைகளில் நிகழ்ந்த சுவாரசியமான பல நிகழ்வுகளையும் நூலில் பதிவு செய்திருக்கிறார் டாக்டர். வாசிக்க மிக சுவாரசியமான நூல். 

நேற்றும் இன்றும்

நேற்று என்னுடைய கவனத்துக்கு ஒரு இடம் வந்தது. அந்த இடம் 1.5 ஏக்கர் பரப்புடையது. அந்த இடத்தின் இரு பக்கங்களில் சாலைகள் உள்ளன. மொத்த இடத்தைத் தோராயமாக 2000 சதுர அடி கொண்ட 30 மனைகளாகப் பிரித்துக் கொடுக்க முடியும். மனையின் அகலத்தை ஒட்டி சாலை செல்வதால் அந்த இடத்தை மொத்தமாக வாங்கி 30 மனைகளாகப் பிரித்து விற்பனை செய்யத் தொடங்கலாம்.  இடத்தின் உரிமையாளரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் R என்ற விலையைக் கூறினார். அந்த விலைக்கு வாங்கினால் 2R என்ற விலைக்கு விற்பனை செய்ய முடியும். நேற்று காலை அந்த இடத்தைப் பார்த்த பின் நில உரிமையாளர் சந்திப்பு இருந்தது. முடிய மாலை 3 மணி ஆகி விட்டது. அதன் பின் வீட்டுக்கு 5 மணிக்கு வந்தேன். 

இன்று காலை 8.30 மணிக்கு அந்த இடத்தைக் காணப் பேருந்தில் கிளம்பி சென்றேன். 11 மணி அளவில் அங்கு சென்று சேர்ந்தேன். அந்த இடம் இருக்கும் பகுதிக்கு மிக அருகில் ஒரு பெரிய பாலிடெக்னிக் கல்லூரி இருந்தது. அங்கே ஒரு பெரிய கல்லூரியும் பெரிய பள்ளியும் இருந்தன. இடத்துக்குப் பக்கத்தில் நிறைய 2000 சதுர அடி அளவு கொண்ட மனைகள் விற்பனை செய்யப்பட்டு இரும்பு வேலியிடப்பட்டிருந்தன. அவற்றில் பலவற்றில் பெரிய வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அந்தப் பகுதியில் மனைகள் என்ன விலை போகின்றன எனப் பலரிடம் விசாரித்தேன். எனது விசாரணை நேற்று என்னிடம் கூறப்பட்ட விஷயங்களை ஊர்ஜிதம் செய்தன. இதைப் போன்ற பணிகளில் மோட்டார்சைக்கிள் பெரிய அளவில் துணை புரியும். இருந்தாலும் இன்று பேருந்தில் சென்று அந்த இடத்தைச் சுற்றி நடந்து சென்று விசாரித்து வந்தேன். அது அந்த இடத்தைக் குறித்து நுணுக்கமாக அறிய உதவியது. நான் அங்கே சுற்றிக் கொண்டிருந்த பொழுது நண்பகல் வேளை. வெயில் உக்கிரமாக இருந்தது. ரியல் எஸ்டேட்டில் இடம் பார்ப்பது இடம் குறித்து விசாரிப்பது ஆகியவற்றைப் பகலில் தான் செய்ய வேண்டும். நிலத்துக்கு சூரிய வெளிச்சத்தைப் போல நெருக்கமான நண்பன் கிடையாது. பணி முடிந்ததும் ஊர் திரும்பினேன். 

ஊருக்கு வடக்கே 40 கி.மீ தொலைவில் இருக்கும் ஊரில் நான் பார்த்த இடம் இருக்கிறது.  

புகாரும் தீர்வும்

நேற்று வங்கிக்கு பணம் செலுத்தச் சென்றிருந்தேன். சாளரத்தில் ரூபாய்த் தாள்களை எண்ணும் இயந்திரத்தின் டிஸ்பிளே வெளியில் தெரியும் வண்ணம் இருந்தது. காசாளர் தன்னிடம் அளிக்கப்படும் பணத்தை எந்திரம் மூலம் எண்ணுவது எவ்வளவு தொகை என்பதை வாடிக்கையாளர்களும் சரிபார்த்துக் கொள்வதற்காக அந்த டிஸ்பிளே வைக்கப்படுகிறது. நான் சென்ற போது அந்த டிஸ்பிளே சரிவர இயங்கவில்லை ; அதாவது அந்த டிஸ்பிளே எப்போதும் 9900 என்னும் எண்ணைக் காட்டிக் கொண்டு இருக்கிறது. ஏதோ தொழில்நுட்பக் கோளாறு. 

கோடிக்கணக்கான ரூபாய் புழங்கும் அந்த வங்கி குறைந்தபட்சம் என்ன செய்ய வேண்டும் ? தொழில்நுட்பக் கோளாறுகளால் எந்திரம் சரிவர இயங்கவில்லை என்னும் தகவலை ஓர் அறிவிப்பாக எழுதி டிஸ்பிளே அருகில் வைத்திருக்கலாம். வங்கிக்கு இருக்கும் வசதிகளுக்கு அவர்கள் ஒரு மெக்கானிக்கை அழைத்து சில நிமிடங்களில் இந்த பிரச்சனையைத் தீர்த்திருக்க முடியும். வங்கி பராமரிப்பு செலவுகளுக்காக தினந்தோறும் பெரும் பணம் அளிக்கப்படுகிறது. வங்கி ஊழியர்கள் பெறும் ஊதியம் என்பது மிகப் பெரும் தொகை. அவர்களுக்குப் பெரும் ஊதியம் அளிக்கப்படுவது வாடிக்கையாளர்களுக்குப் பொருட்டல்ல. பெரும் ஊதியம் பெற்றுக் கொள்ளும் வங்கி ஊழியர்கள் அதற்கான பொறுப்புடன் வங்கியை நிர்வகிக்க வேண்டும் என்னும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தவே வங்கிகளின் சேவைக் குறைபாடு குறித்து பேசப்படும் போதெல்லாம் அவர்கள் ஊதியம் குறித்துப் பேசப்படுகிறது. 

நான் மென்மையாக காசாளரிடம் டிஸ்பிளே சரிவர வேலை செய்யவில்லை என்பதை சுட்டிக் காட்டினேன். 

‘’கொஞ்ச நாளாவே அப்படித்தான் சார் இருக்கு’’ என்றார் அந்தப் பெண்மணி. 

என் பணி முடிந்ததும் வங்கி மேலாளரிடம் இந்த விஷயத்தைத் தெரிவித்து விட்டுச் செல்லலாம் என நினைத்தேன். அவர் என்ன பதில் சொல்வார் ‘’என்னன்னு பாக்கறன்’’ என்பார். 

முதல் விஷயம் ஒரு முக்கிய விஷயம் பல நாளாக மேலாளர் கவனத்துக்கு வராமல் இருக்கிறது என்பது எதைக் காட்டுகிறது என்றால் மேலாளருக்கு வாடிக்கையாளர் சாளரத்தில் என்ன நடக்கிறது என்னும் விஷயமே தெரியவில்லை. எந்த வாடிக்கையாளரும் இது குறித்து புகார் தெரிவிக்கவில்லை என்றால் அவர்கள் வங்கி நிர்வாகத்துடன் சகஜமாக உணரவில்லை என்பதே அதன் அர்த்தம். 

ஒரு மேலாளர் பொறுப்புள்ளவர் எனில் என்ன செய்ய வேண்டும் என்றால் டிஸ்பிளே வேலை செய்யவில்லை என்னும் புகாரைக் கூறும் வாடிக்கையாளரிடம் அவரது தொடர்பு எண்ணை வாங்கிக் குறித்துக் கொண்டு ‘’உடன் சரி செய்து விட்டு உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன்; சுட்டிக் காட்டியதற்கு நன்றி ‘’ எனத் தெரிவிக்க வேண்டும். அவ்விதமே சரி செய்து தகவல் தெரிவிக்க வேண்டும். 

நான் சென்ற வங்கிக் கிளை சிறியது. ஒரு மேலாளர் , ஒரு கிளை மேலாளர், இரண்டு எழுத்தர்கள், இரண்டு உதவியாளர்கள், இரண்டு தற்காலிகப் பணியாளர்கள்  என 8 பேர் பணி புரியும் இடம் அது. தினமும் வேலை நேரத்தில் குறைந்தது 100 வாடிக்கையாளர்களாவது வருவார்கள். வங்கி ஊழியர்கள் தங்களை ஊழியர்கள் என எண்ணுவதே இல்லை ; தங்களைக் குறு நில மன்னர்களாகவே எண்ணுகின்றனர். மேலும் அவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மீது எப்போதும் ஓர் இளக்காரம் இருக்கிறது. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுபவர்களே வங்கி ஊழியர்களில் 99 சதவீதத்தினர். நான் என்னுடைய பல வருட அனுபவத்தில் உணர்ந்த விஷயம் இது. 

வீட்டுக்கு வந்ததும் சி.பி.கி.ராம்.ஸ்-ல் வங்கிக் கிளையின் பணம் எண்ணும் எந்திரத்தின் டிஸ்பிளே வேலை செய்யாததால் வாடிக்கையாளர் குழப்பம் அடைகின்றனர் என்னும் உண்மையைப் புகாராக பதிவு செய்தேன். 

இந்தத் தகவல் சென்னையில் இருக்கும் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு முதலில் சென்றது. பின்னர் வங்கியின் ஸோனல் அலுவலகத்துக்கு தகவல் சென்றது. மேலிடத்திலிருந்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு வருவதே சி.பி.கி.ராம்.ஸ்-ன் வழிமுறை. இன்று எனது புகாருக்கு சென்னை அலுவலகம் பதில் தந்தது. 

அதாவது , நான் குறிப்பிட்ட வங்கிக் கிளையின் பணம் எண்ணும் எந்திரத்தின் டிஸ்பிளே சரி செய்யப்பட்டு விட்டது என்றும் ஸோனல் மேனேஜர் கிளையின் ஊழியர்களை சிறப்பான வாடிக்கையாளர் சேவையில் ஈடுபட அறிவுறுத்தியதாகவும் எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சரி செய்யப்பட்ட எந்திரத்தின் ஒளிப்படமும் பதிலுடன் இணைக்கப்பட்டிருந்தது.   

Friday, 5 June 2026

இறைவனின் உள்ளங்கை

பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். ஒரு குடும்பம் வண்டியில் ஏறியது. தந்தையின் தோளில் ஓர் இளமைந்தன் சாய்ந்து கொண்டிருந்தான். தந்தை என்னருகில் அமர்ந்து கொண்டார். இளமகன் என்னை நோக்கி தன் கையை நீட்டினான். குழந்தைக்கு இன்னும் ஒரு வயது ஆகியிருக்காது. ஒரு வயதை நோக்கி மிக ஆர்வமாகச் சென்று கொண்டிருக்கிறான். என் கையை நீட்டினேன். என் விரல் ஒன்றை இறுக்கிப் பிடிக்க முயன்றான். அவனது உள்ளங்கை மிக மென்மையாக இருந்தது. அது இறைவனின் உள்ளங்கை என்பதை அக்கணம் உணர்ந்தேன்.  

Thursday, 4 June 2026

கொல்லாபுரம்

சாலைகள் சந்திக்கும் இடம் சந்தி. மூன்று சாலைகள் சந்திக்கும் இடம் முச்சந்தி. நான்கு சாலைகள் சந்திக்கும் இடம் நாற்சந்தி. 

நாட்டில் கடுமையான உணவுப்பஞ்சம் நிலவிக் கொண்டிருந்த போது 1967ம் ஆண்டு தி.மு.க தலைவராக இருந்த அண்ணாத்துரை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி கொடுப்போம் என தேர்தல் வாக்குறுதி தந்தார். ஆட்சி அமைத்து தி.மு.க ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி ரேஷனில் கொடுக்கவில்லை என்றால் தன்னை முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடியுங்கள் என்றார். 1967ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்தது ; ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்னும் தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.   

1980களின் பிற்பகுதியில் ஓர் அரசியல் கோஷம் எழுந்தது. ‘’கலி கலி மெய்ன் ஷோர் ஹை ; ராஜிவ் காந்தி சோர் ஹை’’. இதனைத் தமிழில் இவ்விதம் மொழிபெயர்க்கலாம் : ‘’சந்திக்கு சந்தி ஒரே கூச்சல் : ராஜிவ் ஊழல்வாதி  என்று’’. ஹிந்தியில் கலி என்றால் தெரு , சந்து ஆகிய அர்த்தம். 

வட தமிழகத்தின் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் பேருந்து நிலையங்களில் ஊர்ப்பெயர்கள் சொல்லி பேருந்தில் ஏற நடத்துநர்கள் அழைக்கும் போது திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு, கோலியனூர் கூட்டு ரோடு என்று சொல்வார்கள். எனக்கு அந்த கூட்டு ரோடு என்னும் பெயர் நூதனமாக இருந்தது. கூட்டு ரோடு என்பதை கிராஸ் ரோடு என்றும் சொல்வார்கள். பேருந்துகளில் X ரோடு என எழுதி இருப்பார்கள். 

ஒருமுறை சிதம்பரத்திலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். நடத்துநர் என்னிடம் வந்து என்ன ஊருக்கு டிக்கெட் என்று கேட்டார். கொல்லாபுரம் என்றேன். ‘’நீங்க சொல்ற ஊருக்கு வண்டி போகாதுங்க’’ என்றார். எனக்கு விஷயம் புரிய சில கணங்கள் ஆனது. அவரிடம் ஜெயங்கொண்டம் கூட்டு ரோடு என்றேன். அவர் டிக்கெட் கொடுத்தார். ஜெயங்கொண்டம் கூட்டு ரோடு இருக்கும் கிராமத்தின் பெயர் கொல்லாபுரம் என்பது உங்களுக்குத் தெரியாதா என்று கேட்டேன். ‘’நான் 20 வருஷமா பஸ் கண்டக்டரா இருக்கேன் ; என்கிட்ட ஜெயங்கொண்டம் கிராஸ் ரோட்டை கொல்லாபுரம்னு பேர் சொல்லி டிக்கெட் கேட்ட முதல் ஆள் நீங்கதான்’’ என்றார்.  

Wednesday, 3 June 2026

பஸ் பயணம்

இன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டேன். இரு சக்கர வாகனத்தை நண்பரின் ஹார்டுவேர் கடைக்கு முன் நிறுத்தி விட்டு வலது பக்கக் கண்ணாடியில் எனது தலைக்கவசத்தை மாட்டினேன். நண்பர் வந்து தலைக்கவசத்துடனான வாகனம் என்றால் எனது வாகனம் என்பதை புரிந்து கொள்வார். அருகிலிருக்கும் பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்று ஊரிலிருந்து 40 கி.மீ வடக்கில் இருக்கும் ஊருக்குப் பயணமானேன். வைகாசியின் வளர்பிறை முகூர்த்தங்கள் நிறைவு பெற்று விட்டன. எனவே வாகனம் பெரிய கூட்டமில்லாமல் இருந்தது. ஒருமணி நேரம் அளவில் அங்கே சென்று சேர்ந்தேன். பேருந்து நிறுத்தத்திலிருந்து நண்பரின் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். 1990களில் ஒருவரைக் காண நடந்து செல்வது என்பது மிக அதிகமாக நிகழும் செயல். சைக்கிளில் மனிதர்கள் செல்வதும் மனிதர்கள் நடந்து செல்வதும் எப்போதும் காணக் கிடைக்கும் செயல். ஒரு வீட்டின் முன் ஆலமரம் இருந்தது. அதன் விழுதுகளைத் தொட்டுப் பார்த்தேன். அந்தப் பகுதியில் நிறைய புங்கன் மரங்கள் இருந்தன. நாம் மனித உறவுகளையும் மனித நட்பையுமே உறவு என்றும் நட்பு என்றும் எண்ணுகிறோம். மரங்கள் மிகவும் உணர்வுபூர்வமானவை. மிகவும் நட்பார்ந்தவை. நான் மரங்களைத் தொட்டுப் பார்க்க விரும்புவேன்.  நண்பரைச் சந்தித்தேன். வழக்கமான அலுவலக நேரத்துக்கு 2 மணி நேரம் முன்னால் அவரைச் சந்திக்கிறேன். முதலில் ஒரு விஷயத்தைச் சொன்னேன். பின்னர் இன்னொரு விஷயத்தைச் சொன்னேன். அவர் ஒரு விஷயம் குறித்து கேட்டார். ஒரு விஷயம் குறித்து சொன்னார். தேநீர் அருந்துகிறீர்களா எனக் கேட்டார். தேநீர் வந்தது. புறப்படும் போது அவர் ஊரில் இருந்த அவருடைய பூர்வீக வீட்டில் பழுத்திருந்த ஒரு பெரிய பலாப்பழத்தை ஒரு பிக் ஷாப்பர் பையில் என்னிடம் கொடுத்தார்கள். அவ்வளவு பெரிய பழம் என்பதால் ‘’காரில் தானே வந்தீர்கள்?’’ எனக் கேட்டார்கள். நான் காரை விட மிகப் பல மடங்கு பெரிய வாகனத்தில் வந்திருந்தேன். இருப்பினும் அவர்கள் கேள்விக்கு ஆம் என்னும் உடன்பாட்டு பதிலையே அளித்தேன். பலாப்பழத்துடன் பேருந்து நிலையம் நோக்கி நடந்தேன். இவ்விதம் நடப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அர்த்தபூர்வமான ஒரு செயலைச் செய்வதாய் மனம் எண்ணியது. பேருந்து நிலையம் எதிரில் அமைதியான பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அங்கே முதலில் சாம்பார் இட்லி சொன்னேன். பின்னர் கல்தோசை சொன்னேன். சந்திப்பு குறித்து என் நண்பர் ஒருவருக்கு விபரம் சொன்னேன். அவர் நான் இருந்த ஊருக்கு மேற்கே 70 கி.மீ தொலைவில் இருந்தார். அவரைச் சந்திப்பது நலம் பயப்பது என எண்ணினேன். பேருந்தில் அவர் இருந்த ஊருக்குப் பயணமானேன். முதலில் 40 கி.மீ மேற்கே பயணித்து பின்னர் அங்கே இறங்கி அடுத்த பேருந்தில் ஏறி அடுத்த 30 கி.மீ பயணிக்க வேண்டும். உத்தேசித்த நேரத்தை விட 20 நிமிட தாமதமாக சென்று சேர்ந்தேன். என் கையில் பெரிய பலாப்பழம் இருந்தது. அதனை நண்பருக்குக் கொடுத்தேன். என்னிடம் இருப்பதைக் கொடுப்பது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி தருவது. நண்பருடன் விபரம் சொன்னேன். புதிய விபரம் ஒன்றும் சொன்னேன். 30 நிமிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஊருக்குப் புறப்பட்டேன். ஊர் நான் இருக்கும் இடத்திலிருந்து 35 கி.மீ கிழக்கே இருந்தது. பேருந்து நிறுத்தத்தில் பஸ் பிடித்து ஊர் வந்து சேர்ந்தேன். நண்பர் கடைக்கு வந்தேன். அப்போது நேரம் 2.15. நண்பர் உணவருந்த வீட்டுக்குச் சென்றிருந்தார். நான் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். 

6 பதிவுகள்

ஒரு சாமானிய பிரஜையின் தேவை

மனுவும் தபாலும்

திறனற்ற நிர்வாகம்

மனுநீதி நாள்

மனுநீதி நாள் முகாம் குறித்த புகார்

அரசாங்கம் என்பது அறிக்கைகள்

அரசாங்கம் என்பது அறிக்கைகள்

ஒரு விஷயத்தை எவரும் அவதானிக்கலாம் ; அரசாங்கச் செயல்பாடுகளில் கணிசமானவை அறிக்கைகள் தயாரித்தலே. ஒரே அறிக்கையை குறுகிய காலத்துக்குள்ளோ அல்லது நீண்ட காலத்திலோ திரும்பத் திரும்ப தயாரித்து அளித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கும். ஒரு காலத்தில் அதனால் தான் இந்திய அரசியலில் வழக்கறிஞர்கள் மிக அதிக அளவில் ஈடுபட்டனர். மொழி மற்றும் கலைப் படிப்புகள் படித்தவர்களின் தேவை இந்திய அரசியலில் இருந்தது. இந்திய ஆட்சிப் பணியாளர்கள் தேர்வில் மொழியறிவு தேர்ச்சிக்கான முக்கிய விஷயமாக இருந்தது ; இருக்கிறது. இந்திய ஆட்சிப்பணி தன் தேர்வர்களின் ஆங்கில மொழியறிவை முக்கியமாக நினைக்கிறது. தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு வேறு மாநிலத்தில் பணி நியமனம் நிகழ்ந்தால் அந்த மாநில மொழியைக் கற்று அதிலும் தேர்வு எழுதி தேர்ச்சி அடைய வேண்டும் என்னும் தேர்வுமுறையைக் கொண்டிருக்கிறது.  சட்டம் இயற்றப்படுதல் என்பது முன்பு சட்டம் படித்தவர்களை அதிகம் சார்ந்திருந்தது. சட்டங்கள் அதிகமாக அதிகமாக சட்டங்கள் குடிமக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகையில் அதிகாரிகள் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதில் பங்களிப்பு ஆற்றத் தொடங்கினர். இன்று இந்திய அரசியலில் நீதித்துறையும் வழக்கறிஞர்களும் ஒரு தனிக்குழுவாக உள்ளனர். அதிகாரவர்க்கம் தனிக்குழுவாக உள்ளது. அரசியல்வாதிகள் தனிக்குழுவாக உள்ளனர். இவர்களுக்கிடையேயான மோதல்களும் ஒத்துப் போதல்களுமே அரசாங்கத்தின் இயக்கம். 

இந்திய ஜனநாயகத்தில் கடைசி குடிமகனின் பங்களிப்பு கூட தினந்தோறும் இருக்கிறது. இன்று நாட்டின் கடைசி குடிமகன் கூட ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.1 என்ற அளவில் ஜி.எஸ்.டி செலுத்துகிறான். அவ்விதம் எனில் ஒரு நாளைக்கு ரூ.140 கோடி. ஒரு மாதத்துக்கு ரூ.4200 கோடி. ஒரு ஆண்டுக்கு ரூ.49,200 கோடி. சென்ற ஆண்டு மத்திய அரசின் ஜி எஸ் டி வருமானம் ரூ. 22 லட்சம் கோடி. 

நம் நாடு சுதந்திரம் அடைந்த போது நம் நாட்டின் வரி வருவாய் என்பது மிகக் குறைவாக இருந்தது. அரசாங்கம் செயல்படும் விதம் ஒருவிதமாக இருந்தது. இன்று நாட்டின் வருவாய் பெருகியுள்ளது. அதற்கேற்ற விதத்தில் பொதுமக்கள் மனநிலையிலும் பங்களிப்பிலும் மாற்றம் இருக்க வேண்டும். வருவாய் வளர்ச்சியை அப்போது தான் நாட்டு மக்களும் சமூகமும் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

இரண்டு தினங்களுக்கு முன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாமுக்குச் சென்றிருந்தேன். அங்கே இணைய இணைப்பு கிடைக்கவில்லை. மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து ஒப்புகைச்சீட்டைப் பெற்றுக் கொண்டு சென்றனர். இதனை நான் தொழில்நுட்பப் பிரச்சனையாகப் பார்க்கவில்லை. இதில் நான் வேறு ஒரு கோணத்தைக் காண்கிறேன். இன்று அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கும் அரசு அலுவலகச் செயல்பாடுகளுக்கும் அரசு வருமானத்தின் பெரும் தொகையை அளிக்கிறது. ஆனால் அரசு ஊழியர் மனோபாவத்தில் மாற்றம் இல்லை. அந்த மாற்றம் நிகழ வேண்டிய காலகட்டம் வந்து விட்டது.  

Monday, 1 June 2026

மனுநீதி நாள் முகாம் குறித்த புகார்

அனுப்புநர்
&&&&
&&&
&&
&

பெறுநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

ஐயா, 

பொருள் : 01.06.2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் மனுதாரர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளையும் சேவைக் குறைபாட்டையும் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குக் கொண்டு வரும் கடிதம்

01.06.2026 அன்று நடந்த மனுநீதி நாள் முகாமுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தேன். அங்கு பொதுமக்களுக்கு ஏற்பட்ட சேவைக் குறைபாட்டையும் இடையூறுகளையும் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 

அதாவது, மனுநீதி நாள் முகாமில் பொதுமக்களால் தரப்படும் மனுக்கள் அலுவலக முத்திரை இடப்பட்டு மனுவின் முதல் பக்கம் ஸ்கேன் செய்யப்பட்டு பிரிண்ட் அவுட் ஆக அளிக்கப்படும். அதன் மறுபக்கத்தில் மனு எண், மனுதாரர் பெயர், முகவரி மற்றும் மனு விபரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். மனுநீதி நாள் கணினி மயமாக்கப்பட்டு இணையம் மூலம் இணைக்கப்பட்ட பின் இவை நிகழ்கின்றன. தனது மனு மீது என்ன மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை மனுதாரர் அறிய இணைய இணைப்பு உதவும். 

01.06.2026 அன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் அரசு அலுவலர்களின் கணினிகள் இணையத்துடன் இணையவில்லை. இணைய இணைப்பில் பல்வேறு சிக்கல்கள். பல மனுதாரர்கள் இந்த இடையூறின் காரணமாக தங்கள் ஒப்புகைச்சீட்டினைப் பெற முடியவில்லை. காலை 11 மணிக்கு மனு அளிக்க வந்தவர்களிடம் மதியம் 2 மணிக்கு மேல் பெற்றுக் கொள்ளுமாறு அலுவலர்கள் கூறினர். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த மனுதாரர்கள் இதனால் பல மணி நேரம் காத்திருக்க நேரிட்டது. 

ஒவ்வொரு வாரமும் வாரநாட்கள் துவங்கும் திங்கட்கிழமையன்று மனுநீதி நாள் என்பது ஆகி வந்த வழக்கம். மாவட்ட அரசு அலுவலகங்களின் தலைமை அலுவலகமான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நூற்றுக்கணக்கான மக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வருகை புரிவதும் ஆகி வந்த வழக்கம். 

அன்றைய தினம் மனுதாரர்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் சிறப்பான முறையில் கிடைப்பதை உறுதி செய்வது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கடமை. 

01.06.2026 மாவட்ட ஆட்சியர் அலுவலக மனுநீதி நாளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முழுமையாகக் கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு இந்த விஷயம் கொண்டு வரப்பட்டதா என்பதை ஆய்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற சேவைக் குறைபாடுகளும் இடையூறுகளும் இனி மனுதாரர்களுக்கு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சிய்ரை கேட்டுக் கொள்கிறேன். 

தங்கள் உண்மையுள்ள,
&&&

இடம் : மயிலாடுதுறை
நாள் : 01.06.2026

நகல்

கனம் மாநில வருவாய்த்துறை அமைச்சர்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
தலைமைச் செயலகம்
சென்னை

மனுநீதி நாள்

சீட் கவர் தைக்கும் டெய்லரின் ரேஷன் கார்டு தொடர்பான மனுவை இன்று அளித்து விட வேண்டும் என பொழுது விடிந்ததுமே எண்ணம் கொண்டேன். அவர் காலை 9.30 மணி அளவில் கடைக்கு வந்து கடையைத் திறக்கிறார். சென்ற ஒரு மாதத்தில் கணிசமான முறை அவர் கடைக்குச் சென்றிருக்கிறேன். எப்போதாவது இன்னொரு பணியாளர் இருப்பார். கடை உரிமையாளரை நான் எப்போதும் கடையில் பார்த்தது இல்லை. ஒரு நாளைக்கு குறிப்பிட்ட தொகை செலுத்தி விட வேண்டும் என்னும் ஒப்பந்தம் அவர்கள் இருவருக்கும் இருக்கக் கூடும். என்னுடைய யூகம் தான் எனினும் யூகம் சரியாக இருக்கவே வாய்ப்பு அதிகம். பார்த்தாலே தெரியும் எந்த ஒரு விஷயத்தையும் நான் வார்த்தையால் கேட்க மாட்டேன்.  மனுநீதி நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதாக இருந்தாலும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனு கொடுப்பதாக இருந்தாலும் அலுவலக வேலை நேரமான காலை 10 - மாலை 5ல் ஏதேனும் ஒரு மணி நேரம் ஒதுக்கி அவர் வர வேண்டும். ஜீனி ரேஷன் கார்டை அரிசி ரேஷன் கார்டாக மாற்றித் தரக் கோரும் மனுவை இரு வாரங்கள் முன்பே எழுதி விட்டேன். அவருடைய ரேஷன் கார்டின் எண் தேவைப்பட்டது. அவருடைய வீட்டு எண் தேவைப்பட்டது. அவர் வசிக்கும் தெருவின் பெயரைக் கூறுகிறாரேயன்றி வீட்டு எண் அவரால் கூற இயலவில்லை. வீட்டு எண் என்ன என்று அவருக்குத் தெரியவில்லை. ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் வீட்டுக்கு விசாரிக்க வருவார்கள் என்பதால் வீட்டு எண் தேவை. அதன் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி வீட்டு எண் அறிந்தேன். ரேஷன் கார்டு அட்டையின் எண் கேட்டு அதனை மனுவில் எழுதினேன். 

இன்று காலை 10.15க்கு அவருடைய கடைக்குச் சென்றேன். சில இரு சக்கர வாகனங்கள் சீட் கவர் மாற்ற வந்திருந்தன. அவர் வேலை செய்து கொண்டிருந்தார். இன்று மனுநீதி நாள் ; இன்று மனு கொடுத்து விடுவோம் என சொன்னேன். அவருடைய மனைவிக்கு ஃபோன் செய்து அவரை வரச் சொன்னார். அவர் ஒரு இரு சக்கர வாகனத்தை இரவலாக வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தார். கடைப் பணியாளர் தனக்குப் பதிலாக தனது மனைவியை மனு கொடுக்க அனுப்பி வைக்கிறேன் எனக் கூறினார். அவர் கடையிலிருந்து கலெக்டர் ஆஃபிஸ் 5 கி.மீ தூரம். எனது இரு சக்கர வாகனத்தில் நான் முன்னால் சென்றேன் ; தனது வாகனத்தில் அவர் தொடர்ந்து வந்தார். கலெக்டர் ஆஃபிஸ் வாசலில் சீருடை அணிந்த 15 போலீஸார் கும்பலாக நின்று இரு சக்கர வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர்.இந்த வழக்கம் புதிதாக இருக்கிறதே என்ன சோதனை என விசாரித்தேன். மனுநீதி நாள் அன்று மனுதாரர் எவரேனும் பெட்ரோலை உடலின் மீது ஊற்றிக் கொண்டு  தீ வைத்துக் கொள்ள முயல்வதுண்டு. அப்படி எதுவும் ஆட்சியர் அலுவலகத்துக்குள் நிகழ்ந்திடாமல் இருக்க இவ்விதம் சோதனை செய்கிறோம் என்றார்கள். என் பின்னால் வந்த சீட் கடைக்காரர் மனைவியின் வண்டியை சோதனை செய்தார்கள். அதில் 250 மி.லி பெட்ரோல் ஒரு பாட்டிலில் இருந்தது. அதனை வாங்கி போலீஸார் வைத்துக் கொண்டார்கள். அவர் வாகனம் உள்ளே வந்து என் வாகனம் நின்ற இடத்துக்குப் பக்கத்தில் நின்றது. ‘’ஏன் பெட்டியில் பெட்ரோல் வைத்திருந்தீர்கள்?’’ எனக் கேட்டேன். பாதி வழியில் நின்றால் இதனை நிரப்பிக் கொள்ள என்றார். ‘’இது மாதிரி செய்யாதீங்க. மூடி லூஸா இருந்து பெட்ரோல் சிந்தி என்ஜின் ஹீட்ல பத்திடுச்சுன்னா விபரீதம் ஆயிடும்’’ என்றேன். 

மனுநீதி நாள் முகாம் நடக்கும் இடத்துக்குச் சென்றோம். 250 பேர் கூட்ட அரங்கில் இருந்தனர். ஆளும்கட்சிக் காரர்களோ எதிர்க்கட்சிக் காரர்களோ அங்கே இல்லை என்பதை கவனித்தேன். 

இந்த மனுநீதி நாள் மனுவின் சிறப்பம்சம் இன்று அளிக்கப்படும் மனுவுக்கு ஒரு ஒப்புகை எண் கொடுப்பார்கள். அந்த ஒப்புகை எண்ணை இணையத்தில் மனுநீதி நாள் தளத்தில் உள்ளீடு செய்தால் அனைவரும் அந்த மனுவையும் மனுவின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையையும் அதிகாரிகளும் மனுதாரரும் காண முடியும்.

கூட்ட அரங்குக்கு வெகு தள்ளி மனுக்களுக்கு ஒப்புகைச்சீட்டு அளிக்கும் இடம் இருந்தது. அங்கு சென்றால் இணையம் வேலை செய்யவில்லை என்று கூறினர். மனுநீதி நாள் குறித்தே மனு அளிக்க வேண்டியிருக்கிறது என எண்ணினேன். கணிசமான நேரம் காத்திருந்தும் ஒப்புகை எண் தரப்படவில்லை. கூட்ட அரங்குக்கு சென்று மனுவை அளிக்கச் சொன்னேன். இன்று மாவட்ட ஆட்சியரே கூட்டத்தை நடத்தினார். மேடையில் 8 அதிகாரிகள் இருந்தனர். எவரிடம் வேண்டுமானாலும் மனு அளிக்கலாம். கூட்டம் இல்லாமல் இருந்த ஒரு வரிசையில் சென்று மனு அளித்தார். மாவட்ட குடிமைப் பொருள் வழங்கும் அலுவலகத்திலிருந்து வந்த ஒருவரை ஒலிபெருக்கியில் அழைத்தார்கள். அவர் மனுவைப் படித்துப் பார்த்து பெற்றுக் கொண்டார். 

சீட் கடைக்காரர் மனைவியிடம் ஒப்புகை எண்ணுக்காகக் காத்திருந்த போது சில விபரங்கள் கேட்டுக் கொண்டேன். 

‘’உங்களுக்கு சொந்த ஊர் எந்த ஊருமா?’’

‘’மாயரம் தான் அண்ணன்’’

‘’உங்க வீட்டுக்காரரும் மாயரம்னு சொன்னாரு’’

‘’அண்ணன் !அவரு என்னோட சொந்த தாய்மாமா’’

‘’அப்படியா ? நீங்க வேலைக்கு ஏதும் போலலையா?’’

‘’திருப்பூர்ல இருந்தப்ப கம்பெனிக்கு வேலைக்கு போனேன். இங்க வந்ததுல இருந்து வேலைக்குப் போகலை’’

‘’என்ன படிச்சிருக்கீங்க?’’

‘’ பிளஸ் டூ படிச்சுருக்கன் அண்ணன்’’

’’ஏன் மேல படிக்கலையா? கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்ல ஏதாவது டிகிரி படிக்கலாம்ல?’’ 

அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. 

‘’நீங்க என்ன வேலை செய்வீங்க?’’

‘’கடையில பொருள் எடுத்துக் கொடுக்கற வேலை செய்வன் அண்ணன்’’ 

‘’எந்தக் கடையில ?’’

‘’மளிகைக் கடை’’

‘’மளிகைக் கடையா ? என் ஃபிரண்டு ஒரு ஹார்டுவேர் கடை வச்சுருக்கார். அங்க வேலை செய்யறீங்களா? ஆனா அங்க நூறு விதமான பொருள் இருக்கும். அத்தனையையும் நீங்க அடையாளப்படுத்தி எடுக்கணும். உங்களால முடியுமா? நான் ஃபிரண்டு கிட்ட கேட்டு சொல்றன்’’ 

‘’செய்வேன் அண்ணன்’’ என்றார். 

மனுவைக் கொடுத்த பின் மீண்டும் ஒப்புகை எண்ணுக்காக வந்தோம். அப்போதும் இணைய இணைப்பு கிடைக்கவில்லை. மதியம் 2 மணிக்கு வரச் சொன்னார்கள். உங்களுக்கு எஸ் எம் எஸ் வரும். அதில் ஒப்புகை எண் இருக்கும். அது போதும் என்றார்கள். எனக்கு அதில் நம்பிக்கையில்லை. அஜாக்கிரதையாக டெய்லர் மெஸேஜை டெலிட் செய்து விட்டால் சிரமம். டெய்லர் மனைவியை வீட்டுக்கு கிளம்பி போகச் சென்னேன். 2 மணிக்கு மேல் வரலாம் என நான் முடிவு செய்து கொண்டேன். 

அந்தப் பெண் வாகனம் அருகே சென்றதும் ஒரு பையிலிருந்து ரூ.100 எடுத்தார். 
‘’அண்ணன் ! இத பெட்ரோல் செலவுக்காக வச்சுக்கங்க. பல தடவை நீங்க இந்த விஷயத்துக்காக மெனக்கெட்டீங்கன்னு வீட்டுக்காரர் சொன்னார்’’ என்றார். 

‘’அதெல்லாம் வேண்டாம் அம்மா! பரவாயில்லை. உங்களுக்கு அரிசி கார்டு கிடைச்சா அது போதும்’’ 

நண்பரின் அலுவலகத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். நண்பரின் ஹார்டுவேர் கடைக்குச் சென்று அங்கே கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன். மணி இரண்டு ஆனதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றேன். ஒப்புகை எண் வழங்கும் இடத்தில் யாரும் இல்லை ; மனு நீதி நாள் கூட்ட அரங்கிலும் யாரும் இல்லை. அலுவலர்கள் அனைவரும் மதிய உணவு அருந்த சென்று விட்டார்கள். ஒப்புகை எண்ணுக்காக பொதுமக்கள் இருபது பேர் அமர்ந்திருந்தனர். 2.45க்கு ஊழியர்கள் வந்தனர். அப்போதும் இணையம் வேலை செய்யவில்லை. கொஞ்சம் காத்திருந்து ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொண்டேன். 

சீட் கவர் கடைக்குச் சென்றேன். நேரம் அப்போது மதியம் 3.45. மதிய உணவு நான் இன்னும் அருந்தவில்லை. அவரிடம் ஒப்புகைச்சீட்டை அளித்தேன். 

‘’இந்த சீட்டு ரொம்ப முக்கியம். பத்திரமா வச்சுக்கங்க. ஒரு வாரம் 10 நாள்ல எப்படியும் மனு மேல மேல் நடவடிக்கை இருக்கும். நடுவுல நான் வந்து விபரம் கேட்டுக்கறன்’’ என வாசலில் இருந்தே விபரம் கூறி விட்டு வீட்டுக்குப் புறப்படத் தயாரானேன். 

‘’சார் ! பெட்ரோலுக்கும் ஏதும் வாங்கிக்க மாட்டேன்னு சொல்லீட்டீங்கன்னு வீட்ல சொன்னாங்க. நான் உங்களுக்கு என்ன செய்ய முடியும்னு எனக்குத் தெரியல்’’ என்றார் சீட் கடைக்காரர். சொன்ன போது மிகவும் நெகிழ்ந்து கண் கலங்கி விட்டார். 

‘’இன்னைக்கு தான் மனு கொடுத்திருக்கோம். உங்களுக்கு அரிசி கார்டு கிடைச்சா அதுவே போதும்’’ எனக் கூறி விட்டு வீடு நோக்கிப் புறப்பட்டேன் ; மதிய உணவருந்த.