பிரிட்டிஷார் உலகெங்கும் காலனி நாடுகளை அடிமைப்படுத்தி உருவாக்கினர். அந்த நாடுகளின் செல்வத்தையும் மனிதர்களின் உழைப்பையும் கொள்ளையடிப்பதே அவர்களின் ஆட்சியின் நோக்கம். பிரிட்டிஷ் அமைப்பில் உச்ச அதிகாரத்தில் இருப்பவர்களிடமிருந்து கீழ்நிலை அதிகாரத்தில் இருப்பவர்கள் வரை அனைவரும் மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்து கொள்ளையடித்தனர். பிரிட்டிஷ் ஆட்சி முறை ஊழலை அடிப்படையாய்க் கொண்டது. தனது பணியாளர் மேல் மேலாதிக்கம் செலுத்த ஊழல் புகார் மீதான நடவடிக்கைகளையும் பிரிட்டிஷ் ஆட்சிமுறை கொண்டிருந்தது. அது அவர்களின் நிர்வாக பாணி. இதைக் கூறும் அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஊழல் மிகக் குறைவாக இருக்கும் நிர்வாகங்களையும் தம் ஆட்சியில் பிரிட்டிஷார் கொண்டிருந்தனர். நூதனமான விஷயமாக இருந்தாலும் அதுவும் ஓர் உண்மையே. ரயில்வே, தபால் ஆகிய இரு துறைகள் பிரிட்டிஷ் ஆட்சியில் மிக மிகக் குறைந்த ஊழல் கொண்டிருந்ததைக் காணலாம். பிரிட்டிஷ் ஆட்சியில் மிக அதிக ஊழல் இருந்த துறைகள் என உள்ளாட்சி அமைப்புகளைக் கூறலாம். நகராட்சி, மாநகராட்சி, ஜில்லா போர்டு ஆகியவற்றைக் கூறலாம்.
நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் அரசு ஊழியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் மனோபாவத்துடனே விளங்கினர் ; இப்போதும் விளங்குகின்றனர். இன்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஊழல் நிறைந்து இருப்பதையும் ரயில்வேயும் தபால் துறையும் ஊழல் மிகக் குறைவாக இருப்பதையும் காணலாம். நம் நாடு வளர வேண்டும் என்றால் ஊழல் மனோநிலை அரசு ஊழியர்களிடம் இல்லாமல ஆக வேண்டும். பொதுமக்கள் அரசு குறித்தும் நிர்வாகம் குறித்தும் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
மக்கள் விழிப்புணர்வே ஜனநாயகத்தின் மிகப் பெருஞ்செல்வம்.