Friday, 22 May 2026

ஒரு நூல் குறித்த நினைவு

காலச்சுவடு கட்டுரை ஒன்றின் மூலம் அறிமுகமான பெயர் ராமச்சந்திர குகா. அந்தக் கட்டுரையை எழுதியவர் பி.ஏ. கிருஷ்ணன். ஆண்டு 2003. அப்போது வெளியாகியிருந்த பி.ஏ. கிருஷ்ணனின் ‘’புலிநகக்கொன்றை’’ நாவலை வாசித்து அதன்பால் தீவிரமாக ஈர்க்கப்பட்டிருந்தேன். அந்த ஈர்ப்பின் காரணமாக பி ஏ கே அறிமுகம் செய்த எழுத்தாளரான ராமச்சந்திர குகாவின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. தி ஹிண்டு பத்திரிக்கையில் வெள்ளிக்கிழமையன்று ராமச்சந்திர குகாவின் ‘’இந்தியா ஆஃப்டர் காந்தி’’ என்னும் நூல் வெளியாகியிருக்கிறது என்னும் செய்தி வெளியானது. காலையில் அந்த செய்தியை வாசித்ததும் சென்னையில் இருந்த பிரபலமான ஆங்கிலப் புத்தகக் கடைக்கு காலை 10 மணி அளவில் ஃபோன் செய்து ‘’இந்தியா ஆஃப்டர் காந்தி’’ நூல் அவர்களிடம் இருக்கிறதா எனக் கேட்டேன். அவர்கள் இருக்கிறது என பதில் கூறினார்கள்.  சென்னையில் எனது நண்பரான எனது ஊர்க்காரர் இருந்தார். அவருக்கு ஃபோன் செய்து புத்தகக் கடையைக் கூறி புத்தகத்தின் பெயரையும் கூறி இந்த நூலை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் ; ஊருக்கு வரும் போது கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். நண்பர் வாங்கி வைத்துக் கொண்டார். பத்து நாள் கழித்து வருவதாயிருந்தவர் எதிர்பாராத விதமாக ஞாயிறு அன்று காலையே ஊருக்கு வந்து விட்டார். எனக்கு ஃபோன் செய்தார். நான் அவரைச் சந்தித்து அவரிடமிருந்து நூலை பெற்றுக் கொண்டேன். வீட்டுக்கு வந்து வாசிக்க ஆரம்பித்தேன். எனக்கு அந்த நூல் மிகவும் சுவாரசியமாயிருந்தது. அன்று முழுக்க வாசித்தேன். அடுத்த நாளும் வாசித்தேன். செவ்வாய்க்கிழமை அன்று முழுமையாக வாசித்து முடித்து விட்டேன். அந்தப் புத்தகம் 800 பக்கங்களுக்கு மேல் கொண்டது. இருப்பினும் தொடர்ச்சியாக மிக ஆர்வமாக வாசித்தது ஆச்சர்யமானது. தி ஹிண்டு பத்திரிக்கையில் புதன்கிழமை காலை அந்தப் புத்தகத்துக்கு ‘’புக் ரிவியூ’’ வந்தது. நூல் வெளியான செய்தி வந்தது வெள்ளிக்கிழமை. நூல் ‘’புக் ரிவியூ’’ வந்தது புதன்கிழமை. இந்த இடைவெளிக்குள் அந்த நூலை முழுக்க வாசித்து முடித்து விட்டேன் என்பது இன்று நினைத்தாலும் சந்தோஷம் தருவது.  

Thursday, 21 May 2026

கூட்டணி மந்திரிசபை

நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு கூட்டணி மந்திரிசபை அமைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது ; ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவன் என்ற முறையில் தமிழகத்தில் இரு துருவ அரசியல் முடிவுக்கு வந்து அது பல முனைகள் கொண்டதாக மாறத் துவங்கியிருப்பதன் துவக்கமே இந்த கூட்டணி மந்திரிசபை எனக் காண்கிறேன்.  

தேசியக் கட்சியான காங்கிரஸ் 60 ஆண்டுகளில் முதல்முறையாக மந்திரிசபையில் இடம் பெற்றிருக்கிறது. தேசியக் கட்சிகள் தமிழகத்தில் இனி முக்கியமான இடம் வகிக்கப் போகின்றன என்பதற்கான துவக்க நிகழ்வாக இதனைக் கொள்ள முடியும். பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய்வை தமிழகத்தில் இருக்கும் பிற தேசியக் கட்சிகள். 

இந்த மந்திரிசபையில் பட்டியல் சாதியினைச் சேர்ந்தவர்கள் கணிசமான அளவில் மந்திரிகளாகியிருக்கின்றனர். எந்த அரசியல் கட்சிக்கும் உழைப்பை நல்குபவர்கள் பட்டியல் சாதியினரே. தமிழக அரசியல் சூழலில் வாக்களிப்பதை முக்கிய ஜனநாயகக் கடமையாக எண்ணி மிக அதிக அளவில் வாக்களிப்பவர்களும் பட்டியல் சாதியினரே.தமிழகத்தில் எந்த அரசியல் கட்சி ஆட்சியமைப்பதற்கும் அடிப்படையாக அமைவது பட்டியல் சாதியினரின் வாக்குகளே. ஆனால் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே மந்திரிசபையில் இடம் தரப்பட்டுள்ளது. இம்முறை பட்டியல் சாதியினருக்கு தமிழக மந்திரிசபையில் 20 சதவீதம் இடம் தரப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு மகிழ்வளிக்கும் விஷயம் இது. தமிழகத்தின் நிதி அமைச்சராக பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்றிருப்பது மிகச் சிறப்பானது. வேதியர் சமூகத்தைச் சேர்ந்த இருவரும் மந்திரியாகியிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக தமிழக அரசியலில் இல்லாத நிலை இது. கடந்த 60 ஆண்டுகளில் வேதியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும்  மாநில அமைச்சராக இருந்திருக்கிறார். இந்த மந்திரிசபையில் இருவர் மந்திரிகளாகியிருக்கின்றனர்.

புதிய மந்திரிசபைக்கு வாழ்த்துக்கள்.  

பொறி வைத்தது யார்?

அடியேன் செய்தித்தாள் மூலமாக அரசியலை அறியும் சாமானியன் மட்டுமே. தற்போது எல்லா சாமானியர்களைப் போலவும் இணையம் மூலமும் அரசியல் நிகழ்வுகளை அறிகிறேன்.

தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்து முடிவுகள் வெளியானது. தமிழகத்தின் தனிப்பெரும் கட்சி 107 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. ஆளுங்கட்சியாய் இருந்த கட்சி பிரதான எதிர்க்கட்சியானது. அந்தக் கட்சிக் கூட்டணியிடம் 73 உறுப்பினர்கள் இருந்தனர். அதிலிருந்த ஒரு கட்சி தனிப் பெரும் கட்சிக்கு ஆதரவு தர முடிவு செய்தது. முன்னர் ஆளுங்கட்சியாய் இருந்து பின்னர் எதிர்க்கட்சியாகியிருக்கும் கட்சியின் கூட்டணிக்கு 68 உறுப்பினர்கள் இருந்தனர். மூன்றாவது இடம் வந்த கூட்டணிக்கு 53 உறுப்பினர்கள். 

கூட்டணிகள் ஒருவிதமாக 112, 68, 53 என்றானது. 

ஆளும்கட்சியாயிருந்து எதிர்க்கட்சியான கட்சி தனது கூட்டணிக் கட்சிகளில் சில மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படாமல் தடுக்கப்பட தமிழக சட்டப்பேரவையின் தனிப்பெரும்கட்சியை ஆதரித்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்றும் தங்கள் தயவில் தான் புதிய ஆட்சி நடைபெறுகிறது என்றும் தனிப்பெரும் கட்சி ஆட்சியமைத்ததற்குக் காரணமே தங்கள் கட்சிதான் என்றும் கூறினர் ; கூறுகின்றனர். அவர்களின் ராஜதந்திரப் பொறியில் தனிப்பெரும் கட்சி சிக்கியிருக்கிறது என அவர்கள் நினைக்கின்றனர். 

எனக்கு இன்னொரு கோணம் தென்படுகிறது. 

சட்டப்பேரவையின் தனிப்பெரும் கட்சியாகத் தன்னை முன்னிறுத்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு கோரவில்லை. புதிதாக 5 உறுப்பினர்கள் இருக்கும் கட்சியின் ஆதரவைப் பெற்று 112 என ஆதரவைக் காட்டி உரிமை கோரினர். அதன் பின் தான், ஆளும்கட்சியாயிருந்து எதிர்க்கட்சியான கட்சியின் கூட்டணிக் கட்சிகள் தனிப்பெரும் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பல சுற்று பேச்சுக்கள் நடந்தன. சிறு கட்சிகளின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 9. அந்த கட்சிகளில் ஒன்று முதல்வர் பதவி கோரியிருந்தால் கூட அது நிறைவேற வாய்ப்பிருந்தது. குறைந்தபட்சம் அந்த 9 உறுப்பினர்களும் அமைச்சர் பதவி கோரியிருக்க முடியும். தமிழகத்தில் அமைச்சரவையின் உச்சபட்ச எண்ணிக்கை 31. மொத்த மந்திரி பதவிகள் 31ல் கூட்டணிக் கட்சிகளுக்கு 9 என்பது மிகவும் கூடுதலான எண்ணிக்கை அல்ல. ஆனால் அவர்கள் எதையும் கோராமல் ஆதரவு தர முன்வந்தனர். மூன்றாவது இடம் வந்திருக்கும் கட்சியுடன் உடன்பாடு செய்து கொண்டு விடுவார்களோ அல்லது அந்தக் கட்சியை உடைத்து விடுவார்களோ என அவர்கள் எண்ணியிருக்கலாம். 

நாட்கள் நகர்ந்தன. நான்கு கட்சிகளின் 9 உறுப்பினர்களும் எந்த கோரிக்கையையும் பொதுவில் வெளிப்படுத்தாமல் ஆட்சிக்கு ஆதரவு அளித்தனர். மூன்றாவதாக வந்த கட்சி பிளவுபட்டிருக்கிறது. அதில் 25 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. அவ்வாறெனில் சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கை 209 என்றாகும். அதில் 105 உறுப்பினர்கள் இருக்கும் கட்சிக்கு பெரும்பான்மையே கிடைத்து விடும். அந்த 25 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்து அதில் 11 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனிப் பெரும் கட்சிக்கு தனிப் பெரும்பான்மையே கிடைத்து விடும். எந்த கட்சிக்கும் கூட்டணி மந்திரி சபையில் இடம் தர வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்காது. 

இப்போது எழும் கேள்வி : பொறி வைத்தது யார்? யார் பொறியில் யார் சிக்கியிருக்கிறார்கள் ?     

Wednesday, 20 May 2026

குலைவும் மீட்பும்

இன்று மதியம் 11 மணிக்கு அருந்திய ஹோட்டல் உணவு ஒத்துக்கொள்ளவில்லை. உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மாலை கடுமையான வாந்தி. அதன் பின் அப்படியே உறங்கி விட்டேன். மாலை எழுந்ததும் உடல்நிலை பரவாயில்லை என இருந்தது ஆனால் வீட்டு வாசல் வரை சென்றாலே மயக்கம் வருவது போல் இருந்தது. வீட்டில் அனைவரும் ஊருக்குச் சென்றிருக்கின்றனர்.  

நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து பிரெட் பாக்கெட் ஒன்றும் ஓ ஆர் எஸ் பொட்டலம் 5ம் வாங்கி வர சொன்னேன். அவர் 30 நிமிடத்துக்குள் தன் பணியாளரை அனுப்பி என் கைக்கு சேர்ப்பித்தார். இன்னொரு நண்பர் பசும்பாலைக் காய்ச்சிக் கொண்டு வந்தார் எனக்கு உதவுவதற்காக. 

ஓ ஆர் எஸ் எனப்படும் உப்பு சர்க்கரைக் கரைசல் குடித்ததும் உடல் சற்று தெம்பாக இருந்தது. பால் ஊற்றி 2 அல்லது 3 பிரட் மட்டும் தான் சாப்பிட முடிந்தது. 

தண்ணீர் பாட்டிலில் ஓ ஆர் எஸ் கரைசலை கரைத்து வைத்து விட்டு நண்பர் சென்றார். 

உடல்நலம் மீண்டது. 

இரு எஜமானர்கள்

ஆங்கில மொழியில் ஒரு சொல் உண்டு : ஒரு பணியாளன் இரு எஜமானர்களிடம் பணியாற்ற முடியாது என. அடியேன் கட்டுமானத் துறையில் இருப்பவன். எங்கள் பணியிடத்தில் 10 லிருந்து 50 பேர் வரை பணி புரிவார்கள். பணியாளர் எத்தனை பேர் இருந்தாலும் பணிக்குறிப்பை அளிப்பவர் ஒருவர் தான் இருக்க வேண்டும். இருவர் பணிக்குறிப்பை அளித்தால் பணியிடத்தில் பணி முன்னேற்றம் இருக்காது ; விதவிதமான சிக்கல்தான் இருக்கும்.  

இந்திய அரசியலில் அதிகாரிகளைக் கொண்ட அதிகாரவர்க்கம் இருக்கிறது. உறுப்பினர்களைக் கொண்ட அர்சியல் கட்சிகள் இருக்கின்றன. கட்சி உறுப்பினர்கள் தாங்கள் அடையும் அதிகாரம் அரசியல் கட்சியால் என எண்ண முற்படுகின்றனர். அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவது அதிகாரவர்க்கமே. ஒருவர் அரசியல் அதிகாரம் பெற்றால் அவரை அரசாங்கத்தின் விதிகளே ஆளும். 

எனவே தான் பெரும்பாலான அரசியல்வாதிகள் அதிகாரவர்க்கத்தின் முன் ஒரு முகமும் தங்கள் அரசியலுக்கு ஒரு முகமும் கொள்கின்றனர். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு விதமாகவும் ஆளும்கட்சியாக இருக்கும் போது ஒரு விதமாகவும் செயலாற்றுகின்றனர். 

சில ராஜதந்திரிகள் மட்டுமே கட்சி, அதிகாரவர்க்கம் இரண்டுக்கும் இடையே நுணுக்கமான சமநிலையைக் கொண்டு வருகின்றனர். 

Tuesday, 19 May 2026

மகிழ்ச்சியளிக்கும் ஒரு பொருள் (நகைச்சுவைக் கட்டுரை)


சென்ற வாரம் ஒரு பொருளை வாங்க நினைத்தேன். ஒரு பொருளை வாங்க வேண்டும் என நான் நினைப்பது பல ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடக்கும். நினைத்ததை வாங்க மேலும் பல ஆண்டுகள் ஆகும்.  இணையத்தில் தேடி ஒரு பொருளைக் கண்டடைந்தேன். அதன் பெயர் ‘’ஃபாரடே பை’’. இது என்ன செய்யும் என்றால் இதனுள் அலைபேசியை வைத்து விட்டால் அலைபேசிக்கு சிக்னல் ஏதும் வராது. அதனால் அலைபேசிக்கு எந்த அழைப்பும் வராது. ஏதாவது பேச வேண்டும் என்றால் ‘’ஃபாரடே பை’’யிலிருந்து ஃபோனை எடுத்துப் பேசி விட்டு மீண்டும் உள்ளே வைத்து விடலாம். 

இப்போதே பெரும்பாலும் எனது அலைபேசியை ‘’சைலண்ட் மோட்’’ல் தான் வைத்திருப்பேன். அதை விடவும் இந்த உபகரணம் மேலும் பயன் தருவதாக இருக்கக் கூடும். 

இந்த ’’ஃபாரடே பை’’ பயன்பாட்டுக்குப் பின் தொழில் நிமித்தம் என்னுடன் பேச வேண்டியவர்களை காலை 9.30 மணியிலிருந்து மாலை 5.30 வரை மட்டுமே பேசுமாறு கூறலாம் என இருக்கிறேன். அந்த நேரம் மட்டும் ஃபோன் என்னுடன் இருக்கும். 

இந்த பையை வாங்கிய பின் என்ன யோசிக்கிறேன் என்றால் காலை 9.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை ஃபோனை ஆன் செய்து வைத்து விட்டு மற்ற நேரத்தில் சுவிட்ச் ஆஃப் செய்து விடலாமே இதற்கு ஏன் ஃபாரடே பை வாங்கினோம் என யோசிக்கிறேன். பல நாட்கள் அந்த வேலைநேரத்தில் கூட வெளிஅழைப்புகளை விரும்புவதில்லை. அத்தகைய தருணங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என இருக்கிறேன்.  

Sunday, 17 May 2026

திங்களைப் போற்றுதும்


 நூல் : ஒரு க்ளாஸ் விஸ்கி ஆசிரியர் : கவிதா சொர்ணவல்லி பக்கம் : 108 விலை : ரூ.165 பதிப்பகம் : வான்கா பதிப்பகம், 10, கோபாலபுரம் விரிவு, வடவள்ளி, கோயம்புத்தூர். மின்னஞ்சல் : booksellersvangogh(at) gmail (dot)com  

     நமது மரபு வாழ்வின் அடிப்படை உறுதிப்பாடுகளாக தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சத்தைக் கூறுகிறது. அறம், பொருள், இனிமை மற்றும் வீடுபேறு எனத் தமிழ் தன்மொழியில் சொல்கிறது. இந்த வகைப்பாட்டினை - இந்த வரிசைப்படுத்தலை இவ்விதம் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் : அறம் என்பது விசும்பின் நியதி. ஆயிரக்கணக்கான சூரியன்களையும் வான்மீன்களையும் ஆழியையும் கோள்களையும் இணைத்திருக்கும் இயக்கம். அந்த பேரியக்கத்துடன் ஒத்திசைவதே அறம். அத்தகைய அற உணர்வால் மானுடர் உருவாக்கிக் கொள்வதே பொருள் (அர்த்த). அற உணர்வாலும் பொருள் வாழ்வாலும் மனிதர்களுக்கு வாய்க்கப் பெறுவதே வாழ்தலின் இனிமை. அந்த இனிமை மானிடரை இட்டுச் செல்லும் அந்தமே வீடுபேறு. அறமும் வீடுபேறும் ஒன்றே. வாழ்தலின் இனிமையைக் காண்பவர்கள் வீடுபேறுக்கான மார்க்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். 

மானுட வரலாற்றில் பல ஆயிரம் ஆண்டுகளாகவே தனி மனிதனை, மனிதர்களை, மனித சமூகத்தை ‘’தான்’’ எனும் எண்ணம் சூழ்ந்திருக்கிறது. அந்த எண்ணம் பெரும்பாலும் அறியாமைக்கு இட்டுச் செல்கிறது. பிரபஞ்சப் பெருநியதியைத் தனியாகவும் தன்னை தன் இருப்பைத் தனியாகவும் எண்ணும் நிலையே ‘’அறியாமை’’. மானுடரைத் துன்பத்தில் ஆழ்த்துவதும் அதுவே. புத்தர் அந்தத் துன்பத்தைக் கண் கொண்டு காணச் சொல்கிறார். மனிதர் அனைவரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ‘’நான்’’ என்னும் எண்ணம் கொள்வதால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பிரபஞ்சப் பெருநியதியிலிருந்து விலகி இருப்பதால் துக்கம் அல்லது துக்கங்கங்கள் கோடானுகோடி விதமாய் இருக்கிறது அல்லது இருக்கின்றன. அவற்றை மானுடர் கண் கொண்டு காணும் போது துக்கத்திலிருந்து துக்கத்துக்கான காரணத்தை அறிகின்றனர். பின்னர் துக்க நிவாரணம் என்ன என்பதையும் துக்க நிவாரணத்துக்கான பாதை என்ன என்பதையும் அறிகின்றனர். மனிதனுக்கு அதுவே நிறைநிலை ; முழு விடுதலை. 

மானுட வரலாறு குறைந்தபட்சம் 15,000 ஆண்டுகள் தொன்மையானது. அதில் 6000 ஆண்டுகளாக மனித குலம் மானுட உணர்வுகளை எழுத்தில் வடிக்கிறது. இலக்கியம் குறைந்தபட்சம் 6000 ஆண்டுகளாக மானுட குலத்துடன் உடன் வந்து கொண்டிருக்கிறது. எல்லையற்ற விசும்பின் இயக்கத்துடன் மனிதப் பிரக்ஞையை இணைப்பதை இலக்கியம் தன் பணியாக எண்ணுகிறது ; செய்கிறது. 15,000 ஆண்டுகளாக மனிதர்கள் அறிவையும் அறியாமையையும் சேர்ந்தே அடைகின்றனர். மானுடர் அறிந்த அறிவைக் காட்டிலும் இன்னும் பெரிதாக இருக்கிறது அறியாமை. 

பொதுவாக நவீனத் தமிழிலக்கியத்தின் மீது ஐரோப்பாவின் இருத்தலியல் மற்றும் நவீனத்துவத்தின் தாக்கம் அதிகம். கவிதா சொர்ணவல்லியின் ‘’ஒரு க்ளாஸ் விஸ்கி’’ தொகுப்பில் உள்ள சிறுகதைகள் தம்மை இருத்தலியல் மற்றும் நவீனத்துவ எல்லைக்குள் பொருத்திக் கொள்ளாமல் பிரபஞ்சப் பெருவெளியெங்கும் உலவும் படைப்பு அகத்துடன் உலகை, மனித வாழ்வைக் காணுகின்றன. 

கவிதா சொர்ணவல்லியின் சென்னை லட்சக்கணக்கான மனிதர்கள் அறிந்த இரைச்சலுடனும் இயந்திரத்தனமையுடனும் இருக்கும் சென்னைதான் என்றாலும் கவிதா சொர்ணவல்லியின் சிருஷ்டி சென்னையை நுரை பொங்கும் அலைகள் மணல் மேடுகளைத் தொடும் நகரமாகவும் அதிகாலையின் சிறு தூரல் சென்னையெங்கும் சாரலை நிரப்பியிருக்கும் பொழுதாகவும் மருதாணியும் குல்மோகரும் மாமரங்களும் பன்னீர்ப்பூக்களும் பூத்திருக்கும் பிரதேசமாகவும் மொழியில் சென்னையை நிலைநிறுத்திச் செல்கிறது. அவரது படைப்புகளும் படைப்புச் செயல்பாடும் மிக முக்கியமானது என்பதற்கு அவரது சிறுகதைகளில் வெளிப்படும் இயற்கை குறித்த சித்தரிப்புகளே சொற்சாட்சியங்கள் ஆகும். 

கவிதா சொர்ணவல்லியின் கதாமாந்தர்கள் அனைவருமே இனியவர்கள்; இனிமை நிறைந்தவர்கள்; இனிமையை மட்டுமே தேர்ந்தெடுப்பவர்கள். இனிமையை மட்டுமே காண முடிவெடுத்தவர்கள். 

சங்கப்பாடல் ஒன்று உள்ளது. 

ஒரு வீட்டில் மங்கல இசை ஒலிக்கிறது
இன்னொரு வீட்டில்
சாவுமேளம் கேட்கிறது
துயர் மிக்கது இவ்வுலகம்
அதன் 
இயல்புணர்ந்தவர்கள்
அதன் இனிமையை மட்டுமே காண்பார்கள்

கவிதா சொர்ணவல்லியின் படைப்புலகை துயரற்ற இனிமைகளின் உலகம் என்று சொல்லலாம். மானுடர்க்கு அவர் படைப்பாளியாக ஒரு செய்தியைக் கூறுகிறார் : நாம் வாழும் உலகில் நாம் காணும் உலகில் இனிமைகளால் ஆன இனிமையின் உலகம் இருக்கிறது ; அந்த இனிமையை மானுடர் தேரட்டும். 

’’திங்களைப் போற்றுதும்’’ எனத் துவங்குகிறது துறவியான இளங்கோ படைத்த சிலப்பதிகாரம். திங்கள் பெண்மைக்கும் நீதிக்குமான குறியீடு. திங்களை முன்நிறுத்தி திங்களுக்கு முதன்மை இடம் கொடுத்து ஞாயிறை அடுத்து வைக்கிறான் இளங்கோ. நம் மரபில் படைப்போன் சொல்லரசியைத் தன் நாவில் நிலைநிறுத்திக் கொண்டான். மாயோன் அலைமகளுக்குத் தன் முழு இதயத்தையும் தந்தான். சங்கரன் உமையில் பாதியாகத் தான் ஆனான். 

கவிதா சொர்ணவல்லியின் சிறுகதைகளை ‘’திங்களைப் போற்றுதும்’’ எனப் போற்றிய தமிழ் மரபின் நிகழ்காலத் தொடர்ச்சியாக நான் காண்கிறேன். 

Friday, 15 May 2026

அறிவுரைக்கு செவிமடுத்தல்

நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த வருடம் கணிணித் தொழில்நுட்பமும் தகவல் தொழில்நுட்பமும் பலரால் ஆர்வமுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள். கட்டுமானத் தொழில்நுட்பத்திலும் எந்திரவியல் தொழில்நுட்பத்திலும் பயில மாணவர்கள் மிகக் குறைவாக இருப்பார்கள். கண்ணி தகவல் தொழில்நுட்பங்களில் வகுப்புக்கு 200 மாணவர்கள் இருப்பார்கள். கட்டுமானத்திலும் எந்திரவியலிலும் வகுப்புக்கு 20 மாணவர்கள் இருப்போம். எங்கள் கல்வி 4 ஆண்டுகளில் முடிந்ததற்குப் பின்னான அடுத்த ஆண்டில் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் 200 மாணவர்கள் சேர்ந்ததாகவும் கணினி தகவல் தொழில்நுட்பங்களில் 20 மாணவர்கள் மட்டுமே இருப்பதாகவும் அறிந்தோம். 

20 மாணவர்கள் கொண்ட வகுப்பில் எங்களுக்குக் கற்பிக்கும் பேராசிரியர் ஒருவர் எங்களிடம் சொல்வார். ‘’பல்கலைக்கழகத்தில் நிறைய கட்டுமானப் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை தினமும் சென்று பாருங்கள். உங்களுக்கு அங்கே என்ன பணி நடக்கிறது என முழுமையாகப் புரியாது ; இருந்தாலும் சென்று பாருங்கள். உங்கள் கல்வி அங்கே நடக்கும் வேலைகள் தான். உங்கள் கண்கள் தினமும் அந்தப் பணிகளைக் காண வேண்டும். உங்கள் உடலும் மனமும் கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில் இருக்க வேண்டும். ஏனென்றால் படித்து முடித்த பின் அதுதான் உங்கள் வாழ்க்கையாக இருக்கப் போகிறது.’’ மிகுந்த அக்கறையுடன் தான் பேராசிரியர் எங்களுக்குக் கூறினார். நாங்கள் அப்போது அந்த அறிவுரையைக் கேட்கவில்லை. 

ஒரு பணி நிமித்தமாக நான் பயின்ற கல்லூரிக்குச் சென்றிருந்தேன். இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது அங்கே ஒரு கட்டுமானப் பணி நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அங்கே சென்றேன். பணி மேலாளர் ஓர் இளைஞர். சேலம் பகுதியைச் சேர்ந்தவர். சில ஆண்டுகள் முன்பு கட்டுமானப் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார். கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 16,000 சதுர அடி என்று சொன்னார். தரைத்தளம் ‘’ரூஃப் கான்கிரீட்’’ போடப்பட்டு முதல் தளம் ‘’ரூஃப் கான்கிரீட்டுக்கு தயாராகிக் கொண்டிருந்தது. தரைத்தளத்தில் கட்டுவேலை இன்னும் துவங்கவில்லையா எனக் கேட்டேன். பதில் சொன்னார். பணியாளர்கள் பெரும்பாலும் மேற்கு வங்காளத்தில் இருந்து வந்திருக்கின்றனர் என்றும் கம்பி வேலை செய்பவர்கள் மட்டுமே இங்கே உள்ளவர்கள் என்றும் சொன்னார். தமிழகப் பணியாளர்கள் குடிக்கு அடிமையானவர்கள் என்பதால் அவர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை என்றும் சொன்னார். பணிகள் மிகத் தரமாக செய்யப்படுவது கட்டுமானப் பொறியாளனான எனது கண்களுக்குத் தெரிந்தது. 

25 ஆண்டுகள் முன் பேராசிரியர் சொன்ன அறிவுரையை தற்போது செயலாக்கியிருப்பது நல்ல விஷயமே என எண்ணினேன். It is better late than never. 

காலமாற்றத்தின் ஒரு காட்சி

தமிழகத்தின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் ஒன்றை எனது பயணத்தில் கடந்து செல்ல நேரிட்டது. ஆங்கிலேயர் காலத்தில் உருவான இந்தியப் பல்கலைக்கழகங்கள் பிரும்மாண்டமான பிரிட்டிஷ் பாணி கட்டிடங்கள். ஐரோப்பா கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் அவர்களின் பண்பாட்டு அடையாளமாகக் கண்டது ; காலனிய அரசுகள் பல்கலை.களை தங்கள் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்தும் இடங்களாகவும் கண்டன. இந்தியாவில் பிரிட்டிஷார் எழுப்பிய பல்கலை.ளை விட சுதேச சமஸ்தானங்களும் காந்திய இயக்கத்தவரும் துவங்கிய பல்கலை. எண்ணிக்கையில் மிகுதி.  பல்கலை.யைக் கடக்கையில் இந்த நினைவுகள் எழுந்து கொண்டேயிருந்தன. 

அப்போது எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழகத்தில் எழுத்தறிவு சதவீதம் 10 ஆக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பின் மெல்ல எழுத்தறிவு அதிகமானது. 1960களை ஒட்டி நிறைய பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலை.களும் உருவாயின.’’தரக்கல்வி’’ (quality education) என்பது இல்லாமலாகி ‘’திரள்கல்வி’’ (mass education) என்பது நிலைபெற்றது. இன்று தமிழகத்தின் கடைசி கிராமத்துக்கும் பொறியியல் கல்வி சென்று சேர்ந்திருக்கிறது. அது பல நன்மைகளையும் பலருக்கும் உருவாக்கியிருக்கிறது. 

இந்திய மரபில் கல்வி என்பது அர்ப்பணிப்புடன் பிறிதொன்று இன்றி முழுமையாக ஈடுபடும் செயல். அவ்விதமாக தன்னை ஈடுபடுத்திக் கொள்பவனே மாணவன். ‘’திரள் கல்வி’’யில் அதற்கான இடம் இல்லை. தமிழகத்தில் ‘’தரக்கல்வி’’ பயில்வதற்கு இடம் இல்லை என்பதே யதார்த்தம். 

நான் கடந்து சென்ற பல்கலை.யில் அலரங்கார வளைவு ஒன்றின் முகப்பில் ‘’கவிதை இசை நாட்டியம் சிற்பம் கலைகோபுரம்’’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஐந்தும் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இம்மண்ணில் கல்வியாக இருந்தன ; 2000 ஆண்டுகளுக்கு முன்னும் 1000 ஆண்டுகளுக்கு முன்னும் 500 ஆண்டுகளுக்கு முன்னும் இவை கல்வியாக இருந்தன. இன்று இவற்றை கற்க வேண்டிய முறைப்படி கற்பதற்கான சூழல் தமிழகத்தின் ‘’திரள்கல்வி’’ சூழலில் இல்லை என எண்ணினேன்.   

Wednesday, 13 May 2026

நற்செயலும் எதிர்பார்ப்பும்




தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 4765 அரசு சாராயக் கடைகள் இருக்கின்றன. அவற்றில் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருக்கும் 717 சாராயக் கடைகளை மூட  தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது தமிழக மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் செயல். இந்த முடிவு வரவேற்கத்தக்கது.  

இன்று தமிழக மக்கள் தொகை 7 கோடி எனில் அதில் தோராயமாக ஆண்கள் 3.5 கோடி பேர் இருக்கக்கூடும். அதில் 18 வயதுக்கு மேலே இருப்பவர்கள் 2.57 கோடி பேர் இருப்பார்கள். அதில் 90 சதவீதம் தோராயமாக 2.32 கோடி பேர் சாராயம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். திராவிடக் கட்சிகள் கடந்த 20 ஆண்டுகளாக சாராயத்தை ரேஷன் கடை வினியோகம் போல ஒவ்வொரு பகுதிக்கும் சென்று சேர்த்திருக்கிறார்கள். சாராயம் குடிக்கும் இந்த 2.32 கோடி பேரும் கூட இத்தனை சாராயக் கடைகளை விரும்புவதில்லை. கடைகள் குறைவாக இருந்தால் தாங்கள் சாராயம் குடிக்கும் அளவு குறையும் ; சாராயம் குடிக்கும் நாட்களும் குறையும் என்றே விரும்புகிறார்கள். 

தமிழகத்தில் உள்ள சாராயக் கடைகள் 4765ல் 717 சாராயக் கடைகள் என்பது 6.6 சதவீத அளவே ஆகும். 

இன்னும் 4048 கடைகள் தொடர்ந்து இயங்க உள்ளன.

மதுவிலக்கு என்பது ஒரு லட்சியவாத நிலை. இந்தியாவில் இன்றும் பீகாரிலும் குஜராத்திலும் மதுவிலக்கு அமலில் இருக்கிறது. தமிழக ஆண்கள் 2.32 கோடி பேர் சாராயத்துக்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் உடனடியாக இங்கே மதுவிலக்கு கொண்டு வர இயலாது என்றாலும் மாவட்டத்துக்கு ஒரு சாராயக் கடை என்ற அளவில் தமிழகத்தில் 38 சாராயக் கடை மட்டுமே இயங்கும் விதமாக உத்தரவிட வேண்டும். அந்த 38 சாராயக் கடைகளிலும் அரசு சாராயம் விற்கக் கூடாது. 

சாராயம் அதனைக் குடிப்பவர்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சனை என்பதாக மட்டுமே தமிழ்நாடு அரசு பார்க்க வேண்டும். சாராய வருவாயில் தான் அரசு நிகழ்கிறது என்பதால் அந்த சாராய வருவாயை அரசு எதிர்நோக்குகிறது என்றால் கடந்த 20 ஆண்டு ஆட்சிகளின் மனோபாவத்துக்கும் புதிய ஆட்சியின் மனோபாவத்துக்கும் வேறுபாடு இல்லை என்றாகி விடும்.