Sunday, 24 May 2026

கலியபெருமாள் திருவடியில்

 

பல வருடங்களாக அரியலூர் கலியபெருமாள் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தேன். எங்கள் பிராந்தியத்தில் பலர் அந்தக் கோயிலுக்கு அவ்வப்போது செல்லும் வழக்கம் கொண்டவர்கள். எங்கள் பகுதியில் பலருக்கு கலியபெருமாள் என்னும் பெயர் இருக்கும். அரியலூரில் இருக்கும் பெருமாளின் பெயரையே நாமமாக இட்டிருப்பார்கள். வைணவம் குறித்த பேச்சு எழும் போதெல்லாம் கலியபெருமாள் கோவில் குறித்து யாரேனும் சொல்வது வழக்கம். அரியலூர் செல்ல வேண்டும் என்றால் மணல்மேடு காட்டுமன்னார்குடி மீன்சுருட்டி ஜெயங்கொண்டம் மார்க்கமாக செல்ல வேண்டும். இருப்பதில் சுருக்கமான மார்க்கம் அதுவே. ஜெயங்கொண்டத்திலிருந்து விளாங்குடி கைகாட்டி சென்று அங்கிருந்து அரியலூர் செல்ல வேண்டும். ஊரிலிருந்து காவிரிக்கரையோரமாக திருவையாறு வந்து அங்கிருந்தும் அரியலூர் செல்லலாம். கும்பகோணத்திலிருந்தும் ஒரு மார்க்கம் உண்டு. பல மார்க்கங்கள் இருப்பினும் பயணம் நிகழாமல் இருந்தது. இன்று காலை எழுந்ததுமே கலியபெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்னும் எண்ணம் உருவானது. கன்னட எழுத்தாளர் சிவபிரகாஷ் எழுதிய குரு : பழம்பெரும் ஞானத்துக்கான பத்து வாயில்கள் நூல் குறித்து காலையில் எழுதிக் கொண்டிருந்தேன். எழுதி முடிக்க 9.30 மணி ஆயிற்று. காலை உணவருந்தி விட்டு புறப்படுகையில் நேரம் காலை 10 மணி. கோடை அதன் உக்கிரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பருவம் என்றாலும் புறப்பாட்டுக்கு மிக உகந்த காலம் இதுவே. சில நாட்களுக்கு முன் எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்தேன். அவர் சற்று உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தற்போது மகள் வீட்டில் ஓய்வெடுப்பதாகவும் கூறியிருந்தார். அவர் மிகவும் இனிய மனிதர். அமைதியும் பொறுமையும் தன் இயல்பாகக் கொண்டவர். எப்போதும் தன்னால் இயன்ற உதவிகளை பிறருக்குச் செய்பவர். மிகக் குறைவாகப் பேசுபவர். எந்த சூழ்நிலையையும் மிக நுணுக்கமாகப் புரிந்து கொள்பவர். அவர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தது எனக்கு வருத்தத்தை அளித்தது. அவரது மகள் வீடு ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கழுவன் தொண்டி என்னும் கிராமம். அரியலூர் பயண மார்க்கத்திலிருந்து சிறிய தூரத்தில் இருக்கிறது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அரியலூர் செல்லும் வழியில் முதலில் அங்கு சென்றேன். எங்கள் பிராந்தியத்தில் ஒருவர் உடல்நலம் குன்றியிருந்தால் அவருக்கு ‘’ஹார்லிக்ஸ்’’ பாட்டில் வழங்குவது வழக்கம். வழக்கம் என்று சொல்கிறேனே தவிர என்னைத் தவிர வேறு யாரும் இதனைப் பின்பற்றி நான் பார்த்ததில்லை. 1990களில் ஹார்லிக்ஸ் ஒரு முக்கியமான பானம். எங்கள் பகுதி ஹோட்டல்களில் தேனீர் , காஃபியுடன் ஹார்லிக்ஸ்-ம் இருக்கும். பரீட்சைக்குப் படிக்கும் குழந்தைகளுக்கு வென்னீரில் ஹார்லிக்ஸ் கலக்கிக் கொடுப்பார்கள். வீட்டில் முதியவர்கள் இருந்தால் அவர்களைச் சந்திக்கும் போது ‘’ஹார்லிக்ஸ்’’ பாட்டில் கொடுப்பார்கள். யாரோ ஒருவர் உடல்நலம் குன்றியிருந்த யாரையோ சந்திக்கும் போது ஹார்லிக்ஸ் பாட்டில் கொடுத்திருக்கிறார்கள். அப்போது நான் உடன் இருந்திருக்கிறேன். எனக்கு அது பிடித்திருந்தது. எனக்கு ஹார்லிக்ஸ் சுவை பிடிக்கும். ஆனால் வீட்டில் அதை வாடிக்கையாக வாங்கும் வழக்கம் இல்லை. கொல்லாபுரத்தில் ஹார்லிக்ஸ் வாங்கிக் கொண்டேன் ; நண்பருக்கு அளிக்க. ஒரு பாட்டில் கொண்டு வந்தார்கள். நண்பரின் வயது 67. அவருக்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு உண்டு. எனவே ‘’ஹார்லிக்ஸ் லைட்’’ தருமாறு சொன்னேன். தற்போது விலை ரூ.300. 1990களில் ரூ.86க்கு ஹார்லிக்ஸ் வாங்கியது என் நினைவுக்கு வந்தது. இவ்விதமான ஒப்பிடல்கள் மத்திய வயதுக்கு வந்து விட்டோம் என்பதற்கான அறிகுறிகள். நண்பரின் வீட்டைக் கண்டறிந்து போய் விட்டேன். அவர்கள் வீட்டில் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுமாறும் மருத்துவ செலவுகளுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேட்குமாறும் என்னால் முடிந்ததைச் செய்கிறேன் எனக் கூறினேன். நண்பர் வீட்டில் மோர் தந்தார்கள். அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்திருந்தார்கள். புதுமையான ‘’லஸ்ஸி’’ என நினைத்துக் கொண்டேன். மதிய உணவருந்தி விட்டு செல்லுமாறு வற்புறுத்தினார்கள். அப்போது நேரம் 12.30 . நான் அரியலூர் செல்ல மேலும் ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் அவர்களிடம் இன்னொரு நாள் உணவருந்த வருகிறேன் எனக் கூறி விட்டு புறப்பட்டேன். 

நடு நாடு எனக் கூறப்படும் அப்பிராந்தியத்தின் நிலக்காட்சிகள் என்னை எப்போதும் பெரிய அளவில் ஈர்க்கும். ஒவ்வொரு முறை அந்நிலத்தில் பயணிக்கையில் இங்கே 10 ஏக்கர் அல்லது 20 ஏக்கர் நிலம் வாங்கிக் கொண்டு வந்து இந்தப் பிராந்தியத்தில் வாழலாம் எனத் தோன்றும். காவிரிப் பிராந்தியம் முழுக்கவே நெல் வயல்கள். நடுநாட்டில் பலவிதமான பயிர்கள் பயிரிடுவார்கள். மரப்பயிர் அதிகம் இருக்கும் என்பதால் நிலக்காட்சி இனிமையாக இருக்கும். 

மதியம் 1.50 அளவில் கலியபெருமாள் கோயில் சென்று சேர்ந்தேன். அக்கோயில் அமைந்திருக்கும் ஊரின் பெயர் கல்லங்குறிச்சி. அரியலூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. கோயிலைச் சுற்றி கணிசமான ஆலமரங்களும் அரசமரங்களும் இருந்தன. ஒரு ஆலமரத்தின் விழுது மண்ணைத் தொட்டு அது வேர் போல ஆகி அதிலிருந்து மேலும் விரிவாகியிருந்தது. விழுதாகவும் வேராகவும் இருந்த அதன் மீது படுத்துக் கொண்டேன். என் முழு உடலுக்கும் இடம் கொடுக்கும் அளவு அந்த விழுது நீண்டிருந்தது. எஞ்சியிருக்கும் வாழ்நாள் முழுக்க தினம் ஒரு ஊரில் தினம் இதைப் போல ஒரு மரத்தின் வேரில் உறங்கிச் செல்லும் வாழ்க்கை அமைந்தால் அதை விட வேறு ஆசி உண்டா என நினைத்தேன். சில மணி நேரம் முன்பு தான் நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்ததையும் இப்போது இவ்விதம் தொன்றுவதையும் எண்ணிப் பார்த்தேன். இரண்டும் ஒன்று தான். இயற்கையிடம் என்னை ஒப்படைத்து விடுதலே இரண்டும். ஒரு மரத்தின் அடியில் படுத்துறங்கும் போது அந்த மரத்துடன் அந்த மண்ணுடன் அந்த மரம் தொட்டுக் கொண்டிருக்கும் விண்ணுடன் எனக்கு ஒரு உணர்வுபூர்வமான பிணைப்பு உண்டாகிவிடுகிறது. அது மகத்தானது. மாலை 3 மணிக்கு அங்கே மூன்று மணி ஒலித்தது. அது கோயில் திறக்கப்படுவதன் ஒலி. ஆலயத்தினுள் சென்றேன். சிறிய ஆலயம் எனினும் மிகவும் சக்தி மிக்கது என்பதை உணர முடிந்தது. 

250 ஆண்டுகளுக்கு முன் சிதளங்குடி என்னும் ஊரில் கோபால படையாச்சி என்பவர் தம் குடிகளுடனும் குடும்பத்துடனும் வாழ்ந்து வந்தார். பெருவிவசாயியான கோபால படையாச்சி மிக அதிக எண்ணிக்கையில் பசுமாடுகளைப் பராமரித்து வந்தார். ஒருநாள் மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய அவரது மாடுகளில் சினையுற்றிருந்த ஒரு பசுமாட்டைக் காணவில்லை. பல திசைகளிலும் தேடிப் பார்த்தும் அந்த மாடு கிடைக்கவில்லை. துயரத்துடன் உறங்கிக் கொண்டிருந்த போது அவர் கனவில் ஒரு பெரியவர் தோன்றி அவரது மாடு இருக்கும் இடத்தைக் காட்டினார். காலை விடிந்ததும் தன் குடும்பத்தினரையும் குடிபடைகளையும் அழைத்துக் கொண்டு கனவில் வந்த பெரியவர் சொன்ன இடத்துக்குச் சென்ற போது மாடு அங்கே இருந்திருக்கிறது. மாட்டுக்கு அருகே ஒரு கம்பம் இருந்திருக்கிறது. அந்தக் கம்பத்தை வணங்கி விட்டு மாட்டை வீட்டுக்கு அழைத்து வந்தனர். அன்று இரவு உறக்கத்தில் கோபால படையாச்சி கனவில் மீண்டும் வந்த பெரியவர் தான் யார் என்பதை உன்னால் உணர முடியவில்லையா எனக் கேட்டு தானே பெருமாள் என்பதைக் கூறியிருக்கிறார். மறுநாள் அங்கே சென்று அந்த கம்பத்தைக் கல்லங்குறிச்சிக்கு கொண்டு வந்து பெருமாள் எழுந்தருளியிருக்கும் கம்பத்தை ஆலயம் எழுப்பி வழிபடத் தொடங்கினார் கோபால படையாச்சி. 250 ஆண்டுகளாக கோபால படையாச்சியின் சந்ததிகள் அந்த ஆலய அறங்காவலர்களாக இருந்து பராமரிக்கின்றனர். மூலவர் கம்பமாக நின்றிருக்க உற்சவர் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூமாதேவியுடன் அருள் பாலிக்கிறார். 

திருப்பாவையைக் கல்வெட்டாக 1950ம் ஆண்டு எழிலுற வடித்திருந்தார்கள். திருப்பாவை மொத்த 30 பாடல்களையும் 240 வரிகளாக பாராயணம் செய்தால் அந்த 240 வரிகளும் ஒரு மந்திரம் ஆகும் என எண்ணினேன். தமிழில் அதைப் போல பல மந்திரங்களைக் கண்டடைய முடியும். மந்திரம் என்பது ஒலியே. அது மொழியின் எல்லைகளுக்கு அப்பால் இருப்பது. 

அங்கேயே இருக்க வேண்டும் என விரும்பினேன் ; ஆயினும் இன்னும் 100 கி.மீ க்கு மேல் பயணித்தால் மட்டுமே வீடடைய முடியும். நேரம் அப்போது மாலை 4.30. நேராக கோயிலுக்கு வந்து மரத்தடியில் படுத்து உறங்கி விட்டதால் மதிய உணவு அருந்தவில்லை. மாலை 5 மணி அளவில் அரியலூர் சென்று ஒரு உணவ்கத்தில் உணவருந்தி விட்டு ஊருக்குப் புறப்பட்டேன். 

கோபால படையாச்சி வாழ்ந்த ஊரின் பெயர் கோபாலன் குடிகாடு. அது மருவி ‘’கோப்பிலன்குடிகாடு’’ என்றாகி விட்டது. அந்த ஊருக்கு கோபாலன் குடிகாடு எனப் பெயரிடுவது கோபால படையாச்சிக்கு சமூகம் செய்யும் மரியாதையாக இருக்கும் என எண்ணினேன். மாநில வருவாய்த்துறை அமைச்சருக்கு இந்த விஷயம் குறித்து ஒரு மனு அனுப்ப வேண்டும் என எண்ணினேன். 

நாள் முழுக்க பெருமாள் கோயிலில் இருந்ததால் நாங்கூர் திவ்யதேசங்கள் அனைத்தையும் இணைக்கும் விதமாக ‘’நாங்கூர் பரிக்ரமா’’ ஒன்றை ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கோரி ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு ஒரு மனு அனுப்ப வேண்டும் என எண்ணினேன். 

அந்திப் பொழுதில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். அரியலூர் அருகே நெடுஞ்சாலை அருகே இருந்த வீடொன்றின் முன் வாகனத்தை நிறுத்தினேன். குடிக்கத் தண்ணீர் வேண்டும் எனக் கேட்டேன். வாசலில் அந்த வீடு பக்கத்து வீடு என பல குழந்தைகள் இருந்தன. அனைத்துக் குழந்தைகளும் 7 வயதிலிருந்து 9 வயது வரை ஆனவை. ‘’உங்களுக்கெல்லாம் எப்போ ஸ்கூல் ரீ ஓபனிங்’’ எனக் கேட்டேன். அனைத்தும் கோரஸாக ஜூன் 1 என்றன. அரசாங்கம் வெயில் அதிகமாக இருப்பதால் ஜூன் 5ம் தேதி தான் ஸ்கூல் திறக்கப் போறாங்கன்னு நியூஸ்ல சொன்னாங்க; நீங்க கேக்கலயா? என்றேன். குழந்தைகள் உற்சாகமாகி மகிழ்ச்சிக் கூச்சலிட்டன. அதற்குள் ஒரு சிறுவன் ஜூன் 5ம் தேதி என்ன நாள் எனப் பார்த்து அன்று வெள்ளிக்கிழமை என்றான். ஸ்கூல் ஆரம்பிச்ச அடுத்த ரெண்டு நாள் லீவு என குழந்தைகள் ஆர்ப்பரித்தன. ஒரு சிறுவன் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். முழுதும் குடித்து விட்டு மேலும் வேண்டும் எனக் கேட்டேன். கொண்டு வந்தான். அதையும் முழுக்கக் குடித்தேன். தாகம் அவ்வளவு இருந்தது. 

பயணிக்கத் தொடங்கினேன். அப்போது என் மனதில் ஒரு காட்சி பளிச்சிட்டது. அதாவது கிழக்கே சிதம்பரம் மேற்கே திருச்சிராப்பள்ளி. சிதம்பரத்துக்கு நேர் வடக்கே சென்னை. திருச்சிக்கு நேர் வடக்கே வேலூர். இந்த நான்கு ஊர்களுக்கும் நடுவே இருக்கும் பெரும் பரப்பை மிகப் பெரிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்னும் எண்ணம் சோழர்களுக்கு இருந்திருக்கிறது. அதன் துவக்கம் ராஜேந்திர சோழன். பழைய தென்னாற்காடு திருச்சி செங்கல்பட்டு வடார்க்காடு மாவட்டங்களாகும் அவை. இந்த பரப்பில் விவசாயத்தை குளங்கள் மூலமும் ஏரிகள் மூலம் செழிக்கச் செய்ய வேண்டும் என்னும் பெரும் கனவு ராஜேந்திர சோழனுக்கு இருந்திருக்கிறது. இவை அனைத்துமே மனித உழைப்பால் உருவாக வேண்டியது. மனித உழைப்பை மிக அதிக அளவில் ஒருங்கிணைத்து அடைய வேண்டியது. நதிக்கரைகளையே மனிதர்கள் தன்னியல்பில் விரும்புகின்றனர். சாமானிய குடிகளால் கடும் உழைப்பை அளித்து நிர்மாணிக்கும் விஷயங்கள் மீது பேரார்வம் கொள்ள முடியவில்லை. இந்த மனப்பதிவை உறுதிப்படுத்தும் சிந்தனைகளே மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டிருந்தன. முக்கியமான ஒன்றை என் அகம் தொட்டுணர்ந்திருக்கிறது என எண்ணிக் கொண்டேன். பயணம் எனக்களிக்கும் கொடைகளில் இதுவும் ஒன்று. 

விடுதலையின் பற்பல வாசல்கள்


நூல் : குரு: பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள் ஆசிரியர் : ஹெச்.எஸ். சிவபிரகாஷ் தமிழில் : ஆனந்த் ஸ்ரீநிவாசன் பக்கம் : 112 விலை : ரூ.130 பதிப்பகம் : நற்றிணை பதிப்பகம், 45, சாய் கவின்ஸ் குமரன் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ரீதேவி கருமாரியம்மன் நகர், கிருஷ்ணா நகர் பிரதான சாலை, நூம்பல், ஐயப்பன் தாங்கல், சென்னை -77.     

பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளாக அகவிடுதலை அடைந்த ஆயிரக்கணக்கான யோகிகளின் ஞானிகளின் நாடு. இன்றும் இந்த நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவருவனும் ஒரு பகலில் நடந்து செல்லக்கூடிய பொழுதில் அல்லது ஒரு பகலின் பாதி பொழுதில் நடந்து செல்லக்கூடிய தொலைவில் யோகிகளும் ஞானிகளும் வாழ்ந்த மண் இருந்து கொண்டு இருக்கிறது. இன்றும் இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்குமே யாவற்றையும் துறந்து சென்று விட்டு விடுதலையாகி நிற்கும் நிலை மீது ஒரு ஈர்ப்பு இருக்கவே செய்கிறது. இந்த மண்ணில் அறிவர் ஆவது குறித்து எண்ணாதவர் குறைவு. 

புடவி கோடானுகோடி உயிர்களால் ஆனது. அந்த உயிர்கள் பிரும்மம் அவற்றுக்களித்திருக்கும் எல்லைக்குள் வாழ்கின்றன. மனிதப் பிறவிக்கு  எல்லைகளை அளித்த பிரும்மம் அந்த எல்லைகளை மீறிச் சென்று பிரும்மமாகவே ஆகும் சாத்தியத்தையும் அளித்தது. கோடானுகோடி மனிதர்களில் ஒருவரே ஒரு நூற்றாண்டுக்கு ஒருவரே மனிதன் பிரும்மமாக ஆகும் சாத்தியத்தை அடைகின்றனர். அவர்களின் வாழ்வும் இருப்பும் மனிதர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்து வழிகாட்டுகிறது. கிருஷ்ணன், புத்தர், மகாவீரர், சங்கரர், ராமானுஜர், ராமகிருஷ்ணர், ரமணர், நாராயண குரு... என அந்நிரை பெரியது. அந்நிரையில் அந்த பெரும் ஆசிரியர்களின் மாணாக்கர்களாய் அமைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் பெரியது. 

மானுடன் சிந்திக்கத் தொடங்கிய நாள் முதல் ஆன்ம உணர்வு மானுட குலத்துடன் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது அல்லது சிந்தித்த முதல் மனிதன் அடைந்த பேருணர்வாக ஆன்ம உணர்வு இருந்திருக்கக் கூடும். மானுடன் சமூகமாக உருவாகி அதன் நற்பயன்களை அடையத் தொடங்கினான். மானுடன் எவராயினும் அவர்தம் வாழ்நாள் ஒருநாள் முடிவுக்கு வருவதைக் கண்டான். இறைவர்கள் இறங்கி அருளும் பூசகனும் ஒருநாள் மரணிப்பதை சமூகங்களைக் கட்டியாளும் மன்னர்களும் ஒருநாள் மரணிப்பதை மனிதன் காண்கிறான். அந்த மரணம் உணர்த்தும் நிலையாமையை கண் கொண்டு எதிர்கொள்ள எல்லா மானுடருக்கும் திறனில்லை. மனிதனை அச்சுறுத்தும் ஒன்றாகவே மரணம் எப்போதும் அவனுக்கு இருந்தது. மரணத்தைப் புரிந்து கொள்ள மரணத்தை எதிர் கொள்ள மனிதர்கள் பொருளைச் சேகரிக்கத் தொடங்கினர் ; உறவுகளை மேலும் மேலும் என அதிகமாக்கிக் கொண்டனர். பிறர் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை அதிகரிக்கத் தொடங்கினர். இவை அனைத்தும் எதிர் திசைப் பயணங்கள். மானுடர் இதனை யுகம் யுகமாக நூற்றாண்டுகளாக இதனை மேற்கொண்டவாறே இருக்கின்றனர். செல்ல வேண்டிய திசைக்கு அடைய வேண்டிய திசைக்கு நேர் எதிர் திசையில் மேற்கொள்ளும் இப்பயணங்கள் அளிக்கும் துயரை வாழ்நாள் முழுக்க சுமக்கின்றனர் மானுடர். 

இருபத்து ஓராம் நூற்றாண்டில் வாழும் மனிதனுக்கு மானுட குலத்தின் எந்த நூற்றாண்டில் வாழ்ந்த மனிதனை விடவும் புறவயமான வசதிகள் அதிகம் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. மானுட சமூகத்தின் கணிசமான நாடுகளில் உணவுப் பற்றாக்குறை இல்லாமல் ஆகியிருக்கிறது. சென்ற நூற்றாண்டுகளில் முழுவதும் மன்னராட்சிக்கு உட்பட்டிருந்த மானுட சமூகங்கள் இன்று உலக மக்கள்தொகையில் 40 சதவீதம் அளவுக்கு ஜனநாயகத்துக்கு வந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் உலகம் கண்ட இரண்டு பெரும்போர்கள் அளவுக்கு இன்று இல்லை என்றாலும் உலகில் எங்கேனும் ஒரு பகுதியில் போர் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.மனிதர்களின் நுகர்வு ஏதோ ஒருவகையில் உலகின் ஒவ்வொரு மனிதனையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கிறது. இன்றைய மனிதன் ஆளாகும் அக அழுத்தம் அளவுக்கு என்றுமே மனித குலம் அக அழுத்தங்களுக்கு ஆளானது இல்லை. இன்றைய மனிதனுக்கு ஆன்மீகம் சாத்தியமா என்னும் கேள்வி இல்லாத மனிதர்களே இல்லை. 

உலகின் எந்த காலகட்டதையும் விட இந்த காலகட்டத்தில் ஆன்மீகம் மனிதனுக்கு விடுதலை அளிக்கும் சாத்தியம் மிக அதிகம். ஆன்மீகம் மனிதனுக்கு அளிக்கும் விடுதலை என்னும் சாத்தியம் மாறிலியாகவே இருக்கிறது. அப்பாதையைத் தேர்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவோ கூடுதலாகவோ இருந்திருக்கிறதே தவிர ஆன்மீகம் மாற்றம் அடையாமல் இருக்கிறது. மனிதர்கள் அணுகும் விதங்கள் கூடியிருக்கின்றன. 

இருபத்து ஓராம் நூற்றாண்டில் மனிதனுக்கு உணவுப் பற்றாக்குறை தீர்ந்துள்ளது. வெவ்வேறு விதமான உபகரணங்கள் அவனது உடல் உழைப்பைக் குறைத்துள்ளன. அவன் ஈட்டும் செல்வம் எண்மங்களாக சேமிக்கப்படுகின்றன. ஆயினும் மனிதனைப் பயமும் பதட்டமும் சூழ்ந்துள்ளது. அவன் மனதை நுகர்வு வியாபித்திருக்கிறது. அது அளிக்கும் அழுத்தத்தை அவனால் தாங்க முடியவில்லை. அவனது சக மனிதர்களுக்கும் அதே நிலை. இன்றைய நிலையில் 3000 ஆண்டு கால பழமை வாய்ந்த ஆன்மீக மரபுகளால் அவனுக்கு என்ன அளிக்க முடியும் என்பது இக்காலகட்டத்தின் பெரும் கேள்விகளில் ஒன்று. கன்னட எழுத்தாளர் ஹெச். எஸ். சிவபிரகாஷ் எழுதியிருக்கும் ‘’குரு : பழம்பெரும் ஞானத்துக்கான பத்து வாயில்கள்’’ என்னும் நூல் இக்கேள்விக்கான பதில்களை மானுடம் முன் வைக்கிறது. 

அஷ்டாங்க யோகம் யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, திருஷ்டி, சமாதி என யோக வழிமுறையின் எட்டு அங்கங்களை எடுத்துரைக்கிறது. யமம் என்பது யோக சாதகன் கொண்டிருக்க வேண்டிய இயல்பான அகநிலையைக் குறிப்பது. நியமம் என்பது அவன் மேற்கொள்ள வேண்டிய அகஒழுங்கைக் குறிப்பது. உடலை யோக சாதனத்துக்கான உபகரணமாக ஆக்கிக் கொள்வதைக் குறிப்பது ஆசனங்கள். இயல்பான அகநிலையும் அகஒழுங்கும் யோகம் கோரும் குறைந்தபட்ச உடல்வலிமையும் கொண்டவர்கள் தங்கள் மூச்சின் மீது ஏற்படுத்திக் கொள்ளும் ஆளுகை குறித்துப் பேசுவது பிராணாயாமம். இருபத்து ஓராம் நூற்றாண்டின் மனிதன் தற்போது இருபதாம் நூற்றாண்டு வரை மானுடர்கள் கொண்டிருந்த சராசரி சாமானிய உடல் உழைப்பு கூட இல்லாமல் இருக்கிறான். அவன் நடந்து செல்ல வேண்டிய அவசியம் மிக மிகக் குறைந்து விட்டது. நூறு அடி தூரத்தைக் கூட பெட்ரோல் வாகனம் மூலம் கடக்கிறான். எப்போதும் கணினி முன்னும் அலைபேசி முன்னும் அமர்ந்தேயிருக்கிறான். அவன் அகத்தை நுகர்வும் வேட்கையும் பூசல்களும் வியாபித்திருக்கின்றன. இத்தகைய இயல்பு கொண்ட ஒருவன் ‘’யமம்’’ என்னும் நிலையை முழுதாக எய்தவே முழு வாழ்நாளும் தேவைப்படும். அவ்வாறெனில் இன்றைய மனிதன் ஆன்மீகப் பாதையில் அதன் உப பாதைகளில் ஒன்றான யோகப் பாதையில் செல்வது எங்கனம் என்னும் கேள்வி எல்லார் மனத்திலும் இருக்கும் கேள்வியாகும். இந்தக் கேள்விக்கான பதிலை ஆன்மீகப் பாதையின் வேறொரு சிறு சாத்தியம் ஒன்றை கன்னட எழுத்தாளர் சிவப்பிரகாஷ் ‘’குரு : பழம்பெரும் ஞானத்தின் பத்து வாயில்கள் ‘’ நூலில் சுட்டிக்காட்டுகிறார். 

நவீன மனிதனுக்கு ஞானத்தை பத்து தனி வாயில்கள் கொண்ட பிரதேசமாக உருவகித்துக் கூறுகிறார். இந்த வாயில்கள் தனித்தனி அல்ல என்பதைத் தெரிவித்தாலும் அவற்றைத் தனித்தனி வாயில்களாகக் கூட சாதகன் அணுக முடியும் என்பதைக் காட்டுகிறார். 

குரு என்பது ஒரு வாயில். சீடன் அல்லது சாதகன் தன்னை எந்த அளவு திறந்து வைத்திருக்கிறான் என்பதே அவன் குருவை அடைவதற்கான அளவுகோல். மனித வடிவில் குருவைக் கண்டவர்கள் உண்டு ; அடைந்தவர்கள் உண்டு. இயற்கையின் வடிவில் குருவைக் கண்டவர்கள் உண்டு. மந்திர ரூபமாகவும் குருவைக் காண முடியும் ; அடைய முடியும். இவை சாத்தியக்கூறுகள். இந்த சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்னும் காரணத்துக்காகவே குருவைத் தேட எண்ணும் ஒவ்வொருவரும் குருவை அடைந்து விடுவர் என்னும் நிபந்தனை இல்லை. மனிதன் ஒருவன் சீடன் ஒருவன் குருவுக்கான தேடலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்பதற்கான சாத்தியங்களே  அவை. மனிதனின் சீடனின் தேடலின் தீவிரம் எவ்வளவு தீவிரமாக இருக்கிறதோ அதைப் பொறுத்து அவன் குருவைக் கண்டடைவான் ; மந்திர ரூபமாகவோ - இயற்கையாகவோ - மானுட வடிவிலோ. சிவபிரகாஷின் நூல் இந்த சாத்தியத்தைக் காட்டுகிறது. 

மந்திரம் என்னும் இரண்டாம் வாயிலைக் காட்டுகிறார் சிவபிரகாஷ். இயற்கையை நாமரூபங்களாகவே நம் மனம் அறிகிறது. ரூபங்களாலும் நாமங்களாலும் ஆனது நம் மனம். நம் மனதின் ஆழங்களை உயரங்களை முற்றறிய நமக்குத் துணை புரிவது மந்திரம். மந்திரம் குருவாக மாறி மனிதனுக்கு துணை நிற்பதுண்டு ; விடுதலை அளிப்பதுண்டு என்னும் சாத்தியத்தை சிவபிரகாஷ் கூறுகிறார். எந்த மந்திரம் விடுதலை அளிக்கும் மந்திரம் என்பது மனிதனுக்கு உடனே எழும் கேள்வி. அது மந்திரத்தைப் பொறுத்ததல்ல - மனிதனைப் பொறுத்தது என்பதே அக்கேள்விக்கான பதில். 

நமது தொன்ம மரபு முப்பத்து முக்கோடி தெய்வங்கள் இருக்கின்றன என்கிறது. இனியும் கூட புதிய தெய்வங்கள் பிறந்து வரக்கூடும். ஒவ்வொரு மனிதனும் கூட தனக்கான தெய்வத்தை உண்டாக்கிக் கொள்ள முடியும். தான் உருவாக்கும் தெய்வம் ஒரு மாயக்கணத்தில் பிரபஞ்சப் பெருநியதியின் ஒழுங்குடன் ஒத்திசைந்து விடுகிறது. தான் உருவாக்கிய தெய்வத்தின் மூலமே அந்த ஒழுங்கையும் ஒத்திசைவையும் மனிதன் அல்லது சாதகன் தேடும் தேடிக் கண்டடையும் சாத்தியம் குறித்து பேசுகிறது நூலின் தெய்வம் என்னும் வாயில். 

மனித உடல் மூலமாக ஆன்மீக உணர்வை அடைய முடியும். உடலை வலிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் பிரபஞ்சப் பெருநியதியின் ஒழுங்கை உடல் இயக்கம் மூலமே கூட உணர முடியும் என்னும் சாத்தியத்தை உடல் என்னும் வாயில் பேசுகிறது. 

நவீன வாழ்க்கை மனதுக்கு மனதின் சௌகர்யங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இயல்பினை சூடத் தொடங்கி விட்டது. உடல் மனத்தை சுமக்கும் அடிமையாகி விட்டது. இருப்பினும் பிராணன் இல்லையென்றால் உடலும் மனமும் தனித்தனியாகி விடும். கோடானுகோடி மனிதருக்கு மரணத்தறுவாயில் மட்டுமே பிராணன் குறித்த பிரக்ஞையே வருகிறது. சில கணங்கள் மட்டுமே நீடித்து ஆயுள் முடிவுக்கு வருகிறது. பிராணன் குறித்த பிரக்ஞையை மனிதன் பிராணனை அவதானிப்பதன் மூலம் அடைய முடியும். அதன் மூலம் ஆன்மீக அறிதலை அடைய முடியும் என்னும் சாத்தியத்தைக் காட்டுகிறது பிராணன் என்னும் வாயில். 

மனிதர்களை அடிமையாக்கும் மனத்தை மனிதனால் அடிமையாக்க முடியும். தன்னை வெல்லுதலே பெரிய இறுதி வெற்றி. மனம் என்னும் வாயில் என்னும் அத்தியாயம் காட்டும் சாத்தியமாகும் இது. காமமும் செயல்களும் படைப்புத்திறனும் கூட வேறு வாயில்கள் என்பதைக் காட்டுகிறார் சிவபிரகாஷ். 

அந்த வாயில்கள் மூடிய வாயில்கள் அல்ல. அவை எப்போதும் திறந்தே இருக்கும் வாயில்கள். எனினும் கோடானுகோடி பேர் அதில் நுழைய உளம் கொண்டாலும் ஓரிருவரே அந்த வாயில்களைக் கடந்து செல்கின்றனர். அது ஏன் என்பது அனைவரும் எழுப்பிக் கொள்ள வேண்டிய கேள்வி. அதற்கான பதில் என்பது அது வாயில்கள் தொடர்பானது அல்ல கடந்து செல்லும் மனிதனைக் குறித்தது என்பதே அதன் பதில்.  

ஒன்று இரண்டு மூன்று என ஒவ்வொரு வாயிலாகக் கடக்க வேண்டும் என்னும் முறைக்கு சிவபிரகாஷ் சிறு தளர்வு அளிக்கும் வழிமுறையைக் காட்டுகிறார். ஐந்து ஏழு மூன்று ஒன்று எனக்கூட சென்று பார்க்க முடியும் என்கிறார். ஊழ் முதல் படியில் கூட யோகியர் பலருக்கும் ஞானியர் பலருக்கும் முக்தியை அளித்திருக்கிறது என்பதை மானுட குலம் பழம்பெரும் ஞானத்தின் அருளையும் ஆசியையும் பெற வேண்டும் என்னும் நோக்கத்தில் தனது நூலாக அளித்திருக்கிறார் சிவபிரகாஷ். 

சிந்திக்கும் இயல்பு கொண்ட கற்பனைத் திறன் கொண்ட மனிதருக்கு ஆன்மீகப் பாதை குறித்த முக்கியமான நூலாகவும் அவர்கள் வாழ்க்கையை உணரும் விதத்தில் அறியும் விதத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்தும் நூலாகவும் இந்நூல் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

Saturday, 23 May 2026

முக்கியத்துவம் பெறும் ஆளுநர்

இந்திய அரசியல் அமைப்பில் மாநில ஆளுநர் பதவிக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது. குடியரசுத் தலைவருக்கும் மத்திய அரசுக்கும் மாநில ஆளுநர் மாநிலத்தில் மாநில அரசு இயங்குமுறை குறித்து அளிக்கும் அறிக்கை என்பது மிகவும் முக்கியமானது. மாநில நடப்புகள் குறித்து ஆளுநரின் மக்கள் மாளிகை தயாரித்து அளிக்கும் அறிக்கைகள் மிக முக்கிய ஆவணங்கள் ஆகும். இந்திய அரசியல் சாசனம் பல விஷயங்களில் குடியரசுத் தலைவருக்கு அளித்திருக்கும் அதிகாரத்தை விடவும் அதிகமாக ஆளுநருக்கு அதிகாரம் அளித்துள்ளது. 

2021லிருந்து 2026 வரை நடைபெற்ற ஆட்சியில் மாநில ஆளுநர் பலவிதங்களில் முறையான மதிப்பு அளிக்கப்படாமல் இருந்தார். ஆளுநரின் பல சாதாரணமான பரிந்துரைகள் கூட ஏற்கப்படாமல் இருந்தன. சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது உரை துவங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஆளுநர் கோரினார். பல கடித போக்குவரத்துக்குப் பின் அது சாத்தியமானது. மகாத்மா காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி கிண்டியில் உள்ள பெரும் வளாகமான காந்தி மண்டபத்தில் அரசு விழாவை நடத்த வேண்டும் என ஆளுநர் கோரினார். அந்த கோரிக்கை ஏற்கப்படவேயில்லை. ஆளுநர் உரை ஒன்றின் போது சட்டசபை சபாநாயகரும் மாநில அரசின் உயர்கல்வி அமைச்சரும் ஆளுநரை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டனர். மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்ட எவருக்கும் இந்நிகழ்வுகள் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தின. 

1996ம் ஆண்டு வரை அரசியல் சாசனத்தின் 356வது பிரிவு இந்திய அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டிருந்தது. ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் பெரும் சீர்கேடுகள் இருப்பதாக மத்திய அரசு எண்ணினாலோ மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருந்தாலோ ஆளுநரின் பரிந்துரைப்படியோ ஆளுநர் பரிந்துரை இல்லாமலோ கூட மத்திய அரசு மாநில அரசை பதவி நீக்கம் செய்ய முடியும். 

1994ம் ஆண்டின் எஸ். ஆர்.பொம்மை வழக்கின் படி, உச்சநீதிமன்றம் அரசியல் சாசனத்தின் 356வது சட்டப் பிரிவின் படி மாநில அரசைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர சில நிபந்தனைகளை விதித்தது. அதாவது, மாநில அரசைக் கலைத்ததை ஒரு தீர்மானமாக மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பாதி உறுப்பினர்கள் ஆதரவுப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். 1996க்குப் பின் பதவியேற்ற பல மத்திய அரசுகளிடம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் என இரண்டிலும் பெரும்பான்மை இல்லை. எனவே அரசியல் சாசனப் பிரிவு 356ன் பயன்பாடு என்பது பல ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போதைய மத்திய அரசுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் என இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை இருக்கும் நிலையில் எந்த மாநில நிர்வாகமும் சீராக இருக்கிறதா என்பதையும் எந்த மாநில சட்டம் ஒழுங்கும் அமைதியாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதையும்  மாநில நிர்வாகத்தில் ஊழல் இல்லாமல் இருக்கிறதா என்பதையும் உன்னிப்பாக கவனிக்கும் தன்மை மேலும் கூடுதலாக மத்திய அரசுக்கு இருக்கிறது ; மாநில ஆளுநருக்கும் இருக்கிறது. 

மத்திய அரசுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பெரும்பான்மை இருக்கும் நிலையில் மாநில ஆளுநரின் பணி என்பதும் மாநில ஆளுநர் மத்திய அரசுக்கு அளிக்கும் அறிக்கைகள் என்பதும் மாநில அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது. இதனைப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். 

Friday, 22 May 2026

ஒரு சாமானிய பிரஜையின் தேவை

சென்ற மாதம் நண்பர் ஒருவர் என்னைத் தனது வாகனத்தின் சீட் கவர் மாற்ற உடன் அழைத்துச் சென்றார். சென்ற இடத்தில் இருந்த பணியாளருக்கு நிலுவையில் பல வாகனங்கள் இருந்தன. எனவே 2 நாட்கள் கழித்து வருமாறு கேட்டுக் கொண்டார். நண்பருக்கு அவசரம். மறுநாளே தேவைப்பட்டது. தனது தேவையை பணியாளரிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தார். நடப்பவற்றை பார்த்துக் கொண்டு இருந்தேன். அதற்குள் நண்பர் பணி புரியும் ஐ டி நிறுவனத்திடமிருந்து அலைபேசி அழைப்பு வந்து விட்டது. தொழில்நுட்ப விபரங்களைத் தெரிவித்த படி நண்பர் அலைபேசி அழைப்புக்குள் மூழ்கி சீட் கவர் கடையிலிருந்து சற்று தள்ளிப் போனார். சிக்னல் மேலும் தெளிவாகக் கிடைக்கும் இடத்துக்கு அவர் சென்றிருக்கலாம். அப்போது இன்னும் சில நாட்களில் மாநில சட்டசபைத் தேர்தல் நடக்க இருந்தது. சீட் கவர் கடையின் பணியாளரிடம் பேச்சு கொடுத்தேன். 

‘’என்ன அண்ணன்! எலெக்‌ஷன் வருது. யாருக்கு ஓட்டு போடறதுன்னு முடிவு செஞ்சுருப்பீங்க’’

‘’இன்னும் அதப்பத்தி யோசிக்கல சார்’’

‘’இன்னும் ரெண்டு மூணு நாள்ல எலெக்‌ஷன் அண்ணன்’’

‘’ஆமாம் சார்’’ 

‘’கவர்மெண்ட் கொடுக்கற ஃபண்ட் உங்க வீட்டுக்கு கிடைக்கதுல்ல. நிறைய ஸ்கீம் இருக்கே. காலேஜ் படிக்கற குழந்தைகளுக்கு. வீட்டுல இருக்கற பெண்களுக்கு. நிறைய எய்ட் இருக்கே. வந்துட்டு இருக்குல்ல’’

‘’சார் ! கவர்மெண்டோட எந்த ஃபண்டும் எங்க வீட்டுக்கு வரதுல்ல?’’

‘’ஏன்?’’ அதிர்ச்சியுடன் கேட்டேன். 

‘’எங்க வீட்டுக்கு அரிசி ரேஷன் கார்டு இல்ல. ஜீனி ரேஷன் கார்டுதான் இருக்கு. அரிசி கார்டு இருக்கறவங்களுக்குதான் ஃபண்டு கிடைக்கும். ஜீனி கார்டுக்கு கிடையாது’’ 

‘’உங்களுக்கு எப்படி ஜீனி கார்டு கிடைச்சுது’’

‘’தெரியல சார். ரேஷன் கார்டு அரிசி கார்டுதான் அப்ளை செஞ்சன். ஆனா எனக்குக் கிடைச்சது ஜீனி கார்டு’’

‘’உங்க கிட்ட ஓட்டு கேட்டு பிரதானமா 3 குரூப் வந்திருப்பாங்கள்ல அவங்க கிட்ட உங்களுக்கு இந்த மாதிரி ஒரு பிரச்சனை இருக்குன்னு சொன்னீங்களா?’’

பணியாளர் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். 

‘’இப்ப தேர்தல் நடைமுறை அமல்ல இருக்கு. மே 4ம் தேதி ரிசல்ட். ரிசல்ட் வந்தப்புறம் கவர்மெண்ட் மெஷினரி வேலை செய்ய ஆரம்பிக்கும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும். ஒவ்வொரு திங்கள் கிழமையும் காலைல 10 மணிக்கு கலெக்டர் ஆஃபிஸ்ல மனுநீதி நாள் நடக்கும். அங்க போயி உங்க பிரச்சனையை சொல்லி மனு கொடுப்போம். அவங்க ஒரு நம்பர் கொடுப்பாங்க. 3 மாசத்துக்குள்ள உங்க பிரச்சனையை சால்வ் பண்ணுவாங்க. அப்படி இல்லன்னா அடுத்து என்ன செய்யறதுன்னும் யோசிப்போம். அடுத்த மாசம் நான் உங்க கடைக்கு வரேன். ஒரு மனு எழுதித் தரேன். மனுநீதி நாளுக்கு கூட வரன். என்னால முடிஞ்ச அளவு உங்களுக்கு அரிசி கார்டு கிடைக்க முயற்சி செய்யறன்’’

அதற்குள் நண்பர் வந்து விட்டார். தீவிரமாக நானும் பணியாளரும் உரையாடிக் கொண்டிருப்பதை ஆச்சர்யமாகப் பார்த்தார். 

4ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தன. தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைந்தது. பதவியேற்பு தொடர்பான முஸ்தீபுகள் நடந்து கொண்டிருந்தன. புதிய அரசு இன்னும் பதவியேற்கவில்லை. மே 11ம் தேதி எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மனுநீதி நாள் தொடங்கும் என ஆகாஷ்வாணி வானொலி செய்தி கூறியது. எனக்கு சீட் கடை பணியாளரின் நினைவு வந்தது. 

நேற்று அவருடைய கடைக்குச் சென்றேன். அவர் என்னை மறந்திருந்தார். ஜீனி கார்டு அரிசி கார்டு எனக் கூறியதும் அவருக்கு நினைவு வந்தது. 

ஒரு வெள்ளைக்காகிதத்தில் அவருடைய கோரிக்கையை மனுவாக எழுதினேன். இப்போதிருக்கும் ரேஷன் கார்டு எண் என்ன என்று கேட்டேன். அவர் வீட்டில் பார்த்து வருகிறேன் என்றார். நாளை மீண்டும் வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்தேன். 

ரேஷன் கார்டு துறையின் இணையதளத்தில் ஏதேனும் விபரம் இருக்கிறதா எனக் காண அவருடைய ஸ்மார்ட்ஃபோனை வாங்கி கூகுளில் தேடிப் பார்த்தேன். அப்போது அவருடைய ஸ்கிரீன்சேவரில் தற்போதைய தமிழக முதலமைச்சரின் புகைப்படம் இருப்பதைப் பார்த்தேன்.    

ஒரு நூல் குறித்த நினைவு

காலச்சுவடு கட்டுரை ஒன்றின் மூலம் அறிமுகமான பெயர் ராமச்சந்திர குகா. அந்தக் கட்டுரையை எழுதியவர் பி.ஏ. கிருஷ்ணன். ஆண்டு 2003. அப்போது வெளியாகியிருந்த பி.ஏ. கிருஷ்ணனின் ‘’புலிநகக்கொன்றை’’ நாவலை வாசித்து அதன்பால் தீவிரமாக ஈர்க்கப்பட்டிருந்தேன். அந்த ஈர்ப்பின் காரணமாக பி ஏ கே அறிமுகம் செய்த எழுத்தாளரான ராமச்சந்திர குகாவின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. தி ஹிண்டு பத்திரிக்கையில் வெள்ளிக்கிழமையன்று ராமச்சந்திர குகாவின் ‘’இந்தியா ஆஃப்டர் காந்தி’’ என்னும் நூல் வெளியாகியிருக்கிறது என்னும் செய்தி வெளியானது. காலையில் அந்த செய்தியை வாசித்ததும் சென்னையில் இருந்த பிரபலமான ஆங்கிலப் புத்தகக் கடைக்கு காலை 10 மணி அளவில் ஃபோன் செய்து ‘’இந்தியா ஆஃப்டர் காந்தி’’ நூல் அவர்களிடம் இருக்கிறதா எனக் கேட்டேன். அவர்கள் இருக்கிறது என பதில் கூறினார்கள்.  சென்னையில் எனது நண்பரான எனது ஊர்க்காரர் இருந்தார். அவருக்கு ஃபோன் செய்து புத்தகக் கடையைக் கூறி புத்தகத்தின் பெயரையும் கூறி இந்த நூலை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் ; ஊருக்கு வரும் போது கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். நண்பர் வாங்கி வைத்துக் கொண்டார். பத்து நாள் கழித்து வருவதாயிருந்தவர் எதிர்பாராத விதமாக ஞாயிறு அன்று காலையே ஊருக்கு வந்து விட்டார். எனக்கு ஃபோன் செய்தார். நான் அவரைச் சந்தித்து அவரிடமிருந்து நூலை பெற்றுக் கொண்டேன். வீட்டுக்கு வந்து வாசிக்க ஆரம்பித்தேன். எனக்கு அந்த நூல் மிகவும் சுவாரசியமாயிருந்தது. அன்று முழுக்க வாசித்தேன். அடுத்த நாளும் வாசித்தேன். செவ்வாய்க்கிழமை அன்று முழுமையாக வாசித்து முடித்து விட்டேன். அந்தப் புத்தகம் 800 பக்கங்களுக்கு மேல் கொண்டது. இருப்பினும் தொடர்ச்சியாக மிக ஆர்வமாக வாசித்தது ஆச்சர்யமானது. தி ஹிண்டு பத்திரிக்கையில் புதன்கிழமை காலை அந்தப் புத்தகத்துக்கு ‘’புக் ரிவியூ’’ வந்தது. நூல் வெளியான செய்தி வந்தது வெள்ளிக்கிழமை. நூல் ‘’புக் ரிவியூ’’ வந்தது புதன்கிழமை. இந்த இடைவெளிக்குள் அந்த நூலை முழுக்க வாசித்து முடித்து விட்டேன் என்பது இன்று நினைத்தாலும் சந்தோஷம் தருவது.  

Thursday, 21 May 2026

கூட்டணி மந்திரிசபை

நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு கூட்டணி மந்திரிசபை அமைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது ; ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவன் என்ற முறையில் தமிழகத்தில் இரு துருவ அரசியல் முடிவுக்கு வந்து அது பல முனைகள் கொண்டதாக மாறத் துவங்கியிருப்பதன் துவக்கமே இந்த கூட்டணி மந்திரிசபை எனக் காண்கிறேன்.  

தேசியக் கட்சியான காங்கிரஸ் 60 ஆண்டுகளில் முதல்முறையாக மந்திரிசபையில் இடம் பெற்றிருக்கிறது. தேசியக் கட்சிகள் தமிழகத்தில் இனி முக்கியமான இடம் வகிக்கப் போகின்றன என்பதற்கான துவக்க நிகழ்வாக இதனைக் கொள்ள முடியும். பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய்வை தமிழகத்தில் இருக்கும் பிற தேசியக் கட்சிகள். 

இந்த மந்திரிசபையில் பட்டியல் சாதியினைச் சேர்ந்தவர்கள் கணிசமான அளவில் மந்திரிகளாகியிருக்கின்றனர். எந்த அரசியல் கட்சிக்கும் உழைப்பை நல்குபவர்கள் பட்டியல் சாதியினரே. தமிழக அரசியல் சூழலில் வாக்களிப்பதை முக்கிய ஜனநாயகக் கடமையாக எண்ணி மிக அதிக அளவில் வாக்களிப்பவர்களும் பட்டியல் சாதியினரே.தமிழகத்தில் எந்த அரசியல் கட்சி ஆட்சியமைப்பதற்கும் அடிப்படையாக அமைவது பட்டியல் சாதியினரின் வாக்குகளே. ஆனால் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே மந்திரிசபையில் இடம் தரப்பட்டுள்ளது. இம்முறை பட்டியல் சாதியினருக்கு தமிழக மந்திரிசபையில் 20 சதவீதம் இடம் தரப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு மகிழ்வளிக்கும் விஷயம் இது. தமிழகத்தின் நிதி அமைச்சராக பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்றிருப்பது மிகச் சிறப்பானது. வேதியர் சமூகத்தைச் சேர்ந்த இருவரும் மந்திரியாகியிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக தமிழக அரசியலில் இல்லாத நிலை இது. கடந்த 60 ஆண்டுகளில் வேதியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும்  மாநில அமைச்சராக இருந்திருக்கிறார். இந்த மந்திரிசபையில் இருவர் மந்திரிகளாகியிருக்கின்றனர்.

புதிய மந்திரிசபைக்கு வாழ்த்துக்கள்.  

பொறி வைத்தது யார்?

அடியேன் செய்தித்தாள் மூலமாக அரசியலை அறியும் சாமானியன் மட்டுமே. தற்போது எல்லா சாமானியர்களைப் போலவும் இணையம் மூலமும் அரசியல் நிகழ்வுகளை அறிகிறேன்.

தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்து முடிவுகள் வெளியானது. தமிழகத்தின் தனிப்பெரும் கட்சி 107 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. ஆளுங்கட்சியாய் இருந்த கட்சி பிரதான எதிர்க்கட்சியானது. அந்தக் கட்சிக் கூட்டணியிடம் 73 உறுப்பினர்கள் இருந்தனர். அதிலிருந்த ஒரு கட்சி தனிப் பெரும் கட்சிக்கு ஆதரவு தர முடிவு செய்தது. முன்னர் ஆளுங்கட்சியாய் இருந்து பின்னர் எதிர்க்கட்சியாகியிருக்கும் கட்சியின் கூட்டணிக்கு 68 உறுப்பினர்கள் இருந்தனர். மூன்றாவது இடம் வந்த கூட்டணிக்கு 53 உறுப்பினர்கள். 

கூட்டணிகள் ஒருவிதமாக 112, 68, 53 என்றானது. 

ஆளும்கட்சியாயிருந்து எதிர்க்கட்சியான கட்சி தனது கூட்டணிக் கட்சிகளில் சில மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படாமல் தடுக்கப்பட தமிழக சட்டப்பேரவையின் தனிப்பெரும்கட்சியை ஆதரித்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்றும் தங்கள் தயவில் தான் புதிய ஆட்சி நடைபெறுகிறது என்றும் தனிப்பெரும் கட்சி ஆட்சியமைத்ததற்குக் காரணமே தங்கள் கட்சிதான் என்றும் கூறினர் ; கூறுகின்றனர். அவர்களின் ராஜதந்திரப் பொறியில் தனிப்பெரும் கட்சி சிக்கியிருக்கிறது என அவர்கள் நினைக்கின்றனர். 

எனக்கு இன்னொரு கோணம் தென்படுகிறது. 

சட்டப்பேரவையின் தனிப்பெரும் கட்சியாகத் தன்னை முன்னிறுத்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு கோரவில்லை. புதிதாக 5 உறுப்பினர்கள் இருக்கும் கட்சியின் ஆதரவைப் பெற்று 112 என ஆதரவைக் காட்டி உரிமை கோரினர். அதன் பின் தான், ஆளும்கட்சியாயிருந்து எதிர்க்கட்சியான கட்சியின் கூட்டணிக் கட்சிகள் தனிப்பெரும் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பல சுற்று பேச்சுக்கள் நடந்தன. சிறு கட்சிகளின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 9. அந்த கட்சிகளில் ஒன்று முதல்வர் பதவி கோரியிருந்தால் கூட அது நிறைவேற வாய்ப்பிருந்தது. குறைந்தபட்சம் அந்த 9 உறுப்பினர்களும் அமைச்சர் பதவி கோரியிருக்க முடியும். தமிழகத்தில் அமைச்சரவையின் உச்சபட்ச எண்ணிக்கை 31. மொத்த மந்திரி பதவிகள் 31ல் கூட்டணிக் கட்சிகளுக்கு 9 என்பது மிகவும் கூடுதலான எண்ணிக்கை அல்ல. ஆனால் அவர்கள் எதையும் கோராமல் ஆதரவு தர முன்வந்தனர். மூன்றாவது இடம் வந்திருக்கும் கட்சியுடன் உடன்பாடு செய்து கொண்டு விடுவார்களோ அல்லது அந்தக் கட்சியை உடைத்து விடுவார்களோ என அவர்கள் எண்ணியிருக்கலாம். 

நாட்கள் நகர்ந்தன. நான்கு கட்சிகளின் 9 உறுப்பினர்களும் எந்த கோரிக்கையையும் பொதுவில் வெளிப்படுத்தாமல் ஆட்சிக்கு ஆதரவு அளித்தனர். மூன்றாவதாக வந்த கட்சி பிளவுபட்டிருக்கிறது. அதில் 25 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. அவ்வாறெனில் சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கை 209 என்றாகும். அதில் 105 உறுப்பினர்கள் இருக்கும் கட்சிக்கு பெரும்பான்மையே கிடைத்து விடும். அந்த 25 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்து அதில் 11 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனிப் பெரும் கட்சிக்கு தனிப் பெரும்பான்மையே கிடைத்து விடும். எந்த கட்சிக்கும் கூட்டணி மந்திரி சபையில் இடம் தர வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்காது. 

இப்போது எழும் கேள்வி : பொறி வைத்தது யார்? யார் பொறியில் யார் சிக்கியிருக்கிறார்கள் ?     

Wednesday, 20 May 2026

குலைவும் மீட்பும்

இன்று மதியம் 11 மணிக்கு அருந்திய ஹோட்டல் உணவு ஒத்துக்கொள்ளவில்லை. உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மாலை கடுமையான வாந்தி. அதன் பின் அப்படியே உறங்கி விட்டேன். மாலை எழுந்ததும் உடல்நிலை பரவாயில்லை என இருந்தது ஆனால் வீட்டு வாசல் வரை சென்றாலே மயக்கம் வருவது போல் இருந்தது. வீட்டில் அனைவரும் ஊருக்குச் சென்றிருக்கின்றனர்.  

நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து பிரெட் பாக்கெட் ஒன்றும் ஓ ஆர் எஸ் பொட்டலம் 5ம் வாங்கி வர சொன்னேன். அவர் 30 நிமிடத்துக்குள் தன் பணியாளரை அனுப்பி என் கைக்கு சேர்ப்பித்தார். இன்னொரு நண்பர் பசும்பாலைக் காய்ச்சிக் கொண்டு வந்தார் எனக்கு உதவுவதற்காக. 

ஓ ஆர் எஸ் எனப்படும் உப்பு சர்க்கரைக் கரைசல் குடித்ததும் உடல் சற்று தெம்பாக இருந்தது. பால் ஊற்றி 2 அல்லது 3 பிரட் மட்டும் தான் சாப்பிட முடிந்தது. 

தண்ணீர் பாட்டிலில் ஓ ஆர் எஸ் கரைசலை கரைத்து வைத்து விட்டு நண்பர் சென்றார். 

உடல்நலம் மீண்டது. 

இரு எஜமானர்கள்

ஆங்கில மொழியில் ஒரு சொல் உண்டு : ஒரு பணியாளன் இரு எஜமானர்களிடம் பணியாற்ற முடியாது என. அடியேன் கட்டுமானத் துறையில் இருப்பவன். எங்கள் பணியிடத்தில் 10 லிருந்து 50 பேர் வரை பணி புரிவார்கள். பணியாளர் எத்தனை பேர் இருந்தாலும் பணிக்குறிப்பை அளிப்பவர் ஒருவர் தான் இருக்க வேண்டும். இருவர் பணிக்குறிப்பை அளித்தால் பணியிடத்தில் பணி முன்னேற்றம் இருக்காது ; விதவிதமான சிக்கல்தான் இருக்கும்.  

இந்திய அரசியலில் அதிகாரிகளைக் கொண்ட அதிகாரவர்க்கம் இருக்கிறது. உறுப்பினர்களைக் கொண்ட அர்சியல் கட்சிகள் இருக்கின்றன. கட்சி உறுப்பினர்கள் தாங்கள் அடையும் அதிகாரம் அரசியல் கட்சியால் என எண்ண முற்படுகின்றனர். அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவது அதிகாரவர்க்கமே. ஒருவர் அரசியல் அதிகாரம் பெற்றால் அவரை அரசாங்கத்தின் விதிகளே ஆளும். 

எனவே தான் பெரும்பாலான அரசியல்வாதிகள் அதிகாரவர்க்கத்தின் முன் ஒரு முகமும் தங்கள் அரசியலுக்கு ஒரு முகமும் கொள்கின்றனர். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு விதமாகவும் ஆளும்கட்சியாக இருக்கும் போது ஒரு விதமாகவும் செயலாற்றுகின்றனர். 

சில ராஜதந்திரிகள் மட்டுமே கட்சி, அதிகாரவர்க்கம் இரண்டுக்கும் இடையே நுணுக்கமான சமநிலையைக் கொண்டு வருகின்றனர். 

Tuesday, 19 May 2026

மகிழ்ச்சியளிக்கும் ஒரு பொருள் (நகைச்சுவைக் கட்டுரை)


சென்ற வாரம் ஒரு பொருளை வாங்க நினைத்தேன். ஒரு பொருளை வாங்க வேண்டும் என நான் நினைப்பது பல ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடக்கும். நினைத்ததை வாங்க மேலும் பல ஆண்டுகள் ஆகும்.  இணையத்தில் தேடி ஒரு பொருளைக் கண்டடைந்தேன். அதன் பெயர் ‘’ஃபாரடே பை’’. இது என்ன செய்யும் என்றால் இதனுள் அலைபேசியை வைத்து விட்டால் அலைபேசிக்கு சிக்னல் ஏதும் வராது. அதனால் அலைபேசிக்கு எந்த அழைப்பும் வராது. ஏதாவது பேச வேண்டும் என்றால் ‘’ஃபாரடே பை’’யிலிருந்து ஃபோனை எடுத்துப் பேசி விட்டு மீண்டும் உள்ளே வைத்து விடலாம். 

இப்போதே பெரும்பாலும் எனது அலைபேசியை ‘’சைலண்ட் மோட்’’ல் தான் வைத்திருப்பேன். அதை விடவும் இந்த உபகரணம் மேலும் பயன் தருவதாக இருக்கக் கூடும். 

இந்த ’’ஃபாரடே பை’’ பயன்பாட்டுக்குப் பின் தொழில் நிமித்தம் என்னுடன் பேச வேண்டியவர்களை காலை 9.30 மணியிலிருந்து மாலை 5.30 வரை மட்டுமே பேசுமாறு கூறலாம் என இருக்கிறேன். அந்த நேரம் மட்டும் ஃபோன் என்னுடன் இருக்கும். 

இந்த பையை வாங்கிய பின் என்ன யோசிக்கிறேன் என்றால் காலை 9.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை ஃபோனை ஆன் செய்து வைத்து விட்டு மற்ற நேரத்தில் சுவிட்ச் ஆஃப் செய்து விடலாமே இதற்கு ஏன் ஃபாரடே பை வாங்கினோம் என யோசிக்கிறேன். பல நாட்கள் அந்த வேலைநேரத்தில் கூட வெளிஅழைப்புகளை விரும்புவதில்லை. அத்தகைய தருணங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என இருக்கிறேன்.