நேற்று இரவு எனது நெருங்கிய உறவினர் ஒருவர் மூர்ச்சையானார். எனக்குத் தகவல் தெரிந்து உடன் அங்கு சென்றேன். ஒரு ஆம்புலன்ஸ் வரச் சொல்லி முதலுதவிக்கு ஒரு மருத்துவமனைக்குச் சென்று விட வேண்டும் என முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து மருத்துவமனைக்கு மூர்ச்சையானவரை அழைத்துச் சென்றேன். மூர்ச்சையாயிருந்தவர் உடலின் சில பகுதிகளைக் காணும் போது அவர் மூளை நரம்புமண்டலம் தொடர்பான பாதிப்புக்கு ஆளாகியிருக்கக் கூடும் என்று எனக்குத் தோன்றியது ; அதனால்தான் அவரை எக்காரணம் கொண்டு நடத்தி அழைத்துச் செல்லக் கூடாது என முடிவு செய்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்து ஆம்புலன்ஸில் இருந்த நகரும் படுக்கையில் அவரை அவர் படுக்கையில் படுத்திருந்த வண்ணமே மாற்றி ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர் முதல் எண்ணமாக மூளை நரம்புமண்டல பாதிப்பு எனக் கணித்து மூளையில் இரத்தக்கட்டு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதினார். ஆரம்பகட்ட முதல் உதவி சிகிச்சைகள் தரப்பட்டன. அங்கிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள ஊரின் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தலைப்பகுதியை சி டி ஸ்கேன் செய்து பார்த்தனர். மூளையில் இரத்தக்கட்டு இருப்பதை அறிந்தனர். சில மணி நேரங்களில் தலைப்பகுதியில் ஒரு மண்டையோட்டைத் துளைத்து ஓர் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்கு சில மணி நேரங்களுக்குப் பின் உறவினர் உடலில் அசைவுகள் தென்படலாயின. அவர் உடலை அசைக்கத் தொடங்கினார். அவர் விழிகளைத் திறக்க முயன்றார். சுற்றி இருப்பவர் பேசுவதை அவர் புரிந்து கொள்கிறார் என்பதையும் அவர் முகம் அவர் மனம் அதை உள்வாங்கிக் கொள்வதையும் காட்டுகிறது. அறுவைசிகிச்சைக்குப் பின் மீண்டும் ஒரு ஸ்கேன் செய்யப்பட்டது. ஸ்கேன் அறிக்கை அடிப்படையில் இன்னொரு அறுவைசிகிச்சை தேவைப்படுமா அல்லது மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்தால் போதுமா என்பது முடிவு செய்யப்படும்.
பிரபு மயிலாடுதுறை
Thursday, 10 September 2026
Thursday, 3 September 2026
தெருவிளக்கு - முதல் மேல்முறையீடு
Tuesday, 1 September 2026
வருவாய் கோட்டாட்சியர் பதில்
இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஒரு கடிதமும் ஒரு ஆர் டி ஐ பதிலும் வந்திருந்தன. கடிதம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பப்பட்டு அதன் நகல் எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. ***** ஊரின் கிராம சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 01.04.2026 - 31.07.2026 வரையிலான வரவு செலவு விபரங்களில் தெருவிளக்கு பழுது பார்த்தல் என்னும் வகையில் ரூ.33,000 செலவு செய்ததாக கூறியிருந்தார்கள். அவ்வாறெனில் ஆண்டுக்கு அந்த ஊராட்சி தெருவிளக்கு பராமரிப்புக்கு ரூ. 1,00,000 செலவழிக்கிறது என்று பொருள். இந்த செலவை மறுதணிக்கை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தேன். வருவாய் கோட்டாட்சியர் அதனை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பியிருக்கிறார். மேற்படி செலவின் ரசீதுகளை அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரியிருந்தேன். அந்த கோரிக்கையையும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பியிருந்தார்.
தெருவிளக்கும் தமிழக அரசியலும் (மறுபிரசுரம்)
தமிழக அரசியலுக்கும் தெருவிளக்குகளுக்கும் மிக நெருங்கிய பொருத்தம் இருக்கிறது. தமிழக கிராமங்களில் குழல் விளக்குகள் எனப்படும் டியூப் லைட்டுகள் தெருவிளக்குகளாக இருந்தன. அதற்கு முன் குண்டு பல்புகள் தெருவிளக்குகளாக இருந்தன. இரவு நேரத்தில் மக்கள் நடமாட தெருக்களில் தெருவிளக்குகள் ஒளிர்வது அவசியம் என்பதால் தெருவிளக்கு ஓர் அத்தியாவசியத் தேவை. ஊராட்சிகள் தெருவிளக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்.
தமிழகத்தில் 2006ம் ஆண்டு தேர்தல் முடிவுகளின் படி 93 இடங்களில் வெற்றி பெற்றிருந்த திமுக காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவோடு ஒரு மைனாரிட்டி அரசை அமைத்து நடத்தியது. மேற்படி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தந்ததால் அந்த மைனாரிட்டி அரசு 2006 - 2011 வரை நீடித்தது. அந்தக் காலகட்டத்தில் மைனாரிட்டி திமுக அரசு இந்தோனேஷியாவிலிருந்து தரக்குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்து அனல் மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தியதால் மின்சார உற்பத்தி குறைந்தது. தமிழகம் மிக அதிக மின்வெட்டைச் சந்தித்தது. ஒரு நாளைக்கு காலை 2 மணி நேரம் மாலை 2 மணி நேரம் என 4 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் ஆனது. அப்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ’’ஆற்காடு’’ வீராசாமி.
அந்தக் காலகட்டத்தில் இன்னொரு விஷயமும் நடந்தது. தமிழக மின்சார அமைச்சர் ‘’ஆற்காடு’’ வீராசாமி தமிழகத்தின் எல்லா ஊராட்சிகளிலும் உள்ள தெருவிளக்குகளை சோடிய ஆவி விளக்குகளாகவும் பாதரச ஆவி விளக்குகளாகவும் மாற்றும் திட்டத்துக்கு ஒப்புதல் தந்தார். சாதாரண குழல் விளக்கு அமைக்க ரூ.200 செலவாகிறது என்றால் சோடிய ஆவி விளக்குகளும் பாதரச ஆவி விளக்குகளும் அமைக்க குறைந்தபட்சம் ரூ.5000 செலவாகும். தமிழகத்தில் 12,500 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 200 விளக்குகள் அமைத்தால் கூட 25,00,000 விளக்குகள் அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.5000 செலவாகும் என்றால் அரசியல்வாதிகள் அதற்கு ரூ.8000 செலவாகும் என கணக்கு எழுதுவார்கள் . ஒரு விளக்குக்கு ரூ.3000 ஊழல் எனில் 25,00,000 விளக்குகளுக்கு ரூ.750 கோடி ஊழல் செய்து வெளியே எடுத்தார்கள். இது குறைந்தபட்ச கணக்கீடு. நிகழ்ந்தது இன்னும் பல மடங்கு இருக்கும்.
இதில் இன்னொரு எதிர்பாராத விஷயம் நடந்தது. குழல் விளக்குகள் எரிந்தால் ஆகும் மின்சாரப் பயன்பாட்டை விட சோடிய ஆவி விளக்குகள் எரிந்தால் ஆகும் மின்சாரப் பயன்பாடு மிக அதிகம். பல மடங்கு யூனிட் மின்சாரம் அதற்கு தேவைப்பட்டது. தரமற்ற நிலக்கரியால் மின் உற்பத்தி குறைந்த நிலையில் சோடிய பாதரச ஆவி விளக்குகளும் கூடுதல் மின்சாரம் எடுத்துக் கொண்டன. இவை அத்தனையும் தினம் 4 மணி நேர மின்வெட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தன. பல ஊராட்சிகள் இந்த சோடிய பாதரச ஆவி விளக்குகளால் மின்சார வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய மின் கட்டணம் செலுத்த இயலாமல் ஆனது. கோடிக்கணக்கான ரூபாய் மின்வாரியத்துக்கு ஊராட்சிகளின் நிலுவைத்தொகை ஆனது.
2014ம் ஆண்டு நிகழ்ந்த நிகழ்வையும் குறிப்பிடுகிறேன்.
வருவாய் கோட்டாட்சியருக்கு ஒரு கடிதம் (மறுபிரசுரம்)
வருவாய் கோட்டாட்சியருக்கு ஒரு ஆர் டி ஐ மனு (மறுபிரசுரம்)
கிராம சபைக் கூட்டம் ( மறுபிரசுரம்)
இன்று ஊருக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்துக்குச் செல்ல வேண்டும் என் காலையிலிருந்தே எண்ணம் கொண்டிருந்தேன். தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் கிராம அளவில் சூழல் எவ்விதம் இருக்கிறது என்பதை அறிய கிராம சபைக் கூட்டம் உதவும் என எண்ணினேன்.
தமிழக அரசியல் என்பது ஒரு மூடுமந்திரம். என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்குள் எந்த விஷயமும் முடிந்து விடும்.
காலை 10 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்றேன். கூட்டம் 12 மணி அளவில் தொடங்கியது. வருவாய் கோட்டாட்சியர் கூட்டத்துக்கு வருகை புரிந்திருந்தார். மாவட்ட ஆட்சித் தலைவருடன் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்று அது முடிவடைந்த பின் வந்ததால் சற்று தாமதம்.
தமிழக மக்கள் எந்நேரமும் அரசியலையும் அரசையும் குறித்து பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அடிப்படைக் கடமையைச் செய்வதில் சுணக்கம் காட்டுபவர்கள். ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 1000 - 5000 வரை இருக்கும். கிராம சபைக் கூட்டத்துக்கு குறைந்தபட்சம் 50 பேர் வருகை தர வேண்டும். நான் கலந்து கொண்ட கூட்டத்தில் இழுத்துப் பிடித்து 50 பேர் வந்திருந்தனர். 01.04.20226 லிருந்து 31.07.2026 வரை அந்த கிராமத்துக்கு ஆன செலவுகளை ஒரு போஸ்டராக சபை அரங்கில் வைத்திருந்தார்கள். அந்த விபரங்களைக் குறிப்பேட்டில் குறித்துக் கொண்டேன். அங்கிருந்த அரசு ஊழியர் நான் விபரங்களைக் குறித்துக் கொள்வதைப் பார்த்து என்னிடம் நான் யார் என்ற விபரங்களை கேட்டுக் கொண்டார். 120 நாளில் ரூ.4,80,000 செலவு செய்திருக்கின்றனர். ஒரு நாளைக்கு ரூ.4000 செலவாகிறது.
முதற் பார்வையில் தெரு விளக்கு பழுது நீக்கம் ரூ.25,000 எனக் குறிப்பிட்டிருந்தனர். 120 நாளில் ரூ.25,000 செலவு எனில் ஒரு நாளைக்கு ரூ.200 செலவாகிறது என்று பொருள். அந்த ஊரில் தினம் ஒரு மின்விளக்கு மாற்றினால் தான் அந்த செலவு ஆகும். தினம் ஒரு விளக்கு பழுதடைய சாத்தியம் இல்லை.
தெருவிளக்கு பொருள் வாங்கியது என ரூ.8000 செலவு. முன்னர் குறிப்பிட்டது தெருவிளக்கு பழுது நீக்க. இப்போது பொருள் வாங்கியது என்பதற்காக. ரூ.8000க்கு வாங்கிய பொருளை ரூ.25,000 செலவு செய்து பொருத்தினார்களா என்னும் கேள்வி எழுகிறது.
கை பம்ப் வாங்க என ரூ.6000 செலவு. கை பம்ப் பழுது நீக்க என ரூ.8000 செலவு.
தெரு விளக்கு, கை பம்ப் செலவை தணிக்கை செய்ய வேண்டும் எனக் கேட்கலாம் என உள்ளேன்.
அரசு மக்களை இணைக்க வேண்டும். மக்கள் இணைந்தால் மகத்தான மாற்றங்கள் நடக்கும்.
Sunday, 30 August 2026
ஒரு குடும்பத்துக்கு என்னென்ன மரக்கன்று வழங்கலாம்?
ஒரு சிந்தனை - ஒரு யோசனை
’’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. அதன் பலமும் அதுதான் ; அதன் எல்லையும் அதுதான். தற்போது ஒரு கிராமத்தில் மரக்கன்று வழங்கும் பணியைத் துவங்க ஆரம்பகட்ட வேலைகளைச் செய்து வருகிறேன். பல கிராமங்களில் பணியாற்றிய அனுபவத்தில் கிராமத்தில் அதிக மரக்கன்றுகள் வளர்க்க சிறப்பான வழிமுறைகள் என்ன என்பது குறித்து யோசித்தேன். இந்த விஷயம் குறித்த என்னுடைய எண்ணங்கள் என் அனுபவத்தின் அடிப்படையிலானவை. எல்லா இடத்துக்கும் எல்லா சூழ்நிலைக்கும் இவை பொருந்த வேண்டும் என்பது அவசியமில்லை. நான் சொல்வதற்கு நேர் எதிர் கூட சாத்தியமாக வாய்ப்பு உள்ளது. அதனைத் தெரிந்தே இதனைச் சொல்கிறேன்.
1. பொது இடங்களில் மரக்கன்றுகள் வளர்ப்பதில் கிராமங்களில் முக்கிய சிக்கல் மின்சாரக் கம்பிகள் வரை மரங்கள் வளர்ந்து மின் வினியோகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் உயரமாக வளரும் மரங்களை பொது இடங்களில் வளர்க்க கிராம மக்கள் விரும்புவதில்லை. உயரம் குறைவாக வளரக்கூடிய மரங்களே மின் கம்பிகளுக்குக் கீழே வளர்க்க முடியும். நந்தியாவட்டை மரம் அதற்கு உகந்தது. அரளியும் உகந்தது. செம்பருத்தியும் வளர்க்கலாம்.
2. தமிழக கிராமங்களில் ஆடு மாடுகள் எல்லா இடங்களிலும் மேயும். எனவே கிராமங்களில் வளர்ப்பது என்றால் பொது இடங்களில் வளர்த்தாலும் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தாலும் வேலி அவசியம். மீன்வலை வேலிகள் ஓரளவு செலவு குறைவானவை.
3. ஒரு கிராமத்தைத் தொடர்பு கொண்டால் அதில் உள்ள எல்லா வீடுகளும் ஒரே விதமாக நல்ல முறையில் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும். அனைவருமே நல்ல விதமாக வளர்க்கவே விரும்புவார்கள். செயலாக்குவதில் நிச்சயம் வித்தியாசங்கள் இருக்கும். விழுப்புணர்வின் மூலமே செயலாக்கத்தில் துல்லியத்தைக் கொண்டு வர முடியும்.
4. ஒரு கிராமத்தில் 500 வீடுகளுக்கு எலுமிச்சை மரக்கன்று கொடுக்கிறோம் என்றால் அது காய்க்க 3 ஆண்டுகள் ஆகும். ஒரு மரத்தில் 100 காய்கள் காய்த்தால் ஒவ்வொரு ஆண்டும் அந்த கிராமத்தில் 50,000 எலுமிச்சம்பழங்கள் கிடைக்கும். இது எண்ணிப்பார்க்க உற்சாகம் தரும் செயல். இருப்பினும் அந்த 3 ஆண்டுகளும் நாம் ஒவ்வொரு வீடாக செடியை எவ்விதம் பராமரிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். ஊக்கமளிக்க வேண்டும். மண் , சூரிய ஒளி ஆகியவை பொறுத்து இடத்துக்கு இடம் செடியின் வளர்ச்சி மாறும் என்றாலும் சம அளவில் எல்லாருக்கும் நலன் கிடைக்கும் வகையில் செய்யும் பொறுப்பையும் நாமே ஏற்க வேண்டும்.
5. எனது அனுபவத்தில் கிராம மக்கள் பொதுவாக மரக்கன்றுகள் தானாக வளரும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்கள். மரங்கள் தண்ணீர் ஊற்றினால் தான் வளரும் என்பது அவர்கள் உணர்வில் இல்லை. அந்த விழுப்புணர்வை மரக்கன்றுகளை வழங்குவதற்கு முன்பும் ஏற்படுத்த வேண்டும். மரக்கன்றுகளை வழங்கும் போதும் ஏற்படுத்த வேண்டும். மரக்கன்றுகளை வழங்கிய பின்னரும் 5 ஆண்டுகளுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்த்த பயன் கிடைக்கும். அந்த கிராமத்தின் அகத்திலும் புறத்திலும் 5 ஆண்டுகளில் மாற்றம் நடக்கும்.
Wednesday, 26 August 2026
நூதனம்
நேற்று மாலை அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து ஃபோன் செய்தார்கள். நிகழ்ந்த விஷயத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார்கள். ‘’நான் தான் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப செய்கிறேன் என நினைத்தால் அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அலுவலகமும் வருத்தம் தெரிவிப்பதை திரும்ப திரும்ப செய்கிறது’’ என்று கூறினேன். பேசியவர் வருத்தத்துடனே பேசினார். அவரிடம் நடந்ததை ஒருமுறை கூறினேன். ஓரிரு மணி நேரங்களில் என் சி.பி.கி.ராம்.ஸ் புகாருக்கு பதில் அளிக்கப்பட்டிருந்தது. ரூ.5 போஸ்டல் ஸ்டாம்ப்பும் ரூ.5 போஸ்டல் கவரும் இருப்பு வைத்துக் கொள்ள ஒரு அஞ்சல் அலுவலகத்தால் இயலவில்லை என்றால் அந்த அஞ்சல் அலுவலகத்தை மூடி விடலாமே ; அவ்வாறு செய்தால் துறைக்கு லாபம் தானே ? என புகாரில் தெரிவித்திருந்தேன். அது அவர்களை அமைதியிழக்கச் செய்திருக்கிறது. எனக்கு கொடுத்த பதிலில் ஓர் அஞ்சலகம் ஸ்டாம்ப் , கவர் இருப்பு வைத்துக் கொள்ளவில்லை என்பதால் எந்த சேவையும் அளிப்பதில்லை எனக் கொள்ள இயலாது என்பதை முதற்கண் தெரிவித்துக் கொண்டு தங்கள் பதிலைத் தெரிவித்திருந்தார்கள்.
அவர்கள் தெரிவித்த பதிலில் ஒரு விஷயம் நூதனமானது. அதாவது, அந்த அஞ்சல் நிலையத்தில் ரூ.5 ஸ்டாம்ப் தான் இருப்பு இல்லை ; ரூ. 4 மற்றும் ரூ.1 ஸ்டாம்ப் கள் இருந்திருக்கின்றன என்பதை பதிலில் தெரிவித்திருந்தார்கள்.
நான் கையில் உறையுடன் சென்று அதனை அனுப்ப ரூ.5 ஸ்டாம்ப் வேண்டும் எனக் கேட்கிறேன். அங்கிருந்த ஊழியர் என்ன செய்திருக்க வேண்டும் ரூ.4 ஸ்டாம்ப் ஒன்றும் ரூ.1 ஸ்டாம்ப் ஒன்றும் தந்திருக்க வேண்டாமா? அவர் இருப்பு வைத்துக் கொள்ளாததை விட ரூ.5 ஸ்டாம்புக்கு ரூ.4 ஸ்டாம்ப் ஒன்றும் ரூ.1 ஸ்டாம்ப் ஒன்றும் சமமானது என்பதை அறியாதது இன்னும் பெரிய பிழை அல்லவா?