Friday, 1 May 2026

 இருத்தல்
எத்தனை இனியது
எவ்வளவு பெரிய வெளி
எத்தனை வான் மீன்கள்
ஆழி சூழ் உலகு
அதில் பரவியிருக்கும் உயிர்க்குலம்
எப்போதும் இருக்கிறேன் இங்கே
எப்போதும் இல்லாமல் இருந்ததில்லை
இங்கே

80 ஏக்கர் - ஒரு கடிதம்

அன்புள்ள நண்பருக்கு,

நேற்று தங்களுடைய 80 ஏக்கர் பண்ணைக்கு தங்களுடன் தற்செயலாக சேர்ந்து செல்ல ஒரு வாய்ப்பு அமைந்தது. தங்கள் பண்ணையில் என்ன விதமான விவசாயம் நடக்கிறது என்பதை நேரில் காண இயன்றது. அந்த பண்ணையின் மேம்பாடு குறித்து எனது சில அபிப்ராயங்களைத் தெரிவிக்கிறேன். தங்களுக்கு உகந்தது எனத் தோன்றினால் செயல்படுத்திப் பார்க்கவும். நம் இருவருக்கும் தொழில் மனை வணிகம் என்பதால் நாம் அறிமுகமானோம். லௌகிகத்துக்கு அப்பால் எனக்கு வேறு சில ஆர்வங்களும் உள்ளன. அதன் ஒரு பகுதியாக ‘’காவிரி போற்றுதும்’’ என்னும் நுண் அமைப்பு ஒன்றை ஒருங்கிணைக்கிறேன். சிறு அளவில் ‘’காவிரி போற்றுதும்’’ சில செயல்களை வெற்றிகரமாக செய்திருக்கிறது. அந்த நிகழ்வுகளை அடிப்படையாய்க் கொண்டே தங்கள் பண்ணைக்கு சில பரிந்துரைகளை அளிக்கிறேன்.  விவசாயத்தின் மூலம் விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு அதற்கு அவர்கள் எப்பயிரை விளைவிக்க வேண்டும் என்பதை முன்வைப்பதே ‘’காவிரி போற்றுதும்’’மின் அடிப்படையான பணி என்று சொல்லலாம். 

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு நண்பர் - அவர் விவசாயி அல்ல ; ஐ டி நிறுவன ஊழியர் - எனது ஆர்வத்தையும் நம்பிக்கையையும் கண்டு அதன் மேல் முழு நம்பிக்கை வைத்து அவரது 3 ஏக்கர் நிலத்தில் நான் நினைப்பதை செயல்படுத்த எனக்கு முழு உரிமை அளித்தார். அவருடைய நன்செய் வயல் மேட்டுப்பாத்தி அமைக்கப்பட்டு அதில் 950 தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. முறையாக பராமரிக்கப்படுகின்றன. அவை இந்த 4 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் அந்த தேக்கு மரங்களின் பொருள் மதிப்பு ரூ. 10 கோடி அளவில் இருக்கக் கூடும். 

நெல் விவசாயத்தில் சிறப்பான லாபம் இருப்பதில்லை. ஏனெனில் நெல் உற்பத்தி மிகை அளவில் இருப்பதால் நெல்லுக்கு லாபகரமான விலை கிடைப்பதில்லை. சந்தையில் மிகை உற்பத்தி செய்யப்படும் எந்த பண்டத்தின் விலையும் வீழ்ச்சி காணும் என்பதை ஒரு வணிகராக நீங்கள் அறிவீர்கள். 

தேக்கு மரம் பயிரிடுவதன் ஒரு ஏக்கர் கணக்கீட்டை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். ஒரு ஏக்கரிலிருந்து 80 ஏக்கருக்கான கணக்கீட்டை எளிதில் கணக்கிட்டுக் கொள்ளலாம். 

ஒரு ஏக்கர் என்பது 43,560 சதுர அடி என்பதை நாம் அறிவோம். தோராயமாக 204 அடி அகலமும் 204 அடி நீளமும் கொண்ட பரப்பு எனக் கருதுவோம். அதில் 12 அடிக்கு ஒரு தேக்கு கன்று என மேட்டுப்பாத்தி அமைத்து நட வேண்டும். ( 10 அடிக்கு ஒரு மரக்கன்று நடலாம். எனினும் பணியாளர்கள் கவனமின்றி ஒரு கன்றுக்கும் இன்னொரு கன்றுக்குமான இடைவெளியில் பிழை செய்வதைத் தவிர்க்க 12 அடி என ‘’காவிரி போற்றுதும்’’ பரிந்துரைக்கிறது. அவ்வாறெனில் அகல வாக்கில் 17 மரக்கன்றுகளும் நீளவாக்கில் 17 மரக்கன்றுகளும் நட முடியும். ஒரு ஏக்கர் பரப்பில் 289 மரக்கன்றுகள் நடலாம். 15 ஆண்டுகளில் ஒரு மரம் ஒரு லட்ச ரூபாய்க்கு விலை போகும். அவ்வாறெனில் ஒரு ஏக்கரில் நடப்படும் தேக்கு மரங்கள் ரூ. 2 கோடியே 89 லட்சத்துக்கு விலை போகும். 

80 ஏக்கர் முழுமைக்கும் தேக்கு பயிரிட்டால் அந்தப் பரப்பில் 23,120 மரக்கன்றுகள் நட முடியும். 15 ஆண்டுகளில் அதன் மதிப்பு ரூ. 231 கோடியே 20 லட்சம் என்னும் அளவில் இருக்கும். நம் நாட்டில் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வருமான வரி கிடையாது என்பதை ஒரு வணிகராக நீங்கள் அறிவீர்கள். எனவே உத்தேசிக்கும் முழுப் பணமும் தங்களிடம் இருக்கும்.

பெரும் பரப்பில் தேக்கு பயிரிடுவது பல விவசாயிகள் தங்கள் முயற்சி மூலம் ஊக்கம் பெற்று அவர்களும் தேக்கு பயிரிட உத்வேகம் அளிக்கும். 

நெல் விவசாயத்தில் ஒரு ஏக்கருக்கு ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். 80 ஏக்கருக்கு ஓராண்டுக்கு 80 லட்சம் லாபம். 15 ஆண்டுகளில் 12 கோடி லாபம். தேக்கின் மூலம் 231 கோடியே 20 லட்சம் லாபம். ஒரு வணிகராக மேற்படி இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கவும். 

அன்புடன்,
பிரபு
அமைப்பாளர்
காவிரி போற்றுதும்

இசை

 கொட்டிப் பரந்து கிடக்கிறது 
அண்டப் பெருவெளி
இறக்கங்களால் ஏற்றங்களால்
பள்ளங்களால் மேடுகளால்
ஆனது
இப்புவியின் மேல்பரப்பு
வடிவமின்மை புடவியின் இயல்பு
இந்த ஊழி வெளியில்
நீ
இருக்கும் பரப்பு
மிக அழகாகிறது
உன் இருப்பால்
உன் இயல்பால்
இந்த உலகின்
இந்த வாழ்வின்
மிகப் பெரிய வாதையே
நீயும்
நானும்
வேறு 
என
எண்ண நேர்வது தான் 

Thursday, 30 April 2026

புள்ளரவம்

 வசந்தத்தின் மாலை
முழு பகலும் வெம்மை ஏந்திய மரம்
சோர்ந்திருந்தது
சிறிய கிளைகளில்
புள்ளினங்கள் அமர
அசையத் தொடங்கியது மரம்
கிளைகளை அசைத்து அசைத்து
ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன
சிறகு கொண்ட உயிரினங்கள்
ஆசுவாசம் நிறைந்திருந்தது அவ்வொலியில்
கடந்து செல்பவன் அகத்தில் 
மரத்தில் கிளையில் இலையில்
காற்றில்
நிறையும் ஆசுவாசம்

காவிரி தென்பெண்ணை பொருநை

ஒரு தமிழ்க் கவிஞரின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு வெளிவர இருக்கிறது. அவரது முதல் கவிதைத் தொக்குப்பைக் கொண்டு வர அவர் முடிவு செய்த போது தொகுப்புக்கான கவிதைகளை புதுச்சேரியின் மீனவர் கிராமக் கடற்கரை ஒன்றில் அமர்ந்து நாங்கள் இருவரும் மாற்றி மாற்றி வாசித்தோம். நவீனக் கவிதையின் வடிவம் மௌனமான அக வாசிப்புக்கானது. ஐரோப்பியத் தாக்கம் அவ்விதமான தன்மையை உண்டாக்கியிருக்கிறது. தமிழ் உலகின் உயர்தனிச்செம்மொழிகளில் ஒன்று. நமக்கு 2500 ஆண்டு காலத்துக்கும் மேலாக உயிர்த்திருக்கும் மொழி இருக்கிறது. இங்கே கவிதை சொல்லப்பட்டிருக்கிறது ; பாடப்பட்டிருக்கிறது ‘ எழுதப்பட்டிருக்கிறது. சொல்லப்படும் எழுதப்படும் கவிதை பாடப்பட்டிருக்கிறது. பாடப்படும் கவிதை எழுதப்பட்டிருக்கிறது. அம்மரபினையொட்டி எழுதப்பட்ட அக்கவிதைகளை அந்தக் கடற்கரையில் மீன் வலைகளுக்கு மத்தியில் அலையோசை மெல்ல கேட்டுக் கொண்டிருக்க நெரித்த திரைகடலின் முன் அமர்ந்து நாங்கள் எங்கள் குரலில் வாசித்துக் கொண்டிருந்தோம். அந்நிகழ்வு நிறைவு பெற்றதும் அத்தொகுப்பு சிறந்த ஒன்றாக விளங்கும் என எங்கள் ஆழுளம் அறிந்தது. அவ்விதமே அத்தொகுப்பு அமைந்தது நல்லூழ். 

சில ஆண்டுகளுக்குப் பின் நண்பர் தன் இரண்டாம் தொகுப்பைக் கொண்டு வர இருக்கிறார். தொகுப்பினை இறுதி செய்ய சென்னை வந்து விடுகிறேன் என்று சொன்னேன். இருப்பினும் கடைசி நேரத்தில் முதல் தொகுப்பைப் போல கவிதை வாசிப்பை புதுச்சேரியில் வைத்து இறுதி செய்ய நாங்கள் இருவரும் முடிவெடுத்தோம். அவர் சென்னையிலிருந்து காலை 9 மணிக்கு காரில் புறப்பட்டார். நான் ஊரிலிருந்து அதே நேரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டேன். 12 மணிக்கு புதுவை கடற்கரையில் இருக்கும் பாரதி பூங்காவினை நான் சென்றடைந்தேன். நண்பர் 1 மணிக்கு வந்து சேர்ந்தார். எதிர்பாராத இனிமையாக நண்பருடன் அவரது இன்னொரு நண்பரும் வந்திருந்தார். மூவரும் முறையே காவிரி தென்பெண்ணை பொருநை நதிகளின் கரைகளில் பிறந்து வளர்ந்தவர்கள். 

அமைதியான காஃபி ஷாப் ஒன்றில் அமர்ந்து கவிதைத் தொகுப்பின் கவிதைகளை மாறி மாறி வாசித்தோம். நானும் நண்பரும் வாசிக்க மூன்றாவது நண்பர் அக்கவிதைகளை உள ஆழத்தால் பின் தொடர்ந்தது அத்தருணத்தை மிக மிருதுவானதாகவும் மென்மை மிக்கதாகவும் ஆக்கியது. தொகுப்பை இறுதி செய்து விட்டு நண்பர்களுக்குப் பிரியாவிடை கொடுத்துப் பிரிந்து ஊர் திரும்பினேன். 

அகிலா

அண்டப் பெரு வெளி
அமைத்து
கொண்டு 
இருக்கும்
உருவம்
நீ

வசந்தத்தின் நாட்குறிப்பு - 4

 வசந்தம் என்பது கவிதை
ஒரு மலரை உலகாக
ஒரு நீர்த்துளியை ஆழியாக
ஒளிக்கதிர் ஒன்றை அமுதப் பெருவெளியாக
ஒரு சொல்லை
முழுமையான ஒரு வாழ்க்கையாக
உணர வைக்கும்
கவிதை

வசந்தத்தின் நாட்குறிப்பு - 3

வசந்தம் என்பது
மதுரம்
அதி மதுரம்
மலரை மிக மென்மையாய் ஸ்பரிசிக்கும் பட்டாம்பூச்சியிடம் 
மலர்களில் உள்ளுறையும்
தேனைத் 
துளித்துளியாய் சேர்த்துக் கொள்ளும் தேனீயிடம்
புற்களைக் கொண்டு 
அற்புதமான தங்குமிடம்
நிர்மாணிக்கும்
குருவியிடம்
விட்டு விடுதலையாகி நிற்கும் 
சிட்டுக்களிடம்
உடனிருந்து
உணரவேண்டியது
வசந்தத்தின் அதிமதுரம்

வசந்தத்தின் நாட்குறிப்பு - 2

 வசந்தத்தின் மாலை அந்தி
இன்னொரு துவக்கம்
இன்னொரு வாழ்க்கை
இன்னொரு இனிமை
இரவை 
இரவின் துளியை
இரவின் மென்மையை
உணர்ந்திருக்க
வசந்தத்தின் இரவு 
ஓர் உற்பத்தி ஸ்தானம்
இரவுகள் துயில்வதற்கானவை அல்ல
உணர்வதற்கானவை
வசந்தத்தின் இரவுகள்
மௌனமாக சொல்லிக் கொண்டிருக்கின்றன
ஒவ்வொரு கணமும்