Sunday, 3 May 2026

முதல் பாடம்

அன்புடையீர்!

நேற்று கும்பகோணத்தில் உள்ள தங்கள் மருத்துவமனைக்கு நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதன் பேரில் மருத்துவ ஆலோசனை நேரத்தை நிர்ணயம் செய்து கொள்ள வருகை புரிந்தேன். மருத்துவமனைக்குள் நுழைந்ததும் அங்கே கண்ட முதல் காட்சி மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. அதாவது, மருத்துவமனைக்கு வரும் அனைவரின் காலணிகளும் மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. வருகை புரியும் நோயாளிகள், அவர்களுடன் கூட வரும் உறவினர்கள் என அனைவரின் காலணிகளும் நேர்த்தியான முறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் பல பெரிய மருத்துவமனைகளைக் கண்டிருக்கிறேன். அங்கே நுழைந்ததுமே காலணிகள் ஒழுங்கின்றி குவியலாகக் கிடக்கும். மருத்துவமனை என்பது அதிகம் நோயாளிகள் உலவும் பகுதி என்பதால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கும் பகுதியாகையால் அங்கே தூய்மைக்கு மிக அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். எனினும் ஒரு பெரிய மருத்துவமனையின் உள்ளே செல்லும் போதே காலணிகள் ஒழுங்கின்றி குவிந்து கிடப்பது மனதின் அக ஒழுங்கை குலைப்பதாக உணர நேரும். இன்னொரு விதத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் திறனின்மையையும் அது எடுத்துக் காட்டுவதாக அமையும். காலணிகளை நேர்த்தியாக அடுக்கி வைத்தல் என்னும் சிறு செயலைக் கூட செய்ய இயலாத நிர்வாகம் மருத்துவமனையை நிர்வகிக்கும் விதம் எவ்விதம் சிறப்பாக இருந்திட முடியும் எனத் தோன்றி விடும்.   மருத்துவமனைக்கு வருகை புரியும் நோயாளிகளின் காலணிகளை அடுக்கி வைக்கும் விஷயத்தில் தங்கள் மருத்துவமனை தமிழக மருத்துவமனைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக முன்னோடியாக விளங்குகிறது. 

நமது நாட்டில் சீக்கிய குருத்வாராக்கள் காலணிகளை நேர்த்தியாக அடுக்கி வைப்பதை தங்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக எண்ணுகிறார்கள். யோக வகுப்புகளுக்கு வருகை புரியும் பார்வையாளர்களிடம் யோக அமைப்புகள் காலணிகளை நேர்த்தியாக வாசலில் விட்டு வருமாறு கூறுகின்றன. யோகம் பயில்வதற்கான துவக்கச் செயலாக அச்செயல் இருக்கிறது என்பது அவர்கள் புரிதல். 

இன்னொரு விஷயத்தையும் தங்கள் மருத்துவமனையில் கவனித்தேன். மருத்துவமனை முழுவதும் தொடர்ந்து திருவாசகம் அளவான ஒலியில் ஒலித்துக் கொண்டிருந்தது. இதுவும் மிக முக்கியமான ஒரு செயல். பொதுவாக மருத்துவமனைகள் சேட்டிலைட் சேனல்களின் கேளிக்கை நிகழ்ச்சிகளை பார்வையாளர் காத்திருக்கும் நேரத்தில் ஒளிபரப்புகிறார்கள். இச்செயல் மருத்துவமனைகளில் இருப்பதை ஒரு சினிமா தியேட்டரில் இருப்பது போல் எண்ணச் செய்து விடுகின்றன. மனித மன இயக்கத்தை தாறுமாறாக ஆக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நோயாளிகள் மனநிலையைத் தீவிரமாக பாதிக்கக்கூடிய்வை. தங்கள் மருத்துவமனை எவர்  மனதையும் அமைதிப்படுத்தும் திருவாசகத்தை ஒலிக்கச் செய்வதன் மூலம் முன்னோடியான விஷயம் ஒன்றை நடைமுறைப்படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள். 

காலணிகளை சீராக அடுக்கி வைப்பதில் மருத்துவமனை வருகையாளர்களுக்கு மிக்க உதவியாக இருக்கும் தங்கள் மருத்துவமனை வாயில் காவலர் பாராட்டுதலுக்குரியவர். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள். 

எந்த பெரிய மருத்துவமனையும் செய்திடாத இரண்டு நல்ல விஷயங்களை செயல்படுத்திட முடிவெடுத்திருக்கும் தாங்களும் தங்கள் நிர்வாகமும் பாராட்டுக்குரியது. 

அன்புடன்,

பிரபு

உன் முன்
சொல்லெடுக்காமல்
இருந்து விடுகிறேன்
உன்னிடம்  பேசவில்லை
உன் இருப்பின் இனிமையை
உன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும்  
மகத்துவத்தை
உன் உயிர்ப்பின் பெருவெளியை 
முழுமையாகச் சொல்லும்
சொல்
அகமெழக்
காத்திருக்கிறேன்
உன் முன்னால்
சொல் முன்னால்
 எல்லையில்லாப் பெருவெளி
நீ ஆளும் தேசம்
நீர் மேகங்கள்
உன் சிங்காதனம்
வானில் நீந்தும் மீன்கள்
ஒளிரும் உன் ஆபரணங்கள்
அலைகடல்
உன் காலின் சிலம்பு
முடிவற்றவளே
மகத்தானவளே
உயிருக்குள் துடிக்கும் உயிரே
உன் பாதத்தில்
என்னிடம் 
இருக்கும்
ஒரு மலரை 
வைக்கிறேன்

 உன்னை
உன் பெயர் சொல்லி
அழைப்பதைக் கூட
உனக்குச் செய்யும் அநீதியாக
நினைக்கத்
தொடங்குகிறேன்
அன்னையே அன்னமிடுங்கள்
அன்பாலானது தங்கள் இருப்பு
அன்பின் அன்னத்தை அளியுங்கள் அன்னையே
கடுமையான இறுக்கம் கொண்ட 
எங்கள் மனோபாவங்கள் 
எங்களை விட்டு அகலட்டும்
மென்மையான இந்த உலகை
மென்மையான இந்த ஜீவிதத்தை
மென்மையாக அணுக
மென்மையாக உணர
தங்கள் அன்பின் அன்னம்
எங்களுக்கு அருளட்டும்
அன்னையே அன்னமிடுங்கள் 

Saturday, 2 May 2026

நீ
கிண்டர் கார்டன் பள்ளியில்
புதிதாகப் பணியில் சேர்ந்த
ஆசிரியை போல் இருக்கிறாய்
ஒட்டு மொத்த உயிர்க்குலமும்
உன் குழவிகளாய்
உன் எதிரில்
அமர்ந்திருக்க 

மோனப் பெரு வெளி (நகைச்சுவைக் கட்டுரை)

 பூம்புகாருக்கு அருகில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். சமயத்தில் பூம்புகார் செல்லும் போது அவருக்கு ஃபோன் செய்வேன். ஊரில் இருந்தால் அவரை அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வேன். பல ஆண்டுகளாக இவ்விதமாக நாங்கள் கடற்கரைக்குச் சென்றிருக்கிறோம். நேற்று ‘’சித்திரைப் பௌர்ணமி’’ . எனவே பூம்புகாருக்குச் சென்றோம். சிலப்பதிகாரத்தில் சித்திரை மாத முழுநிலவு நாளில் பூம்புகாரில் நடக்கும் இந்திர விழா குறித்து ‘’இந்திர விழா எடுத்த காதை’’ உள்ளது. அந்தக் காதையில் தான் மாதவியைக் கோவலன் காண்பது நிகழும். மாதவியை இளங்கோ அந்தக் காதையில் தான் அறிமுகம் செய்வார். இந்தக் காதையில் மாதவியை இளங்கோ காட்டும் இடம் மிகவும் நுட்பமானது. மாதவி நடனம் ஆடும் நடனமேடையின் வர்ணனையை மட்டுமே இளங்கோ அளிப்பார். அந்த மேடையில் எவ்விதமான மலரலங்காரங்கள் இருந்தன. எவ்விதமான நிறங்கள் இருந்தன. மேடையை அழகுபடுத்தும் துகில்கள் குறித்த குறிப்புகள். இவற்றை மட்டுமே இளங்கோ சொல்லிக் கொண்டு வருவார். முதல்முறை அதனை வாசித்த போது என் அகம் அந்த எழிலார்ந்த மேடையை கற்பனை செய்து கொண்டே வந்தது. அத்தனை அழகிய மேடையில் மாதவியின் நடனம் நடந்தது எனக் கூறும் போது அவள் எத்தனை அழகாக இருப்பாள் என வாசகனின் மனமே கற்பனை செய்து கொள்ளும். அந்த கற்பனை மகத்தானதாக இருக்கும். உலக இலக்கியத்தில் இவ்வாறான உத்தியை வேறு படைப்பாளிகள் எவரும் பயன்படுத்தியிருக்கிறார்களா என்பது ஐயமே. பூம்புகார் உள் நுழைந்ததுமே ‘’இந்திர விழா’’ என்னும் சொல் என் மனதில் நிறைந்தது. ‘’தேவேந்திர விழா’’ என்னும் புதிய சொல்லும் என் மனத்தில் புதிதாக உலவத் தொடங்கியது. 

கடற்கரையில் அமர்ந்து கொண்டோம். அதற்கு முன் சிறு பொழுது அலைகளில் நின்று கொண்டிருந்தோம். அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த போது நண்பரிடம் சிறிது நேரம் கண் மூடி அமர விரும்புகிறேன் எனக் கூறி அவ்விதமே செய்தேன். பூரண ஞானம் பொலிந்த நன்னாடு ; புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு’’ என்னும் வரி மனதுக்குள் நிறைந்தது. எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை. ஒளிர்தல் ஞானத்தின் இயல்பு என்பதால் பாரதி பொலிதல் என்கிறான். அருள் பிரவாகிப்பது என்பதால் பொங்குதல் என்கிறான். மனிதர்கள் அருள் என்பதை துளியளவில் மட்டுமே உணர்கின்றனர். எனவே சாமானியர்களுக்கு அருள் என்பது ஒரு துளியே. எங்கும் நிறைந்திருக்கும் அருளை முழுமையாக உணர இயலாமல் சாமானியர்களின் அறியாமையும் பந்த பாசங்களும் தடுக்கின்றன. கோடானுகோடியில் ஒருவரை எங்கும் நிறைந்திருக்கும் அருளை முழு வடிவில் காண்கின்றனர். அத்தகையோர் அருள் குறித்து முதல் சொல்லே அருள் என்பது பொங்கிப் பாயும் பிரவாகம் என்பதையே. மாணிக்கவாசகர் வெள்ளக் கருணை என்கிறார். அருட்கடல் என்னும் வார்த்தை உள்ளது. 

நண்பரிடம் ஏன் ஒரே ஊரில் எப்போதும் வசிக்க வேண்டும் என்னும் வினா என்னுள் இருப்பதாகவும் ஊரைத் தவிர ஸ்ரீரங்கத்திலும் காஞ்சிபுரத்திலும் ஒரு வீடு எடுத்து தங்க இருப்ப்பதாகவும் சொன்னேன். நண்பர் ஊரை விட்டுப் போகாதீர்கள் என்றார். இங்கேயும் இருப்பேன் ; அங்கேயும் இருப்பேன் என்று சொன்னேன். ‘’பூம்புகார் மிஸ் பண்ணுவன். ஆனா காஞ்சிபுரத்துல இருந்தா அங்கிருந்து மாமல்லபுரம் பக்கம் தான். அங்க போவன். ஊர் தான் வேற ; கடல் அதே வங்கக் கடல் தான்’’ என்றேன். 

புத்தரைப் பற்றிய பேச்சு வந்ததால் மகாவீரரைப் பற்றியும் பேச்சு வந்தது. ‘’ உளுந்தூர்பேட்டை பக்கத்துல திருநெடுங்குன்றம் என்னும் ஊர் இருக்கு. அங்க ஒரு ஜெயின் குகைக்கோயில் இருக்கு. குந்தவை நாச்சியார் நிவந்தம் அளித்த குகைக் கோயில். நானும் ஃபிரண்டும் போயிருந்த போது அங்க ஒரு ஸ்கூல் டீச்சர் வந்திருந்தாங்க. அவங்க சமணர். அவங்க சொன்னாங்க ‘’தீர்த்தங்கரர்கள் தவம் செய்றது ஒரு மோனப் பெரு வெளி. அங்க மௌனம் மட்டும் தான் இருக்கு. அவங்க அந்த மௌனமா நிறைஞ்சு இருக்காங்க. அவங்களுக்கு மனுஷங்களோட சந்தோஷத்தின் எக்காளங்களோ துயரத்தோட அரற்றல்களோ எதுவுமே கேக்காது. அங்க மௌனம் மௌனம் மௌனம் மட்டும் தான். கால பைவரவரும் பத்மாவதி யட்சியும் மட்டும் தான் சாமானிய உலகத்தில இருந்துட்டு மோனப் பெரு வெளிக்கும் போய்ட்டு வரவங்க. உங்க பிராத்தனைகளை நீங்க அவங்க கிட்ட மட்டும் தான் சொல்லணும்.’’. நண்பரிடம் அதனைக் கூறி விட்டு ‘’ஒட்டு மொத்த பிரபஞ்சமும் அந்த மோனப் பெரு வெளியை நோக்கித்தான் போகுதுன்னு நான் நினைக்கிறேன். இந்த பனை மரத்துக்கு அங்க போய் சேர மூணு கோடி வருஷம் ஆகும். எனக்கு நாலு கோடி வருஷம் ஆகலாம். உங்களுக்கு ஐம்பது லட்சம் வருஷம் ஆகலாம்’’ எனச் சொன்னேன். என்னை விட எட்டு மடங்கு வேகம் நண்பர் கொண்டிருக்கிறார் எனச் சொன்னால் அவர் மகிழ்வார் என எண்ணித்தான் அவரிடம் சொன்னேன். மோனப் பெரு வெளிக்கு அவர் போக இன்னும் ஐம்பது லட்சம் வருஷம் ஆகுமா என்ற அங்கலாய்ப்பே அவருக்கு ஏற்பட்டது. 

சிவபுரம்

மாணிக்கவாசகரின்

பூவார் சென்னி மன்னன் என் புயங்கப் பெருமான் சிறியோமை

ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்

போகும் காலம் வந்தது காண் பொய் விட்டு உடையான் கழல் புகவே

என்னும் பாடல் கடந்த சில வாரங்களாக மனதுக்குள் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது. நாளின் பல சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் மனதில் வந்து நின்றது. ஊரை விட்டுப் புறப்படுவோம் என்ற எண்ணம் வந்ததால் இந்தப் பாடல் இன்னும் மனதுக்கு நெருக்கமானது. 

மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் ‘’யாத்திரைப் பத்து’’ என்னும் பகுதியில் இடம் பெற்றிருக்கும் பாடல் இது. எளிய ஜீவன்கள் ஒன்று கூடுகின்றன. அவற்றுக்கு முழுமுழுமையான பரம்பொருளைக் காணச் செல்ல வேண்டும் என ஆவல். அந்த ஆவல் உண்மையானது . தீவிரமானது. ஆனால் அவை தாம் கர்மவினைகளிலும் பாச பந்தங்களிலும் சிக்கியிருக்கும் இன்னும் விடுபடாத முடியாத நிலையில் இருக்கும் ஜீவன்கள் என தங்களை அறியும். அவற்றின் எல்லைகள் அவற்றுக்கு மிக நன்றாகவே தெரிகிறது. அவற்றை நம்பிச் சென்றால் பயணத்தை நிறைவு செய்து இலக்கை அடைய வாய்ப்பில்லை என்பதால் இப்பயணத்தை எவ்விதம் துவக்குவது எனத் தெரியாமல் திகைத்து நிற்கின்றன. மாணிக்கவாச்கர் அவற்றிடம் நம் ஆற்றலை நம்புவதை விட நமது இறைவனின் கருணையை நம்பிப் பயணிக்கலாம். அவன் நம் மீது கருணை கொண்டு நம் பயணத்தை நிறைவேற்றுவான் என நற்சொல் கூறுகிறார். ‘’யாத்திரைப் பத்தில்’’ சிவனின் இருப்பிடத்தை மாணிக்கவாசகர் சிவபுரம் என்கிறார். 

எனக்கு முதல் பாடலில் உள்ள 

‘’போகும் காலம் வந்தது காண்’’ என்னும் வரியும் ‘’பொய் விட்டு உடையான் கழல் புகவே’’ என்னும் வரியும் உணர்ச்சிகரமான வரிகளாக இருந்தன. ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு சென்று விட வேண்டும் என்னும் உணர்வு தீவிரமாக இருக்கும் எனக்கு ‘’போகும் காலம் வந்தது காண்’’ என்னும் வரி மனதுக்கு மிக நெருக்கமாகிப் போனது. 

இங்கே செய்து முடிக்க வேண்டியதை எல்லாம் விரைவில் செய்து முடித்து விட்டு புறப்பட வேண்டும். நிறைவுப் பணிகள் என வரையறுத்துக் கொண்டு செல்ல நினைக்கும் ஊரிலிருந்து கூட இங்கே வந்து அவற்றை நிறைவு செய்யலாம் என அவ்வப்போது எண்ணம் கொண்டேன். 

சிவன் நினைவில் எப்போது முழுமையாக மூழ்குகிறோமோ அப்போது அந்நிலையில் நாம் இருக்கும் எல்லா ஊரும் சிவபுரமே. சிவபுரம் புறத்தில் இல்லை. அகத்தில் இருக்கிறது. 

இன்று திருக்குடந்தை அருகில் இருக்கும் சிவபுரம் என்னும் ஊருக்குச் சென்றிருந்தேன். அங்கே கோயில் கொண்டிருக்கும் இறைவனின் பெயர் சிவகுருநாதன். அம்மையின் பெயர் ஆர்யாம்பாள். அங்கப் பிரதட்சணம் செய்யும் வழக்கம் கொண்ட ஒரே சிவன் கோவில் இதுவே. ஆலயத்தில் சில நிமிடங்கள் கண் மூடி அமரும் போது ஆழ்ந்த அமைதி ஒன்றை உணர முடிகிறது. 

நித்ய அமுதம்

 இன்று
இப் பொழுது
இந்தக் கடல் அமுதக் கடலாய் இருக்கிறது
நுரைக்கும் அலைகள் அமுதமாய் இருக்கின்றன
நிலவின் துமிகள் அமுதத் துமிகளாய் இருக்கின்றன
வானம் அமுத வானாய் இருக்கிறது
அமுத வானின் அமுதத் துமிகள் தூவும் அமுதக் கடலின் கரையில்
நின்றிருக்கும்
நீ
நித்ய அமுதம்

Friday, 1 May 2026

 இருத்தல்
எத்தனை இனியது
எவ்வளவு பெரிய வெளி
எத்தனை வான் மீன்கள்
ஆழி சூழ் உலகு
அதில் பரவியிருக்கும் உயிர்க்குலம்
எப்போதும் இருக்கிறேன் இங்கே
எப்போதும் இல்லாமல் இருந்ததில்லை
இங்கே