Wednesday, 11 March 2026

ஆவணமா ? நிலமா? (நகைச்சுவைக் கட்டுரை)

என்னிடம் யாராவது ஒரு நிலமோ மனையோ விற்பனைக்கு வருகிறது என்று சொன்னால் அந்த இடத்தை என்னிடம் காட்டச் சொல்வேன்.  ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அனைவருமே முதலில் இடத்தைப் பார்க்க விரும்புவார்கள். அந்த இடத்தைப் பார்க்கும் போது மனம் எப்படி உணர்கிறது உள்ளுணர்வு எவ்விதம் செயல்படுகிறது என்பது முக்கியமானது என்பதால் முதலில் இடத்தை நேரில் பார்ப்பது என்பதை வைத்துக் கொள்வார்கள். அந்த இடம் அமைந்திருக்கும் சாலையின் அகலம் என்ன பக்கத்து நிலம் அல்லது மனை யாருக்குச் சொந்தமானது எல்லைகள் வேலியிடப்பட்டிருக்கின்றனவா வித்தியாசமாக ஏதும் புறச்சூழ்நிலை உள்ளதா என்பவை அந்த முதற்பார்வையிலேயே தெரிந்து விடும். என் மனதுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே அந்த இடத்தை எனது வாடிக்கையாளர்களுக்குக் காட்டுவேன். ஒருவருக்கு இடம் பிடித்திருந்து இடத்தின் உரிமையாளர் சொல்லும் விலைக்கு அருகில் வரும் அளவு வாடிக்கையாளருக்கு வாங்கும் சக்தி இருந்தால் ‘’வாங்குபவர்’’ ‘’விற்பவர்’’ சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். இது பரவலான வழிமுறை. கடந்த சில நாட்களில் நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். நில உரிமையாளர் அல்லது நிலத் தரகர்கள் எவரும் நிலம் அல்லது மனை விற்பனைக்கு வருகிறது என்று சொன்னால் முதலில் அவர்களை அந்த நிலத்தின் ஆவண நகல், மூல ஆவண நகல், 100 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றிதழ், சொத்து வரி ரசீது நகல், மனை வரைபடம் அல்லது நில வரைபடம், அதில் கட்டிடம் இருந்தால் கட்டிட வரைபடம் ஆகிய அனைத்தையும் ஒரு கோப்பாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை வற்புறுத்திக் கூற வேண்டும் என இருக்கிறேன். நான் இந்தத் துறைக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகிறது. கட்டுமானம் தான் என்னுடைய தொழில். அதன் உப பிரிவாக ரியல் எஸ்டேட் எனக்கு இருந்தது. ரியல் எஸ்டேட்டை பிரதானமாக நான் கொண்டதில்லை. ஆனால் நான் துறைக்கு வந்ததற்கும் இப்போதைக்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது. முன்னர் என்னுடைய வாடிக்கையாளர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். ஊரில் சிறந்த குடியிருப்புப் பகுதியில் 2400 சதுர அடி மனையை சதுர அடி ரூ.100 வீதம் ரூ.2,40,000க்கு வாங்க முடியும். 20 ஆண்டுகளுக்கு முன்னால் சதுர அடி ரூ.100 விற்ற மனை இப்போது சதுர அடி ரூ.2500 விற்கிறது. ரூ.2,40,000 என்ற அளவில் வாங்கப்பட்ட மனை இன்று ரூ.60,00,000க்கு விற்பனை ஆகிறது. 25 மடங்கு விலையேற்றம். ஒரு ஏக்கர் விளைநிலம் அப்போது ரூ.44,000 என்ற விலையில் இருந்தது. இன்று ஒரு ஏக்கர் நிலம் ரூ. 30,00,000 க்கு விற்பனை ஆகிறது.  68 மடங்கு விலையேற்றம். இடம் மாறவில்லை. அப்படியே இருக்கிறது அசையாமல். விலை மாறிவிட்டது பலமடங்கு. இந்த 20 ஆண்டுகளில் பத்திரப்பதிவுத் துறையின் விதிமுறைகளும் பெரும் மாற்றம் கொண்டுள்ளன. இருப்பினும் ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் மனதில் கடந்த காலத்தின் நினைவுகள் மட்டுமே ஆழ வேரூன்றி இருக்கிறது. இந்தத் துறையே ‘’கடந்த காலத்தின் கைதி’’ ( prisoner of past)யாக உள்ளது. 

இனி என்ன செய்யலாம் என இருக்கிறேன் என்றால் நில உரிமையாளர்களோ அல்லது தரகர்களோ இடம் குறித்து கூறினால் அந்த  நிலத்தின் ஆவண நகல், மூல ஆவண நகல், 100 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றிதழ், சொத்து வரி ரசீது நகல், மனை வரைபடம் அல்லது நில வரைபடம், அதில் கட்டிடம் இருந்தால் கட்டிட வரைபடம் ஆகிய அனைத்தையும் ஒரு கோப்பாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனக் கூற இருக்கிறேன். இன்று எந்த ஒரு அசையா சொத்துமே மிகக் குறைந்தபட்சம் ரூ.10,00,000 என்ற விலையில் இருக்கிறது. அத்தனை மதிப்பு மிக்க சொத்து தொடர்பான கோப்பை உருவாக்கிக் கொள்வது நில உரிமையாளரின் கடமை ; மேலும் நிலத் தரகர்களுக்கும் நேரம் மிச்சமாகும். ஒரு இடத்தைக் காட்டி வாடிக்கையாளருக்கு அந்த இடம் பிடித்திருந்து ‘’விற்பவருடன்’’ சந்திப்பு ஏற்பாடு செய்யச் சொன்னால் தேவையான ஆவண நகல்களைப் பெறுவதில் ஒரு வாரம் ஓடி விடும். அந்த பணியில் அலைச்சல் அதிகம். 

நிலம் அல்லது மனை தொடர்பான கோப்பு உருவாக்கப்படும் போது அந்த இடம் அல்லது மனை தொடர்பான விஷயங்கள் ஒரு சட்டகத்துக்குள் அல்லது வரையறைக்குள் வருவது அந்த இடம் தொடர்பான வணிக நகர்வை முக்கிய இடத்துக்குக் கொண்டு செல்லும் என எண்ணுகிறேன். 

மீடியேட்டர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பே ‘’டாகுமெண்ட் ஜெராக்ஸ்’’ என ஆவண நகல் வைத்திருப்பார்கள். ‘’டாகுமெண்ட் ஜெராக்ஸ்’’ வைத்திருக்கும் மீடியேட்டர் நில உரிமையாளரின் நம்பிக்கைக்குரியவர் என்பது பொருள். நம்பிக்கைக்குரிய மீடியேட்டரிடம் மட்டுமே நில உரிமையாளர் ‘’டாகுமெண்ட் ஜெராக்ஸ்’’ தருவார். இப்போது காலமும் சூழ்நிலையும் சட்டதிட்டங்களும் இடம் பொருள் ஏவலும் மாறி விட்டது. முழுமையான கோப்பு இப்போது அவசியத் தேவை. 

ஒரு இடத்தையோ அல்லது ஒரு நிலத்தையோ பார்த்தால் அது என் மனதுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே நான் அதில் ஈடுபடுவேன். ‘’பிடித்திருக்கிறது’’ அல்லது ‘’பிடிக்கவில்லை’’ என்பதை உடனடியாக அங்கேயே கூறி விடுவேன். இனி நிலத்தின் உரிமையாளர்கள் அல்லது மீடியேட்டர்களிடம் நிலத்தின் கோப்பை முழுமையாகக் கொடுத்தால் தான் நிலம் அல்லது இடம் பார்க்கவே வருவேன் எனக் கூறி விடலாம் என இருக்கிறேன். 

வேல்யுவேஷன் (நகைச்சுவைக் கட்டுரை)

 ரியல் எஸ்டேட் நண்பருடன் நேற்று உரையாடிக் கொண்டிருந்தேன். அவரது சொத்து ஒன்றை விற்க வேண்டும் என்று சொன்னார். சொத்தை விற்க விரும்பும் ‘’செல்லர்’’களிடம் கேட்பது போல அந்த சொத்தின் ஆவண நகல்களைக் கேட்டேன். அவரிடம் அவை 90 சதவீதம் இருந்தன. ஒரு சில சொத்து வரி ரசீதுகள் உடனடியாகத் தேடும் இடத்தில் இல்லை. தேடி எடுத்து வைக்கிறேன் என்றார். என்ன வேல்யூவேஷன் சொத்துக்கு என்பதை நோட் செய்து கொடுங்கள் என்றேன். ஒரு ரெஃபரன்ஸூக்காக என்னிடம் மட்டுமே இருக்கும் ; யாரிடமும் காட்ட மாட்டேன் என்றேன். இருவருமே ரியல் எஸ்டேட் என்பதால் இருவருக்குமே இது தெரியும் என்றாலும் ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பாக கூறினேன். அந்த இடத்தின் பரப்பு என்ன அந்த பகுதியில் காலிமனை சதுர அடி என்ன விலை போகிறது கட்டிடத்தின் பரப்பு என்ன கட்டிடத்துக்கு எவ்வளவு மதிப்பு உத்தேசிக்கிறார் என்பதைக் குறித்து இவற்றைக் கூட்டி மொத்த மதிப்பில் 70 சதவீதம் விலைக்குக் கேட்டால் கூட கொடுத்து விடுவோம் என்றார். சொத்தின் மதிப்பு 1.5 சி வந்தது. 1 சி க்கு யாரேனும் கேட்டால் கொடுத்து விடுவோம் என்றார். அது சரியான மதிப்பீடுதான். நான் அதனை இரண்டு மூன்று தடவை பார்த்தேன். அப்போது அவர் சொத்து வரி ரசீதை தேடச் சென்றார். அப்போது நான் ஒரு கணக்கீடு செய்து பார்த்தேன். அதாவது, அந்த சொத்தின் மதிப்பு 1.5. அவர் 33 சதவீதம் விலையைத் தள்ளி கொடுக்கிறேன் என்றார். காலிமனை மதிப்பு ஊரில் என்ன விலை சொல்லப்படுகிறதோ அதைத்தான் குறித்திருக்கிறார். அந்த கட்டிடம் கட்டி 10 ஆண்டுகள் ஆகின்றன. புதிய கட்டிடத்தின் கட்டுமானச் செலவில் கணிசமான சதவீதம் 10 ஆண்டு பழமைக்காகக் குறைத்திருந்தார். இருப்பினும் அதில் சற்று கறாராக மதிப்பிட்டால் மேலும் 10 எல் குறைக்க முடியும். அவ்வாறெனில் மொத்த மதிப்பீடு 1.4 சி. அதில் 33 சதவீதம் குறைத்தால் 93 எல் விற்பனை விலை என்றாகும். நண்பர் சொத்து வரி ரசீதுடன் வந்தவுடன் கட்டிடத்துக்கு 10 எல் வேல்யூவேஷன் அதிகமாக இருக்கிறதா அதைக் குறைத்து மொத்தத்தில் குறைக்கலாமா என்று கேட்டேன். நண்பர் டென்ஷன் ஆகி விட்டார். மொத்த மதிப்பு 1.5 சி ; நான் 1.1 வந்தால் தான் கொடுப்பேன் என்று கூறி இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்றார். ‘’ பையர் இப்படி ஒரு டிமாண்ட் வைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் தான் கேட்டேன். நோ இஸ்யூஸ். 1 சி க்கு மேலயே முடிச்சுடலாம்’’ என்றேன். நண்பர் அமைதியானார். அவர் சொத்து மதிப்பு மிக்க சொத்து. அதனை விற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

Tuesday, 10 March 2026

இரு நண்பர்கள் (நகைச்சுவைக் கட்டுரை)

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில். எனது இயல்பு எந்த விஷயத்தையும் உள்ளது உள்ளபடி சொல்லி விடுவேன். ரியல் எஸ்டேட்டில் அவ்விதம் இருந்தால் மனச்சுமை இல்லாமல் இருக்கலாம். இந்த தொழிலில் உள்ளது உள்ளபடி சொன்னாலும் வேலை நடக்கும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. எனவே 99.99 சதவீதத்தினர் அவ்விதம் இருக்க மாட்டார்கள். உளவியலில் ஒரு விஷயம் கூறப்படுவதுண்டு. சரியாகச் சொல்லப் போனால் ஒரு விஷயம் அல்ல இரண்டு விஷயங்கள். அதாவது நாம் ஒரு செயலை செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டால் அதனை 100 சதவீதம் அப்படியே சொற்களாக வெளிப்படுத்தக் கூடாது. அவ்விதம் வெளிப்படுத்தினால் அந்த செயல் நடந்து விட்டதாக மனமும் உடலும் நம்பத் தொடங்கி விடும். அடுத்த பணியை நோக்கி அடுத்த மனநிலையை நோக்கி உடலும் மனமும் நகரும். நாம் செய்ய விரும்பிய செயலுக்கு உடலும் மனமும் முழு ஒத்துழைப்பை அளிக்காது. எனவே நாம் செய்ய விரும்பியதை செய்ய விரும்பிய வண்ணமே செய்ய அல்லது இன்னும் சிறப்பாகச் செய்ய அது நடந்து முடியும் வரை அதனை வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும். இதெல்லாம் லௌகிக வாழ்க்கையில் எல்லாருமே கவனித்திருப்பார்கள். ரியல் எஸ்டேட் பேரங்களாலும் பேச்சுவார்த்தைகளாலும் ஆனது. இங்கே ஒரு செயல் நிகழ்ந்து முடியும் வரை பேசாமல் இருக்க முடியாது. ஆகவே என்ன செய்வார்கள் என்றால் செய்ய விரும்பும் விஷயத்தை சற்றே மாற்றிச் சொல்வார்கள். ஒருவருக்கு அடுத்த நாள் புதுச்சேரி செல்லும் வேலை இருந்தால் அவர் மற்றவர்களிடம் ‘’நாளை விழுப்புரம் செல்கிறேன்’’ என்பார். இரண்டும் பக்கத்து பக்கத்து ஊர்கள். ஆதலால் அவர் சொன்னது உண்மை அல்ல என்ற கணக்கில் வராது என்பது இதன் சமாதானம். இன்னும் சிலர் ‘’நாளை கடலூர் செல்கிறேன்’’ என்பார்கள். கடலூரைத் தாண்டித்தான் புதுச்சேரி செல்ல வேண்டும் என்பதால் தான் கூறியது முழு உண்மையே என்பது அவர்கள் எண்ணம். புதுச்சேரியை கடலூர், விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் எனக் கூறுபவர்கள் ரியல் எஸ்டேட்டில் பரவலானவர்கள். புதுச்சேரி செல்ல இருப்பதை ஒருவர் ’’நாளை திருப்பூர் செல்ல இருக்கிறேன்’’ எனக் கூறினால் அவர் சற்று எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய நபர் என பிறர் ஜாக்கிரதை ஆகி விடுவார்கள். காவல்துறையில் ஒரு விஷயம் கூறப்படுவதுண்டு. ஒருவர் தன் முகவரியை மாற்றிக் கொடுக்கிறார் என்றால் அவர் நேரு நகரில் வசித்தால் இந்திரா நகர் என மாற்றி எழுதுவார். தஞ்சாவூரில் வசித்தால் திருச்சி என மாற்றி எழுதுவார் எனக் கூறுவார்கள். மனம் அந்த அளவு மாற்றத்தை மட்டுமே இலகுவாக அனுமதிக்கும். ஒருவர் முற்றிலும் மாற்றி எழுதுகிறார் என்றால் இவ்விதமான விஷயத்தை பலமுறை செய்த வழக்கம் கொண்டவர் என அவதானித்துக் கொள்வர்.  என்னுடைய பாணி ’’நாளை ஊரில் இல்லை’’ என்று மட்டும் கூறிவிடுவது.  இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் உண்டு. உண்மையைத் தவிர வேறு எதைக் கூறினாலும் உடனிருப்பவர்களுக்கு அது தெரிந்து விடும். எதற்கு எதை மாற்றிக் கூறுவார் என்பது கூட தெரிந்து விடும். ஆதலால் எந்த அல்லலும் இன்றி சம்பந்தப்பட்டவர் மனதைப் படித்து விடுவார்கள். நண்பர் எதைச் சொன்னாலும் அதன் உட்பொருள் எனக்குத் தெரிந்து விடும். எனது மௌனத்தின் உட்பொருள் அதே அளவு நண்பருக்கும் தெரிந்து விடும். எனக்கும் அவர் மீது புகார் இல்லை. அவருக்கும் என் மீது புகார் இல்லை. நாங்கள் பல விஷயங்களில் இணைந்து செயல்படுகிறோம். 

Monday, 9 March 2026

தொழிலும் நட்பும் (நகைச்சுவைக் கட்டுரை)

 சமீபத்தில் அறிமுகமான நண்பர் எனது நண்பரின் வயலை வாங்கிக் கொள்ள விருப்பம் கொண்டுள்ளார். நிலம் குறித்த விபரங்கள் ஆவணங்களை அளிக்க அவ்வப்போது சந்தித்தேன். அதில் அறிமுகமான நண்பருடன் ஒரு பரிச்சயம் ஏற்பட்டது. அவர் செயற்கை உரங்கள் இடாமல் விவசாயம் செய்ய விரும்புகிறார். அவருக்கு ‘’காவிரி போற்றுதும்’’ முயற்சி செய்யும் விஷயத்தின் செயல் குறிப்பை அளித்தேன். இந்த விஷயத்துக்கும் நில பேரத்துக்கும் தொடபில்லை எனினும் அவரது பரிசீலனைக்கு ஒரு விஷயத்தை அளித்தது மேலும் நட்பார்ந்த சூழலை உருவாக்கியது. 

அவரிடம் அளித்த குறிப்பு 

ஒரு ஏக்கர் = 43,560 சதுர அடி

தோராயமாக 43,560 சதுர அடி = 210 X 210

ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் இடையே இடைவெளி 12 அடி.  (பொதுவாக 10 அடி இடைவெளியும் கொடுக்கப்படுகிறது)

210 அடியில் நடக்கூடிய மரங்களின் எண்ணிக்கை = 17

210 X 210 = 17 X 17 = 289

2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழம் கொண்ட குழி எடுக்க வேண்டும். அதில் மக்கிய சாண எரு இட்டு தேக்கு மரக்கன்றுகளை நட வேண்டும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மழைக்காலத்தில் நீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. 

மரக்கன்று வளரும் முதல் இரு வருடம் கவாத்து செய்ய வேண்டும். மரம் 10 அடி உயரம் வரை கவாத்து செய்தால் போதுமானது. அதற்கு மேல் உள்ள உயரத்துக்கு கவாத்து செய்யத் தேவையில்லை. 

முறையாக குழி எடுத்து சாண எரு இடப்பட்டு வாரம் இரு நாள் நீர் பாய்ச்சி கவாத்து செய்யப்பட்டு வளர்க்கப்பட்ட தேக்கு மரம் 15 ஆண்டுகளுக்குப் பின்
குறைந்தபட்சம் ஒரு மரம் ரூ.50,000க்கு விற்பனை ஆகும். 289 மரங்களின் விற்பனை விலை = ரூ.1,44,50,000 (ரூபாய் ஒரு கோடியே நாற்பத்து நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) 

 

Saturday, 7 March 2026

அளத்தல் (நகைச்சுவைக் கட்டுரை)

எனது நண்பர் ஒருவர் அதிநவீன அளவைக் கருவியொன்றை வாங்கி அதன் மூலம் நிலம், மனை ஆகியவற்றை அளவீடு செய்து தருகிறார். மிக விலையுயர்ந்த அந்த சாதனத்தை வங்கிக் கடன் மூலம் வாங்கியிருக்கிறார். அளவீட்டுப் பணிகளை மிகப் பெரிய அளவில் அது எளிதாக்குகிறது. ஒரு இடத்தை அளக்க ஒரு மணி நேரமும் மூன்று பணியாளர்களும் தேவை எனில் இக்கருவியைக் கொண்டு ஒரே பணியாளர் பத்து நிமிடம் என்ற அளவில் வேலையை நிறைவு செய்ய முடிகிறது. ஆறில் ஒரு பங்கு நேரம் மட்டுமே தேவைப்படும் என்றாலும் இரண்டு பகல்கள் அளக்கக்கூடிய பரப்பை இக்கருவியைக் கொண்டு அளக்க 5 மணி நேரமாவது ஆகும். 20 ஏக்கர் நிலத்தை அளக்க வேண்டும் என்பது பணி. நண்பர் அதனை செய்து கொடுத்து விட்டார். நிலத்துக்குப் பக்கத்தில் இருந்த சாலையில் இருந்தும் சர்வே கல்லிலிருந்தும் அளவையைத் துவக்கி மொத்த 20 ஏக்கர் நிலத்தையும் அளந்து அதனை 14 பகுதிகளாகப் பிரித்து அளவைக் காட்டியிருக்கிறார் நண்பர். அந்த நிலத்துக்கு உரியவர்கள் இருவர். இன்னொருவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சர்வேயர் ஒருவரைக் கொண்டு அளந்திருக்கிறார்கள். அவர்கள் அளவையை பக்கத்து வயலின் வேலியிலிருந்து துவங்கியிருக்கிறார்கள். அது 6 மீட்டர் உள்ளடிங்கி இருக்கிறது. எனவே மொத்த 14 பகுதிக்கும் அளவு மாறிக் கொண்டே செல்கிறது. அதிநவீனக் கருவியின் பயன்பாட்டை பரிச்சயப்படுத்திக் கொள்ளும் விதமாக நானும் உடன் சென்றேன். நாங்கள் சென்ற போது அவர்கள் அளவீட்டைத் துவக்கியிருந்தார்கள். வேலியிருலிருந்து துவக்காதீர்கள் சாலையிலிருந்து துவக்குங்கள் என்று கூறினோம். அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் செய்வதையே செய்து கொண்டிருந்தார்கள். நண்பரை உடன் இருக்கச் சொல்லி விட்டு அங்கே ஓர் அருமையான மரத்து நிழலும் அதில் கயிற்றுக் கட்டிலும் இருந்தது. அதில் சென்று அமர்ந்து கொண்டு நான் சில ரியல் எஸ்டேட் ஃபோன் அழைப்புகளை பேசிக் கொண்டிருந்தேன். பின்னர் நம் மரபில் ‘’நிழல்’’ அல்லது’’சாயா’’ எனப்படும் விஷயங்கள் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்.  

ஓரிரு தினங்களுக்கு முன் தரங்கம்பாடி சென்றிருந்த போது கடற்கரையில் நின்றிருந்தேன். அப்போது எனது நிழல் கடலின் மீது விழுந்தது. அலையோட்டத்தில் மிதந்தது என் நிழல். எனது நிழல் நீரில் மிதப்பதால் நானும் நீரில் மிதக்கிறேனா என எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. நமது மரபு சூரியதேவனின் மனைவியின் பெயர் சாயா தேவி என்கிறது. நிழல் என்பது ஒளியுடன் தொடர்பு கொண்டது. ராகு கேது ஆகிய கிரகங்களை நிழல் கிரகங்கள் என வகுக்கின்றன நமது ஜோதிட நூல்கள். நமது நிழலைக் கவனிக்கும் ஒரு விதமான தியான முறை உள்ளது. நம்முடைய நிழலை உற்று நோக்குவதன் மூலம் நாம் நம்மைப் பற்றி அறிகிறோம் ; உணர்கிறோம் என்பது அதன் வழிமுறை. பொதுவாக தியானம் கண் மூடி நிகழ்கையில் இந்த நிழல் தியானம் கண் திறந்து செய்யப்பட வேண்டியது. நிலத்திலும் காற்றிலும் வானிலும் வெப்பம் எவ்வளவு இருப்பினும் ஒரு மரத்தின் நிழல் நமக்குக் குளுமையைத் தந்து விடுகிறது. குளிர்தரு என்கிறார் வள்ளலார். ‘’குளிர்தருவே தருநிழலே நிழல் கனந்த கனியே ஆடையிலே எனை மணந்த மணவாளா’’ என நடராஜப் பெருமானைத் துதிக்கிறார். மரத்தின் நிழல் என்பது மரத்துடையதா? நம்முடைய நிழல் நம்முடையதா? இது போன்ற பல கேள்விகள் எழுந்தன. அவற்றையும் மரத்தடி நிழலில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். 

மாலை 6 மணியானதும் எந்த முடிவும் எட்டப்படாமல் இரு தரப்பும் பிரிந்தனர். நண்பர் கருவியை எடுத்துக் கொண்டார். நாங்கள் ஊர் வந்து சேர்ந்தோம். 

Friday, 6 March 2026

விபரம் (நகைச்சுவைக் கட்டுரை)

எனது நண்பர் ஒருவர் மும்பையில் வசிக்கிறார். அவருக்கு இங்கே ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கல்லூரி அருகே 5 ஏக்கர் நிலம் உள்ளது. குத்தகைக்கு விட்டிருக்கிறார். புறவழிச்சாலை புதிதாக அமைவதால் அவரது நிலத்துக்கு சிறப்பான சாலை வசதி கிடைக்க இருக்கிறது. சாலைப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக அவரது நிலத்தின் விலை இப்போது கணிசமாக ஏறி விட்டது.  நல்ல விலை கிடைப்பதால் நிலத்தை விற்கலாம் என முடிவு செய்திருக்கிறார். இப்போது விற்றாலும் லாபம் இன்னும் சில வருடங்கள் தள்ளி விற்றாலும் லாபம் என இருக்கிறார். இடத்தை வாங்க நல்ல பார்ட்டி இருந்தால் சொல்லவும் என்று எனக்கு ஃபோன் செய்தார். இடத்தின் ஆவணம், மூல ஆவணம், பட்டா ஆகியவற்றை மின்னஞ்சலில் அனுப்பச் சொன்னேன். அவருக்குத் தெரிந்த மீடியேட்டர்களிடமும் விபரம் சொல்லி விடுமாறு சொன்னேன். அவர் என் வழியாக நடப்பதை விரும்புகிறேன் என்று சொன்னார். இருந்தாலும் நாம் மற்றவர்களிடமும் சொல்லுங்கள் என வற்புறுத்திக் கூறினேன். அது நன்மை பயப்பது என்பது என்பது எனது நடைமுறைப் புரிதல். பொதுவாக ரியல் எஸ்டேட் விஷயங்கள் கமுக்கமாக இருப்பது நல்லது என எண்ணுவார்கள். அதன் உப விளைவு என்னவெனில் அந்த இடம் தொடர்பாக பல புனைவுகள் உருவாகிவிடும். பலரிடம் விஷயத்தைத் தெரியப்படுத்தினாலும் மேலும் புனைவுகள் உருவாகும் என்றாலும் விஷயம் பலரிடம் கொண்டு செல்லப்படுவது அந்த இடம் முடிய ஒரு வாய்ப்பை உருவாக்கும்.  

நான் சொன்னபடி அவர் பலரிடமும் சொல்லியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் ஒருவர் எங்கள் தெருவில் நில உரிமையாளரான நண்பரின் பெயரைச் சொல்லி வீடு விசாரிக்கிறார். புறவழிச்சாலை அருகே வயல் உள்ளவர் என்பது தான் அவர் கூறும் தகவல். நில உரிமையாளரின் வீடு ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவு கொண்ட இன்னொரு கிராமத்தில் இருக்கிறது. அவர் வீட்டை ஏன் என் வீடு இருக்கும் பகுதியில் தேடிக் கொண்டிருக்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் புறவழிச்சாலை அருகே நிலம் உள்ளவர் எனக் கூறியதால் எனக்கு ஒரு சிறு ‘’பொறி’’ தட்டியது. என்ன காரணத்துக்காக அவரை நீங்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டேன். அவர் வயலில் டிராக்டர் உழ என்று கூறினார். புறவழிச்சாலை அருகே நிலம் உள்ளவர் என நீங்கள் கூறுபவர் எனக்குத் தெரிந்தவர் தான் ஆனால் அவர் நிலத்தைக் குத்தகைக்கு விட்டிருக்கிறார். அந்த குத்தகைதாரர் யார் என விசாரித்து அவரைச் சென்று பார்ப்பது உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று கூறினேன். அவர் சற்று குழப்பமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. அவர் வீடு எங்கே இருக்கிறது என விசாரித்துக் கொண்டு அவருடைய அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டேன். அவர் கிட்டத்தட்ட தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் விசாரித்ததை நான் பார்த்தேன். யாரேனும் என்னிடம் முகவரி கேட்டு விசாரித்தால் அவர்களை உரிய இடத்தில் சேர்க்க வேண்டும் என எப்போதும் விரும்புவேன். ஆனால் அவர் யாரைப் பார்க்க விரும்பினாரோ அவரைப் பார்க்காமலே சென்று விட்டார். ஏனென்றால் அவர் பார்க்க விரும்பிய நபர் எங்கள் தெருவில் எங்கள் ஊரிலேயே இல்லை. 10 கி.மீ தள்ளி இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அவர் வீடு 10 கி.மீ தள்ளி இருக்கிறதே தவிர அவர் இப்போது இருப்பது மும்பையில். அந்த விஷயத்தை அப்படியே சில பொழுது விட்டு விடுவோம் என விட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மும்பை நண்பருக்கு ஃபோன் செய்து விபரம் சொல்வோமோ என நினைத்தேன். கொஞ்சம் தெளிவாகட்டும் என விட்டு விட்டேன். 

மறுநாள் காலை எழுந்ததும் முகவரி தேடி வந்தவர் வீடு எந்த பகுதியில் இருக்கிறதோ அங்கு சென்று அவருக்கு அவர் தேடிய நில உரிமையாளரின் அலைபேசி எண்ணை அளித்து விடுவோம் ; அவர் என்ன பேச நினைக்கிறாரோ பேசிக் கொள்ளட்டும் என அவர் பகுதி நோக்கிச் சென்றேன். அப்போது அவர் எதிரில் இரு சக்கர வாகனத்தில் எதிர்ப்பட்டார். என்னைக் கவனிக்கவில்லை. வேகமாக சென்று விட்டார். நான் வாகனத்தைத் திருப்பிச் சென்று அவரை நிறுத்தினேன். அவருக்கு என்னைப் பார்த்தது ஆச்சர்யம். நான் அவரிடம் மெல்ல விஷயத்தைச் சொன்னேன். அவர் தேடி வந்தவரின் எண் என்னிடம் இருக்கிறது ; அவர் மும்பையில் இருக்கிறார். அவர் எண்ணைத் தருகிறேன். அவரிடம் பேசுவதென்றாலும் பேசுங்கள். உங்கள் எண்ணை அவருக்குத் தந்து அவரைப் பேசச் சொல்வதானாலும் பேசச் சொல்கிறேன். டிராக்டர் உழுவது தொடர்பாக அவருக்கு சொல்ல எதுவும் இருக்காது ; அவர் விவசாயம் செய்யவில்லை. அவர் மெல்ல புறவழிச்சாலை அருகே இருக்கும் விலைக்கு வந்திருக்கிறது என்று சொன்னார்கள். அது குறித்து விசாரிக்க வந்தேன் என்றார். மூட்டமாக இருந்த விஷயங்கள் எனக்கு புலப்பட்டன. 

அவர் புறவழிச்சாலை அருகே இருக்கும் இடத்தை நன்றாக அறிந்திருக்கிறார். அந்த இடம் விற்பனைக்கு என்று அவரிடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள். உரிமையாளரின் பெயரையும் கூறியிருக்கிறார்கள். உரிமையாளர் எனது நண்பர் என்பதைக் கூறி என்னைச் சந்தித்தால் நான் இடத்தை முடித்துக் கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார்கள். அவர் என் பெயரை மறந்து விட்டார். நண்பரின் பெயரும் எனது வீடு இருக்கும் பகுதியின் தெருவின் பெயரும் நினைவில் இருந்திருக்கிறது. அங்கே வந்து தேடியிருக்கிறார். அவர் அந்த இடத்தை வாங்க விரும்புகிறார். ஆனால் நிலம் வாங்க என்று சொல்லாமல் டிராக்டர் உழ என்று மாற்றிக் கூறியிருக்கிறார். இவை எனக்குப் புரிந்து விட்டன. 

சட்டென , ‘’அண்ணன்! நான் ரியல் எஸ்டேட் தான் பண்றன். நீங்க சொல்ற இடத்தோட ஓனர் எனக்கு ஃபிரண்டு. அவர் நம்பர் உங்களுக்குத் தரன். நீங்க பேசறீங்களா?’’ என்று கேட்டேன். 

‘’என்ன விலை சொறாங்க?’’ என்றார். 

நான் விலை விபரம் கூறினேன்.

‘’விலை கொஞ்சம் குறைச்சு முடிச்சுத் தர முடியுமா? ஒரே பேமெண்ட் கொடுத்துடலாம்’’

‘’பை பாஸ் வந்ததுல இருந்து டிமாண்ட் அதிகமா இருக்கு. ரேட் கூடிட்டே போகுது. நான் ஓனர்கிட்ட பேசிப் பாக்கறன். இன்னைக்கு நாளைக்கு ஊர்ல இருக்க மாட்டேன். வெளியூர் போறன். அதுவும் ஒரு லேண்ட் டீலிங் தான். நான் உங்களுக்கு ஃபோன் செய்யறன்’’

***

வீட்டுக்கு வந்ததும் கணினியில் கீழ்க்கண்டவாறு எழுதினேன். தலைப்பு விலை விபரம் என தட்டச்சிட்டேன். பின்னர் யோசித்து விபரம் என மாற்றினேன். முதல் வரியாக ‘’ஸ்தலம் 5 ஏக்கர் நன்செய் நிலமாகும். போர்வசதி கொண்டது’’ என எழுதினேன். அதன் பின் ஒரு ஏக்கர் = 43,560 சதுர அடி என்பதை அடுத்த வரியாக எழுதினேன். 5 ஏக்கர் = என எழுதி எத்தனை சதுர அடியோ அந்த எண்ணை எழுதினேன். பின்னர் ஒரு குழி = 144 சதுர அடி என எழுதினேன். ஐந்து ஏக்கரில் எத்தனை குழி இருக்குமோ அந்த எண்ணை எழுதினேன். நில உரிமையாளர் ஒரு குழி என்ன விலை சொல்கிறாரோ அந்த விலையை எழுதினேன். குழியின் எண்ணிக்கையையும் உரிமையாளர் கூறும் குழியின் விலையையும் பெருக்கி மொத்த தொகையை எண்ணால் எழுதுவோமோ என நினைத்தேன். அவ்விதம் செய்ய வேண்டாம் என அந்த முடிவைக் கைவிட்டேன். போர் வசதிக்கு ரூ.3,00,000 என எழுதினேன். நிலத்தை அளந்து கொள்ளலாம். இடம் கூடுதலாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாதோ நில உரிமையாளர் மொத்த விற்பனைத் தொகையில் மாற்றம் இல்லை எனக் குறிப்பிடுகிறார் என்று எழுதினேன். பட்டா என எழுதி நில உரிமையாளர் தன் பெயரில் தனிப்பட்டா வைத்துள்ளார் என்பதைக் குறிப்பிட்டேன். ஆவண விபரம் என்பதில் நிலத்தின் ஆவண எண்களைக் குறித்தேன். மூல ஆவண விபரங்களையும் குறிப்பிட்டேன்.பின்னர் அரசு இணையதளத்தில் அந்த சர்வே எண்ணின் பத்திர மதிப்பைத் தேடி எடுத்து பத்திர மதிப்பையும் குறிப்பிட்டேன். அடுத்த வரியாக மீடியேட்டர் கமிஷன் 1 % என எழுதி எழுத்தால் (ஒரு சதவீதம்) என எழுதினேன்.

இவற்றை ஒரு தாளில் பிரிண்ட் அவுட் எடுத்து நிலத்தை வாங்க விரும்புபவரிடம் கொடுத்து விடலாம் என இருக்கிறேன். அந்த பிரிண்ட் அவுட்டில் தேதியையும் எனது அலைபேசி எண்ணையும் பேனாவால் எழுதிக் கொடுத்து விட்டால் அந்த இடம் குறித்து விபர அறிக்கையாக இருக்கும் என எனக்குத் தோன்றியது. இதில் பல விஷயங்கள் எளிதாகும் என எண்ணினேன். 

வழக்கமாக என்ன நடைமுறை என்னவெனில் முதலில் விலை பேசுவார்கள்.பின்னர் ஆவண நகல் வாங்கி வழக்கறிஞர் அபிப்ராயம் பெறுவார்கள்.  அதன் பின் அளக்க முயற்சி செய்வார்கள். அதிலிருந்து வாங்குபவருக்கும் விற்பவருக்கும் பிணக்கு தொடங்கிவிடும். இடம் முடிப்பதற்குள் மீடியேட்டர்கள் பாடு போதும் போதும் என்றாகி விடும். இந்த விபர அறிக்கை வாங்குபவர் கைக்குச் செல்லும் போது அவர் பல தடவை இவற்றை மீண்டும் மீண்டும் எடுத்துப் பார்க்கவும் படித்துப் பார்க்கவும் வாய்ப்பு உருவாகும். மீடியேட்டரான என் கையிலும் ஒரு நகல் இருக்கும். இவ்விதம் செய்வது அந்த விஷயத்தை ஒரு வடிவத்துக்குள் கொண்டு வரும் என எண்ணினேன். 

ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்கள் ஒரு விஷயம் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்றால் வானத்தைத்தான் பார்ப்போம். மண் தொடர்பான முடிவுகள் வானில் தானே எடுக்கப்படுகிறது என!

Thursday, 5 March 2026

உணர்ச்சிகரமான மனிதர்

 ரியல் எஸ்டேட் விஷயங்கள் தொடர்பாக எனது பேராசிரியரை சென்ற வாரத்தில் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆசிரியர் - மாணவர் என்னும் நிலையைத் தாண்டி மிகவும் நட்பார்ந்த உணர்வுடன் நாங்கள் பல விஷயங்களைப் பேசிக் கொண்டோம். நேற்று தான் கவிதைகள் எழுத முயல்வதுண்டு என்று கூறினார். அவர் எழுதியவற்றைக் காட்டுமாறு கேட்டேன். சிலவற்றை என்னிடம் காட்டினார். 

ஜப்பானில் ஜென் ஆலயங்களில் ஓர் வழக்கம் உண்டு. அங்கே அந்த ஊரில் இருப்பவர்கள் - சாமானியர்கள், தொழிலாளர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், பெண்கள் - என சகலதரப்பினரும் தாங்கள் எழுதும் கவிதைகளை ஜென் ஆலயத்தில் உள்ள மரத்தில் சிறு நூல் மூலம் கட்டித் தொங்க விடுவார்கள். கவிதையை மிக உயர்ந்த உணர்வாக எண்ணுவதையும் தாங்கள் படைத்ததை மிக உயர்வான உணர்வுநிலையாகக் கருதுவதையும் வெளிப்படுத்தும் நிகழ்வு அது. 

முதலீட்டியம் சகல மனிதனையும் நுகர்வோனாக மட்டுமே ஆக்க வேண்டும் என்னும் தீவிரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நுகர்வு வெறியூட்டப்படுகிறது சமூகம். இந்த தளையிலிருந்து சமூகத்தை விடுவிக்கும் தன்மை படைப்பூக்கத்துக்கு மட்டுமே இருக்கிறது. 

படைப்பாளிகள் எப்போதும் படைப்பூக்கத்துடன் இருக்கும் இயல்பு கொண்டவர்கள். இருப்பினும் எல்லா மனிதனும் படைப்பூக்கத் தன்மையை சில கணங்களிலேனும் பெற இயல்பு கொண்டவனே. 

பேராசிரியர் படைப்பூக்க இயல்புக்கு தினம் கொஞ்ச நேரம் சென்று வருகிறார் என்பது மிகச் சிறப்பான விஷயம். தனக்கு இசை, நடனம் ஆகிய நுண்கலைகளிலும் ஆர்வம் உண்டு எனக் கூறியதைக் கேட்ட போது ஆச்சர்யமாக இருந்தது. ரியல் எஸ்டேட்டில் இப்படி ஒருவரா என!

Tuesday, 3 March 2026

நூதனச் சூழல்

 நேற்று எனது கவனத்துக்கு ஒரு விஷயம் வந்தது. எனது ஆலோசனையைக் கேட்டார்கள். 

அதாவது, பெங்களூரில் எனது நண்பர் ஒருவர் ஃபிளாட் வாங்குகிறார். ஃபிளாட் உரிமையாளர் அமெரிக்காவில் இருக்கிறார். அவரது மேலாளர் கிரயத் தொகையில் 10 சதவீதத்தை உரிமையாளர் சார்பாக நண்பரிடமிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார். கிரய ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு தபாலில் அனுப்பப்பட்டு உரிமையாளரின் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. நண்பர் வங்கிக் கடன் ஏற்பாடு செய்து விட்டார். கிரய ஆவணத்திலும் தபால் மூலம் கையெழுத்திட்டு அனுப்புகிறேன் எனக் கூறுகிறார் உரிமையாளர். அந்த கையெழுத்திட்ட ஆவணத்தை மட்டும் பதிவாளர் முன் சமர்ப்பிக்க தனது மேலாளருக்கு பவர் ஆஃப் அட்டர்னி தந்துள்ளார். இவ்விதமே தொடரலாமா என்று நண்பர் என்னிடம் கேட்டார். 

நண்பர் மிகவும் சோர்வான குரலில் பேசினார். பலரிடம் விவாதித்து சோர்ந்திருப்பார் என யூகித்தேன். 

ஃபிளாட் உரிமையாளரை அவரது மேலாளருக்கு முழுமையான பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்கச் சொல்லுங்கள் என்று சொன்னேன். அந்த பவர் ஆஃப் அட்டர்னியில் நண்பர் வாங்க இருக்கும் சொத்தை முழுமையாகக் குறிப்பிட்டு பவர் வாங்க வேண்டும். அதன் பின் மேலாளர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரில் வர உரிமையாளர் சார்பில் கையெழுத்திட்டு பதிவினை நிறைவு செய்யுங்கள் என்று சொன்னேன். 

ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவன் என்ற முறையில் நண்பரின் வலியை உணர்கிறேன். நான் சொன்ன வழிமுறையைத் தவிர வேறு எது செய்தாலும் நண்பர் சிக்கலில் சிக்கிக் கொள்வார். ஃபிளாட் உரிமையாளர் தான் ‘’வெளிநாடு வாழ் இந்தியர்’’ என்பதை வெளிக்காட்டாமல் பத்திரப்பதிவை முடிக்கப் பார்க்கிறார். அதற்கு அவர் பத்திரப்பதிவுக்காவது இந்தியா வர வேண்டும். அவ்விதம் இல்லாமல் அமெரிக்காவில் இருந்து கிரய ஆவணத்திலும் கையெழுத்திட்டு அதில் அமெரிக்க அட்வகேட்டின் முத்திரையுடன் அனுப்புகிறார் என்றால் அவர் வெளிநாடு வாழ் இந்தியர் என்பது ‘’ஃபிளாட் வாங்குபவர்’’ ஆன நண்பரும் அறிந்த விஷயம் இது என்றாகிவிடும். கிரய ஆவணத்தின் தேதிக்கும் வங்கி அளிக்கும் வரைவோலை அல்லது காசோலையின் தேதிக்கும் வித்தியாசம் வந்து விடும். உதாரணத்துக்கு மார்ச் 1ம் தேதி கிரய ஆவணம் கையெழுத்தாகிறது எனில் அதில் மார்ச் 4 தேதியிட்ட காசோலையோ அல்லது வரைவோலையோ குறிப்பிடப்பட முடியாது. காசோலை அல்லது வரைவோலையின் தேதியை ஆவணத்தில் குறிப்பிடாமல் இருந்தால் அது நண்பருக்குத்தான் பின்னடைவு. 

நண்பருக்குக் கடன் அளிப்பது தேசியமயமாக்கப்பட்ட வங்கி. அவர்கள் வழக்கறிஞர் இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் கவனமாக அணுகியிருக்க வேண்டும் என்பதும் வங்கி மேலாளர் இந்த கோப்பு தொடர்பாக நண்பருக்கு முன்னெச்சரிக்கை அளித்திருக்க வேண்டும் என்பதும் என் எதிர்பார்ப்பு. 

அவசியம் என்றால் சொல்லுங்கள் நான் வந்து உடன் இருக்கிறேன் என்றேன்.  

Monday, 2 March 2026

எஸ்டிமேட் (நகைச்சுவைக் கட்டுரை)

 எனக்கு ஓர் அழைப்பு வந்தது. அழைத்தவருக்கு சொந்தமாக 4 வீடுகள் இருக்கின்றன. பக்கத்து பக்கத்தில் அடுத்தடுத்து இருக்கும் 4 வீடுகள். 

‘’பிரபு ! வீட்டுக்கெல்லாம் பெயிண்ட் அடிக்கணும்’’

‘’அப்படியா ! மெட்டீரியல் நீங்க வாங்கிக் கொடுத்திடறீங்களா?’’

‘’லேபர் வித் மெட்டீரியல்னா என்ன காஸ்ட். லேபர் மட்டும்னா என்ன காஸ்ட்?’’

‘’அத நான் சொல்றன். அதுக்கு முன்னால நீங்க எப்படி செய்ய நினைக்கறீங்கன்னு யோசிக்காமலே காஸ்ட் தெரிஞ்சுக்க விரும்பறீங்களா? நீங்க ஒரு முடிவுக்கு வாங்க.’’

அவர் இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. ‘’மெட்டீரியல் நான் வாங்கி கொடுத்தடறன்’’

‘’ஓ.கே ! ஃபைன். இப்ப உங்க 4 வீடு பெயிண்ட் அடிக்க எத்தனை லேபர் ஆகும்னு உத்தேசமா சொன்னா போதும். பெயிண்ட் அடிக்க சாரக் கழி தேவைப்படும். சாரக்கழி வாடகைக்கு எடுத்து கொடுத்திடறீங்களா?’’

‘’அது வந்து’’ என்ன சொல்வதென்று தெரியாமல் தயங்கினார். ‘’கயித்துல தொங்கி பெயிண்ட் அடிப்பாங்களே?’’

‘’வெயிட் தாங்காம கயிறு அறுந்து விழுந்தா தன்னோட குடும்பத்துக்கு யார் இருக்கான்னு பெயிண்டர் யோசிக்க மாட்டாங்களா?’’

அமைதி நிலவியது. 

‘’ 4 வீடு பெயிண்ட் அடிக்க மினிமம் 15 நாள் ஆகும். நீங்க 15 நாளும் கூட இருங்க. மெட்டீரியல் வாங்கிக் கொடுங்க. சாரக்கழி வாடகைக்கு எடுத்துக் கொடுங்க. மொத்த பட்ஜெட்ல 60 பர்செண்ட் இதுக்கே ஆகும். நான் இப்ப தோராயமா எத்தனை பெயிண்டிங் லேபர் ஆவாங்கன்னு சொல்லிடறன். மெட்டீரியல் காஸ்ட் எவ்வளவு ஆகும் சாரக்கழி வாடகை எவ்வளவு ஆகும்னும் சொல்லிடறன்’’

‘’சரி ‘’ என்றார். 

‘’முதல்ல இப்ப உங்க பில்டிங் எப்படி இருக்குன்னு பாக்கணும். பாசி படிஞ்சிருக்கா. ரஸ்ட் அதிகமாக இருக்கா ? கிரில் எல்லாம் எப்படி இருக்கு?இதெல்லாம் தெரிஞ்சுக்கணும். நானும் என் ஸ்டாஃப்ஃபும் வரோம். வந்து பாத்துட்டு எஸ்டிமேட் கொடுக்கறோம். உங்க பில்டிங் மெஷர்மெண்ட் எடுக்கணும். அப்பதான் மெட்டீரியல் எவ்வளவு தேவைன்னு துல்லியமா சொல்ல முடியும். நீங்க என்ன செய்ங்க. எனக்கு 1000 ரூபாய் கொடுங்க. எல்லா விவரமும் துல்லியமா சொல்லிடறன்.’’

’’சரி சார்’’

அதன் பின் எனக்கு ஃபோன் வரவில்லை. 

ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்

 
நூல் : ஸ்ரீ காவேரி ரஹஸ்யம் ஆசிரியர் : பி. மஹாதேவ ஐயர் பக்கம் : 320 விலை : ரூ. 400 பதிப்பகம் : அல்லயன்ஸ் பதிப்பகம், பழைய எண் 244, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை, 600004 

நதியே மனிதருக்கு வாழ்க்கையைத் தந்தது. தருகிறது. நதியே மனிதர்களை சமூகமாக ஆக்கியது. பாரத நிலம் நதியை அன்னையாகக் கடவுளாக வணங்கும் உணர்வு கொண்டது. உறக்கம் தெளிந்து விழித்ததும் ‘’ கங்கை யமுனை சரஸ்வதி சிந்து காவேரி நர்மதை கோதாவரி’’ என்ற ஏழு நதி அன்னையரை நிலத்தில் பிறந்த ஒவ்வொரு மானுடனும் நன்றியுடன் நினைத்து மதிப்புடன் அப்பெயர்களை உச்சரிக்க வேண்டும் என்கிறது நமது மரபு. 

தமிழகத்துக்கு அன்னை போல் விளங்கும் காவிரியின் சிறப்புகளை காவிரிக்கரையில் வாழ்ந்த ஞானியரின் சிறப்புகளை எடுத்துக் கூறும் நூல் ‘’ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்’’. தத்தாத்ரேய குரு மரபு சிறப்புற்றிருக்கும் குடகு மலைப் பிராந்தியத்தில் பிறந்து வீரசைவ மரபு கோலோச்சும் மைசூர் பிராந்தியத்தைத் தாண்டி இறையும் உயிரும் வேறல்ல எனக் காட்டும் அத்வைதிகளின் அருள் வெளியான தமிழகத்தில் பாய்ந்து ஜீவன்கள் பரம்பொருளை அடைவது போல் காவேரி சமுத்திரத்தை அடைகிறது. 

காவிரிக்கரையில் வாழ்ந்த முக்கியமான சான்றோர்களின் யோகிகளின் ஆசான்களின் வாழ்வினை கூறிச் செல்கிறது இந்நூல். அத்தகு பெரியோர்கள் காவிரி குறித்து எழுதிய நூல்களையும் பக்தித் துதிகளையும் வாசகர் முன் கொண்டு வருகிறது ‘’ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்’’. சதாசிவ பிரம்மேந்திரர், போதேந்திராள், மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள், ஸ்ரீதர ஐயாவாள் ஆகிய பெரியோரின் வாழ்க்கையைக் கூறுவதுடன் காவிரி குறித்து பாடப்பட்ட தேவாரப் பாடல்களையும் ஆழ்வார்களின் பாசுரங்களையும் காவிரிக்கரையில் வாழ்ந்த ஆழ்வார், நாயன்மார்களின் முழுமையான பட்டியலையும் இந்நூல் அளிக்கிறது. சங்க இலக்கியத்தில் காவிரி இடம் பெற்றிருக்கும் நூல்களை வரிசைப்படுத்தி உள்ளது இந்நூல். நமது மரபில் உன்னதமான விஷயங்களை ‘’ஸ்மரணை’’ செய்ய வேண்டும். நலம் நல்குவதும் பயன் பயப்பதுமான செயல் அது. காவிரியைத் தன் ஸ்மரணையில் கொண்டவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் ‘’ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்’’.