Monday, 2 March 2026

எஸ்டிமேட் (நகைச்சுவைக் கட்டுரை)

 எனக்கு ஓர் அழைப்பு வந்தது. அழைத்தவருக்கு சொந்தமாக 4 வீடுகள் இருக்கின்றன. பக்கத்து பக்கத்தில் அடுத்தடுத்து இருக்கும் 4 வீடுகள். 

‘’பிரபு ! வீட்டுக்கெல்லாம் பெயிண்ட் அடிக்கணும்’’

‘’அப்படியா ! மெட்டீரியல் நீங்க வாங்கிக் கொடுத்திடறீங்களா?’’

‘’லேபர் வித் மெட்டீரியல்னா என்ன காஸ்ட். லேபர் மட்டும்னா என்ன காஸ்ட்?’’

‘’அத நான் சொல்றன். அதுக்கு முன்னால நீங்க எப்படி செய்ய நினைக்கறீங்கன்னு யோசிக்காமலே காஸ்ட் தெரிஞ்சுக்க விரும்பறீங்களா? நீங்க ஒரு முடிவுக்கு வாங்க.’’

அவர் இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. ‘’மெட்டீரியல் நான் வாங்கி கொடுத்தடறன்’’

‘’ஓ.கே ! ஃபைன். இப்ப உங்க 4 வீடு பெயிண்ட் அடிக்க எத்தனை லேபர் ஆகும்னு உத்தேசமா சொன்னா போதும். பெயிண்ட் அடிக்க சாரக் கழி தேவைப்படும். சாரக்கழி வாடகைக்கு எடுத்து கொடுத்திடறீங்களா?’’

‘’அது வந்து’’ என்ன சொல்வதென்று தெரியாமல் தயங்கினார். ‘’கயித்துல தொங்கி பெயிண்ட் அடிப்பாங்களே?’’

‘’வெயிட் தாங்காம கயிறு அறுந்து விழுந்தா தன்னோட குடும்பத்துக்கு யார் இருக்கான்னு பெயிண்டர் யோசிக்க மாட்டாங்களா?’’

அமைதி நிலவியது. 

‘’ 4 வீடு பெயிண்ட் அடிக்க மினிமம் 15 நாள் ஆகும். நீங்க 15 நாளும் கூட இருங்க. மெட்டீரியல் வாங்கிக் கொடுங்க. சாரக்கழி வாடகைக்கு எடுத்துக் கொடுங்க. மொத்த பட்ஜெட்ல 60 பர்செண்ட் இதுக்கே ஆகும். நான் இப்ப தோராயமா எத்தனை பெயிண்டிங் லேபர் ஆவாங்கன்னு சொல்லிடறன். மெட்டீரியல் காஸ்ட் எவ்வளவு ஆகும் சாரக்கழி வாடகை எவ்வளவு ஆகும்னும் சொல்லிடறன்’’

‘’சரி ‘’ என்றார். 

‘’முதல்ல இப்ப உங்க பில்டிங் எப்படி இருக்குன்னு பாக்கணும். பாசி படிஞ்சிருக்கா. ரஸ்ட் அதிகமாக இருக்கா ? கிரில் எல்லாம் எப்படி இருக்கு?இதெல்லாம் தெரிஞ்சுக்கணும். நானும் என் ஸ்டாஃப்ஃபும் வரோம். வந்து பாத்துட்டு எஸ்டிமேட் கொடுக்கறோம். உங்க பில்டிங் மெஷர்மெண்ட் எடுக்கணும். அப்பதான் மெட்டீரியல் எவ்வளவு தேவைன்னு துல்லியமா சொல்ல முடியும். நீங்க என்ன செய்ங்க. எனக்கு 1000 ரூபாய் கொடுங்க. எல்லா விவரமும் துல்லியமா சொல்லிடறன்.’’

’’சரி சார்’’

அதன் பின் எனக்கு ஃபோன் வரவில்லை. 

ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்

 
நூல் : ஸ்ரீ காவேரி ரஹஸ்யம் ஆசிரியர் : பி. மஹாதேவ ஐயர் பக்கம் : 320 விலை : ரூ. 400 பதிப்பகம் : அல்லயன்ஸ் பதிப்பகம், பழைய எண் 244, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை, 600004 

நதியே மனிதருக்கு வாழ்க்கையைத் தந்தது. தருகிறது. நதியே மனிதர்களை சமூகமாக ஆக்கியது. பாரத நிலம் நதியை அன்னையாகக் கடவுளாக வணங்கும் உணர்வு கொண்டது. உறக்கம் தெளிந்து விழித்ததும் ‘’ கங்கை யமுனை சரஸ்வதி சிந்து காவேரி நர்மதை கோதாவரி’’ என்ற ஏழு நதி அன்னையரை நிலத்தில் பிறந்த ஒவ்வொரு மானுடனும் நன்றியுடன் நினைத்து மதிப்புடன் அப்பெயர்களை உச்சரிக்க வேண்டும் என்கிறது நமது மரபு. 

தமிழகத்துக்கு அன்னை போல் விளங்கும் காவிரியின் சிறப்புகளை காவிரிக்கரையில் வாழ்ந்த ஞானியரின் சிறப்புகளை எடுத்துக் கூறும் நூல் ‘’ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்’’. தத்தாத்ரேய குரு மரபு சிறப்புற்றிருக்கும் குடகு மலைப் பிராந்தியத்தில் பிறந்து வீரசைவ மரபு கோலோச்சும் மைசூர் பிராந்தியத்தைத் தாண்டி இறையும் உயிரும் வேறல்ல எனக் காட்டும் அத்வைதிகளின் அருள் வெளியான தமிழகத்தில் பாய்ந்து ஜீவன்கள் பரம்பொருளை அடைவது போல் காவேரி சமுத்திரத்தை அடைகிறது. 

காவிரிக்கரையில் வாழ்ந்த முக்கியமான சான்றோர்களின் யோகிகளின் ஆசான்களின் வாழ்வினை கூறிச் செல்கிறது இந்நூல். அத்தகு பெரியோர்கள் காவிரி குறித்து எழுதிய நூல்களையும் பக்தித் துதிகளையும் வாசகர் முன் கொண்டு வருகிறது ‘’ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்’’. சதாசிவ பிரம்மேந்திரர், போதேந்திராள், மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள், ஸ்ரீதர ஐயாவாள் ஆகிய பெரியோரின் வாழ்க்கையைக் கூறுவதுடன் காவிரி குறித்து பாடப்பட்ட தேவாரப் பாடல்களையும் ஆழ்வார்களின் பாசுரங்களையும் காவிரிக்கரையில் வாழ்ந்த ஆழ்வார், நாயன்மார்களின் முழுமையான பட்டியலையும் இந்நூல் அளிக்கிறது. சங்க இலக்கியத்தில் காவிரி இடம் பெற்றிருக்கும் நூல்களை வரிசைப்படுத்தி உள்ளது இந்நூல். நமது மரபில் உன்னதமான விஷயங்களை ‘’ஸ்மரணை’’ செய்ய வேண்டும். நலம் நல்குவதும் பயன் பயப்பதுமான செயல் அது. காவிரியைத் தன் ஸ்மரணையில் கொண்டவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் ‘’ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்’’. 

Sunday, 1 March 2026

சோறிடும் நாடு ; துணி தரும் குப்பை

’’சோறிடும் நாடு ; துணிதரும் குப்பை’’ என உலகியலை எள்ளளவும் பொருட்டாக மதிக்காமல் அலைந்து திரிபவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். இந்த தேசம் அவ்விதமாக அலைந்து திரிபவர்களின் தேசம். இன்று சிதம்பரம் சாலையில் தேசாந்திரி ஒருவரைச் சந்தித்தேன். அவர் ராமேஸ்வரத்திலிருந்து நடந்து வந்து கொண்டிருந்தார். இளைஞராக இருந்தார். வயது 30 லிருந்து 35 இருக்கலாம். கையில் ஒரே ஒரு சிறுபை. கையில் ஒரு சிறிய கழி வைத்திருந்தார். அவரது தோற்றம் மூலம் அவர் ஒரு தேசாந்திரியாக இருப்பார் என யூகித்தேன். இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நான் எனது வாகனத்தை நிறுத்தி இறங்கி அவரைப் பற்றி விசாரித்தேன். அவர் காசியிலிருந்து தனது யாத்திரையைத் துவக்கியிருக்கிறார். 12 ஜ்யோதிர்லிங்கங்களையும் தரிசிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். பாதசாரியாக தனது பயணத்தைத் துவங்கி விட்டார். ராமேஸ்வரம் வரை சென்று விட்டு அங்கிருந்து ஸ்ரீரங்கம் சென்று பள்ளி கொண்ட பெருமாளை சேவித்து விட்டு சிதம்பரம் நடராஜரை தரிசிக்க சிதம்பரம் சென்று கொண்டிருக்கிறார். ’’தங்களுக்கு உணவளிக்க விரும்புகிறேன்’’ என்று சொன்னேன். சரி என்றார். நான் இரு சக்கர வாகனத்தில் அருகில் இருந்த நகரத்துக்குச் சென்று உணவு பார்சல் வாங்கி வந்து அவரிடம் வணங்கி அளித்தேன். அவர் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் புன்னகைத்து விட்டு நடக்கத் தொடங்கினார்.    

Saturday, 28 February 2026

எஸ் ஐ ஆர் (நகைச்சுவைக் கட்டுரை)

எனது வீட்டுக்கு பக்கத்துத் தெருவில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கு 82 வயது. அவரது ஒரு மகன் அமெரிக்காவில் இருக்கிறார் ; இன்னொரு மகன் சென்னையில் இருக்கிறார். ஒரு மகள். அவர் இருப்பது பெங்களூரில். நண்பர் அதனால் அவ்வப்போது சென்னை பெங்களூர் சென்று விடுவார்.  

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் அறிவிக்கப்பட்டதும் எனக்கு ஃபோன் செய்தார். ‘’பிரபு ! எஸ் ஐ ஆர் க்கு எனக்கு ஃபார்ம் ஃபில் அப் செய்யணும்’’

‘’சார் ! இப்பதான் அனௌன்ஸ்மெண்ட் வந்திருக்கு. கணக்கெடுப்பு ஆரம்பிக்க இன்னும் 1 மாசமாவது ஆகும்’’

இருப்பினும் வாரத்துக்கு இரண்டு நாள் எனக்கு ஃபோன் செய்து நினைவூட்டுவார். 

கணக்கெடுப்பு ஆரம்பித்ததும் தினமும் ஃபோன் செய்வார். ‘’பிரபு ! எங்க வீட்டுக்கு யாரு கணக்கெடுக்க வர்ராங்கன்னு பாருங்க’’

‘’சார் எங்க வீட்டுல கணக்கெடுக்க வந்தா என்கிட்ட சொல்லுங்கன்னு சொல்லியிருக்கன். இன்னும் யாரும் வரல. அவங்க 3 தடவை வருவாங்க. நிச்சயம் உங்க பேரை சேத்துடலாம்’’

எங்கள் பகுதிக்கு ஒருவர். அவர் பகுதிக்கு இன்னொருவர். இருந்தாலும் அவரது படிவத்தை ஃபில் அப் செய்து சென்னைக்கு தபாலில் அனுப்பி கையெழுத்து வாங்கி சேர்த்து விட்டேன். 

’’தற்காலிகப் பட்டியல் எப்போ வெளியிடுவாங்க?’’ என்று கேட்கத் துவங்கினார். 

பட்டியல் வெளியானது. அவரது வீட்டில் எல்லாருடைய பெயரும் இருந்தது அவர் பெயரைத் தவிர.

மீண்டும் வாக்காளர் பட்டியல் சேர்ப்பு படிவம் சென்னைக்கு அனுப்பி கையெழுத்து வாங்கி தாலுகா ஆஃபிஸில் கொடுத்தேன். 

இறுதிப் பட்டியல் எப்போது வரும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

இறுதிப் பட்டியல் வந்ததும் அதில் என் பெயரைத் தேடவில்லை ; அவருடைய பெயரைத்தான் தேடினேன். இருந்தது. ஃபோன் செய்து சொன்னேன். 

‘’பிரபு ! எனக்கு இப்ப ஒரு புது வோட்டர் ஐ டி கொடுப்பாங்க. அது தபாலில் வரும் . வாங்கி வச்சுக்கங்க’’

இன்று போஸ்ட்மேனைப் பார்த்தேன். பெரியவர் விபரம் சொல்லி வோட்டர் ஐ டி வந்தால் என்னிடம் கொடுங்கள் என்றேன். 

‘’சார் அவருக்கு போன வாரமே வோட்டர் ஐ டி வந்திடுச்சு. வீடு பூட்டியிருக்கு. அதனால டெலிவரி பண்ண முடியல’’ 

இன்று போஸ்ட் ஆஃபிஸ் சென்று நான் கையெழுத்து போட்டு அவருடைய வோட்டர் ஐ டி யை வாங்கினேன். 

புதிய சூழல் - 5 (நகைச்சுவைக் கட்டுரை)

 ஒரு ஊரையும் இன்னொரு ஊரையும் இணைக்கும் சாலைகளின் அகலம் முன்னர் மிகக் குறைவாக இருக்கும். இப்போது பெரும்பாலான சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக இருக்கின்றன. 

Friday, 27 February 2026

ஆசிரியரும் மாணவரும் ( நகைச்சுவைக் கட்டுரை)

 எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். எங்களுக்கு 35 ஆண்டு கால பழக்கம். அவரது மிக நெருங்கிய உறவினர் ஒருவர் எனக்கு கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். எனது பேராசிரியர் எனது நண்பரின் நெருங்கிய உறவினர் என்பது எனக்கு கல்லூரியை நிறைவு செய்த பின்னரே தெரியும். நண்பரின் ஊர் எனக்கு கிழக்கே இருக்கிறது. கல்லூரி வடக்கே இருக்கிறது. எனது பேராசிரியர் நண்பரின் உறவினர் என்பது சமீபகாலமாகத்தான் எனக்குத் தெரிய வந்தது. பேராசிரியர் தனது நிலம் ஒன்றை விற்க விரும்புகிறார். நண்பர் மூலம் அந்த தகவல் வரப்பெற்றதும் பேராசிரியரைக் காணச் சென்றேன். ஒரு மாணவனுக்கு கல்லூரியில் நான்கு ஆண்டுகளில் 50 லிருந்து 60 பேராசிரியர்கள் வகுப்பு எடுத்திருப்பார்கள். எனவே மாணவனுக்கு ஆசிரியர்களை நன்றாக நினைவிருக்கும். பேராசிரியர்கள் ஓர் ஆண்டில் 200 மாணவர்களுக்கு வகுப்பெடுத்தால் 35 ஆண்டுகளில் 7000 மாணவர்களுக்கு வகுப்பெடுத்திருப்பார்கள். அத்தனை பேரையும் நினைவில் வைத்திருப்பது இயலாது. நண்பர் பேராசிரியரின் அலைபேசி எண் கொடுத்தார். எனக்கு அது அவ்வளவாக வசதி இல்லாத உபகரணம். அதில் குறுஞ்செய்தி அனுப்பினால் தெரிவிக்க வேண்டிய விஷயத்தை தெளிவாகத் தெரிவித்து விட்டேன் என எண்ணுவேன். பேசுவது சரியாக இருக்கிறதா என்பது எனக்கு ஐயம். இரண்டு முறை பேசினேன். ஆனால் நான் அவரது மாணவன் என்பதை தெரிவிக்கவில்லை. நண்பரின் பெயரைச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டேன். இன்று நேரில் சந்தித்தேன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறோம். நான் படித்த ஆண்டைக் கூறி அவருடைய மாணவன் என்பதைக் கூறினேன். எங்களுக்குள் மிகவும் சகஜத்தன்மை ஏற்பட்டு விட்டது. அவர் கல்லூரியில் ‘’ஸ்டாஃப் ரூம்’’க்குள் இருக்கும் மனநிலைக்கு வந்து விட்டார். பல நகைச்சுவைகளைக் கூறினார். அவர் மிகவும் நகைச்சுவையாகப் பேசக் கூடியவர் என மாணவர்களிடம் பிரபலம். எனக்கு காலவெள்ளத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னால் போய் விட்டதாகத் தோன்றியது. அவரது மகனை அறிமுகப்படுத்தினார். அவர் லண்டனில் வணிக மேலாண்மை படித்தவர். அவரிடம் நில விஷயங்களை நாம் பேசிக் கொள்வோம் ; தங்கள் தந்தை எனது பேராசிரியர் எனக் கூறினேன். அவரும் உற்சாகமாக சரி என்றார். 

புதிய சூழல் - 4 (நகைச்சுவைக் கட்டுரை)

முன்னர் கல்லூரி மாணவர்கள் சிகரெட் புகைக்கப் பழகுவார்கள். இப்போது பள்ளி மாணவர்களுக்கே போதை மருந்து பழக்கம் இருக்கிறது.  

Thursday, 26 February 2026

உலக நாடுகளும் ஜனநாயகமும்

 


புதிய சூழல் -3 (நகைச்சுவைக் கட்டுரை)

நான் சிறுவனாயிருந்த போது, சமூகத்தில் ஆண்களில் பத்தில் ஒருவருக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் இருக்கும். இன்று சமூகத்தில் ஆண்களுக்கு பத்தில் எட்டு பேருக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் இருக்கிறது.  

புதிய சூழல் -2 (நகைச்சுவைக் கட்டுரை)

 பள்ளி கல்லூரி மாணவர்கள் சரளமாக தமிழ் வாசிப்பார்கள். தமிழ் எழுதுவார்கள். இப்போது பள்ளி கல்லூரி மாணவர்களால் சரளமாக தமிழ் எழுதப் படிக்க முடியுமா என்பது ஐயமே. ஆங்கிலம் எழுதப் படிக்க முடியுமா என்பது அதை விடப் பெரிய ஐயம்.