பிரபு மயிலாடுதுறை
Friday, 27 March 2026
சுகன்யா சம்ரிதி
Tuesday, 24 March 2026
வாணி வாழ்த்து
நூல் : சரஸ்துதி (கவிதைத் தொகுப்பு) ஆசிரியர் : கா.சிவா பக்கம் : 122 விலை:ரூ.230 பதிப்பகம் : வாசகசாலை பதிப்பகம், சென்னை-92. பதிப்பக மின்னஞ்சல் : vasagasalaipublication (at) gmail (dot) com
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்,
வாயிற் கடைமணி நடுநா நடுங்க,
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத்
தான் தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின்
மடித்தோன், பெரும்பெயர்ப் புகார் என் பதியே!"
பரஸ்பரம் ( ஹாஸ்யம்)
நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். சந்திப்புக்கு நேரம் முடிவு செய்தால் அந்த நேரத்துக்கு தாமதம் இன்றி சென்று விடுவது எனது வழக்கம். காலை 10 மணி என நேரம் முடிவாகியிருந்தது. 9.55க்கு அங்கிருந்தேன். நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். அவரது அலுவலக ஊழியர் ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். நண்பர் சாவகாசமாக 11 மணிக்கு வந்தார். அதன் பின் சில மணி நேரங்கள் நாங்கள் தொழில் நிமித்தமான சில விஷயங்களை விவாதித்தோம். அடுத்த நாளும் சந்திப்பதாக முடிவானது. நேரம் 10 மணி. நான் 9.55க்கு வந்தேன். அவர் 11 மணிக்கு. அன்றும் விவாதித்தோம். மூன்றாவது நாள் 10 மணி சந்திப்புக்கு நண்பர் எப்படியும் ஒரு மணி நேரம் தாமதம் ஆக்குவாறே என்று 11 மணிக்குச் சென்றேன். நீங்கள் குறித்த நேரத்தில் வருபவர் ஆயிற்றே என இன்று 10 மணிக்கே வந்து விட்டேன் என்று சொன்னார்.
எந்த முடிவும் இல்லை (ஹாஸ்யம்)
திருவாரூரில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரது தந்தை ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி முதல்வர். கல்லூரி முதல்வராயிருந்து ஓய்வு பெற்றவர் என்பதால் அனுபவமிக்கவர் என ஒரு தனியார் பள்ளி அவரை பள்ளியின் ஆலோசகர் என்னும் பொறுப்பில் நியமித்து பள்ளி தொடர்பான எல்லா முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை அளித்தது. நண்பரின் தந்தைக்கு பள்ளிக்கு தினமும் சென்று வருவார். வருடங்கள் சில சென்றன. நண்பரின் தந்தை பொறுப்பில் இருக்கும் பள்ளியில் மாணவர் சேர்க்கை கணிசமாக குறைய ஆரம்பித்தது. நிர்வாகம், வரவு செலவு ஆகிய விஷயங்களில் துல்லியம் இருந்தது. ஆனால் மாணவர்கள் புதிதாக சேருவது மிகவும் குறைந்து போனது. வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கை 40 ஆக இருந்தது 25 ஆகக் குறைந்தது. அதனால் சில ஆசிரியர்களை பணியிலிருந்து அனுப்பி விட்டு இருக்கும் ஆசிரியர்களுக்கு கூடுதல் வகுப்புகளை அளிக்க ஆரம்பித்தனர்.
நண்பர் என்னிடம் சொன்னார். ‘’அப்பா ! கவர்மெண்ட் காலேஜ்ல பிரின்சிபால் ஆக இருந்தவங்க. அங்க அட்மினிஸ்ட்ரேஷன் எப்படின்னா ஏதாவது ஒரு விஷயமோ பிரச்சனையோ கவனத்துக்கு வந்தா அது மேல எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்க. சும்மா அப்படியே போட்டு வச்சிடுவாங்க. எந்த முடிவும் எடுக்கறதில்லை என்பதே முடிவு. இந்த பிரைவேட் ஸ்கூல்லயும் ஃபோர்ஸ் ஆஃப் ஹேபிட் ல அந்த மாதிரியே முடிவெடுக்கறாங்க. அதனால பல விஷயம் தேங்கி நிக்குது. அதான் அட்மிஷன் குறையுது’’
நண்பரின் குடும்பத்தினரின் நண்பர் தந்தையின் வயதைக் காரணம் காட்டி பள்ளிப் பணியிலிருந்து விலகிடுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் அப்பணியிலிருந்து விலகினார்.
Monday, 23 March 2026
கிராமமும் தேசமும்
பாரத நிலம் பலவிதங்களிலும் தனித்துவமானது. அனாதி காலமாக பாரத நிலமெங்கும் மானுடர் சேர்ந்து வாழ்கின்றனர். நிலத்தை தெய்வமென நினைக்கும் தன்மை பாரத நாட்டுக்குரிய தனி இயல்பு ஆகும். நதியை கடலை நீர்நிலைகளை இறைமையாகக் காணும் தன்மை இந்த நாட்டுக்கு எப்போதும் இருந்திருக்கிறது.
இன்றும் ஒவ்வொரு 50 கி.மீ தூரத்திலும் இன்றும் ஒவ்வொரு 100 கி.மீ தூரத்திலும் மக்களின் வாழ்க்கைமுறை சிறு சிறு மாற்றம் கொண்டு இருப்பதை நான் அறிய முடியும் ; உணர முடியும். இன்றும் சாமானிய இந்தியன் விவசாயியே. இன்றும் கிராமமே நாட்டின் அடிப்படை அலகு ஆகும்.
நாட்டின் ஒவ்வொரு கிராமமும் நாட்டில் இருந்த மன்னர்களை பேரரசர்களை கட்டுப்படுத்தும் இடத்தில் இருந்திருக்கின்றன என்பதை நாட்டின் வரலாற்றை நோக்குபவர்களால் அறிய முடியும். ஏனென்றால் நம் நாட்டின் உற்பத்தி என்பது விவசாய உற்பத்தியே. இன்றும் விவசாயம் கிராமத்து விவசாயிகளால் ஏறக்குறைய சேர்ந்தே செய்யப்படுகிறது. நாட்டின் உலகின் பொருளாதாரத்தை ஆய்வு செய்பவர்கள் பாரதத்தின் இத்தகைய தன்மையை சேர்த்து பொருளியலை அரசியலைக் கவனிப்பதில்லை ; அவ்விதம் கவனிப்பதற்கான பயிற்சி அவர்களுக்கு இல்லை.
ஒரு கிராமவாசி ஒட்டு மொத்த கிராமத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவனே. அவன் தொழில்முறையிலும் வாழ்முறையிலும் ‘’தனியன்’’ இல்லை. ஒரு பெரும் கூட்டு வாழ்க்கையின் நுண் அலகே அவன். உலகில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை சுரண்டுவது என்பது மனிதர்கள் சமூகமாக வாழத் தொடங்கிய நாளிலிருந்து இருக்கிறது. மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில் சுரண்டல் குறைந்த அளவு இருப்பது நம் நாட்டில் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். உலகின் மிகப் பெரிய ஜனத்தொகை கொண்ட நாடாக அனாதி காலமாக இருப்பினும் அன்றும் இன்றும் ஒப்பீட்டளவில் நம் நாட்டில் சுரண்டல் குறைவு என்பது பொருளியலிலும் அரசியலிலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயங்கள். ஆய்வு செய்து மற்ற நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
Sunday, 22 March 2026
வருவது உரைத்தல் (ஹாஸ்யம்)
Saturday, 21 March 2026
மாநிலத்தின் கல்வி நிலை
நண்பர்களுடன் ஒரு சினிமாவுக்கு செல்வதாக முடிவானது. சமீபத்தில் வெளியான ஹிந்தி திரைப்படம். பல இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியாகிறது. ஹிந்தி திரைப்படத்துக்கு ஆங்கில மொழியில் சப் டைட்டில் உண்டு. ஆறு பேர் செல்வதாக முடிவு செய்திருந்தோம். இணையத்தில் ஹிந்தி படமும் தமிழ் மொழிமாற்றப் படமும் ஒரே தேதியில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. எனினும் சில தொழில்நுட்ப விஷயங்களால் தமிழ் மொழிமாற்றப் படம் வெளியாவதில் சிறு தாமதம். டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம். இருப்பினும் காட்சி இல்லை என்பதால் தொகை ‘’ரீஃபண்ட்’’ ஆனது.
’’இங்கிலீஷ் சப் டைட்டில் இருக்கிறதே ! ஹிந்தியில் படம் பார்க்கலாம்’’ என்றேன் நான்.
‘’இல்லை இல்லை ! வெயிட் செஞ்சு தமிழில் பார்ப்போம்’’ என்றார்கள்.
’’இங்கிலிஷ் சப் டைட்டில் இருக்கே! டயலாக் புரியும்.’’ மீண்டும் நான் வற்புறுத்தினேன்.
‘’ சப் டைட்டில் இருக்கற டைம்-குள்ள இங்கிலீஷ் டெக்ஸ்ட் படிச்சு புரிஞ்சுக்க முடியாது’’ அனைவருமே கூறினர்.
ஐந்து பேருமே பட்டதாரிகள். 1990,2000க்குப் பிறகு பிறந்தவர்கள். பள்ளிக் கல்வியை ஆங்கில மீடியம் மூலம் படித்தவர்கள். பட்டப்படிப்பும் ஆங்கில வழியில் படித்தவர்கள். இவர்கள் ஆங்கிலம் தான் ஒரு படத்தின் ‘’சப் டைட்டில்’’ படிக்க முடியாத நிலையில் இருக்கிறது என்றால் தினமும் ஒரு நாளிதழ் தமிழ் மொழியில் படிக்கும் வழக்கம் கூட அவர்களுக்கு இல்லை.
எளிய சம்பவம் எனினும் அது அளித்த அதிர்ச்சி சாமானியமானது இல்லை.
5 நண்பர்களையும் தமிழில் வந்ததும் பாருங்கள் எனக் கூறி விட்டு தனியாக சென்று படம் பார்த்தேன்.