பிரபு மயிலாடுதுறை
Thursday, 21 May 2026
பொறி வைத்தது யார்?
Wednesday, 20 May 2026
குலைவும் மீட்பும்
இன்று மதியம் 11 மணிக்கு அருந்திய ஹோட்டல் உணவு ஒத்துக்கொள்ளவில்லை. உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மாலை கடுமையான வாந்தி. அதன் பின் அப்படியே உறங்கி விட்டேன். மாலை எழுந்ததும் உடல்நிலை பரவாயில்லை என இருந்தது ஆனால் வீட்டு வாசல் வரை சென்றாலே மயக்கம் வருவது போல் இருந்தது. வீட்டில் அனைவரும் ஊருக்குச் சென்றிருக்கின்றனர்.
நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து பிரெட் பாக்கெட் ஒன்றும் ஓ ஆர் எஸ் பொட்டலம் 5ம் வாங்கி வர சொன்னேன். அவர் 30 நிமிடத்துக்குள் தன் பணியாளரை அனுப்பி என் கைக்கு சேர்ப்பித்தார். இன்னொரு நண்பர் பசும்பாலைக் காய்ச்சிக் கொண்டு வந்தார் எனக்கு உதவுவதற்காக.
ஓ ஆர் எஸ் எனப்படும் உப்பு சர்க்கரைக் கரைசல் குடித்ததும் உடல் சற்று தெம்பாக இருந்தது. பால் ஊற்றி 2 அல்லது 3 பிரட் மட்டும் தான் சாப்பிட முடிந்தது.
தண்ணீர் பாட்டிலில் ஓ ஆர் எஸ் கரைசலை கரைத்து வைத்து விட்டு நண்பர் சென்றார்.
உடல்நலம் மீண்டது.
இரு எஜமானர்கள்
ஆங்கில மொழியில் ஒரு சொல் உண்டு : ஒரு பணியாளன் இரு எஜமானர்களிடம் பணியாற்ற முடியாது என. அடியேன் கட்டுமானத் துறையில் இருப்பவன். எங்கள் பணியிடத்தில் 10 லிருந்து 50 பேர் வரை பணி புரிவார்கள். பணியாளர் எத்தனை பேர் இருந்தாலும் பணிக்குறிப்பை அளிப்பவர் ஒருவர் தான் இருக்க வேண்டும். இருவர் பணிக்குறிப்பை அளித்தால் பணியிடத்தில் பணி முன்னேற்றம் இருக்காது ; விதவிதமான சிக்கல்தான் இருக்கும்.
இந்திய அரசியலில் அதிகாரிகளைக் கொண்ட அதிகாரவர்க்கம் இருக்கிறது. உறுப்பினர்களைக் கொண்ட அர்சியல் கட்சிகள் இருக்கின்றன. கட்சி உறுப்பினர்கள் தாங்கள் அடையும் அதிகாரம் அரசியல் கட்சியால் என எண்ண முற்படுகின்றனர். அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவது அதிகாரவர்க்கமே. ஒருவர் அரசியல் அதிகாரம் பெற்றால் அவரை அரசாங்கத்தின் விதிகளே ஆளும்.
எனவே தான் பெரும்பாலான அரசியல்வாதிகள் அதிகாரவர்க்கத்தின் முன் ஒரு முகமும் தங்கள் அரசியலுக்கு ஒரு முகமும் கொள்கின்றனர். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு விதமாகவும் ஆளும்கட்சியாக இருக்கும் போது ஒரு விதமாகவும் செயலாற்றுகின்றனர்.
சில ராஜதந்திரிகள் மட்டுமே கட்சி, அதிகாரவர்க்கம் இரண்டுக்கும் இடையே நுணுக்கமான சமநிலையைக் கொண்டு வருகின்றனர்.
Tuesday, 19 May 2026
மகிழ்ச்சியளிக்கும் ஒரு பொருள் (நகைச்சுவைக் கட்டுரை)
இப்போதே பெரும்பாலும் எனது அலைபேசியை ‘’சைலண்ட் மோட்’’ல் தான் வைத்திருப்பேன். அதை விடவும் இந்த உபகரணம் மேலும் பயன் தருவதாக இருக்கக் கூடும்.
இந்த ’’ஃபாரடே பை’’ பயன்பாட்டுக்குப் பின் தொழில் நிமித்தம் என்னுடன் பேச வேண்டியவர்களை காலை 9.30 மணியிலிருந்து மாலை 5.30 வரை மட்டுமே பேசுமாறு கூறலாம் என இருக்கிறேன். அந்த நேரம் மட்டும் ஃபோன் என்னுடன் இருக்கும்.
இந்த பையை வாங்கிய பின் என்ன யோசிக்கிறேன் என்றால் காலை 9.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை ஃபோனை ஆன் செய்து வைத்து விட்டு மற்ற நேரத்தில் சுவிட்ச் ஆஃப் செய்து விடலாமே இதற்கு ஏன் ஃபாரடே பை வாங்கினோம் என யோசிக்கிறேன். பல நாட்கள் அந்த வேலைநேரத்தில் கூட வெளிஅழைப்புகளை விரும்புவதில்லை. அத்தகைய தருணங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என இருக்கிறேன்.
Sunday, 17 May 2026
திங்களைப் போற்றுதும்
Friday, 15 May 2026
அறிவுரைக்கு செவிமடுத்தல்
நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த வருடம் கணிணித் தொழில்நுட்பமும் தகவல் தொழில்நுட்பமும் பலரால் ஆர்வமுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள். கட்டுமானத் தொழில்நுட்பத்திலும் எந்திரவியல் தொழில்நுட்பத்திலும் பயில மாணவர்கள் மிகக் குறைவாக இருப்பார்கள். கண்ணி தகவல் தொழில்நுட்பங்களில் வகுப்புக்கு 200 மாணவர்கள் இருப்பார்கள். கட்டுமானத்திலும் எந்திரவியலிலும் வகுப்புக்கு 20 மாணவர்கள் இருப்போம். எங்கள் கல்வி 4 ஆண்டுகளில் முடிந்ததற்குப் பின்னான அடுத்த ஆண்டில் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் 200 மாணவர்கள் சேர்ந்ததாகவும் கணினி தகவல் தொழில்நுட்பங்களில் 20 மாணவர்கள் மட்டுமே இருப்பதாகவும் அறிந்தோம்.
20 மாணவர்கள் கொண்ட வகுப்பில் எங்களுக்குக் கற்பிக்கும் பேராசிரியர் ஒருவர் எங்களிடம் சொல்வார். ‘’பல்கலைக்கழகத்தில் நிறைய கட்டுமானப் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை தினமும் சென்று பாருங்கள். உங்களுக்கு அங்கே என்ன பணி நடக்கிறது என முழுமையாகப் புரியாது ; இருந்தாலும் சென்று பாருங்கள். உங்கள் கல்வி அங்கே நடக்கும் வேலைகள் தான். உங்கள் கண்கள் தினமும் அந்தப் பணிகளைக் காண வேண்டும். உங்கள் உடலும் மனமும் கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில் இருக்க வேண்டும். ஏனென்றால் படித்து முடித்த பின் அதுதான் உங்கள் வாழ்க்கையாக இருக்கப் போகிறது.’’ மிகுந்த அக்கறையுடன் தான் பேராசிரியர் எங்களுக்குக் கூறினார். நாங்கள் அப்போது அந்த அறிவுரையைக் கேட்கவில்லை.
ஒரு பணி நிமித்தமாக நான் பயின்ற கல்லூரிக்குச் சென்றிருந்தேன். இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது அங்கே ஒரு கட்டுமானப் பணி நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அங்கே சென்றேன். பணி மேலாளர் ஓர் இளைஞர். சேலம் பகுதியைச் சேர்ந்தவர். சில ஆண்டுகள் முன்பு கட்டுமானப் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார். கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 16,000 சதுர அடி என்று சொன்னார். தரைத்தளம் ‘’ரூஃப் கான்கிரீட்’’ போடப்பட்டு முதல் தளம் ‘’ரூஃப் கான்கிரீட்டுக்கு தயாராகிக் கொண்டிருந்தது. தரைத்தளத்தில் கட்டுவேலை இன்னும் துவங்கவில்லையா எனக் கேட்டேன். பதில் சொன்னார். பணியாளர்கள் பெரும்பாலும் மேற்கு வங்காளத்தில் இருந்து வந்திருக்கின்றனர் என்றும் கம்பி வேலை செய்பவர்கள் மட்டுமே இங்கே உள்ளவர்கள் என்றும் சொன்னார். தமிழகப் பணியாளர்கள் குடிக்கு அடிமையானவர்கள் என்பதால் அவர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை என்றும் சொன்னார். பணிகள் மிகத் தரமாக செய்யப்படுவது கட்டுமானப் பொறியாளனான எனது கண்களுக்குத் தெரிந்தது.
25 ஆண்டுகள் முன் பேராசிரியர் சொன்ன அறிவுரையை தற்போது செயலாக்கியிருப்பது நல்ல விஷயமே என எண்ணினேன். It is better late than never.
காலமாற்றத்தின் ஒரு காட்சி
Wednesday, 13 May 2026
நற்செயலும் எதிர்பார்ப்பும்
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 4765 அரசு சாராயக் கடைகள் இருக்கின்றன. அவற்றில் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருக்கும் 717 சாராயக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது தமிழக மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் செயல். இந்த முடிவு வரவேற்கத்தக்கது.