Monday, 9 February 2026

மாவட்டத்துக்கு ஒரு பல்மருத்துவ மையம்

என்னுடைய பள்ளி நாட்களில் பன்னிரண்டாம் வகுப்பு நிறைவு செய்து பின்னர் மருத்துவக் கல்லூரியிலோ அல்லது பொறியியல் கல்லூரியிலோ சேர்க்கை பெற வேண்டும் எனில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு நுழைவுத்தேர்வும் எழுத வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் இரண்டையும் சேர்த்து ஒரு கட் ஆஃப் மதிப்பெண் கிடைக்கும். அதைக் கொண்டு ‘’கவுன்சிலிங்’’ மூலம் மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி சேர்க்கை கிடைக்கும். 

கவுன்சிலிங் தொடங்கியதும் முதலில் நிரம்புவது பி.டி.எஸ் எனப்படும் பல் மருத்துவப் படிப்பே ஆகும். அதன் பின்னர் தான் எம்.பி.பி.எஸ் நிரம்பும். அப்போது எம்.பி.பி.எஸ் படிப்பை விட பி.டி.எஸ் படிப்புக்கு மிக அதிக தேவை விருப்பம் இருந்தது. அதற்கு என்ன காரணம் எனில் ஒரு எம்.பி.பி.எஸ் மருத்துவரை விட ஒரு பல் மருத்துவர் மிக அதிகமாக பொருள் ஈட்ட முடியும் என்பதே ஆகும். ஒரு நோயாளி ஒரு மருத்துவரிடம் ஜூரம், ஜலதோஷம் ஆகியவற்றுக்காக சிகிச்சை பெற வந்தால் அவரிடம் ரூ.100 ஆலோசனைக் கட்டணமாக பெற முடியும். பல் சிகிச்சைக்காக ஒருவர் வருகிறார் என்றால் பல் கிளிப் போடுதல், பல் எடுத்தல் , பல் சுத்தம் செய்தல் ஆகியவற்றைச் செய்ய அதிக கட்டணம் வசூலிக்க முடியும். ஒரு பொது மருத்துவர் 10 நோயாளிக்கு சிகிச்சை செய்து பெறும் கட்டணத்தை ஒரு பல் மருத்துவர் ஒரு நோயாளிக்கு சிகிச்சை செய்து பெற்று விடுவார். அன்றைய தேதியில் பல் மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கையில் குறைவு. எனவே பல் மருத்துவர்களும் குறைவு. இன்று நிலைமை அப்படியில்லை. நிறைய பல் மருத்துவர்கள் இருக்கிறார்கள். பல் மருத்துவ சிகிச்சைக்கு மிக அதிகமாக செலவாகிறது.

2014ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றதும் நாடெங்கும் ‘’ஜன் ஔஷதி மருந்துக் கடைகள்’’ தொடங்கப்பட்டன. ஃபார்மா நிறுவனங்களும் அலோபதி மருத்துவர்களும் கூட்டு சேர்ந்து தங்கள் கையில் வைத்திருந்த ‘’ஃபார்மாசூட்டிகல்’’ துறையில் ‘’ஜன் ஔஷதி’’ ஜென்ரிக் மருந்துகள் பெரும் தாக்கத்தை உண்டாக்கின. ஜன் ஔஷதி மையங்களில் ஆண்டுக்கு ரூ.1500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. அதன் அர்த்தம் என்னவெனில் தோராயமாக ரூ.6000 கோடி பொதுமக்களின் சேமிப்பு காக்கப்பட்டிருக்கிறது என்பதே. வெளி மார்க்கெட்டில் 400 சதவீதத்திலிருந்து 600 சதவீதம் வரை லாபம் வைத்து விற்கப்படும் மருந்துகள் நியாயமான விலையில் மக்களுக்குக் கிடைக்கின்றன. 

நம் நாட்டில் 800 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்துக்கு ஒரு பல் மருத்துவ மையம் என்னும் அடிப்படையில் 800 மையங்களை நாடெங்கும் ஜன் ஔஷதியின் தொடர்ச்சியாக மத்திய அரசு தொடங்கலாம். சாமானிய மக்களுக்கு சகாயமான கட்டணத்தில் பல் சிகிச்சை கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யலாம். மாத ஊதியத்துக்கு பல் மருத்துவர்களை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜன் ஔஷதி கேந்திரங்கள் இயங்கும் முறைக்கு சமமான இயங்குமுறையை பின்பற்றிக் கொள்ளலாம். 

Sunday, 8 February 2026

நலவாழ்க்கை

அனுபவங்கள் வாழ்க்கை குறித்து மேலும் புரிந்து கொள்ள எனக்கு உதவுகின்றன. எனக்கு சிறு வயதிலிருந்தே கவனிக்கும் வழக்கம் உண்டு. மனிதர்களைப் பார்ப்பதையும் கவனிப்பதையும் எப்போதும் செய்து வந்திருக்கிறேன். மனிதர்களின் வழக்கங்களை குடும்பங்களின் வழக்கங்களை சமூகங்களின் வழக்கங்களை எப்போதும் பார்த்துக் கொண்டேயிருப்பேன். ஒருபுறம் படைப்பூக்கம் கொண்ட மனம் ; இன்னொரு புறம் இந்த கவனம். உலகியல் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும் அதிலிருந்து சட்டென வெளியே வந்து விடுவதற்கான வழிகளையும் இருப்பில் வைத்திருக்கிறேன். அவை அன்றாட உலகியல் வாழ்வில் எனக்கு உதவுகின்றன. பலவிதமான உலகியல் பணிகளை ஆற்றுகிறேன். இருப்பினும் என்னை உலகியலாளன் எனக் கூற முடியாது ; படைப்பூக்க மனம் கொண்டவனாகவே நான் இருக்கிறேன். 

இன்று எனது நண்பர் ஒருவரைக் காணச் சென்றிருந்தேன். அவரது மகன் 7ம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு அவர் கணிதப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த காட்சி காணவே மிகவும் இனிதானதாக இருந்தது. மீட்டர் அளவை கிலோ மீட்டருக்கு மாற்றும் கணக்கு. கணிதம் சொல்லித் தருதல் என்பது கணிதத்தின் தர்க்கத்தை சொல்லித் தருதலே. கணிதம் முழுமையான தர்க்கம். இன்னொரு புறம் அது தூய இசையும் கூட. சமூகத்தில் குழந்தைகளுக்கு கணிதம் எவ்விதம் சொல்லித்தரப்பட வேண்டுமோ அவ்விதம் சொல்லித் தரப்பட வேண்டும். நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் பெருக்கல் வாய்பாடு மனப்பாடம் செய்யும் வழக்கம் உண்டு. கணிதத்தை எண்களை குழந்தைகள் மனதுக்குள்ளும் மூளைக்குள்ளும் கொண்டு செல்வதற்கு அது மிகச் சிறந்த முறை. உலகின் எல்லா குழந்தைகளுக்கும் மனப்பாடம் செய்யும் முறை சென்று சேர வேண்டும். நான்மறை பயில்வதின் சிறு கூறு பெருக்கல் வாய்பாடு மனப்பாடம் செய்வதில் உள்ளது. நான்மறை பயில எட்டு வயதில் குழந்தைகள் ஆசிரியரின் குருகுலத்துக்குச் செல்வார்கள். எட்டு ஆண்டுகளிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகள் மொத்த மறையையும் மனப்பாடமாகப் பயில்வார்கள். அதற்கு ‘’மனனம்’’ என்று பெயர். எட்டு ஆண்டுகளுக்கு பின் வேத வித்யார்த்தி விரும்பினால் அதன் பொருளை மேலும் பயில்வார்கள். தமிழ் மொழியும் அவ்விதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. பேரிலக்கியங்களை முதலில் மனனம் செய்து கொள்ள வேண்டும். கம்ப ராமாயணம், திருப்புகழ், சிலப்பதிகாரம், திருக்குறள் என. அதன் பின் அதன் அர்த்தத்தில் ஆழ வேண்டும். 

எனக்கு சிறு வயதிலிருந்தே வாய்ப்பாடு மனப்பாடமாகத் தெரியும். ஒன்று தொடங்கி 20 வாய்பாடு வரை அறிவேன். 16 என்றும் 12 என்றும் இரு எண்களைக் கூறினால் என் மனம் 192 என்று சொல்லும். 16 மற்றும் 13 என்றால் 208 எனக் கூறும். பலர் அதை ஆச்சர்யமாகப் பார்ப்பதைக் கண்டால் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். நான் சிறுவனாயிருந்த காலகட்டத்தில் மனப்பாடம் வலியுறுத்தப்பட்டது. 

அறிவியலை செய்து பார்த்து மீண்டும் மீண்டும் செய்து பார்த்து கற்க வேண்டும். மேலை நாடுகளிலும் அமெரிக்காவிலும் பள்ளிக் குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிக்கும் முறை சிறப்பானது. நம் நாட்டிலும் அந்த நாட்டின் குழந்தைகளுக்கு இருக்கும் அறிவியல் கற்கும் வாய்ப்பு நமது நாட்டின் குழந்தைகளுக்கும் இருக்க வேண்டும். அரவிந்த் குப்தா போன்றோர் இந்த விஷயத்தில் பெரிய அளவில் செயலாற்றியிருக்கின்றனர். 

கலைகளையும் நுண்கலைகளையும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தலாம். இருப்பினும்   அதில் படைப்பூக்கத்துடன் இருப்பது என்பது ஆர்வமும் விருப்பமும் கொண்ட சிலருக்கே சாத்தியமாகிறது. 

நாம் எவ்விதம் உணவருந்துகிறோம் ; நாம் எவ்விதம் உடலைப் பராமரிக்கிறோம்; நாம் எவ்விதம் சிந்திக்கிறோம் என்பதில் நம் குழந்தைகளுக்கு குடும்பத்தின் சமூகத்தின் பொது வழக்கங்கள் பெரும் தாக்கம் செலுத்துகின்றன. கல்வியில் இந்த விஷயங்கள் முக்கிய இடம் பெற வேண்டும். உடலுக்கு உகந்த உணவை அளிப்பதும் உடலுக்கு பயிற்சி கொடுப்பதும் அடிப்படைக் கல்வியாக இருக்க வேண்டும். 

நண்பர் சமூக அமைப்பொன்றில் செயலாற்றுபவர். ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரிடம் நான் ஒரு அவதானத்தைச் சொன்னேன். அதாவது ஒரு கிராமத்தில் 5000 பேர் வசிக்கிறார்கள் என்றால் அதில் 10 வயதிலிருந்து 50 வயது வரை இருப்பவர்கள் 3000 பேர் இருப்பார்கள். இவர்களை தினமும் அவர்கள் உடல்நலனுக்கான பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என்று என்னுடைய எண்ணத்தைச் சொன்னேன். 

இன்று நம் சமூகம் வறுமையை வென்றுள்ளது. உணவு போதிய அளவு எல்லாருக்கும் கிடைக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு அவர்களுடைய உடல் குறித்த விஷயங்களை விளக்கிச் சொல்ல வேண்டும். கிராமத்தில் 3000 பேர் இருக்கிறார்கள் எனில் அதில் நடைப்பயிற்சி செய்ய விரும்புபவர்களை தனியாகப் பிரித்து அவர்களுக்கு நடைப்பயிற்சியின் நன்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். தினமும் அவர்கள் நடைப்பயிற்சி செய்வதை ஊக்குவிக்க வேண்டும். யோகாசனம் செய்ய விரும்புபவர்களுக்கு யோகாசனம் கற்றுத் தர வேண்டும். குழந்தைகளுக்கு கால்பந்து, கைபந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளைக் கற்றுத் தர வேண்டும். அந்த ஊரில் வசிக்கும் 3000 பேரும் ஏதேனும் உடல் சார்ந்த பயிற்சியில் தினமும் ஈடுபட வேண்டும் என்று சொன்னேன். 3000 என்பது இலட்சிய எண்ணிக்கை. அதில் 10 சதவீதமான 300 என்பதே சிறப்பான எண்ணிக்கை தான். அதில் ஆறில் ஒரு பங்கான 50 பேர் தினமும் இந்த இயங்குமுறைக்குள் வருவார்கள் என்றால் கூட அதன் பயனை கிராமம் சில நாட்களிலேயே உணரத் தொடங்கி விடும். 

சமூக அமைப்பைச் சேர்ந்த நண்பருக்கு நான் கூறிய விஷயம் ஆர்வமளித்தது. இணைந்து சிந்திப்போம் என்று கூறினார். 

இந்த பதிவை எழுதும் போது இதற்கு ‘’நல்வாழ்க்கை’’ என்று தலைப்பிட்டிருந்தேன். கடைசி பத்தியை எழுதி முடித்ததும் தலைப்பை ‘’நலவாழ்க்கை’’ என ஆக்கினால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. நலவாழ்க்கை நல்வாழ்க்கையும் கூட. 

Saturday, 7 February 2026

ஒற்றுமை

ஒற்றுமை என்பது சிறந்த பண்பு. ஒற்றுமை என்பது பயில வேண்டிய ஒரு பண்பு. ஒற்றுமை என்பது அறிவின் பாதை. ஒற்றுமை என்பது அன்பின் பாதை. அறிவும் அன்பும் தர்க்கமும் உள்ளுணர்வும் சமமாக சந்திக்கும் புள்ளியே ஒற்றுமை. 

ஒற்றுமை கொண்ட மனங்களாலேயே இணைந்து சிந்திக்க முடியும். ஒற்றுமை கொண்ட மனங்களாலேயே இணைந்து செயலாற்ற முடியும். 

ஒற்றுமை என்பது ஒன்றை மிகச் சரியாகப் புரிந்து கொள்வதே.  

தரவுகள் - கணக்கீடுகள்

 ஓர் உலகியல் விஷயம் தொடர்பாக பல தரவுகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய விதமான கணக்கீடுகளை செய்து பார்க்கிறேன். பல புதிய சாத்தியங்களை ஆராய்கிறேன். சில விளக்கங்களை கேட்டுப் பெறுகிறேன்.   

Thursday, 5 February 2026

இரண்டும் ஒன்றும் ( நகைச்சுவைக் கட்டுரை)

நேற்று ‘’நிலமும் பொன்னும்’’ என ஒரு பதிவு எழுதி வெளியிட்டேன். 

சற்று நேரம் கழித்து அந்த தலைப்பைக் குறித்து யோசித்தேன். தனவணிகம் நில வணிகத்தை விட மேலானது என்னும் அவதானத்தை அந்த பதிவில் எழுதியிருந்தேன். இருப்பினும் அந்த பதிவுக்கு ‘’பொன்னும் நிலமும்’’ எனத் தலைப்பிடாமல் ‘’நிலமும் பொன்னும்’’ என தலைப்பிட்டிருந்தது ஏன் என யோசித்தேன். 

நிலத்தின் ஒரு சிறு துளி மட்டுமே பொன் என்பதால் அவ்வாறு எழுதினேனா என்று யோசித்தேன். புவி தன்னகத்தே கொண்டுள்ள உலோகத்தின் அளவு 1000 கிலோ எனில் அதில் தங்கம் என்பது 1 கிராம் மட்டுமே. 

***

எனது நண்பர் ஒருவருக்கு 2014ம் ஆண்டு விவசாய நிலம் ஒன்றை ‘'A'' என்ற விலைக்கு வாங்கித் தந்தேன். இப்போது அதன் விலை ‘’4 A''. 2014ம் ஆண்டு தங்கத்தின் விலை ‘’A'' எனில் இப்போது தங்கத்தின் விலை ‘’5 A''. 

அவ்வாறெனில் தங்க விலைக்கு இணையாக விலை ஏறியிருக்கக் கூடிய நிலத்தை அவருக்கு நான் பரிந்துரைத்து வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நிலத்தின் விலையையும் தங்கத்தின் விலையையும் ஒப்பிட்டுப் பார்த்து இதனை அறிந்த போது இந்த விபரம் எனக்கு பெரு மகிழ்ச்சியை அளித்தது.

 

Wednesday, 4 February 2026

நிலமும் பொன்னும்

எனது தொழில் கட்டிடக் கட்டுமானம். இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொழிலில் இருக்கிறேன். கட்டுமானம் தாண்டி நில வணிகத்திலும் ஈடுபடுகிறேன். நான் தொழிலுக்கு வந்த போது கட்டுமானம் மிகப் பெரிய தொழிலாக பார்க்கப்பட்டது. கட்டுமானத் தொழிலில் 10 சதவீத அளவில் லாபம் இருக்கும். ஒரு கட்டிடத்தை கட்டிக் கொடுக்க இருபது இலட்சம் ரூபாய் என ஒப்பந்தம் பேசி கட்டிக் கொடுத்தால் அதில் இரண்டு இலட்சம் ரூபாய் லாபம் கிடைக்கலாம். ஒரு கட்டுமானப் பணி என்பது குறைந்தது ஆறிலிருந்து எட்டு மாதம் நடக்கும். அவ்வாறெனில் மாதம் இருபத்தைந்தாயிரம் ஊதியமாகக் கிடைத்ததாக அர்த்தம். ஒரே நேரத்தில் மூன்று கட்டிடப் பணிகள் வரை மேற்கொள்ளலாம். அவ்விதமான சூழ்நிலை எப்போதாவது மட்டுமே இருக்கும். வாடிக்கையாக இருக்காது. கட்டுமானத் தொழிலில் கிடைக்கும் வருவாய் ஊதியம் எனக் கணக்கிட்டால் அதில் லாபம் என எதுவும் கிடையாது. கட்டிடப் பணியில் 30 நாளும் பணி புரியும் தொழிலாளருக்கு மாதம் இருபத்து ஏழாயிரம் ரூபாய் கிடைக்கும். அவ்வாறெனில் தொழிலாளரை விடக் குறைவான ஊதியம் என்னும் நிலை வந்துவிடும். கட்டுமானப் பணி புரிபவர் அதனை லாபம் எனக் கருதிக் கொள்வதால் பெரிய புகார் இன்றி தொழில் நடக்கிறது.  நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட குழுவை வழிநடத்துவது, புவியைத் தோண்டி அடிக்கல் நாட்டுவதிலிருந்து பத்து அடிக்கும் மேலே உயர்ந்திருக்கும் கட்டிடத்துக்கு வண்ணப்பூச்சு பூசுவது வரை பலவிதமான பணிகளை கட்டுமானப் பணி தன்னகத்தே கொண்டிருப்பதால் செயல்கள் பல புரிந்த மனநிறைவு இருக்கும். லாபம் பெரிதாக இல்லை என்னும் விஷயத்தை அந்த மனநிறைவு மறக்கச் செய்து விடும். இதுதான் கட்டுமானத் தொழில் புரிபவர்களின் வாழ்க்கை. 

90 சதவீதம் கட்டுமானப் பணி புரிபவர்கள் ரியல் எஸ்டேட் என்னும் நில வணிகத்தில் ஈடுபட மாட்டார்கள். இரண்டும் மிக நெருக்கமான துறைகள் என்றாலும் 10 சதவீதம் பேர் மட்டுமே நில வணிகத்துக்குள் வருவார்கள். நான் கட்டுமானத் தொழிலுக்கு வந்ததிலிருந்தே நில வணிகத்திலும் ஈடுபட்டிருக்கிறேன். எனக்கு நில வணிகம் சார்ந்த அவதானம் உண்டு. 

10,000 சதுர அடி இடத்தை ஒருவருக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றால் குறைந்தது 120 நாட்களுக்கு வாங்குபவர் , விற்பவர், மனைத் தரகர்கள், சாட்சிகள், ஆவண எழுத்தர், பதிவுத்துறை ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், அளவர்கள் என பலர் அந்த வணிகம் முழுமை பெற பங்களிப்பாற்ற வேண்டும். இத்தனை பேருடனும் அந்த 120 நாட்களில் தொடர்பில் இருக்க வேண்டும். முதலில் ஒரு கிரய ஒப்பந்தம் போடுவார்கள். அதற்கு ஒரு அட்வான்ஸ் தருவார்கள். மீதித் தொகையை 3 மாதத்தில் தர வேண்டும். கூடுதல் அவகாசம் கேட்டால் இரு தரப்புக்கும் உரசல் ஆகி விடும். அனைத்தையும் சுபமாக முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இத்தனை பணிகளையும் செய்தால் 1 சதவீதம் கமிஷன் கிடைக்கும். 

நில வணிகம் பெருந்தொழில்களில் இரண்டாம் இடத்தில் இருப்பது. முதலிடம் பெற்றிருக்கும் பெருந்தொழில் தனவணிகம். பெருந்தொழில்களில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நில வணிகத்தில் ஈடுபட்டிருந்தாலும் முதலிடம் பெற்றிருக்கும் தனவணிகம் குறித்து சமீபத்தில் தான் கூர்ந்து நோக்கி அறிய முடிந்தது. 

இந்திய வங்கிகளில் முதலிடத்தில் இருப்பது பாரத ஸ்டேட் வங்கி. பாரத ஸ்டேட் வங்கியின் மூலதனத்தில் 10 சதவீதம் கொண்டிருக்கும் பாங்க ஆஃப் பரோடா இந்திய வங்கிகளில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. முதலிடத்துக்கும் இரண்டாம் இடத்துக்கும் 90 சதவீதம் வித்தியாசம். தனவணிகமும் மனை வணிகமும் அவ்வாறே உள்ளன. 

கையிலிருக்கும் பணத்தை தங்கமாக மாற்றிக் கொள்வதும் தங்கத்தை அடகு வைத்து பணமாக மாற்றிக் கொள்வதும் ஒரு சில மணி நேரங்களில் நடந்து விடுகிறது. கொடுக்கல் வாங்கலை முழுமையடையச் செய்ய நாள்கணக்கில் மாதக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. தங்கத்தின் விலை சீராக உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதால் கணிசமான லாபம் உறுதி செய்யப்படுகிறது. 

Sunday, 1 February 2026

இராம நாடகம்


 உலகின் முதல் காவியம் இராமாயணம். இராமன் கதை பாடவே கவிதை பிறந்தது என்கிறது நம் மரபு. 

இராம கதை விதவிதமாக தொடர்ந்து பாடப்பட்டுக் கொண்டே இருக்கிறது. 

18ம் நூற்றாண்டில் தில்லையாடியில் பிறந்த சைவரான அருணாசலக் கவிராயர் கம்பன் மீது ஈடுபாடு கொள்கிறார். கம்பன் மீது கொண்ட ஆர்வத்தால் இராம கதையை கீர்த்தனைகளாகப் பாடுகிறார். தமிழ் மீது அவர் கொண்டிருக்கும் ஆர்வம் அறிந்த தருமபுரம் ஆதீனத்தின் சைவத் துறவிகள் அவருக்கு சீர்காழியில் வீடொன்றை அளித்து அவரை ஆதரிக்கின்றனர். 

ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் சிறந்த உதாரணம் அருணாசலக் கவிராயரின் வாழ்வு. 

கூலி சேதாரம் ( நகைச்சுவைக் கட்டுரை)

நகைக்கடைக்குச் சென்று தங்க நகை வாங்கிய அனுபவம் எனக்கு இல்லை. எந்த நகைக்கடைக்கும் நகை வாங்க நான் சென்றதில்லை. ஒருமுறை எனது நண்பர் ஒருவர் - வெளியூர்க்காரர் - ஒரு நகைக்கடையில் இருந்து அலைபேசியில் பேசினார். உறவினர்களுடன் நகை வாங்க வந்திருப்பதாகவும் கடைக்கு வர முடியுமா என்று கேட்டார். அங்கே சென்றேன். என்னைப் பார்த்ததும் கடைக்கு வெளியே வந்து விட்டார். பத்து நிமிடம் அவரிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு நான் புறப்பட்டேன். அவர் கடைக்குள் மீண்டும் சென்றார். அந்த ஒருமுறை மட்டுமே நான் நுழைந்தது. அதுவே முதல் முறை நான் நகைக்கடைக்கு சென்றது.  இதுவரை அதுவே கடைசி தடவையும் கூட! 

வங்கியில் அடகு வைக்க நகைகளை ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ எடுத்துச் செல்வது உண்டு. நகை எத்தனை கிராம் என கேட்டுக் கொள்வேன். வீட்டில் சொன்ன எடையும் வங்கியில் மின்னணு தராசில் அவர்கள் நிறுத்துச் சொல்லும் எடையும் ஒத்துப் போகிறதா என சரிபார்த்துக் கொள்வேன். வங்கி அளிக்கும் நகைக்கடன் அட்டையை வீட்டில் கொண்டு வந்து கொடுத்து விடுவேன். கடன் வங்கிக் கணக்கில் வரவாகி விடும். அடுத்த நாள் அதனை எடுத்துக் கொள்வேன். நகையை மீட்க முதல் நாள் சென்று எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் எனக் கேட்டு வந்து அடுத்த நாள் வங்கிக் கணக்கில் செலுத்தி மீட்பேன். தங்கத்துடனான எனது பரிச்சயம் அவ்வளவே. 

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தங்கம் குறித்த செய்திகள் அதிகம் வரத் துவங்கின. தங்கம் குறித்த எனது அறிதல் பூஜ்யம் என்னும் நிலையில் இருந்ததால் இதில் அறிவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றனவே என அறியத் தொடங்கினேன். 

இந்தியாவில் ‘’எக்ஸ்’’ கிராம் தங்கம் விலை ரூ.100 எனில் துயாபில் ‘’எக்ஸ்’’ கிராம் தங்கம் விலை ரூ.85, ஸ்விட்சர்லாந்தில் ‘’எக்ஸ்’’ கிராம் தங்கம் விலை ரூ. 75 என்பதை இணையம் மூலம் அறிந்தேன். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவர் அரசால் வரையறுக்கப்பட்ட அளவு தங்கத்தைக் கொண்டு வர் முடியும். அதற்கு தீர்வை ஏதும் கிடையாது. அதற்கு மேல் கொண்டு வர 9 சதவீதம் இறக்குமதி வரி செலுத்த வேண்டும். அரசிடம் அனுமதி பெற வேண்டும். முன்னர் இந்த வரி 15 சதவீதமாக இருந்திருக்கிறது. இப்போது 9 சதவீதமாக உள்ளது. 

இத்தனை நாள் அறியாமல் இருந்து புதிதாக அறிந்ததால் இந்த விபரங்களை உற்சாகமாக வீட்டில் பகிர்ந்து கொண்டிருந்தேன். அப்போது வீட்டில் ஒரு விபரம் சொன்னார்கள். ‘’நீ இந்தியாவில் 8 கிராம் தங்கம் வாங்க வேண்டும் எனில் 9 கிராமுக்கான விலையை கொடுக்க வேண்டும். நீ 8 கிராம் தங்கத்தை விற்று பணமாக்கிக் கொள்ள வேண்டும் என்றால் 7 கிராமுக்கான விலையை மட்டுமே தருவார்கள்.’’

’’இது என்ன நடைமுறை ?’’ என்றேன் அதிர்ச்சியுடன். 

‘’இதற்கு கூலி சேதாரம் என்று பெயர்’’

‘’செய்கூலி இல்லை. சேதாரம் 6 சதவீதம்னு விளம்பரத்துல சொல்றாங்களே?’’ 

‘’விளம்பரத்துல மட்டும் தான் அப்படி இருக்கும். நேரா போனா அது இதுன்னு 12 பர்செண்ட் வந்துடும். அப்புறம் கடையில தங்க நகையைக் கொடுத்தா இன்னொரு தங்க நகை தான் தருவாங்க. பணமா தர மாட்டாங்க.’’

‘’ஆ’’ என்றேன் மீண்டும் அதிர்ச்சியுடன். 

‘’இப்ப ஒரு ஆள் 8 கிராம் தங்க நகையை விற்கப் போனா 7 கிராம் விலைக்கு வாங்கறாங்க. 8 கிராம் தங்கம் வாங்க வர இன்னொரு ஆள்ட்ட 9 கிராம் விலைக்கு விக்கறாங்க. அப்ப 7 கிராம்க்கு 2 கிராம் லாபம். அதாவது 28.6 சதவீத லாபமா?’’

‘’ஆமாம்’’ 

‘’ஸ்விட்சர்லாந்து துபாய்ல தங்கம் வாங்கி இங்க வித்தா கிடைக்கற லாபத்தை விட நகை வியாபாரிகளுக்கு கூலி சேதாரத்துல லாபம் கிடைக்கும் போல இருக்கே’’ என்றேன்.    

தேடி வந்த பேரருளாளன்

 

இன்று எனது நண்பர் எனக்கு சீர்காழி அருணாசலக் கவிராயரின் ‘’இராம நாடகக் கீர்த்தனைகள்’’ நூலை அளித்தார். ஸ்ரீராமனை தேடி வந்த பேரருளாளனாக அத்தருணத்தில் உணர்ந்தேன். 

Saturday, 31 January 2026

இரண்டு கோணங்கள்

 லாக் டவுன் அறிவிக்கப்பட்ட போது 20 நாட்களுக்கு மேல் எங்கும் வெளியில் செல்ல முடியாத நிலை இருந்தது. அப்போது வீடுகளில் விதவிதமான உணவுப் பண்டங்கள் தயாரிக்கப்பட்டன. பாயசம், பஜ்ஜி, கேசரி, சர்க்கரைப் பொங்கல், வடை ஆகிய பண்டங்கள் தயாரிக்கப் பட்டன. உலகமே ஓர் இடரில் இருக்கும் போது இவ்விதமான விதவிதமான பண்டங்கள் தயாரிப்பது உகந்ததா கஞ்சி , கூழ் போன்ற எளிய உணவுகள் மட்டும் தயாரித்து உண்ணக் கூடாதா என்பது ஒரு கோணம். அதனை நான் கேட்ட போது பெண்கள் அதற்கு ஒரு பதில் சொன்னார்கள். அதாவது எல்லாரும் புதிய விதமான இடரில் அதனை எவ்விதம் எதிர்கொள்வது என அறியாமல் திகைத்து இருக்கும் போது சுவையான ருசியான உணவுகள் அளிக்கப்பட்டால் அந்த திகைப்பிலிருந்து மீள வழி பிறக்கலாம். எளிய உணவுகளை வழக்கமான காலத்திலேயே பழகாதவர்கள் இவ்விதமான இடர் மிகுந்த காலங்களில் உண்டால் மேலும் திகைப்பும் சோர்வும் அடைவார்கள் என்று கூறினார்கள். 100 க்கு 99 பேருக்குப் பொருந்தும் நடைமுறைக் கோணம் பெண்கள் தெரிவித்தது என எண்ணுகிறேன்.