ரியல் எஸ்டேட் விஷயங்கள் தொடர்பாக எனது பேராசிரியரை சென்ற வாரத்தில் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆசிரியர் - மாணவர் என்னும் நிலையைத் தாண்டி மிகவும் நட்பார்ந்த உணர்வுடன் நாங்கள் பல விஷயங்களைப் பேசிக் கொண்டோம். நேற்று தான் கவிதைகள் எழுத முயல்வதுண்டு என்று கூறினார். அவர் எழுதியவற்றைக் காட்டுமாறு கேட்டேன். சிலவற்றை என்னிடம் காட்டினார்.
ஜப்பானில் ஜென் ஆலயங்களில் ஓர் வழக்கம் உண்டு. அங்கே அந்த ஊரில் இருப்பவர்கள் - சாமானியர்கள், தொழிலாளர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், பெண்கள் - என சகலதரப்பினரும் தாங்கள் எழுதும் கவிதைகளை ஜென் ஆலயத்தில் உள்ள மரத்தில் சிறு நூல் மூலம் கட்டித் தொங்க விடுவார்கள். கவிதையை மிக உயர்ந்த உணர்வாக எண்ணுவதையும் தாங்கள் படைத்ததை மிக உயர்வான உணர்வுநிலையாகக் கருதுவதையும் வெளிப்படுத்தும் நிகழ்வு அது.
முதலீட்டியம் சகல மனிதனையும் நுகர்வோனாக மட்டுமே ஆக்க வேண்டும் என்னும் தீவிரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நுகர்வு வெறியூட்டப்படுகிறது சமூகம். இந்த தளையிலிருந்து சமூகத்தை விடுவிக்கும் தன்மை படைப்பூக்கத்துக்கு மட்டுமே இருக்கிறது.
படைப்பாளிகள் எப்போதும் படைப்பூக்கத்துடன் இருக்கும் இயல்பு கொண்டவர்கள். இருப்பினும் எல்லா மனிதனும் படைப்பூக்கத் தன்மையை சில கணங்களிலேனும் பெற இயல்பு கொண்டவனே.
பேராசிரியர் படைப்பூக்க இயல்புக்கு தினம் கொஞ்ச நேரம் சென்று வருகிறார் என்பது மிகச் சிறப்பான விஷயம். தனக்கு இசை, நடனம் ஆகிய நுண்கலைகளிலும் ஆர்வம் உண்டு எனக் கூறியதைக் கேட்ட போது ஆச்சர்யமாக இருந்தது. ரியல் எஸ்டேட்டில் இப்படி ஒருவரா என!