Friday, 3 April 2026

ஊர் மாற்றம்

நமது மனம் பழக்கத்துக்கு உட்பட்டது. அதனை பழக்கப்படுத்த முடியும் ; ஒரு பிராணியைப் பழக்குவதைப் போல. பழகிய விஷயத்துக்கு மீண்டும் மீண்டும் உட்பட்டவாறே இருப்பது மனதின் இயல்பு. மனதுக்குப் புதிய ஒன்றை அறிமுகப்படுத்தினால் அதனை உடனே ஏற்காது. அதற்கு சில தடைகளை அளிக்கும். அதைத் தாண்டியும் நாம் உறுதியாக இருந்தால் புதியவற்றை மனம் ஏற்கத் துவங்கி விடும்.  

நாம் முதல் நாள் இரவு ஒரு புதிய ஊருக்குச் சென்றிருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். தூங்கி காலை விழிக்கிறோம். ஒரு நடை செல்கிறோம் எனில் நம் மனம் அங்கே இருக்கும் சிறு சிறு விஷயங்களையும் கவனிக்கும். பூத்து நிற்கும் மரம், சிறு செடிகள், மண்டிக் கிடக்கும் புல், வீதியில் திரியும் நாய்கள், அப்பகுதியின் கட்டிடங்கள், அதன் மதில் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் என அனைத்தையும் நம் மனம் நுட்பமாக கவனிக்கும். பார்க்கும் காட்சிகளில் மனம் லயிக்கும். நாம் வருஷக்கணக்காக வாழ்ந்த ஊரில் ஒரு புது ஊரில் ஏற்படும் லயிப்பு ஏற்படாது. 

மனம் இயங்கும் விதத்தை ஒரு அளவீட்டுக்குள் கொண்டு வருவோமானால் அதற்கு 1 -10 வரை என அளவீடு அளித்தால் பல வருஷம் பழகிய ஊரில் அதன் உற்சாகம் 3 என இருக்கும் ; புதிய ஊரில் அதன் உற்சாகம் 7 என இருக்கலாம். வழமையை விட உற்சாகத்தை விரும்புபவர்கள் புதிய ஊருக்குச் செல்லலாம் என நினைப்பார்கள். பத்தாயிரத்தில் ஒருவருக்கே அவ்விதம் தோன்றும். ஏனென்றால் மனிதர்கள் பொதுவாக வழமையில் தங்களைப் பொருத்திக் கொள்பவர்கள். புதிய ஒன்றை நோக்கிச் செல்ல தயங்குபவர்கள். 

நீங்கள் பல வருஷம் ஒரு ஊரில் வசித்திருக்கிறீர்கள். பின் 3 ஆண்டுகள் வேறு ஒரு ஊரில் இருந்து விட்டு அதன் பின் மீண்டும் பழைய ஊருக்கு வருகிறீர்கள் என்றால் அப்போது பழைய ஊரிலும் புதிதாக உணர வாய்ப்பு உண்டு.  

Thursday, 2 April 2026

திட்டமிடல்கள் (ஹாஸ்யம்)

உத்தரவு கிடைத்து விட்டதால் அமைப்பாளர் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார். 

தனது யூகச் செல்வங்கள் அனைத்தையும் இருப்புச் செல்வங்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். 

பல ஆண்டுகளுக்கு முன்னால் அமைப்பாளரின் பட்டயக் கணக்காளர் ஒரே ஒரு வங்கிக் கணக்கு மட்டும் வைத்துக் கொள்ளுமாறு கூறியிருந்தார். அதாவது ஒரு சேமிப்புக் கணக்கு. ஒரு நடப்புக் கணக்கு. அப்படியே செயலாக்கினார் அமைப்பாளர். ஒரு அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு இருக்கிறது. இப்போது அமைப்பாளர் என்ன நினைக்கிறார் என்றால் இனிமேல் வங்கிக் கணக்கே தேவையில்லை என்று. வங்கியில் மேற்கொள்ளும் எல்லா பரிவர்த்தனையும் அஞ்சல் அலுவலகத்தில் செய்து கொள்ள முடியும் என்பதால் இனி வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என எண்ணுகிறார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஊழியர்கள் குறுநில மன்னர்கள் போன்ற மனோபாவத்துடன் செயல்படுகிறார்கள் ; அவர்களுக்குத் தாங்கள் சேவை அளிக்கும் இடத்தில் இருக்கும் பணியாளர்கள் என்னும் நினைவு இல்லை. ஏன் வங்கிக் கணக்கை முடித்துக் கொள்கிறேன் என்பதை ஒரு கடிதமாக எழுதி கிளைக்கும் மேல் அலுவலகத்துக்கும் அனுப்பி விட்டு முடித்துக் கொள்ள வேண்டும். 

பொதுமக்கள் தங்கள் சேமிப்பை வங்கிக் கணக்கில் இடுவதை விட அஞ்சலக சேமிப்புக் கணக்கில் இடுவதே பாதுகாப்பானது. வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் டெபாசிட் ஆக பணம் பெற்று அந்தப் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு கடனாக அளிக்கின்றன. ஆனால் அஞ்சல் அலுவலகம் வாடிக்கையாளர்களிடம் பெறும் டெபாசிட் மத்திய அரசாங்கத்துக்கு கடனாக அளிக்கப்படுகிறது. வங்கிகள் திவால் ஆக வாய்ப்பு உண்டு. போஸ்ட் ஆஃபிஸ் திவால் ஆகாது. 

இன்று அமைப்பாளர் போஸ்ட் ஆஃபிஸில் என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன என்று பார்த்தார். 

பி ஓ எம் ஐ எஸ் என ஒரு திட்டம். அதிகபட்சம் ரூ.9,00,000 டெபாசிட் செய்யலாம். மாதம் ரூ.5500 கிடைக்கும். 

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் என ஒரு திட்டம் உள்ளது. அதில் ஓராண்டுக்கு அதிகபட்சம் ரூ.1,50,000 டெபாசிட் செய்யலாம்.

நேஷனல் சேவிங்ஸ் டைம் டெபாசிட் என ஒரு திட்டம் உள்ளது. அதிகபட்சம் 5 ஆண்டுகாலம் டெபாசிட் செய்யலாம். உச்சபட்ச தொகை என ஏதும் கிடையாது. 

கையிருப்பு இருக்கும் பணத்தில் ரூ.10.5 இலட்சத்தை பி ஓ எம் ஐ எஸ் மற்றும் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டிலும் மீதித் தொகையில் பாதியை நேஷனல் சேவிங்க்ஸ் டைம் டெபாசிட்டிலும் செய்து விட்டு இன்னொரு பாதிக்கு நேஷனல் சேவிங்க்ஸ் சர்டிஃபிகேட் வாங்கி வைத்துக் கொள்வது என முடிவு செய்திருக்கிறார் அமைப்பாளர். 

Wednesday, 1 April 2026

உத்தரவு கிடைத்தது

 இன்று காலையிலேயே எழுந்து விட்டேன். அதிகாலை நேரத்தில் ஒரு நல்ல கனவொன்று கண்ட பின் எழுந்திருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டின் கதவுகளைத் திறந்து வைத்தேன். கலனில் நீர் நிரப்பி குடிநீர்த்தேவைக்கான ஏற்பாடுகளை செய்தேன். பின்னர் எனது உணவை சமைத்து விடுவோம் என முடிவு செய்து கேழ்வரகுக் களி கிண்டினேன். ஐந்திலிருந்து ஏழு நிமிடங்களில் எனது உணவு தயாராகி விடும். ஒரு சிறு தட்டில் அதனை வைத்து அதன் மீது இன்னொரு சிறு தட்டை மூடி டயனிங் டேபிள் மீது கொண்டு சென்று வைத்தேன். இன்று காலை நேரத்திலேயே கோவிலுக்குச் செல்ல வேண்டும் என எண்ணியிருந்ததால் சிறு தூரம் மட்டுமே நடைப்பயிற்சி சென்று வந்தேன். அதன் பின் வீட்டுக்கு வந்து காலையிலேயே சில பதிவுகள் எழுதி தளத்தில் பதிவிட்டேன். நேரம் காலை 8 மணியாக இருந்தது. குளித்து விட்டு ஆலயத்துக்குச் சென்றேன். 

ஆலயம் சென்ற போது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ஊரின் மிகப் பெரிய கட்டுமானம் ஆலயம். இன்றும் கூட. இத்தனை பெரிய நிலமும் இத்தனை பெரிய கட்டுமானமும் இன்றும் ஊரில் ஒரே இடத்தில் இணைந்து இல்லை. ஒவ்வொரு ஆலயத்திலும் வேதம் படிக்கும் 100 மாணவர்களுக்கு மாதம் கணிசமான தொகை உதவித் தொகையாக அளித்து ஆலயத்தில் எப்போதும் வேத முழக்கம் கேட்கும் வகையில் ஏன் ஏற்பாடு செய்யப்படக் கூடாது? அதைப் போலவே திருமுறைகள், தமிழிசை, பரதம் முதலிய நுண் கலைகள் ஆகியவற்றுக்கு ஏன் ஆலயம் இடம் தரக் கூடாது? ஆலயத்துக்கு எவ்வளவோ வருமானம் இருக்கிறது. வேதக் கல்வியும் திருமுறைக் கல்வியும் நுண்கலைக் கல்வியும் ஆலயத்தின் வருமானத்தை பலவகைகளிலும் அதிகரிக்கவே செய்யும். ஆலய நிர்வாகம் என்பது அப்பிரதேசத்தின் பண்பாட்டுச் செயல்பாடாக இருக்க வேண்டிய காலம் வந்து விட்டது. ஆலயம் பண்பாட்டுச் செயல்பாடுகளின் மையமாகவும் இருக்க வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம். 

உள எழுச்சியும் உள நெகிழ்ச்சியும் கொண்டிருந்த நிலையில் இன்று ஆலயம் சென்றிருந்தேன். நேற்று எழுதிய ‘’உத்தரவு’’ என்னும் பதிவு உருவாக்கியிருந்த மனநிலை. ஊரில் ஆலயத்தில் மஹாகணபதி சன்னிதி ஒன்று உள்ளது. தமிழ் மக்களுக்கு ஆனைமுகனைப் போல் இன்னொரு ஆப்த தெய்வம் இல்லை. ஆற்றல் கொண்டிருப்பவனும் குழந்தையாயிருப்பவனும். அவன் முன் சென்று நின்றேன். அவனிடம் என் துயரங்களைத் தெரிவிக்க நினைத்தேன். கடவுள் மிகப் பெரியவன். அவனிடம் என் லௌகிகத் துயரங்களைக் கூற வேண்டுமா என ஓர் எண்ணம். என் துயரங்களைச் சொல்ல என் வலிகளைச் சொல்ல என் வேதனைகளைச் சொல்ல அவனன்றி வேறு துணை இல்லை. சொல்வதை முழுதாகக் கேட்டுக் கொள்ளக் கூட அவனன்றி வேறு உறவு இல்லை. எதுவும் சொல்லாமல் தான் அவன் முன் நின்றிருந்தேன். அபயாம்பிகையை தரிசனம் செய்தேன். நான் சென்ற போது மயூரநாதருக்கு சுடராட்டு நிகழ்ந்தது. ‘’திருச்சிற்றம்பலம்’’ ‘’திருச்சிற்றம்பலம்’’ எனத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தேன். நாம் இருப்பது மாயூரத்தில் ; திருச்சிற்றம்பலம் என்பது சிதம்பரம். மாயூரத்தில் ஏன் சிதம்பரத்தைச் சொல்கிறோம் என நினைத்தேன். தமிழகத்தில் எல்லா ஆலயங்களிலும் திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள். திருமுறைகள் ஓதத் துவங்கும் போதும் நிறைவு செய்யும் போதும் திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள். சிவ பக்தர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள். எனவே எந்த ஊரிலும் திருச்சிற்றம்பலம் சொல்லலாம் என எண்ணினேன். ஆடலரசன் நடராஜன் ஆடுவது காஸ்மிக் நடனம். எனவே நடராஜன் சபையில் ஒட்டு மொத்த பிரபஞ்சமும் அடக்கம். எனவே திருச்சிற்றம்பலம் என்பது ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் குறிக்கும் மந்திரம் என எண்ணினேன். 

கோவிலுக்கு வெளியே வரும் போது ஒரு பெண் கூடையில் வில்வ இலைகளையும் நாலலிங்கப் பூவையும் வைத்திருப்பதைக் கண்டேன். கர்நாடகாவில் சிவாலயங்கள் அனைத்திலும் வில்வ இலைகளும் வில்வ இலை மாலைகளும் பெருமளவில் விற்பனை ஆகும். 

மாயூரநாதர் கோவிலிலிருந்து திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்துக்குச் சென்றேன். பெருமாள் கோயிலுக்கு மாலை செல்லலாமா என ஒரு கணம் எண்ணினேன். பெருமாள் தரிசனத்தை மாலை வரை தள்ளி வைக்க வேண்டாம் என முடிவெடுத்துப் புறப்பட்டேன். 

திருஇந்தளூர் கீழவீதி அருகே வந்த போது பரிமள ரங்கன் பக்தர்கள் வடம் இழுக்க தேர் பவனி வருவதைக் கண்டேன். இறைவன் எனக்கான உத்தரவை அளித்து விட்டான் என்பதை உணர்ந்த போது உளம் நெகிழ்ந்தது. பரமாத்மா ஜீவன்களுடன் ஆடுவது ஆடல் ; விளையாடல். தேரில் இறைவனைக் கண்ட கணம் அவனை என் குழந்தையாக எண்ணினேன். என் கடவுள் எனக்கு அனுமதி அளித்து விட்டான். புதிய நிலம் காண புதிய காட்சிகளைக் காண புறப்பட்டுச் செல் என்பதே அவன் எனக்கு அளித்திருக்கும் உத்தரவு. மூலவர் யோக நித்திரையில் சயனித்திருக்கிறார். உற்சவர் ஊர் உலகம் கண்டு வருகிறார். எனக்கு இன்று காட்சி கொடுத்தது உற்சவர். 

இறைவா ! உன் லோகங்களில் கோடானுகோடி ஜீவன்கள். அந்தக் கோடானுகோடி ஜீவன்களில் ஓர் எளிய ஜீவன் அடியேன். உன் திருவுளம் அடியேனையும் கருதுகிறதா ? உன் கருணை பெரியது இறைவனே. உன் கருணையால் தான் ஜீவன்கள் ஜீவித்திருக்கிறோம். அதனை நாங்கள் எப்போதும் உணர்ந்திருப்பதில்லை இறைவனே ! எப்போதாவது உணர்கிறோம். இறைவா உன் கருணை எங்கள் மீது எப்போதும் இருக்கட்டும். 

இறைவன் ஒரு குழந்தை

 புன்சிரிப்பு சிரித்து
அவ்வப்போது கை நீட்டி
அவ்வப்போது மறைந்து ஒளிந்து
பிரியச் சொல் உதிர்த்து
பேர் சொல்லி அழைத்து
கொஞ்சப்படுகையில் மகிழும்
சிறு மகவே
இறைவன்
சிறு மகவும்
இறைவன்

புதிய நிதி ஆண்டு

புதிய நிதி ஆண்டு பிறக்கிறது. வணிகர்களுக்கு நிதி ஆண்டு முக்கியமானது. நிதி ஆண்டு நிதி குறித்ததாகவே இருப்பதால் தொழில் தொடர்பான விஷயங்கள் முடிவுகள் முக்கியமானதாக ஆகிறது. 2025-2026 நிதி ஆண்டின் சிறப்பு அம்சம் என்பது எனது தொழிலில் ரியல் எஸ்டேட்க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்தது. கட்டுமானம் மனை வணிகம் இரண்டுமே இணையாக செய்யும் வகையில் இருந்திருந்தாலும் தற்போது ரியல் எஸ்டேட்க்கு அளிக்கும் நேரம் அதிகமாகி உள்ளது. கட்டுமானத்தில் தினந்தோறும் நாம் செய்யும் பணி நம் கண் முன்னால் வளர்ந்து கொண்டிருப்பதைக் காண முடியும். ஒரு வீடு கட்டுமானம் நடக்கிறது எனில் முதலில் இரண்டரை அடி உயரத்துக்கு சுவர் எழும்பும். அடுத்த நாள் மேலும் இரண்டரை அடி. மூன்றாம் நாள் இன்னும் இரண்டு அடி. அதன் பின் ‘’பீம்’’ அமைக்கும் பணி. பணி முன்னேற்றத்தைக் கண்ணால் காண முடியும். ரியல் எஸ்டேட்டில் நாம் செய்யும் பணி முன்னேற்றம் அடைகிறதா என்பதைக் கண்ணால் கண்டு அறிய முடியாது. சென்ற நிதி ஆண்டில் இரு ரியல் எஸ்டேட் பணிகளுக்கு தீவிரமான உழைப்பைச் செலுத்தியிருந்தேன். அதற்கான பலன் இந்த நிதி ஆண்டின் துவக்கத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வானத்தை நோக்கித் தொழுது புதிய நிதி ஆண்டில் நுழைகிறார்கள் நாட்டின் வணிகர்கள்.   

அதிகாலைக் கனவு

 இன்று அதிகாலை ஒரு கனவு கண்டேன். எவ்விதம் அது அதிகாலைக் கனவு என்று கூறுகிறேன் என்றால் கனவு கண்டவுடன் விழித்து விட்டேன். அப்போது நேரம் 4.45. கனவு என்னவெனில், சென்னை ஐ ஐ டி அல்லது சென்னை எஸ்.ஈ.ஆர்.சி போன்ற ஓர் உயர்கல்வி நிறுவனம். அங்கே எம்.ஈ அல்லது எம்.டெக் போன்ற மேல்படிப்புக்குத் தேர்வான மாணவர்கள் அங்கே இருக்கும் ஓர் ஆய்வகத்துக்குச் செல்கிறோம். நாங்கள் 25 பேர் இருப்போம். எங்கள் வகுப்புகளின் முதல் நாள் அன்று. அலுவலகத்தில் சேர்க்கை தொடர்பான பணிகளை முடித்து விட்டு அவர்கள் அளித்த குறிப்புகளின் படி ஆய்வகத்துக்கு வருகிறோம். அங்கே இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள். நிறைய பேராசிரியர்கள் இருக்கிறார்கள். அலுவலகத்தில் எங்களை யாரைச் சென்று பார்க்கச் சொன்னார்களோ அவரைச் சென்று பார்க்கிறோம். அப்போது அங்கிருக்கும் ஆய்வகம் எங்களுக்கு ஆர்வமூட்டுவதாய் இருக்கிறது. அதன் செயல்பாடுகளை கவனிக்கிறோம். அந்தப் பேராசிரியர் எங்களில் ஒருவரின் ஃபுல் சைஸ் நோட்டை வாங்கி அதில் ஒரு கணக்கை எழுதுகிறார். அது கணிதத்தில் ’’மேட்ரிக்ஸ்’’ என்னும் பாடத்தில் கேட்கப்படும் வினா. நாங்கள் அந்த வினா என்ன என்று பார்க்கிறோம். அந்த நோட்டை வாங்கி அக்கணக்குக்கான தீர்வை ஏழெட்டு படிகளில் கொண்டு வந்து நான் எழுதுகிறேன். அதனை அவரிடம் காட்டுகிறோம். ‘’சரியான விடை’’ என்று கூறுகிறார். 

Tuesday, 31 March 2026

சிறு கூடாரம்

 
சில நாட்களுக்கு முன், தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரு பயணி ரயில்வே பிளாட்ஃபாரத்தில் மேலே இருக்கும் விதமான சிறு கூடாரம் ஒன்றை அமைத்து அதனுள் உறங்கிக் கொண்டிருந்தார். நான் பார்த்த போது நேரம் இரவு 10 மணி. அவரது ரயில் நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ இருந்திருக்கக் கூடும். மலையேறுபவர்கள் இதனைப் பயன்படுத்துவார்கள். மிகக் குறைவான எடை கொண்டது. மொத்த கூடாரத்தையும் சிறு பைக்குள் அடக்கி வைக்க முடியும். கையால் தூக்கிச் செல்லும் அளவு மிகக் குறைவான எடை கொண்டது. எனக்கு அக்காட்சி பெரும் ஆர்வம் அளித்தது. 

சொந்த வீட்டுக்கு மாற்று

இந்தியா இன்றும் விவசாய நாடு. தங்கள் விளைநிலத்துக்கு அருகில் வீடமைத்துக் கொள்வது இந்திய விவசாயிகளின் வழக்கம். விவசாயிகளின் உபரி வருமானமே பன்னெடுங்காலமாக இந்திய நகரங்களின் தோற்றத்துக்கும் நிலைபெறலுக்கும் காரணமாக அமைந்தது. இந்தியாவில் எப்போதுமே நிலம் ஒரு முதலீடு. பெரும் விலை மிக்கது. ஒருவர் தன் வாழ்நாளின் பெரும் பகுதி சம்பாதித்த ஒரு கோடி ரூபாய் கூட ஒரு 40 அடி அகலமும் 60 அடி நீளமும் கொண்ட 2400 சதுர அடி மனையாக மாறி விடும். இந்தியர்கள் தங்கத்திலும் நிலத்திலும் மட்டுமே அதிகம் முதலீடு செய்கின்றனர். இது அனாதி கால நடைமுறை. அதனால் தான் நகரங்களிலும் பெருநகரங்களிலும் மனையும் வீடுகளும் பெரும் விலை விற்கின்றன ; வீட்டு வாடகையும் கூடுதலாக இருக்கிறது. 

ஏன் நம் பிராந்தியத்தில் காலிமனைகள் வாடகைக்கு விடப்படுவதில்லை ? ஒருவருக்கு 2400 சதுர அடி மனையில் கட்டப்பட்டிருக்கும் வீடு மாதம் ரூ.6000 வாடகைக்கு தரப்படுகிறது என்றால் ஏன் ஒரு மனை ரூ.2000 வாடகைக்கு தரப்படக் கூடாது ? மனையின் விலை ஐம்பது லட்ச ரூபாய் என்றால் வீடு கட்ட ஐம்பது லட்ச ரூபாய் செலவாகிறது. மனையை வாடகைக்கு விட்டால் வீடு கட்ட செலவிடப்படும் தொகை சேமிப்பாக அந்த நபருக்கு மிஞ்சும் அல்லவா? 

ஒருவர் ஒரு மனையை வாடகைக்கு எடுத்து தன் சொந்த செலவில் மூங்கிலால் வீடு கட்டிக் கொண்டு 3 வருடமோ 5 வருடமோ குடியிருந்து விட்டு பின்னர் அந்தக் கூரை வீட்டை பிரித்து விட்டு ஏன் அடுத்த ஊருக்குச் செல்லக் கூடாது? கண்டெயினர் வீடுகள் இருக்கின்றன. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மோட்டார் வாகனத்தில் நகர்த்திச் செல்லும் கண்டெயினர் வீடுகள் இருக்கின்றன. இவை ஏன் நம் தேர்வாக இருப்பதில்லை? இவற்றை ஏன் நாம் பரிசீலிப்பதில்லை ?  

உத்தரவு

பெயருடன் ஊரை இணைத்துக் கொண்டிருப்பவன் அடியேன். ஊரிலிருந்து புறப்படுவதும் ஊருக்குத் திரும்பி வருதலுமே என் வழமையாக இருந்திருக்கிறது. சிறுவனாக மகிழ்ந்திருந்ததும் இங்கு தான் ; இளைஞனாக வாழ்வை எதிர்கொண்டதும் இங்கு தான். அகத்தின் ஏதோ ஒரு சிறு புள்ளி புதிய நிலம் நோக்கிச் செல் எனக் கூறிக் கொண்டிருக்கிறது. அக்குரலின் உறுதி மாற்றமடையாமல் இருப்பது எனக்கு வியப்பைத் தருகிறது. எந்தப் புதிய நிலம் என என் அகத்தைத் துழாவிப் பார்த்தேன். ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்னும் விருப்பம் எனக்கு உண்டு. காஞ்சிபுரம் சென்று விட வேண்டும் என்றும் நினைக்கிறேன். கோதாவரி பாயும் ராஜமுந்திரி சென்று விட வேண்டும் என்பதும் என் விழைவு. கர்நாடகாவின் கூர்க் பிராந்தியம் எனக்கு விருப்பமானது. மத்தியப் பிரதேசத்தின் சிறு குன்றுகள் இனியவை. காசியும் ரிஷிகேசமும் என்றைக்குமான விருப்பங்கள். இமயத்தில் வாழ்ந்தால் வாழ்நாளின் மீதி உள்ள நாட்கள் எல்லாம் இமயத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் அதை விட இன்னொரு இனிமை இருக்க இயலாது. என்ன நிகழப் போகிறது என்பதை அறியேன். அகத்தின் குரலைக்கு செவி சாய்க்கப் போகிறேனா என்பதை அடியேன் நோக்கிக் கொண்டிருக்கிறேன். 

இந்த எண்ணம் ஏன் உருவானது என்பதை என்னால் அத்தனை தெளிவாக வகுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த ஊர்கள் எவ்விதம் என் தெரிவாக இருக்கின்றன அவற்றின் பொதுத்தன்மை என்ன என்பதும் என்னால் அறிய இயலாததாக இருக்கிறது. எல்லா ஊர்களுமே நதிக்கரையின் ஊர்கள். ஸ்ரீரங்கமும் கூர்க் கும் காவிரிக்கரை ஊர்கள். காசியும் ரிஷிகேசமும் கங்கைக்கரை ஊர்கள். ராஜமுந்திரி கோதாவரிக்கரையில் இருக்கும் ஊர். நதிக்கரையில் பிறந்து வாழ்ந்த நான் இன்னொரு நதிக்கரை நகருக்கே செல்ல விரும்புகிறேன். 

சராசரி வாழ்நாளின் பாதி பங்கு கடந்து விட்டது. மீதி பங்கு எவ்வளவு என்பது என் திட்டமிடலுக்கு உட்பட்ட விஷயம் அல்ல. புதிய நிலத்துக்குச் சென்று ஒவ்வொரு கணமும் புதிதாய் உணரும் வாழ்க்கையை அங்கு வாழ வேண்டும் என விரும்புகிறேன். தினமும் புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ளும் வாழ்க்கை. இயற்கையிடமிருந்து பெற்றுக் கொண்டவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வாழ்க்கை. துயர் இல்லாத வாழ்க்கை. 

ஒரு புதிய நிலம் நோக்கி செல்வது என்னும் ஆர்வம் சில விஷயங்களை தீவிரமாக உறுதிப்படுத்துகிறது. செல்லும் ஊரில் சொந்தமாக நிலம் எதுவும் வாங்கக் கூடாது. ஏன் இவ்விதம் தோன்றுகிறது என அறியேன். சொந்தமாக நிலமோ வீடோ இல்லாமல் இருப்பது சிறப்பான விஷயம் என்பது என் அபிப்ராயமாக இருக்கிறது. எனது தொழில் கட்டுமானமும் மனை வணிகமும். இருப்பினும் என் அபிப்ராயம் இதுவே. இது மிக உறுதியான எண்ணம் அல்ல எனினும் நாம் ஒரு தொழில் செய்கிறோம் அந்தத் தொழிலுக்கு ஒரு சொந்த இடம் இருப்பது நல்லது எனில் நிலம் வாங்கி அதில் வீடு கட்டிக் கொள்ளலாம். வட இந்திய வணிகர்களுக்கு இந்த வழக்கம் உண்டு. அவர்கள் வீடுகள் பெரும்பாலும் கடைவீதியில் இருக்கும் ; அவர்களின் வணிகத்துக்குரிய கடை கீழ்தளத்திலும் வீடு மேல்தளத்திலும் இருக்கும். ஒருவர் கையில் பணம் இருக்கிறது அவர் ஒரு புதிய ஊருக்கு இடம் பெயரப் போகிறார் என்றால் அங்கே கையில் இருக்கும் பணத்தை வீடாக மாற்ற வேண்டியதில்லை. சொந்தமாக வீடு இல்லை என்றால் எந்த ஊருக்கும் சென்று அங்கே ஓராண்டோ இரண்டு ஆண்டுகளோ வாழ்ந்து விட்டு அடுத்த ஊருக்குச் செல்லலாம். பெங்களூரில் இரு ஆண்டுகள் ; ஸ்ரீகாகுளத்தில் இரு ஆண்டுகள்; திருவண்ணாமலையில் இரு ஆண்டுகள்; நாகபுரியில் இரு ஆண்டுகள் ; கௌஹாத்தியில் சில ஆண்டுகள் ; ஸ்ரீநகரில் சில ஆண்டுகள். எண்ணிப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. 

இங்கிருந்து புறப்படுவது என்று மனதுக்குத் தோன்றி விட்டது. அந்த எண்ணத்தை தெரிவித்து உத்தரவு பெற வேண்டும் என எண்ணுகிறேன். யாரிடம்? மாயூரநாதரிடமும் அபயாம்பிகையிடமும். திருஇந்தளூரின் பரிமள ரங்கநாதனிடம். இறை உரு முன் சென்று நிற்கப் போகிறேன். எனக்கான உத்தரவை அவர்களே கொடுக்கட்டும் என்று. 

என் மண்ணே ! என் நிலமே ! எனக்கு நீ எவ்வளவோ அளித்தாய். இப்போதும் அளித்துக் கொண்டிருக்கிறாய். கூட்டை விட்டுப் பறக்க வேண்டும் என்பதே பறவைகளின் தணியாத தாகம். எல்லையற்ற வானத்துக்குப் பறந்து செல்ல தளம் அமைத்துக் கொடுத்தலே கூட்டின் இயல்பு. என் மண்ணே! என் நிலமே ! உன் கூட்டிலிருந்து எல்லையற்ற வானம் நோக்கி இந்தப் பறவை பறந்து செல்லட்டும். என் மண்ணே ! என் நிலமே ! எனக்கு எப்போதும் ஆசியளி.   

Sunday, 29 March 2026

தீர்த்தன்

 

எனது நண்பன் சென்னையில் பணி புரிகிறான். அவனது மனைவி ஒரு சார்டட் அக்கவுண்டண்ட். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நண்பன் சென்னையிலிருந்து திருக்கருகாவூர் வந்திருந்தான். கோவிலில் ஸ்வாமியிடம் பிராத்தனை செய்து கொள்ள. அப்போது நான் உடன் சென்றிருந்தேன். (2024ம் ஆண்டு மே மாதத்தை ஒட்டி என்று ஞாபகம். நாங்கள் திருக்கருகாவூர் சென்று விட்டு பட்டீஸ்வரம், தாராசுரம் ஆலயங்களுக்கும் சென்றிருந்தோம். அப்போது தாராசுரத்தில் ஒரு தேர்தல் பரப்புரைக் குழு எங்களைக் கடந்து சென்றது. ) ஆலயம் வந்து விட்ட சென்ற சில வாரங்களில் நண்பனின் மனைவிக்கு சுகப்பிரசவம் ஆனது. சென்ற வருடம் குழந்தைக்கு ஓராண்டு பூர்த்தியானதும் அவர்கள் குடும்பத்துடன் திருக்கருகாவூர் வந்திருந்தனர். கும்பகோணத்தில் தங்கியிருந்த அவர்களைக் காணச் சென்றிருந்தேன். நண்பனுடன் அவ்வப்போது உரையாடினாலும் அவன் வீட்டுக்கு வந்ததில்லை என்பது என் மனக்குறையாக இருந்தது. அதற்கான சூழல் சரிவர அமையவில்லை. இன்று நண்பன் மனைவி குழந்தை தீர்த்தன் மூவரும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். ஆலயம் ஒன்றில் சுவாமி தரிசனம் செய்து விட்டு இங்கே ஊரில் ரயில் ஏற வேண்டும். 15 நிமிடம் மட்டும் வீட்டுக்கு வந்து விட்டு செல்லவும் என்று சொன்னேன். கடைசி நிமிடம் வரை வரமுடியுமா என்னும் நிலை; எனினும் சமாளித்து வந்து விட்டனர். நீர்மோர் மட்டுமே தயாரித்து வைக்க முடிந்தது. தீர்த்தன் நீர்மோரை விரும்பிப் பருகியது மனதுக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது. தீர்த்தன் புஷ்டியாக இருக்கிறான். இருக்கும் இடத்தில் இனிமையை நிறைக்கிறான். அவன் வண்ணச் சீரடிகள் வீட்டில் பட்டது ஸ்ரீராமனும் கிருஷ்ணனும் வீட்டுக்கு வந்ததைப் போன்ற உணர்வை அளித்தது.