பிரபு மயிலாடுதுறை
Wednesday, 6 May 2026
நவோதயம்
அணுகுமுறையில் மாற்றம் தேவை
தி.மு.க என்னும் கட்சி ஈ.வெ.ரா துவங்கிய ’’திராவிடர் கழகம்’’ என்னும் அமைப்பிலிருந்து வெளியேறி உருவான அரசியல் கட்சி. அமைப்பிலிருந்து வெளியேறி வந்திருந்தாலும் ’’திராவிடர் கழகம்’’ கொள்கைகளே தி.மு.க வின் கொள்கைகளும். ‘’பிராமணர் எதிர்ப்பு’’ என்பது திராவிடர் கழகம், தி.மு.க ஆகிய இரண்டின் அடிப்படையான கொள்கை ஆகும். தேசியத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் எதிர்ப்பதையும் இரு அமைப்புகளும் கொள்கையாக வைத்திருந்தன. தி.மு.க தேர்தல் அரசியலுக்கு வந்த பின்னும் தேசியத்தை எதிர்ப்பதையும் தேசிய ஒருமைப்பாட்டை எதிர்ப்பதையும் கைவிடாமல் இருக்கிறது. இப்போதும் அவ்வப்போது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான விஷயங்களைப் பேசுவதுண்டு. நாடு சுதந்திரம் அடைந்த போது கம்யூனிஸ்டுகளும் தேசியத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் எதிராக இருந்தனர். அடிப்படையில் மார்க்ஸியம் தேசியத்துக்கு எதிரானது. நம் நாட்டை சீனா ஆக்கிரமித்த போது சீனா கம்யூனிச நாடு என்பதால் சீனா நம் நாட்டை ஆக்கிரமித்ததை வரவேற்றனர் கம்யூனிஸ்டுகள். நம் நாட்டை சீனா ஆக்கிரமிப்பதை எதிர்க்க வேண்டும் என்று கூறிய கம்யூனிஸ்டுகள் மிகச் சிறிதாய் இருந்தனர். கம்யூனிஸ்டு கட்சி இரண்டாகப் பிரிந்தது. சீனா இந்தியாவை ஆக்கிரமித்து இந்தியாவை சீனாவின் காலனியாக ஆக்க வேண்டும் எனக் கூறியவர்கள் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுகள் என்றும் சீனா இந்தியாவை ஆக்கிரமித்து இந்தியாவை சீனாவின் காலனியாக ஆக்க வேண்டும் என்பதை எதிர்த்தவர்கள் இந்திய கம்யூனிஸ்டுகள் என்றும் அழைக்கப்பட்டனர். சீன ஆக்கிரமிப்பை எதிர்த்தார்களை தவிர இந்திய கம்யூனிஸ்டுகளும் தேசியம் என்பதற்கு எதிரானவர்களே. நக்சலைட்டுகள் எனப்படும் மாவோயிஸ்டுகள் சீனாவிடம் பணமும் ஆயுதமும் பெற்றுக் கொண்டு இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடுபவர்கள். ராணுவம், காவல் துறை, அரசு அதிகாரிகள், அப்பாவி பொதுமக்களை வன்முறை மூலம் கொன்று அமைதியின்மையையும் பதட்டத்தையும் நாடெங்கும் உருவாக்குவதே அவர்கள் வழிமுறை.
தமிழகத்தில் திராவிட இயக்கம் எனப்படும் திராவிடர் கழகம், தி.மு.க ஆகிய திராவிட அமைப்புகளும் இந்திய கம்யூனிஸ்டுகள், மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுகள் எனப்படும் கம்யூனிச அமைப்புகளும் தொடர்ச்சியாக தங்கள் கருத்தியலை பொதுமக்களிடம் பரப்புரை செய்து கொண்டிருந்தனர். பரப்புரையே அவர்கள் பிரதான வழிமுறை. திராவிட இயக்கம் பிராமணர்கள் அழிக்கப்பட வேண்டும் ; தாக்கப்பட வேண்டும் என பரப்புரை செய்தது. கம்யூனிஸ்டுகள் நம் நாடு சோவியத் யூனியனின் காலனியாகவே ஆகி விட வேண்டும் என்பதை முன்வைத்தது. நக்சலைட்டுகளின் சீனாவின் விருப்பத்தின் படி இந்தியாவைத் துண்டாட வேலை செய்தனர்.
கடந்த 60 ஆண்டுகளாக திராவிட இயக்கத்தினர், கம்யூனிஸ்டுகள், நக்சலைட்டுகள் ஆகியோரே ஊடகங்களில் மிக அதிக அளவில் பரவியிருக்கின்றனர். பத்திரிக்கைத் துறை பெருமளவில் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகங்கள் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு ஊடகங்கள் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்திய ஜன்நாயகம் மட்டுமே நாடு படையெடுப்புக்குள்ளான போது சீனாவை ஆதரித்திருந்தாலும் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்யாமல் நாட்டின் மூன்று மாநிலங்களில் ஆட்சி புரிய அக்கட்சியை அனுமதித்தது. கம்யூனிச கொள்கை கொண்ட எந்த தேசத்திலும் ஜனநாயகமே இல்லை. அடிப்படையில் சர்வாதிகாரத்தன்மை கொண்ட கம்யூனிஸ்டுகள் ஒரு ஜனநாயக நாட்டின் ஊடகங்களில் கணிசமான தாக்கம் செலுத்துகின்றனர் என்பது ஒரு நகைமுரண்.
இந்திய ஜனநாயகத்தில் மத்திய அரசு, குடியரசுத் தலைவர், ஆளுநர், மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் என ஜனநாயகத்தின் பல வடிவங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடமையை நிறைவேற்றுபவை. இவை அனைத்தின் மேலும் நம்பிக்கையும் மதிப்பும் இருக்குமாறு ஜனநாயகத்தை இயங்க வைக்க வேண்டியது குடிமக்கள் அனைவரின் கடமை.
தமிழகத்தில் மின்னணு ஊடகங்கள் உருவான பின்னர் திராவிட இயக்கத்தினரும் கம்யூனிஸ்டுகளும் நக்சலைட்டுகளும் அதனை வெறுப்பும் பொய்யின் விஷமும் தனிப்பட்ட விரோதத்தை வெளிக்காட்டும் இடமாகவும் ஆக்கியுள்ளனர். ஜனநாயக அரசில் கருத்து சுதந்திரத்துக்கு முழு உரிமை உண்டு. நாடு ஆக்கிரமிக்கப்பட்ட போது ஆக்கிரமித்த நாடான சீனாவை ஆதரித்தும் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை தடை செய்யாதது இந்திய ஜன்நாயகம் ; இந்தியாவைத் துண்டாடி ‘’திராவிட நாடு’’ பெறுவோம் எனக் கூறியிருந்த தி.மு.க வை தடை செய்யாதது இந்திய ஜனநாயகம்.
நம் நாடு சுதந்திரம் அடைந்த போது இருந்த பசி, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சிக்கல்கள் பெருமளவு இன்றைய நிலையில் தீர்ந்திருக்கின்றன. தமிழகத்தில் மக்கள் வரி செலுத்துகின்றனர். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும். மாநில அரசு வரி வருவாயைக் கொண்டு மத்திய அரசு தரும் வருவாயையும் சேர்த்துக் கொண்டு மக்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு விஷயங்களை சிறந்த முறையில் செய்து தர வேண்டும்.
தமிழகத்தின் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்க மத்திய அரசுடனும் பொதுத்துறை வங்கிகளுடனும் சேர்ந்து திட்டமிட்டு அதன் பயன் லட்சக்கணக்கானவர்களை சென்றடைய உதவ வேண்டும். பல விதமான விவசாய உற்பத்தி நிகழ புதிய அரசு ஊக்கம் தர வேண்டும். இந்த விஷயங்கள் மின்னணு ஆளுகை நிகழத் தொடங்கிய கடந்த 20 ஆண்டுகளில் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் இவை மாநில அரசாங்கத்தில் நிகழவேயில்லை. ரூ. 100 மாநில அரசுக்கு வருவாயாகக் கிடைக்கிறது என்றால் அதில் ரூ.90 மாநில அரசு ஊழியர்களின் ஊதியமாக வழங்கப்பட்டு விடுகிறது. இதே நிலை நீடித்தால் தமிழக சட்டசபை என ஒன்று இருப்பதே மாநிலத்தில் இருக்கும் பத்து லட்சம் அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் கொடுக்க மட்டுமே என்றாகி விடும். தமிழகத்தின் சாமானிய பொதுமக்களான 7 கோடி பேருக்கு தமிழக சட்டசபையால் என்ன பயன் என்னும் கேள்வி எழுந்து விடும்.
இந்திய ஜனநாயகம் என்பது ஒரு அமைப்புமுறை. தேர்தல் சமயத்தில் மட்டும் பரப்புரை நிகழட்டும். மற்ற நேரங்களில் பொதுமக்களுக்கான சேவையை மாநில அரசும் மத்திய அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் வழங்கட்டும்.
மாநிலத்தில் புதிதாக ஆட்சியைப் பிடித்திருக்கும் கட்சி இந்திய ஜனநாயகத்திற்கு அழகு சேர்த்திருப்பவர்கள். கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த இரு பெரிய திராவிடக் கட்சிகளை அகற்றி மாநில அரசைக் கைப்பற்றியிருக்கின்றனர். பல லட்சக் கணக்கான இளைஞர்கள் அக்கட்சியின் ஆதரவாளர்கள். அவர்களுக்கு இந்திய ஜனநாயகத்தைப் பயிற்றுவிக்கும் பொறுப்பு ஆட்சிப் பொறுப்பேற்க இருக்கும் கட்சிக்கும் புதிய ஆட்சிக்கும் இருக்கிறது.
Tuesday, 5 May 2026
செய்தித்தாள்
சிறுவனாக இருந்த போது காலை எழுந்தவுடன் அன்றைய செய்தித்தாளை வீட்டில் முதல் ஆளாக வாசிக்க வேண்டும் என எண்ணுவேன். அப்போது காலை 6.30க்கு செய்தித்தாள் வந்து விடும். வந்ததுமே வாசிப்பேன். காலையில் பாடப்புத்தகம் படிக்காமல் என்ன செய்தித்தாள் படிக்கிறாய் என வீட்டில் கேட்பார்கள். காலை எழுந்ததுமே செய்தித்தாள் எப்போது வரும் என எதிர்பார்க்க ஆரம்பித்தேன். அந்த காலகட்டத்தில் அவ்விதம் எதிர்பார்ப்பது 40 வயதுக்கு மேல் இருப்பவர்களின் இயல்பு. எனக்கும் அவ்விதம் எதிர்பார்ப்பு இருந்தது. செய்தித்தாள் போடுபவர் ஒருவர் காலை 6.30க்கு செய்தித்தாள் கொண்டு வந்து விடுவார். முகவராக இருந்த அவர் மாற்றப்பட்டு இன்னொருவர் முகவரானார். செய்தித்தாள் வரும் நேரம் காலை 8 மணி என்றாகியது. சிறுவனான நான் அந்த செய்தித்தாளுக்கு கடிதம் எழுதினேன். அதாவது எனக்கு பள்ளி காலை 10 மணிக்குத் துவங்கும் என்றும் காலை 6.30க்கு செய்தித்தாள் வந்தால் 6.45 வரை அதனை வாசித்து விட்டு அதன் பின் வானொலியில் மாநிலச் செய்திகள் கேட்டு விட்டு பின் மீண்டும் 7.20 வரை வாசித்து விட்டு வானொலி தில்லி செய்திகள் கேட்டு விட்டு அதனைத் தொடர்ந்து வரும் தென்கச்சி சுவாமிநாதனின் ‘’இன்று ஒரு தகவல்’’ கேட்டு விட்டு அதன் பின் பள்ளிப் பாடங்களை படித்து விட்டு 8.30 மணி அளவில் குளித்து உணவருந்தி 9.30 அளவில் பள்ளிக்குக் கிளம்புவேன் என்றும் செய்தித்தாள் காலை 8 மணிக்கு வந்தால் என்னுடைய காலை வழமைகள் மாறி விடுகின்றன என்பதால் காலை 6.30க்கு செய்தித்தாள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அந்தப் பத்திரிக்கைக்கு கடிதம் எழுதினேன். ஒரு வாரத்தில் அந்தப் பத்திரிக்கை தபால் மூலம் எனக்கு ஒரு பதில் அனுப்பியது. நான் அந்தப் பத்திரிக்கையின் வாசகனாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கும் விஷயம் குறித்து விசாரிப்பதாகவும் காலை முன்நேரத்தில் பத்திரிக்கை கிடைப்பதை உறுதி செய்வதாகவும் இது தொடர்பாக பத்திரிக்கையின் விற்பனைப் பிரதிநிதி ஒருவர் நேரில் சந்திப்பார் என்றும் பதில் எழுதியிருந்தனர். சிறுவனான எனது கடிதத்துக்கு அந்தப் பத்திரிக்கை அத்தனை முக்கியத்துவம் கொடுத்தது எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது.
இப்போது செய்தித்தாள் வாசிக்க காலை 9 மணி அளவில் ஆகிறது. செய்தித்தாள் வரும் நேரமும் அதுவே. சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டு முழு செய்தித்தாளையும் வாசித்து விடுவேன்.
இன்று காலை ஆங்கிலப் பத்திரிக்கையின் தேர்தல் புள்ளிவிபரங்கள் அறிக்கையைக் கண்டேன். நேற்று இரவு 10.30 நிலவரப்படி நான்கு மாநில தேர்தல் முடிவுகளை அழகுற வடிவமைத்து வெளியிட்டிருந்தார்கள். அவர்கள் வெளியிட்டிருந்த விதம் மிக ச் சிறப்பாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது ஏதேனும் மாநிலத் தேர்தல் வருகிறது. அவ்விதமெனில் 700 நாளைக்கு ஒருமுறை தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிட வேண்டும். பல் ஆண்டுகள் இவ்விதம் வெளியிட்டு அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருப்பார்கள் என்று தோன்றியது. இன்று தகவல் தொழில் நுட்ப யுகத்தில் நிமிடத்துக்கு நிமிடம் பல செய்திகளும் விபரங்களும் குவிகின்றன. இருப்பினும் அவர்களுக்கு கிடைக்கும் நேரம் என்பது காலை 8 மணியிலிருந்து இரவு 10.30 வரை மட்டுமே. அதற்கு மேல் அதிகபட்சம் 1 மணி நேரம் எடுத்துக் கொள்ளலாம். இரவு 11.30க்கு அவர்கள் தயாரித்த அட்டவணைகளும் விபரங்களும் அச்சேற வேண்டும். அதிகாலை 2 மணி அளவில் அச்சு அலுவலகத்திலிருந்து ஊர்களுக்கு வண்டிகள் செய்தித்தாளுடன் கிளம்பிட வேண்டும். இந்த வரையறுக்கப்பட்ட நேரத்துக்குள் அவர்கள் தேர்தல் தரவுகளை சிறப்பாக அளித்திருந்தார்கள் என்று தோன்றியது.
அட்டவணைகள் எவ்விதம் அமைய வேண்டும் எந்த விபரங்களை வாசகர் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை முன்கூட்டியே தயார் செய்து வைத்திருப்பார்கள் என்றும் தரவுகள் வர வர அவற்றை அட்டவணையில் பதிவேற்றுவார்கள் என்றும் யூகித்தேன்.
தமிழகத் தேர்தல் பக்கங்களை வாசித்த போது அதில் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயத்தை அப்போது தான் கவனித்தேன். அதாவது, எங்கள் மாவட்டத்திலும் எங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் 3 சிறு மாவட்டங்களிலும் 2021ல் ஆளுங்கட்சியாகவும் 2021ல் எதிர்க்கட்சியாகவும் இருந்த இரு கட்சிகளே வெற்றி பெற்றிருக்கின்றன என்பது எனது கவனத்துக்கு வந்தது. அந்தப் பத்திரிக்கையின் தரவுகள் வடிவமைப்பு அணி திறமை மிக்கது என எண்ணினேன்.
வீழ்ந்தது திராவிட அரசியல்
நமது நாட்டின் மரபு காலத்தை நேர்க்கோடாக மட்டும் இன்றி வட்ட சுழற்சியாகவும் காண்கிறது. அவ்விதத்தில் 60 ஆண்டுகள் ஒரு முழு சுழற்சியாகக் கொள்ளப்படுகின்றன. ஒரு முழு சுழற்சி நிறைவுற்று மீண்டும் ஒரு புதிய சுழற்சி உருவாகிறது எனக் கொள்ளப்படுகிறது. எந்த இடத்தில் ஒரு துவக்கம் நிகழ்ந்ததோ அந்த இடத்துக்கு மீண்டும் வந்து அங்கிருந்து மீண்டும் ஒரு துவக்கம் நிகழ்வது என்பதை ஓர் இயல்பாக அவதானிக்கும் தன்மை நம் மரபுக்கு உண்டு. அமாவாசை, மூன்றாம் பிறை, பௌர்ணமி ஆகிய வானியல் நிகழ்வுகள் 30 நாட்களுக்கு ஒருமுறை காலசுழற்சியாக மீண்டும் மீண்டும் நிகழ்வதை அவதானித்த நம் மரபு காலத்தை 60 ஆண்டுகள் கொண்ட சுழற்சியாகவும் உருவகித்தது. அமாவாசை, மூன்றாம் பிறை, பௌர்ணமி ஆகியவற்றை அவதானித்துக் காலத்தைக் கணக்கிடும் முறை நம் மரபில் மட்டுமன்றி சீன, அராபிய, கிரேக்க மரபுகளிலும் இருந்திருக்கிறது ; இருக்கிறது.
1967ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி தி.மு.க அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸை பதவியிலிருந்து அகற்றி ஆட்சிக்கு வந்தது. இச்செயல் நிகழ்ந்தது ‘’பராபவ’’ என்னும் தமிழ் ஆண்டில். 60 ஆண்டுகளுக்குப் பின் அதே ‘’பராபவ’’ ஆண்டு நிகழும் இத்தருணத்தில் 2026ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி தேர்தல் முடிவுகளின் படி இரண்டு ஆண்டுகளுக்கு முன் உருவான ஒரு புதிய கட்சி - தி.மு.க வை தன் அரசியல் எதிரியாக அறிவித்து மக்களைச் சந்தித்த புதிய கட்சி = தி.மு.க வை பதவியிலிருந்து அகற்றி ஆட்சிக்கு வந்துள்ளது.
1967ம் ஆண்டுக்கும் 2026ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 60 ஆண்டு காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் தமிழகத்தில் நம் நாட்டில் உலகில் எத்தனையோ சமூக பொருளாதார அரசியல் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. தமிழக அரசியலில் இந்த 60 ஆண்டுகளில் தி.மு.க பிரதானமான ஒரு சக்தியாக இருந்திருக்கிறது. பலமுறை தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறது. சில முறை தி.மு.க கட்சி உடைந்திருக்கிறது. தி.மு.க விலிருந்து நீக்கப்பட்டு பின் புதிதாகக் கட்சி துவங்கிய எம்.ஜி.ஆர் 1977ம் ஆண்டு அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தமிழக முதல்வரானார். 1989ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தது அவர் உருவாக்கிய அ.இ.அ.தி.மு.க கட்சி. அதன் பின் தி.மு.க வும் அ.தி.மு.க வும் மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. தி.மு.க , அ.தி.மு.க தவிர இன்னொரு கட்சி இந்த 60 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்ததில்லை. இந்த இரண்டு கட்சிகளும் தேர்தல் அரசியலில் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வென்றிருந்தாலும் எந்த கூட்டணிக் கட்சிக்கும் ஆட்சியில் பங்கு அளித்ததில்லை. 1967ம் ஆண்டில் பதவிக்கு வந்ததிலிருந்து நிகழ்ந்திருக்கும் திராவிடக் கட்சிகளின் ஆட்சி இப்போது ஒரு முடிவைக் கண்டிருக்கிறது. ஒரு புதிய அரசியல் கட்சி பதவிக்கு வந்திருக்கிறது.
2026ம் ஆண்டு ஆகிய இவ்வருடத்தின் இன்றைய தரவுகளின் படி உலக மக்கள் தொகையின் 40 சதவீதம் மக்கள் மட்டுமே ஜனநாயக அரசின் கீழ் வாழ்கின்றனர். இன்னும் உலகின் 60 சதவீத மக்கள் சர்வாதிகார மற்றும் மன்னராட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ; அந்த நாட்டின் மக்களை இன்னும் ஜனநாயகம் சென்று சேரவில்லை. சீனா, ரஷ்யா, ஒட்டு மொத்த அரபு நாடுகள், ஈரான், ஆஃப்கானிஸ்தான் என பல நாடுகளில் ஜனநாயகமே இல்லை. சர்வாதிகார ஆட்சி நடக்கிறது.
1947ம் ஆண்டிலிருந்து இன்று வரை நாம் ஜனநாயக நாடாக இருக்கிறோம். ( இந்திரா காந்தி தனது சுயநலத்துக்காக ஜூன் 25, 1975ம் ஆண்டு நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த இருண்ட காலம் மார்ச் 21 1977 வரை நீடித்து பின் அந்நிலை நீங்கி நாம் மீண்டும் ஜனநாயக நாடானோம்) நமது நாட்டின் அரசு இயங்கும் விதத்தில் குடிமக்களுக்கு மேலும் சிறப்பான எதிர்பார்ப்புகள் இருந்தாலும் நாம் ஜனநாயக நாடாக இயங்குவது என்பது நமது பெரும் சாதனையும் நம் நாட்டின் தனிச்சிறப்பும் ஆகும்.
தி.மு.க விலிருந்து பிரிந்த கட்சிகளைப் பொதுவாக திராவிடக் கட்சிகள் எனக் குறிப்பிடுவதுண்டு. தமிழக முன்னாள் முதல்வர் கு.காமராஜ் திராவிடக் கட்சிகளை ‘’ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’’ என வரையறுத்தார். அந்த வரையறையின் பொருத்தப்பாடு இன்று வரை தொடர்கிறது. தி.மு.க மற்றும் தி.மு.க விலிருந்து உருவாகி வந்த திராவிடக் கட்சிகளை ’’பாப்புலிசக் கட்சிகள்’’ என வகைப்படுத்தலாம். மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தால் 1986ம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட வி.கோரஸ் என்பவரின் ‘’வளர்முக நாடுகளில் பாப்புலிசம் : நேற்றும் இன்றும்’’ என்னும் நூல் தி.மு.க வின் அரசியலை ‘’பாப்புலிச அரசியலுக்கான’’ சிறந்த உதாரணமாகக் காட்டுகிறது. பாப்புலிசக் கட்சிகளை பொதுவாக இவ்விதம் வரையறை செய்யலாம். அதாவது, பாப்புலிசக் கட்சிகளுக்கு தங்களுக்கென ஒரு அரசியல் புரிதல் இருக்காது. தங்கள் கருத்தியலை இரவலாகப் பெறுவார்கள். அதிகாரத்தில் இருப்பதற்கான விஷயங்களைச் செய்து கொண்டு அரசியல் செய்வார்கள். ஜனநாயகத்தில் எல்லா அரசியல் கட்சிகளிலும் பாப்புலிச அம்சம் கணிசமான அளவில் இருக்கவே செய்யும் என்றாலும் பாப்புலிசக் கட்சிகள் 100 சதவீதம் பாப்புலிசத்தை மட்டுமே நம்பும் ; 100 சதவீதம் பாப்புலிசத்தை மட்டுமே செயல்படுத்தும்.
பாப்புலிச அரசியலில் நிலை கொண்டிருக்கும் தி.மு.க ‘’பிரித்து ஆளும்’’ அரசியலை தன் நடைமுறையாகக் கொண்டது. மக்கள் சமூகம் என்பது பலவிதமான குழுக்களால் ஆனது. அதில் ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இருக்கும் வேறுபாட்டைப் பயன்படுத்தி அவற்றுக்கு மத்தியில் தங்களை நிறுவிக் கொண்டு ஒரு குழுவின் ஆதரவைப் பெற்று தங்கள் அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வது என்பது ‘’பிரித்து ஆளும்’’ அரசியலின் தன்மை.
60 ஆண்டுகாலம் என்பது மிகவும் நீண்டது. நமது மரபுப்படி கிட்டத்தட்ட 4 தலைமுறைகளைக் குறிக்கும். திராவிடக் கட்சிகள் தமிழகத்தை இத்தனை நீண்ட காலம் ஆட்சி செய்திருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள்தொகை கொண்ட மாநிலத்தை ஆட்சி செய்யும் போது மக்கள் எதிர்பார்ப்புகள் பலவிதங்களில் இருப்பது இயல்பானது. திராவிடக் கட்சிகளின் மீது நான் முன்வைக்கும் புகார்கள் என்ன என்பதைப் பதிவு செய்கிறேன்.
1. சாராய அரசியல்
சமூகத்தில் மது மிகக் குறைந்தபட்ச அனுமதியுடன் மிகக் குறைந்தபட்ச அளவில் மட்டுமே இருக்க வேண்டும். பூரண மதுவிலக்கு என்பது ஒரு லட்சியநிலை. எனினும் 99 சதவீத மதுவிலக்கை எந்த சமூகமும் நடைமுறைப்படுத்திக் கொள்ள முடியும். திராவிடக் கட்சிகளின் மீது வைக்கப்படும் முதன்மையான புகாரே திராவிடக் கட்சிகள் சாராயக் கட்சிகள் என்பதும் திராவிட அரசுகள் சாராய அரசுகள் என்பதுமே.
மகாத்மா காந்தியால் ‘’தனது மனசாட்சி’’ என அழைக்கப்பட்டவரும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தவருமான மூதறிஞர் ராஜாஜி, கொட்டும் மழையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி வீட்டுக்குச் சென்று கருணாநிதியின் கைகளைப் பற்றிக் கொண்டு ’’நீங்கள் என்னை விட வயதில் இளையவராக இல்லையென்றால் தங்கள் காலைத் தொட்டு கேட்பேன் ; தமிழகத்தில் மதுவுக்கு அனுமதி கொடுக்காதீர்கள் ’’ என மன்றாடினார்.
அனைத்து அறங்களும் புறந்தள்ளப்பட்டு தமிழ்ச் சமூகத்தின் மீது சாராயம் திணிக்கப்பட்டது. திராவிடக் கட்சிகள் மீது இருக்கும் - இருக்கப் போகும் நிரந்தரப் பழியாகும் இது.
60 ஆண்டுகளுக்கு முன்னால் திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சாராயக் கடை நடத்தினார்கள். சாராயம் மூலம் கிடைத்த லாபத்தால் ரவுடித்தனத்தை வளர்த்து சமூக அமைதியைக் கெடுத்தார்கள். ரவுடிகளை அரசியலுக்குக் கொண்டு வந்தார்கள். அதை இன்னும் பலவிதங்களில் மேம்படுத்தி இப்போது திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சாராய ஆலைகள் நடத்துகிறார்கள். அரசு ஊழியர்களைக் கொண்டு காவல்துறை பாதுகாப்பு கொடுத்து சாராயம் விற்கிறார்கள். அந்த சாராயக் காசைக் கொண்டு ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை சிறுமைப்படுத்துகிறார்கள்.
2. வாக்கு வங்கி அரசியல்
பட்டியல் சாதியினர் மற்றும் மதச் சிறுபான்மையினரை தங்கள் வாக்கு வங்கியாக திராவிடக் கட்சிகள் பயன்படுத்துகின்றனர். பட்டியல் சாதியினருக்கோ அல்லது மதச் சிறுபான்மையினருக்கோ எந்த நடைமுறை அரசியல் அதிகாரமும் திராவிடக் கட்சிகள் அளித்ததில்லை.
3. பிரிவினை அரசியல்
நம் நாடு பல்வேறு சமூகங்கள், பல்வேறு மொழி பேசுபவர்கள் இணைந்து வாழும் நாடு. நாம் பிரிட்டிஷ் ஆட்சியால் இரண்டு நூற்றாண்டுகள் இரக்கமில்லாமல் சுரண்டப்பட்டோம். கோடிக்கணக்கான மக்கள் இணைந்து முன்னேற வேண்டிய அவசியம் இருக்கும் நாடாவோம் நாம். ஒரு மொழியையும் இன்னொரு மொழியையும் எதிரியாகக் காட்டி நாட்டின் பிற பகுதிகளில் வாழ்பவர்கள் மீது வெறுப்பைத் தூண்டி விட்டு செய்யும் பிரிவினை அரசியல் திராவிடக் கட்சிகளில் தி.மு.க விற்கு முழுமையாக உரியது.
4. கலைப் பொக்கிஷங்களின் அழிவு
எந்த ஜனநாயக அரசாங்கமும் தங்கள் பிராந்தியத்தின் கலைப் பொக்கிஷங்களைக் காக்க முயலும். திராவிடக் கட்சிகள் ஆலயக்கலையை அழித்தன ; அழிக்கின்றன.
5. ஊழல்
பாப்புலிசக் கட்சிகளின் இயல்புகளில் பிரதானமானது அவர்கள் அரசு ஊழியர்களை தங்கள் மானசீகக் கூட்டாளிகளாகக் கொள்கிறார்கள் என்பதே. எனவே நிர்வாகத்தில் நிகழும் ஊழலை பாப்புலிசக் கட்சிகள் முழுமையாக அனுமதிக்கும். 60 ஆண்டு தமிழக அரசு நிர்வாகம் என்பது ஊழல் நிர்வாகமே.
ஒரு ஜனநாயக அரசு கோடிக்கணக்கான மக்களால் வாக்கு செலுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது. கோடிக்கணக்கான மக்களுக்கு பல கோடி எதிர்பார்ப்புகள் இருக்கும். திராவிடக் கட்சிகளை வீழ்த்தி புதிதாக வந்திருக்கும் கட்சியிடம் சாமானிய மக்கள் எதிர்பார்ப்பது என்னவாக இருக்கும் என்பதைப் பட்டியலிடுகிறேன்.
சாமானிய குடிமக்களின் எதிர்பார்ப்பு
1. தி.மு.க முதலில் சாராயக் கடை நடத்தியது ; பிராந்தி ஷாப் ஏலம் எடுத்து நடத்தியது ; சாராய ஆலை நடத்தியது ; கள்ளச்சாராய வியாபாரமும் செய்தது. 2021ம் ஆண்டிலிருந்து 2026ம் ஆண்டு வரை போதைப் பொருள் வியாபாரமும் செய்தது. பள்ளி மாணவர்கள் கஞ்சாவும் போதை சாக்லெட்டும் பயன்படுத்துவதை கடந்த 5 ஆண்டுகளில் நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். புதிய அரசு போதைப் பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
2. புதிய அரசு, தமிழகத்தில் இருக்கும் வழக்கமான, அரசே குடிமக்களுக்கு மது விற்கும் முறையை நிறுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்.
3. பட்டியல் சாதியினரின் பொருளியல் மேம்பாடு நிகழ்வதை புதிய அரசு உறுதி செய்ய வேண்டும்.
4. பிரித்து ஆளும் அரசியல் திராவிடக் கட்சிகளின் பாணி. அது 60 ஆண்டுகள் சுழன்று ஒரு முடிவை எட்டியுள்ளது. புதிய அரசு திராவிடக் கட்சிகளின் பிரிதாளும் பாணிக்குப் பதிலாக மக்களை ஒற்றுமைப்படுத்தும் அரசியலை முன்னெடுக்க வேண்டும். மொழி , பிராந்தியம், சாதி இவற்றைக் கொண்டு பிரித்தாளும் அரசியல் முடிவுக்கு வர வேண்டும்.
5. 60 ஆண்டுகால திராவிட இயக்க அரசியல் என்பதில் பிரதான இடம் வகிப்பது ஆலயங்களைச் சூறையாடி ஆலயச் சொத்துக்களை கொள்ளையடித்ததே. வறிய நிலையிலும் ஆலயத்தை விட்டு அகலாமல் இருக்கும் அர்ச்சகர்களுக்க்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆலயப் பராமரிப்பு அரசின் பணியல்ல ; அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும்.
6. தமிழக அரசு நிர்வாகத்தில் லஞ்சம் தன் அதி உச்சத்தைத் தொட்டிருக்கும் காலகட்டம் இது. ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் சாதாரண வேலைகளுக்கு - அதாவது சொத்துக்கு பட்டா வாங்குவது , ரேஷன் கார்டு வாங்குவது = கூட லஞ்சம் கேட்கப்படுகிறது. சாமானிய குடிமக்கள் இந்த லஞ்ச பயங்கரவாதத்திலிருந்து காக்கப்பட வேண்டும்.