Wednesday, 10 June 2026

பிரவீன் சக்கரவர்த்தி - புன்னகைக்கும் அரசியல்வாதி


பொதுவாக அரசியல்வாதிகள் மிகவும் இறுக்கமானவர்கள். தமிழக அரசியல்வாதிகள் மேலும் இறுக்கமானவர்கள். தமிழக அரசியல்வாதிகளை அதிகாரவர்க்க அதிகாரிகள் மனநிலை கொண்டவர்கள் என்று கூறி விட முடியும். அதிகாரவர்க்க அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளைப் போல பதவி 5 ஆண்டுகள் தான் என்னும் கட்டுப்பாடு இல்லை ; தமிழக அரசியல்வாதிகளுக்கு அது உண்டு என்பது அவர்களை மேலும் இறுக்கம் கொண்டவர்களாகவும் பதட்டம் மிக்கவர்களாகவும் ஆக்கி விடுகிறது. இன்றைய தமிழக அரசியல்வாதிகளில் இயல்பாகப் புன்னகைக்கக் கூடியவர் பிரவீன் சக்கரவர்த்தி என்பது எனது எண்ணம். அறுபது ஆண்டுகளாக தமிழக அரசியலில் பதவியில் இல்லாத காங்கிரஸை அதிகாரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் பிரவீன் சக்கரவர்த்தி. சட்டசபைத் தேர்தலுக்கு முன்னும் பின்னும் அவர் காங்கிரஸைப் பதவிக்குக் கொண்டு வர பல முயற்சிகளை முன்னெடுத்தார். தேர்தலுக்கு முன் அவர் எடுத்த முன்னெடுப்புகள் இலக்கை நோக்கி 99 சதவீதம் சென்றன. 1 சதவீதத்தில் தான் எண்ணியதை எண்ணிய வண்ணம் எய்தாமல் தவற விட்டார். அப்போதும் அவர் புன்னகையுடனே இருந்தார். தேர்தலுக்குப் பின் நடிகர் ஜோசஃப் விஜய் கட்சியுடன் காங்கிரஸின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அளித்து தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டதில் பிரவீன் சக்கரவர்த்தியின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கும் என்பதை எவரும் யூகிக்க முடியும். அவ்விதமான உரிமை கோரலே திமுக விடமிருந்து அதன் கூட்டணிக் கட்சிகளைப் பிரித்தது. தேர்தலில் பெரிய தோல்வியைக் கண்டிருந்த அவர்களுக்கு பிரவீன் தேர்தலுக்குப் பின்னும் இன்னொரு பெரிய இழப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் ; புன்னகை மாறாமல். அசோகா பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியராக இருக்கிறார் பிரவீன். தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின் கல்லூரியில் வகுப்பெடுக்க அவர் தனது வகுப்பறைக்குள் நுழைந்த போது அவரது மாணவர்கள் சீட்டியடித்து சினிமாப் பாடல் ஒன்றைப் பாடி உற்சாகமாக வரவேற்கும் காட்சியை இணையத்தில் காண நேர்ந்தது. மாணவர்களின் உற்சாகத்தை அவர் உள்வாங்கிக் கொண்ட விதம் மேலும் உற்சாகமாக இருந்தது. 

பிரவீன் ராஜ்யசபா உறுப்பினராவது மகிழ்ச்சி. அவருக்கு வாழ்த்துக்கள். 

Tuesday, 9 June 2026

தாமரை மலர்களின் நிலம்

இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றேன். ஜூன் 1ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்டத்தின் பலபகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்களுக்கு மனுக்களுக்கான ஒப்புகைச் சீட்டு வழங்கத் தாமதமானதால் பொதுமக்கள் பலர் காத்திருக்க நேரிட்டது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். வருவாய்த்துறை அமைச்சருக்கு அதன் நகலை அனுப்பினேன். நேற்று ஜூன் 8ம் தேதி நடந்த மனுநீதி நாள் கூட்டத்தில் ஒப்புகைச் சீட்டு தாமதமின்றி வழங்கப்படுகிறதா என்பதைக் காணச் சென்றேன். நேற்றும் முந்தைய வாரம் இருந்த நிலையே இருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த அஞ்சல் அலுவலகத்தில் இரண்டு அஞ்சல் அட்டைகள் வாங்கி சென்ற வாரம் தெரிவிக்கப்பட்ட புகார் குறித்தும் அந்தப் புகார் இந்த வாரமும் சரி செய்யப் படாமல் இருப்பது குறித்தும் புகார் எழுதி மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய்த்துறை அமைச்சருக்கும் அனுப்பி வைத்தேன். அடுத்த வாரம் இதே விஷயம் தொடர்ந்தால் மனுநீதி நாள் முகாமில் இந்த விஷயம் குறித்தே ஒரு மனு எழுதி மாவட்ட ஆட்சியர் கையில் நேரடியாகக் கொடுக்கலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். இந்த விஷயத்தைச் சரி செய்ய இன்னொரு வாய்ப்பு அளிக்கலாம் என எண்ணி இன்று மாவட்ட ஆட்சியரின் முதல் தனி உதவியாளரைச் சந்தித்து விஷயத்தைக் கூறுவோம் என எண்ணினேன். அங்கே சென்றேன். மாவட்ட ஆட்சியரின் முகாம் உதவியாளர் அவர் அறையில் இருந்தார். என் பெயரைக் கூறி விஷயத்தைச் சொன்னேன். அவர் சற்று அதிருப்தி அடைந்ததை உணர்ந்தேன். ஜூன் 1ம் தேதி கடிதத்தையும் ஜூன் 8ம் தேதி கடிதத்தையும் அவர் வாசித்திருக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கடிதம் கொண்டு செல்லப்பட்டிருக்குமா என்பது ஓர் ஐயமே. ‘’ரெண்டாவது மாடியில் டி எம் இருப்பாங்க. அவங்க கிட்ட சொல்லுங்க. சரி செய்வாங்க’’ என்றார். அங்கே சென்றேன். கலெக்டரின் முகாம் உதவியாளர் அனுப்பினார் எனக் கூறி அங்கே இருந்தவரிடம் விஷயம் சொன்னேன். கிரவுண்ட் ஃபுளோர்ல டிரிபிள் எஸ் மேடம் இருப்பாங்க ; அவங்க கிட்ட சொல்லுங்க என்றார். சொல்கிறேன் அடுத்த வாரம் இந்தபிரச்சனை சரி ஆகலைன்னா இன்னைக்கு நடந்ததையும் சொல்லி புகார் கொடுப்பன் என்றேன். பணிவாகவே என்னுடைய வேண்டுகோளையும் கோரிக்கையையும் கூறினேன். பணிவாகப் பேசினாலே விஷயங்கள் நடப்பதில்லை; சினம் கொண்டு பேசினால் கேட்பானேன்? டிரிபிள் எஸ் மேடத்தை சென்று பார்த்தேன். என் பெயரைக் கூறியதும் ‘’உட்காருங்க சார்’’ என்றார். ‘’பரவாயில்லை அம்மா’’ என்றேன். நான் அமரவில்லை. அமர்ந்தால் உணர்வுகள் கொஞ்சம் குறையும். அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் பொறுமையாக அமைதியாக சொல்ல வேண்டியதைச் சொன்னேன். ‘’அம்மா ! பொதுமக்கள் கொள்ளிடத்துல இருந்தும் எருக்கூர்ல இருந்தும் வராங்க. காலைல 11 மணிக்கு வந்து மனு கொடுத்ததும் ஒப்புகைச் சீட்டை உடனே கொடுத்தீங்கன்னா மதியம் 1 மணி 1.30 மணிக்கு வீட்டுக்குப் போய் லஞ்ச் சாப்பிடுவாங்க. இங்க 11 மணிக்கு மனு கொடுத்தா ஒப்புகைச் சீட்டு 3 மணிக்குக் கொடுக்கறாங்க. ஒரு முழு நாள் அவங்க கலெக்டர் ஆஃபிஸ்ல இருக்க வேண்டியிருக்கு. ஏன் 5 நிமிஷத்துல முடிக்க வேண்டிய வேலையை 5 மணி நேரம் செய்யறீங்க?’’ என்றேன். ‘’சார் ! நான் இண்டர்நெட் கனெக்‌ஷனுக்கு ரயில்டெல் கனெக்‌ஷன் எக்ஸ்ட்ராவா கொடுக்க சொல்லிட்டன். அடுத்த வாரம் இந்த பிரச்சனை இருக்காது.’’ என்றார். ‘’ரொம்ப நன்றி அம்மா’’ எனக் கூறி விட்டு புறப்பட்டேன்.  ஊரின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்பது அவ்வளவு பெரிய கட்டணம். அத்தனை அறைகள். அத்தனை தளங்கள். எனது எதிர்பார்ப்பு என்பது மிக அடிப்படையானது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுடைய வாரத்தின் முதல் பணி என்பது திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மனுநீதி நாள் முகாமில் மனுக்களை வாங்குவது. அந்த மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது என்பதற்கு ஒப்புகைச் சீட்டை வழங்குவது. ஒப்புகைச் சீட்டை வழங்குவதற்கு 2 நிமிடங்கள் போதும். ஆனால் பொதுமக்கள் 5 மணி நேரம் காத்திருக்கிறார்கள். 10 மணிக்கு ஒருவர் வந்து மனு கொடுக்கிறார் என்றால் அவருக்கு 10.02க்கு ஒப்புகைச் சீட்டைக் கொடுத்து விட வேண்டும். ஆனால் அவருக்கு மாலை 3 மணிக்கு ஒப்புகைச்சீட்டைக் கொடுக்கிறார்கள். உள்ளூர்க்காரர் என்றால் மனு கொடுத்த பின் மீண்டும் திரும்பி வந்து மாலை பெற்றுக் கொள்வார். அதுவும் உகந்த வழிமுறை இல்லை. நகரின் மையப்பகுதியிலிருந்து 4 கி.மீ தள்ளி இருக்கிறது மாவட்ட ஆட்சியர் அலுவலகம். 200 பேர் மனு கொடுக்க உள்ளூர்க்காரர்கள் காலை வருகிறார்கள் என்றால் அவர்கள் மீண்டும் ஒருமுறை திரும்ப வர நேர்ந்தால் அது ஒருவருக்கு 4+4 =8 கி.மீ கூடுதல் பயணம். 200 பேருக்கு என அது ஆகும் போது 1600 கி.மீ கூடுதல் பயணம். ஒரு இரு சக்கர வாகனம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 80 கி.மீ மைலேஜ் தருகிறது என்றால் அது 20லிட்டர் பெட்ரோல் விரயமாவதன் கணக்கு. மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் நிர்வாகத் திறனின்மை ஒவ்வொரு திங்கட்கிழமையும் 20லிட்டர் பெட்ரோலை விரயமாக்குகிறது. வெளியூர்க்காரர்கள் 100 பேர் காத்திருக்கின்றனர். ஒவ்வொருவரும் 10 மணிக்கு கிடைக்க வேண்டிய ஒப்புகைச் சீட்டுக்கு மாலை 3 மணி வரை காத்திருக்கின்றனர். ஒருவருக்கு 5 மணி நேரத் தாமதம். 100 பேருக்கும் சேர்த்து 500 மணி நேரத் தாமதம். நிர்வாகத் திறனில்லாத ஒரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் ஒப்புகைச்ச்சீட்டு வழங்குவதில் தாமதம் செய்வதால் குறைந்தபட்சமாக 20லிட்டர் பெட்ரோலையும் 500 மணி நேரத்தையும் விரயம் செய்கிறது. ஏழு நாட்கள் கொண்ட ஒரு வாரத்தில் 168 மணி நேரங்களே உள்ளன. எனினும் மிக எளிதாக 500 மணி நேரத்தை வீணாக்கி வாரத்தைத் துவங்குகின்றனர். பொதுமக்களின் மனுக்களை மாவட்ட ஆட்சியர் படிக்கிறாரா என்பதே பெரிய ஐயம். ஒரு மாவட்ட ஆட்சியர் தனக்கு வரும் கடிதங்களை மனுக்களை வாசிக்க வேண்டும். அவருக்கு பலவேலைகள் இருக்கலாம். பல பொறுப்புகள் இருக்கலாம். இருந்தாலும் அவருக்கு வரும் கடிதங்களை மனுக்களை அவர் வாசிக்க வேண்டும். அதில் உறுதியாக இருக்க வேண்டும். அது நேர விரயம் அல்ல. உதாரணத்துக்கு, ஜூன் 1ம் தேதி ஒப்புகைச்சீட்டு விஷயம் குறித்து கடிதம் எழுதினேன். வாசித்திருந்தார் என்றால் அதில் என்ன சிக்கல் என்பதை 2 நிமிடத்தில் அறிந்து 3 நிமிடங்களில் சரி செய்திருக்க முடியும். அடுத்த வாரமும் அதே சிக்கல் தொடர்ந்ததால் அவர் கடிதங்களை வாசிக்கிறாரா என்னும் ஐயம் உருவாகி அலுவலகம் மீதான நம்பிக்கையை குறைக்கிறது. பொதுமக்களின் 500 மணி நேரம் வீணானதும் 20லிட்டர் பெட்ரோல் விரயமாவதும் எடுத்துக் கூறப்படுகிறது. அடுத்த வாரம் இந்த சிக்கல் நீடித்தால் இந்த 3 வாரங்களிலும் நிகழ்ந்தது தொகுத்துக் கூறப்பட்டு  பெரியதாகும். நிர்வாகம் எப்போதும் பெரிய விஷயங்களைக் கூட தன் திறனால் மிகச் சிறிதாக்கிட வேண்டும். திறனில்லாதவர்கள் சிறிய விஷயத்தை பெரிதாக்கி விடுகிறார்கள். 

போஸ்ட் ஆஃபிஸில் ஒரு வேலை இருந்தது. கலெக்டரேட் போஸ்ட் ஆஃபிஸிலேயே அந்த வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தேன். மதிய உணவருந்தி விட்டு உடையார்பாளையம் புறப்பட்டேன். 

ஊரிலிருந்து குத்தாலம் வழியாக அணைக்கரை வந்து அங்கிருந்து ஜெயங்கொண்டம் செல்ல கொல்லாபுரம் வழியே செல்லாமல் ஒரு உள்பாதை இருந்தது. அதில் பயணித்தேன். சிறு கிராமச் சாலைகள். அப்பகுதி சிறு காட்டுப் பகுதி போல் இருக்கும். அதில் பயணித்து ஜெயங்கொண்டம் சென்று அங்கே ஒரு வேலையை முடித்துக் கொண்டு உடையார்பாளையம் புறப்பட்டேன். இந்தப் பிராந்தியத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் இரண்டு குளங்களாவது இருக்கின்றன. அதில் அத்தனை தாமரை மலர்கள் மலர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் மலர்ந்திருக்கும் நூற்றுக் கணக்கான தாமரை மலர்களைக் கண்டு கொண்டே செல்லும் பயணம் என்பது மிக்க இனிமை கொண்டது. 


உடையார்பாளையம் பயறணீநாத சுவாமி ஆலயத்துக்குச் சென்றேன். அப்பனும் அம்மையும் சிறு குழந்தைகள் போல் இருக்கின்றனர். அம்பிகையின் முன்னால் நின்ற போது மீனாட்சியம்மன் முன்னால் நிற்பது போல் இருந்தது. அம்பாள் மூன்று வயது பெண் குழந்தை போலவும் தோன்றினாள். ‘’அம்மா’’ ‘’அம்மா’’ என பலமுறை சொன்னேன். உடையார்பாளையம் சிவன் சிவபாலன் என எனக்குத் தோன்றியது. இந்த தலத்தில் அர்ஜூனன் வழிபட்டதாக ஐதீகம். நூற்றுக்கணக்கான முனிவர்கள் இந்த ஆலயத் தடாகத்தில் தினமும் தவம் செய்வதாக நம்பிக்கை. ஆலயம் உணர்வின் ஆழங்களைத் தொடும் வகையில் இருக்கிறது. 

வழிபாடு முடித்து சிலால் என்ற ஊரின் வழியாக அணைக்கரை வந்து அங்கிருந்து பந்தநல்லூர் குத்தாலம் வழியாக ஊர் திரும்பினேன். இன்றைய பயணத்தில் கோடாலி என்ற ஊரைப் பார்த்தேன்; உதயநத்தம் என ஒரு ஊர் ; கடாரம் கொண்டான் என ஒரு ஊர். 

இந்தப் பிரதேசத்தை தாமரை மலர்களின் நிலம் எனக் கூற முடியும். அத்தனை தாமரைத் தடாகங்கள். அத்தனை தாமரை மலர்கள். 

ஓர் எண்ணம்

இரண்டு வாரங்களுக்கு முன்னால், அரியலூர் கலியபெருமாள் கோவிலுக்குச் சென்றிருந்தேன். வழிபாடு முடிந்து மாலை ஊர் திரும்பிய போது எனக்கு ஒரு மனச்சித்திரம் தோன்றியது. மேற்கே திருச்சிராப்பள்ளி கிழக்கே சிதம்பரம் வடக்கே சித்தூர் வடகிழக்கே நெல்லூர் என இந்த எல்லைக்கு உட்பட்ட 48,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு ஒரு செவ்வகமாக என் மனதில் எழுந்தது. இந்த நான்கு ஊர்களையும் இந்த நான்கு ஊர்களுக்கு இடைப்பட்ட பெரும்பரப்பையும் என் பயணங்களில் அறிந்திருக்கிறேன். பழைய வடார்க்காடு, பழைய தென்னாற்காடு, செங்கல்பட்டு, பழைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் வட பகுதி ஆகியவை இந்த பிரதேசத்தில் அடங்கும்.

வீர நாராயண ஏரி, சோழ கங்கம் ஏரி, பெருமாள் ஏரி, பாகூர் ஏரி, பாணாம்பட்டு ஏரி, மதுராந்தகம் ஏரி,புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி என பல ஏரிகள் இப்பிராந்தியத்தில் அமைந்திருக்கின்றன. இவை சோழர்களால் மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டவை. தமிழகத்தின் சிறு விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் சம அளவில் வாழும் பகுதிகள் இவை. 

இந்தப் பகுதியில் 8500 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 100 ஏக்கர் பரப்பு கொண்ட ஒரு ஏரி உருவாக்கப்பட வேண்டும். இவ்விதம் 8500 ஏரிகள் உருவாக்கப்படுமானால் இந்தப் பிராந்தியம் 370 டி எம் சி தண்ணீரைச் சேமிக்க முடியும். தென்னிந்தியாவின் நீர்க்குடுவையாக இப்பிராந்தியம் உருவாகும். (கவனிக்க வேண்டிய விஷயம் : கர்நாடகா தமிழகத்துக்கு வழங்கும் காவிரி நீர் ஆண்டுக்கு 177 டி எம் சி. இந்த 8500 ஏரிகளில் அதைப் போல இரு மடங்கு நீரைச் சேமிக்க முடியும்) இந்த 8500 ஏரிகளை உருவாக்க ரூ.34,000 கோடி தேவைப்படும். 

சோழ மன்னர்களுக்கு நடுநாட்டையும் தொண்டை நாட்டையும் பெரிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்னும் எண்ணம் இருந்திருக்கிறது என்பதை அவர்களின் வரலாற்றை நோக்கும் போது அறிய முடியும். அவர்களுக்கு அப்பிராந்தியத்தின் மீது பெரும் நம்பிக்கையும் இருந்திருக்கிறது. சோழ நாட்டில் பேராலயங்களை நிர்மாணித்த சோழர்கள் நடுநாட்டிலும் தொண்டை நாட்டிலும் பெரும் ஏரிகளை உருவாக்கியிருக்கின்றனர். ராஜாதித்த சோழனால் உருவாக்கப்பட்டது வீர நாராயண ஏரி. ராஜராஜ சோழன் தன் வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிட்ட ஊர் காட்டுமன்னார்குடி. ராஜேந்திரன் உருவாக்கியது சோழகங்கம் ஏரி. தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்ட தலைநகர் கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் தலைநகராகவே நீடித்திருக்கிறது. 

இன்றும் முந்திரி, பலா, கொய்யா ஆகிய மரப்பயிர்கள் அதிகம் பயிர் செய்யப்படுவது இந்தப் பிராந்தியத்திலேயே. எனது விருப்பம் என்னவெனில் இந்தப் பிராந்தியத்தை தென்னிந்தியாவின் நீர்க்குடுவையாக மாற்ற வேண்டும் என்பதே. ஒவ்வொரு கிராமத்திலும் 100 ஏக்கர் பரப்பு கொண்ட ஏரிகள். அவை நிலத்தடி நீர் மட்டத்தை சில வருடங்களில் பெருமளவில் உயர்த்தி விடும். ஒவ்வொரு கிராமத்திலும் 1000 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது என்றால் அதில் குறைந்தபட்சம் 100 ஏக்கர் தேக்கு, சந்தனம் போன்ற மரப்பயிர்களைப் பயிரிடலாம். மாநிலத்தின் வனப் பரப்பு 8,50,000 ஏக்கர் கூடும். 

உலகில் 40 சதவீத மக்கள் மட்டுமே ஜனநாயக அமைப்பில் இருக்கின்றனர். உலகில் 60 சதவீத மக்கள் சர்வாதிகார ஆட்சிக்குக் கீழே இருக்கின்றனர். ஜனநாயகத்தில் ஒரு பிரஜையால் அரசுக்கு தன்னுடைய எண்ணத்தைச் சொல்ல முடிகிறது. என்றாவது ஒரு நாள் இது நடக்கலாம் என நம்பவும் முடிகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்னால் சோழ மன்னர்கள் சிந்தித்ததை நினைவுபடுத்திக் கொண்டு நாட்டின் பிரஜையால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது என்பது நல்ல விஷயமே. 

 

Monday, 8 June 2026

நீதிபதி மகராஜன் - ஊருக்கு நல்ல பிள்ளை

புனைவுகளை விரும்பி வாசிக்கும் அடியேன் அ-புனைவுகளையும் விரும்பி வாசிப்பேன். அ-புனைவுகளின் பிரதி தன்னளவில் பலவிதமான சுவாரசியமான புனைவுப் பிரதிகளை உருவாக்கிக் கொள்கிறது என நினைப்பேன். உ.வே.சாமிநாத ஐயரின் ‘’வித்துவான் தியாகராஜ செட்டியார் சரிதம்’’ என்ற நூலை அடியேன் வாசித்திருந்தேன். வித்துவான் தியாகராஜ செட்டியார் உ.வே.சா வின் ஆசிரியரான மயிலாடுதுறையைச் சேர்ந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் மூத்த மாணவர். உ.வே.சா வின் தமிழ்ப் பற்றையும் தமிழ் ஆர்வத்தையும் கண்ட தியாகராஜ செட்டியார் திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்த உ.வே.சா வை சென்னைக்கு வந்து கல்லூரி ஆசிரியராக ஆக வேண்டும் என்ற முயற்சி எடுத்தவர். அவரது முயற்சியே உ.வே.சா வை சென்னைக்குக் கொண்டு வந்தது ; தமிழ் நூல்கள் பதிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட சூழ்நிலையை உருவாக்கித் தந்தது. உ.வே.சா சென்னையில் தன் இல்லத்துக்கு ‘’தியாகராஜ நிலையம்’’ என்ற பெயர் சூட்டினார். அவருடைய வாழ்க்கை வரலாறையும் எழுதினார். அந்நூலில் தியாகராஜ செட்டியாரின் பூர்வீகம் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் இருக்கும் பூவாளியூர் என்று குறிப்பிட்டிருப்பார். அந்த ஊரின் இறைவன் பெயர் திருமூலநாதன் என்றும். பூ என்றால் மலர். வாளி என்னும் சொல்லுக்கு அம்பு என்று பெயர். மலர்களை அம்புகளாகத் தொடுப்பவன் மன்மதன். அவனது வில் கரும்பால் ஆனது. தாமரை, அசோகம், மாம்பூ,முல்லை, குவளை ஆகிய மலர்கள் அவனது அம்புகள் - அதாவது - வாளிகள். பூவாளியூரில் கோயில் கொண்டிருக்கும் திருமூலநாத சுவாமியை பிழையீட்டுக்காக மன்மதன் அந்த ஊருக்கு வந்து வணங்கினான் என்பது தொன்மம். சில ஆண்டுகளுக்கு முன்னால், கவனகர் திருமூலநாதன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவரிடம் ஒரு விஷயம் சொன்னேன். அது என்னவென்றால் ‘’அதாவது சமீபத்தில் உ.வே.சா வின் ‘’வித்துவான் தியாகராஜ செட்டியார்’’ நூலை வாசித்தேன். அதில் தியாகராஜ செட்டியாரின் பூர்வீகம் திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள பூவாளியூர். அதனை இப்போது பூவாளூர் என்று சொல்கிறார்கள். அந்த ஊரின் இறைவனின் பெயர் திருமூலநாதன். அதனை வாசித்த போது எனக்கு உங்கள் ஞாபகம் வந்தது’’ என ஆரம்பித்து சிவன் தவமிருந்த கதை, சிவன் தவத்தைக் கலைத்த மன்மதன் எரிந்து போன கதை, மன்மதன் சாப விமோசனம் பெற்ற கதை,  உ.வே.சா கதை, மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் கதை, உ.வே.சா தியாகராஜ செட்டியாரால் சென்னை சென்ற கதை, தன் வீட்டுக்கு ‘’தியாகராஜ விலாசம்’’எனப் பெயர் சூட்டிய கதை என அனைத்தையும் சொன்னேன்.  திருமூலநாதன் என்ற பெயர் இத்தனை கதைகளைக் கொண்டிருக்கிறது என்பதையும் தமிழ் தொல்மொழியாதலால் ஒவ்வொரு சொல்லும் பல கதைகளைக் கொண்டிருக்கும் என்பதையும் அ-புனைவுகள் புனைவுகள் அளவுக்கு எனக்கு சுவாரசியம் அளிப்பவை என்றும் சொன்னேன். திருமூலநாதன் நான் கூறுவதை முழுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் அவர் பேசினார். ‘’ எனக்கு சொந்த ஊர் பூவாளூர். வித்துவான் தியாகராஜ செட்டியாருடைய கொள்ளுப் பேரன் நான்’’. 


இரண்டு நாட்கள் முன்னால், டாக்டர் எம்.சந்திரசேகரன் எழுதிய ‘’ நினைவில் நின்ற நிகழ்வுகள்’’ என்ற நூலை வாசித்தேன். அந்த நூல் எனக்கு பெரும் சுவாரசியம் அளித்தது. டாக்டரின் தமிழ் புனைவுத்தன்மையைக் கொண்டிருந்தது. அவர் சம்பவங்களை சூழல்களை மனிதர்களை அவதானிக்கும் விதம் மிக நுண்மையாக இருந்தது. அது கலைமனம் படைத்தவர்களுக்கு இருக்கும் கூறு. இருப்பினும் டாக்டர் அந்த நூலை தனது 70 வயதுக்கு மேல் எழுதியிருக்கிறார். கலைமனம் கொண்ட ஒருவர் தன் கலையை ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படுத்தவே விரும்புவார். ஒன்றைத் தாண்டி இன்னொன்று என பல விஷயங்கள் மனதில் முட்டி மோதின. அந்த நூலில் அவர் தனது தந்தை நீதிபதி மகராஜன் குறித்து எழுதியிருந்தார். அந்தப் பெயர் பல வருடங்களுக்கு முன்னால் கேள்விப்பட்ட பெயர். கிட்டத்தட்ட 3 தலைமுறைகள் கடந்து விட்டன. டாக்டரின் நூலை வாசித்துக் கொண்டிருந்ததால் அந்த நூலில் ஒரு உப கதாபாத்திரமாகவே நீதிபதி மகராஜன் அறிமுகமானார். சிறுவனாக இருக்கும் சந்திரசேகரன் சிறுவனான தன் இன்னொரு நண்பனை ஒரு அடி அடித்து விடுகிறார். சிறுவன் சந்திரசேகரனின் தந்தையான நீதிபதி மகராஜன் வீட்டுக்கு வந்ததும் அந்தச் சிறுவன் அவரிடம் தயங்கிச் சென்று திக்கித் திணறி ‘’சந்துரு இன்னைக்கு என்னை அடிச்சுது’’ எனக் கூறி விட்டார். என்ன நடந்தது என விசாரித்து அறிகிறார் நீதிபதி. அடிபட்ட சிறுவனிடம் ‘’இன்னொரு தடவை உன்னை சந்துரு அடிச்சா நீ திருப்பி பெருசா ரெண்டு அடி போட்டுட்டு என்கிட்ட வந்து சொல்லு’’ என்கிறார் நீதிபதி மகராஜன். அடுத்த வாரத்திலேயே சந்துருவுக்கு ‘’ரெண்டு அடி’’ கிடைக்கிறது. இன்னொரு சம்பவம் இந்த நூலில் இருக்கிறது. புதுச்சேரியில் நீதிபதியாகப் பணியாற்றுகிறார் நீதிபதி மகராஜன். அங்கே இருக்கும் நீதிபதியின் அரசு வீடு மிகப் பிரமாதமானது. வீட்டுக்கு முன் பெரிய வெளி இருக்கிறது. சந்துருவும் அவரது தோழர்களும் விளையாட மிக உகந்த இடம். ஒருநாள் ஒரு போலீஸ் பட்டாளம் வந்து வீட்டுக்கு முன் இருக்கும் வெளியில் ஒரு பந்தல் போட்டு பாதுகாப்பு கொடுக்க என வந்து குவிந்து விடுகிறார்கள். சிறுவர்களுக்கு ஒரே அதிருப்தி. நீதிமன்றத்திலிருந்து வீட்டுக்கு வந்த நீதிபதி வாசலில் குவிந்திருக்கும் காவலர்களிடம் என்ன விஷயம் என்கிறார். அரசாங்கம் பாதுகாப்பு கொடுக்கச் சொல்லியிருக்கிறது என்கின்றனர். ‘’எதுவும் தேவையில்லை’’ எனக் கூறிவிடுகிறார் நீதிபதி மகராஜன். உடனடியாக காவலர்கள் சென்று விடுகிறார்கள் ; பந்தலைப் பிரித்து எடுத்துக் கொண்டு. சந்துரு உட்பட சிறுவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. டாக்டர் சந்திரசேகரனின் நூலில் இருந்த டாக்டர் மகராஜனின் சித்திரம் எனக்கு சுவாரசியமளித்தது. டாக்டரின் நூல் குறித்து அவருக்கு ஒரு வாசகர் கடிதம் அனுப்பினேன். அவர் எனக்கு ஒரு பதில் எழுதினார். வாசகர் கடிதம் எழுதுவது போல எனக்கு மகிழ்ச்சியளிக்கும் செயல் வேறொன்றில்லை. இன்று இணையத்தில் ‘’நீதிபதி மகராஜன்’’ எனத் தேடினேன். அவரைப் பற்றி நிறையத் தகவல்கள் இருந்தன.நீதிபதி மகராஜன் அவர்கள் சிறந்த தமிழ் அறிஞர். தமிழ் அறிஞர்களான ராஜாஜி, டி.கே.சி, தொ.மு. பாஸ்கரத் தொண்டமான் ஆகியோரின் நண்பர். டி கே சி யின் வட்டத்தொட்டி அமைப்பை சென்னையில் நடத்தியவர். கம்பனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். ஷேக்ஸ்பிய்ரைத் தமிழில் மொழிபெயர்த்தவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர். அவரது எழுத்துக்கள் நூல்வடிவம் பெற்றிருக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் அவரது நூற்றாண்டு விழா நடைபெற்றிருக்கிறது.  https://justicemaharajan.org என்ற இணையதளமே இருந்தது. அதில் நீதிபதி மகராஜன் அவர்கள் எழுதிய நீதிமன்ற நினைவுகள் என்ற நூல் இருந்தது. அதனை வாசித்தேன். 


நீதிபதி மகராஜனின் மொழிநடை என்பது மிகவும் இனிய மொழிநடை. அவரது சொற்தேர்வுகளும் வாக்கிய அமைப்புகளும் கூறுமுறைகளும் அதிசயிக்க வைக்கின்றன. அவர் கூறும் விஷயத்தை மேலும் இனிமையாகக் கூறுவது சாத்தியமான ஒன்றுதானா என்ற ஐயம் வாசிக்கும் எவருக்கும் ஏற்படும். அத்தனை இனிய நடை அவரது மொழிநடை. 

தமிழ்ச் சமூக வரலாற்றிலும் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றிலும் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவராக விளங்கியிருக்கிறார் நீதிபதி மகராஜன் அவர்கள். 

அ-புனைவு நூல் எவ்விதம் தனக்குள் பல புனைவு சாத்தியங்களைக் கொண்டிருக்கும் என்பதற்கு ‘’நீதிமன்ற நினைவுகள்’’ நூல் ஒரு சிறந்த உதாரணம். மகராஜன் சிறுவனாக இருந்த போது அவரது வீட்டுக்கு வாராவாரம் பழநியிலிருந்தும் திருச்செந்தூரிலிருந்தும் பழனியாண்டவனின் திருச்செந்திலாண்டவனின் திருநீற்றுப் பிரசாதம் தபாலில் வருகிறது. அதனை மகராஜனுக்குப் பூசி விடும் அவரது அன்னை ஒவ்வொரு முறையும் ‘’ ஊருக்கு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும்’’ என்று கூறி பூசுகிறார். ஊருக்கு நல்ல பிள்ளையாக இருத்தல் என்பது அவரது மனதில் பதிந்து விடுகிறது. சிறுவனாயிருக்கும் போது கடவுள் பக்தி கொண்டிருந்த மகராஜன் இளைஞரான போது திராவிட இயக்கம் மேல் ஈர்ப்பு கொண்டவராகிறார். கல்லூரி மாணவர்கள் அனைவரும் கடவுள் மறுப்பு விஷயங்கள் மேல் ஈர்க்கப்படுகின்றனர். ‘’சாமியாவது மந்திரமாவது’’ என இருக்கிறார் மகராஜன். சட்டம் படிக்கும் போது ஒரு சட்டப் புத்தகத்தை நூலகத்தில் எடுக்கும் போது பல ஆண்டுகள் யாரும் எடுக்காத அந்தப் புத்தகத்தில் ஒரு விஷத்தேள் ஒன்று இருந்து அது மகராஜன் கையில் கொட்டி விடுகிறது. பொறுக்க முடியாத வலியில் அவதிப்படுகிறார் மகராஜன். நேரம் ஆக ஆக தேள் விஷத்தின் கடுப்பு கூடிக் கொண்டே போகிறது. சொந்தக்கார பையன் ஒருவன் வருகிறான். ஒரு மந்திரம் சொல்லி தன் கையில் வைத்திருந்த வேப்பிலையால்  தேள் கொட்டிய இடத்தில் நான்கு தடவை அடிக்கிறான் அந்தப் பையன். அடுத்த கணம் மகராஜனின் வலி இருந்த இடம் தெரியாமல் போகிறது. இது எப்படி சாத்தியம் என அந்த இளைஞனிடம் கேட்கிறார் மகராஜன். தனக்கு ’’மந்திர சித்தி’’ உண்டு என்கிறான் அந்த இளைஞன். இந்த சம்பவம் மகராஜனின் மன அமைப்பை மாற்றுகிறது. திராவிட இயக்க கடவுள் மறுப்பு விஷயங்களிலிருந்து விலக்கம் கொள்கிறார். ஆன்மீகம் மீது ஈடுபாடு ஏற்படுகிறது. கொல்லங்கோடு கண்ணப்ப சுவாமிகள் அவருக்கு ஆன்மீக குருவாக விளங்குகிறார். 

அவரது சட்ட வாழ்க்கையில் நடக்கும் பல சுவாரசியமான சம்பவங்களைக் குறிப்பிடுகிறார் நீதிபதி மகராஜன். அந்த சம்பவங்களுக்கு அவர் காட்டும் இலக்கிய மேற்கோள்கள் வாசகன் கற்பனையை பல திசைகளுக்கும் விரிவடையச் செய்கிறது. ஒரு அத்தியாயத்தில் நீதிபதி மகராஜன் ஒரு சம்பவத்தைச் சொல்கிறார். அதாவது மில்டன் வாழ்க்கையில் நடந்த சம்பவம். கவிஞர் மில்டனுக்கு கண் பார்வை பறிபோகிறது. அப்போது மில்டன் கடவுளுக்குத் தன் கவிதை மூலம் ஒரு விஷயத்தைச் சொல்கிறான். அதாவது, ஓர் அரசனுக்கு இரண்டு பணியாளர்கள் இருக்கிறார்கள். ஒருவன் வெளிநாட்டில் ஒரு மாடமாளிகையில் அரசனின் தூதனாக இருந்து அரசுப்பணியை மேற்கொள்கிறான். இன்னொருவன் அரச அரண்மனையின் வாயிற்கதவுக்குப் பக்கத்தில் காவலனாக இருக்கிறான். மில்டன் இருவருமே அரசுப் பணியாளர்களே என்கிறார். அதே போல கண் இருப்பவர்கள் தூதர்களைப் போல பணியாற்றட்டும் ; நான் வாயிற்காப்பாளன் போல இருக்கிறேன் என்கிறான். He also serves who stands and waits என்பது மில்டனின் கவிதை வரி. மில்டனின் மிக மேன்மையான கவிதை வரிகளில் ஒன்று இது என எனக்குத் தோன்றியது. இந்த வரியைக் குறிப்பிடும் நீதிபதி மகராஜன் ஒரு ஆங்கில் நீதிபதியின் தீர்ப்பை சுட்டிக் காட்டுகிறார். அதாவது, வீட்டுக்குள் இருக்கும் ஒருவனைக் கொலை செய்ய இரண்டு பேர் செல்கிறார்கள். ஒருவன் வாசலில் நின்று கொண்டு வெளியில் இருந்து யாரும் உள்ளே சென்று விடாமல் பார்த்துக் கொள்கிறான். இன்னொருவன் உள்ளே சென்று உள்ளே இருப்பவனைக் கொலை செய்கிறான். கொலை செய்தவனுக்கு மரண தண்டனையும் வெளியில் நின்றவனுக்கு ஆயுள் தண்டனையும் கிடைக்கும் என்ற நிலை. அப்போது வழக்கறிஞர் மில்டனின் He also serves who stands and waits  என்ற கவிதை வரியைக் குறிப்பிட்டு வாசலில் நின்று கொலைக்கு உடந்தையாய் இருந்தவனுக்கும் தூக்கு வாங்கிக் கொடுக்கிறார். 

தமிழறிஞர் பாஸ்கரத் தொண்டைமான் டிஸ்டிரிக்ட் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த போது எந்த வக்கீலுக்கும் வாய்தா கொடுக்க மறுக்கிறார். ஒரு வக்கீல் தொண்டைமானிடம் 

இன்று போய் நாளை வா என நல்கினன்
நாகிளங்கமுகின் வாளை தாவறு கோசல நாடுடை வள்ளல்

என்ற கம்பனின் வரியைக் கூறியதும் தொண்டைமான் அந்த வ்க்கீலுக்கு ஒருநாள் வாய்தா கொடுத்து விடுகிறார். 

பிரிட்டனில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை கூட பிரெஞ்சு மொழியே நீதிமன்ற மொழியாக இருந்தது என்றும் பிரிட்டன் மக்கள் பிரெஞ்சு மொழியையே மேன்மையான மொழியாகக் கருதினார்கள் என்றும் ஆங்கிலத்தைத் தகுதிக் குறைவான மொழியாக எண்ணினார்கள் என்றும் ஒரு தகவலைக் கூறுகிறார் நீதிபதி மகராஜன். இந்த இடத்திலிருந்து தொடங்கி கடந்த 400 ஆண்டு காலத்தில் ஆங்கிலத்தின் வளர்ச்சி நிலை வரலாறைக் கற்பனை செய்தால் அதில் உலகத்தின் கடந்த 400 ஆண்டு கால வரலாறும் இருக்கும் அல்லவா? 

நீதிமன்றம் சார்ந்த சாட்சி, குறுக்கு விசாரணை ஆகிய விஷயங்களையும் சுவாரசியமான வழக்குகளையும் சுவாரசியமான மனிதர்களையும் குறித்து மிக இனிமையாக எழுதியிருக்கிறார் நீதிபதி மகராஜன். 

இரண்டு நாட்கள் முன்பாக டாக்டர் எம்.சந்திரசேகரன் எழுதிய ‘’ நினைவில் நின்ற நிகழ்வுகள்’’ நூலை வாசித்த பின் டாக்டரின் தந்தையான நீதிபதி மகராஜனின் ’’நீதிமன்ற நினைவுகள்’’ நூலை இரண்டு நாட்களுக்குப் பின் இன்று வாசித்தது இனிமையான தற்செயல் ; இனிமையான அனுபவம். 

நீதிபதி மகராஜனின் நூல்கள் அனைத்தும் https://justicemaharajan.org என்ற இணையதளத்தில் உள்ளன. 

Sunday, 7 June 2026

டாக்டரின் கடிதம்

அன்புள்ள பிரபு அவர்களுக்கு,
 நீங்கள் என் நினைவில் நின்ற நிகழ்வுகள்  புத்தகத்தைப் பற்றி அழகாக எழுதி இருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம்.தமிழ் புத்தகத்தை படித்து சந்தோஷமாக அதைப் பற்றி எழுதுபவரை பார்த்தால் சந்தோஷமாக தானே இருக்கும்.
 அன்புடன்,
MCh

அன்புள்ள டாக்டர்,

தங்கள் மின்னஞ்சல் கண்டது மிக்க மகிழ்ச்சி. நம் நாட்டில் மருத்துவப் பணி என்பது நோய்மையின் துயரத்தைத் தினமும் காணும் பணி ஆகும். வருடக்கணக்காக அந்தத் துறையில் இருப்பவர் ஆயினும் வாழ்க்கையின் சிறு சிறு நுணுக்கமான அழகுகளைக் காணும் அகம் தங்களுக்கு வாய்த்திருக்கிறது ; இறைமையால் அருளப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம். இந்த நூலில் தங்களின் அகத்தின் தனித்துவம் கொண்ட பகுதி வெளிப்பட்டிருக்கிறது. அதுவே அந்நூலின் பெருஞ்சிறப்பு. நீங்கள் தொடர்ந்து இன்னும் நிறைய எழுத வேண்டும் என்பது எனது விருப்பம். 

அன்புடன்,
பிரபு

 

Saturday, 6 June 2026

மனிதர்களை அவதானித்தல்

நூல் : நினைவில் நின்ற நிகழ்வுகள் ஆசிரியர் : டாக்டர்.எம்.சந்திரசேகரன் பக்கம் : 112 விலை : ரூ. 200 பதிப்பகம் : தமிழ்ச்சுவடு பதிப்பகம், எண் 9, பி-3, நூஸ் அபாட்மெண்ட்ஸ் முதல் மாடி, நாராயண மேஸ்திரி 2வது தெரு, வில்லிவாக்கம், சென்னை - 49. மின்னஞ்சல் : thamizhchuvadutngr(at)gnail(dot)com 
உலக வரலாற்றில் மருத்துவர்கள் எப்போதும் நோய்மையை அணுகி அதனை அறிவதை தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியாகக் கொண்டிருக்கின்றனர் என்பதைக் காண முடியும். நோய் அறிதல் என்னும் முதல் பகுதி. அதன் பின்னர் அந்த நோய்க்கான மருந்து என்பது இரண்டாம் பகுதி. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகைப்பட்டவ்ன் என்பதால் நோயாளியின் நோய் அம்சம் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒவ்வொரு வகையாகவே இருக்கிறது. மருத்துவர் தனது தொழிலை செய்யத் தொடங்குவதிலிருந்து அனுபவம் பெருகப் பெருக நோயாளிகளையும் நோயாளிகளின் உளநிலைகளையும் அவதானிக்கும் திறன் என்பது மிக இயல்பாக கை கூடி விடுகிறது. அந்தத் திறன் அவர்களை மனிதர்களை அவதானிக்கும் தன்மைக்கும் கொண்டு செல்கிறது. எண்டோகிரைன் சர்ஜனான டாக்டர்.எம்.சந்திரசேகரன் மனிதர்களையும் மனித சுபாவங்களையும் நூதனமான வாழ்க்கைத் தருணங்களையும் மிக சுவாரசியமாக அவதானிக்கிறார். தான் அவதானித்ததை தன் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். அவ்விதம் அவர் பதிவு செய்த நூலே ‘’நினைவில் நின்ற நிகழ்வுகள்’’

சென்னையிலிருந்து தில்லிக்கு விமானத்தில் பயணிக்கிறார் டாக்டர்.எம்.சந்திரசேகரன். விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது. தில்லியை அடைய இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. அப்போது ஒரு பயணிக்கு நெஞ்சுவலி வந்து விடுகிறது. மொத்தம் 170 பயணிகள். டாக்டர் எவரும் இருக்கிறீர்களா என பைலட் ஒலிபெருக்கியில் கேட்கிறார். டாக்டர் சந்திரசேகர் ஒருவர் மட்டுமே இருக்கிறார். நெஞ்சுவலி வந்தவரின் இருக்கைக்குச் செல்கிறார் டாக்டர். நாடித்துடிப்பை பரிசீலிக்கிறார். நாடி நின்று போய் விட்டது. நோயாளியை தரையில் கிடத்தி பலமுறை கார்டியாக் மசாஜ் செய்கிறார். நோயாளிக்கு உயிர் மீண்டும் வருகிறது. 

வேலைப்பளுவைச் சுமப்பதிலேயே வாழ்வ்வின் பெரும்பாலான நாட்கள் சென்று விட்டதால் பணி ஓய்வு பெற்றதும் மனைவியுடன் சில நாட்கள் நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து விட்டு வரலாம் என முடிவு செய்கிறார் டாக்டர் சந்திரசேகர். டிராவல் ஏஜென்சியில் உங்கள் பெயர் டாக்டர் சந்திரசேகரன் தானே எனக் கேட்கிறார்கள். ‘’எனது பெயர் சந்திரசேகரன். நான் டாக்டர் தொழில் மேற்கொள்கிறேன்’’ என்றார் சந்திரசேகரன். என்ன செய்வது ? நாட்டில் ரயில்வே முன்பதிவு செய்தாலோ விமான டிக்கெட் புக் செய்தாலோ பெயரை எழுதச் சொல்லும் போது ‘’மருத்துவரானால் பெயருக்கு முன் டாக்டர் எனக் குறிப்பிடவும்’’ எனக் கேட்டுக் கொள்கிறார்களே? டாக்டரின் சேவை எப்போதும் தேவைப்படும் இடத்தில் சமூகம் இருக்கிறது ; ஒரு மருத்துவர் பணி ஓய்வு பெற்று ஓய்வெடுக்க செல்லும் போதும் அவர் தொழில் அவர் பெயருடன் ஒட்டிக் கொண்டே இருப்பேன் என்கிறது. 

டாக்டரும் அவரது நண்பரான இன்னொரு டாக்டரும் மருத்துவர்கள் தங்கள் காக்காய் கிறுக்கல் போன்ற கையெழுத்துக்குப் பெயர் போனவர்கள். அதனை நம்மளவில் நாம் இல்லாமல் ஆக்குவோம் என முடிவு செய்து ‘’காலியோகிராஃபி’’ என்னும் அழகிய கையெழுத்துக்கான கலையைக் கற்றுக் கொள்கிறார்கள். இருவரின் கையெழுத்தும் மிக அழகானதாக ஆகிறது. டாக்டரின் பேஷண்ட்கள் உடன் வ்ரும் ஒரு சிறுமியும் ஒரு சிறுவனும் பிரிஸ்கிரிப்ஷனில் இருக்கும் டாக்டரின் கையெழுத்தைப் பார்த்து அதிசயிக்கின்றனர். அவர்களுக்கு ‘’காலியோகிராஃபி’’யில் பேரார்வம் ஏற்பட்டு விடுகிறது. அவர்கள் இருவரும் யுவ பருவத்துக்கு வந்ததும் யுவதி துபாயில் ஒரு காலியோகிராஃபி பள்ளியைத் தொடங்கி மிக வெற்றிகரமாக நடத்துகிறாள். இளைஞன் தில்லியில் ஒரு காலியோகிராஃபி பள்ளி துவங்கி நடத்துகிறான். 

ரத்த வாந்தி எடுத்த வண்ணம் ஓர் இளம்பெண் மருத்துவமனைக்கு வந்து சேர்கிறார். அவரது அன்னை பதட்டத்துடன் இருக்கிறாள். உறவுக்காரப் பையன் ஒருவன் ரத்த வாந்தி எடுக்கும் பெண்ணுடன் கூடவே இருக்கிறான். அப்பெண்ணின் மருத்துவ அறிக்கையை பரிசீலிக்கும் டாக்டருக்கு எங்கோ ஒரு பிசிறு தட்டுகிறது. அவள் வாந்தி எடுப்பதாகக் கூறப்படும் ரத்தத்தைப் பரிசோதிக்கச் சொல்கிறார். ஷெர்லாக் ஹோம்ஸ் போல ஒரு விஷயத்தைக் கண்டடைகிறார். அதாவது அது ரத்த வாந்தி அல்ல ; குங்குமத்தைக் கரைத்து தன் மீது கொட்டிக் கொள்கிறாள் அந்தப் பெண். உறவுக்காரப் பையனான காதலனும் அந்த இளம் பெண்ணும் தங்கள் காதலுக்குச் சம்மதிக்காத அன்னைக்காக அவர்கள் போடும் நாட்கம். 

இன்ஸ்பெக்டர் ஜெனரல், அட்டர்னி ஜெனரல், ஆடிட்டர் ஜெனரல் என்பதில் வரும் ஜெனரல் என்னும் வார்த்தை ’’தலைமை’’ ‘’முதன்மை’’ ‘’பிரதானம்’’ என்னும் அர்த்தங்களைக் குறிப்பது போல ஜெனரல் மருத்துவமனை என்றால் ‘’தலைமை மருத்துவமனை’’ என்பதைக் குறிக்கும் ; ஆனால் தமிழகத்தில் ஜெனரல் மருத்துவமனையை பொது மருத்துவமனை என மொழிபெயர்த்து புழக்கத்துக்குக் கொண்டு வந்து விட்டார்கள் என்பதை சுவாரசியமாகக் குறிப்பிடுகிறார் சந்திரசேகரன். 

சென்னையின் ஒரு பகுதி ‘’கோல்காரன் பேட்டை’’ . அதனை கொலைகாரன் பேட்டை என அழைத்து வந்தனர் சென்னை மக்கள். ஒரு மருத்துவராக கொலைகாரன் பேட்டை என்னும் பெயர் தனக்கு ஏற்படுத்திய உளக் கலவரத்தை சுவாரசியமாகச் சொல்கிறார் டாக்டர். 

மருத்துவத் தொழிலில் ‘’பொறுமை கடலினும் பெரிது’’என்பதை masterly inavtivity yields better result என்கிறார் டாக்டர். 

தன் அறுவைசிகிச்சைகளில் நிகழ்ந்த சுவாரசியமான பல நிகழ்வுகளையும் நூலில் பதிவு செய்திருக்கிறார் டாக்டர். வாசிக்க மிக சுவாரசியமான நூல். 

நேற்றும் இன்றும்

நேற்று என்னுடைய கவனத்துக்கு ஒரு இடம் வந்தது. அந்த இடம் 1.5 ஏக்கர் பரப்புடையது. அந்த இடத்தின் இரு பக்கங்களில் சாலைகள் உள்ளன. மொத்த இடத்தைத் தோராயமாக 2000 சதுர அடி கொண்ட 30 மனைகளாகப் பிரித்துக் கொடுக்க முடியும். மனையின் அகலத்தை ஒட்டி சாலை செல்வதால் அந்த இடத்தை மொத்தமாக வாங்கி 30 மனைகளாகப் பிரித்து விற்பனை செய்யத் தொடங்கலாம்.  இடத்தின் உரிமையாளரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் R என்ற விலையைக் கூறினார். அந்த விலைக்கு வாங்கினால் 2R என்ற விலைக்கு விற்பனை செய்ய முடியும். நேற்று காலை அந்த இடத்தைப் பார்த்த பின் நில உரிமையாளர் சந்திப்பு இருந்தது. முடிய மாலை 3 மணி ஆகி விட்டது. அதன் பின் வீட்டுக்கு 5 மணிக்கு வந்தேன். 

இன்று காலை 8.30 மணிக்கு அந்த இடத்தைக் காணப் பேருந்தில் கிளம்பி சென்றேன். 11 மணி அளவில் அங்கு சென்று சேர்ந்தேன். அந்த இடம் இருக்கும் பகுதிக்கு மிக அருகில் ஒரு பெரிய பாலிடெக்னிக் கல்லூரி இருந்தது. அங்கே ஒரு பெரிய கல்லூரியும் பெரிய பள்ளியும் இருந்தன. இடத்துக்குப் பக்கத்தில் நிறைய 2000 சதுர அடி அளவு கொண்ட மனைகள் விற்பனை செய்யப்பட்டு இரும்பு வேலியிடப்பட்டிருந்தன. அவற்றில் பலவற்றில் பெரிய வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அந்தப் பகுதியில் மனைகள் என்ன விலை போகின்றன எனப் பலரிடம் விசாரித்தேன். எனது விசாரணை நேற்று என்னிடம் கூறப்பட்ட விஷயங்களை ஊர்ஜிதம் செய்தன. இதைப் போன்ற பணிகளில் மோட்டார்சைக்கிள் பெரிய அளவில் துணை புரியும். இருந்தாலும் இன்று பேருந்தில் சென்று அந்த இடத்தைச் சுற்றி நடந்து சென்று விசாரித்து வந்தேன். அது அந்த இடத்தைக் குறித்து நுணுக்கமாக அறிய உதவியது. நான் அங்கே சுற்றிக் கொண்டிருந்த பொழுது நண்பகல் வேளை. வெயில் உக்கிரமாக இருந்தது. ரியல் எஸ்டேட்டில் இடம் பார்ப்பது இடம் குறித்து விசாரிப்பது ஆகியவற்றைப் பகலில் தான் செய்ய வேண்டும். நிலத்துக்கு சூரிய வெளிச்சத்தைப் போல நெருக்கமான நண்பன் கிடையாது. பணி முடிந்ததும் ஊர் திரும்பினேன். 

ஊருக்கு வடக்கே 40 கி.மீ தொலைவில் இருக்கும் ஊரில் நான் பார்த்த இடம் இருக்கிறது.  

புகாரும் தீர்வும்

நேற்று வங்கிக்கு பணம் செலுத்தச் சென்றிருந்தேன். சாளரத்தில் ரூபாய்த் தாள்களை எண்ணும் இயந்திரத்தின் டிஸ்பிளே வெளியில் தெரியும் வண்ணம் இருந்தது. காசாளர் தன்னிடம் அளிக்கப்படும் பணத்தை எந்திரம் மூலம் எண்ணுவது எவ்வளவு தொகை என்பதை வாடிக்கையாளர்களும் சரிபார்த்துக் கொள்வதற்காக அந்த டிஸ்பிளே வைக்கப்படுகிறது. நான் சென்ற போது அந்த டிஸ்பிளே சரிவர இயங்கவில்லை ; அதாவது அந்த டிஸ்பிளே எப்போதும் 9900 என்னும் எண்ணைக் காட்டிக் கொண்டு இருக்கிறது. ஏதோ தொழில்நுட்பக் கோளாறு. 

கோடிக்கணக்கான ரூபாய் புழங்கும் அந்த வங்கி குறைந்தபட்சம் என்ன செய்ய வேண்டும் ? தொழில்நுட்பக் கோளாறுகளால் எந்திரம் சரிவர இயங்கவில்லை என்னும் தகவலை ஓர் அறிவிப்பாக எழுதி டிஸ்பிளே அருகில் வைத்திருக்கலாம். வங்கிக்கு இருக்கும் வசதிகளுக்கு அவர்கள் ஒரு மெக்கானிக்கை அழைத்து சில நிமிடங்களில் இந்த பிரச்சனையைத் தீர்த்திருக்க முடியும். வங்கி பராமரிப்பு செலவுகளுக்காக தினந்தோறும் பெரும் பணம் அளிக்கப்படுகிறது. வங்கி ஊழியர்கள் பெறும் ஊதியம் என்பது மிகப் பெரும் தொகை. அவர்களுக்குப் பெரும் ஊதியம் அளிக்கப்படுவது வாடிக்கையாளர்களுக்குப் பொருட்டல்ல. பெரும் ஊதியம் பெற்றுக் கொள்ளும் வங்கி ஊழியர்கள் அதற்கான பொறுப்புடன் வங்கியை நிர்வகிக்க வேண்டும் என்னும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தவே வங்கிகளின் சேவைக் குறைபாடு குறித்து பேசப்படும் போதெல்லாம் அவர்கள் ஊதியம் குறித்துப் பேசப்படுகிறது. 

நான் மென்மையாக காசாளரிடம் டிஸ்பிளே சரிவர வேலை செய்யவில்லை என்பதை சுட்டிக் காட்டினேன். 

‘’கொஞ்ச நாளாவே அப்படித்தான் சார் இருக்கு’’ என்றார் அந்தப் பெண்மணி. 

என் பணி முடிந்ததும் வங்கி மேலாளரிடம் இந்த விஷயத்தைத் தெரிவித்து விட்டுச் செல்லலாம் என நினைத்தேன். அவர் என்ன பதில் சொல்வார் ‘’என்னன்னு பாக்கறன்’’ என்பார். 

முதல் விஷயம் ஒரு முக்கிய விஷயம் பல நாளாக மேலாளர் கவனத்துக்கு வராமல் இருக்கிறது என்பது எதைக் காட்டுகிறது என்றால் மேலாளருக்கு வாடிக்கையாளர் சாளரத்தில் என்ன நடக்கிறது என்னும் விஷயமே தெரியவில்லை. எந்த வாடிக்கையாளரும் இது குறித்து புகார் தெரிவிக்கவில்லை என்றால் அவர்கள் வங்கி நிர்வாகத்துடன் சகஜமாக உணரவில்லை என்பதே அதன் அர்த்தம். 

ஒரு மேலாளர் பொறுப்புள்ளவர் எனில் என்ன செய்ய வேண்டும் என்றால் டிஸ்பிளே வேலை செய்யவில்லை என்னும் புகாரைக் கூறும் வாடிக்கையாளரிடம் அவரது தொடர்பு எண்ணை வாங்கிக் குறித்துக் கொண்டு ‘’உடன் சரி செய்து விட்டு உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன்; சுட்டிக் காட்டியதற்கு நன்றி ‘’ எனத் தெரிவிக்க வேண்டும். அவ்விதமே சரி செய்து தகவல் தெரிவிக்க வேண்டும். 

நான் சென்ற வங்கிக் கிளை சிறியது. ஒரு மேலாளர் , ஒரு கிளை மேலாளர், இரண்டு எழுத்தர்கள், இரண்டு உதவியாளர்கள், இரண்டு தற்காலிகப் பணியாளர்கள்  என 8 பேர் பணி புரியும் இடம் அது. தினமும் வேலை நேரத்தில் குறைந்தது 100 வாடிக்கையாளர்களாவது வருவார்கள். வங்கி ஊழியர்கள் தங்களை ஊழியர்கள் என எண்ணுவதே இல்லை ; தங்களைக் குறு நில மன்னர்களாகவே எண்ணுகின்றனர். மேலும் அவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மீது எப்போதும் ஓர் இளக்காரம் இருக்கிறது. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுபவர்களே வங்கி ஊழியர்களில் 99 சதவீதத்தினர். நான் என்னுடைய பல வருட அனுபவத்தில் உணர்ந்த விஷயம் இது. 

வீட்டுக்கு வந்ததும் சி.பி.கி.ராம்.ஸ்-ல் வங்கிக் கிளையின் பணம் எண்ணும் எந்திரத்தின் டிஸ்பிளே வேலை செய்யாததால் வாடிக்கையாளர் குழப்பம் அடைகின்றனர் என்னும் உண்மையைப் புகாராக பதிவு செய்தேன். 

இந்தத் தகவல் சென்னையில் இருக்கும் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு முதலில் சென்றது. பின்னர் வங்கியின் ஸோனல் அலுவலகத்துக்கு தகவல் சென்றது. மேலிடத்திலிருந்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு வருவதே சி.பி.கி.ராம்.ஸ்-ன் வழிமுறை. இன்று எனது புகாருக்கு சென்னை அலுவலகம் பதில் தந்தது. 

அதாவது , நான் குறிப்பிட்ட வங்கிக் கிளையின் பணம் எண்ணும் எந்திரத்தின் டிஸ்பிளே சரி செய்யப்பட்டு விட்டது என்றும் ஸோனல் மேனேஜர் கிளையின் ஊழியர்களை சிறப்பான வாடிக்கையாளர் சேவையில் ஈடுபட அறிவுறுத்தியதாகவும் எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சரி செய்யப்பட்ட எந்திரத்தின் ஒளிப்படமும் பதிலுடன் இணைக்கப்பட்டிருந்தது.   

Friday, 5 June 2026

இறைவனின் உள்ளங்கை

பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். ஒரு குடும்பம் வண்டியில் ஏறியது. தந்தையின் தோளில் ஓர் இளமைந்தன் சாய்ந்து கொண்டிருந்தான். தந்தை என்னருகில் அமர்ந்து கொண்டார். இளமகன் என்னை நோக்கி தன் கையை நீட்டினான். குழந்தைக்கு இன்னும் ஒரு வயது ஆகியிருக்காது. ஒரு வயதை நோக்கி மிக ஆர்வமாகச் சென்று கொண்டிருக்கிறான். என் கையை நீட்டினேன். என் விரல் ஒன்றை இறுக்கிப் பிடிக்க முயன்றான். அவனது உள்ளங்கை மிக மென்மையாக இருந்தது. அது இறைவனின் உள்ளங்கை என்பதை அக்கணம் உணர்ந்தேன்.  

Thursday, 4 June 2026

கொல்லாபுரம்

சாலைகள் சந்திக்கும் இடம் சந்தி. மூன்று சாலைகள் சந்திக்கும் இடம் முச்சந்தி. நான்கு சாலைகள் சந்திக்கும் இடம் நாற்சந்தி. 

நாட்டில் கடுமையான உணவுப்பஞ்சம் நிலவிக் கொண்டிருந்த போது 1967ம் ஆண்டு தி.மு.க தலைவராக இருந்த அண்ணாத்துரை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி கொடுப்போம் என தேர்தல் வாக்குறுதி தந்தார். ஆட்சி அமைத்து தி.மு.க ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி ரேஷனில் கொடுக்கவில்லை என்றால் தன்னை முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடியுங்கள் என்றார். 1967ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்தது ; ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்னும் தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.   

1980களின் பிற்பகுதியில் ஓர் அரசியல் கோஷம் எழுந்தது. ‘’கலி கலி மெய்ன் ஷோர் ஹை ; ராஜிவ் காந்தி சோர் ஹை’’. இதனைத் தமிழில் இவ்விதம் மொழிபெயர்க்கலாம் : ‘’சந்திக்கு சந்தி ஒரே கூச்சல் : ராஜிவ் ஊழல்வாதி  என்று’’. ஹிந்தியில் கலி என்றால் தெரு , சந்து ஆகிய அர்த்தம். 

வட தமிழகத்தின் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் பேருந்து நிலையங்களில் ஊர்ப்பெயர்கள் சொல்லி பேருந்தில் ஏற நடத்துநர்கள் அழைக்கும் போது திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு, கோலியனூர் கூட்டு ரோடு என்று சொல்வார்கள். எனக்கு அந்த கூட்டு ரோடு என்னும் பெயர் நூதனமாக இருந்தது. கூட்டு ரோடு என்பதை கிராஸ் ரோடு என்றும் சொல்வார்கள். பேருந்துகளில் X ரோடு என எழுதி இருப்பார்கள். 

ஒருமுறை சிதம்பரத்திலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். நடத்துநர் என்னிடம் வந்து என்ன ஊருக்கு டிக்கெட் என்று கேட்டார். கொல்லாபுரம் என்றேன். ‘’நீங்க சொல்ற ஊருக்கு வண்டி போகாதுங்க’’ என்றார். எனக்கு விஷயம் புரிய சில கணங்கள் ஆனது. அவரிடம் ஜெயங்கொண்டம் கூட்டு ரோடு என்றேன். அவர் டிக்கெட் கொடுத்தார். ஜெயங்கொண்டம் கூட்டு ரோடு இருக்கும் கிராமத்தின் பெயர் கொல்லாபுரம் என்பது உங்களுக்குத் தெரியாதா என்று கேட்டேன். ‘’நான் 20 வருஷமா பஸ் கண்டக்டரா இருக்கேன் ; என்கிட்ட ஜெயங்கொண்டம் கிராஸ் ரோட்டை கொல்லாபுரம்னு பேர் சொல்லி டிக்கெட் கேட்ட முதல் ஆள் நீங்கதான்’’ என்றார்.