பிரபு மயிலாடுதுறை
Tuesday, 24 February 2026
பகவானும் சுவாமியும்
நிவேதிதை நூற்றைம்பது - ஆன்மீகவாதியின் நிறைவாழ்வு
நூல் : நிவேதிதை நூற்றைம்பது ஆசிரியர் : யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா பக்கம் : 343 விலை : ரூ.150 பதிப்பகம் : ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4
Sunday, 22 February 2026
7 வடிவங்கள்
Saturday, 21 February 2026
புத்தகங்கள் புத்தகங்கள் (நகைச்சுவைக் கட்டுரை)
எனது மேஜை பல்வேறு வஸ்துக்களால் நிறைந்து கிடந்தது. சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகி குறைந்தது 15 நாட்களாவது ஆகியிருக்கும். எப்படி துவங்குவது என்னும் அச்சம். அத்தனை இருந்தன மேஜையில். ஒரு சாதாரண (அசாதாராண!) விஷயத்தை இத்தனை நாள் ஒத்திப் போடுவதா என மேஜையை சரி செய்யத் தொடங்கினேன். இம்முறை சரி செய்த போது நான் ஒன்றை உணர்ந்தேன். என் மேஜை முழுக்க புத்தகங்கள் தான் இருக்கின்றன. ஒரு புத்தகம் வாசித்தால் உடனே அதைக் குறித்து எனது தளத்தில் எழுதி விடுகிறேன். ஆனால் அந்த புத்தகத்தை புத்தக அலமாரியில் கொண்டு போய் வைப்பது இல்லை. ஏனெனில் எனது புத்தக அலமாரி நிரம்பி விட்டது. ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் இருக்கின்றன. புதிதாக வைக்க இடம் இல்லை. எனது அறையில் ஒரு ஷெல்ஃப் காலியாய் இருப்பதை இன்று காலையில் பார்த்தேன். மேஜையில் இருக்கும் புத்தகங்கள் அனைத்தையும் அதில் கொண்டு போய் வைத்து விட்டு வந்தேன். மேஜையின் மேல்பரப்பு ஓரளவு சரியாகி விட்டது. இன்னும் டிராவ் திறக்கப்படவில்லை. அதைத் திறந்தால் இன்னும் என்னென்னவோ?
Friday, 20 February 2026
எழுதுதல்
எனது நண்பர் ஒருவர் தீவிரமான இலக்கிய வாசகர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய வாசிப்பு கொண்டவர். புனைவுகள் அ-புனைவுகள் என அனைத்தையும் வாசிப்பவர். சில மாதங்களுக்கு முன் அவர் அறிமுகமானார். சிலமுறை சந்தித்தோம். சிலமுறை உரையாடினோம். அவர் எழுதக் கூடியவர் என்று எனக்குத் தோன்றியது. அதனை அவரிடம் அவ்வப்போது தெரிவித்தேன். நேற்று அவர் எழுதிய சிறுகதையை எனக்கு அனுப்பியிருந்தார். எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எனது ஆவல்.
Thursday, 19 February 2026
படைப்பதனால் இறைவன்
இறைவன் பெரும் படைப்பாளி. அவனது சிந்தை கணந்தோறும் படைத்துக் கொண்டேயிருக்கிறது. சமீபத்தில் அவன் படைத்த 3 பூனைக்குட்டிகள் வீட்டின் கார் ஷெட் அருகே உலாவுகின்றன. அங்கே இரு தென்னை மரங்கள் உள்ளன. அந்த தென்னை மரங்கள் தான் அவற்றின் பயிற்சிக் கூடம். மரத்தில் தன் கால் நகங்களின் துணை கொண்டு இறுகப் பிடித்து தொற்றி தொற்றி ஏறிப் பழகுகின்றன. கட்டுமானத்தில் பயன்படும் உபகரணங்கள் அங்கே கிடக்கும். அவற்றில் ஏறிக் குதித்தி அவற்றைக் கவிழ்க்கின்றன. இரவு நேரங்களில் வீட்டு வாசலில் கிடக்கும் மிதியடியில் குளிருக்கு இதமாக வந்து படுத்துக் கொள்கின்றன. அடிக்கடி அவற்றைப் பார்க்க நேர்கிறது. நம் பிராந்தியத்தில் நம்மை விட சுதந்திரமாக உலவும் இவன் யாராக இருப்பான் என்னும் விதத்தில் என்னைப் பார்க்கின்றன. தாய்ப்பூனை அவ்வப்போது வந்து அவற்றைப் பார்த்துக் கொண்டு செல்கிறது. அந்தச் சிறு பிராந்தியத்தை தங்கள் முழு சுவாதீனத்தில் எடுத்திருக்கின்றன அப்பூனைக் குட்டிகள்.
உலோகவியல் (நகைச்சுவைக் கட்டுரை)
பள்ளிப்பாடங்களில் - அறிவியல் பாடத்தில் - குறிப்பாக வேதியியல் பாடங்களில் ஒரு கேள்வி கேட்கப்படும். உலகில் விலை உயர்ந்த உலோகம் எது என்பதே அந்தக் கேள்வி. அதற்கு பதிலாக பிளாட்டினம் என்று கூறப்படும். இன்று உலகில் விலை உயர்ந்த உலோகம் எது என்னும் கேள்வி கேட்கப்பட்டு அக்கேள்விக்கு விடையாக மாணவர்கள் பிளாட்டினம் என எழுதுவார்களேயாயின் அவர்களுக்கு அக்கேள்விக்கு சரியான பதில் எழுதியதற்கான மதிப்பெண் கிடைக்காது. இன்றைய நிலவரப்படி, உலகில் மிக விலை உயர்ந்த உலோகம் பிளாட்டினம் அல்ல ; தங்கம்.
இன்று ஒரு கிராம் பிளாட்டினத்தின் விலை ரூ. 5942
இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 15420
Wednesday, 18 February 2026
கூடுதல் தொகை (நகைச்சுவைக் கட்டுரை)
எனது நண்பர் ஒருவர் அடகுக்கடை வைத்திருக்கிறார். அவரை எப்போதாவது சந்தித்துப் பொது விஷயங்கள் பேசிக் கொண்டிருப்பதுண்டு. இன்று அவரது கடையில் அமர்ந்திருந்தேன். அவரது வாடிக்கையாளர் ஒருவர் அடகுக்கடைக்கு வந்திருந்தார். அவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் நகையை அடகு வைத்திருக்கிறார். நண்பரிடம் வட்டி வீதம் 24 சதவீதம். அப்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4000. நண்பர் அவருக்கு கிராமுக்கு ரூ.3200 கடன் கொடுத்திருக்கிறார். அவ்வாறெனில் மாதம் ஒரு கிராமுக்கு ரூ.64 வட்டி. ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. 84 X 64 = 5346 வட்டி. ஒரு கிராமுக்கு வாங்கிய கடன் ரூ.3200 அதனுடன் வட்டித் தொகை சேர்த்து மொத்தம் 8546 ஆகிறது. கடந்த மூன்று மாதத்தில் தங்க விலை சரசரவென ஏறி விட்டதால் இப்போது ஒரு கிராமுக்கு ரூ.12,000 வரை நண்பரால் கடன் கொடுக்க முடியும். வாடிக்கையாளர் தனது கடன் வட்டியை வரவு வைத்துக் கொண்டு மீதி இருக்கும் இடைவெளித் தொகை ரூ.3500 ஐ ரொக்கமாகக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். 8546 கட்டி கடன் தீர்த்து விட்டு நகையை வாங்கிச் சென்று விடுங்கள் என்று நண்பர் சொன்னார். வாடிக்கையாளர் மேலும் பணம் கேட்டார். அசலும் வட்டியும் சேர்த்த தொகை ரூ.8600க்கு அவர் வைத்த நகை மறு அடகு வைக்கப்பட்டதாக ஏற்பாடு செய்து கொண்டு கணக்கு எழுதிக் கொண்டார் நண்பர். நண்பரின் கவலை வாங்கிய கடன் ரூ.3200க்கு அசலும் வரவில்லை வட்டியும் வரவில்லை. இந்த 8500 எப்படி திரும்பி வரும் என்பது. நண்பரிடம் விலை குறைய வாய்ப்பிருக்கிறது என்கிறார்களே அவ்வாறு நிகழ்ந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். எனது இத்தனை வருட தொழில் அனுபவத்தில் இவ்விதமான சூழ்நிலை வந்ததில்லை என்றார்.
அகவய அபிப்ராயங்கள் - உடல்
உடலும் மனமும் பலவிதங்களாக இணைந்திருக்கிறது. ஒத்திசைவுடன். முரண்பட்டு. ஒன்றுபட்டு . வேறுபட்டு. பூசலிட்டு. ஒற்றுமையாகி. மனம் உடலைத் தன் ஏவலனாக்குவதே அதிகம். உடலின் நலனுக்கு எதிரான பாதையில் கூட மனம் உடலை இட்டுச் செல்லும். உடல் செயலற்று மனம் சொல்வதைக் கேட்கும். உடலும் மனத்தை சிந்திக்காமல் ஆக்குவது உண்டு. உடலும் மனமும் துல்லியமாக ஒத்திசையும் போது பல அற்புதங்கள் நிகழ்கின்றன. அசாத்தியமான பல விஷயங்கள் சாத்தியமாகின்றன.
Monday, 16 February 2026
அகவய அபிப்ராயங்கள் - மனம்
ஒவ்வொருவருக்கும் மனம் இருக்கிறது. மனம் இருப்பதால் மட்டுமே 99.99 சதவீத மனிதர்கள் தங்கள் இருத்தலையே உணர்கிறார்கள். மனதை மட்டுமே எல்லாமும் என்று நினைக்கின்றனர். மனம் ஒரு பொருளா அதன் வடிவம் என்ன அதன் செயல்முறை என்ன என்பதை நாம் அறிந்ததில்லை ; அதனை அறிய வேண்டும் என விருப்பம் கொண்டதில்லை. அறிவதற்கான பாதையில் செல்லத் துவங்குவதில்லை. அந்த பயணத்தை முழுமை செய்வதில்லை. மனம் என்பது ஞாபகங்களின் தொகுப்பு. ஞாபகம் ஒவ்வொருவரின் சூழலுக்கு ஏற்ப மாறுவது. ஒருவரின் ஒரு மனம் போல இன்னொருவருக்கு இன்னொரு மனம் இருக்கிறது. ஒருவருக்கே ஒன்றுக்கு மேற்பட்ட மனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவ்விதமே. மனம் சொல்வது மட்டுமே நமக்குக் கேட்கிறது. மனம் சொவதைக் கேட்டு அப்படியே நாம் நடந்து விடுவதில்லை. நல்லதாயினும் அல்லதாயினும். மனங்கள் பூசலிடுகின்றன. மனங்கள் விரும்புகின்றன. மனங்கள் இணைகின்றன. மனங்கள் பிரிகின்றன. மனங்கள் சினேகிக்கின்றன. மனங்கள் விரோதம் கொள்கின்றன. மனம் உடலைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்கிறது. மனம் உடல் இயக்கத்தில் தாக்கம் செலுத்துகிறது. துயர் என உணர்வது மனத்தில். மகிழ்ச்சி என உணர்வதும் மனத்தில்.