அரசியல் கட்சிகளின் இயங்குமுறையை சிறு வயதிலிருந்தே கவனித்தது உண்டு. நான் வசிப்பது காவிரி வடிநிலம் என்பதால் இங்கே கட்சிக்கரை கொண்ட வேட்டியை அணிபவர்கள் பலரை தினந்தோறும் கடைத்தெருவில் பேருந்து நிலையத்தில் பொது இடங்களில் காண முடியும். ஒருவர் கட்சிக்காரர் என்றால் பெரும்பாலும் அவர் கட்சிக்கரை போட்ட வேட்டியை அணிந்திருப்பார். கட்சிக் கூட்டங்களுக்குச் செல்வார். கட்சி மாநாடுகளுக்கு செல்வார். அவர் இருக்கும் கட்சியின் மற்ற கட்சிக்காரர்களுடன் அறிமுகமாகியும் பரிச்சயமாகியும் இருப்பார். பொது விஷயங்கள் தொடர்பாக கட்சி என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அதனையே தனது நிலைப்பாடாகவும் கொள்வார். தமிழகத்தில் ஒரு கட்சிக்காரரிடம் கட்சி எதிர்பார்ப்பதும் கட்சியிடம் கட்சிக்காரர் எதிர்பார்ப்பதும் இவ்வளவே ஆகும். தமிழகத்தை 1967லிருந்து 2026 வரை 60 ஆண்டுகள் ஆண்ட திராவிடக் கட்சிகள் இவ்விதமே கட்சி அரசியலை செய்தன. அவர்களின் இந்த பாணி தமிழகத்தில் அதிகாரத்தில் இல்லாமல் இருந்த மற்ற கட்சிகளின் இயங்குமுறையிலும் பிரதிபலித்து அதுவே அவர்களின் இயங்குமுறையாகவும் நிலை கொண்டது.
தமிழகத்தில் 12,600 கிராமங்கள் உள்ளன. தமிழகத்தில் 75,000 வாக்குச் சாவடிகள் உள்ளன. 60 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் காங்கிரஸ் ஆளும்கட்சியாக இருந்தது. அவர்களுக்கு மாநிலத்தில் உள்ள எல்லாக் கிராமங்களிலும் வாக்குச்சாவடிகளிலும் கட்சிக் கட்டமைப்பு இருந்தது. பின்னர் திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வரத் தொடங்கியதும் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளுக்கு மட்டுமே 75,000 வாக்குச் சாவடிகளிலும் கட்சிக் கட்டமைப்பு இருக்கிறது என்னும் நிலை இருந்தது.
வாக்குச் சாவடி கட்டமைப்பு என்பது ஒரு கட்சிக்கு ஒரு வாக்குச்சாவடியில் 6லிருந்து 10 பேர் கட்சி வேலை செய்ய இருக்கிறார்கள் என்றால் அந்தக் கட்சிக்கு அந்த வாக்குச் சாவடியில் வாக்குச் சாவடி கட்டமைப்பு இருக்கிறது என்று பொருள். ஒரு வாக்குச் சாவடி என்பது 1500லிருந்து 2500 வாக்காளர்களைக் கொண்டிருக்கும். அதில் கரைவேட்டி தினமும் கட்டும் கட்சிக்காரர்கள் என திராவிடக் கட்சிகளுக்கு குறைந்தது 40 பேர் இருப்பார்கள். எனினும் வாக்குச் சாவடி பொறுப்பு என்பது 6 லிருந்து 10 பேருக்கு மட்டுமே தர முடியும் என்பதால் கரைவேட்டி கட்டும் 40 பேரில் 20 பேருக்கு வார்டு தலைவர், வார்டு செயலாளர், வார்டு பொருளாளர், வார்டு பிரதிநிதி என சில பொறுப்புகளை வழங்குவார்கள். சிலருக்கு கட்சி உறுப்பினர் அட்டை மட்டும் கொடுத்து இருப்பார்கள். அவ்விதம் என்றால் மாநிலத்தில் உள்ள 75,000 வாக்குச் சாவடிகளிலும் சாவடிக்கு 20 பேர் என்றால் ஒரு கட்சி தன் பொறுப்பாளர்களாக 15,00,000 பேரை பராமரிக்கும். இவர்களுக்காகவே கட்சி பத்திரிக்கை, டி வி சேனல், மாநாடு ஆகியவற்றை நடத்தும். மாநிலத் தலைமை ஒரு குடும்பத்திடம் இருப்பது போல வாக்குச்சாவடி உறுப்பினர்களும் பாட்டனார், தந்தை, பேரன் என அந்த வாக்குச்சாவடியில் கட்சிப் பொறுப்பில் இருப்பார்கள். வாக்குச்சாவடியின் கட்சிப் பொறுப்பை அவர்கள் ஒரு சமூக அந்தஸ்தாகவும் எண்ணத் தொடங்குவார்கள்.
கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்தது என்னவெனில் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகள் மட்டுமே தமிழகத்தின் 75,000 வாக்குச்சாவடிகளிலும் கட்சிப் பொறுப்பாளர்களைக் கொண்டிருக்கிறார்கள் என்னும் நிலை உருவானது. 1967ல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அடுத்த 30 ஆண்டுகளில் வாக்குச்சாவடிகள் நிலையில் கட்சிக் கட்டமைப்பை முற்றிலும் இழந்தது. கம்யூனிஸ்டுகளிடம் தொழிலாளர், விவசாயத் தொழிலாளர் வலைப்பின்னல் மட்டுமே இருந்ததால் அவர்களுக்கும் 75,000 வாக்குச்சாவடிகளிலும் கட்சிப் பொறுப்பாளர்கள் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் கட்சிக் கட்டமைப்பு கொண்ட கட்சி ; எனினும் அவர்களுக்கு தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்குப் பிராந்தியங்களில் கட்டமைப்பு இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வட மாவட்டங்களில் வாக்குச்சாவடி அளவில் கட்டமைப்பு கொண்ட கட்சியே. அவர்களுக்கும் மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியத்தில் பலம் இல்லை.
தமிழக மக்கள் தாங்கள் வாக்களிக்கும் கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என எண்ணுவார்கள். தாங்கள் வாக்களிக்கும் கட்சி வெற்றி பெறாமல் போனால் அதனைத் தங்கள் தோல்வியாகக் கருதுவார்கள். எனவே திராவிடக் கட்சிகள் தங்களுக்குப் போட்டியாக உருவாகும் கட்சிகள் வாக்குச்சாவடி கட்டமைப்பு இல்லாதவை - அமைப்பு பலம் இல்லாதவை என்று சொல்லி அவர்களுக்குப் பின்னடைவை உருவாக்கி விடும். தமிழக மக்களும் அமைப்பு பலம் இல்லாத கட்சிகளுக்கு வாக்களிக்கத் தயங்குவார்கள். இவ்விதமாக தமிழக அரசியல் அதிகாரம் கடந்த 60 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளின் ஏகபோகமாக இருந்தது. இத்தனை அமைப்பு பலம் இருந்தும் கூட திராவிடக் கட்சிகள் காங்கிரஸ், பாரதிய ஜனதா, பா ம க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தேர்தலில் போட்டியிடும் வழக்கம் கொண்டிருந்தன.
இவ்விதமான அரசியல் சூழலில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நிகழ்ந்தது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி உருவானது. தமிழ்த் திரைப்பட நடிகர் ஜோசஃப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2024ம் ஆண்டு உருவானது. நடிகர் ஜோசஃப் விஜய்யின் கட்சிக்கு திராவிடக் கட்சிகள் பாணியிலான கரைவேட்டி கட்டிய கட்சிக்காரர்களோ 75,000 வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி முகவர் கட்டமைப்போ இல்லை. எனினும் தமிழக வெற்றிக் கழகம் ஒரு கோடியே ஐம்பது லட்சம் வாக்குகள் பெற்று பெருவெற்றி பெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த வெற்றிக்குப் பிறகு தமிழக அரசியல் இயங்கும் விதம் தலைகீழாக மாறியிருக்கிறது. கரைவேட்டி கட்சிக்காரர்கள், வாக்குச்சாவடி கட்டமைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் கணிசமாகக் குறைந்துள்ளது. வேறு புதிய பாணி மக்கள் தொடர்பு முறைகள் உருவாகின்றன. தமிழக அரசியலுக்கு இது நல்ல விஷயமே.
தற்போது சில அமைப்புகள் குடிமக்களுக்கு அரசியல் அறிமுகமும் அரசியல் பயிற்சியும் அளிக்கத் திட்டமிடுகின்றன. ஐ ஏ எஸ் , ஐ பி எஸ், ஐ எஃப் எஸ் ஆகிய தேர்வில் தேர்ச்சி பெறுப்வர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். அந்தப் பயிற்சியே அவர்களை அவர்கள் வகிக்கப் போகும் பதவிக்கு தகுதி பெற்றவர்கள் ஆக்கும். அதே விதமாக தமிழகத்தில் குடிமக்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் அரசியல் பயிற்சி பெறும் சூழல் உருவாகியுள்ளது. அவ்விதமான பயிற்சிக்கு லட்சக்கணக்கானோர் தங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
மகாத்மா காந்தி தென்னாஃப்ரிக்காவிலிருந்து இந்தியா வந்து இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை ஏற்ற போது காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கட்டணத்தை 25 பைசா என்றாக்கினார். அந்தக் காலத்தில் அதனை ‘’நாலணா’’ எனக் கூறுவார்கள். அவ்விதம் இணைந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு தமது ‘’யங் இந்தியா’’ ‘’நவஜீவன்’’ பத்திரிக்கைகள் மூலமும் தனது ஆசிரமங்கள் மூலமும் அரசியல் பயிற்சி அளித்தார். அவ்விதம் உருவாகி வந்தவர்களே பின்னாட்களில் இந்தியாவின் ஜனநாயக அரசியலுக்கு அடித்தளமாக விளங்கினர். அதே பாணியில் காலத்தின் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் அரசியல் பயிற்சி துவங்கவிருக்கிறது. எதிர்காலத்தில் அது தமிழகத்துக்கு நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்ப்போம்.