என்னுடைய பள்ளி நாட்களில் பன்னிரண்டாம் வகுப்பு நிறைவு செய்து பின்னர் மருத்துவக் கல்லூரியிலோ அல்லது பொறியியல் கல்லூரியிலோ சேர்க்கை பெற வேண்டும் எனில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு நுழைவுத்தேர்வும் எழுத வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் இரண்டையும் சேர்த்து ஒரு கட் ஆஃப் மதிப்பெண் கிடைக்கும். அதைக் கொண்டு ‘’கவுன்சிலிங்’’ மூலம் மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி சேர்க்கை கிடைக்கும்.
கவுன்சிலிங் தொடங்கியதும் முதலில் நிரம்புவது பி.டி.எஸ் எனப்படும் பல் மருத்துவப் படிப்பே ஆகும். அதன் பின்னர் தான் எம்.பி.பி.எஸ் நிரம்பும். அப்போது எம்.பி.பி.எஸ் படிப்பை விட பி.டி.எஸ் படிப்புக்கு மிக அதிக தேவை விருப்பம் இருந்தது. அதற்கு என்ன காரணம் எனில் ஒரு எம்.பி.பி.எஸ் மருத்துவரை விட ஒரு பல் மருத்துவர் மிக அதிகமாக பொருள் ஈட்ட முடியும் என்பதே ஆகும். ஒரு நோயாளி ஒரு மருத்துவரிடம் ஜூரம், ஜலதோஷம் ஆகியவற்றுக்காக சிகிச்சை பெற வந்தால் அவரிடம் ரூ.100 ஆலோசனைக் கட்டணமாக பெற முடியும். பல் சிகிச்சைக்காக ஒருவர் வருகிறார் என்றால் பல் கிளிப் போடுதல், பல் எடுத்தல் , பல் சுத்தம் செய்தல் ஆகியவற்றைச் செய்ய அதிக கட்டணம் வசூலிக்க முடியும். ஒரு பொது மருத்துவர் 10 நோயாளிக்கு சிகிச்சை செய்து பெறும் கட்டணத்தை ஒரு பல் மருத்துவர் ஒரு நோயாளிக்கு சிகிச்சை செய்து பெற்று விடுவார். அன்றைய தேதியில் பல் மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கையில் குறைவு. எனவே பல் மருத்துவர்களும் குறைவு. இன்று நிலைமை அப்படியில்லை. நிறைய பல் மருத்துவர்கள் இருக்கிறார்கள். பல் மருத்துவ சிகிச்சைக்கு மிக அதிகமாக செலவாகிறது.
2014ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றதும் நாடெங்கும் ‘’ஜன் ஔஷதி மருந்துக் கடைகள்’’ தொடங்கப்பட்டன. ஃபார்மா நிறுவனங்களும் அலோபதி மருத்துவர்களும் கூட்டு சேர்ந்து தங்கள் கையில் வைத்திருந்த ‘’ஃபார்மாசூட்டிகல்’’ துறையில் ‘’ஜன் ஔஷதி’’ ஜென்ரிக் மருந்துகள் பெரும் தாக்கத்தை உண்டாக்கின. ஜன் ஔஷதி மையங்களில் ஆண்டுக்கு ரூ.1500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. அதன் அர்த்தம் என்னவெனில் தோராயமாக ரூ.6000 கோடி பொதுமக்களின் சேமிப்பு காக்கப்பட்டிருக்கிறது என்பதே. வெளி மார்க்கெட்டில் 400 சதவீதத்திலிருந்து 600 சதவீதம் வரை லாபம் வைத்து விற்கப்படும் மருந்துகள் நியாயமான விலையில் மக்களுக்குக் கிடைக்கின்றன.
நம் நாட்டில் 800 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்துக்கு ஒரு பல் மருத்துவ மையம் என்னும் அடிப்படையில் 800 மையங்களை நாடெங்கும் ஜன் ஔஷதியின் தொடர்ச்சியாக மத்திய அரசு தொடங்கலாம். சாமானிய மக்களுக்கு சகாயமான கட்டணத்தில் பல் சிகிச்சை கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யலாம். மாத ஊதியத்துக்கு பல் மருத்துவர்களை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜன் ஔஷதி கேந்திரங்கள் இயங்கும் முறைக்கு சமமான இயங்குமுறையை பின்பற்றிக் கொள்ளலாம்.