பெருவெற்றியைப் பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கும் தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் மிகச் செழிப்பான நாடுகளில் முதன்மையானதாகவும் கல்வி, பண்பாடு ஆகியவற்றில் சிறப்புற்றும் இருந்த நம் நாட்டை நம் நாட்டின் பொருளாதாரத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இரண்டு நூற்றாண்டுகள் சுரண்டியது. பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சியாலும் நம் நாட்டுக்குப் பொருத்தமற்ற வரி விதிப்பு முறைகளாலும் நம் நாடு கொடும் பஞ்சங்களுக்கு உள்ளானது. கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்தில் மடிந்தனர். பஞ்சமும் நோயும் நம் நாட்டை வாட்டி வதைத்தன.அப்போது ’’வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற’’ தேசமாக நம் தேசம் இருந்தது என்கிறான் பாரதி.இந்திய தேசிய இயக்கம் பிரிட்டிஷாருக்கு எதிரான தன் போரை பலவிதங்களிலும் முன்னெடுத்தது. பால கங்காதர திலகர், ரவீந்திரநாத் தாகூர், லாலா லஜ்பத் ராய், அரவிந்த கோஷ், கோபால கிருஷ்ண கோகலே, மகாத்மா காந்தி, ராஜாஜி, வல்லபாய் படேல், ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர், ஜெயபிரகாஷ் நாராயணன் என பல தேசியத் தலைவர்கள் தங்கள் முழு வாழ்நாளையும் நாட்டின் சுதந்திரத்துக்காக அர்ப்பணித்தனர். இந்திய நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் விஷ விதைகளைத் தூவ நினைத்த பிரிட்டிஷார் மதத்தின் பெயரால் நம் நாட்டைத் துண்டாடி 20,00,000 மக்கள் சாவுக்குக் காரணமாகி மதக்கலவரங்களால் குருதியில் மிதக்கும் தேசத்தின் நிர்வாகத்தை அளித்து விட்டுச் சென்றனர். இந்திய ஜனநாயகம் தன்னை மெல்ல நிலைநிறுத்திக் கொண்டது. மெல்ல செயல்படத் துவங்கியது. பேரறிஞரும் பெரும் அறிவுஜீவியுமான டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் நமக்கான அரசியல் சாசனத்தையும் நமக்கான அரசியல் சட்டத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். அந்த அரசியல் சாசனமும் அரசியல் சட்டமுமே சாமானிய மக்களுக்கு அரசியல் அதிகாரத்தைத் திறந்து வைத்தது. இந்த நாட்டின் குடிமகனாயிருக்கும் 21 வயதான எந்த குடிமகனும் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட முடியும் என்னும் வாய்ப்பை வழங்கியது. சாமானியர்களுக்கு இந்திய அரசியலமைப்பே அதிகாரத்துக்கான உரிமையை வழங்குகிறது.
மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களே, இன்று நீங்கள் தமிழக முதல்வராக பதவியேற்றிருக்கும் இந்த தினத்தில் இந்தக் கணத்தில் உலகில் இன்னும் 60 சதவீத மக்கள் ஜனநாயக ஆட்சிக்குள் இன்னும் வரவில்லை. சர்வாதிகாரத்தாலும் மன்னராட்சி முறையாலும் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய உலக மக்கள் தொகை தோராயமாக 700 கோடி என்றால் அதில் 420 கோடி மக்கள் இன்னும் ஜனநாயக ஆட்சி முறைக்குள் வரவில்லை. சீனாவில் ஜனநாயகம் இல்லை. ருஷ்யாவில் ஜனநாயகம் இல்லை. அரேபியாவில் அரபு நாடுகளில் ஜனநாயகம் இல்லை. இன்னும் பலப்பல நாடுகள். நாம் - இந்தியா - இந்தியர்கள் ஜனநாயகத்துக்குள் இருக்கிறோம். ஜனநாயகம் தன் பிரஜைகளுக்கு பூரணமான கருத்து சுதந்திரம் அளிக்கிறது. இந்திய ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளும் கருத்துப் பூசல்களும் கொண்ட பல குரல்கள் ஒலிப்பது இயல்பானது. எனினும் இந்திய ஜனநாயகத்துக்குள் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய ஜனநாயக அமைப்புகளை மதிக்க பாதுகாக்க கடமை இருக்கிறது. குடியரசுத் தலைவர் மாளிகை, முப்படைகள், பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம், மத்திய அரசு, ஆளுநர் மாளிகை ,மாநில சட்டமன்றம் என ஒவ்வொன்றுமே இந்திய ஜனநாயகத்தின் உறுப்புகள். அவை ஜனநாயக அமைப்புகள் என்பதால் மதிப்புக்கு உரியவை. உரிய மதிப்பளிக்கப்பட வேண்டியவை. கடந்த 5 ஆண்டுளாக ஆண்ட கட்சி ஆளுநர் மாளிகையையும் தமிழக ஆளுநரையும் அவமதித்தது. கனம் தமிழக ஆளுநரை சட்டசபைக்குள்ளேயே அவமதித்தது. அத்தகைய நிகழ்வுகள் ஒரு தனி மனிதருக்கு நிகழ்ந்த அவமதிப்புகள் அல்ல ; ஜனநாயகத்துக்கு நிகழ்ந்த அவமதிப்புகள். ஜோசஃப் விஜய் சர்க்கார் ஒரு ஜனநாயக அமைப்பு ; அந்த அமைப்பு நாட்டின் பிற ஜனநாயக அமைப்புகளுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்பதே நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ராஜாஜியும் காமராஜரும் அண்ணாதுரையும் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் மற்றும் சிலரும் வகித்த பொறுப்பினை இன்று நீங்கள் ஏற்றிருக்கிறீர்கள். ராஜாஜி ஒரு மகத்தான மனிதர். கூர்மதிநுட்பம் வாய்க்கப் பெற்றவர். தன் வாழ்நாள் முழுவதும் ஒரு துறவியைப் போல வாழ்ந்தவர். நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தம் சொந்த குழந்தைகள் போல் எண்ணியவர். மகாத்மா காந்தியால் தன் மன்சாட்சி எனக் கூறப்பட்டவர். அவர் பதவி வகித்ததால் தமிழக முதல்வர் நாற்காலி பெருமை பெற்றது. அவர் வகிக்காத பதவி இல்லை . சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் - ஜெனரல், ஆளுநர் ஆகிய பதவிகளில் இருந்தவர் அவர். சாமானியக் குடும்பத்தில் பிறந்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்தவர் காமராஜர். தமிழகக் கல்வியில் பெரும் புரட்சியை நிகழ்த்திக் காட்டியவர். கோடானுகோடி ஏழை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் தொழிற்கல்விக்கு அவர் ஆற்றிய பங்களிப்பே இன்று தமிழகம் தொழில்நுட்ப பணிகளில் சிறந்து விளங்குவதற்கான காரணம். முதலமைச்சராக இருக்கும் போது மத்திய அரசுடன் இணக்கமான உறவைப் பராமரிக்க வேண்டும் என்னும் புரிதல் கொண்டவர் கருணாநிதி. அவரது நிர்வாக முறையின் சிறப்பான அம்சங்களில் முதன்மையான விஷயம் அது. ஒரு கருத்தை கொள்கையை எதிர்ப்பது என்பதும் ஒரு ஜனநாயக அமைப்பை எதிர்ப்பது என்பதும் எத்தனை வேறுபாடுகள் கொண்டவை என்பதை மிக நன்றாக உணர்ந்தவர் கருணாநிதி. ஐ ஏ எஸ் அதிகாரிகள் வியந்து நோக்கும் மொழித்திறனும் முடிவெடுக்கும் திறனும் கொண்டவர் ஜெயலலிதா. மாநிலத்தின் அன்றாட தினங்களின் சட்டம் ஒழுங்கை சிறப்பாகப் பராமரித்தது அவரது சிறப்பியல்பு. கருணாநிதி ஜெயலலிதா ஆகியோர் 1989- 2016 வரை ஆண்டிருக்கின்றனர். அந்த காலகட்டத்தில் தமிழக அரசு தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் இல்லை என்பதை மிக உறுதியாகப் பராமரித்தது. ஜெயலலிதா கருணாநிதி இருவருக்குமே போதைப் பொருளை தமிழகத்தில் அனுமதிக்காத பெருமை சென்று சேரும்.
தேசியவாதக் கொள்கை கொண்ட இந்திய தேசிய காங்கிரஸை 1967ம் ஆண்டு தேர்தலில் தோற்கடித்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது. அப்போது தொடங்கி இந்த ஆண்டு வரை திமுக அதிமுக என்னும் இரு திராவிடக் கட்சிகளே தமிழகத்தை ஆண்டுள்ளன.60 ஆண்டுகளுக்குப் பின்னால் முதல் முறையாக இரு திராவிடக் கட்சிகளை வீழ்த்தி தங்கள் அரசு அமைந்துள்ளது. குறியீட்டுரீதியில் தமிழக வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்திய மரபு காலத்தை ஒரு சக்கரமாக உருவகிக்கிறது. ஒவ்வொரு அறுபது ஆண்டு காலத்தையும் ஒரு சுழற்சியின் முடிவாகக் கொண்டு ஒரு புதிய சுழற்சியின் துவக்கத்தை அறிவிக்கிறது. இந்தியர்கள் - தமிழ் மக்கள் அதனால் தான் 60 வயது நிறைவதை விழாவாகக் கொண்டாடுகிறார்கள். திராவிடக் கட்சிகள் பதவிக்கு வந்த ஆண்டு ‘’பராபவ’’ ஆண்டு. திராவிடக் கட்சிகள் இரண்டும் வீழ்த்தப்பட்டிருக்கும் ஆண்டும் ‘’பராபவ’’ ஆண்டே.
60 ஆண்டுகள் ஒன்றையொன்று எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருந்த திராவிடக் கட்சிகள் தங்களைப் பதவிக்கு வர விடாமல் தடுக்க வேண்டும் என்னும் ஒற்றை நோக்கத்துக்காக தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயன்றதை தமிழகம் கடந்த 5 நாட்களாகப் பார்த்துக் கொண்டிருந்தது. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்ப்பட்ட போது கூட தமிழகத்தின் இரு திராவிடக் கட்சிகளும் இணைந்து செயல்பட முனைந்ததில்லை என்பதை தமிழ் மக்கள் அறிந்தார்கள். தங்கள் பதவியேற்புக்குள்ளாகவே இரு திராவிடக் கட்சிகளின் சுயநல அரசியல் தமிழ் மக்களிடம் அம்பலமானது.
இந்திய ஜனநாயகத்தில் மாநில அமைச்சரின் பணி என்பதே மிகவும் நெருக்கடியானது. குறைந்தபட்சம் காலை 7 மணியிலிருந்து இரவு 11 மணி வரை நீள்வது. முதலமைச்சரின் நாள் காலை 5 மணிக்குத் துவங்கி இரவு 12 மணி வரை நீள்வது. அதிகாரிகளுடனான சந்திப்புகள், விவாதங்கள், ஊடகங்கள், சட்டசபை என பல அம்சங்களைக் கொண்டது. குடிமக்கள் 8 கோடி பேருக்கும் ஒரு கோரிக்கை இருந்தால் கூட 8 கோடி கோரிக்கைகளை நிறைவேற்ற எவராலும் இயலாது. ஓர் இந்தியக் குடிமகனாக - ஒரு சாமானியனாக - ஜோசஃப் விஜய் சர்க்காரிடம் எனது எதிர்பார்ப்பு என்ன என்பதை முன்வைக்கிறேன். இவை கோடிக்கணக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் கூட.
ஜோசஃப் விஜய் சர்க்காரிடம் தமிழக மக்கள் எதிர்பார்ப்பது
(1) தமிழக ஆண்களில் 90 சதவீதத்துக்கும் மேலே கடந்த 20 ஆண்டுகளில் திராவிடக் கட்சிகளின் டாஸ்மாக் மதுபான விற்பனையால் குடி அடிமைகள் ஆகி விட்டனர். எனவே முழு மதுவிலக்கு உடனடியாக சாத்தியமில்லை எனினும் இப்போது இருக்கும் 90 சதவீத டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். இன்று தமிழக மாவட்டங்கள் அளவில் சிறியவையாகி விட்டன. மாவட்டத்துக்கு ஒன்று அல்லது இரண்டு மதுக்கடை என்னும் அளவில் இருந்தால் போதுமானது.
கூலித் தொழிலாளர்கள் பலரிடம் பேசும் போது அவர்கள் கூறி இந்த விஷயத்தைக் கேட்டிருக்கிறேன். அதாவது காலை எழுந்ததும் ஒருவர் கூலி வேலைக்குப் புறப்படுகிறார் என்றால் கடைத்தெரு சென்றால் அங்கே ஒரு மதுக்கடை இருக்கும். அந்தக் கடையைக் கண்டவுடன் மது அருந்த வேண்டும் என்னும் உடல் கொடுக்கும் அழித்தமும் மன அழுத்தமும் உண்டாகும். அதைக் கஷ்டப்பட்டு கடந்து சென்றால் அடுத்த 500 மீட்டரில் அடுத்த டாஸ்மாக் கடை இருக்கும். உடல் மன அழுத்தம் மேலும் அதிகமாகும். அதையும் கடந்து 500 மீட்டர் சென்றால் மூன்றாவதாக இருக்கும் டாஸ்மாக் கடையில் உடலும் மனமும் மதுவை நோக்கிச் சென்று விடும். தாங்களே காலையில் குடிக்க நினைப்பதில்லை என்றாலும் ஒரு ஊரில் பல கடைகள் இருப்பதால் இப்படி ஆகி விடுகிறது. கடை தூரமாக இருந்தால் நாங்கள் தினமும் குடிப்பது நிச்சயம் குறையும் என்பார்கள். மதுபானம் எப்போதாவது அருந்தும் எங்களை டாஸ்மாக் தினசரி குடிகாரர்கள் ஆக்குகிறது எனக் கூறுவர்.
இந்த சம்பவம் குறித்து நீங்கள் கேட்டிருக்கலாம். அதாவது , 1971ம் ஆண்டு மகாத்மா காந்தியால் தனது மனசாட்சி எனக் கூறப்பட்டவரும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும் தமிழக முதல்வராயிருந்தவருமான ராஜாஜி அப்போதைய முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு கொட்டும் மழையில் சென்று கருணாநிதியிடம் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு ‘’ நீங்கள் என்னை விட வயதில் இளையவர் என்றால் தங்கள் காலைப் பிடித்துக் கேட்டிருப்பேன் ; தமிழக மக்களை மதுவுக்குள் தள்ளாதீர்கள். மதுவிலக்கை ரத்து செய்யாதீர்கள்’’ எனக் கேட்டார்.
(2) போதைப் பொருள் பழக்கத்துக்கு தமிழகத்தின் பள்ளி மாணவர்களும் மாணவிகளும் கல்லூரி மாணவ மாணவியரும் உள்ளாகி உள்ளனர். போதைப் பொருட்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என முன்னர் இருந்த நிலை மீண்டும் வர வேண்டும். அதற்கான முழு அதிகாரம் தமிழகக் காவல்துறைக்கு அளிக்கப்பட வேண்டும்.
(3) பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அரசுத்துறைகள் என்பவை வாகனப் பதிவு மற்றும் சாலைப் போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை, பத்திரப் பதிவுத் துறை ஆகியவையே ஆகும். குடிமக்கள் அரசின் மீதும் ஜனநாயகம் மீதும் நம்பிக்கை இழக்கக் காரணம் இந்த 3 துறைகளில் நிலவும் லஞ்சம் காரணமாகவே. வாகனப் பதிவு , வருவாய்த்துறை, பத்திரப்பதிவு ஆகிய 3 துறைகளில் முன்னர் நூற்றுக்கணக்கில் வாங்கப்பட்டிருந்த லஞ்சம் இப்போது லட்சக்கணக்கில் சென்று விட்டது. இந்த 3 துறைகள் அதிகம் சாமானிய குடிமக்கள் தொடர்புடையது. இந்த 3 துறைகளில் நிலவும் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும்.
இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சியில் ‘’வந்தே மாதரம்’’ பாடப்பட்டதைக் கண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தங்கள் கட்சியின் கொள்கைத் தலைவர்களான அஞ்சலை அம்மாளும் காமராஜரும் ஓயாது முழங்கிய வீர முழக்கமாகும் அது. தங்கள் கட்சியின் இன்னொரு கொள்கைத் தலைவரான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரால் இந்திய அரசியல் நிர்ணய சபையில் தேசிய கீதத்துக்குச் சமமாக மதிக்கப்பட வேண்டும் என அங்கீகரிக்கப்பட்ட தேசிய பாடலாகும் ’’வந்தே மாதரம்’’. அப்பாடல் பாடப்பட்ட போது அதனுடன் சேர்ந்து ஆளுநர் பாடியதையும் ஆளுநரின் பாதுகாவலரான ராணுவ வீரர் பாடியதையும் காங்கிரஸ் கட்சியின் பிரவீண் சக்கரவர்த்தி பாடியதையும் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை பாடியதையும் பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாடியதையும் காணொளிகளில் காண நேர்ந்தது மகிழ்ச்சி அளித்தது.
ஜெய்ஹிந்த்!
தங்கள் உண்மையுள்ள,
பிரபு
இடம் : மயிலாடுதுறை
நாள் : 10.05.2026