பிரபு மயிலாடுதுறை
Tuesday, 15 September 2026
காவியகர்த்தா (மறுபிரசுரம்)
Friday, 11 September 2026
இன்னும் சற்று தூரம் (மறுபிரசுரம்)
நாம் சென்று சேர வேண்டிய இடம் வந்து விடும்
பாட்டி வீடு
மாமா வீடு
சித்தி வீடு
அருண் இருப்பான்
செல்வி இருப்பாள்
லீவுக்கு ஊருக்கு வந்த பசங்க இருப்பாங்க
தீமிதி
திருவிழா
பலூன் வாங்கித் தரேன்
பஞ்சு மிட்டாய் வாங்கித் தரேன்
இன்னும் கொஞ்ச நாள்ல
நம்ம கஷ்டம்லாம் சரியாயிடும்
நம்பிக்கையின்மையிலிருந்து
நம்பிக்கைக்கு
அம்மாக்கள்
நடந்து கொண்டேயிருக்கிறார்கள்
Thursday, 10 September 2026
உயிரும் உறவும்
நேற்று இரவு எனது நெருங்கிய உறவினர் ஒருவர் மூர்ச்சையானார். எனக்குத் தகவல் தெரிந்து உடன் அங்கு சென்றேன். ஒரு ஆம்புலன்ஸ் வரச் சொல்லி முதலுதவிக்கு ஒரு மருத்துவமனைக்குச் சென்று விட வேண்டும் என முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து மருத்துவமனைக்கு மூர்ச்சையானவரை அழைத்துச் சென்றேன். மூர்ச்சையாயிருந்தவர் உடலின் சில பகுதிகளைக் காணும் போது அவர் மூளை நரம்புமண்டலம் தொடர்பான பாதிப்புக்கு ஆளாகியிருக்கக் கூடும் என்று எனக்குத் தோன்றியது ; அதனால்தான் அவரை எக்காரணம் கொண்டு நடத்தி அழைத்துச் செல்லக் கூடாது என முடிவு செய்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்து ஆம்புலன்ஸில் இருந்த நகரும் படுக்கையில் அவரை அவர் படுக்கையில் படுத்திருந்த வண்ணமே மாற்றி ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர் முதல் எண்ணமாக மூளை நரம்புமண்டல பாதிப்பு எனக் கணித்து மூளையில் இரத்தக்கட்டு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதினார். ஆரம்பகட்ட முதல் உதவி சிகிச்சைகள் தரப்பட்டன. அங்கிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள ஊரின் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தலைப்பகுதியை சி டி ஸ்கேன் செய்து பார்த்தனர். மூளையில் இரத்தக்கட்டு இருப்பதை அறிந்தனர். சில மணி நேரங்களில் தலைப்பகுதியில் ஒரு மண்டையோட்டைத் துளைத்து ஓர் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்கு சில மணி நேரங்களுக்குப் பின் உறவினர் உடலில் அசைவுகள் தென்படலாயின. அவர் உடலை அசைக்கத் தொடங்கினார். அவர் விழிகளைத் திறக்க முயன்றார். சுற்றி இருப்பவர் பேசுவதை அவர் புரிந்து கொள்கிறார் என்பதையும் அவர் முகம் அவர் மனம் அதை உள்வாங்கிக் கொள்வதையும் காட்டுகிறது. அறுவைசிகிச்சைக்குப் பின் மீண்டும் ஒரு ஸ்கேன் செய்யப்பட்டது. ஸ்கேன் அறிக்கை அடிப்படையில் இன்னொரு அறுவைசிகிச்சை தேவைப்படுமா அல்லது மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்தால் போதுமா என்பது முடிவு செய்யப்படும்.
Thursday, 3 September 2026
தெருவிளக்கு - முதல் மேல்முறையீடு
Tuesday, 1 September 2026
வருவாய் கோட்டாட்சியர் பதில்
இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஒரு கடிதமும் ஒரு ஆர் டி ஐ பதிலும் வந்திருந்தன. கடிதம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பப்பட்டு அதன் நகல் எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. ***** ஊரின் கிராம சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 01.04.2026 - 31.07.2026 வரையிலான வரவு செலவு விபரங்களில் தெருவிளக்கு பழுது பார்த்தல் என்னும் வகையில் ரூ.33,000 செலவு செய்ததாக கூறியிருந்தார்கள். அவ்வாறெனில் ஆண்டுக்கு அந்த ஊராட்சி தெருவிளக்கு பராமரிப்புக்கு ரூ. 1,00,000 செலவழிக்கிறது என்று பொருள். இந்த செலவை மறுதணிக்கை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தேன். வருவாய் கோட்டாட்சியர் அதனை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பியிருக்கிறார். மேற்படி செலவின் ரசீதுகளை அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரியிருந்தேன். அந்த கோரிக்கையையும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பியிருந்தார்.
தெருவிளக்கும் தமிழக அரசியலும் (மறுபிரசுரம்)
தமிழக அரசியலுக்கும் தெருவிளக்குகளுக்கும் மிக நெருங்கிய பொருத்தம் இருக்கிறது. தமிழக கிராமங்களில் குழல் விளக்குகள் எனப்படும் டியூப் லைட்டுகள் தெருவிளக்குகளாக இருந்தன. அதற்கு முன் குண்டு பல்புகள் தெருவிளக்குகளாக இருந்தன. இரவு நேரத்தில் மக்கள் நடமாட தெருக்களில் தெருவிளக்குகள் ஒளிர்வது அவசியம் என்பதால் தெருவிளக்கு ஓர் அத்தியாவசியத் தேவை. ஊராட்சிகள் தெருவிளக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்.
தமிழகத்தில் 2006ம் ஆண்டு தேர்தல் முடிவுகளின் படி 93 இடங்களில் வெற்றி பெற்றிருந்த திமுக காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவோடு ஒரு மைனாரிட்டி அரசை அமைத்து நடத்தியது. மேற்படி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தந்ததால் அந்த மைனாரிட்டி அரசு 2006 - 2011 வரை நீடித்தது. அந்தக் காலகட்டத்தில் மைனாரிட்டி திமுக அரசு இந்தோனேஷியாவிலிருந்து தரக்குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்து அனல் மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தியதால் மின்சார உற்பத்தி குறைந்தது. தமிழகம் மிக அதிக மின்வெட்டைச் சந்தித்தது. ஒரு நாளைக்கு காலை 2 மணி நேரம் மாலை 2 மணி நேரம் என 4 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் ஆனது. அப்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ’’ஆற்காடு’’ வீராசாமி.
அந்தக் காலகட்டத்தில் இன்னொரு விஷயமும் நடந்தது. தமிழக மின்சார அமைச்சர் ‘’ஆற்காடு’’ வீராசாமி தமிழகத்தின் எல்லா ஊராட்சிகளிலும் உள்ள தெருவிளக்குகளை சோடிய ஆவி விளக்குகளாகவும் பாதரச ஆவி விளக்குகளாகவும் மாற்றும் திட்டத்துக்கு ஒப்புதல் தந்தார். சாதாரண குழல் விளக்கு அமைக்க ரூ.200 செலவாகிறது என்றால் சோடிய ஆவி விளக்குகளும் பாதரச ஆவி விளக்குகளும் அமைக்க குறைந்தபட்சம் ரூ.5000 செலவாகும். தமிழகத்தில் 12,500 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 200 விளக்குகள் அமைத்தால் கூட 25,00,000 விளக்குகள் அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.5000 செலவாகும் என்றால் அரசியல்வாதிகள் அதற்கு ரூ.8000 செலவாகும் என கணக்கு எழுதுவார்கள் . ஒரு விளக்குக்கு ரூ.3000 ஊழல் எனில் 25,00,000 விளக்குகளுக்கு ரூ.750 கோடி ஊழல் செய்து வெளியே எடுத்தார்கள். இது குறைந்தபட்ச கணக்கீடு. நிகழ்ந்தது இன்னும் பல மடங்கு இருக்கும்.
இதில் இன்னொரு எதிர்பாராத விஷயம் நடந்தது. குழல் விளக்குகள் எரிந்தால் ஆகும் மின்சாரப் பயன்பாட்டை விட சோடிய ஆவி விளக்குகள் எரிந்தால் ஆகும் மின்சாரப் பயன்பாடு மிக அதிகம். பல மடங்கு யூனிட் மின்சாரம் அதற்கு தேவைப்பட்டது. தரமற்ற நிலக்கரியால் மின் உற்பத்தி குறைந்த நிலையில் சோடிய பாதரச ஆவி விளக்குகளும் கூடுதல் மின்சாரம் எடுத்துக் கொண்டன. இவை அத்தனையும் தினம் 4 மணி நேர மின்வெட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தன. பல ஊராட்சிகள் இந்த சோடிய பாதரச ஆவி விளக்குகளால் மின்சார வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய மின் கட்டணம் செலுத்த இயலாமல் ஆனது. கோடிக்கணக்கான ரூபாய் மின்வாரியத்துக்கு ஊராட்சிகளின் நிலுவைத்தொகை ஆனது.
2014ம் ஆண்டு நிகழ்ந்த நிகழ்வையும் குறிப்பிடுகிறேன்.
வருவாய் கோட்டாட்சியருக்கு ஒரு கடிதம் (மறுபிரசுரம்)
வருவாய் கோட்டாட்சியருக்கு ஒரு ஆர் டி ஐ மனு (மறுபிரசுரம்)
கிராம சபைக் கூட்டம் ( மறுபிரசுரம்)
இன்று ஊருக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்துக்குச் செல்ல வேண்டும் என் காலையிலிருந்தே எண்ணம் கொண்டிருந்தேன். தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் கிராம அளவில் சூழல் எவ்விதம் இருக்கிறது என்பதை அறிய கிராம சபைக் கூட்டம் உதவும் என எண்ணினேன்.
தமிழக அரசியல் என்பது ஒரு மூடுமந்திரம். என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்குள் எந்த விஷயமும் முடிந்து விடும்.
காலை 10 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்றேன். கூட்டம் 12 மணி அளவில் தொடங்கியது. வருவாய் கோட்டாட்சியர் கூட்டத்துக்கு வருகை புரிந்திருந்தார். மாவட்ட ஆட்சித் தலைவருடன் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்று அது முடிவடைந்த பின் வந்ததால் சற்று தாமதம்.
தமிழக மக்கள் எந்நேரமும் அரசியலையும் அரசையும் குறித்து பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அடிப்படைக் கடமையைச் செய்வதில் சுணக்கம் காட்டுபவர்கள். ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 1000 - 5000 வரை இருக்கும். கிராம சபைக் கூட்டத்துக்கு குறைந்தபட்சம் 50 பேர் வருகை தர வேண்டும். நான் கலந்து கொண்ட கூட்டத்தில் இழுத்துப் பிடித்து 50 பேர் வந்திருந்தனர். 01.04.20226 லிருந்து 31.07.2026 வரை அந்த கிராமத்துக்கு ஆன செலவுகளை ஒரு போஸ்டராக சபை அரங்கில் வைத்திருந்தார்கள். அந்த விபரங்களைக் குறிப்பேட்டில் குறித்துக் கொண்டேன். அங்கிருந்த அரசு ஊழியர் நான் விபரங்களைக் குறித்துக் கொள்வதைப் பார்த்து என்னிடம் நான் யார் என்ற விபரங்களை கேட்டுக் கொண்டார். 120 நாளில் ரூ.4,80,000 செலவு செய்திருக்கின்றனர். ஒரு நாளைக்கு ரூ.4000 செலவாகிறது.
முதற் பார்வையில் தெரு விளக்கு பழுது நீக்கம் ரூ.25,000 எனக் குறிப்பிட்டிருந்தனர். 120 நாளில் ரூ.25,000 செலவு எனில் ஒரு நாளைக்கு ரூ.200 செலவாகிறது என்று பொருள். அந்த ஊரில் தினம் ஒரு மின்விளக்கு மாற்றினால் தான் அந்த செலவு ஆகும். தினம் ஒரு விளக்கு பழுதடைய சாத்தியம் இல்லை.
தெருவிளக்கு பொருள் வாங்கியது என ரூ.8000 செலவு. முன்னர் குறிப்பிட்டது தெருவிளக்கு பழுது நீக்க. இப்போது பொருள் வாங்கியது என்பதற்காக. ரூ.8000க்கு வாங்கிய பொருளை ரூ.25,000 செலவு செய்து பொருத்தினார்களா என்னும் கேள்வி எழுகிறது.
கை பம்ப் வாங்க என ரூ.6000 செலவு. கை பம்ப் பழுது நீக்க என ரூ.8000 செலவு.
தெரு விளக்கு, கை பம்ப் செலவை தணிக்கை செய்ய வேண்டும் எனக் கேட்கலாம் என உள்ளேன்.
அரசு மக்களை இணைக்க வேண்டும். மக்கள் இணைந்தால் மகத்தான மாற்றங்கள் நடக்கும்.