Monday, 27 April 2026

சிறப்பான வழிமுறை

தமிழகத்தில் ஒரு ஆலயம் உள்ளது. 

அந்த ஆலயத்துக்குச் செல்ல முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும். பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆலயத்துக்கு எப்போது வர வேண்டும் என்பதை அவர்கள் தெரிவிப்பார்கள். அவர்கள் தெரிவிக்கும் பொழுதில் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். 

அந்த ஆலயத்துக்குச் செல்ல பதிவு செய்துள்ளேன். 

அவர்கள் செயல்படுத்தும் இந்த முறை சிறப்பான வழிமுறைகளில் ஒன்று என எனக்குத் தோன்றியது.  

Sunday, 26 April 2026

சலனங்களும் அலைகளும்

சில வாரங்களுக்கு முன், நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அடுத்தடுத்து சந்திப்பதற்கு சில சந்தர்ப்பங்கள் வாய்த்தன. அவர் பல ஆண்டுகளாக ஒரு பள்ளியை நடத்துகிறார். அதில் இப்போதிருக்கும் 300 என்ற மாணவர் எண்ணிக்கையை 1200 என ஆக்குங்கள் என்று சொன்னேன். எனது எண்ணங்களை முன்வைத்தேன். பண்டைய இந்தியக் கல்விமுறையிலிருந்து இன்றைக்கு நிலவும் கல்வி முறை வரை பல விஷயங்களை அணுகி எடுத்துக்காட்டி எனது அபிப்ராயங்களையும் எண்ணங்களையும் அவரிடம் சொன்னேன். எனது தளத்தில் எழுதினேன். எழுதியவற்றை அவரும் வாசித்தார். குழப்புதல் (நகைச்சுவைக் கட்டுரை) யிலிருந்து அதிர்ச்சி அடைதல் என்னும் பதிவு வரைக்கும் கணிசமாக எழுதினேன். ஒரு கல்வி நிறுவனம் தொடங்குவது குறித்தும் நடத்துவது குறித்தும் என்னால் இப்போது ஒரு மனச் சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. இவை இவற்றின் இலக்கை எட்டினவா? நண்பர் பள்ளியை மேலும் விரிவுபடுத்துவரா ? இந்த இரண்டும் முக்கியமான கேள்விகள். இவற்றுக்கான பதில் நண்பரின் தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தும் எதிர்கால முடிவுகளைப் பொறுத்தும் அமையும். என்னால் இயன்ற அளவில் ஒரு துவக்கச் சித்திரத்தை உருவாக்கியுள்ளேன். அவர் தொடர்ந்து சிந்தித்து இதனுள் உள் நுழைந்தால் திட்டமிடுதலில் மேலும் அவருக்கு உதவ முடியும்.  

இன்று இந்த விஷயத்தின் மைய முடிச்சு ‘’தரக் கல்வி’’க்கும் ‘’பெருந்திரள் கல்வி’’க்கும் இடையே இருக்கும் வேறுபாடு என்பதை உணர்ந்தேன். அது குறித்து எழுத வேண்டும் என எண்ணினேன். மழை விட்டும் தூவானம் விடவில்லை. 

ஒன்று : நான்கு

 














 

அதிர்ச்சி அடைதல்

எண்கள் எப்போதும் சுவாரசியமானவை ; சமயத்தில் அதிர்ச்சி அளிப்பவையும் கூட. தமிழ் மூதாட்டி ஔவை ‘’எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’’ என்றாள். மானுட வரலாற்றில் மனிதர்கள் எண்களை கற்பனையில் உருவாக்கிக் கொண்டதே உலகியல் ஞானத்தின் அடிப்படையாகவும் துவக்கமாகவும் இருந்திருக்கக் கூடும்.  

நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை நேற்று எழுதினேன். அதாவது தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் பட்ஜெட்டைக் கொண்டு ஒவ்வொரு தமிழக மாணவனுக்கும் உலகின் அதி உயர் கல்வியை அளிக்க முடியும் என. இதனைக் கூறியவர் மிகவும் நம்பகத்துக்குரியவர். எனினும் இன்று காலை நான் அதனை நேரடியாக சோதித்துப் பார்க்க முடிவு செய்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் இணைய தளத்துக்குச் சென்று தமிழகத்தில் 1- 12 வகுப்பு படிக்கும் மாணவர் எண்ணிக்கை என்ன என்று பார்த்தேன். சுமார் 52,00,000 பேர். பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் ரூ.46,000 கோடி. ஒரு மாணவனுக்குத் தோராயமாக ரூ.90,000 செலவு செய்யப்படுகிறது. 

அதாவது, இப்படி கற்பனை செய்து கொள்வோம். ஒரு மாணவன் ஒன்றாம் வகுப்பு சேர வருகிறான். அவன் பெற்றோருக்கு அரசு ரூ.90,000 கொடுத்து நீங்கள் உங்கள் குழந்தையின் கல்வியை நீங்களே கொடுங்கள் எனக் கூறினால் அவர்கள் ஏதேனும் தனியார் பள்ளியில் சேர்ப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் அந்த மாணவனுக்கு ரூ.90,000 அரசு கொடுக்கும். 12 ஆண்டுகளில் அந்த மாணவனுக்கு ரூ.10,80,000 அளிக்கப்பட்டிருக்கும். அவன் கல்வியே பயிலவில்லை என்றாலும் 17 வயதில் அவன் கையில் ரூ.10,80,000 இருக்கும். 

தமிழகத்தில் 12 ஆண்டுகளாக பள்ளியில் பள்ளிக்கல்வியைப் பயின்ற மாணவனால் 300 வார்த்தைகள் தமிழில் பிழையில்லாமல் ஒரு பத்தி எழுத முடியாது என்னும் நிலை இருக்கும் நிலையில் 12 ஆண்டுகள் தன்னிடம் பயின்ற மாணவனுக்கு குறைந்தபட்சக் கல்வியைக் கூட அளிக்க முயலாத உறுதி செய்ய முடியாத மாநில அரசு ஒவ்வொரு மாணவனுக்கும் ரூ.10,80,000 12 ஆண்டுகளில் அளித்து விட்டு நேரடியாக கல்வி அளிக்கும் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது தானே உகந்த செயல்?

Saturday, 25 April 2026

பள்ளிக்கல்வி - எச்சரிக்கை சமிங்ஞைகள்

 நண்பருக்காக ஓர் உத்தேச மதிப்பீட்டை உருவாக்கிய போது எனக்கு அதிர்ச்சி தரத்தக்க அளவில் ஓர் உண்மை புரிந்தது. நண்பரிடம் நிலம் இருக்கிறது. பள்ளி இருக்கிறது. 300 மாணவர்கள் படிக்கும் அப்பள்ளியை 1200 மாணவர்கள் படிக்கும் விதமாக மாற்ற வேண்டும் என்றாலே ரூ.56 கோடி தேவைப்படுகிறது. நிலம் இல்லாத ஒருவர் புதிதாக பள்ளி துவங்க விரும்பினால் மேலும் ரூ.10 கோடி தேவைப்படலாம். அதாவது 1200 மாணவர்கள் பயிலும் விதமாக ஒரு பள்ளி துவங்க குறைந்தபட்சம் ரூ.60 கோடி அளவில் முதலீடு தேவை. 

இன்றைய சூழ்நிலையில் வணிகர்களிடமும் அரசியல்வாதிகளிடமும் மட்டுமே இவ்வளவு முதலீடு எளிதில் இருக்கும். வணிகர்களுக்கு எதிலும் ஒரு வணிகக் கண்ணோட்டம் கணிசமான அளவில் இருக்கும். தமிழக அரசியல்வாதிகள் ஊழலையும் சுரண்டலையும் மட்டுமே பழகியவர்கள். அரசு நடத்தும் பள்ளிகள் மாநிலமெங்கும் இருக்கின்றன. ஆனால் அரசு ஒவ்வொரு பள்ளியையும் நடத்த செலவு செய்யும் தொகையை மொத்தமாகக் கணக்கிட்டு அதனை பள்ளி மாணவன் ஒவ்வொருவருக்கும் அளித்தால் ரூ.2,00,000 செலுத்தி மிக உயர் தனியார் பள்ளியில் தமிழகத்தின் ஒவ்வொரு மாணவனும் பயில முடியும். அவ்வளவு தொகை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பட்ஜெட். என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் : நீங்கள் சாலையில் நடந்து செல்லும் தமிழகத்தின் எந்த ஒரு மாணவனையும் அழைத்து தமிழிலோ ஆங்கிலத்திலோ 300 வார்த்தைகளில் ஒரு பத்தியை எழுதச் சொன்னால் 10ல் 9 பேருக்கு எழுத வராது. அவர்கள் அதற்கு பயிற்றுவிக்கப்படவில்லை. ஒரு 17 வயது மாணவனால் 300 வார்த்தை கூட பிழையில்லாமல் எழுத வராது என்றால் பள்ளிகள் 12 ஆண்டுகள் பயிற்றுவித்தது என்ன? 

முக்கியமான சமூகப் பிரச்சனையாகும் இது. 

பள்ளி - உத்தேச மதிப்பீடு

நேற்று என்னை ஒரு நண்பர் சந்திக்க வந்தார். அவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் சென்னையில் பணிபுரிகிறார். அவரது மகளுக்கு ஐந்து வயது. முதல் வகுப்பில் படிக்கிறாள். இங்கே ஊரில் அவளது கல்விக்கு வருடத்துக்கு ரூ.70,000 செலவாகிறது என்றும் அத்தொகை சென்னையின் சிறந்த கல்வி நிறுவனங்கள் தம் மாணவர்களிடம் ஆண்டுக்கு நிர்ணயித்திருக்கும் கல்விக் கட்டணத்துக்கு சமமானது என்பதை சென்னையில் விசாரித்து அறிந்ததாகவும் தான் சென்னையில் செலவாகும் அளவு இங்கே ஊரில் செலவு செய்தும் இங்கே அளிக்கப்படும் கல்வியில் தனக்குத் திருப்தியில்லை எனக் கூறி தனது குடும்பத்தை கோயம்புத்தூருக்கு இடம் பெயரச் செய்து விட்டதாகக் கூறினார்.  

கல்வி நிறுவனம் நடத்தும் நண்பருக்கு ஃபோன் செய்து நண்பர் என்னிடம் தெரிவித்த விபரத்தை அவரிடம் கூறி கல்விக்கு நடுத்தர மக்கள் எவ்வளவு மக்கள் முக்கியத்துவம் அளிக்கினனர் என்பதைக் கூறி அவருடைய 300 மாணாக்கர் பள்ளியை 1500 மாணாக்கர் பயிலும் விதமாக மாற்றி அமையுங்கள் என்பதை மேலும் வலியுறுத்திச் சொன்னேன். 

பள்ளி நடத்துவதன் சிரமங்களை அவர் நீண்ட காலம் அனுபவத்திருப்பார். நான் வெளியில் இருப்பவன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் மக்களை மாணவர்களை சிறந்த முறையில் பயிற்றுவிக்கும் ஒரு கல்வி நிலையத்தை நடத்துங்கள் என்பது எனது தனிப்பட்ட கோரிக்கை மட்டுமல்ல ; சமூகத்தின் சார்பாக என்னால் முன்வைக்கப்படும் கோரிக்கை. இந்த கோரிக்கையை முன்வைக்கும் போது சமூகத்தின் பிரதிநிதியாகவே முன்வைக்கிறேன். 

***

இவை பரிசீலனைக்கான குறிப்புகள். இவற்றை முகாந்திரமாக வைத்துக் கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். இவை 1500 மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளியை ஏற்படுத்த விரும்பும் எவருக்கும் அப்பணி குறித்த ஒரு மனச்சட்டகத்தை அளிக்கலாம். 

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை அனைத்துமே அதிகபட்சமான அளவில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. நடைமுறையில் இன்னும் குறைவான தொகை செலவாகும் என்றால் துவங்குபவருக்கு சேமிப்பே. ( ஹாஸ்யம் : நியூட்டன் பூனை வளர்த்தார். தாய்ப்பூனையும் குட்டிப் பூனைகளும் இருந்தன. ஒரு தச்சரை அழைத்து பூனைகள் தங்கும் விதமாக ஒரு பெட்டி செய்யச் சொன்னார். பெரிய பூனை நுழையும் விதத்தில் ஒரு துளையும் குட்டிப் பூனைகள் நுழையும் விதத்தில் இன்னொரு துளையும் அதில் இருக்கட்டும் என நியூட்டன் சொன்னார். தச்சர் நியூட்டனிடம் ‘’சார் ! பெரிய பூனைக்கான துளைக்குள் குட்டிப் பூனைகள் எளிதில் நுழையும் ; அதனால் பெட்டிக்கு ஒரு துளை போதும்’’ என்றார்)

***

எந்தக் கல்வி நிறுவனத்திலும் பணி புரியும் ஆசிரியர்களுக்கு - மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு - சிறப்பான ஊதியம் தரப்பட வேண்டும். ஆசிரியன் எந்த உலகியல் நெருக்கடியும் இல்லாமல் இருந்தால் தான் கற்பித்தல் சிறப்பாக நிகழும். ஒரு ஆசிரியர் எதிரில் 50 மாணவர்கள் இருக்கும் போது கல்வி என்ன சிறப்பைக் கொடுக்கும் என்னும் ஐயத்துக்கு ஆசிரியர் பெறும் ஊதியமே கூட குறியீட்டுரீதியில் ஒரு பதிலாக இருக்க வேண்டும். எனது உத்தேச மதிப்பீட்டில் ஒவ்வொரு பள்ளி ஆசிரியருக்கும் மாதம் ரூ.50,000 என ஊதியம் நிர்ணயித்துள்ளேன். 

***

Friday, 24 April 2026

படைப்பூக்கப் பயிற்சி

எனது ஆசான்களில் ஒருவர் பரிந்துரைத்த படைப்பூக்கப் பயிற்சி ஒன்றை கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்டிருந்தேன். படைப்பூக்க மனநிலையை நேர்கொண்டு காண எனக்கு அந்தப் பயிற்சி வாய்ப்பாக அமைந்தது. நான் மிகவும் தீவிரமாக புழங்கும் வெளியிலும் நான் முழு கவனம் கொண்டிராத விஷயங்களின் முக்கியத்துவத்தைத் தீவிரத்தை உணர எனக்கு அந்தப் பயிற்சி வழிகாட்டியது. என் வாழ்வில் நான் கைக்கொண்டிருப்பது எதனை என்பதையும் எனது பணி என்ன என்பதையும் அது எனக்கு எடுத்துக் காட்டியது. இந்தப் பயிற்சி மூலம் நான் உணர்ந்திருப்பது மிகப் பல. இந்தப் பயிற்சி என்னை இட்டுச் செல்ல வாய்ப்புள்ள தளங்களும் மிகப் பல.  

மகா பிரபஞ்சம்

ஆகப் பெரியது பிரபஞ்சம்
நுண்ணிய சிற்றுயிர்களுக்கு
மகா பிரபஞ்சத்தை அறியும்
மகா பிரபஞ்சத்தை உணரும்
பிரக்ஞையை
கொடுத்திருக்கிறாய்
மாயையும் உள்ளது பேரிருப்பில்
மறைந்திருக்கிறது மாயை
மாயையின் பிடியில் செல்கின்றன
அனேக கோடி வருடங்கள்
பிரக்ஞை விழிக்கையில்
அறியப்படுகிறது மகா பிரபஞ்சம்
உணரப்படுகிறது மகா பிரபஞ்சம் 

நற்பாதை

அம்மா அம்மா அம்மா

எங்கோ பாதை தவறி விட்டேன்
எங்கெங்கோ
நெடுந்தூரம் நெடுநேரம்
சென்று விட்டேன்
சகதிகளால் ஆனது வழி தவறிய பாதை
முட்களால் ஆனது வழி தவறிய பாதை
கூரிய கற்களால் ஆனது வழி தவறிய பாதை
என்னை
நற்பாதைக்குக் கொண்டு வா அம்மா
அந்தப் பாதையில்
நிழல் மரங்கள் இருக்கட்டும்
பூ மரங்கள் இருக்கட்டும்
கனி மரங்கள் இருக்கட்டும்
அந்தப் பாதையில்
தாகம் தீர்க்கும்
நன்னீர் நிலைகள் இருக்கட்டும்
சகபயணிகளாய்
நன்மனிதர்கள் இருக்கட்டும்
என்றும்
யாருக்கும்
எப்போதும்
நற்பாதையின் பயணம்
இனியதாகவே இருக்கட்டும்

அம்மா அம்மா அம்மா 

Wednesday, 22 April 2026

நன்முடிவு

 எனது நண்பர் ஒருவர் அவரது இன்னொரு நண்பரைக் குறித்து சொன்னார். எனக்கு அவர் சொன்ன விஷயம் மிக சுவாரசியமானதாக இருந்தது. அதாவது நண்பரின் நண்பர் அலைபேசி உபயோகத்துக்குள் வரவேயில்லை. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறார் என்றாலும் அவர் அலைபேசி வைத்துக் கொள்ளவில்லை. அதனால் அவர் தொழில் வாழ்வில் சில இடர்கள் உருவாகின்றன என்றாலும் அந்த இடர்களை எதிர்கொண்டு களைகிறாரே அன்றி அலைபேசி வைத்துக் கொள்ளலாமா என எப்போதும் யோசித்ததில்லை அவர் என்றார் என் நண்பர். அந்த முடிவு ஒரு நன்முடிவு என்பது என் அபிப்ராயம்.