Saturday, 4 July 2026

செல்வ நிலையம் : ஒரு மாமனிதனின் கதை (மறுபிரசுரம்)

 இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் மதுரையில் ஒரு மனிதன் பிறக்கிறான். தனது இளம் வயதில் ‘’வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப’’ கப்பலேறி மலேசியா செல்கிறான். பொருள் ஈட்டுகிறான். ஈட்டிய பொருளுடன் ஊருக்கு வந்து விட்டு மீண்டும் மலேசியா செல்கிறான். ஊழின் மாயக்கரம் அவனையும் அவன் உடனிருந்தோரையும் அவன் வாழ்ந்த நாட்டின் மக்களையும் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே அலைக்கழிக்கிறது. தனது வணிக நிறுவனத்தின் உரிமையாளரிடம் கப்பலில் நாடு திரும்ப அனுமதி கேட்கிறான் அந்த மனிதன். உரிமையாளர் அனுமதி அளிக்க மறுக்கிறார். நிகழ்த்த விரும்பிய பயணம் நிகழாமலேயே போகிறது. கப்பலில் பயணிக்காத அந்த மனிதனுக்கு ஊழ் நீண்ட வாழ்நாளை அளிக்க இருந்தது அந்த மனிதனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. ஒரு சில நாட்களில் தெரிய வந்தது. அவன் பயணிக்க இருந்த கப்பல் நடுக்கடலில் ஜப்பான் விமானப்படைத்  தாக்குதலுக்கு ஆளாகி அதில் பயணித்த ஒருவருமே உயிர்பிழைக்கவில்லை. 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ‘’இந்திய தேசிய ராணுவ’’த்தில் தன்னை இணைத்துக் கொண்ட அந்த மனிதனுக்கு நேதாஜியுடன் மிக நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்திய தேசிய ராணுவத்தின் மிக முக்கியமான நிர்வாகப் பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்தித் தருகிறார் அந்த மனிதர். 

உலக அரசியலின் பல்வேறு திருப்பங்களுக்குப் பின் இரண்டாம் உலகப் போர் முடிவடைகிறது. அந்த மனிதர் ஊர் திரும்புகிறார். களங்கமற்ற ஒரு மாவீரனுடன் உடனிருந்தவர். வாழ்வும் சாவும் முட்டி மோதும் படுகளங்களைக் கடந்து வந்தவர். சிவில் வாழ்க்கையில் தன்னை முழுமையாகப் பொருத்திக் கொள்கிறார். 

அவரது வீட்டின் பெயர் ‘’செல்வ நிலையம்’’. ‘’ஸ்ரீநிவாஸம்’’ என்பதனை அவர் செல்வ நிலையம் என தமிழில் பெயரிட்டிருக்கலாம். அவர் வீட்டின் முன்னே இரு வேப்ப மரங்கள். அந்த வேப்ப மரம் நூற்றுக்கணக்கானோருக்கு நிழல் அளிப்பது போல தனது வாழ்வில் பல எளிய மனிதர்களுக்கு நண்பனாகவும் வழிகாட்டியாகவும் ஆசானாகவும் விளங்கியிருக்கிறார் அந்த மனிதர். 

தனது பேரக்குழந்தைகளின் அக உலகில் தனது அன்பின் நீர்மையாலும் அன்பின் உயிர்மையாலும் நிறைகிறார் அந்த மனிதர். தனது எல்லா பேரக் குழந்தைகளுக்கும் மொழிகளும் கணிதமும் அறிவியலும் கற்பிக்கும் ஆசிரியராகவும் அவர்களுக்கு யோகத்தின் துவக்க நிலைகளை அறிமுகப்படுத்தி ஆன்ம மார்க்கத்தைக் காட்டுபவராகவும் விளங்குகிறார். 

அவருடன் இருந்த ஒவ்வொரு நாளும் ஆசிர்வதிக்கப்பட்ட நாட்கள் என உணர்கின்றனர் அவரது குடும்பத்தினர். அவருடனான நட்பை விலைமதிப்பில்லா அரிய ஒன்று என எண்ணுகின்றனர் அவரது நண்பர்கள். 

அவரது முதல் பேத்தி எழுத்தாளர் சுபஸ்ரீ எழுத்தில் அந்த மாமனிதர் வாழ்வை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் அந்த மாமனிதரை எண்ணி பெரும் உளஎழுச்சியும் உளநெகிழ்வும் கொள்கிறான். பாட்டனாருக்கும் பேத்திக்குமான ஒரு உரையாடல்  : வீட்டின் முன்னால் நிற்கும் வேம்ப மரத்தின் நிழலில் காகங்களும் மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும் கூடி கிறீச்சிட்டுக் கொண்டிருக்கின்றன. தவிட்டுக் குருவிகள் ’’சுப்ரி சுப்ரி’’ என அழைப்பது சுபஸ்ரீயை என தாத்தா சொல்ல அந்த சிறு குழந்தை தவிட்டுக் குருவிகளைக் கொண்டு ஒவ்வொரு நாளும் அகமகிழ்கிறது.  எழுத்தாளர் சுபஸ்ரீயின் சொற்களில் இந்த சம்பவம் சித்தரிக்கப்பட்டிருக்கும் இடம் மிகச் சிறப்பானது. ஒவ்வொரு கணமும் கோடானுகோடி மனிதர்களின் வாழ்வில் கோடானுகோடி உணர்ச்சிகள் அலைமோதி அதன் விளைவாய் கோடானுகோடி நிகழ்வுகள் நிகழ்கின்றன. அருநிகழ்வாக சுபஸ்ரீ சித்தரிக்கும் சம்பவம் போன்றும் நடக்கின்றன. 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பதவியேற்கும் நிகழ்வு குறித்து எழுத்தாளர் சுபஸ்ரீ எழுதியிருக்கும் பகுதி மிகவும் உயிர்ப்பானது ; உணர்ச்சிகரமானது. 

தனது வலைப்பூவில் எழுத்தாளர் சுபஸ்ரீ தனது ஞான ஆசானான தனது பாட்டனார் குறித்து எழுதியிருக்கும் பதிவுகள் நூல் வடிவம் பெற வேண்டும். தமிழின் முக்கியமான நூலாக அது நிலை பெறும்.

சென்னைப் பயண வாடிக்கைகள் (நகைச்சுவைக் கட்டுரை)

வியாழனன்று காலை 7.30 சென்னை விரைவு வண்டியில் சென்னை செல்ல முடிவு செய்தது புதன்கிழமை இரவு. வழக்கப்படி இரு சக்கர வாகனத்தை வீட்டிலேயே வைத்து விட்டு வீட்டில் இருப்பது போன்ற உணர்வை வீட்டில் இருப்பவர்களுக்கு ஏற்படுத்தி விட்டு சென்னை கிளம்பத் திட்டம்.  இந்த முறை ஒரே ஒரு விஷயத்தைச் சேர்த்தேன். அதாவது நண்பர் ஒருவர் என்னை ஜங்ஷனில் காலை டிராப் செய்வதாக ஏற்பாடு. காலை 5 மணிக்கு அலாரம் வைத்திருந்தேன். ஆனால் காலை 4 மணிக்கே விழித்து விட்டேன். 4.45க்கு நண்பருக்கு ஃபோன் செய்தேன். நண்பர் ஃபோனை எடுக்க வில்லை. சில முறை மீண்டும் செய்தேன். ஃபோன் எடுக்கப்படவில்லை. அதிகாலை நேரத்தில் வாக்கிங் செல்ல மைதானத்துக்கு டூ வீலரில் சென்று கொண்டிருந்த ஒருவர் லிஃப்ட் கொடுத்தார். உணவகம் ஒன்றில் காலை உணவு அருந்தி விட்டு மினி பேருந்தில் ஜங்ஷன் சென்று சேர்ந்தேன். அலுப்பாக இருந்தது. நடைமேடை இருக்கை ஒன்றில் படுத்து உறங்கி விட்டேன். ரயிலுக்கு அதிக அவகாசம் இருந்தது. 7.30 ரயிலுக்குப் பதிலாக 6 மணி ரயிலைப் பிடிக்க விரும்பினேன். அது நிகழவில்லை. நண்பர் வந்து எழுப்பினார். அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். ரயில் வந்தது. முன்பதிவு இல்லாத பெட்டி காலியாக இருந்தது . இப்போதெல்லாம் ரயில்களில் முன்பதிவுப் பெட்டிகள் நிறைந்து விடுகின்றன ; சமயத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் காலியாக இருக்கின்றன. ரயிலில் ஏறியதும் படுத்து உறங்கி விட்டேன். எழுந்த போது சிதம்பரம் வந்திருந்தது. கையில் இருந்த 200 பக்க நூலை படிக்கத் தொடங்கினேன். செங்கல்பட்டில் வாசித்து முடித்தேன். மீண்டும் சிறு உறக்கம். எழுந்த போது வண்டி நுங்கம்பாக்கத்தை தாண்டிக் கொண்டிருந்தது. 

எழும்பூரில் இறங்கி அங்கிருந்து ஒரு பேருந்தைப் பிடித்து சி ஐ டி காலனி சென்றேன். பேருந்தில் ஓட்டுநர் நடத்துநர் சேர்த்து மொத்தம் 6 பேர் தான் இருந்தோம். சென்னைப் பேருந்துகள் இவ்விதமும் இருக்கும் என்பதை அன்று அறிந்தேன். 

சந்திப்பு 45 நிமிடம் நிகழ்ந்தது. விடைபெற்றுக் கிளம்பினேன். 

இம்முறை சி ஐ டி காலனியிலிருந்து எழும்பூருக்கு ஆட்டோ. 

காலை 5 மணிக்கு உணவருந்தியது. மதிய உணவை 330க்கு அருந்தினேன். 

ரயில் 4 மணிக்கு. ஓப்பன் டிக்கெட் எடுத்துக் கொண்டேன். ரயிலில் இருந்த டி டி ஆர் ஒருவரிடம் ஒரு டிக்கெட் ரிசர்வேஷன் வேண்டும் எனக் கேட்டேன். எஸ் - 5ல் ஏறிக் கொள்ளுமாறு கூறினார். செங்கல்பட்டில் வந்து கூடுதல் கட்டணத்துக்கு ரசீது கொடுத்து ஒரு முன்பதிவு டிக்கெட் கொடுத்தார். வண்டி 20 நிமிடம் தாமதம். இரவு 9 மணிக்கு வரவேண்டிய வண்டி 920க்கு வந்தது. நண்பர் ரயில் நிலைய வாசலில் காத்திருந்தார். ஒரு ஜூஸ் கடைக்குச் சென்றோம். தர்பூசணி ஜூஸ் ஆர்டர் செய்து குடித்தோம். வீட்டில் டிராப் செய்தார். வீட்டுக்கு வந்த போது மணி இரவு 950. வந்ததும் படுத்து உறங்கி விட்டேன். 

ஒருநாள் நிறைவு பெற்றது ; சென்னைப் பயணமும் நிறைவு பெற்றது. 

அசாத்தியத்தை சாத்தியமாக்குபவர்

கால்பந்தில் ஆர்வம் கொண்ட சிறுவனுக்காக என்ன உதவி செய்ய முடியும் என யோசித்தேன். ஏ ஐ யிடம் இந்த விஷயத்தில் என்ன செய்ய முடியும் என்று கேட்டேன். ஏ ஐ சென்னையில் வெளிநாட்டுப் படிப்புக்கு வழிகாட்டும் ஒரு நிறுவனத்தைப் பரிந்துரைத்தது. அந்த நிறுவனத்தின் தொடர்பு எண்ணுக்குப் பேசினேன். அந்த அழைப்பை ஏற்றவர் ஓர் இளைஞர். அவரிடம் விபரம் கூறினேன். சிறுவனின் 12ம் வகுப்பு மதிப்பெண், ஐ இ எல் டி எஸ் மதிப்பெண் ஆகிய விபரங்களைக் கேட்டுக் கொண்டார். அவர் விபரங்களைக் கேட்டுக் கொண்ட விதத்திலும் உள்வாங்கிக் கொண்ட விதத்திலும் மிகச் சிறப்பான முதிர்ச்சியும் பக்குவமும் வெளிப்படுவதை உணர்ந்தேன். சிறுவனின் ஐரோப்பா பயணம் அந்த இளைஞரின் வழிகாட்டலில் சிறப்பாக நிகழும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. கால்பந்து ஆடும் சிறுவனுடன் சென்று சென்னையில் அந்த இளைஞரைச் சந்தித்தால் விஷயம் வேகம் எடுக்கும் என எண்ணினேன். இருப்பினும் நான் எண்ணிய வண்ணம் உடன் நானும் சிறுவனும் சென்னை செல்ல வாய்ப்பு அமையவில்லை. சென்னை இளைஞர் எனக்கு சில முறை ஃபோன் செய்தார். நான் இரு சக்கர வாகனப் பயணத்தில் இருந்ததால் அலைபேசி அழைப்பை ஏற்க முடியவில்லை. தகவல் தொடர்பு இடைவெளி ஏற்பட்டது. சில நாட்களுக்குப் பின் சிறுவன் என்னிடம் வந்தான். மீண்டும் அந்த இளைஞரைத் தொடர்பு கொண்டு விபரம் கூறினேன். மறுநாளே சென்னையில் நேரில் வந்து சந்திக்கிறேன் என்று கூறினேன். 

சிறுவன் ஐரோப்பா செல்ல வேண்டும் என விரும்புவதே அங்கே கால்பந்து ஆட வேண்டும் என்பதற்காகத்தான். ஐரோப்பா கால்பந்துக்கு பிரசித்தி பெற்ற கண்டம். சிறுவனுக்கு சேர்க்கை அளிக்கக்கூடிய கல்லூரி கால்பந்து கிளப்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. இந்த விஷயத்தை இளைஞருக்கு ஃபோனில் விளக்கினேன். 

மறுநாள் நேரில் சந்தித்தேன். சிறுவனின் தேவையை நிறைவேற்றும் கல்லூரியை அவர் தேர்ந்தெடுத்து விட்டார். அந்தச் சிறுவனுக்கு அட்மிஷன் கிடைக்கும் விதமாக இண்டர்வியூவுக்கு தயார் செய்யும் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டார். விசா நடவடிக்கைகளிலும் முழுமையாக உடனிருப்பதாகக் கூறினார். எனக்குப் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. 

சில முறை அலைபேசியில் உரையாடிய வகையில் அவரது வயது என நான் கணித்திருந்ததற்கும் மிகக் குறைவான வயதுடைய இளைஞராயிருந்தார். எந்த ஒரு விஷயத்திலும் அதன் தீர்வுகளும் அதனை அடைவதற்கான வழிமுறைகளுமே அவர் பார்வையில் இருந்தன. முற்றிலும் நேர்மறையானவராகவும் நம்பிக்கையை அளிப்பவராகவும் இருந்தார். 

ஊருக்கு வந்து சிறுவனிடன் அவரது எண்ணை அளித்து அவர் கூறும் குறிப்புகளின் படி செயல்படு எனக் கூறினேன். 

விஷயம் சரியான திசையில் நகர்கிறது. 

இராமாயணத்தில் கம்பன் அனுமனை ‘’சொல்லின் செல்வன்’’ என்கிறான். வால்மீகி அனுமனை ‘’அசாத்தியத்தை சாத்தியமாக்குபவன்’’ என்கிறார். இந்த இரண்டு மொழிகளும் அந்த இளைஞருக்குப் பொருந்தும். சீதை அனுமனை ‘’இன்றென இருத்தி’’ என வாழ்த்துகிறார். அந்த வாழ்த்து அந்த இளைஞருக்கும் உரியது.   

கால்பந்து ஆடும் சிறுவன்

எங்கள் பகுதியில் ஒரு விவசாயக் குடும்பம் இருக்கிறது. அந்த விவசாயக் குடும்பத்தின் தலைவர் எனது நண்பர். சென்ற ஆண்டு எதிர்பாராமல் நோய்வாய்ப்பட்டு சில நாட்களில் இயற்கை எய்தினார். 

அவரது மகனுக்கு 18 வயது ஆகிறது. பன்னிரண்டாம் வகுப்பு நிறைவு செய்துள்ளான். காமர்ஸ் அக்கவுண்டன்சி பிரிவு. தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறான். IELTS தேர்வில் 6.5 மதிப்பெண் பெற்றிருக்கிறான். 

18 வயது ஆகியிருக்கும் அந்த இளைஞன் தனது 6 வயதிலிருந்து 12 வருடமாக தினமும் காலை 3 மணி நேரம் மாலை 3 மணி நேரம் என தினமும் 6 மணி நேரம் கால்பந்து வீரனாகப் பயிற்சி எடுத்தான். பள்ளிப்பாடங்களில் எப்போதும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்ததால் அவனது கால்பந்து ஆர்வத்துக்கு வீட்டில் யாரும் தடை ஏற்படுத்தவில்லை. அவன் சிறுவனாயிருந்த நாட்களிலிருந்தே அவனை எங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் மட்டுமே காண முடியும். நம் சூழலில் ஒரு சிறுவன் தன்னார்வத்தில் 6 வயதிலிருந்து தினமும் 6 மணி நேரம் 12 ஆண்டுகள் பயிற்சி எடுப்பது என்பது அபூர்வமானது என்பதை எவரும் உணர முடியும். வாரத்தின் ஏழு நாட்களும் வருடத்தின் 365 நாட்களும் அவன் பயிற்சி நடந்து கொண்டேயிருந்தது ; இருக்கிறது. 

அவன் தனது கால்பந்து ஆர்வத்தை மேம்படுத்திக் கொள்ள ஐரோப்பா செல்ல விரும்புகிறான். சில ஐரோப்பிய பல்கலைக்கழகங்களைத் தொடர்பு கொண்டுள்ளான். IELTS மதிப்பெண் நன்றாக இருப்பதால் அவனுக்கு  ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் அட்மிஷன் கிடைக்கக் கூடும். 

இங்கே ஊரில் மாநகரங்கள் போல கல்விக்காக வெளிநாடு செல்ல ஆலோசனை கூறும் மையங்கள் இல்லை.  

விசா கிடைக்க கடந்த 2 ஆண்டுகளின் வங்கிப் பரிவர்த்தனைகள், கடந்த 3 ஆண்டுகளின் வருமான வரித்தாக்கல் ஆகிய விஷயங்கள் தேவைப்படுகின்றன. நண்பரின் குடும்பம் விவசாயக் குடும்பம் என்பதால் வங்கியில் குறைந்தபட்சமான வரவு செலவு மட்டுமே உள்ளது. விவசாயத் தொழிலுக்கு வருமான வரி தாக்கல் தேவையில்லை என்பதால் அவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 

15 நாட்களுக்கு முன் அந்த சிறுவன் என்னிடம் உதவி கேட்டு வந்தான். அவனுக்குத் தேவைப்படும் உதவி விசாவை உறுதி செய்வதில் தான். எனக்கு இந்த விஷயம் புதிது. என்னால் இயன்ற உதவியைச் செய்கிறேன் என அச்சிறுவனிடம் கூறியிருக்கிறேன். 

 

Saturday, 27 June 2026

தொழிலதிபர்

சிதம்பரம் அருகே ஒரு சிற்றூர். அங்கே புதிய விதத்தில் ஓர் உணவகம் அமைத்திருந்தார்கள். எவ்விதம் என்றால் அந்த உணவகத்தில் கேக் வகைகள் கிடைக்கும் ; சாண்ட்விச், கட்லெட் போன்றவை இருக்கும் ; ஐஸ்கிரீம்கள் இருக்கும். இவை அனைத்துமே வழக்கமான முறையில் மைதா, ஜீனி ஆகியவை பயன்படுத்தப்படாமல் பாரம்பர்ய வகை அரிசி ரகங்களான கருப்பு கவுனி மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயார் செய்கிறார்கள். வித்தியாசமான முறையில் ஐஸ்கிரீமும் தயார் செய்கிறார்கள். அவர்கள் உணவகத்தில் 20 லிருந்து 25 பேர் அமர்ந்து உணவருந்த முடியும். மாலை 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  அந்த சிற்றூரை ஒரு பெரிய கிராமம் என்று கூற முடியும்.  கருப்பு கவுனி கேக் ஆர்டர் செய்தால் 20 நிமிடத்தில் அந்த கேக்கை அந்த தருணத்தில் தயாரித்துக் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் அவர்களுக்கு கேக் ஆர்டர் மற்றும் உணவு ஆர்டர் ஃபோன் மூலம் வருகிறது. மாலை 3 மணிக்கு ஒரு ஆர்டர் வந்தால் மாலை 3.30க்கு வந்து கேக்கைப் பெற்றுக் கொள்ளவும் என செய்தி அனுப்பி விடுகிறார்கள். கேக் தயாராகி விடுகிறது. 3.30க்கு வந்து பெற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளின் பிறந்த நாள் நிகழ்வுகள் அந்த உணவகத்தில் நிகழ்கின்றன. அந்த உணவகத்தில் கேக் , சாட் வகைகள், ஐஸ்கிரீம் அனைத்துமே வழக்கமான விலையை விட 50 சதவீதம் குறைவான விலையில் கிடைக்கிறது என்பது எனக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஐஸ்கிரீம் கூட இயற்கை உணவுப்பொருட்களால் தயாரிக்கிறார்கள். எனக்கு அங்கே இருந்த போது ‘’ஸ்டார்பக்ஸ்’’ காஃபி ஷாப்கள் நினைவுக்கு வந்தன. இரண்டு தினங்களுக்கு முன் நண்பர் ஒருவருடன் அங்கே தற்செயலாக செல்ல நேர்ந்தது. நண்பர் சென்னையிலிருந்து வந்திருந்தார். அந்த உணவகத்தின் புறச்சூழல் மிக இனிமையானதாக இருந்ததால் எங்கள் உரையாடலிலும் அந்த இனிமை கூடுதல் இனிமையைச் சேர்த்தது. 

இந்த உணவகத்தின் உரிமையாளர்கள் இளம் தம்பதியர். கணவனுக்கு 30 வயது இருக்கக் கூடும் . அவரது மனைவிக்கு 26 வயது இருக்கலாம். கேக் , ஐஸ்கிரீம் என அனைத்தையும் இந்த தம்பதியினரே செய்கின்றனர். பரிமாற ஓரிரு பணியாளர்கள்  இருக்கின்றனர். தம்பதியர் இருவருக்குமே உணவு சமைத்தலில் ஆர்வம் இருந்திருக்கிறது. அதனால் இவ்விதமான ஒரு தொழில் முயற்சியை செய்து பார்த்திருக்கிறார்கள். என்னுடைய கணிப்பின் படி அங்கே சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.5000க்கு வணிகம் நிகழக் கூடும். 

அந்தப் பிரதேசத்தில் இருக்கும் வங்கிகள் இந்த இருவரையும் கௌரவிக்க வேண்டும் என்பது என் எண்ணம். அவர்கள் வணிகத்தின் வடிவத்தை புதிய தொழில்முனைவோருக்கான ஒரு சாத்தியமாக வங்கிகள் மாநிலமெங்கும் முன்வைக்கலாம்.

அவர்களின் சிறு குழந்தைக்கு 6 வயது இருக்கும். அவன் தன் அன்னையின் பக்கத்திலேயே நிற்கிறான். அன்னை எங்கு சென்றாலும் உடன் செல்கிறான். கேஷ் சாளரத்தில் அடுமனையில் பரிமாறும் இடத்தில் எங்கும் கூட கூட வருகிறான். அன்னை தன்னுடன் நேரம் செலவிட வேண்டும் என்பது அக்குழந்தையின் எதிர்பார்ப்பு. அந்த அன்னை அவனையும் பார்த்துக் கொண்டு தன் வேலையையும் செய்து கொண்டு இருக்கிறார். 

உணவுக்கான தொகையை அளித்த போது எவ்விதம் எல்லா உணவுப் பொருட்களும் 50 சதவீதம் குறைவான விலையில் தர முடிகிறது என்று வியப்புடன் கேட்டேன். அந்தப் பெண் ‘’இடம் சொந்த இடம் என்பதால்’’ எனச் சுருக்கமாகச் சொன்னார். 

இந்த உணவகத்தின் உரிமையாளர்களான தம்பதியரைப் போன்ற தொழிலதிபர்கள் வாழ்க்கையின் மீதும் மனிதர்கள் மீதும் மேலும் நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள். 

அவர்கள் குடும்பம் நலமுடன் வாழ இறைமையிடம் வேண்டிக் கொண்டேன். 

Friday, 26 June 2026

ஒரு சாமானியக் குடிமகனின் மனு

 அனுப்புநர்

ர.பிரபு
&&&&&
&&&
மயிலாடுதுறை - 609001

பெறுநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை - 609001

ஐயா,

பொருள் : மயிலாடுதுறை மாவட்டம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - மனுநீதி நாள் முகாமில் பெறப்படும் மனுக்கள் உரிய விதத்தில்                         தீர்வு காணப்படுவதில்லை என்பதைத் தெரிவிப்பது - உரிய விதத்தில் தீர்வு காணப்படாமல் பைசல் செய்யப்படுவது குறித்து புகாரளிப்பது. 


இந்த மனுவின் நகல் கனம் தமிழக ஆளுநருக்கும் கனம் தமிழக முதலமைச்சருக்கும் கனம் தமிழக வருவாய்த்துறை அமைச்சருக்கும் கனம் குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சருக்கும் அனுப்பப்படுவதால் சற்று விரிவானது என்பதை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். 

டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்திய அரசியல் நிர்ணய சபையால் முறைப்படி உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் மீது மாறாப் பற்று கொண்ட குடிமகன் என்ற வகையில் இந்திய அரசியலமைப்பின் முக்கிய அங்கங்கள் ஆன ராஷ்ட்ரபதி பவன், நீதி அமைப்புகள், பாராளுமன்றம், சட்டமன்றம், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மீது மதிப்பும் நம்பிக்கையும் கொண்டவன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவற்றின் மீது மதிப்பும் நம்பிக்கையும் இருப்பதனாலேயே இந்த மனுவை எழுதுகிறேன். இந்த மனுவில் குறிப்பிடப்படும் விஷயங்கள் முற்றிலும் சரிசெய்யப்படும் என்ற நம்பிக்கை என் அகத்தில் இக்கணத்திலும் நிறைந்தே இருக்கிறது. 

2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் எனது நண்பர் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தின் சீட் கவர் மாற்றும் கடைக்குச் சென்றிருந்தேன். நண்பரின் வாகனத்துக்கு சீட் கவர் மாற்ற வேண்டியிருந்தது. அது 30 லிருந்து 45 நிமிடம் தேவைப்படும் பணி. அந்தக் கடையின் பணியாளர் சீட் கவர் மாற்றத் தொடங்கினார். ஜனநாயகத் திருவிழாவான தேர்தலுக்கு வாக்களிக்கத் தயாராகி விட்டீர்களா என்று கேட்டேன். சற்று சோர்வுடன், ‘’ ஒவ்வொரு தேர்தலுக்கும் ஓட்டு போடுகிறோம் ; ஆனால் அரசாங்க அலுவலகத்தில் ஒரு சாதாரண வேலை கூட நடப்பதில்லை’’ என அலுப்புடன் கூறினார். அரசாங்க அலுவலகத்தில் அவருக்கு நடக்காமல் இருக்கும் வேலை என்ன என்று கேட்டேன். அவர் தன்னைப் பற்றி சொன்னார். அவர் பெயர் %%% த/பெ %%%%. திருஇந்தளூர் %%%% பகுதியைச் சேர்ந்தவர். திரு. %%% , அவரது மனைவி, இரு குழந்தைகள் என நான்கு பேர் கொண்ட குடும்பம். சீட் கவர் தைக்கும் கடையில் பணி புரிவதால் சொற்பமான மாத ஊதியம் கிடைக்கிறது. அதைக் கொண்டு தன் வாழ்வை தன் குடும்பத்தின் வாழ்வை அமைத்துக் கொள்கிறார். அவருக்கு அரிசி ரேஷன் கார்டுக்குப் பதிலாக ஜீனி ரேஷன் கார்டு வழங்கி விட்டார்கள். %%% பள்ளிப்படிப்பைத் தாண்டாதவர். ஆகையால் எவ்விதம் ஜீனி கார்டை அரிசி கார்டாக மாற்றிக் கொள்வது என்பது தெரியவில்லை. காலை 9 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கடையில் வேலை இருப்பதால் அவரால் வட்ட வழங்கல் அலுவலகம் தொடர்ந்து செல்ல முடியவில்லை ; ஒரு சில முறை சென்று விட்டு பின்னர் சோர்ந்து போய் அந்த விஷயத்தை அப்படியே விட்டு விட்டார். என்னிடம் என் கேள்விக்குப் பதிலாக மேற்படி விபரங்களைத் தெரிவித்தார். 

அவரிடம் நான், ‘’ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை மனுநீதி நாள் முகாம் நடக்கும். அங்கே பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்கலாம். அந்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும். உங்கள் மனுவுக்கு ஒரு ஒப்புகைச்சீட்டு அளிக்கப்படும். அதில் ஒப்புகை எண் இருக்கும். அதனைக் கொண்டு மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறியலாம். அங்கே உங்கள் கோரிக்கையை முன்வைத்து மனு கொடுக்கலாம். மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஜீனி கார்டு அரிசி கார்டாக மாற்றித் தரப்படும் ’’என்று கூறினேன். நம்பிக்கையுடன் நான் இத்தனை முறைமைகளைக் கூறியதால் அவருக்கு நம்பிக்கை உண்டானது. ’’தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. எனவே இந்தக் காலகட்டத்தில் மனுநீதி நாள் முகாம் இருக்காது. வாக்குப் பதிவுக்குப் பின் மீண்டும் துவங்கும் ; அப்போது வந்து உங்களுக்கு மனு எழுத உதவுகிறேன்’’ என்றும் சொன்னேன். 

ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு முடிந்தது. மனுநீதி நாள் நடைமுறைகள் அதன் பின் தொடங்கின. ஆகாஷ்வாணி செய்திகள் மூலம் அதனை அறிந்த நான் திரு. %%% அவர்களை அவருடைய பணியிடத்தில் சந்தித்து அவர் மனு எழுத உதவினேன். அவர் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ‘’மனுநீதி நாள் முகாமில் மனு அளித்தால் அரசின் இயங்குமுறையைத் தெரிந்து கொள்ள உணர்ந்து கொள்ள அவருக்கு உதவியாக இருக்கும் என எண்ணினேன். தனது கடையின் பணியிலிருந்து அவரால் வர இயலவில்லை. பலமுறை மனுநீதி நாள் முகாமின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறிய பின் ஜூன் 1 மாவட்ட ஆட்சியர் அலுவலக மனுநீதி நாளில் திரு. %%%% மனு அளிக்கப்பட்டது. 

ஜூன் 1ம் தேதி மனுநீதி நாள் முகாமுக்கு நானும் வந்திருந்ததால் அன்றைய தினத்தில் மனுதாரர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டிய மனு ஒப்புகைச் சீட்டு 5 மணி நேரம் தாமதமாக மாலை 3 மணிக்கு மேல் வழங்கப்படுவதை நேரில் கண்டேன். இந்த விஷயத்தை மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தெரிவித்து அதனை சரி செய்யக் கோரி ஒரு கடிதமாக எழுதினேன்.மாவடத்தின் பல பகுதியிலிருந்து வருகை தரும் மனுதாரர்களுக்கு உடன் ஒப்புகைச் சீட்டு வழங்கி அவர்கள் 5 மணி நேரம் காத்திருக்கும் அல்லலை நீக்குமாறு கோரினேன். எனது கோரிக்கை மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சரி செய்யப் பட்டிருக்கிறதா என்பதைக் காண ஜூன் 8ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக மனுநீதி நாள் முகாம் சென்றேன். அன்றும் மனுதாரர்கள் ஒப்புகைச்சீட்டு பெற 5 மணி நேரம் காத்திருந்தார்கள் என்பதைக் கண்டேன். அன்றே இன்னொரு கடிதம் எழுதினேன். ஜூன் 11 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வந்து மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளரைச் சந்தித்து ஜூன் 1, ஜூன் 8 ஆகிய தேதிகளில் மனுநீதி நாள் முகாம் தொடர்பான புகார் குறித்து தெரிவித்து அந்தப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஜூன் 15 மனுநீதி நாளுக்கு வரும் மனுதாரர்கள் ஒப்புகைச் சீட்டுக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இராமல் உடன் வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் ஆட்சியர் அலுவலகத்தின் ஒரு பகுதியான மின் ஆளுகை அலுவலகத்தில் சென்று சொல்லும்படி சொன்னார். அங்கு சென்று சொன்னேன். அவர்கள் ‘’சமூகப் பாதுகாப்பு திட்டம்’’ அலுவலகம் சென்று தெரிவிக்குமாறு கூறினர். அவ்விதமே செய்தேன். ஜூன் 15 அன்று ஆட்சியர் அலுவலகம் வந்து மனுதாரர்களுக்கு ஒப்புகைச்சீட்டு உடன் வழங்கப்படுகிறதா என்பதைக் காண வந்தேன். மனுதாரர்களுக்கு ஒப்புகைச்சீட்டு உடனுக்குடன் வழங்கப்படுவதை நேரில் கண்டேன். மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அன்றைய தினமே நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதினேன். 

ஜூன் 1ம் தேதி திரு. %%% அளித்த மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிய ஜூன் 24 அன்று மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வந்தேன். மனுநீதி நாள் முகாம் கோப்புகளுக்கு பொறுப்பான எழுத்தர் விடுப்பில் சென்றிருப்பதால் ஜூன் 25 அன்று வருமாறு கேட்டுக் கொண்டனர். 

ஜூன் 25 அன்று சென்று பார்த்தேன். திரு. %%% அவர்களின் மனுநீதி நாள் புகார் கோப்பு ஜூன் 4 அன்று பைசல் செய்யப்பட்டிருந்தது என்பதை இணையத்தில் மனுதாரரின் ஒப்புகை எண்ணை உள்ளிட்டு மனுநிலை அறிந்து கூறினர். ஆனால் மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து 21 நாட்களாக இந்த விஷயம் குறித்து எந்த தபாலும் வரவில்லை. தங்களிடம் எந்த தபாலும் இல்லை ; வட்ட வழங்கல் அலுவலகம் சென்று விசாரியுங்கள் என்று கூறினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் விசாரித்தேன். வட்ட வழங்கல் அலுவலகத்திலிலிருந்து மனுதாரருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டு கோப்பு மூடப்பட்டது எனத் தகவல் தெரிவித்தனர். ‘’நான் மனுதாரருடன் தொடர்பில் இருக்கிறேன் ; அவருக்கு வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து எந்த தபாலும் வரவில்லை ‘’ என்று கூறினேன். மேலும் ‘’வட்ட வழங்கல் அலுவலகமாகிய தங்கள் அலுவலக தபால் ஆவணத்தைப் பரிசீலியுங்கள் ; ஜூன் 4 க்குப் பிறகு மனுதாரருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தால் அதில் பதிவாகியிருக்கும் அத்துடன் அதன் நகல் மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டிருக்கிறதா என்பதையும் பரிசீலியுங்கள் ‘’ என்று சொன்னேன்.

அந்த மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை வட்ட வழங்கல் அலுவலகத்தால் மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது கட்டாயம். அதனால் தான் அந்தக் கோப்பு தங்களிடம் இருக்கிறதா என மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தேடிப் பார்த்தனர் என யூகித்தேன். அதாவது, வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கும் எந்த தபாலும் வரவில்லை. மனுதாரருக்கும் எந்தத் தபாலும் வரவில்லை. மனுதாரருக்கும் மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கும் எந்த தபாலும் அனுப்பாமல் மனுதாரர் கோப்பை மூடியுள்ளனர். 

மேற்படி விஷயம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மனுநீதி நாள் முகாம், மாவட்ட வழங்கல் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் தனி உதவியாளர், மின் ஆளுகை முகமை, சமூகப் பாதுகாப்புத் திட்டம் ஆகிய அலுவலகங்களுக்குப் பலமுறை சென்று வந்த அனுபவத்தின் அடிப்படையில் மனுதாரர் மனு தொடர்பாக முறைமைகள் ஏதும் பின்பற்றப்படாமல் பிழையாக் கோப்பு மூடப்பட்டுள்ளது என்பதை ஒரு சாமானியக் குடிமகனாக என்னால் யூகிக்க முடிகிறது. ஜூன் 1 அன்று திரு. %%% என்ற மனுதாரர் தனது ஜீனி கார்டை அரிசி கார்டாக மாற்றித் தர வேண்டி அளித்த மனு மீது மாவட்ட வழங்கல் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் மேற்கொண்ட மேல்நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேரடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த மனுவைக் கையாண்டவர்கள் அதனைக் கையாண்ட விதத்திலோ முறைமைகளிலோ பிழை செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த மனுவின் மூலம் கேட்டுக் கொள்கிறேன். 

தமிழக மக்கள் மாநில அரசு அலுவலகங்களுக்குச் செல்ல அஞ்சுகிறார்கள் ; தயங்குகிறார்கள் என்பதே இன்றைக்கும் யதார்த்தமாக இருக்கும் நிலை. சாமானிய மக்கள் எல்காட் தலைமை அலுவ்லகம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் ஆகிய அலுவலக வாயிற்படிகளை மிதிப்பது இல்லை. தங்கள் சொந்த நிலத்துக்கு பட்டா வாங்க தங்கள் இடவிற்பனையைப் பத்திரப்பதிவு செய்ய தங்கள் வாகனத்துக்கு பதிவு எண் பெற ரேஷன் கார்டு விண்ணப்பிக்க என முறையே வருவாய்த்துறை, பத்திரப்பதிவு அலுவலகம், வாகனப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம், குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலக வாயிற்படிகளையே மீண்டும் மீண்டும் மிதிக்கின்றனர். மேற்படி அலுவலகங்களில் குடிமக்களுக்கு நிகழ வேண்டிய சிறு பணிகளுக்குக் கூட - குடிமக்களின் அடிப்படை உரிமையான அரசு சேவைகளைப் பெறுவதற்கு கூட பெரும் பணம் லஞ்சமாகக் கேட்கப்படுகிறது என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் மாவட்ட ஆட்சியரையும் நம்பி ‘’மனுநீதி நாள்’’ முகாம் அன்று மாவட்ட ஆட்சியரை நோக்கி நம்பிக்கையுடன் வருகிறார்கள். தமிழக மக்கள் இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி ஆகியவற்றுக்குத் தேர்வான குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டு பணி நியமன ஆணை வழங்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது இப்போதும் நம்பிக்கை கொள்கிறார்கள். அடிமட்டத்தில் இருக்கும் அரசு அலுவலகங்கள் தங்களுக்கு இழைக்கும் அசௌகர்யங்களிலிருந்து - தங்களுக்கு இழைக்கும் அவமதிப்புகளிலிருந்து - தங்களுக்கு இழைக்கும் அநீதிகளிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் தங்களைக் காப்பார் என உறுதியாக நம்புகிறார்கள். இந்த மனுவின் மூலம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால் ‘’மனுநீதி நாள் முகாம்’’ மனுக்கள் அரசு அலுவலகங்களால் முறையாகக் கையாளப்படுவதை உ றுதிப்படுத்த வேண்டும் என்பதும் இது குறித்து மாவட்டத்தின் அனைத்து அரசுத்துறை அலுவ்லகங்களுக்கும் கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பதுமே ஆகும். 

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் வாக்குக்கு வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் கட்சிகள் வெற்றி பெறுகின்றன என அரசியல் கட்சிகள் மீதும் அதன் மறுபக்கமாக தமிழக வாக்காளர்கள் வாக்குக்குப் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கிறார்கள் என்னும் புகார் தமிழக வாக்காளர்கள் மீதும் இருந்தது. 2026ல் தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் கட்சி மீது அதன் அரசியல் எதிரிகள் கூட வாக்குக்கு பணம் அளித்தார்கள் என்னும் குற்றம் சாட்டவில்லை. இன்றைய ஆளுங்கட்சி எந்த வாக்காளருக்கும் பணம் கொடுத்து வெற்றி பெற்று தமிழக சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக வரவில்லை. தமிழக அரசியல் வரலாற்றில் இந்நிகழ்வு முக்கியமான ஒன்று என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். தமிழக மக்கள் மாநில அரசின் அரசாட்சி முறைகளில் மாற்றம் தேவை என்பதற்காகவே ஒரு புதிய கட்சிக்கு வாக்களித்துள்ளனர். கோடானுகோடி தமிழக மக்களின் அபிலாஷை வெளிப்படையான ஊழலற்ற அரசு நிர்வாகமே ஆகும். ‘’ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’’ என்ற அளவில் எனது ஜூன் மாத அனுபவத்தை முன்வைத்துள்ளேன். இந்த விரிவான மனு தமிழக அரசு அலுவலக ஊழியர்களின் அலட்சிய மனோபாவத்தையும் சாமானியக் குடிமக்களுக்கு ஏற்படும் அலைக்கழிப்பையும் எடுத்துக் காட்டுவதாக இருக்கக் கூடும். 

‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்பது தமிழ்மறையின் வாக்கு. இவ்விதமாக , குடிமக்கள் என்ற விதத்தில் அரசு அதிகாரிகளும் குடிமக்களும் சமமே. சாமானியக் குடிமக்களை அலைக்கழிக்க எந்த அரசு அதிகாரிக்கும் உரிமையில்லை. அவ்விதம் அரசு அதிகாரிகள் நடந்து கொள்வது நீதிக்கும் நிர்வாகத்துக்கும் ஒவ்வாதது ஆகும். 

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே ! தாங்கள் கேரளம் மாநிலத்தைச் சேர்ந்தவர். ‘’தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்’’ எனப் போதித்த ஐயா வைகுண்டரும் ‘’மனுஷனுக்கு ஒரே ஜாதி ஒரே மதம் ஒரே கடவுள்’’ எனப் போதித்த ஸ்ரீநாராயண குருவும் வாழ்ந்து வழிகாட்டிய மண்ணிலிருந்து தமிழகத்துக்கு வந்துள்ளீர்கள். தாங்கள் மாவட்ட ஆட்சித்த்லைவராக இருக்கும் காலத்தில் ‘’மனுநீதி நாள் முகாம்’’ மனுக்கள் சிறப்பாகக் கையாளப்பட்ட்ன என்னும் நிலையை மாவட்ட நிர்வாகத்தில் உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த மனுவின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். சொற்ப மாத ஊதியம் பெற்று வறிய நிலையில் இருக்கும் மனுதாரர் திரு. %%% அவர்களின் ஜீனி கார்டை அரிசி கார்டாக மாற்றித் தர ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

இந்த விரிவான மனு - கடிதம் கனம் தமிழக ஆளுநர், கனம் தமிழக முதலமைச்சர், கனம் வருவாய்த்துறை அமைச்சர், கனம் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், கனம் சமூகநீதித்துறை அமைச்சர் ஆகியோர் நேரடி கவனத்துக்குச் செல்லுமா என்பது ஓர் ஐயம். இந்த விரிவான மனு - கடிதம் மாவட்ட ஆட்சியரின் நேரடி கவனத்துக்கு செல்லுமா என்பது அதை விடப் பெரிய ஐயம். எனினும் மேற்கூறியோரின் அலுவலகங்களின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்குச் செல்ல வாய்ப்புண்டு. அவர்கள் கவனம் கொடுத்தால் தீர்க்கக்கூடிய விஷயங்களே இந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவை. மனுவின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்பது மட்டுமே மனுதாரரின் விருப்பமும் எதிர்பார்ப்பும்.. 

ஜெய்ஹிந்த்!

தங்கள் உண்மையுள்ள,

&&&


இடம் : மயிலாடுதுறை
நாள் : 26.06.2026

நகல் 

1. கனம் தமிழக ஆளுநர்
லோக் பவன்
கிண்டி - சென்னை

2. கனம் தமிழக முதலமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை

3. கனம் தமிழக வருவாய்த்துறை அமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை

4. கனம் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை

5. கனம் சமூகநீதித்துறை அமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை  
  

Thursday, 25 June 2026

அரசும் அலைக்கழிப்பும்

இரு சக்கர வாகன சீட் கவர் தைப்பவரின் ஜீனி ரேஷன் அட்டையை அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற ஜூன் 1ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக மனுநீதி நாளில் மனு தரப்பட்டது. 24 நாட்கள் ஆகிறது. வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்தோ அல்லது மாவட்ட வழங்கல் அலுலகத்திலிருந்தோ எந்தத் தகவலும் இல்லை. வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு நேரில் சென்றேன். ஒரு குயர் நோட் ஒன்றில் ‘’மனுநீதி நாள் மனுக்கள்’’ என வரிசை எண். ஆன்லைன் பதிவு எண், மனுதாரர் பெயர் & முகவரி, மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என ஒரு பட்டியல் இருந்தது. சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனுதாரர் பெயர் மற்றும் முகவரி ஆகிய விஷயங்கள் மட்டுமே இருந்தன. மற்ற எந்த விபரமும் ஏட்டில் குறிப்பிடப்படவில்லை என்பதைக் கவனித்தேன். அந்த ஏட்டைப் பராமரிப்பவர் கிராம நிர்வாக அதிகாரியிடமிருந்து ஒரு சான்றிதழ் பெற்று வர வேண்டும் எனக் கோரினார். அது முக்கியத் தேவை என்றால் அலுவலகத்திலிருந்து ஒரு தபால் அனுப்பியிருப்பார்கள். இவ்விதம் இப்போது கோருவது அலைக்கழிக்கும் செயல் என எனக்குத் தோன்றியது. அலமாரியில் அவர் ஒரு படிவத்தைத் தேடினார். அவர் உத்தேசித்த படிவம் கிடைக்கவில்லை. மறுநாள் வருமாறு கூறினார். மறுநாளான நேற்று அங்கே செல்லவில்லை ; வட்ட வழங்கல் அலுவலகத்தின் தலைமை அலுவலகமான மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்குச் சென்றேன். மனுதாரர் பெயரையும் ஜூன் 1ம் தேதி ‘’மனுநீதி நாள் முகாம்’’ மனு என்று சொன்னேன். ஒரு கிளார்க் இன்னொரு கிளார்க்கிடம் விபரம் கேட்கச் சொன்னார். இன்னொருவர் இன்னொருவரிடம். மூன்றாவது கிளார்க் என்னிடம் இந்த விஷயத்தைப் பார்க்கும் கிளார்க் இன்று விடுமுறையில் இருக்கிறார். நாளை வாருங்கள் என்றார். மனுவின் விபரம் கூறி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டேன். 

மனு சென்னைக்கு அனுப்படும் என்றனர். ‘’மனுநீதி நாள் முகாம்’’ ஆன்லைன் கோப்பு நிலுவையில் தானே இருக்கும் எனக் கேட்டேன். சென்னைக்கு மனு அனுப்பப்பட்டால் மனுவின் கோப்பு மூடப்பட்டு விடும் எனக் கூறினர். ஜூன் 1 ஒரு கோரிக்கைக்காக மனு தரப்படுகிறது. அரசு அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் ; இல்லையென்றால் நிறைவேற்ற இயலாத கோரிக்கை என்று பதில் சொல்ல வேண்டும் அல்லது நிலுவையிலாவது வைத்திருக்க வேண்டும். கோப்பினை மூடி விட்டால் யார் எவ்விதம் சென்னை அலுவலகத்துக்கு தொடர்பு கொள்வது. சென்னை அலுவலகத்துக்கு மனுவை அனுப்பினால் அதன் நகலையாவது மனுதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவை எதுவுமே இல்லாமல் ஒரு கோப்பை மூடினால் மனுதாரர் என்ன செய்ய முடியும் ? 

ஏன் இந்த சாதாரண விஷயத்தைக் கூட அரசிடம் எதிர்பார்க்க முடியவில்லை? மாவட்ட வழங்கல் அலுவலகம் அமைந்திருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மிகப் பெரிய பிரும்மாண்டமான கட்டிடம். மாவட்ட வழங்கல் அலுவலகம் ஒரு மல்டிநேஷனல் கம்பெனியின் அலுவலகம் போல மிகப் பெரிதாக சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் நிறைந்து அமைக்கப்படுகிறது. அலுவலகத்தில் குறைந்தது 7 பேர் பணி புரிகிறார்கள். ஒரு மனுவின் கோப்பை எவ்விதம் உருவாக்கிப் பராமரிப்பது என்பதும் மனுதாரருக்கு பதில் அளிப்பது என்பதும் அடிப்படையான விஷயங்கள். எனினும் இதனைச் செய்ய அரசு ஊழியர்களுக்கு விருப்பம் இல்லை. 

‘’நாளை வாருங்கள்’’ என்று சொன்ன கிளார்க்கிடம் ‘’காலை 10.30 க்கு வரட்டுமா’’ என்று கேட்டேன். ‘’11 மணிக்கு வாருங்கள்’’ என்றார். 

எந்த விஷயமாக இருந்தாலும் அமைதியான அணுகுமுறையை மேற்கொள்வதே எனது வழக்கம்.  

Tuesday, 23 June 2026

எண்களின் புதிர் (நகைச்சுவைக் கட்டுரை)

இரண்டு தினங்களாக ஒரு புள்ளிவிபரம் என் மனதில் இருந்தது. அது 1977ம் ஆண்டு தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல் குறித்த புள்ளிவிபரம்.  

அதாவது, 1977ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2 கோடியே 73 லட்சம். அதில் 1 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் காங்கிரஸ்-அதிமுக கூட்டணி 36 தொகுதிகளிலும் ஜனதா கட்சி - திமுக கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றி பெறுகின்றனர். காங்கிரஸ் கூட்டணி 40 சதவீத வாக்குகளும் ஜனதா கூட்டணி 30 சதவீத வாக்குகளும் பெறுகின்றன. அடுத்த 3 மாதங்களில்- ஜூன் மாதத்தில் - தமிழக சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. அதில் அதிமுக, திமுக , காங்கிரஸ், ஜனதா ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. அதிமுக 35 சதவீத வாக்குகளும் திமுக 25 சதவீத வாக்குகளும் காங்கிரஸ் 17 சதவீத வாக்குகளும் ஜனதா 16 சதவீத வாக்குகளும் பெற்றன. 

எனக்கு ஏற்பட்ட ஐயம் என்னவெனில் நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு கட்சிகளும் பெற்ற மொத்த வாக்குகள் 70 சதவீதம் ; சட்டசபைத் தேர்தலில் நான்கு கட்சிகளும் பெற்ற மொத்த வாக்குகள் 93 சதவீதம் எனில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இந்த 4 கட்சிகள் அல்லாத ஏதேனும் ஒரு கட்சி 20 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அந்தக் கட்சியின் வாக்குகள் சட்டசபைத் தேர்தலில் குறைந்திருக்க வேண்டும். அவ்விதம் தமிழகத்தில் செல்வாக்கு பெற்றிருந்த கட்சி எதுவாக இருக்கும் என எண்ணி தேர்தல் ஆணையத் தரவுகளைப் பரிசீலித்தேன். 

1977ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 73 லட்சம் . அதில் வாக்களித்தவர்கள் 1 கோடியே 37 லட்சம். 

1977ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 82 லட்சம். அதில் வாக்களித்தவர்கள் 1 கோடியே 32 லட்சம். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டசபைத் தேர்தலுக்கும் இடையே 3 மாத குறுகிய காலம் மட்டுமே இருந்திருக்கிறதே தவிர வாக்காளர் எண்ணிக்கை 5 சதவீதம் கூடி விட்டது. நாடாளுமன்றத் தேர்தலை விட சட்டசபைத் தேர்தலில் வாக்குப்பதிவு 5 சதவீதம் குறைந்து விட்டது. 

சுயேச்சைகளோ அல்லது இதர கட்சிகளோ பெரிய அளவில் வாக்குகளைப் பெறவில்லை. 2 சதவீதம் அளவிலேயே பெற்றிருந்தனர். செல்லாத வாக்குகள் 2 சதவீதம் அளவில் இருந்தன. 

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் போட்டியிட்டதால் கட்சிகளின் வாக்கு சதவீதத்தை வைத்து கட்சியின் வாக்குகளை கணிக்க முடியாது. 

சட்டசபைத் தேர்தலில் ஒரு கட்சிக்கு வாக்களித்தவர் இன்னொரு கட்சிக்கு வாக்களிக்கலாம் அல்லவா? மேலும் அதிமுக சந்தித்த முதல் தேர்தல் அது. இதுதான் அதிமுக பெறும் வாக்கு சதவீதம் என அந்தத் தேர்தலில் கூற முடியாது. மேலும் சில தேர்தலைகளையாவது சந்தித்து வாக்குகளைப் பெற்ற பின் தான் இதுதான் இவர்களின் வாக்கு சதவீதம் என யூகிக்க முடியும் அல்லவா?   

அரசியல்வாதியின் துயரங்கள் (நகைச்சுவைக் கட்டுரை)

நம் நாட்டில் சாமானியர்கள் அரசியல்வாதிகளை பிரமிப்புடன் கண்டு அவர்கள் முன் பணிகிறார்கள் என்பது ஓர் உண்மை என்றால் மனதுக்குள் அரசியல்வாதிகளை வெறுக்கவும் வசை பாடவும் செய்கிறார்கள் என்பது இன்னொரு உண்மை.  

15 ஆண்டுகளுக்கு முன் நான் சந்தித்த ஓர் இளம் அரசியல்வாதி என்னிடம் சொன்னார். ‘’அண்ணன்! அரசியல்வாதி எல்லாமே டயபிடிஸ் வந்து தான் அண்ணன் சாவோம். முகூர்த்த நாள் வந்தா 20 கல்யாண வீட்டுக்கு போக வேண்டியிருக்கு. நாம அரசியல்வாதிங்கறதால உள்ள நுழைஞ்சதுமே நேரா டயனிங்க்கு கூட்டிட்டு போய்டுவாங்க. கேசரி, பொங்கல், பூரி , தோசை, இட்லி சாப்பிட்டே ஆகணும். நம்மள ரொம்ப பாத்து பாத்து கவனிப்பாங்க. நிறைய கல்யாணத்துக்குப் போகணும் கொஞ்சமா வைங்கன்னு சொன்னாலும் கேட்க மாட்டாங்க. சாப்பிடாம இலையை மூடினாலும் மனசு புண்பட்டுடுவாங்க. யாராவது ஒருத்தர் மனசை புண்படுத்திட்டா அந்த தகவல் கல்யாண மண்டபத்துல இருக்கற 1000 பேருக்கும் பரவிடும். அவங்க ஒவ்வொருத்தர் 4 பேர் கிட்ட சொன்னா 4000 பேர்ட்ட பரவிடும். அதனால ரொம்ப கஷ்டப்பட்டு 20 கல்யாண வீட்டுக்காரர்களும் சந்தோஷப்படுற மாதிரி சாப்பிட்டுத்தான் அண்ணன் வருவோம். ஆனி , ஆடி மாசமும் மார்கழி மாசமும் தான் அண்ணன் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமான மாசம். அந்த மாசங்கள்ல முகூர்த்தமே கிடையாது.’’

அரசியல்வாதிகள் மனித அகத்தின் இருள் பக்கங்களைக் காணவே வாய்ப்பு அதிகமாக இருக்கிறதோ என நான் எண்ணுவேன். ஒரு அரசியல்கூட்டம் நடக்கிறது என்றால் அது உரையாற்றுவதற்கானது ; ஆலோசிப்பதற்கானது. கூட்டத்தில் 100 பேர் இருக்கிறார்கள் என்றால் ஒருவர் 5 நிமிடம் பேசுகிறார் என்றால் அது 100 பேரின் 5 நிமிடம் என்பதால் 500 நிமிடங்களுக்குச் சமம். பேசுபவர் உரையாற்றத் தெரியாமலோ உள்ளடக்கம் இல்லாமலோ பேசினால் கூட்டத்தில் இருக்கும் அனைவரின் மனமும் அசௌகர்யத்தை உணர்ந்து நெளியத் தொடங்கும். கூட்டத்தின் மனநிலையை அது பாதிக்கும். ஆனால் எல்லா கட்சிகளிலும் 99 சதவீத கட்சிக்காரர்கள் உரையாற்றத் தெரியாமலும் உள்ளடக்கம் இல்லாமலும் தான் பேசுப்வார்கள். பதவியில் இருக்கும் அரசியல்வாதி தன் வாழ்நாள் முழுதும் இதனைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது கூட்டமோ ஆலோசனையோ இருக்கும். தினம் இந்தப் பாடினை அரசியல்வாதிகள் பட வேண்டும். 

அரசியல்வாதி ஒரு கூட்டத்துக்கு வந்தால் அந்த கூட்டம் பொதுவாக குறைந்தபட்சம் 2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரம் நடக்கும். அந்த நேரத்தில் மேடையில் அமர்ந்திருக்கும் அவர்களால் அலைபேசியில் பேச முடியாது . வேறு எந்த விஷயமும் செய்ய முடியாது. உள்ளடக்கம் இல்லாமல் பேசும் உரையாற்றத் தெரியாமல் பேசும் நபர்களின் பேச்சைக் கேட்டே ஆக வேண்டும். 

இந்தத் துயரங்களை எவரிடமும் அரசியல்வாதிகள் பகிர்ந்து கொள்ள முடியாது.

Monday, 22 June 2026

பெருவியப்பு (நகைச்சுவைக் கட்டுரை)

ஊரில் பேருந்து நிலையத்திலிருந்து ( ஊரில் ஒரு பேருந்து நிலையம் தான் இருந்தது ; சென்ற ஆட்சியில் ஊரிலிருந்து 3 கிமீ தொலைவில் இருக்கும் அண்டை கிராமம் ஒன்றில் ( அந்த கிராமத்தை ஊரின் நகராட்சியுடன் இணைக்க நகராட்சி தீர்மானம் போட்டது ; அந்த கிராமம் நாங்கள் ஊராட்சியாகவே இருக்கிறோம் நகராட்சியுடன் இணைய விரும்பவில்லை எனத் தீர்மானம் இயற்றி விட்டது) புதிய பேருந்து நிலையம் கட்டினார்கள். 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு புதிய பேருந்து நிலையத்திலிருந்து எல்லா பேருந்துகளும் இயங்கும் என்றார்கள். மக்கள் யாரும் அங்கே செல்லவில்லை. நகராட்சி எல்லைக்குள் இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கத் தொடங்கினார்கள். புதிய பேருந்து நிலையத்துக்கு மக்கள் வராததால் பேருந்து நிலையத்தை மீண்டும் பழைய பேருந்து நிலையத்துக்கே மாற்றி விட்டார்கள் ) காவிரிக்கரை நோக்கிச் செல்லும் சாலைக்கு ‘’அஞ்சல் அலுவலக சாலை’’ என்று பெயர். இருந்தாலும் அதனை சினிமா தியேட்டர் சாலை என்றே சொல்வார்கள். ஏனென்றால் அந்த சாலையின் கடைசியில் காவிரியின் தென்கரையில் ஒரு பெரிய சினிமா தியேட்டர் இருந்தது ; இருக்கிறது.  இன்று இரவு நண்பர் ஒருவரை ரயில் நிலையத்திலிருந்து ‘’பிக் அப்’’ செய்து கொண்டு பேருந்து நிலையம் வழியே சினிமா தியேட்டர் சாலையில் டூ-வீலரில் சென்று கொண்டிருந்தேன். பேருந்து நிலையம் எதிரில் ஆளும்கட்சியின் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. அந்த சாலையின் கடைசியில் சினிமா தியேட்டருக்கு எதிரில் அவர்களின் மாவட்டப் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. நான் கடந்து சென்ற சிறு பொழுதில் ஒருவர் ஒலிபெருக்கியில் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். ‘’இந்த மாவட்டக் கூட்டத்துக்கு வருகை தந்திருக்கிற மாவட்ட, ஒன்றிய , நகர, மாநிலப் பொறுப்பாளர்களே! இந்தப் பொதுக்கூட்டம் நடக்கிற இடம் சினிமா தியேட்டரின் வாசல். இந்தப் பொதுக்கூட்டம் எனக்கு என்னென்ன ஞாபகங்களை நினைவுபடுத்துகிறது என்றால் இங்கே நம் தலைவரின் எத்தனை படங்களுக்கு கட் அவுட் வைத்திருப்போம் ; போஸ்டர் ஒட்டியிருப்போம் ; தலைவர் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்திருப்போம்; எத்தனை படங்களை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ ரசிகர் மன்ற ஷோவாக பார்த்திருப்போம் ; தலைவர் திரையில் தோன்றும் போது எத்தனை விசில் அடித்திருப்போம் ; அந்த நினைவுகள் தான் எனக்கு வருகின்றன. அப்படி தலைவருக்கு ரசிகர்களாக இருந்த நாம் அரசியல் கட்சியாக ஆகி ஆளும்கட்சியாகவும் ஆகி விட்டோம் என்பதை நினைக்கும் போது அப்படியே ‘’கூஸ்பம்ஸ்’’ மொமெண்ட் ஆக இருக்கிறது. இன்று நாம்தான் ஆளுங்கட்சி என்பதை நம்பவே முடியவில்லை’’ என்றார். 

என்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.