Saturday, 25 July 2026

ரயில் சீட்டாட்டக் கும்பல் - சி பி கி ராம் ஸ் புகார்

 24.07.2026 அன்று மாலை 6.20 மணி அளவில் சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் முத்துநகர் அதிவிரைவு ரயிலில் விழுப்புரம் வரை பயணம் செய்ய பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு ரயிலின் என்ஜினுக்கு அருகில் இருக்கும் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறினேன். தொலைதூரம் செல்லக் கூடிய வண்டி என்பதால் ரயில் புறப்படும் நேரத்துக்கு 1 மணி நேரம் முன்பிருந்தே பயணிகள் அமர்ந்திருந்தனர். ஒரு பகுதியில் 8 பேர் அமரக்கூடிய இருக்கையில் 4 பேர் மட்டுமே அமர்ந்திருந்ததால் அங்கு சென்று அமர்ந்து கொண்டேன். அங்கே இருந்த 4 பேரும் இங்கே அமர ஆட்கள் வருவார்கள் என்றார்கள். நான் அதனைப் பொருட்படுத்தவில்லை. எனக்குத் தேவை அமர ஒரு இருக்கை. அதில் அமர்ந்து கொண்டேன். தொடர்ந்து என்னிடம் இங்கே ஆட்கள் வருவார்கள் என்று கூறிக் கொண்டேயிருந்தார்கள். நான் அதனைப் பொருட்படுத்தவில்லை. ரயிலில் தொலைதூரங்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு வரும் பயணிகள் இருக்கை காலியாக இருக்கிறதே என அமர முயல்வதும் அவர்களிடம் அங்கிருந்தவர்கள் ஆட்கள் வருவார்கள் எனக் கூறுவதும் நடந்து கொண்டேயிருந்தது. ரயில் புறப்படும் நேரத்தில் அவர்கள் குறிப்பிட்ட நபர்கள் இவர்கள் முடக்கி வைத்திருந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் சீசன் டிக்கெட் எடுத்து பயணிப்பவர்கள் என்பதை அவர்கள் பேச்சிலிருந்து யூகிக்க முடிந்தது. ரயில் புறப்பட்டதும் அந்த 7 பேரும் சீட்டுக்கட்டு சூதாட்டம் ஆடத் தொடங்கினர். பணம் வைத்து ஆடினர். இந்த சூதாட்டத்தை நிகழ்த்துவதற்காகவே ரயிலில் தொலைதூரங்களுப் பயணிக்கும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். பணம் வைத்து சூதாடுவது குற்றம். பணம் வைத்து சூதாடும் குற்றச்செயலை ரயிலில் ரயில் இயக்கத்தில் இருக்கும் போது செய்வது அதை விடப் பெரிய குற்றம். ரயில் என்பது குழந்தைகள், மாணவர்கள் , இளைஞர்கள், நடுத்தர வயதினர், மூத்த குடிமக்கள் ஆகியோர் பயணிக்கும் வாகனம். அவர்கள் முன்னிலையில் சூதாட்டம் போன்ற குற்றச் செயலில் ஒரு கும்பல் ஈடுபடுவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். மேலும் ஸ்பீக்கர் மூலம் மிக அதிக சத்தத்தில் திரைப்படப்பாடல்களை ஒலிக்க விடவும் செய்தனர். இந்த கும்பலில் சிலர் மேல்மருவத்தூரில் இறங்கிக் கொண்டனர் ; பலர் திண்டிவனத்தில் இறங்கிக் கொண்டனர். 24.07.2026 மாலை 7.20க்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட முத்துநகர் விரைவு ரயிலில் என்ஜினுக்கு அருகில் இருந்த பொதுப் பெட்டியில் 7 பேர் கொண்ட கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டது என்பதை இந்த புகார் மூலம் பதிவு செய்கிறேன். சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு தொலைதூரம் செல்லும் ரயில்களின் பொதுப் பெட்டியில் பயணிகளுக்கு இடையூறாக ஸ்பீக்கர் மூலம் இரைச்சலை உருவாக்கியும் சீட்டுக்கட்டு சூதாட்டம் ஆடும் கும்பலை மொத்தமாக அடையாளப்படுத்தி அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு இந்தப் புகார் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.    

ஆயிரமும் பூஜ்யமும்

நேற்று காலை எனது வழக்கப்படி இரு சக்கர வாகனத்தை சைட் லாக் செய்து வீட்டில் எல்லார் கண்ணிலும் படும் படி வைத்து விட்டு காலை 8 மணிக்கு சென்னை செல்ல கிளம்பினேன். 1 கி.மீ தூரம் நடந்ததும் என் நண்பர் ஒருவர் விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி முடித்து விட்டு வெளியே வந்தார். என்னைக் கண்டதும் பேருந்து நிலையத்தில் டிராப் செய்கிறேன் என்றார். அவருடன் ஒரு உணவகத்துக்குச் சென்று காலை உணவு அருந்தினேன். பின் பேருந்து நிலையம் சென்றோம். திருத்துறைப்பூண்டியிலிருந்து சென்னை செல்லும் பேருந்து நின்று கொண்டிருந்தது. நடத்துனரிடம் ‘’அண்ணன்! சென்னை போக எத்தனை மணியாகும்?’’ எனக் கேட்டேன்.’’ மதியம் 2.30க்கு வண்டி கிளாம்பாக்கத்துல இருக்கும்’’ என்றார். ’’4 மணிக்கு எழும்பூர்ல ஒருத்தரைப் பார்க்கணும் அண்ணன். சென்னை டிக்கெட் எடுத்துடவா? இல்ல சிதம்பரம் போய் பஸ் மாறிக்கவா?’’ என்றேன். ’’சிதம்பரத்துல நம்ம வண்டி 5 நிமிஷம் மட்டும்தான் நிக்கும். போய்கிட்டே இருக்க வேண்டியது தான்’’ என்றார். பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். மொத்தமே 10 பேர் தான் பேருந்தில் இருந்தோம். நம் மாநிலத்தில் வெள்ளிக்கிழமையன்று பொதுவாக வெளியூர் கிளம்பி செல்வதைப் பெண்கள் தவிர்ப்பார்கள். ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டேன் ; பேருந்தில் அந்த இருக்கையை நான் எப்போதும் விரும்புவேன். என் கையில் ரூ.1000 இருந்தது. அதில் காலை உணவுக்கு நண்பருடன் சேர்ந்து அருந்தியதால் ரூ.200 செலவாகி விட்டது. சென்னைக்கு டிக்கெட் ரூ.250. சிதம்பரத்தில் அனைவரும் இறங்கி விட்டார்கள். புதிதாக 5 பேர் மட்டும் ஏறினார்கள். மொத்த பயணிகள் 6 பேர் தான். நிலக்காட்சிகள் எந்த நிலையிலும் எனக்கு இனியவை. அவற்றில் தோய்ந்திருந்தேன். வடலூரில் அவித்த கடலை வாங்கிக் கொண்டேன். தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டேன். வெயில் கடுமையாக இருந்தது. ஓட்டுநரும் நடத்துனரும் நண்பர்களாகி விட்டார்கள். நடத்துநர் என்னிடம் ‘’சார் ! உங்கள மறைமலர் நகர்ல இறக்கி விடறன். அங்க ரயில்வே ஸ்டேஷன் பக்கம். டிரெயின் புடிச்சு எக்மோர் போயிடுங்க’’ என்றார். சொன்னது போலவே மறைமலர்நகரில் இறக்கி விட்டார். பசி கடுமையாக இருந்தது. உணவருந்தி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என எண்ணினேன். அங்கே இருந்த ஆட்டோ டிரைவரிடம் ‘’பக்கத்துல வெஜிடேரியன் ஹோட்டல் இருக்கா?’’ என்று கேட்டேன். மெயின் ரோட்டிலிருந்து 500 மீட்டர் தூரம் உள்ளே இருக்கும் ஹோட்டல் ஒன்றைக் கூறினார். அங்கே சென்று உணவருந்தினேன். உணவு உண்ணும் போது அந்த ஹோட்டல் உணவில் தஞ்சாவூர் சாயல் இருப்பதை உணர்ந்தேன். பணம் கொடுக்கும் போது ‘’அண்ணன் ! நீங்க பூர்வீகம் பழைய தஞ்சாவூரா?’’ என்று கேட்டேன். அவர் சிதம்பரத்துக்காரர். சிதம்பரம் பழைய தென்னாற்காடு என்றாலும் காவிரி வீர நாராயண ஏரி புண்ணியத்தில் அதுவும் காவிரி டெல்டா என ஒரு கணக்கு. ஹோட்டல் உரிமையாளர் மறைமலைநகர் வந்து 35 ஆண்டுகள் ஆகிறது. வருடம் ஒரு தடவை குலதெய்வம் கோயிலில் சாமி கும்பிட மட்டும் ஊருக்குச் செல்கிறேன் என்றார். உரையாடிக் கொண்டிருந்ததில் இருவரும் மன அணுக்கத்தை உணர்ந்தோம். ஸ்மார்ட்ஃபோனில் செக் செய்து ‘’சார் ! 3.15க்கு சென்னை கடற்கரை செல்லும் ரயில் இருக்கு. அத புடிச்சுடுங்க’’ என்றார். அந்த ரயிலைப் பிடித்து விட்டேன். உணவுக்கு ரூ.100 கொடுத்தது போக ரூ.450 கையில் இருந்தது. மறைமலை நகரிலிருந்து எழும்பூருக்கு கட்டணம் ரூ.10. எழும்பூர் சென்று சேர்ந்தேன். நண்பரைச் சந்தித்த போது நேரம் மாலை 5 மணி. ஒரு மணி நேரம் தாமதம். மறைமலைநகரில் இருக்கும் போதே குறுஞ்செய்தி அனுப்பி சந்திக்க 5 மணி ஆகும் எனக் கூறியிருந்தேன். ஒரு மணி நேரம் நடந்த சந்திப்பு உபயோகமானதாக இருந்தது. நண்பர் தேனீர் தயாரித்து அளித்தார். சந்திப்பு முடிந்ததும் புறப்பட்டு எழும்பூர் ரயில் நிலையம் வந்தேன். அப்போது நேரம் 6.15. அப்போதுதான் புதுச்சேரி மெமு கிளம்பியது. முத்துநகர் எக்ஸ்பிரஸ் அடுத்த வண்டி அதில் விழுப்புரம் வரை மட்டுமே செல்ல முடியும். அங்கேயிருந்து வண்டி மாற வேண்டும்.  கிளம்பும் மனநிலைக்கு வந்து விட்டதால் அதில் ஏறினேன். பொதுப் பெட்டியில் எட்டு பேர் இருக்கும் இடத்தில் 4 பேர் மட்டும் இருந்தனர். அதில் சென்று அமர்ந்து கொண்டேன். இந்த இடத்துக்கு ஆள் வருகிறார்கள் என அவர்கள் கூறியதை நான் பொருட்படுத்தவில்லை. பல பயணிகளிடம் அவர்கள் இந்த பதிலைக் கூறி அமர விடாமல் செய்தனர். வண்டி கிளம்பும் நேரத்தில் அங்கே அமர்ந்திருந்தவர்களின் நண்பர்கள் வந்து அமர்ந்தனர். அது ஒரு சீட்டாட்டக் கும்பல். வண்டி புறப்பட்டதும் பணம் வைத்து சீட்டுக்கட்டு சூதாட்டம் நடத்தினர். ஒருவர் ஒரு ஸ்பீக்கர் மூலம் திரைப்பாடல்களை அலற வைத்தார். ரயிலில் பெருங்கூட்டம் பொதுப்பெட்டியில் நின்று கொண்டு வந்தது. அந்தப் பெருங்கூட்டம் அவர்கள் சீட்டாட்டத்துக்கு வசதியாக இருந்தது. இவர்கள் அனைவரும் ரயில் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள். இவ்விதம் சூதாடுவதை பல வருடமாகப் பழகியிருக்கிறார்கள் எனப் புரிந்து கொண்டேன். இதைப் பற்றி ஊருக்குச் சென்றதும் ரயில்வேயில் புகார் கொடுப்போம் என எண்ணினேன். மேல்மருவத்தூரில் சிலரும் திண்டிவனத்தில் அனைவரும் அந்த சீட்டாட்டக் கும்பல் ஆட்கள் இறங்கி விட்டனர். விழுப்புரம் வந்த போது நேரம் இரவு 10. ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றில் ஒரு தோசை மட்டும் உண்டு விட்டு ரயில் நிலைய நடைமேடை பெஞ்சு ஒன்றில் படுத்து உறங்கி விட்டேன். விழுப்புரம் ரயில் நிலையம் 15 நிமிடத்துக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு ரயில் கடக்கும் நிலையம். அதனால் எப்போதும் அறிவிப்புகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். எனவே கொஞ்ச நேரத்தில் விழிப்பு வந்து விடும் என எண்ணித்தான் படுத்தேன். ஆழமாக உறங்கி விட்டேன். விழித்துப் பார்த்தால் நேரம் அதிகாலை 2.45. ஊருக்குச் செல்லும் ரயில்கள் அனைத்தும் கடந்து சென்றிருந்தன. அடுத்த வண்டி காலை 6 மணிக்கு. எனவே கோலியனூர் கூட்டு ரோடு சென்று பஸ் பிடித்து சேத்தியாத்தோப்பு கூட்டு ரோடுக்கு டிக்கெட் எடுத்தேன். பஸ் ஏறியதும் தூங்கி விட்டேன். வண்டி சேத்தியாதோப்பு சென்ற போதுதான் விழிப்பு வந்தது. அங்கே இறங்கி சிதம்பரம் பஸ் பிடித்து வந்தேன். கையில் எவ்வளவு இருக்கிறது எனப் பார்த்தேன். ரூ. 35 இருந்தது. ஊர் செல்லும் பேருந்திற்குச் சென்று ஊருக்கு பஸ் கட்டணம் எவ்வளவு என்று கேட்டேன். ரூ.35 என்றார். பயணச்சீட்டு எடுத்து விட்டு பஸ்ஸில் அமர்ந்து உறங்கத் தொடங்கினேன். ஊரை நெருங்கும் போது விழிப்பு வந்தது. ‘’கால்டெக்ஸ்’’ நிறுத்தத்தில் இறங்கி வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன். நேற்று கையில் ரூ.1000 உடன் பயணித்தேன். இப்போது கையில் பூஜ்யத்துடன் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தேன். ‘’ஆயிரமும் பூஜ்யமும்’’ என மனதில் தோன்றியது. இன்று நிறைய வேலைகள் இருந்தன. நேற்று ரயிலில் பயணம் செய்த போது ஊரின் ரயில்வே பாதுகாப்பு படையிலிருந்து ஃபோன் செய்தனர். சீர்காழி தீ விபத்து தொடர்பாக எனது வாக்குமூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று. காலை 10 மணிக்கு வருகிறேன் எனக் கூறியிருந்தேன். முத்துநகர் எக்ஸ்பிரஸின் சூதாட்டக் கும்பல் குறித்து சி பி கி ராம் ஸ் இணையதளத்தில் புகார் பதிவு செய்தேன். 

Thursday, 23 July 2026

ஆம்புலன்ஸ்

 இன்று மதியம் சீர்காழியிலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தேன். சோழசக்கர நல்லூர் அருகில் சைக்கிளில் சென்ற ஒருவரும் மோட்டார்சைக்கிளில் சென்ற ஒருவரும் மோதி இருவருக்கும் பலத்த அடி. இருவர் தலையிலும் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. மக்கள் கூட்டமாகக் கூடியிருந்தனர். நான் வண்டியை நிறுத்தி விட்டு 108 ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்தேன். மயிலாடுதுறை தலைமை மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வரும் எனக் கூறினார்கள். சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் டிரைவர் எனக்கு ஃபோன் செய்தார். ‘’இருவருக்கு வலுவான் அடி. இருவர் தலையிலும் ரத்தம் கொட்டுகிறது. முதலுதவி அவசியத் தேவை ‘’ என்றேன். 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. ஒருவர் சிகிச்சை எடுக்க பைக்கின் பின்னால் அமர்ந்து சென்று விட்டார். இன்னொருவருக்கு ஆம்புலன்ஸ் மருத்துவப் பணியாளர்கள் முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆம்புலன்ஸ் புறப்பட்டுச் சென்றதும் நான் கிளம்பினேன். 

விரிவான செய்திக் கட்டுரை

 இன்று மதியம் தினமலர் நிருபர் ஃபோன் செய்தார். தினமலர் பத்திரிக்கை மைதானத்தில் கூடாரத்தில் வசிக்கும் 7 குடும்பங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் குறித்து விரிவான செய்திக் கட்டுரை கேட்டிருப்பதாகச் சொன்னார். நாளை காலை அங்கு சென்று முழு தரவுகளைச் சேகரிக்க உள்ளோம். 

தினமலர் செய்தி

 


பத்திரிக்கை செய்தி

செம்பனார்கோவிலில் மைதானத்தில் பிளாஸ்டிக் ஷீட்டால் ஆன கூடாரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் வசிக்கும் 7 குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரைக் குறித்த செய்தி இன்றைய தினமலரில் வெளியாகியிருக்கிறது.   

ஏற்றம் பெறுமா ஏழு குடும்பங்கள்?

 நாடு முழுமைக்குமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இந்த ஆண்டு நிகழ்கிறது. முதல் கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பும் அதன் பின் மக்கள்தொகை கணக்கெடுப்பும் நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது. சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக முழு கணக்கெடுப்பும் டிஜிட்டல் முறையில் நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் குடிமக்கள் தங்கள் வீடு வசதிகள் தொடர்பான விபரங்களை சுயமாக பூர்த்தி செய்யும் வகையிலான வசதி இந்த முறை மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதன் படி அலைபேசி வைத்திருப்பவர்கள் se(dot)census(dot)gov(dot)in என்ற இணைய தளத்தில் தங்கள் வீடு வீட்டில் இருக்கும் வசதிகள் குறித்த விபரங்களைப் பதிவிட முடியும். அவ்விதம் பதிவிடுபவர்களுக்கு ஒரு பதிவு எண் வழங்கப்படும். அந்தப் பதிவு எண்ணை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள் வீடுகளுக்கு வரும் போது அவர்களிடம் வழங்கினால் அவர்கள் தங்களுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு ஸ்மார்ட்ஃபோனில் அதனை உள்ளீடு செய்ய குடிமக்கள் பதிவு செய்திருந்த விபரங்கள் முழுவதும் அலுவலரின் ஸ்மார்ட்ஃபோன் பதிவில் இடம் பெறும். கணக்கெடுப்பாளர்களின் நேரத்தை சேமிக்க உதவுவதும் உலகின் மாபெரும் மக்கள்தொகை கொண்ட நம் நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பில் குடிமக்களையும் ஈடுபடுத்துவமான செயல்பாடாகும் இது. ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை சுய கணக்கெடுப்பில் குடிமக்கள் ஈடுபட முடியும். தமிழக முதலமைச்சர் ஜோசஃப் விஜய் சுய கணக்கெடுப்பு மூலம் தனது விபரங்களை மக்கள்தொகை கணக்கெடுப்பு இணையதளத்தில் பதிவிட்டதை அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் தமிழக மக்கள் கவனத்துக்கு பரவாலக் கொண்டு சென்றன. மேலும் தமிழக முதலமைச்சர் பெரிய அளவில் தமிழக மக்கள் சுய கணக்கெடுப்பு செயலில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், செம்பனார் கோவில் கிராமத்தில் காவல் நிலையத்துக்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் ஏழு பட்டியல் பழங்குடியினர் குடும்பத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வடலூரைப் பூர்வீகமாகக் கொண்ட அவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செம்பனார்கோவில் காவல் நிலையத்துக்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் வசிக்கின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதும் மூங்கில் கூடை முடைவதும் அவர்கள் தொழில் ஆகும். ஏழு குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரில் குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் முதியவர்கள் ஆகியோரும் உள்ளனர்

 

அவர்கள் மைதானத்தின் தெற்குப் பகுதியில் பாலிதீன் ஷீட்களால் ஆன கூடாரங்களை அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர். கூடாரத்தின் தரை மண் தரை ஆகும். கூடாரத்தின் கூரையும் பக்கச்சுவர்களும் பாலிதீன் ஷீட்டால் ஆனவை. மின்சார வசதி இல்லை. இரவில் விளக்கு வசதி இல்லை. குழந்தைகள் சாலையில் இருக்கும் மின்விளக்கு வெளிச்சத்தில் படிக்கின்றன. சமையல் திறந்தவெளியில் விறகடுப்பு கொண்டு நடக்கிறது. சமையல் எரிவாயு இணைப்பு எவருக்கும் இல்லை. குளியலறை வசதி இல்லை. 7 குடும்பத்தைச் சேர்ந்த 50 பேருக்கும் கழிவறை வசதி இல்லை. பிளாஸ்டிக் பொருள் வணிகத்துக்குச் செல்லும் ஆண்கள் இரு சக்கர வாகனம் வைத்திருக்கின்றனர். அனைத்து குடும்பங்களும் அலைபேசி பயன்படுத்துகின்றனர். அலைபேசி பயன்படுத்துவதால் இணைய வசதி இருக்கிறது.

 

ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை அன்று செம்பனார்கோவில் காவல் நிலையத்துக்கு எதிரில் வசிக்கும் ஏழு பட்டியல் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 7 குடும்பத்தினர் மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபர இணையதளத்தில் தங்கள் குடியிருப்பின் நிலை குறித்து கேட்கப்பட்ட 33 கேள்விகளுக்கும் பதில் அளித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபரப் பதிவு எண்ணைப் பெற்றனர்.

வீட்டின் தரை எதனால் ஆனது என்னும் கேள்விக்கு மண்ணால் ஆனது என்றும் வீட்டின் கூரையும் பக்கச்சுவரும் எதனால் ஆனது என்னும் கேள்விக்கு பாலிதீன் ஷீட்டால் என்றும் சொந்த வீடா வாடகை வீடா அல்லது மற்றவை என்னும் பகுப்பில் வரும் வீடா என்னும் கேள்விக்கு மற்றவை என்றும் விளக்கு வசதி இருக்கிறதா என்னும் கேள்விக்கு இல்லை என்றும் சமையலறை , குளியலறை, கழிவறை இருக்கிறதா என்னும் கேள்விக்கு இல்லை என்றும் பதிலைப் பதிவு செய்தனர். குடிநீர் ஆதாரம் என்ன என்னும் கேள்விக்கு ஊராட்சியின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலம் சற்று தொலைவில் கிடைக்கிறது என பதிவு செய்தனர். இணைய வசதி உள்ளதா என்னும் கேள்விக்கு அலைபேசி மூலம் இணைய வசதி இருக்கிறது என்றும் பதிவு செய்தனர்.

 

நாட்டின் குடிமக்களாக அரசு எதிர்பார்க்கும் விதமாக மக்கள்தொகை கணக்கெடுப்பின் சுய விபரம் அளித்தலில் ஈடுபட்டிருக்கும் செம்பனார்கோவில் பட்டியல் பழங்குடியின 7 குடும்பங்களும் மாவட்ட நிர்வாகத்தையும் மாநில அரசையும் மத்திய அரசையும் தாங்கள் பதிவு செய்திருக்கும் தரவுகள் சென்றடையும் என நம்புகிறார்கள். சாமானிய வசதிகள் கூட இல்லாமல் வாழும் தங்கள் வாழ்நிலையை மக்கள்தொகை கணக்கெடுப்பின் சுய விபரப் பதிவு மாற்றியமைக்கும் என அந்த 7 குடும்பத்தினரும் தீவிரமாக நம்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கையை மெய்யாக்குவது மாவட்ட நிர்வாகம், மாநில மத்திய அரசுகள் கையில் இருக்கிறது.

சுய விபரப் பதிவு (நகைச்சுவைக் கட்டுரை)

நேற்று ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். 

இப்போது யாரைச் சந்தித்தாலும் மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபரப் பதிவு செய்து விட்டீர்களா எனக் கேட்கிறேன். பலரும் இல்லை என்கிறார்கள். சிலர் நான் கேட்ட பிறகு அதனால் உந்தப்பட்டு செய்து விட்டு பின்னர் என்னிடம் தகவல் தெரிவிக்கிறார்கள்.  

நண்பரின் வீட்டில் நண்பரும் அவரது மனைவியும் இருக்கிறார்கள். இருவருமே சீனியர் சிட்டிசன். குழந்தைகள் வெளியூரிலும் வெளிநாட்டிலும் வேலை பார்க்கிறார்கள். 

சிறிது நேர உரையாடலுக்குப் பின் ‘’மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபரப் பதிவு செய்து விட்டீர்களா’’ எனக் கேட்டேன். 

‘’வாட்ஸப் பில் நிறைய மெஸேஜ் இது பத்தி வந்தது. இன்னும் செய்யல’’ என்றார்கள். 

‘’உங்களோட ஐ பேட் கொடுங்க’’

’’ஐ பேட் , லேப் டாப் இரண்டையும் தம்பி கொண்டு போயிருக்கான்’’

‘’உங்க ஸ்மார்ட்ஃபோன் கொடுங்க’’

சற்று தயக்கத்துடனே கொடுத்தனர். 

எனக்கு இந்த சுய விபரப் பதிவில் நல்ல பழக்கம் இருப்பதால் சர சர என ஸ்மார்ட்ஃபோனில் இயங்க ஆரம்பித்தேன். அவர்கள் இருவருக்கும் இவன் சாதாரண ஜி எஸ் எம் ஃபோன் பயன்படுத்துபவன் தானே . ஸ்மார்ட்ஃபோனில் இவனால் 33 கேள்விகளுக்கும் பதில் சொல்லி எடுத்த காரியத்தை முழுக்க முடிக்கத் தெரியுமா அல்லது பாதி பிராசஸில் விஷயத்தை நிறுத்தி வைத்து விடுவானா என ஐயம். எனக்கு ‘’நாள் முழுவதும் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துகிறார்கள். என்ன ஏது என உள்நுழைந்து பார்த்தால் தான் என்ன’’ என்று எண்ணம். 

பெயரும் அலைபேசி எண்ணும் உள்ளிட்டு பக்கத்தைத் திறந்தேன். வீட்டின் அமைவிடத்தை கூகுள் மேப்பில் குறிக்க வேண்டும். முதல் முறை இணையத்தின் வேகம் ஒத்துழைக்கவில்லை ; இருவரும் சோர்ந்து விட்டார்கள். உடன் விரைவாக மீண்டும் உள்சென்று கூகுள் மேப்பில் வீட்டின் அட்ச ரேகையையும் தீர்க்க ரேகையையும் குறித்து விட்டேன். எல்லா கேள்விகளுக்கும் பதில் பதிவு செய்தேன். வீடு சொந்த வீடு. வீட்டின் தரை கல் ( மார்பிள்). வீட்டு வளாகத்தில் சுத்திர்கரிக்கப்பட்ட குடிநீர் இருக்கிறது. சமையல் எரிவாயு இணைப்பு உண்டு. பிரதான உணவு அரிசி. இணையம், டிவி, ரேடியோ, இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் உண்டு. பதிவு முடிந்தது. 

சுய விபர எண் கிடைத்தது. 

‘’இதை ஒரு நோட்ல எழுதி வச்சுக்கங்க. கணக்கெடுக்க வர்ரப்ப சொல்லுங்க’’ என்றேன். 

‘’ஸ்கிரீன் ஷாட் எடுத்துக்கறன்’’ எனக் கூறி எடுத்துக் கொண்டார்கள். 

கிஷோர்

திருவாரூர் வடக்கு வீதி முக்கில் ஒரு சிறுவன் என்னிடம் ‘’லிஃப்ட்’’ கேட்டான். பள்ளி மாணவன்.  சீருடை அணிந்திருந்தான்.

வண்டியை நிறுத்தி ஏற்றிக் கொண்டேன். ‘’ரொம்ப நன்றி அண்ணன்’’ என்றான்.

’’இப்பதானே டிராவல் ஆரம்பிச்சுருக்கோம். நீ போக வேண்டிய இடத்துக்கு கொண்டு போய் விட்டதும் நன்றி சொல்லு’’எனக் கூறி வாகனத்தை தொடர்ந்து இயக்கினேன். 

‘’உன் பேரு என்ன தம்பி’’

‘’கிஷோர்’’

‘’உன் பேருக்கு என்ன அர்த்தம்னு உனக்குத் தெரியுமா?’’

‘’பேருக்கு அர்த்தம் இருக்குமா அண்ணன். எனக்கு இந்த விஷயம் புதுசா இருக்கு அண்ணன்’’ 

‘’எல்லா பேருக்கும் ஒரு அர்த்தம் இருக்கும் தம்பி. ஒன்னு அது நவுனா இருக்கும் இல்லன்னா வெர்ப் ஆ இருக்கும். இப்ப ஒருத்தருக்கு பேரு ராஜன் அப்படின்னா ராஜ்யத்தை ஆள்றவன் அப்படின்னு அர்த்தம். ராஜ்யத்தை ஆள்றவன் ராஜன்’’

‘’என் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியல அண்ணன்?’’

‘’நீ வேலைக்கு ஒரு இண்டர்வியூக்கு போனா உன் கிட்ட முதல் கேள்வியே உன் பேருக்கு என்ன அர்த்தம்னு கேப்பாங்க. உனக்கு தெரிஞ்சுருந்து நீ சொன்னா நீ பிரிபேர்டா வந்திருக்கன்னு அர்த்தம். தெரியலன்னு சொன்னா அவங்களுக்கு ஆரம்பத்துலய உன் மேல ஒரு அப்பர் ஹேண்ட் உருவாகும்.’’

‘’இதெல்லாம் இண்டர்வியூ ல கேப்பாங்களா அண்ணன்’’

‘’நிச்சயம் கேப்பாங்க.’’

‘’உங்களுக்கு என் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா அண்ணன்?’’

‘’கிஷோர். உன் பேருக்கு என்ன அர்த்தம்னா பிறந்த குழந்தையை சிசுன்னு சொல்வாங்க. 3 வயசு குழந்தையை பாலன்னு சொல்வாங்க, 10 வயசு இருக்கற குழந்தையை கிஷோர்னு சொல்வாங்க. 18 வயசானா தருண் - இளைஞன்னு சொல்வாங்க. கிஷோர்னா சிறுவன்னு அர்த்தம். இந்த பேரு ஸ்ரீகிருஷ்ணனைக் குறிக்கற பேரு. அவன் தான் சிசுவாவும் கடவுளாவும் இருந்தவன். பாலனாவும் கடவுளாவும் இருந்தவன். சிறுவனாவும் கடவுளாவும் இருந்தவன். இளைஞனாவும் கடவுளாவும் இருந்தவன். ராமனுக்கும் இந்த பேரு பொருந்தும் ஆனா கிருஷ்ணனுக்குத்தான் ரொம்ப பொருந்தும்.’’

’’அண்ணன் இதே மாதிரி வேற ஏதாவது பேருக்கு அர்த்தம் சொல்லுங்க’’

‘’ஜெய் அப்படின்னா வெற்றின்னு அர்த்தம். விஜய் அப்படின்னா புகழுடன் கூடிய வெற்றின்னு அர்த்தம்’’

‘’அண்ணன்! உங்களுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சுருக்கு அண்ணன்’’

‘’எந்த விஷயத்துலயும் ஆர்வமா இருக்கணும். ஆர்வம் இருந்தா நிறைய விஷயம் தெரிஞ்சுக்கலாம்’’

‘’உலகத்துல உள்ள எல்லா மொழிகள்ல இருக்கற பேருக்கும் அர்த்தம் உண்டா அண்ணன்’’

‘’நிச்சயம் உண்டு’’

கிஷோர் இறங்க வேண்டிய இடம் வந்தது. இறக்கி விட்டேன். 

கிஷோர் நன்றி சொன்னான். 

’’வீட்டுக்குப் போய் கூகுள் செஞ்சு கிஷோர் மீனிங் பாரு’’என்று கூறி விட்டு புறப்பட்டேன்.  

Sunday, 19 July 2026

ஏழு குடும்பங்கள்

ஊரின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தூரத்தில் கிழக்கு திசையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய்யும் 7 குடும்பங்கள் ஒரு மைதானத்தில் பாலிதின் கூடாரம் அமைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். குடும்பத் தலைவர்கள் பகலில் காலையில் கிளம்பி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய சென்று விடுவார்கள். அவர்கள் வீட்டுப் பெண்கள் சமையல் பணிகளிலும் கூடை பின்னும் பணியிலும் ஈடுபட்டிருப்பார்கள். குழந்தைகள் பள்ளிக்குப் படிக்கச் செல்கின்றன.  

மக்கள்தொகை கணக்கெடுப்பு- சுய விபரம் அளித்தல் முறையில் விபரம் பதிவு செய்ய மைதானத்தில் வசிக்கும் இந்தக் குடும்பத்தினரை அணுக முடிவு செய்தேன். இன்று காலை அங்கே சென்று மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபரம் அளித்தல் தொடர்பான விஷயங்களைச் சொன்னேன். அவர்கள் அனைவரும் ஆர்வமாக இருந்தனர். எவ்விதம் சென்சஸ் இணையதளத்தில் சுய விபரம் பதிவு செய்வது என்பதை அவர்களுக்கு விளக்கினேன். அனைவரிடமும் அலைபேசி இருந்ததால் அனைவரும் சுய விபரம் பூர்த்தி செய்து சென்சஸின் சுய விபர குறியீட்டு எண்ணைப் பெற்றனர். 

மக்கள் தொகை கணக்கெடுப்பு கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் : 

வீட்டின் தரை எதனால் ஆனது ? மண்ணால்

வீட்டின் சுவர் எதனால் ஆனது ? பாலிதீன் ஷீட்டால்

வீட்டின் கூரை எதனால் ஆனது ? பாலிதீன் ஷீட்டால்

குடிநீர் எவ்விதம் கிடைக்கிறது ? ஜல்ஜீவன் திட்டத்தின் பொது தண்ணீர்க் குழாய்

வீட்டில் கழிவறை இருக்கிறதா? இல்லை

வீட்டில் குளியலறை இருக்கிறதா? இல்லை

வீட்டில் விளக்கு இருக்கிறதா? இல்லை

வீட்டிற்குள் சமையல் நடக்கிறதா ? இல்லை ; திறந்த வெளியில்

சமையல் எரிபொருள் என்ன? விறகு

இந்த சுய விபரம் அளித்தல் அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் அவர்கள் வாழ்நிலை மேம்பட உதவும் என்று என் மனத்துக்குப் பட்டது. சுய விபரம் மூலம் பதிவு செய்யப்படும் விபரங்களின் மொத்த தொகுப்பை மாவட்ட ஆட்சியர் தன் கணிணி மூலம் நேரடியாகக் காண முடியும். அவ்விதமெனில் மேற்படி நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. இவ்விதமான நிலையில் 7 குடும்பத்தினர் மட்டுமே இப்பிராந்தியத்தில் இருக்கின்றனர் என்பதால் இவர்களின் வாழ்நிலையை மாற்ற இந்த சுய விபரம் அளித்தல் உதவும் என்று என் மனத்துக்குப் பட்டது. 

தினசரி பத்திரிக்கைகளின் நிருபர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு மைதானத்தில் கூடாரத்தில் வாழும் ஏழு குடும்பங்கள் சுய விபரம் அளித்தல் பணிகளைச் செய்திருப்பதைச் சொன்னேன். நேரில் சென்று அந்த விஷயம் குறித்து விசாரித்து பத்திரிக்கையில் செய்தியாக வெளியிட அவர்கள் ஆர்வமாயிருந்தனர். 7 குடும்பத்தினரை அவர்கள் சுய விபர எண்ணுடன் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு மனு அனுப்பக் கூறலாம் என உத்தேசித்துள்ளேன். 

சில தினங்களுக்கு முன்னால் தமிழக முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் தனது முதல்வர் நாற்காலியில் அமர்ந்து மக்கள்தொகை கணக்கெடுப்பின் சுய விபரப் பதிவை மேற்கொண்டதை பத்திரிக்கைகளும் காட்சி ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன. திறந்தவெளி மைதானத்தில் பாலிதீன் கூரையும் பாலிதீன் சுவரும் கொண்ட கூடாரத்தில் வசிக்கும் மின்வசதி இல்லாத எரிவாயு இணைப்பு இல்லாத விறகில் சமைத்து வாழும் ஏழு குடும்பங்களும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் சுய விபரப் பதிவை மேற்கொண்டிருக்கின்றனர் என்பது முதல்வர் பதிவு செய்து கொண்டதற்கு சமமான செய்தி முக்கியத்துவம் கொண்டது என்றே நான் கருதுகிறேன்.