நமது மனம் பழக்கத்துக்கு உட்பட்டது. அதனை பழக்கப்படுத்த முடியும் ; ஒரு பிராணியைப் பழக்குவதைப் போல. பழகிய விஷயத்துக்கு மீண்டும் மீண்டும் உட்பட்டவாறே இருப்பது மனதின் இயல்பு. மனதுக்குப் புதிய ஒன்றை அறிமுகப்படுத்தினால் அதனை உடனே ஏற்காது. அதற்கு சில தடைகளை அளிக்கும். அதைத் தாண்டியும் நாம் உறுதியாக இருந்தால் புதியவற்றை மனம் ஏற்கத் துவங்கி விடும்.
நாம் முதல் நாள் இரவு ஒரு புதிய ஊருக்குச் சென்றிருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். தூங்கி காலை விழிக்கிறோம். ஒரு நடை செல்கிறோம் எனில் நம் மனம் அங்கே இருக்கும் சிறு சிறு விஷயங்களையும் கவனிக்கும். பூத்து நிற்கும் மரம், சிறு செடிகள், மண்டிக் கிடக்கும் புல், வீதியில் திரியும் நாய்கள், அப்பகுதியின் கட்டிடங்கள், அதன் மதில் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் என அனைத்தையும் நம் மனம் நுட்பமாக கவனிக்கும். பார்க்கும் காட்சிகளில் மனம் லயிக்கும். நாம் வருஷக்கணக்காக வாழ்ந்த ஊரில் ஒரு புது ஊரில் ஏற்படும் லயிப்பு ஏற்படாது.
மனம் இயங்கும் விதத்தை ஒரு அளவீட்டுக்குள் கொண்டு வருவோமானால் அதற்கு 1 -10 வரை என அளவீடு அளித்தால் பல வருஷம் பழகிய ஊரில் அதன் உற்சாகம் 3 என இருக்கும் ; புதிய ஊரில் அதன் உற்சாகம் 7 என இருக்கலாம். வழமையை விட உற்சாகத்தை விரும்புபவர்கள் புதிய ஊருக்குச் செல்லலாம் என நினைப்பார்கள். பத்தாயிரத்தில் ஒருவருக்கே அவ்விதம் தோன்றும். ஏனென்றால் மனிதர்கள் பொதுவாக வழமையில் தங்களைப் பொருத்திக் கொள்பவர்கள். புதிய ஒன்றை நோக்கிச் செல்ல தயங்குபவர்கள்.
நீங்கள் பல வருஷம் ஒரு ஊரில் வசித்திருக்கிறீர்கள். பின் 3 ஆண்டுகள் வேறு ஒரு ஊரில் இருந்து விட்டு அதன் பின் மீண்டும் பழைய ஊருக்கு வருகிறீர்கள் என்றால் அப்போது பழைய ஊரிலும் புதிதாக உணர வாய்ப்பு உண்டு.