நேற்று எனது கவனத்துக்கு ஒரு விஷயம் வந்தது. எனது ஆலோசனையைக் கேட்டார்கள்.
அதாவது, பெங்களூரில் எனது நண்பர் ஒருவர் ஃபிளாட் வாங்குகிறார். ஃபிளாட் உரிமையாளர் அமெரிக்காவில் இருக்கிறார். அவரது மேலாளர் கிரயத் தொகையில் 10 சதவீதத்தை உரிமையாளர் சார்பாக நண்பரிடமிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார். கிரய ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு தபாலில் அனுப்பப்பட்டு உரிமையாளரின் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. நண்பர் வங்கிக் கடன் ஏற்பாடு செய்து விட்டார். கிரய ஆவணத்திலும் தபால் மூலம் கையெழுத்திட்டு அனுப்புகிறேன் எனக் கூறுகிறார் உரிமையாளர். அந்த கையெழுத்திட்ட ஆவணத்தை மட்டும் பதிவாளர் முன் சமர்ப்பிக்க தனது மேலாளருக்கு பவர் ஆஃப் அட்டர்னி தந்துள்ளார். இவ்விதமே தொடரலாமா என்று நண்பர் என்னிடம் கேட்டார்.
நண்பர் மிகவும் சோர்வான குரலில் பேசினார். பலரிடம் விவாதித்து சோர்ந்திருப்பார் என யூகித்தேன்.
ஃபிளாட் உரிமையாளரை அவரது மேலாளருக்கு முழுமையான பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்கச் சொல்லுங்கள் என்று சொன்னேன். அந்த பவர் ஆஃப் அட்டர்னியில் நண்பர் வாங்க இருக்கும் சொத்தை முழுமையாகக் குறிப்பிட்டு பவர் வாங்க வேண்டும். அதன் பின் மேலாளர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரில் வர உரிமையாளர் சார்பில் கையெழுத்திட்டு பதிவினை நிறைவு செய்யுங்கள் என்று சொன்னேன்.
ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவன் என்ற முறையில் நண்பரின் வலியை உணர்கிறேன். நான் சொன்ன வழிமுறையைத் தவிர வேறு எது செய்தாலும் நண்பர் சிக்கலில் சிக்கிக் கொள்வார். ஃபிளாட் உரிமையாளர் தான் ‘’வெளிநாடு வாழ் இந்தியர்’’ என்பதை வெளிக்காட்டாமல் பத்திரப்பதிவை முடிக்கப் பார்க்கிறார். அதற்கு அவர் பத்திரப்பதிவுக்காவது இந்தியா வர வேண்டும். அவ்விதம் இல்லாமல் அமெரிக்காவில் இருந்து கிரய ஆவணத்திலும் கையெழுத்திட்டு அதில் அமெரிக்க அட்வகேட்டின் முத்திரையுடன் அனுப்புகிறார் என்றால் அவர் வெளிநாடு வாழ் இந்தியர் என்பது ‘’ஃபிளாட் வாங்குபவர்’’ ஆன நண்பரும் அறிந்த விஷயம் இது என்றாகிவிடும். கிரய ஆவணத்தின் தேதிக்கும் வங்கி அளிக்கும் வரைவோலை அல்லது காசோலையின் தேதிக்கும் வித்தியாசம் வந்து விடும். உதாரணத்துக்கு மார்ச் 1ம் தேதி கிரய ஆவணம் கையெழுத்தாகிறது எனில் அதில் மார்ச் 4 தேதியிட்ட காசோலையோ அல்லது வரைவோலையோ குறிப்பிடப்பட முடியாது. காசோலை அல்லது வரைவோலையின் தேதியை ஆவணத்தில் குறிப்பிடாமல் இருந்தால் அது நண்பருக்குத்தான் பின்னடைவு.
நண்பருக்குக் கடன் அளிப்பது தேசியமயமாக்கப்பட்ட வங்கி. அவர்கள் வழக்கறிஞர் இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் கவனமாக அணுகியிருக்க வேண்டும் என்பதும் வங்கி மேலாளர் இந்த கோப்பு தொடர்பாக நண்பருக்கு முன்னெச்சரிக்கை அளித்திருக்க வேண்டும் என்பதும் என் எதிர்பார்ப்பு.
அவசியம் என்றால் சொல்லுங்கள் நான் வந்து உடன் இருக்கிறேன் என்றேன்.