பிரபு மயிலாடுதுறை
Sunday, 24 May 2026
கலியபெருமாள் திருவடியில்
விடுதலையின் பற்பல வாசல்கள்
Saturday, 23 May 2026
முக்கியத்துவம் பெறும் ஆளுநர்
இந்திய அரசியல் அமைப்பில் மாநில ஆளுநர் பதவிக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது. குடியரசுத் தலைவருக்கும் மத்திய அரசுக்கும் மாநில ஆளுநர் மாநிலத்தில் மாநில அரசு இயங்குமுறை குறித்து அளிக்கும் அறிக்கை என்பது மிகவும் முக்கியமானது. மாநில நடப்புகள் குறித்து ஆளுநரின் மக்கள் மாளிகை தயாரித்து அளிக்கும் அறிக்கைகள் மிக முக்கிய ஆவணங்கள் ஆகும். இந்திய அரசியல் சாசனம் பல விஷயங்களில் குடியரசுத் தலைவருக்கு அளித்திருக்கும் அதிகாரத்தை விடவும் அதிகமாக ஆளுநருக்கு அதிகாரம் அளித்துள்ளது.
2021லிருந்து 2026 வரை நடைபெற்ற ஆட்சியில் மாநில ஆளுநர் பலவிதங்களில் முறையான மதிப்பு அளிக்கப்படாமல் இருந்தார். ஆளுநரின் பல சாதாரணமான பரிந்துரைகள் கூட ஏற்கப்படாமல் இருந்தன. சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது உரை துவங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஆளுநர் கோரினார். பல கடித போக்குவரத்துக்குப் பின் அது சாத்தியமானது. மகாத்மா காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி கிண்டியில் உள்ள பெரும் வளாகமான காந்தி மண்டபத்தில் அரசு விழாவை நடத்த வேண்டும் என ஆளுநர் கோரினார். அந்த கோரிக்கை ஏற்கப்படவேயில்லை. ஆளுநர் உரை ஒன்றின் போது சட்டசபை சபாநாயகரும் மாநில அரசின் உயர்கல்வி அமைச்சரும் ஆளுநரை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டனர். மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்ட எவருக்கும் இந்நிகழ்வுகள் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தின.
1996ம் ஆண்டு வரை அரசியல் சாசனத்தின் 356வது பிரிவு இந்திய அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டிருந்தது. ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் பெரும் சீர்கேடுகள் இருப்பதாக மத்திய அரசு எண்ணினாலோ மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருந்தாலோ ஆளுநரின் பரிந்துரைப்படியோ ஆளுநர் பரிந்துரை இல்லாமலோ கூட மத்திய அரசு மாநில அரசை பதவி நீக்கம் செய்ய முடியும்.
1994ம் ஆண்டின் எஸ். ஆர்.பொம்மை வழக்கின் படி, உச்சநீதிமன்றம் அரசியல் சாசனத்தின் 356வது சட்டப் பிரிவின் படி மாநில அரசைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர சில நிபந்தனைகளை விதித்தது. அதாவது, மாநில அரசைக் கலைத்ததை ஒரு தீர்மானமாக மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பாதி உறுப்பினர்கள் ஆதரவுப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். 1996க்குப் பின் பதவியேற்ற பல மத்திய அரசுகளிடம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் என இரண்டிலும் பெரும்பான்மை இல்லை. எனவே அரசியல் சாசனப் பிரிவு 356ன் பயன்பாடு என்பது பல ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போதைய மத்திய அரசுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் என இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை இருக்கும் நிலையில் எந்த மாநில நிர்வாகமும் சீராக இருக்கிறதா என்பதையும் எந்த மாநில சட்டம் ஒழுங்கும் அமைதியாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் மாநில நிர்வாகத்தில் ஊழல் இல்லாமல் இருக்கிறதா என்பதையும் உன்னிப்பாக கவனிக்கும் தன்மை மேலும் கூடுதலாக மத்திய அரசுக்கு இருக்கிறது ; மாநில ஆளுநருக்கும் இருக்கிறது.
மத்திய அரசுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பெரும்பான்மை இருக்கும் நிலையில் மாநில ஆளுநரின் பணி என்பதும் மாநில ஆளுநர் மத்திய அரசுக்கு அளிக்கும் அறிக்கைகள் என்பதும் மாநில அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது. இதனைப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
Friday, 22 May 2026
ஒரு சாமானிய பிரஜையின் தேவை
சென்ற மாதம் நண்பர் ஒருவர் என்னைத் தனது வாகனத்தின் சீட் கவர் மாற்ற உடன் அழைத்துச் சென்றார். சென்ற இடத்தில் இருந்த பணியாளருக்கு நிலுவையில் பல வாகனங்கள் இருந்தன. எனவே 2 நாட்கள் கழித்து வருமாறு கேட்டுக் கொண்டார். நண்பருக்கு அவசரம். மறுநாளே தேவைப்பட்டது. தனது தேவையை பணியாளரிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தார். நடப்பவற்றை பார்த்துக் கொண்டு இருந்தேன். அதற்குள் நண்பர் பணி புரியும் ஐ டி நிறுவனத்திடமிருந்து அலைபேசி அழைப்பு வந்து விட்டது. தொழில்நுட்ப விபரங்களைத் தெரிவித்த படி நண்பர் அலைபேசி அழைப்புக்குள் மூழ்கி சீட் கவர் கடையிலிருந்து சற்று தள்ளிப் போனார். சிக்னல் மேலும் தெளிவாகக் கிடைக்கும் இடத்துக்கு அவர் சென்றிருக்கலாம். அப்போது இன்னும் சில நாட்களில் மாநில சட்டசபைத் தேர்தல் நடக்க இருந்தது. சீட் கவர் கடையின் பணியாளரிடம் பேச்சு கொடுத்தேன்.
‘’என்ன அண்ணன்! எலெக்ஷன் வருது. யாருக்கு ஓட்டு போடறதுன்னு முடிவு செஞ்சுருப்பீங்க’’
‘’இன்னும் அதப்பத்தி யோசிக்கல சார்’’
‘’இன்னும் ரெண்டு மூணு நாள்ல எலெக்ஷன் அண்ணன்’’
‘’ஆமாம் சார்’’
‘’கவர்மெண்ட் கொடுக்கற ஃபண்ட் உங்க வீட்டுக்கு கிடைக்கதுல்ல. நிறைய ஸ்கீம் இருக்கே. காலேஜ் படிக்கற குழந்தைகளுக்கு. வீட்டுல இருக்கற பெண்களுக்கு. நிறைய எய்ட் இருக்கே. வந்துட்டு இருக்குல்ல’’
‘’சார் ! கவர்மெண்டோட எந்த ஃபண்டும் எங்க வீட்டுக்கு வரதுல்ல?’’
‘’ஏன்?’’ அதிர்ச்சியுடன் கேட்டேன்.
‘’எங்க வீட்டுக்கு அரிசி ரேஷன் கார்டு இல்ல. ஜீனி ரேஷன் கார்டுதான் இருக்கு. அரிசி கார்டு இருக்கறவங்களுக்குதான் ஃபண்டு கிடைக்கும். ஜீனி கார்டுக்கு கிடையாது’’
‘’உங்களுக்கு எப்படி ஜீனி கார்டு கிடைச்சுது’’
‘’தெரியல சார். ரேஷன் கார்டு அரிசி கார்டுதான் அப்ளை செஞ்சன். ஆனா எனக்குக் கிடைச்சது ஜீனி கார்டு’’
‘’உங்க கிட்ட ஓட்டு கேட்டு பிரதானமா 3 குரூப் வந்திருப்பாங்கள்ல அவங்க கிட்ட உங்களுக்கு இந்த மாதிரி ஒரு பிரச்சனை இருக்குன்னு சொன்னீங்களா?’’
பணியாளர் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
‘’இப்ப தேர்தல் நடைமுறை அமல்ல இருக்கு. மே 4ம் தேதி ரிசல்ட். ரிசல்ட் வந்தப்புறம் கவர்மெண்ட் மெஷினரி வேலை செய்ய ஆரம்பிக்கும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும். ஒவ்வொரு திங்கள் கிழமையும் காலைல 10 மணிக்கு கலெக்டர் ஆஃபிஸ்ல மனுநீதி நாள் நடக்கும். அங்க போயி உங்க பிரச்சனையை சொல்லி மனு கொடுப்போம். அவங்க ஒரு நம்பர் கொடுப்பாங்க. 3 மாசத்துக்குள்ள உங்க பிரச்சனையை சால்வ் பண்ணுவாங்க. அப்படி இல்லன்னா அடுத்து என்ன செய்யறதுன்னும் யோசிப்போம். அடுத்த மாசம் நான் உங்க கடைக்கு வரேன். ஒரு மனு எழுதித் தரேன். மனுநீதி நாளுக்கு கூட வரன். என்னால முடிஞ்ச அளவு உங்களுக்கு அரிசி கார்டு கிடைக்க முயற்சி செய்யறன்’’
அதற்குள் நண்பர் வந்து விட்டார். தீவிரமாக நானும் பணியாளரும் உரையாடிக் கொண்டிருப்பதை ஆச்சர்யமாகப் பார்த்தார்.
4ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தன. தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைந்தது. பதவியேற்பு தொடர்பான முஸ்தீபுகள் நடந்து கொண்டிருந்தன. புதிய அரசு இன்னும் பதவியேற்கவில்லை. மே 11ம் தேதி எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மனுநீதி நாள் தொடங்கும் என ஆகாஷ்வாணி வானொலி செய்தி கூறியது. எனக்கு சீட் கடை பணியாளரின் நினைவு வந்தது.
நேற்று அவருடைய கடைக்குச் சென்றேன். அவர் என்னை மறந்திருந்தார். ஜீனி கார்டு அரிசி கார்டு எனக் கூறியதும் அவருக்கு நினைவு வந்தது.
ஒரு வெள்ளைக்காகிதத்தில் அவருடைய கோரிக்கையை மனுவாக எழுதினேன். இப்போதிருக்கும் ரேஷன் கார்டு எண் என்ன என்று கேட்டேன். அவர் வீட்டில் பார்த்து வருகிறேன் என்றார். நாளை மீண்டும் வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்தேன்.
ரேஷன் கார்டு துறையின் இணையதளத்தில் ஏதேனும் விபரம் இருக்கிறதா எனக் காண அவருடைய ஸ்மார்ட்ஃபோனை வாங்கி கூகுளில் தேடிப் பார்த்தேன். அப்போது அவருடைய ஸ்கிரீன்சேவரில் தற்போதைய தமிழக முதலமைச்சரின் புகைப்படம் இருப்பதைப் பார்த்தேன்.
ஒரு நூல் குறித்த நினைவு
Thursday, 21 May 2026
கூட்டணி மந்திரிசபை
நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு கூட்டணி மந்திரிசபை அமைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது ; ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவன் என்ற முறையில் தமிழகத்தில் இரு துருவ அரசியல் முடிவுக்கு வந்து அது பல முனைகள் கொண்டதாக மாறத் துவங்கியிருப்பதன் துவக்கமே இந்த கூட்டணி மந்திரிசபை எனக் காண்கிறேன்.
தேசியக் கட்சியான காங்கிரஸ் 60 ஆண்டுகளில் முதல்முறையாக மந்திரிசபையில் இடம் பெற்றிருக்கிறது. தேசியக் கட்சிகள் தமிழகத்தில் இனி முக்கியமான இடம் வகிக்கப் போகின்றன என்பதற்கான துவக்க நிகழ்வாக இதனைக் கொள்ள முடியும். பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய்வை தமிழகத்தில் இருக்கும் பிற தேசியக் கட்சிகள்.
இந்த மந்திரிசபையில் பட்டியல் சாதியினைச் சேர்ந்தவர்கள் கணிசமான அளவில் மந்திரிகளாகியிருக்கின்றனர். எந்த அரசியல் கட்சிக்கும் உழைப்பை நல்குபவர்கள் பட்டியல் சாதியினரே. தமிழக அரசியல் சூழலில் வாக்களிப்பதை முக்கிய ஜனநாயகக் கடமையாக எண்ணி மிக அதிக அளவில் வாக்களிப்பவர்களும் பட்டியல் சாதியினரே.தமிழகத்தில் எந்த அரசியல் கட்சி ஆட்சியமைப்பதற்கும் அடிப்படையாக அமைவது பட்டியல் சாதியினரின் வாக்குகளே. ஆனால் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே மந்திரிசபையில் இடம் தரப்பட்டுள்ளது. இம்முறை பட்டியல் சாதியினருக்கு தமிழக மந்திரிசபையில் 20 சதவீதம் இடம் தரப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு மகிழ்வளிக்கும் விஷயம் இது. தமிழகத்தின் நிதி அமைச்சராக பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்றிருப்பது மிகச் சிறப்பானது. வேதியர் சமூகத்தைச் சேர்ந்த இருவரும் மந்திரியாகியிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக தமிழக அரசியலில் இல்லாத நிலை இது. கடந்த 60 ஆண்டுகளில் வேதியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் மாநில அமைச்சராக இருந்திருக்கிறார். இந்த மந்திரிசபையில் இருவர் மந்திரிகளாகியிருக்கின்றனர்.
புதிய மந்திரிசபைக்கு வாழ்த்துக்கள்.
பொறி வைத்தது யார்?
Wednesday, 20 May 2026
குலைவும் மீட்பும்
இன்று மதியம் 11 மணிக்கு அருந்திய ஹோட்டல் உணவு ஒத்துக்கொள்ளவில்லை. உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மாலை கடுமையான வாந்தி. அதன் பின் அப்படியே உறங்கி விட்டேன். மாலை எழுந்ததும் உடல்நிலை பரவாயில்லை என இருந்தது ஆனால் வீட்டு வாசல் வரை சென்றாலே மயக்கம் வருவது போல் இருந்தது. வீட்டில் அனைவரும் ஊருக்குச் சென்றிருக்கின்றனர்.
நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து பிரெட் பாக்கெட் ஒன்றும் ஓ ஆர் எஸ் பொட்டலம் 5ம் வாங்கி வர சொன்னேன். அவர் 30 நிமிடத்துக்குள் தன் பணியாளரை அனுப்பி என் கைக்கு சேர்ப்பித்தார். இன்னொரு நண்பர் பசும்பாலைக் காய்ச்சிக் கொண்டு வந்தார் எனக்கு உதவுவதற்காக.
ஓ ஆர் எஸ் எனப்படும் உப்பு சர்க்கரைக் கரைசல் குடித்ததும் உடல் சற்று தெம்பாக இருந்தது. பால் ஊற்றி 2 அல்லது 3 பிரட் மட்டும் தான் சாப்பிட முடிந்தது.
தண்ணீர் பாட்டிலில் ஓ ஆர் எஸ் கரைசலை கரைத்து வைத்து விட்டு நண்பர் சென்றார்.
உடல்நலம் மீண்டது.
இரு எஜமானர்கள்
ஆங்கில மொழியில் ஒரு சொல் உண்டு : ஒரு பணியாளன் இரு எஜமானர்களிடம் பணியாற்ற முடியாது என. அடியேன் கட்டுமானத் துறையில் இருப்பவன். எங்கள் பணியிடத்தில் 10 லிருந்து 50 பேர் வரை பணி புரிவார்கள். பணியாளர் எத்தனை பேர் இருந்தாலும் பணிக்குறிப்பை அளிப்பவர் ஒருவர் தான் இருக்க வேண்டும். இருவர் பணிக்குறிப்பை அளித்தால் பணியிடத்தில் பணி முன்னேற்றம் இருக்காது ; விதவிதமான சிக்கல்தான் இருக்கும்.
இந்திய அரசியலில் அதிகாரிகளைக் கொண்ட அதிகாரவர்க்கம் இருக்கிறது. உறுப்பினர்களைக் கொண்ட அர்சியல் கட்சிகள் இருக்கின்றன. கட்சி உறுப்பினர்கள் தாங்கள் அடையும் அதிகாரம் அரசியல் கட்சியால் என எண்ண முற்படுகின்றனர். அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவது அதிகாரவர்க்கமே. ஒருவர் அரசியல் அதிகாரம் பெற்றால் அவரை அரசாங்கத்தின் விதிகளே ஆளும்.
எனவே தான் பெரும்பாலான அரசியல்வாதிகள் அதிகாரவர்க்கத்தின் முன் ஒரு முகமும் தங்கள் அரசியலுக்கு ஒரு முகமும் கொள்கின்றனர். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு விதமாகவும் ஆளும்கட்சியாக இருக்கும் போது ஒரு விதமாகவும் செயலாற்றுகின்றனர்.
சில ராஜதந்திரிகள் மட்டுமே கட்சி, அதிகாரவர்க்கம் இரண்டுக்கும் இடையே நுணுக்கமான சமநிலையைக் கொண்டு வருகின்றனர்.
Tuesday, 19 May 2026
மகிழ்ச்சியளிக்கும் ஒரு பொருள் (நகைச்சுவைக் கட்டுரை)
இப்போதே பெரும்பாலும் எனது அலைபேசியை ‘’சைலண்ட் மோட்’’ல் தான் வைத்திருப்பேன். அதை விடவும் இந்த உபகரணம் மேலும் பயன் தருவதாக இருக்கக் கூடும்.
இந்த ’’ஃபாரடே பை’’ பயன்பாட்டுக்குப் பின் தொழில் நிமித்தம் என்னுடன் பேச வேண்டியவர்களை காலை 9.30 மணியிலிருந்து மாலை 5.30 வரை மட்டுமே பேசுமாறு கூறலாம் என இருக்கிறேன். அந்த நேரம் மட்டும் ஃபோன் என்னுடன் இருக்கும்.
இந்த பையை வாங்கிய பின் என்ன யோசிக்கிறேன் என்றால் காலை 9.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை ஃபோனை ஆன் செய்து வைத்து விட்டு மற்ற நேரத்தில் சுவிட்ச் ஆஃப் செய்து விடலாமே இதற்கு ஏன் ஃபாரடே பை வாங்கினோம் என யோசிக்கிறேன். பல நாட்கள் அந்த வேலைநேரத்தில் கூட வெளிஅழைப்புகளை விரும்புவதில்லை. அத்தகைய தருணங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என இருக்கிறேன்.