Tuesday, 17 March 2026

நீங்குதல்

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். 

-திருக்குறள்.  

யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான், அவன்
அப்பொருளால் துன்பம் எய்துதல் இலன்.

-பரிமேலழகர் உரை

***

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் எங்கள் குடும்ப நண்பர். நான் பிறப்பதற்கு முன்பிருந்தே எங்கள் குடும்ப நண்பர். அவர் ஓர் அலாதியான மனிதர். சீர்காழியைச் சேர்ந்தவர். அவருடைய பழைய வீடு சீர்காழியில் இருக்கிறது. பல ஆண்டுகளாகவே மிகவும் மதிப்பு மிக்க சொத்து. கோடிக்கணக்கான மதிப்பு கொண்டது. அதனை விற்பனை செய்தால் அவர் அந்த ஊரின் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருப்பார். எனக்குத் தெரிந்து அந்த சொத்தை 25 ஆண்டுகளாக விலைக்குக் கேட்கிறார்கள். நண்பர் எந்த பதிலும் சொல்வதில்லை. அவரது சிறப்பியல்பு என்னவெனில் யார் எதற்கு அழைத்தாலும் அவர்களுடன் சென்று விடுவார். திருமணம், மங்கள நிகழ்ச்சிகள், துக்கம் என அனைத்துக்கும் சென்று விடுவார். இவ்விதமான நிகழ்வுகளின் அனைத்து பணிகளும் அவருக்குத் தெரியும். மூன்று நான்கு நாட்கள் இருந்து எல்லா பணிகளையும் முடித்துக் கொடுத்து விட்டு தான் வருவார். ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்தார். வருடத்தில் 100 நாட்கள் கடையில் இருந்தால் மிகப் பெரிய விஷயம். ஆனால் கடைக்காரர் ஏன் அடிக்கடி விடுப்பு எடுக்கிறீர்கள் எனக் கேட்க மாட்டார். நண்பரின் சுபாவம் அவருக்குத் தெரியும். நான் பிறந்து மருத்துவமனையில் இருந்த தினத்திலேயே என்னைக்  காண வந்தவர்களில் ஒருவர். என்னை விட பல வயது பெரியவர். இருப்பினும் சிறு குழந்தையாயிருந்த நாளிலிருந்து அவரை அண்ணன் என்றே அழைப்பேன். 

அவரைப் பற்றி சொன்னால் நிறைய நிகழ்வுகள். இன்று எங்களுக்குள் நிகழ்ந்த உரையாடலை மட்டும் குறிப்பிடுகிறேன். 

***

இன்று காலை மரணத் தறுவாய் குறித்து எழுதியதும் மரணம் குறித்து நிறைய யோசித்துக் கொண்டிருந்தேன். காலை 10 மணி அளவில் ஒரு மரணச் செய்தி வந்தது. அங்கே செல்ல வேண்டும். இங்கிருந்து 2 மணி நேர பைக் பயணம். அண்ணனுக்கு ஃபோன் செய்தேன். 

‘’அண்ணன் ! ஊர்ல இருக்கீங்களா? ஒரு ‘’டெத்’’க்கு போகணும்’’

‘’இங்க தான் தம்பி இருக்கன்.’’

‘’நான் இன்னும் 1 மணி நேரத்துல கிளம்பிடுவேன். நீங்க எங்க வரீங்க?’’

‘’நான் பை பாஸ்-ல நிக்கறன். வந்துடுங்க’’

ஒரு ஆவணம் தயார் செய்ய வேண்டியிருந்தது. ஆவண எழுத்தரைப் பார்த்து தயார் செய்யச் சொல்லி பணியைத் துரிதப்படுத்தி விட்டு கிளம்பினேன்.

புறவழிச்சாலையில் சட்டநாதபுரம் திரும்பியதும் அண்ணனிடமிருந்து ஃபோன். நான் வழக்கமாக பிக் அப் செய்யும் இடத்துக்கு வந்திருந்தார். 

***

பங்குனி வெயில். 

நாங்கள் சென்று கொண்டேயிருந்தோம். 

’’அண்ணன்! நீங்க பிறந்த வருஷம் என்ன?’’

‘’தெரியல. ஞாபகம் இல்ல’’

ஞாபகம் இல்லையெனில் சற்று முயன்று ஞாபகத்துக்குக் கொண்டு வந்து விடலாம். தெரியவில்லை என்றால் சிரமம் தான். 

‘’அண்ணன் உங்க மேரேஜ் எந்த வருஷம் நடந்தது? அப்ப உங்களுக்கு என்ன வயசு?’’

‘’1996. அப்ப எனக்கு 35 வயசு’’

’’அப்ப நீங்க பிறந்த வருஷம் 1961. இப்ப உங்களுக்கு 65 வயசாகுது’’

கொள்ளிடத்தைத் தாண்டி விட்டோம். 

‘’அண்ணன் நீங்க சீர்காழி. நான் மாயரம். நம்மகிட்ட 10 வருஷம் முன்னாடி யாராவது நாம இப்படி நம்ம ஏரியால 4 வழிச் சாலைல போவோம்னு சொல்லியிருந்தா நாம நம்பியிருப்போமா?’’

‘’நம்பவே முடியாத விஷயம். உண்மையாயிருக்கு.’’

50 நிமிடங்களில் கொள்ளிடத்திலிருந்து கடலூர் சென்று விட்டோம். துக்க நிகழ்வில் இறுதி மரியாதை செலுத்தி விட்டு வெளியேறினோம். 

***

’’அண்ணன் ! இன்னைக்கு நியூஸ் பேப்பர்ல ஒன்னு படிச்சன். அதாவது சாவுக்கு ரொம்ப பக்கத்துல போன ஒருத்தருக்கு சாவுக்கு அப்புறம் நடக்க இருக்கற விஷயங்கள் தெரிஞ்சுருக்கு. அத அவர் ஒரு படமா வரைஞ்சிருக்கார்.’’

‘’அந்த படம் எப்படி இருக்கு’’

‘’பூமி சுத்திட்டு இருக்கு. மேலே சூரியன் இருக்கு. அதுக்கு நடுவுல ஒவ்வொரு உயரத்துல ஒவ்வொரு லைன் இருக்கு. அந்த லைன்ல நிறைய ஜீவன் லாம் நிக்குது. எல்லாத்துக்கும் மேல சூரியன்.’’

அண்னன் அந்த காட்சியை கற்பனை செஞ்சு பாத்தார். 

‘’நாம இப்ப டெத் வீட்டுக்கு போனோம்ல அந்த ஜீவனுக்கு என்ன நடந்ததுன்னு தெரியாது. உடம்பிலிருந்து நீங்கிடும். ஆனா உடம்பு பக்கத்துலய இருக்கும். ஏன்னா பல வருஷம் இருந்த இடம். அதனால என்ன செய்யணும்னா ஒருத்தர் இறந்திட்டா 6 மணி நேரத்துக்குள்ள அந்த சடலத்தை தகனம் செஞ்சிடணும். இனிமே அதுக்கு இங்க வேலை இல்ல. மெல்லவோ வேகமாவோ அது வானத்தை நோக்கி   போகணும். அது போய் சேர வேண்டிய இடம் அதுதான். கூட இருக்கறவங்க அந்த பயணத்துக்கு அந்த வழியனுப்பலுக்கு ஹெல்ப் பண்ணனும். பயணத்தை டிலே செய்துட கூடாது’’

அண்ணன் யோசித்தார். 

‘’பூமிக்கும் வானத்துக்கும் நடுவ கோடு கோடா இருக்குல்ல. அது ஒவ்வொன்னும் ஒவ்வொரு குரூப். இப்ப நீங்க இருக்கீங்க. உங்களுக்கு நிகழ்ச்சிகள்ல கலந்துக்கறது இண்ட்ரஸ்ட். அந்த மாதிரி இருப்பவங்க ஒரு குரூப் நிப்பாங்க. விளையாட்டுல இண்ட்ரஸ்ட் இருக்கறவங்க ஒரு குரூப்பா நிப்பாங்க. அமைதியா இருக்கணும்னு நினைக்கறவங்க ஒரு குரூப்பா இருப்பாங்க. ( அப்போது ஒரு டாஸ்மாக் கடை அங்கே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது) குடிபோதைல இண்ட்ரற்ஸ்ட் இருக்கறவங்க இன்னொரு குரூப்பா இருப்பாங்க. நாம அதில ஏதாவது ஒன்னுல போய் சேர்ந்திடுவோம். நாம எதை விரும்புறோமோ அதுல இருப்போம். நல்லதை விரும்பியிருந்தா நல்லதோட. கெட்டதை விரும்பியிருந்தா கெட்டதோட. திரும்ப பூமிக்கு வரணும். இன்னொரு ஜென்மம் வாழணும்’’

சொல்லும் போது எனக்கும் கேட்கும் போது அண்ணனுக்குமே சோர்வாக இருந்தது ; இன்னொரு ஜென்மத்தை நினைச்சா. 

‘’ஆனா சில ஜீவன்கள் மட்டுமே மேலே உயரத்துக்கு போயிடுறாங்க. உடல்லயிருந்து உயிர் நீங்கனதும் எங்கயும் நிக்காம வானத்துல போய்ட்டேயிருக்காங்க. சூரியனுக்கும் மேல கடவுள் இருக்கார். அவர்ட்ட போயிடுறாங்க. அவங்க திரும்ப பூமில ஒரு ஜீவனா கருப்பைல பிறக்க மாட்டாங்க. 100 கோடி மனுஷ ஜீவன்ல ஒருத்தருக்குத்தான் இது சாத்தியம் ஆகுது. ‘’

’’அடுத்த ஜென்மத்துல மனுஷங்க மனுஷங்களாதான் பிறப்பாங்களா?’’ அண்ணன் கேட்டார்.  

‘’தெரியாது அண்ணன் ! ( அங்கே ஒரு உடும்பு ஓடியது. ஒரு பசு மாடு நின்றது) . உடும்பா கூட பொறக்கலாம். பசு மாடா பொறக்கலாம். இந்த பசு மாடும் உடும்பும் அடுத்த ஜென்மத்துல மனுஷனா பொறக்கலாம்’’ 

இருவரும் மௌனமாகி விட்டோம். 

‘’காசில அண்ணன் சடலங்களை எடுத்துட்டு போகும் போது ‘’ ராம் நாம் சத் ஹை’’ அப்படின்னு சொல்லுவாங்க. அதாவது இந்த உலகத்துல ராம நாமம் மட்டும்தான் சத்தியம் அப்படின்னு அர்த்தம்’’

நம் நாட்டில் எவர் தான் ராமன் கதையை ஆர்வமாகக் கேட்காதவர் ? ஆர்வமாகச் சொல்லாதவர்?

‘’அடுத்த நாள் காலைல பட்டாபிஷேகம். முதல் நாள் ராத்திரி கூப்பிட்டு கைகேயி சொல்றாங்க. (கம்பன் பாடலைச் சொன்னேன்). 

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி தாங்க அருந் தவம் மேற்கொண்டு
பூழி வெங் கானம் நண்ணி புண்ணியத் துறைகள் ஆடி
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள்.

உலகமே பெருசு. கடல் சூழ்ந்த உலகம் இன்னும் பெருசு. நீ சடாமுடி தரித்து நிறைய தவம் செஞ்சு காட்டுல இருந்துட்டு தூரத்தில இருக்கற புண்ணிய நதிகள்ல நீராடிட்டு 14 வருஷத்துக்கு அப்புறம் வா. இந்த 14 வருஷம் கேட்க பெருசா தெரிய போகுதுண்ணு ஏழிரண்டு ஆண்டுன்னு சொல்லப்படுது. ஏழு இரண்டு எவ்வளவு “

அண்னன் ‘’14’’ என்றார். 

‘’என்னடா இப்படி ஆயிடுச்சேன்னு ராமன் நினைச்சு மனசு வருத்தப்பட்டிருக்கலாம். எல்லா ராஜ்யத்தையும் சேர்ந்தவங்க வந்திருக்காங்க. முக்கியமான அரசு நிகழ்வு நடக்கலண்ணா நம்ம நாட்டைப் பத்தி தப்பா நினைப்பாங்களேன்னு நினைச்சுருக்கலாம். வசிஷ்டர் வார்த்தை தப்பா போய்டக் கூடாதேன்னு யோசிச்சிருக்கலாம். ஆனா அவர் எதையுமே நினைக்கல. அவர் மனசுல துளி கூட வருத்தம் இல்ல. கம்பன் சொல்றான் ; ‘’ராஜ்யம் இல்லை ; காட்டுக்குப் போ’’ன்னு சொன்னப்ப ராமன் மகன் ‘’அன்றலர்ந்த தாமரை முகத்தினன்’’ அப்படிங்கறான். அவன் முகம் 10 செகண்ட் முன்னாடி பூத்த தாமரைப்பூ மாதிரி இருந்துச்சாம். ‘’

இருவரும் மீண்டும் மௌனமாகி விட்டோம். 

’’ஒரு மனுஷன் அடையக்கூடிய உச்சபட்சமான வாழ்க்கை ராமனுடைய வாழ்க்கை. ராஜ்யத்தை இழந்தான். அத பெருசா நினைக்கல. காட்டுல கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்தான். அதயும் பெருசா நினைக்கல. மனைவியைப் பிரிஞ்சு வேதனைப்பட்டான். அவங்களை திரும்பக் கண்டடைஞ்சான். திரும்ப ராஜ்யம். திரும்ப பிரிவு. குழந்தைகள் கூட இருக்க முடியல. ஆனா ராமன் எல்லா துன்பத்தையும் ஏத்துக்கிட்டு செய்ய வேண்டியதை செஞ்சுட்டு இருந்தான். ராமன் கிட்ட ஒவ்வொரு மனுஷனுக்கும் படிக்க பாடம் இருக்கு. நாம பொருளை இழந்திருக்கோமோ முயற்சி செஞ்சா திரும்ப கிடைக்கும்ங்கறது ராமன் வாழ்க்கைல இருக்கு. ஒரு பின்னடைவா அத இல்லாம ஆக்க முடியும் இதுவும் ராமன் வாழ்க்கைல இருக்கு. அவன் வாழ்க்கைய பாத்து நாம நிறைய கத்துக்கலாம்’’

***

கொள்ளிடம் பாலத்தைத் தாண்டினோம். 

‘’ மண்ணில இருந்து வானத்துக்கு போற பயணத்துக்கு எதுவும் கூட வராது. நாம சேர்த்த செல்வம் நம்மோட சொந்த பந்தங்கள் எதுவும் வராது. அந்த பயணம் ரொம்ப தூரம்ங்கறது மட்டும்தான் தெரியுது. வேற என்ன சொல்றதுன்னு தெரியல’’

அண்ணனை சீர்காழியில் டிராப் செய்து விட்டு கிளம்பினேன். 


 

மண்ணும் விண்ணும்


சமீபத்தில் ஒரு பத்திரிக்கை செய்தியை வாசித்தேன். அதாவது, மரணத் தருவாய் வரை சென்று வந்த ஒருவர் தனது அனுபவத்தை ஒரு சித்திரமாகத் தீட்டியிருக்கிறார். அந்த படத்தை மேலே கொடுத்துள்ளேன். படத்தின் கீழே பூமி. மேலே சூரியன். ஜீவன்களின் சாரம் புவி மேற்பரப்பில் குவிந்து ஓர் அலைப்பரப்பின் கீழ் வெளியில் இருக்கின்றன. அந்த அலைப்பரப்பின் மேல் அடுக்குகளில் வேறுவிதமான ஜீவ சாரங்கள் இருக்கின்றன. சூரியன் சுடர்ந்து கொண்டிருக்கிறது. பூமி சுழன்று கொண்டிருக்கிறது. மரணத் தருவாயை அடைந்தவர் இவ்விதமான காட்சியை உணர்ந்திருக்கிறார். அதனை சித்திரமாக வரைந்திருக்கிறார். 

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். என்னை விட 5 வயது இளையவர். அவர் தந்தை ஒரு விவசாயி. அவரது சகோதரர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள்.இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவரது கல்லூரி நாட்களில் அவரை நான் சந்தித்திருக்கிறேன். பட்டப்படிப்பு முடித்ததும் அவர் வெளிநாடு சென்று விட்டார். அதனால் பல வருடங்கள் பார்க்க முடியவில்லை. ஒரு நாள் தற்செயலாக ஊரின் கடைத்தெருவில் சந்தித்தோம். அவருக்கு என்னைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. வெகுநாள் கழித்து சந்தித்ததைக் கொண்டாடும் விதமாக ஐஸ்கிரீம் சாப்பிடச் சென்றோம். அவர் அப்போது உடல் மிகவும் சோர்வாக இருந்தார். ஏன் சோர்வு தென்படுகிறது என்று கேட்டேன். பெங்களூரில் 30 நாள் முன்பு தனக்கு நடந்ததை என்னிடம் கூறினார். வெளிநாட்டில் வேலை பார்த்த அவர் பின்னர் பெங்களூரில் வீடு வாங்கிக் கொண்டு வந்து குடியேறி விட்டார். அப்போது அவருக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. 

பெங்களூரில் ஒரு ஹோட்டலுக்கு உணவருந்தச் சென்ற அவரிடம் ‘’மெனு’’ கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ‘’கார்லிக் ஜூஸ்’’ என இருந்திருக்கிறது. அதனை ஆர்டர் செய்து விட்டார். ஜூஸ் வந்திருக்கிறது. அதனைக் குடித்து விட்டார். குடிக்கும் போது அவர் நாவுக்கு உகந்த ருசியாகவே இருந்திருக்கிறது. விருப்பத்துடன் குடித்திருக்கிறார். குடித்து முடித்த பின் அவர் ஏதோ ஒரு மாறுபாட்டை உணர்ந்திருக்கிறார். அதனை இன்னதென்று சொல்ல முடியவில்லை என்றார். ஜூஸுக்கான கட்டணத்தை செலுத்தி விட்டு தனது ஃபிளாட்டுக்கு வந்து விட்டார். 

அவர் உடல் எப்போதும் இருப்பதைப் போல் இல்லாமல் கொஞ்சம் மாறுபாடு அடைவதைப் போல் தோன்றியிருக்கிறது. மிகவும் இலகுவாக ஆவதைப் போல தோன்றியிருக்கிறது. உடல் என்ற ஒன்றே இல்லாமல் இருப்பதைப் போல உணர்ந்திருக்கிறார். படுக்கையில் படுத்து விட்டார். நிமிடங்கள் மெல்ல கடந்திருக்கின்றன. உடலற்ற நிலையில் தான் இருப்பதாக அவருக்குத் தோன்றியிருக்கிறது. ‘’கார்லிக் ஜூஸ்’’ அருந்தியதன் விளைவு என அவர் எண்ணவில்லை. திடீரென மூச்சு வேகமாக இயங்கத் தொடங்கியிருக்கிறது. மூச்சு மட்டுமே இருப்பதாக உணர்ந்திருக்கிறார். மூச்சு மட்டுமே இருந்திருக்கிறது . வேறு ஏதும் இல்லை. மூச்சு உள்ளே செல்கிறது ; வெளியேறுகிறது. அதனை மட்டுமே கவனித்திருக்கிறார். வேறு எதிலும் கவனம் இல்லை. மிக வேகமாக மூச்சு படபடக்கத் தொடங்கியிருக்கிறது. அவர் அதன் லயத்தில் அதனுடன் ஆழ்ந்து விட்டார். பல மணி நேரங்கள் இவ்வாறே சென்றிருக்கின்றன. அவர் தான் மயக்கம் அடையவில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறார். அப்போது அவருக்கு சில காட்சிகள் தென்பட்டிருக்கின்றன. அவர் உடல் பூமியில் கிடப்பதாகவும் மேலே சூரியன் ஒளி விட்டுக் கொண்டிருப்பதாகவும் தான் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருப்பதாகவும் சூரியனுக்கு அருகில் இருந்தாலும் வெம்மையாக இல்லை ; குளிரான சூழ்நிலையாகவே இருந்தது என்றும் சொன்னார். தான் அந்த நிலையை விரும்பியதாகவும் அப்படியே அங்கேயே இருந்து விடலாம் எனத் தோன்றியதாகவும் கூறினார். அங்கே துயரம் இல்லை ; வலி இல்லை ; அல்லல் இல்லை. 

அவர் கார்லிக் ஜூஸ் குடித்த போது நேரம் மாலை 6.30. தனது ஃபிளாட்டில் படுத்த போது நேரம் இரவு 7.15. நிச்சயமாகத் தான் தூங்கவும் இல்லை ; மயக்கமடையவும் இல்லை என உறுதியாக மீண்டும் மீண்டும் கூறினார். அதிகாலை 4 மணிக்கு அவர் சூழலில் ( ஹாஸ்யம் : அப்படித்தானே சொல்ல முடியும் ? உடல் பிரக்ஞை இல்லை. மனமும் இல்லை ; உடலும் மனமும் மூச்சில் லயித்து விட்டன) சிறு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அது ஒரு சுருதிபேதம் என அவர் கருதுகிறார். (ஹாஸ்யம் :அவர் அதை விரும்பவில்லை.) எனினும் சூரியனையும் அண்ட வெளியையும் விட்டு விட்டு தன் உடல் பக்கத்தில் அவரது பிரக்ஞை வந்து விட்டது. உடலில் சிறு அசைவு ஏற்பட்டு மனம் தன் வழமையான இயக்கத்துக்கு வந்திருக்கிறது. பெருவெளியில் உலவி வந்ததால் அவர் எழுந்து அமர்ந்து ஃபிளாட்டைப் பூட்டி விட்டு கீழே சென்று அங்கே இருந்த அபார்ட்மெண்ட் காவலரிடம் ஒரு ஆட்டோ பிடித்து வருமாறு கூறியிருக்கிறார். தெரு முக்கில் அந்த நேரத்தில் ஆட்டோ இருந்திருக்கிறது. ஆட்டோ பிடித்து அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்திருக்கிறார். இதயம் மிக படபடப்பாக இருப்பதை நாடி பிடித்துப் பார்த்தே அறிந்திருக்கிறார்கள். மூச்சு மிகவும் படபடப்பாக இருந்திருக்கிறது. ( ஹாஸ்யம் : நான் அவரிடம் கேட்டேன் :   இரவு 7.15க்கு மூச்சுத்திணறல் இருந்ததா என்று கேட்டேன். அவருக்கு சொல்லத் தெரியவில்லை. அவர் தான் ஒரு லயத்தை 7.15 லிருந்தே உணர்ந்ததாகச் சொன்னார். ‘’லயம்’’ என்பது என்னுடைய வார்த்தை. அவர் அவ்விதம் சொல்ல ’’அதை என்ன வார்த்தையில் சொல்வது என்று தெரியவில்லை’’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்). மருத்துவமனையில் அப்போது இருந்த ’’டியூட்டி டாக்டர்’’  இரவு என்ன சாப்பிட்டீர்கள் எனக் கேட்டிருக்கிறார்.நண்பர் கார்லிக் ஜூஸ் எனக் கூறியிருக்கிறார். வேறு திட உணவு ஏதும் சாப்பிட்டீர்களா ? குமட்டல் இருந்ததா ? வாந்தி எடுத்தீர்களா? எனக் கேட்டிருக்கிறார்கள். எதுவும் இல்லை. ‘’டியூட்டி டாக்டர்’’ இதயம் படபடப்பதும் மூச்சு மிக அதிகமாகத் திணருவதும் இருப்பதால் வாயின் வழியாக ஒரு டியூபைச் செலுத்தி குடலில் இருக்கும் வஸ்துக்களை வெளியேற்றி விட்டனர். வெளியேறிய பின் சில மணி நேரங்கள் மூச்சுத் திணறல் இருந்திருக்கிறது. அப்போது நண்பர் அசௌகர்யத்தையும் வலியையும் உணர்ந்திருக்கிறார். ( ஹாஸ்யம் : அப்போது நான் கேட்டேன். மருத்துவமனையில் இருந்த போது பூமி, சூரியன் ஆகிய உணர்வு இருந்ததா என சீரியஸாகவே கேட்டேன். இல்லை அப்போது வலி மட்டுமே இருந்தது. வீட்டு மனிதர்கள் நினைவு இருந்தது என்றார்). அதன் பின்னர் மயக்கமாகி விட்டார். மயக்கத்தில் எந்த நினைவும் இல்லை. மெடிக்கல் உபகரணங்கள் அவர் மூச்சு இயல்பாக இருப்பதையும் அவர் இதயம் இயல்பாக இயங்குவதையும் காட்டியிருக்கிறது. மருத்துவர்கள் அவரை எழுப்பியிருக்கின்றனர். சீனியர் மருத்துவர்கள் வந்திருகின்றனர். ‘’டியூட்டி டாக்டர்’’ சற்று முரட்டி வைத்தியம் தான் செய்திருக்கிறார் ; இருந்தாலும் அவ்விதம் செய்யப்படவில்லை எனில் நோயாளியின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாது. இது ஒரு வித்தியாசமான சூழ்நிலை. உணவு ஒவ்வாமை ஏற்பட்டால் குமட்டலும் வாந்தியும் இருக்கும் ; உணவு ஒவ்வாமை குடலைத்தான் பாதிக்கும் ; ஆனால் இவர் விஷயத்தில் நுரையீரலை பாதித்திருக்கிறது. எனினும் நுரையீரலில் ஸ்கேன் எந்த மாறுதலையும் காட்டவில்லை. நோயாளி எவ்விதம் நோயுற்றார் என்பதும் எவ்விதம் உயிர் பிழைத்தார் என்பதும் கண்டறியப்படாததாகவே இருக்கிறது ‘’ எனக் கூறியிருக்கின்றனர்.   

ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்த பின்னர் ‘’சூரியனுக்குப் பக்கத்துல போனேன்’’ என்றார். 

ஊருக்குப் பக்கத்தில் ஒரு சில்லறை சிமெண்ட் வியாபாரி இருக்கிறார். அவரிடம் எப்போதும் 10 மூட்டை சிமெண்ட் இருக்கும். எவரும் அவரசரமாக ஒரு மூட்டை இரண்டு மூட்டை வேண்டும் என்றால் அவரிடம் வாங்குவார்கள். அவரை ஒரு நாகப்பாம்பு கடித்து விட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். பின்னர் உடல்நலம் மீண்டு வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவரைக் கண்டு நலம் விசாரிக்கச் சென்றேன். ‘’சார் ! மூச்சு மட்டும் தான் ஃபீல் பண்ணன். சூரியனுக்குப் பக்கத்துல போய்ட்டன்’’ என்றார். 

யோகா வகுப்புகளில் ‘’மூச்சை கவனியுங்கள்’’ என்பார்கள். சாமானியமாக மனிதர்களுக்கு மூச்சு என ஒன்று இருக்கிறது எனும் கவனம் கிடையாது. உடல் இருப்பதை அறிவார்கள். மனம் இருப்பதை அறிவார்கள். அந்த இரண்டும் அவர்கள் நேரடி அனுபவத்தில் இருக்கும். மூச்சு சாமானியமாக கவனத்துக்கு வராது. ஏனென்றால் மூச்சு சூட்சுமமானது. அதனைக் கவனித்தல் என்பது அபூர்வம். விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள், தீவிரமான உடல் உழைப்பு கொடுப்பவர்கள், நீச்சல் அடிப்பவர்கள் ஆகியோருக்கு ‘’மூச்சைக் கவனித்தல்’’ என்னும் தன்மை இயல்பாக இருக்கும். உடலைக் கடுமையாகப் பயிற்றுவிப்பதன் மூலம் மூச்சு அடையும் மேனிலையை அவர்கள் அனுபவபூர்வமாக உணர்வார்கள். அவர்களிடம் அதனை வார்த்தையாக சொல்லுங்கள் என்று சொன்னால் அப்படி ஒன்று இருக்கிறது என்பது கூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது. அவர்கள் வாழ்க்கை அனுபவத்துடன் அது வேறுபடுத்த முடியாததாக இருக்கும். 

ஹாஸ்யம் : சமீபத்தில் சாவின் பக்கத்தில் சென்று வந்து ஓவியம் வரைந்தவரும் ‘’கார்லிக் ஜூஸ்’’ குடித்த எனது நண்பரும் நாகப்பாம்பு கடித்த சிமெண்ட் வியாபாரியும் என மூவருமே சூரியனுக்குப் பக்கத்தில் போனதாகவே சொல்கிறார்கள். 
 

Monday, 16 March 2026

கிழக்கும் மேற்கும் (ஹாஸ்யம்)

எனது நண்பரின் வீடு மிகப் பெரியது. 4 ஏக்கர் பரப்பு கொண்டது. அதன் மையப்பகுதியில் 2000 சதுர அடி கொண்ட கட்டிடம் உள்ளது. 4 ஏக்கர் பரப்பையும் சுற்றிச் சுற்றுச்சுவர். 1990ம் காலகட்டத்தைச் சேர்ந்த பெரிய இரும்பு கேட். உள்ளே கார் பார்க்கிங் செய்ய பரந்த பரப்பு. வேப்ப மரத்தின் அடியில் நான்கு சிமெண்ட் பெஞ்ச். அதில் 20 பேர் அமர்ந்து சம்பாஷிக்க முடியும்.  வீட்டுக்கு மிகப் பெரிய வாசல். அதில் கோலமிடப்பட்டு எப்போதும் இரு குத்து விளக்குகள் சுடர் விட்டுக் கொண்டிருக்கும். உள்ளே நுழைந்ததும் இடது புறம் அலுவலக அறை. அது வீட்டின் புழக்கத்துடன் இணைந்ததாக இருக்காது . தனியாக இருக்கும். 

வீடு எந்த அளவு சிறியதோ அந்த அளவு அதன் உள்ளே எத்தனை பேர் இருக்கிறார்கள் என அறிய முடியும். அளவில் பெரிதாகிக் கொண்டே போனால் உள்ளே இருப்பவர்களை நாம் அறிய முடியாது. 

எனது நண்பரின் வீடு அமைந்திருப்பது ஒரு கிராமத்தில். 

எனக்கு ஒரு வழக்கம் உண்டு. ஒரு வீட்டுக்குச் சென்றால் அந்த வீட்டிலிருப்பவர்கள் அனுமதி இல்லாமல் அவர்கள் வீட்டுக்குள் செல்ல மாட்டேன். வீட்டு வாசலில் இருந்து ‘’அம்மா’’ ‘’அம்மா’’ என்று கூப்பிடுவேன். அவர்கள் சத்தம் கேட்டு வந்தால் மட்டுமே உள்நுழைவேன். அது வரை வாசல் தான். எனது அனுபவம் தமிழகத்தில் 100க்கு 99 சதவீத இல்லங்களில் அழைப்பு மணிகள் வேலை செய்வதில்லை. வீடு கட்டும் போது ஒரு ஆர்வத்தில் சத்தம் பெரிதாக இருக்கும் விதமாக அழைப்பு மணி ஒலியை அமைத்து விடுவார்கள். கொஞ்ச நாட்களில் ‘’கண்ட்ரோல் சுவிட்ச்’’ ஆஃப் செய்து வைத்து விடுவார்கள். இப்போது கூரியர்காரர்கள் கூட வாசலில் நின்று அழைப்பதில்லை. அலைபேசியில் அழைக்கிறார்கள். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளுக்காக கிராமம் கிராமமாக சென்று ஒவ்வொரு வீட்டுக்கும் நேராக சென்றிருக்கிறேன். அதாவது ஒவ்வொரு வீட்டிலும் ‘’அம்மா’’ ‘’அம்மா’’ என அழைத்திருக்கிறேன். பல வீடுகளில் வெளியில் இருக்கும் எனக்கு உள்ளே டி.வி ஓடிக் கொண்டிருக்கும் ஒலி கேட்கும். உச்ச ஸ்தாயியில் சீரியல் ஓடிக் கொண்டிருக்கும். அதைத் தாண்டி என் குரல் ஒலிக்க வேண்டும். 

தமிழக இல்லங்களில் எவரும் ஒருவர் வாசலில் தான் நின்று அழைக்க வேண்டும் என எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் மேலை நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஒருவர் வசிப்பிடத்துக்குள் இன்னொருவர் அனுமதியின்றி நுழையக்கூடாது என்னும் நெறி உண்டு. என் மனதில் அந்த மேலை நெறி பதிந்து விட்டது. 

நான் நண்பரின் வீட்டிற்கு சற்று வெளிப்பக்கத்தில் இருக்கும் அலுவலக அறையில் அமர்ந்து கொள்வேன். இருப்பினும் நான் அங்கே அமர்ந்திருப்பது எவருக்கும் தெரியாது. பலர் மிக சகஜமாக அவர் வீட்டுக்கு செல்வதும் வருவதுமாக இருப்பார்கள். உறவினர்கள், அண்டை வீட்டுக் காரர்கள், பணியாளர்கள் என. என்னை அறிந்தவர்கள் என அவர்களில் எவரும் இருந்தால் வீட்டின் உரிமையாளர்களுக்குத் தகவல் தெரிவிப்பார்கள். அறியாதவர்கள் என்னை கவனத்துக்குள் கொண்டு வரவே மாட்டார்கள். 

மக்கள் தொடர்பில் தேர்ச்சி உள்ளவன் எனினும் எனக்குள்ளும் சில சிறு தயக்கங்கள் இருக்கும். ‘’அலுவலக அறையில் இருக்கிறேன்’’ என நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்புவேன். பெரிய அலுவலக அறை இருந்தாலும் நண்பர் மாடியில் இருக்கும் ஒரு அறையையே தன் அலுவலக வேலைகளுக்கு பயன்படுத்துவார். வாசலில் இருக்கும் அறைக்கு யாராவது வந்து கொண்டேயிருப்பதால் தனது பணியைச் செய்ய முடியவில்லை என. 

ஒவ்வொரு முறை செல்லும் போதும் பலர் இருக்கும் அந்த வீட்டில் என்னை அறிந்தவர் எவரும் இருந்தால் இயல்பாக இருக்கும் என நினைப்பேன்.  

என்னை மன்னித்து விடுங்கள் (ஹாஸ்யம்)

சென்னையில் வசிக்கும் ஒருவரை ஊரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது சொத்து ஒன்றை விற்பனை செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். நான் முயற்சிகள் மேற்கொண்டேன். எனினும் விற்பனை நிகழவில்லை. மதிப்பு மிக்க சொத்துதான் என்றாலும் விற்பனை கை கூடவில்லை. இவ்வாறான நிகழ்வுகளில் அதனை அப்படியே நிலுவையில் வைத்து விட்டு அடுத்த வேலைகளைப் பார்க்கலாம். அதற்கென ஒரு நேரம் அமையும் என காத்திருக்க வேண்டும்.  

நாளாக நாளாக அந்த சொத்து குறித்த விஷயமே என் நினைவில் இல்லை. அதன் அகல நீளங்கள், பரப்பளவு, விலை எதுவுமே. அமைவிடம் மட்டும் நினைவில் இருந்தது. 

அவர் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டார். என்னால் ஃபோன் எடுத்து பேச முடியவில்லை. பலமுறை அழைத்தார். ஒருமுறை கூட என்னால் ஃபோன் எடுக்க முடியவில்லை. எனக்கு மனதில் வருத்தமாக இருந்தது. அவருக்கு ‘’நாளை அழைக்கிறேன்’’ என குறுஞ்செய்தி அனுப்பினேன். இரண்டு நாள் கழித்து அவரிடம் பேசினேன். அவரிடம் சொன்னதைக் கூறும் முன் அலைபேசி தொடர்பாக எனது அபிப்ராயங்களைத் தெரிவித்து விடுகிறேன். அதனை எவ்விதம் காண்கிறேன் அணுகுகிறேன் என்பதை தெரிவிக்கிறேன். 

(1) அலைபேசி எனப்படும் அதாவது எனது அலைபேசி எனப்படும் உபகரணம் என்னுடையது. அதை நான் ’’சைலண்ட்’’ ஆக வைத்திருக்க முடியும். சுவிட்ச் ஆஃப் செய்ய முடியும். எனது எண் 100 பேரிடம் இருக்கிறது என்பதற்காக அவர்கள் அழைத்ததும் அந்த அழைப்பை ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவானால் அந்த அலைபேசி எனது அலைபேசியாக இராது. அந்த 100 பேரின் அலைபேசியாக ஆகி விடும் அல்லவா? உலகில் 700 கோடி மக்கள் இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் எனது எண் தெரிய இன்றைய இணைய வசதி மூலம் வாய்ப்பு உண்டு. அவ்வாறெனில் என் அலைபேசி என்னைத் தவிர மற்ற 700 கோடி பேரின் அலைபேசியாக ஆகி விடும் அல்லவா? ஒவ்வொருவரும் என்னை அழைத்தால் என்னை அழைக்கும் எல்லா அழைப்புகளையும் நான் ஏற்றால் நான் இன்னும் 13,000 ஆண்டுகள் வாழ வேண்டும். அந்த 13,000 ஆண்டுகளும் ஊன் உறக்கம் இன்றி ஃபோன் பேசிக் கொண்டு தான் இருக்க வேண்டும். ஒரு ஃபோனுக்கு ஒரு நிமிடம் என்று பார்த்த கணக்கு இது. 

(2) அடியேன் படைப்பூக்க மனநிலை கொண்டவன். என் மனம் படைப்பூக்கமானது. அதனைப் பராமரிக்க வேண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனில் அலைபேசி அழைப்புக்கு என் மனத்தை செலுத்திக் கொண்டிருக்க முடியாது. 

(3) எனது வணிகம் சார்ந்து எனக்கு அலைபேசி தகவல் தொடர்பில் உதவுகிறது. எந்த அளவு தேவையோ அந்த அளவு எனக்கு போதும் என நான் எண்ணுகிறேன். 

(4) அலைபேசி எனக்குத் தொந்தரவு தான். ஜி.எஸ்.எம் ஃபோனே எனக்குத் தொந்தரவு தான். என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை. வாங்கப் போவதும் இல்லை. 

(5) ’’இரு கோடுகள்’’ தத்துவம் என ஒன்று உண்டு. வரையப்பட்ட ஒரு கோட்டை அழிக்காமல் சிறிய கோடாக்க வேண்டும் என்றால் அதன் பக்கத்தில் முன்னர் இருந்த கோட்டை விட அளவில் பெரியதாக இன்னொரு கோட்டை வரைய வேண்டும். அப்போது முதல் கோடு சிறியதாகி விடும். 

அந்தத் தத்துவத்தின் அடிப்படையில் இப்போது என்னிடம் இருக்கும் அலைபேசியை ரீ-சார்ஜ் டாப் அப் செய்யாமல் இருந்து விடப் போகிறேன். என்னிடம் அலைபேசியே இல்லை எனும் போது நான் அலைபேசி அழைப்புகளை ஏற்பதில்லை என்னும் புகார் இருக்காது.  

நான் பேசிய நண்பரிடம் ,’’சார் ! நான் ஃபோனை ரொம்ப மினிமமா யூஸ் பண்றவன். நான் ஃபோன் எடுக்கலண்ணு வருத்தப்படாதீங்க. என்னை மன்னித்து விடுங்கள். செல்ஃபோன்ல எனக்கு கால் பண்ணாதீங்க. எஸ் எம் எஸ் அனுப்புங்க. மெஸேஜ் பாத்ததும் நான் கால் பண்றன்’’ என்றேன்.  

Sunday, 15 March 2026

நம்பிக்கைக்கு உரியவர் (ஹாஸ்யம்)

40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. என் நண்பர் இதனை என்னிடம் கூறினார். 

பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளிடம் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வது வழக்கம். பெரிய கட்சிகள் பெரிய அளவில் கையில் பணம் வைத்திருக்கும். சிறிய கட்சிகளிடம் அந்த அளவுக்கு பணம் இருக்காது. எனவே தேர்தல் செலவுக்கு கூட்டணியில் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையில் அடிப்படையில் தொகுதிக்கு இவ்வளவு என தொகையை அளிப்பார்கள். இந்த தொகை அளிக்கப்படுவதும் பெறப்படுவதும் கமுக்கமாக நடைபெற வேண்டிய செயல்கள். எனது நண்பர் சிறிய கட்சியின் தலைமைக்கு நெருக்கமானவர். ஆகவே தலைமை அவரை அவருடைய வாகனத்தில் பெரிய கட்சியின் அலுவலகத்துக்குச் சென்று அவர்கள் அளிக்கும் தொகையை பெங்களூரில் இருக்கும் வணிக நிறுவனம் ஒன்றில் அளித்து விடுமாறும் அவர்கள் அத்தொகையை தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொண்டு சிறிய கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளரிடம் அந்தந்த தொகுதிகளில் பட்டுவாடா செய்து விடுவார்கள் என்றும் ஏற்பாடு. ‘’ஹவாலா’’ வழிமுறை போல. முக்கியமான செயல் என்பதால் தனியராக செல்வது உகந்த வழிமுறை அல்ல என்பதால் இந்த செயல்பாட்டில் உடனிருக்க இன்னொருவரையும் கூட்டிச் செல்ல கூறியிருக்கிறது தலைமை. நண்பர் இந்த விஷயங்களுக்கு நன்றாகப் பழகியவர். எனவே சென்னையில் இருக்கும் அவரது வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் பெரிய கட்சியின் தலைமை அலுவலகத்தில் பணம் நிரம்பிய சூட்கேஸை பெற்றுக் கொண்டு சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் பெங்களூர் நோக்கி பறந்து கொண்டிருக்கிறார். எத்தனை சீக்கிரம் வேலை முடிகிறதோ அத்தனை சீக்கிரம் நிம்மதி என வாகனத்தை எவ்வளவு வேகமாக இயக்க முடியுமோ அவ்வளவு வேகமாக இயக்கியிருக்கிறார். வண்டி இன்னும் பூவிருந்தவல்லியைத் தாண்டவில்லை. 

நண்பரின் உடனிருந்தவர் ‘’அண்ணன்’’ என அழைத்திருக்கிறார். 

வாகன இயக்கத்தில் மும்முரமாக இருந்த நண்பர் சாலையிலிருந்து கண்களை அகற்றாமல் ‘’என்னப்பா’’ என்றார். 

‘’அண்ணன் ! சூட்கேஸ்-ல எவ்வளவு பணம் இருக்கும்?’’

நண்பர் மௌனமாக இருந்திருக்கிறார். 

‘’எங்கேயாவது போய்டுவோம்ணன். இந்த பணத்தை நீங்களும் நானும் பாதிப்பாதி எடுத்துப்போம். அஞ்சு பத்து வருஷம் எங்காவது ஃபாரின் போய்டுவோம். அப்புறமா திரும்ப வந்தா யாரும் நம்மள ஒன்னும் செய்ய முடியாது’’

‘’உலகத்துல நாம எங்க இருந்தாலும் தேடி வந்துடுவாங்க. கொஞ்சம் அமைதியா இரு.’’ எனக் கூறி விட்டு எப்போது பெங்களூர் சென்று சேருவோம் என சென்று சேர்ந்திருக்கிறார். 

நண்பர் என்னிடம் சொன்னார். ‘’கட்சில தொண்டர்கள் ஆயிரக்கணக்கா இருக்காங்க. தலைமை நம்பிக்கைக்கு உரியவர்னு யாரை ரொம்ப அதிகமா நம்புதோ அந்த ஆளே இப்படி. அப்ப மத்தவங்கலாம் எப்படின்னு யோசிச்சுப் பார்த்தால்’’ என்றார்.    

எந்தத் திறனும் இல்லாதவன் (ஹாஸ்யம்)

 ஒரு நாட்டில் ஒரு ராஜாங்கம் இருந்தது.அந்த ராஜ்யத்தின் ராஜனுக்கு ராணி மீது கொள்ளைப் பிரியம். அவள் மீது ஒரு துரும்பு விழுந்தால் கூட ராஜன் துடிதுடித்துப் போய்விடுவான். 

அந்த ராஜாங்கத்தில் ஒரு மந்திரி இருந்தார். அவர் கவனத்துக்கு ஒரு விஷயம் வந்தது. அதாவது , அந்த ராஜ்யத்தின் பிரஜை ஒருவன் எந்தத் திறனும் இல்லாதவனாக இருக்கிறான் என்று. மந்திரி சொன்னார், ‘’அது எப்படி ஒருவன் எந்தத் திறனும் இல்லாதவனாக இருக்க முடியும். அவனை என்னிடம் அழைத்து வாருங்கள். நான் விசாரிக்கிறேன்’’ என்றார். அவனை மந்திரி முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். 

‘’உன்னிடம் உள்ள திறன்களைச் சொல்’’ மந்திரி மென்மையாகவே கேட்டார். 

அவன் மௌனமாயிருந்தான். 

‘’அஞ்சாதே ! சொல்ல நினைப்பதைச் சொல்.’’ மந்திரி அவனுக்கு ஊக்கம் கொடுத்தார். 

‘’எனக்கு நல்லா துக்கம் சொல்ல வருங்க. அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது.’’

மந்திரி ஓலைநாயகத்தை அழைத்து ‘’எந்தத் திறனும் இல்லாதவன்’’ எனக் கூறப்பட்டவனுக்கு பணி நியமன உத்தரவு அளிக்கச் சொன்னார். 

மந்திரி அவனிடம் ‘’ இனி நீ அரசாங்க ஊழியன். அரண்மனையில் ஊழியர் குடியிருப்பில் தங்கிக் கொள்ளலாம். மூன்று வேளை உணவும் மாத ஊதியமும் உண்டு. குடும்பத்தை அழைத்து வந்து விடு.’’

அரண்மனை செயலக ஊழியர்களுக்கு மந்திரி ஏன் இவனுக்கு பணி நியமனம் செய்தார் என்பது புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது. அரசாங்கத்தில் எல்லாம் புரிந்து தெரிந்தா நடக்கிறது ; நாம் இதில் மனதைச் செலுத்த வேண்டாம் என தங்கள் வழமைகளுக்குத் திரும்பினர். 

நாட்கள் வேகமாக ஓடின. 

ராஜன் நாட்டில் இருந்த காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். காட்டில் 15 நாள் முகாம் செய்வதாய் திட்டம். காட்டுக்குச் சென்று 5 நாள் ஆகியிருந்தது. 

ராஜன் காட்டுக்குச் சென்ற 5 வது நாள் ராணிக்கு விஷ ஜூரம் வந்தது. அரண்மனை வைத்தியர்கள் எவ்வளவோ முயன்று பார்த்தனர். ஒரு ராத்திரி கூட சிகிச்சையால் அவள் உயிரைப் பிடித்து வைக்க முடியவில்லை. அவள் காலமாகி விட்டாள். இந்த தகவல் மன்னனுக்குத் தெரிவிக்கப்பட்டு அவன் திரும்பி வர குறைந்தது 3 நாளாவது ஆகி விடும். அதுவரை சவத்தைப் பாதுகாத்து அரண்மனையில் வைக்க முடியாது என்பதால் அரச குடும்பத்தின் வாரிசுகளைக் கொண்டு தகனத்தை முடித்து விட்டனர். 

ஒன்றுக்கு இரண்டு எதிர்பாராமைகள் அரங்கேறி விட்டன. ராணி உயிரையும் சிகிச்சை அளித்து காக்க முடியவில்லை ; ராணி சடலத்தைக் கூட மன்னன் பார்க்க முடியாமல் தகனம் செய்தாயிற்று. இந்த இரண்டு தகவலையும் மன்னனுக்கு எவ்விதம் தெரிவிப்பது என ராஜாங்கத்தின் அமைச்சகங்களும் செயலகங்களும் திணறின. கூடிக் கூடி ஆலோசித்தன. மந்திரிக்கு தான் அரசாங்க வேலை கொடுத்த ‘’எந்தத் திறனும் இல்லாதவன்’’ நினைவு வந்தது. அவனை அழைத்து வரச் சொன்னார். 

அவனிடம்,’’ விஷயம் உனக்குத் தெரிந்திருக்கும். இந்த செய்தியை யார் கொண்டு சென்று தெரிவித்தாலும் ராஜன் அக்கணமே செய்தி கொண்டு சென்றவன் தலையைக் கொய்து விடுவார். மேலும் அரண்மனைக்கு வந்து இங்கே உள்ள அத்தனை ஊழியர்களையும் கழு ஏற்றி விடுவார்’’என்றார். 

‘’மந்திரி ஐயா! நாடே நான் எதுக்கும் பயன்படாதவன்னு சொன்னப்ப எனக்கு நீங்க அரசாங்க வேலை கொடுத்தீங்க. அதை எப்போதும் நான் நன்றியோட நினைப்பன். நான் தகவல் கொண்டு போறன்’’ என்று சொல்லி புறப்பட்டான். 

அரசாங்க ஊழியர்கள் இன்னும் ஓரிரு நாளில் ஒட்டுமொத்தமாக கழுவேற்றம்தான் எனக் கவலையோடு இடிந்து போய் உட்கார்ந்திருந்தனர். 

துக்கம் சொல்லச் சென்றவன் காட்டில் மன்னன் கூடாரத்தை அடைந்து நெடுஞ்சாண் கிடையாக மன்னனை வணங்கினான். 

ராஜன் எச்சொல்லும் உரைக்காமல் அவனை நோக்கினான்.

’’மஹாராஜா! ராணிக்கு லேசாக உடம்பு சரியில்லை’’ என்றான் துக்கம் சொல்ல வந்தவன். 

ராஜன் பதறி விட்டான். ‘’ஆ! என்ன சொல்கிறாய்? என்ன உடம்புக்கு? வைத்தியம் நடக்கிறதா ? வெளிநாட்டிலிருந்து வைத்தியர்கள் வந்தார்களா ? நான் இப்போது உடனே புறப்படவா ? ‘’ என அடுக்கடுக்காக கேள்வியாகக் கேட்டான். 

‘’ராஜா! நம் வைத்தியரே குணப்படுத்தி விட்டார்’’ என்றான் துக்கம் சொல்ல வந்தவன். 

’’அப்பாடா’’ என ஆசுவாசம் ஆனார் மன்னர். 

‘’குணமான அடுத்த நாள் ராணியின் கால் சுண்டு விரலில் சிறு காயம் மஹாராஜா’’

மன்னன் அதற்கும் பதட்டமடைந்து பின் விபரம் கூறப்பட்டு சகஜமானான். துக்கம் சொல்ல வந்தவன் விரல், கை, கால் என ஒவ்வொரு அவயங்களிலும் சிறு காயம் ஏற்பட்டு ராணிக்குச் சரியானது என்றான். ஒவ்வொரு முறையும் பதட்டமைந்து பின் ஆசுவாசமாகி நிலை மீண்டான் ராஜன். அதன் பின் ராணிக்கு ஜூரம் வந்தது ; விஷ ஜூரம் வந்தது எனக் கூறப்பட்டது. 

ராஜன் உச்சகட்ட பதட்டத்துக்குச் சென்று கத்தினான். ‘’ ராணி உயிரோட இருக்காளா? இல்ல செத்து தொலஞ்சிட்டாளா?’’ 

‘’ நாலு நாள் முன்னாடியே ராணி இறந்துட்டாங்க மஹாராஜா. தகனமும் ஆயிடுச்சு’’

ராஜன் தலை சுற்றி மயங்கி விழுந்து விட்டான். மயக்கம் தெளிந்து விழித்ததும் அவன் மனம் ராணி இறந்து போன யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டது. அவள் விதி அவ்வளவு தான் என்ற துக்கத்தோடு சோகமாக அரண்மனைக்குப் புறப்பட்டான். 

சினத்துடனும் வஞ்சத்துடனும் வந்து தங்களை ராஜன் கழுவேற்றப் போகிறார் என எண்ணிய அரண்மனை ஊழியர்கள் ராஜன் அவ்விதம் செய்யாததைக் கண்டு வியப்படைந்தனர். நடந்த விஷயத்தை விசாரித்து அறிந்து ‘’எந்தத் திறனும் இல்லாதவன்’’ எனக் கூறப்பட்டவன் கொண்டிருந்த திறமையை வியந்தனர். அவனுக்கு அரசாங்க வேலை கொடுத்த மந்திரியின் சமயோஜித தன்மையைத் தங்களுக்குள் பாராட்டிக் கொண்டனர்.   

Friday, 13 March 2026

பாகம் 2 -ஆட் மேன் அவுட் (இன்னொரு நகைச்சுவைக் கட்டுரை)

 பொதுவாக தமிழக மக்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி சற்றே குறைவு. அண்டை மாநிலமான கேரளம் நகைச்சுவை உணர்ச்சிக்கு பேர் போனது. அங்கே நம்பூதிரி, நாயர் ஜோக்கள் மிகவும் பிரபலம். வட இந்தியாவில் சர்தார்ஜி ஜோக் மிக பிரபலம். நகைச்சுவையை நகைச்சுவையாகக் காணும் தன்மை என்பது சிறப்பானது. எனக்கு சிறு வயதிலிருந்தே முல்லா நஸ்ருதீன் ஜோக் மிகவும் விருப்பத்துக்குரியது. தெனாலி ராமன், பீர்பால் நகைச்சுவையும் மிகவும் பிடிக்கும். இங்கே எதையுமே சீரியசாக எடுத்துக் கொள்பவ்ர்கள் அதிகம் என்பதால் நகைச்சுவையாய் எழுதப்படும் விஷயங்களை (நகைச்சுவைக் கட்டுரை) எனக் குறிப்பிட்டு எழுதி விடுகிறேன். சமீபத்தில் எழுதும் கணிசமான கட்டுரைகள் நகைச்சுவைக் கட்டுரைகளாக இருப்பதைக் கண்டு எனக்கு வியப்பும் ஆச்சர்யமும் ! எனது நகைச்சுவை உணர்ச்சி மிகவும் மிகுந்து விட்டதா அல்லது அன்றாடத்தில் மிக அதிக நகைச்சுவை அம்சங்கள் என் கண்ணில் பட ஆரம்பித்து விட்டதா என!

இன்று பிற்பகலில் ‘’ஆட் மேன் அவுட்’’ என ஒரு நகைச்சுவைக் கட்டுரை எழுதினேன். எழுதிய விஷயம் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. மாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு சென்றேன். பெட்ரோல் பங்கின் அருகில் ஒரு கல்யாண மண்டபம். அதில் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனர் என்ன என்று பார்த்தேன். கட்டிடப் பொறியாளரான எனது நண்பரின் குழந்தைக்கு முதல் பிறந்தநாள். நண்பரின் படமும் குழந்தையின் படமும் பேனரில் இருந்தது.நண்பரின் அலுவலகத்துக்கு தினமும் செல்வேன் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவையாவது செல்வேன். ஊரின் கட்டிடப் பொறியாளர்கள் அனைவரும் சந்திக்கும் இடம் அது. அங்கே காலை மாலை ஒரு மணி நேரமாவது உட்கார்ந்திருப்போம். விழா எப்போது எனப் பார்த்தேன். மார்ச் 12 என இருந்தது. எனக்கு ‘’ஆ! விழா முடிந்து விட்டதா’’ என அதிர்ச்சி. நண்பர் அலுவலகத்தில் பணி புரியும் ஊழியருக்கு ஃபோன் செய்தேன். அவர் மிக சாவகாசமாக ஃபோனை எடுத்து , ‘’சார் ! சொல்லுங்க சார்’’ என்றார். ’’தம்பி நேத்து குழந்தை ஃபர்ஸ்ட் பர்த் டேஆ. கல்யாண மண்டபத்துல இருக்கற பேனர் பாத்து தான் தெரிஞ்சுகிட்டன். என்னப்பா எனக்கு சொல்லவே இல்லை!’’ ‘’என்ன சார் சொல்றீங்க உங்களுக்குத் தெரியாதா அண்ணன் சொல்லலையா?’’ ‘’இல்லப்பா . என்ன தினமும் வரேன். எப்படி விடுபட்டுது?’’ ‘’சார் ! மன்னிச்சிடுங்க சார். எப்படியோ விடுபட்டுடுச்சு’’ என சற்று தயங்கியவர் ‘’சார் ! இன்விடேஷன் எல்லாருக்கும் வாட்ஸ் அப் ல அனுப்பினோம். நீங்க வாட்ஸ் அப் ல இல்லாததால விடுபட்டு போயிடுச்சு.’’

நான் ஊழியரிடம் பேசிக் கொண்டிருந்த போது எனது நண்பரான கட்டிடப் பொறியாளர் அவர் வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு தன் இரு சக்கர வாகனத்தில் கடந்து சென்றார். நான் நின்றிருந்த இடம் என் எதிரில் இருந்த அவரது பேனர் ஆகியவற்றைப் பார்த்த அவருக்கு நான் அவரது அலுவலக ஊழியரிடம் நேற்றைய ஃபங்ஷன் குறித்து பேசுகிறேன் என்பது மூட்டமாகத் தெரிந்து விட்டது. ஒரு கணம் திகைத்தவர் பின்னர் என்னைப் பார்த்துப் புன்சிரிப்புடன் கையசைத்தார். நானும் கையசைத்தேன். ஆஃபிஸ் போகிறேன் என சைகை மொழியில் கூறி விட்டு  சென்று விட்டார். 

ஆட் மேன் அவுட் (நகைச்சுவைக் க்ட்டுரை)

பள்ளிப் பாடங்களில் ஆங்கிலப் பாடத்தில் ‘’ஆட் மேன் அவுட்’’ என்ற பகுதி இருக்கும். ஆங்கிலம் இரண்டாம் தாள் என்று ஞாபகம். ஐந்து கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பெண். கேள்வி என எதுவும் கேட்கப்படாது. நான்கு பொருட்களோ அல்லது பெயர்களோ அல்லது வஸ்துக்களோ தரப்படும். அதில் மாறுபாடாக இருக்கும் ஒன்றைக் கண்டடைய வேண்டும். 

மா பலா வாழை முள்ளங்கி 

என இருந்தால் இதில் ‘’முள்ளங்கி’’ ஆட் மேன் அவுட். 

டிவிஎஸ் என்ஃபீல்டு பஜாஜ் பிஎம்டபுள்யூ

என இருந்தால் பிஎம்டபுள்யூ ‘’ஆட் மேன் அவுட்’’ முதல் மூன்றும் இரு சக்கர வாகனம். நான்காவது நான்கு சக்கர வாகனம்.

தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி, இங்கிலீஷ் 

என இருந்தால் ‘’இங்கிலீஷ்’’ ஆட் மேன் அவுட். முதல் மூன்றும் நம் நாட்டில் தோன்றிய மொழிகள் இங்கிலீஷ் வெளிநாட்டில் தோன்றிய மொழி.

எந்த இடத்திலும் எந்த குழுவிலும் நான் ‘’ஆட் மேன் அவுட்’’ ஆகி விடுகிறேனோ என்ற ஐயம் எனக்கு பல நாட்களாக இருக்கிறது. அதற்காக நான் வருந்துவதில்லை. இருந்தாலும் எனக்கு ஒரு ஆச்சர்யம் எப்படி இந்த வழக்கம் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக விதிவிலக்கு என சொல்லத்தக்க குழுவோ இடமோ இல்லாமல் தொடர்ந்து கொண்டேயிருப்பது. அந்த ஆச்சர்யத்தையே ஒரு சுவாரசியமாக ஆக்கிக் கொண்டேன். அதில் எனக்கு எந்த புகாரும் இல்லை. இதனை நான் ஹாஸ்யமாகவே பார்க்கிறேன். 

ரியல் எஸ்டேட்டில் சக மீடியேட்டர்கள் என்னை ஒரு மீடியேட்டராகப் பார்ப்பதும் இல்லை. நினைப்பதும் இல்லை. கணிசமான இடங்களை ‘’வாங்குபவர்’’ ‘’விற்பவருக்கு’’ நடுவில் இருந்து முடித்துக் கொடுத்திருக்கிறேன். என்றாலும் என்னை மீடியேட்டராக மீடியேட்டர்கள் நினைப்பது இல்லை. ‘’ஆட் மேன் அவுட்’’ என்றே நினைப்பார்கள்.  

முறைமை மற்றும் முறைமைகளின் மீது நம்பிக்கை கொண்டவன் என்பது ‘’ஆட் மேன் அவுட்’’ ஆவதற்கு காரணமாக இருக்கக் கூடும். எத்தனை காலம் எத்தனை வருடங்கள் ஆனாலும் முறைமை மீதான நம்பிக்கை எனக்கு கூடிக் கொண்டே போகிறது தவிர இம்மியளவும் குறையவில்லை.  

Thursday, 12 March 2026

அதிகார அரசியல் (நகைச்சுவைக் கட்டுரை)

நம் நாட்டில் 788 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.  4000 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20,000 பேர் இருக்கக் கூடும். முன்னாள் இன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 25,000 என இருக்கக் கூடும். மத்திய மாநில அரசு ஊழியர்கள் 2 கோடி பேர் இருக்கிறார்கள். முன்னாள் இன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை மத்திய மாநில அரசு ஊழியர்கள் எண்ணிக்கையுடன் சேர்த்து கணக்கிட்டாலும் அந்த கணக்கீடு உகந்ததே. எல்லாம் சேர்த்து மொத்தமாக 2 கோடி.

நமது நாட்டின் மக்கள் தொகை 120 கோடி. குறைந்தது 30 கோடி குடும்பங்கள் நம் நாட்டில் இருப்பார்கள். அதில் குறைந்தபட்சம் 20 கோடி குடும்பங்கள் விவசாயிகளாகவும் விவசாயத் தொழிலாளர்களாகவும் இருப்பார்கள். மண்ணையும் விண்ணையும் நம்பி வாழ்பவர்கள். அவர்களே நம் நாட்டின் பண்பாட்டினை உயிர்க்கச் செய்திருக்கின்றனர். அனாதி காலமாக இந்த விவசாயிகளே நாட்டின் பண்பாட்டை முன்னெடுத்திருக்கின்றனர். இன்றும் நம் கிராமங்கள் அமைதியான வாழ்க்கைமுறைக்கு வாய்ப்பு அளிக்கின்றன. இந்த கிராமங்கள் தான் இஸ்லாமியர் தாக்குதலுக்கு ஆளாயின. பிரிட்டிஷார் சுரண்டலுக்கு ஆளாயின. எனினும் அவை முழுக்க அழிந்து விடவில்லை. ஒவ்வொரு அழிவிலிருந்தும் மீண்டு வந்தன. 

ஜனநாயக அரசியல் செய்திகளும் நிலவரங்களும் இன்று நாட்டின் சகல குடிகளையும் சென்று சேர்ந்திருக்கிறது. எனினும் நமது சர்க்கார் இயங்குமுறை பிரிட்டிஷ் மனோபாவங்களால் ஆக்கப்பட்டது. அரசியலால் சர்க்காரால் கோடானுகோடி மக்களுக்கு நலம் பயத்து விட முடியுமா என்பது மிகப் பெரிய கேள்வி. இருப்பினும் நாட்டின் உயர் அதிகாரப் பொறுப்பில் இருந்த பலர் கோடானுகோடி மக்களின் வாழ்வைத் தொடும் விதமாக வாழ்வில் நன்மையை உருவாக்கும் விதமாக பொருட்படுத்தத்தக்க விஷயங்களை செய்திருக்கின்றனர். 

நான் ஜனநாயக அரசை மதிப்பவன். ஜனநாயக அரசமைப்பின் மீது மதிப்பு கொண்டவன். எனினும் அரசை விட சமூக அமைப்புகள் மீது எனக்கு நம்பிக்கை அதிகம். சாமானிய மக்கள் சாமானிய குடும்பங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த சமூக அமைப்புகள் பணி புரிய வேண்டும் என்னும் விருப்பமும் எதிர்பார்ப்பும் கொண்டவன்.  எதிர்காலத்தில் நம் நாட்டில் ஒட்டு மொத்த உலகிலும் கூட அரசியல் அமைப்புகளை விட சமூக அமைப்புகள் அதிக அளவில் உருவாகி மானுட இனத்தின் முன்னேற்றத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். 

14 ஆண்டுகள்? 100 ஆண்டுகள்? (நகைச்சுவைக் கட்டுரை)

நமது நாட்டில் 14 ஆண்டுகளை ஒரு தலைமுறை என்று கூறுவதுண்டு. 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை 14 ஆண்டுகளை ஒரு தலைமுறை எனக் கருதும் வழக்கம் உண்டு. இப்போதும் 14 ஆண்டுகள் என்பது ஒரு தலைமுறைதான். இருப்பினும் சில சமூக அரசியல் பொருளியல் கூறுகளால் இந்த காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இராமாயணத்தில் கைகேயி இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என விரும்பி தசரதனிடம் வரம் கேட்டார். 14 ஆண்டுகளில் அடுத்த தலைமுறை உருவாகி அவர்கள் பொறுப்பேற்கும் சூழல் உருவாகும் என்பதே அந்தக் கால நிர்ணயத்துக்கான காரணம்.

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி தாங்க அருந் தவம் மேற்கொண்டு
பூழி வெங் கானம் நண்ணி புண்ணியத் துறைகள் ஆடி
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள்.
 
என்பது கம்பன். 

எனினும் கைகேயின் வரத்தை பரதன் தன் தூய அன்பாலும் தியாகத்தாலும் செயலற்றதாக்கினான். அண்ணன் பாதுகையை தன் தலைமையாக ஏற்று அதன் பிரதிநிதியாக அண்ணன் 14 ஆண்டு நிறைவு செய்து திரும்பி வரும் வரை காத்திருந்து அரசாட்சியை ஒப்படைத்தான் என்பது இதிகாசம். 

மகாபாரதத்திலும் பாண்டவர்களின் வனவாசம் என்பது 12 ஆண்டுகள். மேலும் ஒரு வருடம் அக்ஞாதவாசம். அக்ஞாதவாசத்தில் அவர்கள் அடையாளம் வெளிப்பட்டால் மேலும் 12 ஆண்டுகள் வனவாசம். 14 ஆண்டுகள் ஒரு தலைமுறைக் காலம் என்பதை ஓராண்டு குறைப்பது போல் காட்டி இரண்டு தலைமுறை வனவாசத்துக்குக் கொண்டு செல்ல செய்யப்பட்ட முயற்சி. மதிசூழ்கையில் தேர்ச்சி கொண்டவரான சகுனி உருவாக்கிய நிபந்தனை. அக்ஞாதவாசத்தின் கடைசி தினத்தன்று பாண்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர் என்பதே பாதி ராஜ்யம் தர மறுத்ததற்கு கௌரவர் சொன்ன காரணம். பாஞ்சால தேசத்தின் தலைமைப் புரோகிதர் பாண்டவர் சார்பில் தூதுச் செய்தி உரைக்க வருவார். யுதிர்ஷ்ட்ரன் 13 ஆண்டு காலத்தைக் கணக்கிட்டு மேலும் கூடுதலாக ஒருநாள் அக்ஞாதவாசத்தில் இருந்த பின்னரே தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள். கௌரவர் அவையில் பீஷ்மரோ, துரோணரோ கிருபரோ விதுரரோ இவர்களில் எவர் ஒருவர் அக்ஞாதவாசத்தில்  பாண்டவர்கள் அடையாளம் காணப்பட்டதாக எண்ணினால் யுதிர்ஷ்ட்ரர் எந்த சொல்லும் இன்றி வனவாசம் செல்ல சித்தமாக இருக்கிறார் ; பாஞ்சாலத்தின் தலைமைப் புரோகிதிரான எனது சொல்லும் வாக்குறுதியும் இது என்று அவையில் கூறுவார். நாள் பொழுதை துல்லியமாகக் கணக்கிடுவதில் தேர்ந்த தேர்ச்சி பெற்றவர்கள் புரோகிதர்கள். எனவே பாஞ்சாலத்தின் தலைமைப் புரோகிதர் தூதுக்கு அனுப்பப்பட்டிருப்பார். பீஷ்மர் துரோணர் கிருபர் விதுரர் நால்வரும் எந்த சொல்லும் கூறாமல் அமைதி காப்பார்கள். தலைமைப் புரோகிதர் அவர்கள் காக்கும் அமைதி பாண்டவர்களின் கணக்கீடு சரியானதே என்பதைக் காட்டுகிறது ; எனவே அவர்களுக்கு உரிய பாதி ராஜ்யம் தரப்பட வேண்டும் என்பதே எனது தூதின் செய்தி எனக் கூறுவார். 

60 ஆண்டுகளுக்கு முன்பு வரை 18 வயதில் ஒருவர் குடும்பப் பொறுப்பை ஏற்பது நடக்கும். விவசாயமாக இருந்தாலும் தொழிலாக இருந்தாலும் ஒருவர் 18 வயதில் பொறுப்பை ஏற்பார். நம் நாடு சுதந்திரம் அடைந்த போது வாக்களிக்கும் உரிமை குடிமக்களுக்கு 21 வயதில் தரப்பட்டது. அதன் பின் 35 ஆண்டுகளுக்குப் பின்னரே வாக்காளர் வயது 18 என ஆனது. இன்றைய காலகட்டத்தில் ஒருவர் பட்டப்படிப்பு படிக்கவே 21 வயது ஆகி விடுகிறது. அதன் பின் மேல்படிப்பு மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் படித்தால் 23 வயதாகி விடும். அதன் பின் ஒரு வேலையில் அமர மேலும் 4 ஆண்டுகள் ஆகிறது. திருமணங்களே 27 வயதை ஒட்டி நிகழ்கிறது. இதனால் 60 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த 14 ஆண்டுகள் என்னும் காலம் இப்போது மேலும் 14 ஆண்டுகள் நீண்டு விட்டது. 

ரியல் எஸ்டேட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை - 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட வங்கிக் கடனுக்கான வில்லங்கச் சான்றிதழ் 14 ஆண்டுகளுக்கு பெறச் சொல்வார்கள். வருவாய்த்துறை ஒரு சொத்து ஒருவரிடம் 14 ஆண்டுகளுக்கு மேல் அவரது அனுபோகத்தில் இருந்தால் அவருக்கு ’’பட்டா’’ என்னும் நில உரிமை ஆவணத்தை வழங்கும். இடத்தின் பட்டா உடையவர் இடத்தின் உரிமையாளர் என்பது தமிழக நடைமுறை. பிரிட்டிஷ் ஆட்சி நம் நாட்டில் முதன் முதலில் ஏற்பட்டது தமிழகத்திலும் வங்காளத்திலும். அப்போதிருந்து அதுவே வழக்கம். இப்போது அந்த நடைமுறை ஐயத்திற்கிடமில்லாததாக இல்லை. சில உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ‘’பட்டா’’வின் ஆவண மதிப்பை நூறு சதவீதம் ஏற்பதை ஐயத்திற்கிடமாக்கியுள்ளன. இப்போது வங்கிகள் 14 ஆண்டுகள் வில்லங்கச் சான்றிதழ் மட்டும் கோருவதில்லை ; 100 ஆண்டுகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் வழங்கக் கோருகிறார்கள். 

இராமாயண காலத்திலிருந்து இன்று வரை நிலம் நில உரிமை இவற்றுடன் சர்ச்சையும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. 

மனித சமூகம் உருவான முதல் நாளிலிருந்து இந்த நிலம் நில உரிமை சர்ச்சைகள் இருந்திருக்கும் என்று படுகிறது.