மோனப் பெரு வெளி (நகைச்சுவைக் கட்டுரை) நண்பரிடம் சமணத்துக்கும் சைவ வைணவ சாக்தத்துக்கும் இடையே இருக்கும் அடிப்படை வேறுபாட்டு இயல்பை ஓர் உதாரணம் கூறி விளக்கினேன். வரலாற்றைப் புரிந்து கொள்வது எளியது. அதன் முதல் பாடமே வரலாற்றைப் புரிந்து கொள்வது என்பது வரலாற்றைப் புரிந்து கொள்ள முயலும் முயற்சிகளே என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாவது பாடம் நாம் புரிந்து கொண்ட பின்னரும் நாம் புரிந்து கொண்ட விஷயத்தில் இன்னும் புரியாமல் இருக்கும் பகுதிகள் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது பாடம் நாம் புரிந்து கொள்ளாத விஷயங்கள் குறித்து மேலும் புரிதல் ஏற்படும் போது முதல் புரிதலில் சில மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கும். எனவே வரலாற்று அறிவை எப்போதும் அவதானமாகவே கொள்ள வேண்டும். எந்த விஷயத்தையும் அவதானிக்க வேண்டும் என விரும்புவது என் இயல்பாகையால் எனக்கு வரலாற்றின் மீது ஆர்வம் உண்டு.
நண்பரின் ஊருக்கு ‘’சோழவெளி’’ எனப் பெயரிட்டுக் கொள்வோம். நண்பரிடம் கேட்டேன். ‘’நாம இப்ப சமணத்தைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம். சமணத்துக்கும் சைவ வைணவ சாக்தத்துக்கும் என்ன வேறுபாடுன்னு நீங்க யோசிச்சுப் பாத்துருக்கீங்களா?’’
யோசித்துப் பார்ப்பதை ஒரு செயல் என எண்ணாதவர் நண்பர். எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார் அல்லது அவரது மௌனத்திலிருந்து வினா எழுப்பியவனே விடையை அடைந்து கொள்ளட்டும் என இருந்தார்.
‘’இப்ப உங்க ஊர் சோழவெளி இருக்கு’’
நண்பர் மௌனம்.
‘’உங்க ஊர் பாபுலேஷன் எவ்வளவு?’’
நீடுதுயில் நீங்கியது போல் விடை சொன்னார். ‘’ 3500 பேர் இருப்பாங்க.’’
‘’ஓ.கே. சோழவெளில 2026ல பாபுலேஷன் 3500. இப்ப இங்க சைவ வைணவ சாக்த வழிபாடு இருக்கு. 2056ல இந்த ஊர் எப்படி இருக்கும்னு கற்பனை செஞ்சு பாப்போம். 2026ல சோழவெளியோட பாபுலேஷன் 3500 ஆ இருக்கும். இல்லன்னா 10 பர்செண்ட் கூடி 3850 ஆ இருக்கலாம். அதிகபட்சமா 20 பர்செண்ட் கூடி 4200 ஆ கூட இருக்கலாம்.’’
இது ஒரு சாமானிய அவதானம் தானே என எண்ணி நண்பர் ஆமோதிக்காமல் இருந்தார்.
‘’இப்ப சோழவெளி சமணத்துல இன்ஸ்பையர் ஆகி சமணத்துக்கு மாறினா என்ன ஆகும் தெரியுமா? நான் சொல்றது ஒரு யூகம் தான். அடுத்த 30 வருஷத்துல அந்த ஊரோட பாபுலேஷன் பாதிக்குப் பாதியா குறையக் கூட சான்ஸ் இருக்கு. இன்னும் சொல்லப்போனா அந்த ஊரோட பாபுலேஷன் 90 பர்செண்ட் குறைஞ்சு 350ல கூட வந்து நிற்கும். அவங்களோட வழக்கம் ஒரு நாளைக்கு மாலை 6 மணியில இருந்து காலை 6 மணி வரைக்கும் 12 மணி நேரம் தண்ணீர் கூட குடிக்க மாட்டாங்க. உணவு எதுவும் சாப்பிட மாட்டாங்க. மனிதர்கள் அவங்க உடல் இயக்கத்துக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு மட்டுமே உணவு எடுத்துக்கணும். வாழ்க்கைக்கு குறைந்தபட்சமா என்ன பொருள் தேவையோ அது மட்டுமே பயன்படுத்தனும்னு எண்ணம் கொண்டவங்க சமணர்கள். ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை இருந்தா போதும் என எண்ணுவது சமணம். துறவை மேற்கொள்றதை மிகப் பெரிய விஷயமா நினைக்கறது சமணம். சொத்து சேர்க்கறதுல அவநம்பிக்கை கொண்டது சமணம். உங்க ஊர்ல 3500 பேர் இருந்தா இந்த எண்ணங்களோட இன்ஃபுளூயன்ஸ் அந்த மக்கள்ட்ட சேர சேர ஓவர் ஆல் புரொடக்ஷன் அந்த ஊர்ல குறைய ஆரம்பிக்கும். பசியை ஆற்றும் எளிய உணவு தான் உண்ணனும்னு சமணம் சொல்லுது. அப்ப உங்க ஊரோட அக்ரி கமாடிட்டிஸ் புரொடக்ஷன் ரொம்ப குறைஞ்சுடும். அக்ரிகல்சர் லேபர்க்கு இருக்கற வேலை இல்லாம போயிடும். அவங்க ஊரை விட்டுப் போய்டுவாங்க. ஊர்ல கணிசமான ஆண்களும் பெண்களும் துறவி ஆவாங்க. மெல்ல உங்க ஊர் துறவிகளும் அறிஞர்களும் கல்வியாளர்களும் இருக்கற ஊரா ஆகும். அங்க போர்க்குணம் உள்ளவங்க இருக்க மாட்டாங்க. படிப்படியா குறைஞ்சு 3500 மெல்ல 350 ஆ ஆகிடும். இல்லன்னா 3500 ஒரு 1000 ஆ ஆகிடும்னு வச்சுக்கங்க.’’
நான் சொல்வது ஒரு வீழ்ச்சியின் இதிகாசம் போல இருப்பதாக நண்பர் நினைத்து அகத்துயர் கொண்டார்.
’’சோழ தேசத்துல சோழவெளி ஒரு கிராமம். 3500 ஆ இருக்கறது 350 ஆ ஆகுது. சோழ தேசத்தோட மொத்த 3000 கிராமமும் அப்படி ஆனா 2026ல 3500 X 3000 = ஒரு கோடியே அஞ்சு லட்சம் பாபுலேஷன் 30 வருஷத்துல பத்து லட்சத்து ஐந்தாயிரத்துக்கு வந்துடும். நிலப்பரப்பு அதே அளவு இருக்கும். ஆனா மக்கள்தொகை 90 பர்செண்ட் குறைஞ்சிடும். அதிக நிலப்பரப்புல குறைவான மக்கள் தொகை இருந்தா பக்கத்து நாடு சோழ நாட்டை படைபலத்தால ஆக்கிரமிக்கும். சோழவெளில பக்கத்து நாட்டு மக்கள் குடியேற ஆரம்பிச்சுடுவாங்க. 1960ல திபெத் நாட்டுக்கு இந்த பிர்ச்சனை வந்தது. பௌத்த நாடான திபெத்தை சீனா ஆக்கிரமிச்சது. அந்தப் பிரச்சனை இன்னும் தீரலை’’
நண்பர் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் கண்ணீர் மல்கியிருப்பார்.
நண்பரை ஆறுதல் படுத்த இப்படி சொன்னேன்.’’ இப்ப இன்னொரு சாத்தியம் யோசிச்சுப் பாருங்க. 2026ல சோழவெளியோட பாபுலேஷன் 350 . உங்க ஊர் முழுக்க சமணம் இருக்கு. உங்க ஊர் மக்களுக்கு சைவ வைணவ சாக்தம் மேல இன்ஸ்பிரேஷன் ஆயிடுது. அப்ப என்ன ஆகும்? 350 ஆ இருக்கறது 30 வருஷத்துல 3500 ஆ ஆகிடும். புரொடக்ஷன் அதிகமாயிடும். மக்கள்ள 10 பர்செண்ட் ஆட்கள் போர்க்குணத்தோட இருப்பாங்க. வன்முறை கொஞ்சம் தலைதூக்கும். அதை அரசாங்கம் கட்டுப்படுத்தும். ஒருத்தரும் இன்னொருத்தரும் முட்டி மோதி சேர்ந்து பிரிஞ்சு 3500ங்கற நம்பர்ல செட்டில் ஆவாங்க. பத்து லட்சத்து ஐந்தாயிரமா இருக்கற சோழ தேசத்தோட பாபுலேஷன் ஒரு கோடியே ஐந்து லட்சமா ஆகும். சோழ மன்னன் படைதிரட்ட ஆரம்பிப்பான். மக்கள்தொகை குறைவா நிலப்பரப்பு அதிகமா இருக்கற பிரதேசம் எதுன்னு பாத்து அது மேல படையெடுப்பான்’’
ஊரில் இப்போது இருக்கும் பிரச்சினைகள் போதும் ; புதிதாக ஏதும் தேவையில்லை என நண்பர் நினைத்தார்.
‘’ஒரு புரிதலுக்காக மிகையான ஊகத்தை நான் சொல்லியிருக்கன். யோசிச்சுப் பாருங்க’’ என்றேன்.
நண்பர் இந்த உரை சீக்கிரம் முடிந்தால் போதும் என நினைக்கிறாரோ என நான் நினைத்தேன்.
‘’இந்திய வரலாற்றுல வணிக சமூகங்களும் அறிஞர்களும் சமணத்துக்கு மாறியிருக்காங்க. இன்னைக்கும் இந்திய சமணர்கள் வணிகர்களும் அறிஞர்களும் தான். எல்லா அரசாங்கமும் அவங்களுக்கு மதிப்பு கொடுத்திருக்காங்க. அவங்க ஆலயங்களைப் பராமரிக்க நிதி கொடுத்திருக்காங்க. அவங்க துறவு நிலையங்களை ஆதரிச்சிருக்காங்க. அவங்கள பல ஊர்கள்ல செட்டில் செஞ்சு பாதுகாப்பு கொடுத்திருக்காங்க. எல்லா மன்னர்களும் செஞ்சிருக்காங்க. அவங்க மேல பெரிய மரியாதையும் மதிப்பும் வச்சுருக்காங்க’’
நண்பர் எதுவும் பேசவில்லை.
‘’இப்ப ஒரு கற்பனை செய்வோம். சோழவெளிக்குப் பக்கத்துல அருகபுரின்னும் ஒரு கிராமம் இருக்கு. அந்த ஊர்ல பெருமாபாலான ஆட்கள் வணிகர்கள் அந்த ஊர்ல பாபுலேஷன் 3500 . அந்த ஊரே சமணத்துக்கு மாறிடுது. 30 வருஷம் கழிச்சு அந்த ஊருக்கு வந்தா அந்த ஊரோட பாபுலேஷன் எவ்வளவு இருக்கும்?’’
நண்பர் தயக்கத்துடன் ‘’350 ஆகுமா?’’ என்றார்.
‘’ஆகாது. அதே 3500 இருக்கும். ஏன்னா அவங்க வணிகர்கள். அவங்க சமண நெறிக்கு முழுமையா உட்படுவாங்க. அவங்க ஒரு நாள்ல 12 மணி நேரம் சாப்பிடாம இருப்பாங்க. தேவையை குறைச்சுப்பாங்க. ஆனா அந்த ஊரோட சர்ப்ளஸ் அக்ரி புரொடக்ஷனை தொலைதூரத்துல இருக்கற ஒரு பிராந்தியத்துக்குக் கொண்டு போய் வித்து காசாக்கி அந்த காசை அருகவெளிக்கு கொண்டு வந்திருவாங்க’’ என்றேன்.
நண்பர் அமைதியாக இருந்தார்.
ஒட்டு மொத்த உரையாடலின் முத்தாய்ப்பாக எனக்கு ஒரு படிமம் கிடைத்தது. ‘’சமணம் சாம்பல். சைவ வைணவ சாக்தம் நிலம். நிலத்துக்கு சாம்பல் உரமானா நிலம் விளைச்சலை மிக அதிகம் கொடுக்கும். இந்திய வர்லாறு என்பது சமணம் என்னும் சாம்பல் சைவ வைணவ சாக்த மரபுக்கு உரமாக ஆனது தான்’’ என்றேன்.