Tuesday, 31 March 2026

சிறு கூடாரம்

 
சில நாட்களுக்கு முன், தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரு பயணி ரயில்வே பிளாட்ஃபாரத்தில் மேலே இருக்கும் விதமான சிறு கூடாரம் ஒன்றை அமைத்து அதனுள் உறங்கிக் கொண்டிருந்தார். நான் பார்த்த போது நேரம் இரவு 10 மணி. அவரது ரயில் நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ இருந்திருக்கக் கூடும். மலையேறுபவர்கள் இதனைப் பயன்படுத்துவார்கள். மிகக் குறைவான எடை கொண்டது. மொத்த கூடாரத்தையும் சிறு பைக்குள் அடக்கி வைக்க முடியும். கையால் தூக்கிச் செல்லும் அளவு மிகக் குறைவான எடை கொண்டது. எனக்கு அக்காட்சி பெரும் ஆர்வம் அளித்தது. 

சொந்த வீட்டுக்கு மாற்று

இந்தியா இன்றும் விவசாய நாடு. தங்கள் விளைநிலத்துக்கு அருகில் வீடமைத்துக் கொள்வது இந்திய விவசாயிகளின் வழக்கம். விவசாயிகளின் உபரி வருமானமே பன்னெடுங்காலமாக இந்திய நகரங்களின் தோற்றத்துக்கும் நிலைபெறலுக்கும் காரணமாக அமைந்தது. இந்தியாவில் எப்போதுமே நிலம் ஒரு முதலீடு. பெரும் விலை மிக்கது. ஒருவர் தன் வாழ்நாளின் பெரும் பகுதி சம்பாதித்த ஒரு கோடி ரூபாய் கூட ஒரு 40 அடி அகலமும் 60 அடி நீளமும் கொண்ட 2400 சதுர அடி மனையாக மாறி விடும். இந்தியர்கள் தங்கத்திலும் நிலத்திலும் மட்டுமே அதிகம் முதலீடு செய்கின்றனர். இது அனாதி கால நடைமுறை. அதனால் தான் நகரங்களிலும் பெருநகரங்களிலும் மனையும் வீடுகளும் பெரும் விலை விற்கின்றன ; வீட்டு வாடகையும் கூடுதலாக இருக்கிறது. 

ஏன் நம் பிராந்தியத்தில் காலிமனைகள் வாடகைக்கு விடப்படுவதில்லை ? ஒருவருக்கு 2400 சதுர அடி மனையில் கட்டப்பட்டிருக்கும் வீடு மாதம் ரூ.6000 வாடகைக்கு தரப்படுகிறது என்றால் ஏன் ஒரு மனை ரூ.2000 வாடகைக்கு தரப்படக் கூடாது ? மனையின் விலை ஐம்பது லட்ச ரூபாய் என்றால் வீடு கட்ட ஐம்பது லட்ச ரூபாய் செலவாகிறது. மனையை வாடகைக்கு விட்டால் வீடு கட்ட செலவிடப்படும் தொகை சேமிப்பாக அந்த நபருக்கு மிஞ்சும் அல்லவா? 

ஒருவர் ஒரு மனையை வாடகைக்கு எடுத்து தன் சொந்த செலவில் மூங்கிலால் வீடு கட்டிக் கொண்டு 3 வருடமோ 5 வருடமோ குடியிருந்து விட்டு பின்னர் அந்தக் கூரை வீட்டை பிரித்து விட்டு ஏன் அடுத்த ஊருக்குச் செல்லக் கூடாது? கண்டெயினர் வீடுகள் இருக்கின்றன. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மோட்டார் வாகனத்தில் நகர்த்திச் செல்லும் கண்டெயினர் வீடுகள் இருக்கின்றன. இவை ஏன் நம் தேர்வாக இருப்பதில்லை? இவற்றை ஏன் நாம் பரிசீலிப்பதில்லை ?  

உத்தரவு

பெயருடன் ஊரை இணைத்துக் கொண்டிருப்பவன் அடியேன். ஊரிலிருந்து புறப்படுவதும் ஊருக்குத் திரும்பி வருதலுமே என் வழமையாக இருந்திருக்கிறது. சிறுவனாக மகிழ்ந்திருந்ததும் இங்கு தான் ; இளைஞனாக வாழ்வை எதிர்கொண்டதும் இங்கு தான். அகத்தின் ஏதோ ஒரு சிறு புள்ளி புதிய நிலம் நோக்கிச் செல் எனக் கூறிக் கொண்டிருக்கிறது. அக்குரலின் உறுதி மாற்றமடையாமல் இருப்பது எனக்கு வியப்பைத் தருகிறது. எந்தப் புதிய நிலம் என என் அகத்தைத் துழாவிப் பார்த்தேன். ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்னும் விருப்பம் எனக்கு உண்டு. காஞ்சிபுரம் சென்று விட வேண்டும் என்றும் நினைக்கிறேன். கோதாவரி பாயும் ராஜமுந்திரி சென்று விட வேண்டும் என்பதும் என் விழைவு. கர்நாடகாவின் கூர்க் பிராந்தியம் எனக்கு விருப்பமானது. மத்தியப் பிரதேசத்தின் சிறு குன்றுகள் இனியவை. காசியும் ரிஷிகேசமும் என்றைக்குமான விருப்பங்கள். இமயத்தில் வாழ்ந்தால் வாழ்நாளின் மீதி உள்ள நாட்கள் எல்லாம் இமயத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் அதை விட இன்னொரு இனிமை இருக்க இயலாது. என்ன நிகழப் போகிறது என்பதை அறியேன். அகத்தின் குரலைக்கு செவி சாய்க்கப் போகிறேனா என்பதை அடியேன் நோக்கிக் கொண்டிருக்கிறேன். 

இந்த எண்ணம் ஏன் உருவானது என்பதை என்னால் அத்தனை தெளிவாக வகுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த ஊர்கள் எவ்விதம் என் தெரிவாக இருக்கின்றன அவற்றின் பொதுத்தன்மை என்ன என்பதும் என்னால் அறிய இயலாததாக இருக்கிறது. எல்லா ஊர்களுமே நதிக்கரையின் ஊர்கள். ஸ்ரீரங்கமும் கூர்க் கும் காவிரிக்கரை ஊர்கள். காசியும் ரிஷிகேசமும் கங்கைக்கரை ஊர்கள். ராஜமுந்திரி கோதாவரிக்கரையில் இருக்கும் ஊர். நதிக்கரையில் பிறந்து வாழ்ந்த நான் இன்னொரு நதிக்கரை நகருக்கே செல்ல விரும்புகிறேன். 

சராசரி வாழ்நாளின் பாதி பங்கு கடந்து விட்டது. மீதி பங்கு எவ்வளவு என்பது என் திட்டமிடலுக்கு உட்பட்ட விஷயம் அல்ல. புதிய நிலத்துக்குச் சென்று ஒவ்வொரு கணமும் புதிதாய் உணரும் வாழ்க்கையை அங்கு வாழ வேண்டும் என விரும்புகிறேன். தினமும் புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ளும் வாழ்க்கை. இயற்கையிடமிருந்து பெற்றுக் கொண்டவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வாழ்க்கை. துயர் இல்லாத வாழ்க்கை. 

ஒரு புதிய நிலம் நோக்கி செல்வது என்னும் ஆர்வம் சில விஷயங்களை தீவிரமாக உறுதிப்படுத்துகிறது. செல்லும் ஊரில் சொந்தமாக நிலம் எதுவும் வாங்கக் கூடாது. ஏன் இவ்விதம் தோன்றுகிறது என அறியேன். சொந்தமாக நிலமோ வீடோ இல்லாமல் இருப்பது சிறப்பான விஷயம் என்பது என் அபிப்ராயமாக இருக்கிறது. எனது தொழில் கட்டுமானமும் மனை வணிகமும். இருப்பினும் என் அபிப்ராயம் இதுவே. இது மிக உறுதியான எண்ணம் அல்ல எனினும் நாம் ஒரு தொழில் செய்கிறோம் அந்தத் தொழிலுக்கு ஒரு சொந்த இடம் இருப்பது நல்லது எனில் நிலம் வாங்கி அதில் வீடு கட்டிக் கொள்ளலாம். வட இந்திய வணிகர்களுக்கு இந்த வழக்கம் உண்டு. அவர்கள் வீடுகள் பெரும்பாலும் கடைவீதியில் இருக்கும் ; அவர்களின் வணிகத்துக்குரிய கடை கீழ்தளத்திலும் வீடு மேல்தளத்திலும் இருக்கும். ஒருவர் கையில் பணம் இருக்கிறது அவர் ஒரு புதிய ஊருக்கு இடம் பெயரப் போகிறார் என்றால் அங்கே கையில் இருக்கும் பணத்தை வீடாக மாற்ற வேண்டியதில்லை. சொந்தமாக வீடு இல்லை என்றால் எந்த ஊருக்கும் சென்று அங்கே ஓராண்டோ இரண்டு ஆண்டுகளோ வாழ்ந்து விட்டு அடுத்த ஊருக்குச் செல்லலாம். பெங்களூரில் இரு ஆண்டுகள் ; ஸ்ரீகாகுளத்தில் இரு ஆண்டுகள்; திருவண்ணாமலையில் இரு ஆண்டுகள்; நாகபுரியில் இரு ஆண்டுகள் ; கௌஹாத்தியில் சில ஆண்டுகள் ; ஸ்ரீநகரில் சில ஆண்டுகள். எண்ணிப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. 

இங்கிருந்து புறப்படுவது என்று மனதுக்குத் தோன்றி விட்டது. அந்த எண்ணத்தை தெரிவித்து உத்தரவு பெற வேண்டும் என எண்ணுகிறேன். யாரிடம்? மாயூரநாதரிடமும் அபயாம்பிகையிடமும். திருஇந்தளூரின் பரிமள ரங்கநாதனிடம். இறை உரு முன் சென்று நிற்கப் போகிறேன். எனக்கான உத்தரவை அவர்களே கொடுக்கட்டும் என்று. 

என் மண்ணே ! என் நிலமே ! எனக்கு நீ எவ்வளவோ அளித்தாய். இப்போதும் அளித்துக் கொண்டிருக்கிறாய். கூட்டை விட்டுப் பறக்க வேண்டும் என்பதே பறவைகளின் தணியாத தாகம். எல்லையற்ற வானத்துக்குப் பறந்து செல்ல தளம் அமைத்துக் கொடுத்தலே கூட்டின் இயல்பு. என் மண்ணே! என் நிலமே ! உன் கூட்டிலிருந்து எல்லையற்ற வானம் நோக்கி இந்தப் பறவை பறந்து செல்லட்டும். என் மண்ணே ! என் நிலமே ! எனக்கு எப்போதும் ஆசியளி.   

Sunday, 29 March 2026

தீர்த்தன்

 

எனது நண்பன் சென்னையில் பணி புரிகிறான். அவனது மனைவி ஒரு சார்டட் அக்கவுண்டண்ட். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நண்பன் சென்னையிலிருந்து திருக்கருகாவூர் வந்திருந்தான். கோவிலில் ஸ்வாமியிடம் பிராத்தனை செய்து கொள்ள. அப்போது நான் உடன் சென்றிருந்தேன். (2024ம் ஆண்டு மே மாதத்தை ஒட்டி என்று ஞாபகம். நாங்கள் திருக்கருகாவூர் சென்று விட்டு பட்டீஸ்வரம், தாராசுரம் ஆலயங்களுக்கும் சென்றிருந்தோம். அப்போது தாராசுரத்தில் ஒரு தேர்தல் பரப்புரைக் குழு எங்களைக் கடந்து சென்றது. ) ஆலயம் வந்து விட்ட சென்ற சில வாரங்களில் நண்பனின் மனைவிக்கு சுகப்பிரசவம் ஆனது. சென்ற வருடம் குழந்தைக்கு ஓராண்டு பூர்த்தியானதும் அவர்கள் குடும்பத்துடன் திருக்கருகாவூர் வந்திருந்தனர். கும்பகோணத்தில் தங்கியிருந்த அவர்களைக் காணச் சென்றிருந்தேன். நண்பனுடன் அவ்வப்போது உரையாடினாலும் அவன் வீட்டுக்கு வந்ததில்லை என்பது என் மனக்குறையாக இருந்தது. அதற்கான சூழல் சரிவர அமையவில்லை. இன்று நண்பன் மனைவி குழந்தை தீர்த்தன் மூவரும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். ஆலயம் ஒன்றில் சுவாமி தரிசனம் செய்து விட்டு இங்கே ஊரில் ரயில் ஏற வேண்டும். 15 நிமிடம் மட்டும் வீட்டுக்கு வந்து விட்டு செல்லவும் என்று சொன்னேன். கடைசி நிமிடம் வரை வரமுடியுமா என்னும் நிலை; எனினும் சமாளித்து வந்து விட்டனர். நீர்மோர் மட்டுமே தயாரித்து வைக்க முடிந்தது. தீர்த்தன் நீர்மோரை விரும்பிப் பருகியது மனதுக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது. தீர்த்தன் புஷ்டியாக இருக்கிறான். இருக்கும் இடத்தில் இனிமையை நிறைக்கிறான். அவன் வண்ணச் சீரடிகள் வீட்டில் பட்டது ஸ்ரீராமனும் கிருஷ்ணனும் வீட்டுக்கு வந்ததைப் போன்ற உணர்வை அளித்தது. 

பிதாமகரின் ஆசி

 
இலக்கியப் படைப்பாளியான திரு.சிவப்பிரகாஷ் அவர்களின் ஆளுமை எப்போதும் ஒரு சிம்மத்தை நம் நினைவுகளுக்குக் கொண்டு வரும். கர்ஜிக்கும் சிம்மம். பராக்கிரமத்தை தன் இருப்பாய் வெளிப்படுத்தும் சிம்மம். இப்போது அவர் முற்றிலும் கனிந்திருக்கிறார். அவரின் ஒவ்வொரு சொல் செயல் சிறு அசைவிலும் அவர் அகம் கொண்டிருக்கும் கனிவு வெளிப்படுகிறது. இன்று அவர் ஒரு பிதாமகராக தன் அன்பையும் ஆசிகளையும் யாவர்க்கும் அளித்துக் கொண்டிருக்கிறார். 

கனிவு கொண்ட அம்மனிதருடன் இரண்டு மணி நேரம் உரையாடும் வாய்ப்பு கிடைத்த 29.03.2026ம் தேதியின் மாலைப்பொழுது அந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத மாலையாயிருக்கும் என்பதில் ஐயமில்லை. 

பாரதம் உலகில் தனித்துவம் கொண்ட மண். உலகியலிலும் ஆன்மீகத்திலும் மானுடம் தொட்ட உச்சங்கள் அனைத்தையும் பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் பாரத மண் பலமுறை பார்த்திருக்கிறது. மானுட அகம் ஒரு புறம் அதிகார விழைவு கொண்டிருக்க இன்னொரு புறம் பொருள் எல்லைகளுக்கு அப்பால் செல்லவும் உளம் கொள்கிறது. உலகியலின் இனிமைகளுக்கு ஒரு வாழ்க்கை மட்டும் போதுமா என எண்ணிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு பொருளும் அதன் ஸ்தூல வடிவமான உடலும் அழியக் கூடியது என்னும் உணர்வு ஏற்படும் போது வாழ்நாளின் கணிசமான பகுதி பூர்த்தியாகியிருக்கிறது. பொருள் உலகமும் பொருளுக்கு அப்பாற்பட்ட உலகமும் தங்கள் நிலையில் நின்றிருக்க மானுடம் அலைக்கழிப்புகளுக்கு ஆளாகிறான். கோடானுகோடி மானுடரில் ஒரு சிலரே வாழ்வின் சாரத்தை அனுபவபூர்வமாக சென்றடைகிறார்கள். 

கன்னட இலக்கியப் படைப்பாளியான சிவப்பிரகாஷின் வாழ்க்கை அவருக்குள் ஓர் ஆன்மத் தேடலை உண்டாக்குகிறது. வீர சைவம், சைவ சித்தாந்தம், காஷ்மீர சைவம், பௌத்த விபாசனா, கிரியா யோகம் ஆகியவை அவர் வாழ்க்கையின் நீண்ட பரப்பில் அவர் அகத்தை எட்டுகின்றன. பல ஆண்டுகள் ஆன்மீக சாதனையில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கிறது. அவரது ஆன்ம சாதனை அவருக்கு இனிதானதாக மட்டும் இருக்கவில்லை. மிகக் கடுமையானதாகவும் மிக உக்கிரமானதாகவும் இருந்திருக்கிறது. அவை அனைத்தையும் குரு அருளால் குருவின் இருப்பை உணர்ந்ததால் கடந்து வந்திருப்பதாகக் கூறுகிறார் சிவப்பிரகாஷ். இறைவனை விடவும் குரு கருணை கொண்டவர் என்னும் உணர்வுநிலையை அடையப் பெறுகிறார். ஆன்ம சாதகன் தன் ‘’குரு’’வை சிக்கெனப் பற்றிக் கொள்வான் எனில் குருவின் கருணையால் அவன் உணர வேண்டியவை அவனுக்கு உணர்த்தப்படும் என்கிறார். 

படைப்புச் செயல்பாடு என்பது கணந்தோறும் புதியது. உயிர்த்துடிப்பு மிக்கது. படைப்பூக்க மனம் கொண்ட படைப்பாளியும் இலக்கிய வாசகனும் எவ்விதம் யோகப் பயிற்சியில் ஈடுபடுவது என்னும் வினாவுக்கு தன் வாழ்வில் இருந்து நிறைய அனுபவங்களை முன்வைத்தார். தனது ஆன்ம சாதனை என்பது தனக்கு வாய்த்த குரு அருள் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி இருக்கிறார். தனக்கான குருவை எவ்விதம் கண்டடைவது என்னும் வினாவுக்கு கன்றுக்குட்டியின் நினைவு எப்போதும் தாய்ப்பசுவுக்கு இருந்து கொண்டேயிருப்பது போல சீடனை குரு எப்போதும் தன் உணர்வில் கொண்டிருப்பார் என பதில் அளித்தார். 

நிகழ்வில் கலந்து கொண்ட இலக்கிய வாசகர்கனின் மனதில் சுழன்று கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நேற்றைய நிகழ்வு சொற்கள் மூலமும் சொற்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுநிலை மூலமும் தீவிரமான பதிலை அளித்தது. பங்கேற்பாளர்கள் அனைவரும் பிதாமகரின் அன்பையும் ஆசிகளையும் பரிபூரணமாகப் பெற்றார்கள். 

Friday, 27 March 2026

சுகன்யா சம்ரிதி

 
இன்று அஞ்சல் அலுவலகம் சென்றிருந்தேன். எனது கணக்கிலிருந்து இன்னொருவரின் வங்கிக் கணக்குக்கு தொகையை மாற்றம் செய்ய வேண்டும். N E F T என்னும் முறையில் பணம் அனுப்ப அங்கே சென்றிருந்தேன். காத்திருந்த போது நான் முன்னர் சென்று முடி திருத்திக் கொண்டிருந்த சலூன் கடைக்காரரைச் சந்தித்தேன். அவர் கடையை விட குறைவான தூரத்தில் ஒரு புதிய சலூன் திறந்தார்கள் ; அவர்கள் காலையில் முன் நேரத்திலேயே கடையைத் திறந்து விடுவார்கள். ஆதலால் அங்கு செல்ல ஆரம்பித்தேன். வெகுநாட்கள் கழித்துப் பார்க்கிறோம். 

என்னிடம் ‘’ என்ன அண்ணன்! பாத்து எத்தனை நாளாச்சு? ஏன் அண்ணன் கடைக்கே வர்ரது இல்லை’’ என்றார். 

‘’இந்த மாசம் முடி வெட்டிக்கும் போது வரேன்’’ என்றார். 

அவர் சலூன் கடைக்காரர் என்பதால் சில நாட்கள் முன்னர் நான் முடி வெட்டியிருக்கிறேன் என்பது அவருக்கு முதற்பார்வையிலேயே தெரிந்திருக்கும். 

அவர் கையில் இரு பாஸ்புத்தகங்கள் இருந்தன. நான் அதனைக் கவனித்தேன். 

‘’அண்ணன் ! இது செல்வ மகள் திட்டம் அண்ணன். உங்களுக்கு ஞாபகம் இருக்கா ? நீங்க கடைக்கு ஒருநாள் வந்திருந்தீங்க. அப்ப உங்ககிட்ட முதல் நாள் நைட் எனக்கு பெண் குழந்தை பொறந்திருக்குன்னு சொன்னன். அப்ப நீங்க போஸ்ட் ஆஃபிஸ்ல ‘’செல்வ மகள்’’னு ஒரு ஸ்கீம் இருக்கு. உங்க பெண் குழந்தை பேர்ல மாசா மாசம் டெபாசிட் செய்ங்கன்னு சொன்னீங்க. எனக்கு ஃபார்ம்லாம் கூட வாங்கிட்டு வந்து தந்தீங்க.’’ அவர் சொன்னது என் நினைவில் வந்தது. 

‘’இன்னொரு பாஸ் புக்?’’

‘’போன வருஷம் ஒரு பையன் பொறந்தான் அண்ணன். அவன் பேர்லயும் கட்டறன்’’

பாஸ்புக்கை வாங்கிப் பார்த்தேன். மாதா மாதம் இரு குழந்தைகள் பெயரிலும் ரூ.1000 கட்டுகிறார். சில மாதங்கள் ரூ.1500ம் கட்டியிருக்கிறார். 

‘’நீங்க ஹெட் போஸ்ட் ஆஃபிஸ்ல தான் பணம் கட்டணும்னு இல்ல. கன்னியாகுமரில இருந்து காஷ்மீர் வரைக்கும் இருக்கும் எந்த போஸ்ட் ஆஃபிஸ்லயும் நீங்க பணம் கட்டலாம். உங்க சலூனுக்கு பக்கத்துல கூட ஒரு பிராஞ்ச் போஸ்ட் ஆஃபிஸ் இருக்கே. அங்க கூட பணம் கட்டலாம்’’

அவருக்கு நான் சொன்ன தகவல் புதிது. போஸ்ட் ஆஃபிஸ் ஊழியர் ஒருவரிடம் அழைத்துச் சென்று நான் சொன்ன விபரத்தை உறுதிப்படுத்தினேன். 

‘’சுகன்யா சம்ரிதி’’ என்னும் ‘’செல்வ மகள்’’ திட்டம் மிகச் சிறப்பான ஒரு திட்டம். பெண் குழந்தை பிறந்த நாள் முதல் குழந்தையின் பெயரில் ஒரு சேமிப்புக் கணக்கு துவங்கி மாதாமாதம் பணம் கட்டி வர வேண்டும். அந்த குழந்தைக்கு 18 வயது ஆகும் போது கல்விச் செலவுக்கென ஒரு தொகையையும் 21 வயதில் முழுத் தொகையையும் பெற முடியும். 

பெற்றோர் குழந்தை உறவின் உணர்வைப் பிணைப்பை அன்பை நேயத்தை வெளிப்படுத்தும் திட்டம் இது. நாடெங்கும் நான்கு கோடியே ஐம்பது இலட்சம் செல்வ மகள் கணக்குகள் நடப்பில் இருக்கின்றன. அதில் மூன்று இலட்சத்து முப்பத்து மூன்று ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. 

பிறந்த கைக்குழந்தை பெயரில் கணக்கு துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது இத்திட்டம் பெரிய அளவில் மக்களைச் சென்றடைந்ததற்கான காரணம். அவ்விதம் துவங்கப்பட்ட கணக்குகள் உணர்வின் அடையாளமாயின. 

சலூன் கடைக்காரர் அதற்கு முன் அவருக்கு சொந்தமாகக் கூட வங்கிக் கணக்கு வைத்திருந்து அதில் ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தியிருக்க மாட்டார். ஆனால் தன் குழந்தைகள் விஷயம் என வரும் போது கிரமமாக ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்துகிறார். 

இவ்விதமான திட்டத்தை வடிவமைத்த ஒருவர் நம் நாட்டு மக்களின் உளநிலையை உணர்வுநிலையை நன்கறிந்த ஒருவராக இருப்பார். அதனால் தான் இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Tuesday, 24 March 2026

வாணி வாழ்த்து


நூல் : சரஸ்துதி (கவிதைத் தொகுப்பு) ஆசிரியர் : கா.சிவா பக்கம் : 122 விலை:ரூ.230 பதிப்பகம் : வாசகசாலை பதிப்பகம், சென்னை-92. பதிப்பக மின்னஞ்சல் : vasagasalaipublication (at) gmail (dot) com  

***

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு 
தெள்ளிய ராதல் வேறு
-திருக்குறள்

ஞாயிறு மாலைகளில் பூம்புகாரோ தரங்கம்பாடியோ செல்வது எனது வழக்கம். இளைஞனாயிருந்த போது நூல் பிடித்தாற் போல இருந்த வழக்கம், இப்போது குறைந்தபட்சம் இரு வாரங்களுக்கு ஒருமுறை என்ற அளவிலேனும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அலைகளும் வானமும் மேகமும் நிறைந்திருக்கும் அந்த வெளியை அகத்தில் நிறைத்துக் கொண்டால்தான் அடுத்த ஏழு நாட்களும் இனிதே இருக்கும் என்பது எனது நம்பிக்கை. ஞாயிறன்று காலை ஓஷோவின் ''Glimpses of a golden childhood'' என்ற நூலை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஓஷோ கேட்கிறார். ‘’ உலகின் 10 சிறந்த நாவல்களை எவர் பட்டியலிட்டாலும் அதில் 5 நாவல்கள் ருஷ்ய நாவல்களாக இருக்கும். டால்ஸ்டாய், தாஸ்தயெவ்ஸ்கி, இவான் துர்கனேவ் ... சோவியத் யூனியன் அரசாங்கம் வந்தது. சோவியத் அரசு கலைஞனை எழுத்தாளனை போஷித்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் பெரும் படைப்புகள் எவையும் வரவில்லையே. ஏன்?’’ ஓஷோ மேலே சொல்லிக் கொண்டு சென்றார். ‘’சில விஷயங்கள் இயல்பாக நடக்க வேண்டும். மலர்கள் மலர்வது. பனி பொழிவது. மலர்களை வரி அமைப்புக்குள் கொண்டு வந்தால் அவை மலராது. பனிப் பொழிவும் அப்படித்தான்.’’ சிந்திக்கும் மனம் கொண்டவர்களுக்கு ஓஷோவின் அவதானங்கள் சிறு விதைகள். அவற்றை மனதுக்குள் அமிழ்த்து வைத்தால் செடிகளாக வளர்ந்து பூக்கத் தொடங்கி விடும், நூற்றுக்கணக்காக. அன்று முழுக்க பெரும் படைப்பாளிகள் ஏன் சோவியத் ஆட்சிக்குப் பின் உருவாகவில்லை என்னும் கேள்வியை மனம் கேட்டுக் கொண்டேயிருந்தது. 

மாலை திருவாரூரிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவருடன் பூம்புகார் சென்றேன். நண்பர் என்னிடம் ‘’என்னால் எந்த சடங்கிலும் மனதை இணைத்துக் கொள்ள முடியவில்லை.’’ என்றார். ‘’இது ஆழமா கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். நாம இப்படித்தான் அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருப்போம். ஆனா முழுக்க அப்படி இருக்க மாட்டோம். அந்த இடைவெளில நிறைய முக்கியமான பிரதானமான நமக்கு நம்ம பர்சனாலிட்டிக்கு ரொம்ப நெருக்கமான நமக்கு நிறைய பயன் தரக்கூடிய விஷயங்கள் இருக்கும். அத மிஸ் பண்ணிடக் கூடாது. அப்படி மிஸ் பண்றது நமக்கு இழப்பு’’ நண்பர் அமைதியாக இருந்தார். நான் தொடர்ந்து சொன்னேன் . ‘’தமிழ் சொஸைட்டில மரபான விஷயங்கள் மேல ஒரு ரெசிஸ்டென்ஸ் உருவாக்கிட்டாங்க. 90 பர்செண்ட் பியூபிள் மனசுல அந்த விஷயம் இருக்கு. அவங்க அத முழுசா தெரிஞ்சுக்கவும் இல்ல. கம்யூனிஸ்ட் உருவாக்குன ரெஸிஸ்டன்ஸ் அது. அதோட எஃபெக்ட் இப்பவும் இருக்கு’’. தான் எந்த சடங்கிலும் மனம் இணையாமல் இருப்பதற்கும் கம்யூனிசத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது நண்பருக்குத் தெரியவில்லை. ‘’முதல்ல சடங்குன்னு நீங்க எதை மீன் பண்றீங்க. அத வெளிப்படையா சொல்லுங்க’’. ‘’சாமி கும்பிடுறது’’. ‘’உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா ? நீங்க உங்களை நாத்திகர்னு உணர்றீங்களா?’’ ‘’நான் கடவுளை நம்பல. ஆனா ஒரு சக்தி இருக்குன்னு நம்பறன்’’. ‘’உங்க நம்பிக்கைக்கு யார் குறுக்க வந்தா? எல்லாரும் கும்பிடற மாதிரிதான் நீங்க கும்பிடணும்னு யார் சொன்னா? நீங்க நம்புற சக்தியை உங்களுக்கு உகந்த விதத்துல அணுகக் கூடாதுன்னு யாராவது ஏதாவது செஞ்சாங்களா?’’. நண்பர் அமைதியாக இருந்தார். இவ்விதமான எதிர்கொள்ளலை இப்போதுதான் சந்தித்திருப்பார். ‘’ ஆயிரம் வருஷம் ரெண்டாயிரம் வருஷம் முன்னால யாராவது எதையாவது எழுதியிருப்பாங்க. அதையே ஏன் இப்பவும் பெருசுன்னு நினைக்கனும். அதெல்லாம் ஒருத்தன் கற்பனையா எழுதனது. கற்பனைல இல்லாத விஷயத்தைக் கூட எழுத முடியும்.கவிஞர்கள் கவிதை எல்லாமே இல்லாதத எழுதறது தான்.  அத ஏன் நாம பெருசுன்னு நினைக்கனும். நம்ம அனுபவத்துல எது இருக்கோ நமக்கு எது பெருசோ நமக்கு எது முக்கியமானதோ அதான் அவசியம். மத்ததெல்லாம் தேவையில்லை’’. நண்பர் பட பட வென பேசி விட்டார். 

‘’நண்பரே ! எனக்கு உங்க உணர்வு புரியுது. உங்க கேள்வியும் புரியுது. உங்க கேள்விக்கு ஒரு பதில் இருக்கு. உங்க மனசுல இருக்கற கேள்விக்கான பதிலை நீங்க தேடிக் கண்டுபிடிச்சுட்டீங்களான்னு எனக்குத் தெரியாது. ஆனா நிச்சயமாக உங்க கேள்விக்கு ஒரு பதில் இருக்கு. உங்க கேள்விக்கான பதில்னு எனக்கு தெரியறத சொல்றன். அது உங்களுக்கு உபயோகப்படலாம் ; உபயோகப்பட்டா பயன்படுத்திக்கீங்க. இல்லன்னா விட்டிருங்க. நீங்களே தேடி கண்டுபிடிங்க.’’

‘’சடங்கு, கடவுள், கவிதைன்னு அடுத்தடுத்து நிறைய பெரிய விஷயம் உள்ள வந்துட்டோம். நான் எங்கயோ ஒரு இடத்துல இருந்து ஆரம்பிச்சுக்கறன். நாம இப்ப கடலுக்கு போயிட்டு இருக்கோம். நம்ம மரபுல கடலுக்கும் நதிக்கும் நிறைய தொடர்பு இருக்கு. அதனால நதியிலிருந்து ஆரம்பிக்கறன். நம்ம நாட்டுல ஒருத்தன் காலைல எழுந்ததும் ‘’ கங்கை யமுனை சரஸ்வதி ந்ர்மதை சிந்து காவேரி கோதாவரி’’ன்னு ஏழு நதிகளோட பேரையும் சொல்லணும்னு ஒரு வழக்கம் இருக்கு. இன்னைக்கும் நம்ம நாட்டுல அப்படி சொல்றவங்க இருக்காங்க. லட்சம் பேர் இருக்கலாம். ஆயிரம் பேர் இருக்கலாம். நூறு பேர் இருக்கலாம். 140 கோடி ஜனங்கள்ல ஆயிரம் பேர் சொல்றாங்கன்னே வச்சுக்கங்க. நம்பர்ல டிபேட் பண்ண வேண்டாம். அப்படி நதிகளோட பேரை சொல்றது ஒரு நம்பிக்கை. அத ஒரு சடங்குன்னு வேணாலும் உங்க தியரிபடி வச்சுக்கங்க. ஆனா இந்த வழக்கம் நம்பிக்கை சடங்கு குறைஞ்சது 4000 வருஷமா இருக்கு. 4000 வருஷம் முன்னாடி இந்த 7 நதியையும் ஒரு தடவை நேரா பாத்தவங்க குறைவா இருந்திருக்கலாம். இன்னைக்கு கூட இந்த 7 நதிகளையும் நேரா பாத்தவங்க எண்ணிக்கை நம்ம மக்கள்தொகையோட ஒப்பிட்டா குறைவா தான் இருக்கும். ஆனா ஒருத்தன் காலைல எழுந்ததும் பலபேருக்கு வாழ்க்கையைக் கொடுக்கற இந்த ஏழு நதிகளோட பேர சொல்ரான்னா அது ரொம்ப மகத்தான விஷயம்னு தான் நான் நினைப்பேன். அதே போல ஏழு நகரங்கள் புண்ணிய நகரங்கள். ‘’அயோத்தி மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா துவாரகா’’. நம்ம மரபு மண்ணை நதியை வானத்தை மேகத்தை பூமியை காத்தை நெருப்பை தெய்வமா பாக்கற மரபு. நம்ம மரபோட பார்வையை நாம விரிவுபடுத்தி பாக்கலாம். அதுக்கான முழு சுதந்திரம் நமக்கு இருக்கு. ஆனா மரபுக்கு அன்னியப்பட்டு போகக் கூடாது.’’ 

பேசிக் கொண்டே வந்ததில் சாயாவனத்தைத் தாண்டி விட்டோம்.அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன். ‘’திருவாரூருக்கும் பூம்புகாருக்கும் ஒரு தொடர்பு இருக்கு. அது என்னன்னு தெரியுமா?’’. நண்பருக்குத் தெரிந்திருக்கவில்லை. 

‘’அதாவது, பாண்டியனோட அவையில கண்ண்கி வந்திருக்கறத வாயிற்காவலன் சென்று சொல்கிறான். வந்திருப்பவள் ‘’வெற்றிவேற் தடக்கை கொற்றவை அல்லள்;. அதாவது வந்திருக்கறது பத்ரகாளி இல்லன்னு சொல்றான். அவளைப் பத்தி சொல்லும் போது அவனுக்கு ஏன் பத்ரகாளி ஞாபகம் வந்ததுன்னு நாம யோசிச்சுக்கணும். அவைக்குள்ள கண்ணகி சென்றதும் பாண்டியன் யார்ன்னு கேக்கறான். அதுக்கு கண்ணகி சொன்ன பதிலா இளங்கோ எழுதறார். மன்னனைப் பாத்து ‘’தேரா மன்னா’’ அப்படிங்கறா. தேர்வு தேர்தல் எல்லாத்துக்கும் மூல வார்த்தை அது. அலசி ஆராயும் திறன் இல்லாத மன்னனே ‘’தேரா மன்னா’’. ஒரே வார்த்தை அதுல எத்தனை விஷயத்தைப் புரியவச்சுடான் இளங்கோ. தேரா மன்னா செப்புவதுடையேன் . ஆராய்ச்சி இல்லாத மன்னா நான் சொல்வதைக் கேள்.

 "தேரா மன்னா செப்புவது உடையேன்!
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்,
வாயிற் கடைமணி நடுநா நடுங்க,
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத்
தான் தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின்
மடித்தோன், பெரும்பெயர்ப் புகார் என் பதியே!"

(இந்தப் பாடல் எனக்கு மனப்பாடம். அதனை நண்பரிடம் அப்படியே சொன்னேன்.)

புள்-னா பறவை. புள்ளுறு புன்கண் தீர்த்தவன் சிபிச்சக்கரவர்த்தி. அதாவது, சிபி பேரரசனா ஆட்சி செஞ்சான். அவன் ஆட்சி தர்மம் தவறாம நடந்தது. அவனை சோதிக்க இந்திரன் ஒரு கழுகா மாறி ஒரு புறாவைத் துறத்திட்டு வந்தான். அந்தப் புறா சிபி உப்பரிகைல நின்னப்ப அவன் கிட்ட வந்து அபயம் கேட்டது. மன்னன் அபயம் கேட்டு வந்தவங்கள பாதுகாக்கணும். அது அவனோட தர்மம். அதனால அபயம் கொடுத்தான். அப்ப கழுகு கேட்டது. மன்னனே நீ புறாவுக்கு அபயம் கொடுத்துட்ட ; நானும் ஒரு ஜீவன் தான். என்னோட குஞ்சுகள் கூட்டுல பசியோட இருக்கு. அதுக்கு இந்த புறா மாமிசம் தான் உணவு. இப்ப புறாவுக்கு நீ கொடுத்த அபயத்தாலே அங்க கூட்டுல என் குஞ்சுகள் சாகப் போகுதே. நீ என்ன செய்யப் போற? சிபி தன்னோட உடம்பு சதையை அரிஞ்சு புறாவோட எடைக்கு சமமா தரன்னு சொல்றார். அவர் உடம்புல உள்ள எல்லா சதையையும் அரிஞ்சு வச்சாலும் தராசு முள் சமானமாகலை. கடைசி தசையையும் அரியப் போகும் போது இந்திரன் தன் சுயரூபத்தைக் காட்டுறான். அப்படிப்பட்ட சிபிச்சக்கரவர்த்தி சோழ மன்னன். அந்த சோழ நாட்டுல ‘’ஆராய்ச்சி மணியை பசுமாடு அடிச்சதுக்கு காரணம் கண்டுபிடிச்சு தன் மகனை தேர்க்கால்ல இட்ட மனுநீதி சோழன் ஆகியோர் வாழ்ந்த ஊர்னு பூம்புகாரைச் சொல்றார் இளங்கோ. மனுநீதி சோழன் தலைநகர் திருவாரூர். இருந்தாலும் ஒரே நாடு ஒரே அரசாட்சிங்கறதால பூம்புகாரை மனுநீதி சோழன் ஊர்னு சொல்றார். 

இளங்கோ தப்பா சொன்னார் ; மாத்தி சொன்னார் அப்படின்னா ஒருத்தர் புரிஞ்சுகிட்டா அத யாரும் போய் தடுக்க முடியாது. அவர் என்ன உணர்வுல சொன்னார். எந்த உணர்வு அப்படி சொல்ல வச்சுதுன்னு நாம யோசிச்சு அதுல ஆழ்ந்து போய் பாத்தோம்ணா நாம நிறைய விஷயங்களை உணர்ந்துக்க முடியும். தெரிஞ்சுக்க முடியும். 

எனக்கு சிலப்பதிகாரம் தெரியும்ங்கறதால என் மனசு திருவாரூரையும் பூம்புகாரையும் ஒன்னா பாக்கும். அது இளங்கோ எனக்கு கொடுத்த கிஃப்ட்.’’

***

படைப்பு மனத்துக்கு படைப்பு மனங்களுக்கு சொல்லன்றி வேறு துணையில்லை. எல்லா படைப்பு மனங்களும் சொல்லின் தெய்வத்திடம் ஓயாமல் உரையாடுகின்றன. ஓயாத உரையாடலையே துதியென முன்வைக்கின்றன. சொல் அன்னை அதை அவ்விதமே ஏற்கவும் செய்கிறாள்.

தமிழ்ச் சூழலில் கா.சிவா வின் ‘’சரஸ்துதி’’ ஒரு முக்கியமான ஆக்கம். 

***  

பரஸ்பரம் ( ஹாஸ்யம்)

நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். சந்திப்புக்கு நேரம் முடிவு செய்தால் அந்த நேரத்துக்கு தாமதம் இன்றி சென்று விடுவது எனது வழக்கம். காலை 10 மணி என நேரம் முடிவாகியிருந்தது. 9.55க்கு அங்கிருந்தேன். நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். அவரது அலுவலக ஊழியர் ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். நண்பர் சாவகாசமாக 11 மணிக்கு வந்தார். அதன் பின் சில மணி நேரங்கள் நாங்கள் தொழில் நிமித்தமான சில விஷயங்களை விவாதித்தோம். அடுத்த நாளும் சந்திப்பதாக முடிவானது. நேரம் 10 மணி. நான் 9.55க்கு வந்தேன். அவர் 11 மணிக்கு. அன்றும் விவாதித்தோம். மூன்றாவது நாள் 10 மணி சந்திப்புக்கு நண்பர் எப்படியும் ஒரு மணி நேரம் தாமதம் ஆக்குவாறே என்று 11 மணிக்குச் சென்றேன். நீங்கள் குறித்த நேரத்தில் வருபவர் ஆயிற்றே என இன்று 10 மணிக்கே வந்து விட்டேன் என்று சொன்னார்.  

எந்த முடிவும் இல்லை (ஹாஸ்யம்)

 திருவாரூரில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரது தந்தை ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி முதல்வர். கல்லூரி முதல்வராயிருந்து ஓய்வு பெற்றவர் என்பதால் அனுபவமிக்கவர் என ஒரு தனியார் பள்ளி அவரை பள்ளியின் ஆலோசகர் என்னும் பொறுப்பில் நியமித்து பள்ளி தொடர்பான எல்லா முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை அளித்தது. நண்பரின் தந்தைக்கு பள்ளிக்கு தினமும் சென்று வருவார். வருடங்கள் சில சென்றன. நண்பரின் தந்தை பொறுப்பில் இருக்கும் பள்ளியில் மாணவர் சேர்க்கை கணிசமாக குறைய ஆரம்பித்தது. நிர்வாகம், வரவு செலவு ஆகிய விஷயங்களில் துல்லியம் இருந்தது. ஆனால் மாணவர்கள் புதிதாக சேருவது மிகவும் குறைந்து போனது. வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கை 40 ஆக இருந்தது 25 ஆகக் குறைந்தது. அதனால் சில ஆசிரியர்களை பணியிலிருந்து அனுப்பி விட்டு இருக்கும் ஆசிரியர்களுக்கு கூடுதல் வகுப்புகளை அளிக்க ஆரம்பித்தனர்.  

நண்பர் என்னிடம் சொன்னார். ‘’அப்பா ! கவர்மெண்ட் காலேஜ்ல பிரின்சிபால் ஆக இருந்தவங்க. அங்க அட்மினிஸ்ட்ரேஷன் எப்படின்னா ஏதாவது ஒரு விஷயமோ பிரச்சனையோ கவனத்துக்கு வந்தா அது மேல எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்க. சும்மா அப்படியே போட்டு வச்சிடுவாங்க. எந்த முடிவும் எடுக்கறதில்லை என்பதே முடிவு. இந்த பிரைவேட் ஸ்கூல்லயும் ஃபோர்ஸ் ஆஃப் ஹேபிட் ல அந்த மாதிரியே முடிவெடுக்கறாங்க. அதனால பல விஷயம் தேங்கி நிக்குது. அதான் அட்மிஷன் குறையுது’’

நண்பரின் குடும்பத்தினரின் நண்பர் தந்தையின் வயதைக் காரணம் காட்டி பள்ளிப் பணியிலிருந்து விலகிடுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் அப்பணியிலிருந்து விலகினார். 

இப்போது அப்பள்ளியில் இன்னொரு ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி முதல்வரே ஆலோசகராக இருக்கிறார் என நண்பர் சொன்னார். 

Monday, 23 March 2026

கிராமமும் தேசமும்

பாரத நிலம் பலவிதங்களிலும் தனித்துவமானது. அனாதி காலமாக பாரத நிலமெங்கும் மானுடர் சேர்ந்து வாழ்கின்றனர். நிலத்தை தெய்வமென நினைக்கும் தன்மை பாரத நாட்டுக்குரிய தனி இயல்பு ஆகும். நதியை கடலை நீர்நிலைகளை இறைமையாகக் காணும் தன்மை இந்த நாட்டுக்கு எப்போதும் இருந்திருக்கிறது.  

இன்றும் ஒவ்வொரு 50 கி.மீ தூரத்திலும் இன்றும் ஒவ்வொரு 100 கி.மீ தூரத்திலும் மக்களின் வாழ்க்கைமுறை சிறு சிறு மாற்றம் கொண்டு இருப்பதை நான் அறிய முடியும் ; உணர முடியும். இன்றும் சாமானிய இந்தியன் விவசாயியே. இன்றும் கிராமமே நாட்டின் அடிப்படை அலகு ஆகும். 

நாட்டின் ஒவ்வொரு கிராமமும் நாட்டில் இருந்த மன்னர்களை பேரரசர்களை கட்டுப்படுத்தும் இடத்தில் இருந்திருக்கின்றன என்பதை நாட்டின் வரலாற்றை நோக்குபவர்களால் அறிய முடியும். ஏனென்றால் நம் நாட்டின் உற்பத்தி என்பது விவசாய உற்பத்தியே. இன்றும் விவசாயம் கிராமத்து விவசாயிகளால் ஏறக்குறைய சேர்ந்தே செய்யப்படுகிறது. நாட்டின் உலகின் பொருளாதாரத்தை ஆய்வு செய்பவர்கள் பாரதத்தின் இத்தகைய தன்மையை சேர்த்து பொருளியலை அரசியலைக் கவனிப்பதில்லை ; அவ்விதம் கவனிப்பதற்கான பயிற்சி அவர்களுக்கு இல்லை. 

ஒரு கிராமவாசி ஒட்டு மொத்த கிராமத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவனே. அவன் தொழில்முறையிலும் வாழ்முறையிலும் ‘’தனியன்’’ இல்லை. ஒரு பெரும் கூட்டு வாழ்க்கையின் நுண் அலகே அவன். உலகில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை சுரண்டுவது என்பது மனிதர்கள் சமூகமாக வாழத் தொடங்கிய நாளிலிருந்து இருக்கிறது. மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில் சுரண்டல் குறைந்த அளவு இருப்பது நம் நாட்டில் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். உலகின் மிகப் பெரிய ஜனத்தொகை கொண்ட நாடாக அனாதி காலமாக இருப்பினும் அன்றும் இன்றும் ஒப்பீட்டளவில் நம் நாட்டில் சுரண்டல் குறைவு என்பது பொருளியலிலும் அரசியலிலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயங்கள். ஆய்வு செய்து மற்ற நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.