எனது நண்பர் ஒருவர் அடகுக்கடை வைத்திருக்கிறார். அவரை எப்போதாவது சந்தித்துப் பொது விஷயங்கள் பேசிக் கொண்டிருப்பதுண்டு. இன்று அவரது கடையில் அமர்ந்திருந்தேன். அவரது வாடிக்கையாளர் ஒருவர் அடகுக்கடைக்கு வந்திருந்தார். அவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் நகையை அடகு வைத்திருக்கிறார். நண்பரிடம் வட்டி வீதம் 24 சதவீதம். அப்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4000. நண்பர் அவருக்கு கிராமுக்கு ரூ.3200 கடன் கொடுத்திருக்கிறார். அவ்வாறெனில் மாதம் ஒரு கிராமுக்கு ரூ.64 வட்டி. ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. 84 X 64 = 5346 வட்டி. ஒரு கிராமுக்கு வாங்கிய கடன் ரூ.3200 அதனுடன் வட்டித் தொகை சேர்த்து மொத்தம் 8646 ஆகிறது. கடந்த மூன்று மாதத்தில் தங்க விலை சரசரவென ஏறி விட்டதால் இப்போது ஒரு கிராமுக்கு ரூ.12,000 வரை நண்பரால் கடன் கொடுக்க முடியும். வாடிக்கையாளர் தனது கடன் வட்டியை வரவு வைத்துக் கொண்டு மீதி இருக்கும் இடைவெளித் தொகை ரூ.3400 ஐ ரொக்கமாகக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். 8600 கட்டி கடன் தீர்த்து விட்டு நகையை வாங்கிச் சென்று விடுங்கள் என்று நண்பர் சொன்னார். வாடிக்கையாளர் மேலும் பணம் கேட்டார். அசலும் வட்டியும் சேர்த்த தொகை ரூ.8600க்கு அவர் வைத்த நகை மறு அடகு வைக்கப்பட்டதாக ஏற்பாடு செய்து கொண்டு கணக்கு எழுதிக் கொண்டார் நண்பர். நண்பரின் கவலை வாங்கிய கடன் ரூ.3200க்கு அசலும் வரவில்லை வட்டியும் வரவில்லை. இந்த 8500 எப்படி திரும்பி வரும் என்பது. நண்பரிடம் விலை குறைய வாய்ப்பிருக்கிறது என்கிறார்களே அவ்வாறு நிகழ்ந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். எனது இத்தனை வருட தொழில் அனுபவத்தில் இவ்விதமான சூழ்நிலை வந்ததில்லை என்றார்.
பிரபு மயிலாடுதுறை
Wednesday, 18 February 2026
அகவய அபிப்ராயங்கள் - உடல்
உடலும் மனமும் பலவிதங்களாக இணைந்திருக்கிறது. ஒத்திசைவுடன். முரண்பட்டு. ஒன்றுபட்டு . வேறுபட்டு. பூசலிட்டு. ஒற்றுமையாகி. மனம் உடலைத் தன் ஏவலனாக்குவதே அதிகம். உடலின் நலனுக்கு எதிரான பாதையில் கூட மனம் உடலை இட்டுச் செல்லும். உடல் செயலற்று மனம் சொல்வதைக் கேட்கும். உடலும் மனத்தை சிந்திக்காமல் ஆக்குவது உண்டு. உடலும் மனமும் துல்லியமாக ஒத்திசையும் போது பல அற்புதங்கள் நிகழ்கின்றன. அசாத்தியமான பல விஷயங்கள் சாத்தியமாகின்றன.
Monday, 16 February 2026
அகவய அபிப்ராயங்கள் - மனம்
ஒவ்வொருவருக்கும் மனம் இருக்கிறது. மனம் இருப்பதால் மட்டுமே 99.99 சதவீத மனிதர்கள் தங்கள் இருத்தலையே உணர்கிறார்கள். மனதை மட்டுமே எல்லாமும் என்று நினைக்கின்றனர். மனம் ஒரு பொருளா அதன் வடிவம் என்ன அதன் செயல்முறை என்ன என்பதை நாம் அறிந்ததில்லை ; அதனை அறிய வேண்டும் என விருப்பம் கொண்டதில்லை. அறிவதற்கான பாதையில் செல்லத் துவங்குவதில்லை. அந்த பயணத்தை முழுமை செய்வதில்லை. மனம் என்பது ஞாபகங்களின் தொகுப்பு. ஞாபகம் ஒவ்வொருவரின் சூழலுக்கு ஏற்ப மாறுவது. ஒருவரின் ஒரு மனம் போல இன்னொருவருக்கு இன்னொரு மனம் இருக்கிறது. ஒருவருக்கே ஒன்றுக்கு மேற்பட்ட மனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவ்விதமே. மனம் சொல்வது மட்டுமே நமக்குக் கேட்கிறது. மனம் சொவதைக் கேட்டு அப்படியே நாம் நடந்து விடுவதில்லை. நல்லதாயினும் அல்லதாயினும். மனங்கள் பூசலிடுகின்றன. மனங்கள் விரும்புகின்றன. மனங்கள் இணைகின்றன. மனங்கள் பிரிகின்றன. மனங்கள் சினேகிக்கின்றன. மனங்கள் விரோதம் கொள்கின்றன. மனம் உடலைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்கிறது. மனம் உடல் இயக்கத்தில் தாக்கம் செலுத்துகிறது. துயர் என உணர்வது மனத்தில். மகிழ்ச்சி என உணர்வதும் மனத்தில்.
Sunday, 15 February 2026
அகவய அபிப்ராயங்கள்
புறவய அணுகுமுறைக்கும் புறவய அணுகலுக்கும் அப்பால் சில அல்லது பல விஷயங்கள் அகவயமானவையாகவும் அகவயமாக அணுக வேண்டியவையாகவும் இருக்கின்றன. அவை அவதானங்கள் என்ற அளவில் இருக்கின்றன. பின்னர் சிறு அளவில் அல்லது பெரிய அளவில் அபிப்ராயங்களாக ஆகின்றன. இவற்றை சிந்தனை என்று சொல்ல முடியாது. சிந்தனையின் கச்சாப் பொருட்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சிந்தித்தல் என்னும் செயல்முறைக்கு அவை எள்ளளவு பயன்படக்கூடும்.
Saturday, 14 February 2026
தனி வழி கொண்டவர்
இன்று ஓர் இளைஞரைச் சந்தித்தேன்.
துடிப்பான ஆர்வம் மிக்க இளைஞர். அவருக்கு 23 வயதாகிறது. சிறுவயதில் மாருதியின் சேனையைச் சேர்ந்தவர் என எண்ணும்படியான செயல்களைச் செய்தவர் என அவரை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அவர் தன் 17 வது வயதில் ஒரு பிரபலமான கல்லூரியில் சேர்ந்து அதன் மாணவர் விடுதியில் தங்கி படித்திருக்கிறார். அங்கே அலைபேசி பயன்படுத்தக் கூடாது என விடுதியெங்குமே 2 பின் சாக்கெட்டோ 3 பின் சாக்கெட்டோ சுவிட்ச் போர்டுகளில் வசதி செய்து தரப்படவில்லை. இவர் சுவிட்ச் போர்டைப் பிரித்து வயர்களை எடுத்து புதிதாக வயர்களை இணைத்து ஒரு பிளக் கில் இணைத்து தனது அலைபேசியை சார்ஜ் செய்து இயக்கிக் கொண்டிருந்திருக்கிறார். அலைபேசி சார்ஜ் செய்ய வசதியில்லை என்பதால் மாணவர்கள் அலைபேசி பயன்படுத்த வாய்ப்பில்லை என கல்லூரி விடுதி நிர்வாகம் நினைத்திருந்திருக்கிறது. இவர் மிக இயல்பாக தான் உருவாக்கிக் கொண்ட சாதனம் மூலம் அலைபேசியை சார்ஜ் செய்து கொண்டிருக்கிறார். இன்னும் 4 மாணவர்களுக்கும் அலைபேசி சார்ஜ் செய்து கொடுத்திருக்கிறார். பல வாரங்கள் பல மாதங்கள் இந்த விஷயம் நடந்திருக்கிறது. அந்த மாணவர் விடுதியில் இருந்த அனைவருமே பொறியியல் பயிலும் மாணவர்கள். அடிப்படை மின் பொறியியல் என்னும் பாடத்தை கல்லூரி முதல் ஆண்டில் பயில்பவர்கள். 2000 மாணவர்களுக்கும் அந்த பாடம் உண்டெனினும் இந்த மாணவனே தான் கற்றுக் கொண்டதை நடைமுறையில் செயல்படுத்திப் பார்த்திருக்கிறார் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. 2000 பொறியியல் மாணவர்கள் பயிலும் இடத்தில் ஒரு பொறியியல் தந்திரத்தைச் செய்த கல்லூரி நிர்வாகத்தின் மனப்பான்மையை அந்த இளைஞன் தன் சிந்தனை செயல் மூலம் உடைத்திருக்கிறான் என்பது முக்கியமான செயலே. அந்த இளைஞன் எல்லோரையும் போல் இல்லாமல் தனி வழி கொண்டவன் என்பதை அறிய நேர்ந்தது மகிழ்ச்சி அளித்தது. புதிதாக ஒரு வோல்ஸ்வேகன் கார் வாங்கியிருக்கிறார்.
தனது பெயரில் இருக்கும் ஓர் அம்சத்தை அவர் என்னிடம் சொன்னார். அது கேட்க சுவாரசியமாக இருந்தது. அவரது பெயரின் முதல் இரு எழுத்துக்கள் அவரது அண்ணன் பெயரின் முதல் இரு எழுத்துக்கள். அவரது பெயரின் மூன்றாவது எழுத்து அவர் தந்தையின் பெயரின் முதல் எழுத்து. அவரது பெயரின் நான்காவது எழுத்து அவர் அன்னையின் பெயரின் முதல் எழுத்து. தனது சகோதரன், தனது பெற்றோர் பெயரின் முதலெழுத்துக்களைச் சேர்த்தல் அதுவே தன் பெயர் என்றார். சுவாரசியமான மனிதர்.
Wednesday, 11 February 2026
உயிர்
நான் கண்டுகொண்டேன்
Monday, 9 February 2026
நற்செயல்
நேற்று செய்தித்தாளில் ஒரு செய்தி வாசித்தேன். அதாவது, திருவாரூரில் ஒரு குடும்பம் தங்கள் மகள் திருமணத்துக்கு வாங்கிய 20 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் ஒரு ஆட்டோவில் பயணித்திருக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக நகைப்பை ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்து விட்டது. சிறிது நேரம் கழித்து திருவாரூர் நகராட்சியின் தூய்மைப் பணியாளரான துரை என்பவர் கண்ணில் அந்த பை படுகிறது. அதில் தங்க நகை இருப்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அந்த பையை பரிசோதிக்கும் அவரது மனைவி அதில் தங்க நகைகள் இருப்பதை தெரிவிக்கிறார். காவல் நிலையத்தில் அந்த பையை ஒப்படைக்கிறார்கள். நகைப்பையைத் தவற விட்டவர்கள் காவல் நிலையத்துக்கு வருகிறார்கள். துயரத்துடனும் பதைப்புடனும் வரும் அவர்களிடம் அவர்கள் தொலைத்தது இந்த பையும் இதில் இருந்த நகைகளும் தானா என விசாரித்து அவர்களிடம் நகைப்பையை வழங்குகிறது காவல்துறை.
இன்று மாலை திருவாரூரில் இருக்கும் திரு. துரை அவர்களின் இல்லத்துக்குச் சென்று அவருக்கு மரியாதை செய்தேன். ஓர் இளம்பெண்ணின் அப்பெண்ணின் குடும்பத்தின் துயரை திரு. துரை நீக்கியிருக்கிறார் என்பது மிகப் பெரிய விஷயம் என அவரிடம் கூறினேன். அவரைப் போன்றவர்கள் இருப்பதாலேயே உலகில் நியாயம் என ஒன்று இருக்கிறது என்று அவரிடம் தெரிவித்தேன்.
பிரசித்தி பெற்ற கொற்றவை ஆலயத்தில் கொற்றவை சந்நிதியில் அவர் நலனுக்காகவும் அவர் குடும்ப நலனுக்காகவும் அர்ச்சனை செய்கிறேன் என்று கூறி அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் நட்சத்திரங்களையும் கேட்டுக் கொண்டேன்.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய் போல் போற்றாக்கடை.
என்பது திருக்குறள்.
பிற உயிர்களின் துன்பத்தை தன் துன்பமாகக் கருதுவதே அறிவு என்பது அதன் பொருள்.
ஒரு குடும்பம் அடைய இருந்த பெருந்துன்பத்தை தன் நற்செயல் மூலம் போக்கியிருக்கிறார் திரு. துரை அவர்கள்.
கிராமத் திருவிழாக்கள் - நண்பருக்கு ஒரு கடிதம்
அன்புள்ள நண்பருக்கு,
நேற்று நாம் இருவரும் கிராமத்துக் கோவில் திருவிழாக்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அது குறித்து தங்கள் மனப்பதிவுகளையும் விருப்பங்களையும் கூறினீர்கள். என்னுடைய அவதானங்களை நான் கூறினேன். இன்று காலை எனக்கு சில யோசனைகள் தோன்றின. உரையாடல்களின் சிறப்பான அம்சங்களில் ஒன்று அந்த உரையாடல்கள் நிறைவுற்ற சில மணி நேரங்களுக்குப் பின் சில நாட்களுக்குப் பின் நமக்கு புதிய திறப்புகள் நிகழும் ; புதிய கோணங்கள் கிடைக்கும் என்பதே.
என் மனதில் ஒரு காட்சி தோன்றியது. அதனைத் தெரிவிக்கிறேன்.
(1) காப்பு கட்டி கொடியேற்றி திருவிழா தொடங்கியதும் அதன் ஒரு பகுதியாக ‘’வேத பாராயணம்’’ ஏற்பாடு செய்யலாம். குறைந்தபட்சமாக ஒரு முழு நாள் அல்லது மூன்று நாட்கள் என்ற அளவில் ஏற்பாடு செய்யலாம்.
நான்மறைகள் நம் நாட்டின் கிராமங்களில் தோன்றியவை. எட்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அவை ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. ஒரு கிராமத்துத் திருவிழாவிலும் அதன் ஒரு பகுதியாக வேதம் ஒலிக்க வேண்டும்.
மறையோதுதலை தன் வாழ்வாக ஏற்றுக் கொண்டிருக்கும் சிறுவர்கள் சமூகத்தால் போஷிக்கப்பட வேண்டியவர்கள். திருவிழாவின் ஒரு பகுதியாக அவர்களை போஷிக்கவும் வாய்ப்பு கிடைக்கும். சாமானிய மக்களின் செவிகளில் வேத முழக்கம் கேட்கவும் ஒரு வாய்ப்பு உருவாகும்.
(2) ஆதிகாவியமான ‘’ஸ்ரீராமாயண நவாஹம்’’ ஏற்பாடு செய்து கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் தென்னம்பிள்ளை வழங்கலாம். கேரளத்தில் இந்த வழக்கம் உள்ளது.
(3) ‘’வலிமையே வாழ்வு’’ என்பதே வேதாந்தத்தின் செய்தி. எனவே எல்லா விதமான விளையாட்டுப் போட்டிகளும் திருவிழாவின் ஒரு பகுதியாக நிகழ்த்த வேண்டும்.
(4) ஒரு பெரும் மைதானத்தில் பெண்களுக்கான கோலப் போட்டி நடத்த வேண்டும்.
ஒவ்வொரு கிராமமும் தங்களுக்கே உரிய பிரத்யேக விதத்தில் திருவிழாக்களைக் கொண்டாடுகின்றன. மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் கிராமத் திருவிழாவின் ஒரு பகுதியாக எளிதில் இணைந்து கொள்ளும்.
நேற்று நமது உரையாடல் இந்தக் காட்சியை அகத்தில் உருவாக்கிக் கொள்ள உதவியிருக்கிறது.
நாம் தொடர்ந்து உரையாடுவோம். நாம் சேர்ந்து சிந்திப்போம். நாம் சேர்ந்து செயல்படுவோம்.
அன்புடன்,
பிரபு
மாவட்டத்துக்கு ஒரு பல்மருத்துவ மையம்
என்னுடைய பள்ளி நாட்களில் பன்னிரண்டாம் வகுப்பு நிறைவு செய்து பின்னர் மருத்துவக் கல்லூரியிலோ அல்லது பொறியியல் கல்லூரியிலோ சேர்க்கை பெற வேண்டும் எனில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு நுழைவுத்தேர்வும் எழுத வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் இரண்டையும் சேர்த்து ஒரு கட் ஆஃப் மதிப்பெண் கிடைக்கும். அதைக் கொண்டு ‘’கவுன்சிலிங்’’ மூலம் மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி சேர்க்கை கிடைக்கும்.
கவுன்சிலிங் தொடங்கியதும் முதலில் நிரம்புவது பி.டி.எஸ் எனப்படும் பல் மருத்துவப் படிப்பே ஆகும். அதன் பின்னர் தான் எம்.பி.பி.எஸ் நிரம்பும். அப்போது எம்.பி.பி.எஸ் படிப்பை விட பி.டி.எஸ் படிப்புக்கு மிக அதிக தேவை விருப்பம் இருந்தது. அதற்கு என்ன காரணம் எனில் ஒரு எம்.பி.பி.எஸ் மருத்துவரை விட ஒரு பல் மருத்துவர் மிக அதிகமாக பொருள் ஈட்ட முடியும் என்பதே ஆகும். ஒரு நோயாளி ஒரு மருத்துவரிடம் ஜூரம், ஜலதோஷம் ஆகியவற்றுக்காக சிகிச்சை பெற வந்தால் அவரிடம் ரூ.100 ஆலோசனைக் கட்டணமாக பெற முடியும். பல் சிகிச்சைக்காக ஒருவர் வருகிறார் என்றால் பல் கிளிப் போடுதல், பல் எடுத்தல் , பல் சுத்தம் செய்தல் ஆகியவற்றைச் செய்ய அதிக கட்டணம் வசூலிக்க முடியும். ஒரு பொது மருத்துவர் 10 நோயாளிக்கு சிகிச்சை செய்து பெறும் கட்டணத்தை ஒரு பல் மருத்துவர் ஒரு நோயாளிக்கு சிகிச்சை செய்து பெற்று விடுவார். அன்றைய தேதியில் பல் மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கையில் குறைவு. எனவே பல் மருத்துவர்களும் குறைவு. இன்று நிலைமை அப்படியில்லை. நிறைய பல் மருத்துவர்கள் இருக்கிறார்கள். பல் மருத்துவ சிகிச்சைக்கு மிக அதிகமாக செலவாகிறது.
2014ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றதும் நாடெங்கும் ‘’ஜன் ஔஷதி மருந்துக் கடைகள்’’ தொடங்கப்பட்டன. ஃபார்மா நிறுவனங்களும் அலோபதி மருத்துவர்களும் கூட்டு சேர்ந்து தங்கள் கையில் வைத்திருந்த ‘’ஃபார்மாசூட்டிகல்’’ துறையில் ‘’ஜன் ஔஷதி’’ ஜென்ரிக் மருந்துகள் பெரும் தாக்கத்தை உண்டாக்கின. ஜன் ஔஷதி மையங்களில் ஆண்டுக்கு ரூ.1500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. அதன் அர்த்தம் என்னவெனில் தோராயமாக ரூ.6000 கோடி பொதுமக்களின் சேமிப்பு காக்கப்பட்டிருக்கிறது என்பதே. வெளி மார்க்கெட்டில் 400 சதவீதத்திலிருந்து 600 சதவீதம் வரை லாபம் வைத்து விற்கப்படும் மருந்துகள் நியாயமான விலையில் மக்களுக்குக் கிடைக்கின்றன.
நம் நாட்டில் 800 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்துக்கு ஒரு பல் மருத்துவ மையம் என்னும் அடிப்படையில் 800 மையங்களை நாடெங்கும் ஜன் ஔஷதியின் தொடர்ச்சியாக மத்திய அரசு தொடங்கலாம். சாமானிய மக்களுக்கு சகாயமான கட்டணத்தில் பல் சிகிச்சை கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யலாம். மாத ஊதியத்துக்கு பல் மருத்துவர்களை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜன் ஔஷதி கேந்திரங்கள் இயங்கும் முறைக்கு சமமான இயங்குமுறையை பின்பற்றிக் கொள்ளலாம்.