Thursday, 30 April 2026

காவிரி தென்பெண்ணை பொருநை

ஒரு தமிழ்க் கவிஞரின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு வெளிவர இருக்கிறது. அவரது முதல் கவிதைத் தொக்குப்பைக் கொண்டு வர அவர் முடிவு செய்த போது தொகுப்புக்கான கவிதைகளை புதுச்சேரியின் மீனவர் கிராமக் கடற்கரை ஒன்றில் அமர்ந்து நாங்கள் இருவரும் மாற்றி மாற்றி வாசித்தோம். நவீனக் கவிதையின் வடிவம் மௌனமான அக வாசிப்புக்கானது. ஐரோப்பியத் தாக்கம் அவ்விதமான தன்மையை உண்டாக்கியிருக்கிறது. தமிழ் உலகின் உயர்தனிச்செம்மொழிகளில் ஒன்று. நமக்கு 2500 ஆண்டு காலத்துக்கும் மேலாக உயிர்த்திருக்கும் மொழி இருக்கிறது. இங்கே கவிதை சொல்லப்பட்டிருக்கிறது ; பாடப்பட்டிருக்கிறது ‘ எழுதப்பட்டிருக்கிறது. சொல்லப்படும் எழுதப்படும் கவிதை பாடப்பட்டிருக்கிறது. பாடப்படும் கவிதை எழுதப்பட்டிருக்கிறது. அம்மரபினையொட்டி எழுதப்பட்ட அக்கவிதைகளை அந்தக் கடற்கரையில் மீன் வலைகளுக்கு மத்தியில் அலையோசை மெல்ல கேட்டுக் கொண்டிருக்க நெரித்த திரைகடலின் முன் அமர்ந்து நாங்கள் எங்கள் குரலில் வாசித்துக் கொண்டிருந்தோம். அந்நிகழ்வு நிறைவு பெற்றதும் அத்தொகுப்பு சிறந்த ஒன்றாக விளங்கும் என எங்கள் ஆழுளம் அறிந்தது. அவ்விதமே அத்தொகுப்பு அமைந்தது நல்லூழ். 

சில ஆண்டுகளுக்குப் பின் நண்பர் தன் இரண்டாம் தொகுப்பைக் கொண்டு வர இருக்கிறார். தொகுப்பினை இறுதி செய்ய சென்னை வந்து விடுகிறேன் என்று சொன்னேன். இருப்பினும் கடைசி நேரத்தில் முதல் தொகுப்பைப் போல கவிதை வாசிப்பை புதுச்சேரியில் வைத்து இறுதி செய்ய நாங்கள் இருவரும் முடிவெடுத்தோம். அவர் சென்னையிலிருந்து காலை 9 மணிக்கு காரில் புறப்பட்டார். நான் ஊரிலிருந்து அதே நேரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டேன். 12 மணிக்கு புதுவை கடற்கரையில் இருக்கும் பாரதி பூங்காவினை நான் சென்றடைந்தேன். நண்பர் 1 மணிக்கு வந்து சேர்ந்தார். எதிர்பாராத இனிமையாக நண்பருடன் அவரது இன்னொரு நண்பரும் வந்திருந்தார். மூவரும் முறையே காவிரி தென்பெண்ணை பொருநை நதிகளின் கரைகளில் பிறந்து வளர்ந்தவர்கள். 

அமைதியான காஃபி ஷாப் ஒன்றில் அமர்ந்து கவிதைத் தொகுப்பின் கவிதைகளை மாறி மாறி வாசித்தோம். நானும் நண்பரும் வாசிக்க மூன்றாவது நண்பர் அக்கவிதைகளை உள ஆழத்தால் பின் தொடர்ந்தது அத்தருணத்தை மிக மிருதுவானதாகவும் மென்மை மிக்கதாகவும் ஆக்கியது. தொகுப்பை இறுதி செய்து விட்டு நண்பர்களுக்குப் பிரியாவிடை கொடுத்துப் பிரிந்து ஊர் திரும்பினேன். 

அகிலா

அண்டப் பெரு வெளி
அமைத்து
கொண்டு 
இருக்கும்
உருவம்
நீ

வசந்தத்தின் நாட்குறிப்பு - 4

 வசந்தம் என்பது கவிதை
ஒரு மலரை உலகாக
ஒரு நீர்த்துளியை ஆழியாக
ஒளிக்கதிர் ஒன்றை அமுதப் பெருவெளியாக
ஒரு சொல்லை
முழுமையான ஒரு வாழ்க்கையாக
உணர வைக்கும்
கவிதை

வசந்தத்தின் நாட்குறிப்பு - 3

வசந்தம் என்பது
மதுரம்
அதி மதுரம்
மலரை மிக மென்மையாய் ஸ்பரிசிக்கும் பட்டாம்பூச்சியிடம் 
மலர்களில் உள்ளுறையும்
தேனைத் 
துளித்துளியாய் சேர்த்துக் கொள்ளும் தேனீயிடம்
புற்களைக் கொண்டு 
அற்புதமான தங்குமிடம்
நிர்மாணிக்கும்
குருவியிடம்
விட்டு விடுதலையாகி நிற்கும் 
சிட்டுக்களிடம்
உடனிருந்து
உணரவேண்டியது
வசந்தத்தின் அதிமதுரம்

வசந்தத்தின் நாட்குறிப்பு - 2

 வசந்தத்தின் மாலை அந்தி
இன்னொரு துவக்கம்
இன்னொரு வாழ்க்கை
இன்னொரு இனிமை
இரவை 
இரவின் துளியை
இரவின் மென்மையை
உணர்ந்திருக்க
வசந்தத்தின் இரவு 
ஓர் உற்பத்தி ஸ்தானம்
இரவுகள் துயில்வதற்கானவை அல்ல
உணர்வதற்கானவை
வசந்தத்தின் இரவுகள்
மௌனமாக சொல்லிக் கொண்டிருக்கின்றன
ஒவ்வொரு கணமும்

Wednesday, 29 April 2026

வசந்தத்தின் நாட்குறிப்பு

 வசந்தம் ஒரு ஆசிர்வாதம்
பற்றி எரியும் கோடைப் பொழுதை
அதன் நிறை உக்கிரத்தை
தவிர்க்காமல்
புகார் சொல்லாமல்
அலுத்துக் கொள்ளாமல்
கண் கொண்டு நேராகப்
பார்ப்பது 
உங்கள் இயல்பென்றால்
வசந்தம்
உங்களுக்கு
ஒரு ஆசிர்வாதம் 

*

கோடையின் பகலுக்குள்
நுழைந்து
அதில் எங்காவது ஒளிந்து கொள்ள
விரும்புகிறது
ஊர்

மரநிழல்கள்
பூங்காக்கள்
கடல் கரைகள்
கட்டிடங்கள்

பகல் பொழுதை மெல்லக் கடந்து விட விரும்புகிறது ஊர்

*

வெயிலைக் கண்டு அஞ்சாதே
வெயிலை வெறுக்காதே
வெயில் காலத்தில் கண் மூடிக் கொள்ளாதே 
வெயிலில் இறங்கு
வெயிலில் நட
வெயிலில் உலவு

*

வெயிலில் உலவி நடந்து இறங்கியிருந்தால்
கோடையின் அந்தி
உனக்கு ஆசிர்வாதம்
ஊர்
ஊர் மக்கள்
ஊர் மனிதர்கள்
நம்பிக்கை கொள்கிறார்கள்
கோடையின் அந்திப் பொழுதில்
தகிக்கும் நிலத்தில்
மலர்ந்த
மலர்களை
சரங்களாக அணிந்து
வசந்தத்தை வரவேற்கின்றனர்
பெண்கள்

*

சூரியன் அஸ்தமித்த நிலத்தில்
மெல்ல வீசுகிறது
மென்காற்று
அதன் மென்மைக்காக 
அதன் ஸ்பரிசத்துக்காக
அதன் முத்தத்துக்காக
காத்திருப்பவன்
அதிர்ஷ்ட்டசாலி
அதன் மென்மையை
அதன் ஸ்பரிசத்தை
அதன் முத்தத்தை
பெறுபவன்
அதிர்ஷ்டசாலி

*

கோடை அந்தியின் நிலவு
மகத்தானது
என உணர்ந்தவன்
மகத்தானவன்

*

கோடை மாலை அந்தியில்
ஒரு கடற்கரையில்
கடற்கரை மணலில் அமர்ந்து
அலை மெல்ல எழும் போது
பார்வைக்குட்பட்ட 
எல்லா அலைகளும்
ஆடியாகி
ஆயிரமாயிரம் நிலவைப் பிரதிபலிப்பதை
நீ
அடிக்கடி கண்டிருக்கிறாயா
தெய்வங்கள்
உன் மேல்
பிரியம் கொண்டிருக்கின்றன

*

சிவந்த புரச மலர்கள்
கோடையில் 
மேலும்
செக்கச் சிவக்கின்றன
என்பதை
உணர்ந்திருக்கிறாயா
வாழ்வு
உன்னை
விடுதலைக்கு
இட்டுச் சென்று கொண்டிருக்கிறது

*

வாருங்கள்
நண்பர்களே
பிரியமானவர்களே
மனிதர்களே
கோடையின் இந்த நாள் மாலையில்
இந்த மென்காற்றுடன்
இந்தக் கடலலைகளுடன்
இந்த மலர்களுடன்
இந்த வசந்தப் பொழுதில்
அமிர்தம் பருகச் செல்வோம்

Monday, 27 April 2026

சிறப்பான வழிமுறை

தமிழகத்தில் ஒரு ஆலயம் உள்ளது. 

அந்த ஆலயத்துக்குச் செல்ல முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும். பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆலயத்துக்கு எப்போது வர வேண்டும் என்பதை அவர்கள் தெரிவிப்பார்கள். அவர்கள் தெரிவிக்கும் பொழுதில் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். 

அந்த ஆலயத்துக்குச் செல்ல பதிவு செய்துள்ளேன். 

அவர்கள் செயல்படுத்தும் இந்த முறை சிறப்பான வழிமுறைகளில் ஒன்று என எனக்குத் தோன்றியது.  

Sunday, 26 April 2026

சலனங்களும் அலைகளும்

சில வாரங்களுக்கு முன், நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அடுத்தடுத்து சந்திப்பதற்கு சில சந்தர்ப்பங்கள் வாய்த்தன. அவர் பல ஆண்டுகளாக ஒரு பள்ளியை நடத்துகிறார். அதில் இப்போதிருக்கும் 300 என்ற மாணவர் எண்ணிக்கையை 1200 என ஆக்குங்கள் என்று சொன்னேன். எனது எண்ணங்களை முன்வைத்தேன். பண்டைய இந்தியக் கல்விமுறையிலிருந்து இன்றைக்கு நிலவும் கல்வி முறை வரை பல விஷயங்களை அணுகி எடுத்துக்காட்டி எனது அபிப்ராயங்களையும் எண்ணங்களையும் அவரிடம் சொன்னேன். எனது தளத்தில் எழுதினேன். எழுதியவற்றை அவரும் வாசித்தார். குழப்புதல் (நகைச்சுவைக் கட்டுரை) யிலிருந்து அதிர்ச்சி அடைதல் என்னும் பதிவு வரைக்கும் கணிசமாக எழுதினேன். ஒரு கல்வி நிறுவனம் தொடங்குவது குறித்தும் நடத்துவது குறித்தும் என்னால் இப்போது ஒரு மனச் சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. இவை இவற்றின் இலக்கை எட்டினவா? நண்பர் பள்ளியை மேலும் விரிவுபடுத்துவரா ? இந்த இரண்டும் முக்கியமான கேள்விகள். இவற்றுக்கான பதில் நண்பரின் தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தும் எதிர்கால முடிவுகளைப் பொறுத்தும் அமையும். என்னால் இயன்ற அளவில் ஒரு துவக்கச் சித்திரத்தை உருவாக்கியுள்ளேன். அவர் தொடர்ந்து சிந்தித்து இதனுள் உள் நுழைந்தால் திட்டமிடுதலில் மேலும் அவருக்கு உதவ முடியும்.  

இன்று இந்த விஷயத்தின் மைய முடிச்சு ‘’தரக் கல்வி’’க்கும் ‘’பெருந்திரள் கல்வி’’க்கும் இடையே இருக்கும் வேறுபாடு என்பதை உணர்ந்தேன். அது குறித்து எழுத வேண்டும் என எண்ணினேன். மழை விட்டும் தூவானம் விடவில்லை. 

ஒன்று : நான்கு

 














 

அதிர்ச்சி அடைதல்

எண்கள் எப்போதும் சுவாரசியமானவை ; சமயத்தில் அதிர்ச்சி அளிப்பவையும் கூட. தமிழ் மூதாட்டி ஔவை ‘’எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’’ என்றாள். மானுட வரலாற்றில் மனிதர்கள் எண்களை கற்பனையில் உருவாக்கிக் கொண்டதே உலகியல் ஞானத்தின் அடிப்படையாகவும் துவக்கமாகவும் இருந்திருக்கக் கூடும்.  

நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை நேற்று எழுதினேன். அதாவது தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் பட்ஜெட்டைக் கொண்டு ஒவ்வொரு தமிழக மாணவனுக்கும் உலகின் அதி உயர் கல்வியை அளிக்க முடியும் என. இதனைக் கூறியவர் மிகவும் நம்பகத்துக்குரியவர். எனினும் இன்று காலை நான் அதனை நேரடியாக சோதித்துப் பார்க்க முடிவு செய்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் இணைய தளத்துக்குச் சென்று தமிழகத்தில் 1- 12 வகுப்பு படிக்கும் மாணவர் எண்ணிக்கை என்ன என்று பார்த்தேன். சுமார் 52,00,000 பேர். பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் ரூ.46,000 கோடி. ஒரு மாணவனுக்குத் தோராயமாக ரூ.90,000 செலவு செய்யப்படுகிறது. 

அதாவது, இப்படி கற்பனை செய்து கொள்வோம். ஒரு மாணவன் ஒன்றாம் வகுப்பு சேர வருகிறான். அவன் பெற்றோருக்கு அரசு ரூ.90,000 கொடுத்து நீங்கள் உங்கள் குழந்தையின் கல்வியை நீங்களே கொடுங்கள் எனக் கூறினால் அவர்கள் ஏதேனும் தனியார் பள்ளியில் சேர்ப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் அந்த மாணவனுக்கு ரூ.90,000 அரசு கொடுக்கும். 12 ஆண்டுகளில் அந்த மாணவனுக்கு ரூ.10,80,000 அளிக்கப்பட்டிருக்கும். அவன் கல்வியே பயிலவில்லை என்றாலும் 17 வயதில் அவன் கையில் ரூ.10,80,000 இருக்கும். 

தமிழகத்தில் 12 ஆண்டுகளாக பள்ளியில் பள்ளிக்கல்வியைப் பயின்ற மாணவனால் 300 வார்த்தைகள் தமிழில் பிழையில்லாமல் ஒரு பத்தி எழுத முடியாது என்னும் நிலை இருக்கும் நிலையில் 12 ஆண்டுகள் தன்னிடம் பயின்ற மாணவனுக்கு குறைந்தபட்சக் கல்வியைக் கூட அளிக்க முயலாத உறுதி செய்ய முடியாத மாநில அரசு ஒவ்வொரு மாணவனுக்கும் ரூ.10,80,000 12 ஆண்டுகளில் அளித்து விட்டு நேரடியாக கல்வி அளிக்கும் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது தானே உகந்த செயல்?