Tuesday, 24 March 2026

வாணி வாழ்த்து


நூல் : சரஸ்துதி (கவிதைத் தொகுப்பு) ஆசிரியர் : கா.சிவா பக்கம் : 122 விலை:ரூ.230 பதிப்பகம் : வாசகசாலை பதிப்பகம், சென்னை-92. பதிப்பக மின்னஞ்சல் : vasagasalaipublication (at) gmail (dot) com  

***

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு 
தெள்ளிய ராதல் வேறு
-திருக்குறள்

ஞாயிறு மாலைகளில் பூம்புகாரோ தரங்கம்பாடியோ செல்வது எனது வழக்கம். இளைஞனாயிருந்த போது நூல் பிடித்தாற் போல இருந்த வழக்கம், இப்போது குறைந்தபட்சம் இரு வாரங்களுக்கு ஒருமுறை என்ற அளவிலேனும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அலைகளும் வானமும் மேகமும் நிறைந்திருக்கும் அந்த வெளியை அகத்தில் நிறைத்துக் கொண்டால்தான் அடுத்த ஏழு நாட்களும் இனிதே இருக்கும் என்பது எனது நம்பிக்கை. ஞாயிறன்று காலை ஓஷோவின் ''Glimpses of a golden childhood'' என்ற நூலை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஓஷோ கேட்கிறார். ‘’ உலகின் 10 சிறந்த நாவல்களை எவர் பட்டியலிட்டாலும் அதில் 5 நாவல்கள் ருஷ்ய நாவல்களாக இருக்கும். டால்ஸ்டாய், தாஸ்தயெவ்ஸ்கி, இவான் துர்கனேவ் ... சோவியத் யூனியன் அரசாங்கம் வந்தது. சோவியத் அரசு கலைஞனை எழுத்தாளனை போஷித்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் பெரும் படைப்புகள் எவையும் வரவில்லையே. ஏன்?’’ ஓஷோ மேலே சொல்லிக் கொண்டு சென்றார். ‘’சில விஷயங்கள் இயல்பாக நடக்க வேண்டும். மலர்கள் மலர்வது. பனி பொழிவது. மலர்களை வரி அமைப்புக்குள் கொண்டு வந்தால் அவை மலராது. பனிப் பொழிவும் அப்படித்தான்.’’ சிந்திக்கும் மனம் கொண்டவர்களுக்கு ஓஷோவின் அவதானங்கள் சிறு விதைகள். அவற்றை மனதுக்குள் அமிழ்த்து வைத்தால் செடிகளாக வளர்ந்து பூக்கத் தொடங்கி விடும், நூற்றுக்கணக்காக. அன்று முழுக்க பெரும் படைப்பாளிகள் ஏன் சோவியத் ஆட்சிக்குப் பின் உருவாகவில்லை என்னும் கேள்வியை மனம் கேட்டுக் கொண்டேயிருந்தது. 

மாலை திருவாரூரிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவருடன் பூம்புகார் சென்றேன். நண்பர் என்னிடம் ‘’என்னால் எந்த சடங்கிலும் மனதை இணைத்துக் கொள்ள முடியவில்லை.’’ என்றார். ‘’இது ஆழமா கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். நாம இப்படித்தான் அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருப்போம். ஆனா முழுக்க அப்படி இருக்க மாட்டோம். அந்த இடைவெளில நிறைய முக்கியமான பிரதானமான நமக்கு நம்ம பர்சனாலிட்டிக்கு ரொம்ப நெருக்கமான நமக்கு நிறைய பயன் தரக்கூடிய விஷயங்கள் இருக்கும். அத மிஸ் பண்ணிடக் கூடாது. அப்படி மிஸ் பண்றது நமக்கு இழப்பு’’ நண்பர் அமைதியாக இருந்தார். நான் தொடர்ந்து சொன்னேன் . ‘’தமிழ் சொஸைட்டில மரபான விஷயங்கள் மேல ஒரு ரெசிஸ்டென்ஸ் உருவாக்கிட்டாங்க. 90 பர்செண்ட் பியூபிள் மனசுல அந்த விஷயம் இருக்கு. அவங்க அத முழுசா தெரிஞ்சுக்கவும் இல்ல. கம்யூனிஸ்ட் உருவாக்குன ரெஸிஸ்டன்ஸ் அது. அதோட எஃபெக்ட் இப்பவும் இருக்கு’’. தான் எந்த சடங்கிலும் மனம் இணையாமல் இருப்பதற்கும் கம்யூனிசத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது நண்பருக்குத் தெரியவில்லை. ‘’முதல்ல சடங்குன்னு நீங்க எதை மீன் பண்றீங்க. அத வெளிப்படையா சொல்லுங்க’’. ‘’சாமி கும்பிடுறது’’. ‘’உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா ? நீங்க உங்களை நாத்திகர்னு உணர்றீங்களா?’’ ‘’நான் கடவுளை நம்பல. ஆனா ஒரு சக்தி இருக்குன்னு நம்பறன்’’. ‘’உங்க நம்பிக்கைக்கு யார் குறுக்க வந்தா? எல்லாரும் கும்பிடற மாதிரிதான் நீங்க கும்பிடணும்னு யார் சொன்னா? நீங்க நம்புற சக்தியை உங்களுக்கு உகந்த விதத்துல அணுகக் கூடாதுன்னு யாராவது ஏதாவது செஞ்சாங்களா?’’. நண்பர் அமைதியாக இருந்தார். இவ்விதமான எதிர்கொள்ளலை இப்போதுதான் சந்தித்திருப்பார். ‘’ ஆயிரம் வருஷம் ரெண்டாயிரம் வருஷம் முன்னால யாராவது எதையாவது எழுதியிருப்பாங்க. அதையே ஏன் இப்பவும் பெருசுன்னு நினைக்கனும். அதெல்லாம் ஒருத்தன் கற்பனையா எழுதனது. கற்பனைல இல்லாத விஷயத்தைக் கூட எழுத முடியும்.கவிஞர்கள் கவிதை எல்லாமே இல்லாதத எழுதறது தான்.  அத ஏன் நாம பெருசுன்னு நினைக்கனும். நம்ம அனுபவத்துல எது இருக்கோ நமக்கு எது பெருசோ நமக்கு எது முக்கியமானதோ அதான் அவசியம். மத்ததெல்லாம் தேவையில்லை’’. நண்பர் பட பட வென பேசி விட்டார். 

‘’நண்பரே ! எனக்கு உங்க உணர்வு புரியுது. உங்க கேள்வியும் புரியுது. உங்க கேள்விக்கு ஒரு பதில் இருக்கு. உங்க மனசுல இருக்கற கேள்விக்கான பதிலை நீங்க தேடிக் கண்டுபிடிச்சுட்டீங்களான்னு எனக்குத் தெரியாது. ஆனா நிச்சயமாக உங்க கேள்விக்கு ஒரு பதில் இருக்கு. உங்க கேள்விக்கான பதில்னு எனக்கு தெரியறத சொல்றன். அது உங்களுக்கு உபயோகப்படலாம் ; உபயோகப்பட்டா பயன்படுத்திக்கீங்க. இல்லன்னா விட்டிருங்க. நீங்களே தேடி கண்டுபிடிங்க.’’

‘’சடங்கு, கடவுள், கவிதைன்னு அடுத்தடுத்து நிறைய பெரிய விஷயம் உள்ள வந்துட்டோம். நான் எங்கயோ ஒரு இடத்துல இருந்து ஆரம்பிச்சுக்கறன். நாம இப்ப கடலுக்கு போயிட்டு இருக்கோம். நம்ம மரபுல கடலுக்கும் நதிக்கும் நிறைய தொடர்பு இருக்கு. அதனால நதியிலிருந்து ஆரம்பிக்கறன். நம்ம நாட்டுல ஒருத்தன் காலைல எழுந்ததும் ‘’ கங்கை யமுனை சரஸ்வதி ந்ர்மதை சிந்து காவேரி கோதாவரி’’ன்னு ஏழு நதிகளோட பேரையும் சொல்லணும்னு ஒரு வழக்கம் இருக்கு. இன்னைக்கும் நம்ம நாட்டுல அப்படி சொல்றவங்க இருக்காங்க. லட்சம் பேர் இருக்கலாம். ஆயிரம் பேர் இருக்கலாம். நூறு பேர் இருக்கலாம். 140 கோடி ஜனங்கள்ல ஆயிரம் பேர் சொல்றாங்கன்னே வச்சுக்கங்க. நம்பர்ல டிபேட் பண்ண வேண்டாம். அப்படி நதிகளோட பேரை சொல்றது ஒரு நம்பிக்கை. அத ஒரு சடங்குன்னு வேணாலும் உங்க தியரிபடி வச்சுக்கங்க. ஆனா இந்த வழக்கம் நம்பிக்கை சடங்கு குறைஞ்சது 4000 வருஷமா இருக்கு. 4000 வருஷம் முன்னாடி இந்த 7 நதியையும் ஒரு தடவை நேரா பாத்தவங்க குறைவா இருந்திருக்கலாம். இன்னைக்கு கூட இந்த 7 நதிகளையும் நேரா பாத்தவங்க எண்ணிக்கை நம்ம மக்கள்தொகையோட ஒப்பிட்டா குறைவா தான் இருக்கும். ஆனா ஒருத்தன் காலைல எழுந்ததும் பலபேருக்கு வாழ்க்கையைக் கொடுக்கற இந்த ஏழு நதிகளோட பேர சொல்ரான்னா அது ரொம்ப மகத்தான விஷயம்னு தான் நான் நினைப்பேன். அதே போல ஏழு நகரங்கள் புண்ணிய நகரங்கள். ‘’அயோத்தி மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா துவாரகா’’. நம்ம மரபு மண்ணை நதியை வானத்தை மேகத்தை பூமியை காத்தை நெருப்பை தெய்வமா பாக்கற மரபு. நம்ம மரபோட பார்வையை நாம விரிவுபடுத்தி பாக்கலாம். அதுக்கான முழு சுதந்திரம் நமக்கு இருக்கு. ஆனா மரபுக்கு அன்னியப்பட்டு போகக் கூடாது.’’ 

பேசிக் கொண்டே வந்ததில் சாயாவனத்தைத் தாண்டி விட்டோம்.அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன். ‘’திருவாரூருக்கும் பூம்புகாருக்கும் ஒரு தொடர்பு இருக்கு. அது என்னன்னு தெரியுமா?’’. நண்பருக்குத் தெரிந்திருக்கவில்லை. 

‘’அதாவது, பாண்டியனோட அவையில கண்ண்கி வந்திருக்கறத வாயிற்காவலன் சென்று சொல்கிறான். வந்திருப்பவள் ‘’வெற்றிவேற் தடக்கை கொற்றவை அல்லள்;. அதாவது வந்திருக்கறது பத்ரகாளி இல்லன்னு சொல்றான். அவளைப் பத்தி சொல்லும் போது அவனுக்கு ஏன் பத்ரகாளி ஞாபகம் வந்ததுன்னு நாம யோசிச்சுக்கணும். அவைக்குள்ள கண்ணகி சென்றதும் பாண்டியன் யார்ன்னு கேக்கறான். அதுக்கு கண்ணகி சொன்ன பதிலா இளங்கோ எழுதறார். மன்னனைப் பாத்து ‘’தேரா மன்னா’’ அப்படிங்கறா. தேர்வு தேர்தல் எல்லாத்துக்கும் மூல வார்த்தை அது. அலசி ஆராயும் திறன் இல்லாத மன்னனே ‘’தேரா மன்னா’’. ஒரே வார்த்தை அதுல எத்தனை விஷயத்தைப் புரியவச்சுடான் இளங்கோ. தேரா மன்னா செப்புவதுடையேன் . ஆராய்ச்சி இல்லாத மன்னா நான் சொல்வதைக் கேள்.

 "தேரா மன்னா செப்புவது உடையேன்!
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்,
வாயிற் கடைமணி நடுநா நடுங்க,
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத்
தான் தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின்
மடித்தோன், பெரும்பெயர்ப் புகார் என் பதியே!"

(இந்தப் பாடல் எனக்கு மனப்பாடம். அதனை நண்பரிடம் அப்படியே சொன்னேன்.)

புள்-னா பறவை. புள்ளுறு புன்கண் தீர்த்தவன் சிபிச்சக்கரவர்த்தி. அதாவது, சிபி பேரரசனா ஆட்சி செஞ்சான். அவன் ஆட்சி தர்மம் தவறாம நடந்தது. அவனை சோதிக்க இந்திரன் ஒரு கழுகா மாறி ஒரு புறாவைத் துறத்திட்டு வந்தான். அந்தப் புறா சிபி உப்பரிகைல நின்னப்ப அவன் கிட்ட வந்து அபயம் கேட்டது. மன்னன் அபயம் கேட்டு வந்தவங்கள பாதுகாக்கணும். அது அவனோட தர்மம். அதனால அபயம் கொடுத்தான். அப்ப கழுகு கேட்டது. மன்னனே நீ புறாவுக்கு அபயம் கொடுத்துட்ட ; நானும் ஒரு ஜீவன் தான். என்னோட குஞ்சுகள் கூட்டுல பசியோட இருக்கு. அதுக்கு இந்த புறா மாமிசம் தான் உணவு. இப்ப புறாவுக்கு நீ கொடுத்த அபயத்தாலே அங்க கூட்டுல என் குஞ்சுகள் சாகப் போகுதே. நீ என்ன செய்யப் போற? சிபி தன்னோட உடம்பு சதையை அரிஞ்சு புறாவோட எடைக்கு சமமா தரன்னு சொல்றார். அவர் உடம்புல உள்ள எல்லா சதையையும் அரிஞ்சு வச்சாலும் தராசு முள் சமானமாகலை. கடைசி தசையையும் அரியப் போகும் போது இந்திரன் தன் சுயரூபத்தைக் காட்டுறான். அப்படிப்பட்ட சிபிச்சக்கரவர்த்தி சோழ மன்னன். அந்த சோழ நாட்டுல ‘’ஆராய்ச்சி மணியை பசுமாடு அடிச்சதுக்கு காரணம் கண்டுபிடிச்சு தன் மகனை தேர்க்கால்ல இட்ட மனுநீதி சோழன் ஆகியோர் வாழ்ந்த ஊர்னு பூம்புகாரைச் சொல்றார் இளங்கோ. மனுநீதி சோழன் தலைநகர் திருவாரூர். இருந்தாலும் ஒரே நாடு ஒரே அரசாட்சிங்கறதால பூம்புகாரை மனுநீதி சோழன் ஊர்னு சொல்றார். 

இளங்கோ தப்பா சொன்னார் ; மாத்தி சொன்னார் அப்படின்னா ஒருத்தர் புரிஞ்சுகிட்டா அத யாரும் போய் தடுக்க முடியாது. அவர் என்ன உணர்வுல சொன்னார். எந்த உணர்வு அப்படி சொல்ல வச்சுதுன்னு நாம யோசிச்சு அதுல ஆழ்ந்து போய் பாத்தோம்ணா நாம நிறைய விஷயங்களை உணர்ந்துக்க முடியும். தெரிஞ்சுக்க முடியும். 

எனக்கு சிலப்பதிகாரம் தெரியும்ங்கறதால என் மனசு திருவாரூரையும் பூம்புகாரையும் ஒன்னா பாக்கும். அது இளங்கோ எனக்கு கொடுத்த கிஃப்ட்.’’

***

படைப்பு மனத்துக்கு படைப்பு மனங்களுக்கு சொல்லன்றி வேறு துணையில்லை. எல்லா படைப்பு மனங்களும் சொல்லின் தெய்வத்திடம் ஓயாமல் உரையாடுகின்றன. ஓயாத உரையாடலையே துதியென முன்வைக்கின்றன. சொல் அன்னை அதை அவ்விதமே ஏற்கவும் செய்கிறாள்.

தமிழ்ச் சூழலில் கா.சிவா வின் ‘’சரஸ்துதி’’ ஒரு முக்கியமான ஆக்கம். 

***  

பரஸ்பரம் ( ஹாஸ்யம்)

நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். சந்திப்புக்கு நேரம் முடிவு செய்தால் அந்த நேரத்துக்கு தாமதம் இன்றி சென்று விடுவது எனது வழக்கம். காலை 10 மணி என நேரம் முடிவாகியிருந்தது. 9.55க்கு அங்கிருந்தேன். நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். அவரது அலுவலக ஊழியர் ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். நண்பர் சாவகாசமாக 11 மணிக்கு வந்தார். அதன் பின் சில மணி நேரங்கள் நாங்கள் தொழில் நிமித்தமான சில விஷயங்களை விவாதித்தோம். அடுத்த நாளும் சந்திப்பதாக முடிவானது. நேரம் 10 மணி. நான் 9.55க்கு வந்தேன். அவர் 11 மணிக்கு. அன்றும் விவாதித்தோம். மூன்றாவது நாள் 10 மணி சந்திப்புக்கு நண்பர் எப்படியும் ஒரு மணி நேரம் தாமதம் ஆக்குவாறே என்று 11 மணிக்குச் சென்றேன். நீங்கள் குறித்த நேரத்தில் வருபவர் ஆயிற்றே என இன்று 10 மணிக்கே வந்து விட்டேன் என்று சொன்னார்.  

எந்த முடிவும் இல்லை (ஹாஸ்யம்)

 திருவாரூரில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரது தந்தை ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி முதல்வர். கல்லூரி முதல்வராயிருந்து ஓய்வு பெற்றவர் என்பதால் அனுபவமிக்கவர் என ஒரு தனியார் பள்ளி அவரை பள்ளியின் ஆலோசகர் என்னும் பொறுப்பில் நியமித்து பள்ளி தொடர்பான எல்லா முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை அளித்தது. நண்பரின் தந்தைக்கு பள்ளிக்கு தினமும் சென்று வருவார். வருடங்கள் சில சென்றன. நண்பரின் தந்தை பொறுப்பில் இருக்கும் பள்ளியில் மாணவர் சேர்க்கை கணிசமாக குறைய ஆரம்பித்தது. நிர்வாகம், வரவு செலவு ஆகிய விஷயங்களில் துல்லியம் இருந்தது. ஆனால் மாணவர்கள் புதிதாக சேருவது மிகவும் குறைந்து போனது. வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கை 40 ஆக இருந்தது 25 ஆகக் குறைந்தது. அதனால் சில ஆசிரியர்களை பணியிலிருந்து அனுப்பி விட்டு இருக்கும் ஆசிரியர்களுக்கு கூடுதல் வகுப்புகளை அளிக்க ஆரம்பித்தனர்.  

நண்பர் என்னிடம் சொன்னார். ‘’அப்பா ! கவர்மெண்ட் காலேஜ்ல பிரின்சிபால் ஆக இருந்தவங்க. அங்க அட்மினிஸ்ட்ரேஷன் எப்படின்னா ஏதாவது ஒரு விஷயமோ பிரச்சனையோ கவனத்துக்கு வந்தா அது மேல எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்க. சும்மா அப்படியே போட்டு வச்சிடுவாங்க. எந்த முடிவும் எடுக்கறதில்லை என்பதே முடிவு. இந்த பிரைவேட் ஸ்கூல்லயும் ஃபோர்ஸ் ஆஃப் ஹேபிட் ல அந்த மாதிரியே முடிவெடுக்கறாங்க. அதனால பல விஷயம் தேங்கி நிக்குது. அதான் அட்மிஷன் குறையுது’’

நண்பரின் குடும்பத்தினரின் நண்பர் தந்தையின் வயதைக் காரணம் காட்டி பள்ளிப் பணியிலிருந்து விலகிடுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் அப்பணியிலிருந்து விலகினார். 

இப்போது அப்பள்ளியில் இன்னொரு ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி முதல்வரே ஆலோசகராக இருக்கிறார் என நண்பர் சொன்னார். 

Monday, 23 March 2026

கிராமமும் தேசமும்

பாரத நிலம் பலவிதங்களிலும் தனித்துவமானது. அனாதி காலமாக பாரத நிலமெங்கும் மானுடர் சேர்ந்து வாழ்கின்றனர். நிலத்தை தெய்வமென நினைக்கும் தன்மை பாரத நாட்டுக்குரிய தனி இயல்பு ஆகும். நதியை கடலை நீர்நிலைகளை இறைமையாகக் காணும் தன்மை இந்த நாட்டுக்கு எப்போதும் இருந்திருக்கிறது.  

இன்றும் ஒவ்வொரு 50 கி.மீ தூரத்திலும் இன்றும் ஒவ்வொரு 100 கி.மீ தூரத்திலும் மக்களின் வாழ்க்கைமுறை சிறு சிறு மாற்றம் கொண்டு இருப்பதை நான் அறிய முடியும் ; உணர முடியும். இன்றும் சாமானிய இந்தியன் விவசாயியே. இன்றும் கிராமமே நாட்டின் அடிப்படை அலகு ஆகும். 

நாட்டின் ஒவ்வொரு கிராமமும் நாட்டில் இருந்த மன்னர்களை பேரரசர்களை கட்டுப்படுத்தும் இடத்தில் இருந்திருக்கின்றன என்பதை நாட்டின் வரலாற்றை நோக்குபவர்களால் அறிய முடியும். ஏனென்றால் நம் நாட்டின் உற்பத்தி என்பது விவசாய உற்பத்தியே. இன்றும் விவசாயம் கிராமத்து விவசாயிகளால் ஏறக்குறைய சேர்ந்தே செய்யப்படுகிறது. நாட்டின் உலகின் பொருளாதாரத்தை ஆய்வு செய்பவர்கள் பாரதத்தின் இத்தகைய தன்மையை சேர்த்து பொருளியலை அரசியலைக் கவனிப்பதில்லை ; அவ்விதம் கவனிப்பதற்கான பயிற்சி அவர்களுக்கு இல்லை. 

ஒரு கிராமவாசி ஒட்டு மொத்த கிராமத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவனே. அவன் தொழில்முறையிலும் வாழ்முறையிலும் ‘’தனியன்’’ இல்லை. ஒரு பெரும் கூட்டு வாழ்க்கையின் நுண் அலகே அவன். உலகில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை சுரண்டுவது என்பது மனிதர்கள் சமூகமாக வாழத் தொடங்கிய நாளிலிருந்து இருக்கிறது. மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில் சுரண்டல் குறைந்த அளவு இருப்பது நம் நாட்டில் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். உலகின் மிகப் பெரிய ஜனத்தொகை கொண்ட நாடாக அனாதி காலமாக இருப்பினும் அன்றும் இன்றும் ஒப்பீட்டளவில் நம் நாட்டில் சுரண்டல் குறைவு என்பது பொருளியலிலும் அரசியலிலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயங்கள். ஆய்வு செய்து மற்ற நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள். 

Sunday, 22 March 2026

வருவது உரைத்தல் (ஹாஸ்யம்)

காவிரி வடிநில பிராந்தியத்தில் ஒரு சிற்றூர் ஜோதிடத்துக்குப் பிரபலமானது. அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே அதிகம் செல்ல மாட்டார்கள். மாநிலத்தின் பிற பகுதியிலிருந்து நிறைய பேர் ஜோதிடம் பார்க்க வருவார்கள். எனது சென்னை நண்பர் ஒருவர் அங்கே ஜோதிடம் பார்த்திருக்கிறார். பின்னர் சில மாதங்கள் கழித்து நாங்கள் சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. தான் ஜோதிடம் பார்த்த அனுபவத்தை என்னிடம் சொன்னார். தனது கடந்த காலத்தில் நடந்த நான்கு சம்பவங்களை துல்லியமாகக் கூறினர் என வியந்து கூறினார். 
நான் கேட்டேன் : ‘’உங்கள் கடந்த கால வாழ்வில் நடந்த அந்த 4 சம்பவங்களும் தான் உங்களுக்கே தெரியுமே? அதை இன்னொருவர் சொல்லி நீங்கள் மீண்டும் கேட்டு அறிவது என்ன? ஜோதிடம் உங்கள் எதிர்காலம் குறித்து ஏதேனும் சொல்லி அது நடந்திருந்தால் அல்லவா நீங்கள் திருப்தி அடைய வேண்டும். நீங்கள் சென்றது உங்களுக்கு வர இருப்பதைக் கேட்கத்தானே?’’ என்றேன். நண்பர் யோசித்து ‘’ஆம்’’ என்றார்.     

Saturday, 21 March 2026

மாநிலத்தின் கல்வி நிலை

நண்பர்களுடன் ஒரு சினிமாவுக்கு செல்வதாக முடிவானது. சமீபத்தில் வெளியான ஹிந்தி திரைப்படம். பல இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியாகிறது. ஹிந்தி திரைப்படத்துக்கு ஆங்கில மொழியில் சப் டைட்டில் உண்டு. ஆறு பேர் செல்வதாக முடிவு செய்திருந்தோம். இணையத்தில் ஹிந்தி படமும் தமிழ் மொழிமாற்றப் படமும் ஒரே தேதியில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. எனினும் சில தொழில்நுட்ப விஷயங்களால் தமிழ் மொழிமாற்றப் படம் வெளியாவதில் சிறு தாமதம். டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம். இருப்பினும் காட்சி இல்லை என்பதால் தொகை ‘’ரீஃபண்ட்’’ ஆனது. 

’’இங்கிலீஷ் சப் டைட்டில் இருக்கிறதே ! ஹிந்தியில் படம் பார்க்கலாம்’’ என்றேன் நான். 

‘’இல்லை இல்லை ! வெயிட் செஞ்சு தமிழில் பார்ப்போம்’’ என்றார்கள். 

’’இங்கிலிஷ் சப் டைட்டில் இருக்கே! டயலாக் புரியும்.’’ மீண்டும் நான் வற்புறுத்தினேன். 

‘’ சப் டைட்டில் இருக்கற டைம்-குள்ள இங்கிலீஷ் டெக்ஸ்ட் படிச்சு புரிஞ்சுக்க முடியாது’’ அனைவருமே கூறினர்.

ஐந்து பேருமே பட்டதாரிகள். 1990,2000க்குப் பிறகு பிறந்தவர்கள். பள்ளிக் கல்வியை ஆங்கில மீடியம் மூலம் படித்தவர்கள். பட்டப்படிப்பும் ஆங்கில வழியில் படித்தவர்கள். இவர்கள் ஆங்கிலம் தான் ஒரு படத்தின் ‘’சப் டைட்டில்’’ படிக்க முடியாத நிலையில் இருக்கிறது என்றால் தினமும் ஒரு நாளிதழ் தமிழ் மொழியில் படிக்கும் வழக்கம் கூட அவர்களுக்கு இல்லை. 

எளிய சம்பவம் எனினும் அது அளித்த அதிர்ச்சி சாமானியமானது இல்லை. 

5 நண்பர்களையும் தமிழில் வந்ததும் பாருங்கள் எனக் கூறி விட்டு தனியாக சென்று படம் பார்த்தேன்.  

Friday, 20 March 2026

வருவாய் இலாகாவும் தபால் இலாகாவும்

பிரிட்டிஷ் இந்தியாவை ஆண்ட போது இந்தியக் குடிகளிடமிருந்து அவர்கள் வசூலித்த நிலவரியே அரசாங்கத்தின் முக்கிய வருவாய் மூலமாக இருந்தது. எனவே தான் பிரிட்டிஷார் நிலவரி வசூல் செய்யும் இலாகாவுக்கு வருவாய் இலாகா எனப் பெயரிட்டனர். நாட்டின் மொத்த வருவாயில் 84 சதவீதம் வருவாய் இலாகாவிலிருந்து அரசுக்குக் கிடைத்தது. நில அளவை செய்யும் செயினுக்கு ‘’குந்தர் செயின்’’ என்று பெயர். அதன் நீளம் 66 அடி ( 20.12 மீட்டர்). ‘’குந்தர் செயின்’’ கையாள சற்று சிரமமாக இருந்ததால் அதனைப் பாதியாக்கி 33 அடி நீளத்தை அளக்கும் வகையில் ஒரு செயினை உருவாக்கினர். அதனை ‘’ரெவின்யூ செயின்’’ என்று கூறுவர். இன்றும் நிலம் அளக்க பயன்படும் கருவியாக உள்ளது.  
குடிமக்களிடமிருந்து விவசாயிகளிடமிருந்து வரிவசூல் செய்து - கலெக்ட் செய்து - கொடுப்பவரே கலெக்டர். மாவட்ட ஆட்சியர் இன்றும் கலெக்டர் என அழைக்கப்படுவது அதனால் தான். 


வருவாய் இலாகாவுக்கு சமானமாக பிரிட்டிஷ் ஆட்சியில் முக்கியத்துவம் பெற்றிருந்த இலாகா தபால் இலாகா. நாட்டின் நிர்வாக வலைப்பின்னலுக்குத் தேவையான தகவல் பரிமாற்றத்தை தபால் இலாகாவே சாத்தியமாக்கியது. அரசின் தகவல் பரிமாற்றம் மட்டும் இன்றி சாமானிய பொதுமக்களின் தகவல் பரிமாற்றமும் தபால் இலாகாவால் சாத்தியமாயிற்று. 

எனக்கு சிறுவயது முதலே தபால் இலாகா மீது பெரும் ஆர்வம் உண்டு. ஒருவர் எழுதும் அஞ்சல் அட்டை பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து இன்னொருவர் கைக்கு மிகச் சரியாகச் சென்று சேர்கிறது என்பதை நான் ஒரு பேரற்புதம் என்று கருதுவேன். ஒரு தபால் எழுதி அனுப்புவது என்பது ஒரு கலை . ஒரு பயிற்சி. தபால் எழுதுபவர்கள் தங்கள் கையாலேயே அஞ்சல் உறையில் அனுப்புநர் பெறுநர் முகவரி எழுதி தங்கள் கையால் உறையில் பசையிட்டு ஒட்டி தங்கள் கையாலேயே தபால் பெட்டியில் இட விரும்புகின்றனர். 

இன்று ஒரு கிளை அஞ்சல் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். பணியில் இருந்தவர் ஓர் இளைஞர். வயது 25 இருக்கலாம். 2000க்குப் பின் பிறந்தவர் என்பதால் அவருக்கு ஒரு அஞ்சல் அட்டையோ அல்லது ‘’இன் லாண்ட் கடிதமோ’’ அல்லது ‘’அஞ்சல் உறை’’யில் கடிதமோ எழுதி அனுப்பி பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. அஞ்சல் உறை ஒன்றை அளித்தேன். உறையின் மேல் இடது பக்கம் எழுதப்படுவது ‘’அனுப்புநர்’’ முகவரி வலது பக்கம் எழுதப்படுவது ‘’பெறுநர்’’ முகவரி என்பது உலக வழமை. அதனால் நான் ‘’அனுப்புநர்’’ ‘’பெறுநர்’’ எனக் குறிப்பிடாமல் இரு முகவரிகளையும் எழுதியிருந்தேன். அஞ்சல் ஊழியரான இளைஞர் என்னிடம் ‘’சார்! இதுல எது ‘’ஃப்ரம்’’ எது ‘’டூ’’ என்று கேட்டார். விளக்கினேன். 

Thursday, 19 March 2026

கோடுகளும் சொற்களும்


 எனது பள்ளித் தோழனை வெகுநாட்கள் கழித்து சந்தித்தேன். அவனது குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தான். அப்போது சற்று நேரம் அளவளாவினோம். நான் எவருக்கும் ஏதேனும் பரிசளிக்க வேண்டும் என்று நினைத்தால் பரிசுப் பொருள் என என் மனதில் உதிப்பது புத்தகமே. அந்தக் குழந்தைக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளிக்க விரும்பினேன். ஜப்பான் மாங்கா காமிக்ஸ் ‘’புத்தர்’’ வரிசை நூலில் முதல் நூலை வரவழைத்து அதனை அளிக்க முடிவு செய்தேன். புத்தகம் இன்று கைக்கு வந்தது. அதனை வாசித்தேன். 

மாங்கா காமிக்ஸ் நூதனமானது. காணலும் வாசித்தலும் ஒருங்கே நிகழ்வது. அந்த நூலை சொற்களை வாசிக்காமல் ஓவியங்களை மட்டும் கண்டவாறு ஒரு வாசிப்பை நிகழ்த்த முடியும். அதில் இருக்கும் சொற்களை மட்டும் வாசித்தவாறு வேறு வாசிப்பை நிகழ்த்த முடியும். சொற்களையும் ஓவியங்களையும் சேர்த்து மற்றொரு வாசிப்பை நிகழ்த்திக் கொள்ள முடியும். 

வாசிப்பு என்பது சொல்லிருந்து சொற்களின் மூலம் அகத்தில் ஒரு காட்சியை உருவாக்கிக் கொள்வது. வாசிப்பு என்பது அதுவே. மாங்கா காமிக்ஸ் சொல்லுடன் சொல்லுக்கு இணையாகவே நம் கண்களுக்கு ஒரு அகச்சித்திரத்தையும் அளித்து விடுகிறது. சொல் உருவாக்கும் அகச்சித்திரமும் புத்தகத்தில் இருக்கும் சித்திரமும் இணைந்து நூதனமான அற்புதமான அனுபவம் ஒன்றை உருவாக்கிக் காட்டுகின்றன. 

100 பக்கங்களுக்கு மேல் மாங்கா காமிக்ஸ் அனுபவத்தில் மூழ்கியிருந்தேன். அதில் ஒரு காட்சி. சித்தார்த்தன் ஒரு வனத்தில் துறவி ஒருவரைச் சந்திக்கிறான். மரணத்தின் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை எந்த மனிதன் மூலம் அறிய முடியும் எனக் கேட்கிறான். அப்போது அந்தத் துறவி மரணத்தை மனிதன் மூலம் தான் அறிய முடியுமா என்ன எல்லா உயிர்களும் இறக்கின்றன; எல்லா உயிர்களுக்கும் இறப்பு பொதுவானது . இந்தக் காட்டில் இந்தக் கணத்தில் இறந்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பிராணிகளிடமிருந்து கூட நீ இறப்பை அறிய முடியும் என்கிறார். 

எனக்கு அந்த பகுதி பெரும் அகஎழுச்சியை உருவாக்கியது. 

ஒரு ஈசலிடமிருந்து நாம் இறப்பு குறித்து அறிந்திட முடியும் ; நாம் ஈசலின் அனுபவத்தை உணர முடிந்தால். சில வாரங்கள் மட்டுமே உயிர் வாழும் பட்டாம்பூச்சியிடமிருந்து நாம் இறப்பு குறித்து அறிய முடியும். சில மாதங்கள் வாழும் எறும்பிடமிருந்தும் நாம் மரணம் குறித்து அறிய முடியும். 

மனிதனுக்கு மனித சமூகத்துக்கு மரணம் குறித்த ஆர்வம் இல்லை. மனிதர்கள் மனித சமூகங்கள் மரணத்தை அஞ்சுகின்றன. மரணத்திலிருந்து விலகி ஓட நினைக்கின்றன. மனித குலம் உருவான நாளிலிருந்து இன்று வரை எந்த மனிதரும் மரணிக்க விரும்புவதில்லை ; எந்த மனிதரும் மரணிக்காமலும் இருந்ததில்லை. கோடானுகோடி மனிதர்களில் ஒருவரே சாவை உணர்கிறார் ; அறிகிறார். அவர்களே ஞானியர் ; யோகியர். 

சாவை அறிந்தவனால் மட்டுமே வாழ்வையும் அறிய முடியும்.  

Wednesday, 18 March 2026

இடதுசாரிகள் ஏற்படுத்திய பேரழிவு

எனக்கு 10 வயதான போது சோவியத் யூனியன் உடைந்தது. சிறுவனான நான் தமிழகச் சூழலிலும் இந்தியச் சூழலிலும் அதன் பின்னும் கம்யூனிசம் ஒரு வலுவான குரலாக ஒலிப்பதை ஆச்சர்யமாகப் பார்த்தேன்.  கம்யூனிஸ்டுகள் கருத்தியல் இதழியல் கலை நுண்கலைத் தளங்களில் நிரம்பியிருந்தனர். பெரும்பாலான கட்சிகள் சிறிய கட்சிகளிலிருந்து பெரிய கட்சி வரை கம்யூனிச சித்தாந்தத்தை ஆதரித்துப் பேசின. நாட்டின் பெரிய கட்சியாயிருந்த காங்கிரஸ் கட்சி கூட இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர்களால் நிரம்பியிருந்தது. நாட்டின் அதிகாரவர்க்கம் மற்றும் வங்கிகள் கம்யூனிச யூனியன்கள் கையில் இருந்தன. மார்க்ஸ் பார்த்த வகையில் உலகை உலகியலை மானுட சமூகங்களைப் பார்த்து அவற்றின் இயங்குமுறையைத் தீர்மானிக்க முயன்று கொண்டிருந்தனர் மார்க்ஸிஸ்டுகள். பத்திரிக்கையைத் திறந்தால் இடதுசாரிகள். கடைத்தெருவுக்குச் சென்றால் சிவப்புக் கொடி கட்டிய தெருமுனைக் கூட்டங்கள். மாதம் ஒருமுறையாவது நிகழும் பெரும் வேலைநிறுத்தங்கள். கம்யூனிசத்தை லட்சியவாதமாகவும் கம்யூனிஸ்டை லட்சியவாதியாகவும் காட்டும் முயற்சிகள். உல்ஃபா , மக்கள் யுத்தக் குழு, விடுதலைப் புலிகள் என பல பயங்கரவாத அமைப்புகளின் பயங்கரவாத செயல்பாடுகள். இவற்றை நான் நோக்கிக் கொண்டிருந்தேன். 

என்னுடைய 10 வயதில் நான் பாரதியார் கவிதைகளை எப்போதும் வாசித்துக் கொண்டிருப்பேன். பாரதி எனக்கு தேசமே தெய்வம் எனக் காட்டினான். பூரண ஞானம் பொலிந்த நன்னாடு ; புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு’’ என நம் நாட்டைக் குறித்துப் பாடினான். அந்த சொற்களின் உணர்ச்சியே என் சிந்தனைகளை வழிநடத்தியது. 

எனக்கு எப்போதுமே கம்யூனிசம் மீது ஈடுபாடு இருந்ததில்லை. கீழை மரபின் பொருளியல் சிந்தனைகளே என்னைக் கவர்ந்தன. மார்க்ஸ், கிராம்ஷி, இ எம் எஸ் நம்பூதிரிபாடு ஆகியோர் மீது எனக்கு பெருமதிப்பு உண்டு. அவர்கள் ஒரு விஷயத்தை நோக்கும் விதத்தை நான் அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் செய்வேன். அதன் பின் அதனை விரிவுபடுத்தியும் அதன் மற்ற கோணங்களை ஆராய்ந்தும் அந்த விஷயத்தை முன்னகர்த்தி சிந்திப்பேன். அரசியலுக்கும் பொருளியலுக்குமான நெருக்கமான உறவை முழுமையாகப் புரிந்து வைத்திருந்தவர் மகாத்மா காந்தி. அவரிடம் கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வளிக்கும் பொருளியல் வழிமுறைகளையும் வாழ்வியல் வழிமுறைகளையும் முன்வைக்கும் இயல்பு எப்போதும் இருக்கிறது. அரசு அதிகாரத்தின் எந்த பதவியிலும் அவர் இருந்தது இல்லை எனினும் அவர் தன் இயங்குமுறையாக அதனை கைக்கொண்டிருந்தார். ‘’கதர்’’ ஆடையை நம் தேசத்தவர் அணிய வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் கதர் இயக்கத்தை நடத்தியதை இதனுடன் இணைத்துப் புரிந்து கொள்ளலாம்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் முதல் இன்று வரை கருத்தியல் தளத்தில் இடதுசாரிகளின் ஆதிக்கம் அதிகம் இருந்தது ; இப்போதும் இருக்கிறது. லெனின் தலைமையில் சோவியத் யூனியன் உருவானதிலிருந்து அது உலகெங்கும் தனது உளவு அமைப்புகள் மூலம் எல்லா நாடுகளிலும் கம்யூனிச சித்தாந்தத்தைப் பரப்பியது.  

சோவியத் யூனியன் உலகெங்கும் கம்யூனிச சித்தாந்தத்தைப் பரப்பிக் கொண்டிருக்கையில் அதே காலத்தில் ஜோசஃப் ஸ்டாலின் ருஷ்ய நாட்டின் சிறு விவசாயிகள் கோடானுகோடி பேரைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தார். அவ்விதம் கோடானுகோடி எளிய விவசாயிகளான குடிமக்கள் கொன்றழிக்கப்பட்டனர் என்னும் விஷயமே 1990ம் ஆண்டில் தான் முழுமையாகத் தெரிய்வந்தது. சோவியத் யூனியனின் கம்யூனிச அதிபர் ஜோசஃப் ஸ்டாலினின் கொடுங்கோன்மை  முன் அடால்ஃப் ஹிட்லர் ஒரு சிறு புள்ளி மட்டுமே. இன்றும் கம்யூனிசம் என்றால் மனிதாபிமானம் என வெட்கமில்லாமல் கூறுகிறார்கள் கம்யூனிஸ்டுகள். 

சோவியத் யூனியன் உடைந்த பின் கம்யூனிசம் அஸ்தமித்து விட்டது. உலகில் எங்குமே அது பெரிய அரசியல் சக்தி அல்ல. இருப்பினும் நம் நாட்டில் கருத்தியல் தளத்தில் அதன் உயிர் இருக்கிறது. 

ஒரு எளிய சாமானியனின் வாழ்வுக்கு எவ்வகையிலேனும் உதவ முடியும் என்றால் அதுவே எனது பொருளியல் கொள்கை. ரூ.100 சம்பாதிக்கும் ஒரு விவசாயிக்கு அவன் விவசாய வருமானத்தை ரூ.150 ஆக்க முடியும் என்றால் அதுவே எனக்கு மாபெரும் மகிழ்ச்சி. நான் மனிதனை நம்புகிறேன் ; அவனைப் புரிந்து கொள்கிறேன். அவன் நல்லியல்பின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுகிறேன். சனாதனம், சமணம், பௌத்தம் ஆகிய கீழை மரபின் பொருளியல் சிந்தனைகள் ஒட்டு மொத்த மானுடத்துக்கும் வரலாற்றின் தொல்காலத்திலிருந்து வழிகாட்டி வருவதை உலகம் முழுமையாக அறியும் வண்ணம் செய்ய வேண்டும் என்பதே நம் தேசத்தவரின் நம் அனைவரின் கடமை.  

Tuesday, 17 March 2026

நீங்குதல்

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். 

-திருக்குறள்.  

யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான், அவன்
அப்பொருளால் துன்பம் எய்துதல் இலன்.

-பரிமேலழகர் உரை

***

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் எங்கள் குடும்ப நண்பர். நான் பிறப்பதற்கு முன்பிருந்தே எங்கள் குடும்ப நண்பர். அவர் ஓர் அலாதியான மனிதர். சீர்காழியைச் சேர்ந்தவர். அவருடைய பழைய வீடு சீர்காழியில் இருக்கிறது. பல ஆண்டுகளாகவே மிகவும் மதிப்பு மிக்க சொத்து. கோடிக்கணக்கான மதிப்பு கொண்டது. அதனை விற்பனை செய்தால் அவர் அந்த ஊரின் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருப்பார். எனக்குத் தெரிந்து அந்த சொத்தை 25 ஆண்டுகளாக விலைக்குக் கேட்கிறார்கள். நண்பர் எந்த பதிலும் சொல்வதில்லை. அவரது சிறப்பியல்பு என்னவெனில் யார் எதற்கு அழைத்தாலும் அவர்களுடன் சென்று விடுவார். திருமணம், மங்கள நிகழ்ச்சிகள், துக்கம் என அனைத்துக்கும் சென்று விடுவார். இவ்விதமான நிகழ்வுகளின் அனைத்து பணிகளும் அவருக்குத் தெரியும். மூன்று நான்கு நாட்கள் இருந்து எல்லா பணிகளையும் முடித்துக் கொடுத்து விட்டு தான் வருவார். ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்தார். வருடத்தில் 100 நாட்கள் கடையில் இருந்தால் மிகப் பெரிய விஷயம். ஆனால் கடைக்காரர் ஏன் அடிக்கடி விடுப்பு எடுக்கிறீர்கள் எனக் கேட்க மாட்டார். நண்பரின் சுபாவம் அவருக்குத் தெரியும். நான் பிறந்து மருத்துவமனையில் இருந்த தினத்திலேயே என்னைக்  காண வந்தவர்களில் ஒருவர். என்னை விட பல வயது பெரியவர். இருப்பினும் சிறு குழந்தையாயிருந்த நாளிலிருந்து அவரை அண்ணன் என்றே அழைப்பேன். 

அவரைப் பற்றி சொன்னால் நிறைய நிகழ்வுகள். இன்று எங்களுக்குள் நிகழ்ந்த உரையாடலை மட்டும் குறிப்பிடுகிறேன். 

***

இன்று காலை மரணத் தறுவாய் குறித்து எழுதியதும் மரணம் குறித்து நிறைய யோசித்துக் கொண்டிருந்தேன். காலை 10 மணி அளவில் ஒரு மரணச் செய்தி வந்தது. அங்கே செல்ல வேண்டும். இங்கிருந்து 2 மணி நேர பைக் பயணம். அண்ணனுக்கு ஃபோன் செய்தேன். 

‘’அண்ணன் ! ஊர்ல இருக்கீங்களா? ஒரு ‘’டெத்’’க்கு போகணும்’’

‘’இங்க தான் தம்பி இருக்கன்.’’

‘’நான் இன்னும் 1 மணி நேரத்துல கிளம்பிடுவேன். நீங்க எங்க வரீங்க?’’

‘’நான் பை பாஸ்-ல நிக்கறன். வந்துடுங்க’’

ஒரு ஆவணம் தயார் செய்ய வேண்டியிருந்தது. ஆவண எழுத்தரைப் பார்த்து தயார் செய்யச் சொல்லி பணியைத் துரிதப்படுத்தி விட்டு கிளம்பினேன்.

புறவழிச்சாலையில் சட்டநாதபுரம் திரும்பியதும் அண்ணனிடமிருந்து ஃபோன். நான் வழக்கமாக பிக் அப் செய்யும் இடத்துக்கு வந்திருந்தார். 

***

பங்குனி வெயில். 

நாங்கள் சென்று கொண்டேயிருந்தோம். 

’’அண்ணன்! நீங்க பிறந்த வருஷம் என்ன?’’

‘’தெரியல. ஞாபகம் இல்ல’’

ஞாபகம் இல்லையெனில் சற்று முயன்று ஞாபகத்துக்குக் கொண்டு வந்து விடலாம். தெரியவில்லை என்றால் சிரமம் தான். 

‘’அண்ணன் உங்க மேரேஜ் எந்த வருஷம் நடந்தது? அப்ப உங்களுக்கு என்ன வயசு?’’

‘’1996. அப்ப எனக்கு 35 வயசு’’

’’அப்ப நீங்க பிறந்த வருஷம் 1961. இப்ப உங்களுக்கு 65 வயசாகுது’’

கொள்ளிடத்தைத் தாண்டி விட்டோம். 

‘’அண்ணன் நீங்க சீர்காழி. நான் மாயரம். நம்மகிட்ட 10 வருஷம் முன்னாடி யாராவது நாம இப்படி நம்ம ஏரியால 4 வழிச் சாலைல போவோம்னு சொல்லியிருந்தா நாம நம்பியிருப்போமா?’’

‘’நம்பவே முடியாத விஷயம். உண்மையாயிருக்கு.’’

50 நிமிடங்களில் கொள்ளிடத்திலிருந்து கடலூர் சென்று விட்டோம். துக்க நிகழ்வில் இறுதி மரியாதை செலுத்தி விட்டு வெளியேறினோம். 

***

’’அண்ணன் ! இன்னைக்கு நியூஸ் பேப்பர்ல ஒன்னு படிச்சன். அதாவது சாவுக்கு ரொம்ப பக்கத்துல போன ஒருத்தருக்கு சாவுக்கு அப்புறம் நடக்க இருக்கற விஷயங்கள் தெரிஞ்சுருக்கு. அத அவர் ஒரு படமா வரைஞ்சிருக்கார்.’’

‘’அந்த படம் எப்படி இருக்கு’’

‘’பூமி சுத்திட்டு இருக்கு. மேலே சூரியன் இருக்கு. அதுக்கு நடுவுல ஒவ்வொரு உயரத்துல ஒவ்வொரு லைன் இருக்கு. அந்த லைன்ல நிறைய ஜீவன் லாம் நிக்குது. எல்லாத்துக்கும் மேல சூரியன்.’’

அண்னன் அந்த காட்சியை கற்பனை செஞ்சு பாத்தார். 

‘’நாம இப்ப டெத் வீட்டுக்கு போனோம்ல அந்த ஜீவனுக்கு என்ன நடந்ததுன்னு தெரியாது. உடம்பிலிருந்து நீங்கிடும். ஆனா உடம்பு பக்கத்துலய இருக்கும். ஏன்னா பல வருஷம் இருந்த இடம். அதனால என்ன செய்யணும்னா ஒருத்தர் இறந்திட்டா 6 மணி நேரத்துக்குள்ள அந்த சடலத்தை தகனம் செஞ்சிடணும். இனிமே அதுக்கு இங்க வேலை இல்ல. மெல்லவோ வேகமாவோ அது வானத்தை நோக்கி   போகணும். அது போய் சேர வேண்டிய இடம் அதுதான். கூட இருக்கறவங்க அந்த பயணத்துக்கு அந்த வழியனுப்பலுக்கு ஹெல்ப் பண்ணனும். பயணத்தை டிலே செய்துட கூடாது’’

அண்ணன் யோசித்தார். 

‘’பூமிக்கும் வானத்துக்கும் நடுவ கோடு கோடா இருக்குல்ல. அது ஒவ்வொன்னும் ஒவ்வொரு குரூப். இப்ப நீங்க இருக்கீங்க. உங்களுக்கு நிகழ்ச்சிகள்ல கலந்துக்கறது இண்ட்ரஸ்ட். அந்த மாதிரி இருப்பவங்க ஒரு குரூப் நிப்பாங்க. விளையாட்டுல இண்ட்ரஸ்ட் இருக்கறவங்க ஒரு குரூப்பா நிப்பாங்க. அமைதியா இருக்கணும்னு நினைக்கறவங்க ஒரு குரூப்பா இருப்பாங்க. ( அப்போது ஒரு டாஸ்மாக் கடை அங்கே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது) குடிபோதைல இண்ட்ரற்ஸ்ட் இருக்கறவங்க இன்னொரு குரூப்பா இருப்பாங்க. நாம அதில ஏதாவது ஒன்னுல போய் சேர்ந்திடுவோம். நாம எதை விரும்புறோமோ அதுல இருப்போம். நல்லதை விரும்பியிருந்தா நல்லதோட. கெட்டதை விரும்பியிருந்தா கெட்டதோட. திரும்ப பூமிக்கு வரணும். இன்னொரு ஜென்மம் வாழணும்’’

சொல்லும் போது எனக்கும் கேட்கும் போது அண்ணனுக்குமே சோர்வாக இருந்தது ; இன்னொரு ஜென்மத்தை நினைச்சா. 

‘’ஆனா சில ஜீவன்கள் மட்டுமே மேலே உயரத்துக்கு போயிடுறாங்க. உடல்லயிருந்து உயிர் நீங்கனதும் எங்கயும் நிக்காம வானத்துல போய்ட்டேயிருக்காங்க. சூரியனுக்கும் மேல கடவுள் இருக்கார். அவர்ட்ட போயிடுறாங்க. அவங்க திரும்ப பூமில ஒரு ஜீவனா கருப்பைல பிறக்க மாட்டாங்க. 100 கோடி மனுஷ ஜீவன்ல ஒருத்தருக்குத்தான் இது சாத்தியம் ஆகுது. ‘’

’’அடுத்த ஜென்மத்துல மனுஷங்க மனுஷங்களாதான் பிறப்பாங்களா?’’ அண்ணன் கேட்டார்.  

‘’தெரியாது அண்ணன் ! ( அங்கே ஒரு உடும்பு ஓடியது. ஒரு பசு மாடு நின்றது) . உடும்பா கூட பொறக்கலாம். பசு மாடா பொறக்கலாம். இந்த பசு மாடும் உடும்பும் அடுத்த ஜென்மத்துல மனுஷனா பொறக்கலாம்’’ 

இருவரும் மௌனமாகி விட்டோம். 

‘’காசில அண்ணன் சடலங்களை எடுத்துட்டு போகும் போது ‘’ ராம் நாம் சத் ஹை’’ அப்படின்னு சொல்லுவாங்க. அதாவது இந்த உலகத்துல ராம நாமம் மட்டும்தான் சத்தியம் அப்படின்னு அர்த்தம்’’

நம் நாட்டில் எவர் தான் ராமன் கதையை ஆர்வமாகக் கேட்காதவர் ? ஆர்வமாகச் சொல்லாதவர்?

‘’அடுத்த நாள் காலைல பட்டாபிஷேகம். முதல் நாள் ராத்திரி கூப்பிட்டு கைகேயி சொல்றாங்க. (கம்பன் பாடலைச் சொன்னேன்). 

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி தாங்க அருந் தவம் மேற்கொண்டு
பூழி வெங் கானம் நண்ணி புண்ணியத் துறைகள் ஆடி
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள்.

உலகமே பெருசு. கடல் சூழ்ந்த உலகம் இன்னும் பெருசு. நீ சடாமுடி தரித்து நிறைய தவம் செஞ்சு காட்டுல இருந்துட்டு தூரத்தில இருக்கற புண்ணிய நதிகள்ல நீராடிட்டு 14 வருஷத்துக்கு அப்புறம் வா. இந்த 14 வருஷம் கேட்க பெருசா தெரிய போகுதுண்ணு ஏழிரண்டு ஆண்டுன்னு சொல்லப்படுது. ஏழு இரண்டு எவ்வளவு “

அண்னன் ‘’14’’ என்றார். 

‘’என்னடா இப்படி ஆயிடுச்சேன்னு ராமன் நினைச்சு மனசு வருத்தப்பட்டிருக்கலாம். எல்லா ராஜ்யத்தையும் சேர்ந்தவங்க வந்திருக்காங்க. முக்கியமான அரசு நிகழ்வு நடக்கலண்ணா நம்ம நாட்டைப் பத்தி தப்பா நினைப்பாங்களேன்னு நினைச்சுருக்கலாம். வசிஷ்டர் வார்த்தை தப்பா போய்டக் கூடாதேன்னு யோசிச்சிருக்கலாம். ஆனா அவர் எதையுமே நினைக்கல. அவர் மனசுல துளி கூட வருத்தம் இல்ல. கம்பன் சொல்றான் ; ‘’ராஜ்யம் இல்லை ; காட்டுக்குப் போ’’ன்னு சொன்னப்ப ராமன் மகன் ‘’அன்றலர்ந்த தாமரை முகத்தினன்’’ அப்படிங்கறான். அவன் முகம் 10 செகண்ட் முன்னாடி பூத்த தாமரைப்பூ மாதிரி இருந்துச்சாம். ‘’

இருவரும் மீண்டும் மௌனமாகி விட்டோம். 

’’ஒரு மனுஷன் அடையக்கூடிய உச்சபட்சமான வாழ்க்கை ராமனுடைய வாழ்க்கை. ராஜ்யத்தை இழந்தான். அத பெருசா நினைக்கல. காட்டுல கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்தான். அதயும் பெருசா நினைக்கல. மனைவியைப் பிரிஞ்சு வேதனைப்பட்டான். அவங்களை திரும்பக் கண்டடைஞ்சான். திரும்ப ராஜ்யம். திரும்ப பிரிவு. குழந்தைகள் கூட இருக்க முடியல. ஆனா ராமன் எல்லா துன்பத்தையும் ஏத்துக்கிட்டு செய்ய வேண்டியதை செஞ்சுட்டு இருந்தான். ராமன் கிட்ட ஒவ்வொரு மனுஷனுக்கும் படிக்க பாடம் இருக்கு. நாம பொருளை இழந்திருக்கோமோ முயற்சி செஞ்சா திரும்ப கிடைக்கும்ங்கறது ராமன் வாழ்க்கைல இருக்கு. ஒரு பின்னடைவா அத இல்லாம ஆக்க முடியும் இதுவும் ராமன் வாழ்க்கைல இருக்கு. அவன் வாழ்க்கைய பாத்து நாம நிறைய கத்துக்கலாம்’’

***

கொள்ளிடம் பாலத்தைத் தாண்டினோம். 

‘’ மண்ணில இருந்து வானத்துக்கு போற பயணத்துக்கு எதுவும் கூட வராது. நாம சேர்த்த செல்வம் நம்மோட சொந்த பந்தங்கள் எதுவும் வராது. அந்த பயணம் ரொம்ப தூரம்ங்கறது மட்டும்தான் தெரியுது. வேற என்ன சொல்றதுன்னு தெரியல’’

அண்ணனை சீர்காழியில் டிராப் செய்து விட்டு கிளம்பினேன்.