Friday, 27 February 2026

ஆசிரியரும் மாணவரும் ( நகைச்சுவைக் கட்டுரை)

 எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். எங்களுக்கு 35 ஆண்டு கால பழக்கம். அவரது மிக நெருங்கிய உறவினர் ஒருவர் எனக்கு கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். எனது பேராசிரியர் எனது நண்பரின் நெருங்கிய உறவினர் என்பது எனக்கு கல்லூரியை நிறைவு செய்த பின்னரே தெரியும். நண்பரின் ஊர் எனக்கு கிழக்கே இருக்கிறது. கல்லூரி வடக்கே இருக்கிறது. எனது பேராசிரியர் நண்பரின் உறவினர் என்பது சமீபகாலமாகத்தான் எனக்குத் தெரிய வந்தது. பேராசிரியர் தனது நிலம் ஒன்றை விற்க விரும்புகிறார். நண்பர் மூலம் அந்த தகவல் வரப்பெற்றதும் பேராசிரியரைக் காணச் சென்றேன். ஒரு மாணவனுக்கு கல்லூரியில் நான்கு ஆண்டுகளில் 50 லிருந்து 60 பேராசிரியர்கள் வகுப்பு எடுத்திருப்பார்கள். எனவே மாணவனுக்கு ஆசிரியர்களை நன்றாக நினைவிருக்கும். பேராசிரியர்கள் ஓர் ஆண்டில் 200 மாணவர்களுக்கு வகுப்பெடுத்தால் 35 ஆண்டுகளில் 7000 மாணவர்களுக்கு வகுப்பெடுத்திருப்பார்கள். அத்தனை பேரையும் நினைவில் வைத்திருப்பது இயலாது. நண்பர் பேராசிரியரின் அலைபேசி எண் கொடுத்தார். எனக்கு அது அவ்வளவாக வசதி இல்லாத உபகரணம். அதில் குறுஞ்செய்தி அனுப்பினால் தெரிவிக்க வேண்டிய விஷயத்தை தெளிவாகத் தெரிவித்து விட்டேன் என எண்ணுவேன். பேசுவது சரியாக இருக்கிறதா என்பது எனக்கு ஐயம். இரண்டு முறை பேசினேன். ஆனால் நான் அவரது மாணவன் என்பதை தெரிவிக்கவில்லை. நண்பரின் பெயரைச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டேன். இன்று நேரில் சந்தித்தேன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறோம். நான் படித்த ஆண்டைக் கூறி அவருடைய மாணவன் என்பதைக் கூறினேன். எங்களுக்குள் மிகவும் சகஜத்தன்மை ஏற்பட்டு விட்டது. அவர் கல்லூரியில் ‘’ஸ்டாஃப் ரூம்’’க்குள் இருக்கும் மனநிலைக்கு வந்து விட்டார். பல நகைச்சுவைகளைக் கூறினார். அவர் மிகவும் நகைச்சுவையாகப் பேசக் கூடியவர் என மாணவர்களிடம் பிரபலம். எனக்கு காலவெள்ளத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னால் போய் விட்டதாகத் தோன்றியது. அவரது மகனை அறிமுகப்படுத்தினார். அவர் லண்டனில் வணிக மேலாண்மை படித்தவர். அவரிடம் நில விஷயங்களை நாம் பேசிக் கொள்வோம் ; தங்கள் தந்தை எனது பேராசிரியர் எனக் கூறினேன். அவரும் உற்சாகமாக சரி என்றார். 

புதிய சூழல் - 4 (நகைச்சுவைக் கட்டுரை)

முன்னர் கல்லூரி மாணவர்கள் சிகரெட் புகைக்கப் பழகுவார்கள். இப்போது பள்ளி மாணவர்களுக்கே போதை மருந்து பழக்கம் இருக்கிறது.  

Thursday, 26 February 2026

உலக நாடுகளும் ஜனநாயகமும்

 


புதிய சூழல் -3 (நகைச்சுவைக் கட்டுரை)

நான் சிறுவனாயிருந்த போது, சமூகத்தில் ஆண்களில் பத்தில் ஒருவருக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் இருக்கும். இன்று சமூகத்தில் ஆண்களுக்கு பத்தில் எட்டு பேருக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் இருக்கிறது.  

புதிய சூழல் -2 (நகைச்சுவைக் கட்டுரை)

 பள்ளி கல்லூரி மாணவர்கள் சரளமாக தமிழ் வாசிப்பார்கள். தமிழ் எழுதுவார்கள். இப்போது பள்ளி கல்லூரி மாணவர்களால் சரளமாக தமிழ் எழுதப் படிக்க முடியுமா என்பது ஐயமே. ஆங்கிலம் எழுதப் படிக்க முடியுமா என்பது அதை விடப் பெரிய ஐயம். 

புதிய சூழல் ( நகைச்சுவைக் கட்டுரை)

சாலையில் பாதசாரிகள் அதிகம் இருப்பார்கள். இப்போது இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களே அதிகம் இருக்கிறார்கள். சைக்கிள்கள் கணிசமாக இருக்கும். இப்போது அவை காண அரிதாக இருக்கின்றன.  

Tuesday, 24 February 2026

பகவானும் சுவாமியும்

 

நூல் : அருணை மாமுனிவரும் பராய்த்துறை மேவிய பரமபுருஷரும் ஆசிரியர் : யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா பக்கம் : 58 விலை : ரூ.30 பதிப்பகம் : ஸ்வாத்யாயா, ஸ்ரீசாரதா ஆஸ்ரமம், 58, சாரதா நகர், மணக்குள விநாயகர் தெரு, திருவண்ணாமலை.  

அளவில் சிறிதாயிருப்பினும் ஒளி வீசும் தன்மை கொண்டது வைரப்படிகம். சில நூல்கள் அவ்விதமானவை. அவ்விதமான நூல்களில் ஒன்று யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா அவர்களின் ‘’அருணை முனிவரும் பராய்த்துறை மேவிய பரமபுருஷரும்’’ என்னும் நூல். 

பகவான் ஸ்ரீரமணர் ஆத்ம சொரூபமாக விளங்கியவர். ஓர் உயிர் எய்யக் கூடிய முழுமை நிலையை எய்தியவர். உயிர்த்தொகை கோடானுகோடி எனில் அதில் ஓர் உயிருக்கே இப்பெற்றி வாய்க்கப் பெறுகிறது. எளிய உயிர்கள் அவர் முன் நிற்கின்றன. கிழக்கில் உதிக்கும் ஆதவன் முன் நின்றிருப்பதைப் போல. புறக்கண்களால் ஆதவனைக் காண்கின்றனர். எனினும் அவன் ஒளியில் உறைந்திருக்கும் உயிராற்றலை அறிந்து உணர்பவர் ஒரு சிலரே. அவ்விதமே ஆத்மஞானியான பகவான் ஸ்ரீரமணரை தரிசித்து அவர் அருள் பெருக்கில் தன் ஆத்ம தாகம் தீர்த்துக் கொள்ளும் பேறு சிலருக்கு ஆசியாய்க் கிடைக்கிறது. அவ்விதம் பகவானைத் தரிசித்து அவருடன் சில சந்தர்ப்பங்கள் உரையாடும் வாய்ப்பு கிடைத்து தன் ஐயங்களைக் கேட்டுத் தெளிவடையும் சூழல் சுவாமி சித்பவானந்தருக்கு சிலமுறை அமைகிறது. அதனை சுவாமி சித்பவானந்தர் தனது சொற்களில் ‘’ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில்’’ எழுதியிருக்கிறார். திருச்சி ஆகாஷ்வாணி வானொலியில் பேசியிருக்கிறார். சுவாமி சித்பவானந்தர் பகவான் ஸ்ரீரமணர் குறித்து பேசியவற்றையும் எழுதியவற்றையும் யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா சிறு நூலாகத் தொகுத்திருக்கிறார். மிகவும் முக்கியமான நூலாகும் இது. 

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரான சுவாமி சிவானந்தரிடம் சந்நியாச தீட்சை பெற்ற சுவாமி சித்பவானந்தர் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் அறிஞர்களில் முதன்மையானவர் ஆவார். தமிழகத்தில் ஆன்மீகப் பணிகளையும் கல்விப் பணிகளையும் முன்னெடுத்ததில் மிக முக்கியமானவர் ஆவார். அவரது மாணவர்களுக்கும் அவரது சீடர்களுக்கும் அவர் வாழ்க்கையும் அவர் சொற்களும் கலங்கரை விளக்கமாக இருந்து வழிகாட்டின ; வழிகாட்டுகின்றன. அத்தகைய சிறப்பு மிக்க சுவாமிஜி பகவானுடனான தன் அனுப்வங்களை சொல்லில் வடித்திருப்பது வாசகர்களுக்குப் பெரும் பேறு. 

இந்த நூலில் பகவானிடம் சுவாமிஜி கேட்கும் ஒரு கேள்வி இந்த நூலின் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். 

’’பகவானே! உங்களுடைய இளமைப் பருவத்தில் நீங்கள் மதுரையை விட்டுத் திருவண்ணாமலை வந்தீர்கள்.அப்போது இருந்த மனநிலை என்ன? இப்போது இருக்கும் மனநிலை என்ன? இரண்டிற்கும் என்ன வேறுபாடு? 

சிறிது நேரம் அமைதியாக இருந்த மகரிஷி பின்பு கூறினார்.

படிப்பில் நாட்டம் செல்வயேயில்லை. இந்த மனநிலையை வீட்டிலுள்ள பெரியவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ‘ஏன் தண்டச்சோறு தின்று கொண்டிருக்கிறாய்? செத்து தொலையேன்’ என்றார்கள். 

மீண்டும் சிறிது நேர அமைதி காத்த பின் அளந்தெடுத்த குரலில் பேசலானார். 

செத்தால் என்ன ? என்ற எண்ணம் மனதில் எழுந்தது. செத்தவன் போல் என்னை நான் செய்து கொண்டேன். ஆனால் சாவையும் சாட்சியாகப் பார்ப்பதற்கு எனக்குள் ஒன்று இருந்ததைக் கண்டேன். அந்த ஒன்றை உறுதியாகப் பிடித்தேன். அதில் நிரந்தரமாக நிலைத்திருப்பதுதான் எனக்கு நிலையாகக் கிடைத்த லாபம். அதுதான் மதுரையை விட்டுக் கிளம்பிய போது இருந்த நிலை. இன்றும் அதே நிலைதான். காலப் போக்கில் அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன் பிறகு புதிய அனுபவம் எதுவும் கிட்டவில்லை. கிடைப்பதற்குப் புதிய அனுபவம் எதுவும் இல்லவும் இல்லை. 

இதுதான் தமது ஆத்மானுபூதியை விளக்கும் வகையில் மகரிஷி அளித்த அரிய பதில். ‘உண்மையில் இது உபநிஷதமே அல்லவா’ என்று எனக்குத் தோன்றியது. 

அதற்கிடையே

‘அப்படியானால் எதற்காகத் தாங்கள் அத்துணை தவம் புரிந்தீர்கள்?

என மேலும் நான் வினவினேன். 

’அந்த நிலையை சகஜமாக்கிக் கொள்ளத்தான்’ என்ற பதில் மகரிஷிகளிடமிருந்து வந்தது.

*** 

நிவேதிதை நூற்றைம்பது - ஆன்மீகவாதியின் நிறைவாழ்வு


நூல் : நிவேதிதை நூற்றைம்பது ஆசிரியர் : யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா பக்கம் : 343 விலை : ரூ.150 பதிப்பகம் : ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4

 மண்ணில் தோன்றும் உயிர்கள் பற்பல. கோடானுகோடி உயிர்களில் ஏதேனும் ஓர் உயிரே நிறைநிலை எய்துகிறது. உயிர்கள் அடைய வேண்டிய ஞானத்தை முழுமையாக அடைவதும் உயிர்கள் உணர வேண்டிய முழுமையுணர்வை முழுமையாக உணர்வதுமே நிறைநிலை ஆகும். மானுட வரலாற்றில் உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான முழுமை ஞானம் அடைந்த ஞானிகளும் முழுமையுணர்வடைந்த யோகிகளும் சில நூற்றாண்டுகளுக்கு ஒருவர் என்னும் அளவில் தோன்றியிருக்கின்றனர்; மானுடர் உய்யும் வழிமுறைகளை அளித்திருக்கின்றனர். அத்தகைய ஞானிகளின் யோகிகளின் சீடர்கள் தங்கள் குருமார்களின் மார்க்கத்தில் நடந்து துயரங்களிலிருந்தும் தளைகளிலிருந்தும் விடுதலை பெற்றிருக்கின்றனர். தங்கள் குருவின் செய்தியை மானுடர்க்கு கொண்டு செல்லும் பணியை தங்கள் வாழ்நாள் முழுவதும் செய்திருக்கின்றனர்.   

சகோதரி நிவேதிதை சுவாமி விவேகானந்தரின் சீடர் ஆவார். ஞானத்தேடலில் தனக்கு இருந்த ஈடுபாட்டின் காரணமாக இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்து இந்தியாவின் நலத்துடன் தன் வாழ்வை பிணைத்துக் கொண்ட மாபெரும் ஆன்மீக ஆளுமை சகோதரி நிவேதிதை. இந்தியாவின் பெண் கல்வி இயக்கத்துக்கு மிக முக்கியமான பங்களிப்பாற்றியிருக்கிறார் நிவேதிதை. இந்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் பெற ஜகதீஸ் சந்திர போஸுக்கு பேருதவிகள் புரிந்திருக்கிறார் நிவேதிதை. அஜந்தா சிற்பங்களின் முக்கியத்துவம் உலகைச் சென்றடைய பல்வேறு விதமான முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார் நிவேதிதை. அரவிந்த கோஷுக்கு ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார். மகாகவி பாரதியாரின் ஞானகுருவாக விளங்கியிருக்கிறார். தாகூரால் மிகவும் மதிக்கப்பெற்றவராக விளங்கியிருக்கிறார். 

சகோதரி நிவேதிதையின் வாழ்வில் நடந்த 150 சம்பவங்களை ‘’நிவேதிதை நூற்றைம்பது’’ என்ற பெயரில் நூலாக யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா எழுதியுள்ளார். சகோதரி நிவேதிதையின் நிறைவாழ்வையும் அவரது ஆன்மீக ஆளுமையையும் மிகச் சிறப்பாக சித்தரிக்கும் நூலாகும் இது. இங்கிலாந்தில் பிறந்து இந்தியாவில் வீடுபேறு அடைந்த ஒரு துறவியின் வாழ்வு இந்நூல்.  

Sunday, 22 February 2026

7 வடிவங்கள்

 
இன்று எனது நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அலுவலகச் சூழல் நெருக்கடி மிக்கதாக இருப்பதாக என்னிடம் கூறினார். அதிலிருந்து மனதளவில் வெளியே வர ‘’7 வடிவங்கள்’’ என்னும் விளையாட்டைக் குறித்து கூறினேன். ஐந்து முக்கோணங்கள், ஒரு சதுரம் மற்றும் ஒரு இணைகரமே ‘’7 வடிவங்கள்’’. அவற்றைக் கொண்டு பல்வேறு பிராணிகளின் உருவங்களை பொருட்களின் உருவங்களை உருவாக்க முடியும். நமது கைகளிலிருந்து முயலும் மயிலும் வாத்தும் சேவலும் குதிரையும் மீனும் உருவாகி வரும். காகிதம் மூலம் நாமே சிலவற்றை சிருஷ்டிக்கிறோம். அந்த சிருஷ்டிகரம் நம்மை நம் லௌகிகத் துயரங்களிலிருந்து விடுவிக்கும் என்று சொன்னேன். இரவு உறங்குவதற்கு முன் ஒரு மணி நேரம் இந்த செயல்பாட்டில் ஈடுபடுமாறு கூறியுள்ளேன்.  



Saturday, 21 February 2026

புத்தகங்கள் புத்தகங்கள் (நகைச்சுவைக் கட்டுரை)

 எனது மேஜை பல்வேறு வஸ்துக்களால் நிறைந்து கிடந்தது. சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகி குறைந்தது 15 நாட்களாவது ஆகியிருக்கும். எப்படி துவங்குவது என்னும் அச்சம். அத்தனை இருந்தன மேஜையில். ஒரு சாதாரண (அசாதாராண!) விஷயத்தை இத்தனை நாள் ஒத்திப் போடுவதா என மேஜையை சரி செய்யத் தொடங்கினேன். இம்முறை சரி செய்த போது நான் ஒன்றை உணர்ந்தேன். என் மேஜை முழுக்க புத்தகங்கள் தான் இருக்கின்றன. ஒரு புத்தகம் வாசித்தால் உடனே அதைக் குறித்து எனது தளத்தில் எழுதி விடுகிறேன். ஆனால் அந்த புத்தகத்தை புத்தக அலமாரியில் கொண்டு போய் வைப்பது இல்லை. ஏனெனில் எனது புத்தக அலமாரி நிரம்பி விட்டது. ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் இருக்கின்றன. புதிதாக வைக்க இடம் இல்லை. எனது அறையில் ஒரு ஷெல்ஃப் காலியாய் இருப்பதை இன்று காலையில் பார்த்தேன். மேஜையில் இருக்கும் புத்தகங்கள் அனைத்தையும் அதில் கொண்டு போய் வைத்து விட்டு வந்தேன். மேஜையின் மேல்பரப்பு ஓரளவு சரியாகி விட்டது. இன்னும் டிராவ் திறக்கப்படவில்லை. அதைத் திறந்தால் இன்னும் என்னென்னவோ?