Friday 13 April 2018

களம் நிற்கும் மரம்



களத்து மேட்டில் நிற்கிறது மரம்
அரசமரம்
கிராமச் சாலையிலிருந்து கூப்பிடு தொலைவில்
பாசன வாய்க்காலில் வேர் நனைய

ஏறி இறங்கிக் கொண்டே இருக்கின்றன கட்டெறும்புகள்
உச்சிக் கிளையில் கொற்றப்புள் குடும்பம்
கிளைகளில் காகங்கள்
நிழலில் தலை சாய்க்கின்றனர் வழிப்போக்கர்கள்
வாழ்வின் மீளா சுழற்சியை எண்ணி
வீடு அன்னியமான நாடோடி
அடியில் வேரில் அமர்ந்திருக்கிறான்
மாலை வீடு திரும்பும் கிராமத்துப் பெண்
வணங்கி விட்டுச் செல்கிறாள்
இனி உருவாகப் போகும் கடவுளை

கரிச்சான்கள் இயங்கும் சந்தியில்
புலரும் இருளும்
வானம் பார்த்து
நிற்கிறது
மரம்
களம் நிற்கும் மரம்