Tuesday 19 June 2018

பிள்ளைத்தமிழ்




எப்போதும்
சூழும் விழைவின் பேரடர்த்தி
பீறிடத் தயாராயிருக்கும் குரூரத்தின் கூர்மை
வதைப்பதின் வன்மை
காமப் பெருநோய்
வீழ்ச்சியின் தன்னிரக்கம்
வேட்கையின் தீரா விடாய்

இல்லா
நாள் ஒன்று 
தொடங்கிற்று வாழ்வில்

ஃபினாயிலின் நெடி நிறைந்திருந்த தாழ்வாரத்தில்
தனியே அமர்ந்திருந்தேன் சில நிமிடம்
எண்ணி சேர்த்திட்ட வன்மங்கள்
துக்கத்தால் கரைந்து கொண்டிருந்தன

உடல் அமைதியாயிருந்தது
மூச்சின் சீரொலி என்னை நொறுக்கி உடைத்துக் கொண்டிருந்தது
துடிப்பின் தாளத்தை இதயத்தில் உணர்ந்தேன்

நான் நிகழ்த்திய வன்முறைகளுக்காக
காயப்படுத்தல்களுக்காக
பல அடிகள் தள்ளியிருக்கும் ஈற்றரையின் உள்ளிருக்கும்
மனைவியிடம் மன்னிக்கக் கோரிக் கொண்டிருந்தேன்
அவள் பிணமாகி விட்டதைப் போல
அவள் காலின் கட்டை விரல்கள் சேர்த்துக் கட்டப்பட்டிருப்பதைப் போல
ஒரு காட்சி
மனதில் வந்து போனது
அக்காட்சியில் அவள் விரலில் மெட்டி இருந்ததா என நினைவுபடுத்த முயன்றேன்
மெட்டி ஞாபகம் வந்ததேன்?
மன்னிப்பின் சொற்களுக்குப் பின்னால்
ஒரு மெல்லிய மென்தொடுகை

ஒலிகள் வடிகட்டப்பட்ட
காட்சிகள் துல்லியமாகியிருந்த
ஒத்திசைவான ஓர் உலகம்
என் முன்னால் இருந்தது
இது இப்படித்தான் எப்போதும் இருந்ததா
செவிலி செய்நேர்த்தியின் பழக்கத்தில்
நடந்து கொண்டே செய்தி சொன்னாள்

எனக்குப் புரியவில்லை
அவள் சொற்கள் மீண்டும் என்னால் கேட்கப்படவேயில்லை
மனைவியின் அன்னை மகிழ்ந்தாள்
மகிழ்ச்சியை எங்கும் பரப்பினாள்
தெய்வத்துக்கு கை கூப்பினாள்
செவிலிக்கு இனிப்பு தந்தாள்
அவர்கள் இணைந்து கொண்டனர்

உலகுக்கு ஒத்திசைவை
மீண்டும் உருவாக்கிய
என் மகவை
என்னவென்று 
முதலில்
அழைப்பது
என புரியாமல் 
உள்ளே சென்று 
பார்த்தேன்
என் மகவையும்
என் மனைவியையும்