Saturday 21 July 2018

பெருக்கெடுக்கும்
நதி
காண்கிறான்
ஒரு பாலன்

தீரா ஆர்வமிக்க
அவன் கண்களில்
சாகசப் பெருவெளியாய்
அர்த்தமாகி
விரைகிறது
நதி

பெருக்கெடுக்கும்
நதி
காண்கிறாள்
ஒரு யுவதி

அன்பின்
எல்லையின்மை
போன்றது
வாழ்க்கை
என்றெண்ணி
இமைக்காமல்
அவள் விழிகள்

முதிர்ந்த
வயோதிகன்
நதி
காணும் போது
ஏதேதோ
பல நினைவுகள்
அருகிலும்
விலகியும்
ஓடிக் கொண்டிருந்தது

ஒக்கலில்
அமர்ந்திருந்த
குழவிக்கு
சாமி
எனக் காட்டுகிறாள்
நதியை
ஓர் அன்னை