Wednesday 14 November 2018

பறக்கும் சிறுவானம்

மழை வியாபிக்கும் பருவத்தில்
குடியானவன்
வளைந்து கொடுக்காத கிளைகளை
மூர்க்கம் திரட்டி
தனியாக
வெட்டி வெட்டிப் போட்டான்

அவன் குழந்தை 
அம்மாவிடம் 
வெட்ட வேண்டாம்னு சொல்லு
என
பொங்கி பொங்கி
அழுதது

நடக்கும் பறவையைப் போல
மரம் இருப்பதாக
தினமும்
நினைத்தது
குழந்தை

சில நாளில்
குழந்தைக்குப் பழக்கமான
மரங்கள் பலவற்றை
மண்ணில் சாய்த்தது 
சத்தம் போடும் காற்று
அம்மா
அதனை புயல் என்றாள்

கிளை வெட்டிய
மரம் 
மட்டும்
அப்படியே நின்றிருந்தது

மத்தாப்புகள் போல்
துளிர் விட்டது மரம்
துளிர்த்த மரம்
அசைந்து அசைந்து
சிறிதாகப் பறந்தது

குழந்தை 
அம்மாவிடம்
கிளையை வெட்டி
மரத்தைப்
பறக்க வைத்தார் அப்பா
என
சந்தோஷமாக
சொல்லிச் சிரித்தது