Tuesday, 19 February 2019

கிருஷ்ண முரளி - 8

மேயும் ஆவினங்கள்
உன் அருகாமையால்
உணர்வு உருகி நிற்கின்றன
அவற்றின் கண்களில் துளிர்க்கும் நீர்
உன்னால் கொஞ்சப்படுகிறது ஒரு கன்று
நான் நெடுந்தொலைவைக் கடந்து வந்திருக்கிறேன்
பதைபதைத்து
உன் மீதான பிரியத்தை
இன்னும் நான் சொல்லாக்கவில்லை
அலையும் உன் கண்களை
சந்திக்கும் ஏதோ ஒரு கணத்தின்
மாயத்தால்
நகர்கிறது நாளின் பெரும் பொழுது
இசைக்கையில்
நீ விண்ணாகும் போது
உன் கரம் நீட்டு
நானும் விண்ணாகிறேன்