Thursday 11 April 2019

பொழுதுகள் ஐந்து

ஒரு மலைக்கிராமத்தில்
அசையும் திரைச்சீலைகளென
பனிப்பொழியும் காலையில்
முழுக்கைகளுக்கும் கம்பளி அணிந்து
லேசாக பெருமூச்செடுத்து
காலைநடையில்
உடன் வருகிறாய்

ஒரு மென்பகல் பொழுதில்
நெடுஞ்சாலையில்
எதிர்பாராமல் பழுதான வாகனத்தில்
பயணித்தவர்களுக்கு
உதவச் சொல்லி
அவர்கள் வீட்டின் பெண்களுடன்
விழுதுகள்
சற்று முயன்றால்
மண்ணைத் தொட இயலும்
மரத்தின் கீழே உரையாடி நிற்கிறாய்

உச்சி வேளை ஒன்றில்
ஒரு தொல் நதியின்
புராதான படித்துறை
ஒன்றில்
நிழலில் அமர்ந்து
ஓடும் நதியை
உற்சாகமாகப்
பார்த்துக் கொண்டிருக்கிறாய்

முன்மாலையில்
அலை எழும்
விரிந்த சமுத்திரத்தின்
முன்
அமைதியாய்
நிற்கிறாய்

இரவில்
அந்த சிற்றாலயத்தில்
தீபங்கள் ஒளிரும்
கருவறை முன்
எரியும் தீயென
வணங்கி நிற்கிறாய்