Tuesday 23 June 2020

விருட்ச பூஜை - நாள் 6

உயிர்த்துடிப்பான கிராமம் குறித்த கனவு எல்லா இந்தியர்களுக்கும் இருக்கிறது என்று படுகிறது. பொதுவாக பெரும்பாலான இந்தியர்களின் பூர்வீகம் கிராமமாகவே இருக்கிறது. இந்த கிராமத்து மக்களைக் கொண்டே மாபெரும் சாம்ராஜ்யங்களின் தலைநகரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கம்பன் அயோத்தியைக் குறித்து கூறும் போது கோசல நாட்டின் நீர்வளம் குறித்தே பேசுகிறான். சிலப்பதிகாரம் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு குறித்து எடுத்தியம்புகிறது. தமிழ் வாழ்க்கையில் ஆலயமும் தடாகமும் விருட்சமும் ஒன்றிணைந்தவை. 

சில நாட்களுக்கு முன்னால் என்னை ஒருவர் தொழில் நிமித்தம் சந்திக்க வந்திருந்தார். அப்போது ‘’விருட்ச பூஜை’’ குறித்து தற்செயலாக பேச்சினூடே சொன்னேன். தன்னிடம் அதிக அளவில் மரக்கன்றுகள் இருப்பதாகவும் அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். அவரை அன்று தான் முதல் முறையாக சந்திக்கிறேன். அவரிடம் செயல்திட்டம் குறித்து மிகச் சுருக்கமாகவே கூறினேன். எனக்கு வியப்பாக இருந்தது. தன்னுடைய கிராமத்திலும் இவ்வாறான ‘’விருட்ச பூஜை’’யை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 
மரம் நடுவதற்குத் தேவையான குழியை எடுத்து அதில் மக்கிய சாண எருவை இட்டு வைக்குமாறு கிராம மக்களிடம் தொடர்பு கொண்டு கூறி வருகிறேன். எதிர்பார்த்ததற்கு முன்னரே மரக்கன்றுகளை நட்டு விடலாம் என்று தோன்றுகிறது. 

ஏதோ ஒரு கிராமத்தில் நிகழும் மாற்றத்துக்கான பணியை இதைக் கேள்விப்படும் ஒவ்வொருவரும் தங்கள் ஊரில் நிகழும் பணியாக நினைக்கிறார்கள். உணர்வுபூர்வமாக அதனுடன் இணைத்துக் கொள்கிறார்கள்.