நகரம்
ஒன்றின் வீதியில்
வீதிக்கு நடுவில்
ஒரு கனசெவ்வகப் பெட்டியொன்று
இணைக்கப்பட்ட திரியில்
நெருப்பிடப்பட்டிருந்தது
பண்டிகை அவசரம்
வழிப்போக்கர்கள்
நின்றனர் சில கணம்
கழுத்திலும் கழுத்துச் சரடிலும்
மஞ்சள் மிகுந்திருந்த
இளம்பெண்
இருசக்கர வாகனத்தில்
கணவன் தோள்களைப் பற்றிக் கொண்டாள்
இன்னொரு வாகனத்தில்
எரிதிரவ டேங்க் மேல்
அமர்ந்திருந்த
சிறு குழந்தை
தந்தையிடம்
இது வெடிக்குமா
என்று கேட்டான்
நடந்து செல்பவர்களும்
2 வீலர்களும்
4 வீலர்களும்
இருபுறமும் காத்து நின்றனர்
சிறு சீற்றத்துடன்
தீ
பெட்டியினுள் புகுந்தது
செந்நிறத்தில்
பசுமையாய்
நீலமாய்
மஞ்சளாய்
தீச்சுடர் பூக்கள்
வானில் எழுந்தன
காற்றில் பூத்தன
சுடர் மலர்கள் நின்று விடும்
என எல்லாரும் எதிர்பார்த்த
நேரத்தையும் தாண்டி
அவை மலர்ந்து கொண்டே இருந்தன
சுடர் பூக்கள் ஓய்ந்த பின்னும்
யாரும் பயணிக்கத் துவங்கவில்லை
வானத்தைப் பார்த்த வண்ணமே இருந்தனர்
அந்த இளம்பெண் கணவனிடம்
தன் காதலைச் சொல்ல விரும்பினாள்
சொல்லாமல்
அவன் முதுகில் சாய்ந்து கொண்டாள்
குழந்தை தந்தையிடம்
‘’சூப்பரா இருந்துச்சுப்பா’’ என்றான்
காத்திருந்த யாருக்கும்
அதன்
பெயர் தெரியவில்லை
பெயர் தெரியாத
அந்த பெட்டி
அளித்த
பிரியங்களுடனும்
மகிழ்ச்சியுடனும்
நம்பிக்கையுடனும்
அனைவரும்
கடந்து சென்றனர்