Thursday 17 February 2022

ஏழைக்கு எழுத்தறிவித்தல் ( மறு பிரசுரம்)

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்

-பாரதி

’’காவிரி போற்றுதும்’’ கல்விப்பணி ஒன்றை ஆற்ற உள்ளது. 

ஓரிரு நாட்களுக்கு முன்னால், ஒரு எண்ணம் தோன்றியது. ஊரைச் சுற்றியுள்ள பத்து கிராமங்களில் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச ஹிந்தி வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற விருப்பம் உண்டானது. கிராமப்புற மாணவர்கள் ஹிந்தி பயில வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளதால் அவர்களின் நலனுக்காக இந்த செயலை ஒருங்கிணைக்க வேண்டும் என்று விரும்பினேன்.  

இதன் செயல்வடிவம் கீழ்க்காணும் கூறுகளை நிறைவு செய்ய வேண்டும் என்ற விதத்தில் திட்டமிட்டேன். 

1. மாணவர்களிடம் எந்த விதமான கட்டணமும் பெறப்படாது. ஆசிரியர் ஊதியம், நூல்கள், பயிற்சி ஏடுகள், தேர்வுக் கட்டணம் உட்பட அனைத்தும் ‘’காவிரி போற்றுதும்’’ வழங்கும். மாணவர்கள் வகுப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக கற்றலே எதிர்பார்க்கப்படுவது. 

2. ஹிந்தி வகுப்புகள் தினமும் ஒரு மணி நேரம் என 365 நாளும் நடைபெறும். விடுமுறை என்பது கிடையாது. வகுப்பில் பயில்வதற்கு அப்பால் வீட்டுப்பாடம் என எதுவும் கிடையாது. கற்பித்தல் , பயிற்சி, மதிப்பீடு ஆகியவை வகுப்பிலேயே நிகழும். இந்த பயிற்சிக்கு ஒரு மணி நேரம் கொடுத்தால் போதும். மீதி 23 மணி நேரத்தில் அவர்கள் வழக்கம் போல் தங்கள் பள்ளிக்கல்வி, வீட்டுவேலைகள், பெற்றோருக்கு உதவுதல் ஆகிய பணிகளைச் செய்யலாம். 

3. பொதுவாக ஒரு தமிழ் கிராமம் என்பது மூன்று அல்லது நான்கு குக்கிராமங்களைக் கொண்டது. ஹிந்தி வகுப்புகள் ஒரு கிராமத்தின் அனைத்து குக்கிராமங்களிலும் நிகழும். 

4. மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையிலிருந்து ( 8 வயது) எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை வரை (பதின்மூன்று வயது) வகுப்பில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். 10,11,12 ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்காக தயாராவார்கள் என்பதால் அவர்கள் இணைக்கப்படவில்லை. கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இதில் இணையலாம். 

5. காலை 6.20 மணியிலிருந்து காலை 7.20 மணி வரை வகுப்புகள் நடைபெறும். 

6. ஹிந்தி மொழி எழுத, படிக்க,பேச சொல்லித் தரப்படும்.

7. சென்னையில் 1918ம் ஆண்டு மகாத்மா காந்தி அடிகளால் துவங்கப்பட்ட நிறுவனம் ‘’தக்‌ஷிண் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா’’. பல ஆண்டுகள் காந்திஜி அதன் தலைவராக இருந்திருக்கிறார். முன்னாள் பாரதப் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி , பி.வி. நரசிம்ம ராவ் ஆகியோர் ‘’தக்‌ஷிண் பாரத் ஹிந்தி பிரசார் சபா’’வின் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த அமைப்பு   இந்திய தொழில்நுட்பக் கழகம் ( Indian Institute of Technology) (IIT) போன்ற ஓர் உயர் கல்வி நிறுவனம் ஆகும். அவர்கள் அளிக்கும் பட்டம் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டத்திற்குச் சமமானது. அவர்கள் நடத்தும் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் விதத்தில் வகுப்புகள் நடைபெறும். 

8. முதலில் ஒரு கிராமத்தில் மூன்று இடங்களில் வகுப்புகள் துவங்கப் பெறும். 

9. மூன்று மாதங்களுக்குப் பின் நான்கு கிராமங்களில் பன்னிரண்டு இடங்களில் வகுப்புகள் துவங்கப் பெறும். 

10. ஆறு மாதங்களுக்குப் பின் பத்து கிராமங்களில் முப்பது இடங்களில் வகுப்புகள் துவங்கப் பெறும்.