ஆமதாவாத் ( அந்நகரில் அந்நகரை அவ்விதமே அழைக்கிறார்கள் ; அவ்விதமே பெயர் எழுதி வைத்திருக்கிறார்கள்) செல்லும் முதல் தினம் நண்பனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஒரு வாரம் ஊரில் இல்லை. செய்தி அது மட்டுமே. ஊர் திரும்பியதும் வீடடைந்தேன் என ஒற்றை வார்த்தையில் இன்னொரு குறுஞ்செய்தி அனுப்பினேன். நண்பன் அறிந்ததில் மகிழ்ச்சி என பதில் அனுப்பினான். ’’வானெழும் பட்டங்களின் நிலம்’’ ஊர் திரும்பியதுமே எழுதி விட்டேன். வழக்கமாக வாசித்து விட்டு நண்பன் பேசுவான். ஒரு வாரமாக எந்த ஃபோன்காலும் இல்லை. பயணம் சென்றது ஒரு வாரம். திரும்பி வந்து ஒரு வாரம். மொத்தம் 15 நாள் ஆகி விட்டது. ஒருவருடன் தினமும் பேசிக் கொண்டிருந்தால் சண்டையும் பூசலும் வர வாய்ப்பு இருக்கிறது. 15 நாளாக பேசவே இல்லை என்றால் பூசல் வர வாய்ப்பில்லை. எனது பயணக்கட்டுரை அவனுக்கு விருப்பமானதாக இல்லையா அல்லது அவன் மனதை நான் ஏதாவது புண்படுத்தி விட்டேனா என சிந்தித்தேன். ஊர் கிளம்பும் முன் சகஜமாகத்தான் இருந்தோம். பேசிக் கொள்ளாத 15 நாளில் புண்படுத்த வாய்ப்பில்லை. இன்று நானே ஃபோன் செய்தேன். லௌகிக விஷயம் ஒன்று தனது நேரத்தை அதிகம் எடுத்துக் கொண்டு விட்டது ; ஒரு மணி நேரத்தில் ஃபோன் செய்கிறேன் என்றான். அந்த இடைவெளியில் பயணக் கட்டுரையை வாசித்து விட்டான். அவனுக்கு பயணக்கட்டுரை பிடித்திருந்தது.
தான் சிறுவயதில் பட்டம் விட்ட நினைவுகளை கூறிக் கொண்டிருந்தான்.
இந்திய வரலாறு குறித்தும் வட இந்தியாவில் பேராலயங்கள் இல்லாமல் இருப்பதன் வரலாற்றுக் காரணங்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம்.
‘’தம்பி ! இந்த முறை டிரெயின் ஜர்னி போய்ட்டு வந்தப்புறம் எனக்கு ஒரு விஷயம் தோணுச்சு. நாம நம்ம நாட்டோட வரைபடத்தை 2 டைமன்ஷன்ல தான் பாக்கறோம். ஆனா நம்ம நாட்டோட வரைபடத்தை 3 டைமன்ஷன்ல பாத்தா தான் நிறைய விஷயங்களைப் புரிஞ்சுக்க முடியும். எந்த நிலப்பகுதி உயரமா இருக்கு. எந்த நிலப்பகுதி பள்ளமா இருக்கு. எங்க விளைநிலம் அதிகம். எங்க காடு அதிகம். இதெல்லாம் நாம கண்ணால பாக்கணும். நம்ம ஊர் கடல்மட்டத்துல இருந்து 10 மீட்டர் உயரத்துல இருக்கு. பூனா 1000 மீ உயரத்துல இருக்கு. இது நமக்கு கண்கூடா தெரியணும். இந்திய ரயில்வே நாட்டோட எல்லா ஊர்களையும் இணைச்சுடுச்சு. ஆனா நாம பிளையின் லேண்ட் இல்ல. மேடு பள்ளத்தால ஆன பூமி நம்ம நாடு. நம்ம உலகமே அப்படி ஆனது தான். ஜனநாயகமும் ஜனநாயக அரசியலும் எல்லாருக்கும் சமமானது. ஆனா ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு விதமா இருக்கு. அதுக்கு ஏத்தாப்போல நாம சிந்திக்கணும். கர்நாடகா மேடு. தமிழ்நாடு பள்ளம். அதனால தான் காவேரி கர்நாடகாலயிருந்து தமிழ்நாட்டுக்கு வருது. அவங்க டேம் கட்டனா தான் அங்க இருக்கற விவசாயிக்கு காவேரி தண்ணி கிடைக்கும். காவேரி டெல்டால நீர் சேமிப்பை நாம பலவிதமா செய்ய முடியும். இன்னைக்கு இருக்கற தொழில்நுட்ப வளர்ச்சியை வச்சு நாம நம்ம மண்ணை நிலத்தை சூழலை இன்னும் சிறப்பா செய்ய முடியும். நம்ம மக்களுக்கு வரலாற்று உணர்வு குறைவா இருக்குன்னு நாம நினைப்போம் ; அதை விட குறைவா புவியியல் அறிவு இருக்கு. நம்ம ஊர்ல நம்ம நாட்டோட 3 டைமன்ஷன் வரைபடத்தை 40 அடி அகலம் 60 அடி நீளம் இருக்கற ஒரு இடத்துல 2400 சதுர அடியில உருவாக்கணும்னு நினைக்கறன்’’
‘’அண்ணா ! நீங்க ஒரு நபர்’’
‘’உணமை தான் தம்பி. நீ ஒருத்தன் தான் தினமும் பேசுவ. நீயும் 15 நாளா பேசல’’
‘’15 நாள் இல்லண்ணா. ஒரு வாரம் தான். ஒரு வாரம் உங்க கிட்ட ஃபோன் இல்ல. அதனால அதை கணக்குல இருந்து எடுத்துடுங்க. அப்ப ஒரு வாரம் தானே?’’
நண்பன் சொல்வதும் சரிதான்!
( இந்த வரைபடத்தை இணையத்தில் தேடி எடுத்தேன். இதனை ஓர் புரிதலுக்காக அளித்துள்ளேன். இணையத்தில் தேடிய போது போபாலில் மத்திய அரசு நிறுவனம் 50 அடி அகலம் 50 அடி நீளத்தில் நம் நாட்டின் முப்பரிமாண வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்னும் செய்தியைக் கண்டேன். )