Monday, 26 January 2026

மரக்கன்றுகள் உருவாக்கம்

’’காவிரி போற்றுதும்’’ சார்பில் மரக்கன்றுகள் வழங்க ஏதுவாக மரக்கன்றுகள் உருவாக்க இடம் பார்த்து வருகிறேன். திருவீழிமிழலை அருகில் பொருத்தமான இடம் ஒன்று அமைய வாய்ப்பு உள்ளது. அந்த ஊரில் ஒருவர் அறிமுகம் ஆனார். ஜனவரி 4 அன்று அவரை முதன்முதலாக சந்தித்தேன். பின் அலைபேசியில் சிலமுறை பேசினேன். ஆமதாவாத் சென்ற போது அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். ஊர் திரும்பியதும் எனது வலைப்பூவின் முகவரியை அவருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பினேன். அவர் ‘’வானெழும் பட்டங்களின் நிலம்’’ வாசித்து விட்டு எனக்கு ஃபோன் செய்தார். இன்று அவரை சந்தித்தேன். ஊரில் மேலும் இருவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் பிடித்திருந்தது. பொருத்தமான இடம் அமைந்தால் அந்த பிரதேசத்துக்கே பலன் இருக்கும் என்பதை சொன்னேன். 

குஜராத் சென்றிருந்த போது அங்கே 5 அடியிலிருந்து 6 அடி உயரம் மட்டுமே வளரக்கூடிய செடி முருங்கைகள் பயிராவதைக் கண்டேன். வல்லம்படுகை, ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்கள் செடி முருங்கைக்கு பேர் போனவை. 

நம் சமூகத்தில் மக்களுக்கு இரத்த சோகை அதிகம் உள்ளது. முருங்கை இரும்புச்சத்து மிக்கது. முருங்கை அதிகம் பயிராக வேண்டும். எந்த காய்கறியும் உணவாக மாறுவதால் நற்பயனையே விளைவிக்கிறது. கிராம மக்களுக்கு செடி முருங்கை கன்றுகளும் அதிக அளவில் வழங்க வேண்டும் என முடிவு செய்து கொண்டேன்.