Wednesday, 14 March 2018

படித்துறை

காலம் தேய்த்துக் கொண்டிருக்கும்
ஒரு கருங்கல் படித்துறையில்
ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கிறது நதி
பாசி இல்லாத படிகளில்
இறங்கி மூழ்கி எழுந்து கொண்டிருந்தனர்
கடந்த நினைவுகளை விட்டு
வலசைப் பறவைகளின் பிம்பங்கள்
நதியால் நெளிந்தன
அசையும் நிழலை
மண்ணிலும் நீரிலும்
பார்த்துக் கொண்டிருந்தது
ஆற்றங்கரை மரம்
சின்னக் குமிழிகள்
இணைந்து
ஒற்றை ஒரே ஓசையாகி
உடைந்து சிதறிக் கொண்டிருந்தது
பல ஒற்றை ஓசைகளாய்
காலம் காலமாய் மிதந்த தக்கை
சுழன்று கொண்டேயிருக்கிறது
விண்ணிலிருந்து மண் நோக்கி