ஒவ்வொன்றாய்
துறந்து வந்த துறவி
மஞ்சள் நிற வெயில்
விடைபெறும்
அந்தியில்
நடந்து சென்று கொண்டிருந்தான்
இரவினை நோக்கி
நிலவின் ஒளிக்கு தாகித்திருந்த
அவனது மனம்
சந்தனமாய்
மணந்தது
பாதையெங்கும்
வாசம் தீண்டிய தாவரங்கள்
பூக்கத் துவங்கின
ரோஜாக்களாய்
உடல் குழையும்
குக்கல்கள்
தீனமாய் அரற்றி
உடன் வந்தன
கண்ணீரையும்
வலிகளையும்
ஏற்றுக் கொண்டு
பாரம் நீக்கச் சொன்னார்கள்
ஊர் மக்கள்
அலைகடல் ஓசை
சுருதி மீட்டும்
இரவில்
விண் நோக்கி
அமர்ந்து
மலர்ந்தான்
நாடோடித் துறவி
எப்போதாவது
வாய்க்கும் தருணத்தில்
மலர் வாசம் உணர்ந்தனர்
எப்போதும் பாரம் சுமக்கும்
ஊர் மக்கள்