Wednesday 4 April 2018

மார்க்க சகாயம்



பேச்சுத்துணைக்கு யாரும் இல்லாது
தனியாய்
தெய்வம் வீற்றிருந்த
புராதன திருத்தலம்

மனிதப் புழக்கம்
வருடக்கணக்கில்
மிகக் குறைவாய்
இருந்ததன்
சுவடுகள்
ஒவ்வொரு இடத்திலும்
ஒவ்வொரு பார்வையிலும்

இல்லாமல் இருந்த
மணி
மெல்ல அதிர்ந்தெழும் ஓசையையும்
காண்டாமணியையும்
கொண்டு வந்தது
கற்பனையில்

அவ்வப்போது
சடசடத்து
பறந்தெழுந்த புறாக்கள்
ஒடுங்கிக் கொண்டன
கோபுர
சுதை சிற்பங்களின்
இடைவெளிகளில்


இரவில்
கிராமத்துச் சாலையில்
தனித்து நடப்பது போல்
பிரகாரத்தைச்
சுற்றி வந்து
தல விருட்ச நிழலில்
ஓய்வாய்
உட்கார்ந்தேன்

தெய்வத்திடம்
லௌகிக வாழ்வில்
துணையிருக்க வேண்டிக் கொண்டு
புறப்பட்டுச் சென்ற போது
வழித்துணையாய்
வந்தன
கோபுரத்துப் புறாக்களும்
தல விருட்ச நிழலும்
மண்டபத்து சிற்பங்களும்

*******