Saturday 2 June 2018

தெரியும் புரியும்


கிருஷ்ண சைதன்யா 
ஏழாம் வகுப்பு
கதை சொல்கிறாள்
தான் பார்த்தவற்றை
தான் அறிந்தவற்றை
தான் கண்டடைந்தவற்றை
தான் மகிழ்ந்தவற்றை
தான் துயர் கொண்டதை

காய்கறிக்காரர்களிடம் பேரம் பேசுவதை அவள் வெறுக்கிறாள்
கோபமாக பேசிக் கொள்வதில் அவளுக்கு உடன்பாடு இல்லை
தனக்கு யார் கஷ்டப்படுகிறார்கள் என பார்த்தால் தெரியும் என்றாள்
அதை எனக்கு சொல்லிக் கொடு என்றேன்
மீண்டும் மீண்டும்
பார்த்தால் தெரியும்
பார்த்தால் தெரியும்
என்றாள்

நாங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த டோலி
குவக் குவக் என்றவாறு வாலைக் குழைத்தது
வாசல் மரத்தில் அமர்ந்திருந்த காகம்
அடர் குரலில்
கா கா என்றது

எதையோ தெரிந்து வைத்திருப்பது போல
ஏதோ புரிந்து கொண்டது போல