Sunday 3 June 2018

உறக்கத்தில் சிரிக்கின்ற



உறக்கத்தில் சிரிக்கின்ற
குழந்தைக்கு கதை சொன்னேன்

ஆனைகளின் கதை
எட்டு ஆனைகள்
அருவித் தடத்தில் நீர்க்குளியல்
ஆட வந்த குடும்பத்தின் கதை

குட்டி யானை மேல்
குழந்தைக்கு ஈர்ப்பு
துதிக்கைகளின் மேலும்
நீர் பீய்ச்சலின் மீதும்

குளித்ததும் ஏன் மண் பூசிக் கொள்கின்றன?
முதலில் நீர்க் குளியல்
பின்னர் மண் குளியல்

நாமும் அங்கே போவோமா?
போகலாம்
ஆனால் தள்ளி நிற்க வேண்டும்

குருணைகளுடன்
குகையில் வாழும் புலியின் கதை
பால் அருந்தி
ஓசைகளுக்கு பின்வாங்கி
தாய்ப் புலி எதிர்நோக்கி
எப்போதாவது
குகைக்கு வெளியே வரும்
குருணைகளின் கதை

அக்குகைக்கு நாமும் போவோமா?
வெளியே தூரமாயிருந்து பார்க்க வேண்டும்

எலி வேட்டையாடும்
சர்ப்பத்தின் கதை

வேட்டையை நாம் பார்க்க முடியுமா?
சற்று தள்ளி நின்று பார்க்க முடியும்

ஆனை புலி சர்ப்பம்
இங்கு வருமா?
வந்தால் அவற்றுக்கு ஆபத்து

அப்படியென்றால் இங்கு நமக்கும் ஆபத்தா?