Thursday 7 June 2018

கவிதைக் கணம்

அதைச்
சொல்லி விட முடியும்தான்

அக்கணத்தை

ஓட்டப்பந்தயம் ஓடுபவன்
காற்றில் மிதப்பதாக
உணரும்
ஏதோ ஒரு கணம்

நீந்தும் போது
செவிகளில் நீர் நிறைந்து
விழிகளை
ஆடி அமரும்
அலைகள்
மறைக்கையில்
வாழ்க்கையே மிதத்தல்
என
எண்ணும் கணம்

ராட்டினத்தில் மேலேறும் போது
தர்க்கம்
தற்காலிகமாக
ரத்தாகும்
கணம்

ஒரு சிறுமியின்
நாட்டிய அசைவில்
ஒரு சிற்பம்
உயிர் பெற்றதாக
பார்ப்பவர்கள்
நினைக்கும்
கணம்

ஒரு நதிக்கரையில்
நெடுநேரம்
அமர்ந்து
நதியையே பார்ப்பவன்
மனம்
கண்ணீராய் கரையும் கணம்

சக மனிதனுக்காக
ஒருவன்
உயிரையே இழக்கத் துணியும்
கணம்

இன்னும் பல
இன்னும் பல

அதைச்
சொல்லி விட முடியும்தான்