Friday 8 June 2018

எங்கும் நீ



ஒளி பரவும்
உன் புன்னகையை
ஓர் அருமணியாக்கி
கணையாழியில் சூட்டி வைத்தேன்
உன் பாம்பு விரலில்
அமர்ந்திருந்தது
அனாதி காலமாக

உனது
ஒரு சரியும் பார்வையை
வானில் வைத்தேன்
அவ்வப்போது
மின்னிக் கொண்டிருந்தது
இடிகளுக்கு முன்னால்

ஒரு விரைவான நகர்வில்
கணப்பொழுதில்
காற்றில் அலையும்
உனது ஆடைகளின் சரசரப்பு
வானில் மிதந்து கொண்டிருந்தது
மழை மேகங்களாக

உனது கனிவு
ஒரு மெட்டியாக
ஒலி வீசியது
உனது பொற்பாதங்களில்

தொலைதூரத்தில்
நீ நின்று கொண்டிருக்கும்
மனச்சித்திரத்தை
ஒரு மரமாக ஆக்கி
பூமியில் வைத்தேன்
புவியில் வேர்களையும்
விண்ணில் கிளைகளையும்
நிரப்பி
நின்று கொண்டிருந்தது
உன்னைப் போல