Wednesday 24 October 2018

பௌர்ணமி

கடைத்தெருவுக்குச் சென்று
திரும்பும் போது
விடாமல்
கூடவே வந்ததை
ஜன்னல் கதவு மூடி
வெளியிலே
நிறுத்தி விட்டு
மறந்து போய்
தூங்கி விட்டேன்

திருவிழாவில்
குருவி பிஸ்கட் வாங்கி
கையோடு
கொண்டு போன பாயை
வயக்காட்டில்
போட்டு
படுத்துக் கொண்டே
கர்ண மோட்சம் கேட்ட போது
வானத்தில் நின்றிருந்ததை
பார்த்துக் கொண்டேயிருந்தேன்

பாலத்தைக் கடக்கும் போதெல்லாம்
நதியில்
அலை பரப்பிக் கொண்டிருப்பதை
ஒரு கணம் நின்று
பார்த்து விட்டு
சென்று கொண்டிருப்பேன்

யாருமற்ற கடற்கரைகளில்
தனியே
அமர்ந்திருக்கையில்
அமுதாய் பொங்கியது
இரவு முழுதும் நிலவு

தொலைதூர ஊரொன்றில்
பயணித்த போது
புதிய முகம் கண்டு
புன்னகைத்த சிறுவன் முகம்
நிலவாய் ஆகிப் போனது
எப்போதைக்குமாக