Tuesday 25 December 2018

புள்ளே
புள்களின் கொற்றவனே
உன்னை வணங்குகிறேன்

முடிவிலியில் சயனிக்கும்
இறைவனை
தோள்களில்
சுமந்து கொண்டு
புறப்பாட்டுக்கு
வெளியே வரும்
உன்னைக்
கண்ட போது
உன் கண்களும்
உன் முக பாவனையும்
எனக்கு குதூகலம் தந்தன
உன்னை
அம்மாவிடம்
யார் என்று கேட்டேன்
கருடன்
என உன் பெயர்
அறிமுகம் ஆனது

பிரபந்தம் அறிந்த நாளில்
நீ எப்படி ஆழ்வார்
என்று கேட்டேன்

பின்னர்
பலப்பல நிலங்களில்
வான் பார்த்த போது
பெருவட்டமாய்
சுற்றிக் கொண்டிருந்தாய்

உச்சி மரங்களில்
அமைக்கப்பட்டிருந்த
உன் கூடுகளும்
உன் நிமிர்வும்
உன் தீர்க்கப் பார்வையும்
உன்னைப் புள்ளாகவும்
உன்னைக் கொற்றவனாகவும்
இரண்டுமாகவும்
இரண்டுமான ஒன்றாகவும்
காட்டின

மண்ணிலிருந்து விண்ணுக்கு
நீ எழுவதைக் காணும்தோறும்
அகம் எழுக
அகம் அழுக
என பிராத்திக்கிறேன்
என் இறையாய் உன்னிடம்