Wednesday, 20 February 2019

உரு ஆக்கம்

ஒரு நதியின் கரையில்
விரவிக் கிடக்கும்
கூழாங்கற்கள்
உன் பாதங்களை
உருவாக்கிக்
காட்டுகின்றன
மூழ்கி எழும் நதி
உன் உள்ளங்கை ரேகைகளை
உண்டாக்குகிறது
நதி பயணிக்கும்
மலைகளுக்கு அப்பால் உள்ள
சூரியன்
உன் முகத்தை
உருவாக்குகிறது
நான் உன்னைச் சுடராக்கி
ஒரு சிற்றாலயத்தின் சன்னிதியில்
அகல் விளக்கில்
வைக்கிறேன்
அப்போது வீசும் மென்காற்று
மெல்ல அசைக்கிறது
உன்னை