Tuesday 26 February 2019

மாமூல் வாழ்க்கை

ஒரு புராதன நகர்
மெல்ல
ஜனநாயகத்துக்குள்
வந்து
பெரும் பரபரப்புகள்
இன்றி சாதாரணமாய்
இருந்தது

அதன் நீண்ட மதில்சுவர்கள்
எதையும் காக்க வேண்டிய அவசியமின்றி இருந்தன
அதன் கண்காணிப்பு கோபுரங்கள்
பறவைகளின் எச்சத்திலிருந்து முளைத்த விருட்சங்களால் அசௌகர்யமாகியிருந்தன
அதன் கொத்தளங்களில் கிரிக்கெட் ஆடினர்
பள்ளி விடுமுறைச் சிறுவர்கள்
அதன் தொழுவங்களில்
பயன்படாமல் ஆக்கப்பட்ட ஜீப்கள் நின்றிருந்தன
அதன் அந்தப்புரங்களின் ஒரு பகுதி
பிறப்பு இறப்பு சான்று வழங்கும் இடமாகவும்
அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் மையமாகவும் இருந்தது
தர்பார் மண்டபத்தின் தூண்களில்
ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தன
சுற்றுலா வந்த குழந்தைகள்

அரச முறைகள்
மாறினாலும்
பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி
மாமூல் வாழ்க்கை வாழ்கின்றன
கோட்டையின் மரங்களும்
பழந்தின்னி வௌவால்களும்
பச்சைக்கிளிகளும்
சிட்டுக்குருவிகளும்