Sunday 10 February 2019

கை மாறு

நாம் ஓர் உலகத்தை உருவாக்கினோம்
அதில்
எப்போதும் ஓர் உயர் சங்கீதம் ஒலித்துக் கொண்டிருந்தது
எங்கும் பரவியிருந்தது முடிவற்ற இனிமை
யாவும் ஒன்றே என்ற உணர்வில்
லயித்திருந்தது வாழ்க்கை

உமையவளிடமிருந்து
பகடையைப் பெற்றான்
சதாசிவன்

நாம் உருவாக்கிய உலகம் இருந்தது
பல குரல்கள் எழுந்தன
பல இசைகள் ஒலித்தன
நான் நான் நான் என ஆர்ப்பரித்த
நானாவித ஜீவிதம்
முடிவடையா யுத்தத்தைத் துவக்கின

பூத கணங்கள்
கூட்டமாய்
வந்து சேர்ந்தன
அம்மையப்பன்
தரிசனம் தர
புறப்பட்டனர்

நாம் உருவாக்கிய உலகில்
நீ இருந்தாய்
நான் இருந்தேன்
உலகம் இருந்தது