Thursday 18 April 2019

மக்கள் அவை

இன்று காலையில் சென்று வாக்களித்தேன். சிறு வயதிலிருந்தே, எனக்கு வரலாற்றில் ஆர்வம் இருக்கிறது. சமூகவியலிலும் ஆர்வம் உண்டு. அரசியலை அவற்றின் ஒரு பகுதியாகவே காண்கிறேன். எந்த சமூகத்துக்கும் ஆட்சிமுறைக்கும் அடிப்படையான அலகு மக்கள். பொது நியதிகளைக் குறித்த பிரக்ஞையுடன் இருத்தலும் அவற்றைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டுதலுமே சமூகம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கு அடையாளம். இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் எந்த விதிமுறையையும் பின்பற்றுவதில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை என்பதைப் பழக்கமாகவே வைத்துள்ளனர். ஐரோப்பாவிலும்  அமெரிக்காவிலும் சமூகப் பிரக்ஞையை ஆரம்பப் பள்ளியிலிருந்தே உருவாக்குகின்றனர். இங்கே இந்த நாடு இப்போது வந்து சேர்ந்திருக்கும் நிலைமைக்காக தங்கள் உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்திருக்கும் ஆயிரக்கணக்கானோர் குறித்து பள்ளிப் பாடங்களில் போதிக்க வேண்டும். இன்று தமிழ்நாட்டின் கல்வி மிக அபாயகரமான நிலையில் இருக்கிறது. தேசம் குறித்த எதிர்மறை உணர்ச்சியை எவரும் எளிதில் தூண்டிவிட முடியும் என்ற நிலை இருக்கிறது. பட்டப் படிப்பு படித்தவர்களுக்குக்  கூட சமூக விஷயங்கள் குறித்த அடிப்படைப் புரிதல் இல்லை. அரசியல் கட்சிகளில் குண்டர்கள் மட்டுமே  இருக்க முடியும் என்ற  நிலை. பெரும்பாலான தமிழர்கள் மனதை ஜாதி மட்டுமே வியாபித்து இருக்கிறது. அதிகாரவர்க்கத்தின்  ஊழல் நம்மைச் சூழும் பெரும் துயரம். அரசியல்வாதிகளின் ஊழலை விடக் கொடியது அதிகாரவர்க்கத்தின் ஊழல். பொதுமக்கள் அரசாங்கத்தை  அணுகும் ஒவ்வொரு  துறையும் ஊழல் புரிவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலிருந்தும் அல்லற்பட்டு வெளியேறும் குடிமக்கள் தங்கள் சினத்தை ஒட்டுமொத்த நாட்டின் மேலும் திருப்புகின்றனர். அரசு யோசிக்க வேண்டிய விஷயம் இது.

தமிழ் மக்கள் தங்கள் பழக்கங்களையும் மனோபாவங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.