Wednesday 17 April 2019

நன்றி

இன்று
கவிஞர்களை
நினைத்துக் கொண்டேன்
அவர்களுக்கு
நன்றி சொல்ல வேண்டும்
என்று
தோன்றியது

சிலர்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
முன்னால் வாழ்ந்தவர்கள்
பலர்
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால்
இன்னும் சிலர்
இந்த நூற்றாண்டில்
சென்ற நூற்றாண்டில்
சம காலத்தில்

ஏதேதோ நாடுகளில் வாழ்ந்தவர்கள்
நான் கேட்டேயிராத உச்சரிப்பைக் கொண்ட
மொழியைப் பேசியவர்கள்

கவிஞர்கள் சிலரை சந்தித்திருக்கிறேன்
ஆனால்
எல்லா கவிஞர்களுடனும் உரையாடிக் கொண்டிருக்கிறேன்

ஒவ்வொரு கவிஞரும் ஓரோர் உலகை உருவாக்குகின்றனர்
கவிதை உலகம் ஒவ்வொரு நிகழ்கணத்திலும் நிகழ்கிறது

கவிதை உலகில் எல்லாம் இருக்கிறது
கவிஞர்களும் இருக்கிறார்கள்

இன்று
கவிஞர்களை
நினைத்துக் கொண்டேன்
அவர்களுக்கு
நன்றி சொல்ல வேண்டும்
என்று
தோன்றியது

அவர்கள் உருவாக்கிய கவிதை உலகுக்காக