Friday 21 June 2019

ஒன்றுதல்

யோகா இந்தியா உலகுக்கு அளித்த கொடை. ஆன்மீகப் பாதையில் செல்பவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த யோகா இப்போது அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் உள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியர்கள் செய்யக்கூடிய உடல் சார்ந்த வேலைகள் அதிகம். மாணவர்களும் மாணவிகளும் பள்ளிக்கு நடந்து செல்வார்கள். குடும்பப் பெண்கள் எந்திரங்களின் துணையின்றி வீட்டு வேலைகளைச் செய்வார்கள். இன்று அனைவருக்கும் எந்திரங்களின் துணையால் உடல் சார்ந்த பணிகள் குறைந்து விட்டன. உடலின் ஆற்றல் செலவு செய்யப்படாமல் இருப்பது உடலின் சமநிலையைப் பாதித்து உடல் மற்றும் மன நோய்மைக்கு இட்டுச் செல்லும். இன்று ஒவ்வொருவருக்கும் யோகா வந்து சேர்ந்திருக்கிறது. ஆரோக்கிய வாழ்வின் ஒரு பகுதியாக யோகாவைக் கொண்டால் கூட, அது அளிக்கும் பயன் அளப்பரியது. பெண்களுக்கும் குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் யோகா அளிக்கும் பலன் அற்புதமானது. தமிழ்ச் சூழலில், வேலைக்குச் செல்லும் பெண் காலை உணவையும் மதிய உணவையும் சேர்த்து சமைத்து விட்டு காலை உணவு உண்டு மதிய உணவை எடுத்துக் கொண்டு அலுவலகத்துக்கு காலை எட்டு மணிக்குப் புறப்பட்டால் வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிறது. வீட்டுக்கு வந்து இரவு உணவை அவர்களே தயாரிக்க வேண்டும் என்ற நிலை. வாழ்நாளின் பெரும்பகுதி இந்த காரியத்தைச் செய்வது என்பது ஒரு சோர்வளிக்கும் செயல்பாடு. அவர்களுடைய உடல்நிலையை சீராகப் பராமரிக்க அவர்கள் காலையிலும் மாலையிலும் 15 நிமிடங்கள் யோகா செய்வது நல்ல பலன்  தரும். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால்  இந்தியர்களுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றால் வரக் கூடிய நோய்களே அவர்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கூட காசநோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. இன்று அவ்வாறான நோய்கள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டன. இன்று சர்க்கரை நோயும் உயர் இரத்த அழுத்தமும் எலும்புத் தேய்மானமும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான பிரச்சனைகளாயிருக்கின்றன.

இன்று மருத்துவத் துறை மிக மோசமான சீர்கேடான இடத்தை அடைந்துள்ளது. நூறு மருத்துவர்களில் ஓரிருவரே நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாகவும் நோய் தீர்க்கும் மருத்துவத்தின் புனிதத்தை உணர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். மற்றவர்கள் மருந்து கம்பெனிகளின் முகவர்களாக  செயல்படக் கூடிய நிலை இருக்கிறது. 

யோகப் பயிற்சிகள்  எளியவை.  எளிய யோகப் பயிற்சிகள் தொடர்ச்சியாக செய்யப்படும் போது அற்புதமான பலன்களைத் தரக்கூடியவை. நவீன வாழ்க்கை பொருளாதார சுதந்திரத்தை அளிக்கிறது. பொருளாதார சுதந்திரம் அளிக்கும் உபரி நேரத்தை தொலைக்காட்சியும் சமூக ஊடகங்களும் எடுத்துக் கொள்கின்றன.  அவை மனத்தை அடிமைப்படுத்தி நம்மை சிக்கலில் ஆழ்த்தக் கூடியவை. அவற்றிலிருந்து விடுபட்டு இருக்க  யோகப்பயிற்சிகள் உதவும்.

இந்திய அரசாங்கம் யோகாவை எல்லா  இந்தியர்களிடமும் கொண்டு சேர்க்க முயற்சி மேற்கொள்கிறது. அது ஒரு பண்பாட்டுச் செயல்பாடு என்பதைத் தாண்டி உடல்நலம் மற்றும் சுகாதாரம் சார்ந்த செயல்பாடாகவும் அதனை முன்னெடுக்கிறது. பெண்களுக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் உடல்நிலையை சீராக வைத்திருக்க யோகா ஒரு வரப்பிரசாதம்.

மகாபாரதத்தில் யக்‌ஷப் பிரசன்னத்தில், யக்‌ஷன் யுதிர்ஷ்டிரனிடம் கேட்கிறான்.

லாபத்தில் சிறந்தது எது? (லாபா நாம் உத்தமம் கிம்?)

பதில்: ஆரோக்கியம் (லாபா நாம் சிரேயஸ்; ஆரோக்ய)