Friday 14 June 2019

சந்தோஷம்

எங்கள் வீட்டில் சினிமா பார்க்கும் வழக்கம் மிகக் குறைவு. பதினைந்து வயது வரை வருடத்துக்கு இரண்டு சினிமா என்று பார்த்திருக்கிறேன். பதினைந்து வயதிலிருந்து பதினேழு வயது வரை பத்து படங்கள் பார்த்திருப்பேன். அதன் பின், பொறியியல் கல்லூரியில் படித்த நான்கு ஆண்டுகளில் மொத்தமே இரண்டு படங்கள் மட்டுமே பார்த்தேன். ஆக இருபத்தியோரு வருடங்களில் நாற்பத்து இரண்டு படங்கள். சராசரியாக ஆண்டுக்கு இரண்டு. அதன் பின்னர் கட்டுமானத் தொழிலுக்கு வந்த பின் சினிமா பார்ப்பது சற்று அதிகரித்தது என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு சினிமா பார்த்தேன். கட்டுமானத் தொழிலில் காலை ஏழு மணியிலிருந்து இரவு ஏழு மணி வரை தொடர்ச்சியாக வேலை இருக்கும். இங்கும் அங்கும் சென்று கொண்டேயிருக்க வேண்டும். வேலையில் ஓய்வு இடைவெளியே கிடையாது.  சொந்த தொழில் என்பதால் வார இறுதி நாட்களிலும் பணி உண்டு. எனவே மாலை ஏழு மணிக்கு மேல்தான் சற்று ஓய்வு இருக்கும். அப்போது இரவில் சினிமாவுக்குச் செல்வேன். எனக்கு சிறு வயதிலிருந்தே வாசிப்பில்தான் ஆர்வம். நான் சினிமா பார்ப்பதில் சற்று விலக்கம் கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு திராவிடக் கட்சிகளின் சினிமா அரசியல் உவப்பானதல்ல என்பதால் சினிமா குறித்து பெரிய அபிப்ராயம் இல்லை. பின்னாட்களில் கிராம்ஷி வெகுஜனக் கலை குறித்து கூறியவற்றை அறிந்த பின்னர் தான், வெகுஜன சினிமாவை அணுகும்முறை குறித்து புரிந்து கொண்டேன். இப்போது மீண்டும் சினிமா பார்ப்பது குறைந்து விட்டது. நான்கு மாதத்துக்கு ஒரு படம். டி.வி பார்த்தே பல மாதங்களாகி விட்டன. ஃபேஸ்புக்கிலும் வாட்ஸப்பிலும் நான் இல்லை.

இவை மிகவும் சந்தோஷப்பட வேண்டிய விஷயங்கள்.