Tuesday 2 July 2019

பாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்

இன்று ‘’பாரதி நினைவுகள்’’ நூலை வாசித்தேன். யதுகிரி அம்மாள் சிறுமியாக இருந்த போது பாரதியின் வீட்டுக்கு பக்கத்தில் குடியிருந்ததால் அவருடனும் செல்லம்மாவுடனும் நாளின் பெரும்பாலான பொழுதில் உடனிருக்கிறார். செல்லம்மாவும் பாரதியும் யதுகிரியை தங்கள் மகளாகவே பாவிக்கின்றனர். யதுகிரி சின்னஞ்சிறிய சிறுமி. வைணவக் குடும்பத்தில் பிறந்தவர் ஆதலின் ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தம் மூலமாக தமிழ்க் கவிதை அறிமுகமாகிறது. மொழி அறிந்த குழந்தையாதலின் பாரதியுடன் யதுகிரி உரையாடுகிறார். விவாதிக்கிறார். அவர்கள் பல விஷயங்களைப் பேசுகிறார்கள். பெண்கள் நிலை, அரசியல், சமூக நிலை, சமயம் மற்றும் வேதாந்தம் என பலவற்றைக் குறித்து விவாதிக்கின்றனர். பாரதியாரின் பல முக்கியமான பாடல்கள் எழுதப்பட்ட சூழ்நிலையையும் பாரதியார் தன்னிடம் நிகழ்த்திய உரையாடல்களையும் தன் நினைவிலிருந்து மீட்டு துல்லியமாக எழுதுகிறார் யதுகிரி. ஒரு சிறுமியின் பார்வையில் வெளிப்படும் குழந்தை மனம் கொண்ட கவிஞனின் சித்திரம் அவனை நமக்கு மிகவும் அணுக்கமாக்குகிறது. சிறியன சிந்தியாத அம்மகா கலைஞன் நம் முன் ஜீவனுடன் எழுகிறான்.

தமிழ் அறிந்த ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல் யதுகிரி அம்மாளின் ‘’பாரதி நினைவுகள்’’

இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. அதன் இணைப்பு
archive(dot)org