Sunday 22 September 2019

அகத்தின் புறச்சுவர்களைக் கழுவிக் கொண்டிருக்கிறது
நள்ளிரவில் பெய்யும் மழை
ஈரம் நிரம்பிய காற்று
சுவாசப் பாதைகளை
தொட்டுச் செல்கிறது
ஓயாமல்
உறக்கத்தில் புரண்டு படுப்பவள்
எதிர்பாராமல்
விழித்துக் கொள்கிறாள்
அறையெங்கும் இருக்கும் தனிமை
ஒரு கணம்
தனிமை அவளை அச்சுறுத்துகிறது
தனித்து விடப்படுதலின்
எண்ணற்ற சாத்தியங்களாலான
உலகை
தினமும் கடந்து செல்வதை
எண்ணும் போது
நீர் திரள்கிறது கண்களில்
அழக்கூடாது
என நினைத்துக் கொள்கிறாள்
அவளது ஒரு கை
மறு கையின்
ஒற்றை வளையலைத்
தொடுகிறது
இந்த உலகில்
துணையாக
குறைந்தபட்சம்
ஓர் இறுக்கமான உலோகம்
எஞ்சி விடுகிறது