Wednesday, 9 October 2019

பண்டிகைக் காலம்

இந்த ஆண்டு காவேரி நிறைந்து ஓடுகிறது. டெல்டா மாவட்டங்களுக்கு இது ஓர் உற்சாகமான சமிங்ஞை. தீபாவளி மக்கள் மனதில் நம்பிக்கையைக் கொண்டு வருகிறது. வாணிகம் செழிக்கிறது. பல்வேறு விதமான பண்டங்கள் விற்பனையாகின்றன. போக்குவரத்து வாகனங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பெரும்பாலானோர் கொண்டாட்ட மனநிலைக்கு வரும் போது அந்த அலை மீதமிருப்போரையும் சேர்த்து அழைத்துச் செல்கிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு கதராடை உடுத்த வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். நாம்- தமிழர்கள் எவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பது என்பதையே இன்னும் முழுமையாக அறியாதவர்கள். தமிழர்களை எப்போதும் ஓர் அச்சம் மறைமுகமாக அச்சுறுத்திக் கொண்டேயிருக்கிறது. தங்கள் சந்தோஷங்களை கூட இருப்பவர்கள் இல்லாமல் செய்து விடுவார்களோ என்ற ஐயமும் அச்சமும் அவர்களுக்கு எப்போதும் உண்டு. ஐயமும் அச்சமும் விலகும் போதே மகிழ்ச்சி பிறக்கும். மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் போதே கொண்டாட்ட மனநிலை உண்டாகும். இன்றும் எல்லா தமிழ் குடும்பங்களும் கொண்டாடும் தினம் தீபாவளி. சமீபத்தில் சுப்பு ரெட்டியார் நூல் வாசித்ததிலிருந்து ‘’சோழ நாட்டு திவ்ய தேசங்களில்’’ நான் இன்னும் சேவிக்காமல் இருக்கும் உத்தமர் கோவிலுக்கும் அன்பிலுக்கும் சென்று வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பண்டிகைக் காலத்தில் மக்களின் உற்சாகத்தையும் கண்டவாறு இருக்கும். பெருமாளையும் சேவித்தவாறு இருக்கும்.